அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

1/4/14

மகாபாரதம் படிப்பது எப்படி திரு . எஸ். ராமகிருஷ்ணன்

மகாபாரதம்  முழுமையாகப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன், அதை எப்படித் துவங்குவது, என்ன புத்தகத்தை நீங்கள் சிபாரிசு செய்வீர்கள் என்று ஒரு நண்பர் கேட்டார்,
இதே கேள்விகளை பல நேரங்களில் பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள், ஒவ்வொரு முறை பதில் சொல்லும் போது இதைப்பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன், இன்றைக்கு நண்பர் கேட்டதும் நான் பயின்ற வழிமுறைகளைத் தெரிவித்தேன்
மகாபாரதம் படிக்க ஆரம்பிக்கும் போது முதலில் எதற்காகப் படிக்க ஆரம்பிக்கிறீர்கள் என்பது முக்கியமானது, காரணம் அதைப்பொறுத்து தான் எவ்வளவு காலம் தேவைப்படும் என்பது முடிவு செய்யப்படும்
வெறும்கதையை மட்டும் வாசிப்பது என்றால் ஆறுமாத காலத்திற்குள் உங்களால் மகாபாரதத்தை வாசித்துவிட முடியும், ஆனால் மகாபாரதம் என்பது மாபெரும் இதிகாசம், அதன் நுண்மையான அம்சங்கள், கவித்துவ அழகு, அறச்சிந்தனைகள், ஊடாடும் பண்பாட்டு சிந்தனைகளை ஆழ்ந்து கற்க விரும்பினால் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகாலம் தேவைப்படும்,
காரணம் ஒவ்வொரு பருவத்தையும் புரிந்து கொள்ள மேலும் அதிகமாக வாசிக்க வேண்டியது வரும்,
என் வரையில் மகாபாரதம் என்பது வாழ்நாள் முழுவதும் வாசித்துக் கொண்டேயிருக்க வேண்டிய புத்தகம், அதை ஒரு போதும் வாசித்து முடிக்க இயலாது, ஒரு சிகரத்தைப் போல அதை ஏறுவதற்கு கொஞ்சம் கொஞ்சமாக நாம் முயற்சிக்க வேண்டும், அது தரும் வாசிப்பு அனுபவம் அலாதியான ஒன்று,
மகாபாரதம் பதினெட்டு பருவங்களைக் கொண்டது,மொத்தமாக பதிமூன்று ஆயிரத்தில் இருந்து பதினைந்தாயிரம் பக்கம் வரக்கூடியது, இதற்கு காரணம் சில பதிப்புகளில் கிளைகதைகள் துண்டிக்கபட்டிருக்கின்றன,  கிரேக்க காப்பியங்களை விட பத்து மடங்கு பெரியது மகாபாரதம்,  மகாபாரத கதாபாத்திரங்களை அறிந்து கொள்வதற்காக  பாரதிய வித்யா பவன் வெளியிட்டுள்ள who is who in the Mahabharata-  subash Mazumdar என்ற சிறிய நூலை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்
ஆரம்பநிலையில் மகாபாரதம் படிக்க விரும்புகின்ற பலரும் ராஜாஜியின் வியாசர் விருந்தினைத் தேடி வாசிக்கிறார்கள், இது மிகவும் சுருக்கப்பட்ட மகாபாரதம், பிளாஸ்டிக்கில் செய்த தாஜ்மகால் பொம்மை போன்றது, ஒரிஜினல் மகாபாரதம் முழுமையாகத் தமிழில் வெளியாகி உள்ளது, அதைக் கும்பகோணம் பதிப்பு என்பார்கள், இந்தப் பதிப்பு வாசிக்க சற்றே சிரமம் தரக்கூடியது, காரணம் அதன் மணிப்பிரவாள நடை,
இதை வாசிப்பதற்கு முன்னதாக மகாபாரதம் வாசிப்பதற்கென சில எளிய வழிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்
மகாபாரத மூலப்பிரதியை வாசிப்பதற்கு அடிப்படையாக நான்கு முக்கிய வழிகளை கைக்கொள்ள வேண்டும்,
ஒன்று மகாபாரதம் சார்ந்த எளிய கதைசுருக்கங்களை, நாட்டார்கதைகளை வாசித்துவிடுவது,
இரண்டாவது மகாபாரதம் பற்றிய புனைகதைகள், நாவல்கள், மறுஉருவாக்கங்கள், நாடகங்களை வாசிப்பது,
மூன்றாவது மகாபாரதம் குறித்த ஆய்வுகள், விமர்சனக் கட்டுரைகள், தத்துவ உரைகள் போன்றவற்றை வாசிப்பது,
நான்காவது நிகழ்த்துகலைகளான நாடகம், கூத்து, சினிமா போன்றவற்றிலும், சடங்குகளிலும், ஒவியம் சிற்பம்  போன்ற நுண்கலைகளிலும் மகாபாரதம் எப்படி இடம் பெற்றுள்ளது என்பதை அறிந்து கொள்வது, இந்த நான்கு வழிகளில் ஊடாடித் தான் மூலநூலை வாசிக்க முடியும்
ஒருவேளை நீங்கள் நேரடியாக மூலநூலை வாசிக்க ஆரம்பித்தால் கூட மேற்சொன்ன வழிகள் உங்களுக்குப் பின்னால் தேவைப்படக்கூடும்
மகாபாரதம் படிப்பதற்கு முன்பு சில அடிப்படை எண்ணங்களை நாம் உருவாக்கி கொள்ள வேண்டும்
1)       ஒரே மூச்சில் மகாபாரதம் படித்து முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும்,
2)       மகாபாரதம் கதைக்குள் கதை, முன்பின் நகரும் கதை, ஒரே கதையின் மாறுபட்ட கதைகள் , சுழல்கதை என்று பல்வேறு சொல்முறைகளை கொண்டது, ஆகவே நிதானமாக, கவனமாக வாசிக்க வேண்டும், முடிந்தால் குறிப்புகளை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்
