அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/17/13

நம் தளத்திற்கு கொஞ்சம் மசாலாவும் வேண்டுமே



Don't Eat Kurkure
Plastic & Wax also Mixed In It.

#Share If u Care

SHARE and Spread this useful info !!


நகைச்சுவை

நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது
சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்

நகைச்சுவை

நோயாளி-"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."

டாக்டர்-"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"

நகைச்சுவை

மனைவி : -கருமம், கண்றாவி எப்படித்தான் இந்த சாராயத்தை குடிக்கிறீங்களோ? 
கணவன்:- இப்பவாவது புரிஞ்சுக்கிட்டியே, ஏதோ நாங்கள்லாம் ஜாலியா குடிச்சுட்டுருக்கோம்னு நினைச்சியா ?!

நகைச்சுவை



கணவன்  :- டார்லிங், ராத்திரி என்ன டிபன்? 

கோபத்துடன் மனைவி :- ஒரு டம்ளர் விஷம்!...

கணவன்  :-ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.

ஸ்ரீ ஹேமகூட மடம்

தேவாங்கரின் மூன்றாவது ஜகத்குரு பீடம் ஸ்ரீ ஹேமகூட மடமாகும்.கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் ஹொசப்பேட்டைக்கு ஏழு கல் தூரத்தில் பம்பா ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீ ஹம்பி ஹேமகூட மடத்தை ஸ்தாபிதம் செய்தவர் மநு மஹரிஷி கோத்ரம் ஏகோராமர் ஆவார். மனு மஹரிஷி கோத்ரம் ‘நாகாபரணதவரு’வங்குசத்தைச் சார்ந்தவர்களே வம்ச பாரம்பரியமாய் இப்பீடத்தின் ஜகத்குரு ஆகலாம்.
        விதுராஷ்வந்தம் முதல் நாசிக் பஞ்சவடி வரை இம்மடத்தின் எல்லைகள்
. இம்மடத்தின் சிம்மாசனம் பெனுகொண்ட சிம்மாசனம். இச்சிம்மாசனம் எலுகொண்ட சிம்மாசனம், வெலிகோட்டி சிம்மாசனம், வெரிகோட்டி சிம்மாசனம் என்றும் அழைக்கப்பெறும்.

தேவலர் காலம் முதல் ஏழாவது அவதாரமான தேவதாச மைய்யன் காலம் வரை அரசபீடமும் குரு பீடமும் ஒன்றாகவே இருந்து வந்தன. இதன்பின் அரசபீடமும் குரு பீடமும் தனித்தனியே ஆயின. குருவே அரசராக இருந்த நிலைமாறி அரசபீடமும், குருபீடமும் தனித்தனி ஆயின. இம்மாற்றம் ஏகோ ராமர் காலம் முதல் ஏற்பட்டது.   
        இதன்பின் ஸ்ரீஹம்பி ஹேமகூட காயத்ரிபீட ஜகத்குருவாக சகல சாத்திர வித்தகரான ஓம்ஸ்ரீமுத்துசங்க மாமுனிவர் இருந்துவந்தார்
.இவர் விவாகம் செய்து இல்வாழ்க்கை மேற்கொள்ள,இவரின் தம்பிமார்கள் தாம் திருமணம் செய்துகொள்ளாமல் மூத்தவரான ஜகத்குருவிற்குச் சேவை செய்து வந்தனர்.முத்துசங்கமா முனிகள் என்ற பெயரையே அடுத்தடுத்துப் பட்டம் பெற்றவர்கள் அபிஷேகத் திருநாமமாகக் கொண்டனர்.
இறுதியாக வந்த ஓம்ஸ்ரீமுத்து சங்க மாமுனிவரவர் பிரம்ம ஞானம் எய்த தவம் புரியச் சென்றுவிட்டார்.
குருபீடம் தக்க அதிபதி இல்லாமல் காலியாக இருந்தது.இத்தருணத்தை வீரசைவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். தேவாங்கர் சிலரை வீரசைவர்காளக மதமாற்றம் செய்தனர். அவர்கள் பூணூலில் சிவலிங்கம் அணிந்து கொண்டனர்.வேறு மதத்தினர் சிலரும் தேவாங்கரிடையே கலகம் விளைவித்துக் கட்டாய மதமாற்றம் செய்யத் தொடங்கினர்.
இச்சிக்கலான காலத்தில் தோன்றிய விடிவெள்ளியே கங்காவதி கிராமத்தில் அவதரித்த மகாபுருஷர் பணிகௌடர் ஆவார்.
தெலுங்கு மொழியில் ‘ஸேனாதிபதி‘ என்ற சொல் செட்டிகாரரைக் குறிப்பது போல் கௌடர் என்னும் சொல் கன்னட மொழியில் செட்டிகாரரைக் குறிக்கும்.ஸ்ரீசௌடேஸ்வரி அம்மனிடம் பரமபக்தி கொண்டு நம்குலத்தொழிலான நெய்யும் தொழிலைச் செய்து வந்தார் பணிகௌடர். தர்க்கம், மீமாம்சம் முதலான சாஸ்திரங்களில் நிபுணரான அவர்,தேவாங்க தர்மம் உயர்ந்தது. தேவலமதம் பழமைமிக்க சனாதன மதம் தர்மமார்க்கம் மிக்கது.நம் குருபரம்பரை காலம் கடந்தது
என்றும் வீரசைவர்களுடன் விவாதித்து வந்தார்.
இதனை ஏற்காத வீரசைவ குருவான பசவேஸ்வரர் விஜய நகர சாம்ராஜ்யம் ஆனெகுந்தி சமஸ்தான அதிபதி வீரப்ரதாப ராமராயரிடம் தேவாங்கர் பற்றியும் பணிகௌடரைப் பற்றியும் முறையிட்டார். தேவாங்க குலம் குருவில்லாக்குலம் என பசவேஸ்வரர் வாதித்தார் மன்னனிடம்.
பணிகௌடர் அரசவை வரவழைக்கப்பட்டார்.மன்னர் அவரிடம் தேவாங்க குலம் பழமையானது, சனாதன தர்மம் உடையது என்று நிலைநாட்டுவதுடன் தேவாங்ககுல குருவையும் அரசவைக்கு அழைத்து வந்து காட்ட வேண்டும் என ஆணை இட்டார்.
மன்னரிடம் பணி கௌடர் தவணை பெற்றார். தேவாங்க குருவைத் தேடி அலைந்தார். பின் தம்மூரான கங்காவதி கிராமத்தின் அருகில் அடர்ந்த ஆரணியம் சூழ்ந்த “மழை மல்லப்பா ” மலைக்குகையில் கடுந்தவம் புரிந்தார்.பின் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை என நம் குலத்திற்காக அவர் உயிர்தியாகம் செய்ய முடிவெடுத்தபோது பாணி கௌடரின் தவத்திற்கு மகிழ்ந்த ஸ்ரீமுத்து சங்க மாமுனிவர் அவருக்குக் காட்சி தந்தார்.
அருள் சுரக்கும் நயனங்கள்,ஒளி பொருந்திய திருமுகம் நீண்ட சடாமுடி,தண்டு கமலத்துடன் புனித தவக்கோலத்துடன் மாமுனிவரின் காட்சி திகழ்ந்த்து.
பணிகௌடரின் வேண்டுகோளால் அவருடன் ஓம் ஸ்ரீமுத்து சங்க மன்மகா முனிவர் வீரப்பிரதாபராமராயர் ஆஸ்தான மண்டபம் எழுந்தருளினார்.

தமிழில் தேவாங்க புராணம் இயற்றப்பட்ட வரலாறு

தமிழில் தேவாங்க புராணம் இயற்றப்பட்ட வரலாறு:-
                           சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட தேவாங்க புராணத்தை, தமிழில் மொழிபெயர்த்து எழுதப்பட்ட காலம் எது? எங்கே? எப்படி? யாரால்?  என்று கேள்வி எழுப்பினால் அதற்குரிய விடை நமக்கு தெளிவாகவே கிட்டும்.

                           மதுரைக்கு அருகேயுள்ள தேனி மாவட்டம் போடி நாயக்னூரில் வசித்து வந்த தேவாங்க குலத்தினர், தம் குல நூலாகிய தேவாங்க புராணத்தினை சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்திட விரும்பினர். 

                           தங்களுடைய விருப்பத்தினை போடிநாயக்கனூர் ஜமீன்தாரராகிய திருவங்காரு திருமலைபோடய காமராசய பாண்டிய நாயக்க துரையிடம் தெரிவித்தனர். 

                        ஜமீன்தாரரும் தேவாங்க குல மக்களின் வேண்டுகோளினை ஏற்றார்.  அதன்படி, கோவை தேவாங்க குல குரு ஸ்ரீஸ்ரீசதாசிவானந்த தேசிக சுவாமிகளும், கலப்பதி  ஸ்ரீஸ்ரீதொட்டய்ய தேசிகரும்  சமஸ்கிருதத்தில் உள்ள தேவாங்க புராணத்தைத் தமிழில் மொழிபெயர்த்துத் தர வேண்டும் என்று ஜமீன்தார் வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறே அவ்விருவரும் சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்துத் தந்தனர். 

குலவுசெழுங் கோயமுத்தூர்
   வளர்நிதிதே வாங்கர்குல குருவாய் வந்த
நலநளின கமுகசதா சிவானந்த தேசிகனு நாளுமின்ப
   மலியுநகர்க் கலப்பதிவாழ் மூக்கய
         வேள் செல்வன் மனோன்மணி பொற் பாத
சலசமலர் துதியோகி தொட்டயதே
        சிகனுமுன்னூற் றன்மை காட்ட

                மொழி பெயர்க்கப்பட்ட தேவாங்க புராணத்தை, பழனியில் வசித்த முத்தமிழ் பாகுபாட்டினை உணர்ந்த மாம்பழக் கவிச்சிங்க நாவலர் தமிழில் கவியியற்ற, போடி நாயக்கனூர் ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. 

துதிபெருகப் பாடியதைக்காசை
   வளம் மதியிலருள் சுரந்து வாழு
முதுமறை வாழ்த்திய சவுடநாயகி
   பொற்கோவிலின் முன்மண்டபத்தின் மன்னோ
காசை நகர் புரக்கும்வங்கார்
    திருமலைப் போடயதுரைகா ரியவல்லோர்கள்
பேசுதமிழ்ப் பாவலர்தே
   வாங்கர்பத்தா யிரங்குலத்தோர் பெரியோர் யாரு

நேசமிகச் சூழ்சபையி ரலங்கேற்றி
   னான்மதுர நிறைந்த கல்வி
வாசமுயர் பழனிவளம் பதிவளர்
   மாம்பழக் கவிஞன் மதிவல்லோனே

        என்று இப்புராணத்தின் கடைசியில் பாடப்பட்டுள்ள சாற்றுக் கவி தெரிவிக்கிறது.  இங்கு காசை என்பது இன்றைய போடி நகரைக் குறிக்கும்.  அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தத்தில் பாடப்பட்ட இக்கவியினை சாமுண்டியாச்சாரியார் எழுதியுள்ளார்.  இதில் பாடப்பட்ட காலம் எது என்ற தகவல் இல்லை.  ஓலைச் சுவடியில் எழுதப்பட்ட இந்த புராணம் 29 சருக்கங்களாகப் பாடப்பட்டுள்ளது. 

        பழனி மாம்பழக்கவிச் சிங்க நாவலர் இயற்றிய தேவாங்க புராணம் ஓலைச் சுவடியில் இருப்பதைக் கேள்விப்பட்டு புத்தக வடிவில் கொணர, கோவையில் புத்தக வியாபாரம் செய்து வந்த திரு.இ.ஒண்ணைய கவுண்டர் என்பவர் விருப்பங்கொண்டார்.விருப்பம் மேலிட, தேடல் துவங்கியது.  தேடல் எப்படி வெற்றி பெற்றது என்பதனை அவர் நூலில் கீழ்க்கண்டவாறு உரைக்கிறார். 

         "அங்ஙனச் செய்யப் பெற்றுள்ள இப்புராணமானது இதுகாறும் அச்சிடாமலும், பெரும்பாலும் அத்தேவாங்க குலத்தினருக்கே தெரியாமலுங் குடத்திலிட்ட விளக்கைப் போல் பிரகாசமின்றி மறைந்து கிடந்தது. மகாவித்துவானாகிய இந்நாவலர் பெருமானியற்றிய பாடல்களைச் சேகரஞ் செய்ய விரும்பிய எனக்கு,இத்தேவாங்க புராணம் அவரால் செய்யப்பட்டுள்ளதென்று சிலரால் கேள்வியுற்று அதனைத் தேட முயற்சி செய்ததில், கோயம்புத்தூரில் வசிக்கும் ஸ்ரீநல்லமலை செட்டியார் அவர்கள் ஓர் பிரதியும், உடுமலைப்பேட்டை ஸ்ரீ பெ.இராமசாமி செட்டியார் அவர்கள் ஓர் பிரதியும் உபகரித்தார்கள்; அப்பிரதிகள் மூலப் பாடமாயிருக்கக் கண்டு கல்வியில் வல்லாரேயன்றி எல்லோருக்கும் பயன்படும் பொருட்டு,கோயம்புத்தூர் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் ஸ்ரீ.ஆர்.சபாபதிப் பிள்ளையவர்களைக் கொண்டு உரையியற்றுவித்துப் புராணஞ் செய்ய முதல் நூல் காட்டியவருள் ஒருவராகிய சதாசிவ சுவாமிகளவர்களுடைய ஜேஷ்டபுத்திரரும், தேவாங்க குலகுருவுமாகிய சதாசிவமாகிய ஐயரவர்களைக் கொண்டு அம்முதநூலோடு ஒப்பிட்டுப் பார்த்ததில் சில விஷயம் முரண்பட, அம்முரண்பட்ட விஷயங்களுக்கெல்லாம் ஸ்ரீசபாபதி பிள்ளையவர்களைக் கொண்டே சில செய்யுளை நீக்கியும்,வேண்டுமிடங்கட்குப் பொருந்த வேறு சில செய்யுட்களைக் கூட்டியும், திருத்தியும், கோயம்புத்தூர் ஜவுளி வியாபாரஞ் செய்யும் மகாகனம் பொருந்திய வெரிவாட செட்டியாரவர்கள், கிரிய செட்டியாரவர்கள் முதலிய தேவாங்க குல திலகர்களது விருப்பத்தின்படி, அவர்களது திரவிய சகாயத்தை (நிதி உதவி) கொண்டு அச்சிட்டு முடித்து இன்று எல்லோருங் காண வெளிப்படுத்தினேன்" என்று தமது பதிப்புரையில் திரு.ஒண்ணைய கவுண்டர் குறிப்பிட்டுள்ளார்.

           இந்நூல் அச்சிடப்பட்ட ஆண்டு விஜய ளூ ஆனி மீ 28 உ என்று மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது.  இந்நூலில் ஒரு போஸ்ட் கார்டை விட சிறிது பெரிய அளவிலான காகிதத்தில், புஸ்தக இருப்பு குறைவாக உள்ளதாகவும், மறுபதிப்பு செய்வதில்லை என்றும் எனவே, புத்தகம்
வேண்டுவோர் உடனடியாகத் தொடர்பு கொள்ளும்படியும், புஸ்தக விலையும், தபால் கூலியுள்பட ஆகும் விலை பற்றியும் அச்சிடப் பட்டு ஒட்டப்பட்டுள்ளது.  அதில், 1894 ளூ ஜனவரி மீ 1 உ என்று குறிக்கப்பட்டுள்ளது.  எனவே, இதிலிருந்து புத்தகம் அச்சிட்டு வெளியிடப்பட்ட வருடம் 1890 க்கு முன்னோ அல்லது 1890 களிலோ இருக்கலாம். 

            இப்புத்தக வடிவிலான பதிப்பிற்கு உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த வித்வான் பு.ப.அ.முத்துச்சாமி செட்டியார் சாற்றுக் கவி பாடியுள்ளளார்.  இந்நூலின் கடைசி பகுதியில் ஒரு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.  அதில், " தேவாங்க முனிவர் ஏழாவதாரத்திலும் செய்த சாஸ்திரங்கள் இன்னவையென்று பெங்களூரில் வசிக்கும் பிரம்ம ஸ்ரீவேதமூர்த்தி நஞ்சுண்ட தீஷித சுவாமிகளவர்களைக் கொண்டு அருப்புக்கோட்டைக்கடுத்த சின்ன புளியம்பட்டியிலிருக்கும் தேவாங்க குல அபிமானி ஸ்ரீரா.ம.நா.கஉத்தாணு செட்டியாரவர்கள் எழுதி,இத்தேவாங்க புரணத்துடன் சேர்க்கும்படி அனுப்பினார்.அவருடைய இஷ்டப்படியே அச்சாஸ்திர விவரத்தை இப்புராணத்தில் சேர்த்திருக்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

             மேலும் இந்நூல் அச்சிடுவதற்குதப் பொருளுதவி செய்தவர்களின் விபரமும் அச்சிடப்பட்டுள்ளது. 
அவர்களின் பெயர்கள் வருமாறு:
கோயம்புத்தூர் ஸ்ரீ.வெ.வெரிவாட செட்டியார்,
ஜே.தா.இராமசாமி செட்டியார்,
வெ.வெள்ளியங்கிரி  செட்டியார்,
ந.கிரிய செட்டியார்,
சாமிரவுத்து நா.இராமையா செட்டியார்,
உடுமலைப்பேட்டை சாவுகார் ஸ்ரீ இராமலிங்க செட்டியார்,
குமாரர் திருமூர்த்தி செட்டியார்,
மடையாண்டி சாமி செட்டியார்,
சேலம் குகை கொ.ர.தம்மண செட்டியார்(முனிசிபல் கவுன்சிலர்),
செவ்வாய்பேட்டை சேலம் டி.மு.கோ.வக்கீல் கதிரி செட்டியார்,
வைத்தியலிங்கம் செட்டியார்,
திருப்பூர் சவுண்டப்ப செட்டியார்,
எம்.சுப்பிரமணிய செட்டியார்.

