மூலவர் இல்லாத அம்மன் திருக்கோவில் சிரசே பிரதானம்: பின்னணி என்ன?
பொதுவாக, திருக்கோவில் என்றால் மூலவருடன் அழகுற அமைந்திருக்கும். ஆனால் மூலவர் இல்லாத திருக்கோவில் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுவும் ஸ்ரீ சவுடேஸ்வரியம்மன் திருக்கோவில். திண்டுக்கல் மாவட்டத்தில் சித்தையன் கோட்டை பேரூராட்சி உள்ளது. (செம்பட்டியிலிருந்து அடிக்கடி டவுண் பஸ் இந்த ஊருக்குச் செல்கிறது). இங்கு தேவாங்கர் குலத்தைச் சேர்ந்த சின்னுக் கொட்லார், லத்திகாரர் உள்ளிட்ட பல்வேறு வம்சத்தினருக்கு குல தெய்வக் கோவில் உள்ளது.
ஒவ்வொரு
வருடமும் சிவராத்திரியன்று சித்தையன் கோட்டை விழி பிதுங்கி நிற்கும்
அளவிற்குப் பல்வேறு ஊர்களிலிருந்தும் குல தெய்வ வழிபாட்டிற்காக, மக்கள் வந்து கூடுவர். அந்த
அளவிற்குப் பிரசித்திப் பெற்ற சித்தையன் கோட்டையில் குறிப்பாக தேவாங்கர்
குலம் கப்பலேறு வம்சத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு
ஸ்ரீசவுடேஸ்வரியம்மன் ஆலயம் உள்ளது. இங்கு மூலவர் இல்லை. வெள்ளியால் இழைக்கப்பட்ட ஸ்ரீசவுடேஸ்வரியம்மன் படம் மட்டுமே உள்ளது.
அம்மன் படத்திற்கு பூஜை செய்யும்பொழுது, படத்திற்குப் பின்புறமாகச் சென்று பூஜை நடத்தப்படுகிறது. படத்திற்குப் பின்புறம் கூந்தலுடன் கூடிய அம்மன் சிரசு பெட்டியில் வைக்கப்பட்டுள்து.
ஒவ்வொரு சிவராத்திரியன்றும், குல
தெய்வ வழிபாடு நடத்தும் கப்பலேறு வம்சத்தினர் இரு ஆண்டுக்கு ஒருமுறை
மட்டுமே அந்த பெட்டியில் உள்ள அம்மன் சிரசை எடுத்து அபிஷேகங்கள் செய்து, கூந்தலை உலர்த்தி பின் அலங்காரம் செய்து பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கின்றனர்.
சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், மற்றும் தமிழகத்தின் பல பகுதியிலிருந்தும், பெங்களூர் போன்ற
வெளி மாநிலங்களிலிருந்து கப்பலேறு வம்சத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிமார்கள்
சிவராத்திரியன்று குல தெய்வ வழிபாடு நடத்த இத்திருக்கோவிலுக்கு
வருகின்றனர்.
அதேபோன்று, கடந்த மாதம் 12 ஆம் தேதி நடைபெற்ற சிவராத்திரியன்று அம்மன் சிரசை எடுத்து அபிஷேகம் செய்து, கூந்தல் அலங்காரம் செய்து, பக்தர்களின் தரிசனத்திற்காக வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கப்பலேரு வம்ச தாயாதிகள் பெருந்திரளாகக்
கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
இத்திருக்கோவிலில் தினமும் பூஜை செய்யப்படுகிறது. தினமும் காலை சின்னாளப்பட்டியிலிருந்து வந்து பூசாரி பூஜை செய்கிறார்.இத்திருக்கோவிலின் தலைவர் திரு.ராமையா வயோதிகத்தின் காரணமாக தெளிவாகப் பேச
இயலவில்லையாதலால் அவரிடம் இத்திருக்கோவில் பற்றித் தெரிந்து கொள்ள இயலவில்லை. எனவே மற்றவர்களிடம் இத்திருக்கோவிலைப் பற்றி விசாரித்த பொழுது செவி வழிச் செய்தி ஒன்று கூறப்படுகிறது.
முன்னொரு காலத்தில் கப்பலேறு வம்சத்தைச் சேர்ந்த அழகானப் பெண்ணைக் கண்டு அப்பகுதி ஜமீன்தார் மயங்கியுள்ளார். அப்பெண்ணை அடைதல் வேண்டி பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளார். இந்நிலையில்
ஜமீன்தார்ரிடமிருந்து அப்பெண்ணைக் காப்பாற்ற ஏற்பட்ட சண்டையின் பொழுது
அப்பெண்ணின் சிரசு கொய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும், அப்பெண்ணின் சிரசையே கப்பலேறு வம்சத்தினர் இன்றும் வணங்கி வருவதாகவும் கூறுகின்றனர்.
முதன் முதலில் அப்பெண் சிரசு கொய்யப்பட்ட காட்டில் சென்று முன்னோர்கள் வணங்கி வந்ததாகவும், பின்னாளில் சித்தையன் கோட்டையில் கோவில் எழுப்பி வழிபட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment