அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

2/28/14

பகுதி ஒன்று : வேழாம்பல் தவம்[ 1 ]

பகுதி ஒன்று : வேழாம்பல் தவம்[ 1 ]
அலகிலா நடனம் மட்டுமே இருந்தது, நடனமிடுபவன் அந்நடனமாகவே இருந்தான். முன்பின்நிகழற்ற முதற்பெருங் காலமோ அவன் கையில் சிறு மணிமோதிரமாகக் கிடந்தது.
அசைவென்பது அவன் கரங்களாக, அதிர்வென்பது அவன் கால்களாக, திசையென்பது அவன் சடைமுடிக்கற்றைகளாக, ஒளியென்பது அவன் விழிகளாக, இருளென்பது அவன் கழுத்துநாகமாக இருந்தது. அவனென்பதை அவனே அறிந்திருந்தான். ஆடுகையில் அவனில்லை என்பதையும் அவனறிந்திருந்தான்.
ஆடலின் முதல்முழுமைக் கணங்களில் ஒன்றில் அவன் இடக்கரமும் வலக்கரமும் ஒரு மாத்திரையளவுக்கு முரண்பட்டன. அவன் இடக்கரம் காட்டியதை இடக்கால் தொடர்ந்தது. இடக்கால் அறிந்ததை இடக்கண் கண்டது. கண்ணறிந்ததை கருத்து உணர்ந்தது. கருத்து கொண்டதை கனிவும் ஏற்றது.
அவன் இடப்பக்கம் நெகிழ்ந்து அங்கொரு முலை முளைத்தது. அதில் தேம்பாலூறி நிறைந்தது. இடக்கண் நீண்டு அதில் கருணை சுரந்தது. அது அணிநீலநிறத்து அன்னையாகியது. செந்தழல்நிறமும் மணிநீல வண்ணமும் கலந்த முடிவிலா ஆடலாக இருந்தது இதுவதுவற்றது.
ஆடலுக்குள் அவன் அகம் அசைவற்ற யோகத்தில் இருந்தது. அந்த நிகழ்விலியில் அவன் நீலமாக நிறைந்திருந்தான். அங்கே செம்பொன்னிற உதயப்பேரொளியாக அவள் எழுந்தாள். அவள் புன்னகையில் அவன் தவம் கலைந்தது. அவன் அவளை தானாகக் கண்டான். அவள் தன்னை அவனாகக் காணவைத்தான். அவர்கள் நின்றாடுவதற்கும் வென்றாடுவதற்கும் தோற்றமைவதற்கும் தோற்றலேவெற்றியென அறிந்து நகைப்பதற்கும் முடிவற்ற மேடைகளைச் சமைத்தது அவர்களின் கனவு.
அக்கனவுகளெல்லாம் அவன் கை உடுக்கையின் நாதமாக எழுந்து அவனைச்சுற்றி விரிந்தன. காலமென்ற ஒன்றும், அது நிகழும் களமென ஒன்றும், அது கலைந்தடுக்கிக்கொள்ளும் விண்ணென ஒன்றும், விண் சுருளும் வெளியென ஒன்றும், வெளி ஒடுங்கும் அளியென ஒன்றும், அளியறியும் அம்மை என ஒன்றும் அங்கே உருவாகி வந்தன.
அம்மை தன் அழகிய கைகளால் அவனை பின்னாலிருந்து தழுவி அவன் செவிகளில் அவன் விரும்பும் சொல்லைச் சொல்லி அவனை எழுப்பினாள். சிரித்தோடிய அவளை அவன் நகைத்துக்கொண்டு விரட்டிச்சென்றான். ‘ஆடலும் ஆக்கலும் அமைதலும் ஆகட்டும். என்னுடன் ஆடி வெல்ல முடியுமா?’ என்றாள் அன்னை. ‘ஆம்’ என்றான் தாதை.
மேருவின் ஒளிமுனையில் அவர்கள் அமர்ந்தனர். உமை தன் வலது கையை விரித்தாள். ஒளிரும் செங்கையில் மலைகள் எழுந்தன. கடல்கள் அலைத்தன. பசுங்காடுகள் பெருகி மலர்ந்தன. உயிர்வெளி உருவாகிப் பெருகியது. அக்கையை அவள் மேருமலை மீது விரித்து ஒரு தாயக்கட்டம் செய்தாள்.
