அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

2/3/14

நூல் ஐந்து : மணிச்சங்கம்[ 4 ]

நூல் ஐந்து : மணிச்சங்கம்[ 4 ]
ஆதுரசாலையில் உறங்கிக் கொண்டிருந்த விசித்திரவீரியன் ஸ்தானகர் வந்து எழுப்பியதும் கண்விழித்து சிவந்த விழிகளால் பார்த்து என்ன என்று புருவம் அசைத்தான். ஸ்தானகர் “பேரரசி” என்று சுருக்கமாகச் சொன்னதும் பதற்றத்துடன் எழுந்து “எங்கே?” என்றான். ஸ்தானகர் “முகமண்டபத்தில் இருக்கிறார்கள்” என்றதும் அவன் எல்லா புலன்களும் விழித்துக்கொண்டன. “இங்கா?” என்றான். “ஆம்” என்றார் ஸ்தானகர். பின்பு புன்னகையுடன் “கேகயநாட்டரசி போலத் தோன்றுகிறார்கள்” என்றார்.
சிரித்துக்கொண்டே உடையணிந்த விசித்ரவீரியன்மேல் மேலாடையை எடுத்துப்போட்ட ஸ்தானகர் “ஆனால் சொந்த மகனை வனத்துக்கு அனுப்ப வந்திருக்கிறார்கள்” என்றார். “எனக்கு ரகுவம்சத்தின் மூன்று அன்னையரில் கேகயத்து அரசியைத்தான் பிடித்திருக்கிறது ஸ்தானகரே. ஓர் அன்னைக்கு மூன்று குழந்தைகள் இருந்தால் எந்தக்குழந்தை தீராப்பசியுடன் முலையை உறிஞ்சுகிறதோ அதைத்தானே அதிகம் விரும்புவாள்” என்றான்.
ஸ்தானகர் “அன்னைப்பன்றி அந்தக்குழவிக்கு பாலூட்ட மெலிந்த குழவியைத் தின்றுவிடும்” என்று சொல்லி “இன்னும் சற்று பணிவு தங்களில் இருக்கலாமென நினைக்கிறேன் அரசே. கேகய அரசி பணியும் தலைகளை மட்டுமே கண்டு பழகியவர்” என்றார்.
ஸ்தானகர் அவன் கச்சையை கட்டியபடி “கொற்றவைபோல. தலைகளை எற்றி ஆடும்போது மட்டுமே கால்களில் கழல்களை உணர்கிறார்” என தனக்குத்தானே போல சொன்னார். “முதலில் உமக்கு சற்று பணிவு தேவைப்படும்” என்றான் விசித்திரவீரியன்.
அரச உடையுடன் விசித்திரவீரியன் வெளியேவந்தான். முகமண்டபத்தின் சாளரம் வழியாக வெளியே பார்த்துக்கொண்டு சத்யவதி நின்றிருந்தாள். ஒரே விழியசைவால் ஸ்தானகரை தலைவணங்கி வெளியேறச்செய்த பின்பு அவனை நோக்கித்திரும்பி “நேற்று என்ன நாள் என அறிவாயா?” என்றாள். விசித்திரவீரியன் பேசாமல் நின்றான். சத்யவதி “நேற்று கருநிலவுநாள்” என்றபின் அழுத்தமாக “உயிர்கள் கருவுறுவதற்கான நாள்” என்றாள்.
“ஆம்” என அவன் பேசத்தொடங்குவதற்குள் “சியாமை மூத்தவளை சோதனையிட்டிருக்கிறாள். அவள் சொன்னாள்” என்றாள் சத்யவதி. “ஆம்” என்று விசித்திரவீரியன் சொல்லி பார்வையை திருப்பிக்கொண்டு “நான் அவளிடம் வெறுமே பேசிக்கொண்டிருந்தேன்” என்றான்.
சத்யவதி சீறும் முகத்துடன் “உனக்கு வெட்கமாக இல்லையா? நீ ஒரு ஆண் என ஒருகணமேனும் உணர்ந்ததில்லையா?” என்றாள். விசித்திரவீரியன் விழிகளை அவளைநோக்கித் திருப்பி “நான் ஆணென்று உணராத ஒரு கணமும் இல்லை அன்னையே” என்றான். “சொல்லப்போனால் இவ்வுலகின் ஒரே ஆண் என்றும் உணர்ந்திருக்கிறேன்.”
சத்யவதி திகைத்தவள்போல நோக்கினாள். “புரவிகளின் கடிவாளத்தை எப்போதும் கையில் வைத்திருக்கிறவன்தான் சாரதி எனப்படுவான்” என்றான் விசித்திரவீரியன். “எனக்கு விரைவின் விதிகளை நீங்கள் கற்பிக்கவேண்டியதில்லை.”
அவள் அந்த நிமிர்வை எதிர்பார்க்காதவளாக சற்று திகைத்து பின்பு தன்னை மீட்டுக்கொண்டு “இதோபார், நான் உன்னிடம் விவாதிப்பதற்காக இங்கே வரவில்லை. உன் கவிச்சொற்களைக் கொண்டு என்னை நீ எதிர்கொள்ளவும் வேண்டாம்” என்றாள்.
“சொல்லுங்கள்” என்றான் விசித்திரவீரியன் அமைதியாக. “நான் அப்பெண்களை கவர்ந்துவரச்சொன்னது இந்தக் குலம் வளர்வதற்காக. உன் குருதியிலுள்ள சந்தனு மன்னரின் வம்சம் அவர்கள் வயிற்றில் முளைப்பதற்காக” என்றாள் சத்யவதி.
“அன்னையே, பெண் என்பவள் ஒரு வயல் என்றாலும்கூட அதை பண்படுத்தவேண்டியிருக்கிறதல்லவா?” விசித்திரவீரியன் கேட்டான். “அதற்கு உனக்கு நேரமில்லை” என்று சத்யவதி வாளால் வெட்டுவதுபோன்ற குரலில் சொன்னாள். “காத்திருக்க எனக்கு பொறுமையும் இல்லை.”
“நல்லது, நான் எக்கணமும் இறந்துவிடுவேன் என நினைக்கிறீர்கள்” என்றான் விசித்திரவீரியன். “ஆம், அதுவே உண்மை. ஷத்ரியப்பெண்ணாக உண்மையை எதிர்கொள்ள எனக்கு தயக்கமில்லை. அடுத்த கருநிலவுநாள் வரை நீ இருப்பாயென எனக்கு எந்த தெய்வமும் வாக்களிக்கவில்லை…”
விசித்திரவீரியன் அவளை இமைகொட்டாமல் சிலகணங்கள் பார்த்தபின் “அன்னையே, உங்களுக்கு நான் யார்?சந்தனுவின் வம்சத்தை ஏற்றிச்செல்லும் வாகனம் மட்டும்தானா?” என்றான்.
சத்யவதி திடமாக அவன் கண்களை உற்றுநோக்கி “ஆம், அது மட்டும்தான். உன்னால் படைநடத்தி ஷத்ரியர்களை வெல்லமுடியாது. அரியணை அமர்ந்து குடிகளுக்கு நீதிவழங்கவும் முடியாது. அப்படியென்றால் நீ யார்? நீ வெறும் விந்தின் ஊற்று மட்டும்தான். கற்களால் அடைக்கப்பட்டிருக்கும் பாழ் ஊற்று. உன்னிலிருந்து எவ்வகையிலேனும் ஒரு சிறுமைந்தனைப் பெறவேண்டுமென்பதற்கு அப்பால் இன்று நீ எனக்கு எவ்வகையிலும் பொருட்டல்ல” என்றாள்.
விசித்திரவீரியன் புன்னகையுடன் “கசப்பானதாக இருப்பினும் உண்மை ஒரு நிறைவையே அளிக்கிறது” என்றான். சத்யவதி அவனை நிலைத்த விழிகளுடன் நோக்கி “விசித்திரவீரியா, வாழைப்பூ இதழ்களைக் களைந்து உதிர்த்துவிட்டு கனிமட்டுமாவதுபோல மனிதர்கள் அவர்கள் மட்டுமாக ஆகும் ஒரு வயது உண்டு. நான் அதில் இருக்கிறேன். இன்று நான் என் விதியை முழுமையாகவே பார்த்துவிட்டேன். எங்கோ ஒரு மீனவர்குடிலில் பிறந்தேன். நதிமீது பித்தியாக அலைந்தேன். பேரரசியாக இந்த அரியணையில் இன்று அமர்ந்திருக்கிறேன். இத்தனை வேடங்கள் வழியாக விதியொழுக்கு என்னை கொண்டுசெல்லும் திசை என்ன என்று இன்று அறிந்தேன். என் அத்தனை முகங்களையும் இன்று களைந்துவிட்டேன். நான் இன்று சந்தனுவின் மனைவி மட்டுமே. என் கடமை மேலுலகம்சென்று அவரைப்பார்க்கையில் அவரிடமிருந்து நான் பெற்றவற்றை சிதையாமல் கையளித்துவிட்டேன் என்ற ஒற்றைச்சொல்லை நான் சொல்லவேண்டும் என்பது மட்டுமே. வேறெதுவும் எனக்கு இன்று முதன்மையானது அல்ல” என்றாள்.
விசித்திரவீரியன் “அன்னையே, நீங்கள் தென்திசையிலிருந்து வந்த சித்தர் சொன்னதென்ன என்று அறிந்தீர்களா?” என்றான். சத்யவதி “ஆம், நான் நேற்றே அவரை அழைத்து அனைத்தையும் அறிந்தேன். உன் மூலாதாரச் சக்கரம் வலுவுற்றிருக்கிறது என்று அவர்தான் சொன்னார். ஆகவேதான் துணிந்து உனக்கு மணிமஞ்சம் அமைத்தேன். முதுநாகரிடம் நாகரசம் கொண்டுவரவும் சொன்னேன்” என்றாள்.
“ஆனால் என் அநாகதம் அனலின்றி இருக்கிறது என்று சொன்னார்” என்றான் விசித்திரவீரியன் அவளை கூர்ந்துநோக்கியபடி. “அதற்கு அவரிடமே மருத்துவம் கேட்போம்” என்று சத்யவதி பார்வையை திருப்பிக்கொண்டாள்.
“அன்னையே, அவரே உங்களிடம் சொல்லியிருப்பார், அதற்கு மருத்துவம் இல்லை என்று. என் உயிர் சிலந்திவலையில் ஒளிரும் நீர்த்துளி போன்றது என்றார் அவர்” என்றான் விசித்திரவீரியன். அவள் என்னசெய்யவேண்டுமென எதிர்பார்க்கிறேன்? சாதாரண பேதைத்தாயைப்போல அழவேண்டுமா? அழுதால் என் அகம் நிறைவுறுமா?
“ஆம், அது நிலையற்றது என்று மட்டும்தான் அதற்குப்பொருள். அது உறுதியாக உதிரும் என அவர் சொல்லவில்லை” என்றாள் சத்யவதி. “அனைத்து ஷத்ரியர்களுக்கும் வாழ்க்கை அப்படித்தான் உள்ளது. களம்செல்பவன் எந்த உறுதியுடன் கச்சை கட்டுகிறான்?”
ஆம், இவள் பேதையென அழுதால் என் மனம் நிறையும். ஆனால் அக்கணமே அவளை வெறுக்கத்தொடங்குவேன். அவ்வெறுப்பு வழியாக இவள்மீது எனக்கிருக்கும் பேரன்பை வென்று விடுதலை பெறுவேன். ஆனால் இவள் என்னை அதற்கு அனுமதிக்கப் போவதேயில்லை. விசித்திரவீரியன் பெருமூச்சுடன் “நான் நேற்று ஒன்றை உறுதியாகவே உணர்ந்தேன்…” என்றான். “அவள் மார்பில் என் தலையை சாய்த்தபோது என்வலையின் அதிர்வை உணர்ந்தேன். நான் அவளுடன் இணைந்தால் உயிர்தரிக்கமாட்டேன்.”
