அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

1/10/14

144 .புனர் தேவ மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கொஜ்ஜம்வாரு ;-

பகுதி இரண்டு : பொற்கதவம் [ 4 ]

கங்கைநதி மண்ணைத்தொடும் இடத்தில் பனியணிந்த இமயமலைமுடிகள் அடிவானில் தெரியுமிடத்தில் இருந்த குறுங்காடு வேதவனமென்று அழைக்கப்பட்டது. அங்குதான் கிருஷ்ணதுவைபாயன மகாவியாசன் இருபதாண்டுக்காலம் தன் மாணவர்களுடன் அமர்ந்து வேதங்களைத் தொகுத்து சம்ஹிதைகளாக ஆக்கினார். அங்கே வேதநாதம் கேட்டுப்பழகிய சோலைக்குயில்கள் காயத்ரி சந்தத்திலும், மைனாக்கள் அனுஷ்டுப்பிலும், வானம்பாடிகள் திருஷ்டுப்பிலும், நாகணவாய்கள் உஷ்ணுக்கிலும், நாரைகள் ஜகதியிலும் இசைக்குரலெழுப்பும் என்று சூதர்கள் பாடினர். மலையில் உருண்டுவந்த வெண்கற்களினூடாக நுரைத்துச் சிரித்துப்பாயும் கங்கையின் கரையில் ஈச்சையோலைகளை கூரையிட்டு மரப்பட்டைகளைக் கொண்டு கட்டப்பட்ட சிறுகுடில்கள் இருந்தன. அவற்றின் நடுவே பகவா கொடிபறக்கும் பெரியகுடிலில் வேதவியாசர் வாழ்ந்தார்.
அந்த இளங்குளிர்காலையில் இமையமலையிறங்கி வந்த பசித்த சிம்மம் ஒன்று வேதவனத்துக்குள் புகுந்தது. பருந்தின் அலகு போன்ற நகங்கள் கொண்ட சிவந்த கால்களை மெல்லத்தூக்கி வைத்து, கங்கைநீர் ஓடித்தேய்ந்து பளபளத்த பாறைகளைத் தாண்டி, நாணல்கள் நடுவே காய்ந்த நாணல்போன்ற செம்பிடரி காற்றிலாட, சிப்பிவிழிகளால் வேதவனத்தைப் பார்த்து நின்றது. சித்ரகர்ணி என்று பெயர்கொண்ட அந்த முதிய சிம்மம் அதற்கு விதி வகுத்த பாதையில் நடந்து வந்து வியாசனின் தவச்சாலையை நோக்கியபடி ஒரு பாறைமீது நின்றுகொண்டிருந்தபோதுதான் அஸ்தினபுரியில் இருந்து பீஷ்மர் அவ்வழியே சென்றார்.
பீஷ்மரின் உடலெங்கும் செம்புழுதிபடிந்து வியர்வையில் வழிந்து கொண்டிருந்தது. சிறகுகள் போல அவரது பட்டுச்சால்வை பின்னால் எழுந்து பறக்க, சிம்மப்பிடரி என அவர் தாடியும் சிகையும் காற்றில் ததும்பின. குதிரைக்குளம்படிகளில் கூழாங்கற்கள் பறக்க ரதம் தன்னைத்தாண்டிச்சென்றதைக் கண்ட சித்ரகர்ணி குதிரைகளின் வியர்வைத்துளிகள் விழுந்த தடத்தை முகர்ந்து பிடரி சிலுப்பிக்கொண்டு, நாக்கால் உதடுகளை சப்பிக்கொண்டு, மெத்தென்ற காலடிகளை தூக்கிவைத்து அவரைப்பின்தொடர்ந்து சென்றது.
வியாசரின் குருகுலத்துக்குள் ரதம் சென்று நின்றதும் அங்கிருந்த சீடர்கள் ஓடிவந்து முகமனும் வாழ்த்தும் சொல்லி பீஷ்மரை வணங்கி நின்றனர். ரதமோட்டியிடம் தன் அம்பறாத்தூணியையும் வில்லையும் அளித்துவிட்டு நெடிய கால்களை நிலத்தில் வைத்து பீஷ்மர் மண்ணிலிறங்கி வியாசரைப் பார்க்கவேண்டுமென்று சீடர்களிடம் சொன்னார். அவர்களில் மூவர் ஓடிச்சென்று தன் குடிலில் மாணவர்களுக்கு நூல்நடத்திக்கொண்டிருந்த வியாசரிடம் பீஷ்மரின் வருகையைத் தெரிவித்தனர். பாடம் முடிந்தபின்னர் மையக்குடிலில் சந்திப்பு என ஆணை வந்தது.
பீஷ்மர் கங்கையில் நீராடும்போது மிக அருகே நாணல்களுக்குள் அமர்ந்து வாய்திறந்து நாக்கு தொங்க மூச்சிரைத்தபடி சித்ரகர்ணி அவரையே பார்த்துக்கொண்டிருந்தது. அதற்குள் வாசல்கள் ஒவ்வொன்றாக திறந்துகொண்டிருந்தன. ‘இவனை நானறிவேன்…இவன் முகமோ உடலோ நானறியாதது. ஆனால் இவனை நானறிவேன்….என் ஆன்மா இவனைக்கண்டதும் எழுகிறது’ என்று அது திரும்பத்திரும்ப தனக்குள் சொல்லிக்கொண்டது.
‘நீ என்னை அறியமாட்டாய். நானோ ஒவ்வொரு பிறவியிலும் உன்னை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறேன். உன்னுடைய ரதசக்கரங்கள் ஓடித்தெறிக்கும் கூழாங்கற்கள்கூட பிறவிகள் தோறும் உன்னை பின்தொடர்கின்றன என நீ அறியவும் முடியாது. நான் இந்த முதுமைவரை வேட்டையாடி வேட்டையாடி கண்டறிந்தது ஒன்றே. காலத்தின் முடிவில்லா மடிப்புகளிலெல்லாம் பின்னிப்பின்னிச்செல்லும் அழியாத வலையொன்றின் வெறும் கண்ணிகள் நாம்’ என்று சித்ரகர்ணி சொல்லிக்கொண்டது. தன் பிடரிமயிரில் மொய்த்த பூச்சிகளை விரட்ட சடைத்தலையை குலைத்துக்கொண்ட அசைவை புதருக்குள் காற்றுபுகுந்ததாக எண்ணினார் பீஷ்மர்.
நீராடி மரவுரி ஆடை அணிந்து, புல்லரிசியை பாலுடன் சேர்த்து சமைத்த கஞ்சியும் பழங்களும் உண்டு, வியாசரைக்காண்பதற்காக பீஷ்மர் மையக்குடிலுக்குள் சென்றார். களிமண் பூசப்பட்ட மரப்பட்டைகளால் ஆன பெரிய குடிலுக்கு முன்னால் ஒரு வெண்பசு கட்டப்பட்டிருந்தது. கருங்கல்சில்லுகள் போல ஈரம் மின்னிய பெரியகண்களால் அந்தப் பசு தன்னிடம் எதையோ சொல்லமுற்படுவதுபோல பீஷ்மர் உணர்ந்தார். ஒருகணம் நின்று அதன் முன்னோக்கிக் குவிந்த காதுகளையும் விறகுக்கரிமீது தீச்சுடர்போல நாசியை நக்கிச்சென்ற நாக்கையும் பார்த்தபின் உள்ளே சென்றார். பசு அடிவயிற்றை எக்கி ‘ம்பே’ என்று குரலெழுப்பியது.
பீஷ்மர் காவியரிஷியான வேதவியாசரை இருமுறை ஞானசபைகளில் தொலைவிலிருந்து பார்த்திருந்தார். மெலிந்த வலிமையான கரிய உடல் மீது நரம்புகள் இறுக்கிக் கட்டப்பட்டவை போலிருந்தன. கருமையும் வெண்மையும் இடைகலந்த தாடியும் நீண்ட சாம்பல்நிறச்சடைகளும் மார்பிலும் தோளிலும் விழுந்துகிடந்தன. கண்கள் மீன்விழிகள் போலத் தோன்றின. வியாசரின் பாதங்களை வணங்கிய பீஷ்மரின் தலைமேல் கைவைத்து “வெற்றியும் ஆயுளும் புகழும் அமைவதாக!” என்று வியாசர் வாழ்த்தினார்.