இறைவன் தன் வலக்கையை நீட்டி விண்ணகத்தில் உருண்ட சூரியனையும் இந்திரன் முதலிய தேவர்களையும் பற்றி அந்த தாயக்கட்டத்தில் கருக்களாக்கினான்.
அன்னை தன் நான்கு கைவிரல்களால் நான்கு தாயக்கட்டைகளைச் செய்தாள். திரேதம், கிருதம், துவாபரம், கலி என்னும் அக்கட்டைகளை சிரித்தபடி உருட்டி அவள் ஆடத்தொடங்கினாள்.
மடமையெனும் பாவனையால் பெண்மை ஆடுகிறது. அதன்முன் சரணடையும் பாவனையால் ஆண்மை ஆடுகிறது. வெல்லா வீழா பெருவிளையாடல். அதன் வண்ணங்கள் வாழ்க!
VENMURASU_EPI_51 _Final
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
சமந்த பஞ்சகம் என்னும் குருஷேத்ரத்தின் தென்மேற்கு மூலையில் இருந்த கொற்றவையின் சிற்றாலயத்தின் முகப்பில் அமர்ந்திருந்த ஏழு சூதர்களில் முதல்வர் தன் கிணைப்பறையை மீட்டி பாடிமுடித்ததும் அங்கிருந்த பிறர் ‘ஓம் ஓம் ஓம்’ என முழங்கி அதை ஏற்றனர்.
இரண்டாவது சூதர் தன்னுடைய மெல்லிய கரங்களால் தன் முழவை மீட்டி பாடத் தொடங்கினார்.
சூதரே, மாகதரே, ஆடுபவர்கள் எவரும் அறிவதில்லை, பகடைகளும் ஆடுகின்றன என்பதை. தங்கள் நான்கு முகங்களால் நான்கு வண்ணங்களால் அவை முடிவின்மையை உருவாக்கிக் கொள்ளமுடியும். முடிவின்மையில் அவை எங்கும் செல்லமுடியும். எவற்றையும் அடையமுடியும்.
அன்றொரு காலத்தில் ஆடலின் வேகத்தில் கிருதம் என்னும் பகடை தெறித்தோடியது. ஒளிரும் ஒரு சிவந்த விண்மீனாக அது பெருவெளியில் பாய்ந்து விண்ணகப் பாற்கடலில் விழுந்தது. அதன் அலைகள் எழுந்து அவ்வெண்ணிறப்பரப்பில் கால அகால விகாலமென சுருண்டிருந்த ஆதிசேடனை அறைந்தன. அவன் அசைவில் அறிதுயில் கொண்டிருந்த விஷ்ணு கண் விழித்தெழுந்தார். அவரது சினம்ததும்பிய கணம் பூமி எனும் தாயக்களத்தில் ஒரு மனிதனாகப் பிறந்தது.
சூதரே மாகதரே, அவன் பெயர் பரசுராமன். இப்புவியில் ஜமதக்கினி முனிவருக்கும் ரேணுகை அன்னைக்கும் மைந்தனாகப் பிறந்தான். அளவுமீறும் அமுதம் விஷமானதுபோல அறம் காக்கும் ஷத்ரியவீரமே மறமாக ஆன காலம் அது. தேர்கள் உருளும் பாதையில் ஆயிரம் சிற்றுயிர்கள் மாள்கின்றன. சூதரே, அனைத்து தேர்களுக்கும் மேல் ஓடிச்செல்கிறது காலத்தின் பெருந்தேர்.
தன் பெருந்தவத்தால் சிவனிடமிருந்து பெற்ற மழுவுடன் தந்தையின் வேள்விக்கு விறகுவெட்ட வனம்புகுந்த பரசுராமன் பறவைகளின் குரல்கேட்டு வழி தேர்ந்து சென்றுகொண்டிருந்தபோது நாரதர் ஒரு குயிலாக வந்து கூவி அவனை வழிதவறச்செய்தார்.
