அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

2/14/14

பகுதி ஏழு : தழல்நீலம்[ 3 ]

பகுதி ஏழு : தழல்நீலம்[ 3 ]
செஞ்சதுப்பில் உழுதுவாழும் காட்டுப்பன்றி மதமெழுந்து நகர்நுழைந்ததுபோல சிகண்டி காட்டிலிருந்து வெளியே வந்தான். மூன்று மாதகாலம் காட்டில் பெரும்பசியுடன் உண்டதனால் திரண்டுருவான கரிய உடலும் எரியும் சிறுவிழிகளும் தோளில் மூங்கில்வில்லும் அம்புமாக இளங்காலை வேளையில் அவன் நுழைந்த முதல் சிற்றூரின் பூசகன் திகைத்து எழுந்து நின்றான். மெல்லியதாடியும் மீசையும் கொண்ட முகமும் சிற்றிளம் முலைகளும் கொண்டிருந்த சிகண்டி அவனை நோக்கி ‘உணவு’ ஆணையிட்டான். பன்றி உறுமல் என எழுந்த அக்குரலைக் கேட்டதும் பூசகன் அவனை அறிந்துகொண்டான். “தேவி எங்கள் சிற்றாலயத்தில் எழுந்தருளுங்கள். எங்க நிலங்கள் வளம் கொழிக்கட்டும். எங்கள் குழந்தைகள் பெருகட்டும்” என்று வணங்கினான்.
ஊரின் தெற்குமூலையில் கட்டப்பட்டிருந்த வராஹியன்னையின் ஆலயமுற்றத்தில் அமர்ந்து அவன் முன் ஊரார் படைத்த உணவுக்குவையை கடைசி பருக்கை வரை அள்ளிவழித்து உண்டான். உண்ணும்போது சருகை எரித்து எழும் நெருப்பு போன்ற ஒலி அவனிடமிருந்து எழுவதை அவன் கைகளும் நாக்கும் உதடுகளும் தீயின் தழலாகவே நெளிவதை ஊரார் கண்டனர். அவன் கையை உதறிவிட்டு எழுந்து ஊரைவிட்டு நீங்கியபோது அவன் காலடிபட்ட மண்ணை அள்ளிக்கொண்டுசென்று வயல்களில் தூவ வேளாண்மக்கள் முட்டிமோதினர்.
நாற்பத்தெட்டுநாள் நடந்து சிகண்டி பாஞ்சாலத்தைச் சென்றடைந்தான். சத்ராவதி நகரின் விரிந்த கோட்டைவாயில் முன்னால் எரிவிழி அம்பையின் சிற்றாலயம் இருந்தது. அதற்குள் வராகி மேல் ஆரோகணித்தவளாக ஒருகையில் நெருப்பும் மறுகையில் அருள்முத்திரையுமாக எரிவிழியன்னை அமர்ந்திருந்தாள். அவள் கூந்தல் நெருப்பாக எழுந்து அலையடித்து நின்றது. சிறுவிளக்கில் நெய்ச்சுடர் அதிர புதிய செங்காந்தள் மலர்மாலை சூடி அமர்ந்திருந்த அன்னையின் ஆலயத்துக்குள் நுழைந்த சிகண்டி அந்த மாலையை எடுத்து தன் கழுத்தில் அணிந்துகொண்டான்.
அதைக்கண்டு கோட்டைமுன் நின்ற காவலன் சீறிச்சினந்து வேல்தூக்கி ஓடிவந்தான். அவன் எழுப்பிய ஒலி கேட்டு நடந்தவை என்ன என்று ஊகித்த பிறரும் வேல்களும் வாள்களுமாக ஓடிவந்தனர். கோட்டைமுகப்பில் சென்றுவந்துகொண்டிருந்தவர்கள் திகைத்து ஒருபக்கம் கூடினர். முன்னால்வந்த நூற்றுவர்தலைவன் ஓங்கிய ஈட்டியுடன் சிகண்டியைக்கண்டு அஞ்சி செயலிழந்து நின்றான். மின்னிச் சேர்ந்தெழுந்த ஆயுதங்களைக் கண்டும் அரைக்கணம் அவன் கைகள் வில்லைநாடவில்லை. அவன் விழிகள் இமைக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவராக பின்னடைந்தனர்.
“நான் அம்பை அன்னையின் மகன்” சிகண்டி சொன்னான். “என்னை பாஞ்சால மன்னனிடம் அழைத்துச் செல்லுங்கள்!” நூற்றுக்குடையவன் வணங்கி “பாஞ்சாலத்தின் இறைவி, இதோ இந்நகரம் பதினாறாண்டுகளாக தங்கள் பாதங்கள் படுவதற்காகக் காத்திருக்கிறது. எங்களுக்கு அருளுங்கள்” என்றான். வீரர்கள் புடைசூழ சிகண்டி பாஞ்சாலனின் அரண்மனை நோக்கிச் சென்றான்.
உத்தரபாஞ்சாலத்தின் தலைநகரமான சத்ராவதி கங்கையில் இருந்து வெட்டி துணைநதிகளுடன் இணைக்கப்பட்ட ஓடைகள் நரம்புகளாகப் பரவிய நிலத்தின் மகுடம்போலிருந்தது. கோட்டைகளை மீறி உள்ளே சென்ற அந்த ஓடைகள் நகரமெங்கும் பரவி களஞ்சியங்களின் பின்பகுதிகளை இணைத்தன. அவற்றினூடாக கோதுமை மூட்டைகளுடன் வந்த கனத்தபடகுகளை தோணிப்போகிகள் மூங்கில் கழிகளினால் தள்ளியபோது அவை மெல்ல ஒழுகிச்சென்று களஞ்சியங்களின் அருகே ஒதுங்கி உள்ளே நுழைந்தன. அவற்றை நோக்கி பலகைகளைப் போட்டு அதன் வழியாக இறங்கி பொதிகளை உள்ளே எடுத்து அடுக்கினர் வினைவலர்.
