அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

1/15/14

149 .மரீசி மகரிஷி கோத்ரம்

பிரம்மாவின் மனதில் உதித்தவர் மரீசி மகரிஷி. இவருடைய மனைவி கலை என்பாள். காச்யப மகரிஷி இவருடைய குமாரர். இவர் மகள் பூர்ணிமா. மரீசி பிரஜாபதிகளுள் ஒருவர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சின்னராஜதவரு :- சின்னராஜன் வம்சாவழியினர்.

பித்தம்

உள்வளவு அங்கணத்திண்ணையில் அமர்ந்து நல்லகுத்தாலிங்கம் பிள்ளை கஞ்சி குடித்துக் கொண்டிருந்தபோது நாகலட்சுமி அவசரமாக வாசலில் இருந்து உள்ளே வந்து ‘ ‘ அந்த அகமுடிவான் வந்திருக்கான். சொல்லியாச்சு, ஒத்த ஒரு காசு அவனுக்குக் குடுக்கப்பிடாது. குடுத்ததே போரும். இனி அவன் காசும் கொண்டு போனான்னு சொன்னா எனக்க சுபாவம் மாறும் பாத்துக்கிடுங்க ‘ ‘ என்றாள்
பயத்தம்பருப்பு சேர்த்து சமைத்து சூடாக நெய்விட்ட சம்பா அரிசிக்கஞ்சி . துணைக்கு தேங்காயெண்ணை விட்டு மயக்கி இளந்தேங்காய் நசுக்கிப்போட்ட சக்கை அவியல். தொட்டுக்கொள்ள மரச்சீனிப்பப்படம், கண்ணிமாங்காய் ஊறுகாய். மனம் கனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரம். நல்லகுத்தாலிங்கம் பிள்ளை எரிச்சலுடன் ‘ ‘ நாற முண்ட சோலியப்பாத்துப்போறியா ? ‘ ‘ என்றார்.
‘ ‘நான் சொன்னா சொன்னதுக்க குறவு ‘ ‘என்று அவள் ஆரம்பித்தாள்.
‘ ‘எந்திரிச்சேண்ணா கொடலு வாயில வந்துபோடும் நாயே ‘ ‘ என்றார் அவர்.
கைகழுவி குறுஏப்பத்துடன் வாசலுக்கு நடந்தார். பாலராமபுரம் ஈரிழைத்துவர்த்தால் அக்குள் முதுகு கழுத்து எல்லாம் நன்றாக துடைத்துக் கொண்டார். கார்த்திகை மாதம். ஆனால் முன்னிரவில் புழுக்கம்தான்.
அரங்கில் பண்டாரம் அமர்ந்திருந்தார். பிறையில் எரிந்த புன்னைக்காய் எண்ணை விளக்கின் வெளிச்சத்தில் கரிய பண்டாரத்தின் வெண்ணிற விபூதிப்பட்டைகள்தான் துலக்கமாகத் தெரிந்தன.
‘ ‘முருகா ஞானபண்டிதா! ‘ ‘ என்று கூவியபடி வந்து குளிர்ந்த கல்திண்ணையில் சரிந்தார் பிள்ளை. பண்டாரமும் சிவகுமாரனை எண்ணிக் கூப்பாடு போட்டார்.
பண்டாரம் மாலைநேர ஜெபதபங்களையும் தியானத்தையும் முடித்துவிட்டு வந்திருக்கிறார் என்று தெரிந்தது. உடலில் இருந்து களப குங்கும குந்திரிக்க மணங்களும் பலவித மலர் மணங்களும் கலந்து அடித்தன. சடைமுடிக்கட்டில் அரளிப்பூ செருகப்பட்டிருந்தது. காதில் தெற்றிப்பூக்கள். நல்ல கரிய நெடிய உடல். முற்றிய காய்ச்சில் கிழங்கு போல திரண்ட தசைக்கோளங்கள். பண்டாரத்துக்கு வயது அறுபது என்றால் ஆயுர்வேத வைத்தியன் கூட நம்ப மாட்டான். இப்போதும் தினமும் பனையோலை காக்கோட்டையில் முந்நூறு நடை தண்ணீர் மொண்டு பிள்ளையார்கோயில் நந்தவனத்தை நனைப்பார். இருவேளைதான் சாப்பாடு. வீட்டுக்கு ஒருவர் ஒரு நாளைக்குள்ள அரிசியும் பருப்பும் கொடுத்துவிடுவார்கள். காய்கறிகள் பண்டாரமே நட்டு வளர்த்து வைத்திருந்தார்.
பண்டாரமே பேசட்டும் என்று பிள்ளை காத்திருந்தார். பண்டாரம் அப்படி சுற்றி வளைத்துப் பேசக்கூடியவரல்ல. நேரடியாகப் பேசவும் தயங்குவார். முற்றத்தில் வைக்கோல்குவியலில் இருந்து பனிபட்ட புதுமணம் வந்தது. தொழுவத்து செவலைகளின் மணிகுலுக்கமும் குளம்புமாற்றமும் ஒலித்தன.
பண்டாரம் மெல்ல முடிவுக்கு வந்து அசைந்து அமர்ந்து ‘ ‘ எம்பெருமானே முருகா ‘ ‘ என்று முனகி கைகளை புத்தகம் போல விரித்து படித்து மூடி ‘ ‘ …. ஒரு இருநூறு இருந்தா சோலிய முடிச்சுப்போடலாம்…. ‘ ‘ என்றார் ‘ ‘ இந்த தடவை தப்பாது. முள்ளுமுனை கூட தப்பு நடக்க முடியாது…இதோட சங்கதி திறந்து கிட்டும்.. உறப்பாக்கும் . ‘ ‘ என்றார்.
‘இதைத்தான்வே போன தடவையும் சொன்னீரு…ஆடி முடிஞ்சு இப்ப எத்தனை மாசம் ஆவுது ? ஆவணியும் புரட்டாசியும் தலைதூக்காம கெடந்தீரு…ஐப்பசியில மறுபடியும் தொடங்கியாச்சு… என்கிட்ட இனி எடுக்க பைசா இல்ல…. வேற ஆரயாம் பாரும்வே… ‘
‘ ‘இல்ல… நான் சொல்லுறது என்னாண்ணா…. ‘ ‘
‘ ‘இனிமே நான் இந்த ரெசவாதம் மந்திரம் ஒரு எளவுக்கும் இல்ல. நீரு செம்பை தங்கமாக்குனாலும் செரி தாடகைமலையை வைரக்கலாக்கினாலும் செரி எனக்கு ஒரு புல்லும் இல்ல. போவும்வே ‘ ‘
‘அப்படிச் சொல்லப்பிடாது. இது மந்திரமோ மாயமோ இல்ல. சாஸ்திரமாக்கும். அச்சொட்டான சாஸ்திரம். சாஸ்திரம்னா அதுக்கொரு கணக்கு இருக்கும். கணக்கு தப்பினா விடையும் தப்பும்…. ஆனா கண்டிப்பா செரியான விடை உண்டு. செரியா கணக்கு போட்டோம்னா அது வராம இருக்காது… ‘ ‘
‘இது எத்தனை தடவை ஓய் கணக்கு தப்புதது… ? நீரு இதை தொடங்கி வருசம் இருபதாவுதுல்லா ? உம்ம சென்மம் பாழாப்போச்சுல்லா ? ‘ ‘
‘போனதடவை நான் ரெசாயனம் காய்ச்சின பானையைக் கணக்காக்காம விட்டேன். அது இரும்பு . இரும்புக்கு அதுக்கான ரெச குணம் உண்டு. அது ரெசாயனம் வற்றி வாறப்ப எடைபட்டுப் போட்டுது. அதை நான் ஊகிக்கல்ல. எந்த உலோகமானாலும் அது இந்த ரெசாயனச் சேர்மானத்தில சேந்துகிடும். சேராத ஒரு பாத்திரம் வேணும்…. ‘
‘ ‘ மண்பானை அதுக்க வேகத்துக்கு நிக்காதுண்ணு சொன்னீரு… ‘ ‘
‘ ‘நிக்காது. பீங்கானும் நிக்காது. ஆனா கண்ணாடி நிக்கும்… ‘ பண்டாரம் உற்சாகமாகச் சொன்னார். ‘ ‘ கண்ணாடியை நான் நல்லா நாப்பது பக்கமும் பாத்து படிச்சாச்சு. அது ஒரு ரெசாயனத்திலயும் எடபடாது. அதாக்கும் இந்த வேலைக்குள்ள செரியான பாத்திரம்…. உம்மாணை கந்தவேளாணை இது கடைசீ தடவை. இதில கண்டிப்பா பலிக்கும்… ‘ ‘
பிள்ளை சற்றே சபலப்பட்டார். ஆனால் இருநூறு ரூபாய் பெரிய தொகை. இரு ஜோடி உழவு மாடு வாங்கலாம். ‘ ‘ இல்லவே பண்டாரம். நம்மாலே இனிமே கட்டாது. ஆளைவிடும் ‘ ‘
‘ ‘அப்டிச் சொல்லப்பிடாது. இது கண்டிப்பா பலிக்குத சூத்திரமாக்கும். இந்த தடவை எல்லாம் செரியா அமைஞ்சிருக்கு… ‘
சட்டென்று பிள்ளைக்கு எரிந்து ஏறியது ‘ ஏம்வே…எனக்கு வாயில என்னமோ வருது… வே பண்டாரம் இது நீரு எனக்க கிட்ட இப்டி சொல்ல தொடங்கி வருசம் இருபதாவுது . இதுவரை உம்ம ரெசாயனம் கலக்குததுக்காக நான் சிலவாக்கின ரூபா இருந்தா எட்டுகோட்டை வெதைப்பாடு வாங்கியிருக்கலாம். ஒரு பிரயோசனம் உண்டாவே ? இல்ல கேக்கேன். கிடந்து யோசிச்சா சிலப்போ எனக்கு சிரிப்பாக்கும் வாறது. உமக்கா எனக்கா ஆருக்கு பைத்தியம்ணு தெரியல்ல… ‘
‘ரெண்டாளுக்கும்தான் வட்டு… இதில என்ன சிந்திக்க இருக்கு ? ‘ என்றது உள்ளறை இருட்டு
‘நீ போடி கூதற நாயே ‘ என்றார் பிள்ளை.
