இவர்கள் இருவரும் இவ்வாறாக, உச்சினி மாநகரை ஆளும் மன்னன் விக்கிரமாதித்தன் வனசஞ்சாரம் செய்பவன் பாடலிபுரத்தை அடைந்தான்.
அன்றிரவு ஒரு பூஞ்சோலையில் தங்கினான். அப்போது ஒரு கந்துருவப்பெண் கல்லும் இரும்பும் நெக்குருக யாழ் வாசிக்கக் கேட்டான்.
இசையில் மயங்கினான். நெஞ்சுருக யாழ்மீட்டி இசையமுதம் பொழியும் அம்மாதரசைச் சந்திக்க எண்ணி அவளிருக்கும் இடத்தைக் கண்டறிந்து
அவளை அணுகினான்.
'அணங்கே! நீ யார்? உன் ஊர் யாது? உன் பெயர் என்ன? இரவுநேரத்தில் நீ இங்கு வரக்காரணம் யாது?' என்று வினவினான். அதற்கு அவள்,
'என் பெயர் தேவதத்தை, என் கணவன் பெயர் புட்பதந்தன். இறைவன் இறைவிக்குச் சொன்ன மறைபொருளை என் கணவர் மறைந்திருந்து
கேட்டு வெளிபடுத்தினார். அதற்குத் துணையாக நான் இருந்தேன். அதனால் நாங்களிருவரும் இறைவன் சாபத்திற்கு ஆளானோம்.
சாபத்தின் காரணமாய் என் கணவர் காட்டில் வேதாளமாய்ப் பேய்களுடன் ஒரு பெரிய முருங்கைமரத்தில் வசிக்கின்றார். நான் பகலில்
மானாகவும் இரவில் சுயவுருப்பெற்று யாழ் மீட்டிக் கொண்டும் திரிகின்றேன். நானும் என் கணவரும், விக்கிரமாதித்த மன்னன் உதவியால்,
நேருக்கு நேர் சந்திக்கும் போது எங்கள் சாபம் நீங்கும்' என்று கூறினாள்.
இதைக் கேட்ட விக்கிரமாதித்த மன்னன், 'நங்கையே இனி உன் கவலையை விடு. நீ எதிர்பார்க்கும் விக்கிரமாதித்த மன்னன் நானே. உன்
கணவன் இருக்கும் இடத்தை அறிந்து அவனை அழைத்து வந்து அவனும் நீயும் சந்திக்குமாறு செய்து நீங்கள் சாபவிமோசனம் பெறும்படி
செய்வேன்' என்று உறுதி கூறி அவ்விடத்தை விட்டு அகன்று பாடலிபுரத்தை விட்டு வேதாளம் இருந்த காட்டை அடைந்தான்.