படகுகளின் மேல் வளைந்து வளைந்தெழுந்த மரப்பாலங்கள் மீது பொதிவண்டிகள் சகடங்கள் அதிர, மாடுகளின் தொடைத்தசைகள் இறுகி நெகிழ, ஏறி மறுபக்கம் சென்றன. சாலைகளும் ஓடைகளும் ஊடும்பாவுமாக பின்னி விரிந்த அந்நகரில் சாலைகளுக்கு இருபக்கமும் சுதைவீடுகளும் ஓடைகளுக்கு இருபக்கமும் மரவீடுகளும் இருந்தன.
பாஞ்சாலத்தின் வயல்களெல்லாம் அறுவடை முடிந்திருந்த பருவம். நான்குதிசைகளிலிருந்து நகருக்குள் வந்த கோதுமைவண்டிகள் தெருக்களெங்கும் தேங்கி நின்றன. கோட்டைமதில்கள் போல மாளிகை முகடுகள் போல அடுக்கப்பட்ட தானியப்பொதிகளைச் சுற்றி வினைவலரின் வேலைக்கூவல்கள் எழுந்து நிறைந்திருந்தன. வண்டிச்சகடங்கள் ஓய்விலாது ஒலித்துக்கொண்டிருந்தன. சிகண்டி அவ்வழியாகச் சென்றபோது வியர்த்த பளிங்குமேல் விரலால் இழுத்ததுபோல அமைதியாலான வழியொன்று உருவாகி வந்தது. கூலப்புழுதி நிறைந்திருந்த தெருக்களிலும் தானியமணம் நிறைந்திருந்த வீடுகளிலும் இருந்து மக்கள் எழுந்து விழிவிரிய அவனை நோக்கி நின்றனர்.
சிகண்டி அரண்மனையை அடைவதற்குள்ளாகவே அவன் வரும் தகவல் அறிந்து அரண்மனைமுகப்பில் பாஞ்சாலத்தின் அமைச்சர் பார்க்கவர் வந்து காத்திருந்தார். சுதைத்தூண்களின் மேல் பெரிய மரத்தாலான‌ கட்டிடம் அமர்ந்திருந்தது. அரண்மனைக்கு அடியில் நீரோடைகள் சென்றன. அவற்றில் மிதந்தபடகுகளிலும் காவல்வீரர்கள் இருந்தனர். பார்க்கவர் நிலைகொள்ளாமல் சாலையை பார்த்துக்கொண்டிருந்தார்.
ஓடைமேல் சென்ற மரப்பாலத்தில் காலடி ஓசை ஒலிக்க ஏறி மறுபக்கம் சென்றான் சிகண்டி. அரண்மனை முகப்பில் மண்படிந்த உடலுடன் முலைகுலுங்க அவன் வந்து நின்றதும் பார்க்கவர் செய்வதறியாமல் சிலகணங்கள் நின்றுவிட்டார். அக்கணம் வரை அவருக்குள் குழம்பிச்சுழன்ற ஐயங்களும் அச்சங்களும் மறைந்தன. மலைப்பன்றி வீட்டுமுகப்பில் வந்து நிற்பது வளத்தை அளிக்கும் என நம்பிய வேளிர்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் அவர். இவன் எம்மொழியிலேனும் பேசுவானா என அவர் மனம் ஐயுற்றது.
வணங்கியபடி முன்னகர்ந்து “அம்பாதேவி நகர்நுழைந்ததை வணங்கி வரவேற்கிறேன். நான் பாஞ்சாலத்தின் பேரமைச்சன் பார்க்கவன். தங்களுக்கு இவ்வரண்மனை காத்திருக்கிறது” என்றார். சிகண்டி அவரது கண்களை நோக்கி “நான் மன்னரைப் பார்க்கவேண்டும்” என்றான். அவன் கழுத்தில் குருதிவழியும் குடல் போல அந்தக்காந்தள் மாலை கிடந்தது.
பார்க்கவர் “மன்னர் சிலகாலமாகவே உடல்நலமற்றிருக்கிறார்” என்றார். “நான் அவரைப் பார்த்தாகவேண்டும்” என்றான் சிகண்டி. பார்க்கவர் அவன் சொல் கூடாதவன் என்பதைக் கண்டுகொண்டார். “ஆம், அவ்வாறு ஆகட்டும்” என்று தலைவணங்கினார்.
மரத்தாலான படிக்கட்டுகளில் சிகண்டி ஏறியபோது மொத்த அரண்மனையிலும் அவன் காலடியோசை எதிரொலித்தது. அரண்மனையெங்கும் தொங்கியிருந்த செம்பட்டுத்திரைச்சீலைகள் காற்றில் நெளிய தீபூத்த வனம்போலிருந்தது அது. மூன்றாவது மாடியில் உத்தரபாஞ்சாலத்தை ஆண்ட மன்னர் சோமகசேனரின் ஆதுரசாலை இருந்தது.