            மாம்பழக்கவிராயரால் இயற்றப்பட்ட தேவாங்க புராணத்தை முதன் முதலில் பொழிப்புரையுடன் காகிதத்தில் அச்சிட்டு வெளியிட்ட பெருமை கோவையைச் சேர்ந்தவர்களையேச் சாரும்.

           தேவாங்க புராணத்தை உரைநடை நூல் வடிவில் இயற்றி முதன் முதலில் வெளியிட்ட பெருமை திருப்பூர் திரு.வி.எஸ்.நடராஜ் அவர்களையேச் சாரும். 1971ஆம் ஆண்டு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.இந்நூலுக்கு குமாரபாளையம் தொழிலதிபர் திரு.ஜே.ஜே.கே.அங்கப்ப செட்டியார் அணிந்துரை எழுதியுள்ளார். 

             இந்நூல் உருவான வரலாற்றை திரு.வி.எஸ்.நடராஜ் செட்டியார் தமது வெளியீட்டுரையில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார். 

             "யான் நான்காண்டுகளுக்கு முன் சைவத் திருமுறைகள் பன்னிரண்டையும் பாராயணம் செய்ய விரும்பினேன்.  அவைகளைப் பொருளுணர்ந்து பயிலும் நிமித்தம் எங்கள் சொ.செ.ம.உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியரும் எனது கெழுதகை நண்பருமான வித்வான் க.பழனிச்சாமிப் புலவர் அவர்களைத் துணைக் கொண்டேன். பாராயணத்தின் இடையே,பிரபு லிங்க லீலை என்றதோர் நூலையும் பயின்றேன்.  பின்னர், மாம்பழக் கவிராயர் அவர்களால் பாடப்பெற்ற தேவாங்க புராணத்தையும் படித்தேன். அதன் கண்ணமைந்த கவிச்சுவை என் மனதைப் பிணித்தது. அந்த நூலைப் பதிப்பித்து வெளியிட்டால் அது நமது சமூகத்தார் பலருக்கும் செய்யும் சிறந்த சேவையாகுமென்று கருதி, முன்னர் அந்த நூலைப் பதிப்பித்து வெளியிட்டால் அது நமது சமூகத்தார் பலருக்கும் செய்யும் சிறந்த சேவையாகுமென்று கருதி, முன்னர் அந்த நூலைப் பதிப்பித்த பெருந்தகைகளின் அனுமதியைப் பெற,எனது எண்ணத்தை வெளியிட்டு யாருக்காவது தடைகள் உண்டோவெனக் கூறுமாறு வேண்டினேன்.  யாரும் தடை கூற முன்வரவில்லை. உடனே நூல் வெளியிட ஆவன செய்யத் தொடங்கினேன்.

            அந்த நாட்களில் ஒரு நாள் ஜலகண்டாபுரம் தேவாங்கர் குல குரு ஓம் ஸ்ரீசாம்பலிங்க மூர்த்தி சுவாமிகள் எனது இல்லத்திற்கு வருகை தந்தார்கள். அவர்களிடம் எனது கருத்தை இயம்பினேன். கேட்ட அவர்கள்,நீங்கள் வெளியிட விரும்பும் நூல் சிறப்புடைது;  படித்தற்குரியது;  எனினும் எல்லோரும் படித்துணரும் தகுதியுடன் கூடிய உரைநடை நூல் ஒன்றை வெளியிட்டு உதவுவீர்களாயின்,அது எங்களுக்கும்,மற்றையவர்களுக்கும் நன்கு பயன்படுவதாகும் என்று உரைநடை நூலை வெளியிடும்படி அன்புக் கட்டளையிட்டார்கள்.  அவர்கள் மீண்டும் சொன்னார்கள். கன்னட மொழியில் உள்ள நூல் மிகவும் தெளிவாக உள்ளது. அதனை யான் மொழி பெயர்த்துத் தருகிறேன்;அதனையே வெளியீடு செய்க என்றும் செப்பினார்கள்.அங்ஙனமே செய்கிறேன் என்று அவர்களிடம் செப்பிய நிலையில் சில நாட்கள் கழிந்தன.

             ஈதிங்கனம் நிகழ ஒரு தினம், படைவேடு தேவாங்க குருமூர்த்தி சென்னா ஓம் ஸ்ரீசாம்பலிங்க மூர்த்தி சுவாமிகள் எங்கள் இல்லத்திற்கு எழுந்தருளினார்கள்.அவர்களிடமும் எனது முயற்சியை எடுத்துரைத்தேன். அவர்கள் மிக மகிழ்ந்து மாம்பழக் கவிராயர் அவர்களால் இயற்றப்பட்ட செய்யுள் தேவாங்க புராணம் மிக்க நயமுள்ளது.  அந்த நூலின் செய்யுட்களும் இடையிடையே விரவிவர அந்த உரைநடை நூலை ஆக்குங்கள்.  அங்ஙனம் செயின்,அந்த நூல் இன்னமும் அதிக நலந்தரும் என்றார்கள்.அத்துடன் தெலுங்கு மொழியிலிருந்தும் தேவாங்க புராணத்தை மொழிபெயர்த்து உதவினார்கள். அவர்கள் கூறியதும் நன்மைகள் பயக்கும் என எண்ணி அவர்களைப் பார்த்து, கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழி நலன்களை நன்கு அறிந்த தாங்கள், யாங்கள் செய்யத் தொடங்கும் நூலின் கண் எழுகின்ற ஐயங்கள், மாறுபாடுகள் ஆகியவைகளைப் போக்கியருள அடிக்கடி வருகை தந்து ஆவன செய்தருள வேண்டும் என வேண்டினேன்.  அவர்களும் சம்மதித்தார்கள்.

           இவை யாவும் நிகழ்ந்த பின், எனக்கு ஆசானும் நண்பருமான புலவர் பழனிச்சாமி அவர்களிடம் மேற்கண்ட நிகழ்ச்சிகள் யாவையுங் கூறி இங்ஙனம் ஒரு நல்ல தேவாங்க புராணத்தை ஆக்கித் தருக என வேண்டினேன். அவர்களும் அங்ஙனமே செய்து தருவதாக மனமுவந்து ஒப்பினார்கள்.  இந்த நாட்களில் கன்னட மொழிபெயர்ப்பும் வந்தது.  மாம்பழக் கவிச்சிங்க நாவலரது நூலையும், கன்னட மொழி பெயர்ப்பு நூலையும் ஒப்பிட்டுப் படித்துதமிழில் சுருக்கமாக உள்ள வரலாறுகளைக் கன்னட மொழி நூலைக் கொண்டும், கன்னடத்தில் காணாத சில நுட்பங்களை மாம்பழக் கவிராயர் நூலில் இருந்தும் சேகரஞ் செய்து கொண்டு நூலை நல்ல நாளில் தொடங்கினோம்.

            நூல் வளர ஆரம்பித்தது.  ஜலகண்டாபுரம் குருநாதரவர்களும் அடிக்கடி தூண்டி, எங்கள் அயர்வை மாற்றிக் கொண்டிருந்தார்கள். படைவேடு குருநாதர் அவர்களும் அடிக்கடி வருகை தந்து நூலில் ஐயங்கள் மாறுபாடுகள் ஆகியவை நிகழா வண்ணம் பாதுகாத்துக் கொண்டு வந்தார்கள்.சுமார் ஓராண்டுக்குள் நூல் நிறைவு பெறுவதாயிற்று. படைவேடு குருநாதர் அவர்கள் முன்னர் நிறைவு பெற்ற நூலினை ஒரு முறை மீண்டும் படித்துக் காட்டிச் சில திருத்தங்கள் செய்து நூலை முற்றுற முடித்தோம்.

             தேவாங்க மரபினரின், பிற்கால சரிதம், குரு பரம்பரை வரலாறுகள் ஆகியவைகளைப் படைவேடு குருநாதரவர்கள் வாயிலாகக் கேட்டும் அவைகளையும் ஒரு பக்கமாக அந்த நூலில் அமைத்துக கொண்டோம்.  ஜலகண்டாபுரம் குருநாதர் அவர்களும், தமது வரலாற்றை எங்களுக்கு உதவியருளினார்கள்.  அதுவும் குரு பரம்பரை வரலாற்றுடன் இணைந்து வருகிறது. 

            இங்ஙனம் நூல் நிறைவு பெற்ற பின் கோவை கம்மவார் அச்சகத்தில் இந்த நூலை அச்சிடுமாறு சௌமிய ஆண்டு தைத்திங்களில் கொடுத்தோம். அவர்களும் விரோதி கிருது ஆண்டு சித்திரைத் திங்களில் இந்த நூலைப் புத்தக வடிவில் அழகுற ஆக்கித்தந்தார்கள்.

               இந்த நாட்களில், சமூகத்தார் அனைவருக்கும் பொதுவாக அமைந்த இந்த நூலை யான் ஒருவனே வெளியீடு செய்வது நன்றாகாது.  சமூகத்தவருக்கும் இதில் பங்கு தருவது சாலநலம் பயக்கும் என எண்ணி எனது உறவினர்,நண்பர்கள் ஆகியோரிடம் எடுத்தியம்ப அவர்களும் நூல் வெளியீட்டுக்காகத் தங்களது ஆதரவை நன்கொடை மூலம் தந்து உதவினார்கள். இந்த வகையில் நான்காண்டுகள் நிறைந்து இந்த நூல் இற்றை ஞான்று வெளிவருகின்றது.  சமூகத்தவர்கள் இதனையேற்றுப் போற்றும்படி பரிவுடன் வேண்டுகிறேன். 

               இந்த நூலைக் கன்னடத்திலிருந்து மொழி பெயர்த்து உதவியதுடன், நூல் வெளிவருவதற்கு மிகவும் தூண்டுதல் செய்த ஜலகண்டாபுரம் தேவாங்க குல குரு ஓம்ஸ்ரீசாம்பலிங்க மூரத்தி சுவாமிகள் அவர்களுக்கும்,நூல் மொழி பெயர்ப்பில் அவருக்குத் துணை நின்ற அவர்தம் குமாரர் ஸ்ரீவித்யாசாகர மூர்த்தி அவர்களுக்கும் முதற்கண் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். 

          தெலுங்கு மொழிபெயர்ப்பை உதவியும் இந்த நூலில் வரும் ஐயங்களை அவ்வப்போது போக்கியும் இப்புராணம் வளர துணையாயிருந்து எனக்கு உற்சாகம் ஊட்டியதுடன் பீடாதிபதிகள், சிம்மாசனாதிபதிகள் ஆகியோரது சரிதங்களையும், தமது முன்னையோரது வரலாறுகளையும் உதவிய படைவேடு குருநாதர் சென்னா ஓம் ஸ்ரீசாம்பலிங்க மூர்த்தி சுவாமிகள் அவர்கள் காட்டிய அன்பும் பிறவும் போற்றுந் தகையன" என்று திரு.எஸ்.நடராஜ் அவர்கள் தமது வெளியீட்டு உரையில் தெரிவித்துள்ளார்.  இதன் மூலம் தேவாங்க புராணம்(உரை நடை நூல்) உருவான வரலாற்யையும், வெளியீடு செய்யப்பட்ட விதத்தையும் அறியலாம்.  இந்நூல் முதற்பதிப்பாக வெளியிடப்பட்ட ஆண்டு 1971 ஆகும். 

 இந்நூலின் ஆசிரியர் வித்வான் க.பழனிச்சாமி அவர்கள் தமது நூன் முகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

                        "நமது இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும், ஒவ்வொரு மரபினருக்கும் அவர்களது வம்சாவழியைக் குறித்து ஆன்றோர்களால் செய்யப் பெற்ற புராணங்கள் ஆங்காங்கு ஒளிர்கின்றன. அவர்களது தோற்றங்கள் யாவும் கடவுளர்களை ஆதியாகக் கொண்டே தொடங்குகின்றன.  அந்த முறையிலேயே இத்தேவாங்க புராணமும் அமைகின்றது. 

                    இந்த தேவாங்க புராணம் வடமொழியில் உள்ள பிர்மாண்ட புராணத்தில் முதன் முதலில் தோன்றுவதாயிற்று.  அதனை ஆதியாகக் கொண்டு காலப்போக்கில் கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய பல்வேறு மொழிகளில் இப்புராணம் தோன்றி வளர்வதாயிற்று".

                      இவ்வாறு தேவாங்க புராண வரலாற்று நூல்கள் இயற்றப்பட்டன. 
                     

ஸ்ரீசைலமும் தேவாங்கரும்

    ஆக்கம்:தேவாங்கர் செம்மல் வைணவக்கடல் புலவர் மா.கிருஷ்ணமூர்த்தி(சேலம்) 
    மங்கலமான சிவபெருமான் கோவில் கொண்டிருக்கும் திருத்தலங்களுள் சிறப்பானது ஸ்ரீசைலம் ஆகும்.  ஆந்திர மாநிலத்தில் உள்ளது இத்திருத்தலம். 
   கர்னூல் மாவட்டம் ஆத்மகூர் தாலுக்காவில் உள்ள நல்லமலை என்றும் கருமலை என்றும் பெயர் பெற்ற மலை முகடுகளுக்கிடையே இத்திருத்தலம் அமைந்துள்ளது. 
     மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றினாலும் புகழ் பெற்றது.  இங்கு கிருஷ்ணாநதி வடதிசை நோக்கிப் பாய்கின்றது.  இங்கு இதற்கு பாதாள கங்கை என்று பெயர்.
     கடல் மட்டத்திலிருந்து 1500 அடிகள் உயரத்தில் அமைந்துள்ளது.  பூகோள ரீதியாக 16:12 வடரேகை 78 டிகிரி 5 கிழக்கு ரேகையில் சிறப்புறுகின்றது.
      சுவாமியின் திருநாமம் ஸ்ரீமல்லிகார்ஜுன மூர்த்தி அம்பாள், ஸ்ரீபிரமராம்பா. 
       பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாக இருக்கின்றார் ஸ்ரீமல்லிகார்ஜுன மூர்த்தி.  18 சக்தி பீடங்களுள் ஒன்று ஸ்ரீபிரம்மராம்பாவின் பீடம்.  அஷ்ட ஐஸ்வர்யங்களின் பிறப்பிடம் ஆகவும், பராசர மகரிஷி, பாரத்வாஜ மகரிஷி இவர்கள் தவம் புரிந்த புண்யசேத்திரமாகவும் விளங்குகின்றது. 
      யுகங்கள் நான்கிலும் ஆலயப் பெருமைகள் பேசப்படுகின்றன. 
 1.கிருதயுகத்தில் ஹிரண்ய கசிபு பூஜை செய்துள்ளார்.
2.திரேதாயுகத்தில் தமது வனவாச காலத்தில் சீதா தேவியுடன் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி சேவிதத்துடன், இருவரும் லிங்கப் பிரதிஷ்டை செய்துள்ளனர்.  இராமபிரதிஷ்டித தசசகஹ்ர லிங்கம் என்றும் சீதா பிரதிஷ்டித சகஸ்ரலிங்கம் என்றும் லிங்கங்கள் இன்றும் இங்கு வழிபடப்படுகின்றன. 
3. துவாபரயுகத்தில் பாண்டவர் இச்சேத்திரத்தில் தங்கி இருந்தனர்.
1.ஸத்யோஜாதலிங்கம்,
2.வாம தேவ லிங்கம்,
3.தத்புருஷலிங்கம்,
4.ஈசானலிங்கம்,
5.அகோரலிங்கம்
என்ற ஐந்து லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தனர்
.  இவ்வைந்து லிங்கங்களுக்கும் இன்றும் பூசனைகள் நடைபெறுகின்றன. 
4. கலியுகத்தில் ஆதிசங்கரர் தங்கியிருந்து தவம் புரிந்தார்.

