அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

4/7/14

குதி ஆறு : தூரத்துச் சூரியன்[ 3 ]

குதி ஆறு : தூரத்துச் சூரியன்[ 3 ]
யாதவர்களின் தொழிலைச் செய்வதில்லை என்ற முடிவை இளமையிலேயே வசுதேவன் எடுத்தான். அவனுடைய குலத்தின் மந்தைகளுடன் அவனுக்கு தொடர்பே இருக்கவில்லை. பாட்டி இறந்தபின்னரும் அவன் மதுவனத்திலேயே வாழ்ந்தான். ஏழுவயதில்தான் அவன் முதல்முறையாக அடிக்காட்டுக்குச் சென்று பட்டியில் ஏரிநீர் போல நிறைந்திருந்த பசுக்களைப் பார்த்தான். அங்கே நிறைந்திருந்த சாணியும் சிறுநீரும் கலந்த வீச்சமும், பசுக்கூட்டத்தின் உடல்களில் இருந்து எழுந்து காற்றில் சுழன்ற சிற்றுயிர்களும் அது கலங்கிய அழுக்குநீர் ஏரி என்று எண்ணச்செய்தன.
மந்தைமுழுக்க மாடுகளின் கனைப்புகளும் காதுகள் அடிபடும் ஒலிகளும் குளம்புகள் மண்ணில் மிதிபடும் ஓசையும் நிறைந்திருந்தன. ஆயிரக்கணக்கான காகங்கள் பசுக்கள் மேல் எழுந்தும் அமர்ந்தும் குருதியுண்ணிகளைப் பொறுக்கி உண்டன. சிறிய குருவிகள் காற்றிலேயே தாவிப்பறந்து சிற்றுயிர்களைப்பிடித்தன. பட்டியைச்சுற்றி கட்டப்பட்டிருந்த நூற்றுக்குமேற்பட்ட காவல்மாடங்களில் கம்பிளிகளைப் போர்த்தியபடி ஆயர்கள் களைத்த கண்களுடனும் புல்லாங்குழல்களுடனும் அமர்ந்திருந்தனர். மாடங்களுக்குக் கீழே புல்லையும் சருகையும் கூட்டி தீயிட்டு அதில் பலாக்கொட்டைகளையும் காட்டுக்கிழங்குகளையும் சுட்டு மேலே கொண்டுசென்று கொறித்துக்கொண்டிருந்தனர். கீழே இருந்த தணலில் எழுந்த புகை மாடங்களின் அடியில் தயங்கி பிரிந்து எழுந்து சூழ்ந்து மேலே சென்றது.
வசுதேவனின் தமையன்கள் அனைவருமே அடிக்காட்டில்தான் இருந்தனர். அவர்கள் வீட்டுக்கு வருவதேயில்லை. மூத்த தமையனான வசு வசுதேவனைவிட முப்பது வயது மூத்தவர். கடைசித்தமையனான காவுகன் பதினைந்து வயது மூத்தவர். அவர்களிடம் வசுதேவன் சிலசொற்களுக்கு அப்பால் பேசியதுமில்லை. அவனை சூரசேனர் மதுவனத்தை விட்டு அழைத்துச்சென்று அடிக்காட்டில் மந்தைக்குக் கொண்டு சென்றபோதுதான் அவன் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையே அறிந்தான்.
அவர்களின் கிராமமான மதுவனத்தில் மழைக்காலத்தைத் தவிர எப்போதும் பெண்கள் மட்டுமே இருந்தனர். முந்நூறு குடும்பங்கள் கொண்ட மதுவனத்தின் அனைத்து மந்தைகளுமே ஊரிலிருந்து நாற்பது நாழிகை தொலைவிலிருந்த அடிவனத்தில்தான் பட்டியிடப்பட்டன. காலையில் பட்டி பிரிக்கப்பட்டு தனித்தனிக் குழுக்களாக அவை காடுகளுக்குள் மேய்வதற்காக அனுப்பப்படும். பகல் முழுக்க அவை பசுமைசெழித்த காட்டுக்குள் கழுத்துமணிகள் ஓசையிட வால்கள் வீசிப்பறக்க மேய்ந்துகொண்டிருக்கும். அவற்றைக் கண்காணித்தபடி காவல்நாய்கள் அருகே நின்றுகொண்டிருக்கும்.
பசுக்கள் மேயும்போது ஆயர்கள் உயரமான மரங்களின் மீதோ பாறைகள் மீதோ ஏறி அமர்ந்து அவற்றை கண்காணித்துக்கொண்டிருப்பார்கள். புல்லாங்குழல் இசைத்தபடியும் இடையை மரக்கிளைகளுடன் கொடிகளால் சேர்த்துக்கட்டிக்கொண்டு துயின்றபடியும் பகலெல்லாம் மேலேயே காலத்தை துழாவுவார்கள். ஆயர்களுக்கு புலிகளின் வரவை அறிவிக்கும் பறவை ஒலிகள் நன்றாகவே தெரிந்திருந்தது. நாய்களுக்கு வெகுதொலைவிலேயே புலிகளின் வாசனைகிடைத்துவிடும். புலிகள் தென்பட்டதுமே அவர்கள் தங்கள் இடைகளில் தொங்கும் குறுமுழவுகளை அடிக்கத் தொடங்க அப்பகுதி நோக்கி மற்ற அத்தனை ஆயர்களும் கூச்சலிட்டபடியும் பெருமுழவுகளை அடித்து ஓசையிட்டபடியும் திரண்டு வருவார்கள்.
மாலையில் வெயில் அணையத்தொடங்கியதுமே ஆயர்கள் கொம்புகளை ஊதி பசுக்களை திரட்டத்தொடங்குவார்கள். மழைநீர் சிற்றோடைகளாகத் திரண்டு பேரோடைகளாகி, ஆறாகி, அருவியாகி மலையிறங்குவதுபோல பசுக்கூட்டங்கள் முடிவில்லாமல் மலைமடம்புகள் வழியாக கீழே இறங்கிக்கொண்டிருக்கும். ஆயிரக்கணக்கான பசுக்களை ஒன்றாகத் திரட்டி ஒற்றைப்பட்டியாக ஆக்குவார்கள். பட்டியைச்சுற்றி மூங்கில்கழிகளை அமைத்து நாய்களைக் காவல் வைத்தபின் மூங்கில் கால்கள் மேல் அமைக்கப்பட்டிருக்கும் மாடங்களில் இரவுறங்குவார்கள்.
இரவில் ஒன்றுவிட்ட மாடங்களில் உள்ளவர்கள் விழித்திருக்கவேண்டுமென முறைவைத்திருந்தனர். இரண்டாம்ஜாமம் வரை விழித்திருப்பவர்கள் அதற்குமேல் அடுத்த மாடத்தில் இருப்பவர்களை துயிலெழுப்பிவிட்டு தாங்கள் படுத்துக்கொள்வார்கள். ஆயர்கள் நடுவே கதைசொல்பவர்களுக்கும் பாடுபவர்களுக்கும் பெருமதிப்பிருந்தது. புல்மெத்தைமேல் மான்தோலை விரித்து சாய்ந்துகொண்டு கதைசொல்லியை அமரச்செய்வார்கள். அவன் தன் சிறு கைத்தாளத்தை மீட்டி பழங்கதைகளையும் புராணங்களையும் சொல்வான். சந்திரவம்சத்து யயாதியின் மைந்தனின் கதையையும் கார்த்தவீரியனின் வெற்றிகளையும் பாடுவான். ஆயர்குடிகளில் புலியிறங்கிய நிகழ்வுகளையும் திமிறும் ஏறுகளை அடக்கி பெண்கொண்ட வீரர்களின் வரலாறுகளையும் விவரிப்பான்.
விடிந்ததும் பால்கறக்காத மாடுகள் முன்னதாகவே மலை ஏறிவிடும். பால்கறக்கப்பட்ட மாடுகள் தினையும் மாவும் உண்ட பின்னர் கன்றுடன் தனியாக மலைக்குக் கொண்டுசெல்லப்படும். கறந்தபால் காலையிலும் மாலையிலும் பெரிய கலங்களில் நிறைக்கப்பட்டு மாட்டுவண்டிகளில் கிராமத்துக்கு வந்துசேரும். இரவில் வந்துசேரும் பாலைக் காய்ச்சி உறைகுத்திவிட்டு ஆயர்குலப்பெண்கள் உறங்குவார்கள். காலையில் வரும்பால் ஊரிலிருந்து அப்படியே சிற்றாறுகளில் செல்லும் படகுகள் வழியாக ஊர்களுக்குக் கொண்டுசெல்லப்படும். ஆயர்குடிகள் முழுக்க பகலெல்லாம் பெரிய மத்துகள் ஓடும் ஒலிகேட்டுக்கொண்டிருக்கும். ஊரெங்கும் பால்வற்றும் வாசனையும் நெய்குறுகும் மணமும் மோர்புளித்தவாடையும் சாணிவீச்சத்துடன் கலந்திருக்கும். ஆயர்குடியில் பிறந்தவர்களால் அந்த நெடியில்லாமல் வாழமுடியாது.
பட்டிக்கு வந்த அன்றே வசுதேவன் திரும்பவும் மதுவனத்துக்கு ஓடிப்போவதைப்பற்றி எண்ணலானான். காலையில் தமையன்களுடன் காட்டுக்குள் சென்றது அவனுக்கு இடர்மிக்கதாக இருந்தது. கால்களை அறுக்கும் கூரியவிளிம்புள்ள புற்களும் பாதங்களைப்புரட்டும் கூழாங்கற்களும் ஆணிகளைப்போன்ற முட்களும் அடிக்கொருதரம் வளைந்து பாய்ந்து இலைத்தழைப்புக்குள் மறையும் பாம்புகளும் கொண்ட காடு அவன் புலன்களை பதற்றநிலையிலேயே வைத்திருந்தது. பிற ஆயர்களின் பார்வையில் அவன் கேலிக்குரியவனாக இருந்தான். அந்தக்கேலி அவனை எரியச்செய்தது.
அவன் காட்டுக்குள் சென்ற அன்று முழுக்க மழைபெய்தது. விடாமல் தொடர்ந்து சொட்டிக்கொண்டே இருந்த இலைகளாலான காட்டுக்குள் மரத்தின் மேல் பனையோலை குடைமறையை அணிந்தபடி ஒண்டிக்கொண்டு பகலெல்லாம் அமர்ந்திருர்ந்தான். கைகால்கள் ஈரத்தில் நடுங்கி வெளுத்து பின் மரத்தன. மாலையில் மரத்தில் இருந்து இறங்கும்போது கைவழுக்கி ஈரமான மரப்பட்டையில் உரசியபடி கீழிறங்கி மார்பும் முழங்கையும் உராய்ந்து தோலுரிந்தன. அந்த ரணம்மீது மழையின் ஈரம் பட்டு எரிந்தது.
அன்றிரவு கையும் மார்பும் நெருப்புபட்டதுபோல எரிய அவன் மாடத்தில் அமர்ந்திருந்தான். இடையர்கள் எட்டுபேர் சிறிய மாடத்துக்குள் ஒண்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர். கீழிருந்து வந்த புகையில் மூச்சுத்திணறியது. அதில் தைலப்புல்லைப் போட்டிருந்தமையால் அந்த வாசனை தலையை கிறுகிறுக்கச்செய்தது. சுட்ட பலாக்கொட்டைகளை உரித்துத் தின்றபடி அவர்கள் ஊரில் எவருக்கு எவருடன் என்னென்ன கள்ளத்தொடர்புகள் உள்ளன என்று பேசிக்கொண்டிருந்தனர். அன்று அவர்களின் துயில்முறை வந்தபோது பக்கத்து மாடத்துக்கு சைகைகாட்டிவிட்டு அனைவரும் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொண்டு படுத்து மரவுரிப்போர்வையையும் தோலாடைகளையும் போர்த்திக்கொண்டு துயின்றனர்.
வசுதேவன் கயிற்றேணி வழியாக இறங்கி பட்டியை அடைந்தான். மழைபெய்துகொண்டிருக்க பசுக்கள் முதுகோடு முதுகொட்டி அசையாமல் நின்றுகொண்டிருந்தன. இருளில் அவற்றின் கண்களின் ஒளியால் கரிய திரவத்தாலான ஏரி ஒன்று அங்கே மின்னிக்கிடப்பதுபோலத் தோன்றியது. மழையில் பட்டியைச் சுற்றிக்கொண்டு வசுதேவன் ஓடத்தொடங்கினான். அவனைத் தொடர்ந்து ஆர்வமாக வால்சுழற்றி ஓடிவந்த பட்டிநாய்கள் அவன் பட்டியைத் தாண்டியதும் மெல்லக்குரைத்து எம்பிக்குதித்தபடி நின்றுவிட்டன. இருளில் சரிவரத் தெரியாத பாதை வழியாக ஊருக்குச் செல்வதைப்பற்றி அவன் எண்ணிப்பார்த்திருக்கவேயில்லை. ஆனால் ஓடத்தொடங்கியதும் வழியின் ஒவ்வொரு மரமும் பாறையும் துல்லியமாக நினைவுக்கு மீண்டுவந்தன.
VENMURASU_EPI_78
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
விடியற்காலையிலேயே அவன் மதுவனத்துக்கு வந்துவிட்டான். கிராமத்துக்குள் இருந்து பசுக்களின் கழுத்துமணி ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. வாயிலை மூடியிருந்த மூங்கில்படலை அவன் தொட்டதும் குரைத்தபடி காவல்நாய்கள் ஓடிவந்தன. அவன் வாசனையை அறிந்ததும் முனகியபடி வாலைவீசி எம்பிக்குதித்தன. வசுதேவன் தன் இல்லத்துத் திண்ணையை அடைந்து முழந்தாளிட்டு அமர்ந்துகொண்டான். கதவைத்தட்ட அவனுக்கு மனம் வரவில்லை. அப்படியே சரிந்து துயில்கொண்டிருந்த அவனை அவன் அன்னைதான் காலையில் எழுப்பினாள். அப்போதும் மழை தூறலிட்டுக்கொண்டிருந்தது. ஊரில் முதலில் எழுபவள் அவள்தான். உள்ளே சென்று படுக்கும்படிச் சொல்லி கறந்த பாலை சூடாக குடிக்கத் தந்தாள்.
அவனைக் காலையில் பார்த்ததும் பிருதை ஓடிவந்து கைகளைப்பற்றிக்கொண்டாள். அவளைக் கண்டதும் அவன் அழத்தொடங்கினான். அவள் அவனருகே அமர்ந்துகொண்டாள். “நான் காட்டுக்குச் செல்லமாட்டேன். என்னால் இடையனாக வாழமுடியாது” என்று வசுதேவன் அழுதான். பிருதை அவனிடம் “தந்தை உன்னை இடையனாக ஆக்கத்தானே கூட்டிச்சென்றார்?” என்றாள். “நான் கல்விகற்பேன். அரண்மனையில் வேலைபார்ப்பேன். இடையனாக ஆகவேண்டுமென்று சொன்னால் யமுனையில் குதித்து உயிர்விடுவேன்” என்றான் வசுதேவன்.
