அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

3/22/14

பகுதி மூன்று : புயலின் தொட்டில்[ 2 ]

பகுதி மூன்று : புயலின் தொட்டில்[ 2 ]
சந்திரகுலத்து அரசன் யயாதியின் இரண்டாவது மைந்தனாகிய துர்வசு தந்தையின் முதுமையை ஏற்றுக்கொள்ள மறுத்ததனால் தன் தந்தையால் குலமிழந்து நாடு துறக்கும்படி தீச்சொல்லிடப்பட்டான். அச்சொல்லைக் கேட்டதும் கண்ணீருடன் அரண்மனையைவிட்டு வெளியே வந்து சந்திரபுரியின் கோட்டைவாயிலில் நின்றான். ஒரேசொல்லில் அன்றுவரை அவனிடமிருந்த அனைத்தையும் தந்தை திரும்பப்பெற்றுவிட்டதை உணர்ந்தான். அரசும் குலமும் குடும்பமும் கனவெனக் கலைந்து மறைந்தன. வானேறிச்செல்லவோ பாதாளத்துக்குச் செல்லவோ அவனுக்கு மனமிருக்கவில்லை. ஆகவே நான்குதிசைகளும் அவன் முன் விரிந்துகிடந்தன. எத்திசைச் செல்வது என்று அவன் திகைத்து சிலகணங்கள் நின்றபின் மேற்குத்திசைநோக்கி காலடி எடுத்துவைத்தபோது அவனுடைய இளமைநண்பனும் சாலைத்தோழனுமாகிய ரணசிம்மன் குதிரையில் தன்னைநோக்கி வருவதைக் கண்டான்.
ரணசிம்மன் “இளவரசே, பதினைந்தாண்டுகளுக்கு முன் நான் ஒரு சூளுரை விடுத்தேன். என் வாழ்வும் சாவும் தங்களுடனேயே. நானும் வருகிறேன்” என்றான். “ரணசிம்மா, நான் உன்னுடன் பகிர்ந்துகொள்ள இப்போது ஒன்றுமில்லை. நான் இளவரசனுமில்லை” என்றான் துர்வசு. ரணசிம்மன் “இளவரசே, தங்களை நான் இளவரசன் என்பது இந்நிலம் இன்னும் மாமன்னர் யயாதிக்குரியது என்பதனால்தான். இதன் எல்லையை நாம் தாண்டியதுமே நான் உங்களை அரசே என்றுதான் அழைக்கப்போகிறேன். நிலத்தால் மன்னர்கள் உருவாவதில்லை. மன்னர்களுக்கு நிலம் வந்துசேர்கிறது. உங்கள் படைத்தலைவனாக நான் இந்த வாளை தங்கள் சேவைக்கெனத் தாழ்த்துகிறேன்” என்றான்.
அவர்களிருவரும் தனியாக கோட்டைமுன்னிருந்து நகர் நீங்கினார்கள். அவர்கள் செல்லும் செய்தி பரவி நகர எல்லையை அவர்கள் கடப்பதற்குள் ஆயிரம் வீரர்கள் தங்கள் வேல்களுடனும் வாள்களுடனும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் ஒவ்வொரு நாட்டு எல்லைக்குள் நுழையும்போதும் அந்நாட்டு மன்னன் படைகளுடன் வந்து எதிர்கொண்டான். அவன் நாடுவழியாக கடந்துசெல்வதற்கு மட்டும் அனுமதியளித்தான். சப்தசிந்துவையும் கூர்ஜரத்தையும் கடந்து சென்றபோது நாடுகளே இல்லாத பெரும் பாலைநிலம் அவர்களை எதிர்கொண்டது. அவர்கள் அதன் வாயிலில் அஞ்சி நின்றனர்.
துர்வசு ‘என் தந்தையின் தீச்சொல்லையே நிலமாக ஆக்கி தெய்வங்கள் என் முன் அளித்திருக்கின்றன போலும்’ என்று எண்ணி திகைத்து நின்றான். அவனுடன் வந்த நிமித்திகர்களில் ஒருவனை அழைத்து அந்நிலம் எது என்று கணித்துச் சொல்லச் சொன்னான். நிமித்திகன் அன்றிரவு விண்மீன்களைத் தேர்ந்து அவ்விண்மீன்களை கூழாங்கற்களாக பன்னிரு நிலைத்திகிரிக்களத்தில் அமைத்துக் கணித்து அவ்விடத்தின் வரலாற்றைச் சொன்னான்.
