தமிழில் தேவாங்க புராணம் இயற்றப்பட்ட வரலாறு:-
சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட தேவாங்க
புராணத்தை, தமிழில் மொழிபெயர்த்து எழுதப்பட்ட காலம் எது? எங்கே? எப்படி?
யாரால்? என்று கேள்வி எழுப்பினால் அதற்குரிய விடை நமக்கு தெளிவாகவே
கிட்டும்.மதுரைக்கு அருகேயுள்ள தேனி மாவட்டம் போடி நாயக்னூரில் வசித்து வந்த தேவாங்க குலத்தினர், தம் குல நூலாகிய தேவாங்க புராணத்தினை சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்திட விரும்பினர்.
தங்களுடைய விருப்பத்தினை போடிநாயக்கனூர் ஜமீன்தாரராகிய திருவங்காரு திருமலைபோடய காமராசய பாண்டிய நாயக்க துரையிடம் தெரிவித்தனர்.
ஜமீன்தாரரும் தேவாங்க குல மக்களின் வேண்டுகோளினை ஏற்றார். அதன்படி, கோவை தேவாங்க குல குரு ஸ்ரீஸ்ரீசதாசிவானந்த தேசிக சுவாமிகளும், கலப்பதி ஸ்ரீஸ்ரீதொட்டய்ய தேசிகரும் சமஸ்கிருதத்தில் உள்ள தேவாங்க புராணத்தைத் தமிழில் மொழிபெயர்த்துத் தர வேண்டும் என்று ஜமீன்தார் வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறே அவ்விருவரும் சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்துத் தந்தனர்.
குலவுசெழுங் கோயமுத்தூர்
வளர்நிதிதே வாங்கர்குல குருவாய் வந்த
நலநளின கமுகசதா சிவானந்த தேசிகனு நாளுமின்ப
மலியுநகர்க் கலப்பதிவாழ் மூக்கய
வேள் செல்வன் மனோன்மணி பொற் பாத
சலசமலர் துதியோகி தொட்டயதே
சிகனுமுன்னூற் றன்மை காட்ட
மொழி பெயர்க்கப்பட்ட தேவாங்க புராணத்தை, பழனியில் வசித்த முத்தமிழ் பாகுபாட்டினை உணர்ந்த மாம்பழக் கவிச்சிங்க நாவலர் தமிழில் கவியியற்ற, போடி நாயக்கனூர் ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
துதிபெருகப் பாடியதைக்காசை
வளம் மதியிலருள் சுரந்து வாழு
முதுமறை வாழ்த்திய சவுடநாயகி
பொற்கோவிலின் முன்மண்டபத்தின் மன்னோ
காசை நகர் புரக்கும்வங்கார்
திருமலைப் போடயதுரைகா ரியவல்லோர்கள்
பேசுதமிழ்ப் பாவலர்தே
வாங்கர்பத்தா யிரங்குலத்தோர் பெரியோர் யாரு
நேசமிகச் சூழ்சபையி ரலங்கேற்றி
னான்மதுர நிறைந்த கல்வி
வாசமுயர் பழனிவளம் பதிவளர்
மாம்பழக் கவிஞன் மதிவல்லோனே
என்று இப்புராணத்தின் கடைசியில் பாடப்பட்டுள்ள சாற்றுக் கவி தெரிவிக்கிறது. இங்கு காசை என்பது இன்றைய போடி நகரைக் குறிக்கும். அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தத்தில் பாடப்பட்ட இக்கவியினை சாமுண்டியாச்சாரியார் எழுதியுள்ளார். இதில் பாடப்பட்ட காலம் எது என்ற தகவல் இல்லை. ஓலைச் சுவடியில் எழுதப்பட்ட இந்த புராணம் 29 சருக்கங்களாகப் பாடப்பட்டுள்ளது.
