அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

3/13/14

பகுதி ஒன்று : வேழாம்பல் தவம் [ 3 ]

கிருதயுகத்தில் கங்கை ஓடிய பள்ளத்தின் விளிம்பில் இருந்தது அஸ்தினபுரி. மறுமுனையில் கங்கையின் கரையாக இருந்த மேட்டில் நின்றுகொண்டு நகரின் கோட்டையைப் பார்த்தபோது பீஷ்மர் அந்நகரம் ஒரு வேழாம்பல் பறவை போல வாய்திறந்து மழைக்காகக் காத்திருப்பதுபோல உணர்ந்தார். சுற்றிலும் கோடையைத் தாண்டிவந்த காடு வாடிச்சோர்ந்து சூழ்ந்திருந்தது. பெரும்பாலான செடிகளும் மரங்களும் கீழ்இலைகளை உதிர்த்து எஞ்சிய இலைகள் நீர்வற்றி தொய்ய நின்றிருந்தன.
இலைத்தழைப்பு குறைந்தமையால் குறுங்காடு வெறுமை கொண்டதுபோல ஒளியை உள்ளே விட்டு நின்றது, இரட்டைக் குழந்தைகளுக்கு முலையூட்டியமையால் கண்வெளுத்து பசலைபடர்ந்த தாயைப்போல. தரையெங்கும் எறும்புகள் விதவிதமான வெண்புல்லரிசிகளுடன் நிரைவகுத்துச் சென்றுகொண்டிருந்தன. அடிமரங்களில் செம்புற்றுக் கிளைகளை விரித்தேறியிருந்தன சிதல்கள். அப்பால் ஏதோ பறவை ஊப் ஊப் என ஏங்கியது.
இந்நகரம் ஏன் எனக்குள் மதலையை நோக்கும் அன்னையின் கனிவை நிறைக்கிறது? இதோ என் முன் விரிந்து நிற்கும் இது என்ன? கற்கோட்டைக்குள், மண்வீடுகளில், தசைமனிதர் செறிந்த குவை. பிறந்தும் இறந்தும், நினைத்தும் மறந்தும், சிரித்தும் வெறுத்தும் இருந்து மறையும் எளிய வாழ்க்கைகள். சிற்றெறும்புப் புற்றுகளென மானுடர் இரவுபகல் தேடிச்சேர்த்தவற்றாலான வளை. புராணங்களின் பெயர்க்கடலில் ஒரு சொல். தெய்வங்கள் குனிந்துநோக்கும் மானுடச் சிறுபுரி.
இப்புவியில் எத்தனையோ நகரங்கள். வண்ண ஒளிவிடும் காலக்குமிழிகள். வரலாறு விரல்தொட்டு மீட்டும் சிறுபறைகள். எதிர்காலப்பறவை இட்டு அடைகாக்கும் சிறுமுட்டைகள். நகரம் மானுட இழிமைகளை அள்ளிவைத்த சிறு கிண்ணம். அழுக்கு ஒழுகும் நரம்புகளோடும் உடல்கொண்ட குருட்டு மிருகம். ஏணிகளின் திறப்பில் நாகங்கள் வாய்திறந்து நிற்கும் பரமபதக்களம்.
தூயதென எந்நகராவது மண்ணிலுண்டா என்ன? நகரங்களை அழகுறச்செய்வதே அவற்றில் நுரைக்கும் கீழ்மைகள் தானோ? அதனால்தான் அத்தனை நகரங்களும் இரவில் உயிர்த்துடிப்பு கொள்கின்றனவா? ஒருவரை இன்னொருவர் மறைக்க எதையும் எவரும் செய்யலாகும் ஒரு சிறுவெளியன்றி நகரங்கள் வேறென்ன?
ஆனால் இது இல்லையேல் நான் இல்லை. இந்த நகர் வடிவில் நான் என் அகத்தை விரித்துக்கொள்கிறேன். இது என் களம். எங்குசென்றாலும் என் நகரை சுமந்து செல்கிறேன். இதை ஒருநாளும் நான் இறக்கி வைக்கப்போவதில்லை. தலைக்குமேல் பறவைக்குரல்களைச் சூடி நிற்கும் முதுமரம்போல இந்நகரை நான் ஏந்தியிருக்கிறேன். ஆம். இது என் நகரம்.
நீண்டதாடியும் குழல்கற்றைகளுமாக வெயிலில் கருகிய உடலுடன் புழுதிபடிந்த பாதங்களுடன் அஸ்தினபுரியின் கோட்டைக்கு முன் வந்து நின்ற பீஷ்மரை காவலர்கள் அடையாளம் காணவில்லை. அவரிடம் “வீரரே தாங்கள்…” என பேசத்தொடங்கிய வீரன் அவரது கண்களைக் கண்டதும் தயங்கி “…தாங்கள்” என்றபின் கண்கள் உயிர்கொண்டு வணங்கி “பிதாமகரே அஸ்தினபுரிக்கு நல்வரவு” என்றான்.