ஆயிரம் கல்பங்களுக்கு முன்னர் விண்ணகத்தில் பிரஜாபதியான அத்ரி சஹஸ்ரம் என்னும் மாபெரும் வேள்வி ஒன்றைத் தொடங்கினார். அதற்கு திசைகளை செங்கற்களாக அடுக்கி எரிகுளம் அமைத்து மேகங்களை சமித்தாக்கி இடியையும் மின்னலையும் அரணிக்கட்டைகளாக்கி கடைந்தார். மூன்று எரிகுளங்களில் அக்னிக்கு ஸ்வாகாதேவியில் பிறந்த மகள்களான தட்சிணம் கார்ஹபத்யம் ஆஹவனீயம் என்னும் மூன்று இளநெருப்புகளையும் குடியேறச்செய்தார். ஆனால் அக்னியின் மூன்று மைந்தர்களான பாவகன் பவமானன் சூசி ஆகியோர் விளையாட்டாக வாயுவின் மைந்தர்களான பலன், அதிபலன், சண்டன் மூவரையும் துரத்தி வந்தனர். அவர்கள் மூன்று நெருப்புமங்கையரையும் அணைந்துபோகச் செய்தனர்.
அத்ரி மும்முறை வியானன் என்னும் வாயுபுத்திரனின் உதவியுடன் முந்நெருப்புகளையும் கடைந்து பற்றவைத்தார். மும்முறையும் விளையாடிவர்கள் அவற்றை அணைத்தனர். சினம் கொண்ட அத்ரி “என் வேள்வியைத் தடைசெய்த பாவம் உங்களைச் சேரட்டும். மூன்று வாயுக்களும் மூன்று நெருப்புகளையும் மாறிமாறிச்சுமந்தபடி ஆயிரம் கல்பம் மண்ணில் அலைவீர்களாக!” என்று தீச்சொல்லிட்டார். அவ்வாறாக மூன்று காற்றுகளும் மூன்று நெருப்புகளுடன் மண்ணில் வந்தன. அவை வீசுவதற்காக அவை கண்டடைந்த இடம் இந்த மலை முதல் மேற்கே ஆயிரம் யோஜனை தூரம் வரை ஆகும்.
வாயுவின் தலைநகரம் கந்தவதி என்றழைக்கப்படுகிறது. விண்ணகத்தில் முடிவில்லாத ஒளியால் ஆன மாமேருவில் ஒன்பது நகரங்கள் உள்ளன. பிரம்மனுக்குரிய மனோவதி நடுவிலிருக்கிறது. கிழக்கே இந்திரனின் அமராவதி அமைந்துள்ளது. தென்கிழக்கில் அக்னி அரசாளும் தேஜோவதி. தெற்கே யமன் அமைத்துள்ள சம்யமனி, தென்மேற்கில் நிர்யதியின் கிருஷ்ணாஞ்சனம், மேற்கே வருணனின் சிரத்தாவதி, வடக்கே குபேரனின் மஹோதயம், வடகிழக்கில் ஈஸானனின் யசோவதி ஆகியவை உள்ளன. வடமேற்கே வாயுவின் கந்தவதி அமைந்துள்ளது.
விண்ணிலிருந்து இறங்கிய காற்றின்மைந்தர்கள் மண்ணில் அவர்களுக்கென அமைத்துக்கொண்ட இடம் இது. இதன் பெயரும் கந்தபுரம். இங்கிருந்த மலைகளை குடைந்தும் அரித்தும் அவர்கள் தங்களுக்குரிய வழிகளையும் குகைகளையும் அமைத்துக்கொண்டனர். பலன், அதிபலன், சண்டன் மூவரும் எரிவடிவங்களான பாவகன், பவமானன், சூசி ஆகியோரைச் சுமந்தபடி இங்கிருந்து மேற்கே பாய்ந்தோடுகிறார்கள். அங்கிருந்து திரும்பவும் இங்கு வந்துசேர்கிறார்கள். மேற்கே செல்லச்செல்ல அவர்களின் வேகமும் வெம்மையும் அதிகரிக்கிறது.