3)       மகாபாரதம் வாசிக்கையில் அது என்றோ நடந்த உண்மையா, அல்லது கற்பனையா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டேயிருக்கும், அந்தக் கேள்விக்கான விடையைச் சற்று தூர வைத்துவிட்டு புத்தகத்தை படித்துக் கொண்டு செல்ல வேண்டும்
4)       மகாபாரதம் பண்டைய இந்தியாவில் நடைபெறும் கதை, ஆகவே அன்றுள்ள நிலவெளி, அதன் ஆறுகள், மலைகள், இனக்குழுக்களின் வரலாறு ஆகியவற்றின் எளிய அறிமுகம் அவசியம் தேவை
5)       மகாபாரதம் ஒரு புனித நூல் என்ற எண்ணத்துடன் படிக்க அணுக வேண்டாம், அது ஒரு மாபெரும் காப்பியம், இந்தியாவின் மாபெரும் நினைவுத்திரட்டு, ஒரு சமூகம் தனது நினைவுகளை கதைவடிவமாக மாற்றி வைத்திருக்கிறது, ஆகவே நாம் பல்வேறு நினைவுகளின் ஊடே சஞ்சாரம் செய்கிறோம் என்பதே வாசிப்பதற்கான தூண்டுதல்.  பகவத்கீதையை எப்போதுமே தனியாக வாசிப்பதே சிறந்த ஒன்று
6)       மகாபாரதம் படிப்பதை விடவும் வாசித்துக் கேட்பது முக்கியமானது, அதற்கு ஒரு ஆசான் தேவை, நான் அறிந்தவரை  வில்லிபுத்தூரார் பாரதத்தை கரைத்துக்குடித்தவர் பேராசிரியர் ஞானசம்பந்தம், அவரை நாம் நகைச்சுவை பேச்சாளர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர் சிறந்ததொரு மகாபாரத வல்லுனர், அவரைப் போல தேர்ந்த ஆசான் ஒருவர் வாசிப்பிற்கு துணை செய்ய அவசியம், அல்லது சமஸ்கிருதம் அறிந்த ஒரு அறிஞரின் துணை அவசியமானது
7)       மகாபாரதம் படிப்பதற்கு பெரும் தடையாக இருப்பது நாம் முன்பு கேட்டு அறிந்துள்ள அறைகுறையான மகாபாரதக் கதைகள் மற்றும் சம்பவங்கள், அந்தக் கதை இல்லையே, இந்தக் கதாபாத்திரம் அப்படி நடந்து கொள்ளவில்லையே என்ற கேள்வி சதா மனதிற்குள் கேட்டுக் கொண்டேயிருக்கும், அதையும் ஒரங்கட்டிச் செல்லுங்கள்
8)       மகாபாரதத்தை கொஞ்சம் கொஞ்சமாக படித்துக் கொண்டே போவது தான் சிறந்த வழி, அதற்கு முதலில் எளிமையாக ஒருமுறை அதன் கதையை வாசித்துவிடுங்கள், இது போன்ற எளிய அறிமுகத்திற்கு தேவதூத் பட்நாயக் எழுதிய ஜெயம் / விகடன் பிரசுர வெளியீடு, அமர் சித்ரா கதா காமிக்ஸ், மற்றும் பெரிய எழுத்து மகாபாரதக் கதை உதவக்கூடும்,
9)       அதன்பிறகு கே எம் முன்ஷி எழுதிய கிருஷ்ணா அவதார தொகுதிகள்
வாசிக்கலாம், இது எட்டு தொகுதிகள், பாரதிய வித்யாபவன் வெளியிட்டுள்ளது
Dr. K.M. Munshi – Krishnavatara I: The Magic FluteKrishnavatara II: The Wrath of an Emperor Krishnavatara III: The Five Brothers,Krishnavatara IV: The Book of BhimaKrishnavatara V: The Book of Satyabhama‘, Krishnavatara VI: The Book of Vedavyaasa The MasterKrishnavatara VII: The Book of YudhishthiraKrishnavatara VIII: The Book of Kurukshetra (incomplete) இந்த தொகுதிகள் தமிழில் வெளியாகி உள்ளன
10)   அதன் பிறகு உரையுடன் கூடிய வில்லிபுத்தூரார் பாரதம், மற்றும் நல்லாம்பிள்ளை பாரதம் இரண்டினையும் வாசிக்க வேண்டும், நல்லாப்பிள்ளை பாரதம் கி.பி. 1888இல் வெளியானது, , 2007ல் புதிய மறுபதிப்பு வந்துள்ளது,  அரவான் களப்பலி வியாச பாரதத்தில் கிடையாது, ஆனால் நல்லாம்பிள்ளை மற்றும் வில்லிபாரத கதைகளில் உள்ளது, ஆகவே இது போன்ற தமிழகம் சார்ந்த கிளைக்கதைகளுக்காக இவை அவசியம் வாசிக்கப்பட வேண்டும், கூடுதலாக விருப்பமுள்ளவர்கள் பெரிய எழுத்து பவளக்கொடி, அல்லிஅரசாணி மாலை போன்ற நூல்களை வாசிக்கலாம்
11)   மகாபாரதத்தை ஆங்கிலத்தில் வாசிக்க விரும்புகின்றவர்கள் Kisari Mohan Ganguli, பதிப்பை வாசிக்கலாம், இது பழமையான ஆஙகில மொழியாக்கம், ஆனால் மூலத்தோடு நெருக்கமாக உள்ளது, இந்த பதிப்பு முழுமையாக இணையத்தில் வாசிக்க கிடைக்கிறது, Mahabharata with commentary of Nilakantha -Gopal Narayan and Co., Bombay என இன்னொரு பதிப்பும் ஆங்கிலத்தில் உள்ளது , எளிமையான வாசிப்பிற்கு R. K. Narayan சுருக்கமாக வெளியிட்டுள்ள The Mahabharata வாசிக்கலாம். Dr. P. Lal  கவிதை நடையில் ஒரு மொழியாக்கம் செய்திருக்கிறார்.
