அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

4/30/14

பகுதி பத்து : அனல்வெள்ளம்[ 4 ]

பகுதி பத்து : அனல்வெள்ளம்[ 4 ]
அவைக்காவலர் தலைவனான குந்தளன் தன் உதவியாளர்களுடன் மந்தணஅவையில் ஓசையின்றி பணியாற்றிக்கொண்டிருந்தான். அமர்வதற்கான பீடங்களையும் பொருட்கள் வைப்பதற்கான உபபீடங்களையும் உரியமுறையில் அமைத்தான். சத்யவதி அமரவேண்டிய பீடத்தின் மேல் வெண்பட்டையும் பீஷ்மர் அமரவேண்டிய பீடம் மீது மரவுரியையும் சகுனி அமர வேண்டிய பீடம் மீது செம்பட்டையும் விரித்தான். உபபீடங்களில் என்னென்ன பொருட்கள் இருக்கவேண்டுமென துணைவர்களுக்கு ஆணையிட்டான்.
அது இளவேனிற்காலத் தொடக்கமாதலால் காற்று தென்மேற்கிலிருந்து வீசி வடகிழக்குச் சாளரம் வழியாக வெளியேறும். அதற்கேற்ப நெய்விளக்குகளை அமைத்தான். ஒவ்வொருவர் முகத்திலும் ஓளிவிழும்படியும் அதேசமயம் அனல் வெம்மை எவர் அருகிலும் இல்லாதபடியும் அவை உள்ளனவா என அங்கே நின்று சரிபார்த்துக்கொண்டான். சாளரக்கதவுகள் காற்றிலாடாமலிருக்கவும் அறைக்கதவுகள் ஓசையில்லாமல் திறந்துமூடவும் செய்தான். அறைக்குள் மேலே தொங்கிய மயிற்தோகைக்கற்றை விசிறிகள் ஓசையில்லாமலும் தீபச்சுடர்களை அசைக்காமலும் காற்றை அசைக்கும்படிச் செய்தான்.
உள்ளே வந்த விதுரனைக் கண்டு குந்தளன் வணங்கினான். “அமைப்பு முடிந்துவிட்டதா?” என்றான் விதுரன் “ஆம், அமைச்சரே” என்றான் குந்தளன். விதுரன் சுற்றிலும் நோக்கிவிட்டு “மேலுமிரு பீடங்கள் இருக்கட்டும். சிம்மக்கைப்பிடி கொண்டவை. அமைச்சர்கள் அமர ஐந்து வெண்பீடங்களும் அமையட்டும்” என்றான். குந்தளன் கண்கள் ஒருகணம் விரித்து “ஆணை” என்றான். விதுரன் “ஒளியும் காற்றும் அதற்கெனவே அமையட்டும்” என்றான். குந்தளன் தலைவணங்கினான்.
விதுரன் தன் மாளிகைக்குச் சென்று சபைக்கான ஆடை அணிந்து கொண்டான். தன் ஏவலனிடம் மாளிகைக் கருவூலத்தில் இருந்த பழைய ஆமாடப்பெட்டி ஒன்றை எடுத்துவரச்சொல்லி அதைத் திறந்தான். அதற்குள் இளமையில் அவனுக்கு சத்யவதி பரிசாக அளித்த தென்பாண்டி முத்துச்சரமும் பன்னிரு வைரங்கள் பதிக்கப்பட்ட அணிமுடியும் இருந்தன. அவற்றை அவன் அணிவதில்லை என்பதனால் கொண்டு வந்த சேவகன் வியப்புடன் நோக்கி நின்றான். விதுரன் எழுந்து ஆடி நோக்கி அவற்றை அணிந்துகொண்டான். ஆடியில் தெரிந்த தன் பாவையை நோக்கி புன்னகைசெய்தான்.
மீண்டும் அவன் மந்தணஅவைக்கு வந்தபோது அனைத்து ஒருக்கங்களும் முடிந்து அது மூடப்பட்டிருந்தது. அவன் சத்யவதியின் அந்தப்புரத்து அறைவாயிலில் நின்ற சியாமையிடம் “சகுனிதேவரை வரச்சொல்லி தூதனை அனுப்பலாமல்லவா?” என்றான். சியாமை “ஆம், பேரரசி ஒருங்கிவிட்டார்கள். சுவடிகளை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள். அவள் கண்களில் விதுரனின் அணிமுடி வியப்பை உருவாக்கி உடனே அணைந்ததை அவன் கண்டான்.
விதுரன் வெளியேவந்து அரசமண்டபத்தை அடைந்தான். அங்கே விப்ரர் ஓலைநாயகங்கள் நடுவே அமர்ந்திருந்தார். அவனைக்கண்டதும் எழுந்து அருகே வந்து “அமைச்சரே… எங்கும் ஒழுங்கின்மையின் உச்சம். என்னசெய்வதென்று எவருக்கும் தெரியவில்லை. உள்ளே வந்த படைகள் இங்கே அமர இடமில்லாதிருக்கையில் புதிய படைகள் உள்ளே வந்து அழுத்திக்கொண்டே இருக்கின்றன. வந்தவர்களில் பெரும்பகுதியினர் யானைக்கொட்டில்களையும் வடக்குவெளியையும் நிறைத்தபின் அத்திசை வாயில்வழியாக புராணகங்கைக்குள் சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றார்.
“ஒழுங்கின்மை அல்ல அது. அந்த ஒழுங்கை நாம் இன்னமும் வகுத்து அறியவில்லை, அவ்வளவுதான்” என்றான் விதுரன். “விப்ரரே தாங்களே நேரில் சென்று சகுனிதேவரை அவைக்கு அழைத்து வாருங்கள். அவையிலும் தாங்களிருக்க வேண்டும்.” விப்ரர் திகைத்து “நான் இங்கே…” எனத் தொடங்கியபின் “அவ்வண்ணமே ஆகட்டும்” என்றார். அவர் கிளம்பிச்சென்றதும் விதுரன் தூதர்களிடம் அமைச்சர்களும் தளபதிகளும் அவை புகும்படிச் செய்தி அனுப்பிவிட்டு மீண்டும் சத்யவதியின் மாளிகை வாயிலில் சென்று காத்திருந்தான்.
சகுனியின் சிறிய அணித்தேர் மாளிகை முகப்புக்குள் புகுந்தபோது அரண்மனையின் பெருமுரசம் கொம்புகளும் குழல்களும் துணைவர முழங்கி அவனை வரவேற்றது. வீரர்கள் வாழ்த்தொலி எழுப்பி படைக்கலம் தாழ்த்தினர். சகுனி இறங்கி தன் மேலாடையைச் சுற்றிக்கொண்டு மாளிகையின் அமுதகலச முகப்பை ஏறிட்டு நோக்கினான். அதன் முகடில் சத்யவதியின் ஆமை இலச்சினை கொண்ட கொடி பறந்துகொண்டிருப்பதைப் பார்த்தான். விதுரன் அருகே சென்று தலைவணங்கி “காந்தாரநாட்டு இளவரசருக்கு பேரரசி சத்யவதியின் மாளிகைக்கு நல்வரவு” என்றான்.
சகுனி அவன் தலையின் அணிமுடியைத்தான் முதலில் நோக்கினான். அவன் கண்களில் ஏதும் தெரியவில்லை என்றாலும் கைகள் சால்வையை மீண்டும் இழுத்துப்போட்டன. “விசித்திரவீரியரின் மைந்தருக்கு என் வணக்கம்” என்று அவன் சொன்னான். விதுரன் “அவை மண்டபத்துக்கு தாங்கள் வரவேண்டும். பேரரசியும் பிதாமகரும் இன்னும் சற்று நேரத்தில் அவைபுகுவார்கள்” என்றான். சகுனி தலையை அசைத்தபடி படி ஏறி உள்ளே வந்தான்.
அவை மண்டபத்திற்குள் சகுனியை இட்டுச்சென்று அவனுக்கான பீடத்தில் அமரச்செய்தபின் அருகே தனக்கான பீடத்தில் விதுரன் அமர்ந்துகொண்டான். அந்தப்பீடத்திலும் செம்பட்டு விரிக்கப்பட்டிருப்பதை சகுனி அரைக்கண்ணால் பார்த்தபின் “அமைச்சரே தங்கள் படைக்கல ஆசிரியர் எவர்?” என்றான். “இங்கே எங்கள் பேரரசியின் அவையில் கண்டலர், இந்துபிரபர் என்னும் இரு படைக்கல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் இரு இளவரசர்களுக்கும் கைப்பிடித்து முதற் படைக்கலம் கற்பித்தவர்கள். நானும் அவர்களிடம்தான் பயின்றேன்” என்றான் விதுரன்.
“அஸ்திரவித்தை பயின்றிருக்கிறீரா?” என்று சகுனி கேட்டான். “ஆம். நான் எனக்கான மெல்லிய வில் ஒன்றையும் உருவாக்கிக் கொண்டேன். தோள்களை வளர்த்துக்கொள்ளாமலேயே நெடுந்தூரம் அம்புகளைச் செலுத்தும் கலையை நூல்களிலிருந்து கற்றேன்” சகுனி தலையை அசைத்தான். கதவருகே குந்தளன் வந்து தலைவணங்கினான். விதுரன் எழுந்து “பிதாமகர் பீஷ்மர்” என்றான். பீஷ்மரின் பெயரைச் சொன்னதுமே சகுனியின் முகத்தில் அவனை மீறி ஒரு மலர்வு எழுவதை விதுரன் அறிந்தான். இருவரும் எழுந்து நின்றனர்.
பீஷ்மர் தோள்களில் படர்ந்த நரைத்த தலைமுடியும் இன்னமும் ஈரமுலராத வெண்தாடியுமாக உள்ளே வந்தார். மரவுரியாடை மட்டும் அணிந்திருந்தார். சகுனியும் விதுரனும் வணங்கியபோது புன்னகையுடன் இருவரையும் வாழ்த்தியபின் அமர்ந்துகொண்டார். சகுனியிடம் “காந்தாரத்தின் கருவூலமே நகர்புகுந்தது என்றார்கள் சூதர்கள்” என்று சிரித்தபடியே சொன்னார். “இது கருவூலம் அல்ல. ஆனால் பிதாமகர் ஆணையிட்டால் கருவூலத்தையே இங்கு கொண்டுவரச் சித்தமாக உள்ளேன்” என்றான் சகுனி. பீஷ்மர் சிரித்தபடி “கருவூலங்கள் நாட்டின் நெஞ்சங்கள். அவை இணைவது ஒரு மணமுடிப்பு போல” என்றார்.
சியாமை உள்ளே வந்து தலைவணங்கினாள். பீஷ்மர் எழுந்து நின்றார். சத்யவதி உள்ளே வந்ததும் பீஷ்மர் தலைவணங்கினார். சத்யவதி அவரை வாழ்த்திவிட்டு தன்னை வணங்கிய சகுனியிடம் “மிக இளையவராக இருக்கிறீர்கள் சௌபாலரே” என்றாள். சகுனி புன்னகையுடன் “ஆம், என்னை பெரும்பாலும் வயதில் மூத்தவன் என்றே எண்ணுகிறார்கள்” என்றான். “அது தங்கள் புகழ் பாரதவர்ஷம் முழுதும் பரவியிருப்பதனால்” என்றான் விதுரன்.
அவர்கள் அமர்ந்துகொண்டார்கள். சகுனி முறைப்படி பேரரசியை வணங்கி “காந்தாரநாடும் எங்கள் தொல்குலமும் பேரரசியின் அருளைப்பெறுவதனால் பெருமைகொண்டிருக்கின்றன. என் தந்தை சுபலரும் என் தமையன் அசலரும் தங்கள் மணிமுடிகளை தங்கள் பாதம் நோக்கி தாழ்த்துகிறார்கள். தங்கள் அருளுக்காக அவர்கள் இந்த எளிய பரிசை அளித்திருக்கிறார்கள்” என்றபடி ஒரு தங்கப்பேழையை சத்யவதியின் முன்னாலிருந்த பீடத்தில் வைத்தான்.
சத்யவதி “காந்தாரம் எங்கள் உடலில் புதிய குருதியை பாய்ச்சியிருக்கிறது சௌபாலரே. தங்கள் தந்தையிடம் சொல்லுங்கள், அவர் ஹஸ்தியின் குடிக்கு அளித்த பெரும்பரிசு அவரது மகள்தான். அவள் காலடி பட்ட கணம் முதல் இந்நகரின் விடாய் தீர்ந்தது. அச்சங்கள் அகன்றன. அவளைவிட பெரிய பரிசை எந்நாளும் எவரும் இனி எங்களுக்கு அளிக்கவியலாது” என்றாள். அது முகமன் அல்ல என அவள் குரலின் நெகிழ்வு காட்டியது. முதல்முறையாக சகுனியின் முகம் அதன் உறைந்த பாவனையில் இருந்து இளகி நெகிழ்ந்தது. “ஆம், என் தமக்கை எங்கள் குலத்தின் மாசிலா மாணிக்கம்” என்றான்.
“அவள் பாதங்களை இங்குள்ள நிமித்திகர் நோக்கினர். அளவில்லா தாய்மை கொண்டவள் என்றார்கள். பாரதவர்ஷம் விழுந்து வணங்கும் சக்ரவர்த்தினியின் பாதங்கள் அவை என்றார்கள். அதைவிட நற்சொல்லை இம்முதியவளிடம் எவர் சொல்லிவிடமுடியும்?” சத்யவதி சொன்னாள். தன் கைகளை நீட்டி அந்த பொற்பேழையைத் தொட்டு “நான் உவகை கொள்கிறேன்” என்றாள். விதுரன் அதை எடுத்து திறந்தான். அதற்குள் இருந்தது குதிரையின் பல் என்று முதற்கணம் தோன்றியது. மறுகணம் அது ஒரு வைரம் என தெளிந்தான்.
அறையொளியை உண்டு அது சுடர்விடத்தொடங்கியது. அதன் பட்டைகளும் உள்பட்டைகளும் நெய்விளக்குகளின் செவ்வொளியை வாங்கி மின்னத்தொடங்கின. குருதி படிந்த வெண்பல் போல. “இதை எங்கள் நாட்டில் அஸ்வதந்தம் என்கிறார்கள். நாங்கள் அடைந்தவற்றிலேயே மதிப்புமிக்க வைரம் இதுவே. நெடுந்தொலைவில் பெரும்பாலைநிலங்களுக்கு அப்பாலிருக்கும் அபிசீனம் என்னும் காப்பிரிநாட்டிலிருந்து நாங்கள் பெற்ற செல்வம் இது. வல்லமை மிக்க குதிரைகளின் உடைமையாளராக இதை அணிபவர்களை ஆக்கும் வல்லமை இதற்குண்டு என நிமித்திகர் சொல்கிறார்கள்” என்றான் சகுனி.
“ஆம். நாம் வல்லமைபெற்றுவிட்டோம்” என்று விதுரன் சொன்னாள். பீஷ்மர் அந்த உரையாடலை தன் தாடியை நீவியபடி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். சகுனி “நம் வல்லமைகள் அனைத்தையும் மன்னரின் தோள்களாக ஆக்கவேண்டிய காலம் வந்துவிட்டது பேரரசி. காந்தாரம் அதற்காகக் காத்திருக்கிறது” என்றான். மிக எளிதாக அவன் பேசவேண்டிய புள்ளிக்கு வந்துவிட்டதை உணர்ந்த விதுரன் பீஷ்மரின் கண்களை ஒருகணம் நோக்கி மீண்டான்.
சத்யவதி “ஆம். இனி எதையும் நாம் சிந்திக்கவேண்டியதில்லை. அஸ்தினபுரியின் அரியணை என் சிறுமைந்தனுக்காக நெடுங்காலமாகக் காத்திருக்கிறது” என்றாள். “அனைவரும் விரும்பும் வண்ணம் அனைத்தையும் செய்துவிடலாம் சௌபாலரே. நீங்கள் இங்கே இருந்து அவற்றை நடத்தியருளவேண்டும்.” சகுனி புன்னகையுடன் “ஆம் பேரரசி, அது என் கடமை. நான் காந்தாரபுரி நீங்குகையில் அஸ்தினபுரியின் அரியணையில் என் தமக்கை அமர்ந்தபின்னரே மீண்டுவருவேன் என வஞ்சினம் கூறித்தான் கிளம்பினேன்.”
பீஷ்மர் சற்று அசைந்தபோது அவரது நெடிய உடலைத் தாங்கிய பீடம் மெல்லிய ஒலியை எழுப்பியது. சகுனி அவரைத் திரும்பி நோக்க அவர் ஏதும் சொல்லவில்லை. சத்யவதி “நல்ல சொற்களைச் சொன்னீர்கள் சௌபாலரே. மணிமுடி சூட்டப்பட்ட பின்னர்தான் உங்களுக்கு பணிகள் தொடங்கப்போகின்றன. அஸ்தினபுரிக்கு இன்று நிலைப்படையே இல்லை. எட்டு காவல்மையங்களிலாக நிலைகொண்டிருக்கும் சிறிய காவல்படை மட்டுமே உள்ளது. நீங்கள் இருந்து எங்கள் படைகளை ஒருங்கமைக்கவேண்டும்” என்றாள்.
VENMURASU_EPI_101
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
விதுரன் எழுந்து தலைவணங்கி “இளவரசர்கள் வந்திருக்கிறார்கள்” என்றான். சத்யவதி “இளவரசர்களா? மந்தணஅவைக்கு அவர்களை வரும்படி நான் சொல்லவில்லையே” என்றாள். “ஆம், ஆனால் இளைய இளவரசர் இன்னும்கூட காந்தாரரை அறிமுகம் செய்துகொள்ளவில்லை. அவ்வறிமுகத்தை மூத்த இளவரசர் செய்விப்பதே முறையாகும். இங்கே பேரரசியின் முன்னால் அது நிகழலாமே என எண்ணினேன்.” சத்யவதியின் கண்களில் ஒரு சிறிய ஒளி தெரிந்து அணைந்தது. அவள் புன்னகையுடன் “அவ்வாறே ஆகுக” என்றாள்.
விதுரன் கதவைத்திறந்தபோது வியாஹ்ரதத்தர் துணையுடன் திருதராஷ்டிரன் வாசலில் நின்றிருந்தான். “அரசே, இந்த மந்தணஅவைக்கு தாங்கள் வருவது உவகையளிக்கிறது” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “மந்தண அவையா? என்னிடம் நீ அழைப்பதாகத்தானே தளபதி சொன்னார்?” என்றான். “ஆம், நான் இங்கே அழைத்துவரச்சொன்னேன்… வாருங்கள்” என்றான் விதுரன். அவனை விதுரனே கைப்பிடித்து அரிமுகம் துலங்கிய பீடத்தில் அமரச்செய்தான். வியாஹ்ரதத்தர் தலைவணங்கியபோது விதுரன் “அமருங்கள் படைத்தலைவரே” என்றான். அன்றுவரை மந்தண அவைக்குள் அமர்ந்திராத வியாஹ்ரதத்தர் திகைத்தபின் தலை வணங்கி அமர்ந்துகொண்டார்.