பலன் பாறைகளை உடைக்கும் வல்லமை கொண்டவன். அதிபலன் பாறைகளைத் தூக்கி வீசும் பேராற்றலின் வடிவம். சண்டன் அனைத்தையும் தன் ஆயிரம் கைகளில் அள்ளி வீசி தாண்டவமாடுபவன். அரசே, நீரனைத்தையும் உண்ணும் பாவகனும் உயிர்களனைத்தையும் அழிக்கும் பவமானனும் அனைத்தையும் தூய்மைசெய்யும் சூசியும் அவர்களுடன் இணையும்போது அந்த மண்ணில் எவர் வாழமுடியும்?
நிமித்திகர் சொன்னதைக்கேட்டு அனைவரும் அஞ்சி நடுங்கி அமர்ந்திருக்க துர்வசு சொன்னான். “நிமித்திகரே, நானும் அந்த மூன்று நெருப்புகளையும் மூன்று காற்றுகளையும் போல தந்தையால் தீச்சொல்லிடப்பட்டு இங்கே வந்திருக்கிறேன். எத்தனை அழிக்கும்தன்மை கொண்டவர்களென்றாலும் அவ்வறுவரும் தெய்வ வடிவங்களும் கூட. அவர்கள் நம்மிடம் கருணை கொள்வார்கள். என்னுடன் வரவிரும்புபவர்கள் வரலாம்.”
ஆயிரம்பேரில் ஒருவர் கூட அஞ்சிப்பின்னடையவில்லை. அனைவரும் அந்த மண்ணுக்குள் நுழைந்தனர். வானகப்பிரஜாபதிகள் வேள்வி முடித்து சென்ற எரிகுளம் போல வெந்து சிவந்து கருகிக் கிடந்தது அந்நிலம். அதிலிருந்து பாதாளநாகங்களின் விஷமூச்சு போல அனல் வீசியது. தெய்வ வல்லமைகளை நோக்கி கைகளைக் கூப்பியபடி துர்வசு முன்னால் சென்றான். பின்னால் அவனது படைகள் வணங்கியபடி தொடர்ந்துசென்றன.
அவர்கள் வருவதை வானில் உலவிய அனல்காற்றுகள் கண்டன. பாவகனைத் தோளிலேற்றியபடி பலன் அவர்களை நோக்கி வந்தான். செம்புரவிகள் பிடரிபறக்கப் பறந்துவருவதுபோல செம்மண்புழுதிமேகமாக அவர்கள் வருவதை துர்வசு கண்டான். கண்களைமூடியபடி அசையாமல் நின்றான். ஒரு அடிகூட அவன் பின்னெடுத்து வைக்கவில்லை. அவர்களைச் சுற்றி தீத்தழல்கள்போல புழுதிக்காற்று வெறிகொண்டு சுழன்றாடியது. கோடிநரிகளின் ஊளைபோல அது ஒலித்தது.
துர்வசுவின் அசைவில்லாத பக்தியைக் கண்டு பாவகன் புன்னகையுடன் கடந்துசென்றான். செம்புழுதி அடங்கியபோது அவர்கள் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் போல கூப்பியகரங்களுடன் அந்த வீண்நிலத்தில் நின்றிருந்தனர். ‘பக்தனை தண்டிக்கும் தேவன் என எவருமில்லை… நாம் முன்னே செல்வோம்’ என்று அவர்கள் மேலும் சென்றனர். அதைக்கண்டு அதிபலன் மேல் ஏறிய பவமானன் பறந்துவந்தான்.
வானையும் மண்ணையும் இணைக்கும் மாபெரும் தூண் போல தொலைவில் அவர்கள் வருவதை துர்வசு கண்டான். பாலைநிலத்து மண் முழுக்க அந்தச் சுழலால் மேலே தூக்கப்பட்டு வான்மேகங்களுடன் இணைந்து சுருண்டது. பெரும்பாறைகள் கூட அதிலெழுந்து ஆயிரம் யோஜனை உயரத்தில் சுற்றிப் பறந்து கொண்டிருந்தன. அதிபலன் மேலேறிய பவமானன் அவர்களனைவரையும் நிலத்திலிருந்து தன் துதிக்கையால் தூக்கி வானுக்குக் கொண்டுசென்றான். அவர்கள் சுழன்று சுழன்று மேலே சென்றுகொண்டிருந்தபோதும் கும்பிட்ட கைகளை விலக்கவில்லை.
