அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

2/25/14

பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்[ 6 ]

பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்[ 6 ]
பாலையில் இரவில் வானம் மட்டுமே இருந்தது. இருளில் நடக்கையில் வானில் நீந்தும் உணர்வெழுந்தது. ஆனால் மண்ணை மட்டுமே பார்த்து சிறிது நடந்தால் மண்ணில் ஓர் ஒளி இருப்பதை காணமுடிந்தது. புதர்க்கூட்டங்களெல்லாம் இருள்குவைகளாக ஆகி பாதை மங்கித்தெரிந்தது. பீஷ்மர் அனிச்சையாக நின்றார். மெல்லிய ஒளியுடன் ஒரு நாகம் நெளிந்து சென்றது. பெருமூச்சுடன் பொருளில்லாது ஓடிய எண்ணங்களில் இருந்து விடுபட்டு இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு சுற்றிலும் பார்த்தார்.
நீர்வளம் மிக்க மண்ணில் பிறந்து வளர்ந்த எவருக்கும் பாலையைப் பார்க்கையில் வரும் எண்ணங்கள்தான் முதல்முறையாக அந்த வெற்றுநிலவிரிவைப் பார்க்கையில் அவருக்கும் எழுந்தன. கல்லில் செதுக்கப்பட்ட பறைவாத்தியத்தை பார்ப்பதுபோல. ஓவியத்தில் வரையப்பட்ட உணவைப்போல. பயனற்றது, உரையாட மறுப்பது, அணுகமுடியாதது. பிறிதொரு குலம் வணங்கும் கனியாத தெய்வம்.
அலையலையாக காற்று மண்ணில் படிந்திருக்க வெந்த வாசனையை எழுப்பியபடி பொன்னிறத்தில் பரவி தொடுவான்கோட்டில் வளைந்துகிடந்த நிலத்தைப் பார்த்தபோது ஏன் மனதை துயரம் வந்து மூடுகிறதென்று அவருக்குத் தெரியவில்லை. அறிந்தவை எல்லாம் பொருளிழந்து நம்பியவை எல்லாம் சாரமிழந்து அகம் வெறுமைகொண்டது. மண் மட்டுமே எஞ்ச அவர் இல்லாததுபோலத் தோன்றியது. வணிகக்கூட்டத்துடன் நடந்தபோது மெல்ல எதிர்ப்பக்கமாகச் சுழன்ற மண் பெரும்சுழி ஒன்று என மயங்கச்செய்தது.
பின்பு அவர் களைத்து ஒரு பிலு மரத்தடியில் அமர்ந்து ஏதோ எண்ணங்களுடன் கையில் அந்த மண்ணை அள்ளி மெதுவாக உதிர்த்தபின் கைவெள்ளையைப் பார்த்தபோது சிறிய விதைகள் ஒட்டியிருப்பதைக் கண்டார். குனிந்து அந்த மண்ணை அள்ளி அது முழுக்க விதைகள் நிறைந்திருப்பதை அறிந்து வியந்தார். நிமிர்ந்து கண் தொடும் தொலைவுவரை பரந்திருந்த மண்ணைப்பார்த்தபோது அது ஒரு பெரும் விதைக்களஞ்சியம் என்ற எண்ணம் வந்தது. என்றேனும் வடவை நெருப்பு சினந்து மண்ணிலுள்ள அனைத்துத் தாவரங்களும் அழிந்துபோய்விட்டால் பிரஜாபதியான பிருது வருணனின் அருளுடன் அந்தப் பாலைமண்ணில் இருந்தே புவியை மீட்டுவிடமுடியும்.
ஆனால் அது வேறு புவியாக இருக்கும். முற்றிலும் வேறு மரங்கள் வேறு செடிகள் வேறு உயிர்கள் வேறு விதிகள் கொண்ட புவி. பாலைநிலம் என்பது ஒரு மாபெரும் நிகழ்தகவு. இன்னும் நிகழாத கனவு. யுகங்களின் அமைதியுடன் காத்திருக்கும் ஒரு புதிய வாழ்வு. எழுந்து நின்று அந்தமண்ணைப் பார்த்தபோது திகைப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. உறங்கும் காடுகள். நுண்வடிவத் தாவரப்பெருவெளி. மண்மகளின் சுஷுப்தி. அந்தப் பொன்னிறமண் மீது கால்களை வைத்தபோது உள்ளங்கால் பதறியது.