பண்டாரம் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.
‘ ‘நீரு சொன்னப்போ நான் கொஞ்சம் ஆசைப்பட்டது உள்ளதுதான். அது அந்தக்காலம். இப்ப எனக்கு உம்ம ரெசாயனத்தில எள்ளுக்கு இடை கூட நம்பிக்கை இல்ல. போனதடவை உம்ம முகதாட்சணியம் பாத்தாக்கும் நான் ரூபா தந்தது. இதை எங்கியாம் நிப்பாட்டணும். நான் உறச்சாச்சு. இனி இந்த விஷயமா ஒரு நயாபைசா நீர் எனக்க கிட்டே பாக்க வேண்டாம்… ‘ ‘
‘ ‘ முருகனா நினைச்சு கும்பிட்டு கேக்கேன். இது உறப்பான சோதனையாக்கும். எல்லா கணக்கும் இப்ப செரியா வந்தாச்சு. ஒரு குறை இல்ல. இத்தனை நாள் காத்திருந்திட்டு இப்ப நிப்பாட்டினா ….நான் காலுபிடிச்சு கேக்கேன்… ‘ ‘
‘ ‘என்னவே பண்டாரம் காலுபிடிக்கேரு ? ‘ ‘ என்றபடி மாதேவன் பாட்டா படியேறி கல்முற்றத்துக்கு வந்தார். ‘ ‘ ரெசாயனம் காய்ச்ச பணம் கேப்பான்… வேற என்ன ? ‘ ‘
‘ கடசீ சோதனைங்கியாரு… ‘
‘அவன் இருபது வரிசமா கடைசீ சோதனைதான் செய்யுதான்… கர்மபலன் ! வேற என்னத்த சொல்ல…. ‘ ‘ பாட்டா உட்கார்ந்தார். ‘ ‘ உனக்க வீட்டு கல்திண்ணைக்க குளுத்தி வேற எங்கயும் இல்லடே குத்தாலம் . இம்பிடு சுக்குவெந்நீ இருக்காட்டி மருமோளே ? ‘
‘கொண்டாறேன்… ‘ ‘ என்றது இருட்டு.
‘ ‘இது எல்லாம் செரியா அமைஞ்ச சோதனை. நான் ஒண்ணு விடாம பாத்தாச்சு . எல்லாம் செரியா இருக்கு…. என்னை கைவிடப்பிடாது… ‘ என்றார் பண்டாரம் கம்மிய குரலில்.
‘ ‘லே குத்தாலம், இது ஒருமாதிரி பைத்தியமாக்கும் கேட்டுக்கோ. உனக்க கிட்டே நான் இதை அம்பதுதடவை சொல்லியாச்சு. இதுபோல பல கிறுக்கும் மனுஷனுக்கு வரும். பேய் மாதிரி பிடிச்சு ஆட்டிப்போடும். சொத்தும் சுகமும் சுற்றமும் சூழ்ந்ததும் எல்லாம் அந்த ஓட்டத்தில அடிச்சுக்கிட்டுப் போயிரும்… எனக்க நரைச்ச மீசை அனுபவத்திலே நான் இம்மாதிரி எம்பிடு பேரைக் கண்டிருப்பேன்… ‘ ‘ என்றார் பாட்டா
பண்டாரம் மெல்ல ‘ ‘ முருகா! ‘ ‘ என்றார். ‘ ‘ திருமூலரும் போகரும் பொய் சொல்லமாட்டாங்கண்ணு நான் நினைக்குதேன் அய்யா ‘ ‘ என்றார்.
‘ ‘ அவங்க சொன்னதே வேற ‘ ‘ என்று பாட்டா ‘ ‘ சித்தபுருஷங்க மனுஷப்பயகிட்டே பெண்ணாசையையும் மண்ணாசையையும் பொன்னாசையையும் விட்டுடத்தான் சொன்னாங்களே ஒழிய வச்சு கொண்டாடச் சொல்லல்ல. வேய் பண்டாரம், சித்தர்பாட்டுகளிலே எந்த விஷயமாவது நேரடியா சொல்லியிருக்காவே ? எல்லாம் பூடகமா ஒண்ணுக்கு ஒம்பது பொருள் ஒளிச்சுத்தானேவே சொல்லியிருக்கு ? இது மட்டும் எப்டிவே நேரடியா சொல்லியிருப்பாங்க ? ‘ ‘
சைக்கிள் ஒலிகேட்டது. பிள்ளையின் மகன் கோலப்பன் சைக்கிளைத் தூக்கி முற்றத்தில் ஏற்றி உருட்டிவந்து சாய்ப்பில் நிறுத்தி சங்கிலி போட்டு பூட்டினான்.
‘ ‘என்னவே மக்கா சினிமாவா ? ‘ ‘என்றார் பாட்டா
‘ ‘ சினிமாவுக்குப்போனா சந்தோசப்படுவேனே… இவன் அந்த குலமுடிவான் நாயக்கரு கூட்டத்துக்கு ஒப்பம் சேந்துல்லா ஊரூரா அலயுதான்… ஏம்லே பத்தூருக்குப் போயி படியளக்க சாமிய நாறப்பேச்சு பேசியாச்சா ? இனி சோறு எறங்குமா ? ‘ ‘ என்றார் பிள்ளை
கோலப்பன் தந்தையிடம் பேசுவதைத் தவிர்க்க விரும்பினான்
பாட்டா ‘ இல்ல மக்கா, சொல்லுதேண்ணு நினைக்காதே…உனக்க பீ நான் அள்ளியிருக்கேன் பாத்துக்க. சாமி இல்லேண்ணு சொல்லி அலையுதது செரியில்ல கேட்டுக்கோ. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆனா ஆருபழி ? நீ ஒத்தைக்கு ஒரு பிள்ள. வேண்டின பூசொத்து இருக்கு… ‘ ‘
‘ ‘ நீரு சும்மா கெடயும் பாட்டா…. நீரெல்லாம் சாமிபூதம்ணு சொல்லியாக்கும்கிந்த மாதிரி ஆளுக கெடந்து சீரழியுதானுக. பாத்தேரா, எப்டி இருக்காண்ணு ? முப்பதுவருஷமா செம்பைத் தங்கமாக்குதாரு…இதையெல்லாம் இப்டியே விட்டுவைச்சா பிறவு எப்டி தமிழ்நாடு உருப்படும்… இவனுகளையெல்லாம் திருத்தணுமானா ஒரு அய்யா போதாது நூறு அய்யா வந்தாகணும்…. ‘ ‘ என்றபடி கோலப்பன் அமர்ந்தான்.
‘ ‘மக்கா கஞ்சி குடிக்கியாலே ? ‘ ‘ என்றது அறை.
‘ ‘நான் சாப்பிட்டாச்சு ‘ ‘
‘எங்கேண்ணு நான் கேக்கல்ல. வல்ல சாம்பான் புலையன் வீட்டிலயும் கேறி இருந்து வெட்டி விழுங்கியிருப்பான்… ‘ ‘ என்றார் பிள்ளை.
‘ ‘சாம்பான் காய்ச்சின சாராயம் குடிக்கலாமில்லா ? ‘ ‘ என்றான் கோலப்பன் முற்றத்து தென்னைமரத்திடம். பிள்ளை உடனே அடங்கி இல்லாமலானார்.