நான்கெல்லைகள் :(வாசல்கள்):
        ஒவ்வொரு சேத்திரத்திற்கும் நான்கு எல்லைகள் குறிப்பிடப்படுவது வழக்கம். அதன்படி, 384 கி.மீ. நீள அகலம் கொண்ட இம்மாபெரும் சேத்திரத்திற்கு பிரகாசம் மாவட்டத்தில் உள்ள திரிபுராந்தகம் கிழக்கு வாசல் என்றும் கடப்பா மாவட்டத்தில் உள்ள சித்தவடம் தெற்கு வாசலாகவும், மெகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள அலம்புரம் மேற்கு வாசலாகவும் உமாமஹேஸ்வரம் வடக்கு வாசலாகவும் உள்ளதுடன்  புஷ்பகிரி சேத்திரம் தென்கிழக்கிலும் (ஆக்னேயம்), சோமசீல சேத்திரம் தென்மேற்கிலும்(நைருதி) சங்கமேஷ்வர சேத்திரம் வடமேற்கிலும் (வாயு) எல்லேஸ்வர சேத்திரம் வடகிழக்கிலும் (ஈசானம்) என திசைகள் நான்கிலும் கோணத்திசைகள் நான்கிலும் என வாயில்கள் நான்கு உபவாயில்கள் நான்கு என்று எட்டு வாயில்கள் புராணங்களில் சிறப்புறச் சொல்லப்பட்டுள்ளன. 
    மேலும் சிங்கவேள் குன்றம் என்று 4000 திவ்வியப் பிரபந்தங்களில் சிறப்புற்றுள்ள அஹோபில  சேத்திரத்திற்கு ஸ்ரீசைலம் சபா மண்டபமாக உள்ளது. 
ஆலய மகிமையை விரித்துரைக்கும் நூல்கள்:
இதிகாசங்களில் இராமாயணம், மஹாபாரதம் என்ற இரண்டிலும் ஸ்ரீசைல பெருமைகள் பேசப்படுகின்றன.  18 புராணங்களிலும் ஸ்ரீசைலம் காணப்படுகிறது. 
        கந்த புராணம் ஸ்ரீசைல காண்டம் என ஒரு காண்டத்தையே அதன் பெருமை கூற ஒதுக்கி உள்ளது. 
       ஆதிசங்கர பகவத் பாதர் இங்கு தவம் செய்துதான் சிவானந்த லகரி இயற்றினார்.  இவர் தமது யோக தாராவளி என்ற நூலில்ஸித்திம் ததாவித மனோநிலையம் ஸமாதௌ ஸ்ரீசைல ச்ருங்குயரேஷு கதோபல ப்ஸ்ய”(இந்த ஸ்ரீசைல கற்குகைகளிலேயே தான் முக்தி அடைய வேண்டும்) என்று விரும்புவது இத்திருத்தல மகிமையை விளக்குவது ஆகும்.
        சைவசமயக் குரவர்கள் நால்வரில் சரியைத் திருத்தொண்டினால் ஞானம் பெற்ற திருநாவுக்கரசு நாயனார் இம்மல்லிகார்ச்சுன மூர்த்தியை தரிசித்தார்.  தென்கயிலாய மூர்த்தியான இப்பெருமானைத் தரிசித்து ஆளும் நாயகனின் கையிலையின் இருக்கை காணவேண்டும் என்று திருக்கையிலாய யாத்திரை புறப்பட்டா என்பது பெரியபுராண வரலாறு.
ஸ்ரீசைலத்தை அரசாண்ட மன்னர் பரம்பரைகள்:
1) சாதவாகனர்கள் : கி.பி.முதல் நூற்றாண்டு முதல் மூன்றாம் நூற்றாண்டு வரை.
2) மூன்றாம் நூற்றாண்டின் பின் இட்வாக மன்னர்கள். 
3) இட்வாகு குலமன்னன் புருஷதத்துவைப் பல்லவ மன்னன் சிம்மவர்மன் வென்று பல்லவ நாட்டுடன் ஸ்ரீசைலத்தை இணைத்துப் பல்லவன் சிம்மவர்மன் அரசாண்டான். 
4) நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிருஷ்ணா, கோதாவரி நதிகளுக்கிடைப்பட்ட பகுதிகளை விஷ்ணுகுண்டியர்கள் அரசாண்டார்கள். 
5) ஆறாம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் பல்லவர்களிடம் இருந்து கடம்பர் ஆட்சிக்கு ஸ்ரீசைலம் வந்தது.
6) ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் தெலுங்குச் சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்டது.
7) எட்டாவது நூற்றாண்டில் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த கீர்த்தி வர்மனை ராஷ்டிரகூடர்களின் தண்டிதுர்கா என்பவன் வெற்றி கொண்டு ஆண்டான்.  கி.பி.973 வரை ஸ்ரீசைலம் ராஷ்டிர கூடர் வசம் இருந்தது.
8) கி.பி.973 ல் சாளுக்கியர் ராஷ்டிரகூடரை வென்று ஸ்ரீசைலத்தைத் திரும்பவும் கைப்பற்றினர். 
9) சாளுக்கியருக்கும் சோழ மன்னர்களுக்கும் இடையே நடந்த போரைப் பயன்படுத்திக் கொண்டு கொங்கு மன்னன் ஸ்ரீசைலத்தைக் கைப்பற்றினார்.  கி.பி.1162 வரை இவர்கள் ஆட்சியில் ஸ்ரீசைலம் இருந்தது. 
10) கி.பி.1162 முதல் காகதீய மன்னர்கள் ஆளுகைக்கு உட்பட்டது ஸ்ரீசைலம்.
11) கி.பி.1323 ல் டில்லி சுல்தான்களால் காகதீயரின் 2 வது பிரதாபருத்திர சக்கரவர்த்தி சிறை பிடிக்கப்பட்டு, டெல்லி செல்லும் வழியில் மாண்டு போனார்.  அப்போது 72 ஆந்திர சிற்றரசர்கள் முகமதியருடன் போரிட்டு இந்து சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தினர்.இவர்களுள் அத்தங்கியை அரசாண்ட வேமா ரெட்டி  முக்கியமானவர்.  இவர்தான் கொண்ட வீட்டிரெட்டி ராஜாவாக அழைக்கப்பட்டார்.  இவர்கள் காலத்தில் ஸ்ரீசைலத்திற்கும் பாதாள கங்கைக்கும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. 
12) ரெட்டி ராஜாக்களுக்குப் பின் விஜயநகர மன்னர்கள் அரசாண்டார்கள்.  கிருஷ்ண தேவராயர் காலத்தில் பற்பல திருப்பணிகள் செய்யப்பட்டன.
13) இதன்பின் வீரசிவாஜி மராட்டிய சைனியம் ஒன்றை ஆலயப் பாதுகாப்பிற்கு ஏற்படுத்தினார். 
14) இதன்பின், ஒளரங்கசீப்பின் அதிகாரத்திற்கு உட்பட்டு ராபீம்சிங் கவர்னர் ஆனார்.
15) அதன்பின் ஹைதராபாத் நவாப்புகள் வசம் ஆயிற்று. 
16) நவாப் நிஜாம் அலிகான் அசப்ஜா கி.பி.1782 ல் ஸ்ரீஸ்ரீஸ்ரீசிருங்கேரி ஜகத்குருவிடம் ஸ்ரீசைலத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் ஒப்புவித்து விட்டான். 
17) மேற்கண்ட நவாபே தன் நாட்டின் தென்பகுதியை ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனிக்கு ஒப்படைக்கும் போது ஸ்ரீசைலத்தையும் சேர்த்து ஒப்புவித்து விட்டான். 
18) ஆங்கிலேயர்கள் ஆலய பரிபாலத்தை புஷ்பகிரி பீடாதிபதிகளிடம் 1840 ல் ஒப்புவித்தனர். 
19) இம்மடாதிபதிகள் ஆலயத்தைச் சரிவர நிர்வகிக்காததால் ஜில்லா கோர்ட் நிர்வகித்தது. 
20) 1949 ல் அறநிலையத் துறையிடம் ஒப்புவிக்கப்பட்டு இன்றுள்ள  நிலைக்கு மாற்றங்கள் பெற்றது.  காலத்தையும் வென்று நிர்வாகம், அரசர்களையும் வென்று தான் மட்டும் கம்பீரமாக நிற்கிறது  ஸ்ரீசைலம்.
சேலமும், ஸ்ரீசைலமும்:-
          தேவாங்க ஜகத்குரு பீடங்கள் ஐந்தனுள் இரண்டாவது பீடம் ஸ்ரீசைலம்.  இன்று இப்பீடாதிபதிகள் ராஜமுந்திரியில் வசிக்கின்றனர்.  தேவாங்க சத்திரம் ஒன்று இங்கு விளங்கி வருகின்றது.  இங்குக் கோயில் கொண்டுள்ள மல்லிகார்ச்சுன மூர்த்தி தேவாங்க கோத்திரங்களுள் பலவற்றிகு வீட்டு தெய்வமாக (கிருஹ தெய்வமாக)) விளங்கி வருகின்றார்.  மல்லையா, பெட்டது மல்லையாத, மல்லிங்கர் மல்லிகார்ச்சுனர் என்ற பல பெயர்களில் தேவாங்கர் இம்மூர்த்தியை வணங்கி வருகின்றனர்.  போடி நாயக்கனூரில் அகஸ்திய மகரிஷி கோத்திரத்தாரும், சேலம் முதலான பகுதியில் மாண்டவ்ய மகரிஷி கோத்திரத்தாரும், முத்து மகரிஷி செவ்வலேரு குலத்தாரும் இன்னும் பல கோத்திரத்தாரும் மல்லிகார்ச்சுன மூர்த்தியை வணங்கி வருகின்றனர். 
        சேலம் என்ற பெயர் பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் கீதையிலும் காணப்படுகின்றது.  சேலம் என்ற பெயரைத் தேவாங்கர்கள்தான் சூட்டியுள்ளனர். “சேலாஜின குசுமோஎன்பது கீதையின் வரி. 
ஆஜினம்= மான்தோல்
குசும= தர்பைப்புல்
சேலா என்பதற்குப் பட்டு வஸ்திரம் என்று ஸ்ரீமத் ராமானுஜர் பொருள் கொண்டுள்ளார்.  எனவே, ராமானுஜர் காலமான சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு தேவாங்கர் இங்கு பட்டு வஸ்திரம் நெய்து வாழ்ந்து இருந்தனர் என்று தெரிகின்றது. 
    சிலப்பதிகாரத்திற்கு முந்தையது பெருங்கதை என்ற உதயணன் சரிதம்.  இக்காவியத்தில் சேலம் திருத்தி என்ற தொடர் வருகின்றது. 
    சுமார் 1500  ஆண்டுகட்கு முற்பட்ட பண்டைய உரையாசிரியர் ஒருவர் பெருங்கதைக்குக் குறிப்புரை எழுதியுள்ளார்.  அவர் சேலம் என்ற சொல்லுக்கு சேல் வடிவமைந்த சேலைகளை நெய்வோர் வாழும் ஊர் என்று எழுதி இருக்கின்றார். 
    சேல் என்றால் கெண்டை மீன்.  மீன் வடிவங்களை சேலையில் அமைத்து நெய்து வாழ்ந்து இருக்கின்றனர் நம் குல முன்னோர்.  சிலப்பதிகாரத்தின் பண்டைய உரையாசிரியர் ஆன அடியார்க்கு நல்லார் தம் உரையில் ஆடைவகைகளைக் குறிப்பிடும் பொழுது தேவாங்கம் என்று குறிப்பிடுகிறார். 
     பண்டைய நாளில் தேவாங்கர் குடிபெயரும் பொழுது ஒற்றைக் குடும்பமாகக் குடிபெயர்வது இல்லை.  இதற்குக் காரணம் நெசவுத் தொழிலே ஆகும். 
     அதிகாலை விடிந்ததும், விடியாததுமாக மடிப்புக் கட்டுவது நம் வழக்கம். குளிர்காற்று நீங்கி வெயில் உறைக்க ஆரம்பித்தால், பாவு நூல்கள் ஒன்றோரு ஒன்று பின்னி விடும்.  அப்படி ஆயின் நெய்வதற்குச் சிரமம்.
   இன்றும் ஒரு மடிப்பை நீட்டி அதைச் சுற்றுவதற்குக் குறைந்தது மூன்று பேர் தேவை.  இக்காரணத்தால் நம்மவர் குடிபெயரும் பொழுது, தேவாங்கர் வாழ்ந்த பகுதிக்கு மட்டும் தான் குடியேறுவார்.  அல்லது பல குடும்பங்களாக தொழில் முறைக்காகக் குடிபெயர்ந்து உள்ளனர். 
      குளிர்ந்த காற்றினுக்குக் கன்னடத்தில்,  சைலகாளிஎன்று பெயர்.  சைலஎன்ற சொல் மலையையும்  குறிக்கும்.  குளிச்சியையும் குறிக்கும்.
   இம்மாவட்டத்தில் குடியேறிய தேவாங்க மக்கள் சேர்வராயன் ஏற்காடு மலையின் குளிர்ந்த காற்றையும்,  மலைப் பகுதியையும் கருத்தில் கொண்டு இங்குக் குடியேறி இருக்கின்றனர்.  தங்களின் குருபீடத்தையும் மலையையும் குளிர்ந்த காற்றினையும் கருத்தில் கொண்டு சைலம் என்று பெயரிட்டு மகிழ்ந்து உள்ளனர்.  இதுவே பிற்காலத்து சேலம் என்று மருவி இருக்கின்றது. 
இன்றும் சேலம் மாவட்டத்தில் நெசவுத் தொழிலே முதன்மை பெற்று உள்ளது. 
    இவ்வளவு தூரம் ஸ்ரீசைலத்தை ஆராய வேண்டிய அவசியம் தான் என்ன? அன்றும் சரி இன்றும் சரி ஸ்ரீசைலம் தேவாங்கரின் வாழ்க்கை சரித்திரம் இவற்றுடன் பின்னிப் பிணைந்து நீரும் நீரும் கலந்தாற்போல் கலந்து உள்ளது. 
தேவதாசமைய்யனும் ஸ்ரீசைலமும்: ‘
    தேவாங்க அவதாரங்கள் ஏழு.1)தேவலர், 2) வித்யாதரர், 3)புஷ்பதந்தன், 4)வேதாள மகரிஷி, 5)வர்ருசி, 6)தேவசாலி, 7)தேவதாசமைய்யன் என்பனவாம். 
     இவ்வேழாவது அவதார காலத்தில், தாசமைய்யன் அவர்கள் மிகமிக நீண்ட கொடித் துணி ஒன்றனை நெய்து மல்லிகார்ச்சுன மூர்த்திக்குத் துவஜ ஆரோகணம் செய்தார். இது ஒரு சிவராத்திரி அன்று நிகழ்நத்து. 
     இத்துணிக்கு என்ன விலை தரலாம் என்று கேட்ட பொழுது, ஒருவர் மூன்று விரலை நீட்டி மூன்று உலகங்களையும் விலையாகத் தரலாம் என்றாராம். அப்போது திருமாலின் சக்கரம் வந்து மூன்று விரல்களையும் அறுத்துவிட்டதாக கர்ணபரம்பரைச் செய்தி கூறுகின்றது.
       திருமாலின் நாபிக்  கமல நூல், ஸ்ரீசவுடேஸ்வரியின் கங்கண மகிமையால் வளர்ந்த நூல் சாட்சாத் தாசமைய்யனே நெய்தது எனில் அதற்கு விலைதான் ஏது?
       இக்கொடித்துணியின் பேரழகில் திரு உள்ளம் பறிகொடுத்த ஸ்ரீமல்லிகார்ச்சுன மூர்த்தி என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்றார். 
       சிறந்த தவயோகியான தாசமைய்யன் ,”சுவாமி!நீர் இங்கு மல்லிகார்ச்சுனன் என்ற திருநாமத்துடன் விளங்குகின்றீர். நீங்கள் என் குலத்திற்குப் பிரதானமான இராமலிங்கேசுவரர் என்ற திருநாமத்துடன் என் தலைநகர் ஆமோத நகருக்கு எழுந்தருள வேண்டும் என்றும் இச்ஸ்ரீசைலத்தில் பவுராம்பிகை என்ற திருநாமத்துடன் விங்கும் அன்னை என் தேவாங்க குலத்திற்குரிய ஸ்ரீசவுடேஸ்வரியாக ஆமோத நகருக்கு எழுந்தருள வேண்டும் என வேண்டினார். 
    இவ்வார்த்தைக் கேட்டு இறைவன் மகிழ்ந்தான்.  நான் இராமலிங்கேசுவரராக வருகின்றேன். அம்பிகையிடம் நீரே நேரில் கேட்டுக் கொள்க! என்றருளினார்.        அம்மையிடம் கேட்டபோது அவள், " என்னைத் திரும்பப் பாராது அழைத்துச் செல்க! "  என்றருளினாள். "திரும்பப் பாராது அழைத்துச் சென்றால் நீர் வருவதையும் வராததையும் எங்ஙனம் அறிந்து கொள்வது"என வினவ,"என் பாதச் சிலம்பொலியைக் கேட்டு அழைத்துச் செல்க"! எனப் புனிதவாய் மலர்ந்தாள்.
      ஸ்ரீசைலத்தில் இருந்து தேவாங்கரின் தலைநகர் ஆமோத பட்டணம் நோக்கி, இப்புனித ஊர்வலம் மகிழ்வுடன் புறப்பட்டது. 
         சோதனைகள் இல்லையெனில் வாழ்வில் சாதனைகள் ஏது? காட்டாறும் அதில் ஓடிய நீரும் சோதனையாக அமைந்தக. 
        தேவாங்கருக்காக வேதங்கள் கொஞ்சும் பாதச் சிலம்பணிந்த திருவடிகள் சிவக்க நடந்தனள்.  ஸ்ரீசவுடேஸ்வரி காட்டாற்றிலும் இறங்கி நடந்தாள்.  நீரினுள் சிலம்பு மூழ்கியதால், சிலம்பொலி கேட்கவில்லை.  அன்னை வரவில்லையோ என்ற ஐயத்தினால் திரும்பிப் பார்த்தனர் தேவாங்கர்கள்.  தன் ஆணையை மீறியதால் அன்னை அவ்விடத்திலேயே நீரினுள் மறைந்தாள்.  துன்ப மின்னல்கள் தாக்கின.  அழுதனர்; அரற்றினர்;கரைந்தனர்; முடிவில்லாத் துன்பத்தினால் துவண்டனர்.  துவண்டோருக்கு அருமருந்தான இராமலிங்கேசுவரர் இதம் மொழிந்தார். 

        "தேவாங்கரே! அஞ்சாதீர். நீர் என் நெற்றிக் கண் வழிவந்தவர்கள்.  அன்னையின் ஆணையை மீறிய வருத்தத்தினால் மறைந்து இருக்கின்றாள்.  எனினும், உங்கள் மீது மாறாத அன்பும் அருளும்  கொண்டு உள்ளாள்.