பிருதை அவன் தோளை மெதுவாகத் தொட்டாள். அவன் குலத்திலேயே அவனுக்கு நெருக்கமாக இருந்தவள் அவள் மட்டும்தான். அவளிடம்தான் அவன் தன்னுடைய கனவுகள் அனைத்தையும் சொல்லியிருந்தான். அதைவிட தன்னுடைய வெறுப்புகளையும் கசப்புகளையும் பகிர்ந்திருந்தான். அவன் சொல்வதற்குள்ளேயே அனைத்தையும் புரிந்துகொள்பவளாக அவளிருந்தாள். அவனுடைய எண்ணங்களை அவன் அவளில் ஆடியில் முகம்பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனைத்தேடிவந்த சூரசேனர் அவன் வீடுதிரும்பியதை அறிந்தபின் அமைதியானார். மாலையில் கிளம்புவதற்கு முன்னால் தோலாடையை தோளில் சுற்றிக்கொண்டு வீட்டு வாசலில் நின்று “அவனிடம் கிளம்பச்சொல்” என்று மனைவியிடம் ஆணையிட்டார். வசுதேவன் பின்பக்கம் தொழுவருகே அமர்ந்திருந்தான். அன்னை வந்து தந்தை அழைப்பதைச் சொன்னபோது “நான் போகமாட்டேன்” என்றான். “முதலில் தந்தை சொல்வதற்கு அடிபணி…” என்று அன்னை கடுமையாகச் சொன்னபோது வசுதேவன் அருகே இருந்த தூணை இறுகப்பிடித்துக்கொண்டான்.
சற்றுநேரத்தில் சூரசேனர் அங்கே வந்தார். அவனைப்பார்க்காமல் திரும்பி நின்றபடி கடுமையான குரலில் “நான் உன்னிடம் கிளம்பும்படிச் சொன்னேன்” என்றார். “நான் வரப்போவதில்லை…” என்றான் வசுதேவன். “ஏன்?” என்று அவர் அவனை நோக்கி அறியாமல் திரும்பி கேட்டார். அவனுக்கென ஒரு குரலும் மொழியும் இருப்பதை அப்போதுதான் அவர் உணர்ந்தார். அவர் உடல் நடுங்க கைகள் பதறத்தொடங்கின. “நான் மாடுமேய்க்க விரும்பவில்லை” என்றான் வசுதேவன். “ஏன்? அதுதான் உன் குலத்தொழில். உன் தந்தையும் தாதையும் மூதாதையரும் செய்த தொழில் அது” என்றார் சூரசேனர்.
“நான் அதைச் செய்யவிரும்பவில்லை” என்றான் வசுதேவன். மெதுவாக தன் சமநிலையை வரவழைத்துக்கொண்ட சூரசேனர் “அப்படியென்றால் என்னசெய்யப்போகிறாய்?” என்றார். “நான் படிக்கிறேன்” என்றான் வசுதேவன். “படித்து?” என அவர் தாழ்ந்த குரலில் கேட்டார். “அரண்மனை ஊழியனாக ஆகிறேன்.” சூரசேனர் தாடை இறுக “எந்த அரண்மனையில்?” என்றார். “மதுராவில்” என்று வசுதேவன் சொல்லிமுடிப்பதற்குள் சூரசேனர் ஓங்கி அவனை உதைத்தார். அவன் தெறித்து தொழுவத்து மூங்கிலை மோதி விழுந்தான். அவர் கூரையிலிருந்த கழியை உருவி அவனை சுழற்றிச் சுழற்றி அடித்தார். விதவிதமான உதிரிச்சொற்களும் உறுமல்களும் அவர் வாயிலிருந்து வெளிவந்தன.
பின்பு மூச்சிரைக்க அவர் நிறுத்திக்கொண்டார். நுனி ஒடிந்திருந்த கழியை வீசிவிட்டு தொழுவத்தின் சாணிப்புழுதியில் கிடந்த மகனைப்பார்த்தார். அவன் உடம்பெங்கும் குருதித்தீற்றல்களும் தடிப்புகளுமாக அடியின் வடுக்கள் தெளியத் தொடங்கியிருந்தன. “இனி அச்சொல் உன் நாவில் எழுந்தால் உன்னைக் கொல்லவும் தயங்கமாட்டேன்” என்றார் சூரசேனர். விசும்பியபடி எழுந்து அமர்ந்த வசுதேவன் தன் உடலைக் குறுக்கி தொழுவத்தின் மூங்கிலை மீண்டும் பற்றியபடி “நான் இடையனாக மாட்டேன்… என்னை அழைத்துக்கொண்டுசென்றால் பாம்பிடம் கையை நீட்டுவேன்” என்றான்.
தலைநடுங்க அவனையே பார்த்துக்கொண்டு நின்ற சூரசேனர் ஏதும் பேசாமல் திரும்பி நடந்து மறைந்தார். அன்னை அவனைக் கூப்பிட்டு உடலுக்கு நெய்யிடுவதற்காக வந்தாள். அவள் கையைத் தட்டிவிட்டுக்கொண்டு அவன் ஓடிச்சென்று ஊர்மன்றில் நின்ற அரசமரத்தில் ஏறி உயர்ந்த கிளையில் அமர்ந்துகொண்டான். பசித்தபோது அரசமரத்தின் உலர்ந்த பிசினை கிள்ளி உருட்டி எடுத்து வாயிலிட்டு மென்றான். தேடிவந்த பிருதை அவன் மேலே இருப்பதைக் கண்டுபிடித்தாள். கீழே வந்து நின்று “அண்ணா இறங்கி வா” என்று அழைத்தாள்.
அவன் இறங்கிவந்து அவளுடன் நடந்தான். அவள் அவனுக்கு பால்கஞ்சி கொண்டுவந்து தந்தாள். “நான் இங்கிருந்து மதுராவுக்கே ஓடிவிடுவதாக இருக்கிறேன்” என்றான் வசுதேவன். “மதுராவின் அரசர் உக்ரசேனர் நமக்கு பெரியதந்தை. அவரிடம் சென்றால் என்னை அங்கேயே வைத்துக்கொள்வார். எனக்கு கல்வியும் அரசுப்பொறுப்பும் அளிப்பார்.” பிருதை “நான் எங்கே செல்வது?” என்றாள். வசுதேவன் சற்று சிந்தித்தபின் “நான் அங்கே சென்றபின் உன்னை வந்துகூட்டிச்செல்கிறேன்” என்றான்.
ஆனால் அவள்தான் முதலில் மதுவனத்தைவிட்டுச் சென்றாள். சூரசேனரின் தந்தை ஹ்ருதீகரின் தங்கை மாதவியை மார்த்திகாவதியை ஆண்ட போஜன் மணம்புரிந்துகொண்டான். அவர்களுக்குப் பிறந்த குந்திபோஜன் மார்த்திகாவதியின் அரசனானான். ஏழுமாதரை மணந்து பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருந்தபின்னரும் குந்திபோஜனுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. எட்டாண்டுகளுக்கு முன்பு யாதவர்களின் காளிந்திபோஜனம் என்னும் குலவிருந்து நிகழ்ச்சியில் குந்திபோஜனும் சூரசேனரும் பங்கெடுத்தனர். உணவுக்குப்பின் வெற்றிலைமென்ற சூரசேனர் தவறுதலாக அதை உமிழ்ந்தபோது அது குந்திபோஜனின் ஆடையில் பட்டுவிட்டது.
சூரசேனர் கைகூப்பி பொறுக்கும்படி கோரி, தானே அதை நீரள்ளி கழுவிவிடுவதாகச் சொன்னார். குந்திபோஜன் “சூரசேனரே, நீர் என்னுடைய முறைத்தமையன் அல்லவா? இதை அன்பின் அடையாளமாகவே கொள்கிறேன்” என்றான். முகம் மலர்ந்த சூரசேனர் “இந்தச் சொற்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்” என்றார். குந்திபோஜன் “விருஷ்ணிகுலம் அளித்த அன்னைக்காக போஜர்குலமும் கடன்பட்டிருக்கிறது” என பதில் சொன்னான்.
அன்று மாலை யமுனைக்கரையில் அவர்களனைவரும் மதுவருந்தி உரையாடிக்கொண்டிருக்கையில் குந்திபோஜன் தனக்கு குழந்தைகளில்லாமையால் அரசுதுறந்து வனம்புகவிருப்பதாகச் சொன்னான். அவனைச்சுற்றி யாதவகுலத்தின் அனைத்து குலத்தலைவர்களும் அமர்ந்திருந்தனர். மதுவின் மயக்கிலிருந்த சூரசேனர் உணர்வெழுச்சியுடன் எழுந்து “போஜர்களுக்கு விருஷ்ணிகள் மேலுமொரு அன்னையை அளிப்பார்கள். இப்போது என் மனைவி கருவுற்றிருக்கிறாள். அதில் பிறக்கும் பெண்குழந்தையை முறைப்படி உங்களுக்கு அளிக்கிறேன். அவள் உதரத்தில் உன் குலம்பெருகட்டும்” என்றான். மனம் மகிழ்ந்த குந்திபோஜன் “இது ஆணை அல்லவா?” என்றான். “ஆணை ஆணை ஆணை” என மும்முறை கையடித்து சொன்னார் சூரசேனர்.
ஆனால் செந்நிறப் பேரழகுடன் பிருதை பிறந்தபோது அவளை கையளிக்க முடியாது என்று சூரசேனரின் தாய் பத்மை உறுதியாக மறுத்துவிட்டாள். ஹ்ருதீகரின் குலத்தின் நீட்சியாக அவள் ஒருத்தியே இருக்கிறாள் என்றாள். குலநீட்சியாக பெண்மகவு அமையவில்லை என்றால் நீத்தாரன்னையரின் சினம் வந்துசேரும் என்று அச்சுறுத்தினாள். மும்முறை குந்திபோஜன் தன் தூதர்களை அனுப்பியும் சூரசேனரால் முடிவைச் சொல்லமுடியவில்லை. பத்மை மறைந்தபின்பு அவ்வாறு மகளை அளிப்பதை அவள் நீத்தாருலகிலிருந்து தடுப்பாள் என்ற எண்ணம் அவருள் வலுவாக எழுந்தது. ஆகவே மகளை அளிக்கவியலாது என்று பதிலிறுத்தார்.
குந்திபோஜன் அடுத்த காளிந்திவிருந்தில் குலமூதாதையர் முன்னால் சூரசேனரின் வாக்குறுதியை முன்வைத்து அறமுரைக்கும்படி கோரப்போவதாக சூரசேனர் அறிந்தார். நிலைகொள்ளாத உள்ளத்துடன் அவர் ஆயர்குலத்தின் மூத்தவர் சிலரிடம் அதைப்பற்றி வினவினார். சூரசேனர் வாக்குறுதியளித்தமைக்கு குலமூதாதையர் சான்றென்பதனால் அதை மறுக்க முடியாது. மகள்கொடை மறுத்தால் குந்திபோஜன் சூரசேனரை யாதவர்குலம் விலக்கிவைக்கவேண்டுமென்று வருணன் மேல் ஆணையாகக் கோருவான். அதற்கு அனைவரும் கட்டுப்பட்டாகவேண்டும்.
அதைத் தவிர்க்கும் வழி ஒன்றே என்றார் ஒரு முதியவர். யாதவர்குலம் பெண் குரல் கேட்காமல் எம்முடிவையும் எடுக்கமுடியாது. அதை மூதன்னையர் ஏற்கமாட்டார்கள். சபைமுன்னிலையில் பிருதை குந்திபோஜனுக்கு மகளாகச் செல்ல மறுத்தால் மூன்றுவருடத்துக்கு அம்முடிவை ஒத்திப்போட குலச்சபை ஒப்புதலளிக்கும். அப்படி மும்முறை ஒத்திப்போடமுடியும். அதற்குள் பிருதைக்கு பதினான்கு வயதாகிவிடும். அதன்பின் அவள் முடிவெடுக்கலாம். அவள் விரும்பவில்லை என்றால் அவளை கோர குந்திபோஜனுக்கு உரிமையில்லாதாகும்.
சூரசேனர் பிருதையை அழைத்து குந்திபோஜனின் நாட்டுக்குச் செல்ல விருப்பமில்லை என்பதை குலமன்றில் சொல்லும்படி கோரினார். மூன்று தமக்கையரையும் லவணர்குலத்துக்கு அளித்துவிட்ட நிலையில் விருஷ்ணிகுலத்தில் ஹ்ருதீகரின் குருதியாக எஞ்சியிருக்கும் கருவறை அவளுடையதே என்றார். கடைமகவாகிய அவளையே பத்து தமையன்களும் நம்பியிருப்பதைச் சொல்லி எவ்வண்ணம் சபையேறி எச்சொற்களைச் சொல்லி மறுப்பை வெளியிடவேண்டும் என்று பயிற்றுவித்தார். பிருதை அவரது சொற்களை நன்கு உளம்கொண்டு மீட்டுச் சொல்லவும் செய்தாள்.
யமுனைக்கரையில் குலக்கூடல் விழவு தொடங்கியது. ஆயர்குடிகள் கூடி கள்விருந்தும் ஊன்விருந்தும் மலர்சூழாட்டும் நீர்விளையாட்டும் ஆகோளாடலும் ஏறுகோளாடலும் செய்து மகிழ்ந்தனர். நாளிருண்டபின்னர் யமுனையின் கரையில் புல்வெளியில் அனைவரும் குழுமியபோது நறுவெற்றிலை கைமாறி மகிழ்ந்திருக்கையில் குந்திபோஜன் எழுந்து தன்குலத்துக்கு வாக்களிக்கப்பட்ட மகள்கொடையை சூரசேனர் நிகழ்த்தவேண்டுமென்று கோரினார். சூரசேனர் தன் மகள் பிருதை குந்திபோஜனின் அரண்மனைக்குச் செல்வதை விரும்பவில்லை என்று பதிலுரைத்தார். “அவளுடைய விருப்பே இக்குடியின் கொள்கையாகும்” என்றனர் மூத்தோர்.
பிருதையை அவைக்கு அழைத்தனர். அவள் வசுதேவனுடன் நடந்து வந்து மன்றமைந்திருந்த அரசமரமேடைக்குக் கீழே மேடைக்கல்லைப் பிடித்தபடி தலைகுனிந்து நின்றாள். அருகே வசுதேவன் நின்று மேடையிலமர்ந்திருந்தவர்களை தன் தெளிந்த விழிகளால் பார்த்துக்கொண்டிருந்தான். குலமூத்தாரான முதியவர் ஒருவர் “அன்னையே, இந்த மன்றுக்கு வருக” என்று அழைத்ததும் அவள் மேடையேறி முதியவர்கள் நடுவே நின்றாள்.
மலர்விளையாடலுக்காக அணிந்திருந்த வெண்ணிற ஆடையெங்கும் பலவகையான வண்ணங்கள் படிந்து பெரியதொரு மலர் போல நின்ற பிருதையிடம் முதியவர் “அன்னையே, தங்களை தங்கள் தந்தை தன் முறையிளவலாகிய குந்திபோஜருக்கு மகள்கொடையாக அளிப்பதாக வாக்குகொடுத்திருக்கிறார். அந்த வாக்குக்கு நாங்களனைவரும் சான்று. தங்களுக்கு குந்திபோஜரின் மகளாகச் செல்வதற்கு உடன்பாடுள்ளதா என்று தெரிவியுங்கள்” என்றார்.