பண்டாரம் ‘ ‘ ரெசவாதத்தை பொன்வித்தைண்ணாக்கும் சித்தர்கள் சொல்லுதது. பொன்னு ஒரு தனி உலோகம் இல்ல. அதில ரெண்டு மூலம் இருக்கு. அக்கினி ஒண்ணு. சந்திரன் இன்னொண்ணு. அக்கினி அம்சமுள்ள வஸ்துக்கள் பலதும் பூமியில் உண்டு. சந்திர அம்சமுள்ள லோகமும் ரெசமும் பலது பூமியிலே உண்டு. செம்பு அக்கினி. பாதரெசம் நிலா. ரெண்டையும் செரியானபடி ஒண்ணாக் கலந்தா தங்கம் உண்டாகும். அதுரெண்டும் நிண்ணு கலக்க மண்ணுவேணும். அது இரும்பு இல்லாட்டி வேற என்னமாம்… ‘ ‘
‘ ‘இப்பம் நீரு சொன்னேரே இது சாஸ்திரத்திலே உள்ளதாக்கும். ஆனா இது ரெசவாதம் இல்ல, மனுஷவாதம். தங்கம்னா என்ன ? யோகத்திலே அமர்ந்த மனசைத்தான் அப்டிச் சொல்லுதாங்க. நீரு கேட்டேருண்ணா இப்பம் நான் ஒரு அம்பது திருமூலர் பாட்டாவது உதாரணமா சொல்லுவேன். வேய் சிவப்பு நெறமுள்ள செம்பு ராஜச கொணம். வெள்ள நிறமுள்ள பாதரெசம் சத்வ கொணம். ரெண்டும் இருக்க எடம் தாற கறுத்த இரும்பும் மண்ணும் தமோ குணம். மூணும் ஒண்ணாச் சேருத ஒத்த மையத்தில செம்பொன்னாட்டு ஆத்மா தொலங்கும். சும்மாவா எம்பெருமானை செம்பொன்மேனியனண்ட்டு சொல்லியிருக்கு ? வேய் சாஸ்திரங்களில சொல்லியிருக்க அம்பிடும் ரெசசவித்தை இல்லவே பிரம்ம வித்தை. நீரு கதையறியாம கெடந்து துள்ளுதீரு பத்து முப்பதுவருஷமா…. ‘
‘ ‘எப்டிவேணுமானாலும் வியாக்கியானம் செய்யலாம். நான் கண்ட சத்தியம் எனக்கு… ‘ ‘என்றார் பண்டாரம் ‘ ‘ எம்பெருமான் குமரன் எனக்கு கனிஞ்சு ஒரு திருட்டாந்தம் காட்டியிருக்காரு… ‘ ‘
‘ ‘திருட்டாந்ந்தமா ? என்னது ? ‘
‘இது நான் அதிகம்பேருகிட்டே சொன்ன காரியம் இல்ல ‘ ‘ என்றார் பண்டாரம் தயங்கி . ‘ ‘ அப்ப நான் பதினெட்டுவயசு சின்னப்பய. நல்ல வாலிப முறுக்கு. கையிலே காசு ஓட்டம். அதுக்குண்டான எல்லா வெளையாட்டும் உண்டு. நமக்கு ஒரு தொடுப்பு. அவளுக்கு அப்ப நாப்பதுவயசு பக்கத்தில இருக்கும். அவளுக்க செட்டியாரு பரம்பரையா பட்டு ஏவாரம் செய்றவரு. நான் பாக்கிறப்ப வியாபாரம் நொடிச்சு திண்ணையில உக்காந்திட்டாரு. அவ பட்டும் துணியும் வீட்டில வைச்சு விப்பா. நம்ம குட்டி ஒருத்திக்கு துணி எடுக்கப்போயி தொடுப்பு உண்டாகிப்போச்சு. அப்ப செட்டியாரு ராப்பகலா என்னமோ காய்ச்சிட்டு இருப்பாரு. இல்லாட்டி புஸ்தகம் வாசிப்பாரு. ஒரு நாள் என்னது அதூண்ணு கேட்டேன். அப்பதான் இதைப்பத்தி கேள்விப்பட்டது. அவரு ஒரு பண்டாரத்துக்கு கிட்டே ரெசவாத ரகசியம் படிச்சிருக்காரு. சும்மா செய்துபாத்தவரு முழுமூச்சா எறங்கி எல்லாத்தையும் தொலைச்சாரு. ஆனா கண்டுபிடிக்காம விடமாட்டேண்ணு நிண்ணாரு. எனக்கு அவரைக் கண்டா சிரிப்பு . இப்ப நீங்க சிரிக்கிறீங்களே இதுமாதிரி. ‘ ‘
பண்டாரம் தொடர்ந்தார் ‘ ‘ ஒருநாள் அவ ஆளனுப்பினா. செட்டியாரு செத்துப்போயிட்டாரு. ரெசம் காய்ச்சிட்டு இருக்கிறப்ப பாஷாணப்புகை கெளம்பி விஷமேறி செத்தாரு. நாந்தான் முன்ன நிண்ணு எல்லாத்தையும் செய்தேன். செட்டியாரை தூக்கி சிதையிலே வைக்கிறப்ப செட்டிச்சி அவரு வைச்சிருந்த சட்டிபானை புஸ்தகம் எல்லாத்தையும் தூக்கி அதில வைண்ணா. குடும்பத்த பிடிச்ச மூதேவி அதோட ஒழியட்டும்ணா . செரீண்ணு நான்தான் தூக்கிவைச்சேன். மண்சட்டியில நீலமா நவச்சாரம் மாதிரி நாத்தமடிச்சிட்டு என்னமோ ஒட்டியிருந்தது. தீ எரியிறப்ப நீலமா சுவாலை கெளம்பிச்சு. மூணாம் நாள் எலும்பு பொறுக்கிறப்ப நானும் நிண்ணேன். குடிமகன் எலும்பை எடுக்கிறப்ப அந்த சட்டியைப் பாத்தேன். வெடிச்சுக் கிடந்தது. உள்ள மஞ்சளா பளபளண்ணு நல்ல புதுப்பொன்னு… ‘ ‘
‘ ‘ முருகா! ‘ ‘ என்றார் பிள்ளை
‘ ‘எனக்கு சந்தேகம். சட்டியை எடுத்துக் கொண்டுவந்து நல்லா பாத்தேன். நீலப்பூச்சு அப்டியே தங்கமாகியிருக்கு. நல்ல சுத்த தங்கம். ஆசாரியை வரவழைச்சு சோதிச்சுப் பாத்தேன். தங்கமேதான். எனக்கு அப்டியே சுழட்டிக்கிட்டு வருது. செட்டியாருக்க புஸ்தகம் குறிமானம் எல்லாத்தையும் எரிச்சாச்சு. என்ன செய்றது ? விடவும் மனசில்ல. அவளைப்போட்டுக் குடைஞ்சேன். அவரு கடைசியா வாங்கின சாமான்களை விசாரிச்சு வாங்கினேன். அந்த நீலரெசாயனத்துக்க மணம் மட்டும்தான் எனக்கு ஆதாரம். அண்ணைக்கு தொடங்கின ரெசவித்தை. சொத்து போச்சு. பண்டாரமா நாடு சுற்றி பல ஊரும் பல குருவும் கண்டு பல புத்தகம் படிச்சு இண்ணைக்கு இங்க வந்து சேந்ந்திருக்கேன். இப்ப எனக்கு நல்லா தெரியும் நான் ரொம்ப கிட்டக்க வந்தாச்சு. சொல்லப்போனா அந்த ரகசியத்த தொட்டாச்சு. என் அகமனசுக்கு தெரியுது… ஆனா என்னால உங்களை சொல்லி நம்பவைக்க முடியாது. நான் செய்ஞ்சு காட்டுதேன்… ‘ ‘
‘ ‘ நீரு மயித்துவேரு ‘ ‘ என்றான் கோலப்பன் ‘ ‘ வேய் பண்டாரம் , சயன்ஸுண்ணு ஒண்ணு இருக்குவே. கேட்டிருக்கேரா ? தங்கம் ஒரு எலிமென்ட் . செம்பு இன்னொரு எலிமென்ட் . இரும்பு வேற ஒரு எலிமென்ட் . எலிமெண்டுண்ணா என்ன தெரியுமா அடிப்படையில இயற்கையில இருக்க மாறாத பொருள். ஒரு எலிமெண்டை இன்னொண்ணுகூட கலக்கலாம், இன்னொண்ணா மாத்த முடியாது…. ‘ ‘
‘ ‘எல்லா எலிமெண்டும் அணுக்களால ஆனதுதான். அணுன்னா என்ன ? பலவிதமான சூட்சுமமான பொருளுக ஒண்ணாச்சேந்து ஒரு அணு ஆவுது. அதை பார்ட்டிக்கிள்கியாங்க சயன்ஸிலே. செம்புக்கும் தங்கத்துக்கும் பார்ட்டிகிள் எண்ணிக்கையிலதான் வித்தியாசம். அந்த எண்ணிக்கைய மாத்த முடிஞ்சா செம்பை தங்கமாக்கலாம்…. ‘ ‘ பண்டாரம் சொன்னார்
கோலப்பன் உள்ளூர அயர்ந்து விட்டான். அதுவே அவனைச் சீண்டியது . ‘ ‘ எப்டிவே பார்ட்டிக்கிள் எண்ணிக்கையை கூட்டுவேரு ? ஒண்ணொண்ணா உடைச்சு உள்ள போடுவேரா ? ‘ ‘
‘ உடைக்கலாம். பார்ட்டிகிள் எலிமெண்டை விட்டு வெளியே போகும் ,உள்ளேயும் போகும்… அதுக்குத்தான் ரேடியேஷன்னு பேரு. தோரியம் எப்டி தம்பி ரேடியம் ஆகுது ? ரேடியம் எப்பிடி பொலேனியம் ஆகுது ? அதுமாதிரித்தான்…. ‘ ‘ என்றார் பண்டாரம் ‘ ‘ இப்பத்தான் வெள்ளைக்காரன் ரேடியேஷனை கண்டுபிடிச்சிருக்கான். ஆனா நம்ம சித்தர்களுக்கு அதுக்க பிரயோசனம் தெரிஞ்சிருக்கு. சந்திரகாந்தக்கல்லுண்ணு கேட்டிருப்பீக. என்ன அது ? இயற்கையா ரேடியேஷனோட இருக்கிற கல்லுதான் அது. தோரியம் கலந்த கல்லு . இண்ணைக்கு நாம அதில தோரியத்தைப் பிரிச்சு விக்கிறோம். அதை பலவிதமான மருந்துகள் தயாரிக்க சித்தர்கள் பயன்படுத்தியிருக்காங்க. நம்ம ரெசவாத முறையில சக்தியான சந்திரகாந்தக்கல்லும் பாதரசமும் வேணும்னு எல்லா சித்தரும் சொல்லியுருக்காங்க. சந்திரகாந்தக்கல் பாதரசத்தை பாதிச்சு கறுப்பா ஆக்கிடும். அது ரேடியேஷன் வழியா பார்ட்டிக்கிள் எண்ணிக்கை கூடுறதுதான்…. ‘ ‘
‘ ‘அரைகுறை சயன்ஸு பேசுறவங்களுக்கு இருக்கிற தர்க்கம் மத்தவங்ககிட்டே இருக்காது… ‘ ‘ என்றான் கோலப்பன்.