பாரதவர்ஷம் உருவான நாளில் கிருவிகுலம், துர்வாசகுலம், கேசினிகுலம், சிருஞ்சயகுலம், சோமககுலம் என்னும் ஐம்பெரும் குலங்களால் ஆளப்பட்ட கங்கைச்சதுப்பு பின்னாளில் பாஞ்சாலம் என்னும் ஒற்றைநாடாக ஆகியது. ஆயிரமாண்டுகாலம் கழித்து சோமக குலமும் சிருஞ்சயகுலமும் முரண்பட்டுப் பிரிந்தபோது அது இருநாடுகளாகியது. தட்சிண பாஞ்சாலத்தின் தலைநகரமாக காம்பில்யம் உருவாகி வந்தது. அதை சிருஞ்சயகுலத்து பிருஷதன் ஆண்டுவந்தான்.
உத்தரபாஞ்சாலத்தின் சத்ராவதியிலிருந்துகொண்டு ஆட்சிசெய்த சோமகவம்சத்து மன்னன் சோமகசேனன் முதுமையும் நோயும் கொண்டு படுத்திருந்தான். அவனுக்கு மைந்தர்கள் இருக்கவில்லை. அமைச்சர் பார்க்கவரின் பொறுப்பில் இருந்த உத்தரபாஞ்சாலத்தை வென்று கைப்பற்ற பிருஷதன் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருந்தன. பாஞ்சாலத்தை ஒன்றாக்கி தன் மைந்தன் யக்ஞசேனனை மன்னனாக்க பிருஷதன் எண்ணியிருந்தான்.
VENMURASU_EPI_37_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
ஆதுரசாலையில் மூலிகைமெத்தைமேல் படுத்திருந்த சோமகசேனர் காம்பில்யத்தில் இருந்து அன்று காலை வந்த ஒற்றுச்செய்தியைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தார். அவரது மரணம் அடுத்த இருள்நிலவுநாளுக்குள் நிகழும் என்று நிமித்திகர் கூறியிருந்தனர். மருத்துவர்கள் அதை மௌனமாக அங்கீகரித்திருந்தனர்.அவர் மறைந்து நாற்பத்தொன்றாம்நாள் நீர்க்கடன்கள் முடிந்ததும் நகரில் ஒரு தீவிபத்து நிகழும் என்றனர் ஒற்றர்கள். அந்தத் தீவிபத்துக்குக் காரணம் வேள்விக்குறை என்றும், முறையான அரசன் இல்லாத நிலையின் விளைவு அது என்றும் குற்றம்சாட்ட வைதிகர்களை அமர்த்தியிருந்தனர் தட்சிண பாஞ்சாலத்தினர். அதைக் காரணம் காட்டி பிருஷதன் உத்தரபாஞ்சாலம் மீது படைகொண்டுவந்து பாஞ்சாலத்தை ஒன்றாக்கி அரசமைக்க திட்டமிட்டிருந்தான்.
வெளுத்த தாடி மார்பில் படிந்திருக்க தூவித்தலையணைமேல் தலைவைத்து மெலிந்த கைகால்கள் சேக்கையில் சேர்ந்திருக்க கிடந்த சோமகசேனர் சேவகன் அறிவித்ததை சரியாக உள்வாங்கிக்கொள்ளவில்லை. வரச்சொல் என கையசைத்தபின் சாளரம் வழியாக கீழே ஓடைகளில் கொடிபறக்க வந்துகொண்டிருந்த பெரும்படகுகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். கதவு திறந்து உள்ளே வந்த வராகரூபனைக் கண்டதும் அவர் உடல் அதிர்ந்தது. சிகண்டி கழுத்திலணிந்திருப்பதென்ன என்பதை அவர் சித்தம் புரிந்துகொண்டதும் “தேவி!” என்றார்.
“நான்…” என சிகண்டி பேசத்தொடங்கியதுமே “நீ தேவியின் தோன்றல். இந்த அரண்மனையும் தேசமும் என் நெஞ்சமும் உன் சேவைக்குரியவை” என்றார் சோமகசேனர். சிகண்டி அருகே வந்து முழந்தாளிட்டு அமர்ந்தான். “நீங்கள் என் தந்தை என அன்னை சொன்னாள்” என்றான். செயலிழந்து கிடந்த சோமகசேனர் கைகள் அதிர்ந்தன. ஒரே உந்தலில் வலக்கையைத் தூக்கி சிகண்டியின் தலையில் வைத்து “ஆம், இன்றுமுதல் நீ பாஞ்சாலத்தின் இளவரசன்” என்றார். அப்பால் நின்றிருந்த பார்க்கவர் தலைவணங்கினார்.
“நீ என் மகன்.. இங்கே இரு. உனக்கென அரண்மனை ஒன்றை ஒருக்கச் சொல்கிறேன்” என்றார் சோமகசேனர். “என் பணி ஒன்றே” என்றான் சிகண்டி . சோமகசேனர் புன்னகையுடன் “காட்டில் வளர்ந்த வராகராஜன் போலிருக்கிறாய். ஆனால் உன் இலக்கு கூர்மை கொண்டிருக்கின்றது” என்றார்.  ”உன் பணி என்ன?”
“நான் பீஷ்மரைக் கொல்லவேண்டும்” என்று சிகண்டி சொன்னான். சோமகசேனர் அதிர்ந்து அறியாமல் உயிர்பெற்ற கைகளை மார்பின்மேல் கோர்த்துக்கொண்டார். “நீ சொல்வதென்னவென்று தெரிந்துதான் இருக்கிறாயா? பீஷ்மரைக் கொல்வதென்பது பாரதவர்ஷத்தையே வெல்வதற்குச் சமம்” என்றார்.