ஐம்பதுநாட்களுக்குள் பாலைநிலத்திலேயே பிறந்து வளர்ந்த ஒரு மிருகம் ஆகிவிட்டார். காற்றுவீசும் திசையில் இருந்து வரப்போகும் மணல்புயலை உய்த்தறிய முடிந்தது. வாசனையைக் கொண்டு நீர் இருக்குமிடத்துக்குச் செல்ல முடிந்தது. அவரை அணுகிய பாலைவன உடும்பு தன் சிறு கண்களை நீர்நிரம்பும் பளிங்குமணிக் குடுவைகள் போல இமைத்து கூர்ந்து நோக்கியபின் அவசரமில்லாமல் கடந்து சென்றது. அவர் உடலிலும் தலையிலும் பாலைவனத்து மென்மணல் படிந்து அவர் அம்மண்ணில் படுத்தால் பத்து காலடி தொலைவில் அவரை எவருமே பார்க்கமுடியாதென்று ஆனது.
இருளில் பாலைநிலம் மெல்ல மறைந்து ஒலிகளாகவும் வாசனையாகவும் மாறிவிட்டிருந்தது. அது பின்வாங்கிப்பின்வாங்கி சுற்றிலும் வளைந்து சூழ்ந்திருந்த தொடுவானில் மறைகிறது என்று அவர் முதலில் நினைத்தார். அந்தியில் தொடுவானம் ஒரு செந்நிறமான கோடாக நெடுநேரம் அலையடித்துக்கொண்டிருக்கும். பின்பு பாலை இருளுக்கும் இருளுக்குமான வேறுபாடாக ஆகும். மெல்ல கண்பழகியதும் தொலைவு என ஏதுமில்லாமல் செங்குத்தாக சூழ்ந்திருக்கும் சாம்பல்நிறப் பரப்பாக பாலைநிலம் உருமாறும்.
பின்னர் அவர் அறிந்தார், பாலைநிலம் அவருக்குள்தான் சுருண்டு சுருங்கி அடர்ந்து ஒரு ரசப்புள்ளியாக மாறிச் சென்று அமைகிறது என்று. எந்த இருளில் கண்களை மூடினாலும் பொன்னுருகிப் பரந்த பெருவெளியை பார்த்துவிடமுடியும். அங்கே துயிலும் விதைகளில் ஒரு விதைபோல சென்றுகொண்டிருக்கும் மண்மூடிய நெடியமனிதனை பார்த்துவிடமுடியும். தனிமையில் அவன் அடையும் சுதந்திரத்தை. அவன் முகத்தில் நிறைந்திருக்கும் புன்னகையை.
பீஷ்மர் கால் ஓய்ந்து ஒரு மரத்தடியில் அமர்ந்தார். இடையில் இருந்த நீர்க்கொப்பரையை எடுத்து உதடுகளையும் வாயையும் மட்டும் நனைத்துக்கொண்டார். மணலில் மெல்லப் படுத்து கைகால்களை நீட்டிக்கொண்டார். இரு தோள்களில் இருந்தும் எடை மண்ணுக்கு இறங்குவதை உணர்ந்தார். சூதர் சொன்னது நினைவுக்கு வந்தது ‘அகலமான தோள்கள் கொண்டவர் நீங்கள், வீரரே. இருபத்தைந்தாண்டுகாலமாக அவற்றில் தம்பியரைச் சுமந்து வருகிறீர்கள்.’ பீஷ்மர் புன்னகைசெய்தபோது சூதர் சிரித்துக்கொண்டு ‘சுமைகளால் வடிவமைக்கப்பட்ட உடல்கொண்டவர்கள் பின்பு சுமைகளை இறக்கவே முடியாது’ என்றார்.