சத்யவதி சினத்துடன் “அது உன்பிரமை…உனது மழுப்பல் அது.. உன் கோழைத்தனத்தைக்கொண்டு ஐயங்களை உருவாக்கிக் கொள்கிறாய்” என்றாள். “உன்னைக் கொல்பவை உன் ஐயங்கள்தான். உன் உதடுகளில் இருக்கும் இந்தச்சிரிப்பு நாகத்தின் பல்லில் இருக்கும் விஷம்போன்றது.”
“நாகவிஷம் அதைக் கொல்வதில்லை அன்னையே” என்றான் விசித்திரவீரியன். “அவளுடன் உறவுகொண்டால் நான் இறப்பது உறுதி…” என்று அவள் கண்களைப்பார்த்தான். அவை சிறு சலனம் கூட இல்லாமல் தெளிந்தே இருந்தன. விசித்திரவீரியன் “அதில் எனக்கு வருத்தமும் இல்லை. வாழ்வை அறிந்தவனாதலால் இறப்பையும் அறிந்திருக்கிறேன்” என்றான்.
“நேற்று முன்தினம் என்றால் இப்படி உங்களிடம் என் உயிருக்காக வாதிட்டிருக்கமாட்டேன். நேற்று அந்தப் பெண்ணை நான் அறிந்துகொண்டேன். விளையாட்டுப்பேழையைத் திறந்து மயிற்பீலியையும் வண்ணக்கூழாங்கற்களையும் எடுத்துக்காட்டுவதுபோல அவள் தன் அகம் திறந்துகொண்டிருந்தாள் நேற்று. அவளுடைய மங்கலமும் அழகும் எல்லாமே என் மெல்லிய உயிரில் உள்ளது என்று அறிந்தபோது நேற்றிரவு என் அகம் நடுங்கிவிட்டது. என்ன செய்துவிட்டேன், எப்படிச்செய்தேன் என்று என் உள்ளம் அரற்றிக்கொண்டே இருந்தது. அந்த இரு கன்னியரையும் அமங்கலியராக்கி அந்தப்புர இருளுக்குள் செலுத்திவிட்டு நான் செல்வது எந்த நரகத்துக்கு என்று எண்ணிக்கொண்டேன்.”
“நிறுத்து” என சத்யவதி கட்டுப்பாட்டை இழந்து கூச்சலிட்டாள். “முட்டாள், கோழை …உன்னை இக்கணம் வெறுக்கிறேன். உன்னைப்பெற்ற வயிற்றை அருவருக்கிறேன். இந்தத் தருணத்துக்காகவே வாழும் என்னை நீ அவமதிக்கிறாய். என் கனவுகளுடன் விளையாடுகிறாய்” மூச்சிரைக்க அவள் அவனைப்பார்த்தாள். அவள் கழுத்தில் மூச்சு குழிகளையும் அலைகளையும் உருவாக்கியது. கண்களில் நீர் வந்து படர்ந்தது. “நீ என் மகன் என்றால், நான் சொல்வதைக் கேட்டாகவேண்டும். இது என் ஆணை!”
“ஆணையை சிரமேற்கொள்கிறேன் அன்னையே” என்று விசித்திரவீரியன் சொன்னான். புன்னகையுடன் “அதற்காக இவ்வளவு பெரிய சொற்களை சொல்லவேண்டுமா என்ன? உங்களுக்குத் தெரியாததா என்ன? வாழ்வும் மரணமும் எனக்கு சமம்தான். ஆகவே நன்மையும் தீமையும்கூட சமமானதே. உங்களுக்காக இப்பெரும் தீமையைச் செய்கிறேன்… நிறைவடையுங்கள். உங்கள் அரண்மனைக்குச் சென்று ஓய்வெடுங்கள்.”
சத்யவதி அவனைப்பார்த்து “உன் சொற்களை நான் உறுதியென்றே கொள்கிறேன். நீ சந்திரவம்சத்து மன்னன் என்பதனால்” என்றாள். விசித்திரவீரியன் என்னதென்றறியாத ஒரு புன்னகை செய்தான். சத்யவதி மெல்லக்கனிந்து “மகனே, நான் சொல்வதை நீ சற்றேனும் புரிந்துகொள். நீ மணம்புரிந்துகொண்டு அரியணை ஏறினால் மட்டும் போதும் என்றுதான் நான் எண்ணினேன். ஆனால் உனக்கு மைந்தரில்லையேல் இந்நாட்டு மக்கள் அமைதியிழப்பார்கள் என்று தோன்றியது. அத்துடன்…”
விசித்திரவீரியன் “அந்த ஐயத்தை உங்கள் சொற்களால் சொல்லவேண்டியதில்லை அன்னையே” என்றான். சத்யவதி பதறி “இல்லை நான் அப்படி நினைக்கவில்லை…” என்றாள். “பதினாறு திசைகளிலும் நினைப்பவர் நீங்கள். அதை விடுங்கள்” என்றான் விசித்திரவீரியன்.
“நீ அரசியரைக் கைப்பிடித்து அரியணையில் அமரவேண்டும். உன் குருதி அவளில் முளைவிடவேண்டும்….நான் சொல்வது ஏனென்றால்…” என்றாள். விசித்திரவீரியன் அவள் தோளைப்பிடித்து “அனைத்தையும் அறிந்துகொண்டேன். நீங்கள் எதையும் சொல்லவேண்டியதில்லை” என்றான்.
“நான் கிளம்புகிறேன். முதுநாகரிடம் இன்றும் பேசினேன். அந்த மருந்தை இன்றும் அளிக்கிறேன் என்றிருக்கிறார். இன்றும் மணியறை அமைக்கச் சொல்கிறேன்” என்றாள். “தங்கள் ஆணை” என்றான் விசித்திரவீரியன் சிரித்தபடி.
சத்யவதி பெருமூச்சுடன் கண்களைத் துடைத்துக்கொண்டு “உன்னை ஆதுரசாலையில் மருத்துவர்கள் சோதனையிட்டபின் நேராகவே மணியறைக்குக் கொண்டுசெல்வார்கள். நாளை காலை நான் உன்னை சந்திக்கிறேன்” என்றாள். “இதுவும் ஆணை” என்றான் விசித்திரவீரியன் அதே சிரிப்புடன்.
சத்யவதி வெளியேறி ரதமருகே சென்றாள். அங்கே ஸ்தானகரும் மருத்துவர்களும் பிற ஆதுரசாலைப் பணியாளர்களும் நின்றனர். சத்யவதி ஒவ்வொருவரிடமும் ஓரிரு சொற்கள் மட்டும் பேசி ஆணைகளிட்டாள். அவர்கள் பணிந்து குறுகிய உடலுடன் அவற்றை ஏற்றனர்.
ஸ்தானகர் உள்ளே வந்து “அரசே பேரரசி கிளம்புகிறார்” என்றார். “ஆம், ஆணையிட்டுவிட்டாரல்லவா?” ஸ்தானகர் புன்னகைசெய்தார். விசித்ரவீரியன் “அவர் கடலாமை போல. முட்டைகளைப் போட்டுவிட்டு திரும்பிப்பார்ப்பதேயில்லை. அவை தானே விரிந்து தன்வழியை கண்டுகொள்ளவேண்டும்…” என்றான். ஸ்தானகர் “திரும்பிப் பார்ப்பவர்களால் ஆணையிடமுடியாது அரசே” என்றார்.
விசித்திரவீரியன் உள்ளிருந்து சத்யவதியின் அருகே வந்து “அன்னையே, இந்தக் கோடைகாலத்தில் இன்னும் சற்று காற்றுவீச நீங்கள் ஆணையிடலாமே” என்றான். சத்யவதி “அதற்கு தவ வல்லமை வேண்டும்…என் அரசை உன் கரத்தில் அளித்துவிட்டு வனம் சென்று அதை அடைகிறேன்” என்றாள். அவளுடைய அழகிய வெண்பற்கள் வெளித்தெரிந்தபோது அவன் ஒன்றை அறிந்தான், அவன் மனதில் பேரழகி என்பவள் அவள் மட்டுமே.
சத்யவதி ரதமேறுவதற்காக ஒரு சேவகன் சிறிய மேடையைக்கொண்டு அருகே வைத்தான். அவள் ரதப்பிடியைப்பற்றி ஏறியபோது அவள் மேலாடை சரிந்தது. விசித்திரவீரியன் புன்னகையுடன் அதை எடுத்து அவள் மார்பின்மேல் போட்டான். அவள் முகம் மலர்ந்து, கண்கள் புன்னகையில் சற்று சுருங்கின. அவன் தலைமேல் கையை வைத்து தலைமயிரை மெல்லக் கலைத்துவிட்டு ரதத்தில் ஏறிக்கொண்டாள்.
விசித்திரவீரியன் தன் அறைக்குச் சென்று உடைகளை மாற்றிக்கொண்டிருந்தபோது ஸ்தானகர் வாசலில் நின்று “பயணம் செல்லவிருக்கிறீர்களா அரசே?” என்றார். “ஆம்” என்றான். “மருத்துவர்களிடம் கலந்தாலோசித்துவிட்டுச் செல்லலாமே” என்றார் ஸ்தானகர். “தாங்கள் களம் காணவேண்டும் அல்லவா?”
விசித்திரவீரியன் உரக்கச்சிரித்துக்கொண்டு திரும்பினான் “இனிமேல் மருத்துவர்கள் தேவையில்லை ஸ்தானகரே. அனைவரையும் இப்போதே அனுப்பிவிடுங்கள்…” ஸ்தானகர் தயங்க “அனைவரையும் முகமண்டபத்துக்கு வரச்சொல்லுங்கள்” என்றான்.
முகமண்டபத்தில் வந்து கூடிய மருத்துவர்கள் அனைவருக்கும் விசித்திரவீரியன் பரிசுகளை வழங்கி நன்றி சொன்னான். “சுதீபரே, சித்ரரே உங்களைப்போன்று பலரின் கைகளை நான் பதினைந்தாண்டு காலமாக என் உடலில் அறிந்துவருகிறேன். அது ஒரு நல்லூழ் என்றே எண்ணுகிறேன். மனிதர்கள் வளர்ந்தபின்னர் அவர்களை எவரும் தீண்டுவதேயில்லை. அதிலும் ஆண்களை அன்னியர் தொடுவதென்பதேயில்லை. எந்தச்சொற்களையும் விட உடல் ஆன்மாவை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கிறது. உங்கள் கைகள் வழியாக உங்களனைவரையும் நன்கறிந்திருக்கிறேன். ஒருவேளை அடுத்தபிறவியில் நாம் இலங்கையை ஆண்ட ராவணனையும் தம்பியரையும்போல பிறக்கமுடியும்…” என்றான். உடனே சிரித்தபடி “முன்னதாகவே விண்ணகம் செல்வதனால் நானே மூத்தவன்” என்றான்.
ஸ்தானகர் தவிர பிறர் உதடுகளை இறுக்கி கழுத்து அதிர கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தனர். பரிசுகளை நடுங்கும் கரங்களால் பெற்றுக்கொண்டனர். விசித்திரவீரியன் ரதத்தில் ஏறிக்கொள்ள ஸ்தானகர் ரதத்தை ஓட்டினார். அவன் எங்கே செல்ல விரும்புகிறான் என்று கேட்காமல் ரதத்தை நகரை விட்டு வெளியே கொண்டுசென்றார். நகரம் முன்மதிய வெயிலில் கண்கூசும் தரையுடனும் கூரைகளுடனும் சுவர்களுடனும் மெல்ல இயங்கிக்கொண்டிருந்தது.