அவர்கள் மேல் கனிந்த அதிபலன் அவர்களை கீழிறக்கினான். அவர்களைச்சூழ்ந்து பெரும்பாறைகள் மழைபோல விழுந்து மண்ணை அறைந்தன. அவர்களுடன் விழுந்த மண்ணால் அந்த இடம் ஒரு குன்றாகியது. அக்குன்றின்மேல் அவர்கள் நின்றிருந்தனர். அந்தக்குன்று இன்றும் பவமானனுக்குரிய ஆலயமாக வழிபடப்படுகிறது.
VENMURASU_EPI_62
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
கடைசியாக சண்டன் சூசியை தன் தோளில் ஏற்றியபடி ஆயிரம் கைகளையும் மண்ணில் ஓங்கி ஓங்கி அறைந்தபடி வந்தான். அந்த அதிர்வில் மலையுச்சிப்பாறைகள் பிளிறலுடன் பிளந்து சரிந்தன. பூமி வெடித்து உள்ளிருந்து நீர்வடிவில் நெருப்பு வெளிவந்தது. மலைகளின் உச்சிகளெல்லாம் தீப்பற்றிக்கொண்டன. அவர்களைச் சுற்றி சிறுவண்டுகளை இதழ்களுக்குள் பொதிந்திருக்கும் செந்தாமரைபோல நெருப்பின் பெருந்தழல்கள் ஆடின. அந்த வெளிச்சம் வானில் நின்றிருந்த நிலவின்மீது பட்டு நிலவும் செந்நிறமாகியது. மண்ணில் நிலவொளி விழுந்த இடங்களிலெல்லாம் மனிதர்கள் வெம்மையை உணர்ந்தனர்.
சண்டனும் அவர்களுக்குக் கனிந்தான். மூன்று காற்றுகளும் அவர்கள் முன் மூன்று மிருகங்களாக வந்து நின்றன. பலன் கழுதை வடிவிலும் அதிபலன் ஒட்டகத்தின் வடிவிலும் சண்டன் குதிரை வடிவிலும் வந்தார்கள். மூன்று நெருப்புகளும் ஸாமி, பிலு, கரிர் என்னும் மூன்று மரங்களாக வந்து காட்சியளித்தன. அவர்களிடம் ‘என்ன வரம் வேண்டும்?’ என்று அத்தெய்வங்கள் கேட்டன. ‘தந்தையரே நாங்கள் இங்கே வாழவேண்டும்’ என்று அவர்கள் கோரினர்.
‘இது எங்கள் விளையாட்டரங்கு. ஆனால் நீங்களும் இங்கே வாழ வழிசெய்கிறோம்’ என்று தெய்வங்கள் அருளின. அவர்களுக்கு தெய்வங்கள் இருண்டுகுளிர்ந்த குகைகளைக் காட்டின. அவற்றுக்குள் தெளிந்த நீர் சுனைகளாக ஓடிக்கொண்டிருந்தது. அவர்களுக்கு கழுதைகளும் ஒட்டகங்களும் குதிரைகளும் வசப்பட்டன. ஸாமியும் பிலுவும் கரிரும் அவர்களுக்கு நிழலையும் உணவையும் அளித்தன. அவர்கள் அங்கே வாழத்தொடங்கினர். அவர்கள் அமைத்த நகரம் கந்தபுரம் எனப்பட்டது. கந்தபுரத்தால் ஆளப்படும் நாட்டை மக்கள் காந்தாரம் என்றனர்.
பீஷ்மரும் பலபத்ரரும் நாடோடியான சூதர்கள் பாடிய கதையைக் கேட்டபடி அந்த பாலைப்பொழிலில் அமர்ந்திருந்தனர். சிபிநாட்டைக் கடந்து காந்தாரத்து விரிநிலத்தின் நுழைவாயிலிலேயே அவர்கள் பீதர்களின் வணிகர்குழுவுடன் சேர்ந்து கொண்டனர். தன்னந்தனியாக சென்றுகொண்டிருந்த அவர்களை பீத வணிகர்கள் கொடிகளை அசைத்துக்காட்டி நிறுத்தினர். நெடுந்தொலைவில் செம்புழுதி கிளம்ப பாலைநிலக்காற்று போல அவர்கள் வருவதைக் கண்டபோது பீஷ்மர் முதலில் அது ஒரு படை என்றுதான் நினைத்தார். கொடிகளைக் கண்டதும்தான் வணிகர்குழு என்று தெளிந்தார்.