அவன் ஓடிச்சென்று “பிதாமகர்!” என்று கூவியதுமே கோட்டைக்குமேல் அவரது மீன்கொடி ஏறத்தொடங்கியது. கோட்டை புத்துயிர்பெற்றதுபோல ஒலிகள் கலைந்து எழுந்தன. உள்ளிருந்து இரட்டைக்குதிரை பூட்டப்பட்ட ஒரு குறுந்தேர் அவரை நோக்கி வந்தது.
வணக்கங்களை ஏற்று, ஒவ்வொரு வீரனிடமும் தனித்தனியாக சிலசொற்கள் சொல்லி நலம் உசாவி, பீஷ்மர் ரதத்தில் ஏறிக்கொண்டார். நகரம் முழுக்க கோடைகாலத்தில் ரதங்கள் கிளப்பிய புழுதி படிந்திருந்தது. மரங்களின் இலைத் தகடுகளில், மாளிகைக் கூரைகளில் சுவர்களின் விளிம்புகளில் எங்கும். அனைத்து மரங்களும் இலைகள் உதிர்த்திருக்க புங்கம் மட்டும் தழைத்து தளிர்த்து இலையொளிர நின்றது. மாதவிப்பந்தல்களில் வெண்ணிற விண்மீன்கள் என மலர்கள் செறிந்திருந்தன.
பீஷ்மரின் படைச்சாலையில் அவர் வரும் செய்தி ஏற்கனவே சென்று சேர்ந்து ஹரிசேனன் தலைமையில் மாணவர்கள் முற்றத்திலேயே நின்றிருந்தனர். அவர் இறங்கியதும் ஹரிசேனன் வந்து பணிந்தான். “நான் நீராடவேண்டும்” என்று பீஷ்மர் சுருக்கமாகச் சொன்னார். “உடனே அரண்மனைக்குச் சென்று பேரரசியை சந்திக்கவேண்டும்.”
ஹரிசேனன் ஆணைகளை விடுத்தபடி முன்னால் ஓடினான். அவர் கிளம்பியபோதிருந்தபடியே இருந்தது அறை. ஆனால் அனைத்துப்பொருட்களும் ஒவ்வொருநாளும் துடைத்து சுத்தம்செய்யப்பட்டிருந்தன. பீஷ்மர் தனக்குப்பிடித்த குத்துவாளை எடுத்து அதன் பளபளப்பில் தன் முகத்தைப்பார்த்தார். அவரை அவராலேயே அடையாளம் காணமுடியவில்லை. சென்ற பதினேழு வருடங்களில் எத்தனைமுறை தன்னை ஆடியில் பார்த்துக்கொண்டோம் என எண்ணிக்கொண்டார்.
VENMURASU_EPI_53_A
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
அவர் குளித்து புத்தாடையணிந்து நீர்சொட்டும் குழலும் தாடியுமாக ரதத்தில் ஏறிக்கொண்டபின் ஹரிசேனனைப்பார்த்து அவனையும் ஏறிக்கொள்ள சைகை காட்டினார். ரதம் உருளத்தொடங்கியதும் அவர் எதிர்பார்த்திருந்ததை அவன் சொல்லத் தொடங்கினான். அவனைப்பாராமல் நகரை நோக்கி அமர்ந்தபடி அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.
பீஷ்மர் கிளம்பிச்சென்றபின் நடந்ததை அவன் விவரித்தான். அவர் கங்காமுகத்துக்கும் அங்கிருந்து பிரியதர்சினிக் கரைக்கும் சென்றதை அஸ்தினபுரியின் மக்கள் அறிந்திருந்தனர். அதன்பின்னர் அவரை ஒற்றர்கள் மட்டுமே தொடர்ந்தனர். அவர் சப்தசிந்துவைக் கடந்து மூலத்தானநகரிக்குச் சென்றதும் அங்கிருந்து சிபிநாட்டை அடைந்ததும் எல்லாம் அவர் அங்கிருந்து கிளம்பியபின்னரே தெரியவந்தது. பின்னர் மீண்டும் அவர் மறைந்து விட்டார். அவர் தேவபாலபுரத்திலிருக்கும் செய்தி கடைசியாக வந்தது. அதை அறிந்ததுமே பேரரசி உடனே வரச்சொல்லி செய்தி அனுப்பிவிட்டார்.
“பேரரசி இரண்டு ஆண்டுகளாகவே தங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் ஹரிசேனன். “அரண்மனையில் என்ன நிகழ்கிறதென்று தெரியவில்லை. ஆனால் அரண்மனைக்குள் பெண்களுக்குள் மோதல்களும் கசப்புகளும் இருப்பதாக அரண்மனைச்சூதர்கள் வழியாக வெளியே பேச்சு கிளம்பியிருக்கிறது. பேரரசி அதனால் கவலைகொண்டிருக்கிறார்கள்.” பீஷ்மர் “அது நான் ஊகித்ததே” என்றார்.
“இரு இளவரசர்களுமே இருவகையில் குறைபாடுள்ளவர்கள். மூத்த இளவரசர் பார்வையற்றவர். அந்தப்பார்வையின்மை மெதுவாக அவரது அன்னையாகிய காசிநாட்டின் மூத்த இளவரசியிடமும் குடியேறிவிட்டது என்று ஒரு சூதர் பாடுவதைக் கேட்டேன்” என்றான் ஹரிசேனன்.