         கையில் வாளாயுதம் வைத்துக் கொண்டு உள்ளீர். அவ்வாளினால் அன்னையை வருக வருக என்று கூறி, உங்கள் அங்கங்களைச் சேதித்துக் கொள்ளுங்கள்.  உங்களின் துன்பத்தை அவள் பொறுக்க மாட்டாள்.  வெளிப்பட்டு விடுவாள்" என்று ஆலோசனை கூறினார். இறைவனின் இத மொழிகளைக் கேட்ட நம் முன்னோர் வாளாயுதத்தை உருவினர்.  சிரசின் மீதும் தோள்கள் மீதும் மார்பின் மீதும், "தல்லீ பராக்! பாம்மா பா" என்ற வீர மொழிகளைக் கூவிக்  கொண்டு வாளாயுதங்களை வீசினர்.

       தேவாங்கரின் அங்கங்கள் சேதம் அடைந்தன.  அருளே!  வடிவமான அந்த மஹாசக்தி பொறுப்பாளா என்ன?   

       நூலைக் காத்துக் கொடுத்தவள்; தேவாங்கரின் குல மகள். நீரினுள் இருந்து வெளிப்பட்டு அருள் புரிந்தாள்.
       
       இவ்வருள் வரலாற்றைத் தான் இன்றும் நாம் சக்தி அழைப்பு என்று கொண்டாடுகின்றோம்.  அன்று தேவாங்கர் அலகு சேவை செய்து அன்னையை அழைத்து வருகின்றோம். 

ஸ்ரீசைலத்தில் இன்று தேவாங்கரின் உரிமை:
      அன்று தேவதாசமைய்யன் கொடித்துணி ஏற்றி மகிழ்ந்தார்.  ஸ்ரீசைலத்தில் சிரவாத்திரியன்று, இதனை நினைவூட்டும் விதத்தில்  ஸ்ரீசைலத்தில் தேவாங்கரின் வழிபாடு சிவராத்திரி விழாவில் நடைபெறுகின்றது.
      
      ஸ்ரீசைலத்தைச் சுற்றியுள்ள சீராளா முதலான ஊர்களில் தேவாங்கர் வாழ்ந்து வருகின்றனர்.  இங்கு தேவாங்க நெசவாளர் வீடுகளில் இரண்டு தறிகள் உள்ளன.  காலையில் எழுந்து நீராடித் தூய்மையாக சுவாமி தறியில் ஒரு முழம் நெய்து விட்டு அதன் பின் தம் ஜீவனத் தறியில் நெசவு நெய்வார்கள்.  வீட்டில் இரண்டு தறிகள் இருக்கும். ஒன்று சுவாமித் தறி.  மற்றது ஜீவனத் தறி.  சுவாமித் தறியில் ஆண்டு முழுக்க நெய்யும் துணி 365 முழம் இருக்கும்.

      இங்ஙனம் பல தேவாங்கரும் நெய்யும் துணிகளை ஒன்று திரட்டிக் கொண்டு வருவார்கள்.  இத்துணிக்கு 'தலபாகலு' என்று பெயர். 

       சிவராத்திரிப் பூசனை நான்கு ஜாமங்களில் நடைபெறும் பூசனை ஆகும்.  மாலை 6 மணி முதல் 9 மணி வரை முதல் ஜாமம்.  இரவு 9 மணி முதல் 12 மணி வரை இரண்டாம் ஜாமம். நடுநிசி 12 மணி முதல் 3 மணி வரை மூன்றாம் ஜாமம். 3 மணி முதல் 6 மணி வரை நான்காம் ஜாமம்.  பூசனை விபரங்கள் விரிக்கில் பெருகும்.  இந்நான்கு ஜாமங்களுள் இரண்டாம் ஜாமமான இரவு 9 மணி முதல் 12 மணியில் கடைசி 24 நிமிடங்களும், மூன்றாம் ஜாமமான நடுநிசி 12 மணி முதல் 3 மணியில் முதல் 24 நிமிடங்களும் என 48 நிமிடங்கள், அதாவது இரவு 11 மணி 36 நிமிடங்களிலிருந்து 12 மணி 24 நிமிடங்கள் வரையிலான 48 நிமிடங்கள் மஹாநிசிக் காலம் என்று பெயர்.  இந்த நேரம் தான் சிவராத்திரியில் லிங்கோத்பவர் உற்பத்தி ஆன காலம். 

     இம்மஹாநிசிக் காலத்தில் லிங்கோத்பவர் உற்பத்தி ஆகும் காலத்தில் ஸ்ரீசைல ஆலயத்தின் உள்ளேயிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு விடுவார்கள்.  தேவாங்கர் மட்டும் ஆலயத்தினுள் திகம்பரராக இருப்பார். திகம்பர ஸ்வாமியான மல்லிகார்ச்சுன மூர்த்திக்கு தேவாங்கர் திகம்பரராக இருந்து வேமாரெட்டி கோபுரத்தில் இருந்து நந்தி வரை இத்தலபாகலு துணியைச் சுற்றிப் பூசிப்பார். 

      இந்நடைமுறை இன்றளவும் கடைபிடிக்கப்படுகின்றது. 
    
       படைவீடு ஜகத்குரு 32 வது பட்டம் சென்ன ஓம் ஸ்ரீசாம்பலிங்க மூர்த்தி ஸ்வாமிகள் இதனைக் 'கம்மி பாவாடலு' என்று தெரிவித்து இருந்தார்.

      இப்பெயர் நடைமுறையில் தலபாகலு என்று அழைக்கப் பெறுகின்றது.  புராண காலம் தொட்டு இன்றளவும் இத்திருத்தலம் தேவாங்கருடன் பின்னிப் பிணைந்து உள்ளது.

       இவ்வரலாறு முதலானப் புனிதங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று பல்லாண்டுகளாக ஆசை கொண்டிருந்தேன்.  என்னுடைய விருப்பம் நிறைவேறும் காலமும் வந்தது.   
           ஸ்ரீசைலம் வரலாறு முதலானப் புனிதங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று பல்லாண்டுகளாக ஆசை கொண்டிருந்தேன்.  இவ்வாசையை கொடை வள்ளல் பெருந்தகை திரு.எஸ்.கே.சுப்பிரமணியம் செட்டியார் அவர்களும் அவர்கள் பத்தினியார் திருமதி கலாமணி அம்மையார் அவர்களும் அன்புடன் நிறைவேற்றி வைத்தனர்.

       அந்தத் திருநாள் 21.06.2009 சனிக்கிழமை ஆகும். சேலத்தில் இருந்து உயர்திரு.எஸ்.கே.சுப்பிரமணியம் செட்டியார், அவர் தம் பத்தினியார் திருமதி. கலாமணி அம்மையாரும், திருப்பூர் உயர்திரு.சண்முகம் அவர்தம் துணைவியார் திருமதி கௌசல்யா அவர்களும் உயர்திரு.எஸ்.கே.மதேஸ்வரன், திருமதி செல்வி.குத்தாம்புள்ளி,  வீராசாமி சாஸ்திரிகள் அவர்தம் பத்தினியார் திருமதி ருக்குமணி, சிவசண்முக சாஸ்திரி மற்றும் நான் என பத்து பேர் அடங்கிய குழுவாகச் சென்றோம்.

        புகைவண்டி, தங்குமிடம், பேருந்து என அனைத்தும் குளிர்சாதன அமைப்பிலே வள்ளல் பெருந்தகை திரு.எஸ்.கே.எஸ். அவர்கள் அழைத்துச் சென்றார்.

          கைக்குழந்தைகளை கவனத்துடன் வளர்க்கும் தாய் தந்தையர் போல் திரு.எஸ்.கே.எஸ்.தம்பதியரும் அவர் தம் தம்பி எஸ்.கே.எம். தம்பதியினரும் அனைவரையும் கண்ணின் கருமணி போல் பாதுகாத்தது அவருடைய அன்பினையும், ஆய்வில் உள்ள ஆர்வத்தையும் காட்டியது.  

           மல்லிகார்ச்சுன மூர்த்திக்கும் பூசனைப் பொருள்களும் பவுராம்பிகை அம்மனுக்கு பட்டும் சாத்தி வழிபட்டனர்.

          ஸ்ரீசைலத்தில் தேவாங்கர் சத்திரத்தில் தங்கினோம்.  திரு.எஸ்.கே.சுப்பிரமணி செட்டியார், கலாமணி அம்மையாரின் புகைப்படம் சத்திரத்தில் அழகூட்டியது.  தேவாங்கர் சத்திரத்திற்கு நம் வள்ளல் பெருந்தகை நிரம்பப் பொருள் உதவியும் அன்னதான நன்கைடையும் வழங்கி உள்ளார். 

         எனவே, சத்திரத்தில் எங்களுக்கு ராஜஉபசாரமும் உணவும் அன்புடன் வழங்கப்பட்டது. 
 
         ஆண், பெண் என்ற வேறுபாடின்றி சத்திரத்துப் பணியாட்களுக்குச் சட்டை, வேஷ்டி, சேலை, ஜாக்கெட் துணி என வஸ்திர தானத்தை நம் பெருந்தகை தம்பதியினர் வழங்கி மகிழ்ந்தனர்.

        மல்லிகார்ச்சுன மூர்த்திக்கு வீரசைவர் வழிபாடு நிகழ்த்துகின்றனர். பவுராம்பிகைக்கு அந்தணர்கள் வழிபாடு நடத்துகின்றனர்.  

       ஆலயத்தின் வலப்புறத்தில் மராட்டிய இந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய வீர சிவாஜிக்கு அன்னை பவானி வீரவாள் வழங்கும் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. 
 
      ஆலயத்தின் வடபுறம் நோக்கி ஓடும் கிருஷ்ணா நதி பாதாள கங்கையாக உருவெடுத்துப் பாய்கின்றது.  நாகார்ச்சுன சாகர் அணைக்கட்டும் இருக்கிறது.  பாதாளம் நோக்கிச் செல்வது போல் எங்கள் ஊர்தி பயணித்தது. 

       படித்துறை வரை ஊர்திகள் செல்கின்றன.  படிகளில் இறங்கி ஆனந்தமாக பாதாள கங்கை ஸ்நானம் அனைவரும் செய்தோம். 

        அடுத்து எங்கள் பயணம் மஹாநந்தியை நோக்கி இருந்தது.  ஆலயத்துள் சென்றோம்.  அற்புதமான இயற்கைத் தீர்த்தம் நந்திக் குளத்தில் நிரம்பிக்  கொண்டே இருக்கின்றது. பின் வழிந்து நீர் ஓடையாக வெளிப்படுகின்றது.  உடலுக்கும் மனதுக்கும் மிக மிக இனிமை பயந்தது அந்த இதமான நீராட்டம். 

       நீராட்டம் என்பது இறைவனோடு கலத்தல் என்ற ஆண்டாள் தத்துவத்தின் உண்மையை எடுத்துக் காட்டியது.  ஆலயத்தின் உள் நுழைந்து,பரிவார மூர்த்திகள் சகிதம் இறைவனை தரிசித்துக் கொண்டு நந்தவரம் நோக்கிப் பயணித்தோம். 

      நந்தவர ஸ்ரீசவுடேஸ்வரி 
       மானம் போற்றி யமகாதேவி ஆவாள் இப்பெருமாட்டி.  அலகு சேவைசெய்யும் பொழுது சொல்லப்படும் தண்டகங்கள் பல உண்டு.  இத்தண்டகங்கள் பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டு வருவனவாம்.  தமிழ்நாட்டில் தெலுங்கு, கன்னடம் என இரு மொழிகளில் இத்தண்டகங்கள் வழக்கில் இருந்து வருகின்றன. நந்தவரத்தைக் குறிக்கும் தண்டகங்கள் நூற்றுக் கணக்கில்  ஆங்காங்கே பரவி இருக்கின்றன. 

       இத்தண்டகங்கள் நமது கலாச்சாரம், பண்பாடு, வழிபாடு, நமது பூசனை முறைகள், நாகரீகம் மற்றும் நமது ஆட்சிமுறை, நாம் வாழ்ந்த நாடுகள், ஊர்கள், தேவாங்க மன்னர்கள், அவர்களது வலிமை என எண்ணற்ற செய்திகளைத்  தாங்கி மிளிர்கின்றன.  இத்தண்டகங்கள் அனைத்தும் நமது பொக்கிஷங்கள்.  நமது களஞ்சியங்கள். 

         நந்தவரமுன்ன நெலெகொன்ன நயகதாம்பா ஸ்ரீவீரகல்யாணி சௌடதாம்பா என்று நந்தவர தண்டகங்கள் நிறைவு பெறும். 

       நந்தவரம் என்ற ஊர் ஆந்திர மாநிலத்தில் உள்ளது.  நந்தியால் தாலுக்காவில் இருந்து மதன பள்ளி செல்லும் வழியில் உள்ளது. 

        நமது பாராளுமன்றத் தொகுதிகளுள்  ஒன்று நந்தியால் ஆகும்.  இத்தொகுதியில் இருந்துதான் முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் நரசிம்மராவ் அவர்கள் தேர்தலுக்கு நின்று பாராளுமன்ற உறுப்பினர், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் என்ற பதவிகளை வகித்து  நிறைவாகப் பாரதப்  பிரதமராகவும் ஆட்சி புரிந்தார்.  

      நரசிம்ம ராவ் அவர்கள் இப்பகுதியில் உள்ள நந்த வைதீகர்கள் என்கிற அந்தணர் வகுப்பைச் சார்ந்தவர்.  இப்பிராமணரகளுக்கு இன்றும் நந்த வைதீகர்கள் என்று பெயர் நிலவி வருகின்றது. 

         நந்தவைதீகர்கள் அனைவருக்கும் ஸ்ரீசவுடேஸ்வரி குலதெய்வமாக விளங்கி வருகிறாள்.

          பிரதமர் ஆன பின்பு ஒருநாள் நரசிம்மராவ் அவர்கள் இத்திருக்கோவிலுக்கு விஜயம் செய்து ஸ்ரீசவுடேஸ்வரியை வழிபட்டு ஆசிபெற்றுச் சென்றார். மைனாரிட்டி  என்று இருந்து அரசை முறையாக ஐந்து ஆண்டுகள் காப்பாற்றி ஆட்சி புரிந்த அதிசயத்தை உலகம் கண்டது. 

        தேவாங்கரின் குல மகள்,  தேவாங்கரின்  குல தெய்வம் அந்தணர்க்கு எவ்வாறு குலதெய்வம் ஆனது என்பதை படவீடு  ஜகத்குரு  அவர்கள் கூறி அருளி இருந்தார்.  இவ்வாலயத்திற்கு பலமுறை விஜயம் செய்து இருக்கிறார். 

      வரலாறு இது தான்.  நந்தவர தண்டகங்கள் இவ்வரலாற்றை விளக்குகின்றன.

        நந்தவரம் முதலான பகுதிகளை ஒரு காலத்தில் நந்தவர்மன் என்ற மன்னன் ஆட்சி புரிந்தான்.  இம்மாமன்னனுக்கு காசி யாத்திரை சென்று விஸ்வநாதரையும் விசாலாட்சியையும் வணங்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. 

      காசி யாத்திரை புறப்படும் பொழுது மன்னனுக்குப் பிறிதொரு எண்ணம் தோன்றியது.  யாத்திரை ஒரு புண்ணியம்.  நமது செலவில் நந்த வைதீகரையும் அழைததுச் சென்றால் புண்ணியம் இரட்டிப்பாகும் என்று சிந்தித்துத் தன்னுடன் நந்தவைதீகர்களையும் அழைத்துச் சென்றான். 

       காசி விசாலாட்சியின் சன்னிதியில் மன்னன் வழிபடும் பொழுது அந்தணர்க்குத் தானம் ஏதேனும் வழங்கினால் புண்ணியம் மும்மடங்கு ஆகுமே என்ற சிந்தனை தோன்ற ஏழு கிராமங்களை விசாலாட்சியின் முன்னர் அந்தணர்க்குத் தானமாக வழங்கினான். 

        இனிதாக யாத்திரை நிறைவு பெற்று அனைவரும் திரும்பினர்.  அந்தணர்கள் வசதியுடன் வாழ்ந்ததால் மன்னன் தானமாக வழங்கிய கிராமங்களைச் சுவாதீனம் செய்து கொள்ளவும் இல்லை.  அதற்கான ஆவணங்களையும் பெறவில்லை. 

        சில காலம் கழிந்த பின்னர், கடும் பஞ்சம் ஒன்று நிலவியது.  அனைவரையும் பஞ்சம் வாட்டியது.  அந்தணர் சபை கூடியது.  மன்னன் தானமாக வழங்கிய கிராமங்களைச் சுவாதீனப்படுத்திக் கொள்ளாதது தவறு.  ஏழு கிராமங்களும் நமக்கு சுவாதீனமாகி இருந்தால், இப்பஞ்சம் நம்மை பாதித்திருக்காது. 