12)   எம்.வி. வெங்கட்ராமின் “நித்யகன்னி, எஸ் எல் பைரப்பா எழுதிய கன்னட நாவலான பர்வா, காண்டேகரின் யயாதி, எம்.டி.வாசுதேவன் நாயரின் இரண்டாம் இடம், பிகே பாலகிருஷ்ணனின் இனி நான் உறங்கட்டும், பிரதிபா ரேயின் யக்ஞசேனி, வங்காள நாவலான சாம்பன், இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா, கிருஷ்ணா, சோ வின் மகாபாரதம்,  நா, பார்த்தசாரதியின் அறத்தின் குரல், சிவாஜி சாவந்தின் மிருத்யுஞ்சய் என்ற கர்ணன் நாவல். ஜெயமோகன் எழுதிய, பத்மவியூகம், வடக்கு முகம், பதுமை, சஷி தரூர் எழுதிய, Great Indian Novel,  பாலகுமாரன் எழுதிய பீஷ்மர், சித்ரா பானர்ஜி திவாகருனியின் The Palace Of Illusions, மற்றும்  பாஷனின் உறுபங்கம், தாகூரின் சித்ராங்கதா, பாரதி எழுதிய பாஞ்சாலி சபதம், பி எஸ் ராமையாவின் தேரோட்டி மகன், எம் வி வெங்கட்ராமின் மகாபாரத பெண்கள், இத்துடன் எனது நாவல் உப பாண்டவம் போன்றவற்றைப்  படிக்கலாம்
13)   கட்டுரைகளில் ஐராவதி கார்வே எழுதிய யுகாந்தா, குருசரண் தாஸ் எழுதிய The Difficulty of Being GoodGender and Narrative in the Mahabharata,Brodbeck & B. Black (ed.): Routledge. Reflections and Variations on the Mahabharata, -T.R.S.Sharma, Sahitya Akademi. Great Golden Sacrifice of The Mahabharata- Maggi Lidchi Grassi . Rethinking the Mahabharata: A Reader’s Guide to the Education of the Dharma King by Alf Hiltebeitel.  The Questionable Historicity of the Mahabharata,  by SSN Murthy.  யட்சப் பிரசனம், விதுரநீதி, போன்றவற்றை படிக்கலாம்
14)   இதுபோலவே பீட்டர் புரூக்கின் மகாபாரதம் நான்குமணி நேரம் ஒடக்கூடிய திரைப்படம், இதற்குத் திரைக்கதை எழுதியவர் ஜீன் கிளாடே கேரியர், இது மகாபாரதம் பற்றிய நமது மரபான எண்ணங்களை மாற்றி அமைக்க கூடியது
15)   பதினெட்டு நாள் தெருக்கூத்தினை முழுமையாகப் பார்க்க முடிந்தால் மக்கள் மனதில் மகாபாரதம் எப்படி உள்ளது என்பதை நன்றாக அறிந்து கொள்ள முடியும், நான் தெருக்கூத்து குழுவோடு ஒன்றரை மாதம் உடன் தங்கி அலைந்திருக்கிறேன்,
16)   இது போலவே தொலைக்காட்சித் தொடராக வெளிவந்த பிஆர் சோப்ராவின் மகாபாரதம் வெங்கட் மொழியாக்கத்தில் தமிழில் வெளியாகி உள்ளது, இது வாசிக்க சுவாரஸ்யமான புத்தகம், தொலைக்காட்சி தொடருக்கு திரைக்கதை வசனம் எழுதியவர் Rahi Masoom Reza என்ற இஸ்லாமிய அறிஞர், கவித்துவமான உரையாடல்களை எழுதியிருக்கிறார்
17)   இதன் பிறகு மகாபாரத மூலநூலை வாசிக்க முயல வேண்டும், அதற்கு சிறந்த புத்தகம் கும்பகோணம்  ம.வீ.இராமானுஜாசாரியார் பதிப்பு, இது நேரடியாக சமஸ்கிருத மொழியில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டது,  இதை கும்பகோணம் சிவராமகிருஷ்ண ஐயர் மறு பதிப்புரிமை பெற்று  வெளியிட்டார். இந்த மொழி பெயர்ப்பு பதினெட்டு பாகங்களாக, பதினெட்டு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன; 1. ஆதி பர்வம் 2. ஸபா பர்வம் 3. வன பருவம் 4.விராட பருவம் 5. உத்யோக பருவம் 6.பீஷ்ம பர்வம் 7.துரோண பருவம் 8. கர்ண பர்வம் 9. சல்ய பருவம் 10. சாந்தி பருவம் 11. அனுசாஸன பர்வம் 12. ஸ்த்ரீ பர்வம் 13.ஆச்வதிக பர்வம் 14 மௌஸலை பர்வம் 15 சௌப்திக பர்வம் 16. மஹாப்ரஸ்தானிக பர்வம் 17.ஆச்ரமவாஸிக பர்வம் 18. ஸ்வர்க்கா ரோஹண பர்வம்.