அவர் என்ன சொல்லப்போகிறார் என உணர்ந்தவர்போல பீஷ்மர் போதும் என்று கைகாட்டினார். ஆனால் அவர் எவராலும் கட்டுப்படுத்தப்படக்கூடியவர் அல்ல என்று தெரிந்தது. ‘உங்கள் இருதோள்களும் ஒழிவதே இல்லை வீரரே. விழியற்றவனையும் நிறமற்றவனையும் தூக்கிக்கொள்ளலாம்…’ அவரே அதில் மகிழ்ந்து ‘ஆகா என்ன ஒரு அரிய நகைச்சுவை. விழியற்றவனுக்கு கண்களில் நிறங்கள் இல்லை. விழியிருப்பவனுக்கு உடலில் நிறங்கள் இல்லை… ஆகாகாகா!’ இருகைகளையும் ஒன்றுடன் ஒன்று ஓங்கி அறைந்தபடி பீஷ்மர் எழுந்துவிட்டார்.
‘என்னை கொல்லப்போகிறீர்களா?’ என்று இமையாவிழிகளுடன் நாகசூதர் கேட்டார். பீஷ்மர் திகைப்புடன் கைகளை தொங்கவிட்டார். ‘எத்தனை காலமாக நாகங்களைக் கொல்ல ஷத்ரியர் முயன்று வருகிறார்கள் வீரரே? ஷத்ரியகுலத்தின் கடைசிக்கனவே அதுதானோ?’ பீஷ்மர் ‘உங்களுடைய தட்சிணையை நான் அளித்துவிட்டேன்’ என்று சொல்லி திரும்பி நடந்தார்.
முதுநாகர் பின்னால் ஓசையிட்டுச் சிரித்தார் ‘நாகவிஷத்தில் தன்னை அறிய என்னைத் தேடிவந்தவன் நீயல்லவா? நாகங்கள் உன்னைத்தேடிவரும்…உங்கள் குலத்தையே தேடிவருவோம்….ஷத்ரிய இனத்தையே நாங்கள் சுருட்டிக்கவ்வி விழுங்குவோம்…’ அப்பால் நடந்துசென்ற பீஷ்மர் கால்கள் தளர்ந்தவர் போல நின்றார். திரும்பி நாகரின் மின்னும் கண்மணிகளைப் பார்த்தார். நாகருக்குப்பின்னால் இருண்ட சர்ப்பங்களின் நெளிவைப் பார்க்கமுடிந்தது. அது விழிமயக்கா என எண்ணியகணம் அங்கே இருள் மட்டும் தொங்கிக்கிடந்தது.
‘நல்லூழினால் நீயும் அப்போது வாழ்வாய். நானோ அழியாதவன். அங்கே வந்து உன்னை சந்திக்கிறேன்’ என்றார் நாகர். பீஷ்மர் மிக அடங்கி அவருக்குள் என ஒலித்த குரலில் ‘எங்கே?’ என்றார். ‘படுகளத்தில்…வேறெங்கே?’ நாகரின் சிரிப்பு ஊன் கிழித்து உண்ணும் கழுதைப்புலிகளின் எக்காளம் போல ஒலித்தது. பீஷ்மரின் கைகள் செயலிழந்து தொங்கின. தலைகுனிந்தவராக நடந்துவிலகினார்.
அவர் எழப்போனபோது தொலைவில் ஒரு காலடி ஓசை கேட்டது. காதுக்குக் கேட்பதற்குள்ளாகவே நிலத்தில் படிந்திருந்த உடலுக்கு அது கேட்டது. அவர் எழுந்து அமர்ந்து தன் கையை நீட்டி அருகே நின்றிருந்த முட்புதரில் இருந்து ஒரே ஒரு நீளமான முள்ளை ஒடித்துக்கொண்டு பார்த்தார். பாலையின் மீது மெல்லிய தடம்போலக் கிடந்த காலடிப்பாதையில் அப்பால் ஒருவன் வருவது தெரிந்தது. அவனுடைய காலடிஓசை கனத்ததாகவும் சீராகவும் இருந்ததிலிருந்து அவன் போர்வீரன் என்பதும் எடைமிக்கவன் என்பதும் தெரிந்தது.