விசித்திரவீரியன் “ஸ்தானகரே, சித்ராங்கதர் கந்தர்வனிடம் போரிட்டு உயிர்துறந்த அந்தச் சுனைக்குச்செல்ல வழி தெரியுமல்லவா?” என்றான் “ஆம் அரசே, இப்போது அவ்விடம் வரை ரதசாலை அமைக்கப்பட்டிருக்கிறது. மாதம்தோறும் பேரரசி அங்கே சென்று மூத்தவருக்கான கடன்களை ஆற்றுகிறார்.”
VENMURASU_EPI_25
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
விசித்திரவீரியன் ரதத்தட்டில் அமைதியாக அமர்ந்துகொள்ள ஸ்தானகர் ரதத்தை நகரம் விட்டு கொண்டுசென்றார். ரதம் ஆழமான நதிப்படுகை போன்ற நிலம் வழியாகச் சென்றது “அஸ்தினபுரியில் முன்பு கங்கை ஓடியதென்று சொல்கிறார்களே ஸ்தானகரே” என்றான் விசித்திரவீரியன்.
“ஆம், மாமன்னர் ஹஸ்தி இங்கே நகரை அமைத்தபோது இது கங்கையாக இருந்தது. பின்பு கங்கை திசைமாறிச்சென்றுவிட்டது” என்றார் ஸ்தானகர். “ஏன்?” என்று விசித்திரவீரியன் கேட்டான். “அதன் நீர்ப்பெருக்கு பெரிதாகிவிட்டது. இந்தச் சிறிய வழி அதற்குப் போதவில்லை.” விசித்திரவீரியன் “சரிதான்” என்று சொல்லி உரக்கச் சிரித்தான்.
ரதத்தை கங்கைச்சாலையில் விரையவைத்து பக்கவாட்டில் திரும்பி தட்சிணவனம் நோக்கிச் சென்றார் ஸ்தானகர். வண்டிச்சக்கரங்களின் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. உயரமற்ற மரங்கள் கொண்ட குறுங்காட்டுக்குள் மான்கூட்டங்கள் நெருப்புக்கதிர்கள் போல சிவந்து தெரிந்து துள்ளி ஓடின.
ரதத்தில் அமர்ந்து காட்டையே பார்த்துக்கொண்டிருந்த விசித்திரவீரியனை ஸ்தானகர் பார்த்தார். குழந்தையாக இருந்தபோது அவ்வாறுதான் பார்த்துக்கொண்டிருப்பான். ஸ்தானகர் பெருமூச்சுவிட்டார். விசித்திரவீரியன் இறந்துவிடுவானென்பதில் அவருக்கும் ஐயமிருக்கவில்லை. நோயில் திளைத்துக் கொண்டிருக்கும்போதுகூட அவன் மரணத்தை அவ்வளவுதூரம் திட்டவட்டமாக சொன்னதில்லை. அவன் ஒருபோதும் வீண்சொற்கள் சொல்பவனும் அல்ல.
ரதத்தை நிறுத்திவிட்டு ஸ்தானகர் காத்திருந்தார். விசித்திரவீரியன் இறங்கி “இந்தக் குன்றுக்குமேல்தானே…நான் ஒருமுறை வந்திருக்கிறேன். அன்று இந்தப்படிகள் இல்லை. என்னை மஞ்சலில் தூக்கிச்சென்றார்கள்” என்றான்.
“தங்களால் ஏறமுடியுமா?” என்று ஸ்தானகர் கேட்டார். “ஏறிவிடுவேன்…நடுவே சற்று அமரவேண்டியிருக்கும்… இளங்காற்று இருக்கிறதே” விசித்திரவீரியன் சொன்னான். பின்பு ஸ்தானகரைப் பார்க்காமல் “ஸ்தானகரே…நீங்கள் என் அன்னையை… ” என ஆரம்பித்தான்.
ஸ்தானகர் இடைமறித்து திடமான குரலில் “அரசே தயைகூர்ந்து புதிய கடமைகளைச் சொல்லவேண்டாம். என் கடமைகளும் முடிகின்றன” என்றார். விசித்திரவீரியன் அவர் கண்களைப் பார்த்தான். ஸ்தானகர் “ஒரு தெய்வத்தை வணங்குபவனே உபாசகன். நான் வனம்புகும் தினத்தை நீங்கள் முடிவெடுக்கவேண்டும்” என்றார்.
விசித்திரவீரியன் சிரித்துக்கொண்டு “அப்படியென்றால் இங்கேயே இருங்கள் ஸ்தானகரே… நான் காற்று வடிவில் திரும்பி வருவதென்றால் நிச்சயமாக இங்குதான் வருவேன்” என்றான். ஸ்தானகரும் சிரித்து “சிறந்த இடம்… அப்பால் ஹிரண்வதிக் கரையில் தேவதாரு மரங்களும் உண்டு. நல்ல மணமுள்ள காற்று இணைந்துகொள்ளும்” என்றார்.
“ஆம்…ஆதுரசாலையிலேயே வாழ்க்கையை கழித்துவிட்டீர்” என்றான். சிரித்தபடி “நோயே இல்லாமல் ஆதுரசாலையிலேயே வாழும்படி உம்மைப் பணித்திருக்கிறான் தலையிலெழுதிய தருமன்” என்றான். ஸ்தானகர் புன்னகையுடன் “அது ஊழ்தான். ஆனால் என் தமையன் குறுவாளைக்கூடத் தீண்டாமல் பீஷ்மரின் ஆயுதசாலையிலேயே இதைவிட அதிகமாக வாழ்ந்திருக்கிறான்” என்றார். விசித்திரவீரியன் வெடித்துச்சிரிக்க ஸ்தானகரும் சிரிப்பில் சேர்ந்துகொண்டார்.
“நீங்கள் நாளையே இங்கு வரவேண்டியிருக்கும் ஸ்தானகரே” என்றான் விசித்திரவீரியன். ஸ்தானகர் சாதாரணமாக “நாளை என்றால் வளர்பிறை இரண்டாம்நாள் அல்லவா? நன்று” என்றார். “இங்கே ஒரு குடிலமைக்க எனக்கு ஒருநாழிகை போதும். நினைவுகளை மீட்டிக்கொண்டிருக்க வளர்பிறை சிறந்த பருவம்…” என்று காட்டைப்பார்த்தார்.
“ஆம், பதினெட்டாண்டுகால நினைவுகள்” என்றான் விசித்திரவீரியன். ஸ்தானகர் இரு கைகளையும் விரித்து “இந்தக்கைகளில் உங்கள் அத்தனை எலும்புகளும் தசைகளும் நரம்புகளும் உள்ளன அரசே! ஒரு கூடைக் களிமண் இருந்தால் அரை நாழிகையில் உங்கள் உருவத்தை வடித்து அருகே வைத்துக் கொள்வேன்” என்றார். விசித்திரவீரியன் சிரித்துக்கொண்டு படிகளில் ஏறத்தொடங்கினான்.
ஆமைமுதுகு போன்ற உயரமில்லாத அந்தப்பாறை எழுந்து நின்ற இரண்டு யானைப்பாறைகளால் சூழப்பட்டிருந்தது. அதன் மையத்தில் நீள்வட்டமான அந்தச் சுனை தொலைவிலேயே ஒளிரும் நீலநிறத்தில் தெரிந்தது. நீருக்கு அந்த நீலநிறம் அமையும் என விசித்திரவீரியன் கண்டதேயில்லை. அருகே நெருங்கியபோது அவன் மூச்சிளைத்தான். அங்கே வெட்டவெளியில் வானத்தின் ஒளி கண்கூசும்படி தேங்கியிருந்தது. ஆமையோட்டு மூடிகொண்ட அலங்காரப்பேழையில் பதித்த நீலக்கல் போன்ற அந்தச் சுனையருகே சென்று விசித்திரவீரியன் அமர்ந்தான்.
பிறசுனைகளைப்போல அது அசைவுகளை அறியவில்லை. அதை உற்றுநோக்கி அமர்ந்திருந்தபோதுதான் விசித்திரவீரியன் அது ஏன் என அறிந்தான். அந்தச்சுனையில் மீன்கள் இல்லை. நீரில்வாழும் எந்த உயிர்களும் இல்லை. சுற்றிலும் மரங்கள் இல்லாததனால் அதில் வானமன்றி எதுவும் பிரதிபலிக்கவில்லை. இருபெரும்பாறைகளும் இருபக்கமும் மறைத்திருந்தமையால் அதன்மேல் காற்றே வீசவில்லை. யுகயுகங்களாக அசைவை மறந்ததுபோலக் கிடந்தது அந்தச் சுனை.
விசித்திரவீரியன் குனிந்து நீரைப்பார்த்தான். சித்ராங்கதனை அதற்குள் இழுத்துக்கொண்டு சென்ற கந்தர்வனான சித்ராங்கதன் உள்ளே வாழ்கிறானா என்ன? சித்ராங்கதன் அந்நீரில் எதைப்பார்த்திருப்பான் என்பதில் அவனுக்கு ஐயமிருக்கவில்லை. எந்நேரத்திலும் வேசரநாட்டு ஆடி முன் நின்று தன்னைத்தானே நோக்கி ஆழ்ந்திருக்கும் சித்ராங்கதனையே அவன் கண்டிருக்கிறான்.
சில கணங்களுக்குப் பின்னர்தான் அவன் அந்த நீர்பிம்பத்தின் விசித்திரத்தை உணர்ந்து பின்னடைந்தான். நம்பமுடியாமல் மெல்லக் குனிந்து மேலும் நோக்கினான். அவன் விலகியபோதும் விலகாமல் அது நோக்கிக்கொண்டிருந்தது. அது சித்ராங்கதன். விசித்ரவீரியன் நெஞ்சின் துடிப்பை சிலகணங்களில் தணித்தபின் மெல்லிய குரலில் “மூத்தவரே, நீங்களா?” என்றான். “ஆம்…ஆனால் இது நீயும்தான்” என்றான் சித்ராங்கதன். “எப்படி?” என்றான் விசித்திரவீரியன்.
“நன்றாகப்பார்…பட்டுத்துணியை நீவி நீவி ஓவியத்தின் கசங்கலை சரிசெய்வதுபோல உன்னை இதோ சீர்ப்படுத்தியிருக்கிறேன்…” விசித்திரவீரியன் பார்த்துக்கொண்டே இருந்தான். அது அவனும் கூடத்தான். “மூத்தவரே, அதுதான் நீங்களா?” என்றான் தனக்குள் போல. “ஆம், அதைத்தான் நான் வாழ்க்கை முழுவதும் செய்துகொண்டிருந்தேன்” என்றான் சித்ராங்கதன்.
விசித்திரவீரியன் துயரத்துடன் “மூத்தவரே, நான் உங்கள் வாழ்க்கையை பாழ்படுத்திவிட்டேனா என்ன?” என்றான். சித்ராங்கதன் இளமை ஒளிரும் முகத்துடன் சிரித்து “பிரியமான முறையில் பாழ்படுத்திக் கொள்வதற்காகத்தானே வாழ்க்கை அளிக்கப்பட்டிருக்கிறது சிறியவனே?” என்றான். விசித்திரவீரியன் வருத்தம் விலகாமலேயே புன்னகை செய்தான்.