பழனி மாம்பழக்கவிச் சிங்க நாவலர் இயற்றிய தேவாங்க புராணம் ஓலைச் சுவடியில் இருப்பதைக் கேள்விப்பட்டு புத்தக வடிவில் கொணர, கோவையில் புத்தக வியாபாரம் செய்து வந்த திரு.இ.ஒண்ணைய கவுண்டர் என்பவர் விருப்பங்கொண்டார்.விருப்பம் மேலிட, தேடல் துவங்கியது. தேடல் எப்படி வெற்றி பெற்றது என்பதனை அவர் நூலில் கீழ்க்கண்டவாறு உரைக்கிறார்.
"அங்ஙனச் செய்யப் பெற்றுள்ள இப்புராணமானது இதுகாறும் அச்சிடாமலும், பெரும்பாலும் அத்தேவாங்க குலத்தினருக்கே தெரியாமலுங் குடத்திலிட்ட விளக்கைப் போல் பிரகாசமின்றி மறைந்து கிடந்தது. மகாவித்துவானாகிய இந்நாவலர் பெருமானியற்றிய பாடல்களைச் சேகரஞ் செய்ய விரும்பிய எனக்கு,இத்தேவாங்க புராணம் அவரால் செய்யப்பட்டுள்ளதென்று சிலரால் கேள்வியுற்று அதனைத் தேட முயற்சி செய்ததில், கோயம்புத்தூரில் வசிக்கும் ஸ்ரீநல்லமலை செட்டியார் அவர்கள் ஓர் பிரதியும், உடுமலைப்பேட்டை ஸ்ரீ பெ.இராமசாமி செட்டியார் அவர்கள் ஓர் பிரதியும் உபகரித்தார்கள்; அப்பிரதிகள் மூலப் பாடமாயிருக்கக் கண்டு கல்வியில் வல்லாரேயன்றி எல்லோருக்கும் பயன்படும் பொருட்டு,கோயம்புத்தூர் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் ஸ்ரீ.ஆர்.சபாபதிப் பிள்ளையவர்களைக் கொண்டு உரையியற்றுவித்துப் புராணஞ் செய்ய முதல் நூல் காட்டியவருள் ஒருவராகிய சதாசிவ சுவாமிகளவர்களுடைய ஜேஷ்டபுத்திரரும், தேவாங்க குலகுருவுமாகிய சதாசிவமாகிய ஐயரவர்களைக் கொண்டு அம்முதநூலோடு ஒப்பிட்டுப் பார்த்ததில் சில விஷயம் முரண்பட, அம்முரண்பட்ட விஷயங்களுக்கெல்லாம் ஸ்ரீசபாபதி பிள்ளையவர்களைக் கொண்டே சில செய்யுளை நீக்கியும்,வேண்டுமிடங்கட்குப் பொருந்த வேறு சில செய்யுட்களைக் கூட்டியும், திருத்தியும், கோயம்புத்தூர் ஜவுளி வியாபாரஞ் செய்யும் மகாகனம் பொருந்திய வெரிவாட செட்டியாரவர்கள், கிரிய செட்டியாரவர்கள் முதலிய தேவாங்க குல திலகர்களது விருப்பத்தின்படி, அவர்களது திரவிய சகாயத்தை (நிதி உதவி) கொண்டு அச்சிட்டு முடித்து இன்று எல்லோருங் காண வெளிப்படுத்தினேன்" என்று தமது பதிப்புரையில் திரு.ஒண்ணைய கவுண்டர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நூல் அச்சிடப்பட்ட ஆண்டு விஜய ளூ ஆனி மீ 28 உ என்று மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது. இந்நூலில் ஒரு போஸ்ட் கார்டை விட சிறிது பெரிய அளவிலான காகிதத்தில், புஸ்தக இருப்பு குறைவாக உள்ளதாகவும், மறுபதிப்பு செய்வதில்லை என்றும் எனவே, புத்தகம்
வேண்டுவோர் உடனடியாகத் தொடர்பு கொள்ளும்படியும், புஸ்தக விலையும், தபால் கூலியுள்பட ஆகும் விலை பற்றியும் அச்சிடப் பட்டு ஒட்டப்பட்டுள்ளது. அதில், 1894 ளூ ஜனவரி மீ 1 உ என்று குறிக்கப்பட்டுள்ளது. எனவே, இதிலிருந்து புத்தகம் அச்சிட்டு வெளியிடப்பட்ட வருடம் 1890 க்கு முன்னோ அல்லது 1890 களிலோ இருக்கலாம்.