பீஷ்மர் மெல்லியகுரலில் அவர் வியாசரை இளையவன் என்ற முறையில்தான் தேடிவந்திருப்பதாகச் சொன்னார். “ஆம், நான் என்றும் உனக்கு அந்த இடத்தில் இருப்பவன்” என்று வியாசர் கனிந்த புன்னகையுடன் சொன்னார். “நீ என் குருதி…”
பீஷ்மர் முதல்முறையாக தன்னைச்சூழ்ந்திருந்த அழியாத்தனிமை முற்றிலும் கரைய, இன்னொரு மனித உயிரிடம் பேரன்பை உணர்ந்தார்.எழுந்து அந்த சடைமுடிகளுக்குள், கரையிலா ஞானத்துக்குள், ஞானமுருவாக்கிய அகங்காரத்துக்குள் இருந்த முதியவனை நெஞ்சோடு ஆரத்தழுவி இறுக்கவேண்டுமென அவர் தோள்களில் விம்மல் எழுந்தது. கண்களில் ஈரமெனக் கசிந்த அந்த மன எழுச்சியை அடக்க வியாசனின் மெலிந்த கால்களில் சுருண்டிருந்த மண்நெறிந்த நகங்களை நோக்கி தன் பார்வையை விலக்கிக்கொண்டார். ‘இவர் ஒருவரன்றி எவரும் என்னை அறிந்திருக்கவில்லை. அலையலையென வரப்போகும் முடிவற்ற காலங்களிலும் எவரும் அறியப்போவதுமில்லை’
பீஷ்மரின் உயரத்தை அண்ணாந்து பார்த்து மகிழ்ந்து சிரித்து “தம்பி அஸ்தினபுரிக்குமேல் உயர்ந்திருக்கும் ஹஸ்தியின் அரண்மனை முகடுபோலிருக்கிறாய் நீ” என்றார் வியாசர். “ஆனால் உன்னை அனைவரும் பார்க்கிறார்கள். நீ எவரையும் அணுகிப்பார்க்க முடிவதில்லை” அவரது சிரிப்பைப் பார்த்தபடி பீஷ்மர் புன்னகை புரிந்தார். சிரித்தபடி “வானை எட்டமுடியாத எளிய மனிதர்கள் கோபுரங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்” என்றார் வியாசர்.
“ஆம்…அது உண்மை” என்றார் பீஷ்மர். “நான் என்னை உருவாக்கிக் கொள்ள எனக்கு வாய்ப்பே அளிக்கப்படவில்லை. என் அன்னையும், தந்தையும், குலமும், தேசமும், நான் கற்ற நெறிகளும் இணைந்து என்னை வடிக்கின்றன. என் வழியாக உருவாகும் என்னை நானே அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றார்.
வியாசர் சிரித்து “வெகுதொலைவு வந்துவிட்டாய்” என்றார். மாசற்ற வெண்பற்கள் மின்னிய அச்சிரிப்பு ஐந்துவயதுக் குழந்தைக்குரியது என்று எண்ணியதும் பீஷ்மரின் கரைகள் உடைந்தன. “மூத்தவரே” என்றழைத்தபோது ஒரு கணம் நெஞ்சு விம்மி நா தளர்ந்து அடுத்த சொற்றொடர்களை மறந்தார் பீஷ்மர். தொண்டையிலிருந்த இறுக்கத்தை விழுங்கிவிட்டு “மூத்தவரே, விண்ணிலிருக்கும் தூய ஒலிகளை தேடிச்சென்றுகொண்டிருப்பவர் நீங்கள். நான் மண்ணின் எளியசிக்கல்களுடன் போரிட்டுக்கொண்டிருப்பவன். எனக்கு சொற்கள் கைகூடவேயில்லை. ஆகவே அம்புகளை பயிற்சிசெய்கிறேன்” என்றார்.
“ஆயுதங்கள் உயிரற்றவை. உயிரற்றவைக்கு மட்டுமே கச்சிதம் கைகூடுகிறது. அவற்றை இயக்கும் விதிகளுக்கு அப்பால் அவற்றில் ஏதுமில்லை..” பீஷ்மர் தொடர்ந்தார். “நான் என்னை மிகமிகக்கூரிய ஓர் ஆயுதம் என்பதற்கு அப்பால் உணர்ந்ததேயில்லை. இவர்கள் சொல்லும் அன்பு, பாசம், நெகிழ்ச்சி என்பதெல்லாம் எனக்கு என் முன் வந்துசேரும் மானுடப் பிரச்சினைகளை புரிந்துகொள்வதற்கான வெறும் அடையாளங்களாகவே தெரிகின்றன…அச்சொற்களை நான் சதுரங்கக் காய்களென நகர்த்தி விளையாடிக்கொண்டிருக்கிறேன்”
“இப்போது உன் தரப்பின் காய்களே ஒன்றையொன்று எதிர்த்து களத்தில் திகைத்து நிற்கின்றன இல்லையா?” என்றார் வியாசர். “ஞானம் என்பது அடைவதல்ல, ஒவ்வொன்றாய் இழந்தபின்பு எஞ்சுவது….பொறு நீ சேர்த்துக்கொண்டவை எல்லாம் உன்னைவிட்டு ஒழுகிமறையும் நாள் ஒன்று வரும்”
பீஷ்மர் அச்சொல்லை உடல்நடுங்கும் மனக்கிளர்ச்சியுடன் கேட்டு கைகூப்பினார். அதற்குமேல் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் திரும்பிவிடவேண்டுமென நினைத்துக்கொண்டார். ஆனால் வியாசர் தொடர்ந்து பேசினார். “நீ என்னைத்தேடிவந்த சிக்கல் என்ன?”
அதைக் கேட்டதும் தொலைதூரத்தில் இருந்து திரும்பி வந்து அரைக்கணம் திகைத்தபின் பெருமூச்சுடன் சொல்லத்தொடங்கினார் பீஷ்மர். “மூத்தவரே, இன்று என் தந்தை என்னிடம் ஒப்படைத்துச்சென்ற நாடான அஸ்தினபுரம் ஆபத்தில் இருக்கிறது. அதை எதிரிகள் சூழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் அதை தாக்குவார்களென்றால் அது நியாயமென்று எண்ணும் மக்கள் அஸ்தினபுரியிலும் இருக்கிறார்கள். அஸ்தினபுரிக்கு இன்று மன்னன் இல்லை… மன்னனைக் கண்டடையும் வழியோ சிக்கலாக உள்ளது.”
நிலைமையை அரை இமை மூடி வியாசர் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். பின்பு புன்னகையுடன் “இது மீண்டும் மீண்டும் நிகழும் வரலாறுதான். அரியணை இயல்பாக கைமாறுவது அரிதாகவே நிகழ்கிறது. அஸ்தினபுரிக்குக் காவலனாக நீ இருக்கையில் அதை எவரும் வெல்லமுடியாது. உன் தோள்களின் உறுதியை சிந்தனையிலும் கொண்டுவந்தால்போதும்” என்றார். “…நான் எதற்கும் துணிந்திருக்கிறேன் மூத்தவரே. என் கண்முன் இந்த நாடு அழிவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்” என்றார் பீஷ்மர்.
வியாசர் புன்னகையுடன் “ஆம், அது உன் தர்மம். மண்ணாசையால் மானுடன் ஷத்ரியனாகிறான்” என்றார். பீஷ்மர் “நான் தங்களிடம் கேட்கவிழையும் வினா ஒன்றே. ஒரு ஷத்ரியனின் முதற்கடமை எதுவாக இருக்கும்? எதன்பொருட்டு அவனுடைய பிற அனைத்துப்பிழைகளும் மன்னிக்கப்படும்?” என்றார். அப்போது மரப்பட்டைச்சுவர்களுக்கு அப்பால் மெல்லிய ஓசைகளாக சித்ரகர்ணி தன் காதுகளை அடித்துக்கொள்ளும் ஒலி கேட்டது.
பீஷ்மர் “நான் கற்ற நூல்களின்படி ஒரு ஷத்ரியன் நாட்டுக்காக உயிரைவிடவேண்டியவன்…அவனுடைய சுகங்களையும் குடும்பத்தையும் எல்லாவற்றையும் அவன் நாட்டுக்காக அர்ப்பணிக்கவேண்டும்.அவன் தொழிலோ வணிகமோ செய்யக்கூடாது. அவன் பூசைகளும் வழிபாடுகளும் செய்யவேண்டியதில்லை. தன்னுடைய நலனைப்பற்றி ஒரு கணம்கூட நினைக்காத வீரமும் தன்னவர்களுக்காக உயிர்விடும் தியாகமுமே ஷத்ரியனை உருவாக்குகின்றன. ஷத்ரியப்பெண்ணுக்கும் அதே நீதிதான். அவளுக்கு தனக்கான ஆசைகள் எதுவும் இருக்கலாகாது. நாட்டு மக்களுக்கு எது நல்லதோ அதற்காக அவள் எதை வேண்டுமானாலும் இழந்தாகவேண்டும்…” என்றார்.
பீஷ்மர் “ஆம், ஷத்ரிய தர்மப்படி சொந்த நாட்டின் நன்மைக்காக ஷத்ரியன் ஷத்ரியப்பெண்ணை தூக்கிவருவதில் தவறே இல்லை….பிற குலத்துப்பெண்களை அவர்கள் அனுமதி இல்லாமல் தூக்கிவந்தால்தான் பெரிய பாவம்…” என்றார்.
வியாசர் புன்னகையுடன் “பிறகென்ன?” என்றார். பீஷ்மர் “ஆனால் ..என் மனம் சஞ்சலமாகவே இருக்கிறது…ஏதோ ஒரு பெரிய தவறு நடக்கப்போகிறது என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது….” என்றார். “இத்தனை தர்க்கங்களுக்கும் அப்பால் மழையில் கரைக்கப்படாத பாறைபோல அந்த உண்மை நின்றுகொண்டிருக்கிறது மூத்தவரே. அந்தப்பெண்களின் உள்ளம். அவர்கள் இந்த மண்ணில் வந்து விடப்போகும் கண்ணீர். அதை களம் வரைந்த பின்பே ஆடத்தொடங்கும் என் எளிய தர்க்கஞானமும், நான்குவாயில்களையும் மூடிக்கொண்டிருக்கும் குலநீதியும் தாங்குமா என்ன?”