திருதராஷ்டிரன் உடலெங்கும் அணிகள் பூண்டு முகபடாமணிந்த பட்டத்து யானை போலிருந்தான். தன் செம்பட்டுச் சால்வையை தரையில் இருந்து இழுத்து மடிமீது போட்டுக்கொண்டு பெரிய கைகளை மடிமீது வைத்துக்கொண்டான். “பேரரசிக்கும் பிதாமகருக்கும் காந்தாரருக்கும் தலைவணங்குகிறேன். தங்களுடன் அவையமர்வது என்னை பெருமைப்படுத்துகிறது” என்றான். சத்யவதி “உன்னைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம் தார்த்தா” என்றாள்.
விதுரன் எழுந்து வாயிலைத் திறந்தபோது தீர்க்கவியோமருடன் பாண்டு நின்றுகொண்டிருந்தான். “இளையமன்னருக்கு மந்தண அவைக்கு நல்வரவு சொல்கிறேன்” என்றான் விதுரன். “இங்கே வருவதாக என்னிடம் சொல்லப்படவில்லை. நான் அவைக்குரிய ஆடைகள் அணியவில்லை” என்றான் பாண்டு. “ஆம், ஆனால் இது மந்தண அவை. இங்கே உடைநெறிகளேதுமில்லை. வருக” என விதுரன் அவனை உள்ளே அழைத்து அமரச்சொன்னான். தீர்க்கவியோமரிடம் “அமைச்சர்களும் தளகர்த்தர்களும் வந்துவிட்டார்களென்றால் அனைவரும் மன்றமரலாமே” என்றான்.
சிறு திகைப்புடன் தீர்க்கவியோமர் தலைவணங்கினார். அவரும் விப்ரரும் லிகிதரும் சோமரும் வைராடரும் சத்ருஞ்சயரும் உக்ரசேனரும் உள்ளே வந்து பீடங்களில் அமர்ந்துகொண்டனர். சகுனி அவர்கள் ஒவ்வொருவரின் வணக்கத்தையும் ஏற்று தலைதாழ்த்தினான். பீஷ்மர் அசையாமல் அனைத்தையும் பார்த்தபடி சுடர்கள் அசையும் விழிகளுடன் அமர்ந்திருந்தார்.
“அரசே, தங்கள் இளையவருக்கு காந்தாரரை தாங்கள்தான் அறிமுகம் செய்துவைக்கவேண்டும்” என்றான் விதுரன். “நானா…? ஆம்” என முனகியபடி திருதராஷ்டிரன் எழுந்தான். “பாண்டு… எங்கே இருக்கிறாய்?” பாண்டு எழுந்து திருதராஷ்டிரன் அருகே சென்று அவன் கையைப்பற்றி “மூத்தவரே இங்கே” என்றான். “சௌபாலரே இவன் என் தம்பி. என் குருதி. இந்நாட்டின் இளையமன்னன்” என்றான் திருதராஷ்டிரன். பாண்டுவின் வலக்கையைப் பற்றி அதை இழுத்து சகுனியை நோக்கி நீட்டி “அவன் கைகளைப் பற்றிக்கொள்ளுங்கள். இனி எனக்கு மட்டுமல்ல இவனுக்கும் தாங்கள்தான் காவல்” என்றான்.
சகுனி பாண்டுவின் கைகளைப்பற்றிக்கொண்டான். திருதராஷ்டிரன் “தம்பி, அவர் கைகளைப்பற்றிக்கொள். இந்நாடும் நம் வாழ்வும் இனி இவர் கைகளில் திகழ்வதாக” என்றான். பாண்டு “ஆம் மூத்தவரே, தங்கள் ஆணை, தங்கள் அருள்” என்றான். சகுனி புன்னகையுடன் “அஸ்தினபுரியின் இளையமன்னருக்கு காந்தாரத்தின் வாழ்த்துக்கள். மாமன்னர் சுபலருக்காகவும் மன்னர் அசலருக்காகவும் என் முடி தங்களைப் பணிகிறது” என்றபின் மேலும் விரிந்தபுன்னகையுடன் “விசித்திரவீரியரின் இறுதிமைந்தர் இருக்கையில் தங்கள் இருவருக்கும் தெய்வங்களின் துணைகூடத் தேவையில்லை அரசே” என்றான்.
சத்யவதி சிரித்தபடி “ஆம் உண்மை… இவர்களை எண்ணி நான் அடையும் கவலை எல்லாம் இவனை நோக்குகையில் நீங்குகிறது. இவனுடைய மதியாலும் அறத்தாலும் இந்நாடு வாழும்” என்றாள். விதுரன், “நற்சொற்களால் என்னை வாழ்த்துகிறீர்கள் காந்தாரரே. நான் என்றும் என் தமையன்களின் ஏவலன்” என்றான். சத்யவதி “ஆம், ராகவ ராமனின் இளைய தம்பியர் அவ்வண்ணமே இருந்தனர் என்கிறது புராணம்” என்றாள். அவர்கள் பீடங்களில் அமர்ந்துகொண்டனர்.
திருதராஷ்டிரன் சற்று நிலைகொள்ளாதவனாக இருந்தான். “விதுரா, மூடா எங்கிருக்கிறாய்? என் அருகே வந்து நிற்கவேண்டுமென எத்தனைமுறை உன்னிடம் சொல்லியிருக்கிறேன்?” என கீழுதட்டை நீட்டி தலையைத் திருப்பிச் சொன்னான். “அரசே, நான் தங்களருகேதான் அமர்ந்திருக்கிறேன்” என்றான் விதுரன். சத்யவதி புன்னகையுடன் “நான் பேசவந்தது அப்படியே நிற்கிறது. அஸ்தினபுரியின் அரியணை காத்திருப்பதைப்பற்றிச் சொன்னேன்” என்றாள். “ஆம், மூத்த இளவரசர் முடிசூடும் நாளை நாம் இப்போதே முடிவுசெய்துவிடுவதே நன்று” என்றான் சகுனி.
விதுரன் “இளையவரின் கருத்தையும் நாம் கேட்டுக்கொள்ளலாமே” என்றான். பாண்டு புன்னகையுடன் “என் கருத்தா? முதல்முறையாக அது கேட்கப்படுகிறது இல்லையா?” என்றான். மேலும் சிரிப்பு விரிய “பேரரசியே, பிதாமகரே, என்னுடைய கருத்தென்பது எப்போதும் என் தம்பியின் கருத்தேயாகும். அவன் சொல்லும் சொற்களும் சொல்லவிருக்கும் சொற்களும் என்னுடையவை” என்றான். சத்யவதி சிரித்தபடி “தெளிவாகச் சிந்திக்கிறாய் பாண்டு” என்றாள்.
“இளவரசே, இந்தநாட்டின் இளையமன்னர் நீங்கள். இளையவரின் கடமையையும் உரிமையையும் இரண்டாகவே நம் நூல்கள் பகுத்துவைத்திருக்கின்றன. மூத்தவரின் மணிமுடியைக் காத்து நிற்பதும் அவரது எண்ணங்களுக்கு கட்டுண்டிருப்பதும் குலமுறைப்படி தங்கள் கடமை. ஆனால் இந்நாட்டின் நேர்பாதி நிலம் தங்களுக்கு உரிமை. மூத்தவர்மீது நீங்கள் மனவேறுபாடுகொண்டீர்களென்றால் எப்போதுவேண்டுமென்றாலும் உங்கள் நிலத்தை நீங்கள் அவரிடம் கோரிப்பெறமுடியும். தன்னாட்சி புரியவும் முடியும். அதற்காக தமையனிடம் போர்புரிவதற்கும் ஷத்ரியமுறை ஒப்புக்கொள்கிறது.”
பாண்டு நகைத்தபடி “பாதி நிலமா? ஒன்றுசெய்யலாம் தம்பி. நிலத்தை பகலில் தமையன் ஆளட்டும். இரவில் நான் ஆள்கிறேன்…எனக்கு இரவில்தான் கண்கள் தெளிவாக உள்ளன” என்றான். சத்யவதி “இதென்ன விளையாட்டு? நாம் மணிமுடிசூடுவதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றாள். “ஆம்… விதுரா மூடா, என்ன விளையாடுகிறாய்? ஒரே அடியில் உன் மண்டையை உடைத்துவிடுவேன்” என்றான் திருதராஷ்டிரன்.
“அனைத்தும் விளையாட்டுதானே?” என்றான் விதுரன். “இளவரசே, உங்களுக்குரிய பாதிநிலத்துக்கும் மூத்தவர் மன்னராவதை நீங்கள் ஏற்கிறீர்களா?’ பாண்டு நகைத்து “இந்த பாரதவர்ஷத்துக்கே அவர் மன்னராகவேண்டும் என்று நினைக்கிறேன்” என்றான். “அவ்வண்ணம் நீங்கள் எண்ணினீர்களென்றால் உங்கள் நிலத்தை மூத்தவருக்கு முறைப்படி விருப்பக்கொடையாகக் கொடுக்கலாமே” என்றான் விதுரன்.
அவன் எங்கு வந்திருக்கிறான் என்பதை அப்போதுதான் சத்யவதியும் அமைச்சர்களும் புரிந்துகொண்டனர். “நீ என்ன பேசுகிறாயென்று தெரிகிறதா? தெய்வத்தைக் கிள்ளி தெய்வத்துக்கே படைப்பதுபோல அவரது நாட்டை நான் அவருக்கே கொடையளிக்கவேண்டுமா? இதென்ன மூடத்தனம்?” என்றான் பாண்டு. “ஆம்… ஆனால் இது ஒரு விளையாட்டு. ஆடத்தொடங்கிவிட்டோம். ஆடிமுடிப்போமே. இளவரசே, நீங்கள் உங்கள் தமையனிடம் பரிசில்பெற்றுக்கொண்டு இந்த நாட்டில் உங்களுக்குரிய பாதியை உங்கள் தமையனுக்கு நீரளித்துக் கொடுக்கிறீர்கள்…”
விதுரன் அந்த அஸ்வதந்த வைரத்தை எடுத்தான். “காந்தாரத்தின் கருவூலத்துக்கு நிகரான வைரம் இது. பல்லாயிரம் புரவிகளுக்கு நிகரானது. அஸ்தினபுரியின் கருவூலத்தை இது சற்றுமுன்னர்தான் வந்தடைந்தது. இதை விலையாக அளித்து உங்களிடமிருந்து மூத்த இளவரசர் தங்கள் பங்கான நாட்டை பெற்றுக்கொள்கிறார். மண்ணுக்கு மணி விலையாகுமென நூல்கள் சொல்கின்றன” என்றான். “அரசே, எழுந்து நில்லுங்கள்”
“என்ன இது? எனக்கு ஒன்றுமே புரியவில்லை…” என முனகியபடி திருதராஷ்டிரன் எழுந்து நின்றான். “என் தம்பியிடமிருந்து நான் ஏன் நிலத்தைப் பெறவேண்டும்? ஓங்கி ஓர் அறைவிட்டால் அவனே நிலத்தை எனக்குக் கொடுக்கப்போகிறான்… விதுரா, நீ பேரரசியையும் பிதாமகரையும் விளையாட்டில் சேர்த்திருக்கிறாயா?” விதுரன் “கைநீட்டுங்கள் அரசே” என்றான். திருதராஷ்டிரன் கைநீட்ட அந்த தங்கப்பேழையை அவன் கைகளில் கொடுத்தான். “இதை தங்கள் தம்பிக்கு அளியுங்கள்”
பாண்டு எழுந்து நின்று இருகைகளாலும் அதைப்பெற்றுக்கொண்டான். “சொல்லுங்கள் அரசே, விலைமதிப்பற்ற இந்த வைரத்தை அளித்து உன் மண்ணை நான் விலையாகப் பெற்றுக்கொள்கிறேன்” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் அதை தெளிவில்லாமல் முணுமுணுத்தான். “இளவரசே கைநீட்டுங்கள்” என்றான் விதுரன். பாண்டு கைநீட்ட அங்கிருந்த குவளைநீரை எடுத்து அவன் இடக்கையில் அளித்தான். விதுரன் “என் நிலத்தை இம்மணிக்கு ஈடாக என் தமையனுக்குக் கையளிக்கிறேன் என்று சொல்லி நீரூற்றுங்கள்” என்றான்.
பாண்டு நீரை ஊற்றியபடி தெளிவான குரலில் “என் தமையனின் பாதங்களில் என் பங்கு நிலத்தை இம்மணிக்கு ஈடாக வைக்கிறேன். அவர் நாடும் மங்கலங்களும் பொலியட்டும். அவர் புகழ் பாரதவர்ஷமெங்கும் பரவட்டும். அவரது குலங்கள் பெருகட்டும். அவர் விரும்பியதனைத்தையும் அடைந்து நிறைவுறட்டும்” என்றான்.
திருதராஷ்டிரன் “இதென்ன நாடகம். அவன் ஒன்றும் தெரியாத மடையன். அவனை அழைத்துவந்து…” என்று முனகியபடி சொன்னான். பாண்டு கைகூப்பியபடி குனிந்து திருதராஷ்டிரனின் பாதங்களைத் தொட்டு “தங்கள் பாதங்களில் நான் அடைக்கலம் மூத்தவரே” என்றான்.
“எழுந்திரு… டேய் எழுந்திரு… இதென்ன, உனக்கு இனிமேல்தானா நான் வாழ்த்துச் சொல்லவேண்டும்? விதுரா மூடா…நீ இப்போது என் கையருகே வந்தாயென்றால் உன் இறுதிக்கணம் அது” என்று திருதராஷ்டிரன் திரும்பிப்பார்த்தான். கைகளை ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டு “எங்கே நிற்கிறாய்?” என்றான்.
விதுரன் “அரசே அமர்ந்துகொள்ளுங்கள்… பேரரசி முடிசூட்டுநாளை அறிவிக்கவிருக்கிறார்கள்” என்றான். “நீ முதலில் என் கையருகே வா… உன்னை ஒரு அடியாவது அடிக்காமல் நான் அமையமாட்டேன்.” விதுரன் விலகி நின்று சிரிக்க சத்யவதியும் சிரித்து தன் வாயை கையால் மறைத்துக்கொண்டாள்.
சகுனி “ஆக, இனி எந்தத் தடையுமில்லை. பேரரசி நாளை அறிவித்துவிடலாம்” என்றான். சத்யவதி பீஷ்மரிடம் “தேவவிரதா, நீ என்ன நினைக்கிறாய்?” என்றாள். “ஆம் அறிவித்துவிடவேண்டியதுதான்…” என்றார் பீஷ்மர்.
சத்யவதி “அமைச்சர்களே வரும் இளவேனில் முடிவுக்குள் நிமித்திகர்களிடம் நாள்குறிக்கச் சொல்லுங்கள்” என்றாள். “அஸ்தினபுரியின் அரியணையில் என் சிறுமைந்தன் திருதராஷ்டிரன் அமரவேண்டுமென நான் ஆணையிடுகிறேன்!” அமைச்சர்கள் ஒரே குரலில் “அவ்வண்ணமே ஆகுக” என முழங்கினர். பீஷ்மரும் சகுனியும் பாண்டுவும் கைகூப்பி தலைவணங்கினார்கள்.
விதுரன் திருதராஷ்டிரன் அருகே நெருங்கி “அரசே எழுந்து பேரரசியின் கால்களைப் பணியுங்கள்” என்றான். “எங்கே?” என்றான் திருதராஷ்டிரன். “உங்கள் முன்னால்” திருதராஷ்டிரன் எழுந்து தன் பெரிய கருங்கைகளை நீட்டியபடி முன்னால் வர சத்யவதி எழுந்து அவனைப்பற்றிக்கொண்டாள். அவன் குனிந்து அவள் பாதங்களைத் தொட அவள் கண்விளிம்பில் கண்ணீருடன் அவனை தன்னுடன் சேர்த்து தழுவிக்கொண்டாள். அவன் மார்புக்குவையில் அவள் முகம் அழுந்தியது. “நீ அனைத்துச் செல்வங்களையும் வெற்றியையும் சிறப்பையும் அடைந்து நிறைவாழ்வு வாழவேண்டும் மகனே” என அவள் சொல்லி முடிப்பதற்குள் தொண்டை அடைத்தது. உதடுகளை இறுக்கிக்கொண்டாள். கண்களை மூடி இமைப்பீலிகளை விழிநீர் நனைக்க அவன் மார்பில் முகம் சேர்த்தாள்.
திருதராஷ்டிரன் தன் பெரிய விரல்களால் அவள் முகத்தைத் தொட்டான். அவள் தலையையும் தோள்களையும் கழுத்தையும் வருடினான். அவனால் ஏதும் பேசமுடியவில்லை. அவன் சதைக்கோள விழிகள் நீருடன் ததும்பின. உதடுகள் நெளிந்தன.
விதுரன் “அரசே, பிதாமகர் கால்களையும் பணியுங்கள்” என்று அவன் கைகளைப்பற்றி திருப்பினான். திருதராஷ்டிரன் பீஷ்மரின் கால்களை பணியப்போக அவர் அதற்கு முன்னரே அவனை அள்ளி தன் மார்புடன் அணைத்து இறுக்கிக்கொண்டார். ஒரு சொல்கூட இல்லாமல் நடுங்கும் கைகளின் அணைப்பாலேயே அவனை வாழ்த்தினார்.
விதுரன் “லிகிதரே, முதலில் நிமித்திகர் நாள்குறிக்கட்டும். கணிகர் தருணம்குறிக்கட்டும். நாள்முடிவானதும் பாரதவர்ஷமெங்கும் செய்தி செல்லட்டும். வியாஹ்ரதத்தர் பெரிய அரசியிடமும் சோமர் சிறிய அரசியிடமும் நேரில்சென்று செய்தியை அறிவியுங்கள்” என்றான். அவர்கள் தலைவணங்கி “ஆணை” என்றார்கள்.
அவர்கள் வெளியேறியதும் விதுரன் தலைவணங்கினான். “பேரரசியும் காந்தாரரும் பிதாமகரும் மேலும் உரையாடலாம். அரசரை நான் அந்தப்புரம் சேர்க்கிறேன்” என்றான். “ஆம்… அவன் மிகவும் கிளர்ச்சியுற்றிருக்கிறான்” என்றாள் சத்யவதி.