பீஷ்மர் புன்னகைசெய்து “நெருக்கமானவர்களின் குறைபாடுகள் நம்மையும் மாற்றியமைக்கின்றன. அவர்களை நேசித்து அவர்களையே எப்போதும் எண்ணி அவர்களுடன் வாழ்வதன் வழியாக நாம் அவர்களை பிரதிபலிக்கத் தொடங்குகிறோம்” என்றார்.
“மூத்த அரசியார் மைந்தனைப்பற்றிய எந்த முறையீட்டையும் ஏற்றுக்கொள்வதில்லை. முறையிடுபவர்களை அவர் வெறுக்கிறார். சினந்து தண்டிக்கிறார்” என்றான் ஹரிசேனன். “அதற்கேற்ப மூத்த இளவரசர் மூர்க்கமே இயல்பாகக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருவரும் தன்னை தானறியாமல் எள்ளிநகையாடுவதாக நினைக்கிறார். தன்னை அனைவரும் ஏமாற்றுவதாக கற்பனை செய்துகொள்கிறார். ஆகவே அருகிருப்பவர்கள் அனைவரையும் வதைக்கிறார். எந்நேரமும் வசைபாடுவதும் அருகே சென்றால் அடிப்பதும்தான் அவரது இயல்பாக இருக்கிறது.”
ஹரிசேனன் சொன்னான் “அவரது உடலைக் கண்டு அரண்மனையில் அனைவரும் அஞ்சுகிறார்கள். குன்றுபோலிருக்கிறார். தங்களுக்கு நிகரான உருவம். தங்களை விட மும்மடங்கு எடை. அவரது கைகளால் ஒரேயொரு அடி வாங்கியவர்கள்கூட எலும்பு முறிந்து உயிர்விட்டிருக்கிறார்கள். பெண்களை அவர் அடிப்பதில்லை என்பதனால் இப்போது பெண்கள் மட்டுமே அவர் அருகே செல்கிறார்கள்.”
பீஷ்மர் தலையை அசைத்தார். “இளையவர் அன்னையின் விளையாட்டுப்பாவையாக இருக்கிறார். அந்தப்புரம் விட்டு அவர் இன்னும் வெளிவரவில்லை. அங்கேயே அன்னை அவருக்கு தோட்டமும் குளமும் ஊஞ்சலும் அமைத்திருக்கிறார். அன்னையுடனும் அவர் சேடியருடனும் பகலெல்லாம் அரண்மனைக்குள் இருந்து விளையாடுகிறார். இரவில் வெய்யோனொளி மறைந்தபின்னர் வெளியே வந்து அன்னையுடன் உபவனங்களுக்குச் செல்கிறார். பெண்களைப்போல மலர்கொய்தும் நாணலால் மீன்களைப் பிடித்தும் மரக்கிளைகளில் ஆடியும் விளையாடுகிறார்.”
“அவரது உடல் பாளைக்குருத்து போலிருக்கிறது. வெளிறி வெண்ணிறமாக. அவருக்குள் குருதியும் வெண்ணிறமாகவே ஓடுகிறது என்கிறார்கள் ஊரார். அவர் உடலில் வெயிலொளி பட்டால் புண்ணாகிவிடுகிறது. அவரது கண்கள் பட்டுப்புழுக் கூடுகளைப்போல மஞ்சளாக இருக்கின்றன. அவரால் இருளில்தான் நன்கு பார்க்கமுடிகிறது. அரண்மனைச் சாளரங்களை சற்றே திறந்தால்கூட அவர் கண்ணீர்விட்டு கண்களை மூடிக்கொள்கிறார். அவரது அன்னையுடன் மட்டுமே இரவும் பகலும் பேசிமகிழ்கிறார்” ஹரிசேனன் தொடர்ந்தான்.
பீஷ்மர் வெளியே சென்றுகொண்டிருந்த மாளிகைகளை நோக்கியபடி சிந்தனையில் மூழ்கியிருந்தார். பின்பு “அவர்களின் கல்வி?” என்றார். ஹரிசேனன் “மூத்தவர் கதாயுதத்தால் பயிற்சி செய்வார். ஆனால் அவர் அருகே எவரும் செல்வதில்லை. அவரது தோள்வல்லமை அரக்கர்களைவிட பலமடங்கு. அரண்மனையின் கற்தூணை ஒருமுறை அடித்து உடைத்துவிட்டார்” ஹரிசேனன் குரல் தாழ்ந்தது. “அவர் உணவுண்ணும்போதும் பயிற்சி செய்யும்போதும் நெருப்பு போலிருக்கிறார் குருநாதரே. அவரால் நிறுத்திக்கொள்ளமுடியாது. ஒவ்வொரு கணமும் வெறி ஏறி ஏறி வரும். அருகே நிற்பவர்கள் அனைவரும் அஞ்சி விலகிவிடுவார்கள். அவரது அன்னைமட்டுமே அவரை கட்டுப்படுத்தி திருப்பமுடியும்.”