மாற்றமில்லாத குரலில் “அவர் எவரோ ஆகட்டும். அது என் அன்னையின் ஆணை” என்றான் சிகண்டி. சோமகசேனர் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. உதடுகளை அழுத்தியபடி “இக்கணம் நான் பீஷ்மரை எண்ணி பொறாமைகொள்கிறேன். மகத்தான எதிரியைக் கொண்டவன் விண்ணகத்தால் வாழ்த்தப்படுகிறான்” என்றார். பார்க்கவரிடம் “இவனுக்கு மறுசொல் என ஒன்று இங்கே ஒலிக்கலாகாது” என்றார். “ஆணை” என்றார் பார்க்கவர்.
சிகண்டி செல்வதைப் பார்த்தபோது சாளரத்திரைச்சீலைகளை அசைத்து உள்ளே வந்த காற்றை உணர்வதுபோல அவர் நிம்மதியை அறிந்தார். அவருள் இருந்த புகைமேகங்களெல்லாம் அள்ளி அகற்றப்பட்டு ஒவ்வொன்றும் ஒளியுடன் துலங்கி எழுந்தன.”இவன் இருக்கும் வரை இந்த மண்மீது எதிரிகள் நினைப்பையும் வைக்கமுடியாது” என்று சொல்லிக்கொண்டபோது முகம் மலர்ந்து சிரிக்கத் தொடங்கினார்.
சிகண்டியை அரண்மனைக்குள் அழைத்துச்செல்லும்போது பார்க்கவர் “இளவரசே, இந்த அரண்மனையில் தங்களுக்குத் தேவையானவை என்ன?” என்றார். சிகண்டி “உணவு” என்றான். பார்க்கவர் சற்று திகைத்தபின், “அதுவல்ல… இங்கே வசதிகள்…” என இழுத்தார். “இங்கு ஆயுதசாலை எங்கே?”
பார்க்கவர் “வடமேற்குமூலையில்…” என பார்க்கவர் முடிப்பதற்குள் சிகண்டி “நான் அங்கேயே தங்குகிறேன்” என்றான். “அங்கே தங்களுக்கு ஏவலர்கள்…” என பார்க்கவர் தொடங்கியதும் “தேவையில்லை. பயிற்சித்துணைவர்கள் மட்டும் போதும்” என்றான் சிகண்டி.
நேராக ஆயுதசாலைக்கே சிகண்டியை இட்டுச்சென்றார் பார்க்கவர். ஆயுதசாலைப் பயிற்சியாளரான ஸாரணர் சிகண்டியைக் கண்டதும் ஒருகணம் முகம் சிறுத்தார். “ஸாரணரே, இவர் பாஞ்சாலத்தின் இளவரசர் என்பது மன்னரின் ஆணை” என்றதும் தலைவணங்கி “வருக இளவரசே” என்றார்.
சிகண்டி “நாம் பயிற்சியைத் தொடங்குவோம்” என்றான். ஸாரணர் அதைக்கேட்டு சற்றுத் திகைத்து “தாங்கள் சற்று இளைப்பாறிவிட்டு…” என்று சொல்லத் தொடங்கவும் சிகண்டி “நான் இளைப்பாறுவதில்லை” என்றான்.
அப்போதே அவனுக்கு பயிற்சி அளிக்கத்தொடங்கினார் ஸாரணர். அவனை விற்கூடத்துக்கு அழைத்துச்சென்றார். மூங்கில்வில்லைப் பற்றிப்பழகியிருந்த சிகண்டி அதன் நடுவே பிடித்து இடைக்குமேல் தூக்கி எய்யும் பயிற்சியை அடைந்திருந்தான். இரும்பாலான போர் வில்லை அங்குதான் முதலில் அவன் கண்டான்.
வில்லாளியைவிட இருமடங்கு நீளமுள்ள கனத்த இரும்புவில்லின் கீழ்நுனியை மண்ணில் நட்டு மேல்நுனி தலைக்குமேல் எழ நின்று எய்யும்போது இடக்கையின் பிடி வில்லின் மூன்றில் ஒருபங்கு கீழே இருக்கவேண்டும் என ஸாரணர் சொன்னார்.
“இளவரசே, மூங்கில்வில்லை நீங்கள் முழுத் தோள்பலத்தால் பின்னாலிழுத்து நாணேற்றுவீர்கள். ரதத்தில் இருந்து எய்யப்படும் இந்த இரும்புவில் மும்மடங்கு பெரியது. எட்டுமடங்கு கனமுடையது. அம்புகள் பத்துமடங்கு நீளமானவை. எருமைத்தோல் திரித்துச் செய்யப்பட்ட இதன் நாண் பன்னிரு மடங்கு உறுதியானது. இதைப்பற்றி கால்கட்டைவிரலால் நிலத்தில் நிறுத்தி நாணைப்பற்றி ஒரே கணத்தில் முழு உடல் எடையாலும் இழுத்து தண்டை வளைக்கவேண்டும்.”