        இப்போது மன்னனிடம் செல்வோம்.  அக்கிராமங்களைக் கேட்போம் என்று அந்தணர் மன்னனின் கோட்டைக்ககுச் சென்றனர்.  மன்னனை வாழ்த்தி நின்றனர்.  வந்த சேதியை மன்னன் கேட்டான்.  காசியாத்திரையின் போது விசாலாட்சியின்  சன்னிதியில் அவள் திருமுன் தானமாக வழங்கிய ஏழு கிராமங்களையும் சுவாதீனப்படுத்திக் கொடுத்து அதற்குச் சாசனம் வழங்க வேண்டும் என்றனர். 
         பலருக்கு முன் அந்தணர்கள் இவ்வாறு கேட்டது மன்னனுக்கு அவமானமாகத் தோன்றியது. பழையதையெல்லாம் ஏன் பேசுகின்றீர்? புதிதாக ஏதேனும் வேண்டுமானல் கேட்டுப் பெறுங்கள் என்றான் நந்தவர்மன். இல்லை இல்லை புதிதாக ஒன்றும் வேண்டாம் முன்பு தருவதாகச் சொன்ன அந்த ஏழு கிராமங்கள் தான் வேண்டும் என்றனர்.
             நந்தவர்மனுக்குச் சினம் தோன்றியது. அந்தணர்களே யாத்திரைச் சென்றது நினைவில் இருக்கின்றது.  உங்களை அழைத்துச் சென்றதும் நினைவில் இருக்கின்றது.  தானம் கொடுத்தாக நினைவு இல்லை.  ஏதேனும் சாட்சி இருந்தால் கூறுங்கள் என்றான்.  வயிறு எரிந்த நந்த வைதீகர்கள் அந்த விசாலாட்சி தான் சாட்சி என்றனர்.    
       ஆயின் அந்த விசாலாட்சி வந்து சாட்சி சொன்னால் தருகிறேன். இப்போது செல்லுங்கள் என மன்னவன் கூற,அவமானத்துடன் திரும்பினார்கள் அந்தணர்கள்.
       வரும் வழியில் நந்தவரம் ஸ்ரீசவுடேஸ்வரியின் திருக்கோவிலில் கோலாகலமானத் திருவிழா.  தல்லிபராக்“ (தாய்வருகின்றாள்) என்று தேவாங்கர்கள் அன்னை ஸ்ரீசவுடேஸ்வரிக்கு அலகு சேவை செய்து, அவளை உரிமையுடன்  அழைத்து வரும் கண் கொள்ளாக் காட்சியைக் கண்டு களித்தனர்.  ஞானோதயம் பிறந்தது.  காசியில் குடி கொண்டவளும் மதுரையில் வீற்றிருப்பவளும் காஞ்சியில் இருப்பவளும் என விசாலாட்சி, மீனாட்சி, காமாட்சி என மூவராக விளங்குபவள் இந்த ஈசனின் பத்தினி.  சிம்மக் கொடியேள் ஆன இச்சவுடேஸ்வரி தானே? என்று உணர்ந்து, நம் அன்னை முன் சென்று பணிந்து நின்றனர்.  அன்னையே! நீயே அனைத்தும் என உணர்ந்தோம். பரப்பிரம்ம மகா சக்தியே! விசாலாட்சியாய் நின்ற உன் முன் தானே மன்ன் எங்களுக்கு கிராம தானம் வழங்கினான். இன்று சாட்சி கேட்கிறான்.  அழிவில்லாத சாட்சி நீதான்.  நீ எங்களுக்காக நந்தவர்மன் முன் சாட்சி சொல்ல வருக ! இல்லையெனில் உன் திருமுன் தலையைத் துண்டித்துக் கொண்டு மாளுகின்றோம் என்றுரைத்து தேவாங்கரின் வாளாயுதங்களை வாங்கித் தங்கள் கழுத்தில் புதைக்கச் சென்றனர்.
        தேவாங்கரின் கருணை மாதா தற்கொலையைத் தடுத்தாள்.  தான் நந்தவர்மனிடம் சாட்சி சொல்லப் புறப்பட்டாள். 
        தெய்வம் வருகின்றது என்றவுடன் மன்னன் கோட்டைக்கு வெளியே வந்து அம்பிகையை வரவேற்றான்.  மன்னா! அந்தணர்க்குத் தானம் வழங்கியது சத்யமே!” என்று சத்ய பூரணி புகன்றாள்.  தன் தவறினுக்கு வருந்தி மன்னன் நந்த வைதிகர்களுக்கு கிராம தானம் வழங்கினான். 
       சாட்சி பலிகினி விசாலாட்சி என்று அன்னைக்கு திருநாமம்.  நந்தவர ஸ்ரீசவுடேஸ்வரியை அந்தணர்கள் அன்று முதல் குல தெய்வமாக வணங்கினர்.
     அந்தணர் வட்டாரங்களில் ஸ்ரீசவுடேஸ்வரிக்கு ஆலயங்கள் எழுப்பினர்.  தேவாங்கருடன் அந்தணர்களும் ஸ்ரீசவுடேஸ்வரியை வணங்க ஆரம்பித்தனர். 
       இத்துடன் அனைத்தும் மங்களகரமாக நிறைவேறி இருப்பின் இக்கட்டுரை எழுத எனக்குத் தோன்றி இருக்காது. 
இனி வரும் வரலாறு திருப்பங்கள் பல கொண்டது.
      நந்தவரம் திருக்கோவிலில் அந்தணர்கள்  தேவாங்கர்கள் என இருபாலரும் வணங்கி வழிபட்டு வந்தனர். நாளடைவில் ஆலய நிர்வாகம் தேவாங்கர் கையில் இருந்து அந்தணர்கள் கைக்குச் சென்றது. 
      அறவோராய் இருக்க வேண்டிய அந்தணர்கள் அறத்தை மறந்தனர்.  புதிய ஆணையைப் பிறப்பித்தனர். ராஜகோபுர வழியாக அந்தணர்கள் மட்டுமே வந்து வழிபடவேண்டும்; தேவாங்கர் ராஜகோபுர வாசல் வழி வரக்கூடாது.  வேண்டுமானால் ராஜகோபுரத்தை விட்டு பின்புறமாக வந்து வணங்கிக் கொள்ளலாம் என்று ஏதோ வள்ளல்கள் போல் பேசினர். 
    நம்மவர் சபை கூடியது.  அந்தணர்கள் நம்மை வழிபட வேண்டாம் என்று கூறவில்லை.  முன்னால் சென்று வணங்கினால் என்ன? பின்னால் சென்று வணங்கினால் என்ன? எப்படியோ அவளை வணங்குவோம் என்று தமக்குள் சமரசம் செய்து கொண்டனர்.  ஆலயத்தின் மேற்குப் புறமாக பக்கவாட்டில் ஒரு சிறிய இடுப்புக் கதவை வைத்து இவ்வழியே தேவாங்கர் வரலாம் என்றனர். 
  இந்த ஏற்பாடு மகாதேவிக்குப் பிடிக்கவில்லை.  ஆலயமே தேவாங்கருக்குச் சொந்தமானது.  இடையில் வந்து ஆலய நிர்வாகத்தைக் கைப்பற்றிதோடு அல்லாமல் தேவாங்கருக்குப் பின்வழி காட்டுகின்றனரே என்று கொதித்தாள்.  கருவறையை விட்டு வெளியேறினாள்.  தேவாங்கர் வரும் வழி என்றனரே, அந்த வழிக்கு எதிரில் உள்ள சிறிய சுரங்கத்தினுள் சென்று தேவாங்கர் வரும் வழிக்கு எதிரே அமர்ந்து காட்சி தந்தாள்.
        தேவாங்கரின் குலமகள், தேவாங்கரின் குல தெய்வம்  தேவாங்கரின் மானத்தை காத்தாள்.  அந்தணர்கள் அலறினர்.  தவற்றை உணர்ந்து தேவாங்கரிடமும் அன்னையிடமும்  மன்னிப்பு பெற்றனர். மன்னிப்பது தெய்வ சுபாவம் அன்றோ.  இன்றும் அச்சுரங்கத்தினுள் அவள் விக்ரகம் அமர்ந்த நிலையில் உள்ளது.  கருவறையினுள் சுதை விக்ரகம் காணப்படுகிறது.  நம் மானம் காத்த மகாதேவியன்றோ அவள்.
நந்த வர ஸ்ரீசௌடேஸ்வரி திருக்கோவில் 
          ஏழுநிலை கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாக நம்மை வரவேற்கின்றது
.  ஆலயத்தின் முன் மரத்தால் ஆன திருத்தேர் அழுகுற விளங்குகின்றது.  அன்னையின் சிம்ம வாகனம் அழுகுற அமைந்து உள்ளது.  ஆலயத்தின் இடப்புறம் காலபைரவர் அமைந்து இருக்கின்றார்.  ஆலயத்தைச் சுற்றி கருங்கல்லால் ஆன மதிற்சுவர் எழுந்துள்ளது.  இக்கருங்கல் மதிற்சுவரை இடித்துத் தான் தேவாங்கர் ஆலயத்தின் உள்ளே வர வழி அமைத்தனர்.  கருவறைக்கு முன்பாக ஒரு சிறிய மண்டபம் அமைந்துள்ளது.  இதில் மகாமேடு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இம் மேடுவினுக்கு பிராமண பூசனை நடைபெறுகின்றது. கருவறை அன்னைக்கு தேவாங்கர் பூசனை செய்கின்றனர்.  மகாமேடுவின் முன் சுற்றிலும் பக்தர்கள் அமர்ந்து கொள்ள மஞ்சள் குங்குமத்தினால் அர்ச்சனை செய்து வைக்கின்றனர்.  அந்த அந்தண அர்ச்சகர்.  நமது குழுவினருடன் சிவசண்முக சாஸ்திரிகள் வந்து இருந்த காரணத்தால் அவர் தமது வெண்கலக் குரலால் சங்கல்ப்ப மந்திரத்தின் அர்ச்சனையை அற்தபுதமாகச் செய்து வைத்தார்.  அந்தணர் அதிசயத்துடன் பார்த்து நின்றார்.  கருவறைக்கு வெளியே சுவரை ஒட்டி இருபுறமும் இரண்டு சித்தர்களின் சுதைச் சிற்பங்கள் உள்ளன.  இங்குத் தவம் புரிந்து மோட்சம் பெற்ற சித்தர்கள் எனத் தெரிவித்தனர்.  அனைவரும் கருவறைக்குள் நுழைந்து நமது அன்னையை வலம் வந்து தரிசித்து மகிழ்ந்தோம்.   
     திரு.எஸ்.கே.எஸ்.தம்பதியினர் அன்னைக்கு பட்டுப் புடவைகள், பட்டாடைகள் சமர்ப்பிக்க அவை அன்னைக்கு அணிவிக்கப்பட்டன.  அன்று நம் அன்னைக்கு நூற்றுக் கணக்கான புடவைகளைப் பக்தர்கள் செலுத்தினார்கள்.  கர்நாடக மாநிலத்திலிருந்து பெல்காம், ஹாசன்  முதலான பகுதிகளில் இருந்து வந்த தேவாங்கர்கள் உரத்த குரலில் தண்டங்கங்களைச் சொல்லி நம்மை மகிழவைத்தனர்.  அவர்களுடன் பேசிய போது மாதம் ஓரிரு முறை நந்தவரம் வந்து அன்னையைத் தரிசிப்பதை வழக்கமாக கொண்டு இருப்பதாகத் தெரிவித்தனர்.  பாரதப் பிரதமர் ஆன பின் நரசிம்மராவ் இங்கு வந்து சாந்தி ஹோமம் முதலான ஹோமங்கள் செய்து வழிபட்டு உள்ளார்.  தேவாங்கரின் மானம் மரியாதைகளுக்குச் சாட்சியாக விளங்கும் நந்தவர ஸ்ரீசவுடேஸ்வரியைத் தரிசிக்கும் பாக்கியத்தை நமக்கு வள்ளல் பெருந்தகை குமரன் பட்டு மாளிகை உரிமையாளர் திரு எஸ்.கே. சுப்ரமணிய செட்டியார் கலாமணி தம்பதியினர் நமக்கு வழங்கினார்கள்.  இவர்களது இப்பேருதவியினால் ஸ்ரீசைலத்தில் தேவாங்கர் உரிமையையும் அந்தணரிடம் இருந்து தேவாங்க தெய்வப் பிராமணர் மானத்தைக் காத்த இம்மஹாதேவியான நமது குல தெய்வத்தைத் தரிசிக்கும் பேறு பெற்றோம். 
   இவர்களது  திருத்தொண்டு என்றென்றும் சிறக்கவும் அவர்கள் அனைவரும் அன்னை அருளால் அனைத்தும் பெற்று வளமுடன் வாழ அன்புடன் பிராத்திக்கிறோம்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் நடத்தப்பட்ட சமூக மாத இதழ்

சுதந்திரப் போராட்ட காலத்தில் நடத்தப்பட்ட சமூக மாத இதழ்:-
              இந்திய சுதந்திரப் போராட்ட காலமான கி.பி.1925ஆம் ஆண்டு தேவாங்க மகாஜோதி என்ற இதழ் ஆரம்பிக்கப்பட்டு, தேவாங்க சமூகத்தினருக்காக நடத்தப்பட்டுள்ளது.  
               கி.பி.1928 ம் ஆண்டின் ஏப்ரல் மாத இதழ் (மூன்றாமாண்டின் முதல் இதழ்) சவுடாம்பிகா செய்தி மாத இதழ் அலுவலகத்திற்கு கிடைத்தது.  அதனை வழங்கியவர்  அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் வேதியியல் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் மல்லிகார்ஜுனன் ஆவார். 

          அந்த இதழில் பல்வேறு தகவல்கள் அடங்கியுள்ளன.  அன்றைய கால கட்டத்தில் சமூகம் குறித்த பல்வேறு தகவல்கள் விரவிக் கிடக்கின்றன.

             இதழின் முதல் பக்கத்தில், தேவாங்க மஹாஜோதி, தேவல மரபினரின் நலத்தைப் பொறுத்து வெளிவரும் ஓர் உயர்தர மாதத் தமிழ்ப் பத்திரிக்கை என்றும் எப்பொருள் எத்ததன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு திருவள்ளுவர் என்று அச்சிடப்பட்டுள்ளது. 

             சென்னை வண்ணாரப் பேட்டையிலிருந்து டி.வி.கோபாலையா என்பவர் இந்த இதழினை நடத்தியுள்ளார்.  தமிழ் மொழியில், 250 பக்கங்களைக் கொண்டு, பல்வேறுபட்ட கட்டுரைகளைத் தாங்கி இதழ் வெளிவந்துள்ளது.  தொடர்கதை, அறிவியல், அரசியல், சமூக விழிப்புணர்வுக் கட்டுரைகளும் உள்ளடக்கம். 

             தெலுங்கு தேவாங்கர், கன்னட தேவாங்கர் இருவருக்குமே பொதுவான இதழாக வெளிவந்துள்ளது.   அன்றைய காலத்தில் மொழிவாரியான பிரிவினையின்றி தேவாங்கர்கள் செயல்பட்டு வந்துள்ளதை இந்த இதழின் மூலம் அறிய முடிகின்றது. 

            இதழுக்கு வருட சந்தா வசூலிக்கப்பட்டுள்ளது.  சந்தாதாரர்கள் 3 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.  போஷகர்கள் வருட சந்தாவாக 25 ரூபாயும், அபிமானிகளுக்கு வருட சந்தாவாக 10 ரூபாயும், இதர மரபினர்களுக்கு வருட சந்தா  2 ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளது.  வருட சந்தா அளித்த போஷகர்கள் மற்றும் அபிமானிகளின் பட்டியல் இதழில் இடம் பெற்றுள்ளது. 

               இதழ் போஷகர்களாக 8 பேரின் பெயர்களும், இதழ் அபிமானிகளின் பெயர்கள் நூற்றுக் கணக்கானவையும்  இதழில் இடம் பெற்றுள்ளது. 

இதழ் போஷகர்களின் பெயர் விபரம்:

திரு.கே.பி.வெங்கட்ராம செட்டியார்(சத்திய மங்கலம்),
திரு.வெ.வெரிவாட செட்டியார்(கோவை),
திரு.செ.நாகி செட்டியார்(கோவை),
திரு.ஸஜ்ஜா முனுசாமி செட்டியார்(சென்னை),
திரு.கே.ஸி.முத்துசாமி செட்டியார்(சென்னை) 
செட்டுமை திரு.வி.என்.எஸ்.ராமலிங்கம் செட்டியார் (கூடலூர், மதுரை ஜில்லா),
திரு.சி.ராமலிங்கம் செட்டியார்(தேவாரம் மதுரை ஜில்லா)
மெஸ்ஸர்ஸ் திரு.கீ.கா.பு.காமாட்சி செட்டியார் அண்ட் பிரதர்ஸ்(அருப்புக்கோட்டை,தேவாங்கர் குல முன்னேற்ற சபையார்).

               முதன் முதலாக ஆந்திராவில் தேவாங்க    ஜோதி என்ற இதழே தேவாங்கர்களுக்காக முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்ட இதழ் என்ற தகவல் இந்த இதழில் இடம் பெற்றுள்ளது. அன்றைய காலகட்டத்தில் தேவாங்கர்களுக்காக நான்கு மாதப் பத்திரிக்கைகள் தோன்றியுள்ளன என்ற தகவல் இந்த இதழின் மூலம் அறிய முடிகின்றது.

                முதல் இதழ் தேவாங்க ஜோதி (தெலுங்கு மொழி), இரண்டாம் இதழ் தேவாங்க ஸேவா (தெலுங்கு மொழி), மூன்றாம் இதழ் தேவாங்கப் பத்திரிக்கா (தமிழ் மொழி), நான்காவது இதழ் தேவாங்க மஹா ஜோதி (தமிழ் மொழி) ஆகும்.

             முதல் மூன்று இதழ்களும் மக்களின் போதிய ஆதரவின்றி நின்று விட்டன என்ற தகவல் தேவாங்க மகா ஜோதி இதழில் இடம் பெற்றுள்ளது. 