பிருதை தலையைத் தூக்கி தெளிந்த விரிவிழிகளால் அவையை நோக்கி “குலமூத்தாரே, நான் என் தந்தையின் வாக்கின்படி குந்திபோஜருக்கு மகளாகச் செல்ல முழு விருப்பு கொண்டுள்ளேன்” என்றாள். அவளுடைய இனிய கூரிய குரலை அங்கிருந்த அனைவரும் கேட்டனர். சூரசேனர் அவளுடைய அக்குரலை அதற்கு முன்னர் கேட்டதே இல்லை. அவள் அவரிடம் தலையசைப்பாலும் ஓரிரு உதிரிச்சொற்களாலும் மட்டுமே அதுவரை உரையாடியிருந்தாள். தன்னை மறந்து பீடத்தை விட்டு எழுந்து “மகளே பிருதை!” என்றார்.
முதியவர் “அன்னையே, நம் குலவழக்கத்தையும் தாங்களறிந்திருக்கவேண்டும்… தங்கள் தந்தை தங்களை முறைப்படி நீர்வார்த்து குந்திபோஜருக்குக் கையளிப்பார். அதன்பின் உங்களுக்கும் நீங்கள் பிறந்த குலத்துக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. இக்குலத்தின் பெயரையோ சின்னங்களையோ உறவுகளையோ நீங்கள் தொடர முடியாது. இங்குள்ள பிறப்பிலும் இறப்பிலும் உங்களுக்கு செய்தி இல்லை. விழவுகளில் உரிமையும் உடைமைகளில் பங்கும் இல்லை. பிடுங்கிநடப்படும் நாற்றுபோல குந்திபோஜரின் நாட்டில் நீங்கள் வேரூன்றவேண்டும். உங்கள் குலம் குந்திபோஜரின் குலம். நீங்கள் போஜவம்சத்தைச் சேர்ந்தவரென்றே அறியப்படுவீர்கள்” என்றார். “ஆம் தெரியும்” என்று பிருதை தலையசைத்தாள். “நான் குந்திபோஜரின் மகளாகவே செல்லவிழைகிறேன்” என்று மீண்டும் சொன்னாள்.
குந்திபோஜன் மலர்ந்த முகத்துடன் எழுந்து கைகளைக் கூப்பியபடி “என் மூதாதையர் என் மீது கருணையுடன் இருக்கிறார்கள். எனக்கு மறுக்கப்பட்ட மகவுகளை எல்லாம் இதோ ஒரு பெண்ணுருவில் எனக்களிக்கிறார்கள் என் குலதெய்வங்கள்” என்றான். “அன்னையே, என் குலத்துக்கு வருக….உன் உதரத்தில் என் மூதாதையர் பிறந்தெழுக” என்று சொன்னபோது அவன் மனம் விம்மி கண்ணீர் விட்டு அழத்தொடங்கினான். கும்பிட்ட கைகளை நெற்றியிலமர்த்தி அழும் அவனை அவன் தோழனான பகன் தோளணைத்து ஆறுதல்படுத்தினான்.
அங்கேயே யமுனையின் நீரை மரக்குவளையில் அள்ளிக்கொண்டுவந்து பிருதையை குந்திபோஜனுக்கு நீரளிப்பு நிகழ்த்தினார் சூரசேனர். அவளுடைய சிவந்த சிறிய கையைப் பற்றி குந்திபோஜனின் கொழுத்தபெரிய கைகளுக்குள் வைத்து ‘அளித்தேன் அளித்தேன் அளித்தேன்’ என்று மும்முறை சொல்லி விலகியதும் அவருடைய அணைகளும் உடைய கண்ணீர் விடத்தொடங்கினார். அங்கிருந்த விருஷ்ணிகள் மட்டுமல்ல போஜர்களும் கண்கலங்கினர். பிருதை மட்டும் தெய்வச்சிலைகளுக்குரிய அலையற்ற முகத்துடன் நின்றாள்.
மேடைவிட்டிறங்கிய சூரசேனரின் கைகளைப் பற்றிக்கொண்டு விருஷ்ணிகுலத்திலேயே மூத்தவரான கார்கிகர் “என்ன செய்துவிட்டாய்! எதை இழந்துவிட்டாய்! அதோ மன்றில் அவள் நிற்கும் நிமிர்வைப்பார். அவள் எளிய ஆயர்குலத்துப்பெண் அல்ல. மண்ணில் வந்த பேரரசிகளில் ஒருத்தி. என்றோ ஜனபதங்களை அவள் ஆளப்போகிறாள். சதலட்சம் மானுடர்களின் விதியை அவள் வரையப்போகிறாள்” என்றார். “அவள் இறந்திருந்தால்?” என வெறுப்பில் கோணலாகிய முகத்துடன் ஈரம் நிறைந்த கண்களுடன் கேட்டார் சூரசேனர். “அவள் இறந்ததாக எண்ணிக்கொள்கிறேன்… ஆம் அவள் இறந்துவிட்டாள்.”
மன்றில் எழுந்த குலமூத்தாரான சோமகர் “இதோ இக்கணம் முதல் இந்த மகளை குந்திபோஜரின் குருதி என அறிவிக்கிறேன். இவள் இனி குந்தி என அறியப்படட்டும்” என்றார். ‘ஓம் அவ்வாறே ஆகுக!’ என அங்கிருந்த அனைவரும் வாழ்த்தி மலரை வீசினர்.
அங்கிருந்தே பிருதை குந்திபோஜனின் நகரான மார்த்திகாவதிக்குக் கிளம்பிச்சென்றாள். மார்த்திகாவதியில் இருந்து குந்திபோஜனின் அரசியான தேவவதியும் அவள் சேடிகளும் வந்த பெரிய கூண்டுவண்டி சாளரங்களில் செந்நிறத்திரைகள் நெளிய மார்த்திகாவதியின் சிம்மக்கொடி படபடக்க நின்றுகொண்டிருந்தது. காவலரும் சேவகரும் காத்து நின்றிருந்தனர்.
மன்றில் இருந்து இறங்கிய பிருதை தன் தாயிடம் சென்று தாள்பணிந்து வணங்கினாள். மரீஷையின் முகத்தில் அப்போதும் துயரம் தெரியவில்லை என்பதை அப்பால் நின்ற சூரசேனர் கண்டார். மரீஷை பிருதையின் தலையில் கைவைத்து ஆசியளித்தபின் அவள் கையைப்பற்றி சூரசேனரைநோக்கி கொண்டுவந்தாள்.
தன் ஒன்பது மைந்தர்களுடன் ஒரு சாலமரத்தடியில் நின்றிருந்த சூரசேனர் தணிந்த குரலில் மூத்தவனாகிய வசுவிடம் “நான் அவளை வாழ்த்தப்போவதில்லை. உங்கள் வாழ்த்துக்களும் அவளுக்கு கொடுக்கப்படலாகாது. நமது வாழ்த்துக்களின்றி அவள் சென்றாள் என்பது குலநினைவில் வாழட்டும். இது என் ஆணை” என்றார். அவர் என்னசெய்யப்போகிறார் என்பதை அவரது குலத்தவரின் ஆயிரம் விழிகள் அங்கே சூழ்ந்து கவனித்துக்கொண்டிருந்தன என அவர் அறிந்திருந்தார்.
திடமான காலடிகளுடன் நிமிர்ந்த தலையுடன் அவர்களை நெருங்கி வந்த மரீஷை முதலில் தன் மைந்தர்களை நோக்கி “மைந்தர்களே, உங்கள் தங்கையை வாழ்த்தி வழியனுப்புங்கள். உங்கள் ஒவ்வொருவரின் குருதியும் அவளுடன் எப்போதுமிருக்கவேண்டும்” என்று திடமான குரலில் ஆணையிட்டாள். அவளைப்போன்றே கரிய நிறத்துடன் பெரிய பற்களும் வெண்விழிகளுமாக நின்றிருந்த மூத்த மகன் வசு முன்னால் நகர்ந்து தலைவணங்கி “ஆணை அன்னையே” என்றான். அச்சொல்லை ஒருபோதும் அவன் தன்னிடம் சொன்னதில்லை என்பதை அக்கணத்தில்தான் சூரசேனர் அறிந்தார்.
தன் ஒன்பது மைந்தர்களும் நிரையாக நின்று தங்கள் காலை பணிந்து எழுந்த பிருதையை வாழ்த்துவதை சூரசேனர் திகைத்த விழிகளுடன் பார்த்து நின்றார். மரீஷை அவரிடம் “விருஷ்ணிகுலத்தவரே தங்கள் வாழ்த்துக்களை மகளுக்கு அளியுங்கள்” என கனத்த குரலில் ஆணையிட்டாள். அவளுடைய அந்தக்குரலையும் அதுவரை அவர் கேட்டதேயில்லை என்று சூரசேனர் உணர்ந்தார். அதை அவரால் மீறமுடியாதென்றும் அறிந்தார். குனிந்து வணங்கிய மகளின் தலையில் கைவைத்து “நன்மக்களைப் பெறு. உன் குலம் தழைக்கட்டும்” என நற்சொல்லிட்டார்.
அந்த ஒருநாளில் சூரசேனர் அவர் எழுபதாண்டுகளாக வாழ்ந்து வந்த வாழ்க்கையை அறிந்துகொண்டார். எவற்றின் மேல் நடந்தோமென்றும் எங்கே அமர்ந்திருந்தோம் என்றும் எதை உண்டோம் என்றும் உணர்ந்ததாக அவர் கார்கிகரிடம் பின்னர் சொன்னார். “என்னைக் கட்டியிருந்த அனைத்திலிருந்தும் விடுதலை அடைந்துவிட்டேன் மாமனே. நான் இன்று மீண்டும் சிறுமகவாகி அன்னையின் கைகளில் வாழ்கிறேன்” என்றார்.
பிருதை குந்திபோஜனுடன் மார்த்திகாவதிக்கு கிளம்பிச்சென்றபின் மூன்றுமாதம் கழித்து வசு தன் தந்தையின் ஓலையுடன் தன் கடையிளவல் வசுதேவனை அழைத்துக்கொண்டு மதுராவுக்குச் சென்று அங்கே ஆட்சிசெய்திருந்த உக்கிரசேனரின் அரண்மனையில் கல்வி கற்பதற்காகச் சேர்த்தான். வசுதேவன் கிளம்பும்போது சூரசேனரின் கால்களில் விழுந்து வாழ்த்துபெற்றான். அவன் தலையில் கையை வைத்து சூரசேனர் சொன்னார் “நீ உன் அறத்தை தேடிச் செல்கிறாய். அரசியல் உனக்கானதென்றால் அவ்வாறே ஆகுக. ஆனால்…”
சற்று தயங்கியபின் அவர் தொடர்ந்தார் “கண்ணீரினாலும் குருதியினாலும்தான் எப்போதும் அரசியல் ஆடப்படுகிறது. பிறருடைய கண்ணீரும் குருதியும் என்றே நாம் நினைப்போம். அவை நம் கண்ணீரும் குருதியும் என அறியும் கணம் ஒன்று வரும்…” அச்சொற்களை அப்போது புரிந்துகொள்ளவில்லை என்றாலும் அதன் ஒவ்வொரு ஒலியையும் வசுதேவன் வாழ்நாளெல்லாம் நினைவில் வைத்திருந்தான்.

4/6/14

பகுதி ஆறு: தூரத்துச் சூரியன்[ 2 ]

பகுதி ஆறு: தூரத்துச் சூரியன்[ 2 ]
தசபதம் என்றழைக்கப்பட்ட அடிக்காட்டுப்பகுதியின் யாதவர்குலத்தலைவராக இருந்த சூரசேனரின் கடைசிமைந்தனாகிய வசுதேவன் இளமையிலேயே தங்கை பிருதையிடம்தான் நெருக்கமானவனாக இருந்தான். அவன் பிறக்கும்போதே அவன் தந்தைக்கு வயதாகிவிட்டிருந்தது. நீண்ட நரைத்த தாடியும் வெண்ணிறமான தலைப்பாகையும் தோள்களில் போடப்பட்ட கனத்த கம்பிளிச்சால்வையும் காதுகளில் குலத்தலைமையின் அடையாளமான பொற்குண்டலங்களும் கொண்ட முதியவரைத்தான் அவன் தந்தையாக அறிந்திருந்தான். அவர் அவனிடம் பெரும்பாலும் பேசியதேயில்லை. அவர் பொதுவாக எவரிடமும் பேசுவதேயில்லை. யாதவர்கள் இளமையிலேயே சொல்லவிதலையும் விழைவவிதலையும் பழகி தங்கள் இயல்பாகக் கொண்டிருந்தனர்.
தசபதத்தின் தலைவராக இருந்த ஹேகயவம்சத்து ஹ்ருதீகர் மறைந்தபோது சூரசேனருக்கு பதினாறு வயது. அவர்களின் கிராமமான மதுவனம் தசபதத்தின் வடக்கு எல்லையில் இருந்தது. தசபதத்திலேயே அதுதான் பெரிய ஊர். பெரிய பிலக்‌ஷ மரங்களாலான வேலிக்குள் வட்டமாக அமைந்த இருநூறு இல்லங்களும் நடுவே அரசமரத்தடியில் ஊர்மன்றும் கொண்ட இடையர்கிராமமான மதுவனத்தின் நடுவே கனத்தமரங்களால் அடித்தளமிடப்பட்டு மரச்சுவர்கள்மேல் மரப்பட்டைக்கூரையிடப்பட்ட ஊர்த்தலைவரின் மாளிகை இருந்தது. முன்பொருகாலத்தில் கோசலமன்னரான சத்ருக்னன் வந்து தங்கிய மாளிகை அது என புகழ்பெற்றிருந்தது.
யாதவர்களில் முதன்மைக்குலமான விருஷ்ணிகளில் பிறந்த ஹ்ருதீகரின் மைந்தரான சூரசேனரை தசபதத்தின் நூற்றியாறு யாதவக்கிராமங்களில் வாழ்ந்த எட்டு குடிகள் இணைந்த அவையில் குடிச்சபைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அவருக்கு அக்குடிகளில் இளமையானதான லவண குலத்தைச்சேர்ந்த மரீஷையை மணம்புரிந்து வைத்தனர்.
லவணர்கள் பத்து தலைமுறைக்கு முன்புவரை தசபதத்துக்கு அப்பாலிருந்த சிலாமுகம் என்னும் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கும் யாதவர்களுக்கும் தலைமுறைதலைமுறையாக போர் நடந்துகொண்டிருந்தது. காட்டுக்குள் மேய்ச்சலுக்குச் செல்லும் கன்றுகளை லவணர் கவர்ந்துசெல்வதும் அதைத்தடுக்கமுயலும் யாதவர்களைக் கொல்வதும் அன்றாட நிகழ்ச்சியாக இருந்தது. லவணர்கள் காட்டை நன்கறிந்திருந்தார்கள். அவர்களின் விற்கள் திறம்கொண்டவையாகவும் அவர்களின் உள்ளம் இரக்கமற்றதாகவும் இருந்தது. அவர்களின் தலைவனாகிய மதூகன் யாதவர்களை விரும்பாதவனாக இருந்தான்.
சூரசேனரின் மூதாதையான கிருதவீரியனின் காலகட்டத்தில் அன்று யமுனைப்பகுதியை ஆட்சி செய்திருந்த கோசலநாட்டின் இக்‌ஷுவாகு வம்சத்து அரசர்களில் இளையவனும் பெரும்புகழ்ராமனின் இளவலுமாகிய சத்ருக்னனிடம் சென்று முறையிட்டனர். அவன் படையுடன் வந்து தசபதத்தை அடைந்தான். அவனுடைய படைகள் மலைஏறிச்சென்று லவணர்களை வென்றன. மதூகனை சத்ருக்னன் கொன்றான். மதூகனின் மகனாகிய மாஹன் தசபதத்தின் யாதவர்களுடன் ஒத்துச்செல்லவும் அங்கிருந்த ஏழு குடிகளுடன் எட்டாவதாக இணைந்துகொள்ளவும் ஒப்புக்கொண்டான்.