கரியநாகம்போல வளைந்த வில்லை கையில் எடுத்தபடி ஸாரணர் சொன்னார். “நாண் பின்னிழுக்கப்ப‌ட்டு வில் வளைந்த அதேகணத்தில் அம்பு தொடுக்கப்பட்டிருக்கவேண்டும். இல்லையேல் நாணின் விசை உங்கள் முதுகிலும் கையிலும் அடிக்கும். தசை பிய்ந்து தெறிக்கும். அம்பு நாணேறிய மறுகணமே அது எய்யப்பட்டு வானிலெழவும் வேண்டும். இல்லையேல் இழுபட்ட வில் நிலைகுலைந்து சரியும். அம்புசென்ற மறுகணமே விம்மியபடி முன்னால் வரும் நாணில் இருந்து உங்கள் கைகளும் தோளும் விலகிக் கொள்ளவேண்டும். நிமிரும் வில் தெறித்தெழும்போது உங்கள் கால்விரல்களும் கைப்பிடியும் அதை நிறுத்தவேண்டும்…அனைத்தும் ஒரேசமயம் ஒரே கணத்தில் நிகழ்ந்தாக வேண்டியவை.”
“ஒருமுறை நீங்கள் செய்யுங்கள்” என்று சிகண்டி சொன்னான். ஸாரணர் பெருவில்லை மண்ணில் கால்விரலால் பற்றி ஒருகணத்தில் எம்பி நாணேற்றி அம்பைத்தொடுத்து எய்து எதிரே இருந்த மரப்பலகையை இரண்டாகப்பிளந்து தள்ளினார். அனைத்தும் ஒரே கணத்தில் நிகழ்ந்து முடிய சற்று முன்னால் குனிந்து இறுகிய உதடுகளுடன் அதைப்பார்த்துக்கொண்டிருந்தான் சிகண்டி. அம்பு பலகையை உடைத்தபோது அவனுடைய வாயில் இரு பன்றித்தேற்றைகள் வெண்ணிறமாக வந்து மறைந்தன. அவன் புன்னகைசெய்ததுபோலிருந்தது.
“எட்டாண்டுக்காலப் பயிற்சியால் அடையப்படும் வித்தை இது” என்றபடி ஸாரணர் வில்லை சாய்த்து வைத்தார். “முறையாக எய்யப்படும் பெருவில்லின் அம்பு நான்குநாழிகைதூரம் சென்று தாக்குமென்பார்கள். இதன் நுனியில் சுளுந்து கட்டி எரியம்பாக எய்வதுண்டு. வெட்டவும் உடைக்கவும் சிதைக்கவும் இச்சரங்களால் முடியும்.”
சிகண்டி அந்த வில்லை குனிந்து எடுத்தபோது “அதை கையாளக் கற்றுக்கொள்வதில் எட்டு படிகள் உள்ளன. முதலில் நாண் இல்லாமல் அதன் தண்டை மட்டும் ஏந்திக்கொள்ளப் பழக வேண்டும்” என்றார் ஸாரணர். அவர் அவனுக்கான வில்லை காட்டுவதற்காகத் திரும்பினார்.
சிகண்டி அந்த இரும்புவில்லை தன் இடக்கையில் தூக்கி காலைநீட்டி கட்டைவிரலிடுக்கில் அதன் நுனியை நிற்கச்செய்து தண்டைப்பிடித்து நின்றான். ஸாரணர் அதைக்கண்டு வியந்து நின்றுவிட்டார். நீள்சரத்தை எடுத்தவேகத்திலேயே முழு உடலாலும் வில்லைவளைத்து நாணை ஏற்றி எய்துவிட்டான். அம்பு திசைகோணலாக எழுந்து ஆயுதசாலையின் கூரையைப் பிய்த்துமேலே சென்றது. கூடிநின்ற மாணவர்கள் அனைவரும் ஓடி வந்து சிகண்டியைச்சுற்றிக் கூடினார்கள்.
“இளவரசே, தாங்கள் எவரிடம் நிலைவில்லைக் கற்றீர்கள்?” என்றார் ஸாரணர். “இப்போது, சற்றுமுன் தங்களிடம்” என்று சொன்ன சிகண்டி “நான் பயிற்சி செய்யவேண்டியிருக்கிறது. என் இலக்குகள் இதுவரை பிழைத்ததில்லை” என்றான். அவர்களிடம் விலகும்படி கைகாட்டியபடி அடுத்த அம்பை எடுத்தான்.
அதன்பின் அவன் ஒருகணமும் திரும்பவில்லை. ஒவ்வொரு அம்பாக எடுத்து தொடுக்கத் தொடங்கினான். அன்றுபகல் முழுக்க அவன் அதை மட்டுமே செய்துகொண்டிருந்தான். உணவுண்ணவில்லை, அமரவும் இல்லை.
மாலையில் சூரியன் அணைந்தபோது ஸாரணர் “இளவரசே, ஆயுதசாலையை மூடவிருக்கிறோம். தாங்கள் ஓய்வெடுங்கள்” என்றார். சிகண்டி அவரை திரும்பிப்பார்க்கவில்லை. “இளவரசே, நாங்கள்…” என ஸாரணர் தொடங்க “நீங்களெல்லாம் செல்லலாம். நான் இரவில் துயில்வதில்லை” என்றான் சிகண்டி .
சற்று திகைத்தபின்பு “ஆயுதசாலையை அந்தியில் மூடுவதென்பது மரபு. பூசகர்கள் வந்து  ஆயுதங்களுக்குரிய தேவதைகளுக்கு குருதிபலி கொடுத்து பூசையிட்டு நடைமூடினால் உள்ளே அந்த தேவதைகள் வந்து பலிகொள்ளும் என்பார்கள்” என்றார். “நான் வெளியே சென்று பயிற்சி செய்கிறேன்” என வில்லையும் அம்புக்குவியலையும் கையில் எடுத்துக்கொண்டு சிகண்டி சொன்னான்.