            தேவாங்க மகாஜோதி இதழின் தலையங்கத்தில் தேவாங்க மகாஜோதி பத்திரிக்கையும் எண்ணிறந்த இன்னல்களுக்கிடையில், பன்முறைத் தத்தளிக்க நேர்ந்ததாயினும், நமது பெருமை பொருந்திய அபிமான போஷகசந்தா நேயர்களின் ஆதரவாலும், கௌரவ பிரசாரகர்களின் முயற்சியாலும் இரவி முன் பனியென்ன தனக்குள்ள இடுக்கண்களினின்றும் வெளிப்போந்துலவ முடிந்தது என்று கூறப்பட்டுள்ளது. 

            அகில இந்திய தேவாங்க மஹாஜன சங்கம் என்ற இயக்கம் அன்றைய காலகட்டத்தில் உருவாக்கப்பட்டு, அதன் முதல் மகாநாடு சென்னையில் நடைபெற்றுள்ளதையும், அவ்வமைப்பிற்காக, நிர்வாகக் கமிட்டியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையும் தேவாங்க மகாஜோதி இதழ் மூலம் அறிய முடிகிறது.  இவ்வியக்கத்தின் இரண்டாம் மஹாநாடு ஹம்பியில் கூட்டுவதற்கு ஏற்பாடு செய்யும் படி இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரை ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

                அன்றைய காலகட்டத்தில் விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள் குறித்த கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.  அன்றைய காலகட்டத்தில்,சட்ட சபையில் தேவாங்க சமூகத்தினைச் சார்ந்தவர் உறுப்பினராக இடம்பெற்றிருந்ததையும், அவர் சமூகத்திற்காக செயல்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி இடித்துரைத்தும் கட்டுரை வெளியாகியுள்ளது.  
               இந்த இதழ் அன்றைய காலகட்டத்தில் சமூகம் இருந்த நிலையினை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.  சமூக வரலாற்றுச் சிந்தனையாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

1873 ஆம் வருடம் ஸ்ரீசவுடேஸ்வரியம்மன் திருவிழா சாசனம்

1873 ஆம் வருடம் ஸ்ரீசவுடேஸ்வரியம்மன் திருவிழா:-
                  சுரங்க தேவ மகரிஷி கோத்திரம் ஏந்தேலார் குலம் மடமனை ஸ்ரீசவுடேஸ்வரியம்மன் திருவிழா நடத்தியது பற்றிய விபரம் எழுதி வைத்த சாசனம். 

                  சுப நமஸ்து கலியுக சகாப்தம் 4974 சாலிவாகன சகாப்தம் 1795 ஆங்கில வருடம் 1873 பசலி 1282 கொல்லம் வருடம் 1048 க்கு செல்லானின்ற தமிழ் ஆங்கில வருடம் தை மாதம் 5 ம் தேதி எழுதி வைத்த சாசனம். 

                  கோவை மாவட்டம் வாரக்காடு வதம்பச்சேரியில் பத்தாயிரம் குலம், ஏழுநூறு கோத்திரம், தேவாங்க சூர்யவம்சம், சத்திய தர்மம், முனீஸ்வரர் கோத்திரம், ராமலிங்க சவுடேஸ்வரி தியான மந்திரமே சடாகஷரம், ரிஷி ஆச்சிரிமம் ருக்வேதம், ஆஸ்வலாயன சூஸ்திரம் வர்ணாசுப நமஸ்து.

                 இதில் சுரங்கதேவ மகரிஷி கோத்திரம் ஏந்தேலார் குல வம்சத்தில் அண்ணன் தம்பிகள் ஏழு முதன்மைக்காரரும் ஒரு மனதுடன் மடமனை சாமி கும்பிட வேண்டுமென்று யோசித்து எங்களில் 1.பெரிய மடமனை பூசாரி முதி செட்டியார், 2. பெரியவீட்டு சுப்பி செட்டியார், 3. வதம்பச்சேரி கக்கன் செட்டியார், 4. நல்லூர் பாளையம் பூசாரி காரியஞ் செட்டியார், 5. வெள்ளலூர் பூசாரி அண்ணாமலை செட்டியார், 6.வதம்பச்சேரி பூசாரி முத்துசாமி செட்டியார், 7. வதம்பச்சேரி பூசாரி வத்தஞ் செட்டியார் ஆகிய இந்த ஏழு பேரும் அண்ணன் தம்பிகளும் ஒன்று சேர்ந்து உள்ளூர் ஜாதியாரை அழைத்து  மரியாதை கொடுத்து உட்காரச் சொல்லி, " நாங்கள் அனைவரும் பத்தாயிரம் குலத்தாரையும் வணங்கி கேட்டுக் கொள்வது என்னவென்றால் மகாமேருவுக்குச் சரிசமமான பெரியோர்களே! நாங்கள் தங்களை வரவழைத்த காரணம் எங்கள்;  அண்ணன் தம்பிகள் அனைவரும் மடமனைசாமி கும்பிடுகிற முறை எப்படி?  என்று கேட்பதற்காக அழைத்தோம். ஆகையால் சாமி கும்பிடுகின்ற முறையை தாங்கள் தெரியப்படுத்த வேண்டுமென்று" கேட்டதற்கு அங்கு வந்திருந்த அனைவரும் சொன்னது, "நல்ல மகிழ்ச்சி தான். நீங்கள் சாமி கும்பிடுவதை நினைத்து நீங்கள் திருவுளத்தில் உத்திரவு கிடைத்த பின்பு சாமி கும்பிட்டால் மிகவும் சுகம் கிடைக்கும்" என்று சொன்னார்கள்.  " திருவுளம் கேட்கின்ற முறை எப்படி? என்று கேட்டதற்கு, ஜாதியாச்சாரப்படி தலைவாசலில் விரிப்பு போட்டு உள்ளூர் உறவின்முறையாரையும் ஜாதியாரையும் அண்ணன் தம்பிகளும் கூட்டம் கூடச் செய்து, அவர்களிடத்தில் சாமி கும்பிடுவதற்கு திருவுளம் கேட்பது என்கின்ற விபரத்தைச் சொன்னால் அவர்கள் சொல்வார்கள்.  ஆகையால் நீங்கள் அவர்களுடைய உத்திரவுப்படி சாமி கும்பிட்டால் உங்கள் குலகோத்திரம் உத்திர கோத்திரமாய் வாழ்வீர்கள்!" என்று சொன்னார்கள் அதன்படி நாங்கள் ஒப்புக்கொண்டோம். 

               அணிக்கடவு மடமனை ஒக்கிலிபாளையம், செவ்வேலாரு மடமனையும், வடவள்ளி லத்தேகாரர் மடமனையும், உள்ளூர் ஜாதியாரையும் அழைத்துக் கூட்டம் கூட்டி குருவி ஓட்டம் பார்த்ததில் சாமி கும்பிடவும்,குண்டம் நடப்பதற்கும் நல்ல உத்தரவு கிடைத்தது.  சின்னஞ்சிறுவர்களாக இருப்பதால் குண்டம் நடப்பது எப்படி?  என்று தயங்கினோம். அதற்குத் தக்க தைரியம் சொன்னவர்,  பருவாயிலிருந்து வதம்பச்சேரிக்கு வந்திருந்த செவ்வேலார் குலத்தைச் சேர்ந்த காஜி செட்டியார் என்பவர்,"நான் முன்பு குண்டம் நடத்தியிருக்கிறேன் ஆகவே இப்போது நான் முதலில் குண்டம் நடக்கிறேன்.  நீங்கள் பயப்பட வேண்டாம்" என்று தைரியம்  சொன்னார்.  நாங்கள் அனைவரும் நல்லது என்று சம்மதித்து ஆங்கிரஷ வருஷம் மார்கழி மாதம் 14 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது.  மார்கழி மாதம் 17 ஆம் தேதி உள்ளூர் ஜாதியாரும், மடமனையாரும் அறுபது வீட்டு அண்ணன் தம்பிகளும், பூசாரி அருணாசலம் செட்டியாரும், பெரிய தனக்காரர் அருணாசலஞ் செட்டியாரும், சேர்ந்து சந்தோஷமாய் முதலில் கன்னிப் புத்துக்கு கங்கணம் கட்டி, புத்துமண் கொண்டு வந்து மடமனையில் கத்திகை மேடையின் மீது போட்டு மடமனைக்குப் பண்டாரம் கட்டின விபரம் அன்றைய தினத்தில் அண்ணன் தம்பிகள்,பெண்டு பிள்ளைகள் அனைவரும் சுத்தமான நீரில் குளித்து, செய்த தவறுகளுக்குத் தக்க காணிக்கை வாங்கி, விபூதி ஜாதி ஆச்சாரப்படி வைத்து மடமனை சாமியையும்,ஜாதியார் சாமியையும் கெங்கைக்குக் கொண்டு போய் சுத்த நீராட்டி இரண்டு சப்பரத்திலும் சுவாமிகளையும் வைத்து சகல மேள வாத்தியத்துடன் மடமனைக்கு வந்து இரண்டு அம்மனையும் கத்திகை மேடையின் மீது வைத்து பூஜை செய்து பொங்கல் பூசையான பின்பு  தீர்த்தம், பிரசாதம் கொடுத்து விட்டு ஐந்து மஞ்சள் வஸ்திரம் எடுத்து அதில் விபூதியும், பத்திரியும் வைத்து தனித்தனியாக முடிந்து 1.பொன்குலுக்கிக் காடு பூளவாடி கப்பலேர் மடமனைக்கு ஒன்றும்,
2.மானூர் பாளையம் மாலிலார் குல மடமனைக்கு ஒன்றும்,
3. அணிக்கடவுலத்திகாரர் மடமனைக்கு ஒன்றும்
4.ஆலாம்பாளையம் செவ்வலேர் மடமனைக்கு ஒன்றும்
5.வடபள்ளி லத்திகார் மடமனைக்கு ஒன்றும்,
இதன்படி ஐந்து மடமனைக்கும் வதம்பச்சேரி ஏந்தேலார் குல மடமனைக்காரர் மடமனை தெய்வம் கும்பிட இவர்கள் மடமனைக்குப் பண்டாரங் கட்டியழைக்க,ஜாதியாரில் ஒருவரும் அண்ணன் தம்பிகளில் ஒருவரும் இந்த இரண்டு பேரும் அச்சமில்லாமல் கொண்டு போய் கொடுத்து வந்தார்கள்.  மறுநாள் காலையே குண்டத்திற்கு எரிகரும்பு வேண்டுமென்று ஜாதியாரைக் கேட்டதில், அவர்கள் ஒரு பெரிய புளிய மரம் கொடுத்தார்கள். ஜாதியாரும் மடமனையாரும் புளியமரத்துக்குக் காப்புக் கட்டி மரத்தை வெட்டிப் பிளந்து ஒப்பனை செய்தது வந்திருந்த மடமனையார்.  மார்கழி மாதம் 17ம் தேதி முதல் இரண்டாம் மனையும், 15 தினம் கொலுவு செய்து தை மாதம் 5 ஆம்  தேதி வியாழக் கிழமை பெரிய பண்டிகை என்று முடிவு செய்து கொண்டு அந்தத் தேதியில் வந்த மடமனை அணிக்கடவு மடமனை, ஆலாம்பாளையம் மடமனை, வடவள்ளி மடமனை, பூளவாடி மடமனை, உடுமலைப் பேட்டை தாலுகா குரலுக்குட்டை கிராமம், மலையாண்டி பட்டிணம் தேவாங்கர் குலகுரு பண்டிதாத்திரி ஏகோராமைய்ய  மழை பெய்ய மடாதிபதியாகிய சிவகுரு சுவாமியார், மேலே குறிப்பிட்ட மடமனையார் இவர்களின் முன்னிலையில் சாமி கும்பிட்ட விபரம்:

                     ஊர் தலைவாசலில் கரும்பினால் பந்தல் போட்டு ஜாதியாருடைய அம்மனையும், மடமனையாருடைய தெய்வத்தையும், நம்முடைய தெய்வத்தையும்  தலைவாசலில் கட்டப்பட்ட சப்பரத்தில் வைத்து பூஜை நைவேத்தியம் செய்து, மூன்று நாள் வரையிலும் மானூர் பாளையம் மடமனையாரை அழைத்து குண்டம் வளர்க்கச் சொன்னார்கள்.அவ்வூர் கானியானக் கவுண்டர் கிருஷ்ணசாமி அவர்களை அழைத்து  அவர்களிடத்தில் பூமி வாங்கி, குண்டம் வெட்டி மாலேலார் குலத்தார் குண்டம் வளர்த்தார்கள். அந்த குண்டம் யாதொரு குற்றமில்லாமல் பரமானந்த பரமசுகமாய் மகாமேரு கிரிபருவத்திற்குச் சமமாக உள்ளிதமாய் வளர்ந்தது.  அந்த குண்டத்திற்கு ஆராதனை பூஜைக்குக் கேட்ட பொருள்களை எல்லாம் கொடுத்தோம். பூஜை நடந்தது.பின்பு எல்லா சுவாமிகளுக்கும் பூஜை செய்து குண்டத்திற்கும் பூஜை செய்து குண்டத்தில் நடந்து போனார்கள். 

குண்டத்தில் நடந்தவர்கள்:

1. பெரிய பூசாரி அருணாசலம் செட்டியார்,
2.அவர் தம் மனைவியார்,
3. பெரிய வீட்டுக்காரர் சுப்பி செட்டியார், 4
4. அவர் தம் மனைவியார்,
5. த.சிக்கண்ண செட்டியார்,
6. கருவேலங்காடு சிக்கண்ண செட்டியார்,
7. வேலாரம்பாளையம் கரியஞ் செட்டியார். 
8.வடவள்ளி புதூர் உச்சி செட்டியார்,
9. அன்னியூர் சவுண்டப்ப செட்டியார்,
10.கட்டியக்கார சுப்பு செட்டியார்,
11. குண்டத்து வீரன் அண்ணாமலை செட்டியார்,
12. சுப்பு செட்டியார் மனைவியார்,
13. பெரியதனம் சவுண்டப்ப செட்டியார்,
14. சாமாஜி உ.மு.திருமலை செட்டியார்,
15. ஜாதி பிள்ளை  பொன்னி என்பவர் தன் மகனை இடுப்பில் வைத்து கொண்டு யாதொரு குற்றமில்லாமல் பதினைந்து பேரும் ஒழுக்கமாக குண்டத்தில் யாதொரு கஷ்டமில்லாமல் நடந்து வந்தார்கள்.  குண்டத்தில் நடந்து வந்தவர்களுக்கு பாணக்கம், பால், தயிர் முதலியன கொடுத்து தாகத்தை தீர்த்து சுகமாய் இருந்தார்கள்.
                                                                                                    சுபம்

                     அவரவர் உறவின் முறையார்கள் வேஷ்டி , சீலை, சீர்வரிசை செய்தார்கள். சகல ஜனங்களுக்கும் சந்தோஷமாக இருந்தது.  மறுபடி சாமிகளுக்கு பூஜை செய்து தீர்த்தம் திருநீர் வழங்கப்பட்டது.  மடமனையாருக்கு துப்பட்டி, சால்வை, வரிசை செய்தார்கள்.  பின்பு எங்கள் அண்ணன் தம்பிகள் அனைவரும் ஜாதியாருக்கும், மடமனையாருக்கும் உறவின்முறையார்களுக்கும், சுவாமிகளுக்கும் தீர்க்க தண்டமாய் நமஸ்காரம் செய்து அவரவர்கள் சுவாமியை அவரவர் இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.  அதன் பிறகு, தேவாங்கர் குலம் பத்தாயிரம், கோத்திரம் ஏழு நூறுக்கும் குலகுருவாகிய ஏகோராமைய்ய மனையுய்ய சாமியார் மடாதிபதியாகிய சிவகுரு சுவாமிகளுக்கு உள்ளூர் ஜாதியாரும், மடமனை யாரும் அண்ணன் தம்பிகளும் காணிக்கை, வேஷ்டி, பட்டு, பீதாம்பரம் சோமன்கள் கொடுத்து சகலரும் தீர்த்தண்டமாய் நமஸ்காரம் செய்து விபூதி வாங்கி ஆசீர்வாதம் பெற்றார்கள். அவரவர்களால் வாழ்த்துப் பாடல்களும் வேதோக்த ஆசீர்வாத அனுகும் பாடப் பட்டது. பிற்பாடு குலகுரு சாமியாரை சகலரும் ஆஸ்தானத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.

                                                                                              சுபம் சுபம்

                  வாழியலங்காரப் பாட்டு அடசீர்களில் நெடிலடிப்பா நாடியே ஜனங்களெல்லாம் நயந்து வந்து ராமலிங்க சவுடாம்பிகையை நாடியே  நல் முகூர்த்தமதில் நல்ல அக்னி குண்டமது நடந்து வந்து கூடியே ஜனங்களும் அலகு சேவையும் செய்து கும்பிட்டனர்.  மங்களகரத்துடன் கூடி நின்றபடியே பூஜை புரிந்தனர்.  பல நூல்கள் கற்று வல்லோராயிருந்த ஏந்தேலார் குலதிலகர் எல்லோரும் சுகசோபனராயிருக்க நல்ல கலியுக சகாப்தம் நாலாயிரத்து தொள்ளாயிரத்தி எழுபத்தி நான்கில் சொல்கின்ற ஆங்கிரச மகரமைந்து தேதியில் சூடாம்பிகையை தொழுது போற்றிட கல்வி கற்ற கவிஞர் சொல் சிவகுருஸ்வாமியாரால் அனைவரும் வாழ்கவே வாழியவே. 