பீஷ்மரைப் பார்த்துவிட்டு ஹரிசேனன் தொடர்ந்தான் “மூத்தவருக்கு ஆசிரியர்கள் எவரும் கல்வி கற்பிக்க முன்வரவில்லை. அவருக்கு கற்பிப்பதெப்படி என அவர்களுக்குத் தெரியவில்லை. அவர் அவர்களிடம் கேட்கும் வினாக்கள் ஏதும் அவர்களால் பதிலிறுக்கத் தக்கவையாக இல்லை. பதில் வராதபோது அவர் பொறுமையிழக்கிறார். இறுதியாக அவருக்கு எழுத்தறிவித்த பிராமணரான சந்திரசர்மரை அருகே இருந்த ஊஞ்சலை சங்கிலியுடன் பிடுங்கி எடுத்து அறைந்தார். அவர் சற்று விலகியிருந்தமையால் உயிர்தப்பினார். மூத்தவருக்கு அதன்பின் அரசி மட்டும்தான் எண்ணும் எழுத்தும் கற்பிக்கிறார். அவருக்கு அவற்றைக் கற்பிக்கும் விதமென்ன என்று அரசிக்கு மட்டுமே தெரிகிறது.”
“இளையவர்?” என்றார் பீஷ்மர். “இளையவருக்கும் கல்வியில் ஈடுபாடில்லை. அவரது அன்னை அவரை கல்விகற்க அனுமதிப்பதுமில்லை. அவர்களே எண்ணும் எழுத்தும் சொல்லித்தந்திருக்கிறார்கள். விழித்திருக்கும் நேரமெல்லாம் அவர் தன் அன்னையுடன் விளையாடுகிறார். கல்வி கற்பிக்கச்செல்லும் பிராமணர்கள் நாளெல்லாம் காத்திருப்பார்கள். அன்னை வந்து அவர்களை திரும்பிச்செல்லும்படி சொல்வார்.” பீஷ்மர் ஏதோ நினைத்துக்கொண்டு பெரிதாகப் புன்னகை செய்தார். பின்பு “பேரரசி ஏதும் செய்வதில்லையா?” என்றார்.
“பேரரசிக்கும் இரு இளவரசர்களுக்கும் தொடர்பே இல்லை. அன்னையர் இருவரும் அவர்களை தங்கள் சிறகுகளுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிறிய இளவரசருக்கு பேரரசி ஏழுவயதில் ஆயுதப்பயிற்சிக்கு ஒருங்கு செய்தார். விக்ரமசேனர் என்னும் குரு அதற்கு பணிக்கப்பட்டார். முதல்நாளிலேயே கூரற்ற சுரிகை முனையால் தன் முழங்கையைக் கிழித்துக்கொண்டார். குருதி நிலைக்கவேயில்லை. அன்றிரவு கடும் காய்ச்சலும் வலிப்பும் வந்துவிட்டது. பன்னிருநாட்கள் மருத்துவர்கள் முயன்றுதான் அவரை மீட்டனர். தன் குழந்தையை பேரரசி கொல்லமுயல்கிறார்கள் என்று சிறிய அரசி குற்றம்சாட்டினார். ஏழுநாட்கள் உணவு அருந்தாமல் நோன்பெடுத்தார். பேரரசியே வந்து பிழைபொறுக்கும்படிச் சொன்னபின்னரே இறங்கிவந்தார்.”
பீஷ்மர் பெருமூச்சுடன் “அவர்களிருவருக்கும் எதிலாவது ஈடுபாடோ தேர்ச்சியோ இருக்கிறதா?” என்றார். ஹரிசேனன் “மூத்தவருக்கு அன்னையின் கொடையாக வந்தது இசைப்பற்று. அவர் விழித்திருக்கும் நேரமெல்லாம் அருகே சூதர்கள் அமர்ந்து பாடிக்கொண்டிருக்கிறார்கள். அவரே யாழை சிறப்பாக வாசிப்பார். இசையில் முழுமையாகவே மூழ்கி அவர் அமர்ந்திருப்பதைக் கண்டால் கந்தர்வர் என்றே தோன்றும்” என்றான்.
“இளையவருக்கு அவரது அன்னை சித்திரமெழுதக் கற்பித்திருக்கிறார்” ஹரிசேனன் சொன்னான். “அந்தப்புரமெங்கும் திரைகளில் வண்ணங்களை நிறைத்து வைத்திருக்கிறார்.” பீஷ்மர் சிரித்து “அவன் பார்க்கமுடியாத நிறங்களை…” என்றார். “ஆம் குருநாதரே, அவரது வாழ்க்கையின் நிறங்களெல்லாம் அந்தத் திரையில் விரிபவைதான்” என்றான்.
ரதம் அரண்மனை முகப்பில் சென்று நின்றது. பீஷ்மர் இறங்கி நின்றதும் நினைத்துக்கொண்டு “அந்த சூதப்பெண்ணின் குழந்தை?” என்றார். “அவர் பெரும்பாலும் பேரரசியின் அந்தரங்கப் பணியாள் போலவே இருக்கிறார். சூதர்களின் ஞானமெல்லாம் அவருக்கு கற்பிக்கப்பட்டது. அதன்பின் பேரரசியே அவருக்கு ஆட்சிக்கலையும் நெறிநூல்களும் நிதியாள்கையும் கற்பித்தார்கள். இன்று அஸ்தினபுரியின் உண்மையான ஆட்சியாளரே அவர்தான் என்று மக்கள் நினைக்கிறார்கள்.”