நள்ளிரவில் ஸாரணர் ஆயுதசாலைக்கு முன்னாலிருந்த களத்துக்கு வந்து பார்த்தார். இருளில் சிகண்டி பயிற்சி செய்துகொண்டிருந்தான். அம்புகளைத் தீட்டுவதையும் அடுக்குவதையும் மட்டுமே அவன் ஓய்வாகக் கொள்கிறான் என்பதை அவர் புரிந்துகொண்டார். அவன் ஒரு மனிதனல்ல, மனிதவேடமிட்டு வந்த பிடாரி என்ற எண்ணம் அவருக்குள் உருவாகியது.
மறுநாள் சிகண்டி அம்பால் மரக்கிளைகளை வெட்டி வீழ்த்தினான். பறக்கும் அம்பை இன்னொரு அம்பால் துண்டித்தான். அவன் கையில் கரியவில் பெருங்காதல் கொண்ட பெதும்பைப்பெண் என நின்று வளைந்தது. அவன் யாழின் தந்தியைத் தொடும் சூதனின் மென்மையுடன் நாணைத்தொட்டபோது குகைவிட்டெழும் சிம்மம் போல அது உறுமியது. வில்குலைத்துநாணேற்றி அவன் அம்புவிடுவதை மீன் துள்ளி விழும் அசைவைப்போலவே காணமுடிந்தது.
ஏழுநாட்கள் சிகண்டி ஆயுதசாலையிலேயே வாழ்ந்தான். அங்கே சேவகர் கொண்டுவந்து அவன்முன் கொட்டிய உணவை உண்ணும் நேரமும் அமர்ந்து தன்னுள் ஆழ்ந்து வான்நோக்கி வெறித்திருக்கும் கணங்களும் தவிர முழுப்பொழுதும் ஆயுதங்களுடன் இருந்தான். ஏழாம் நாள் அவன் ஸாரணரிடம் “நான் இனிமேல் தங்களிடம் கற்பதற்கு ஏதும் இருக்கிறதா ஸாரணரே?” என்றான்.
ஸாரணர் “இல்லை இளவரசே. இனிமேல் பாரதவர்ஷத்தின் எந்த ஆயுதசாலையிலும் எதையும் கற்கவேண்டியதில்லை. தங்களுக்கு ஆசிரியராக வில்வித்தையை மெய்ஞானமாக ஆக்கிக்கொண்ட ஒரு ஞானி மட்டுமே தேவை” என்றார். “அவர் பெயரைச் சொல்லுங்கள்” என்றான் சிகண்டி.
“இளவரசே, பிரஜாபதியான பிரசேதஸ் இயற்றி தன் மாணவர்களுக்குக் கற்பித்த பிரவேஸாஸ்திரபிரகாசம் என்ற நூலில் இருந்து வில்வித்தை மானுடருக்கு வந்துசேர்ந்தது. அது ஐந்து உபவேதங்களில் ஒன்று. கிருஷ்ணயஜுர்வேதத்தின் கிளை” என்றார் ஸாரணர். “அந்த மரபில் வந்த ஆயிரம் தனுவேத ரிஷிகள் இன்றிருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்களில் இருவரே அனைவரும் அறிந்தவர்கள். பிராமண ரிஷியான பரசுராமன் இப்போது சதசிருங்கத்தில் தவம்செய்கிறார். அவரைக் காண்பது அரிது. ஷத்ரிய ரிஷியான அக்னிவேச மாமுனிவர் விஸ்வாமித்திரரின் வழிவந்தவர். அகத்தியரிடம் ஆயுதவித்தை கற்றவர். இப்போது கங்கைக்கரையில் தன் தவச்சாலையில் இருக்கிறார். அவரிடம்தான் தட்சிண பாஞ்சாலநாட்டின் பட்டத்து இளவரசரும் பிருஷதரின் மைந்தருமான யக்ஞசேனர் வில்வித்தை கற்கிறார்.”
“அவரிடம் நானும் கற்கிறேன்” என்று சிகண்டி எழுந்தான். “இன்றே நானும் கிளம்பிச்செல்கிறேன்.” ஸாரணர் அவன் பின்னால் வந்து “ஆனால் அக்னிவேசர் தங்களை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை” என்றார். அவர் சொல்லவந்தது கண்களில் இருந்தது. சிகண்டி பன்றியின் உறுமல்போன்ற தாழ்ந்த குரலில் “ஏற்றுக்கொண்டாகவேண்டும்” என்றான்.

2/13/14

பகுதி ஏழு : தழல்நீலம்[ 2 ]

பகுதி ஏழு : தழல்நீலம்[ 2 ]

அடர்காட்டில் தனித்தபிடியானை போல சென்றுகொண்டிருந்த அன்னையை சிகண்டினியும் நிருதனும் தொடர்ந்துசென்றனர். அன்று பகலும் அவ்விரவும் அவள் சென்றுகொண்டே இருந்தாள். காலையொளி காட்டுமீது பரவியபோது நடுவே வட்டமாகக் கிடந்த வெற்றிடமொன்றைச் சென்றடைந்தாள். அடியில் பெரும்பாறை இருந்ததனால் மரங்கள் முளைக்காதிருந்த அந்த நிலத்தில் மண்ணிலிருந்து எழுந்த நீராவியில் விழுந்த இளவெயில் குளமெனத்தேங்கியிருந்தது. அதில் சிறுபூச்சிகள் ஒளியுடன் சுழன்றுகொண்டிருந்தன. செழித்த புற்களின் இலைகளில் இருந்த சிறுசிலந்திவலைகளில் நீர்த்திவலைகள் ஒளிவிட்டன. மெல்லிய சிலந்திவலைக் குகைகளுக்குள் இருந்து அன்னைச்சிலந்திகள் வெளிவந்து அசைவை கவனித்தன.