நெருங்கி வந்தவன் அவரைக் கண்டுகொண்டான். ஆனால் ஒருகணம்கூட அவனுடைய காலடிகள் தயங்கவில்லை. அவன் கைகள் வில்லைநோக்கிச் செல்லவுமில்லை. அதே வேகத்தில் அவரைநோக்கி வந்தவனின் கண்கள் மட்டும் ஒளிகொண்டு அருகே நெருங்கின. கூந்தல் காற்றில் பறந்துகொண்டிருந்தது. காதுகளில் மெல்ல ஒளிமின்னும் குண்டலங்கள் அவன் ஷத்ரியன் என்று காட்டின. அருகே வந்ததும் அவன் முலைகளையும் இடையையும் பார்த்த பீஷ்மர் அவன் யார் என்று புரிந்துகொண்டார். புன்னகையுடன் தன் கையில் இருந்த முள்ளை கீழே வீசினார்.
“வணங்குகிறேன் வீரரே” என்றபடி சிகண்டி அருகே வந்தான். “உத்தரபாஞ்சாலத்தைச் சேர்ந்த என் பெயர் சிகண்டி. நான் மூலத்தான நகரிக்கு சென்று கொண்டிருக்கிறேன்.” பீஷ்மர் “நலம்பெறுவாயாக!” என்றார். “என் பெயர் வாகுகன். நான் திருவிடநாட்டைச் சேர்ந்த ஷத்ரியன். கான்புகுந்தபின் புறநாட்டுப் பயணத்தில் இருக்கிறேன்.” சிகண்டி “நான் தங்களுடன் பயணம் செய்யலாமல்லவா?” என்றான். “ஆம், பாலைவனம் போல அன்னியர்களை நண்பர்களாக ஆக்கும் இடம் வேறில்லை” என்றார் பீஷ்மர்.
VENMURASU_EPI_48
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
அவர்கள் நடக்கத் தொடங்கினர். “தாங்கள் துறவுபூண்டுவிட்டீர்களா?” என்றான் சிகண்டி . “ஆம், எது மெய்யான நாடோ அதைத் தேடுகிறேன். எது நிலையான அரியணையோ அதை அடையவிரும்புகிறேன்” என்றார் பீஷ்மர். சிகண்டி சிரித்து “தாங்களும் ரிஷியாக அறியப்படப்போகிறீர்கள்” என்றான். “பாரதவர்ஷத்தில் ரிஷியாக ஆசைப்படாத எவருமே இல்லை என நினைக்கிறேன்.”
பீஷ்மர் சிரித்துக்கொண்டு “நீயும்தான் இல்லையா?” என்றார். “இல்லை வீரரே. ஒருவேளை இந்த பாரதவர்ஷத்திலேயே ரிஷியாக விரும்பாத முதல் மனிதன் நான் என நினைக்கிறேன்” என்றபின் இருளில் ஆவிநாற்றம் வீச வாய்திறந்து “என்னை நீங்கள் மனிதன் என ஒப்புக்கொள்வீர்கள் என்றால்” என்றான். பீஷ்மர் பதில் சொல்லாமல் நடந்தார். சிகண்டி “வீரரே, நீங்கள் அஸ்தினபுரியின் பிதாமகரான பீஷ்மரை அறிவீர்களா?” என்றான்.
“பாரதவர்ஷத்தில் உள்ள ஒவ்வொருவரும் அறிந்ததை மட்டுமே நானும் அறிவேன்” என்றார் பீஷ்மர் . “அப்படியென்றால் நீங்கள் அவரால் கவர்ந்துவரப்பட்டு புறக்கணிக்கப்பட்டு கொற்றவைக்கோலம் கொண்டு மறைந்த அம்பாதேவியை அறிந்திருப்பீர்கள்.” பீஷ்மர் “ஆம்” என்றார். சிகண்டி “அவர் என் அன்னை. ஆகவே நான் அவரேதான்” என்றான். “என் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்துக்கும் ஒன்றே இலக்கு.” சிகண்டியின் குரல் இருளில் மிக அருகே மிக மெல்லியதாக ஒலித்தது. “பீஷ்மரின் நெஞ்சைப் பிளந்து அவர் இதயத்தைப் பிய்த்து என் கையில் எடுப்பது. அது என் அன்னை எனக்கிட்ட ஆணை!” அவன் மூச்சுக்கும் மட்கிய மாமிசத்தின் வெம்மையான வாசனை இருந்தது.