இப்புத்தக வடிவிலான பதிப்பிற்கு உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த வித்வான் பு.ப.அ.முத்துச்சாமி செட்டியார் சாற்றுக் கவி பாடியுள்ளளார். இந்நூலின் கடைசி பகுதியில் ஒரு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், " தேவாங்க முனிவர் ஏழாவதாரத்திலும் செய்த சாஸ்திரங்கள் இன்னவையென்று பெங்களூரில் வசிக்கும் பிரம்ம ஸ்ரீவேதமூர்த்தி நஞ்சுண்ட தீஷித சுவாமிகளவர்களைக் கொண்டு அருப்புக்கோட்டைக்கடுத்த சின்ன புளியம்பட்டியிலிருக்கும் தேவாங்க குல அபிமானி ஸ்ரீரா.ம.நா.கஉத்தாணு செட்டியாரவர்கள் எழுதி,இத்தேவாங்க புரணத்துடன் சேர்க்கும்படி அனுப்பினார்.அவருடைய இஷ்டப்படியே அச்சாஸ்திர விவரத்தை இப்புராணத்தில் சேர்த்திருக்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்நூல் அச்சிடுவதற்குதப் பொருளுதவி செய்தவர்களின் விபரமும் அச்சிடப்பட்டுள்ளது.
அவர்களின் பெயர்கள் வருமாறு:
கோயம்புத்தூர் ஸ்ரீ.வெ.வெரிவாட செட்டியார்,
ஜே.தா.இராமசாமி செட்டியார்,
வெ.வெள்ளியங்கிரி செட்டியார்,
ந.கிரிய செட்டியார்,
சாமிரவுத்து நா.இராமையா செட்டியார்,
உடுமலைப்பேட்டை சாவுகார் ஸ்ரீ இராமலிங்க செட்டியார்,
குமாரர் திருமூர்த்தி செட்டியார்,
மடையாண்டி சாமி செட்டியார்,
சேலம் குகை கொ.ர.தம்மண செட்டியார்(முனிசிபல் கவுன்சிலர்),
செவ்வாய்பேட்டை சேலம் டி.மு.கோ.வக்கீல் கதிரி செட்டியார்,
வைத்தியலிங்கம் செட்டியார்,
திருப்பூர் சவுண்டப்ப செட்டியார்,
எம்.சுப்பிரமணிய செட்டியார்.
மாம்பழக்கவிராயரால் இயற்றப்பட்ட தேவாங்க புராணத்தை முதன் முதலில் பொழிப்புரையுடன் காகிதத்தில் அச்சிட்டு வெளியிட்ட பெருமை கோவையைச் சேர்ந்தவர்களையேச் சாரும்.
தேவாங்க புராணத்தை உரைநடை நூல் வடிவில் இயற்றி முதன் முதலில் வெளியிட்ட பெருமை திருப்பூர் திரு.வி.எஸ்.நடராஜ் அவர்களையேச் சாரும். 1971ஆம் ஆண்டு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.இந்நூலுக்கு குமாரபாளையம் தொழிலதிபர் திரு.ஜே.ஜே.கே.அங்கப்ப செட்டியார் அணிந்துரை எழுதியுள்ளார்.
இந்நூல் உருவான வரலாற்றை திரு.வி.எஸ்.நடராஜ் செட்டியார் தமது வெளியீட்டுரையில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.