அங்கிருந்த சிறிய பாறையில் அன்னை அமர்ந்தாள். வழக்கம்போல முன்னும் பின்னும் ஆடாமல் தலைகுனிந்து அமைதியாக அமர்ந்திருந்தாள். அவள் முகத்தை மறைத்துத் தொங்கிய சடைவிழுதுகள் இளங்காற்றில் அவ்வப்போது ஆடின. அருகே ஒரு மரத்தடியில் கைகூப்பியபடி நிருதன் அமர்ந்திருந்தான். சிகண்டினி விலகிச்சென்று காய்கனிகளையும் கிழங்குகளையும் தேடிச்சேமித்து அவள்முன் கொண்டுவந்து வைத்தாள். அவற்றை அவள் உண்ணவில்லை. நிருதனும் எதையும் உண்ணவில்லை. மாலைவரை அவ்விடத்தில் இருவரும் இரண்டு தொன்மையான சிலைகள் போல அமர்ந்திருந்தனர். காட்டுக்குள் வெயில்வட்டங்கள் அணைந்து இருள் பரவத்தொடங்கியதும் அன்னை நிமிர்ந்தாள். கையசைவால் நிருதனை அருகே அழைத்தாள்.
நிருதன் அருகே சென்று வணங்கியதும் அந்த நிலத்தில் தெற்கு மூலையில் இருந்த பாறைமேட்டை சுட்டிக்காட்டினாள். அவன் அவள் சொல்வதை புரிந்துகொண்டதுபோல தலையசைத்தபின் காட்டுக்குள் சென்றான். சற்று நேரத்தில் உலர்ந்த மரம் ஒன்றை இழுத்துவந்தான். அதை கற்பாறைகளால் அடித்து ஒடித்து சுள்ளிகளாக ஆக்கி அந்தப் பாறைமேல் நீளமாக குவிக்கத்தொடங்கினான். அதை பொருளறியாமல் பார்த்துக்கொண்டிருந்த சிகண்டினி ஏதோ ஒரு தருணத்தில் புரிந்துகொண்டு திகைப்புடன் எழுந்து நின்றாள். ஆனால் அன்னையை நெருங்க அவள் துணியவில்லை. அவள் அவ்விறகுக்குவியல் சிதையாக ஆவதை அசையாவிழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
பின்பு அன்னை திரும்பி அவளைப்பார்த்தாள். சிகண்டினி சென்று அன்னையின் அருகே நின்றாள். முதலில் அவளை அடையாளம் காணாததுபோல அன்னையின் சுருங்கிய செவ்விழிகள் அதிர்ந்தன. பின்பு கண்களுக்குள் வாசல் திறந்தது. சுருண்ட கரிய நகங்களும் வெந்துசுருங்கிய சருமமும் கொண்ட அன்னையின் கை அவளை நோக்கி நீண்டது. அவள் நெருங்கியதும் அந்தக்கையை அவள் தலைமேல் வைத்தாள். மெல்லச்சரிந்து அவள் தோளைத் தழுவி இடையை அடைந்து நின்றது கரம். “மகனே சிகண்டி” என்றாள் அன்னை.
முதன்முதலாக அவள் பேச்சைக் கேட்ட சிகண்டினியின் பிடரியிலும் முதுகிலும் மயிர்க்கூச்செறிந்தது. அந்தக்குரல் அவளறிந்த அன்னையின் மிருக ஓசை அல்ல. பொன்மணியும் வேய்ங்குழலும் கலந்த இனிமை அதிலிருந்தது. பாறைமுகட்டின் கரிய தேன்கூடு கனிந்து துளித்துச் சொட்டுவதுபோல அவளிலிருந்து அது வந்தது. “மகனே, சிகண்டி…நீதானா?” என்றாள். “நீ என்னுடன்தான் இருக்கிறாயா?”
தெய்வச்சிலை கண்திறந்து பேசியதைக் கண்டவள் போலிருந்த சிகண்டினி அன்னையின் உடலை நெருங்கி நின்று “அன்னையே நான் பெண்…என் பெயர் சிகண்டினி” என்றாள். இல்லை இல்லை என்பதுபோல தலையசைத்தாள் அன்னை. “சிகண்டி…நீ சிகண்டி…நீ என் மகன்” என்றாள்.
சிகண்டி ஒருமுறை இமைத்தபின் திடமான குரலில் “ஆம்” என்றான். நெய்கொதித்து ஆவியாவதுபோலஅன்னை உடலில் இருந்து அவள் உயிர் பெருமூச்சுகளாக வெளிவந்துகொண்டிருந்தது. “நான் காசிமன்னன் மகள் அம்பை. அஸ்தினபுரியின் பீஷ்மனால் ஆன்மா அழிக்கப்பட்டு பித்தியானவள். அகத்தின் கனலில் எரிந்து பேயானவள்” என்றாள் அன்னை.