பீஷ்மர் மெல்ல தலையசைத்துவிட்டு நடந்தார். அரண்மனை முகப்பில் காத்து நின்றிருந்த அமைச்சர் பலபத்ரர் ஓடிவந்து வணங்கி “பிதாமகரை வணங்குகிறேன்… தங்கள் பாதங்களின் ஆசி இவ்வரண்மனையை இன்று நிறைவுகொள்ளச் செய்கிறது” என்றார். “பேரரசியை நான் சந்திக்கவேண்டும்” என்று பீஷ்மர் சொன்னார். “தாங்கள் மாலைவருவதாக பேரரசி சொன்னார்கள். தற்போது ஓய்வெடுக்கிறார்கள்” என்றார் பலபத்ரர். “நான் பேரரசியின் முதற்சேடியிடம் தங்கள் வருகையைத் தெரிவிக்கிறேன்.” பீஷ்மர் தலையசைத்துவிட்டு முகமண்டபம் சென்று அங்கிருந்த ஆசனத்தில் அமர்ந்துகொண்டார்.
பலபத்ரர் உள்ளே ஓடிச்சென்றுவிட்டு திரும்பிவந்து “பிதாமகரே, தாங்கள் அனுமதித்தால் சிற்றமைச்சரான விதுரர் தங்களை சந்திக்க விரும்புகிறார்” என்றார். வரச்சொல்லும்படி பீஷ்மர் கையை அசைத்ததும் விதுரன் உள்ளே வந்தான். வாசலிலேயே நின்று இருகைகளையும் தலைமேல் தூக்கி “பிதாமகருக்கு எளியவனின் முழுதுடல் வணக்கம். தங்கள் ஆசியால் என் ஞானம் பொலியட்டும்” என்றான்.
அவனைக் கண்டதும் பீஷ்மர் திகைத்தவர்போல எழுந்துவிட்டார். கிருஷ்ணதுவைபாயன வியாசனே இளம் வடிவுகொண்டதுபோல அவன் நின்றான். கண்கள் தெளிந்து அகன்று ஞானமும் குழந்தைத்தன்மையும் ஒன்றுகலந்தவையாகத் தெரிந்தன. காராமணிப்பயறு போன்ற பளபளக்கும் கரிய நிறம். கூரிய நாசியும் சிறிய உதடுகளும் கொண்ட நீள்வட்ட முகம். மெலிந்த தோள்களில் புரண்ட சுரிகுழல். மெல்லியதாடி கருங்குருவி இறகுபோல மென்மையாக பிசிறிட்டு நின்றது. புன்னகையில் ஒளிவிட்ட சீரான உப்புப்பரல் பற்கள். அவரை அறியாமல் இரு கைகளும் நீண்டன.
விதுரன் அருகே வந்து அவர் கால்களைப் பணிந்தான். அவர் அவன் இரு தோள்களையும் பற்றித் தூக்கி தன்னுடன் அணைத்துக்கொண்டு “நான் உன் பெரியதந்தை. அந்நிலையில் இந்த ஒரே வணக்கத்திலேயே என் முழு ஆசியையும் உனக்களித்துவிட்டேன். இனி எப்போதும் நீ என்னை பணிந்து வணங்கலாகாது” என்றார். “நீ என் தமையனின் இளவடிவம். நான் என் நெஞ்சில் வணங்கும் கண்கள் உன்னுடையவை. என்னை நீ வணங்குகையில் என் அகம் கூசுகிறது.” விதுரன் புன்னகையுடன் “அவ்வாறே ஆகட்டும் பிதாமகரே” என்றான்.
பலபத்ரரிடம் செல்லும்படி கையசைத்துவிட்டு விதுரனை அருகே அமரச்செய்தார் பீஷ்மர். “இளையவனே, அஸ்தினபுரியின் நிலை என்ன?” என்றார். விதுரன் “நிதியும் நியதியும் சிறப்பாகவே நிகழ்கின்றன பிதாமகரே” என்றான். “அரசுநிலை மேலும் இக்கட்டுகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.” பீஷ்மர் அவனைக் கூர்ந்து நோக்கி “நீ என்ன புரிந்துகொண்டாய், அதைச்சொல்” என்றார்.
“பிதாமகரே, தாங்களறியாதது அல்ல. என் புரிதலை நான் சொல்வது தங்களிடமிருந்து கற்க வேண்டுமென்பதற்காகவே” என்றான் விதுரன். “பாரதவர்ஷத்தில் அரசுகள் அமைந்த வரலாறு புராணங்கள் வழியாகவே நமக்கு அறியக்கிடைக்கிறது. இமயம் முதல் குமரிவரை காமரூபம் முதல் காந்தாரம் வரை விரிந்திருக்கும் ஜம்புத்வீபத்தில் ஒவ்வொரு இடத்திலும் படைப்புக்காலம் முதல் மக்கள் வாழ்ந்திருந்தார்கள் என்கின்றன புராணங்கள். அக்குலங்கள் ஒன்றுடன் ஒன்று போர்புரிந்து கொன்றழித்தபடி பல்லாயிரமாண்டுகள் வாழ்ந்தன. பாரதவர்ஷம் வாழவேண்டுமென எண்ணிய ரிஷிகளால் ஷத்ரியகுலம் உருவாக்கப்பட்டது. அவர்கள் குலங்களைத் தொகுத்து அரசுகளாக ஆக்கினார்கள்.”