கோவிலுக்குள் அடைபட்டு இருந்து மீட்கப்பட்ட 800வருட சௌடேஸ்வரி விக்ரகம்

          பலவருடங்களாக ஒரு பாழடைந்த கோவிலில் அடைக்கப்பட்ட சக்தி  TV9 தொலைகாட்சி மூலமாக வெளியே எடுக்கபட்டாள். அவள் அடைக்கப்பட்ட நாளில் இருந்து ஊர் செழிக்கவில்லை .... மழை பெய்யவில்லை  ...பெங்களுருக்கு அருகாமையில் உள்ள கோலார் அருகில் உள்ள ஹுட்டே  கிராமம்.
இதற்கு ஊரில் உள்ள அனைவரும் முஸ்லிம் தோழர்கள் உட்பட அனைவரும் கூறும் கரணம் அந்த பாழடைந்த கோவில் .

கீழே கொடுகப்படுள்ள வீடியோ பதிவுகளில் அதை எப்படி வெளியே எடுத்தார்கள் என்று காட்டப்பட்டுள்ளது .

வெளியே எடுக்கப்பட்ட சக்தி வேறு யாரும் இல்லை நம் சௌடேஸ்வரி அன்னை அழகான திருக்கோலம் கொண்டு காட்சி தருகிறாள் அந்த சிலை 800 வருட பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது .
part1:
part 2:


part 3:


part 4:


part 5:


part 6:




பகுதி ஆறு : தீச்சாரல்[ 2 ]

பகுதி ஆறு : தீச்சாரல்[ 2 ]