பெரும்பான்மையான மகாபாரத பர்வங்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர் கும்பகோணம் ஸ்ரீநிவாஸாசாரியார் உத்யோக பர்வம் கருங்குளம் கிருஷ்ணசாஸ்திரிகளாலும் விராடபருவம் கும்பகோணம் அ.வேங்கடசாசாரியாராலும். சாந்தி பர்வம் பைங்காநாடு கணபதி சாஸ்திரிகளாலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மகாபாரதம் வெளியிடுவதில் இராமானுஜாசாரியார் மிகுந்த சிரமம் அடைந்திருக்கிறார், 1930களில் மகாபாரதம் வெளியிடுவதற்கு பதினைந்து ஆயிரம் பணத்தை இழந்திருக்கிறார், அன்று ஒருவரின் மாத சம்பளம் 60 ரூபாய், மகாபாரதத்திற்காகவே வாழ்ந்த மகத்தான மனிதர் இராமானுஜாசாரியார்
அன்று  மகாபாரதப் பதிப்புகள் முன்வெளியீட்டு திட்டத்தில் விற்கபட்டிருக்கின்றன, ஆகவே இன்றும் தஞ்சை, திருச்சி, கும்பகோணம் பகுதி பழைய புத்தக கடைகளில் மகாபாரத பதிப்புகள் பழைய புத்தகமாக கிடைக்கின்றன, நானும் கோணங்கியும் அப்படி தேடித்தேடி முழுமையான மகாபாரதத் தொகுதிகளை சேகரித்து வைத்திருக்கிறோம்
கும்பகோணம் மகாபாரதப் பதிப்பு இன்று  விற்பனைக்கு கிடைக்கின்றது
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
S.Venkataramanan
Sri Chakra Publications.
9/135 Nammalwar street, East tambaram, Chennai.
Ph: +91 9894661259
மொத்த விலை ரூ4500,
**
மனிதர்கள் தனக்கு உரிமையானதை விட்டுக் கொடுத்தால் என்ன நடக்கும் என்பதை பல்வேறு நிலைகளில் விளக்குவதே ராமாயணம், விட்டுக் கொடுக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதை விளக்குவதே மகாபாரதம், இரண்டும் மனிதர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையே கவனப்படுத்துகின்றன
••
இதிகாசங்கள் பெருங்கடலைப் போன்றவை, அதன் வெளித்தோற்றம் ஒரு விதமாகவும் உள்கட்டுமானம் விரிந்து கொண்டே போவதாகவும் இருக்கும், இதிகாசங்களை புரிந்து கொள்ள கற்பனை மிக அவசியமானது,
••
ஒரு கதாபாத்திரம் கூட தேவையின்றி இடம் பெற்றிருக்காது, ஆகவே இதில் இடம் பெற்றுள்ள சிறுகதாபாத்திரங்கள் கூட தனித்து ஒளிரக்கூடியவர்களே
••
மகாபாரதம் எனும் கதைக்கு முதுகெலும்பாக இருப்பவர் பீஷ்மர், அவர் தான் கதையின் மையவிசை, அவர் ஒருவருக்குத் தான் சமமான எதிர்கதாபாத்திரம் கிடையாது,
••
நிறைய இடைச்செருகல்கள் கொண்டது மகாபாரதம் என்பதால் ஒவ்வொரு மாநிலத்திலும் அதில் புதிது புதிதாக கிளைக்கதைகள் சேர்ந்து கொண்டேயிருக்கின்றன,
•••
மகாபாரதம்  வாசிக்க விரும்புகிறவர் ஒருமுறை கங்கையை முழுமையாக பார்த்து கடந்து வர வேண்டும், அப்போது தான் மகாபாரத நிலவியலை உள்வாங்கிக் கொள்ள முடியும்
••
திரைக்கதை ஆசிரியர்கள் தங்கள் கையிலே வைத்திருக்க வேண்டிய புத்தகம் மகாபாரதம் என்கிறார் எம்.டி.வாசுதேவன் நாயர், காரணம் அத்தனை திரைக்கதை உத்திகள், முடிச்சுகள் உள்ளன, எம்டி வாசுதேவன் நாயர் வைஷாலி என மகாபாரத கிளைக்கதை ஒன்றினைத் திரைக்கதையாக எழுதியிருக்கிறார், சிறந்த படமது, கர்ணன், மாயாபஜார், வீர அபிமன்யூ, ஆகிய மூன்றும் மகாபாரதம் தொடர்புடைய தமிழ் படங்கள், மூன்றிலும் மிகை அதிகம்
••
ஷேக்ஸ்பியருக்கு புதிய பதிப்புகள் வருவது போல யாராவது முழுமையான ம்காபாரதத்தை புதிய மொழியில் அழகிய பதிப்பாக கொண்டுவந்தால் நிச்சயம் அது பெரிய வரவேற்பைப் பெறும்,  என் விருப்பம் இந்தப் பணியை எழுத்தாளர் பிரபஞ்சன் மேற்கொள்ள வேண்டும் என்பது. அதற்கு யாராவது முழுமையாக நிதிஉதவி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.