பீதர்களுடன் பயணம் செய்த சூதர்கள் அவர்கள் பேசியதை மொழிமீட்சி செய்து சொன்னார்கள். பாலையில் தனியாகச் செல்வது சாவையும் உடனழைத்துச்செல்வது என்றான் பீதவணிகர்களின் தலைவன். நூறு ஒட்டகங்களும் நூறு குதிரைகளும் ஆயிரம் படைவீரர்களும் கொண்ட அவர்களின் குழுவில் உணவும் நீரும் படைக்கலன்களும் திசைகாட்டிக்கருவியும் இருந்தன. மூன்று நிமித்திகர்களுடன் இசைக்கருவிகள் ஏந்திய எட்டு சூதர்களும் இருந்தனர். தங்களுடன் சேர்ந்துகொள்ளும்படி பீதர்தலைவன் சொன்னான்.
பிருஷதர் என்னும் முதுசூதர் சூதர்களை தலைமை வகித்து கொண்டுசென்றார். அவர்கள் ஒருமுறை காந்தாரம் வழியாக மேற்கே பயணம்செய்து மீள்வதற்கு ஏழுவருடங்களாகும் என்றார் பிருஷதர். அதன் பின் ஏழுவருடங்கள் எங்கும் செல்லாமல் சொந்த ஊரிலேயே வாழுமளவுக்கு செல்வம் ஈட்டமுடியும். பீதவணிகர்களும் சோனக வணிகர்களும் சூதர்களுக்கு செல்வத்தை அள்ளி வழங்குவார்கள் என்றார். “மொழி மாற்றம் செய்வதற்கு அவ்வளவு செல்வமா?” என்றார் பீஷ்மர். “நாங்கள் மரக்கலங்களை காற்று கொண்டு செல்வதுபோல இந்த வணிகர்குழுவை பாலையில் கொண்டுசெல்கிறோம். நீங்களே அறிவீர்கள்” என்றார் பிருஷதர்.
அது எவ்வளவு உண்மை என்று பீஷ்மர் தெரிந்துகொண்டார். ஒவ்வொரு நிலத்தைப்பற்றியும் சூதர்கள் அறிந்திருந்தனர். அங்குள்ள சோலைகள் மலைகள் கணவாய்கள் மரங்கள் அனைத்தும் அவர்களின் சொற்களினூடாக எழுந்து வந்தன. பயணம் உருவாக்கிய அனைத்துச் சோர்வையும் இரவில் அவர்கள் பாடியபாடல்கள் களைந்து ஆன்மாவை குளித்தெழச்செய்தன. ஒருநாளுக்கு பத்து யோஜனை வீதம் இருபது நாட்கள் பயணம் செய்யவேண்டியிருந்தது. அதற்குள் சூதர்பாடல்கள் இல்லாமல் இரவு துயிலமுடியாது என்ற நிலை பீஷ்மருக்கு வந்தது.
பாலைநிலம் ஆன்மாவின் ஈரத்தையெல்லாம் உறிஞ்சி வானுக்கனுப்பிவிடுகிறது என்று அவருக்குத் தோன்றியது. மொழியிலும் கனவுகளிலும்கூட பசுமை இல்லாமலாகிவிடுகிறது. கண்களை மூடினாலும் வெறுமை. கற்பனையில்கூட முன்பு கண்டு வாழ்ந்திருந்த பசும்நிலங்களை மீட்கமுடியவில்லை. அந்நிலமெங்கும் ஏக்கமே நிறைந்திருந்தது. நீருக்கான ஏக்கம். பசுமைக்கான ஏக்கம். ஏக்கம் மட்டுமேயான ஏக்கம். அது நெஞ்சுக்குள் வறண்டகாற்றாக அலைந்து அனைத்தையும் உண்டது. பாலைவன மக்கள் ஏன் சாதாரணமான பேச்சுகளுக்குக் கூட நெகிழ்ந்து கண்ணீர்விடுகிறார்கள் என்று அவருக்குப் புரிந்தது. அத்தனை ஈரமானவர்கள் ஏன் அடுத்தகணமே சோதரன் கழுத்தை அறுக்க வாளெடுக்கிறார்கள் என்றும்.