“அந்தச் சிந்தனை வந்தபின் நீ வெறும் ஷத்ரியனல்ல…ரிஷிகளின் பாதையில் செல்கிறாய்” என்றார் வியாசர் “நீ ஒருபக்கம் ஷத்ரியனாக பேசுகிறாய். இன்னொரு பக்கம் ஒரு சாதாரண மனிதனாகவும் சிந்திக்கிறாய். போரில் நீ அறுத்தெறியும் தலைக்குரியவனின் குழந்தைகளின் கண்ணீரை ஒருகணமேனும் எண்ணிப்பார்த்ததுண்டா?”
“எண்ணிப்பார்க்கவும்கூடும் என்று இப்போது நினைக்கிறேன் மூத்தவரே….சிலசமயம் நான் ஷத்ரியனை விட மனிதன் என்ற இடம் பெரிதென்றும் எண்ணுகிறேன்” என்றார் பீஷ்மர்.
வியாசர் சிலகணங்கள் அமைதியாக இருந்துவிட்டு பின்பு “தேவவிரதா, உன் குலமூதாதையொருவனின் கதையைச் சொல்கிறேன். அவன் பெயர் சிபி. பிரம்மன், அத்ரி, சந்திரன், புதன், புரூரவஸ், ஆயுஷ், நகுஷன், யயாதி, அனுத்ருஹ்யன், சபாநரன், காலநரன், சிருஞ்சயன், உசீநரன் என்பது அவனுடைய வம்சவரிசை. பாரதவர்ஷத்தின் அறம் விளையும் மண் என்று அவனுடைய நகரமான சந்திரபுரி அழைக்கப்பட்டது. அவனுடைய வாழ்க்கையையே அறநூலாகக் கொள்ளலாமென்றனர் முனிவர்கள். அந்நாளில் ஒருமுறை இக்கதை நிகழ்ந்தது என்பார்கள்” என்றார்.
சந்திரவம்சத்து சிபி தன் அரண்மனை உப்பரிகையில் அமர்ந்திருக்கையில் வெண்பஞ்சுச் சுருள் போன்ற சின்னஞ்சிறு வெண்புறா ஒன்று சிறகடித்து வந்து அவன் ஆடைக்குள் புகுந்துகொண்டது. அவன் எழுந்து அதை எடுத்து தன் கைகளில் வைத்துக்கொண்டான். இதயம் நடுங்க, சிறகுகள் பிரிந்து உலைய அவன் கைவெம்மையில் ஒடுங்கியிருந்தது. அதன் முதுகிலிருந்த ரத்தக்காயத்தில் இருந்து குருதி வழிந்துகொண்டிருந்தது. அப்போது சாமரம்போன்ற சிறகுகள் வீசி ஒலிக்க எரித்துளிகள் போன்ற கண்களும், போரில் பின்னிக்கொண்ட குத்துவாட்களைப் போன்ற அலகுகளும், ஆற்றுக்கரை மரத்தின் வேர்ப்பிடிப்பு போன்ற கால்களும் கொண்ட செம்பருந்து ஒன்று வந்து அவன் உப்பரிகை விளிம்பிலமர்ந்தது.
சிபியிடம் அப்பருந்து சொன்னது “மன்னனே உன்னை வணங்குகிறேன். சைத்ரகம் என்னும் செம்பருந்துக்குலத்தின் அரசனாகிய என்பெயர் சித்ரகன். பிறப்பால் நானும் உன்னைப்போன்றே ஷத்ரியன். இந்தப் புறாவை நான் விண்ணில் பார்த்தேன். எனக்கும், நேற்றுமாலை முட்டை விட்டிறங்கிய என் குஞ்சுகளுக்கும் சிறந்த உணவாகும் இது என்று இதைத் தொடர்ந்து சென்று தாக்கினேன். காயத்துடன் அவள் உன்னருகே வந்திருக்கிறாள். அவளை என்னிடம் விட்டுவிடு. மண்ணில் உள்ள மானுடர்களுக்குத்தான் நீ அரசன். விண்ணிலும் நீரிலும் கோடானுகோடி உயிரினங்கள் வேட்டையாடியும் வேட்டையாடப்பட்டும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அவ்வாழ்க்கைக்குள் நுழைய உனக்கு அனுமதியில்லை”
“ஆம், நானறிவேன். என் காலடிக்கீழ் ஒவ்வொருகணமும் பல்லாயிரம் சிற்றுயிர்கள் அழிவதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இந்த வெண்புறா என்னிடம் அடைக்கலம் தேடியிருக்கிறது. இதைக் காப்பது ஷத்ரியனாகிய என் கடமை. அக்கடமையிலிருந்து நான் வழுவமுடியாது” என்றான் சிபி.
சித்ரகன் சினந்து சிறகடித்தெழுந்தது “மூடனைப்போல பேசுகிறாய். தன்னறம் என்பது புடவியின் பேரியக்கத்தில் தன் இடமென்ன என்றுணர்வது மட்டுமே. தன்னைச்சுற்றி இப்புடவி நிகழ்கிறது என்று எண்ணிக்கொள்வது தன்னகங்காரம் என்றே பொருள்படும். தன்னறம் முக்தியையும் தன்னகங்காரம் அழிவையும் அளிக்கும்” என்றது.
“என்னுடைய அரண்மனை வளாகத்திற்குள் என் கைகளுக்குள் வந்த ஒவ்வொன்றுக்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் என்பதே என் தன்னறம்” என்றான் சிபி. அலகைவிரித்து சீறிச் சிறகடித்த சித்ரகன் “அப்படியென்றால் நானும் என்குழந்தைகளும் பசித்துச் சாகவேண்டுமென நினைக்கிறாயா? உன் நீதியின் துலாக்கோலில் எனக்கு இடமே இல்லையா?” என்றது.
சிபி ஆழ்ந்த மனக்குழப்பத்துக்குள்ளானான். “உனக்கும் உன் குலத்துக்குமான உணவை நான் அளிக்கலாமா?” என்றான். “அறியாதவனாகப் பேசுகிறாய். நான் ஷத்ரியன். பட்டினியால் இறக்கும்போதும் கொடைபெற்று வாழமாட்டேன். நான் என் வீரத்தால் ஈட்டாத எதுவும் எனக்கு உணவல்ல” என்றது சித்ரகன்.
“மன்னனே உண்ணப்படாத ஏதும் இப்பிரபஞ்சத்திலில்லை என்பதை நீ கற்றறிந்த நூல்கள் உனக்குச் சொல்லவில்லையா என்ன? என்னை இந்த அலகுடனும் இந்த நகங்களுடனும் இப்பெரும்பசியுடனும் படைத்த ஆற்றல் அல்லவா என்னை கொன்று உண்பவனாக ஆக்கியது? இந்தச் சின்னஞ்சிறு வெண்புறா இன்று காலையில் மட்டும் ஆயிரம் சிறுபூச்சிகளை கொத்தி உண்டிருக்கிறதென்பதை நீ அறிவாயா? அந்த ஆயிரம் புழுக்கள் பல்லாயிரம் சகப்புழுக்களை விழுங்கி நெளிந்துகொண்டிருந்தன என்பதை அறிவாயா? இதை விட்டுவிடு. இதைக் காப்பாற்ற முயலும்போது நீ இப்பிரபஞ்சத்தை நிகழ்த்தும் முதல்மனதுடன் போட்டிபோடுகிறாய்” என்று சித்ரகன் சொன்னது.
“உண்மை….ஆனால் படைப்புடன் போட்டியிடுவதனாலேயே மன்னனை தெய்வம் என்கின்றன வேதங்கள். ஆகவேதான் காப்பதற்கும் அழிப்பதற்கும் மன்னிப்பதற்கும் அவனுக்கு அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறது” என்றான் சிபி. சித்ரகன் சலிப்புடன் “நம்மிடையே விவாதம் எதற்கு? நீ என் பசிக்கு மட்டும் பதில்சொல்” என்றது.
தானறிந்த அனைத்து நெறிநூல்களையும் நினைவில் ஓட்டிய சிபி அதற்கான வழியைக் கண்டுகொண்டான். ஷத்ரியன் எதையும் தன் குருதியால்தான் ஈடுகட்டவேண்டும் என்றன நூல்கள். அவனுடைய ஆயுதம் அவனுடைய உடலே. அவனுடைய தர்மம் தியாகம்.