 நன்றி
திரு . எஸ். ராமகிருஷ்ணன்
http://www.sramakrishnan.com
••

138 .போக மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

தந்தம்செட்டிதவரு ;- இவ்வம்சத்தில் தந்த ஸ்ரேஷ்டி என்பவர் புகழ் பெற்றவர். அவர் வம்சா வழியினர்.

பகுதி ஒன்று : வேள்விமுகம் [ 2 ]

பகுதி ஒன்று : வேள்விமுகம்  [ 2 ]

வேசரதேசத்தில் புஷ்கரவனத்தில் அதிகாலையில் நாகர்குலத்தின் அரசியான மானசாதேவி தன் மகன் ஆஸ்திகனை எழுப்பி நீராடச்செய்து மரவுரியாடையணிவித்து, மான்தோல்மூட்டையில் உணவுக்கான வறுத்த புல்லரிசியும் மாற்று உடையும் எடுத்துவைத்துக்கட்டி, சுரைக்காய் கமண்டலத்தில் நீர் நிறைத்துவைத்து, நெற்றியில் குலதெய்வங்களின் மஞ்சள் குறியை அணிவித்து ”நீண்ட ஆயுளுடன் இரு. உன் வழிகளெல்லாம் சென்றுசேர்வதாக” என்று வாழ்த்தி விடைகொடுத்தனுப்பினாள். அப்போது அவளுடைய குலத்தின் அத்தனை பெண்களும் அவள் வீட்டின் முன் கூடியிருந்தனர். ஆலமரத்தடியில் அவர்களின் குலதெய்வங்களான நாகங்கள் கல்லாலான பத்திகளை விரித்து, கல்லுடல் பின்னி, கல்விழிகளால் பார்த்துக்கொண்டிருந்தன.
ஆறு வயதான ஆஸ்திகன் குனிந்து தன் அன்னையின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு தன் சிறுகால்களை எடுத்து வைத்து பசும்சாணி பூசிய படிகளில் இறங்கி நீலச்செண்பகமலர்கள் பாரித்துக்கிடந்த முற்றத்தைத் தாண்டி நடந்து ஊர்முனையில் மறைந்தபோது விம்மும் நெஞ்சுடன் அவள் பின்னால் ஓடிவந்து ஊர்மன்றின் அரசமரத்தடியில் நின்று கண்ணெட்டும் தூரம் வரை பார்த்திருந்தாள். மண்நிறமான மரவுரியும், கரிய குடுமியும் கண்ணிலிருந்து மறைந்த பின்புதான் அவள் அறிந்தாள், அவன் ஒருகணம்கூட திரும்பிப்பார்க்கவேயில்லை என்று.
ஆஸ்திகன் கிருஷ்ணையின் நீர்ப்பெருக்கை படகில் கடந்து சென்றான். அன்றிரவு கிருஷ்ணநகரத்தில் ஒரு சத்திரத்தில் தங்கினான். அங்கிருந்து மறுநாள் கிளம்பி வடக்குநோக்கி செல்ல ஆரம்பித்தான். பாரதத்தின் ஒவ்வொரு ஊரிலிருந்தும் அஸ்தினபுரிக்குச் செல்லும் ஒரு பாதை இருந்தது. இரவுகளில் மரத்தடிகளிலும் மழைபெய்யும்போது கோயில்மண்டபங்களிலும் கழித்தபடி கால்களில் புழுதிபடிய, சிவந்த சருமம் வெந்து கருக அவன் நடந்து சென்றுகொண்டே இருந்தான். மரவுரியணிந்த முனிகுமாரனை ஒவ்வொரு ஊரிலும் குடும்பத்தவர்கள் வந்து வணங்கி உணவும் நீரும் இடமும் அளித்து வழியனுப்பிவைத்தனர்.