“நீ அதற்கு அனைத்து தனுர்வேதத்தைக் கற்று கரைகடக்க வேண்டுமே..” என்றார் பீஷ்மர். “ஆம், ஆகவேதான் நான் பாரத்வாஜரின் மாணவரான அக்னிவேசரிடம் மாணவனாகச் சேர்ந்தேன்” என்றான் சிகண்டி. “அவரிடம் நான் தொடககப் பாடங்களை கற்றுக்கொண்டேன். பயிற்சியின்போது என்னுள் பீஷ்மர் மீதான சினம் நிறைந்திருப்பதைக் கண்டு அவர் என்னை பீஷ்மரை நன்கறிந்துவரும்படி ஆணையிட்டு அனுப்பினார். ஆகவேதான் நான் இப்பயணத்தைத் தொடங்கினேன்.”
பீஷ்மர் “இங்கே எதற்காக வந்தாய்?” என்றார். “நான் தண்டகர் என்னும் நாகசூதரைப் பார்ப்பதற்காக இங்கே வந்தேன்” சிகண்டி சொன்னான். பீஷ்மர் வெறுமனே திரும்பிப்பார்த்தார். “நான் யாரென அவர் சொல்வார் என்று கேள்விப்பட்டேன். நான் யாரென அறிவது என் எதிரியை அறிவதன் முதல் படி என்றார்கள். ஆகவே சைப்ய நாட்டுக்குச் சென்று அங்கிருந்து இங்கே வந்தேன்.”
“நாகசூதர் நீதான் சிகண்டி என்று சொல்லியிருப்பார் இல்லையா?” என்றார் பீஷ்மர் . சிகண்டி அந்தச்சிரிப்பை உணராமல் தலையை அசைத்தான். தனக்குள் சொல்லிக்கொள்பவன் போல “நான் அவரது யானத்தில் நெளிந்த கருநீல நீரைப் பார்த்தேன். அலையடங்கியதும் அதில் தெரிந்த என் முகம் மறைந்து அஸ்தினபுரியின் பீஷ்மரின் முகம் தெரிந்தது” என்றான்.
காற்றில் பறந்த மேலாடையை அள்ளி உடலுடன் சுற்றியபடி “அவர்தான் உன் எதிரியா?” என்றார் பீஷ்மர். அச்செயல்மூலம் அவர் தன்னை முழுமையாகவே மறைத்துக்கொண்டார். “கனவிலும் விழிப்பிலும் எதிரியை எண்ணுபவன் அவனாகவே ஆகிவிடுவதில் என்ன வியப்பு?” என்றார் பீஷ்மர். “நான் அவராக ஆகவில்லை வீரரே. அவரும் நானும் ஒன்றே என உணர்ந்தேன்” என்றான் சிகண்டி.
பீஷ்மர் “அதுவும் முற்றெதிரிகள் உணரும் ஞானமே” என்றார். சிகண்டி அதை கவனிக்காமல் “நான் கண்டது பீஷ்மரின் இளவயது முகம்” என்றான். “நான் கூர்ந்து பார்ப்பதற்குள் அது மறைந்தது. பீஷ்மரின் வயது பதினேழு. அப்போதுதான் தந்தைக்குச் செய்த ஆணையால் தன்னையும் என்னைப்போல உள்ளத்தால் அவர் ஆக்கிக்கொண்டார்.” பீஷ்மர் நின்று “உன்னைப்போலவா?” என்றார்.