மும்முறை வழிதவறிய பரசுராமன் சென்றடைந்த இடம் அஸ்ருபிந்துபதம் என்றழைக்கப்பட்ட நிலம். அங்கே பளிங்குத்துளிகளே மணலாக மாறி சூரியனின் ஒளியில் கண்கூச மின்னுவதை அவன் கண்டான். அந்நிலம் வெம்மையானது என்று எண்ணி அவன் பாதங்களை எடுத்து வைத்தபோது அவை குளிர்ந்து பனிபோலிருப்பதை உணர்ந்தான்.
அவற்றில் ஒன்றை எடுத்து தன் நெஞ்சோடு சேர்த்து ‘பளிங்குமணிகளே, நீங்கள் எவர் என’ அவன் வினவியபோது அது விம்மியழுதபடி ‘நாங்களெல்லாம் அழியாத கண்ணீர்த்துளிகள்…. மண்ணில் ஷத்ரியர்களின் அநீதியால் வதைக்கப்பட்டவர்களால் உதிர்க்கப்பட்டவர்கள். அவர்களின் அகம் அணையாமல் எங்களுக்கு மீட்பில்லை’ என்றன.
சினத்தால் விரிந்த கண்கள் செவ்வரி ஓட ‘அறத்தைக் காக்கும் ஷத்ரியன் என எவரும் இல்லையா?’ என்றான் பரசுராமன். ‘உத்தமரே, அறம்காக்கும் மன்னர்களெல்லாம் அழிந்துவிட்டனர். மன்னனின் மீட்பென்பது அறத்தால். அறம் திகழவே மக்கள். மக்கள் வாழவே மண். மண் காக்கவே அரசு. அரசை முதன்மையாகக் கொள்ளும் ஷத்ரியன் அறத்தை இழக்கிறான். அறம் மறந்த மன்னனின் அருகமரும் மன்னனும் அறத்தை இழக்கிறான். ஷத்ரியகுலமே பாற்கடல் திரிந்ததுபோல் ஆயிற்று’ என்றது கண்ணீர்த்துளி.
‘அழியாத துயரே, ஒன்று தெரிந்துகொள். ஆற்றாது அழுத கண்ணீர் யுகயுகங்களை தன்னந்தனியாகக் கடந்துசெல்லும். தனக்கான வாளையும் வஞ்சினத்தையும் அது கண்டடையும். இன்று இம்மண்ணில் நின்று உங்களுக்கொரு வாக்களிக்கிறேன். உங்கள் வஞ்சத்தை நான் தீர்ப்பேன். இங்குள்ள ஒவ்வொரு துளியையும் நான் விண்ணகம் அனுப்புவேன். அதற்கு என் பெருந்தவமே துணையாகுக’ என்று பரசுராமன் வஞ்சினம் உரைத்தான். ஆம் ஆம் ஆம் என ஐந்து பருப்பொருட்களும் குரல் எழுப்பி அதை ஆதரித்தன.
குருதிவெறி கொண்ட மழுவுடன் மலையிறங்கி ஊர்புகுந்த பரசுராமன் இருபத்தொரு முறை பாரதவர்ஷம் முழுக்கச் சுற்றி ஷத்ரிய குலங்களை கொன்றழித்தான். அவர்களின் கோட்டைகளை எரித்தான், அவர்களின் சிரங்களைக் குவித்தான். அவர்களின் குலங்களை கருவறுத்தான். அவர்களின் ஒவ்வொருதலைக்கும் ஒரு கண்ணீர்மணி விண்ணகம் சென்று ஒரு விண்மீனாகி மண்ணைப்பார்த்து புன்னகைசெய்தது.
அவன் சென்ற திசைகளில் எல்லாம் நதிகள் சிவந்து குருதிவரிகளாக மாறின. அவன் காலடிபட்ட நிலங்களெல்லாம் குருதி ஊறி கொன்றையும் மருதமும் முல்லையும் செண்பகமும் செந்நிற மலர்களைப் பூத்தன.