‘ ‘நீரு பண்டரம். உமக்கு என்னத்துக்குவே தங்கமும் பொன்னும் ? ‘ என்றார் பாட்டா
‘ ‘எனக்கு ஒரு துண்டு தங்கம் வேண்டாம். ஆனா இது ஞானம். ஞானம்னா என்ன ? எம்பெருமான் கந்தன்கிட்டே நம்மை கூட்டிட்டுப் போற பாதை. அஞ்ஞானத்தோட கதவைமூடி வைச்சு நம்மை அவன்கிட்டேருந்து மறைச்சுவைச்சிருக்கு பாசம். ஒரு சயன்ஸ்கண்டுபிடிப்பு ஒரு கதவு திறக்கிறதுக்கு சமம். முருகா ஞானபண்டிதா! ‘ ‘ என்றார் பண்டாரம் ‘ ‘ இப்ப தம்பி சொன்னாரே ஒரு பொருளை இன்னொண்ணா மாத்த முடியாதுண்ணு. மாத்த முடியும். இப்ப நான் சொல்லுதேன் எண்ணைக்கானாலும் ஒருநாள் மனுஷன் எல்லா பொருளையும் எல்லாமா மாத்தத்தான் போறான்.அண்ணைக்கு மண்ணையும் கல்லையும் அவன் எரிப்பான் தம்பி. கரும்பாறையை சீனியாக்கித் திம்பான். சயன்ஸ் போற வழி அதாக்கும்… ‘ ‘
பண்டாரம் கைகளைப் பிரித்துப் பார்த்தார் ‘ ‘ பாட்டா நீங்க சொன்னது எனக்குப் புரியாம இல்ல. நான் இதைத் தொடங்கி முப்பது வருஷமாவுது. எவ்வளவு கேட்டிருப்பேன் எவ்வளவு கண்டிருப்பேன். தங்கம்தேடி வாழ்க்கையை அழிச்சுக்கிட்டவங்க தலைமுறைதலைமுறையா கூடிக்கிட்டே இருக்காங்க… ஆயிரம், லெட்சம்… ஆனா ஒருநாளைக்கும் இந்த அலைச்சல் நிக்காது பாத்துக்கிடுங்க…இதைமட்டும் ஏன் சொல்லுறீங்க ? பசியில்லா உடலுக்காக , வானத்திலே பறக்கிறதுக்காக, சாவில்லா வாழ்வுக்காக, மனுஷன் காலம்தோறும் தேடித்தேடி அலைஞ்சிட்டுதானே இருக்கான்… ? அந்த அலைச்சலை அந்தந்தக் காலத்திலே எத்தனை லெச்சம்பேர் கிண்டல் செய்திருப்பாங்க ? எத்தனை குடும்பங்கள் அவனுக கூடச் சேந்து அழிஞ்சிருக்கும் ? இது ஒருமாதிரி தீயாக்கும் தம்பி. இது நம்ம மேல பிடிச்சுக்கிட்டா பின்ன விடாது. எரிஞ்சி எரிஞ்சு நம்மை சாம்பலாக்கிப்போடும்… ஆனா இப்பிடி எரிஞ்சு சாம்பலாகிப்போறதில ஒரு சொகம் இருக்கு. ஜென்ம சாபல்யமே இதிலே இருக்கு தம்பி. இது நான் சொன்னா உங்களுக்கு யாருக்கும் புரியாது…. நீங்க பைசா குடுக்காட்டி நான் பிச்சை எடுப்பேன் திருடுவேன் கொலைசெய்வேன்…. என் உசிரு இருக்க காலம்வரை இந்த சோதனையை விடமாட்டேன்… ‘
‘இது கஞ்சா கேஸு…திருந்தாது ‘ ‘ என்றபடி கோலப்பன் எழுந்து போனான்.
பாட்டா ‘ ‘ குத்தாலம், மாயை மாயைண்ணு சித்தாந்தம் படிக்கோம். ஆனா நாம அதை செரியா புரிஞ்சுகிடுறதில்ல பாத்துக்க. கண்ணுமுன்னால அது இப்டி பூதம் மாதிரி வந்து நிக்கிறப்ப பயமா இருக்குலே… ‘ ‘ என்றார். ‘ ‘ பைசாவை குடுத்துப்போடு .நாளைக்குப்பின்ன வழியேபோற பெண்டுக தாலிய அறுத்தாண்ணா என்ன செய்வே ? …எப்போ நமச்சிவாயா…நடுவு வலிக்கிடே… ‘ ‘
பாட்டா போனபின் பிள்ளை பண்டாரத்துக்கு ரூபாய் கொடுத்தார்.
‘ ‘அம்பிடு கதையும் இதுக்குத்தான். பைசா வாங்காம போகமாட்டானே…காலைச்சுத்தின சனி ‘ ‘ என்றாள் நாகலட்சுமி.
பண்டாரம் ‘ ‘சும்மா சொல்லல்ல…இதுதான் நான் செய்த கடைசீ சோதனை. இதில ஒரு மயிரளவுக்குகூட பழுது இல்லை. இண்ணைக்கு தங்கம் சிரிக்கும்யா …காலைல வந்து பாருங்க… ‘ ‘ என்றார்.
பிள்ளைக்கு திடாரென்று ஒரு ஆழமான பரிதாப உணர்ச்சி ஏற்பட்டது. அவர் ‘ ‘ செரி பாப்பம் ‘ ‘ என்று மட்டும் சொன்னார்.
காலையில் கோயில்வளைவை கூட்டிப்பெருக்கும் சுடலைக்கண் அலறிப்புடைத்து ஓடிவந்து முற்றத்தில் நின்று கூவ பால்கறப்பதை மேற்பார்வையிட்டபடி தொழுவில் நின்ற பிள்ளையும் தூங்கிக் கொண்டிருந்த கோலப்பனும் பதறி வந்தனர். பண்டாரம் இரவில் கோயில் முற்றத்து மாமரத்தில் தூக்குபோட்டுக்கொண்டு இறந்திருந்தார்.
ஆற்றுக்கு அப்பால் கிராமங்களிலிருந்தும் பண்டாரத்தின் சாவைக்கேட்டு ஆட்கள் கூடினார்கள். காவி மேல்துண்டில் சுருக்கிட்டு கழுத்து இறுகி நாக்கு பற்களால் கடிபட கைகள் முழுடிபிடித்து இறுகி நீண்டிருக்க அரைவாசி விழித்த கண்களுடன் பண்டாரம் மண்ணிலிருந்து இரண்டடி உயரத்தில் வலிந்து நெடுகிய கால்கள் காற்றில் ஆடிச்சுழல நின்றிருந்தார். மலஜலம் பிரிந்து துணியை நனைத்திருந்தது. கீழே உதறப்பட்ட செருப்புகள். ஏதோ தவறுசெய்துவிட்டு தலை குனிந்து நிற்பது போலிருந்தது.