அன்னை அவனுக்களித்தவை எல்லாம் வெறும் சொற்களாக இருந்தன. நதிகள், மலைகள், நகரங்கள், ஜனபதங்கள். ஒவ்வொன்றும் அவன் முன் சொல்லில் இருந்து இறங்கி விரிந்து பருவடிவம் கொண்டன. கிருஷ்ணையும் நர்மதையும் விந்தியமும் அங்கமும் மாகதமும் எல்லாம் அவனுக்குள் அறிதல்களாக மாறிக்கொண்டே இருந்தன. காளைகள் இழுக்கும் உப்புவண்டிகள் சேற்றில் சகடம் சிக்கி ஓசையிட்டு நகரும் பெருவணிகப்பாதைகள், இருபக்கமும் முட்புதர்கள் அரணிட்ட கானகப்பாதைகள், செந்நிற மழைநீர் சுழித்தோடும் காட்டாறுகள், கருமேகம்போல் திரண்டெழுந்த பாறைக்கட்டுக்கள், கால்நடைகள் கூடிய பட்டிகள், ஆலமரங்கள் எழுந்த ஊர்மன்றுகள், விழாக்கொண்டாடிய ஆலயமுற்றங்கள் அனைத்தையும் கடந்து சென்றுகொண்டிருந்தான்.
இருநூற்றெழுபது நாட்களுக்குப்பின் அவன் அஸ்தினபுரியின் பெருமதில்வளைவை சிறிய செம்மண்குன்று ஒன்றின் மேல் நின்று பார்த்தான். அவன் நடந்து வந்த ரதசாலை கீழே செந்நிறமாகச் சுழித்து காட்டை ஊடுருவிச்சென்றுகொண்டிருந்தது. புராணங்கள் வழியாக பாரதவர்ஷத்தின் ஒவ்வொரு குழந்தையும் மொழியறியும் நாளிலேயே அறிந்துகொண்ட அஸ்தினபுரியை அவன் கண்டான். இக்‌ஷுவாகு வம்சத்தின் மூதாதையான குருவில் இருந்து உருவாகிவந்த குருவம்சத்தின் தலைநகரம். நூற்றாண்டுகளுக்கு முன்னால் மாமன்னர் ஹஸ்தியால் மயன் வழிவந்த சிற்பிகளைக்கொண்டு அமைக்கப்பட்டது.

சிலகணங்கள் பார்த்துவிட்டு கீழே இறங்கி ரதசாலை வழியாக நடந்து கோட்டைவாசலை அடைந்தான். மேலே எழுந்து அத்திசையை முற்றாகவே மறைத்துக்கொண்டது சுவர். அவன் கண்ட நகரங்களில் எதிலும் அதற்கிணையான கோட்டை இருந்ததில்லை. பாதாளநாகம் போன்ற கரிய உடல் மீது புதுமழையில் முளைத்த பசும்புற்கள் காற்றில் சிலுசிலுக்க வளைந்து ஓங்கிக் கிடந்தது கோட்டை. கோட்டைக்கு முன்னாலிருந்த அகழிக்குள் முளைத்தெழுந்த நீர்மரங்கள் பசும்கிளைகளை கோர்த்துக்கொண்டு பச்சைத்தழைப்பு செறிந்து நின்றன. பாதை சற்றே எழுந்து விரியத் திறந்துகிடந்த கோட்டைவாசலுக்குள் சென்றது. இருபக்கமும் இருபது ஆள் உயரமான கோட்டைக்கதவுகள் திறந்து மண்ணில் புதைந்திருந்தன. கதவின் மரத்தடிகளை இணைத்த இரும்புப்பட்டைகள் துருவேறியிருந்தன. மரச்சிற்பங்கள் மேல் பச்சோந்திக்கால்கள் போல வேர் பதித்து படர்ந்து ஏறி பச்சை இலைகளை விரித்து காற்றிலாடி நின்ற கொடிகளுக்குள் யானைமத்தகங்களைத் தடுக்கும் பித்தளைக்குமிழ்கள் களிம்புப்பச்சை நிறத்தில் காய்கள்போலத் தெரிந்தன.
கோட்டைவாசலிலும் உள்ளே ரதவீதியிலும் எங்கும் காவல் இருக்கவில்லை.காலைவெயிலில் இளமழை பொழிந்துகொண்டிருக்க அவன் புறச்சாலையில் நடந்தபோது நகரமே அமைதியாக இருக்கக் கேட்டு பிரம்மசாபத்தால் தூங்கிக்கொண்டிருக்கும் பெருநகரமோ அது என ஐயம் கொண்டான். மழைப்பிசிர்கள் நின்று, நனைந்த கல்பரப்புகளும் இலைகளும் ஒளி விட்டுக்கொண்டிருப்பதைக் கண்டபடி அவன் நகரத்தெருக்கள் வழியாக சென்றான். சுண்ணம்சேர்த்துக்கட்டிய சுவர்களும், செவ்வரக்கு பூசிய மரப்பட்டைக்கூரைகளும் கொண்ட மூன்றடுக்கு மாளிகைகள் இருபக்கமும் அணிவகுத்த அகன்ற தெருக்களில் குழந்தைகள் நீரில் நீந்தும் பரல்மீன்கள் போல பெரிய கண்களுடன் ஓசையே இல்லாமல் விளையாடின. வீட்டுத்திண்ணைகளில் யாழ்களுடன் இருந்தவர்கள், தயிர்கொண்டுசென்ற ஆய்ச்சியர் அனைவரும் கனவுருக்கள் போல அமைதியாக அசைந்துகொண்டிருந்தனர்.