காலையொளி நீரில்விரியும் வரை பீஷ்மர் தாராவாஹினியின் கரையில் அப்படியே அசையாமல் நின்றிருந்தார். ஹரிசேனன் பலமுறை சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தான். அவர் ஒரு பெரிய அடிமரமாக ஆகிவிட்டதுபோலத் தோன்றியது. நீரில் விண்மீன்கள் இடம் மாறின. விடிவெள்ளி உதித்து செவ்வொளியுடன் அலைகளில் ஆடியது. காலையில் அஸ்தினபுரியில் இருந்து தூதன் குதிரையில் வந்து சேர்ந்தான். குடில்முற்றத்தில் வேங்கைமரத்தடியில் அவன் நின்றான். ஹரிசேனன் ஏதும் கேட்கவிருக்கவில்லை. பீஷ்மர் அருகே சென்று நின்றுகொண்டான். அவன் நிற்கும் உணர்வை அடைந்த பீஷ்மர் திரும்பினார்.
ஹரிசேனன் “தூதன்” என்று சுருக்கமாகச் சொன்னான். தலையசைத்துவிட்டு பீஷ்மர் பேசாமல் நடந்து குடிலை அடைந்தார். அரைநாழிகைக்குள் குளித்து உடைமாற்றி குதிரையில் ஏறிக்கொண்டு கிளம்பினார். அஸ்தினபுரியின் கோட்டைமேல் விசித்திரவீரியனின் இலைச்சின்னம் கொண்ட கொடி வழக்கம்போல பறந்துகொண்டிருந்தது. கோட்டைமேல் இருந்த காவலன் அவரைக் கண்டதும் சங்கு ஊத கோட்டைமேல் அவரது மீன்கொடி ஏறியது. அவர் ஒவ்வொருவரின் வணக்கத்தையும் தனித்தனியாக ஏற்றும் அனைவருக்கும் புன்னகைமுகம் காட்டியும் உள்ளே சென்றார்.
நகரத்தெருக்களில் காலைப்பரபரப்பு தொடங்கிவிட்டிருந்தது. ஆய்ச்சியர் பால்குடங்களுடனும், உழத்தியர் காய்கனிக்கூடைகளுடனும், மச்சர்கள் மீன்கூடைகளுடனும் தெருக்களில் கூவிச்சென்றனர். காலையிலேயே விருந்தினருக்கு உணவு சமைக்கப்பட்டுவிட்ட இல்லங்களின் முன்னால் அன்னத்துக்கான மஞ்சள்கொடி பறந்துகொண்டிருந்தது. சுமைதூக்கிக் களைத்த சில ஆய்ச்சியர் அங்கே உணவுக்காக அமர்ந்திருந்தனர்.
தெருமுனைகளில் கணபதி, சண்டி, அனுமனின் சிறிய ஆலயங்களில் மணிகள் ஒலிக்க சிறு கூட்டங்களாக கூடி நின்று சிலர் வழிபட்டனர். நான்குயானைகள் காலையில் குளித்து தழைகளைச் சுமந்தபடி அலைகளில் கரியநாவாய்கள் போல உடல்களை ஊசலாட்டியபடி சென்றுகொண்டிருந்தன. நெளியும் வால்களில் அவற்றுக்கு ஆசியளிக்கப்பட்ட மாறாத குழந்தைமை.
பீஷ்மர் அரண்மனைமுற்றத்தில் இறங்கி நேராகவே உள்ளே சென்றார். பேரரசிக்கு அவர் வந்த தகவலைச் சொல்லி அனுப்பினார். சத்யவதி அவரை மந்திரசாலையில் சந்திப்பார் என்று சியாமை சொன்னதும் மந்திரசாலைக்குச் சென்று அமர்ந்துகொண்டார். உடலை நிலையாக வைத்துக்கொள்வது மனதையும் நிலைக்கச்செய்யும் என்பது அவர் அடைந்த பயிற்சி. கைகால்களை இலகுவாக வைத்துக்கொண்டு கண்களை எதிரே இருந்த சாளரத்துக்கு அப்பால் மெல்ல அசைந்த அசோகமரத்தின் கிளைகளில் நிலைக்கவிட்டார்.
தன் அறைக்குள் சத்யவதி வேறு எவரிடமோ பேசிக்கொண்டிருக்கிறாள் என்று உணர்ந்தார். தன் அறைக்குள் பேசுவதென்றால் அது சாதாரணமான பேச்சு அல்ல. அசைவை உணர்ந்து அவர் திரும்பியபோது அங்கே அவரது ஒற்றனான சௌம்யதத்தன் நின்றிருந்தான். அவர் பார்த்ததும் அவன் அருகே வந்து “பிதாமகருக்கு அருந்துவதற்கு ஏதேனும் கொண்டுவரலாமா?” என்றான்.
பீஷ்மர் “நீர் மட்டும்போதும்” என்றார். அருகே வந்து “விடகாரியான வஜ்ரசேனன்” என்று விழியசைக்காமல் சொல்லிவிட்டு சௌம்யதத்தன் சென்றான். அவருக்கு அனைத்தும் புரிந்தது. பெருமூச்சுடன் தாடியை வருடிக்கொண்டார்.
அரியணை மங்கலம் முடிந்த மறுநாள் மாலை பீஷ்மர் சத்யவதியை சந்திக்க அரண்மனைக்குச் சென்றிருந்தார். ஒற்றர்கள் கொண்டுவந்த செய்திகளைச் சொன்னார். அஸ்தினபுரியில் அரியணை ஒருங்கிவிட்டது என்பது வெவ்வேறு ஒற்றர்கள் வழியாக ஷத்ரியநாடுகளுக்குச் சென்றுவிட்டது என்று மறுஒற்றர்கள் தகவல்சொல்லியிருந்தனர். “இனிமேல் நாம் ஷத்ரியர்களை அஞ்சவேண்டியதில்லை” என்றார் பீஷ்மர்.
சத்யவதி தலையசைத்தபின் “அனைத்தும் இவ்வளவு எளிதாக முடியும் என நான் நினைக்கவில்லை. இனி அஸ்தினபுரி மக்களுக்குக் கவலை இல்லை…” என்றாள். பார்வையை அவள் மெல்லத் திருப்பியபோது அவள் ஏதோ முக்கியமாக சொல்லப்போகிறாள் என்று பீஷ்மர் உணர்ந்தார். சத்யவதி “விசித்திரவீரியன் எப்போது நகர்மீள்வான் என்றார்கள்?” என்றாள்.
“சொல்லமுடியாது அன்னையே. காட்டுக்குள் வெகுதொலைவு சென்றிருக்கிறான்” என்றார் பீஷ்மர். அந்தப்பேச்சுக்கு சத்யவதி ஏன் செல்கிறாள் என்று மெல்ல அவருக்குப்புரிந்ததும் உள்ளூர ஒரு புன்னகை விரிந்தது.
“எப்படியும் ஒருசில வாரங்களில் அவன் வந்தாகவேண்டும். நமது வனங்கள் ஒன்றும் அவ்வளவு அடர்த்தியானவை அல்ல, தண்டகாரண்யம்போல” என்றாள் சத்யவதி. ஒருகணம் அவள் கண்கள் பீஷ்மர் கண்களை வந்து சந்தித்துச் சென்றன. “மக்கள் என்ன சொல்கிறார்கள்?” என்றாள். “எதைப்பற்றி?” என்று பீஷ்மர் கேட்டார். “நாம் காசிமன்னன் மகள்களை கவர்ந்து வந்ததைப்பற்றி?”
பீஷ்மர் “அது ஷத்ரியர்களின் வாழ்க்கை. அதைப்பற்றி மக்கள் ஏதும் அறிந்திருக்கமாட்டார்கள்” என்றார். “ஆம். உண்மை…ஆனால் அம்பை சென்றகோலத்தைப்பற்றி சூதர்கள் கதைகளைச்சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் அறிந்த தெய்வப்பிடாரிகளின் கதைகளை எல்லாம் அவள்மேல் ஏற்றிவிட்டார்கள். நேற்று ஒரு சூதன் சொன்னான், அவள் உடல் அனலாக தீப்பற்றி எரிந்ததாம். அவள் சென்றவழியில் எல்லாம் காடு தீப்பற்றியதாம்…”
பீஷ்மர் வெறுமனே தலையை அசைத்தார். “மக்களின் நம்பிக்கைகள் எப்போதுமே அச்சங்களில் இருந்து உருவானவை… அவர்கள் தங்கள் கன்றுகளுக்காகவும் வயல்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் அஞ்சிக்கொண்டே இருக்கிறார்கள்” என்றாள் சத்யவதி. “அதை நாம் பொருட்படுத்தவேண்டியதில்லைதான்”
பீஷ்மர் “ஆம், உண்மை” என்றார். சத்யவதி “ஆனால் சூதர்கள் அம்பையின் சாபம் இந்நகர்மேல் விழுந்துவிட்டது என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். வடக்கே ஹ்ருஸ்வகிரிமேல் அவள் ஆடைகளில்லாமல் உடம்பெல்லாம் குருதிவழிய ஏறி நின்று இந்நகரைப் பார்த்தாளாம். அப்போது வானம் கிழிவதுபோல மின்னல் வெட்டியதாம்….இவர்களை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது” என்றாள்.
சத்யவதி அவள் விரும்பிய இடத்தை வந்தடைந்துவிட்டாள் என்று உணர்ந்து பீஷ்மர் “ஆம் அன்னையே, நானும் அதையே எண்ணிக்கொண்டிருந்தேன். நான் இந்நகரில் இருந்தால் மக்கள் மேலும் அச்சம் கொள்வார்கள். நான் நகரை நீங்கிவிட்டால் இந்தச்சிக்கல் அகன்றுவிடும்…” என்றார்.