திருதராஷ்டிரனை வெளியே கைப்பிடித்து அழைத்து வந்தான் விதுரன். கண்களில் இருந்து கண்ணீர் வழிய அவன் விம்மிக்கொண்டிருந்தான். “வியாஹ்ரதத்தரே, அரசரை அவர் அன்னையிடம் சேருங்கள்” என்று விதுரன் ஆணையிட்டான். அவர் வந்து திருதராஷ்டிரன் கைகளைப் பற்றிக்கொண்டார். திருதராஷ்டிரன் தலையை வான்நோக்கி சற்றே தூக்கி கண்ணீர் வழியும் முகத்துடன் நடந்து சென்றான்.
பாண்டு விப்ரருடன் வெளியே வந்தான். கதவு மூடுவதை திரும்பிப்பார்த்தபின் விதுரனை நோக்கி புன்னகைசெய்து “ஒவ்வொரு சொல்லிலும் நீ ஒளிவிடுகிறாய் தம்பி… அனைத்தையும் கொண்டுசென்று சேர்த்துவிட்டாய்” என்றான்.
“என் கடமை” என்றான் விதுரன். பாண்டு “இந்த வைரத்தை வைத்து நான் என்னசெய்யப்போகிறேன்? எனக்கு பாவைகளை வைத்து விளையாடுவதில் இனி ஆர்வமில்லை. இந்த வைரத்தை உனக்கு அளிக்கிறேன்” என்று அதை நீட்டினான். “மூத்தவரே” என விதுரன் ஏதோ சொல்லவர அதைத் தடுத்து “விலைமதிப்பற்ற ஒன்றை உனக்களிக்கவேண்டுமென நினைத்தேன். நான் உன் மீது கொண்டுள்ள பேரன்புக்கு அடையாளமாக என்றும் திகழும் ஒன்றை… இது அவ்வாறு அமையட்டும்” என்றான் பாண்டு.
விதுரன் வைரத்தை வாங்கிக்கொண்டு கண்களில் ஒற்றிக்கொண்டான். “மூத்தவரே தங்கள் அன்புக்கு நிகராக நான் எதையும் எண்ணுபவன் அல்ல” என்றபின் பெருமூச்சுடன் தலைவணங்கினான். “மீண்டும் சந்திப்போம் தம்பி. அந்தப்புரத்தில் அரியதோர் நாடகம் நிகழவிருக்கிறது. இன்றிரவு ஒன்பது சுவைகளுக்கும் குறையிருக்காது” என்று சிரித்தபின் பாண்டு நடந்துசென்றான்.

4/29/14

பகுதி பத்து : அனல்வெள்ளம்[ 3 ]

பகுதி பத்து : அனல்வெள்ளம்[ 3 ]
விதுரன் அம்பாலிகையின் மாளிகைமுற்றத்தை அடைந்தபோது அவனுக்காக சாரிகை காத்து நின்றிருந்தாள். அவளை நோக்கி ஓடிவந்து “சிறிய அரசியார் சினம் கொண்டு உங்கள் மாளிகைக்கே கிளம்பிவிட்டார்கள் அமைச்சரே. நான் அது பீடன்று என்று அவர் கைகளைப்பற்றி அமைதிப்படுத்தினேன்” என்றாள். “வந்திருக்கலாமே, ஏழை அமைச்சனுக்கு அது பெரிய கௌரவமாக அமைந்திருக்குமல்லவா?” என்றான் விதுரன். அவள் திகைத்தபின் “ஆனால்…” என்று சொல்லவந்து அதன்பின்னரே விதுரன் நகையாடியிருக்கிறான் என்று புரிந்துகொண்டு புன்னகை செய்தாள்.
மாளிகைக்குள் முகமண்டபத்தில் பீடத்தில் விதுரனை அமரச்செய்துவிட்டு சாரிகை உள்ளே ஓடினாள். உள்ளே உரத்தகுரலில் அம்பாலிகை “அவனை நான் சந்திக்கப்போவதில்லை என்று சொல். உடனடியாக அவன் இங்கிருந்து கிளம்பியாகவேண்டுமென்று சொல்” என்று சொல்வது கேட்டது. “அப்படியென்றால் நான் கிளம்புகிறேன் சிறிய அரசி…” என விதுரன் எழுந்ததுமே அம்பாலிகை பாய்ந்து வெளியே வந்து “நீ யாருடைய பணியாள் என்று எனக்குத்தெரியும்… நான் அழைத்தபோது நீ ஏன் தவிர்த்தாய் என்றும் புரிந்துகொண்டேன்” என்று முகம் சிவக்க கூவினாள்.
“அரசி, நான் இந்த நாட்டை ஆளும் பேரரசியின் பணியாள். வேறு எவருடைய பணியாளும் அல்ல” என்றான் விதுரன். “பேரரசியே இன்று அவளுடைய பணியாளாக இருக்கிறாள் என நானறிவேன். எனக்கு இந்த அஸ்தினபுரியில் எவருமில்லை. அன்புக்கோ ஆதரவுக்கோ எந்தக்குரலும் இல்லை” மூச்சிரைக்க அம்பாலிகை பீடத்தில் விழுவதுபோல அமர்ந்தாள். தன் தலையை கைகளில் ஏந்தியபடி “ஆனால் எனக்கு என் தெய்வங்களின் துணை உண்டு. இக்கணம் வரை என் தெய்வங்கள் என் முறையீட்டை கேளாமலிருந்ததில்லை. என்னை தன் சேடியாக ஆக்கவேண்டுமென அவள் எண்ணினாள். என் வேண்டுகோளைக் கேட்ட தெய்வங்கள் அவள் மகனை விழியிழந்த மூர்க்கனாக்கின. இன்று அந்த அரக்கனை அரசனாக்க எண்ணுகிறாள். என் தெய்வங்கள் ஒருபோதும் அதை அனுமதிக்காது” என்றாள்.
விதுரன் எந்த உணர்ச்சியும் தெரியாத முகத்துடன் “அரசி, முறைப்படி அவர் இந்நாட்டுக்கு மன்னர். முறைமை மீறப்படுவதை மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. மக்களும் சான்றோரும் ஏற்றுக்கொள்ளாத அரசுகள் நீடிப்பதுமில்லை” என்றான். “மக்களும் சான்றோரும் தொல்நெறிக்கும் நூல்நெறிக்கும் கட்டுப்பட்டவர்கள். விழியிழந்தவர் அரசாள எந்த நெறி ஒப்புகிறது?” என்றாள் அம்பாலிகை. “ஒப்பும் நெறிகள் பல உள்ளன. அவற்றை கண்டறிந்தபின்னரே மூத்த இளவரசரை மன்னராக்கும் முடிவை பேரரசியும் பிதாமகரும் எடுத்திருக்கிறார்கள்.”
“அது பொய்நெறி… அந்த நெறிகளும் நூல்களும் சமைக்கப்பட்டவை… நானறிவேன்… என்ன நடக்கிறதென நான் நன்றாகவே அறிவேன்” என அம்பாலிகை உடைந்த குரலில் கூவினாள். “அரச ஓலை ஒன்றை வாசித்தறியமுடியாதவன் எப்படி நாடாளமுடியும்? எந்த நூல் அதை ஒப்பும்?” என்றாள். “அரசி, வெயிலில் நிற்கமுடியாதவர் மட்டும் நாடாளலாமா?” என்றான் விதுரன். சினத்துடன் பாய்ந்தெழுந்த அம்பாலிகை “அவன் ஏன் வெயிலில் நிற்கவேண்டும்? வெண்கொற்றக்குடைக்கீழ் நிற்கட்டும்… அவனுக்குக் கவரி வீச பாரதத்தின் முடிமன்னர்கள் வந்து நிற்பார்கள்” என்றாள்.
விதுரன் “தங்கள் சினம் எனக்குப்புரியவில்லை அரசி” என்றான். “எதனால் மூத்தமன்னரின் முடிசூட்டை நீங்கள் விரும்பவில்லை… தங்கள் மைந்தர் மன்னராகவேண்டுமென்பதற்காகவா? இங்கே எவர் முடிசூடினாலும் தங்கள் மைந்தர் அரசநிலையில்தானே இருப்பார்?” அம்பாலிகை கண்களில் நீர்ப்படலத்துடன் சினத்தில் நெளிந்த உதடுகளுடன் “அந்த வீண்சொற்களை நான் இனிமேலும் நம்பப்போவதில்லை. அவன் முடிசூடினால் அந்த முடி இருக்கப்போவது அவள் மடியில். விழியிழந்தவனை முன்வைத்து அவள் இந்த நாட்டின் பேரரசியாகவிருக்கிறாள். அவள் காலடியில் என் மகன் இரந்து நிற்பதை நான் ஒருபோதும் ஒப்பமாட்டேன்” என்றாள்.
“அரசி, உங்கள் அச்சங்கள் என்ன?” என்று அவள் கண்களைக் கூர்ந்து நோக்கி விதுரன் கேட்டான். அவள் கண்கள் திடுக்கிட்டு அதிர்ந்தன. “அச்சமா?” என்றாள். “ஆம் நீங்கள் அஞ்சுவது எதை? எதன்பொருட்டு நீங்கள் துயில்நீக்குகிறீர்கள்?” அம்பாலிகை “எனக்கு எந்த அச்சமும் இல்லை. நான் நூல்முறைக்காக மட்டுமே பேசுகிறேன்” என்றாள். ஆனால் ஒருகணத்தில் அவள் நெஞ்சு விம்ம குரல் உடைந்தது. “என் மகனுக்கு எவருமில்லை. அவன் வலிமையற்றவன். அவன்…” உதடுகளை அழுத்தி கண்களை மூடி அவள் அவ்வெண்ணத்தை அடக்கமுயன்றாள். அதைமீறி அது வெளிவந்தது. “அவனுக்கு ஆண்மையும் இல்லை.”
அச்சொற்களை அவளே கேட்டு அஞ்சியதுபோல திகைத்து அவனை நோக்கினாள். அவள் உதடுகள் மெல்லப்பிரிந்த ஒலி அவனுக்குக் கேட்டது. அந்தச்சொற்களை எப்படிக் கடந்துசெல்வது என அவளுக்குத்தெரியவில்லை. அக்கணமே உடைந்து அழத்தொடங்கினாள். “என் பிழைதான். என் பெரும்பிழைதான் அனைத்துமே… அவனை நான்தான் வெண்பளிங்கு பாண்டுரனாகப் பெற்றேன். என் பேதமையே என் உதரத்தில் கருக்கொண்டது. நானேதான் என் புதல்வனுக்கு எதிரி” என தலையை அறைந்துகொண்டு அழுதாள்.
ஒரு சொல்கூட பேசாமல் விதுரன் அவளை நோக்கி அமர்ந்திருந்தான். அழுகை பெண்களை சமநிலைக்குக் கொண்டுவரும் என்றும், அழும்போது அவர்களை ஆறுதல்படுத்தமுயல்வது தீயை நெய்யால் அணைக்கமுயல்வது என்றும் அவன் அறிந்திருந்தான். அவர்கள் மீண்டபின் மழைவிடிந்த வானென மனம் இருக்கையில் ஒவ்வொரு சொல்லும் வீரியம் கொண்ட விதைகளாகுமென்றும் அவன் கணித்திருந்தான். வலுத்த கேவல்களால் உடலதிர, தொண்டையும் கன்னங்களும் இழுபட்டுத் துடிக்க, அம்பாலிகை அழுதாள். மேலாடையால் கண்ணீரை துடைத்துக்கொண்டே இருந்தாள். ஈரமரங்களை உலுக்கும் மழைக்காற்று போல விம்மல்கள் அவள் அழுகையை உதறச்செய்தன.
அம்பாலிகை பெருமூச்சுடன் அவனைப்பார்த்தாள். “ஆம், என் மைந்தன் ஆற்றலற்றவன். தன்னைப்பார்த்துக்கொள்ள இயலாதவன். விழியிழந்தவனுக்காவது உடல்வல்லமை என ஒன்றிருக்கிறது. சின்னாட்களில் அவனுக்கு மைந்தர்கள் பிறப்பார்கள். பதினொரு மனைவியரை அந்தப்புரத்தில் நிறைத்து வைத்திருக்கிறான். அவன் புதல்வர்கள் நாளை இந்நாட்டை நிறைப்பார்கள். அவளுடைய ஆணவமும் அலட்சியமும் அவர்களில் பேருருவம் கொண்டிருக்கும்… ஆம் அது உறுதி… அதை இப்போதே காண்கிறேன். அப்படியென்றால் என் மைந்தன் என்ன ஆவான்? முதுமையில் இழிவுண்டு கைவிடப்பட்டு தனித்து இறப்பானா என்ன?”
உதட்டை இறுக்கியபடி கண்கள் விரிய அவள் சொன்னாள். “ஒருபோதும் அதற்கு நான் ஒப்பமாட்டேன். என் அகத்தின் கடைத்துளி எஞ்சும்வரை என் மைந்தனுக்குரிய இடத்தை அவனுக்குப் பெற்றுக்கொடுக்கவே நான் போரிடுவேன். அதற்காக எப்பழியை ஏற்றாலும் சரி. எவரால் வெறுக்கப்பட்டாலும் சரி. என் அறம் அதுவே… ஆம்…” அவள் கண்களில் பித்தின் ஒளி குடியேறியபோது அவள் இன்னொருத்தியாக உருமாறினாள்.
“நான் என் தமக்கையின் கைபற்றி இந்நகரில் நுழைந்தவள். அவளை என் அன்னையின் இடத்தில் அமைத்திருந்தவள். ஆனால் அவள் உதரத்தில் கருநுழைந்ததுமே அறிந்தேன், அவள் என் அன்னை அல்ல என்று. அவள் அக்கருவுக்கு மட்டுமே அன்னை என்று. அக்கருவுக்கு உணவு தேவையென்றால் என்னைக் கொன்று உண்ணவும் அவள் தயங்கமாட்டாளெனறு ஒருநாள் உணர்ந்தபோதுதான் நான் என்னையும் கண்டடைந்தேன். நானும் எவருடைய தங்கையுமல்ல. நான் என் மைந்தனின் அன்னை மட்டுமே. வேறு எவரும் அல்ல, அன்னை. என் மைந்தனுக்குத் தேவை என்றால் என் அனைத்து தெய்வங்கள் முகத்திலும் காறியுமிழத் தயங்க மாட்டேன்.”
அதை அவள் தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறாள் என்று விதுரன் எண்ணினான். அழுதபோதே அவள் உணர்ச்சிகள் கீழிறங்கத் தொடங்கிவிட்டன. சொற்கள் வழியாக அவற்றை உந்தி உந்தி மீண்டும் வானில் நிறுத்த முயல்கிறாள். அந்த உணர்ச்சிகளின் உச்சியில் அவள் தன்னுள் அறியும் தன் ஆற்றலை விரும்புகிறாள். அந்த நிலையில் தன்னை வகுத்து நிலைநிறுத்திக்கொள்ள விழைகிறாள். அதற்காகச் சொற்களை சுற்றிச்சுற்றி அடுக்கிக்கொள்கிறாள். ஆனால் திறனற்ற சொற்களைத்தான் அவளால் சொல்லமுடிகிறது. இத்தருணத்தில் எத்தனையோ அன்னையர் சொல்லிச் சொல்லி ஆற்றுக்கு அடியில் கிடக்கும் உருளைக்கல் போல மழுங்கி விட்ட சொற்களை.
இவள் சற்று காவியம் கற்றிருக்கலாம் என விதுரன் எண்ணிக்கொண்டான். காவியம் இந்தப் பொய்யுணர்ச்சிகளை மெய்யாகக் காட்டும் சொற்களை அளிக்கும். நம்மைநாமே உச்சங்களில் எவ்வளவுநேரம் வேண்டுமென்றாலும் நிறுத்திக்கொள்ளமுடியும். இப்படி பேதையென உருண்டு கீழிறங்கவேண்டியதில்லை. இல்லை, இவை பொய்யுணர்ச்சிகளல்ல. இவை மெய்யே. ஆனால் அரைமெய். அரைமெய் என்பது அரைப்பொய். அரைப்பொய் என்பது பொய்யை விட வல்லமை மிக்கது. பொய் கால்களற்ற மிருகம். அரைப்பொய் மெய் என்னும் நூறுகைகால்கள் கொண்ட கொலைமிருகம்.
அவள் மறைப்பது ஒன்றைத்தான். அவளைச்சூழ்ந்திருக்கும் அனைத்துவிழிகளிலும் அவளை அவர்கள் வகுத்துக்கொண்டிருக்கும் விதத்தை அறிந்துகொண்டிருக்கிறாள். அரசமகள் என்றாலும் ஆற்றலும் அறிவும் இல்லாத பேதை. இளமையில் அவளில் அழகை விளைவித்த அந்தப்பேதமை முதுமையை நெருங்கும்தோறும் இளிவரலை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இளமையில் தன் பேதமையில் மகிழ்ந்து நகைத்த சுற்றவிழிகளெல்லாம் எக்கணத்தில் இளிநகையை காட்டத் தொடங்கின என அவள் அகம் திகைக்கிறது. ஒவ்வொரு கணமும் தன் இழிச்சித்திரத்தை அவ்விழிகளில் கண்டு கூச்சம் கொள்கிறது. பேதைநாடகத்தை மீளமீள ஆடி மேலும் அன்பைக் கோருகிறது. அன்புக்குப்பதில் மேலும் இளிவரலே வரக்கண்டு ஒரு கட்டத்தில் சினந்து சீறித் தலைதூக்குகிறது.
இவளுக்கு இன்று தேவை ஒரு மணிமுடி, ஒரு செங்கோல். ஒருவேளை அலகிலா ஊழ்நடனம் அவற்றை இவள் கையில் அளிக்குமென்றால் பாரதவர்ஷம் கண்டவர்களிலேயே மிகக்கொடூரமான ஆட்சியாளராக இருப்பாள். இவள் தன்னைப்பற்றி பிறர்கொள்ள விழையும் சித்திரத்தைச் சமைப்பதற்காக குருதியை ஓடவைப்பாள். தோன்றித் தோன்றி தானே அழியும் அச்சித்திரத்தை கற்சிற்பமாக ஆக்க இவள் எத்தனை குருதியை ஓடவிடவேண்டியிருக்கும். பாரதவர்ஷம் அதற்குப் போதுமானதாக இருக்குமா என்ன?