லவணகுலம் அவ்வாறாக அடிக்காட்டுக்கு இடம்பெயர்ந்தது. வேட்டையை விட்டுவிட்டு மேய்ச்சலுக்கு வந்தது. ஆனால் யாதவர்கள் லவணர்களை தங்களுக்கு நிகரானவர்களாக நினைக்கவில்லை. லவணர்கள் அப்போதும் வேட்டைக்காரர்களின் மனநிலையையும் வாழ்க்கையையுமே கொண்டிருந்தனர். காட்டுவேடர்களின் வழக்கப்படி அவர்கள் வருடத்தில் ஒருமுறை சித்திரைமுழுநிலவின் குலதெய்வபூசைநாளில் மட்டுமே நீராடினர். நீராடாமலிருப்பது காடுகளுக்குள் பிற விலங்குகளின் மோப்பத்துக்குச் சிக்காமல் உலவுவதற்குரிய வழிமுறையாக அவர்களால் நெடுங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த வழக்கம். அவர்கள் பிறர் தொட்ட உணவை உண்ணுவதோ பிறரை தங்கள் இல்லத்துக்கு அழைப்பதோ இல்லை. ஆகவே பிறரும் அவர்களை அப்படியே நடத்தினர்.
அவர்கள் தங்களுக்குள் மட்டும் லாவணம் என்னும் மொழியில் பேசிக்கொண்டனர். அவர்களின் பெண்களும் குழந்தைகளும் யாதவர்கள் பேசிய யாதகி மொழியை கற்றுக்கொள்ளவேயில்லை. குலத்தலைவர்கள் மட்டும் பொதுச்சபைகளில் மழலையில் யாதகி மொழியைப் பேசினார்கள். அவர்களின் மொழியே அவர்களை நகைப்புக்குள்ளானவர்களாக ஆக்கியிருந்தது. காட்டைவென்ற லவணர்களால் மொழியை வெல்லமுடியவில்லை. மொழியால் ஆன சமநிலத்தில் அவர்கள் அன்னியர்களாகவே இருந்தனர்.
யாதவர்களின் வழக்கப்படி குலத்தலைவராக அமர்பவர் எட்டு யாதவகுலங்களில் ஒன்றிலிருந்து மணம்கொள்ளவேண்டும். ஹ்ருதீகர் சிரு குடியில் இருந்தும் வைரி குடியில் இருந்தும் இரு மகளிரை மணம்புரிந்துகொண்டிருந்தார். அவர்களில் சிரு குடியைச் சேர்ந்த சம்பைக்கு தேவவாஹன் கதாதனன் என்னும் இருமைந்தர்கள் பிறந்தனர். வைரி குடியைச் சேர்ந்த பத்மைக்கு கிருதபர்வன் சூரசேனன் என்னும் இரு மைந்தர்கள் பிறந்தனர். யாதவர்களின் வழக்கப்படி இளமையிலேயே தேவவாஹனும் கதாதனனும் கிருதபர்வனும் தந்தையின் மந்தையைப்பிரித்து தங்கள் பங்குகளைப் பெற்றுக்கொண்டு புதிய மேய்ச்சல்நிலங்களை நோக்கிச்சென்றனர். அவர்கள் கங்கைக்கரையிலும் இமயத்தின் அடிவாரத்திலும் புதிய யாதவநிலங்களை அமைத்துக்கொண்டனர். சூரசேனர் தந்தையின் எஞ்சிய மந்தைகளுக்கு உரிமையாளராக தசபதத்திலேயே இருந்தார்.
குடிமூதாதையர் கூடிய சபையில் அடுத்ததாக சூரசேனர் லவணகுலத்தைச்சேர்ந்த பெண்ணை மணந்துகொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டது. லவணர்களை பிற யாதவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு அது இன்றியமையாதது என்றனர் குடிமூத்தார். ஹ்ருதீகரின் இரண்டாவது மனைவியும் சூரசேனரின் அன்னையுமான வைரிகுடியைச் சேர்ந்த பத்மை அதைக்கேட்டு கடும்சினமடைந்து கண்ணீருடன் கைதூக்கி அவச்சொல்லிட்டவளாக சபையில் இருந்து வெளியேறினாள். என் மைந்தனுக்கு பச்சைஊன் உண்ணும் குடியில் பெண்கொள்வதை விட நான் உயிர்விடுவேன் என்று சொல்லி இல்லத்தில் தன் அறைக்குள் சென்று கதவைமூடிக்கொண்டாள்.
பதினாறு வயதான சூரசேனர் கதவைத் தட்டி “நான் ஹ்ருதீகரின் மைந்தன் அன்னையே. நான் எனக்கென எதையும் செய்துகொள்ளமுடியாது. எந்தையின் ஆணையை மட்டுமே நான் நிறைவேற்றமுடியும். சபையில் வந்தமர்ந்திருக்கும் குண்டலதாரிகளான மூதாதையர் அனைவரும் என் தந்தைவடிவமேயாவர்” என்றார். “என் அன்னையாகிய நீ ஹ்ருதீகரின் துணைவி. அவரது ஆணையை நீயும் ஏற்றுக்கொள்ளவேண்டியவளே” என்றார். பத்மை உள்ளே பதில் சொல்லாமல் அழுதுகொண்டிருந்தாள். “நான் இந்தக் கதவுக்கு முன் உன் காலடியில் என அமர்ந்துகொள்கிறேன். நீ வாயில் திறந்தால் என் தந்தையின் மைந்தனாக வாழ்கிறேன். வாயில் திறக்கவில்லை என்றால் உள்ளே நீயும் வெளியே நானுமாக உயிர்துறந்து தந்தையை அடைவோம்” என்று சொல்லி சூரசேனர் வாயிலிலேயே அமர்ந்துகொண்டார்.
அன்னை வாயிலைத் திறக்கவேயில்லை. மைந்தன் கதவைவிட்டு நீங்கவுமில்லை. அந்த ஊண்துயில்நீப்பு நோன்பை சாளரங்கள் வழியாக நோக்கியபடி சூரசேனரின் விருஷ்ணிகுலத்து யாதவர்கள் முழுக்க அங்கேயே நின்றிருந்தனர். நான்காம் நாள் அன்னை உள்ளிருந்து மெல்ல “சூரசேனா சூரசேனா” என அழைத்தாள். மைந்தனின் ஒலி கேட்கவில்லை என்பதை உய்த்து மெல்ல கதவைச் சற்றே திறந்து நோக்கினாள். மயங்கி கதவில் சாய்ந்துகிடந்த மைந்தனைக் கண்டு அலறியபடி அள்ளி அணைத்துக்கொண்டாள். “நீ நினைப்பதே ஆகட்டும்….நீயன்றி நான் வேறுலகை அறியேன்” என்று அவள் கூவியழுதாள்.
அவ்வாறாக சூரசேனர் லவணகுலத்தைச்சேர்ந்த மரீஷையை மணந்தார். மரீஷை அவரைவிட மூன்றுவயது குறைந்தவள். ஆனால் அவள் அவரைவிட ஓரடி உயரம் கொண்டவளாகவும் இருமடங்கு எடைகொண்டவளாகவும் இருந்தாள். கன்னங்கரிய நிறமும் நதிநுரைபோல சுருண்டகூந்தலும் பெரிய பற்களும் கொண்டவளாக இருந்தாள். குடிச்சபையில் லவணர்களின் தலைவனாகிய கலன் தன் மூத்தமகளை சூரசேனருக்கு அறத்துணைவியாக அளிக்கவிருப்பதாகச் சொன்னபோதுதான் தந்தையின் பின்னால் இடையில் அணிந்த ஆட்டுத்தோல் ஆடையை முலைகளுக்குமேல் தூக்கி தோளில் முடிச்சுபோட்டு தலையில் சிவந்த காட்டுமலர் சூடி கழுத்தில் செந்நிறமான கல்மாலை அணிந்து நின்றிருந்த மரீஷையை சூரசேனர் கண்டார். இருளுக்குள் கிடக்கும் வெள்ளிக்காசுகள் போல அவள் கண்வெள்ளைகள் தெரிந்தன.
அவளைக் கண்டதுமே குடிச்சபையில் ஓர் அமைதி பரவியது. குடிமூத்தாரான காளிகர் தயங்கியபடி சூரசேனரிடம் மணம் கொள்ள அவருக்குத் தடையில்லை அல்லவா என்று கேட்டபோது “இல்லை, குடிமுறையே என் வழி” என்று அவர் சொன்னார். யாதவமுறைப்படி சூரசேனர் ஏழு கன்றுள்ள வெண்பசுக்களை மரீஷையின் தந்தையான கலனுக்கு கையளித்து அவர் மகளை கன்னிக்கொடையாகப் பெற்றுக்கொண்டார். அவள் கழுத்தில் விருஷ்ணிகுலத்தின் இலச்சினையான அக்னிவர்ண கருடனின் சின்னத்தைப் பொறித்த மங்கலத்தாலியை சூரசேனர் கட்டினார். மணமகள் அப்போது வழக்கப்படி நாணித்தலைகுனியாமல் திகைத்த வெண்விழிகளுடன் அனைவரையும் மாறிமாறி நோக்கியபடி நின்றிருந்தாள்.
மரீஷை விரல் தொட்ட அனைத்து பால்குடங்களும் திரிந்தன என்றாள் பத்மை. அவள் நடந்தபோது மரத்தாலான இல்லம் அதிர்ந்தது என்றனர் முதுபெண்டிர். அவளுக்கு நீராடும் வழக்கமோ பற்களைத் தீட்டும் முறையோ இல்லை என்றனர் ஆயர்மகளிர். அவளுக்கு யாதகி மொழியே தெரியவில்லை என்று சூரசேனர் கண்டுகொண்டார். செம்மொழியிலோ ஒருசொல்லும் அவளறிந்திருக்கவில்லை. அவளிடம் அவர் பேசிய சொற்களெல்லாம் பாறைமேல் மழை என வழிந்தோடின. செவியிழந்த பசுவை மேய்ப்பதுபோன்றது அவளுடனான காதலென அவர் அறிந்தார். அவர் அவளைப்பற்றி எவரிடமும் ஒரு குறைச்சொல்லும் சொல்லவில்லை. அவளிடம் பேசுவதற்கு கண்களாலும் கைகளாலும் ஒரு மொழியை அவரே உருவாக்கிக் கொண்டார்.
ஆனால் அவளை அவரது உடல் அறிந்திருந்தது. அவளுடைய உடலின் திடத்தையும் ஆற்றலையும் அவருடைய உடல் வழிபட்டது. காலம் செல்லச்செல்ல அவளுடைய நிறமும் வாசனையும் ஒலிகளும் அவருக்குள் பெரும் மனக்கிளர்ச்சியை நிறைத்தன. அந்த ஈர்ப்பை அவரே அஞ்சினார். அன்னையும் பிற விருஷ்ணிகுலத்தவரும் அதை அறிந்துகொள்ளலாகாது என்று அவர் நினைத்தார். ஆனால் அவரது கண்களைக் கண்டதுமே மூதன்னையர்கூட அதைத் துல்லியமாக அறிந்துகொண்டனர். அவர் அவர்களின் கண்களைச் சந்திக்காமலிருக்கையில் அவரது உடலின் அசைவுகள் வழியாகவே அறிந்துகொண்டனர்.
அதை அறிந்ததுமே பத்மை உரத்தகுரலில் வேறு எதையோ குறிப்பிட்டு கூச்சலிடுவாள். கண்ணீர் மல்கி மனக்குறைகளைச் சொல்லி அழுவாள். தன்னையே எண்ணி வருந்தி தன் நெஞ்சிலேயே அறைந்துகொள்வாள். சூரசேனர் அப்போது தலைகுனிந்து வெளியேறி தொழுவங்களுக்கோ பட்டிக்கோ ஊர்மன்றுக்கோ சென்றுவிடுவார். அவரைச் சந்திக்கும் விருஷ்ணிகுலத்துப் பெண்களெல்லாம் அவளைப்பற்றி இழித்துரைத்தனர். அந்த இழிவுரைகள் நாள்செல்லச்செல்ல மிகுந்தபடியே வந்தன. அதை உணர்ந்தபோதுதான் அவருக்கு அவள்மேலிருந்த பெருங்காதலை அறியாத எந்தப்பெண்ணும் அக்குடியில் இல்லை என அவர் புரிந்துகொண்டார்.
அவளுக்கும் அது தெரிந்திருந்தது. அவருடன் இருக்கையில் அவள் எப்போதும் மெல்லியகுரலில் பெரிய உடலில் இறுகிய கரிய தசைகள் அதிர சிரித்துக்கொண்டிருப்பாள். அவளுக்கு என்னவேண்டும் என்று அவர் எப்போது கேட்டாலும் அவரது மார்பில் தன் சுட்டுவிரலை ஊன்றி அவள் வாய்பொத்திச் சிரிப்பாள். ‘நீ அழகாக இருக்கிறாய்’ என்று அவளுடைய மொழியில் சொல்வதெப்படி என்று அவர் கற்றுக்கொண்டார். ஆனால் அச்சொற்கள் அவளுக்கு எந்தப் பொருளையும் அளிக்கவில்லை. பின்னர் நீ வலிமையானவள் என்று சொல்லத்தொடங்கினார். அதுவும் அவளுக்கு உவப்பளிக்கவில்லை. அவளிடம் ஒருமுறை நான் உன் குழந்தை என்று சொன்னார். அவள் பெருங்காதலுடன் அவரை தன் பெரிய மார்புக்குவைகளுக்குள் அணைத்து இறுக்கிக்கொண்டு லாவணமொழியில் எதையோ பாடுவதுபோலச் சொன்னாள்.
தன்காதலே மரீஷையை பிறரது வெறுப்புக்குள்ளாக்குகிறது என்றறிந்தபின்னர் சூரசேனர் காட்டிலேயே தங்கத் தொடங்கினார். மாதத்தில் இரண்டுமுறை மட்டும் மதுவனத்துக்கு வந்து அவளுடன் இருப்பார். அப்போதுகூட அவளை எருமை சேற்றுக்குழியில் விழுந்துவிட்டது என்றோ பசுவின் கால் ஒடிந்துவிட்டது என்றோ ஏதேனும் சொல்லி அருகே இருக்கும் காட்டுக்குக் கூட்டிச்சென்றுவிடுவார். அங்கே மரத்தின்மேல் கட்டப்பட்டிருந்த காவல்மாடத்தில்தான் அவளுடன் குலவினார். அவள் அவரிடம் எந்த மனக்குறையையும் சொல்லவில்லை. அவருடனிருக்கும்போதெல்லாம் அவளுடைய உடல் வழியாகவே அகம் தன்னை வந்தடைகிறது என அவர் அறிந்தார்.