"யான் நான்காண்டுகளுக்கு முன் சைவத் திருமுறைகள் பன்னிரண்டையும் பாராயணம் செய்ய விரும்பினேன். அவைகளைப் பொருளுணர்ந்து பயிலும் நிமித்தம் எங்கள் சொ.செ.ம.உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியரும் எனது கெழுதகை நண்பருமான வித்வான் க.பழனிச்சாமிப் புலவர் அவர்களைத் துணைக் கொண்டேன். பாராயணத்தின் இடையே,பிரபு லிங்க லீலை என்றதோர் நூலையும் பயின்றேன். பின்னர், மாம்பழக் கவிராயர் அவர்களால் பாடப்பெற்ற தேவாங்க புராணத்தையும் படித்தேன். அதன் கண்ணமைந்த கவிச்சுவை என் மனதைப் பிணித்தது. அந்த நூலைப் பதிப்பித்து வெளியிட்டால் அது நமது சமூகத்தார் பலருக்கும் செய்யும் சிறந்த சேவையாகுமென்று கருதி, முன்னர் அந்த நூலைப் பதிப்பித்து வெளியிட்டால் அது நமது சமூகத்தார் பலருக்கும் செய்யும் சிறந்த சேவையாகுமென்று கருதி, முன்னர் அந்த நூலைப் பதிப்பித்த பெருந்தகைகளின் அனுமதியைப் பெற,எனது எண்ணத்தை வெளியிட்டு யாருக்காவது தடைகள் உண்டோவெனக் கூறுமாறு வேண்டினேன். யாரும் தடை கூற முன்வரவில்லை. உடனே நூல் வெளியிட ஆவன செய்யத் தொடங்கினேன்.
அந்த நாட்களில் ஒரு நாள் ஜலகண்டாபுரம் தேவாங்கர் குல குரு ஓம் ஸ்ரீசாம்பலிங்க மூர்த்தி சுவாமிகள் எனது இல்லத்திற்கு வருகை தந்தார்கள். அவர்களிடம் எனது கருத்தை இயம்பினேன். கேட்ட அவர்கள்,நீங்கள் வெளியிட விரும்பும் நூல் சிறப்புடைது; படித்தற்குரியது; எனினும் எல்லோரும் படித்துணரும் தகுதியுடன் கூடிய உரைநடை நூல் ஒன்றை வெளியிட்டு உதவுவீர்களாயின்,அது எங்களுக்கும்,மற்றையவர்களுக்கும் நன்கு பயன்படுவதாகும் என்று உரைநடை நூலை வெளியிடும்படி அன்புக் கட்டளையிட்டார்கள். அவர்கள் மீண்டும் சொன்னார்கள். கன்னட மொழியில் உள்ள நூல் மிகவும் தெளிவாக உள்ளது. அதனை யான் மொழி பெயர்த்துத் தருகிறேன்;அதனையே வெளியீடு செய்க என்றும் செப்பினார்கள்.அங்ஙனமே செய்கிறேன் என்று அவர்களிடம் செப்பிய நிலையில் சில நாட்கள் கழிந்தன.