அவன் அமைதியைக் கண்டு அம்பாலிகை தன்னை மெல்ல திரட்டித் தொகுத்துக்கொண்டாள். “என் மைந்தனைப்பற்றி அந்தப்புரத்தில் இளிநகைகளை அவள் பரவவிடுகிறாள் என்று நான் அறிவேன். என் உளவுச்சேடி வந்து சொன்னாள், சூதப்பெண்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று” என்றாள். விதுரன் அவள் நெஞ்சோடும் முறையை உணர்ந்தவன்போல “அவருடைய துணைவி அவரில் மகிழ்ந்திருக்கிறாள் என்றார்கள்” என்றான். ஆனால் அதைப்பற்றிக்கொண்டு மேலேறுவதற்குப் பதிலாக அகத்தின் நுண்ணிய பகுதி ஒன்று தீண்டப்பட்டு அவள் சினந்தெழுந்தாள். “ஆம் மகிழ்ந்திருக்கிறாள். கன்றுமேய்த்து காட்டில் அலைந்த யாதவப்பெண் ஷத்ரியர்களின் மணிமுடியைச் சூடி மாளிகைக்கு வந்திருக்கிறாளல்லவா?” என்றாள்.
விதுரன் பெருமூச்சுவிட்டான். தன்னுள் நிறைவை அறியாத பெண்மனம் பிற எதிலும் நிறைவைக் காண்பதில்லை. “என் மைந்தனின் திறனின்மையை உலகுக்குச் சொல்லும் பெருமுரசமே அவள்தான். ஓங்கி உலகாளும் ஹஸ்தியின் குலம் எப்படி யாதவப்பெண்ணை மணமுடிக்கச் சென்றது? விழியிழந்தவனுக்குக் கூட காந்தாரப்பேரரசி வந்திருக்கிறாளே? அதோ அங்கே கங்கைவெள்ளம் நகர்புகுந்ததுபோல அவள் நாட்டிலிருந்து பெண்செல்வம் வந்து நிறைந்திருக்கிறது என்கிறார்கள். நகரத்தெருக்களே கருவூலங்களாகிவிட்டன என்று சூதர்கள் பாடத்தொடங்கிவிட்டனர் என்கிறார்கள்.‘ என் மைந்தனுக்கு குந்திபோஜன் எட்டு மாட்டு வண்டிகளில் பெண்செல்வம் அனுப்பினான் என்பதை அந்தச்சூதன் சேர்த்துக்கொள்ளாமலா இருப்பான்?”
அம்பாலிகையின் கொந்தளிப்புக்கான தொடக்கமென்ன என்று முன்னரே அறிந்திருந்தாலும் அச்சொற்கள் வழியாக அதைக்கேட்டபோது விதுரனால் புன்னகைசெய்யாமலிருக்க இயலவில்லை. “அது செல்வமா, அஸ்தினபுரிமீது வைக்கப்படும் காந்தாரத்தின் கொலைவாளா என நான் இன்னும் தெளிவடையவில்லை அரசி” என்றான். “ஆம், அதைத்தான் நான் சொல்லவருகிறேன். இந்த அஸ்தினபுரியை இனி ஆளப்போவது யார்? அந்தப்பாலைவனத்து ஓநாய் அல்லவா? அவன் முன் என் மைந்தன் உணவுக்கும் உடைக்கும் இரந்து நிற்கவேண்டுமா?”
“அரசி நான் உறுதியாகச் சொல்லிவிடுகிறேன். இந்த இளவேனிற்காலத்திலேயே மூத்த இளவரசருக்கு மணிமுடிசூட்ட பேரரசி எண்ணியிருக்கிறார்கள். இன்று மாலை அவைச்சந்திப்பில் அச்சொல்லை சகுனிக்கு அளிக்கவுமிருக்கிறார்கள். அம்முடிவை தாங்கள் மாற்றமுடியாது. அதை மனமுவந்து ஏற்கையில் தங்கள் புதல்வருக்கான கொடியும் பீடமும் உறுதியாக இருக்கும். வீண் எதிர்ப்பில் அவைக்கசப்பை ஈட்டினீர்களென்றால் தங்கள் புதல்வருக்குத் தீங்கிழைத்தவராவீர்கள்.”
“விழியிழந்தவன் அரசனாக என்ன நெறியென நானும் விசாரித்தறிந்தேன் விதுரா” என்றாள் அம்பாலிகை. “சுற்றமும் அமைச்சும் அதை முழுதேற்கவேண்டும். திருதராஷ்டிரனின் முதற்சுற்றம் என் மைந்தனே. அவன் ஏற்கவில்லை என்றால் முடிசூட முடியாது. அமைச்சிலும் சிலரது குரலை நான் அவையில் எழுப்ப இயலும்.” விதுரன் அதை அவளிடம் எதிர்பார்க்கவில்லை. “அரசி, தங்களால் இதைக் கையாளமுடியாது. அரசுசூழ்தலை அந்தப்புரத்துச் சேடிப்பெண்களின் அறிவுரையைக்கொண்டு செய்ய இயலாது.”
“நான் செய்யவேண்டியதென்ன என்று நன்கறிவேன்” என்றாள் அம்பாலிகை. “என் மைந்தன் ஒப்புகை இன்றி விழியிழந்தவன் அரசனாகவே முடியாதென்றே நூல்கள் சொல்கின்றன. நீ மன்றில் முன்வைக்கவிருக்கும் மூன்றுநூல்களிலுமே அந்நெறி சொல்லப்பட்டுள்ளது.” விதுரன் பெருமூச்சுடன் “இதுவே தங்கள் எண்ணமென்றால் இதைவெல்ல என்ன செய்யவேண்டுமென்பதையே நான் சிந்திப்பேன் அரசி” என்றான்.
VENMURASU_EPI_100_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
“நான் இதை வீணாக உன்னிடம் கூறவில்லை. இதை நீ பேரரசியிடம் சொல். இன்று காந்தாரனுக்கு வாக்கு என ஏதும் அளிக்கவேண்டாமென்று தடுத்துவிடு!” விதுரன் அவள் முகத்தை நோக்கி “தடுத்துவிட்டு?” என்றான். “என் மைந்தனை இந்த நாட்டின் முழுமணிமுடிக்கும் உரிமையாளனாக ஆக்கமுடியாதென்று நானுமறிவேன். அவள் அதை ஏற்கமாட்டாள்” அவள் அகம் செல்லும் திசையை விதுரன் உய்த்தறிந்தான். “உத்தர அஸ்தினபுரிக்கு பாண்டு மன்னனாகட்டும்” என்றாள் அம்பாலிகை. விதுரன் சொல்ல வாயெடுப்பதற்குள் “அனைத்து அரசுகளிலும் இது நிகழ்ந்திருக்கிறது. இப்போது பாஞ்சாலம் அப்படி இரு நாடுகளாகத்தான் உள்ளது” என்றாள்.
“அனைத்தையும் எண்ணியிருக்கிறீர்கள்” என்றான் விதுரன் சிரித்தபடி. “ஆம், நான் இதையன்றி வேறெதையும் எண்ணுவதில்லை. பேரரசியிடமும் பிதாமகரிடமும் சொல். என் மைந்தனுக்கான மண் இல்லாமல் நான் அமைய மாட்டேன் என. என் மைந்தனை பிறிதொருவரை அண்டி வாழ்பவனாக ஆக்கிவிட்டு மண்மறையப்போவதுமில்லை என்று சொல்!” விதுரன் தலைவணங்கியபடி எழுந்தான். அம்பாலிகை எழுந்தபடி “நான் உனக்கு திருதராஷ்டிரன் மீதிருக்கும் பேரன்பை நன்கறிந்தவள். நீ ஒருபோதும் அவனுக்கு மாறான ஒன்றைச் செய்யமாட்டாய். ஆனால் நீ வியாசமாமுனிவரின் குருதி. அறமறிந்தவன். இவனும் உன் தமையனே. இவனை நீ கைவிடமாட்டாய் என்றறிந்தே உன்னிடம் சொன்னேன். உன் இரு தமையன்களும் முழுநிறைவுடன் வாழ இது ஒன்றே வழி” என்றாள்.
“அவ்வண்ணமே ஆகுக” என்று வணங்கி விதுரன் வெளியே வந்தான். தாழ்வாரத்தில் நடக்கும்போது அவனுள் புன்னகை விரிந்தது. எத்தனை அச்சங்கள். மானுட உறவை இயக்கும் அடிப்படை விசையே அச்சம்தானோ? பிறன் என்னும் அச்சம். தன்னைப்பற்றிய பேரச்சம். கொலையும் அச்சத்தாலேயே. அஞ்சுவதற்கேதுமில்லை என்றால் இவர்களின் உலகமே வெறுமைகொண்டு கிடக்கும்போலும். எளியமனிதர்கள். எளியமனிதர்கள். மிகமிக எளிய மனிதர்கள். காலக்களியில் நெளியும் சிறுபுழுக்கள்.
ஏன் அச்சொற்களைச் சொல்லிக்கொள்கிறேன்? அச்சொற்கள் என்னுடையவை அல்ல. அவை நான் காவியத்திலிருந்து அடைந்தவை. அவற்றைச் சொல்லிச் சொல்லி நான் எதைக் கடந்துசெல்கிறேன்? வெறுப்பை. ஆம். இம்மனிதர்கள் மீது நான் அடையும் ஏளனத்தை. கபம் முற்றி பசுமைகொள்வதுபோல ஏளனம் இறுகி வெறுப்பாகிறது. என் மூச்சுக்கோளங்களை நிறைக்கிறது. ஒவ்வொருநாளும் நான் வாசிக்கும் காவியம் அவ்வெறுப்பைக் கழுவும் குளியல். ஆனால் நாளெல்லாம் என்மேல் படிந்துகொண்டே இருக்கிறது இது!
எவருக்கேனும் அது இயல்வதாகுமா என்ன? மானுடரின் காமகுரோதமோகங்களில் நீந்தியபடியே அவர்களை விரும்ப? அவர்களின் சிறுமைகளை புன்மைகளை தீமைகளைக் கண்டும் அவர்களிடம் மனம் கனிய? துளியேனும் தன்மீது ஒட்டாமல் இக்கீழ்மைகளில் திளைக்க. ரதிவிஹாரி. ஆம், தந்தையின் காவியத்தின் சொல் அது. காமத்திலாடுபவன். காமத்திலாடுபவனால் குரோதத்திலும் மோகத்திலும் ஆடவியலாதா என்ன? மானுடம் கண்ட மாபெரும் விளையாட்டுப்பிள்ளையாக அவனிருப்பான். ரதிவிஹாரி. எத்தனை மகத்தான சொல். எங்கே அடைந்தார் அவர்? சுகனின் முன் நின்று அச்சொல்லை அறிந்தாரா? அரதியில் விரதியில் நின்றிருக்கும் தன் மைந்தனைக் கண்ட தந்தை மனம் கொண்ட ஏக்கம்தானா அது?
ஆம், நான் என் பணியை செய்யத்தான் வேண்டும் என மாளிகை முகப்பில் நின்றபடி விதுரன் எண்ணினான். திரும்பி அம்பிகையின் மாளிகை நோக்கி நடந்தான். வாயிற்காவலர் வணங்கி அவனை வழியனுப்பினர். மாளிகையின் அவைக்கூடத்தில் அம்பிகை இருந்தாள். அவள்முன் இரண்டு ஓலைநாயகங்கள் அவள் கூற்றை எழுதிக்கொண்டிருந்தனர். அவனைக் கண்டதும் அவர்களை அனுப்பிவிட்டு அமரும்படி கைகாட்டினாள். அவன் அமர்ந்துகொண்டதும் மேலாடையை இயல்பாக இழுத்துப்போட்டபடி “என்ன சொல்கிறாள்?” என்றாள் அம்பிகை.
“தங்கள் ஒற்றர்கள் சொல்வதைத்தான்” என்றான் விதுரன். “அவள் எண்ணம் நடக்காது. அவளிடம் சொல், ஒருபோதும் இந்நாட்டை கூறுபோட பிதாமகர் பீஷ்மர் ஒப்பமாட்டார். என் மைந்தனுக்குரிய இந்நிலத்தைப் பிரிக்க நானும் முன்வரமாட்டேன்.” விதுரன் “பிதாமகரின் நெஞ்சம் எனக்குத்தெரியும்” என்றான். அம்பிகை “என்ன?” என்றாள். “நாட்டைக் கூறிடவேண்டியதில்லை. ஆனால் சிறிய இளவரசர் இந்நாட்டின் தொலைதூரப்பகுதி ஒன்றை தன்னாட்சி புரியலாமே. மகதத்தின் தெற்கு அப்படித்தானே ஆளப்படுகிறது?”
அம்பிகை அவனைக்கூர்ந்து நோக்கி “அதைத்தான் விவாதித்துக்கொண்டிருந்தீர்களா?” என்றாள். விதுரன் “இல்லை, இது என் எண்ணம்” என்றான். “சிறிய அரசி ஐயமும் சினமும் கொண்டிருக்கிறார்கள். அரசி, அவர்கள் இயல்பாகவே தன் மைந்தனின் தமையனை நம்பவேண்டும். மூத்ததமையனின் அகவிரிவை நம்பாதவர் என எவருமில்லை. ஆனால் அவர்கள் நம்பவில்லை. நம்பாதபோது இந்நகரில் அவர்கள் இருக்க இயலாது. நம்பிக்கையின்மை மேலும் மேலும் கசப்புகளையே உருவாக்கும். அக்கசப்பு வளர்வது நாட்டுக்கு நலம்பயக்காது.”
“அந்தக்கசப்பு இருக்கையில் அவள் கையில் நாட்டை அளிப்பது இன்னும் தீங்கானது” என்றாள் அம்பிகை. “அவள் மைந்தனுக்கு என் மைந்தன் நிலமளிக்கவேண்டுமென்றால் அதற்கான வரையறை என்ன? இளையவன் என்றென்றும் மூத்தவனுக்கு கட்டுப்பட்டிருக்கவேண்டும். அந்நிலம் ஒருபோதும் அஸ்தினபுரியிலிருந்து அயலாக கருதப்படலாகாது. அவள் உள்ளத்தில் அத்தனை ஐயமும் வஞ்சமும் இருக்கையில் அந்நிலத்தை எப்படி அளிக்கமுடியும்? அது நம் கையே நாகப்பாம்பாக ஆகி நம்மைக் கொத்தவருவதாக ஆகுமல்லவா?”
“அனைத்துச் சொற்களும் உங்கள் இருவரிடமும் முன்னரே ஒருங்கியிருக்கின்றன அரசி” என்றான் விதுரன். “இச்சொற்களை பலநூறுமுறை ஒருவருக்கொருவர் அகத்தே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் போலும்” அம்பிகை முகம் சிவந்து “அவளிடம் எனக்கென்ன பேச்சு?” என்றாள். விதுரன் சிலகணங்கள் அவளை கூர்ந்து நோக்கியபின் “இந்தப் போராட்டமனைத்தும் மிக எளிய ஐயங்களின் மேல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது அரசி. தாங்கள் தங்கள் தங்கையிடம் ஒருமுறை லதாமண்டபத்திலமர்ந்து உரையாடினாலென்ன?” என்றான்.
“அவளிடம் நான் சொல்வதற்கொன்றுமில்லை. என் மைந்தன் விழியிழந்தவன் என்று கேட்டதும் அவள் முகம் மலர்ந்ததை நானே கண்டேன். அக்கணம் என் அகத்தில் நான் சுமந்திருந்த என் தங்கை இறந்தாள். இன்றிருப்பவள் பேராசை கொண்ட ஒரு இணையரசி” என்றாள் அம்பிகை. விதுரன் அந்தக்கணத்தை அகத்தில் நிகழ்த்திக்கொண்டபோது அவன் உள்ளம் சற்று நடுங்கியது. “அது உங்கள் விழிமயக்காக இருக்கும்” என்றான், மெல்லிய குரலில்.
“இல்லை… நான் அந்த ஒரு கணத்தை ஓராண்டாக, ஒரு வாழ்க்கையாக இன்று என் அகக்கண்முன் காண்கிறேன். என் கரு முதிரத்தொடங்கியபோதே அவள் என்னிடமிருந்து விலகிச்சென்றாள். சேடிகளிடம் மீண்டும் மீண்டும் என் உதரத்தில் வாழும் குழந்தைதான் நாடாளுமா என்றும், அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்த உரிமையும் இல்லையா என்றும் கேட்டுக்கொண்டிருந்தாள். ஒருமுறை என்னிடமே என் வயிற்றுக்குழந்தை இறந்துவிட்டால் அவள் வயிற்றில் வாழும் குழந்தைதானே அரசனாவான் என்று கேட்டாள். அவள் பேதை என நான் அறிந்திருந்தாலும் அவ்வினா என் உடலையும் உள்ளத்தையும் துடிக்கச்செய்ததை இப்போதும் உணர்கிறேன். அவளுக்குள் அன்றே திரண்டு வருவதென்ன என்று உணர்ந்துகொண்டேன்.”
மூச்சிரைக்க அம்பிகை சொன்னாள் ” என் மகன் பிறந்ததும் என் ஈற்றறைக்குள் அவள் சேடியை தொடர்ந்து வந்தாள். நன்னீராட்டப்பட்ட மைந்தன் அருகே மென்துகில் மூடிக்கிடந்தான். அவள் முகத்தை நான் நன்றாகவே நினைவுறுகிறேன். அதிலிருந்தது உவகை அல்ல. நிலைகொள்ளாத தன்மை. என் படுக்கையருகே குனிந்து மைந்தனை நோக்கியவள் முகத்தில் முதற்கணம் திகைப்பு. சேடி மைந்தனுக்கு விழியில்லை என்று சொன்னதும் அதில் வந்த நிறைவை மிக அருகே கண்டு பாதாளப் பேருலகையே கண்டவள் போல நான் நெஞ்சுநடுங்கி உடல்விரைத்துப்போனேன்.”
விதுரன் மெல்ல அசைந்தான். அம்பிகை அவனை நோக்கித் திரும்பி “அவளால் அவ்வுணர்ச்சிகளை மறைக்கமுடியவில்லை. மருத்துவர்களால் விழிகளை மீட்க முடியாதா என்று கேட்டாள். என் சொற்களனைத்தும் நெஞ்சுக்குள் கனக்க அவள் கண்களையே நோக்கிக்கிடந்தேன். சேடி அது முடியாதென்றதும் அவள் குழந்தையை மீண்டும் நோக்கி பெரிய குழந்தை என்றாள். என்னை நோக்கியபோது எங்கள் விழிகள் மிக ஆழத்தில் தொட்டுக்கொண்டன. அதை நான் இன்றும் அச்சத்துடனேயே உணர்கிறேன். என் மடியில் வளர்ந்த குழந்தை அவள். என் இடையில் அமர்ந்து உலகைக் கண்டவள். ஆனால் முதன்முதலாக அவள் ஆழத்தை என் ஆழம் அறிந்துகொண்டது.”