“இப்புறாவை நான் காத்தாகவேண்டும். ஆனால் உன் பசியைப்போக்குவதும் எனக்கு விதிக்கப்பட்ட அறமேயாகும்” என்றான் சிபி. “தர்மநூல்களின்படி நான் எந்தச்சிக்கலையும் என் மாமிசத்தாலும் குருதியாலும்தான் தீர்க்கவேண்டும். இதற்குப் பதிலாக நீ என்னைப்பெற்றுக்கொள்வது ஷத்ரிய முறையே. இதோ இப்புறாவின் அளவுக்கே என் தொடைச்சதையை அறுத்து உன் முன்வைக்கிறேன்” என்றபடி தன் உடைவாளை உருவி தொடைச்சதையை வெட்டி அப்புறா அமர்ந்திருந்த ஊஞ்சல்தட்டின் மறுநுனியில் வைத்தான். ஆனால் புறாவின் எடை தாழ்ந்தே இருந்தது. மேலும் சதையைவெட்டி அங்கே வைத்தபோதும் புறாவின் எடைக்கு நிகராகவில்லை
Painting_lowபுறா தன் சிறுமணிக் கண்களைச் சுழற்றி “மன்னனே, மலையஜம் என்னும் பாறையிடுக்கில் வாழும் புறாக்குலத்தைச் சேர்ந்த என் பெயர் பிரபை. அன்னையரை அவர்களிடமிருந்து வரப்போகும் தலைமுறைகளையும் சேர்த்துத்தான் மதிப்பிடவேண்டும். இன்னும் நூறாண்டுக்காலம் என் முட்டைகளிலிருந்து விரிந்து வரப்போகும் அத்தனை புறாக்களின் எடையும் என்னில் உள்ளது” என்றது. சிபி சித்ரகனை நோக்கி “அப்படியென்றால் நான் என்னை முழுமையாகவே உனக்கு அளிக்கிறேன்” என்று சொல்லி குருதிபடிந்த நகங்கள் கொண்ட அதன் பாதங்கள் முன் தன் தலையை காணிக்கையாக வைத்தான்.
சித்ரகன் சிலகணங்கள் சிந்தனைசெய்தபின் “மன்னனே நீ என் காலடியில் தலைகுனிந்ததனாலேயே என்னிடம் அடைக்கலம் கோரியவனாகிறாய். உன்னை உண்பதை விட நானும் என்குலமும் பட்டினியில் மடிவதே அறமாகும்” என்று சொல்லி பறந்துசென்றது.
“சிபி ‘நீயும் உன் குலங்களும் வாழ்வதாக’ என்று சொல்லி வாழ்த்தி அந்த வெண்புறாவை வானில் விட்டான். அவன் என்ன செய்யப்போகிறான் என்று வானில் வந்தமர்ந்து நோக்கிய அவன் முன்னோர்கள் ஆரவாரம்செய்தனர்” என்று சொல்லி முடித்த வியாசர் பீஷ்மரிடம் “ஷத்ரியனான சித்ரகன் சொன்னதை நினைவுகொள்க. உன் முன் தலைவணங்கும் ஒவ்வொருவரும் உன்னிடம் அடைக்கலம் புகுந்தவர்களே… மன்னனிடம் குடிகள் தலைபணிவது அதன்பொருட்டே” என்றார்.
வெளியே நின்றிருந்த சித்ரகர்ணி ‘ஆம், அது நானே’ என்று சொல்லிக்கொண்டது. ‘இப்போது அறிகிறேன். முற்பிறவிகளிலொன்றில் நீ சிபியாக இருந்தாய், உன் முன் அன்று சித்ரகனாக வந்தவன் நான்’ அது மூச்செறிந்த ஒலி பாம்பு சீறுவதுபோல ஒலித்தது.
வியாசர் “பீஷ்மா, சிபி அறிந்த உண்மையே ஒவ்வொரு ஷத்ரியனுக்குமுரிய நெறியாகும். அரசன் தன் குருதியால் அனைத்தையும் ஆற்றுவதற்குக் கடமைப்பட்டவன். அந்தக்குருதியால் அவன் அனைத்தையும் ஈடுகட்டிவிடவும் முடியும்” என்றார்.
அப்போது வெளியே சித்ரகர்ணி கால்களைப்பரப்பி அடிவயிற்றைத் தாழ்த்தி நாசியை நீட்டி மிக மெதுவாக தவழ்வதுபோல நகர்ந்து வாசலில் நின்ற வெண்பசுவை அணுகியது. கருவுற்றிருந்த கந்தினி என்ற வெண்பசு ‘இம்முறை நான் அடைக்கலம் கோரியது அவன் காதில் விழவில்லை’ என்று சொல்லிக்கொண்டது.
‘இந்த அறியாச் சுழல்பாதையில் மீண்டும் மீண்டும் நான் உன்னை வேட்டையாடிக் கொண்டிருக்கிறேன். நம்மை வைத்து ஆடுபவர்களுக்கு சலிக்கும்வரை இதை நாம் ஆடியே ஆகவேண்டும்’ என்றது சித்ரகர்ணி. ‘அழு…ஓலமிடு. நான் கர்ஜிக்கிறேன். ஆடத்தொடங்குவோம்’
புயலில் பெருமரம் சரியும் ஒலியுடன் சிம்மம் பசுவின் மேல் பாய்ந்தது. பசு கதறி ஓலமிட அதன் கழுத்தைக்கவ்வி அள்ளித்தூக்கி தன் தோள்மேல் போட்டுக்கொண்டு பாய்ந்து மரப்பட்டை வேலியைத் தாண்டி புதர்களுக்குள் மறைந்தது.
சீடர்கள் “சிங்கம்…சிங்கம் பசுவைப் பிடிக்கிறது…சிங்கம்…ஓடிவாருங்கள்…கல்லை எடுத்து எறி…. தடி! தடி எங்கே? சிங்கம்!” என்று கூட்டமாகக் கூச்சலிட்டபடி ஓடிவந்தனர். தடிகளையும் கற்களையும் அந்தப்புதர்களை நோக்கி வீசினார்கள். வியாசரும் பீஷ்மரும் வெளியே ஓடிவந்தனர்.வெளியே பசு கிடந்த இடத்தில் கொழுத்த ரத்தத்துளிகள் சொட்டிப்பரவிக்கிடந்தன. ரத்தத்தின் பாதை ஒன்று புதர்கள் வரை சென்றிருந்தது.
பீஷ்மர் குனிந்து அந்தப் புழுதியில் இருக்கும் சிங்கத்தின் காலடித்தடங்களைப் பார்த்துவிட்டு “வயதான பெரிய சிங்கம். நகங்கள் மழுங்கியிருக்கின்றன. அதனால் வேட்டையாட முடியவில்லை.ஆகவேதான் வீட்டுப்பசுவை தேடி வந்திருக்கிறது” என்றார். வியாசரின் மாணவனாகிய சுதாமன் அழுகையும் ஆவேசமுமாக “பெற்றதாய் மாதிரி இருந்தாளே… இக்குடிலுக்கு லட்சுமியாக விளங்கினாளே….அவளை தூக்கிக்கொண்டு போய்விட்டதே…” என்றான். இன்னொரு மாணவனாகிய சுதன் குனிந்து கைப்பிடி மண்ணை அள்ளி ஓங்கி வேதமந்திரத்தைச் சொன்னபடி ஆங்காரமாக ‘கருவுற்ற பசுவைக் கொன்ற பாவி…உனக்கு ஏழுபிறவியிலும் நரகம்தான்..’ என்று தீச்சொல் விடுக்கப்போனான்.
வியாசர் புன்னகையுடன் அவனை கைதூக்கித்தடுத்து “நில் சுதனே….பசுவைக்கொல்வதுதான் சிங்கத்தின் தர்மம். ஆகவே சிங்கத்துக்கு பசுவதையின் பாவம் கிடையாது” என்றார். பீஷ்மர் அதைக்கேட்டு கோல் விழுந்த பெருமுரசம் போல அதிர்ந்து திரும்பி வியாசரைப் பார்த்தார். அதன்பின் அவர் ஒரு சொல்லும் பேசவில்லை. வியாசருக்குத் தலைவணங்கியபின் நேராக தன் ரதத்தை நோக்கிச் சென்றார்.
கங்கைக்கரையில் நீத்தார்சடங்குகள் செய்யும் ஹரிதகட்டம் என்னும் புனிதமான படித்துறைக்கு கந்தினியைக் கொண்டு சென்று போட்டு அதன் வயிற்றைக்கிழித்து கருவை எடுத்து உறுமியபடி, தலையை அசைத்தபடி சுவைத்து உண்டது சித்ரகர்ணி. மனமும் வயிறும் நிறைந்தபின் தொங்கும் உதடுகளிலும் மோவாய் மயிர்முட்களிலும் குருதிமணிகள் சிலிர்த்து நிற்க அருகே இருந்த பாறைமேல் ஏறி நின்று வலது முன்காலால் பாறையை ஓங்கி அறைந்து காடுகள் விறைக்க, மலையடுக்குகள் எதிரொலிக்க, கர்ஜனை செய்தது. அப்பால் ஒரு கடம்பமரத்தடியில் யாழுடன் நின்று அதைப் பார்த்து பிரமித்த சூதனின் பாடலுக்குள் புகுந்து அழிவின்மையை அடைந்தது.

ஐந்தாவது மருந்து - ஜெயமோகன்

ஐந்தாவது மருந்து - ஜெயமோகன்

எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடித்தவன் இருக்கும் ஊரில் கொக்கோகோலா கிடைக்கவில்லை. வழியெங்கும் அடர்த்தியான தென்னந்தோப்புகளில் இளநீர்க்குலைகள்தான் தொங்கின. சரியான தாகம். பிரதாப் ‘பேசாமலிரு. போய் நல்ல கிணற்றுத்தண்ணியே சாப்பிடலாம் ‘என்றான்.
ஊருக்கும் ஒரு மலையாள நெடி இருந்தது, பெயரில் தொடங்கி . அச்சன்குளத்துக்குக் கார்கள் வருவதே அதிகமில்லை போலும். மாட்டுவண்டிப் பாதையில் இரு செம்மண் குழிகள் இணைஓடைகள் போல உருவாகியிருந்தன. அடிக்கடி தென்பட்ட குளங்களிலெல்லாம் தாமரைகள். அபூர்வமாக நீலத்தாமரையைக்கூடப் பார்த்தேன்.