விதுரன் சொன்னான். சுக்ரசம்ஹிதையின்படி கிருதயுகத்தில் பாரத வர்ஷத்தில் ஒருலட்சத்து நாற்பத்தி ஒன்றாயிரம் குலங்கள் இருந்தன. அக்குலங்களில் ஷத்ரியர்களை உருவாக்கிக்கொண்ட வலிமையான குலங்கள் பிறகுலங்களை வென்று தங்களுக்குள் இணைத்துக்கொண்டன. அவ்வாறு கிருதயுகத்தின் முடிவில் அக்குலங்களில் இருந்து ஏழாயிரம் அரசுகள் உருவாகிவந்தன. அவற்றிலிருந்து ஆயிரத்து எட்டு ஷத்ரிய அரசுகள் உருவாயின. அவற்றிலிருந்து இன்றுள்ள அரசுகள் உருவாகி வந்திருக்கின்றன” என்றான் விதுரன்.
ஒவ்வொரு அரசுக்கும் ஒரு குலவரலாறு உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சுருதி உருவாகி அன்றிருக்கும் வல்லமைவாய்ந்த அரசர்களை ஷத்ரியர்கள் என அடையாளப்படுத்துகிறது. அந்த சுருதியை அந்த ஷத்ரியர்கள் மாற்றக்கூடாத நெறிநூலாக நினைக்கிறார்கள். வேறு அரசர்கள் உருவாகி வருவதை அவர்கள் விரும்புவதில்லை. ஒன்றுகூடி அவ்வரசை அவர்கள் அழிக்கிறார்கள். அந்த ஜனபதத்தை தங்களுக்குள் அவர்கள் பங்கிட்டுக்கொள்கிறார்கள்.
ஷத்ரியர்கள் இல்லாமல் பாரதவர்ஷம் என்னும் இந்த விராட ஜனபதம் வாழமுடியாது. குலங்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்கி நிலைநாட்ட ஷத்ரியர்களின் வாள்வல்லமையால்தான் முடியும். பாரதவர்ஷத்தின் வளர்ச்சி ரிஷிகளின் சொல்வல்லமையை வாள் வல்லமையால் நிலைநாட்டிய ஷத்ரியர்களினால்தான். அவர்களின்றி வேள்வியும் ஞானமும் இல்லை. வேளாண்மையும் வணிகமும் இல்லை. நீதியும் உடைமையும் இல்லை. அவர்களின் குருதியால் முளைத்ததே பாரதவர்ஷத்தின் தர்மங்களனைத்தும்.
ஷத்ரியர்கள் கருக்குழவியை மூடியிருக்கும் கருவறைபோன்றவர்கள். ஊட்டி வளர்த்து பாதுகாப்பவர்கள். ஆனால் கருமுதிர்ந்ததும் அதைப்பிளந்துகொண்டுதான் குழந்தை வெளிவரமுடியும். பிதாமகரே, பாரதவர்ஷம் பலமுறை புதுப்பிறவி எடுத்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் அது ஷத்ரியர்களை அழித்தபின்னர்தான் வெளிவந்துள்ளது. கடைசியாக பரசுராமர் பாரதவர்ஷத்தை இருபத்தொருமுறை சுற்றிவந்து ஷத்ரியகுலத்தை அழித்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. அவ்வாறு அழித்த பாவத்தைக் கழுவும்பொருட்டு சமந்தபஞ்சகத்தில் ஐந்து குளங்களை அமைத்தார். இன்று அக்குளங்களில் மூழ்கி தங்கள் பாவங்களைக் கரைக்க மக்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
பரசுராமர் ஷத்ரியகுலத்தை அழித்தது காட்டைமூடி ஓங்கி நின்றிருக்கும் முதுமரங்களை காட்டுத்தீ அழிப்பதற்கு நிகரானதுதான். அம்மரங்களின் நிழலில் குறுகி உயிரற்றிருக்கும் பல்லாயிரம் சிறிய மரங்கள் புதுவேகம் கொண்டு வான் நோக்கி எழும். காடு தன்னை புதுப்பித்துக்கொண்டு பொலிவுபெறும். பரசுராமர் ஷத்ரியகுலத்தை கருவறுத்தபின்னர்தான் எஞ்சிய மூலகன் என்னும் மன்னனின் குலமரபில் இன்றுள்ள ஐம்பத்தாறு ஷத்ரியகுலங்களும் பாரதவர்ஷத்தில் உருவானார்கள் என்கின்றன புராணங்கள். அவர்கள் இதுவரை தங்கள் அறத்தாலும் கருணையாலும் இம்மண்ணை வாழவைத்தார்கள் என்று விதுரன் சொன்னான். “இன்று இன்னொரு வனநெருப்பு வரவேண்டிய காலம் வந்துள்ளது.”