பண்டாரம் இரவெல்லாம் காய்ச்சிய ரசாயனக்கலவை அவராலேயே உதைத்து உடைத்துச் சிதறப்பட்டு மணலில் வற்றிக் கிடந்தது. வெற்றிலை எச்சில் போல ஒரு காவி நிறக் குழம்பு. கண்ணாடிக்குடுவைக்குள் அது மஞ்சளாக இருந்தது.
‘ ‘அவன் நேத்து பேசின பேச்சே செரியில்ல கேட்டியா ? ‘ ‘ என்றார்பாட்டா ‘ ‘எனக்கு அப்பமே ஒரு சந்தேகம். ராத்திரி எனக்கு நல்ல உறக்கம் இல்ல. ரெண்டு தடவை எந்திரிச்சுப் பாத்தேன். பண்டாரம் நல்ல உற்சாகமா பாட்டெல்லாம் பாடாட்டு காய்ச்சிட்டிருந்தார். எப்ப இப்ப்பிடிசெஞ்சாரோ… ‘ ‘
‘ ‘செரியா வரல்லைண்ணு தெரிஞ்ச வேகத்தில தூக்குல ஏறிட்டார்… பாவம்தான் ‘ ‘ என்றார் பொன்னம்பலக் குருக்கள்.
‘ ‘அந்த சட்டி பானை எல்லாத்தையும் சிதையில வையுங்கலே… இந்த ஊருக்கு வந்த பீடை இதோட போச்சுண்ணு வைங்க… ‘ ‘
பண்டாரம் எரிவதை கூட்டம் கூட்டமாக நின்று பார்த்தார்கள். பலபடியாக அனுதாபப்பட்டுப் பேசிக்கொண்டார்கள். அவர்களுக்கு உண்மையிலேயே துக்கமா இல்லை அது வெறும் பரபரப்பா என்று கோலப்பனுக்குப் புரியவில்லை. அவர்கள் கிளர்ச்சியடைந்திருந்தார்கள். பெரும்பாலானவர்கள் தங்கள் அனுபவம் அல்லது கேட்ட அனுபவம் என்று பொய்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பண்டாரத்தின் மரணம் அவர்களுக்கு ஒருவிதமான நிறைவைத்தான் அளிக்கிறது என்று கோலப்பனுக்குப் பட்டது. அந்தக்கதை அப்படி முடியத்தான் அவர்கள் உள்ளூர விரும்பினார்கள். அவர்கள் அதற்காகக் காத்திருந்திருக்கலாம்.
கசப்புடன் கோலப்பன் திரும்பினான். அவரது மரணத்துக்கு அவனுடைய சொற்களும் ஒருவகையில் காரணம் என்று அவனுக்கு உள்ளூரத் தெரிந்தது. மாமரத்தைப் பெருமூச்சுடன் நோக்கினான். இனி அது பேய்மரமாகி விடும். யார்கண்டது அடியில் பண்டாரம் ஒரு குட்டிச்சாமியாக அமர்ந்து பலிகேட்க ஆரம்பித்தாலும் ஆச்சரியமில்லை.
கோயில் மதிலோரம் பண்டாரத்தின் செருப்புகள் கிடந்தன. தையல்கள் போடப்பட்ட ஆணிகள் அடிக்கப்பட்ட பழைய முரட்டு டயர் செருப்பு. அதில் ஒன்றில் பண்டாரம் காய்ச்சிய அந்த ரசாயனம் முன்பக்கம் பாதிப்பங்கு நனைத்து உலர்ந்து வயலெட் நிறமாகப் படர்ந்திருந்தது. பண்டாரம் அதைக் காலில் மாட்டியபடி குடுவையை உதைத்திருக்கவேண்டும். காலால் அதைப் புரட்டிப்பார்த்தவன் மனம் கணம் நின்று இயங்கியது. அமர்ந்து கையால் சுரண்டி நெருடிப் பார்த்தான். செருப்பில் முன்பக்க ஆணிகளில் ஒன்று மின்னியது. இழுத்து எடுத்தான். தோலுக்குள் இருந்த பகுதி இரும்பாகவும் வெளியே இருந்த தலை பொன்னால் ஆனதாகவும் இருந்தது.
====

பகுதி மூன்று : எரியிதழ் [ 4 ]

அஸ்தினபுரியின் அக்கினிதிசையில் மருத்துவத் தாவரங்கள் நிறைந்த சோலை நடுவே மூங்கில் பட்டைகளால் பின்னப்பட்ட குளிர்ந்த தட்டிகளினாலும் கங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதமான சேற்றைக் கொண்டும் கட்டப்பட்ட அரண்மனை ஆதுரசாலையில் நூற்றியொரு மருத்துவர்களின் பராமரிப்பில் விசித்திரவீரியன் வாழ்ந்து வந்தான். பன்னிரண்டு ஆண்டுகளாக அவனுக்கு அங்கே எவருமறியாமல் மருத்துவம் பார்க்கப்பட்டதென்றாலும் அதை அனைவருமே அறிந்திருந்தனர். பாரதவர்ஷத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் வாஜிகல்ப நிபுணர்களான மருத்துவர்கள் அங்கே வந்துகொண்டே இருந்தார்கள்.
விசித்திரவீரியன் சுண்ணாம்புபோல வெளுத்த உடலும், மெலிந்து நடுங்கும் உதடுகளும், மஞ்சள்படர்ந்த கண்களும் கொண்டிருந்தான். அவன் உடலெங்கும் நரம்புகள் நீலநிற சர்ப்பக்குழவிகள் போல சுற்றிப்படர்ந்து இதயத்துடிப்புக்கு ஏற்ப அதிர்ந்துகொண்டிருந்தன. மெலிந்த கைகால்களில் மூட்டுகள் மட்டும் பெரிதாக வீங்கியிருக்க தசைகள் வற்றி எலும்புகளில் ஒட்டியிருந்தன. இளவயதில் வந்து வந்து சென்றுகொண்டிருந்த மூட்டு வீக்கத்தால் அவன் வெளியே நடமாடி அறியாதவனாக இருந்தான். ஒவ்வொருநாளும் பிரம்மமுகூர்த்தத்திலேயே அவன் மருத்துவர்களால் எழுப்பப்பட்டு பலவகையான மருத்துவமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டான். இளமைமுதல் அவனறிந்ததெல்லாம் மருத்துவம் மட்டுமே.
முந்தைய வாரம் வேசரநாட்டிலிருந்து ஒரு முதியமருத்துவர் வந்திருந்தார். நாகவீரியத்தைக்கொண்டு செய்யப்பட்ட மருந்து ஒன்றை அவர் விசித்திரவீரியனின் நரம்புக்குள் செலுத்தினார். ராஜநாகத்தின் விஷத்தை எலியின் உடலில் துளித்துளியாகச் செலுத்தி அதை மயக்கத்திலேயே வைத்திருந்து, அதன் உடலெங்கும் விஷயமயமானபின் அந்த எலியை அப்படியே கொண்டுவந்து, அதன் குருதியை காரைமுள்ளால் தீண்டி எடுத்து, அவன் நரம்புகளில் மெல்லக்குத்திச் செலுத்தினார். தேன்மெழுகை அந்தக் காயம் மீது வைத்து மூடினார். ஆறுநாட்களாக நாகபுட மருத்துவம் நடந்துகொண்டிருந்தது. முதல்நாள் விசித்திரவீரியன் அந்த விஷத்தாக்குதலால் வாயில் நுரைதள்ளி உடல் வளைந்து வில்லாக இழுக்க தரையில்கிடந்து நெளிந்தபின் மயக்கத்திலேயே இரவைக் கழித்தான்.
அடுத்தடுத்த நாட்களில் விஷம் அவனை மெல்லத் துடிக்கச்செய்து பின் அணைத்து ஆழ்ந்த துயிலை அளித்தது. ஏழாம் நாள் காலையில் அவன் அந்த விஷத்துக்காக ஏங்க ஆரம்பித்தான். காலையெழுந்ததுமே வேசரநாட்டு வைத்தியரை அழைக்கும்படி சொல்லிக்கொண்டிருந்தான். அவன் நாடியைப்பிடித்துப் பார்த்த அஸ்தினபுரியின் மருத்துவர்கள் அதில் உயிர்வேகம் அதிகரித்திருப்பதைக் கண்டு அந்தச்செய்தியை சத்யவதிக்குத் தெரிவித்தனர். அவள் வேசரநாட்டு மருத்துவருக்கு பொன்னும் பட்டும் பாராட்டுத்திருமுகமும் கொடுத்தனுப்பினாள்.