அந்த வெறுமையை வாழ்வால் நிறைத்தவை சூதர்களின் பாடல்களே. அவை இரவின் தனிமையில் வானில் மந்திரவெளியில் இருந்து பசுமையையும் நீரலைகளையும் வண்ணங்களையும் கொண்டுவந்து ஆன்மாவில் நிறைத்தன. பாலைவனப்பயணம் முழுமையாக தொலைந்துவிட்டிருக்கிறோம் என்ற அச்சத்தை நெஞ்சின் ஆழத்தில் கரையாமல் நிறுத்திவைப்பது. சூதர்களின் பாடல்கள் சென்றுசேரவிருக்கும் பசுநிலத்தை கையெட்டும் அருகே கொண்டுவந்து நிறுத்தின. பாலைவனப்பயணம் மண்ணில் வேறு மனிதர்களே இல்லை என்ற பிரமையை ஆழநிலைநாட்டுவது. சூதர்களின் பாடல்கள் வழியே வாழ்ந்தவர்களும் வாழ்பவர்களுமான பல்லாயிரம்பேர் வந்து தோளோடு தோள்முட்டி அமர்ந்துகொண்டார்கள்.
சூதர்களின் பாட்டில் வந்த அனல் அமர்ந்து ஊரும் கொடுங்காற்றுகளை மூன்றுமுறை பீஷ்மர் கண்டார். நிமித்திகன் அவன் கையிலிருந்த கழியில் கட்டப்படிருந்த நீண்ட துணி பறக்க ஆரம்பித்ததுமே கையசைத்து அனைவரையும் நிறுத்தினான். கொடியை தரையில் நிறுத்தி அது பறப்பதை கூர்ந்து கவனித்தான். மாறிமாறி திசைகாட்டிய கொடி ஒரு கட்டத்தில் பாம்பின் நாவுபோல அதிர்ந்து ஒரே திசைநோக்கி பறக்கத் தொடங்கியது. குனிந்து அவன் நிலத்தைப்பார்த்தான். மண்ணில் மணல்பருக்கைகள் எறும்புகள் முட்டிமோதிச்செல்வதுபோல ஓடிக்கொண்டிருந்தன.
அவர்கள் உடனடியாகத் திரும்பி பக்கத்திலிருந்த மலையை அடைந்து அதைச் சுற்றிக்கொண்டு சென்று அங்கிருந்த பெரிய மலைமடிப்புகளிலும் குகைகளிலும் பதுங்கிக் கொண்டார்கள். பெருமழை வரப்போவதுபோல வானம் மங்கலடைந்து மண் கருமைகொண்டது. கழியிலிருந்து கொடி அறுபட்டு பறந்தது. உடைகள் சிறகுகளாக எழுந்து தூக்கிக்கொண்டு செல்ல விரும்புபவை போல படபடத்தன. சூழ இருந்த அனைத்துப் பாறைகளும் உயிர்கொண்டவை போல ஓலமிடத்தொடங்கின. பீஷ்மர் அம்மலைகள் மேல் மழைபோல மணல் வந்து மோதுவதைக் கண்டார். கடலெழுந்து வரும் இரைச்சலுடன் புயல் அனைத்தையும் அறைந்தபடி சூழ்ந்துகொண்டது.
நெடுநேரம் இருக்கிறேன் என்னும் உணர்வன்றி ஏதுமற்றவராக இருந்தபின் பீஷ்மர் அந்தப்புயல் இறங்கும் ஒலியை உணர்ந்தார். மாபெரும் பட்டுத்துணி இழுபட்டுச் செல்வதுபோல மணற்புயல் அவர்களைத் தாண்டிச்செல்வதைக் காணமுடிந்தது. சற்று நேரம் கழித்து அவர்கள் பாறைமறைவிலிருந்து வந்தபோது ஏதும் நிகழாததுபோல இருந்தது பாலை. ஆனால் வானம் அந்திச்சிவப்புடன் இருக்க மழைமூட்டம்போல இருள் மட்டும் எஞ்சியிருந்தது. “புழுதி இறங்குவதற்கு ஒருநாளாகும். அதுவரை வெயில் இருக்காது” என்று பிருஷதர் சொன்னார்.