‘ஒரு கிராக்கைப்பாக்க இத்தனைதூரம் வரணுமாண்ணு இருந்தது. ஆனா ஊரைப்பாக்கிறப்ப வரவேண்டிய ஊர்தாண்ணு படுது ‘என்றேன்.
‘தளவாய் கிராக்கு மட்டுமில்லை. அவனோட நல்ல கட்டுரைகள் முக்கிய ஜேர்னல்களில வந்திருக்கு ‘ என்றான் பிரதாப் மேனன்.
‘எயிட்ஸுக்கு மருந்தா ? அடுத்த மருத்துவ நோபல் வெற்றியாளனை இந்த கிராமத்தில் பாக்கப் போறமா ? சினிமாக்கதை மாதிரில்லா இருக்கு ?
‘பாக்கலாம் ‘ என்றான் பிரதாப்.
அச்சன் குளம் வசதியான வேளாள வீடுகள் கொண்டது.அழி இறக்கிய இரண்டுதட்டு ஓட்டு வீடுகள் .சிமிண்ட் களமுற்றங்கள். பெரிய வைக்கோல்போர்கள். களங்கள்தோறும் ஏதாவது பொருட்கள் உலர, பெண்கள் காவலிருந்தனர்.
ஆறுமுக பவனம் ஊரிலேயே பெரிய வீடு. களமுற்றத்தில் கார் சென்று நிற்க திண்ணை பெரிதாகியபடியே வந்தது. ஐம்பதுபேர் வரிசையாகப் படுக்கலாம். முற்றத்தில் உளுந்து காயப்போட்டிருந்தது. திண்ணையிலிருந்த கிழவர் கண் மீது கைவைத்துப் பார்த்தார்.
‘வணக்கம் ‘
‘வாங்க தம்பி … உக்காருங்க…ராஜப்பாவ பாக்க வந்தியளா ? ‘ ‘
‘ஆமா. திருவனந்தபுரத்திலேருந்து வாறம் ‘
‘ஒக்காருங்க . பார்வதீ ‘
ஒரு தடித்த அம்மாள் மோர் கொண்டுவந்தாள் .டம்ளர்களிலல்ல, பெரிய செம்பில் . விட்டுக்குடிக்க சிறு பித்தளைப் போணிகள்.
‘நீங்க அவனோட கூட்டுக்கரம்மாரா தம்பி ? ‘
‘ஆமா, அவன்கூட சேந்து படிச்சோம் ‘
‘கோட்டும் சூட்டுமா காரில வாறீங்க. இவனும் நல்லாத்தானே படிச்சான். எப்பிடி இருக்கான் பாருங்க. பண்டாரம் பரதேசி மாதிரி. எப்பிடி இருக்கவேண்டிய பய… ‘
அதற்குள் மாடியிலிருந்து தளவாய் ராஜா இறங்கி வந்தான் . ‘ வாடே வாடே ‘ என்று சிரித்தபடி . நரைத்தாடி. காவிவேட்டி, துண்டு. ‘வாடே மேல போலாம் ‘
‘என்னடே சாமியாராயிட்டியா ? ‘
‘எங்க ? ஆனா ஊரிலே இந்தவேசம் பெரிய செளரியம். கிராக்குத்தனமா இருக்கலாம். கல்யாணம் காட்சிக்குப் போகாட்டி பிரச்சினையில்லை. இதக் கட்டாம கிராமத்தில சுதந்திரமா இருக்க முடியாது. என்ன , அப்பப்ப சிலர் திருநீறு பூசிக்கணும்ணு வருவாவ. சரி வா ‘
அவன் அறை ஒரு பெரிய ஆய்வகமும் ஒரு நூலகமும் குரங்குகளால் இரண்டறக் கலக்கப்பட்டது போல இருந்தது.
‘எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிச்சுட்டேன்னு எழுதியிருந்தே … ‘
‘ஆமா. அதப்பத்தி இன்னும் யாருட்டயும் சொல்லல. உங்க கிட்ட சில விஷயங்கள் பேசணும். பேசாட்டி எனக்கு தல வெடிச்சுடும்போல இருந்தது… அதான் எழுதினேன்…. ‘
‘வெளையாடறியா ? ‘
‘ ஒரு அசல் கண்டுபிடிப்பு இந்தியாவிலே நடக்கவே முடியாதுண்ணு நீ நம்பறதுதான் பிரச்சினை. காரணம் இங்க நவீன மருத்துவம் வெறும் நுகர்பொருளாத்தான் இருக்கு. ஆராய்ச்சியே நடக்கலை. நவீன மருத்துவமே வெள்ளைக்காரனுக்குரியதுண்ணு நாம நம்பறோம் .. ‘
‘அதான் உண்மை ‘
‘ஆனா நமக்குண்ணு அதைவிட பழசான ஒரு மருத்துவ மரபு இருக்கு.. உதாரணமா சித்த மருத்துவம்… ‘
‘இருக்கு. ஆனா இப்ப சொன்னியெ அதான் சரி. அது பழசு. அதில ஆராய்ச்சியே நடக்கலை. அறிவியல் ரீதியான அணுகுமுறையே கெடையாது. எல்லாருக்கும் பொதுவான எந்த நிரூபணமுறையும் இல்லை. முக்காப்பங்கு வெறும் மோசடி . அதிலயும் இண்ணைக்கு சித்த மருத்துவம்ங்கிறது ஸ்டாராய்டுகளால ஆடற ஆட்டம் . ஏகப்பட்ட உலோகங்கள் வேற . பாதி மருந்துகள் சிறுநீரகத்த சீரழிச்சுடும். ‘என்றான் பிரதாப்
‘நான் மறுக்கல்லை. இப்ப அது என் வேலை இல்லை. இண்ணைக்கு நீ பாக்கிற சித்த மருத்துவம் உண்மைல அதிக பட்சம் பதினாறாம் நூற்றாண்டிலே உண்டாகி வந்தது. ஆனா அது உண்மைல குமரிக்கண்டத்தோட காலம் முதல் இருந்துட்டு வார ஒரு வைத்திய மரபு . உலகத்திலேயே பழைய மரபு இது. அந்தக்காலத்த வச்சு பாத்தா உலகத்திலேயே முன்னேறிய மரபும் இதுதான். ஆனா படிப்படியா அது அழிஞ்சுட்டு வந்தது .ஏன்னா வரலாற்ற எடுத்துப் பார்த்தா ஒண்ணு தெரியும், தமிழ் நாகரீகம் அழிய ஆரம்பிச்சபிறகுள்ள காலம்தான் நம் கவனத்துக்கே வந்திருக்கு. தொல்காப்பியமே கூட அழிஞ்சுபோன ஏராளமான நூல்களோட சாரத்தை சுருக்கி எதிர்காலத்துக்காக சேத்து வச்ச நூல்தான். எல்லாப் பாட்டும் ‘என்மனார் புலவர் ‘னுதான் முடியுது. தமிழ் வைத்தியமுறையும் அழிய ஆரம்பிச்ச காலம்தான் நாம அறியக்கூடிய தொல்பழங்காலம். அதுக்கு முன்னால பல ஆயிரம் நூல்கள் இருந்திருக்கு. ‘
தளவாய் தொடர்ந்தான் ‘ ‘ மழை விட்ட பிறகு தூவானம் மாதிரி சில ஏட்டுச்சுவடிகள் கிடைக்க அதை வச்சு அந்தக்காலத்தில உருவாக்கின ஒரு மருத்துவமுறைதான் சித்த மருத்துவம். நாம இப்ப பாக்கிற சித்த வைத்தியம் அத நவீன மருத்துவ முறைப்படி பதினெட்டாம் நூற்றாண்டில சிலர் மாற்றி அமைச்சது…. ‘
‘அரைகுறை அறிவு அறியாமையவிட ஆபத்தானது… ‘
‘ஆமா. கண்டிப்பா. எனக்கு தற்செயலா எங்க தாத்தாவொட அண்ணா வச்சிருந்த சுவடிகள் சிலது மச்சிலே கிடைச்சது. பிராமி லிபியிலே எழுதின சுவடிகள் கூட சிலது அதிலே இருந்தது. அதப் படிக்க ஆரம்பிச்ச பிறகுதான் எனக்கு கிறுக்கு பிடிச்சுதூண்ணு அம்மை சொல்வா.அது சரிதான் . ஒரு நூலுக்கும் இன்னொரு நூலுக்கும் நடுவிலே கிடைக்காம போன ஆயிரம் நூல் இருக்கு. அது என் கற்பனையத் தூண்டிவிடுது . விடவே முடியலை. தூக்கமே இல்லைண்ணு வச்சுக்கோ ‘
‘நீ உன் வாழ்க்கையை வீணடிக்கிறே. அவ்வளவுதான் சொல்வேன் ‘என்றான் பிரதாப்.