சித்திரமெத்தையில் சாய்ந்து நரம்புகளில் விஷம் ஓடும் குளம்படியைக் கேட்டபடி அரைக்கண்மூடிக் கிடந்த விசித்திரவீரியனின் முன்னால் அமர்ந்து சூதர் தன்னுடைய கிணைப்பறையைக் கொட்டி அப்சரஸ்கள் நிலவில் மானுடப் பொன்னுடலுடன் நீராடிக்களிக்கும் காட்சியை பாடிக்கொண்டிருந்தார். சிறுவயதிலிருந்தே அவன் கேட்டுப்பழகிய கதைகள். விசித்திரவீரியன் உலர்ந்த உதடுகளை நக்கிக்கொண்டு பெருமூச்சுடன் திரும்பிப்படுத்தான்.
வேசரநாட்டு வைத்தியர் அஸ்தினபுரியின் அமைச்சர் ஸ்தானகரிடம் மெல்ல தன் நாட்டிலிருந்து அழைத்து வந்திருந்த நாகசூதனை பாட அனுமதிக்கும்படி கோரினார். “அந்தப்பாடலும் இந்த மருத்துவத்தில் சேர்ந்தது. நாகபடம்போல கேட்பவரின் இச்சாசக்தி பெருகும். இச்சாசக்தியே நோய்க்கு முதல்மருந்து. பிற அனைத்தும் அந்த நெருப்புக்கான அவிகளே” என்றார்.
ஸ்தானகர் புன்னகையுடன் “அவர் எந்தக்கதைக்கும் காதுள்ளவராகவே இதுநாள் வரை இருந்திருக்கிறார்” என்றார். விசித்திரவீரியன் “காது மட்டும்தான் உழைப்பில்லாமல் பணியாற்றும் உறுப்பு ஸ்தானகரே” என்றான். ஸ்தானகர் “அதனால்தான் இச்சாசக்தியான நாகங்களுக்கு காதுகள் இல்லை போலும்” என்றார். விசித்திரவீரியன் உரக்கச் சிரித்தான்.
நாகசூதன் கன்னங்கரிய கண்களும் நுரைபோலச் சுருண்டு அடர்ந்த முடியும் பெரிய உதடுகளும் வெண்பற்களும் கொண்டவனாக இருந்தான்.அவனுடைய வாத்தியம் சுரைக்காய் குடத்தில் இருந்து மூங்கில் தண்டுகளில் இழுத்துக்கட்டப்பட்ட தோல்நரம்புகளால் ஆனது. அதன்பெயர் நந்துனி என்றான். மெல்லிய பிரம்புக் குச்சிகளால் தோல்தந்திகளை நீவத்தொடங்கியபோது காட்டுக்கொடிகளில் காற்று ஊடுருவும் விம்மலோசை எழத்தொடங்கியது.
அவனுடைய கனத்த குரல் ஒலிக்கத் தொடங்கியதுமே விசித்திரவீரியன் நாகங்களின் நெளிவைக் காண ஆரம்பித்தான். தலையை கைப்பிடியாகக் கொண்டு சுழலும் சாட்டைகள். மலையிடுக்கின் மண் பொழிவுகள். இருள்படிந்த காட்டுவழிகள். தொங்கி காற்றிலாடும் அருவிகள். கைநீட்டும் கொடிநுனிகள். சுருண்டுபற்றும் வானர வால்கள். நெளியும் மயில்கழுத்துகள். தயங்கி வழியும் ஓடைகள். நெளியும் கருங்கூந்தல்கள். விழியை வளைத்த புருவங்கள். அகம் மட்டுமறியும் ஆப்தவாக்கியத்தின் தன்னந்தனியான இருண்ட பயணம்.
“அழியாத வீரியம் கொண்ட நாகங்களின் வம்சத்தைப்பாடும் பாடகன் நான்…நாகங்களின் நாடு இது. நாகங்களின் வனம் இது. நாகங்களே எண்ணங்களாகும் வானம் இது. அவை வாழ்க!” நாகசூதன் பாடினான். மண்ணுக்கு அடியில் பல்லாயிரம் யோசனை தொலைவில் இருக்கிறது நாகலோகம். நான்குபக்கமும் பொன்னாலும் வெள்ளியாலும் செம்பாலும் இரும்பாலுமான கோட்டைகள் உள்ளன. அந்தக்கோட்டைவாசல்களில் ஒன்றில் வைரங்களும் இன்னொன்றில் வைடூரியங்களும் இன்னொன்றில் கோமேதகங்களும் இன்னொன்றில் மரகதங்களும் பதிக்கப்பட்டுள்ளன.
நாகலோகத்துக்குள் நுழைய பாதைகள் இல்லை. இருள் ஒரு பெருநதியாக மாறி அதன் முன்பக்க கோட்டைவாசல்கள் வழியாக பீறிட்டு உள்ளே செல்கிறது. அந்த இருளில் ஏறி கணநேரத்தில் கோடி யோசனைதூரம் செல்லும் வேகத்தில் உள்ளே செல்லமுடியும். அவ்வாறுதான் வெளியேறவும் முடியும். அதற்குள் பன்னிரண்டாயிரம்கோடி நாகங்கள் தங்கள் துணைவியருடன் வாழ்கின்றன. செவ்வைரம் மின்னும் கண்களும் கருமை கனத்த உடல்களும் கொண்ட அவை மரணமற்றவை.
நாகலோகம் நாகர்களின் மூதன்னை கத்ரு இட்ட சின்னஞ்சிறிய முட்டையில் இருந்து வந்தது. அவள் இட்ட பன்னிரண்டாயிரம்கோடி முட்டைகளில் ஒன்று அது. அவளிட்ட முட்டைகள் இன்னும் விரிந்து முடியவில்லை. காலத்தின் மறுமுனையில் கரியசுருளாக தன்னை முடிச்சிட்டுக்கொண்டிருக்கும் கத்ரு கணமொன்றுக்கு கோடிமுட்டைகளை இட்டுக்கொண்டே இருக்கிறாள்.ஆதியும் அனாதியுமானவள். அழியாதவள். அனைத்துமானவள். கன்னியும் அன்னையுமானவள். மகாமங்கலையானவள். மாமாயையானவள். அவள் வாழ்க!
மூதன்னை கத்ருவுக்கு அம்பை, தீர்க்கசியாமை, சாரதை, காளி, சித்தேஸ்வரி, யோகீஸ்வரி, சாந்தை, கனகி, முக்தை, மூலத்வனி என ஆயிரம் அழகிய பெயர்கள் உண்டு. சர்ப்பராஜனாகிய வாசுகி அவள் மைந்தன் என்றறிக. அவனுக்கு காளன், சியாமன், ருத்ரன், சலன் என்று ஆயிரம் பெயர்கள் உண்டு. அவனே பாதாளத்தின் அதிபன். மகாமேருக்களை உடல்செதில்களாகக் கொண்ட விராடரூபன்.
கோடானுகோடி யுகங்களாக தீண்டப்படாமையால் உறைந்து ஒளிபெற்று நீலமணியாகி குளிர்ந்து கனத்த கடும் விஷத்தைக் கொண்டவன் வாசுகி. அந்த விஷத்தின் எடை கனத்து கனத்து அவன் அசைவற்றவனானான். அவன் தலையை அசைக்க முயன்று நெளிந்துகொண்டிருந்த உடல் மெல்லமெல்ல களைத்து அசைவிழந்தபோது அசைவால் மட்டுமே அறியப்படும் காரிருள் வடிவம்கொண்ட அவன் முழுமையாகவே மறைந்துபோனான். அவனிலிருந்து பிறந்த கோடானுகோடி நாகங்கள் அவனை தேடித்தேடி சலித்தன. பின் அவை சிவனை எண்ணித் துதித்தன.
முக்கண் முதல்வன் அவர்களுக்கு முன் தோன்றி “காளசர்ப்பமாகிய வாசுகிக்குள் உறைவது ஊழிமுடிவில் உலகங்களை எரிக்கும் ஆலகாலம். அவனை அவன் அன்னை கத்ரு பெற்றபோது அவள் குருதி வழியாக அவன் உண்டது அது. அவனுக்குள் அது பெருகி வளர்ந்துகொண்டே இருக்கிறது. அவன் அதைக் கக்கும்போது ஊழி நிகழும்” என்றார். நாகங்கள் “அய்யனே, எங்கள் அரசன் அசையும்படி அவருக்கு அருள்செய்யுங்கள்” என்று முறையிட்டபோது புன்னகையுடன் “அது நிகழ்வதாக!” என வாழ்த்தி சிவன் மறைந்தார்.
ஆலகாலத்துக்கு நிகரான இன்னொன்றை உருவாக்க வேண்டுமென்று சிவன் எண்ணம்கொண்டார். ஊழிமுடிவிலும் அழியாததாகிய அதற்கு மரணமற்றது என்று பெயரிட்டார்.கால அகாலங்களை சிற்றலைகளாகக் கொண்டு விண்ணளந்தோன் துயிலும் பாற்கடலின் நெய்யே அந்த அமுதமாக இருக்கமுடியும் என்று உணர்ந்தார். அன்று மரணமின்மையின் குதூகலத்தில் பொறுப்பற்றிருந்தனர் தேவர். காலமின்மையின் காரணமாக ஊக்கமின்மையும் கொண்டிருந்தனர். அதை நீக்க மனம்கொண்ட மகாதேவன் தன்னை சித்தத்தில் ஏற்றிய துர்வாசரில் அதற்கான தருணத்தை உருவாகச் செய்தார்.