“ஆம். நானும் அவரும் உருவும் நிழலும்போல என்று நாகர் சொன்னார். அல்லது ஒன்றின் இரு நிழல்கள் போல. அவர் செய்ததைத்தான் நானும் செய்தேன்” என்றான் சிகண்டி . “அவரில்லாமல் நான் இல்லை. அவர் ஒரு நதி என்றால் அதில் இருந்து அள்ளி எடுக்கப்பட்ட ஒரு கை நீர்தான் நான்.” சிகண்டி சிலகணங்கள் சிந்தித்தபின் “வீரரே, ஒரு பெரும்பத்தினி கங்கையில் ஒரு பிடி நீரை அள்ளி வீசி கங்கைமேல் தீச்சொல்லிட்டால் என்ன ஆகும்? கங்கைநீர் கங்கையை அழிக்குமா?”
பீஷ்மர் புன்னகையுடன் “தெய்வங்களும் தேவரும் முனிவரும் மூவேதியரும் பத்தினியரும் பழிசுமந்தோரும் தீச்சொல்லிடும் உரிமைகொண்டவர்கள் என்று நூல்கள் சொல்கின்றன” என்றார். சிகண்டி அவர் சொற்களை கவனித்ததாகத் தெரியவில்லை. “அழித்தாகவேண்டும். இல்லையேல் புல்லும்புழுவும் நம்பிவாழும் பேரறம் ஒன்று வழுவுகிறது. அதன்பின் இவ்வுலகமில்லை. இவ்வுலகின் அவியேற்றுவாழும் விண்ணகங்களும் இல்லை” என தனக்குள் போல சொல்லிக்கொண்டான்.
“பீஷ்மரைப் பார்த்ததும் உன் சினம் தணிந்துவிட்டதா?” என்று பீஷ்மர் கேட்டார். “ஆம், என் முகமாக அவரைப் பார்த்த அக்கணத்திலேயே நான் அவர்மேல் பேரன்புகொண்டுவிட்டேன். அவர் உடலில் ஒரு கரம் அல்லது விரல் மட்டுமே நான்” என்றான். “நாகர் என்னிடம் சொன்னார், அவரைச் சந்திக்கும் முதற்கணம் அவர் பாதங்களைத் தொட்டு வணங்குவேன் என்று. அவருக்கும் எனக்குமிடையே இருப்பது என் அன்னையின் பெருங்காதல் என்று அவர் சொன்னார்.”
பீஷ்மர் ஒன்றும் சொல்லாமல் இருளில் நடந்தார். “ஆனால், அவரைக் கொல்லவேண்டுமென்ற என் இலக்கு இன்னும் துல்லியமாகியிருக்கிறது. சினத்தால் அல்ல, வேகத்தாலும் அல்ல. நான் இருக்கிறேன் என்பதனாலேயே நான் அவரைக் கொல்வதும் இருக்கிறது. அந்த இச்சை மட்டுமே நான். பிறிதொன்றில்லை.”
பீஷ்மர் பெருமூச்சுவிட்டார். “ஆம், அதுவே முறையாகும்” என்றார். சிகண்டி “வீரரே, நான் உங்களிடம் இவற்றையெல்லாம் சொன்னதற்குக் காரணம் ஒன்றே. தாங்கள் அகத்தியரின் மாணவர் என்று நினைக்கிறேன்” என்றான். பீஷ்மர் “எப்படி அறிந்தாய்?” என்றார். “தாங்கள் தனுர்வித்தையில் தேறியவர் என நான் தொலைவிலேயே கண்டுகொண்டேன்.”
பீஷ்மர் “ம்?” என்றார். “என் விழிகள் இருளில் பகலைப்போலவே தெளிவாகப் பார்க்கக்கூடியவை. நான் வரும் ஒலியைக் கேட்டதுமே நீங்கள் கைநீட்டி அருகே இருந்த முள் ஒன்றைப் பிடுங்கிக் கொண்டீர்கள் என்பதைக் கண்டேன். உங்களிடம் வேறு ஆயுதமே இல்லை” என்றான் சிகண்டி.
பீஷ்மர் “நன்கு கவனிக்கிறாய்” என்று சொன்னார். “வருவது வழிதவறி பாலைக்குவந்த மதம்கொண்ட வேழமாக இருக்கலாம். விஷவில் ஏந்திய மலைக்கள்வனாக இருக்கலாம். உங்கள் முதல் எதிரியாகக்கூட இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு முள்ளைமட்டும்தான் எடுத்துக்கொண்டீர்கள். அப்படியென்றால் நீங்கள் வல்கிதாஸ்திர வித்தை கற்றவர். ஒரு சிறுமுள்ளையே அம்பாகப் பயன்படுத்தக்கூடியவர். ஒரு முள்தைத்தாலே மனிதனைச் செயலிழக்கச்செய்யும் ஆயிரத்தெட்டு சக்திபிந்துக்களைப்பற்றி அறிந்தவர்.”