VENMURASU_EPI_77_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
மரீஷை விருஷ்ணிகளின் குடியில் தன்னந்தனியாக வாழ்ந்தாள். சிலநாட்களிலேயே அவளுடைய இணையற்ற புயவல்லமையை பத்மை கண்டுகொண்டாள். அவள் கறந்தால் அனைத்துப்பசுக்களும் இருமடங்கு பால்கொடுத்தன. அவளால் ஒருநாளில் முந்நூறுபசுக்களுக்கு பால்கறக்க முடிந்தது. விழித்திருக்கும் நேரமெல்லாம் ஒருகணம்கூட நிலைக்காமல் மத்துச்சக்கரத்தைச் சுழற்றமுடிந்தது. அத்தனை வேலைகளையும் முடித்தபின் அவள் புறந்திண்ணையில் அருகே நின்றிருந்த மூத்த சாலமரத்தை அண்ணாந்து நோக்கி அதன் கிளைகளிலும் இலைகளிலும் ஆடும் அணில்களை கவனித்தபடி கனவுநிறைந்த கண்களுடன் அமர்ந்திருப்பாள். அப்போது சிலசமயம் மெல்லிய குரலில் லாவணமொழியில் எதையோ பாடிக்கொள்வாள்.
அவள் அழுவதையோ முகம்சுளிப்பதையோ ஆயர்மகளிர் கண்டதேயில்லை. அவள் முகத்தின் பெரியபற்கள் அவளுக்கு எப்போதும் புன்னகை நிறைந்த முகத்தை அளித்தன. சிறிய மூக்கும் கொழுத்துருண்ட கன்னங்களும் குழந்தைத்தன்மையைக் காட்டின. அவள்மேல் கனிவுகொண்ட ஆயர்மகளிரும் சிலர் இருந்தனர். அவர்களின் கன்றுகள் திமிறிக்கொண்டு செல்லும்போதோ எருமைகள் எழாமல் அடம்பிடிக்கும்போதோ மரீஷையைத்தான் அவர்கள் அழைக்கவந்தனர். அவர்களின் குழந்தைகளுக்கு அவளுடைய ஆற்றல்மிக்க உடல்மேல் வியப்பிருந்தது.
ஆனால் கண்மூடும் நாள்வரை பத்மை தன் மருகியை வெறுத்தாள். அவளை முகம்சுளிக்காமல் ஒருகணமேனும் பார்க்கவில்லை. கசப்புஇல்லாத ஒரு சொல்லையேனும் அவளிடம் சொல்லவில்லை. அவள் மணமுடித்துவந்த முதல்வருடமே முதல்குழந்தையைப் பெற்றாள். அவளைப்போலவே கனத்த பெரிய கரிய உடலுள்ள ஆண்குழந்தையை பத்மை தொட்டுப்பார்க்கவேயில்லை. ஆகவே பிற யாதவமகளிரும் அக்குழந்தையைத் தொடவில்லை. வசு அன்னையின் இடையிலேயே வளர்ந்தான். அடுத்தகுழந்தையை மரீஷை பெற்றபோது வசுவை சூரசேனர் காட்டுக்குக் கொண்டுசென்று அங்கே தன்னுடன் வைத்துக்கொண்டார்.
மரீஷை தொடர்ந்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டே இருந்தாள். தேவபாகன், தேவசிரவஸ், ஆனகன், சிருஞ்சயன், காகானீகன், சியாமகன், வத்ஸன், காவுகன் என அனைத்துக்குழந்தைகளும் மரீஷையைப்போலவே கன்னங்கரியவையாக, ஆற்றல்மிக்கவையாக இருந்தன. விருஷ்ணிகுலத்து யாதவர்கள் அனைவருமே வெண்ணிறமானவர்கள். காராம்பசுக்குட்டிகளைப் போன்ற குழந்தைகளைக் காண விருஷ்ணிகுலப்பெண்கள் திரண்டு வந்தனர். வாயில் கைவைத்து விழித்த கண்களுடன் குழந்தைகளை நோக்கி நின்றபின் தங்களுக்குள் கிசுகிசுப்பாகப் பேசிக்கொண்டனர். ஒருவரும் குழந்தைகளை கையால் தொட்டு எடுக்க குனியவில்லை.
முதல்மூன்று குழந்தைகளுக்கும் விருஷ்ணிகளின் குலவழக்கப்படி செம்மொழிப்பெயர்கள் வைக்கப்பட்டனர். அதன்பின் பத்மை அக்குழந்தைகளுக்கு அவர்களின் நிறத்தையே பெயராக வைத்தாள். ஒருகுழந்தைகூட அவள் மடியில் ஒருமுறையும் அமரவில்லை. பெயர்சூட்டுவிழாவின்போதுகூட அவை அன்னையின் மடியிலேயே அமர்ந்திருந்தன. பெயரிட்ட மறுநாளே அவை தந்தையுடன் காட்டுக்குச் சென்றன. மரீஷை அதன்பின் மூன்று பெண்குழந்தைகளைப் பெற்றாள். கரிணி, சிக்ஷை, சியாமை என்னும் மூவரும் அன்னையைப்போலவே கன்னங்கரிய நிறம்கொண்டவர்களாக இருந்தனர். அவர்களுக்கு நாமகரணம் முடிந்ததுமே அன்னையின் லவணகுலத்துக்கு அனுப்பப்பட்டனர்.
பதின்மூன்றாவது குழந்தையாக வசுதேவன் பிறந்தபோது பத்மை முதுமையடைந்திருந்தாள். மருகி கருவுற்றபோது அவள் அக்கருவையே வெறுத்தாள். பன்னிரு குழந்தைகளுக்குப் பின்னரும் மரீஷை எந்த மாறுதலுமில்லாமல் லவணர்குலத்திலிருந்து தோல்கூடையில் சீர்ப்பொருட்களை சுமந்து, தயங்கியகாலடிகளுடன் இல்லத்தில் நுழைந்தபோதிருந்ததைப் போலவே இருந்தாள். அவள் வயிறு கருமையாக வீங்கி மெருகு கொண்டபோது “இன்னொரு எருமைக்குட்டி உள்ளே வாழ்கிறது…” என்று பத்மை சொன்னாள். “விருஷ்ணிகுலத்து ஹ்ருதீகரின் குருதிக்கு தொடர்ச்சியில்லை என விதி எண்ணுகிறது போலும்” என்றாள்.
ஆகவே மகவுபிறந்த செய்தியை வயற்றாட்டி வந்து சொன்னபோது புறவாயிலில் கன்றுக்குட்டிக்கு கழுத்துநார் பின்னிக்கொண்டு அமர்ந்திருந்த அவள் எழுந்துகூட பார்க்க முனையவில்லை. “சரி, அதற்கென்ன? என் முத்திரைமோதிரத்தை அளிக்கிறேன். அதை நீரிலும் பாலிலும் தொட்டு நீயே அதன் உதடுகளில் வைத்துவிடு” என்று வயற்றாட்டியிடம் சொன்னாள். “பிராட்டி, குழந்தை செந்நிறமாக இருக்கிறது” என்று வயற்றாட்டி சொன்னபோது விளங்காதவள்போல ஏறிட்டு தன் முதிய விழிகளால் பார்த்தாள். அதன்பின் தீப்பிடித்துக்கொண்டவள் போல எழுந்து ஈற்றறை நோக்கி ஓடினாள்.
உள்ளே மூங்கில்கட்டிலில் தோல்மெத்தைமேல் மரீஷை கிடந்தாள். அவள் ஓடிவந்து குழந்தைமேல் இருந்த மரீஷையின் கரிய கையைத் தட்டி அகற்றிவிட்டு குனிந்து குழந்தையை நோக்கினாள். தாமரையிதழ்போலிருந்தது அது. “குளிப்பாட்டுங்கள்… குளிப்பாட்டி என்னிடம் அளியுங்கள்” என்று பத்மை பதறியகுரலில் கூவினாள். “இதோ விருஷ்ணிகுலத்து ஹ்ருதீகருக்கு கொடித்தோன்றல் பிறந்திருக்கிறது.”
வயற்றாட்டிகளில் ஒருத்தி “வழக்கத்துக்கு மாறாக குழந்தை மிகச்சிறியதாக இருக்கிறது பிராட்டி. அத்துடன் போதிய அளவு துடிப்புடனும் இல்லை. அன்னையின் உடலும் குளிர்ந்து வருகிறது” என்றாள். “குழந்தை வாழவேண்டும்… அதற்காக நீங்கள் எதைவேண்டுமென்றாலும் செய்யலாம்” என்று பத்மை சொன்னாள். அதற்குள் மயக்கத்தில் குருதி வழியக் கிடந்த மரீஷை லாவண மொழியில் ஏதோ முனகியபடி புரண்டுபடுத்தாள். அவள் உடல் அதிரத்தொடங்கியது. கைகால்கள் இருபக்கமும் விரிய எருமைபோல அவள் உறுமல் ஒலியை எழுப்பினாள்.
“மீண்டும் வலி வந்திருக்கிறது பிராட்டி” என்றாள் வயற்றாட்டி. பத்மை “அந்தக்குழந்தையை என்னிடம் கொடு… நீங்கள் அவளைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றாள். வயற்றாட்டி தோலாடையில் பொதிந்து கையில் கொண்டு வந்து கொடுத்த குழந்தையை மார்போடணைத்து அவள் கண்ணீர்விட்டாள். சற்று நேரத்தில் வயற்றாட்டி வந்து இன்னொரு பெண்குழந்தையும் பிறந்திருக்கிறது என்றாள். “குழந்தை என்ன நிறம்?” என்றுதான் பத்மை கேட்டாள். “இதே நிறம்தான் பிராட்டியே…நல்ல செந்நிறம்.” பத்மை கண்ணீர் வழிய மார்போடணைத்த குழந்தையுடன் மீண்டும் ஈற்றறை நோக்கி ஓடினாள்.
இருகுழந்தைகளும் பத்மையின் நெஞ்சிலேயே வளர்ந்தன. பாலூட்டும் நேரம் தவிர அவற்றைத் தீண்டுவதற்கு மரீஷை அனுமதிக்கப்படவேயில்லை. அவள் இல்லத்தின் அனைத்துப்பணிகளையும் செய்ய பத்மை இரவும் பகலும் குழந்தைகளுடன் இருந்தாள். மூத்தவனாகிய வசுதேவனும் தங்கை பிருதையும் பாட்டியையே அன்னை என்று அழைத்தனர். எப்போதேனும் வந்துசெல்லும் தந்தையை அவர்கள் அறியவேயில்லை. தந்தையுடன் காட்டில் வாழ்ந்த தமையன்களையும் லவணர்களின் ஊரில் வாழ்ந்த தமக்கையரையும் ஓரிருமுறைக்குமேல் அவர்கள் கண்டிருக்கவுமில்லை. அவர்கள் அறிந்த உலகம் பாட்டியால் சமைக்கப்பட்டிருந்தது. அதில் கருமையைப்பற்றிய கடும் வெறுப்பு நிறைந்திருந்தது.
வசுதேவன் இளமையிலேயே அன்னையை வெறுத்தான். அவள் தூய்மையற்ற மிருகம் என்றும் அவளருகே செல்வதும் தீண்டுவதும் இழிவானவை என்றும் நினைவறிந்த நாள்முதலே எண்ணத்தொடங்கினான். அவன் தனித்து நிற்கும்போது சுற்றுமுற்றும் பார்த்தபடி அருகே வரும் அன்னை அவனை அள்ளி அணைத்துக்கொண்டால் அவன் திமிறி கைகால்களை உதறி கதறியழுவான். அவள் கொண்டுவந்துகொடுக்கும் உணவுப்பண்டங்களை அவள் முன்னாலேயே வீசி எறிவான். அவள் தன்னை தொட்டுவிட்டால் ஓடிச்சென்று பாட்டியிடம் அதைச் சொல்வான். அவள் உடனே அவனைக் குளிப்பாட்டி மாற்றுடை அணிவிப்பாள்.
தன் நிழலாக கூடவே வந்துகொண்டிருக்கும் பிருதையிடம் “அவள் கரியவள். அசுரர்களின் குலத்தில் உதித்தவள்” என்று வசுதேவன் சொன்னான். “அசுரர்கள் மனிதர்களைக் கொன்று ஊனை உண்பவர்கள். ஆகவேதான் அவர்களின் பற்கள் பெரியதாக இருக்கின்றன. அவர்களின் வாயில் குருதிநாற்றம் வீசுகிறது. அவர்கள் இருட்டில் நம்மை பார்ப்பார்கள். அவர்களின் கண்கள் இருளில் வெண்மையாக ஒளிவிடுபவை.” இரவில் கொடுங்கனவுகண்டு பிருதை எழுந்து அலறி அழுவாள். பாட்டி அவளை அணைத்து தன் மரவுரிப்போர்வைக்குள் இழுத்துக்கொள்வாள்.
வசுதேவனுக்கு மூன்றுவயதிருக்கையில் பத்மை மறைந்தாள். மழை பெய்துகொண்டிருக்கையில் தொழுவத்தில் கட்டை அவிழ்த்துவிட்டு ஓடிய காராம்பசுவைப் பிடிப்பதற்காக அவள் வெளியே சென்றாள். கன்னங்கரிய நிறமும் வெள்ளிக்கண்களும் கொண்ட அந்தப்பசு கரியநிற அகிடுகள் கொண்டதாகையால் அதன் பால் பூசைக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்பட்டு தனியாக தொழுவத்தில் கட்டப்பட்டு வளர்க்கப்பட்டது. ஒளிக்குக் கூசும் தன்மை கொண்ட அதன் வெள்ளிக்கண்களில் மின்னல் ஒளி பட்டபோது அது மிரண்டு சுழன்று கால்களை நிலத்தில் ஊன்றி முழு எடையையும் கொண்டு இழுத்து கயிற்றை அவிழ்த்துக்கொண்டு மழைத்தாரைகளுக்குள் பாய்ந்தது. மழைநீர் முதுகில் பட்டதும் திகைத்து சருமம் சிலிர்த்து அசையாமல் தலைதாழ்த்தி நின்றது.
குளம்படிச் சத்தம்கேட்டு புறந்திண்ணையில் வசுதேவனையும் பிருதையையும் மடியில் வைத்துக்கொண்டிருந்த பத்மை அவர்களை இறக்கிவிட்டு இறங்கி ஓடிச்சென்று சேற்றில் இழுபட்ட அறுந்த கயிற்றைப் பற்றி இழுத்தாள். இழுபட்ட தலையை பக்கவாட்டில் தாழ்த்தி மூச்சு சீறி முன்னங்காலால் தரைச்சேற்றை கிளறியபடி கண்களை உருட்டிப்பார்த்தது. பத்மை கீழே கிடந்த தார்க்கோலை எடுப்பதற்காகக் குனிந்ததும் அது பாய்ந்து அவள் விலாவைமுட்டி தூக்கி வீசியது. வசுதேவன் அலறியபடி உள்ளே ஓடினான். வீட்டில் ஏவலர்கள் எவரும் இருக்கவில்லை. அவன் அறைகள்தோறும் ஓடியபோது தன்னையறியாமலேயே ‘அம்மா அம்மா’ என அலறிக்கொண்டிருந்தான்.
அவன்குரல் கேட்டு மத்துசுழற்றிக்கொண்டிருந்த மரீஷை அனைத்தையும் உணர்ந்துகொண்டு வெளியே ஓடினாள். மழையில் குனிந்து மூச்சுசீறி மிரண்டு நின்ற பசுவை அணுகி அதை கையாலேயே ஓங்கி அறைந்து கொம்புகளைப்பிடித்து வளைத்து துரத்திவிட்டு கீழே கிடந்த பத்மையை அணுகினாள். மீண்டும் முட்டுவதற்காகக் குனிந்த பசுவைநோக்கி வலக்கையை வீசியபடி கால்கள் சேற்றில் குழைந்து இழுபட மண்ணில் தவழ்ந்த பத்மை மருகியை நோக்கி கைநீட்டி தன்னை மீட்கும்படி ஓசையில்லாமல் மன்றாடினாள்.