‘எல்லாருமே ஏதாவது ஒரு விதத்திலே வீணடிச்சுட்டுதான் இருக்கோம்ங்கிறது என் எண்ணம் . ‘என்று தளவாய் சிரித்தான். ‘இண்ணைக்குள்ள சித்த வைத்தியத்தொபொட  முக்கியப் பிரச்சினை அது அலோப்பதிமுறைகளை மறைமுகமா ஏத்துக்கிட்டு அதுக்கேத்தாப்பிலே மாத்தப்பட்டிருங்கிறதுதான். இரண்டு முறைகளுக்கும் அடிப்படையே வேற. நேர் மாறுண்ணு கூட சொல்லலாம். அலோப்பதி நோய்க்குக் காரணத்தை மனித உடலுக்கு வெளியே தேடுது. கிருமிகள் , பூச்சிகள் இந்தமாதிரி. சித்த மருத்துவத்தப் பொறுத்தவரை நோய்ங்கிறது மனித உடலிலேயே இருக்கு. மனித உடல் அதோட சமநிலையை இழக்கிறதுதான் நோய். அதாவது நோய்க்கு எதிரா உடலை தயாரிக்கிறதுதான் சித்த மருத்துவம், கிருமியக் கொல்றது இல்லை. நோயில்லாதபடி வாழ்க்கையை அமைச்சுக்கறதப்பத்தித்தான் அது பேசுது… ‘
‘நான் சித்த வைத்தியத்த இப்ப நியாயப்படுத்த மாட்டேன் ‘ என்று அவன் தொடர்ந்தான். ‘ இண்ணைக்கு நவீனமருத்துவத்தில்தான் புது ஆராய்ச்சிகள் இருக்கு. மத்த அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தறதும் அங்கதான் அதிகம். உலகம் முழுக்க பொதுவான நிரூபணமுறைகள் அவங்களுக்கு இருக்கு . ஆனா ஆராய்ச்சிக்கு கண்டிப்பா சித்த வைத்தியம் மாதிரியான மாற்று வழிகளை பயன்படுத்திப் பாக்கணும் . நான் செஞ்சது அதுதான் ‘
‘உன் மருந்து சித்த மருந்தா ? ‘
‘அப்டி சொல்ல முடியாது. என் கொள்கை அங்கேருந்து முளைச்சது, அவ்வளவுதான் ‘ என்றான் தளவாய்.
‘எய்ட்ஸுக்கு மருந்துண்ணு இதுவரை அம்பது சித்தவைத்தியனுங்க அறிவிச்சாச்சு .எல்லாமே போலி ‘ என்றான் பிரதாப்.
‘அவங்கள்லாம் பண்ணிய தப்பு ஒண்ணுதான். சித்த வைத்தியச் சுவடிகளிலே எய்ட்ஸ் மாதிரியான ஒரு நோயோட இலக்கணம் இருக்கு. அதுக்கான மருந்தை இவங்க அப்டியே சொல்றாங்க. அதெல்லாம் பிரயோசனப் படறதில்லை ‘
‘ஏன் ? ‘
‘ஏன்னா நோய் அதுதான். கிருமி வேற ‘ என்றான் தளவாய் . ‘பரிணாமக் கொள்கைப்படி ஒவ்வொரு உயிரும் அது சார்ந்து வாழக்கூடிய சூழலுக்கு ஏற்ப மாறிட்டே இருக்கு. இப்ப மனித உடல் ரொம்ப மாறிட்டது. பலவகையான மருந்துகளை நாம பயன்படுத்தறோம். அதுக்கேற்ப அந்த வைரஸ் தன் மொத்த அமைப்பையும் மாத்தி இன்னொண்ணா மாறிட்டே இருக்கு . இப்ப உள்ள ஹெச்.ஐ .வி கிருமி அப்டி புதிசா உருவாகி வந்தது… அதோட மரபணு அமைப்பே வேற . அதுக்கு புது மருந்துதான் வேணும். சித்த மருத்துவத்தில் தாவர மருந்துக்களை அஜீவம்னு சொல்றாங்க. பறவைகள் மிருகங்களிலேருந்து எடுக்கிற மருந்துக்கள் ஜீவம் . மத்த ரசாயனங்களும் உப்புக்களும் உலோகங்களும் ரசாயனம் . மூணுமருந்துமே இதுக்குப் பயன்படாது… ‘
‘குழப்பாம சொல்லு. உன்னோட மருந்தோட கொள்கை என்ன ? ‘
‘ அதை ஒரு கதையாத்தான் சொல்லணும். ‘ என்று அவன் ஆரம்பித்தான் ‘ தென்காசீல ஒரு ராஜ குடும்பம் இருந்தது கேட்டிருக்கியா ? பாண்டிய வம்சத்தோட ஒரு கிளை அது . அவங்க குடும்பமே மர்மமான ஒரு நோயால அழிஞ்சுபோச்சுண்ணு சரித்திரத்தகவல் இருக்கு . இது நடந்து ஐநூறு வருஷம் இருக்கும் . அப்ப அந்த நோயால கிட்டத்தட்ட அம்பதாயிரம்பேர் செத்திருக்காங்க. அண்ணைக்கு இது பெரிய எண்ணிக்கை இல்ல . அம்மை நோயால லட்சக்கணக்கானபேர் செத்திட்டிருந்த காலம் அது . தென்காசி ராஜகுடும்பம் மட்டுமில்ல அவங்களுக்கு சிகிழ்ச்சை செய்த வைத்தியங்க எல்லாருமே செத்துட்டாங்க. அவங்களில ஒரு வைத்தியர் எழுதிவச்ச நோய்க்குறிப்புகள் அதிருஷ்டவசமா கிடைச்சிருக்கு . அந்த சுவடிகள் எங்க தாத்தா கைக்கு வந்து இப்ப என் கையிலே இருக்கு. நோயின் லட்சணங்களைக் கேட்டா அசந்துடுவீங்க. காரணமில்லாத காய்ச்சல் . எடை குறையிறது. நோய் எதிப்புசக்தி இல்லாம ஆகி காசம் முதலான நோய்கள் தாக்கி மெல்லமெல்ல உசிர் போயிடுது . ‘
‘எய்ட்ஸா ? உண்மையான ஆதாரமா இது ? ‘ என்றான் பிரதாப் பரபரப்புடன் .
‘அசல் சுவடியே இருக்கு . நீ பரிசோதனை செய்யலாம் ‘ என்றான் தளவாய் ‘ ராஜகுடும்பத்திலே ஒரு இளவரசனுக்கு நோய் வந்திட்டது. அவன் மனம் வெறுத்து குற்றாலம் காட்டுக்குள்ளார போனான். தற்கொலை செய்றதுக்காகத்தான். அங்க அதிகாலைல தேனருவீல குளிச்சிட்டிருந்த ஒரு சித்தரைக் கண்டான். காலில விழுந்து அவன் அழுதப்ப மனமிரங்கிய சித்தர் அவனோட ஊருக்கு வந்தார்.அவர் பேர் மாம்பழச்சித்தர். பெரும்பாலும் மாம்பழத்தையே உணவா சாப்பிடுவார்ணு கதை. அவர் முதலிலே நோயாளிகளை ஆராய்ச்சி பண்ணினார். அப்ப இருந்த எந்த மருந்துமே அந்த நோயை ஒண்ணும் பண்ணமுடியல்லை .அவரால நோயை அடையாளம்காணவே முடியலை. வாதம், பித்தம் ,கபம் அப்டாங்கிற மூணு ஆதார சக்திகளிலே உண்டாகிற சமநிலைக் குலைவினாலேதான் நோய்கள் வருதுங்கிறதுதான் இந்திய வைத்தியமுறைகளிலே பொதுவா இருக்கிற சித்தாந்தம். புராதன தரிசனமரபான சாங்கியத்திலேருந்து வந்த பார்வை அது. ஆனா இந்த மர்ம நோய் கண்ட நோயாளிகளிலே சிலருக்கு வாதம் கோபிச்சிட்டிருந்தது . சிலருக்கு பித்தம் தாறுமாறா இருந்தது. சிலருக்கு கபம் உச்சம் . என்ன காரணம்னே அவரால சொல்லமுடியல. மூன்று ஆதார சக்திகளையும் இயக்கக் கூடியது உடலில் இருக்ககூடிய மூலாதார அக்னி. அந்த தீ வலுவிழந்து அணையிறதுதான் இந்த நோய் என்று கண்டுபிடிச்சார். சித்த வைத்தியத்தோட மொழியிலே இருக்கே ஒழிய அந்த கணிப்பு சரிதான். ‘
‘ஆமாம் ‘என்றான் பிரதாப். எனக்கு அவன் அப்படி சொன்னது ஆச்சரியமாக இருந்தது.