ஆயிரம் மொட்டுகள் கொண்ட மாலையை கையிலேந்தி தவம்செய்வது துர்வாசரின் வழக்கம். தவம் முதிர்கையில் மொட்டுகள் மலர்களாகும். அந்த மலர்மாலையுடன் அவர் வானவீதியில் வருகையில் எதிரே வெண்மேகமெனும் ஐராவதம் மீதேறி வந்த இந்திரனின் மின்னலொளி கொண்ட பேரழகைக் கண்டு மகிழ்ந்து அந்த மாலையை அவனுக்குப் பரிசளித்தார். இந்திரன் அதை ஐராவதத்தின் மத்தகத்தில் அணிவித்தான். நெளியும் ஒவ்வொன்றிலும் குடியேறும் வல்லமைகொண்ட விமலன் என்னும் பாதாள நாகம் அந்த மாலையில் தோன்றி மெல்ல நெளியவே அஞ்சி மெய்சிலிர்த்த ஐராவதம் அதை எடுத்து மண்ணில் வீசியது.
சினம்கொண்ட துர்வாசர் “மரணமின்மையின் பாரத்தால் நீ மலர்களின் கணநேரத்தன்மையின் மகத்துவத்தை அறியாமலானாய். நீயும் உன் நகரும் அழியக்கடவதாக” என தீச்சொல் இட்டார். அக்கணம் முதல் இந்திரன் முதலான தேவர்கள் முதுமை கொள்ளலானார்கள். தேவ வனங்கள் மூத்து முடிந்தன. அங்குள்ள மலர்கள் மாலையே வாடி உதிர்ந்தன. அச்சம் கொண்ட தேவர்கள் சிவனை அணுகி மீட்பளிக்கும்படி கோரினர். விஷ்ணு பள்ளிகொள்ளும் பாற்கடலைக் கடைந்து அமுதமெடுத்து உண்ணுவதே மூப்பை வெல்லும் வழி என்று சிவன் சொன்னதும் அவர்கள் விஷ்ணுவை சரண் அடைந்தனர். பாலாழியைக் கடைய மும்மூர்த்திகளும் ஒப்புக்கொண்டனர்.
அதற்கான மத்தாக மந்தரமலை கண்டெடுக்கப்பட்டது. ஆமை உருவம் கொண்டு பாற்கடலுக்கடியில் தங்கிய விஷ்ணுவின் மீது மந்தரமாமலை அமைக்கப்பட்டது. அதைக் கடைவதற்கான சரடுக்காக தேவர்களும் அசுரர்களும் தேடியபோது சிவன் வாசுகியைக் கொண்டுவரும்படி சொன்னார். தேவர்களின் இச்சைப்படி கருடன் பாதாளத்திற்கு பறந்துசென்று வாசுகியை கால்களால் கவ்வி மேலே தூக்கினார். ஏழாம் பாதாளத்தில் இருந்து ஏழாம் விண்ணுலகம் வரை தூக்கியும் கூட வாசுகியின் தலையும் வாலும் அங்கேயே இருந்தன. அவ்வாறு ஆயிரத்தெட்டுமுறை மடியும்படி தூக்கிய பின்னரும் வாசுகி அங்குதானிருந்தான்.
தேவர்கள் சிவனிடம் மன்றாடினர். சிவன் குனிந்து வாசுகியைத் தொட்டு “அகால பீடத்தில் அமர்ந்த யோகீஸ்வரனுக்கு முன் நீ எதுவோ அதுவாக வருக” என்றார். வாசுகி ஒரு சிறு மோதிரமாக மாறி அவர் கையில் அணியானான். சிவன் வாசுகியை விண்ணுக்குத்தூக்கி பாலாழிக்கு மேல் இருந்த மந்தர மலையை கட்டினார். அதன் தலையை தேவர்களும் வாலை அசுரர்களும் பற்றிக்கொண்டனர். நூறாயிரம் யுகங்கள் அவர்கள் பாலாழியைக் கடைந்தனர். அசுரர்களின் மூக்கிலிருந்தும் வாயில் இருந்தும் நுரைகொட்டியது. தேவர்கள் மும்மூர்த்திகளையும் கூவி அழுதனர்.
VENMURASU_EPI_13
ஓவியம் : ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
வெண்ணுரை எழுந்த பாலாழியில் இருந்து அழிவின்மை ஐந்து முகங்களாக வெளிவந்தது. முதலில் பொன்னாலான கொம்புகள் கொண்ட வெண்ணிறப்பசுவாகிய காமதேனு தாய்மை வடிவாக வெளிப்பட்டது. குளிர்ந்த கண்களும் அலைகளெழும் ஆடைகளுமாக வாருணிதேவி காதலின் தோற்றமாக எழுந்துவந்தாள். பின்னர் இனியநறுமணத்துடன் பாரிஜாதம் பக்தியின் சின்னமாக தோன்றியது. நான்காவதாக கொடையின் சின்னமாக கல்பமரம் எழுந்தது. ஐந்தாவதாக யோகிகள் மட்டும் சகஸ்ரபீடத்தில் அறியும் குளிர்சந்திரன் தோன்றியது. கடைசியாக இருகைகளிலும் தாமரைமலர்களுடன் தோன்றிய மகாலட்சுமியின் ஐந்து அணிகளாக அவை மாறின. அவளுடைய கைகளில் அமுதகலசம் இருந்தது.
அப்போது மந்தரத்தைச் சுற்றி கடையப்பட்ட சலிப்பில் வாசுகியின் முடிவில்லாத பேருடல் அதிர்ந்தது. ஊழிமுடிவில் அண்டங்களெல்லாம் வெடிப்பதுபோல பெரும்புகையும் நெருப்புமாக ஆலகாலம் கன்னங்கரிய குழம்பாக பீறிட்டு அவனில் இருந்து வெளிவந்தது. பிரம்மனும் தேவர்களும் நடுங்கிச்சரிய சிவன் தன் இருகைகளாலும் அந்தக் காளகூடத்தை ஏந்தி அள்ளி தன் வாயிலிட்டு விழுங்கினார். முற்றியநாகத்தின் வாயில் விளங்கும் நாகமணிபோல நீல ஒளியுடன் அது அவரது கழுத்தில் தங்கியது. “இன்னும் பன்னிரண்டாயிரம் கோடி யுகங்கள் நீ வாழ்வாயாக! உன்னுடைய கண்டத்தில் ஆலகாலம் மீண்டும் ஊறி நிறையட்டும்!” என்று வாசுகியை வாழ்த்தி சிவன் மீண்டும் பாதாளத்துக்கு அனுப்பினார்.
வாசுகி மீண்டுவந்ததும் பாதாள நாகங்கள் கொண்டாடின. பன்னிரண்டாயிரம்கோடி நாகங்கள் பிணைந்து நெளிந்தாடி நடனமிட அந்த அசைவில் பாதாளமே குலுங்கியது. பாதாளம் மீது அமர்ந்த பூமி அசைந்தது. நாகங்களின் மதநீரின் மணம் எழுந்தபோது மண்ணின் மீது நூறாயிரம் காடுகளின் அத்தனை மரங்களும் செடிகளும் பூத்துக்குலுங்கின. அவற்றில் காய்களும் கனிகளும் பொலிந்தன. வயல்வெளிகளில் பொற்துளிகள் விளைந்தன. மரங்களுக்குள் அரக்காகவும், மலர்களுக்குள் தேனாகவும், கனிகளுக்குள் சாறாகவும் நாகங்களின் மதநீரே ஆனது.
நாகமதத்தின் வாசனையை உணர்ந்து மண்மீதிருந்த அத்தனை ஆண்களும் காமம் கொண்டனர். அத்தனை பெண்களும் நாணம் கொண்டனர். யானைகள் துதிக்கை பிணைத்தன. மான்கள் கொம்புகள் பூட்டின. நாரைகள் கழுத்துக்கள் பின்னின. தேனீக்கள் சிறகுகளால் இணைந்தன. புழுக்கள் ஒன்றை ஒன்று உண்டன. பிங்கலநிறம் கொண்ட கூந்தலும் கரிய உடலும் கொண்ட மிருத்யு தேவி தன் புதல்விகளான வியாதி,சோகம்,ஜரா,திருஷ்ணை,குரோதம் ஆகியவர்களை அழைத்துக்கொண்டு விலகி ஓடி ஏழுகடல்களுக்குள் புகுந்துகொண்டாள். பூமிதேவி தன்னை புதுப்பித்துக்கொண்டு புன்னகைபுரிந்தாள்.