பத்மையை சிறுகுழந்தைபோல மென்மையாக இருகைகளிலும் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் ஓடிவந்தாள் மரீஷை. அவளை உள்ளறையில் தோல்மெத்தையில் மெல்லப் படுக்கச்செய்தபின் மழையில் ஓடி மருத்துவச்சியை அழைத்துவந்தாள். வெளியே காயங்களேதும் இல்லை என்றாலும் பத்மையின் விலா எலும்புகள் ஒடிந்துவிட்டன என்றாள் அவள். சூரசேனருக்குச் செய்தியனுப்புவதே செய்யக்கூடியது என்றாள்.
மூச்சுவாங்கிக்கொண்டிருந்த பத்மை தன் உடைகளை மாற்றும்படி சொன்னாள். மருத்துவச்சியும் மரீஷையும் சேர்ந்து உடைகளை மாற்றி உலர்ந்தவற்றை அணிவித்தனர். பத்மையின் மூச்சுத்திணறல் ஏறியது. அவள் கண்கள் குழந்தைகளைத் தேடின. மரீஷை குழந்தைகளை அழைத்துச்சென்று அருகே நிறுத்தினாள். பத்மையின் வலக்கை செயலிழந்திருந்தது. இடக்கையால் இருகுழந்தைகளையும் வளைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டபோது இடக்கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து கன்னத்தில் ஓடியது.
பத்மை தன் தொண்டையைத் தொட்டு குடிக்க நீர் கேட்டாள். மரீஷை உள்ளே ஓடி இளஞ்சூடான பாலை மூங்கில்குவளையில் எடுத்துவந்தாள். அதை பத்மையின் அருகே கொண்டுவந்து வாயருகே நீட்டியபோது பத்மையின் கண்களுக்குள் கூரிய கத்தி திரும்புவதுபோல வெறுப்பின் ஒளியை வசுதேவன் கண்டான். பத்மை அந்தக்குவளையை வாங்கி ஊட்டும்படி மருத்துவச்சியிடம் சைகைகாட்டினாள். மரீஷை குவளயை மருத்துவச்சியிடம் கொடுத்தாள். அதை வாங்கி மருத்துவச்சி மெதுவாக ஊட்ட இரண்டு வாய்குடித்து மூன்றாம் வாயை வழியவிட்டு பத்மை இறந்துபோனாள்.
அன்று இரவு வீட்டு அறைகளெல்லாம் யாதவகுலத்து மகளிர் நிறைந்திருக்க முற்றத்தில் போடப்பட்ட ஓலைப்பந்தலுக்குள் முதியவர்கள் கூடி நிற்க நீப்புச்சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது பிருதையை கொல்லைப்பக்கம் சாம்பல்குழி அருகே அழைத்துக்கொண்டுசென்று வசுதேவன் சொன்னான் “நாம் பாட்டிக்காக அழக்கூடாது. அவள் தீயவள். ஆகவேதான் அவளை காராம்பசு முட்டிக்கொன்றது.” பிருதை பெரிய விழிகளை விழித்து அவனைப்பார்த்தாள். “நீ அழவேகூடாது” என்றான் வசுதேவன். சரி என்று அவள் தலையாட்டினாள்.
அவர்கள் வீடுமுழுக்க நிறைந்திருந்த கால்களினூடாக கைகளைப்பற்றிக்கொண்டு நடந்தனர். முற்றத்தில் பீடத்தில் தனியாக நரைத்த தாடியை நீவியபடி அமர்ந்திருந்த சூரசேனரை சுவர் மறைவிலிருந்து வசுதேவன் பார்த்துக்கொண்டே நின்றான். அவரிடம் துயரமேயில்லை என்பது நன்றாகவே தெரிந்தது. அது பாட்டியைப்பற்றிய அவனுடைய எண்ணம் பிழையல்ல என்று உறுதிப்படுத்தியது. அருகே சென்று ஏதோ சொன்ன அன்னையை நோக்கி அவர் புன்னகைபுரிவதை வசுதேவன் கண்டான். அன்னையை அவர் நேரடியாக நோக்குவதை அப்போதுதான் அவன் காண்கிறான். அக்கணமே அவரும் நல்லவரல்ல என்ற எண்ணத்தை அடைந்தான்.

4/5/14

பாணியார் வம்சம் எண்ணுமகள் பொன்னம்பூத்தி அம்மன் வழிபாடு

பாணியார் வம்சம் எண்ணுமகள்  பொன்னம்பூத்தி அம்மன் வழிபாடு

வருடா வருடம் சாங்கில்ய மகரிஷி கோத்திரம் பாணியார் வம்ச தாயாதிகள் பொள்ளாச்சி அடுத்துள்ள வக்கம்பாளையம் என்னும் கிராமத்தில் பங்குனி உத்திர நாளில் ஒன்று கூடி தங்கள் எண்ணு மக்களை(பெண் மக்கள் ) அழைத்து தங்கள் வம்ச எண்ணுமக்கள் தெய்வமாக விளங்கும் "பொன்னம்பூத்தி அம்மன் " என்னும் சவுண்டம்மன் அம்சமாக விளங்க கூடிய அந்த அம்மனுக்கு சிறப்பாக ஆற்று ஓரத்திலே படையல் போட்டு வழிபடுகிறார்கள். அப்பொழுது வரும் பெண்களுக்கு "மள்ளி தும்புசாது" என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது அதன் தாத்பரியம் என்ன வென்றால் பெண் மக்களுக்கு மடி நிறைய பொருட்களை வழங்குவார்கள் அதை ஏற்றுக்கொண்டு அவர்கள் தாங்கள் பிறந்தவீடும் பிறந்த குலமும் தழைக்க வாழ்த்துவார்கள். பொதுவாக நம் குலத்தில் பெண் மக்களுக்கு தான் முன்னுரிமை அவர்கள் நன்றாக இருந்தால் நாமும் நன்றாக இருப்போம் என்று கூறுவார்கள்.

அதற்காக தான் இந்த விழா. இந்த வருடம் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.



நன்றி திரு. முருகானந்தம்  , பொள்ளாச்சி

பகுதி ஆறு : தூரத்துச் சூரியன்[ 1 ]

பகுதி ஆறு : தூரத்துச் சூரியன்[ 1 ]
மார்த்திகாவதியை ஆண்ட குந்திபோஜனுக்கு உரிய கௌந்தவனம் என்ற பெயர்கொண்ட மலையடிவாரக் குறுங்காடு பர்ணஸா நதியின் கரையில் இருந்தது. சுற்றிலும் வெட்டப்பட்ட பெரிய அகழியால் உள்ளே வனமிருகங்கள் வரமுடியாதபடி செய்யப்பட்டு தவநிலையாக மாற்றப்பட்டிருந்தது. பதினைந்துநாட்களுக்கும் மேலாக பெய்துகொண்டிருந்த மழையால் அகழியில் சிவந்த மழைநீர் நிறைந்து இலைகள் சொட்டும் துளிகளாலும் சிற்றோடைகள் கொட்டும் நீராலும் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அகழிக்குமேல் போடப்பட்டிருந்த ஒற்றைமரம் வழியாக குந்திபோஜனின் அறப்புதல்வி பிருதையின் சேடியான அனகை வயதான மருத்துவச்சியை அந்தி இருளில் கொட்டும் மழைத்திரைக்குள் அழைத்துவந்துகொண்டிருந்தாள்.
கௌந்தவனத்தின் வலப்பக்கமாக ஓடி மலையிடுக்குவழியாகச் செல்லும் பெருங்குடிப்பாதையிலிருந்து பிரியும் கால்வழிகளின் முடிவில் ஏராளமான சிறிய ஆயர்குடிகள் இருந்தன. அவற்றில் ஒன்றைச்சேர்ந்த சுருதை என்ற கிழ மருத்துவச்சியை அனகை ஒரேஒருமுறைதான் கண்டிருந்தாள். அவள் சிறுமியாக இருந்தபோது சேடியான சூதப்பெண் ஒருத்திக்காக அவளைக் கூட்டிவந்திருந்தனர். அவள் இடைநாழிவழியாக தோலாடை அணிந்து, கையில் விளக்குடன் குனிந்து நடந்து செல்லும் காட்சியை கதவிடுக்குவழியாக அரைக்கணநேரம்தான் அனகை அப்போது பார்த்தாள். ஆனால் அவளுடைய ஊரின் பெயர் சாலவனம் என்பது அப்போது அவள் நினைவில்பதிந்திருந்தது என்பதை தேவை ஏற்பட்டபோது அது நினைவில் வந்தபோதுதான் அவள் அறிந்தாள்.
சாலவனம் மந்தைகள் நடந்து உருவாக்கிய காட்டுப்பாதையின் இறுதியில் இருந்தது. மதியம் சென்றால் அந்த இடையர்குடியில் எவருமிருக்கமாட்டார்கள் என்று அனகை அறிந்திருந்தாள். பதினைந்துநாட்களாக சரடறாமல் பொழிந்துகொண்டிருந்த மழை அன்றுகாலையில்தான் சற்று ஓய்ந்திருந்தது. மேயாமல் அடைந்திருந்த பசுக்களை காட்டுக்குள் கொண்டுசென்றே ஆகவேண்டும். அவள் வரும்போதே உள்காடுகளில்கூட மாடுகளின் கழுத்துமணி ஓசையைக் கேட்டாள்.
வானில் மேகக்கூட்டங்கள் பட்டி திறந்து வெளியேறும் ஆநிரைகளென ஒன்றை ஒன்று முட்டித்தள்ளிக்கொண்டு வடகிழக்காக நகர்ந்துகொண்டிருந்தபோதிலும் ஆங்காங்கே அவற்றில் விழுந்திருந்த இடைவெளிகள் வழியாக ஒளி கசிந்து காற்றில் பரவியிருந்தது. ஈரமான இலைப்பரப்புகள் ஒளியுடன் மென்காற்றில் அசைந்தன. மழைநீர் ஓடிய மணல்தடம் முறுக்கி விரித்த சேலைபோலத் தெரிந்த பாதை வழியாக அவள் பனையோலையாலான குடைமறையால் தன்னை மறைத்துக்கொண்டு நடந்தாள்.
சாலவனம் என்பது ஓங்கிய பெரிய மரங்கள் சூழ்ந்த ஒரு சோலைக்கு அப்பாலிருந்த ஐம்பது புல்வேய்ந்த குடில்கள்தான் என்பது அனகைக்கு ஆறுதலளித்தது. அந்த ஊரிலிருந்து எவரும் வெளியுலகைக் கண்டிருக்கப்போவதில்லை. அவளைக் கண்டாலும் அறிந்துகொள்ள மாட்டார்கள். ஊரைச்சுற்றி உயரமில்லாத புங்கமரங்களை நட்டு அவற்றை இணைத்து மூங்கிலால் வேலிபோட்டிருந்தார்கள். ஊருக்குள் நுழைவதற்கான பாதையை ஒரு பெரிய மூங்கில் தடுத்திருந்தது. அவள் அங்கே நின்று உள்ளே எட்டிப்பார்த்தாள்.
சுரைக்காய்க்கொடி படர்ந்த கூரைகொண்ட புற்குடில்களில் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. வட்டமாக அமைந்திருந்த குடில்களுக்கு நடுவே இருந்த முற்றத்தின் மையத்தில் நின்ற பெரிய அரசமரத்தடியில் கல்லாலான மேடையும் அருகே இருந்த பெரிய மரத்தொட்டிகளும் அமைதியில் மூழ்கிக்கிடந்தன. நூற்றுக்கணக்கான கட்டுத்தறிகள் அறையப்பட்டு அவற்றைச்சுற்றி மாடுகள் சுற்றிநடந்த வட்டத்தடங்கள் ஒன்றையொன்று வெட்டிக்கலந்து பரவியிருந்த முற்றத்தில் உடைந்த வண்டிச்சக்கரங்களும் நுகங்களும் ஓரமாகக் குவிக்கப்பட்டிருந்தன.
உள்ளே செல்வதா, அழைப்பதா என்று அவள் தயங்கிக் கொண்டிருந்தபோது அவளை நோக்கி ஒரு கிழவி குனிந்தபடி வறுமுலைகள் ஊசலாட வந்தாள். நரைத்த பெரிய கூந்தலை கொண்டையாக முடிந்து காதுகளில் மரத்தாலான குழைகள் அணிந்திருந்தாள். கழுத்தில் செந்நிறக் கற்களாலான மாலை. இடையில் ஆட்டுத்தோல் பின்னிய குறுகிய ஆடை. மூங்கிலுக்கு அப்பால் நின்றுகொண்டு கண்களுக்குமேல் கையை வைத்து அவளை நோக்கி “நீ யார்?” என்று கேட்டாள்.
அனகை “நான்…” என தயக்கமாகத் தொடங்குவதற்குள் “மருத்துவச்சியைத் தேடிவந்தாயா?” என்றாள். அனகை “ஆம்” என்றாள். “யாருக்காக?” என்றாள் கிழவி. “என் தோழிக்காக” என்றபோது அனகை தன் குரல் தடுக்குவதை உணர்ந்தாள். கிழவி தலையை ஆட்டினாள். “வேறு எதற்காக இங்கே தேடிவரப்போகிறாய்? வாசலில் இருந்து எட்டிப்பார்ப்பதைக் கண்டாலே தெரிகிறதே…” என தனக்குத்தானே முனகிக்கொண்டு “எங்கே இருக்கிறாள் அவள்?” என்றாள் கிழவி.
“இங்கிருந்து நான்குகாதம் தொலைவில்…” என அனகை சொல்வதற்குள் கிழவி “இந்தமழையில் அத்தனைதூரம் என்னால் வரமுடியாது. அவளை இங்கே கொண்டுவாருங்கள்” என்றபின் திரும்பிவிட்டாள். அனகை பதறி மூங்கிலைப்பிடித்தபடி “அய்யோ…இருங்கள்…நான் சொல்கிறேன்” என்றாள். “அவர்கள் இங்கெல்லாம் வரமுடியாது…”
கிழவியின் கண்கள் மாறுபட்டன. “அவர்கள் என்றால்?” என்றபடி மேலும் அருகே வந்தாள். அவளுடைய உடற்தோலில் இருந்து முடியுள்ள மிருகங்கள் படுக்குமிடத்தில் எழும் மட்கிய வாடை வந்தது. “யாரவள்? அரசகுலமா?” அனகை தலையை அசைத்தாள். கிழவி “அரசகுலமென்றால் இக்கட்டுகளும் அதிகம்… நாளை என்னை அரசன் கூட்டிக்கொண்டுசென்று கழுவில் ஏற்றிவிடுவான்” என்றாள்.
அனகை கைகூப்பி “என் தலைவி அரசிளங்குமரி… தங்களை எப்படியாவது அழைத்துவருகிறேன் என்று சொல்லி தேடிவந்தேன். வந்து உதவவேண்டும்” என்றாள். “இந்தமழையில் நான் அவ்வளவு தொலைவு வருவதென்றால்…” என கிழவி தொடங்கியதுமே “அதற்கு என்ன தேவையோ அதை இளவரசி அளிப்பார்கள்” என்றாள் அனகை. கிழவியின் கருகிய உதடுகள் புன்னகையில் மெல்ல வளைந்தன. “இரு, நான் சென்று என்னுடைய பெட்டியை எடுத்துவருகிறேன்” என்று திரும்பி ஊருக்குள் சென்றாள்.