சத்யவதி அவரை நோக்கி “ஆனால் நீ இங்கு இல்லையேல் ஷத்ரியர்கள் துணிவுகொள்வார்கள்” என்றாள். “அறிவேன் அன்னையே. நான் நகருக்கு வெளியேதான் இருப்பேன். கிரீஷ்மவனம் எனக்குப்பிடித்தமானது. தாராவாஹினியின் நீரும் எனக்குப்பிரியமானது” என்றார். அவ்வளவு நேராக அவள் உள்ளத்துக்குள் அவர் சென்றது அவளை சற்று அசையச்செய்தது. நெற்றிக்கூந்தலை நீவி காதுக்குப்பின் விட்டுக்கொண்டாள்.
VENMURASU_EPI_28__
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
சில கணங்கள் மிகுந்த எடையுடன் கடந்து சென்றன. சத்யவதி மேலும் அசைந்து “நீ விட்டுச் செல்வதை அந்தப்புரப்பெண்டிர் அறியவேண்டியதில்லை” என்றாள். “அவர்கள் அஞ்சக்கூடும். நீ இங்குதான் இருக்கிறாய் என்றே அவர்கள் எண்ணட்டும்.”
பீஷ்மர் கண்களுக்குள் மட்டும் புன்னகையுடன் “ஆம், அது உண்மை அன்னையே” என்றார். மிகமிக நுட்பமாக நகைசெய்யும் பொற்கொல்லனின் கவனத்துடன் சொல்லெடுத்து வைத்து “நான் இருப்பதோ செல்வதோ அவர்கள் அறியாதவாறு இருப்பேன்” என்றார்.
சத்யவதியின் கண்கள் அவர் கண்களை சந்தித்ததும் மெல்ல புன்னகை புரிந்தார். சத்யவதி கண்களை விலக்கிக் கொண்டாள். அப்புன்னகையை அவள் ஒவ்வொருநாளும் நினைப்பாள் என்று அவர் எண்ணிக்கொண்டார். அதிலிருந்து தப்ப அவளால் முடியாது.
சியாமை வந்து “பேரரசி வருகை” என அறிவித்ததும் பீஷ்மர் எழுந்து நின்றார். முன்னால் செங்கோலுடன் ஒரு சேடி வர, பின்னால் கவரியுடன் ஒருத்தி தொடர, சத்யவதி வேகமாக உள்ளே வந்தாள். திரும்பிப் பாராமலேயே கையசைத்து அவர்களை போகச்சொல்லிவிட்டு வந்து இருக்கையில் அமர்ந்தாள். “வணங்குகிறேன் அன்னையே” என்றார் பீஷ்மர்.
சத்யவதி ஒன்றும் சொல்லாமல் கைகளை மடியில் வைத்துக்கொண்டாள். அவள் உதடுகள் இறுகி ஒட்டிக்கொண்டு கோடைமழை வந்துமோதும் சாளரப்பொருத்துக்கள் போல நடுங்கின. கழுத்து அதிர்ந்து அதிர்ந்து அடங்க கன்னத்தசைகள் துடித்தன. பின்பு ஒரு கண்ணில் இருந்து மட்டும் ஒருதுளி கண்ணீர் மெல்ல உருண்டது.
பீஷ்மர் அப்போது அவளிடம் ஏதும் சொல்லக்கூடாதென அறிந்திருந்தார். அவரது முன்னில் அல்லாமல் அவள் அந்தத் துளிக்கண்ணீரைக்கூட விட்டிருக்கமாட்டாள். நாலைந்து சொட்டுக் கண்ணீர் வழிந்ததும் அவள் பட்டுச்சால்வையால் அவற்றை ஒற்றிவிட்டு பெருமூச்சுடன் “நீ ஊகித்திருப்பாய் தேவவிரதா” என்றாள். “ஆம்” என்றார் பீஷ்மர். “நான்தான் காரணம்….எல்லாவகையிலும். அவனை நான் கட்டாயப்படுத்தினேன்” என்றாள். “அதில் என்ன?” என்றார் பீஷ்மர். “களத்துக்கு அனுப்புகிறோமே!”
“ஆம்…நான் அப்படித்தான் நினைத்தேன்…உண்மையில் அவன் இப்படி இறந்ததில் எனக்கு நிறைவுதான்…” என்றாள் சத்யவதி. “எனக்கு சற்று குற்றவுணர்வு இருந்தது. ஆனால் அந்த காசிநாட்டு இளவரசி அழுததைப் பார்த்தேன். அக்கணமே நெஞ்சு திறந்து இறந்துவிடுபவள் போல…அப்போது என் மனம் நிறைந்தது. ஒரு பெண்ணின் மனதை நிறைத்துவிட்டுச் சென்றது ஆண்மகன் ஒருவன் மண்ணில் வாழ்ந்தமைக்கான அடையாளம்…”
“ஆம்” என்றார் பீஷ்மர். சத்யவதி “அவனுக்கு என் மனம் புரிந்திருந்தது. அவன் அறியாத எவரும் இங்கே இல்லை. நான் அவனை கட்டாயப்படுத்திவிட்டுத் திரும்பும்போது என்னருகே வந்து சால்வையைப் போடுவதுபோல என்னை மெதுவாகத் தொட்டான்…இவ்வுலகில் என்னை எவரேனும் தொடவேண்டுமென விரும்பினேன் என்றால் அது அவன்தான். ஆனால் என்னை ஒருவர் தொடுவது எனக்குப்பிடிக்காது. தொடுகை தானாகவே நிகழவேண்டுமென நினைப்பேன்….அவன் அதை அறிந்திருந்தான். தேவவிரதா, நான் அன்று ரதத்தில் புன்னகை புரிந்தபடியே வந்தேன். நெடுநாட்களுக்குப்பின் காதல்கொண்ட இளம்கன்னியாக சிலநாழிகைநேரம் வாழ்ந்தேன். மகனைவிட அன்னைக்குப் பிரியமான ஆண்மகன் யார்?”
பீஷ்மர் புன்னகை புரிந்தார். சத்யவதி “நான் உன்னிடமன்றி எவரிடமும் மனம் திறந்து பேசுவதேயில்லை தேவவிரதா. பேரரசர் சந்தனுவிடம்கூட….ஏனென்றால் அவர் என்னை பார்த்ததே இல்லை. என்னில் அவர் வரைந்த சித்திரங்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்” என்றாள். “உனக்கு நான் சொல்வது புரியுமா என்றே எனக்குத்தெரியவில்லை. நீ அறியாத நூல்கள் இல்லை. நீ அறியாத சிந்தனைகளும் இல்லை. ஆனால் உன்னால் பெண்ணைப் புரிந்துகொள்ளமுடியாது. அன்னையையும் காதலியையும் மனைவியையும்…எவரையுமே நீ உணரமுடியாது. ஆனால் நான் உன்னிடம்தான் சொல்லியாகவேண்டும்.” அவள் மூச்சுத்திணறி நிறுத்தினாள்.
பின்பு மேலும் வேகத்துடன் முன்னால் வந்து “ஒரு பெண்ணை யாரோ ஓர் ஆண் மட்டும்தான் முழுப்பெண்ணாக்குகிறான் என்று தெரியுமா உனக்கு? அப்படிப்பட்ட ஆணை சந்திப்பவளே நல்லூழ்கொண்டவள்….ஆனால் ஒன்று சொல்கிறேன். அந்த ஆணை தன் மகனாகக் கொண்டவள் பெரும்பேறு பெற்றவள். அவள் நான். என் மகன் விசித்திரவீரியன் அன்றி எவரையும் நான் ஆணாக எண்ணியதில்லை. அவன் புன்னகையை அன்றி எதையும் நான் எனக்குள் கனவாக நிறைத்துக்கொண்டதுமில்லை. அதனாலேயே அவனிடம் நான் ஒருநாளும் இன்சொல் பேசியதில்லை. என்னை அவன் அறியக்கூடாதென்றே எண்ணினேன். என் அன்பினால் நான் ஆற்றலிழந்துவிடக்கூடாதென்று நினைத்தேன். ஆனால் அவன் என் கண்களை மட்டும்தான் பார்த்தான். என் சொற்களை கண்கள்முன் கட்டப்பட்ட திரையாக மட்டுமே எடுத்துக்கொண்டான்.”
பெருமூச்சுடன் சத்யவதி மெல்ல அமைதியடைந்தாள். பீஷ்மர் “விசித்திரவீரியன் வானேறிய செய்தியை நாம் அறிவிக்கவேண்டாமா அன்னையே?” என்றார். சத்யவதி மெல்ல அவளிருந்த நிலையில் இருந்து இறங்கினாள். உடலசைவு வழியாக அவள் மனம் சமநிலைக்கு வருவது தெரிந்தது. “அவனை விடகாரிகளின் உதவியுடன் ஆதுரசாலையிலேயே வைத்திருக்கிறேன். எவ்வளவு நாள் வேண்டுமென்றாலும் அவனை அப்படியே வைத்திருக்கலாமென்று சொன்னார்கள்” என்றாள்.
பீஷ்மர் அவளையே பார்த்தார். “தேவவிரதா, இந்த நிலையை நீயும் ஊகித்தே இருப்பாய். இனிமேல் குருவம்சத்திற்கு தோன்றல்கள் இல்லை. விசித்திரவீரியனுடன் பாரதவர்ஷத்தின் மகத்தான மரபு ஒன்று அறுந்து போய்விட்டது…எது நடந்துவிடக்கூடாது என்று வாழ்நாளெல்லாம் அஞ்சிவந்தேனோ அது நிகழவிருக்கிறது.” “அது விதிப்பயன்” என்றார் பீஷ்மர். “இல்லை, இன்னும் நான் உறுதி குலையவில்லை” என்று சத்யவதி உரக்கச் சொன்னாள். “இன்னும் வழியிருக்கிறது.”