நாகசூதன் தன் நந்துனியை மீட்டி பாடி நிறுத்தினான் “முதலில் எழும் அனல்விஷத்தை வாழ்த்துங்கள். ஆலகாலத்தின் சோதரியான அமுதத்தை வாழ்த்துங்கள். பெருநஞ்சு ஊறும் அடியில்லாத இருள்வடிவமான வாசுகியை வாழ்த்துங்கள். அவன் குடிகொள்ளும் நாகலோகங்களை வாழ்த்துங்கள். அங்கே வாழும் கோடிகோடி நாகங்களை வாழ்த்துங்கள். காலடிகளெல்லாம் நாகங்களின் மீதென்றறிந்தவன் முக்திபெறுகிறான். ஆம், அவ்வாறே ஆகுக!”
அந்தக் கதையை கேட்டுக்கொண்டிருந்த விசித்திரவீரியன் தன் வாழ்நாளில் முதல்முறையாக நரம்புகளில் இறுக்கமும் மனதில் வேகமும் ஓடுவதை உணர்ந்தான். மூடிய கண்களுக்குள் நெளியும் நாகங்களின் கருமைத்திரள் ஒரு மாயக்கனவின் கணத்தில் அலகிலா ஒளிப்பிரபஞ்சமெனும் பெண்ணின் பிறப்புறுப்பு என்று தோன்ற உடல் விதிர்த்து எழுந்து அமர்ந்தான். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.
ஸ்தானகர் அவனருகே குனிந்து “பால் அருந்துகிறீர்களா இளவரசே?” என்றார். ஆமென்று அவன் சொன்னதும் தட்சிணநாட்டு மிளகு போட்ட பாலை கொண்டுவந்தனர். அதை அருந்தியபின் மெல்ல உடல்தளர்ந்தான். “என்ன கண்டீர்கள் இளவரசே?” என்றார் ஸ்தானகர். அதை அவன் சொன்னதும் “ஆம், சக்தியின் மூலாதாரம்” என்றார்.
அன்று முழுக்க அவன் மரநிழல்கள் மாநாகங்களாக நெளிந்தாடும் தடாகத்தின் கரையில் அமர்ந்திருந்தான். இளங்காற்றில் இருந்த ஈரப்பதத்திலிருந்து வந்தவை போல ஏதேதோ எண்ணங்கள் அவனூடாகச் சென்றுகொண்டிருந்தன. நீரில் நெளிந்த தன் பிம்பத்தைக் கண்டான். தன்னை விதவிதமாக சித்தரித்து விளையாடும் நீரை நோக்கி புன்னகை செய்தான். மாலையில் அரண்மனையிலிருந்து பாவகன் என்னும் அணுக்கச்சேவகன் அவன் எதிர்பார்த்திருந்த செய்தியுடன் வந்தான்.
பீஷ்மபிதாமகர் சுயம்வரத்துக்காக காசிக்குச் சென்றிருந்ததை அவன் அறிந்திருந்தான். வடக்கே கங்கையில் படகுகள் வந்தணைந்துவிட்டன, பீஷ்மர் இளவரசிகளுடன் வந்துகொண்டிருக்கிறார் என்று காலையில் செய்தி வந்திருந்தது. அவன் திரும்பிப்பார்த்ததும் பாவகன் “இளவரசே, பீஷ்மபிதாமகர் இளவரசிகளுடன் வந்திருக்கிறார்” என்றான்.
விசித்திரவீரியன் பதில்சொல்லாமல் பார்த்தான். பாவகன் “காலைமுதலே நகர்மக்கள் கோட்டைவாசலில் குவிந்து பார்த்துக்கொண்டிருந்தனர். இளவரசிகளுடன் ரதங்கள் உள்ளே வந்தபோது மக்கள் உப்பரிகைகளில் இருந்து மலர்தூவி வாழ்த்தினர். சூதர்கள் மங்கலவாத்தியங்கள் முழக்கினர். குலப்பெண்டிர் குலவையிட்டனர். அஸ்தினபுரியில் சந்தனுமன்னரின் மரணத்துக்குப்பின் இன்றுதான் பொலிவு மீண்டது” என்றான்.
விசித்திரவீரியன் முகத்திலும் மெல்லிய புன்னகை விரிந்தது. “நல்லது” என்று உலர்ந்த உதடுகளால் சொன்னான். பாவகன் “ஆனால் இரு இளவரசிகளும் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். பேரரசி சத்யவதிதேவி அரண்மனை முற்றத்துக்கு அவரே வந்து அவர்களின் நெற்றியில் மங்கலச்சின்னம் இட்டு உள்ளே அழைத்தபோது இறுகிய முகத்துடன் தலைகுனிந்து ஒருசொல்கூட சொல்லாமல் உள்ளே சென்றார்கள்” என்றபோது விசித்திரவீரியன் கண்கள் சுருங்க “இளவரசியர் இருவரா? மூவர் என்றார்களே” என்றான். பாவகன் திகைத்தான். “உடனே சென்று மூன்றாவது இளவரசி எங்கே என்று கேட்டுவா” என்றான் விசித்திரவீரியன்.
அதற்குள் பீஷ்மருடன் படகிலிருந்த சேவகனாகிய விப்ரதன் புரவியில் வந்து இறங்கினான். விசித்திரவீரியன் அருகே வந்து வணங்கி ”இளவரசே, நான் பீஷ்மபிதாமகரின் படகிலிருந்தவர்களில் ஒருவன்… உங்களிடம் சேதி தெரிவிப்பதற்காக வந்தேன்” என்றான். “இன்னொரு இளவரசி எங்கே?” என்றான் விசித்திரவீரியன். “இங்கே வந்திருப்பவர்கள் அம்பிகையும் அம்பாலிகையும்தான். அம்பையை பீஷ்ம பிதாமகர் வழியிலேயே இறக்கி விட்டுவிட்டார்” என்றான் விப்ரதன்.
விசித்திரவீரியன் திகைப்புடன் “திருப்பி அனுப்பிவிட்டாரா?” என்றான். “இல்லை, இளவரசி அம்பை சௌபநாட்டரசர் சால்வரை மனதால் வரித்துவிட்டதாகச் சொன்னார். ஆகவே சால்வரிடமே கொண்டுசென்று சேர்க்கச் சொல்லி பீஷ்மர் இளவரசியை விட்டுவிட்டார்.” விசித்திரவீரியன் வியப்புடன் “தனியாகவா இளவரசி சென்றாள்?” என்றான். “ஆம்….அவர் தனியாகச் செல்லவிரும்பினார்” என்றான் விப்ரதன். “நான் அவரிடம் தூரம் அதிகமல்லவா என்று கேட்டேன். அவர் மனம் முன்னரே சௌபநாட்டுக்குச் சென்றுவிட்டது என்று பிதாமகர் சொன்னார்.”
விசித்திரவீரியன் சொல்லிழந்தவனாக அப்படியே அமர்ந்திருந்தான். “இளவரசே! உங்களுக்கு பேரரசி ஒரு செய்தி சொல்லியனுப்பியிருக்கிறார். இரண்டு இளவரசிகளையும் நீங்கள் மணம்கொள்ளவேண்டும் என்றும் அதற்காக இங்கே மருத்துவர்கள் வேண்டியதைச செய்யவேண்டுமென்றும் ஆணையிட்டிருக்கிறார்” என்றான் பாவகன். “இன்றுகாலை உங்கள் உடல்நிலை மேம்பட்டிருக்கிறது என்ற செய்தியை நம் மருத்துவர்கள் அறிவித்திருக்கிறார்கள். பேரரசி மகிழ்ச்சியுடன் இருக்கிறார்” என்றான் விப்ரதன்.
“என் உடல்நிலைபற்றி நானே அறிவேன்” என்று சொன்ன விசித்திரவீரியன் “ஆனால் அஸ்தினபுரியில் சென்ற நாற்பதாண்டுகளில் என் அன்னையின் ஆணையை எவரும் மீறியதில்லை. என் தந்தை உட்பட….அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி எழுந்தான். இயல்பாக அவன் நெஞ்சில் அம்பையின் நினைவு மேலெழுந்தது. “விப்ரதா சொல்! அம்பை பார்ப்பதற்கு எப்படி இருந்தாள்?”
விப்ரதன் சொல்லின் வேகத்தில் சற்றே முன்னகர்ந்து “வேள்விக்கூடம் மேல் படர்ந்து ஏறும் நெருப்பு போலிருந்தார்” என்றான். “ஏழுமுறை தீட்டப்பட்ட வாள் போல. ஆவணிமாதம் ஆயில்யநட்சத்திரத்தில் அதிகாலையில் படமெடுக்கும் ராஜநாகம்போல…” அதன்பின் அவனே தான் சொன்னதை உணர்ந்து திகைத்து நின்றுவிட்டான். விசித்திரவீரியனின் உடல் அவனறியாமலே சற்று நடுங்கியது. பாலாழி அலைகளில் எழுந்த ஆலகாலம் பற்றிய எண்ணம் ஒன்று அவன் மனதுக்குள் ஓடிச்சென்றது.