பீஷ்மர் இருபதாவது நாள் பீதர்களுடன் காந்தார நகரத்துக்குள் நுழைந்தார். தாரநாகமென்று அழைக்கப்பட்ட ஆற்றைக் கடந்து செல்லும் பாதைக்கு அப்பாலிருந்தது அந்நகரம். அதை ஆறு என்றே சொல்லமுடியவில்லை. பாலைவெளி மெல்லச்சரிந்து மென்மணற்பரப்பாக ஆகி நெடுந்தூரம் சென்றபின்புதான் நீரொழுக்கு வந்தது. கங்கையின் மிகச்சிறிய ஓடை அளவுக்கே நீர் சென்றது. ஆனால் முற்றிலும் ஓசையே இல்லாமல் ஆழ்ந்த நீலநிறத்தில் கிடந்தது அது. துயிலும்ஆறு என்று தோன்றியது.
பிருஷதர் அதன் பெயர் தாரநாகம் என்றார். நாகத்தின் அமைதி கொண்டது அது. இரவில் விண்மீன்களை பிரதிபலிப்பது. அதன் நீர் வெம்மைகொண்டிருந்தது. அந்நீரை அப்படியே அள்ளிக்குடிக்கவோ உடலில் விட்டுக்கொள்ளவோகூடாது என்றனர் வணிகர். அதை மண்கலங்களில் அள்ளி நதிக்கரைச் சோலைகளில் சிறிதுநேரம் வைத்திருந்தால் குளிர்ந்து அருள் புரியத்தொடங்கிவிடும்.
நீலமாக நீர் பெருகிச்சென்றாலும் எந்த மிருகமும் அதில் வாய்வைத்து அருந்தவில்லை. “இரவில் பாலைநிலம் குளிர்ந்து விரைத்துவிடும். அப்போது மெல்லிய வெம்மைகொண்ட நதிநீர் அமுதுபோலிருக்கும். பாலையின் உயிர்களனைத்தும் நீரை அள்ளிக்குடிக்கும். நீரில் இறங்கித் திளைக்கும்” என்றார் பிருஷதர். “ஆகவே இந்நதிக்கு உஷ்ணவாகினி என்றும் கவிஞர்கள் பெயரிட்டிருக்கிறார்கள்.”
ஆற்றைக் கடந்து மேலேறியதுமே தெரிந்த காந்தாரநகரத்தின் கோட்டை புதியது என்பதை பீஷ்மர் தொலைவிலிருந்தே கண்டார். அதன் பலபகுதிகள் கட்டி முடிக்கப்படவேயில்லை. அங்கே புழுதி எழ நூற்றுக்கணக்கானவர்கள் வினையாற்றிக்கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. சாரங்கள் தொலைவிலிருந்து பார்க்கையில் சிலந்தி வலைபோலத் தெரிந்தன. அவற்றில் வடங்களால் கட்டப்பட்டு நூற்றுக்கணக்கான குதிரைகளால் இழுக்கப்பட்டு தூக்கி ஏற்றப்பட்ட பாறைகள் சிலந்திகள் போல எழுந்துசெல்வது தெரிந்தது.
மிகுந்த கனவுடன் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நகரம் என்று அதைப் பார்த்ததுமே தெரிந்துகொண்டார். பழையநகரம் மிகச்சிறியது. மூன்று சிறிய குன்றுகளுக்கு நடுவே இருந்த பள்ளத்தாக்கு அது. அங்கே இருந்த இயற்கையான நீர்நிலையால் அங்கே குடியிருப்பு உருவாகியிருக்கலாம். அதைச்சுற்றி வளர்ந்த பழையநகரையும் அதைச்சுற்றியிருந்த குன்றுகளையும் உள்ளடக்கி கோட்டை கட்டப்பட்டிருந்தது. குன்றுகளின் செங்குத்தான சரிவுகளை மதில்சுவருடன் இணைத்துக்கொள்ள முயன்றிருந்தனர் சிற்பிகள். குன்றுகளின் உச்சியில் காவல் மாடங்கள் அமைத்திருந்தனர்.
“துர்வசு வம்சத்தவரன வர்க்கன், கோபானு, திரைசானி, கரந்தமன், மருத்தன், துஷ்யந்தன், வரூதன், காண்டீரன், காந்தாரன் என்னும் மன்னர்களால் ஆளப்பட்ட நகரம் இது. இன்று இதை மாமன்னர் சுபலர் ஆள்கிறார். அவருக்கு மூன்று மைந்தர்கள். அசலர், சகுனி, விருஷகர். பட்டத்து இளவரசர் அசலர்தான் என்றாலும் மூவரிலும் வீரரும் அறிஞருமான சகுனியே இந்நகரை உருவாக்கி வருகிறார். இன்று காந்தாரத்தை ஆள்வது இளவரசர் சகுனிதான்” என்றார் பிருஷதர்.