ஈதிங்கனம் நிகழ ஒரு தினம், படைவேடு தேவாங்க குருமூர்த்தி சென்னா ஓம் ஸ்ரீசாம்பலிங்க மூர்த்தி சுவாமிகள் எங்கள் இல்லத்திற்கு எழுந்தருளினார்கள்.அவர்களிடமும் எனது முயற்சியை எடுத்துரைத்தேன். அவர்கள் மிக மகிழ்ந்து மாம்பழக் கவிராயர் அவர்களால் இயற்றப்பட்ட செய்யுள் தேவாங்க புராணம் மிக்க நயமுள்ளது. அந்த நூலின் செய்யுட்களும் இடையிடையே விரவிவர அந்த உரைநடை நூலை ஆக்குங்கள். அங்ஙனம் செயின்,அந்த நூல் இன்னமும் அதிக நலந்தரும் என்றார்கள்.அத்துடன் தெலுங்கு மொழியிலிருந்தும் தேவாங்க புராணத்தை மொழிபெயர்த்து உதவினார்கள். அவர்கள் கூறியதும் நன்மைகள் பயக்கும் என எண்ணி அவர்களைப் பார்த்து, கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழி நலன்களை நன்கு அறிந்த தாங்கள், யாங்கள் செய்யத் தொடங்கும் நூலின் கண் எழுகின்ற ஐயங்கள், மாறுபாடுகள் ஆகியவைகளைப் போக்கியருள அடிக்கடி வருகை தந்து ஆவன செய்தருள வேண்டும் என வேண்டினேன். அவர்களும் சம்மதித்தார்கள்.
இவை யாவும் நிகழ்ந்த பின், எனக்கு ஆசானும் நண்பருமான புலவர் பழனிச்சாமி அவர்களிடம் மேற்கண்ட நிகழ்ச்சிகள் யாவையுங் கூறி இங்ஙனம் ஒரு நல்ல தேவாங்க புராணத்தை ஆக்கித் தருக என வேண்டினேன். அவர்களும் அங்ஙனமே செய்து தருவதாக மனமுவந்து ஒப்பினார்கள். இந்த நாட்களில் கன்னட மொழிபெயர்ப்பும் வந்தது. மாம்பழக் கவிச்சிங்க நாவலரது நூலையும், கன்னட மொழி பெயர்ப்பு நூலையும் ஒப்பிட்டுப் படித்துதமிழில் சுருக்கமாக உள்ள வரலாறுகளைக் கன்னட மொழி நூலைக் கொண்டும், கன்னடத்தில் காணாத சில நுட்பங்களை மாம்பழக் கவிராயர் நூலில் இருந்தும் சேகரஞ் செய்து கொண்டு நூலை நல்ல நாளில் தொடங்கினோம்.
நூல் வளர ஆரம்பித்தது. ஜலகண்டாபுரம் குருநாதரவர்களும் அடிக்கடி தூண்டி, எங்கள் அயர்வை மாற்றிக் கொண்டிருந்தார்கள். படைவேடு குருநாதர் அவர்களும் அடிக்கடி வருகை தந்து நூலில் ஐயங்கள் மாறுபாடுகள் ஆகியவை நிகழா வண்ணம் பாதுகாத்துக் கொண்டு வந்தார்கள்.சுமார் ஓராண்டுக்குள் நூல் நிறைவு பெறுவதாயிற்று. படைவேடு குருநாதர் அவர்கள் முன்னர் நிறைவு பெற்ற நூலினை ஒரு முறை மீண்டும் படித்துக் காட்டிச் சில திருத்தங்கள் செய்து நூலை முற்றுற முடித்தோம்.
தேவாங்க மரபினரின், பிற்கால சரிதம், குரு பரம்பரை வரலாறுகள் ஆகியவைகளைப் படைவேடு குருநாதரவர்கள் வாயிலாகக் கேட்டும் அவைகளையும் ஒரு பக்கமாக அந்த நூலில் அமைத்துக கொண்டோம். ஜலகண்டாபுரம் குருநாதர் அவர்களும், தமது வரலாற்றை எங்களுக்கு உதவியருளினார்கள். அதுவும் குரு பரம்பரை வரலாற்றுடன் இணைந்து வருகிறது.
இங்ஙனம் நூல் நிறைவு பெற்ற பின் கோவை கம்மவார் அச்சகத்தில் இந்த நூலை அச்சிடுமாறு சௌமிய ஆண்டு தைத்திங்களில் கொடுத்தோம். அவர்களும் விரோதி கிருது ஆண்டு சித்திரைத் திங்களில் இந்த நூலைப் புத்தக வடிவில் அழகுற ஆக்கித்தந்தார்கள்.