பரசுராமன் தன் குருதி சொட்டும் மழுவுடன் சூரியநகரியை ஆண்ட மூலகன் என்னும் அரசனைக்கொல்லச் சென்றான். அவன் தன் ஷத்ரியத்தன்மையை முற்றிலும் கைவிட்டு தன் அன்னையருக்கு மைந்தனாக மட்டும் ஆனான். அவன் அன்னையர் அவனைச்சூழ்ந்து அணைத்துக்கொண்டனர். பரசுராமனின் மழு அவர்களை மும்முறை சுற்றிவந்து வணங்கி மீண்டது. நாரிவசன் என்றழைக்கப்பட்ட அம்மன்னனில் இருந்து ஷத்ரியகுலம் மீண்டும் முளைத்தெழுந்தது. அன்னையரின் கைகளாலேயே அரசு காக்கப்படுமென அவ்வம்சம் அறிந்திருந்தது.
பரசுராமன் ஷத்ரியர்களைக் கொன்று வென்ற கிழக்குத் திசையை அத்துவரியனுக்கும், வடக்கை உதகாதனுக்கும், மத்திய தேசத்தை ஆசியபருக்கும், ஆரிய வர்த்தத்தை உபதிரஷ்டனுக்கும் அதற்கு அப்பால் உள்ள நிலத்தை சதசியர்களுக்கும் அளித்தான். பின்பு பெருகிப்புரண்டு சென்ற சரஸ்வதி நதியில் இறங்கி தன் மழுவின் குருதியை கழுவிக்கொண்டான்.
பரசுராமன் தன் பணிமுடித்து வந்து நின்ற இந்த இடம் அன்று ஐந்து குளங்கள் கொண்டதாக இருந்தமையால் பஞ்சசரஸ் என்று அழைக்கப்பட்டது. போரில் இறங்கியபின்னர் தன் வில்லை கீழிறக்காத அவன் தன் மூதாதையருக்கு நீர்க்கடன் செய்யவில்லை. ஆகவே நீர்க்கடன்களைச் செய்வதற்காக முதல் குளத்தில் இறங்கி தன் கைகளைக் கழுவினான்.
அக்கணமே அந்த நீர்நிலை கொந்தளித்து அலையெழுந்து குருதித்தேக்கமாக மாறியது. திகைத்தபின் அவன் அடுத்த நீர்நிலையில் தன் கைகளைக் கழுவினான். அதுவும் குருதியாகி நிறைந்தது. ஐந்து குளங்களும் குருதிக்கொப்பளிப்புகளாக ஆனதைக் கண்டு அவன் செயலிழந்து நின்றான்.
கண்ணீருடன் தன் தந்தையையும் மூதாதையரையும் ஏறிட்டு நோக்கி பரசுராமன் கூவினான். ‘எந்தையரே, இக்குளங்கள் எவை? இங்கே நான் செய்யவேண்டியதென்ன?’
இடியோசைபோல வானில் மெய்யிலிக் குரல் எழுந்தது. ‘நீ கொன்ற ஷத்ரியர்களின் குருதி முதல் குளம். அவர்களின் பெண்களின் கண்ணீரே இரண்டாவது குளம். அவர்தம் குழந்தைகளின் அழுகை மூன்றாவது குளம். அவர் மூதாதையரின் தீச்சொல் நான்காவது குளம். பரசுராமனே, ஐந்தாவது குளம் அவர்களின் உருவாகாத கருக்களின் ஏக்கமேயாகும்.’
இடியோசையை நோக்கி பரசுராமன் கேட்டான் ‘நான் அறத்தையல்லவா நிலைநாட்டினேன்? ஆற்றாத ஆயிரம்கோடி விழித்துளிகளை விண்ணேற்றியவன் அல்லவா நான்?’ மெய்யிலி சொன்னது. ‘ஆம், ஆனால் எதன்பொருட்டென்றாலும் கொலை பாவமேயாகும்.’
திகைத்து சற்று நேரம் நின்றபின் இரு கைகளையும் விரித்து ‘ஆம் மூதாதையரே, அதை நானும் என் அகத்தில் உணர்ந்தேன். இந்தக் குருதியெல்லாம் என் நெஞ்சிலிருந்து வழிந்ததே. என்னைப் பொறுத்தருளுங்கள். விண்ணகங்களில் நீங்கள் பசித்திருக்கச் செய்துவிட்டேன். அணையாத விடாயை உங்களுக்கு அளித்துவிட்டேன்’ என்றான்.