கிழவி மான்தோலால் ஆன ஒரு சால்வையை எடுத்து தன்மேல் போர்த்தி, கையில் சிறிய மரப்பெட்டியுடன் வந்து மூங்கிலில் காய்வதற்காக மாட்டியிருந்த பனையோலையாலான குடைமறையை எடுத்து மடித்து தோளில் மாட்டிக்கொண்டு “போவோம்” என்றாள். அனகை அவளை பின் தொடர்ந்தாள். அந்த ஊரில் கிழவியைத்தவிர வேறு எவரும் இருப்பதுபோலத் தெரியவில்லை. ஒரு பெரிய கருவண்டு ரீங்கரித்தபடி மூங்கிலில் முட்டிக்கொண்டிருந்த ஒலியன்றி அமைதி நிறைந்திருந்தது.
கிழவி தொங்கிய தாடையைச் சுழற்றி இரண்டு பற்கள் மட்டுமே இருந்த வாயை மென்றபடி கூர்ந்த கண்களுடன் வேகமாக நடந்தாள். பசுவைப்போல கூனியபடி அவள் நடந்தபோது அனகை கூடவே ஓடவேண்டியிருந்தது. மையப்பாதைக்கு வந்ததும் “இந்தவழியாக சிறு வணிகர்கள் சிலர் வருவது வழக்கம்… நாம் காட்டுப்பாதையிலேயே செல்வோம்” என்று சொல்லி அவளே புதர்களுக்குள் சிவந்த மாணைக்கொடி போல மறைந்துகிடந்த ஒற்றையடிப்பாதைக்குள் நுழைந்தாள்.
காட்டுக்குள் சென்றதும் கிழவி சற்று நிதானமடைந்தாள். அனகையைப் பார்க்காமலேயே “இளவரசியின் பெயர் என்ன?” என்று கேட்டாள். “பிருதை…” என்று மெல்லியகுரலில் சொன்னாள் அனகை. “அவளா… குந்திபோஜர் தெற்கே மதுவனத்து விருஷ்ணிகளின் குலத்தில் இருந்து மகள்கொடை கொண்டு வந்த பெண், இல்லையா?” அனகை தலையை அசைத்தாள். “இளவரசி குந்தி… அவளை நான் முன்பொருமுறை பார்த்திருக்கிறேன். அவளுக்கென்ன?”
அனகை மெல்லியகுரலில் “நாட்கள் பிந்திவிட்டன” என்றாள். “ஆண் யார்?” என்றாள் கிழவி. அனகை ஒன்றும் சொல்லவில்லை. கிழவி திரும்பி மோவாயை முன்னால் நீட்டி உள்நோக்கி மடிந்து குவிந்திருந்த வாயால் புன்னகை செய்தாள். “யாதவப்பெண்களுக்கு எவ்வகை உறவும் ஒப்பளிக்கப்பட்டுள்ளதே” என்றாள். அனகை “இளவரசி இக்கருவை அஞ்சுகிறார்கள்” என்றாள்.
“ஆம், அஞ்சவேண்டிய இடத்தில் ஐம்புலன்களும் மயங்கும். அந்த லீலையால்தான் எங்கள் பிழைப்பு செல்கிறது” என உதடுகள் வாய்க்குழிக்குள் சென்று துடிக்க கிழவி சிரித்தாள். “வா…இன்னும் சற்று நேரத்தில் மழை வரும். அதன்பின் இக்காட்டில் நடக்கமுடியாது.” அனகை கிழவியின் உடலில் ஏறியபடியே வந்த விரைவைக் கண்டாள். அவளுக்கு கிழவியுடன் அந்தக்காட்டில் தனியாகச் செல்வதே அச்சமூட்டுவதாக இருந்தது.
காட்டுக்குள் நீராவி நிறைந்திருந்தது. களைப்பில் குளிர்ந்தெழுந்த வியர்வை காதோரத்திலும் முதுகிலும் வழிந்தது. காட்டுப்பசுமை அவள் மேல் ஈரமான பச்சைப் போர்வைகளை மேலும் மேலும் போர்த்தியடுக்கி மூடியது போல மூச்சுத்திணறலை அளித்தது. நனைந்த புதர்களுக்குள் பறவைகள் ஒலிஎழுப்பியபடி எழுந்து எழுந்து அமர்ந்தன. பிறகு மெல்லிய குளிர்காற்று வீசி வியர்வையை பனி போல உணரச்செய்தது. இலைகளெல்லாம் மடிந்து பின் நிமிர்ந்து காற்றில் படபடத்தன. தொலைவில் இலைகளில் நீர் பொழியும் ஒலி கேட்டது. சற்று நேரத்தில் மழை இறங்கத் தொடங்கியது.
கிழவி தன் தோளில் மடித்துப் போட்டிருந்த குடைமறையை விரித்து தலையில் அணிந்துகொண்டு பெட்டியை அனகையிடம் அளித்தாள். “இதை வைத்துக்கொள்… கீழே போட்டுவிடாதே. மரங்களில் முட்டவும்கூடாது” என்றபின் இருகைகளாலும் புதர்களை விலக்கிக்கொண்டு நடந்தாள். அனகை தன் குடைமறையை தலைமேல் போட்டுக்கொண்டு பெட்டியை மார்பில் சேர்த்து வைத்துக்கொண்டு நடந்தாள்.
மரங்களின் அடர்ந்த இலைக்கூரைக்குமேல் மழை ஓலமிட்டது. அடிமரங்கள் வழியாக நீர் வழிந்திறங்கியபோது அவை ஊர்ந்து செல்லும் பாம்புகளின் உடல்போலத் தோன்றின. நாகங்களாலான காடு வழியாக சென்றுகொண்டிருந்தாள். புதர்களுக்கு அடியில் கனத்த நாகங்கள் ஓடுவதுபோல மழைநீரோடைகள் சலசலத்தோடின. நூற்றுக்கணக்கான சிற்றருவிகள் காடெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தன. புதர்களுக்கு அப்பால் இருள்கருமைக்குள் நிற்கும் யானைத் தந்தங்கள் என அவ்வருவிகளைக் கண்டாள். கால்கள் நீரில் விரைத்து நீலநரம்புகள் தெரியத்தொடங்கின. அவளுக்கு ஒரு மங்கலான தன்னுணர்வு உருவானது, அவளை ஒரு நாகம் பார்த்துக்கொண்டிருப்பதுபோல. ஓசையில்லாமல் புதர்கள் வழியாகப் பின்தொடர்வதுபோல.
மழை நல்லதுதான் என அனகை எண்ணிக்கொண்டாள். மழையின் திரை அவர்களை முழுமையாகவே மூடி கண்ணுக்குத்தெரியாத மாயாவிகளாக ஆக்கியது. கௌந்தவனத்தின் அகழிக்கரையை அடைந்தபோதுதான் அவளுக்கு மனம் படபடக்கத் தொடங்கியது. தவநிலையின் முகப்பில் ரதங்கள் செல்லக்கூடிய பெரிய மரப்பாலம் உண்டு. பின்பக்கம் ஒற்றைமரம் ஒன்று அகழிக்குக் குறுக்காக விழுந்து கிடப்பதை ஆறுமாதங்களுக்கு முன்பு பிருதைதான் கண்டுபிடித்தாள். அதை சரியாக உருட்டிப்போட்டு ஒரு பாலமாக ஆக்கியவள் அவள்தான். அதன் வழியாகவே அவள் தவநிலையில் இருந்து காட்டுக்குள் சென்று வந்தாள்.
கிழவி “இதன் வழியாகவா?” என்று தயங்கினாள். “நான் பிடித்துக்கொள்கிறேன்” என்றாள் அனகை. கிழவி ஒன்றும் சொல்லாமல் வேகமாக நடந்து மறுபக்கம் சென்றுவிட்டாள். கையில் பெட்டியுடன் அனகைதான் சற்று தடுமாறினாள். அப்பால் கௌந்தவனத்தின் மரங்களெல்லாம் மழைநீராடி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. மான்கூட்டங்கள் மழையில் உடலைக் குறுக்கி பெரிய பலாசமரத்தின் அடியில் கூடிநின்றிருந்தன. காலடியோசை கேட்டு அவை திரும்பி காதுகளை விடைத்து பெரிய கண்களால் பார்த்தன. அனகையை அடையாளம் கண்டுகொண்டதும் நாலைந்து மான்கள் ஆர்வமிழந்து உடலை நடுக்கி காதுகளை அடித்துக்கொண்டபடி விலகி நின்றன.
அவர்கள் கடந்துசென்றபோது பின்பக்கம் மான்கள் மருண்டு ஓசையிட்டபடி கலைவதை அனகை கவனித்தாள். “என்ன?” என்றாள் கிழவி. அனகை தலையசைத்தாள். “காட்டுப்பூனையாக இருக்கும்” என்று கிழவி சொன்னாள். “அவை மழையில் பொதுவாக வெளியே வருவதில்லை. ஆனால் இப்படி நாட்கணக்கில் மழைபெய்தால் என்ன செய்யமுடியும்? பட்டினி கிடக்கமுடியாதல்லவா?”
தவநிலையின் குடில்கள் அனைத்தும் இருண்டு கிடந்தன. பிருதை இருந்த குடில் வாயிலில் மட்டும் மரவுரியாலான கனத்த திரை தொங்கியது. வாசலில் காலடியோசை கேட்டதும் உள்ளிருந்து பிருதை எட்டிப்பார்த்தாள். அனகை “கூட்டிவந்துவிட்டேன் இளவரசி” என்றாள். பிருதை அகல்விளக்கைக் கொளுத்தி கையில் எடுத்துக்கொண்டு வந்து கதவைத் திறந்தாள். வெளியே இருந்து வந்த பாவனையில் பார்க்கையில் பிருதையை முற்றிலும் புதியவளாகக் காணமுடிந்தது. வெளிறிய சிறியமுகத்தின் இருபக்கமும் கூந்தல் கலைந்து நின்றிருந்தது. வீங்கியதுபோன்றிருந்த முகத்தில் மெல்லிய சிறிய பருக்கள். கண்ணிமைகள் கனத்து சற்று சிவந்திருந்தன.
கிழவி வாசலில் நின்று தன் தோலாடைகள் இரண்டையும் களைந்தாள். அவளுடைய வற்றிச்சுருங்கி வளைந்த உடலை ஆடையின்றிப்பார்த்தபோது எழுந்து நிற்கும் பல்லி எனத்தெரிந்தாள். பிருதை சற்றே சுருங்கிய கண்களுடன் பார்த்துக்கொண்டு நின்றாள். ஆடைகளை நன்றாக உதறி கூரைக்குக் கீழே தொங்கவிட்டபின் கிழவி “எனக்கு ஈரமில்லாத ஓர் ஆடை வேண்டும்” என்றாள்.
“இதோ” என்று அனகை தன் ஆடையின் ஈரத்தைப் பிழிந்துகொண்டு உள்ளே சென்று ஒரு மரவுரியாடையைக் கொண்டுவந்து தந்தாள். கிழவி அதை அணிந்துகொண்டு பிருதையை நோக்கி “இவள்தான் இளவரசியா?” என்று கேட்டபின் உதடுகள் கோண சிரித்தாள். பிருதை கிழவியை வெறுப்பது அவள் புருவச்சுளிப்பில் இருந்தே தெரிந்தது. “அரசிக்குரிய அழகுடன் இருக்கிறாள். அரசிகளுக்குரிய ரகசியங்களும் கொண்டிருக்கிறாள்” என்று சொல்லி கிழவி மாடுகள் இருமுவதுபோலச் சிரித்தாள். “வா, உன்னை சோதனையிடுகிறேன்.”
பிருதை கண்களில் கூர்மையுடன் “உன் பெயரென்ன?” என்றாள். “சாலவனத்தின் யாதவர்களின் மருத்துவச்சி நான். என்பெயர் சுருதை” என்றாள் கிழவி. “உன்னை நான் அரண்மனையில் பார்த்திருக்கிறேன்…. உன்னை குந்தியாக தத்தெடுத்துக் கொண்டுவந்தபோது. அப்போது நீ சிறுமி…”
பிருதை “என்னிடம் பேசும்போது இன்னும் சற்று சொற்களை எண்ணிப்பேசவேண்டும் நீ” என்றாள். “இளவரசிக்குரிய மதிப்பு உன் சொற்களில் தெரிந்தாகவேண்டும்.” கிழவி கண்களில் நகைப்புடன் “என்னிடம் ரகசியங்கள் இல்லை… ரகசியங்கள் இருப்பது உன்னிடம்” என்றாள். பிருதை தணிந்த குரலில் “ஆம், என் ரகசியத்தை நீ அறிந்துகொண்டுவிட்டாய். அதுவே நீயும் உன் குலமும் ஆபத்தில் இருப்பதற்கான காரணம். நீ உயிர்வாழ்வதைப்பற்றி இனிமேல் நான்தான் முடிவெடுக்கவேண்டும்” என்றாள்.
VENMURASU_EPI_76
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
கிழவி திகைத்துப்போனவளாக தாடை விழுந்து குகைபோலத்திறந்த வாயுடன் பார்த்துக்கொண்டு சிலகணங்கள் நின்றாள். பின்பு “ஆணை இளவரசி” என்றாள். கைகளை மெல்லக் கூப்பி “நாங்கள் எளிய இடையர்கள்” என்றாள். “அந்நினைப்பை எப்போதும் நெஞ்சில் வைத்துக்கொள்” என்றாள் பிருதை திரும்பி உள்ளே சென்றபடி. கைகளை மாட்டின் கால்கள் போல முன்பக்கம் வீசி வைத்து கிழவி பின்னால் சென்றாள்.
புலித்தோலிட்ட மஞ்சத்தில் பிருதை அமர்ந்துகொண்டாள். “எனக்கு விலக்கு ஆகி மூன்றுமாதங்களாகின்றன. அது கருவா என்று நீ பார்த்துச் சொல்லவேண்டும்” என்றாள். கிழவி “ஆணை” என்றபின் பிருதையின் இடக்கையைப் பிடித்து நாடியில் தன் நான்கு விரல்களையும் வைத்தாள். “கண்களைக் காட்டுங்கள் இளவரசி… இமைகளை மூடவேண்டாம்” என்றாள். அவள் கண்களுக்குள் உற்று நோக்கியபடி வாயைமெல்வதுபோல அசைத்துக்கொண்டு நாடியைக் கணித்தாள். பெருமூச்சுடன் கையை விட்டுவிட்டு “கரு என்றுதான் எண்ணுகிறேன்” என்றாள். “ஆனால் சோதனையிட்டுத்தான் உறுதியாகச் சொல்லமுடியும்.”
அனகை படபடப்புடன் பிருதையைப் பார்த்தாள். அவளிடம் பெரிய முகமாற்றம் ஏதும் தெரியவில்லை. உதடுகள் மட்டும் இறுகி கன்னங்களில் குழிவிழுந்திருந்தது. கிழவி “கொதிக்கவைத்த வெந்நீர் தேவை” என்றாள். அனகை உள்ளே சென்று பின்பக்கம் உபசாலையில் விறகடுப்பின்மீது சிவந்து அனல்விட்டுக்கொண்டிருந்த செம்புப்பாத்திரத்தில் இருந்து நீரை அள்ளிக் கொண்டுவந்தாள். கிழவி தன் பெட்டியைத் தூக்கி அருகே வைத்து அதைத்திறந்து உள்ளிருந்து சிறிய உலோகப்புட்டிகளை எடுத்துப்பரப்பினாள். படிகக்கல்லால் ஆன பலவகைக் கத்திகளும் தங்கத்தாலான சிறிய ஊசிகளும் குதிரைவால் முடிச்சுருள்களும் பச்சிலைமருந்துகள் கலந்த படிகாரக்கட்டியும் அதனுள் இருந்தன. அனகை நிற்பதைக் கண்டு வெளியே செல்லும்படி கிழவி சைகை காட்டினாள்.