இந்த நாட்களில், சமூகத்தார் அனைவருக்கும் பொதுவாக அமைந்த இந்த நூலை யான் ஒருவனே வெளியீடு செய்வது நன்றாகாது. சமூகத்தவருக்கும் இதில் பங்கு தருவது சாலநலம் பயக்கும் என எண்ணி எனது உறவினர்,நண்பர்கள் ஆகியோரிடம் எடுத்தியம்ப அவர்களும் நூல் வெளியீட்டுக்காகத் தங்களது ஆதரவை நன்கொடை மூலம் தந்து உதவினார்கள். இந்த வகையில் நான்காண்டுகள் நிறைந்து இந்த நூல் இற்றை ஞான்று வெளிவருகின்றது. சமூகத்தவர்கள் இதனையேற்றுப் போற்றும்படி பரிவுடன் வேண்டுகிறேன்.
இந்த நூலைக் கன்னடத்திலிருந்து மொழி பெயர்த்து உதவியதுடன், நூல் வெளிவருவதற்கு மிகவும் தூண்டுதல் செய்த ஜலகண்டாபுரம் தேவாங்க குல குரு ஓம்ஸ்ரீசாம்பலிங்க மூரத்தி சுவாமிகள் அவர்களுக்கும்,நூல் மொழி பெயர்ப்பில் அவருக்குத் துணை நின்ற அவர்தம் குமாரர் ஸ்ரீவித்யாசாகர மூர்த்தி அவர்களுக்கும் முதற்கண் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
தெலுங்கு மொழிபெயர்ப்பை உதவியும் இந்த நூலில் வரும் ஐயங்களை அவ்வப்போது போக்கியும் இப்புராணம் வளர துணையாயிருந்து எனக்கு உற்சாகம் ஊட்டியதுடன் பீடாதிபதிகள், சிம்மாசனாதிபதிகள் ஆகியோரது சரிதங்களையும், தமது முன்னையோரது வரலாறுகளையும் உதவிய படைவேடு குருநாதர் சென்னா ஓம் ஸ்ரீசாம்பலிங்க மூர்த்தி சுவாமிகள் அவர்கள் காட்டிய அன்பும் பிறவும் போற்றுந் தகையன" என்று திரு.எஸ்.நடராஜ் அவர்கள் தமது வெளியீட்டு உரையில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தேவாங்க புராணம்(உரை நடை நூல்) உருவான வரலாற்யையும், வெளியீடு செய்யப்பட்ட விதத்தையும் அறியலாம். இந்நூல் முதற்பதிப்பாக வெளியிடப்பட்ட ஆண்டு 1971 ஆகும்.
இந்நூலின் ஆசிரியர் வித்வான் க.பழனிச்சாமி அவர்கள் தமது நூன் முகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
"நமது இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும், ஒவ்வொரு மரபினருக்கும் அவர்களது வம்சாவழியைக் குறித்து ஆன்றோர்களால் செய்யப் பெற்ற புராணங்கள் ஆங்காங்கு ஒளிர்கின்றன. அவர்களது தோற்றங்கள் யாவும் கடவுளர்களை ஆதியாகக் கொண்டே தொடங்குகின்றன. அந்த முறையிலேயே இத்தேவாங்க புராணமும் அமைகின்றது.
இந்த தேவாங்க புராணம் வடமொழியில் உள்ள பிர்மாண்ட புராணத்தில் முதன் முதலில் தோன்றுவதாயிற்று. அதனை ஆதியாகக் கொண்டு காலப்போக்கில் கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய பல்வேறு மொழிகளில் இப்புராணம் தோன்றி வளர்வதாயிற்று".
இவ்வாறு தேவாங்க புராண வரலாற்று நூல்கள் இயற்றப்பட்டன.
No comments:
Post a Comment