’மைந்தனே, தன்னையறிந்தவனுக்கு பாவமில்லை என்கின்றன வேதங்கள். அந்த ஐந்து குருதிச்சுனைகளின் அருகே அமர்வாயாக. அங்கே நீ செய்யும் ஊழ்கத்தில் நீ உன்னை அறிந்து மீள்வாய்’ என்றனர் நீத்தார்.
சூதரே மாகதரே, இந்த சமந்த பஞ்சகத்தின் அருகே கிருத யுகத்தில் பரசுராமர் அமர்ந்து தவம்செய்தார். உடலுருகி உளமுருகி கனவுருகி காரிருள் உருகி கடுவெளியுருகி எஞ்சியபோது அவர் தன்னை அறிந்துகொண்டார்.
அப்புன்னகையுடன் அவர் விழிதிறந்தபோது இந்த ஐந்து குளங்களும் தெளிந்த குளிர்நீர் நிறைந்திருக்கக் கண்டார். எழுந்து அந்தக் குளங்களின் அருகே நின்று வான் நோக்கிக் கேட்டார். ‘எந்தையரே, இந்த நீர்ப்பலியை நீங்கள் பெறலாகுமா?’ வானிலிருந்து அவர்கள் புன்னகையுடன் சொன்னார்கள். ‘ஆம் மைந்தா, அவை உன் கண்ணீரால் நிறைந்துள்ளன. அவை எப்போதும் அப்படியேதான் இருக்கும்.’
பரசுராமரின் கண்ணீரான இந்தக் குளங்களை வாழ்த்துவோம். மாமனிதர்களின் கண்ணீரில்தான் மனிதகுலம் காலம்தோறும் நீராடுகிறதென்பதை அறிக. ஓம் ஓம் ஓம்!
இரண்டாவது சூதர் பாடிமுடிப்பதற்குள் மூன்றாவது சூதர் வெறியெழுந்து தன் துடிப்பறையை மீட்டி பாடத்தொடங்கினார்.
சூதரே கேளுங்கள். மாகதரே கேளுங்கள். செவிகள் கொண்டவர்கள் அனைவரும் கேளுங்கள். சிந்தை கொண்டவர்கள் அனைவரும் கேளுங்கள். இதோ இன்னொரு கதை.
விண்ணிலுருளும் மூன்றாவது பகடையின் பெயர் துவாபரன். முக்கண்ணனின் சுட்டுவிரலில் இருந்து தெறித்து அவன் விண்விரிவில் விரைந்தான். ஒளிசிதறும் நீல விண்மீனாக உருண்டோடி சூரியனின் தேர்ப்பாதைக்குக் குறுக்கே புகுந்தான். ஏழுவண்ணப்புரவிகள் இழுத்த பொற்தேரில் பன்னிரு கைகளில் வஜ்ரம், பாசம், அங்குசம், கதை, தனு, சக்கரம், கட்கம், மழுவுடனும் செந்நிறம் வெண்ணிறம் பொன்னிறம் நீலநிறம் என நான்கு தாமரைகளுடனும் எழுந்தருளிய சூரியதேவனின் ரதசக்கரத்தில் முட்டினான்.
திசைதவறிய சூரியரதம் ஏழுவண்ணத்தலைகள் கொண்ட உச்சைசிரவஸால் இழுக்கப்பட்ட செந்நிறத்தேரில் விண்ணில் ஊர்ந்த இந்திரனின் பாதைக்குக் குறுக்காகச் சென்றது. சூரியனின் சாரதியான அருணன் விலகு விலகு என கூவிக் கையசைத்தபடி முழுவேகத்தில் விண்ணகப்பாதையில் விரைந்தான். இந்திர சாரதியான மாதலி ’விலகு, இது என் தலைவனின் பாதை’ என்று கூவினான். அவர்கள் மாறி மாறி போட்ட அறைகூவலால் விண்ணகங்கள் இடியொலி செய்தன.
விண்ணில் இரு பெரும் ரதங்களும் முகத்தோடு முகம் முட்டி திகைத்து நின்றன. சினம்கொண்ட சூரியன் தன் அங்குசத்தை இந்திரன் மேல் எறிந்தான். இந்திரனின் வஜ்ராயுதம் அதைத் தடுத்தது. அந்த ஓசையில் கோளங்கள் அதிர்ந்து தடம்மாறின. விண்மீன்கள் நடுங்கி அதிர்ந்தன. ஆயிரம்கோடி உலகங்களில் இடியோசையுடன் பெரும்புயல் எழுந்தது.