“என் குழந்தையை தொட்டுக்கூட பாராமல் அவள் திரும்பிச்சென்றாள். அவளுடைய மாளிகையை அடைந்ததும் உரக்கநகைத்தபடி சேடியரை கட்டிப்பிடித்தாள் என்று அறிந்தேன். என் குழந்தைக்கு விழியில்லை என்பதை அவள் நாட்கணக்கில் கொண்டாடினாள் என்று சேடியர் வந்து சொல்லிக்கொண்டே இருந்தனர். அதன்பின் அவளுக்கு அச்சம் வந்தது. அவள் வயிற்றில் இருந்த குழந்தைக்கும் விழியில்லாமலாகிவிடுமோ என. ஆதுரசாலையின் அனைத்து மருத்துவர்களையும் அழைத்துப் பார்த்தாள். நிமித்திகர்களும் கணிகர்களும் அவள் அந்தப்புரத்துக்கு நாள்தோறும் சென்றுகொண்டிருந்தனர்.”
அம்பிகை தொடர்ந்தாள் “பின்னர் அவளுடைய அச்சம் திசைமாறியது. அவள் குழந்தைக்கும் விழியில்லாமலாகும்பொருட்டு நான் தீச்செய்வினை செய்துவிட்டதாக எண்ணத் தொடங்கினாள். அவ்வெண்ணம் அவளுக்குள் பிறந்ததுமே அவளைச்சூழ்ந்திருந்த சேடியர் அதை சொல்லூதி வளர்த்தனர். அவளைத்தேடி வினையழிப்பாளர்களும் வெறியாட்டாளர்களும் வரத்தொடங்கினர். ஒவ்வொருநாளும் அங்கே பூசனைகளும் களமெழுதியாடல்களும் நடந்துகொண்டிருந்தன. பின்னர் அவளுக்குக் குழந்தை பிறந்தது. குழந்தை வெளிவந்ததுமே அவள் கையை ஊன்றி எழுந்து அதற்கு விழிகள் உள்ளனவா என்றுதான் கேட்டாளாம். ஆம் அரசி என்று சொன்னதுமே அப்படியென்றால் இவன் மன்னனாவானா என்று மருத்துவச்சியிடம் கேட்டாள்.”
“நான் முறைப்படி குழந்தையை பார்ப்பதற்காகச் சென்றேன்” என்றாள் அம்பிகை. “ஆனால் என் விழிகள் குழந்தைமேல் படலாகாது என அவள் அதை துகிலுடன் சுருட்டி தன் மார்போடு அணைத்துக்கொண்டு சுவரைநோக்கித் திரும்பிக்கொண்டாள். நான் அம்பாலிகை என்ன இது, குழந்தையைக் காட்டு என்று கேட்டேன். குழந்தைக்கு உடல்நலமில்லை என்று திரும்பத்திரும்ப முணுமுணுத்துக்கொண்டு நடுங்கிக்கொண்டிருந்தாள். பின்னர் தேம்பி அழத்தொடங்கினாள். அவள் உடலில் சிறிய வலிப்பு வந்தது. நீங்கள் சென்றுவிடுங்கள் அரசி என்றனர் மருத்துவச்சிகள். நான் திரும்பிவிட்டேன். அதன்பின் அக்குழந்தையை நான் காணவே அவள் ஒப்பவில்லை.”
“நாட்கள் செல்லச்செல்ல குழந்தையின் குறைகள் தெரியத்தொடங்கின. அது பனிவிழுது போல தூவெண்ணிறமாக இருந்தது. பெரும்பாலும் அசைவற்றிருந்தது. மருத்துவர் அதை நோக்கிவிட்டு அதன் இயல்புகளைச் சொன்னதுமே அவள் அது அவ்வாறிருக்க நான்தான் காரணம் என்று கூவத்தொடங்கிவிட்டாள். நான் செய்த தீச்செய்வினையால்தான் குழந்தையின் குருதிமுழுக்க ஒழுகிச்சென்றுவிட்டது என்றாள். அக்குழந்தையிடமிருந்து என் தீச்செய்வினைமூலம் எடுக்கப்பட்ட குருதி என் குழந்தையின் உடலில் ஓடுவதனால்தான் அவன் இருமடங்கு பெரிதாக இருக்கிறான் என்று சொன்னாள். இன்றுகூட அவள் அப்படித்தான் எண்ணுகிறாள்.”
“ஆம்” என்றான் விதுரன். “ஆயினும்கூட நீங்கள் இருவரும் அமர்ந்து பேசிக்கொள்ளமுடியும் என்றால் அனைத்தையும் சீர்செய்துவிடலாம். ஒரே அரண்மனையின் இருபகுதிகளில் வாழும் நீங்கள் இருவரும் ஓரிடத்தில் அமர்ந்து முகம்நோக்கிப்பேசி பதினெட்டாண்டுகளாகின்றன என்றால் விந்தை அல்லவா?” அம்பிகை “ஆம், ஆனால் என் வாழ்க்கைமுழுக்க நான் வாழும் அரண்மனையின் பிற பகுதிகளை அறியாதவளாகவே இருந்திருக்கிறேன்” என்றாள். “அவளை நான் சந்தித்தாலும் என்னிடம் சொல்வதற்கு ஏதுமிருக்காது. அவளுடைய இருண்ட நெஞ்சை நான் சொல்லும் எச்சொல்லும் துலக்காது.”
“இருள் இருபக்கமும்தான்” என்றான் விதுரன். “தாங்கள் மட்டும் தங்கள் தங்கையை அஞ்சவில்லையா என்ன?” அம்பிகை திகைத்து அவனை நோக்கினாள். “நான் இளமை முதலே இங்கு வருபவன் அரசி. தாங்களோ தங்கள் அணுக்கத்தோழிகள் மூவரில் ஒருவரோ உண்டு நோக்காத எவ்வுணவையும் தமையன் உண்பதில்லை. காந்தாரத்துப் பயணத்திலும்கூட அச்சேடியர் இருவர் வந்திருந்தனர்.”
“ஆம், அவன் அரசன். அது தேவைதான்” என்றாள் அம்பிகை உரக்க. “அது யாரை நோக்கிய அச்சம்?” என்றான் விதுரன். “ஆம், அவளைநோக்கிய அச்சம்தான். இதோ என் மைந்தன் அரசுக்கட்டில் ஏறவிருக்கையில் அவள் என்ன செய்கிறாள்? இத்தனை வன்மமும் சினமும் கொண்டவள் இதுநாள்வரை அவனைக்கொல்ல முயன்றிருக்கமாட்டாள் என்கிறாயா?” விதுரன் பெருமூச்சுடன் தலையை அசைத்தான்.
“நீ அவளிடம் சொல், அவளுடைய திட்டங்களேதும் நடக்கப்போவதில்லை என. அதற்காகவே உன்னை வரவழைத்தேன்” என்றாள் அம்பிகை. “அவள் ஒப்புவாளென்றால் இம்மணிமுடிசூட்டுநிகழ்வு முறையாக நிகழும். அதற்குப்பின் அவள் மைந்தன் இளவரசனாக இருப்பான். ஒப்பவில்லை என்றாலும் மணிமுடி சூடப்படும்… பார்த்தாயல்லவா? இன்று இந்நகரம் காந்தாரத்தின் படைகளாலும் செல்வத்தாலும் சூழப்பட்டிருக்கிறது. அந்த மணிமுடிசூட்டுக்குப்பின் அவளும் மைந்தனும் சிறையில் இருப்பார்கள்.”
அவள் விழிகளை விதுரன் சற்று திகைப்புடன் நோக்கினான். எந்தத் தீமையை நோக்கியும் இமைக்காமல் செல்லும் ஆற்றல்கொண்ட கண்கள். அன்னையின் கண்கள். விதுரன் எழுந்து தலைவணங்கி “ஆணை” என்றபின் வெளியே நடந்தான்.

4/28/14

பகுதி பத்து : அனல்வெள்ளம்[ 2 ]

பகுதி பத்து : அனல்வெள்ளம்[ 2 ]
சகுனியின் படை பெருக்கெடுத்து நகர்நுழைவதை விதுரன் முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படாமல் நோக்கி நின்றான். முதலில் பதினெட்டு யானைகள் பொன்வேய்ந்த முகபடாமும் பொன்னூல் பின்னிய அணிபடாமும் தொங்கும் மணிச்சரடுகளும் அணிந்தவையாக, செம்மணிக்குடை பிடித்த காவலன் மேலே அமர்ந்திருக்க, சங்கிலி குலுங்கும் ஒலியுடன் காலெடுத்துவைத்து வந்தன. ஒவ்வொன்றிலும் பொன்னணிசெய்த பெரிய பித்தளைப்பேழைகள் இருந்தன. அதன்பின் முந்நூறு ஒட்டகங்கள் அரிக்குஞ்சலங்கள் அணிந்த கழுத்துக்களுடன், கடிவாளம் இழுபட தலைதாழ்த்தியும், பந்தங்களைக் கண்டு அஞ்சி தலை தூக்கியும் கழுத்துக்கள் விதவிதமாக வளைய இரும்படிக்கூடம் போல குளம்புகளைத் தூக்கி வைத்து கனத்த தோல்பொதிகளுடன் வந்தன.
அதன்பின் குதிரைகள் இழுத்த ஆயிரத்தெட்டு பொதிவண்டிகள் இருநிரைகளாக வந்தன. ஒவ்வொன்றும் தோற்கூரையிடப்பட்டு காந்தாரத்தின் கொடிபறக்க, கனத்த சகடங்கள் மண்ணின் செம்புழுதியை அரைக்க, குடத்தில் உரசும் அச்சுக்கொழு ஒலிஎழுப்ப வந்தன. அதன்பின் மாடுகள் குனிந்து விசைகூட்டி இழுத்த ஆயிரத்தெட்டு பொதிவண்டிகள் பின்பக்கம் வீரர்களால் தள்ளப்பட்டு உள்ளே நுழைந்தன. ஒவ்வொன்றிலும் விலைமதிப்புள்ள செல்வங்கள் இருப்பது வெளித்தெரியும்படி வெண்கலத்தாலும் தோலாலும் அணிசெய்யப்பட்டு காந்தாரக் கருவூலத்தின் ஓநாய் முத்திரை கொண்ட கொடி பறந்தது.
பல்லாயிரம் பந்தங்களின் தழல்கள் குழைந்தாட நெருப்பாறு இறங்கியதுபோல சகுனியின் படை உள்ளே நுழைந்தபோதே நகர்மக்கள் திகைத்து சொல்லிழந்துவிட்டிருந்தனர். யானைகளுக்குப்பின் வந்த ஒட்டகவரிசை முடியும்போது விடிந்துவிட்டது. அதன்பின் குதிரைவண்டிகள் உள்ளே நுழையத்தொடங்கின. காலைவெயிலில் வண்டிக்குடைகளில் இருந்த பித்தளைப்பட்டைகள் பொற்சுடர்விட்டன. ஓடித்தேய்ந்த சக்கரப்பட்டைகள் வாள்நுனியென ஒளிர்ந்தன. குதிரைகளின் வியர்த்த உடல்களில் இருந்து எழுந்த உப்புத்தழை வாசனை அப்பகுதியை நிறைத்தது.
அது முடியவிருக்கையில் மீண்டும் மாட்டுவண்டிவரிசைகள் வந்தபோது நகர்மக்கள் மெல்ல உடல் தொய்ந்து ஒருவர்மேல் ஒருவர் சாய்ந்து நின்றனர். பலர் அமர்ந்துகொண்டனர். ஒருவரிடமிருந்தும் ஓசையேதுமெழவில்லை. தொடக்கத்தில் அஸ்தினபுரியின் சமந்த நாட்டின் செல்வத்தை தன்னெழுச்சியுடன் பார்த்த நகர்மக்கள் பின்னர் காந்தாரத்தின் செல்வ வளத்தின் முன் அஸ்தினபுரி ஒரு சிற்றரசே என்று எண்ணத்தலைப்பட்டனர். அவர்களின் கண்முன் சென்றுகொண்டிருந்த பெருஞ்செல்வம் எந்த ஒரு கங்கைக்கரை நாட்டிலுமுள்ள கருவூலத்தையும்விடப்பெரியது.
மாட்டுவண்டிகளின் நிரைமுடிந்தபோது அத்திரிகளின் நிரை தொடங்கியது. லிகிதர் பொறுமை இழந்து “இது திட்டமிட்ட விளையாட்டு” என்றார். விதுரன் வெறுமே திரும்பிநோக்கினான். லிகிதர் “எண்ணிப்பாருங்கள் அமைச்சரே, இதுவரை காணிக்கைப்பொருட்களை முன்னால் அனுப்பி அரசர்கள் பின்னால் வரும் வழக்கம் உண்டா?” என்றார். விதுரன் புன்னகைசெய்தான். “இந்தச்செல்வத்தை முழுக்க நாம் நின்று பார்க்கவேண்டுமென ஆசைப்படுகிறார் சகுனி. எத்தனை ஆணவம்! என்ன ஒரு சிறுமை!” விதுரன் “இதில் என்ன சிறுமை உள்ளது? செல்வத்தை நகர்மக்களுக்குக் காட்டுவதன் வழியாக அவர் இந்நாட்டைக் கைப்பற்றுவதை உணர்த்த முனைகிறார். இதைவிடச்சிறந்த மதிசூழ் செய்கையை என்னால் உய்த்துணர இயலவில்லை” என்றான்.
“நாட்டைக்கைப்பற்றுவதா?” என்றார் லிகிதர். “இத்தனை பெருஞ்செல்வத்துடன் வருபவர் எளிதில் திரும்பிச்செல்வாரா என்ன?” என்றான் விதுரன். லிகிதர் திகைப்புடன் தன் முன் கலங்கலான நீரோடும் நதிபோல சென்றுகொண்டிருந்த பொதியேந்திய அத்திரிகளின் நிரையை திறந்த வாயுடன் நோக்கினார். “அஸ்தினபுரியின் களஞ்சியம் இச்செல்வத்தைச் சேர்த்தால் இருமடங்காகிவிடும்!” என்றார். “ஆம், இச்செய்தி இன்று மாலைக்குள் அனைத்து ஷத்ரியர்களுக்கும் சென்றுசேரும். அவர்கள் இதை அஸ்தினபுரியின் போர்முழக்கமாக மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். பாரதவர்ஷத்தில் போர் தொடங்கிவிட்டது லிகிதரே!”
வியாஹ்ரதத்தர் அருகே வந்து “அமைச்சரே, போர் அறைகூவலுக்கு நிகராகவல்லவா இருக்கிறது?” என்றபடி தன் பெரிய மீசையை நீவினார். “ஆம்… போர்தான்” என்றான் விதுரன் நகைத்தபடி. “உமது வாள்களின் துரு இந்த பொன்னின் ஒளியால் அகலவேண்டும்!” வியாஹ்ரதத்தர் உரக்கச்சிரித்தார்.
காலைவெயில் நிமிர்ந்து மேலெழுவதுவரை அத்திரிகள் சென்றன. அதன்பின்னர்தான் காந்தாரத்தின் கொடியுடன் முதன்மைக் கொடிவீரனின் ரதம் வருவது தெரிந்தது. விதுரன் “எத்தனை ரதங்கள்?” என்றான். “ஆயிரத்தெட்டு என்றார்கள்” என்றார் லிகிதர்.
முதல் நூறு ரதங்களில் மங்கலத்தாசிகள் முழுதணிக்கோலத்தில் பொற்தாலங்கள் ஏந்தி நின்றிருந்தனர். தொடர்ந்த நூறு ரதங்களில் சூதர்கள் தங்கள் இசைக்கருவிகளை மீட்டியபடி நின்றிருந்தனர். அடுத்த நூறு ரதங்களில் மன்றுசூழ்நர் அமர்ந்திருந்தனர். அதன்பின்னர்தான் அரசகுலத்தவர் வரும் மாடத்தேர்கள் வந்தன. காந்தாரத்தின் ஈச்ச இலை இலச்சினைகொண்ட கொடி பறக்கும் மும்மாடப் பெருந்தேர் கோட்டைவாயிலை நிறைப்பதுபோல உள்ளே நுழைந்தது கரியபெருநாகம் மணியுமிழ்வதுபோலத் தோன்றியது. பொன்னொளி விரிந்த மாடக்குவைகளுக்குக் கீழே செம்பட்டுப் பாவட்டாக்கள் காற்றில் நெளிய அது வானில் சென்ற பேருருவ தெய்வம் ஒன்றின் காதிலிருந்து உதிர்ந்த குண்டலம் போலிருந்தது.
பன்னிரு குதிரைகளால் இழுக்கப்பட்ட மாடத்தேர் நின்றதும் அதற்குப்பின்னால் வந்த தேர்களையும் வண்டிகளையும் நிற்கச்சொல்லி கொடிகள் ஆட்டப்பட்டன. பல்லாயிரம் வண்டிகளும் புரவிகளும் நிற்கும் ஓசை கேட்டுக்கொண்டே விலகிச்சென்றது. விப்ரர் கையைக் காட்டியதும் அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டைமேலிருந்த பெருமுரசுகள் முழங்கத்தொடங்கின. அவ்வொலி கேட்டு நகர் முழுக்க இருந்த பலநூறு முரசுகள் ஒலியெழுப்பின. சகுனியை வரவேற்கும் முகமாக அரண்மனைக்கோட்டைமுகப்பில் தொங்கிய காஞ்சனம் என்னும் கண்டாமணி இனிய ஓசையை எழுப்பத்தொடங்கியது.
VENMURASU_EPI_99_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
தேர்வாயிலைத் திறந்து சகுனி வெளியே இறங்கினான். மார்பில் பொற்கவசமும், தோள்களில் தோளணிகளும், கைகளில் வைரங்கள் ஒளிவிட்ட கங்கணங்களும், தலையில் செங்கழுகின் சிறகு சூட்டப்பட்ட மணிமுடியும், காதுகளில் அனல்துளிகளென ஒளிசிந்திய மணிக்குண்டலங்களும், கழுத்தில் துவண்ட செம்மணியாரமும், செவ்வைரப்பதக்கமாலையும் அணிந்து இளஞ்செந்நிறப்பட்டாடை உடுத்தி வந்த அவனைக்கண்டதும் அஸ்தினபுரியின் அனைத்து மக்களும் அவர்களை அறியாமல் வாழ்த்தொலி எழுப்பினர். அவன்மேல் மலர்களும் மஞ்சளரிசியும் அலையலையாக எழுந்து வளைந்து பொழிந்தன.