அஸ்தினபுரியில் மாமன்னன் ஜனமேஜயன் ஐந்துமாதங்களாக நடத்திவந்த மாபெரும் பூதயாகம் ஒன்று அன்று முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. நகரமெங்கும் பாரதவர்ஷத்தின் அனைத்துப்பகுதிகளிலிருந்தும் வந்திருந்த வைதிகர்களும் முனிவர்களும் நிறைந்திருந்தனர். அவர்கள் தங்குவதற்காக நகருக்கு வெளியே உபவனத்தில் குடில்கள் கட்டப்பட்டிருந்தன.
ஆஸ்திகன் அங்கே தன்னை வரவேற்றுச் சென்ற சிற்றமைச்சனிடம் ”யாயாவர வைதிக குலத்தில் உதித்தவரும் கஸ்யப கோத்திரத்தைச் சேர்ந்தவருமாகிய ஜரத்காரு ரிஷியின் மைந்தன் நான். நைஷ்டிக பிரம்மசாரி. என் பெயர் ஆஸ்திகன்” என்று அறிமுகம் செய்துகொண்டான். அவர் அவனை வணங்கி அழைத்துச்சென்று, ஈச்சைஓலைகளால் கூரை வேய்ந்து மரப்பட்டைகளால் சுவரமைக்கப்பட்ட அழகிய சிறுகுடில்களில் ஒன்றில் தங்கச்செய்தார். அங்கேயே ஓடிய சிறுநதியில் நீராடி புத்தாடை அணிந்து வழிபாடுகளை முடித்துக்கொண்டு ஆஸ்திகன் ஜனமேஜயனின் வேள்விச்சாலைக்குச் சென்றான்.
அன்று வேள்வியின் இறுதிநாள் என்பதனால் நகரமே வேள்விச்சாலை நோக்கி சென்றுகொண்டிருந்தது. பொன்னூல் பின்னல்கள் கொண்ட வண்ண ஆடைகள் அணிந்து பொன்னணிகளாலும் மலர்களாலும் அலங்கரித்துக்கொண்ட பெண்கள். சிகையில் மயிற்பீலிவைத்து மலர்சுற்றிக்கட்டி பீதாம்பரம் அணிந்த குழந்தைகள். கச்சை வேட்டிகட்டி சரிகை அந்தரீயத்தை வலப்பக்கமாகச் சுற்றி குடுமியில் மலர்க்கொத்துக்கள் அணிந்த ஆண்கள். மெல்ல கனைத்து வழிகேட்ட மாந்தளிர்நிறமான குதிரைகள் சாமரவாலைச் சுழற்றியபடி இறுகி அசையும் தசைகளுடன் குளம்புகள் தடதடக்க கடந்துசென்றன.
விதவிதமான சிறிய வண்டிகளில் ஏதேதோ பொருட்கள் சென்றுகொண்டிருந்ததை ஆஸ்திகன் கண்டான். தாமிர உருளி திறந்த கவந்த வாயுடன் கணகணத்து ஒரு கைவண்டியில் இழுபட்டுச் சென்றது. பெரிய நிலவாய் நிறைய நெய் மூடியிலிருந்த சிறிய ஓட்டைவழியாக அவ்வப்போது சற்று கொப்பளித்துத் துப்பியபடி ஒற்றைமாட்டுவண்டியில் சென்றது. இன்னொரு பெரிய பாத்திரத்தின் இரு காதுகள் வழியாகவும் மூங்கிலைச் செலுத்தி இருவர் தூக்கிக்கொண்டு சென்றனர். தலைச்சுமையாக ஐந்துபேர் தாமரைமலர்களை கட்டி எடுத்துக்கொண்டு சென்றனர். அவர்களின் தோள்களில் தாமரைநீர் சொட்டிக்கொண்டிருந்தது.
வானத்தில் எழுந்ததுபோல ஜனமேஜயனின் அரண்மனைமுகடு தெரிந்தது. மரப்பலகையால் செய்யப்பட்டு வெண்சுண்ணமும் அரக்கும் கலந்து பூசப்பட்ட கவிழ்ந்த தாமரைவடிவமான கூரைக்குவை, மண்ணிலிறங்கிய மேகக்குமிழ்போல. அதன் மேல் குருவம்சத்தின் அமுதகலசச் சின்னத்தைத் தாங்கிய பெரிய பொன்னிறக்கொடி துவண்டு அசைந்தது. அதைச்சுற்றி தாமரைக்கூட்டங்கள் போல வெண்ணிறமான சிறியமுகடுகள். அரண்மனையின் உள்கோட்டை செம்மண் நிறத்தில் வட்டமாக சுற்றிவளைத்திருக்க அதன் நுழைவாசலின் மரத்தாலான தோரண வளைவுக்குமேல் தொங்கிய காவல்மணியாகிய காஞ்சனம் தாலிச்சின்னம்போல பொன்னிறமாக சுடர்விட்டுக்கொண்டிருந்தது.