‘இது என் பாதை விலகு, இல்லையேல் உன்னை அழிப்பேன்’ என இருவரும் அறைகூவினர். அக்குரல்கேட்டு திசைத்தெய்வங்கள் அவர்களைச் சுற்றிக் கூடினர். யமனும் வருணனும் வாயுவும் அவர்களுடன் போரில் இணைந்துகொண்டனர். தேவர்களனைவரும் தங்கள் ஆயுதங்களுடன் அப்போரில் படைதிரண்டனர்.
விண்வெளி புழுதியால் நிறைய, படைக்கலங்களின் ஒளி கோடானுகோடி மின்னல்களாக நெளிந்துபரவ, அவை மோதும் இடியோசை திசைகளை நிறைக்க அப்பெரும்போர் நிகழ்ந்தது. முடிவில்லா ஆற்றல் கொண்ட தேவர்களின் போரில் காலம் ஒரு பாறையாக மாறி சான்றாக அமர்ந்திருந்தது.
விண்ணில் ஓடிய பெருந்தேர்களின் சக்கரங்களுக்குள் புகுந்து அவற்றை திசைமாற்றியும் மோதவிட்டும் துவாபரன் தன் ஆடலை நிகழ்த்திக்கொண்டிருந்தான். வெற்றியும் தோல்வியும் தன் விளையாட்டே என அவன் சிரித்துக்கொண்டான்.
சூரியனின் வெண்கால் சக்கரத்தில் இருந்து யமனின் கருங்கால் சக்கரத்தை நோக்கித் தெறிக்கையில் மேருவின் சிகரமுனையில் மோதி அவன் சரிந்து வானில் இருந்து உதிரலானான். வானம்கிழிபடும் பேரொலியுடன் அலறியபடி கோடியோஜனை தொலைவுள்ள செஞ்சுடராக எரிந்தபடி அவன் மண்ணில் வந்துவிழுந்தான்.
அவன் விழுந்ததைக் கண்டனர் விண்ணகத்தின் மாவீரர்கள். இனி நம் ஆடல் அந்த மண்ணில் என்று சூரியன் சொன்னான். ஆம் என்றான் இந்திரன், ஆம் ஆம் என்றனர் பிறதேவர்கள். ஆம் ஆம் ஆம் என பேரொலியுடன் எதிரொலித்தன திசைகள்.
துடியோசை உச்சவிரைவு கொள்ள கைகளும் கால்களும் வெறியில் துடித்தெழ சூதர் எழுந்து நடனமிட்டார். ‘இனி மண்ணில் நிகழும் பெரும்போர். அலகிலா ஆற்றல்களின் தேர்விளையாடல். ஐந்து பெருங்குளங்களும் ஐந்துமுறை மீண்டும் குருதியால் நிறையும். செங்குருதி! உடல்களுக்குள் எரியும் நெருப்பு! காமமும் குரோதமும் மோகமும் சுழிக்கும் பெருநதி! விண்ணகத்தின் விசைகள் அனைத்தையும் தன்னுள் கரைத்திருக்கும் வானோரின் அமுதம்!’
சூதரின் குரல் எழுந்தது. ‘காலமே, வெளியே, அழிவின்மையே குருதியாகி வருக! அறமே, கனவே, மகத்தான எண்ணங்களே குருதியாகி வருக! தெய்வங்களே தேவர்களே பாதாளநாகங்களே குருதியாகி வருக!’
இடிக்கின்றது கீழ்த்திசை! வெள்ளியென மின்னி அதிர்கின்றது மேல்திசை! மழை மழை என குளிர்கின்றது தென்திசை! மண்பூத்து மணக்கின்றது வடதிசை! வருகிறது உதிரமழை! ஆம், உதிரமழை!
சன்னதம் விலகி அவர் பின்னால் சாய்ந்து விழுந்ததைப் பார்த்தபடி ஆறு சூதர்களும் அந்த ஐந்து குளங்களின் கரையில் அமைதியில் ஆழ்ந்து அமர்ந்திருந்தனர்.