விதுரன் வணங்கியபடி முன்னால் சென்று சகுனியை எதிர்கொண்டான். இருபக்கமும் அமைச்சர்களும் தளபதிகளும் சென்றனர். விதுரன் தன் அருகே வந்த சேவகனின் தாலத்தில் இருந்து பசும்பால் நுரையுடன் நிறைந்த பொற்குடத்தை எடுத்து சகுனியிடம் நீட்டி “அஸ்தினபுரியின் அமுதகலசம் தங்களை ஏற்று மகிழ்கிறது இளவரசே” என்றான். சகுனி உணர்ச்சியற்ற கண்களுடன் உதடுகள் மட்டும் விரிந்து புன்னகையாக மாற “காந்தாரம் சிறப்பிக்கப்பட்டது” என்று சொல்லி அதைப் பெற்றுக்கொண்டான்.
“பேரரசியாரும் பிதாமகரும் இன்று மாலை தங்களை அவைமண்டபத்தில் சந்திப்பார்கள்” என்றான் விதுரன். சகுனி தலைவணங்கி “நல்வாய்ப்பு” என்றான். விதுரன் “அஸ்தினபுரியின் அமைச்சர்களனைவரும் இங்குள்ளனர்” என்றான். களஞ்சியக்காப்பாளராகிய லிகிதரும், வரிகளுக்குப் பொறுப்பாளராகிய சோமரும், ஆயுதசாலைக்கு அதிபராகிய தீர்க்கவ்யோமரும், எல்லைக்காவலர் தலைவரான விப்ரரும், யானைக்கொட்டடிக்கு அதிபராகிய வைராடரும் வந்து சகுனிக்கு வாழ்த்தும் முகமனும் சொல்லித் தலைவணங்கினர். தளகர்த்தர்களாகிய உக்ரசேனரும், சத்ருஞ்சயரும், வியாஹ்ரதத்தரும் சகுனியை அணுகி தங்கள் வாள்களை சற்றே உருவி தலைதாழ்த்தி வணங்கினர்.
சகுனி அவர்களனைவருக்கும் முகமனும் வணக்கமும் சொல்லித் தலைவணங்கினான். “இளவரசரே, தங்களை அழைத்துச்செல்ல முறைப்படி அரசரதம் வந்துள்ளது. அதில் ஏறி நகர்வலம் வந்து அரண்மனைபுகுதல் முறை” என்றான் விதுரன். திரும்பி விதுரன் சுட்டிக்காட்டிய அமைச்சர்களுக்கான ரதத்தை நோக்கிய சகுனி மெல்லிய சலிப்பு எப்போதும் தேங்கிக்கிடந்த விழிகளுடன் “இவ்வகை ரதத்திலா இங்கு அரசர்கள் நகருலாவுகின்றனர்?” என்றான். விப்ரர் “அரச ரதம் வேறு” என்றார். சகுனி “காந்தார நாட்டில் மன்னர்கள் அணிரதத்தில் ஏறியே நகருலா செல்வார்கள். அவர்களை அரசகுலத்தோர் மட்டுமே வந்து எதிரீடு செய்து அழைத்துச் செல்வார்கள்” என்றான்.
விதுரன் தலைவணங்கி “இங்குள்ள இளவரசர்கள் இருவரும் சற்றே உடற்குறை கொண்டவர்களென தாங்களறிவீர்கள்” என்றான். “ஆம், ஆனால் பிதாமகர் பீஷ்மர் இன்னும் முதுமையை அடையவில்லை” என்ற சகுனி “நான் என் அணிரதத்திலேயே நகர் நுழைகிறேன்” என்றான். “தங்கள் ஆணை அதுவென்றால் ஆகுக!” என்றான் விதுரன். வியாஹ்ரதத்தரிடம் சகுனி “படைத்தலைவரே நீர் இங்கே நின்று தொடர்ந்து வரும் என் படைகளை நான்காகப்பிரித்து நகரெங்கும் தங்கவையுங்கள். கருவூல அதிகாரி யார்?” என்றான்.
வியாஹ்ரதத்தர் விதுரனை அரைக்கண்ணால் பார்த்தபின் “ஆணை இளவரசே” என்றார். லிகிதர் “கருவூலம் என் காப்பு” என்றார். “இங்கே வந்துள்ள செல்வத்துடன் எங்கள் கருவூலநாதர் சுருதவர்மரும் வந்துள்ளார். அவருடன் இணைந்து அனைத்துப்பொருட்களையும் கருவூலக்கணக்குக்குக் கொண்டுசெல்லுங்கள். நாளை மறுநாள் எனக்கு அனைத்துக் கணக்குகளும் ஓலையில் வந்துசேர்ந்தாகவேண்டும்” என்றான் சகுனி. “ஆம், ஆணை” என்று லிகிதர் தலைவணங்கினார்.
“இங்கே ஒட்டகங்களுக்காக தனியதிகாரிகள் எவரேனும் உள்ளனரா?” என்று சகுனி கேட்டான். “இல்லை. யானைக்கொட்டிலுக்கு அதிபராக வைராடர் இருக்கிறார்.” சகுனி தன் தாடியை வருடியபடி “வைராடரே, ஒட்டகங்கள் ஒருபோதும் மழையில் நனையலாகாது. ஈரத்தில் படுக்கக்கூடாது. ஒருநாளைக்கு ஒருமுறைக்குமேல் நீர் அருந்தலாகாது. என் ஒட்டகக்காப்பாளர் பிரசீதர் வந்துள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றுங்கள்” என்றபின் விதுரனிடம் “செல்வோம்” என்றான்.
சகுனியின் ரதத்தைத் தொடர்ந்து அவனுடைய அமைச்சர்களும் படைத்தலைவர்களும் வந்தனர். அவர்கள் கோட்டை முகப்பிலேயே நின்றுவிட சகுனியும் மங்கலப்படைகளும் அஸ்தினபுரியின் அரசவீதிகள் வழியாக அணியூர்வலம் செய்தனர். உப்பரிகைகளில் கூடி நின்ற நகர்ப்பெண்கள் மஞ்சளரிசியும் மலரும் தூவி அவர்களை வாழ்த்தி கூவினர். அரண்மனை வாயிலில் அஸ்தினபுரியின் அணிப்பரத்தையரும் இசைச்சூதரும் வைதிகரும் கூடி நின்று அவனை வரவேற்றனர். வைதிகர் நிறைகுடநீர் தெளித்து அவனை வாழ்த்த பரத்தையர் மஞ்சள்நீரால் அவன் பாதங்களைக் கழுவி மலர்தூவி அரண்மனைக்குள் ஆற்றுப்படுத்திச் சென்றனர்.
சகுனி தன் மாளிகைக்குள் சென்றதும் விதுரன் தன் ரதத்தில் மீண்டும் கோட்டைமுகப்புக்குச் சென்றான். ஒரு காவல்மாடத்திலேறி நோக்கியபோது சகுனியின் பெரும்படை புதுமழைவெள்ளம் போல பெருகிவந்து பல கிளைகளாகப்பிரிந்து நகரை நிறைத்துக்கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. வடக்கு திசையில் இருந்த கருவூலக்கட்டடங்களுக்கு முன்னால் பெருமுற்றத்தில் சகுனியுடன் வந்த யானைகளும் ஒட்டகங்களும் குதிரைகளும் பொதிவண்டிகளும் ஒன்றையொன்று முட்டி நெரித்துக்கொண்டு நின்றன.
விதுரன் கீழிறங்கி கோட்டைமுகப்புக்குச் சென்றான். சகுனியின் படைகள் அப்போதும் உள்ளே நுழைந்துகொண்டே இருந்தன. கோட்டைமீது ஏறி மறுபக்கம் நோக்கியபோது படைகளின் கடைநுனி தெரியவில்லை. சிந்தனையுடன் அவன் இறங்கி கீழே வந்தபோது சத்ருஞ்சயர் அவனை நோக்கி புரவியில் வந்தார். “அமைச்சரே, நகரமே நிறைந்து அசைவிழந்து விட்டது. அனைத்து தெருக்களிலும் படைகளும் வண்டிகளும் நெரித்து நிற்கின்றன” என்றார். “நமது வீரர்கள் செயலற்றுவிட்டனர். எவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.”
விதுரன் புன்னகைசெய்து “ஆம், கண்டேன்” என்றான். “நான் சோமரையும் உக்ரசேனரையும் வரச்சொன்னேன். மூவரும் பேசி என்ன செய்யலாமென முடிவெடுக்கப்போகிறோம். இப்போதைய திட்டமென்னவென்றால்…” எனத் தொடங்கிய சத்ருஞ்சயரை மறித்த விதுரன் “படைத்தலைவரே, இப்போது நீங்கள் என்ன செய்தாலும் அது தீங்காகவே முடியும். எத்தனை நுண்மதியாளன் திட்டம் வகுத்து செயல்பட்டாலும் மேலும் பெரிய இக்கட்டுகளே நிகழும்” என்றான்.
சத்ருஞ்சயர் திகைத்த விழிகளுடன் நோக்கினார். “இந்நகரம் நூற்றுக்கணக்கான தெருக்களையும் தெருக்களுக்கிடையே ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைப்புகளையும் கொண்டது. வந்து கொண்டிருப்பது ஆயிரக்கணக்கான வண்டிகள். எந்த மேதையாலும் இவை இணையும் பல லட்சம் நிகழ்தகவுகளை கணக்கிட்டுவிடமுடியாது. அவன் ஆயிரம் தகவுகளை கணக்கிட்டால் பல்லாயிரம் தகவுகள் கைவிட்டுப்போகும்.”
“அப்படியென்றால் என்ன செய்வது?” என்றார் சத்ருஞ்சயர். “மழைவெள்ளம் எப்படி நகரை நிறைக்கிறது? அதன் பெருவிசை அதற்குரிய வழிகளை கண்டடைகிறது. இதுவும் ஒரு வெள்ளமே. நாளைக்காலைவரை காத்திருங்கள். இந்தப்பெருங்கூட்டம் முட்டி மோதி தேங்கி பீரிட்டு தனக்குரிய வழிகளைக் கண்டுகொள்ளும். நாளைக்காலை அதன் வழிகளை எந்தக் காவல்மாடம் மீது ஏறி நின்றாலும் பார்த்துவிட முடியும். அவ்வழிகளை மேலும் தெளிவாக்கி சிடுக்குகளை அகற்றி செம்மைசெய்து கொடுப்பது மட்டுமே நமது பணி”
சத்ருஞ்சயர் நம்பிக்கை இல்லாமல் தலைவணங்கினார். “நம்புங்கள் சத்ருஞ்சயரே, நாளை நீங்களே காண்பீர்கள்” என்றான் விதுரன் சிரித்தபடி. “அரசு சூழ்பவன் முதலில் அறிந்திருக்கவேண்டியது ஊழை. ஊழின் பெருவலியுடன் அவன் ஆற்றல் மோதக்கூடாது. ஊழின் விசைகளுடன் இணைந்து தனக்குரியவற்றைக் கண்டடைந்து அவற்றை தனக்காக பயன்படுத்திக்கொள்பவனே வெல்கிறான்.” “நான் இப்போது என்ன செய்வது?” என்றார் சத்ருஞ்சயர். “செல்வங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். அனைவருக்கும் உணவும் நீரும் கிடைக்கவேண்டும். அதைமட்டும் செய்யுங்கள்!”
விதுரன் தன் மாளிகையை அடைந்து நீராடி உணவருந்தி ஒய்வெடுக்கும் முன் தன் சேவகனிடம் அனைத்து செய்திகளையும் குறித்துக்கொள்ளும்படியும் எழுப்பவேண்டாமென்றும் சொன்னான். அவன் எண்ணியதுபோலவே கண்விழித்ததும் பேரரசியும் அம்பிகையும் அம்பாலிகையும் அவனை அழைத்திருந்தனர். அவன் ஆடைமாற்றிக்கொண்டு பேரரசி சத்யவதியின் அரண்மனையை அடைந்தான். சியாமை அவனுக்காக வாயிலிலேயே காத்திருந்தாள். “பேரரசி இருநாழிகை நேரமாக உங்களுக்காகக் காத்திருக்கிறார் அமைச்சரே” என்றாள்.
“ஆம், அறிவேன்” என்றான் விதுரன். “மேலும் இருவர் காத்திருக்கிறார்கள்” என்றபோது அவன் உதடுகள் விரிந்தன. சியாமையும் புன்னகைசெய்தாள். “ஒரு சந்திப்புக்கு முன் சிலநாழிகைநேரம் காத்திருப்பது நன்று. நம்முள் பெருகி எழும் சொற்களை நாமே சுருட்டி அழுத்தி ஓரிரு சொற்றொடர்களாக ஆக்கிக்கொள்வோம். சொல்லவிழைவதை தெளிவாகச் சொல்லவும் செய்வோம்.” சியாமை நகைத்தபடி “அனைவரிடமும் விளையாடுகிறீர்கள்” என்றாள். “சதுரங்கக் காய்கள் அல்லாத மானுடரை நீங்கள் சந்திப்பதே இல்லையா அமைச்சரே?”
சத்யவதி விதுரனைக் கண்டதும் எழுந்துவந்தாள். “என்ன, கூப்பிட்டனுப்பினால் இவ்வளவு நேரமா?” என்றாள். பேரரசிக்குரிய தோரணையை அவள் அவனிடம் காட்டுவதில்லை. “உனக்கு உடல்நிலை சரியில்லையா என்று கேட்டு சியாமையை மீண்டும் அனுப்பினேன்.” விதுரன் “உடல்நிலை குலையவேண்டுமென காந்தாரர் நினைத்திருப்பார்” என்றான். “இன்று காலை ஒரு பேரருவியின் கீழ் நான்குநாழிகை நேரம் நின்றிருந்தேன்.” சத்யவதி சிரித்தபடி “ஆம், சொன்னார்கள். ஆணவப்பெருமழை” என்றாள். “ஆணவம் அரசகுணம் அல்லவா?” என்றான் விதுரன். சத்யவதி சிரித்தபடி “வர வர உன் சொற்களை நீ சென்றபின்னர்தான் நான் புரிந்துகொள்கிறேன்” என்றாள்.
சத்யவதி அமர்ந்ததும் விதுரன் அவளருகே அமர்ந்துகொண்டு “மலர்ந்திருக்கிறீர்கள் பேரரசியே” என்றான். “ஆம், என் வாழ்நாளில் நான் இதைப்போல உவகையுடன் இருந்த நாட்கள் குறைவே. அனைத்தும் நான் எண்ணியபடியே முடியப்போகின்றன” என்றாள். “ஆம், நானும் அவ்வண்ணமே நினைக்கிறேன்” என்றான் விதுரன். சத்யவதி “நீ உன் பொருளற்ற ஐயங்களை என் மீது சுமத்தி இந்த உவகையை பறிக்கவேண்டியதில்லை… சற்றே வாய்மூடு” என அதட்டினாள். விதுரன் நகைத்தபடி “நான் ஒன்றுமே சொல்லப்போவதில்லை பேரரசியே” என்றான்.
“இன்றுமாலை நான் சகுனியை சந்திக்கவிருக்கிறேன்” என்றாள் சத்யவதி. “அவன் என்னிடம் நேரடியாகவே திருதராஷ்டிரனின் முடிசூட்டுவிழா குறித்துப்பேசுவான் என நினைக்கிறேன்.” விதுரன் “ஆம், அதுதான் நிகழும்” என்றான். “அதில் நமக்கு எந்தத் தடையும் இல்லை. நீ கூறியபடி அனைத்து நூல்களையும் விரிவாக ஆராய்ந்து சொல்லும் நிமித்திகர்களை அமைத்துவிட்டேன். விழியிழந்தவன் மன்னனாக ஆவதற்கு நெறிகளின் தடை என ஏதுமில்லை. அமைச்சும் சுற்றமும் மன்னனின் கண்கள் என்கின்றது பிரகஸ்பதிநீதி. என் மைந்தனுக்கு நீயும் சகுனியும் இரு விழிகள். வேறென்ன?”
“மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது” என்றான் விதுரன். “அதற்கென்ன? எந்த முடிசூடலுக்கும் நால்வகை வருணமும் ஐவகை நிலமும் ஆணையிடவேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. அது எப்போதுமுள்ளதுதானே?” என்று சத்யவதி கேட்டாள். “ஆம்.” “ஏன் தயங்குகிறாய்? நீ எதையாவது எதிர்பார்க்கிறாயா?” “இல்லை பேரரசியே… அனைத்தும் சிறப்புற முடியுமென்றே நினைக்கிறேன்.” “அச்சொல்லிலேயே ஒரு இடைவெளி உள்ளதே…”  “பேரரசியே நான் அமைச்சன். அனைத்துத் திசைகளையும் ஐயத்துடன் நோக்கக் கடன்பட்டவன்.”
“நீ முதலில் உன்னை ஐயத்துடன் நோக்கு…” என்று சத்யவதி பொய்ச்சினத்துடன் சொன்னாள். “நான் உன்னை வரவழைத்தது இதற்காகத்தான். திருதராஷ்டிரனின் மணிமுடிசூடல் பற்றி சகுனி கேட்டால் இந்த இளவேனில் காலத்திலேயே அதை நிகழ்த்திவிடலாமென நான் வாக்களிப்பதாக உள்ளேன். இதை நீயே பீஷ்மரிடமும் திருதராஷ்டிரனிடமும் சொல்லிவிடு. அனேகமாக இன்றே திருதராஷ்டிரனின் முடிசூட்டுநாள் முடிவாகிவிடுமென எண்ணுகிறேன்.” “ஆம் பேரரசியே அதுவே முறை” என்றான் விதுரன்.
அவன் வெளியே வந்தபோது சியாமை பின்னால் வந்தாள். “அடுத்த சந்திப்பு இளையபிராட்டியா?” என்றாள். “ஆம் வேறெங்கு?” என்றான் விதுரன். “என்ன முறை அது? உங்கள் கணிப்புகள் எனக்கு விளங்கவில்லை அமைச்சரே” என்றாள் சியாமை சிரித்தபடி. “இன்று பேரரசி என்னிடம் பேசும்போது நான் இளைய அரசியைப் பற்றி ஏதேனும் சொல்கிறேனா என்று அகம்கூர்ந்தபடியே இருந்தார். அப்படியென்றால் அவருள் ஒரு முள்போல ஓர் ஐயம் இருக்கிறது.”