பீஷ்மர் புன்னகையுடன் “உன் பேரரசியிடமிருந்து பாடங்களை முழுமையாகவே கற்றிருக்கிறாய்” என்றார். “ஆம், பாரதவர்ஷத்தில் இந்த உண்மையை முதலில் உணர்ந்தவர் அஸ்தினபுரியின் பேரரசி சத்யவதிதான். அவரது அனைத்துத் திட்டங்களும் கனவுகளும் இந்த அடித்தளத்தின் மீது அமைந்தவையே. பெரும் போர் ஒன்று வரவிருக்கிறது. அதில் பழைய ஷத்ரியகுலங்கள் ஆற்றல் குன்றும். சிறிய குலங்கள் அழியும். அந்த இடத்தில் புத்தம்புதிய அரசுகள் உருவாகிவரும். பாரதம் புதியபொலிவுடன் வளர்ந்தெழும்” என்றான் விதுரன். “அந்த வனநெருப்பை மீறி வளர்ந்தெழும் வல்லமை கொண்டதாக தன் குலம் இருக்கவேண்டுமென பேரரசி விரும்புகிறார்கள்.”
“இளையவனே, அந்த வனநெருப்புக்குப் பின்னர் பாரதவர்ஷத்தில் உருவாகிவரும் அரசுகள் என்னவாக இருக்கும்?” விதுரன் “இன்று எதைச் சொல்லமுடியும் பிதாமகரே? ஒவ்வொரு விதைக்குள்ளும் வாழவேண்டுமென்ற இச்சை நிறைந்துள்ளது. வாழ்வெனும் சமரில் அவை தங்கள் வழியை கண்டுகொள்கின்றன” என்றான். “சப்தசிந்துவின் ஷத்ரியர்களை இந்திரன் அழிந்தபின்னர் கங்கையின் பதினாறு மகாஜனபதங்கள் உருவாகிவந்தன. பரசுராமருக்குப்பின் ஐம்பத்தாறு ஷத்ரியகுலங்கள் இன்றுள்ளன. வரவிருக்கும் போருக்குப்பின் அவற்றில் ஏழு மட்டுமே எஞ்சுமென எண்ணுகிறேன். அவையும் புண்பட்ட சிம்மங்கள் போல இறந்துகொண்டிருக்கும்.”
விதுரன் சொன்னான் “இன்று நாம் எதையும் திட்டவட்டமாகச் சொல்லமுடியாது. ஆனால் நிலத்தையும் நதிகளையும் வைத்து வேளாண்மையை கணிக்கமுடியும். ஜனபதங்களின் செறிவை வைத்து படைபலத்தை கணிக்கமுடியும். துறைகளையும் சாலைகளையும் கொண்டு வணிகத்தை கணிக்கமுடியும். அப்படி நோக்கினால் புதிய பேரரசாக மகதம் எழுந்துவரக்கூடும். அடுத்த சிலநூற்றாண்டுகளுக்கு மகதம் உத்தர பாரதவர்ஷத்தை முழுக்க ஒருகுடைக்கீழ் ஆளலாம்.”
பீஷ்மர் அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார். அவனைக் கண்டதும் அவன் விழிகள் வியாசரின் விழிகளைப் போலிருப்பதை உணர்ந்தது ஏன் என அப்போது தெரிந்தது. அவை காலத்தைத் தாண்டி பார்க்கும் வல்லமை கொண்டவை.
“பாரதவர்ஷத்தின் மாபெரும் பழங்குடிகளில் இருந்துகூட பேரரசுகள் உருவாகலாம். இன்று இருபத்துநான்கு குலங்களாகப் பிரிந்திருக்கும் மூரா மக்கள் இணைந்தால் அவர்களிடமிருந்து பாரதத்தையே அணைத்து ஆளும் பேரரசு ஒன்று பிறக்கலாம்” என்றான் விதுரன். “விந்தியனுக்குத் தெற்கே வேசரத்தில் இன்று சிற்றரசுகளாக ஷத்ரியர்களுக்கு அஞ்சிவாழும் சதகர்ணிகள் ஆற்றல்கொண்டு எழக்கூடும். கலிங்கமும் பேரரசாக வளரக்கூடும். தமிழ்நிலத்தில் முடியுடை மூவேந்தர்கள் சிற்றரசுகளை அழித்து முற்றதிகாரம் பெறக்கூடும்.”
“இந்தக் காட்டுத்தீ நலம்பயக்குமென்பதே என் கணிப்பு” என்று விதுரன் தொடர்ந்தான். “இன்றுள்ள ஷத்ரியகுலங்கள் சென்றகாலத்தின் இறுகிய நெறிகளால் கட்டுண்டவர்கள். நெடுநாள் குலவரலாறுமூலம் பெற்ற அணைக்கமுடியாத அகந்தை கொண்டவர்கள். ஆலமரத்தில் இட்ட இரும்புப்பட்டை போல இவர்கள் பாரதவர்ஷத்தை இறுக்குகிறார்கள். இவர்களின் அழிவில் உருவாகிவரும் புதிய ஷத்ரியகுலங்கள் தங்கள் ஞானத்தாலும் தோள்வல்லமையாலும் ஒற்றுமையின் விவேகத்தாலும் தாங்களே நிலங்களை வென்றவர்களாக இருப்பார்கள். ஆகவே பாரதவர்ஷம் கோரும் புதுக்குணங்களைக் கொண்டிருப்பார்கள்.”