வேதோக்த ஆசீர்வாத அனுகு:

1. பரயாப்த்யா அரும்தராயாய ஸத்வஸ்தோ
   மேதி ராத்ர உத்தம மஹாப்வதி சர்வஸ்யாப்தை

2. ஆயுர்கா அக்நே அனிஸோ ஜுஸானோ
    க்ருதப்ரதி கோக்ருதலோ, நிரோதிக்ருதம் பீத்வா
    மது சருகஸ்யம் பிரவ புத்ரம் பிரட்சதாதிமம்

3. யோவைதாம் ப்ரஹ்மனோ வேதா அமிர்தே
   நாள்ரு தாப்புரிம் தன்மைப்ர ஹம்சப்ரஹமாச்சா
  ஆயு கீர்த்திம் ப்ரஜாம்தது.

4. ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹிநே
    நமோவயம் வைஸ்ரவனாய குர்மஹேஸ
    காமே மான்காமகாமாய வஸ்ய ஹயம்
    காமே ஸ்வரோ ஸ்ருஸ்ரவனோ தராது
   குபேராய வைஸ்வரவனாய மஹாராஜாய நம

5. புத்ர காம பதுசாமோ தீர்காயுத வம்ச திணர்க்கம்
   தான்யம் தேஜோ பலம் த்ருதி புஷ்டிம்ச வர்த்ததாம் புத்ரகாமோ பவ.

6. சாம்ராஜ்யம் போஸ்யம் ஸ்வராராஜ்யம் வைராஜ்யம் பாரமேஸ்மய ராஜ்யமயம் பருத்வி ஸமுத்ரபர் யந்தாயா ஏக ராகிழி, சுபம், சுபம், சம்பூர்ணம். தெய்வம் கும்பிட்ட விபரம் சுபநமஸ்வ முற்றும்.

மடமனை தெய்வம் கும்பிட வந்தவர்களிடம் கையெழுத்து வாங்கிய விபரம்:

                     மடமனை தெய்வம் கும்பிட்ட பிறகு வந்திருந்த மடமனையாரிடமும், உறவின் முறையாரிடமும், அண்ணன் தம்பிகளிடமும், உள்ளூர் ஜாதியாரிடமும் அவ்விடமிருந்த சகல ஜனங்களுடைய கையெழுத்து இங்கே குறிக்கப்பட்டது. 

                    தாராபுரம் தளமனை 24 நாட்டுக்கும் செட்டிமை
1) பசுவைய செட்டியார்
2) தளமனை பெரிய தனம் ஊத்துப் பாளையம் தி.செக்கன் செட்டியார்
3) மேற்படியூர் ர.வெங்கிட்டராமன் செட்டியார்
4) நல்லூர்க்கனாடு உடுமலைப்பேட்டை செட்டிமை ஆ.ராமலிங்க செட்டியார்
5) பெரிய தனம் பெ.பூமாலை செட்டியார்
6) பொன் குலுக்கினாடு பூளவாடி செட்டிமை சங்கரப்ப செட்டியார்
7) கப்பலேர் மடமனை பூசாரி சவுண்டப்ப  செட்டியார்
8) ச.குப்பன் செட்டியார்
9) தெ.சப்பி செட்டியார்
10) சா.நாகி செட்டியார்
11) மேற்படியூர் செட்டியார் செந்திருமன் செட்டியார்
12) ச.க.முத்துச்சாமி செட்டியார்
13) கொண்டம் பட்டி நாராயணசாமி செட்டியார்
14) வைத்தியர் கெட்டி செட்டியார்
15) பெரிய மடமனை பூசாரி முத்துச்சாமி செட்டியார்
16) பெரிய வீட்டு பூசாரி சுப்பி செட்டியார்
17) உள்ளூர் பூசாரி கக்கன் செட்டியார்
18) நல்லூர் பாளையம் பூசாரி கரியஞ் செட்டியார்
19) வெள்ளலூர் பூசாரி அண்ணாமலை செட்டியார்
20) உள்ளூர் பூசாரி முத்துச்சாமி செட்டியார்
21) உள்ளூர் பூசாரி வத்தஞ்செட்டியார்
22) தி.பங்காரு செட்டியார்
23) ஒக்கிலிபாளையம் ஜே.சுப்பி செட்டியார்
24) அணிக்கட ர.பூசாரி செட்டியார்
25) மானூர் பாளையம் பூசாரி சந்திரன் செட்டியார்
26) ஆலாந்துறை ம.ராமன் செட்டியார்
27) புளியம்பட்டி வீ.கூளையன் செட்டியார்
28) பெரிய பூசாரி அருணாசலஞ் செட்டியார்
29) தன்னாசி செட்டியார்
30) த.சி.சிக்கஞ்செட்டியார்
31) பெரிய தனக்காரர் சவுண்டி செட்டியார்
32) கடயக்கார சுப்பி செட்டியார்
33) சருவேலாங்காடு ம.சிக்கண்ண செட்டியார்
34) வேலாரம்பாளையம் சரியஞ் செட்டியார்
35) வடவள்ளி புதூர் உச்சி செட்டியார்
36) அன்னூர் ம.சவுண்டி செட்டியார்
37) வீரபாண்டி க.கோமாளி செட்டியார்
38) நெகமம் ம.வீரப்ப செட்டியார்
39) வீரபாண்டி நஞ்சப்ப செட்டியார்
40) வெள்ளலூர் கள்ளி செட்டியார்
41) நொச்சிப் பாளையம் வீ.காமாட்சி செட்டியார்
42) பூவாநல்லூர் க.சொக்கன் செட்டியார்
43) சித்தூர் புதுநகரம் க.ராமலிங்கம் செட்டியார்
44) கல்லஞ்சேரி வீ.குருநாத செட்டியார்
45) கொல்லங்கோடு வீ.சுந்திரம் செட்டியார்
46) வல்வாங்கி க.சவுண்டி செட்டியார்
47) க.முருகப்ப செட்டியார்
48) வேங்கிபாளையம் ம.காமாட்சி செட்டியார்
49) குல்லாயிப்பாளையம் வா.வெங்கிட்டராமன் செட்டியார்
50) வா.குப்பன் செட்டியார்
51) பெருந்துறை வே.குப்பன் செட்டியார்
52) சுப்பேகவுண்டனூர் செட்டிமை வீ.தொண்டான் செட்டியார்
53) அணிக்கடவு சு.இராமன் செட்டியார்
54) நெகமம் தி.காசி செட்டியார்
55) நெகமம் கரியஞ் செட்டியார்
56) பருவாய் காஜி செட்டியார்
57) புளியம்பட்டி ம.காமாட்சி செட்டியார்
58) சூளேஸ்வரம்பட்டி சி. பொம்பி செட்டியார்
59) வெள்ளலூர் ம.கிருஷ்ணசாமி செட்டியார்
60) கு.நாகைய செட்டியார்
61) ரா.வீரண செட்டியார்
62) சொக்கலிங்காபுரம் ம.இராமலிங்கம் செட்டியார்
63) பூராண்டம்பாளையம் சு.சொக்கநாத செட்டியார்
64) தர்மகர்த்தா வீராசாமிக் கவுண்டர்
65) மணியம் முத்துச் சாமி முதலியார்
66) கந்தே கவுண்டன்பாளையம் பெ.கந்தன் செட்டியார்
67) ஔல்டதி வீ.சொக்கன் செட்டியார்
68) கொங்கனாடான் புதூர் கா.முத்தங் செட்டியார்
69) முருங்கபாடி  பொ.நஞ்சப்ப செட்டியார்
70)  பொ.நாராயண செட்டியார்
71) பொ.கிருஷ்ணசாமி செட்டியார்
72) கொண்டப்ப செட்டியார்
73) மு.சிக்கண்ண செட்டியார்
74) மு.சவுண்டி செட்டியார்
75) மு.அருணாசலம் செட்டியார்
76) கோடை மங்கலம் மணியம் கி.சு.ம.கிருஷ்ணசாமி நாயக்கர்
77) அங்கித் தொழுவு நா.நாராயணசாமி செட்டியார்
78) அருப்புக்கோட்டை ம.மு.ம.முந்தி செட்டியார்
79) வரப்பாளையம் க.மோளையன் செட்டியார்
80) வீ.லிங்கி செட்டியார்
81) மு.சிக்கண்ண செட்டி
82) வேண்டனூர் ரா.கந்தசாமி செட்டியார்
83) தண்ணீர் பந்தல் பாளையம் மா.குப்பன் செட்டியார்
84) ஒம்மஞ்செட்டி பாளையம் மு.மல்லி  செட்டியார்
85) ம.மூக்கஞ் செட்டியார்
86) ஏளூர்.சி.திருமன் செட்டியார்
87) கூடலூர் ர.ராமசாமி செட்டியார்
88) அன்னியூர் சு.சவுண்டப்ப செட்டியார்
89) வடுகபாளையம் பெரிய தனம் கந்தசாமி செட்டியார்
90) ந.சுப்பி செட்டியார்
91) செல்லனூர் சு. பழனிச்சாமி செட்டியார்
92) வையாபுரி செட்டியார்
93) குப்பனூர் கோ.மூத்தஞ் செட்டியார்
94) கோயம்புத்தூர் சு.காளி செட்டியார்
95) கி.கிரியஞ் செட்டியார்
96) மு.வெங்கிட்ட ராமன் செட்டியார்
97) மந்திரிபாளையம் மு.சிக்கன் செட்டியார்
98) குறிச்சிக் கோட்டை பெரிய தனம் பெ.சிக்கண்ண செட்டியார்
99) மேற்படியூர் வ.நரசிம்ம செட்டியார்
100) ஆ.சுப்பிரமணிய செட்டியார்
101) செட்டிமை வரத வெங்கட்டராமன் செட்டியார்
102) ம. சுந்திரஞ் செட்டியார்
103) தொட்டியந்துரை பா.சாமிநாதன் செட்டியார்
104) வி.ராமச்சந்திரன் செட்டியார்
105) செட்டிமை க.வேலாயுதச் செட்டியார்
106) குப்பன் பாளையம் கிருஷ்ணசாமி செட்டியார்
107) சு.தெண்டபானி செட்டியார்
108) வி.முத்தஞ் செட்டியார்
109) வீ.முத்துச் சாமி செட்டியார்
110) வாளவாடி பெரிய தனம் ம.மும்மூர்த்தி செட்டியார்
111) தி.தனுஷ்கோடி செட்டியார்
112) ப.முத்து வீரன் செட்டியார்
113) ப.கோபால் செட்டியார்
114) கா.சுப்பி செட்டியார்
115) ம.காமாட்சி செட்டியார்
116) ர.திருவேங்கடஞ் செட்டியார்
117) குளத்துப் பாளையம் வே.ரங்கி செட்டியார்
118) ம.மாரிமுத்து செட்டியார்
119) ஆ.நாகி செட்டியார்
120) கு.ராமசாமி செட்டியார்
121) ஏளூர் சு.இராமனாதன் செட்டியார்
122) வே.ரங்கி செட்டியார்
123) மு.அ.ப.மாரிமுத்து செட்டியார்
124) சூளேஸ்வரம்பட்டி
125) ம.கு.ம.திருமூர்த்தி செட்டியார்
126) போ.திம்தி செட்டியார்
127) பகவதிபாளையம் வே.ரங்கி செட்டியார்
128) மு.அ.பா.மாரிமுத்து செட்டியார்
129) சூளேஸ்வரம் பட்டி சி.சுப்பிரமணியம் செட்டியார்
130) ஆ.முத்துவீரன் செட்டியார்
131) குள்ளக்காபாளையம் காவிளிக் கனாடு செட்டியார்
132) ம.மாரி செட்டியார்
133) மா.மல்லி செட்டியார்
134) ல.ஆண்டி செட்டியார்
135) கு.ந.நஞ்சி செட்டியார்
136) ந.மாரி செட்டியார்
137)) க.பொம்மி செட்டியார்
140) பொ.நஞ்சப்ப செட்டியார்
141) போத்தனூர் செட்டிமை வை.மாரி செட்டியார்
142)  வை.சவுண்டி செட்டியார்
143) பெரிய தனம் சுப்பி செட்டியார்
144) மல்லி செட்டியார்
145) சுங்காரமடக்கு கா.அமராவதி செட்டியார்
146) கா.திருமன் செட்டியார்
147) க.வெள்ளிங்கிரி செட்டியார்
148) மேற்படியூர் மணியம் ரங்கசாமிக் கவுண்டர்
149) வெள்ளலூர் செட்டிமை ம.கணபதி செட்டியார்
150) சு.ராமலிங்கம் செட்டியார்
151) வை.சப்பி செட்டியார்
152) வி.காருண்ய செட்டியார்
153)  வலையன் புதூர் சுப்பி செட்டியார்
154) பே.ச.பெருக்கன் செட்டியார்
155) பருவாய் கூ.குப்பன் செட்டியார்
156) ம.கந்தசாமி செட்டியார்
157) வீ.சுப்பிரமணியம் செட்டியார்
158)  பெரும்பாரைச் சள்ளை வே.ரங்கனாதன் செட்டியார்
159) ர.ரங்கசாமி செட்டியார்
160) வைத்தியர் ராமசாமி செட்டியார்
161) வேளந்தாவளம் செட்டிமை அ.சென்னி செட்டியார்
162) சு.தம்மன்ன செட்டியார்
163) சு.குப்பண்ண செட்டியார்
164) கோவிந்தனூர் செட்டிமை  ராமன் செட்டியார்
165) தி.கிருஷ்ணசாமி செட்டியார்
166) கோவில்பாளையம் வ.தொண்டான் செட்டியார்
167) வ.சுப்பிரமணியம் செட்டியார்
168) சு. குமாரவேலு செட்டியார்
169) வடிவேல் செட்டியார்
170) சத்தியமங்கலம் தாலுக்கா, தொட்டனு பாளையம் கிராமம் மொடக்கந்துரை செட்டிமை கிருஷ்ண செட்டியார்
171) ர.திம்மப்ப செட்டியார்
172) பூ.சென்னி செட்டியார்
173) மா.கோவிந்தப்ப செட்டியார்
174) மதுரை 14 ஊர்த்தாய் கிராம், கொல்லபட்டி ம.சப்ராயன் செட்டியார்
175) வ.லட்சுமின்ன செட்டியார்
176) வே.ஈஸ்வரன் செட்டியார்
177) வே.முத்தஞ்செட்டியார்
178) ம.கிருஷ்ணசாமி செட்டியார்
179) க.மாரி செட்டியார்
180) வே.மீனாட்சி செட்டியார்
181) ர.பொம்மண்ண செட்டியார்
182) புங்க வர்த்தம் சி.ராமலிங்கம் செட்டியார்
183) சி.கிருஷ்ணசாமி செட்டியார்
184) ம.வையாபுரி செட்டியார்
185) வீ.ரங்கி செட்டியார்
186) ராமகிருஷ்ணன் செட்டியார்
187) ப.வெங்கிட்ட கிருஷ்ணன் செட்டியார்
188) ம.வீரி செட்டியார்
189) சு.சுந்திரன் செட்டியார்
190) க.வடிவேலு செட்டியார்
191) தோனுக்கால் ம.தர்மலிங்கம் செட்டியார்
192) ந.சப்பண்ண செட்டியார்
193) மா.க.வையாபுரி செட்டியார்
194) வாணரமுடி கா.ஆண்டி செட்டியார்
197)  ம.பாப்பி செட்டியார்
198) க.வேலப்ப செட்டியார்
199) ர.மாரிமுத்து செட்டியார்
200) வை.சுப்பறாய செட்டியார்
201) ந.வையாபுரி செட்டியார்
202) ராமலிங்கபுரம் பட்டக்காரர் சி. தொட்டி செட்டியார்
203) வை.ராமலிங்கன் செட்டியார்
204) கு.ச.வீரராஜேந்திரன் செட்டியார்
205) கு.ச.வீரமயேந்திர செட்டியார்
206) ந.கு.சி. அதிவீரபாண்டிய செட்டியார்
207) ம.சவுண்டி செட்டியார்
208) இளையரசு ஏந்தல் ம.சண்முகம் செட்டியார்
209) கூ.மாரிமுத்து செட்டியார்
210) வ.லட்சுமண செட்டியார்
211) கூ.காமாட்சி செட்டியார்
212) ம.கள்ளி செட்டியார்
213) கூ.கம்பாறை ர.கொண்டரங்கி செட்டியார்
216) கருணாகரன் செட்டியார்
217) லட்சுமிபுரம் பட்டத்து செட்டிமை கரியஞ்செட்டியார்
218) வா.அருணாசலம் செட்டியார்
219) ர.லட்சுமண செட்டியார்
220) நல்லக்கம்மாள்புரம் ம.வீரஞ் செட்டியார்
221) சுப்பறாய செட்டியார்
222) ம.வடிவேலு செட்டியார்
223) ம.குருநாத செட்டியார்
224) வீ.கந்தசாமி செட்டியார்
225) வே.சொக்கலிங்கம் செட்டியார்
226) சிவலிங்காபுரம் வே.சுப்பி செட்டியார்
227) ம.அனந்தராய செட்டியார்
228) வே.ரங்கசாமி செட்டியார்
229) ம.கந்தசாமி செட்டியார்
230) சு.சுந்தரன் செட்டியார்
231) கீள்கோட்டூர் ப.இராகவசாமி செட்டியார்
232) கு.சுந்தரன் செட்டியார்
233) ர.மாரிமுத்து செட்டியார்
234) வை.சுப்பிரமணி செட்டியார்
235) கணபதிபுரம் என். பெருமாள் செட்டியார்
236) ம.குழந்தைவேல் செட்டியார்
237) சு.சவுண்டி செட்டியார்
238) சு.கருப்பறாய செட்டியார்
239) முக்கூட்டுமலை வீ.காந்தார வீரன் செட்டியார்
240) வீ.சுப்பிரமணி செட்டியார்
241) மேல்கோட்டூர்  சு.அதிவீரபாண்டிய செட்டியார்
242) மா.கோவிந்தசாமி செட்டியார்
243) ம.அருணாசலம் செட்டியார்
244) சு.வையாபுரி செட்டியார்
245) அன்னக்கொடி ராமலிங்காபுரம் ர.சிக்குந்தம்மன்ன செட்டியார்
246) வ.அருணகிரி செட்டியார்
247) சு.சாமிநாதன் செட்டியார்
248) வை.ஆறுமுகம் செட்டியார்
249) தொட்டி கவுண்டன்பட்டி வீ.ராஜேந்திரன் செட்டியார்
250) ந.அ.அரசன் செட்டியார்
251) குவிசேரபட்டி கச்சைகட்டி சங்கரப்ப செட்டியார்
252) பெரியதனம் ம.ராமநாதன் செட்டியார்
253) க.ர.ஆண்டி செட்டியார்
254) ம.சுப்பிரமணியம் செட்டியார்
255) ம.வேலாயுதம் செட்டியார்
256) குவிசம்பட்டி சு.அழகிரி சாமி செட்டியார்
257) சு.வெட்கட்ராமன் செட்டியார்
258) கோயிலாங்குளம் செட்டிமை சுப்புராமன் செட்டியார்
259) ஆண்டி செட்டியார்
260) வை.சப்பி செட்டியார்
261) ந.பெருமாள் செட்டியார்
262) திராவி.சு.ம.சுந்தரன் செட்டியார்
263) ம.சுப்பிரமணியம் செட்டியார்
264) வீ.வீரசாமி செட்டியார்
265) சு.வேலாயுதன் செட்டியார்
266) க.மாரி செட்டியார்
267) சு.கருணாகரன் சாமி செட்டியார்
268) ம.வெங்கிடாசலம் செட்டியார்
269) கல்குறிச்சி செட்டிமை ம.வீரண்ண செட்டியார்
270) ம.லட்சுமன்னசாமி செட்டியார்
271) கு.வீ.ர.ராமசாமி செட்டியார்
274) இலுப்பூர் க.ம.வீரகாத்தி செட்டியார்
275) கு.அமராவதி செட்டியார்
276) வேலுரணி சா.மு.அ.பண்டாரஞ் செட்டியார்
277) கல்குறிச்சி க.சௌந்திர பாண்டிய செட்டியார்
278) குத்தாம்புள்ளி எஜமான் வீரி செட்டியார்
279) மா.ஈஸ்வரன் செட்டியார்
280) சித்தையன் கோட்டை ம.சுப்பி செட்டியார்
281) மோ.சங்கரன் செட்டியார்
282) வெள்ளையன் செட்டியார்
283) பூலக்காம்பட்டி ஆசிரியர் கோ.தி.ராமனாதன் செட்டியார்
284) ம.கந்தசாமி செட்டியார்
285) வீ.ராமசாமி செட்டியார்
286) கலிக்கம்பட்டி நாட்டாமை அருணகிரி செட்டியார்
287) ம.வீரமுத்து செட்டியார்
288) அமரபாண்டி.சு.சவுண்டி செட்டியார்
289) க.வேலாயுதம் செட்டியார்
290) ம.சுந்தரம் செட்டியார்
291) மதுரை பெரியகுளம் தாலுக்கா வடுகபட்டி செட்டிமை ம.வெங்கிடாசலம் செட்டியார்
292) கா.ரங்கசாமி செட்டியார்
293) அ.ம.மாரிமுத்து செட்டியார்
294) சின்னாளபட்டி ச.மொட்டயஞ் செட்டியார்
295) வீ.பண்டாரஞ் செட்டியார்
296) கு.மாரி செட்டியார்
297) முத்துராமபட்டி க.வீரப்ப செட்டியார்
298) வைத்தியர் அண்ணாமலை செட்டியார்
299) செட்டிமை வீரி செட்டியார்
300) அத்திக்கோம்பை ம.ரங்கசாமி செட்டியார்
301) கு.கிருஷ்ணசாமி செட்டியார்
302) மத.கந்தசாமி செட்டியார்
303) வி.குள்ளஞ் செட்டியார்
304) கரூர் தாலூக்கா , மணல்காடு கோடாந்தூர் செட்டிமை எ.சின்னஞ் செட்டியார்
305) பெரியதனம் சி.பொன்னாஞ் செட்டியார்
306) பொ.ம.முத்தஞ் செட்டியார்
307) ஊதியூர் தாயம்பாளையம் வி.ம.க.சி.வடுகஞ் செட்டியார்
308) மு.வரதவேங்க செட்டியார்
309) க.மூர்த்தி செட்டியார்
310) க.சுப்பிரமணியம் செட்டியார்
311) ம.கந்தசாமி செட்டியார்
312) க.சுப்பாராயன் செட்டியார்
313) ரா.முத்துச் சாமி செட்டியார்
314) பல்லடம் தாலுக்கா, கணபதிபாளையம் க.கார்த்திகேயன் செட்டியார்
315) கு.செங்காதரன் செட்டியார்
316) க.காமாட்சி செட்டியார்
317) சு.மதுரை வீரன் செட்டியார்
318) சு.சோமசுந்தரம் செட்டியார்
319) மா.தெண்டாயுதம் செட்டியார்
320) நல்லிபாளையம் ம.அழகிரிசாமி செட்டியார்
321) கு.மல்லி செட்டியார்
322) தி.பா.திருப்பதி செட்டியார்
323) ர.சங்கரன் செட்டியார்
324) வேலப்ப நாயக்கம்பாளையம் ச.குப்பன் செட்டியார்
325) கொ.பொட்டி செட்டியார்
326) பழனி தாலுகா அரசு மரத்துப்பட்டி நாட்டாமை க.கூளையப்ப செட்டியார்
327) க.அண்ணாமலை செட்டியார்
328) கு.சு.முத்தஞ் செட்டியார்
329) த.பரட்டன் செட்டியார்
330) பெரியதனம் ராமஞ் செட்டியார்
331) ம.காமாட்சி செட்டியார்
332) செட்டிமை ம.கொண்டரங்கி செட்டியார்
333) கொடுவாய் பெரியதனம் க.கெச்சன் செட்டியார்
334) க.காமாட்சி செட்டியார்
335) சு.பொம்மி செட்டியார்
336) சு.ராசு செட்டியார்
337) ம.அ.பழனிச் செட்டியார்
338) கணக்கம்பாளையம் ப.அருணாசலம் செட்டியார்
339) க.வடிவேலு செட்டியார்
340) க.பு.சுந்தரசாமி செட்டியார்
341) சேலம் செட்டிமை சென்னராய செட்டியார்
342) புள்ளார்கோவில் வெங்கட்ராமன் செட்டியார்
343) அமரகுந்தி ஏஜெண்டு சென்ன ராஜேந்திர செட்டியார்
346) வ.ஆறுமுகம் செட்டியார்
347) வ.முத்துச் சாமி செட்டியார்
348) சுக்கிரம்பாளையம் வி.உச்சி செட்டியார்
349) வெங்கடாசலம் செட்டியார்
350) சிறுமுகை நா.ராமலிங்கம் செட்டியார்
351) மு.பூமாலை செட்டியார்
352) பகுத்தூர் க.சுப்பிரமணியம் செட்டியார்
353) மதுரை ஜில்லா தாயலுபட்டி பூசாரி மீனாட்சி செட்டியார்
356) செட்டிமை மல்லி செட்டியார்
357) பெரியதனம் பூசாரி செட்டியார்
358) கும்பகோணம் வைத்தியர் அ.ரூ.வெள்ளையன் செட்டியார்
359) கோயம்புத்தூர் வெள்ளக்கிணர் சா.சீரங்க செட்டியார்
360) சீ.சாமிநாதன் செட்டியார்
361) மு.கரியஞ் செட்டியார்
362) சா.மெம்பரு செட்டியார்
363) உள்ளூர் காணியாளர் கிருஷ்ணசாமிக் கவுண்டர்
364) வெள்ளலூர் வைத்தியர் நஞ்சப்ப செட்டியார்
365) சு.குப்பஞ் செட்டியார்
366) வி.மூக்கஞ் செட்டியார்
367) காங்கயம் பொன்னாளி பாளையம் செட்டிமை குப்பஞ் செட்டியார்
368) பெரியதனம் மூத்தஞ் செட்டியார்
369) தி.திம்மி செட்டியார்
370) ம.ஆண்டி செட்டியார்
371) வை.சுப்பி செட்டியார்
372) வை.ராமசாமி செட்டியார்
373) க.குப்புச்சாமி செட்டியார்
374) வெங்கட்டாபுரம் ஆ.ராமச்சந்திரன் செட்டியார்
375) ம.கூளையஞ் செட்டியார்
376) பெ.வையாபுரி செட்டியார்
377) க.மாரி செட்டியார்
378) கோவை பொள்ளாச்சி போலீஸ் ஏட்டு நாராயண ஐய்யர்
379) போலீஸ் ந.சுப்பிரமணிய பிள்ளை
380) நாகராஜு
381) செட்டிமை தலமஞ் செட்டியார்
382) பெரியதனம் சுந்திரம் செட்டியார்
383) க.ஆண்டி செட்டியார்
384) சா.மன்னார் செட்டியார்
385) உடுமலைப்பேட்டை அ.லிங்கி செட்டியார்
386) ம.ராமஞ் செட்டியார்
387) ப.சு.சிக்குத்தம்ம செட்டியார்
388) செ.பெருமாள் செட்டியார்
389) த.சின்னநாகி செட்டியார்
390) க.சுப்பி செட்டியார்
391) க.ரங்கசாமி செட்டியார்
392) குரலு குட்டை சா.கருப்பஞ் செட்டியார்
393) த.மும்மூர்த்தி செட்டியார்
394) வீ.ராமசாமி செட்டியார்
395) சடையஞ் செட்டியார்
396) க.பெருமாள் செட்டியார்
397) ஆசிரியர் குமரவேலு பிள்ளை
398) மலையாண்டிபட்டிணம் பெரியதனம் தி.கோபால் செட்டியார்
399) புரோகிதர் சடையப்ப செட்டியார்
400) க.மா.மும்மூர்த்தி செட்டியார்
401) செட்டிமை சுப்பி செட்டியார்
402) உரல்பட்டி சா.சுந்திரம் செட்டியார்
403) சு.சாமிநாதன் செட்டியார்
404) கு.சி.பண்டாரஞ் செட்டியார்
405) பாப்பன்குளம் க.வீரன் செட்டியார்
406) க.முத்துராமன் செட்டியார்
407) சு.வடிவேலு செட்டியார்
408) உதும்புப்பட்டி செட்டிமை காமாட்சி செட்டியார், பெரிய தனம் லட்சுமண செட்டியார்
409) பூசாரி திருமூர்த்தி செட்டியார்
410) மானுப்பட்டி க.மாரி செட்டியார்
411) வ.ராமசாமி செட்டியார்
414) ம.கந்தசாமி செட்டியார்
415) மணியம் சுந்திரசாமிக் கவுண்டர்
416) கொடிங்கியம் செட்டிமை ஆண்டி செட்டியார்
417) பெரியதனம் வேலுமணி செட்டியார்
418) பு.தி.கந்தசாமி செட்டியார்
419) பூசாரி ராமஞ் செட்டியார்
420) பாப்பனூத்து ஆசிரியர் இராமனாத அய்யர்
421) வாளவாடி மாலைகட்டி சுந்தரசாமி ஐய்யர்
422) க.முத்துவீரன் செட்டியார்
424) கூ.அண்ணாமலை செட்டியார்
425) கவுண்டம்பாளையம் சொ.கந்தசாமி செட்டியார்
426) மு.அருணாச்சலம் செட்டியார்
427) கா.மாரி செட்டியார்
428) க.கிருஷ்ணசாமி செட்டியார்
429) கல்லஞ்சேரி சீரங்க செட்டியார்
430) ம.க.சுப்பி செட்டியார்
431) குத்தாம்புள்ளி கு.குட்டி செட்டியார்
432) க.திம்மி செட்டியார்
433) க.கோவிந்த செட்டியார்
434) க.திம்மி செட்டியார்
435) க.வெங்கட்ராமன் செட்டியார்
436) க.சி.வெங்கட்ராமன் செட்டியார்
437) சின்னராமஞ் செட்டியார்
438) கரும்பள்ளி கரி திம்மி செட்டியார்
439) கு.சென்ன பசவன் செட்டியார்
440) க.சிக்கண்ண செட்டியார்
441) மடமனை சாமாஜி வி.எம்.திருமணஞ் செட்டி