“முள்தான்… ஆனால் பூமுள்” என்றாள் சியாமை சிரித்துக்கொண்டு. “அமைச்சரே, சிறிய அரசி அம்பாலிகை என்னதான் செய்துவிடமுடியும்? இன்னும் தன் படுக்கையறையில் பாவையை வைத்துக்கொண்டு விளையாடுபவள்.” விதுரன் “ஆம், ஆனால் அவள் அன்னை. அன்னையரிடம் கூடும் பேராசையைக் கண்டு பிரம்மனே திகைத்துவிடுவான். பேராசையால் அவர்கள் கொள்ளும் மதிநுட்பமும் குரூரமும் அளவிறந்தவை.” சியாமையின் கண்களில் திகைப்பு வந்தது. “பூமுள்ளாயினும் கண்ணில் குத்துமென்றால் ஆபத்து அல்லவா?” என்றபின் விதுரன் படியிறங்கினான்.

4/27/14

பகுதி பத்து : அனல்வெள்ளம்[ 1 ]

பகுதி பத்து : அனல்வெள்ளம்[ 1 ]
அஸ்தினபுரியின் வரலாற்றில் அதற்கிணையானதொரு மழைக்காலமே வந்ததில்லை என்றனர் கணிகர். ஆறுமாதகாலம் மழை பிந்தியதுமில்லை. வந்தமழை மூன்றுமாதம் நின்று பொழிந்ததுமில்லை. புராணகங்கையில் நீர் ஓடியதைக் கண்ட எவருமே அஸ்தினபுரியில் வாழ்ந்திருக்கவில்லை. நூற்றைம்பதாண்டுகளுக்கு முன்பு அதில் நீர்பெருகியதை கணிகர்நூல்கள் குறிப்பிட்டன. அப்போது ஆமை ஒன்று அஸ்தினபுரியின் மாளிகைமாடத்தின் மீது ஏறியது என்றன.
மழை பொழியத் தொடங்கி ஒரு மாதமானபோது நாணல்களுக்குள் வாழும் எலிகளைப்போல மனிதர்கள் மழைத்தாரைகளுக்குள் வாழக்கற்றுக்கொண்டனர். தவளைகளைப்போல நீரில் துழாவி நடந்தனர். நீர்ப்பாம்புகள் போல நெளிந்தனர். நண்டுகள் போல வளைகளை மூடிக்கொண்டு சேற்றின் ஈரத்தில் துயின்றனர். மழைக்குள்ளேயே வணிகமும் தொழில்களும் நிகழ்ந்தன. மழைக்குள்ளேயே அவிப்புகையும் அடுபுகையும் எழுந்து நீர்ச்சரடுகளுக்குள் ஊடுருவிப் பரவின. வாழ்வின் ஓசைகள் வான்நீரில் பட்டுப் பரவின.
நகரின் அனைத்துப்பறைகளிலும் தோற்பரப்புகள் நெகிழ்ந்து தழைய, அனைத்து செய்தியொலிகளும் வெண்கலமணிகளாலேயே நிகழ்ந்தன. இருளுக்குள் வானம் ஒளியுடன் வெடித்து துடித்துக்கொண்டிருந்தது. விடிந்தபின் விடைகொண்ட ராத்ரிதேவியின் மெல்லிய மேலாடையே நீண்டு பகலாகிக்கிடந்தது. சூரியன் தோன்றியதையே கண்கள் மறந்தன. திண்ணைகளில் தோலாடைகளைப் போர்த்தியபடி அமர்ந்து பழம்பாடல்களை பாடக்கேட்டனர் நகர்மக்கள். காவலர்கள் தேன்மெழுகுபூசப்பட்ட பாய்மறைக்குள் பதுங்கி ஒடுங்கி அமர்ந்து இரவும் பகலும் கண்ணயரக் கற்றுக்கொண்டனர்.
வடக்குவாயில் காவல்மாடத்தின் மீது இரவில் மழைத்தாரைகளுக்கு அடியில் பெரிய தவளைபோல பாயுடன் ஒடுங்கி அமர்ந்திருந்த காவலன் காட்டுக்குள் யானைக்கூட்டம் ஒன்று கிளைகளை விலக்கி மரங்களைப் பெயர்த்து பாறைகளை உருட்டி வருவதாக கனவுகண்டான். யானைக்கூட்டம் மத்தகங்களால் கோட்டைமதிலை முட்டித்திறக்க முயல்வதைக் கண்டு திகைத்துக்கூச்சலிட்டுக்கொண்டு அவன் விழித்து எழுந்தபோது வடக்குவாயிலுக்கு அப்பால் இருட்டுக்குள் இலைகளின் அடிப்பக்கத்தில் நீரின் ஒளி தெரிவதுபோல உணர்ந்தான். கூச்சலிட்டபடி காவல்மாடத்துக்குள் ஓடிச்சென்று துயின்றுகொண்டிருந்த இணைக்காவலர்களை எழுப்பினான்.
அவர்கள் எழுந்து வந்து பந்தங்களைக் கொளுத்தி அவற்றுக்குப்பின்னால் இரும்புக் குழியாடிகளை நிறுத்தி ஒளிகுவித்து வீசி காட்டை நோக்கினர். வடபுலத்தின் அடர்காட்டுக்குள் செந்நிறமான மழைநீர் சுழித்துவந்து தேங்கிக்கொண்டே இருந்தது. மரங்களின் அடித்தூர்கள் நீருக்குள் காலூன்றி நின்றிருக்க நீர் எழுந்துகொண்டே இருந்தது. சிறுபுதர்களுக்குள் வாழும் முயல்களும் எலிகளும் நீரில் அலைகளெழுப்பியபடி நீந்திச்சென்று புதர்க்கிளைகளில் தொற்றி ஏறிக்கொள்வதைக் காணமுடிந்தது.
“நீரா?” என்றான் கிருதன் என்னும் காவலன். “ஆம்… மழைநீர்!” என்றான் காகன் என்னும் தலைமைக்காவலன். “நதிபோல இருக்கிறதே” என்றான் கிருதன். முதியவனாகிய காகன் “இது முன்னொருகாலத்தில் கங்கையாக இருந்த பள்ளம். கங்கை திசைமாறியபின் காடாகியிருக்கிறது. ஆகவேதான் இதற்கு புராணகங்கை என்று பெயர்” என்றான். நீர் ஏறிக்கொண்டே இருப்பதை அவர்கள் கண்டனர். நூற்றுக்கணக்கான முயல்களும் எலிகளும் பாம்புகளும் கீரிகளும் நீரில் நீந்தி மரங்களில் தொற்றிக்கொண்ட ஓசை மரங்கள் சொட்டும் ஒலியுடன் இணைந்து ஒலித்தது.
காகன் “உடனடியாக எவரேனும் சென்று அமைச்சரிடம் தெரிவியுங்கள்” என்றான். கிருதன் தன் குடைமறையை தலையிலிட்டுக்கொண்டு வேல்கழியை ஊன்றியபடி மழையால் அறைபட்ட சேறு கொந்தளித்துக்கொண்டிருந்த சாலை வழியாக ஓடினான். வடபுலத்துச் சோலைகளில் யானைகள் மழையில் நனைந்து கருங்குவைகளாக அசையாமல் நின்றுகொண்டிருந்தன. அவை அசையாமல் நிற்பதனாலேயே யானைத்தன்மையை இழந்துவிட்டிருந்தன. யானையென அறிந்திருந்தது அந்த உடலூசலைத்தான் என்று கிருதன் எண்ணிக்கொண்டான். அசையாத யானை என்பது பனிக்கட்டியாக ஆன நீர். அது நீரே அல்ல. அப்படியென்றால் யானை ஒவ்வொரு கணமும் மழை மழை என்றுதான் அசைகிறதா?
அவன் அமைச்சர் விப்ரரின் மாளிகையை அடைந்தான். மழைத்தாரைக்கு அப்பால் நெய்த்தீபங்களின் செவ்வொளிவிழிகளுடன் மாளிகையும் குளிரில் விரைத்து ஒடுங்கியிருந்தது. செய்தியைக்கேட்டதும் தலைமைக்காவலனான கலன் விப்ரரை எழுப்பலாமா வேண்டாமா என குழம்பினான். கிருதன் சொல்வதென்ன என்று அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. புராணகங்கையில் நீர் வருகிறதென்றால் என்ன பொருள்? நகரின் அனைத்துத் தெருக்களும்தான் நீரால் நிறைந்து ஆறுகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. கம்மியர் தெருவில் குதிரைகள் நீந்திச்செல்லுமளவுக்கு நீர் ஓடிக்கொண்டிருக்கிறது.
“முன்னர் அங்கே நீ மழைநீரை பார்த்ததில்லையா?” என்றான். கிருதன் “அங்கே இப்போது ஒரு பெரிய நதி கிளம்பி வந்திருக்கிறது” என்றான். “நதியா?” என்றான் கலன். “இன்னும் அது ஓடத்தொடங்கவில்லை” என்றான் கிருதன். தலையை கையால் சுரண்டியபடி சற்று சிந்தித்தபின் “வா நானே பார்க்கிறேன்” என்று சொல்லி கலன் தன் உடைவாளை எடுத்தணிந்துகொண்டு குடைமறையை அணிந்து குதிரையில் ஏறிக்கொண்டான். கிருதன் பின்னால் ஓடிவந்தான்.
நீர் சுழித்தோடிய தெருக்கள் வழியாக விரைந்து வடக்கு வாயிலை நோக்கிச் சென்றான். அதை நெருங்க நெருங்க அவனுக்குள் உள்ளுணர்வின் எச்சரிக்கை எழத்தொடங்கியது. குதிரை அந்த உள்ளுணர்வின் பருவடிவென கால்தயங்கி நின்று முகவாயை தூக்கியது. அவன் அதன் விலாவில் குதிமுட்களைக் குத்தி முன்செலுத்தினான். வடக்குவாயில் பெருங்கதவு மூடியிருந்தது. அதன் கனத்த தாழ்மரங்கள் குறுக்கும் நெடுக்குமாக பூட்டப்பட்டிருந்தன. தாழ்களின் இரும்புப்பட்டைகளும் குமிழ்களும் இருளுக்குள் பந்த ஒளியை அணையப்போகும் அனல்போல பிரதிபலித்தன. சிலகணங்கள் கழித்தே கலன் அவன் கண்டதென்ன என உணர்ந்தான். மூடியகதவின் பொருத்துக்கள், இடுக்குகள் வழியாக வாள்கள் போல நீர்ப்பட்டைகள் உள்ளே பீரிட்டுக்கொண்டிருந்தன.
கலன் குதிரையைத்திருப்பி நீர்ச்சுழிப்புகளை பாய்ந்துகடந்து அமைச்சரின் மாளிகையை அடைந்து இறங்கி உள்ளே ஓடி அவரது துயிலறை வாயிற்கதவைத் தட்டினான். அவர் நெகிழும் உடையுடன் வந்து பதறி “என்ன? என்ன?” என்றார். “வெள்ளம்! புராணகங்கை நகருக்குள் நுழையவிருக்கிறது” என்றான் கலன். அச்சொற்களைக் கேட்டதுமே முழு உயிர் கொண்டு மஞ்சத்தில் உடன் துயின்ற கணிகையிடம் உடனடியாக அவள் குடிக்குத்திரும்பச் சொல்லிவிட்டு மேலாடையை மஞ்சத்தில் இருந்து எடுத்தணிந்தவாறே வெளியே விரைந்தார். செல்லும்போதே ஆணைகளை வெளியிட்டுக்கொண்டிருந்தார்.
அவர் வடக்குவாயிலை அணுகுவதற்குள்ளேயே அரண்மனையின் தெற்கு மூலையில் பெரிய மரத்தூண்களுக்குமேல் தொங்கிய தசகர்ணம் என்னும் பெரிய கண்டாமணி முழங்கத்தொடங்கியது. இரட்டை ஒலிகளாக அதன் முழக்கம் எழுந்ததுமே நீரொலிக்குள் மானுடக்குரலொலிகள் எழுந்து ஓங்க அஸ்தினபுரி துயிலெழுந்தது. அது வெள்ளம் நெருப்பு ஆகியவற்றை மட்டுமே சுட்டும் மணியோசை என அனைவரும் அறிந்திருந்தனர்.
சிறிய இல்லங்களில் வாழ்ந்தவர்கள் பதறியும் கூவியும் திகைத்துநின்றும் மீண்டும் பரபரப்பு கொண்டும் தங்கள் உடைமைகளை அள்ளி மூட்டைகளிலும் மரப்பெட்டிகளிலும் சேர்த்துக்கொண்டனர். குழந்தைகளைத் தூக்கியபடி முதியோரைப் பற்றியபடி அருகிருந்த உயரமான மாடமாளிகைகளுக்கோ காவல்மாடங்களுக்கோ சென்றனர். ஆலயமுகடுகள் கோட்டைவீட்டு நிலைகள் எங்கும் அவர்கள் ஏறிக்கொண்டனர். ஏறமுடியாத முதியவர்களை கைப்பிடித்து தூக்கினர். பொருட்களை நனையாத உயரங்களில் அடுக்கினர். ஆண்கள் முழங்கால் மூழ்கும் நீரில் ஓடிச்சென்று கன்றுகளை கட்டவிழ்த்து விட்டனர்.
நகர் முழுக்க குதிரைகளில் விரைந்த அரசவீரர்கள் மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்லும்படி கூவி ஆணையிட்டனர். எங்கு செல்வதென்றறியாமல் தெருக்களில் முட்டிமோதியவர்களை வழிகாட்டியும் அதட்டியும் கைகளைப்பற்றி இழுத்தும் ஆற்றுப்படுத்தினர். ‘எந்தப் பசுவும் கட்டுக்குள் இருக்கலாகாது… வணிகர்களின் கழுதைகள் கட்டவிழ்க்கப்பட்டிருக்கவேண்டும்’ என்று ஆணையிட்டபடி காவலர் தலைவர்கள் குதிரைகளில் கடந்துசென்றனர்.
கோட்டையின் மேற்கு மூலையில் கட்டப்பட்டிருந்த ஜலமந்திரம் அவர்கள் அறிந்த நாள்முதல் பயனற்றே கிடந்தது. மரத்தாலான அந்தக்கட்டடத்தின் முகப்பில் வருணன் கௌரி, வருணானி, சர்ஷணி என்னும் துணைவியருடன் அமர்ந்திருக்கும் சிலை இருந்தது. மேற்குத்திசை அதிபனாகிய வருணனின் சிறிய ஆலயம் அதற்கு அப்பால் சிவந்த கற்களால் கட்டப்பட்டிருந்தது. கனத்த மரங்களால் கட்டப்பட்டிருந்த ஜலமந்திரத்தின் பன்னிரண்டு அடுக்குகளிலும் மென்மரத்தைக் குடைந்து செய்யப்பட்ட சிறுபடகுகளும் மூங்கில் முடைந்து களிமண்ணும் தேன்மெழுகும் பூசப்பட்டுச் செய்யப்பட்ட பரிசல்களும் அடுக்கப்பட்டிருந்தன. படைவீரர்கள் ஜலமந்திரத்தில் ஏறி படகுகளையும் பரிசல்களையும் சித்தமாக்கினர்.
விப்ரர் வடக்குக் கோட்டைவாயிலை அடைந்து காவல்பீடம் மீது ஏறிக்கொண்டு பார்த்தார். கதவின் இடைவெளிகள் வழியாக பீரிட்ட நீர் நெடுந்தூரத்துக்கு வீசியடித்தது. அவர் சிலகணங்கள் திகைத்து நின்றபின் கதவைத்திறக்குமாறு ஆணையிட்டார். அந்த ஆணையைப் பெற்ற காவலர்தலைவன் ஒருசில கணங்கள் திகைத்தான். பின்பு தலைவணங்கி தன் இடையிலிருந்த சங்கை எடுத்து ஒலித்தான். காவலர்கள் ஓடி வாயிலைத்திறக்கும் நான்கு யானைகளை கொட்டிலில் இருந்து அழைத்து வந்தனர்.
முழங்கால் மடிப்பு வரை புதைந்த சேற்றில் மெல்ல அசைந்து வந்த யானைகள் தாழ்களைத் திறக்கும் சங்கிலிகளை துதிக்கைகளால் பற்றிக்கொண்டு அடுத்த ஆணைக்காகக் காத்து நின்றன. காவலன் மீண்டும் சங்கு ஊதியதும் கோட்டைமேலிருந்த பெரிய கண்டாமணி மும்முறை ஒலித்தது. யானைகள் சங்கிலிகளை இழுக்க மேலே இருந்த பெரிய இரும்புச்சக்கரங்கள் உருண்டு கீழே தாழ்மரங்கள் மெல்ல எழுந்து விலகின. அவை விலக விலக கதவுகள் அதிர்ந்து இரு கதவுகள் நடுவே உள்ள பொருத்து பெரியதாகி அதனூடாக கிடைமட்டமாக ஒரு அருவி விழுவதுபோல நீர் பீரிட்டுப்பாய்ந்து தெறித்துவிழுந்தது.
முதல் இரு தாழ்மரங்கள் விலகியதும் ஆயிரம் யானைகளால் உந்தப்பட்டதுபோல கதவு அதிர்ந்து இறுகியது. இரண்டாவது இரு தாழ்மரங்கள் பாதி விலகுவதற்குள்ளாகவே பெரும் உறுமலுடன் கோட்டைக்கதவு திறந்து பக்கவாட்டில் கோட்டைச்சுவரில் மோத வெள்ளம் வெடித்து எழுவதுபோல உள்ளே வந்தது. கோட்டைச்சுவரில் ஒரு பெரிய துதிக்கை முளைத்தது போல வெள்ளப்பெருக்கு நீண்டு யானைகளை தூக்கிச்சுழற்றி எடுத்துக்கொண்டு நகருக்குள் சென்றது.
EPI_98
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
பெருகிய நீர் உள்ளே விரிந்திருந்த களமுற்றத்தில் விரிந்ததும் விரைவழிந்து நாற்புறமும் பரவியது. கோட்டைவாயில் வழியாக அவர் அதுவரை கண்டிராத ஒரு புதிய நதி நகருக்குள் புகுவதை விப்ரர் பார்த்துக்கொண்டிருந்தார். நீரில் வந்த மரங்களும் புதர்களும் சுழித்து கட்டடங்களில் முட்டித் தயங்கின. கைவிடுபடைக்கலங்களின் பெருமேடைகளில் தங்கின. பெரிய மரங்கள் சில கோட்டைவாயிலில் முட்டி நின்று நீரின் அழுத்தத்தை வாங்கி நீரைப் பிரித்தன. பின் மெல்லமெல்ல திசைமாறி சரிந்து உள்ளே வந்து நீர்விரைவில் கலந்து சென்றன.