“அவனுடைய பேராசை இந்தக்கோட்டையைப் பார்த்தாலே தெரிகிறது” என்று தாடியைத் தடவியபடி பீஷ்மர் சொன்னார். “நகரின் தேவை என்ன, அதன் வாய்ப்புகள் என்ன எதைப்பற்றியும் அவன் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. பாரதவர்ஷத்தின் பெரியகோட்டை ஒன்றை கட்டிவிடவேண்டுமென ஆசைப்படுகிறான்.” பிருஷதர் “ஆம், இளவரசர் சகுனி ஆசைமிகுந்தவர் என்கிறார்கள்” என்றார்.
“இந்தப்பெரும்பாலையே மாபெரும் கோட்டை. இதன் நடுவே இவ்வளவு பெரிய கோட்டைக்கான தேவையே இல்லை. எதிரிகள் வருவதை எத்திசையிலும் நூறு யோஜனைக்கு அப்பாலேயே அறிந்துவிடமுடியும். அவர்களை பாலையிலேயே சென்று தாக்கமுடியும். அவர்கள் பாலைப்பயணத்தில் களைத்திருக்கையில் அனைத்து ஆயுதங்களுடனும் வளங்களுடனும் சென்று தாக்கி வெல்லமுடியும்… இது பாதுகாப்புக்கான கோட்டையே அல்ல. சகுனியின் அகந்தைதான் கல்லாக மாறி கோட்டையாக எழுந்து நிற்கிறது” பீஷ்மர் சொன்னார். “இந்தப்பாலையில் இக்கோட்டையைக் கட்டுவது கடினம். கட்டியபின் நிலைநிறுத்துவது அதைவிடக்கடினம்.”
“உண்மை” என்றார் பிருஷதர். “மன்னர் சுபலனுக்குக்கூட இந்தப் பெரும்கோட்டையைக் கட்டுவதில் உடன்பாடில்லை என்றார்கள். இதைக்கட்டுவதற்காக சகுனி பெரும் செல்வத்தை வீணடித்துவிட்டார் என்று அவர் சினம் கொண்டிருப்பதாக ஊரில் பேசிக்கொள்கிறார்கள். கோட்டைக்குள்ளேயே பெரும்பகுதி பாலையாகவே உள்ளது. அங்கெல்லாம் மக்கள் வாழவேண்டுமென்றால் நீர் தேவை. இப்போது கோட்டைக்கட்டுமானத்துக்காக வந்திருக்கும் அடிமைகளுக்குக் கூட தாரநாகத்தின் நீர் போதவில்லை.”
“சகுனி என்ன சொல்கிறான்?” என்றார் பீஷ்மர். “அப்பால் பள்ளத்தில் ஓடும் ஆரியகௌசிகா ஆற்றை இப்பகுதிக்கு திருப்பப்போவதாகச் சொல்கிறார்.” பீஷ்மர் சிரித்து “அதற்கு பதில் காந்தாரபுரியை அப்பகுதிக்கு கொண்டுசெல்லலாமே!” என்றார்.
பிருஷதர் “காந்தாரத்தின் பெரிய நகரம் வடக்கே குஃபாவதிக்கரையில் இருக்கும் புருஷபுரமும் அப்பாலிருக்கும் தக்‌ஷசிலையும்தான். அவை உத்தரபதத்தின் அருகே உள்ளன. அங்கிருந்துதான் காந்தாரத்தின் செல்வம் வருகிறது. ஆனால் இது புராணகாலத்து மன்னராகிய துர்வசு அமைத்த தொல்நகரம். இதைக்கொண்டுதான் இம்மன்னர்கள் காந்தாரர்கள் என அழைக்கப்படுகிறார்கள். ஆகவே இதுதான் தலைநகரம் என்பதில் சகுனி உறுதியுடன் இருக்கிறார்” என்றார்.
“எதிரிகள் இல்லையென்றாலும் உருவாக்கிக்கொள்ளும் ஆவல் கொண்டவர் சகுனி” என்று பிருஷதர் சிரித்தார். பீஷ்மரும் சேர்ந்து சிரித்தார்.