‘எப்படி ? ‘ என்றேன்
‘நோய் எதிர்ப்பு சக்தீங்கிறது என்ன ? உயிர் வாழணும்னு உயிர்களுக்கு இருக்கிற அடிப்படையான துடிப்பு. செல்களிலே அதுக்கான இச்சை இருக்கு.அது இல்லண்ணா உயிர்சக்தி அழிஞ்சுபோயிட்டுதுண்ணுதானே அர்த்தம் ? ‘ என்றான் பிரதாப்
‘ சித்தர் பழைய ஆதாரங்களைத் தேடிப்பிடிச்சு பரிசீலிச்சார். அப்ப அந்த ஆதாரங்களெல்லாம் சித்தர்கள்ங்கிற நாடோடி அறிஞர்கள் மத்தியிலே வாய்மொழி மரபா இருந்திருக்கணும் . அப்ப அவருக்கு ஒரு விஷயம் தெரிஞ்சது ஆயிரம் வருஷம் முன்னாடி இதேநோய் பாண்டிய ராஜகுடும்பத்த தாக்கியிருக்கு. அப்ப போகர் இருந்தார். இவர் எந்த போகர், எத்தனையாம் போகர்ணு தெரியலை. ஆனா அவர் பேரும் போகர். அவர் ஒரு மருந்து கண்டுபிடிச்சு நோயை விரட்டினார் … கருங்குரங்கோட ரத்தம் ,சிறுநீர் ரெண்டயும் கலந்து அவர் ஒரு மருந்து செஞ்சார். அதுதான் சித்த வைத்தியத்தில முதல் ஜீவ மருந்து. அதுவரைக்கும் சித்தமருத்துவம் அஜீவமருந்துக்களை மட்டும்தான் பயன்படுத்திட்டிருந்தது. அது ஒரு பெரிய புரட்சியோட தொடக்கம்… ‘
‘ அந்த மருந்து இப்ப இருக்கா ? ‘ என்றேன்
‘இப்ப சித்தமருத்துவம் ஏராளமான ஜீவ மருந்துக்களைப் பயன்படுத்துது. சிட்டுக்குருவி லேகியம் உங்களுக்கெல்லாம் நல்லா தெரிஞ்சதுதான். ஆனா ஜீவ மருந்துக்களால இந்த நோயை ஒண்ணுமே செய்ய முடியல்ல. அதனாலே மாம்பழச்சித்தர் ரெண்டு வருஷம் ஆராய்ச்சி செய்து ஒரு மருந்து கண்டுபிடிச்சார். ஈயத்தையும் தங்கத்தையும் கலந்து ஒரு புது மருந்துக் கலவை . சித்த மருத்துவத்திலே ரசாயனங்களை பயன்படுத்தறது அதுதான் முதல் தடவை. இது இரண்டாவது பெரும் புரட்சி. ‘
தளவாய் தொடர்ந்தான். ‘உலோகங்களையும் ரசாயனங்களையும் சித்த மருத்துவத்தில் பஸ்பம் பண்ணியும் , ஸ்புடம் போட்டும் ,பாஷாணமா ஆக்கியும் பல வகையில இப்ப பயன்படுத்தறாங்க. அதுக்குத் தொடக்கம் மாம்பழச் சித்தர்தான். அந்த நோய் அவர் செய்ஞ்ச பஞ்ச பாஷாணத்தாலே குணமாயிட்டது. அவரோட சீடர்கள் அந்த ரசாயனவைத்தியத்தை சித்தவைத்தியத்துக்குள்ள தனி மரபா வளர்த்துப் பரப்பினாங்க ‘
‘இப்ப அந்த மருந்துகளினால பயன் இருக்கா ? ‘ என்றேன்
‘பலவிதமான நோய்களுக்கு அந்த மருந்துக்கள் இப்பவும் பயன்படுது. ஆனா எய்ட்ஸுக்கு அதனால பயன் இல்லை. ‘
‘ஏன் ? ‘
‘நவீன மருத்துவம் நோயைக் கிருமிகளோட தாக்குதலா பாக்குது. அந்தக் கோணத்திலே யோசிச்சுப்பாருங்க ‘
‘அப்ப எய்ட்ஸ் கிருமி சரித்திர ஆரம்ப காலம் முதல் இருக்கா ? ‘
‘இருந்திருக்கணும். அது மனுஷ உடலிலே சாதாரணமா இருக்கக் கூடிய ஏதோ வைரஸ் தான் . இப்பக்கூட அதன் வேறு வகை வடிவம் ஆப்ரிக்கக் குரங்குகளிலே இருக்கிறதா கண்டுபிடிச்சிருக்காங்க . அந்தக் குரங்குகளை இந்த வைரஸ் ஒண்ணும் செய்யறதில்லை. ஆப்ரிக்காவிலே தான் மனிதன் குரங்குக்கு சமானமான ஏதோ உயிரிலேருந்து பரிணாமம் அடைஞ்சு வந்தான்னு சொல்றாங்க. அப்ப இந்த வைரஸ் அப்பவே நம்ம உடம்போட சேந்து இருந்திட்டிருக்கு. அத நம் உடம்பிலேருந்து பிரிக்க முடியாது. அதன் முதல் தாக்குதல் எப்ப ?ஏன் அது நோயா ஆச்சு ? நான் நினைக்கிறேன், எப்ப மனிதன் கலச்சாரம் அடைஞ்சானோ , எப்ப குரங்கு அல்லாம ஆனானோ அப்பத்தான். சமைச்சு சாப்பிட ஆரம்பிச்சவா ? சீசன் பாக்காம உடலுறவு கொள்ள ஆரம்பிச்சவா ? குடும்பமா ஆனப்பவா ? தெரியலை. ஆனா குரங்குகளுக்கு இந்த வைரஸால அபாயமே இல்ல. அது தாக்குறது மனுஷனைத்தான் ‘
‘இல்லாட்டி மனுஷக் கலாச்சாரத்தைத்தான் ‘ என்றான் பிரதாப்
‘ஆமா. மனுஷக் கலாச்சாரம் இந்த வைரஸை எதுத்துப் போராடிட்டிருக்கு . மனுஷன் முதலில் பச்சிலைகள் மூலம் மருத்துவம் செய்ய ஆரம்பிச்சப்ப இந்த வைரஸ் பலமிழந்தது. ஆனா அது மெதுவா தன் உயிரியல் அடிப்படைகளை மாத்தி அமைச்சுக்கிட்டு மறுபடி தாக்கியிருக்கு. அப்பத்தான் போகர் ஜீவ மருந்துக்களைக் கண்டுபிடிச்சார் . அது இந்த வைரஸைக் கட்டுப்படுத்திட்டது. ஆனா மெல்ல ஜீவமருந்துக்களுக்கும் எதிரா அது தன்னை மாத்திக்கிட்டது. அப்பத்தான் மாம்பழச்சித்தர் ரசாயன மருந்தைக் கண்டுபிடிச்சார். அந்தமருந்து இந்த வைரஸைக் கட்டுப்படுத்திட்டது. அதன் பிறகு ரசாயன மருந்துக்களைத் தாண்டி இப்ப புதுவடிவிலே பலமடங்கு சக்தியோட திரும்ப வந்திருக்கு. இப்ப உள்ள எந்த மருந்தும் அதைக் கட்டுப்படுத்தாது… ‘
‘ஒரு நிமிஷம் தளவாய். நீ எல்லாத்தயும் சித்த வைத்தியத்தோட நிறுத்திட்டே. இது உலகளாவிய ஒரு பிரச்சினை… ‘என்றேன்
‘இதோபார் , உலகத்திலேயே பழைய வைத்திய முறை சித்த வைத்தியம்தான். இங்கேயிருந்துதான் இந்த மருந்துக்கள் சீனாவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் அரேபியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் போயிருக்கு. அந்தநாட்டு மக்கள் எல்லாருமே தமிழ்நாட்டைத் தேடிவந்த காலம் ஐநூறு வருஷம் முன்னாடிகூட இருந்திருக்கு. காலகட்டத்த வச்சு ஒப்பிட்டுப்பாத்தா சித்தவைத்தியம் தாத்தாமாதிரி. மத்த வைத்தியமுறைகள் பேரப்பிள்ளைகள் இல்லாட்டி கொள்ளுப்பேரனுங்க . எல்லாமே இங்கேருந்து போய் வளந்ததுதான். அப்பிடி இல்லைண்ணாக்கூட ஒண்ணு பாத்தாதெரியும் மருத்துவமுறைகள் அதிசீக்கிரமா உலகம் முழுக்க பரவிடுது. ஏறத்தாழ எல்லா இடத்திலேயும் புது மருந்துகள் ஒரே காலத்திலேதான் உபயோகத்துக்கு வருது… ‘ தளவாய் தொடர்ந்தான் ‘இண்ணைக்கு நவீன மருத்துவம் பயன்படுத்தற மருந்துகள்கூட மூணு வகைதான். பென்சிலின் மாதிரி தாவர மருந்துக்கள்லாம் அஜீவம். வாக்சின்கள் எல்லாம் ஜீவம். மத்ததெல்லாம் ரசாயனங்கள் . மூணுமே எய்ட்ஸை குணப்படுத்தாது. ஏன்னா இந்த வைரஸ் மூணையுமே தாண்டிப்போகக் கூடிய உயிரியல் அமைப்பை வளத்து எடுத்திட்டிருக்கு… ‘
‘அப்ப ? ‘
‘நாலாவது மருந்தைத்தான் பரிசோதனை பண்ணிப் பாக்கணும். ‘என்றான் தளவாய்.