“அத்துடன் இந்தச் சிறுசிறு ஷத்ரியகுலங்கள் அழிந்தபின் எழும் புதுஷத்ரியகுலங்கள் பேரரசுகளையே உருவாக்கும். இமயத்துக்கு அப்பால் பீதர்நிலத்தில் அவ்வாறு பெருநிலம் தழுவிய அரசுகள் உள்ளன என்கிறார்கள் பயணிகள். அவர்களின் படைகள் பற்பல லட்சம் வீரர்களைக் கொண்டவை. அத்தனைபெரிய படை இருந்தால் அதன் பின் போரே நிகழாது. சிறுகுலங்களும் சிற்றரசுகளும் செய்யும் முடிவிலா சிறுபூசல்களால்தான் பாரதவர்ஷம் அழிகிறது. அப்பூசல்கள் அனைத்தும் முற்றிலும் நின்றுபோகும். செல்வம் மேருவென அப்பேரரசுகளின் களஞ்சியங்களில் குவியும். அதைக்கொண்டு அவர்கள் நதிகளைத் தடம்மாற்றுவார்கள். ஏரிகளை அமைப்பார்கள். புதிய சாலைகளையும் துறைகளையும் கட்டுவார்கள். ஆலயங்களை எழுப்பி ஏராளமான புதிய ஜனபதங்களை நிறுவுவார்கள். பாரதம் பொலியும்.”
“ஆகவே ஒரு பெரும்போரை நிகழ்த்தும் விருப்புடன் இருக்கிறாய்” என்றார் பீஷ்மர். “காட்டுநெருப்பு எழாவிட்டால் பற்றவைக்கலாமென நினைக்கிறாய்?” விதுரன் “இல்லை பிதாமகரே, அந்நெருப்பில் இக்குலம் அழியாமல் வாழ்வதெப்படி என்று மட்டும் சிந்திக்கிறேன்” என்றான்.
பீஷ்மர் “இளையவனே, நீ சொல்வதெல்லாம் உண்மை. நானே எண்ணியவைதான் அவை. என் எண்ணத்தை உறுதிசெய்துகொள்ளவே பதினேழுவருடங்கள் பாரதவர்ஷத்தின் விளிம்புகளிலும் எல்லைகளிலும் பயணம் செய்தேன். திரேதாயுகம் முடிந்து புதியயுகம் ஒன்று பிறந்து வருவதை நான் என் கண்களால் கண்டேன். அதன் மொழி செல்வம். அதன் அறம் வணிகம். அதன் இலக்கு போகம். இங்கே ஷத்ரியர்கள் அதை அறியாமல் தங்கள் குலச்சண்டைகளுக்கு குடிகளை பலிகொடுத்து சேற்றில் முதலைகளைப்போல மாறிமாறி கடித்துத்தின்றபடி திளைக்கிறார்கள். அதுவும் உண்மை.”
விதுரன் தோளில் கைவைத்து பீஷ்மர் சொன்னார் “ஆனால் இவர்களெல்லாம் என் மைந்தர்கள், என் குலத்தோன்றல்கள். இவர்கள் என் கண்ணெதிரே அழிய நான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. நீ சொன்ன உண்மையை உணர்ந்த நாள் முதல் என் வாழ்க்கையின் நோன்பென நான் கொண்டிருப்பது ஒன்றே. போரைத்தவிர்த்தல். அதன்பொருட்டு நெறிகளையும் மீறுவேன். அதன்பலிபீடத்தில் கள்ளமற்ற சிலரை பலிகொடுக்கவேண்டுமென்றால் அதையும் செய்வேன். வரப்போகும் பேரழிவை தடுத்தேயாக வேண்டுமென்பதையே ஒவ்வொரு செயலிலும் எண்ணிக்கொள்கிறேன்.”
“மாமனிதர்களின் கனவு அது” என்றான் விதுரன். “விராடவடிவம் கொண்ட வரலாற்று வெள்ளத்துக்குக் குறுக்காக தங்களையே அணைகளாக அமைத்துக்கொள்கிறார்கள். அதன் வழியாக அவர்களும் பேருருவம் கொள்கிறார்கள்.”
பலபத்ரர் மெல்ல உள்ளே வந்து வணங்கி “பேரரசி எழுந்தருளிவிட்டார்” என்றார். பீஷ்மர் புன்னகையுடன் “உன் ஞானம் பாரதவர்ஷத்துக்குமேல் மழையெனப் பொழியும் மைந்தனே. அதன் சில துளிகள் இக்குலத்துக்கும் கிடைக்கட்டும்” என்றபின் வெளியே  நடந்தார்.