நீரில் புரண்டுசென்ற நான்குயானைகளும் மூழ்கி எழுந்து துதிக்கையை நீருக்குமேல் தூக்கியபடி நீந்தி மறுபக்கம் தங்கள் கொட்டில் நோக்கிச் சென்றன. கட்டவிழ்த்துவிடப்பட்ட யானைகள் பெருகிவந்த நீரில் நீந்தியபடி மேடான இடம் நோக்கிச் செல்ல யானைகளின் தலைவியான காலகீர்த்தி துதிக்கை தூக்கி பிளிறி யானைமகவுகள் நலமாக இருக்கின்றனவா என்று வினவியது. அனைத்து அன்னை யானைகளும் பதிலுக்குப் பிளிறி அவை நலமே என்று அறிவித்தன. யானைக்கொட்டிலை பாதி நிறைத்த நீர் மேலும் சற்று உயர்ந்தது. மகாமுற்றத்திலிருந்து பிரியும் அனைத்துச்சாலைகளையும் கிளையாறுகளாக ஆக்கியபடி நீர் நகரை நிறைத்தது.
நீர் தங்கள் இல்லங்களின் உப்பரிகை விளிம்புகளில் வந்து மெல்லிய நாக்கால் நக்கி ஒலிப்பதை அரையிருளில் நகர்மக்கள் கண்டனர். நீரில் மிதந்துவந்த எதையும் தொடவேண்டாமென்றும் நீர் விளிம்புக்குச் செல்லவேண்டாமென்றும் அவர்கள் மைந்தர்களை எச்சரித்தனர். கழிகளால் நீரில் மிதந்துவந்து கரைக்கழிகளைப் பற்றி தொற்றி ஏறமுயன்ற பாம்புகளை அவர்கள் தள்ளி மீண்டும் நீரிலேயே விட்டார்கள்.
தெற்குக் கோட்டைவாயில் வழியாக நீர் பெருகி வெளியே சென்றது. நீரில் வந்த மரங்களும் புதர்களும் நகரால் அரித்துநிறுத்தப்பட, வெறும் நீர் அலையலையாக வெளியே சென்று அங்கே ஓடிய புராணகங்கையின் மறுபக்கப் பள்ளம் வழியாகச் சென்று அப்பால் விரிந்த காட்டுக்குள் புகுந்தது. மழை விடியற்காலையிலேயே நின்றுவிட்டது. மெல்லிய காலையொளியில் நகரம் முழுக்க நிறைந்திருந்த செந்நிறமான நீரைக் கண்டு குழந்தைகள் உவகை கொண்டு குதித்தன. நகர்மாளிகைகள் மரக்கலங்கள் போல, இல்லங்கள் படகுகள் போலத் தோன்றின. நீரின் ஒளியால் நகரம் மேலும் துலக்கமுற்றது.
நகர்த்தெருக்களில் படகுகள் ஓடுவதை முதியவர்கள் திகைத்து வாய்மேல் கைகளை வைத்து நோக்கினர். படகுகளிலும் பரிசல்களிலும் படைவீரர்கள் ‘யாவரும் நலமா? உணவு தேவைப்படுபவர்கள் யார்? தனித்துச்சிக்கிக்கொண்டவர்கள் உளரா?’ என்று கூவியபடியே சென்றனர். உப்பரிகையில் நின்றபடி கீழே சுழித்தோடிய வெள்ளத்தைப்பார்த்த குழந்தைகள் நான்கு யானைகள் அந்த நீரில் மகிழ்வுடன் நீந்தித்திளைத்துச் செல்வதைக் கண்டு கூவி ஆர்த்து துள்ளிக்குதித்தனர்.
மதியம் மழை முழுமையாகவே நின்றுவிட்டது. காற்றில் நீர்ப்பிசிறுகள் மட்டும் பறந்துகொண்டிருந்தன. நகர்த்தெருக்களில் ஓடிய நீரின் ஒளியலைகள் கட்டடங்களின் சுவர்களில் ததும்பின. அஸ்தினபுரிக்கு அயலான மலைச்சேற்றின் வாசனை நீரிலிருந்து எழுந்தது. மாலைக்குள் நீர் பாதியாகக் குறைந்தது. இரவெல்லாம் நீர் குறைந்தபடியே இருந்தது. குழந்தைகள் கண் துயில பெரியவர்கள் அச்சமும் மனக்கிளர்ச்சியுமாக பேசிக்கொண்டே இரவைக் கழித்தனர்.
மறுநாள் காலை விடிந்தபோது தெருக்களில் கணுக்காலளவே நீர் ஓடிக்கொண்டிருந்தது. குழந்தைகளை வீடுகளில் விட்டுவிட்டு ஆண்களும் பெண்களும் தெருவிலிறங்கி தங்கள் இல்லங்கள் சரியாமலிருக்கின்றனவா என்று பார்க்கச்சென்றனர். அஸ்தினபுரியின் இல்லங்களெல்லாமே ஆழமாக மரங்களை நட்டு அந்த அடித்தளம் மீது எழுப்பப்பட்டவையாதலால் ஓரிரு வீடுகளே சரிந்திருந்தன. இல்லங்களுக்குள் எல்லாம் நீர் சுழித்தோடிக்கொண்டிருந்ததைக் கண்டனர். ‘இல்லங்களுக்குள் நுழையாதீர். பாம்புகளும் தேள்களும் குடிகொண்டிருக்கலாம்’ என எச்சரித்தபடி காவலர்கள் குதிரைகளில் சென்றனர்.
மறுநாள் முற்றிலுமாகவே நீர் நின்றுவிட்டது. மென்மையான சேறு நகரமெங்கும் படிந்திருந்தது. தோலுரிக்கப்பட்ட ஊன் போன்ற கதுப்பு. நீரில் ஊறிய பட்டுபோன்ற சுழிப்பு. மக்கள் தங்கள் இல்லங்களுக்குச்சென்று தூய்மைப்படுத்தத் தொடங்கினர். அரச ஆணைப்படி காடுகளிலிருந்து நாகர்கள் வந்திறங்கினர். அவர்கள் வீடுகளுக்குள் சென்று சாளரத்து அழிகளிலும் தாழ்களிலும் சுற்றியிருந்த பாம்புகளை கழிகளால் தட்டிச் சீறச்செய்து அவை பாய்ந்தோடும்போது அங்கே ஓலையாலான கூடைகளைக் காட்டி பிடித்து பெரிய கூடைகளிலாக்கிக் கொண்டனர். அவர்கள் சுமந்துசென்ற கூடைகளின் இடுக்குகள் வழியாக வழிந்த பாம்புகள் ஓட்டைக்கலங்களில் இருந்து கரிய திரவம் வழிவதுபோலத் தோன்றின.
பிடிபட்ட பாம்புகளை தலையில் சுமந்து வண்டிகளில் ஏற்றி மீண்டும் வடபுலக்காட்டுக்குள்ளேயே கொண்டுசென்று விட்டனர். கூடைகளில் இருந்து அவை நான்குபக்கமும் பாய்ந்திறங்கி இலைத்தழைப்புக்குள் மறைந்தன. நகருக்குள் புகுந்த எலிகளை பானைப்பொறிகளை வைத்து பிடித்தனர். வீடுகளுக்குள் எல்லாம் செங்களி போல சேறு படர்ந்திருந்தது. அவற்றை பலகைகளால் தள்ளிச் சேர்த்து அள்ளி வெளியே கொட்டினர். சேற்றுப்பரப்புகளில் சிறிய குமிழிகள் வெடித்த துளைகளுக்குள் சிறு பூச்சிகள் அதற்குள்ளாகவே வாழத்தொடங்கியிருந்தன. சேற்றுக்கதுப்பில் பூச்சிகள் ஓடிய வரிகள் விழுந்திருந்தன. யானைச்சருமம் போல சேற்றில் நீர் ஊறி ஓடிய வரிகள் தெரிந்தன.
நகரம் தன்னை தூய்மைசெய்துகொள்ள பத்துநாட்களாகியது. அதன்பின் மழை பெய்யவில்லை. வானம் முழுமையாகவே வெளுத்து வெள்வெயில் நகர்மீது பரவிப்பொழிய நெடுநாட்களாக ஒளியைக் காணாத முதியவர்களின் கண்கள் கலங்கி நீர்வழிந்தது. இரண்டுநாட்களிலேயே எஞ்சிய சேற்றையெல்லாம் மென்மணல்போல ஆக்கியது வான்வெம்மை. நாலைந்துநாட்களுக்குள் மழை பெய்ததெல்லாம் தொலைதூர நினைவாக மாறும்படியாக வெயில் எழுந்து நின்றது. நகரின் அனைத்து நீரோடைகளிலும் சுழித்தோடிய தெள்நீரில் மழைநீரின் குளுமையும் சேற்றுச்சுவையும் எஞ்சியிருந்தன.
காட்டுக்குள் இருந்து வெண்சுண்ணமண்ணை அள்ளி ஒற்றைமாட்டுவண்டியில் சுமையேற்றிய காடவர்கள் நகருக்குள் தெருத்தெருவாக வந்து கூவி விற்றனர். தேன்மெழுகையும் கொம்பரக்கையும் விற்கும் களியரும் தெருக்கள் தோறும் அத்திரிகளையும் கழுதைகளையும் சுமைகளுடன் ஓட்டியபடி கூவியலைந்தனர். நகர்மக்கள் கூரையிடுக்குகளை களிமண்ணையும் தேன்மெழுகையும் கலந்து அடைத்தனர். வெண்மண்ணையும் அரக்கையும் மெழுகையும் கலந்து தங்கள் இல்லச்சுவர்களில் பூசி புதுவண்ணமேற்றினர். நீலக்கல்லையும் செந்நிறக்கல்லையும் அரைத்து எடுத்த சாயங்களுடன் மெழுகை உருக்கிச்சேர்த்த கலவையைப் பூசி தூண்களையும் கதவுகளையும் வண்ணம்கொள்ளச்செய்தனர். வசந்தம் பூத்த காடு போல் நகரம் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருந்தது.
அரண்மனையை புதுப்பிக்க கலிங்கச் சிற்பியர் வந்து சேர்ந்தனர். அவர்கள் மாடக்குவைகளை வெண்ணிறமேற்றி மேகக்கூட்டங்கள் போலாக்கினர். செந்நிற மரப்பலகைகளில் மெழுகேற்றி மெருகூட்டினர். சுவர்களில் புதுச்சுண்ணம் சேர்த்தனர். புதிய திரைச்சீலைகளையும் பாவட்டாக்களையும் பட்டத்தூண்களையும் பதாகைகளையும் கட்டினர். அப்போது பணித்ததுபோல அரண்மனை வளாகம் எழில் கொண்டு எழுந்தது. பழையன கழிந்து புதியவை எழுந்து அஸ்தினபுரி மலர்ந்தது.
அரசகுலத்தின் இரு இளவரசர்களுக்கும் மணவினை முடிந்து தேவியர் நகர்புகுந்துவிட்டனர். மழைக்காலம் முடிந்துவிட்டதனால் மூத்தவருக்கு பட்டம் சூட்டும் விழவு நிகழுமென மக்கள் எதிர்பார்த்தனர். அரச அறிவிப்பு எத்தினத்திலும் வெளியாகுமென்று சந்தைகளிலும் மன்றுகளிலும் திண்ணைகளிலும் பின்கட்டுகளிலும் பேச்சு நிகழ்ந்தது. ஐம்பத்தைந்து ஷத்ரிய மன்னர்களும் பாரதவர்ஷத்தின் தொலைதூரத்து அரசர்களும் நகர்புகுவார்கள் என நிமித்திகர் கூறினர். அதற்கேற்ப அஸ்தினபுரியின் அனைத்துக் கட்டடங்களையும் பழுதுபார்க்கும்பணி இரவுபகலாக நிகழ்ந்துகொண்டிருந்தது.
காந்தாரத்தில் இருந்து இளவரசர் சகுனி தன் தமக்கை அரியணையமரும் விழவைக் கொண்டாடுவதற்காக பரிசில்களுடன் வருவதாக அரண்மனைச்செய்தி நகருக்குள் பரவியது. ‘காந்தாரம் செல்வக்கருவூலம்… அவர் கொண்டுவரும் செல்வத்தால் நம் களஞ்சியங்கள் நிறையப்போகின்றன’ என்றனர் மூத்தார். ஒவ்வொருநாளும் புதிய செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஆயிரம் யானைகளில் செல்வம் வருவதாக முதலில் சொன்னார்கள். அவை யானைகள் அல்ல ஒட்டகவண்டிகள் என்று பின்னர் செய்தி வந்தது. ஆயிரமா, யார் சொன்னது, ஐந்தாயிரம் வண்டிகள் என்று சொன்ன சூதனை திகைத்து நோக்கி வாய்திறந்து நின்றனர் நகர்மக்கள்.
சகுனி எல்லைபுகுந்துவிட்டார் என்ற செய்தி வந்ததும் நகர்மக்கள் கிளர்ச்சிகொண்டனர். மறுநாள் அவர் நகர் நுழையக்கூடுமென்று வணிகர்கள் சொன்னார்கள். கணிகர் நாள் நோக்கி மறுநாள் கதிர் எழுவதற்கு முன்னும் அந்தி சாய்ந்தபின்னும் மட்டுமே நற்தருணம் உள்ளது என்றனர். அந்தியில் செல்வம் உள்ளே வருவதற்கு நூல் முறை இல்லை என்பதனால் சகுனி அதிகாலையில்தான் நகர்நுழையக்கூடுமென்றனர். ஒவ்வொரு நாழிகைக்கும் ஒரு செய்தி என வந்துகொண்டிருந்தது. மன்றுகள் முழுக்க அதைப்பற்றி மட்டுமே பேசப்பட்டது.
கருக்கிருட்டிலேயே கிழக்குக்கோட்டைவாயிலுக்கு முன்னால் பெருங்கூட்டம் திரண்டிருந்தது. குதிரைகளில் ஏறிய படைவீரர்கள் ‘பாதையை மறிக்காதீர். பாதையின் எல்லைக்கற்களுக்கு அப்பால் மட்டுமே நில்லுங்கள்!’ என்று கூவியபடி மீண்டும் மீண்டும் சாலைகளில் குளம்படி ஓசை சிதற விரைந்துகொண்டிருந்தார்கள். முரசுமேடைகளிலும் காவல்மாடங்களிலும் மன்றுத்தூண்களிலும் மாளிகைமுகடுகளிலும் பந்தங்கள் செவ்வொளி அலைய ஒளிவிட்டுக்கொண்டிருந்தன. கைவிடுபடைகளின் வேல்நுனிகளில் பந்த ஒளிகள் ஆயிரம் செவ்விழிகளாகத் திறந்து இமைத்துக்கொண்டிருந்தன.
மூடிய கோட்டைக்கதவுக்குப் பின்னால் திரண்டிருந்த அஸ்தினபுரியின் மக்கள் கிளர்ச்சியுற்ற குரலில் பேசிக்கொண்டும் கூவிக்கொண்டும் காத்திருந்தனர். கோட்டைக்கதவின் பொருத்துக்களின் இடைவெளிகள் வழியாக மறுபக்கம் எரிந்த பந்தங்களின் செவ்வொளிக்கற்றைகள் பீரிட்டு வந்து குருதிதோய்ந்த வாள்கள் போல இருளில் நீட்டி நின்றன. பெருமுரசங்களின் அருகே கோல்காரர்கள் காத்து நின்றனர். ‘விதுரர்! விதுரர்!’ என ஒரு குரல் ஒலித்தது. விதுரனின் ரதம் அப்பால் வருவதை அங்கே எழுந்த வாழ்த்தொலிகள் காட்டின. மக்கள் விதுரனை வாழ்த்தி கூவினர்.
விதுரன் வந்து கோட்டையின் மூடிய வாயிலுக்கு முன் ரதத்தில் இருந்து இறங்கி நின்றுகொண்டான். அமைச்சர்கள் விப்ரரும் லிகிதரும் சோமரும் படைத்தலைவர்கள் உக்ரசேனரும் சத்ருஞ்சயரும் வியாஹ்ரதத்தரும் தங்கள் ரதங்களில் வந்து இறங்கி விதுரனின் இருபக்கமும் நின்றுகொண்டனர். அவர்களின் ரதங்கள் அப்பால் கொடிகள் மென்காற்றில் அலைய வரிசையாக அணிவகுத்து நின்றன. படைவீரர்கள் கைகாட்ட வாழ்த்தொலிகள் அமைந்தன. கொடிகளும் சுடர்களும் காற்றில் படபடக்கும் ஒலி கேட்குமளவுக்கு அமைதி நிலவியது. குதிரை ஒன்று பர்ர் என செருக்கடித்தது.
கோட்டைமேல் ஒரு விளக்கு சுழன்றது. விப்ரர் கையைக் காட்டினார். அவர் முன் ஆணைகாத்து நின்ற காவலர்தலைவன் தன் இடையில் இருந்த சங்கை எடுத்து ஊத வீரர்கள் கூச்சலிட்டபடி ஓடினர். கோட்டைவாயிலைத்திறக்கும் நான்கு யானைகள் பாகன்களால் கொண்டுசெல்லப்பட்டன. அவை தலையை ஆட்டி, துதிக்கை துழாவி முன்னால்சென்றன. பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்னால் அஸ்தினபுரியின் கோட்டைவாயில் திறக்கப்படுவதில்லை, சகுனிக்காக விதிகள் தளர்த்தப்படுகின்றன என ஒரு முதியவர் சொன்னார். பிறர் வியப்புடன் தலையசைத்தனர்.
யானைகள் கனத்த சங்கிலிகளை இழுத்ததும் மேலே இருந்த இரும்புச்சக்கரங்கள் உலோக ஓலத்துடன் சுழன்றன. கதவை மூடியிருந்த பெருந்தாழ்மரங்கள் மெல்ல விலகின. அஞ்சிய உதடுகளில் சொல் பிறப்பதுபோல கதவுகள் விலகி இடைவெளியிட்டன. இரும்புக்கீல்கள் பேரொலி எழுப்ப கதவு விரியத்திறந்தது. அப்பாலிருந்து காட்டுத்தீ பெருகி நகருக்குள் இறங்குவதுபோல பல்லாயிரம் நெய்ப்பந்தங்களின் ஒளி உள்ளே நுழைந்தது. பந்தங்களை ஏந்திய குதிரை வீரர்கள் சூழ்ந்துவர பெரிய வண்டிகளும் ரதங்களும் வந்தபடியே இருந்தன.