‘என்ன அது ? ‘
‘யோசிச்சுப் பார். பூமியிலே என்னென்ன இருக்கு ? தாவரம், பிற உயிர்கள், ரசாயனங்கள் . அப்புறம் ? ஆமா, கதிர்கள்…. பல நூறு நுண்கதிர்கள்…இப்பவே நாம கதிர்வீச்சை கான்சருக்கெல்லாம் மருந்தா பயன்படுத்தறோம்.. ‘
‘நீ என்ன பண்ணினே ? கதிர் வீச்சினாலே லாபத்த விட நஷ்டம்தான் அதிகம். அதைக் கட்டுப்படுத்தவே முடியாது… ‘ என்றான் பிரதாப்
‘ஏற்கனவே கதிரியக்கம் சித்த வைத்தியத்திலே இருக்கும் . சித்த வைத்தியர்கள் ரசக்கட்டு அப்டான்னு ஒரு உத்தி இருக்கு. பாதரசத்த திடமான கட்டியா ஆக்கறாங்க. அதாவது அதன் மூலக்கூறு அமைப்பையே மாத்திடறாங்க. அது மென்மையான கதிரியக்கத்தை உருவாக்குது. நான் அந்த வழிகளைப் பயன்படுத்தி பழைய ஜீவ, அஜீவ , ரசாயன மருந்துகளிலே மென்மையான கதிர்வீச்சை செலுத்தினேன். இந்த மருந்து கிடைச்சது ‘ என்று அவன் ஒரு சீசாவைக் காட்டினான். ‘கட்டப்பட்ட ரசத்தின் அடியில் ஆறுமாசம் வைச்ச ஒரு ஜீவரசாயனக் கலவை இது . இது உடம்பிலே உள்ள செல்களுக்கு மிக மிகக் குறைவான கதிரியக்க சக்தியைக் குடுத்திடுது . கதிரியக்கத்துக்கான சக்தியை அது நம்ம உடல்வெப்பத்திலேருந்து எடுத்துக்கிடும். அந்த கதிரியக்கம் நம்ம உடல்செல்களை பாதிக்காது. பாக்டீரியாவைக்கூட ஒண்ணும் செய்யாது. வைரஸ்களைமட்டும்தான் அழிக்கும்… ‘
‘இதால பயன் இருக்கா ? ‘
‘காட்டறேன். ஓமனக்குட்டியையும் தாமஸையும் ஞாபகமிருக்கா ? ‘ ‘
‘ஆமா. எய்ட்ஸ் நோயாளிகள். என் ஆஸ்பத்திரியிலேருந்து விட்டுட்டு போனவங்க ‘
‘இங்கதான் இருக்காங்க ‘ என்ற தளவாய் கீழே எட்டிப்பார்த்தான். ‘ வரச்சொல்லியிருந்தேன். வந்திருக்காங்க . ‘ சிறு சாளரம் வழியாக எட்டிப்பார்த்து ‘ மேலே வாங்க ‘
மட்கிய குச்சி போல படுக்கையில் எழ முடியாமல் கிடந்த இருவரும் ஆரோக்கியமான உடலுடன் சிரித்தபடி வந்து நின்றதைக் கண்டு பிரதாப் பிரமித்துவிட்டான்.
‘எப்படி இருக்கே ஓமனா ? ‘
‘நல்லா இருக்கேன் சார். இங்க இன்னும் ஒரு மாசம் இருந்தா போயிடலாம்னு சார் சொல்றார் ‘
:
‘இவங்களை நீ நல்லா சோதனை பண்ணிப் பாக்கலாம்… இப்ப இவங்க கிட்டே எய்ட்ஸ் வைரஸ் இல்லை ‘ என்றான் தளவாய்.
பிரதாப் அவர்களையே வெறித்துப் பார்த்தபடி வெகுநேரம் சொல்லிழந்து அமர்ந்திருந்தான். சட்டென்று எழுந்து தளவாயை ஆரத்தழுவிக் கொண்டான். ‘டேய்… பித்துக்குளி மாதிரி இருந்துட்டு.. டேய்.. நீ பெரிய ஆளுடா… .. ‘
‘நம்ம நாட்டுக்கு அடுத்த நோபல் பரிசுய்யா! ‘என்றபடி நானும் தளவாயைக் கட்டிக் கோண்டேன்.
‘ஆனா இந்தமருந்தோட மறுபக்கம் ஒண்ணு இருக்கு… ‘ என்றான் தளவாய் விடுவித்தபடி .
‘என்ன ? ‘
‘இந்த வைரஸ் முதலிலே தாக்கிய பிறகு பல ஆயிரம் வருஷம் தாவர மருந்துக்களோட கட்டுக்குள்ள இருந்திருக்கு. ஆனா ஜீவ மருந்து கண்டுபிடிச்ச பிறகு ஆயிரம் வருஷத்திலே மறுபடி தாக்கியிருக்கு. உலோகரசாயன மருந்துக்களை ஐநூறு வருஷங்களிலே தாண்டி வந்திருக்கு. அதாவது அதன் பரிணாமவேகம் அதிகமாயிட்டே இருக்கு. இப்ப மனுஷங்க மருந்துக்களை உபயோகிக்கிறது ரொம்ப அதிகம். மனுஷங்க உலகம் முழுக்க சுத்திட்டே இருக்காங்க. அப்ப அது சீக்கிரமா அடுத்த கட்ட பரிணாமவளர்ச்சியை அடைஞ்சுடும். அதாவது அடுத்த தாக்குதல் நூறுவருஷத்துக்குள்ள இருக்கலாம்… ‘
என் மனம் சில்லிட்டது
‘அப்ப கதிரியக்க மருந்தையும் இந்த வைரஸ் தாண்டிடும். பூமியிலே வேற என்ன இருக்கு மருந்தாக ? எதுவுமில்லை! அஞ்சாவது மருந்தை மனிதன் கண்டுபிடிப்பான்னு என்ன உத்தரவாதம் இருக்கு ? இந்த வைரஸ் அப்ப மனிதகுலத்தையே அழிச்சிடுமா ? ‘என்றான் தளவாய்.
‘என்னடா உளறுறே ? ‘
‘இல்லடா . தத்துவார்த்தமா யோசிச்சுப்பாரு. மனுஷ இனமே இயற்கையை எதுத்து போராடி வளந்ததுதான். நம்ம கலாச்சாரமே இயற்கைக்கு எதிரானதுதான். காடுகளை அழிச்சிட்டோம். தண்ணீரை வீணடிச்சிட்டோம். இப்ப இயற்கை நம்மைத் திருப்பி அடிக்குதா என்ன ? நம்ம இடுப்பில கயிறு கட்டி மறுநுனியை கைல பிடிச்சுட்டு போறவரைக்கும் போ அப்டாண்ணு விட்டிருக்கா ? கயிறு முடிஞ்சதும் என்ன ஆகும் ? ‘
‘என்னடா ஆச்சு உனக்கு ? அற்புதமான மருந்தைக் கண்டுபிடிச்சுட்டு… ‘
‘இல்லடா . இப்ப என் மருந்து பலலட்சம் பேரைக் காப்பாத்தும் . ஆனா இதே மருந்துதான் நூறு வருஷம் கழிச்சு பலகோடி பேர் சாகவும் காரணமா அமையும். மாம்பழச்சித்தர் கண்டுபிடிச்ச மருந்துதான் இண்ணைக்குள்ள எயிட்ஸ் கிருமிய உருவாக்கிச்சு. நான் எந்த மாதிரி பயங்கரமான கிருமிய உருவாக்கப் போறேன் ? ‘
நாங்களும் கிட்டத்தட்ட வாயடைந்து போனோம்.
‘மருந்து கண்டுபிடிக்கிறதுக்குப் பதில் நாம ஏன் இயற்கையோட சமரசம் பண்ணிக்க கூடாது ? இந்த எய்ட்ஸோட ஒத்துப்போய் வாழ முயற்சி செய்யலாமே ? இயற்கையான முறையில் இதைத் தவிர்த்துட்டு வாழலாமே ? இந்த வைரஸ் நம்மை விடாது. ஏதோ வடிவிலே நம்மகூட இருக்கும் . அதை எதுக்க எதுக்க அது விசுவரூபம்தான் எடுக்குது ! ஏன் அதை அப்டியே விட்டுடக் கூடாது ? அது நம்மைக் கட்டுப்படுத்தற ஒரு இயற்கைச் சக்தீண்ணு ஏன் நினைக்கக் கூடாது ? நமக்கும் ஏதாவது ஒரு கட்டுப்பாடு வேணும். இப்ப போற போக்கிலே நாம் சீக்கிரமே பூமியையும் அழிச்சு நாமும் அழிஞ்சிடுவோம்… ‘ தளவாய் சொன்னான். ‘ ஐந்தாவது மருந்து ஒண்ணு இருக்குண்ணா அது நிரந்தரமான மருந்தாத்தான் இருக்க முடியும்… ‘
‘நீ இந்தமருந்தை இப்ப வெளியிடு .மத்த பிரச்சினைகளை மெல்ல பேசிக்கலாம் ‘என்றான் பிரதாப்
‘இல்லடா. நான் நூறுவருஷம் கழிச்சு மனுஷகுலமே அழியக் காரணமா இருக்க விரும்பலை. இந்த விஷயத்துக்கு ஒரு தெளிவான விடை கிடைக்காமல் நான் இந்த மருந்தை வெளியிட மாட்டேன். ‘ என்றான் தளவாய்.
எங்களுக்கும் பதில் கிடைக்கவில்லை. வருத்தமாகவே கிளம்பிவந்தோம்.
சோலைச்சித்தரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தளவாயைத்தான் காலப்போக்கில் அப்படி அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர் வீட்டைவிட்டுப் பக்கத்து சோலைக்குக் குடிவந்து இப்போது எட்டு வருடங்கள் ஆகின்றன.
****