“சொல்லுங்கள் அன்னையே” என்றார் பீஷ்மர்.சத்யவதி “தேவவிரதா, நூல்நெறிப்படி விசித்திரவீரியனை சிதையேற்றும்போதுதான் அவன் அரசிகள் விதவையாகிறார்கள். அதுவரைக்கும் அவர்கள் அவன் அறத்துணைவியர்தான். ஆகவேதான் அவனை நான் வைத்திருக்கிறேன். அவன் இறந்த செய்தி ஷத்ரியர் எவரும் அறியவேண்டியதில்லை…” பீஷ்மர் “ஒற்றர்கள் எங்கும் இருப்பார்கள் அன்னையே” என்றார்.
“இருக்கட்டும்…நான் நினைப்பது வைதிகர்களுக்கும் குலமூத்தாருக்கும் சான்றுகள் கிடைக்கலாகாது என்று மட்டுமே” என்றாள் சத்யவதி. “வைதிகநூல்களின்படி நீர்க்கடன்செய்து வானேறும் கணம் வரை மனிதர்கள் மண்ணில் வாழ்கிறார்கள். அவர்களின் உறவுகளும் மண்ணில் எஞ்சுகின்றன.”
பீஷ்மர் “அன்னையே…” என்று ஆரம்பித்தபோது, சத்யவதி கையமர்த்தி “இதுவன்றி வேறு வழியே இல்லை தேவவிரதா….ஒன்று உணர்ந்துகொள். இந்த அஸ்தினபுரி வேள்தொழிலையோ பசுத்தொழிலையோ நம்பியிருக்கும் நாடு அல்ல. இது வணிகத்தை நம்பியிருக்கும் நாடு. அந்த வணிகம் இங்கு மையம் கொண்டிருப்பதே இங்கு ஒரு வல்லமைமிக்க அரசு இருப்பதனால்தான். இந்நகரின் சாலைகளும் சந்தைகளும் முற்றிலும் பாதுகாப்பானவை என்பதனால்தான். இந்நகரை வேற்றரசர் கைப்பற்றினால் மிகச்சில வருடங்களிலேயே இங்கே வறுமை வந்து சூழும். இந்நகரம் பாழ்பட்டு அழியும்…”
“அன்னையே நான் சொல்வது அதுவல்ல” என்றார் பீஷ்மர். சத்யவதி தடுத்து “தேவவிரதா இது சந்திரகுலத்தின் முதன்மை அரசகுலம். இது என்னால் அழியும் என்றால் நான் இப்பூமியில் பிறந்ததற்கே பொருளில்லை…அத்துடன்…” அவள் கண்களுக்குள் ஓர் புதிய திறப்பு நிகழ்ந்தது என்று பீஷ்மர் உணர்ந்தார். சற்று முன்னகர்ந்து திடமான குரலில் “…நான் மீனவப்பெண். என்னுடன் இந்த வம்சம் அழிந்தது என்றால் வம்சக்கலப்பால் அழிந்தது என்றுதான் புராணங்கள் சொல்லும். ஷத்ரியர்களும் பிராமணர்களும் அதை எங்கும் கொண்டுசெல்வார்கள்… அதை நான் விரும்பவில்லை…ஒருபோதும் நான் அதை அனுமதிக்கப்போவதில்லை” என்றாள்.
பீஷ்மர் பெருமூச்சுடன் அவளே முடிக்கட்டும் என்று கைகோர்த்துக் காத்திருந்தார். “தேவவிரதா, ஷத்ரியர்கள் என்பவர்கள் யார்? நாட்டைவென்று ஆள்கின்றவன் எவனோ அவன் ஷத்ரியன். பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பு இந்நிலமெல்லாம் காடாக இருந்தபோது இங்கு ஒலித்த ரிஷிகளின் வேதங்களால் இவை ஊர்களாக மாறின. இங்கே அரசுகள் உருவாகி வந்தன. தொல்குடிவேடர்களும் ஆயர்களும் அரசர்களானார்கள். இங்குள்ள அத்தனை ஷத்ரியர்களும் அவ்வாறு உருவாகி வந்தவர்கள்தான். ஆனால் இன்று அவர்கள் தங்களை தூயகுருதியினர் என்று நம்புகிறார்கள். பிறதொல்குடிகளில் இருந்து உருவாகிவரும் புதிய ஆட்சியாளர்களை எல்லாம் படைகொண்டு சென்று அழிக்கிறார்கள். அதற்காக ஒருங்கிணைகிறார்கள். அதற்குக் காரணமாக ஷத்ரியர்கள் அல்லாத எவரும் அரசாளலாகாது என்று நெறிநூல்விதி உள்ளது என்கிறார்கள்.”
“அவை அவர்கள் நாடுகளை உருவாக்கிக் கொள்வதற்கு அமைத்துக்கொண்ட நூல்கள்” என்றார் பீஷ்மர். “ஆம்… கடல்சேர்ப்பர்களும் மச்ச மன்னர்களும் வேடர்தலைவர்களும் நாகர்குடிவேந்தர்களும் இன்று ஷத்ரியர்களால் அழிக்கப்படுகிறார்கள். ஆனால் கங்கையின் ஜனபதத்துக்கு வெளியே புதிய அரசுகள் உருவாகி வருகின்றன. கூர்ஜரத்து கடற்கரையில் யாதவர்களின் அரசுகள் உருவாகின்றன. தெற்கே மாளவர்களும் தட்சிணத்தில் சதகர்ணிகளும் விரிந்துகொண்டிருக்கிறார்கள். அப்பால் திருவிடத்திலும் தமிழ்நிலத்திலும் பேரரசுகள் எழுந்துவிட்டன. சூத்திரர்களிடமிருந்து புதிய அரசகுலங்கள் பிறந்து வரவேண்டும். இல்லையேல் பாரதவர்ஷம் வளரமுடியாது…அதற்கு ஷத்ரியசக்தி கட்டுப்படுத்தப்பட்டாகவேண்டும்.”
பீஷ்மர் தலையை அசைத்தார். “மாமன்னர் சந்தனு கங்கர்குலத்திலிருந்து உன்னை கொண்டுவந்தபோதே ஷத்ரியர்கள் அமைதியிழந்துவிட்டனர். என்னை அவர் மணந்து அரியணையையும் அளித்தபோது நமக்கெதிராக அவர்களனைவரும் திரண்டுவிட்டனர். அஸ்தினபுரம் புலிகளால் சூழப்பட்ட யானைபோலிருக்கிறது இன்று. அதற்குக்காரணம் நம் குருதி…. அவர்கள் நாம் இங்கே குலநீட்சிகொள்ளலாகாது என நினைக்கிறார்கள். அதை நான் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. இந்தக்குலம் வாழவேண்டும். இதில் சத்யவதியின் மச்சகுலத்துக் குருதி இன்னும் பல தலைமுறைகளுக்கு இந்த அரியணையில் இருந்து ஆளவேண்டும். அவர்களின் பிள்ளைகள் தங்கள் வாள்வல்லமையால் ஷத்ரியகுலத்தில் மணம்கொள்ளவேண்டும்…”
பெருமூச்சுடன் சத்யவதி உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டாள். “நான் இவ்வரியணையில் அமர்ந்தது அடையாளமின்றி அழிந்துவிடுவதற்காக அல்ல தேவவிரதா. உன் தந்தை என்னை மணம்கொள்ள வந்தபோது அவரிடம் நான் அரசியாகவேண்டுமென்ற ஆணையை என் தந்தை கோரிப்பெறுவதற்குக் காரணம் நானே. மும்மூர்த்திகளும் எதிர்த்தாலும் என்னை விடமாட்டேன் என்று அவர் சொன்னார். அப்போதே அம்முடிவை எடுத்துவிட்டேன். என் தந்தையிடம் அந்த உறுதியைப் பெறும்படி சொன்னேன். எளிய மச்சர்குலத்தலைவரான அவர் மாமன்னர் சந்தனுவிடம் உறுதிகோர அஞ்சினார்…நான் அவருக்கு ஆணையிட்டேன்.”
“தெரியும்” என்றார் பீஷ்மர். “நீ அதை ஊகித்திருப்பாய் என நானும் அறிவேன்” என்றாள் சத்யவதி. “ஆனால் நான் அந்த உறுதியைப்பெறும்போது உன்னை கங்கர்குலத்துச் சிறுவனாக மட்டுமே அறிந்திருந்தேன். அன்று என்குலம் என் குருதி என்று மட்டுமே எண்ணினேன். என் குழந்தைகள் பிறந்தபின்னர் என் வம்சம் என்று மட்டுமே என்னால் சிந்திக்கமுடிந்தது…” அவரை நோக்கி “என்னை எவரும் சுயநலமி என்று சொல்லலாம். ஆனால் மண்ணில் எந்த அன்னையும் சுயநலமி மட்டுமே” என்றாள்.
“அன்னையே, தாயாக நீங்கள் கொள்ளும் உணர்வுகளை நானறியேன். ஆனால் சக்ரவர்த்தினியாக நீங்கள் எண்ணுவதை ஒவ்வொரு சொல்லாக நான் புரிந்துகொள்கிறேன். நீங்கள் சுயநலம்கொண்ட எளிய பெண்ணல்ல. இந்த பாரதவர்ஷத்தின் விதியை சமைக்கப்போகும் பேரரசி. நீங்கள் கனவு காண்பது உங்கள் நலனையோ உங்கள் வம்சத்தையோ அல்ல, பாரதவர்ஷத்தை. நீங்கள் ஆயிரம் வருடங்களை முன்னோக்கிச் சென்று பார்க்கும் கண்கள் கொண்டவர். அந்தக்கனவுதான் உங்களை முன்கொண்டுசெல்கிறது. உங்கள் விழிகளில் பிறிதனைத்தையும் சின்னஞ்சிறியனவாக ஆக்குகிறது” என்றார் பீஷ்மர். “அதை நான் அன்றே அறிந்தேன். உங்கள் கைகளின் ஆயுதமாக இருப்பதே என் கடமை என்றும் உணந்தேன்.”