அரண்மனைக்குச் செல்லும் பாதையில் இருந்து பிரிந்து வலப்பக்கமாகச் சென்ற பாதை இருபக்கமும் மூங்கில்காடுகள் கொண்டதாக இருந்தது. மூங்கில்செறிவுக்கு அப்பால் பேச்சொலிகளும் உலோகச்சத்தங்களும் கலந்து முழங்க வண்ண அசைவுகள் அலையடித்தன. வேள்விப்புகையின் வாசனை எழ ஆரம்பித்தது. ஈச்சை ஓலைகளைமுடைந்து செய்த தட்டிகளாலும் கோரைப்புல்பாய்களாலும் மரப்பட்டைநார் நெய்து செய்யப்பட்ட திரைகளாலும் கட்டப்பட்டிருந்த வேள்விக்கூடத்தின் வட்டவடிவமான மைய அரங்கை ஒட்டி இருபக்கமும் துணைப்பந்தல்கள் இணைக்கப்பட்டிருந்தன. பந்தல்களைத் தாங்கிய வண்ணம்பூசப்பட்ட மூங்கில்தூண்கள் ஈச்சங்குலைகளாலும் தளிரோலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு பசுங்காடுபோலச் செறிந்திருந்தன.
பந்தலின் மறுபக்கத்தில் கார்மிகர்கள் வரும் பாதை. அதன் வழியாக மூங்கில்களில் தொங்கிய கூடைகளில் மலர்களும் இலைகளும் நெய்யும் தூபங்களும் வந்துகொண்டிருந்தன. அரசகுலத்தவர் வரும் பாதை எதிரே இருந்தது. வலப்பக்கம் வாழைப்பூ போல செந்நிற மரவுரியாடை அணிந்த முனிவர்கள். இடப்பக்கம் சங்குக்குவியல்கள் போல வெண்ணிற ஆடையணிந்த வைதிகர்கள். நடுவே சென்று மேலும் இரண்டாகப் பிரிந்த பந்தல்களில் ஒருபக்கம் செந்நிற தலைப்பாகைகள் அணிந்த சத்ரியர். மறுபக்கம் பொன்னிறத் தலைப்பாகைகள் அணிந்த வைசியர். அப்பால் நீலநிறத்தலைப்பாகை அணிந்த சூத்திரர். ஒவ்வொரு பகுதியிலும் பெண்களுக்கான இடம் தனியாக பகுக்கப்பட்டிருந்தது.
வேள்வியதிபரான வைசம்பாயனர் வேள்விக்குளத்தின் வலப்பக்கம் மணைமேல் விரிக்கப்பட்ட தர்ப்பைப்பரப்பு மேல் அமர்ந்திருந்தார். ஆஸ்திகன் அருகே சென்று அவரை வணங்கினான். தன் குலத்தையும் தந்தையின் பெயரையும் சொன்னபின்பு முனிவர்களின் இடத்துக்குச் சென்று அமர்ந்துகொண்டான். நாற்பதுநாட்களுக்கு முன்பு அரணிக்கட்டையைக் கடைந்து உருவாக்கப்பட்ட நெருப்பு வேள்விக்குளத்தில் ஹோதாக்களால் ஒவ்வொரு கணமும் ஊட்டப்பட்டு பொன்னிறத்தில் எழுந்தாடிக்கொண்டிருந்தது.
வெளியே மங்கல வாத்தியங்கள் முழங்கின. பல்லியமும் கொம்பும் பெருமுழவும் மணியும் சேர்ந்து கலந்த ஒலியுடன் வேதபண்டிதர்களின் வேதகோஷம் இணைந்து ஒலித்தது. முதலில் கட்டியம் சொல்லும் கோல்காரன் உள்ளே வந்தான். கையில் பெரிய பொன்னாலான தலைக்கோலை வைத்திருந்தான். மிடுக்குடன் உள்ளே வந்து அவைமேடை மேல் ஏறி நின்று தலைக்கோலை மேலே தூக்கி உரக்கக் கூவினான் “ஜெயவிஜயீபவ! அஸ்தினபுரத்தை ஆளும் வேந்தர், அத்திரி முனிவரின் கொடிவழிவந்தவர், குருகுலத்தோன்றல் பரிட்சித் மாமன்னரின் புதல்வர், மண்ணுக்கும் விண்ணுக்கும் இனியவர், பாரதவர்ஷத்தின் தலைவர் ஜனமேஜய மகாசக்ரவர்த்தி எழுந்தருள்கிறார்!”
மங்கலவாத்தியக்குழு முதலில் உள்ளே வந்தது. அதைத்தொடர்ந்து பூரண கும்பம் ஏந்திய வைதிகர் நீர்தெளித்துக்கொண்டு வந்தனர். பின்னர் காவல் வீரர்கள் கவச உடை அணிந்து ஆயுதங்களுடன் வந்தனர். தம்பியரான சுதசேனரும் உக்ரசேனரும் பீமசேனரும் உருவிய வாட்களுடன் சூழ்ந்து வர, முன்னால் புரோகிதர்கள் வேதகோஷமிட்டு அட்சதை வீசி வாழ்த்த, அரங்கிலிருந்த முனிவர்கள் மலர்வீசி ஆசியளிக்க, ஆரங்களிலும் காதுகளின் குண்டலங்களிலும் புஜகீர்த்திகளிலும் கங்கணங்களிலும் கச்சைமணியிலும் செம்மணிகள் சுடர்விட அக்னிதேவன் எழுந்தருளியது போல் ஜனமேஜய சக்ரவர்த்தி பட்டத்தரசி வபுஷ்டையுடன் உள்ளே வந்தார்.