பீஷ்மர் “ஆம்” என்றார். சிகண்டி நின்று கைகூப்பி “நான் அதை உங்களிடமிருந்து கற்க விழைகிறேன் குருநாதரே. என்னை தங்கள் மாணவராக ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்றான். “அதன்பொருட்டே தங்களிடம் என்னைப்பற்றி அனைத்தையும் சொன்னேன்.” பீஷ்மர் “இளைஞனே, நான் எவரையும் மாணவனாக ஏற்கும் நிலையில் இல்லை. அனைத்தையும் துறந்து காட்டுக்கு வந்துவிட்டவன் நான்” என்றார்.
“வனம்புகுந்தபின் சீடர்களை ஏற்கக்கூடாது என்று நெறிநூல்கள் சொல்கின்றன என நானும் அறிவேன் குருநாதரே. ஆனால் அந்நெறிகளை மீறி தாங்கள் எனக்கு தங்கள் ஞானத்தை அருளவேண்டும். வல்கிதாஸ்திரம் அகத்தியரின் குருமரபினருக்கு மட்டுமே தெரியும். தாங்கள் திருவிடத்தவர் என்பதனால் அதைக் கற்றிருக்கிறீர்கள். இப்புவியிலுள்ள அனைத்து போர்வித்தைகளையும் நான் கற்றாகவேண்டும். ஏனென்றால் நான் கொல்லப்போகும் வீரர் எவற்றையெல்லாம் அறிவாரென எவருக்குமே தெரியாது.”
“நான் எதன்பொருட்டு உன்னை மாணவனாக ஏற்கவேண்டும்?” என்றார் பீஷ்மர். சிகண்டி உளவேகத்தால் சற்று கழுத்தை முன்னால் நீட்டி பன்றி உறுமும் ஒலியில் “என் அன்னைக்காக. அவள் நெஞ்சின் அழலுக்கு நீதி வேண்டுமென நீங்கள் நினைத்தால்…” என்றான். “உங்கள் நெஞ்சத்தைத் தொட்டு அங்கே வாழும் நீதிதேவனிடம் கேட்டு முடிவெடுங்கள் குருநாதரே!”
பீஷ்மர் இருளுக்குள் இருள் போல நின்ற அவனைப் பார்த்துக்கொண்டு சில கணங்கள் நின்றார். தலையை அசைத்துக்கொண்டு “ஆம், நீ சொல்வதில் சாரமுள்ளது” என்றார். வானத்தை அண்ணாந்து நோக்கி துருவனைப் பார்த்தபின் “காசிநாட்டரசி அம்பையின் மைந்தனும் பாஞ்சால இளவரசனும் வழுவா நெறிகொண்டவனுமாகிய சிகண்டி எனும் உனக்கு நானறிந்தவற்றிலேயே நுண்ணிய போர்வித்தைகள் அனைத்தையும் இன்று கற்பிக்கிறேன். அவை மந்திரவடிவில் உள்ளன. உன் கற்பனையாலும் பயிற்சியாலும் அவற்றை கைவித்தையாக ஆக்கிக்கொள்ளமுடியும்” என்றார். சிகண்டி தலைவணங்கினான்.
“என்னை வணங்கி வடமீன் நோக்கி அமர்வாயாக!” என்றார் பீஷ்மர். சிகண்டி அவர் பாதங்களை வணங்கியபோது அவனுடைய புழுதிபடிந்த தலையில் கைவைத்து “வீரனே நீ உன் இலக்கை அடைவாய். அடைந்தபின் ஒருகணமும் வருந்தமாட்டாய். வீரர்களுக்குரிய விண்ணுலகையும் அடைவாய்” என்று வாழ்த்தினார்.