                  இவர்கள் எல்லோரும் மற்றும் பல இடங்களிலிருந்து வந்திருந்த ஜனங்களிடமிருந்தும் கையொப்பம் வாங்கப்பட்டது.  இங்கு வந்திருந்த சகல ஜாதியராலும் உள்ளூர் ஜாதியாராலும் உள்ளூர் ஜாதியார், பெண் மக்களாலும், அண்ணன் தம்பியினாலும் மடமனை உறவின் முறையாராலும் அதிக உன்னித விமரிசையாக ராமலிங்க சவுடேஸ்வரி உற்சவத்தை நடத்தி சங்கீத மங்களப் பாடல்களும் பெரியோர்களால் ஆசீர்வாதங்களும், வித்துவான்களால் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது. 

                                                                                      சுபம். சுபம்.
இந்த சாசனத்தை எழுதி வைத்தவர் பெயர்:

                    ஸ்ரீசயில பீடம் முத்தூர் சிம்ஹாசனம் மலையாண்டிபட்டிணம் மடாதிபதியாகிய தேவாங்கர் பத்தாயிரம் குலத்தாருக்கும் குலகுருவாய் விளங்கும் சுவாமிகளால் எழுதி வைக்கப்பட்டது.  சுபம்.சுபம். ராமலிங்கசுவாமி ரச்சிக்கவும், சம்பூர்ணம் கலியுக சகாப்தம் 4974 ஆங்கிரஷ வருஷம் (1873) தை மாதம் எழுதியது. முற்றிற்று.

பழைய சாசனத்தை சரியான நகல் எழுதிய காலம்:
      
                  கலியுக சகாப்தம் 5042 விக்ரம வருடம் (1941) சித்திரை மாதம் சுபயோக சுபதினத்தில் வி.எம்.டி.சாமாஜியாகிய பாலகுரு சுவாமியால் நகல் எழுதப்பட்டது. 

                                                                       சவுடேஸ்வரி உற்பத்தி:              தேவலப்ரஹ்ம ஸிஷக்திற்ஜாதா ஷுடாம்பிகா பிதாஸா தேவாங்கப்ரம் ஹனானாம் பபுவ குல தேவதா

              இதன் பொருள்: தேவாங்கனுடைய சிறு சக்தியும் சூடாம்பிகை என்ற நாமம் உள்ளவளாய் தேவாங்க பிராமணருக்கு குல தேவதையாயினால் என்பதை விவேக சிந்து என்ற கிரந்தத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

          கணபதியென்றிட கலங்கும் வல்வினை
          கணபதியென்றிட காலனுங் கைதொடான்
         கணபதியென்றிட கரும மாதலால்
          கணபதியல்லதோ கருமமில்லையே

          ஆறுமுகவனை அஞ்செழுத்தினை
          நாருமலல் கொடு நெஞ்சினி நினைபவள்
          கூறுமடியவர் பஞ்சபாதகம்
         பேறுபெருவரே பிஞ்சிபோ குமே

சவுடேஸ்வரி அம்மன் வரவு:உந்துதிரை நெடுங்கடல் போல்
ஒலித்தடந்த அரக்கர் வென்னிட்டாடி
வீழ முந்துபரம் பொருளிதயாம் பரத்துதித்த
தேவலனை முழுதுங் கார்க்சுக் கந்து பொருது
கடகளிரு கலங்கு கண்டீரவா வாகன
நடாத்தி வந்து திருவருள் புரிந்த சவுடநா
யகி திருத்தாள் வழுத்தல் செய்வோம்

சவுடேஸ்வரி தியானம்:
சூடாம்பிகா பகவதி ப்ராணாகாதரி
ஹந்தரி தேவாங்க ப்ரம்ம குலதேவி
ஷு பர்வ பூஜ்யே வந்தா மஹேஜ
நநீ தேவல புத்ரிகேந்தவாங்ம மாம்பாகி
ஜகதீஸ்வரி மிருத்யுவக்றாத்

இதன் பொருள்:

                               ஜகதீஸ்வரியான பகவதி பக்தரது துன்பத்தை தீர்க்கப்பட்ட தேவாங்க பிராமணருடைய குல  தேவதையான தேவலபுத்திரி என்ற சூடாம்பிகையே உன்னை வணங்குகின்றேன்.  என்னை ம்ருத்யு என்ற காலனுடைய பயத்தைத் தீர்த்துக் காப்பாற்ற வேண்டும் என்பது கருத்து.

                                                                                                    சுபம்.

இந்த சாசனத்தை அச்சிட்டவர்:
            கருவேலாங்காடு சிக்கண்ண செட்டியார் மகன்,
            சி.கருப்பஞ் செட்டியார் மகன்,
             க.பழனிச்சாமி செட்டியார் மகன்
             ப.அருணகிரி செட்டியார் (திருப்பூர்) என்பவர்.