“நான் உனக்குக் கடன்பட்டிருக்கிறேன் தேவவிரதா” என்றாள் சத்யவதி. “என் திட்டத்தைச் சொல்லவே நான் உன்னை அழைத்தேன். வரும் முழுநிலவுநாள் வரை அவனை வைத்திருப்போம். அதற்குள் இவ்விரு இளவரசிகளும் கருவுற்றார்களென்றால் மருத்துவர்களைக் கொண்டு அதை அறிவிக்கச் செய்வோம். அதன்பின் விசித்திரவீரியனின் வான்நுழைவை முறைப்படி அறிவிப்போம்” என்றாள்.
சிலகணங்களுக்குப் பின்னர்தான் பீஷ்மர் அச்சொற்களைப் புரிந்துகொண்டார். திடுக்கிட்டு எழுந்து “அன்னையே தாங்கள் சொல்வது எனக்குப்புரியவில்லை” என்றார். “ஆம், அவர்கள் வயிற்றில் குருகுலத்தின் தோன்றல்கள் கருவுறவேண்டும்…” என்றாள். “அதற்கு?” என்றார் பீஷ்மர் சொல்லிழந்த மனத்துடன். “தேவவிரதா, சந்தனுவின் குருதியில் பிறந்த நீ இருக்கிறாய்.”
“அன்னையே” என்று கூவியபடி பீஷ்மர் முன்னால் வந்து சத்யவதியை மிக நெருங்கி அந்த நெருக்கத்தில் அவளைப்பார்த்த திகைப்பில் பின்னகர்ந்தார். “என்ன சொல்கிறீர்கள்? சொற்களை சிந்தனை செய்துதான் சொல்கிறீர்களா?” என்றார். தன்குரலை அவரே வேறெவரோ பேசுவதுபோலக் கேட்ட்டார். சத்யவதி “வேறுவழியில்லை தேவவிரதா. நான் அனைத்து நெறிநூல்களையும் பார்த்துவிட்டேன். எல்லாமே இதை அனுமதிக்கின்றன…” என்றாள்.
“அன்னையே, என்னை மன்னிக்கவேண்டும். இன்னொருமுறை நீங்கள் இதைச் சொன்னீர்கள் என்றால் இங்கேயே என் கழுத்தை அறுத்து உயிர்விடுவேன்” என்றார் பீஷ்மர். “தேவவிரதா இது உன் தந்தை…” என்று சத்யவதி ஆரம்பித்ததும் பீஷ்மர் தன் வாளை உருவ கையைக்கொண்டு சென்றார். சத்யவதி அவர் கையைப் பற்றினாள். “வேண்டாம் தேவவிரதா…” என்றாள். “என்னை மன்னித்துவிடு… வேறுவழியே இல்லாமல்தான் நான் இதை உன்னிடம் சொன்னேன்.”
பீஷ்மர் நடுங்கிய கரங்களை விலக்கி நெஞ்சில் வைத்தார். சத்யவதி “வேறு ஒருவன் மட்டும்தான் இருக்கிறான் தேவவிரதா. அவன் சந்தனுவின் குருதியல்ல, என் குருதி” என்றாள். பீஷ்மர் புரியாமல் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றார். “அவன் இங்கு வந்தானென்றால் இவ்வம்சம் வாழும்… அதை நாம் குருவம்சமென வெளியே சொல்லுவோம். அனைத்து நூல்நெறிகளின்படியும் அது குருவம்சம்தான். ஆனால் உண்மையில் அது என் வம்சமாகவே இருக்கும்.”
“நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் பேரரசி?” என்றார் பீஷ்மர். “உன் தமையன்…வியாசவனத்துக்குச் சென்று அவன் சொல்லைக் கேட்டுத்தானே நீ காசிமகளிரை கைப்பற்றச் சென்றாய்?” என்றாள் சத்யவதி. பீஷ்மர் அனைத்து ஆற்றல்களையும் இழந்தவர் போல கால்கள் தளர்ந்து தன் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.
சத்யவதி “அவன் முனிவன். ஆனால் பிரம்மசரிய விரதமுடையவனல்ல. அவனுடையது கவிஞர்களுக்குரிய பிரேமைநெறி. முன்னரே அவனுக்கு குழந்தை பிறந்திருக்கிறது…” என்றாள். “அவன் கற்றறிந்த சான்றோன். என் குலம் அவன் வழியாக முளைத்து இந்த பாரதவர்ஷத்தை ஆளுமென்றால் அதைவிட மேலானதாக ஏதுமிருக்கப்போவதில்லை.”
“ஆனால் இன்று அவர் என்னைவிட மூத்தவர்” என்றார் பீஷ்மர். சத்யவதி “யோகவீரியமுள்ள முனிவனுக்கு வயது ஒரு தடையே அல்ல. அவன் வந்தால் எல்லா இக்கட்டுகளும் முடிந்துவிடும். அஸ்தினபுரியின் அரசமரபு தொடரும்… தேவவிரதா இது ஒன்றுதான் வழி…”
பீஷ்மர் “அதை எப்படி அவர் ஏற்றுக்கொள்வார்?” என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுபோலச் சொன்னார். சத்யவதி “நீ ஏற்றுக்கொள்ளச்செய். அவனுக்கு உன்மேல் மட்டும்தான் பற்று இருக்கிறது. உன் சொற்களை மட்டும்தான் அவன் பொருட்படுத்துவான்….நீ என் ஆணையை மறுத்தாய். ஆகவே நீ இதைச் செய்தே ஆகவேண்டும்…இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்” என்றாள்.
பீஷ்மர் “அன்னையே என்னால் எதையுமே சிந்திக்க முடியவில்லை.உங்கள் சொற்கள் என்னை சூழ்ந்துகொண்டிருக்கின்றன” என்றார். சத்யவதி “தேவவிரதா, அவனிடம் சொல். காசிநாட்டுப் பெண்களைக் கொண்டுவர அனுமதியளித்தவனே அவன் அல்லவா? அப்படியென்றால் அவனுக்கு இப்பெண்களின் வாழ்க்கையில் பொறுப்பில்லையா? அந்த வினாவுக்கு முன் அவன் பதிலிழந்துவிடுவான்” என்றாள். பீஷ்மர் அவளுடைய முகத்தை சொற்களற்ற மனதுடன் ஏறிட்டுப்பார்த்தார்.
சத்யவதி எங்கோ நின்று பேசினாள். “அவன் அவர்களை தாயாக்கினால் அவர்கள் வயிற்றில் அஸ்தினபுரியின் அரசகுலம் பிறக்கும். அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு பொருள் உருவாகும். அரசியராக அவர்கள் இந்த மண்ணை ஆளமுடியும். இல்லையேல் அவர்களுக்கிருப்பது என்ன? இருண்ட அந்தப்புர அறைகளில் வாழ்நாளெல்லாம் விதவை வாழ்க்கை. அல்லது உடன்சிதையேற்றம்….உயிருடன் எரிவது அல்லது எரிந்து உயிர்வாழ்வது….அவன் கருணைகொண்டானென்றால் அவர்களை வாழச்செய்ய முடியும். இந்த நாட்டையும் இதன் குடிகளையும் வாழச்செய்ய முடியும்.”
பீஷ்மர் அச்சொற்கள் அனைத்தும் கனத்த கற்களாக வந்து தனக்குள் அடுக்கப்பட்டு சுவர்போலெழுவதை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். எத்தனை தெளிவு எவ்வளவு துல்லியம் என அவர் அகம் மலைத்தது.
“அவனைக் கொண்டுவருவது உன் பொறுப்பு…. நீ செய்தேயாகவேண்டிய கடமை. இது என் ஆணை! ஆகவே மண்மறைந்து விண்ணேகிய உன் தந்தையின் ஆணை!” என்றாள் சத்யவதி. பீஷ்மர் பேசாமல் நின்றார். “எனக்கு வாக்களி…அவனை அழைத்துவருவேன் என” என்று அவள் சொன்னாள். “வாக்களிக்கிறேன் அன்னையே” என்றார் பீஷ்மர். அக்கணமே அவருக்கு சொற்கள் தவறிவிட்டன என்று புரிந்தது. வியாசரை அழைக்கிறேன் என்பதற்கு பதில் கொண்டுவருகிறேன் என அவரை சொல்லவைத்துவிட்டாள்.
உடல் கற்சிற்பம் போல கனத்து கால்களில் அழுந்த மெல்ல நடந்து வெளியே வந்து வெயில் பொழிந்துகிடந்த முற்றத்தை அடைந்தபோது பீஷ்மர் திடீரென்று புன்னகை செய்தார். அவர் உள்ளே நுழைவதற்கு முன்னரே சத்யவதி வியாசரை அழைப்பதற்கான திட்டத்தை முழுமைசெய்துவிட்டிருந்தாள் என அவர் உணர்ந்தார்.

168 . யாக்ஞ தேவ மகரிஷி கோத்ரம்

167ல் கண்ட மகரிஷியும் இவரும் ஒருவராக இருக்கலாம்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சண்ணஅக்கியவரு :- சிறிய மெல்லிய அரிசி. இதனால் சோறாக்கி உண்பவர். அல்லது சண்ணக்கா என்பவரின் வம்சாவழியினராக இருக்கலாம்.