கிழவி திரும்ப அழைத்தபோது அனகை உள்ளே சென்றாள். கிழவி கைகளைக் கழுவியபடி “கருதான்” என்றாள். அனகை கால்கள் தளர்ந்து மெல்ல பின்னால் நகர்ந்து தூணைப்பற்றிக்கொண்டாள். அதை அவளும் கிட்டத்தட்ட உறுதியாகவே அறிந்திருந்தாள் என்றாலும் அதுவரைக்கும் அவ்வெண்ணத்தை சொற்களாக மாற்றாமல் இருந்தாள். காதில் அச்சொற்கள் விழுந்ததும் உடல்பதறி கால்கள் தள்ளாடத் தொடங்கின. ஓரக்கண்ணால் பிருதையைப் பார்த்தாள். சற்று சரிந்த இமைகளுடன் அவள் ஏதோ எண்ணத்தில் மூழ்கி அமர்ந்திருந்தாள். கிழவி “கரு தொண்ணூறுநாள் தாண்டியிருக்கிறது” என்றாள்.
“என்னசெய்வது இளவரசி?” என்று தொண்டை அடைத்து கிசுகிசுப்பாக மாறிய குரலில் அனகை கேட்டாள். “நாம் பேசாமல் திரும்பி அரண்மனைக்கே சென்றுவிடுவோம். எனக்கு இங்கே மிகவும் அச்சமாக இருக்கிறது… இங்கே…” அவளை பேசாமலிருக்க கைகாட்டியபின் பிருதை “இந்தக்கருவை அழித்துவிடமுடியுமா?” என்றாள். கிழவி “அழிப்பதுண்டு…ஆனால் அது சாஸ்திரவிதிப்படி பெரிய பாவம்” என்றாள். பிருதை “ஆம்….ஆனால் போரிலும் வேட்டையிலும் கொலைசெய்கிறோமே” என்றாள். கிழவி பணிந்து “தாங்கள் ஆணையிட்டால் செய்கிறேன்…ஆனால்…”
பிருதை தன் விழிகளைத் தூக்கி கிழவியைப் பார்த்தாள். “அரசகுலத்தில் நான் இதைச்செய்தேன் என வெளியே தெரிந்தால் என் உயிருக்கும் ஆபத்து நிகழலாம்” என்றாள் கிழவி. பிருதை கண்களைத் திருப்பி “நூறு பொற்காசுகளைப் பெற்றுக்கொள்” என்றாள். கிழவி பதற்றத்தில் “நூறு…” என தொடங்கி உடனே புரிந்துகொண்டு “…ஆம் இளவரசி… அவ்வண்ணமே செய்கிறேன். என்னிடம் மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. கரு இன்னும்கூட மிக இளமையான நிலையிலேயே உள்ளது. என்னிடம் உயர்ந்த சிட்டுக்குருவி இறகாலான பஞ்சு உள்ளது. அதில் இந்த நாக ரசாயனத்தை வைத்து…” என்று ஆரம்பித்தாள். “செய்!” என்று பிருதை சுருக்கமாக ஆணையிட்டாள்.
“படுத்துக்கொள்ளுங்கள் இளவரசி” என்றாள் கிழவி. அனகை தன் அதிரும் மார்பைப் பற்றிக்கொண்டு பற்களைக் கிட்டித்தபடி நின்றாள். கீழே விழுந்துவிடுவோமா என்ற அச்சம் அவளுக்கு ஏற்பட்டது. கிழவி தன் கைகளை நீரால் மீண்டும் கழுவிக்கொண்டாள். பெட்டிக்குள் இருந்து நீளமான மெல்லிய வெண்கலக்கம்பி ஒன்றை எடுத்து அதை சிறு வெண்கலப்புட்டியில் இருந்து எடுத்த இளஞ்செந்நிறமான திரவத்தில் முக்கிய துணிச்சுருளால் துடைத்தாள்.
“இளவரசி… இது சற்றே வலிமிக்கது. தாங்கள் விரும்பினால் அஹிபீனாவின் புகையை அளிக்கிறேன். அது வலியை முழுமையாகவே இல்லாமலாக்கிவிடும்” என்றாள் கிழவி. பிருதை “இல்லை… நான் வலிக்கு அஞ்சவில்லை” என்றாள். “அத்துடன் நான் இந்த வலியை அடையவும் வேண்டும். அதுதான் முறை” என்றாள். கிழவி தயங்கி “மிகவும் வலிக்கும்…” என்றாள். “வலிக்கட்டும்” என்றாள் பிருதை. கிழவி அனகையிடம் “நீ இளவரசியின் இரு கைகளையும் தோள்களையும் மஞ்சத்துடன் சேர்த்துப் பற்றிக்கொள்ளவேண்டும். வலியில் அவர்கள் தன்னையறியாமல் கையை வைத்து தட்டிவிட்டால் ஆபத்து.”
“தேவையில்லை” என்றாள் பிருதை. கிழவி இமைக்காமல் சிலகணங்கள் பார்த்துவிட்டு “பொறுத்தருளவேண்டும் அரசியே, நாங்கள் அஹிபீனா அளித்தபிறகும்கூட கைகால்களை இறுக்கமாகக் கட்டியபின்னரே இதைச்செய்வது வழக்கம்” என்றாள். “அஞ்சவேண்டியதில்லை…செய்!” என்று பிருதை சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டாள். அங்கிருந்து விலகிச்சென்றால்போதும் என்று அனகை எண்ணினாள். தொண்டை வறண்டு வாய் தோலால் ஆனதுபோலத் தோன்றியது.
கிழவி சிறிய வெண்கலப்புட்டியைத் திறந்தாள். அதற்குள் நீலநிறமான நாகரசாயனம் இருந்தது. இன்னொரு மரச்சம்புடத்திலிருந்து மெல்லிய சுருளாக இருந்த சாம்பல்நிறமான சிட்டுக்குருவியின் இறகுச்சுருளை எடுத்து அதை அந்தப் புட்டியில் இருந்த ரசாயனத்தில் நனைத்தாள். சாதாரணமாக உதறிக்கொண்டிருக்கும் கிழவியின் மெலிந்துசுருங்கிய கைகள் அப்போது நடுங்கவில்லை என்பதை அனகை கவனித்தாள். அதைச்செய்யும்போது கிழவியின் அனைத்துப் புலன்களும் சித்தமும் ஒன்றுகுவிகின்றன என்றும் அப்போதுதான் அவள் தன்னுடைய உச்சநிலையில் இருக்கிறாள் என்றும் தோன்றியது.
கிழவி அந்தச் சுருளை கம்பியின் நுனியில் வைத்து கவனமாகச் சுருட்டினாள். அது ஒரு சிறு எரியம்பு போல ஆகியது. அதன் நுனி ஓவியத்தூரிகைபோல கூர்ந்திருந்தது. அந்த நுனியில் மேலும் நாகரசாயனத்தைத் தொட்டாள். அதை முகத்தருகே கொண்டுவந்து கவனித்தாள். அப்போது அவள்முகத்தில் ஒரு தியானபாவனை கூடியது. உதடுகள் உள்ளே மடிந்து மெல்ல அதிர வாய் சேற்றுக்குழிபோலத் தெரிந்தது. வளைந்த நாசி நுனி மேலுதட்டுக்குமேல் நிழலை வீழ்த்தியது. அவள் கண்களில் தெரிவது ஒரு வெறுப்பு என அனகை எண்ணிக்கொண்டாள். யாரிடம்? ஆனால் யாரிடமென்று இல்லாமல் விரியும் வெறுப்புக்குத்தான் அத்தனை அழுத்தம் இருக்கமுடியும்.
கிழவியின் வாய் புன்னகை போல் கோணலாகியது. கம்பியை கையிலெடுத்துக்கொண்டு அவள் முன்னால் நகர்ந்தாள். தன் முழங்காலை மெத்தென ஊன்றுவதற்காக மஞ்சத்துக்குக் கீழே கிடந்த பழைய மரவுரியை இடதுகையால் அவள் இழுத்தபோது அதற்குள் இருந்து சுருள் மூங்கில் புரியவிழ்ந்தது போல மிகப்பெரிய பாம்பு ஒன்று சீறி எழுந்து தலைசொடுக்கி அவள் கன்னத்தைத் தீண்டியது. அவள் திடுக்கிட்டு கம்பியை உதறி கன்னத்தைப்பற்றியபடி அலறிக்கொண்டு பின்னால் சரிந்தாள். பாம்பு நிழல்நெளிந்தோடும் வேகத்தில் அவளுடைய கால்கள் மேலேறி வளைந்தோடி அறையின் மூலையிலிருந்த மரப்பெட்டியை அணுகி அதன் இடுக்கில் தலை வைத்து வால் நெளிய உடலை சுருட்டி உள்ளே இழுத்து பதுங்கிக்கொண்டது.
பிருதை மஞ்சத்தில் எழுந்தமர்ந்து உடைகளை சீர்திருத்திக்கொண்டு பாம்பைப்பார்த்தாள். நாகம் இரண்டரை வாரை நீளமிருந்தது. கருமையான பசுஞ்சாணியின் நிறம். அதன் பத்தியில் மஞ்சள்நிறமான வரிகள் பத்தி விரிவதற்கு ஏற்ப அசைந்தன. பத்தியின் அடிப்பகுதி வெண்பழுப்பு கூழாங்கல்மணிகளை நெருக்கமாகக் கோர்த்ததுபோல திரிசூல வடிவத்துடன் நெளிந்தது. குட்டியானையின் துதிக்கையளவுக்கு கனமிருந்தது அது.
பிருதை அப்போதும் நிதானமிழக்கவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தபின் பாம்பின் மீதிருந்த விழிகளை விலக்காமலேயே மெல்ல கையை நீட்டி அறைமூலையில் இருந்த கழியைக் கையிலெடுத்தபடி எழுந்தாள். அவளுடைய அசைவைக் கண்டு அதற்கேற்ப தலையை அசைத்துப்பார்த்துக்கொண்டிருந்த நாகம் சிவந்த நாக்கு பறக்க தலையை தரையில் வைத்தது. அதன் மணிக்கண்களில் சுடரொளி மின்னுவதுபோலிருந்தது.
பிருதை ஓரடி எடுத்துவைத்ததும் சட்டென்று அவள் இடுப்பளவு உயரத்துக்கு எழுந்து பத்தியை விரித்து உடல் வீங்கி புடைத்து சீறியது நாகம். அனல்கதி செந்நாக்கு துடிக்க தலையை அசையாமல் நிறுத்தி அவளைப் பார்த்தது. கழியின் நுனி சற்றே அசைந்தபோது அவ்வசைவை அந்த நாகத்தின் தலையும் பிரதிபலித்தது. அதன்பின்பக்கம் கரிய உடலின் சுருள்கள் வெவ்வேறு திசையிலான அசைவுகளின் குவியலாகத் தெரிந்தன. இருண்ட ஒரு நீர்ச்சுனையின் சுழிப்புபோல.
“ராஜநாகம்” என்று பிருதை சொன்னாள். “இங்கே உள்ளது அல்ல. இங்கே இவ்வளவு மயில்கள் இருக்கின்றன. இது அங்கே காட்டிலிருந்து வந்திருக்கிறது…” அனகை கிசுகிசுப்பான குரலில் “எப்படி?” என்றாள். “நீ வரும்போது உன் பின்னால் வந்திருக்கிறது…” அனகை மெதுவாக பின்னால்நகர்ந்தாள். பிருதை கழியை நாகத்தின் முன்னால் தரையில் நாலைந்துமுறை தட்டினாள். நாகம் தலையை பின்னுக்கிழுத்துக்கொண்டு சட்டென்று ஒருமுறை நிலத்தைக் கொத்தியது. அந்த தட் ஒலியை அனகை தன் நெஞ்சுக்குள் கேட்டாள்.
பிருதை கழியை பின்னால் இழுத்துக்கொண்டு “அது நம்மை ஒன்றும் செய்யவிரும்பவில்லை” என்றாள். நாகம் மெல்ல பத்தியைச் சுருக்கி தரையில் தலையை அசையாமல் வைத்துக்கொண்டு உடலை மட்டும் சுருள்களாகச் சுழற்றி இழுத்துக்கொண்டது. நெளியும் வால் மரப்பெட்டியின் இடுக்கிலிருந்து வெளிவந்ததும் எய்யப்பட்ட அம்புபோல சீறி கதவுவழியாக வெளியே பாய்ந்தது. வெளியே முற்றத்தில் பரவியிருந்த சேற்றில் சிதறிக்கிடந்த அறைவெளிச்சத்தைக் கலைத்தபடி வளைந்து ஓடி இருளுக்குள் மறைந்தது. அது சென்ற தடம் சேற்றில் சிறிய அலைவடிவம்போலத் தெரிந்தது.
கீழே கிழவி மல்லாந்து நெளிந்துகொண்டிருந்தாள். வாயைத்திறந்து நாக்கு வெளியே நீள கையை வேகமாக அசைத்தபடி ஏதோ சொல்லமுயன்றாள். அவளுடைய வலதுகாலும் வலது தோளும் வலிப்புவந்தவைபோல அசைந்தன. பிருதை குனிந்து கிழவியின் முகத்தைப்பார்த்தாள். “முகத்திலேயே கொத்திவிட்டது. ஒன்றும் செய்வதற்கில்லை” என்றாள். கிழவியின் கழுத்தில் தசைநார்கள் அதிர்ந்தன. வாய் ஒருபக்கமாகக் கோணி இழுத்துக்கொள்ள எச்சில் நுரை கன்னம் வழியாக வழிந்தது. குருதிக்குழாய்கள் நீலநிறமாக உடலெங்கும் புடைத்தெழத் தொடங்கியிருந்தன.
பிருதை அவள் கையைப்பிடித்துக்கொண்டாள். “அந்தக் குழந்தை…அதற்கு நாகம் துணை” என்றாள் கிழவி. அவள் கண்கள் புறாமுட்டைகள் போல வெண்மையாக பிதுங்கி நின்றன. “நாகவிஷத்தை நான் எடுத்தபோது அந்தக் குழந்தை சிரித்தது… நான் அதைக்கேட்டேன்…” அவள் கைகள் பிருதையின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டன. நீரில் நீந்துபவள் போல வலதுகாலை இருமுறை அடித்து மார்பை மேலேதூக்கினாள். பின்பு கைப்பிடி தளர கண்கள் மேலே செருகிக்கொண்டன. மார்பும் மெதுவாகக் கீழிறங்கி முதுகு நிலத்தில் படிந்தது.
பிருதை எழுந்து “வீரர்களைக் கூப்பிட்டு இவளை அகற்று… உடனே நீயே மதுராவுக்குச் சென்று என் மூத்தவரை வரச்சொல்!” என்று ஆணையிட்டாள். அவளிடம் மேலும் தற்சமன் கைகூடியிருப்பதைப்போல அனகை எண்ணிக்கொண்டாள்.