மெல்லமெல்ல அவள் உடலில் இருந்த மிருகத்தன்மை ஒழுகிச்சென்றதை, கருகிச்சுருண்டு சேறும் அழுக்கும் படர்ந்த உடலிலேயே பெண்மை குடியேறியதை சிகண்டி வியப்புடன் பார்த்தான். “மகனே, நீ எனக்காகச் செய்யவேண்டிய கடமை ஒன்றிருக்கிறது” என்றபோது அது கைவிடப்பட்ட பெண்ணின் கோரிக்கையாகவே ஒலித்தது.
“சொல்லுங்கள்” என சிகண்டி தலையசைத்தான். முதன்முதலாக அவள் கண்களில் கண்ணீரைப் பார்த்தான். மட்கிய மரப்ப‌ட்டைபோன்ற கன்னங்களில் விழுந்த கண்ணீர் சுருக்கங்களில் பரவி தாடையில் சொட்டியது. “இனித்தாளமுடியாது. ஒவ்வொரு கணமும் என்மேல் மலையெனக்குவிகிறது. இந்த வதையை முடிக்கவிழைகிறேன்.”
அவள் சொல்லாமலேயே அனைத்தையும் அவன் அறிந்துகொண்டான். சொற்களில்லாமலேயே அனைத்தையும் சொல்லிக்கொண்டும் இருந்தான். அன்னை தன் கரங்களை நீட்டி அவற்றைப்பார்த்தாள். திகைத்தவள்போல சிலகணங்கள் விழிமலைத்து அமர்ந்திருந்தபின் நெஞ்சை உலைத்த விம்மலுடன் மீண்டாள். “மகனே, இந்த நெருப்பு என் இப்பிறவியை எரித்துவிட்டது. அடுத்த பிறவியிலாவது எனக்கு விடுதலைவேண்டும். அதை நீயே எனக்கு அளிக்கவேண்டும்.”
“செய்கிறேன்” என்றான் சிகண்டி. “நீ பீஷ்மரைக் கொல்லவேண்டும்” என்று அன்னை சொன்னாள். சிகண்டி அவள் கையைப்பற்றி “கொல்கிறேன்” என்றான்.
திடுக்கிட்டவள்போல அம்பை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். “உனக்கு அவர் யாரெனத்தெரியுமா?” என்றாள். சிகண்டி மெல்லிய திடமான குரலில், “யாராக இருந்தால் என்ன?” என்றான். அவள் கைகள் மேல் தன் கைகளைவைத்து மெல்லிய குரலில் “அது நிகழும்” என்றான் .
“நீ பீஷ்மரை போர்க்களத்தில் கொல்லவேண்டும். அவர் நெஞ்சை என் பெயர்சொல்லி விடும் உன் வாளி துளைத்தேறவேண்டும்” என்றாள். அவள் கைகள் சிகண்டியின் கைகளைப்பற்றியபடி நடுங்கின. சிகண்டி “ஆம்” என்றான்.
அன்னையின் பேய்முகத்தில் அழகியபுன்னகை ஒன்று எழுவதை சிகண்டி பார்த்தான். அவள் அவன் இருதோள்களையும் பிடித்துக்கொண்டாள். பெருமூச்சுடன் “ஆம், நீ அதைச்செய்வாய். ஒற்றை இலக்குக்காக மட்டுமே வாழ்பவன் அதை அடைந்தாகவேண்டுமென்பது பெருநியதி…இப்போதே அக்காட்சியைப் பார்த்துவிட்டேன்.. பீஷ்மர் உன் அம்பு துளைத்த நெஞ்சில் இருந்து வழியும் குருதியுடன் களத்தில் கிடக்கிறார்…. நீ என் கனல்…” என்றாள்.
சிகண்டியின் தலையில் கைவைத்து அன்னை சொன்னாள் “மகனே, நீ பாஞ்சாலனிடம் செல். காசிமன்னனின் மகன் நீ என்று சொல். அவன் உன்னை தன் மகனாக ஏற்றுக்கொள்வான். கற்கவேண்டியவற்றை எல்லாம் கற்றுக்கொள். உன் கை வில்லுக்கு முன் பாரதவர்ஷத்தின் எந்த மன்னனும் நிற்கலாகாது. பீஷ்மர் அறிந்த நீ அறியாத ஏதுமிருக்கக்கூடாது” என்றாள். சிகண்டி தலையசைத்தான்.
பெருமூச்சுடன் அன்னை சொன்னாள் “என்கதையை சூதர்கள் பாடிக்கேள். அன்னையை நீ அறிவாய்.” “நான் பிறிதொன்றல்ல”என்று சிகண்டி சொன்னான். அன்னை கண்ணீருடன் பெருமூச்சுவிட்டாள். “இப்பிறவியை எனக்களிக்கிறாய் மகனே. கடன் இனி என்னுடையது. இனிவரும் ஏழுபிறவிகளில் உனக்கு மகளாகி என் கடனைக் கழிப்பேன். உனக்களிக்க இவ்வன்னையிடம் இருப்பது இந்தக்கண்ணீரன்றி ஏதுமில்லை.”
அவன் தலைமேல் கைவைத்து அன்னை சொன்னாள், “உன்னுடன் அன்னையின் கண்ணீர் என்றுமிருந்து வழிகாட்டும். அழியாத ஒன்றுக்கென்றே வாழ்பவன் சிரஞ்சீவி மகனே. நீ என்றென்றும் சொல்லில் வாழ்வாய்” என்றாள். சிகண்டி தலைவணங்கி அன்னையின் அருட்சொல்லை ஏற்றுக்கொண்டான்.
நிருதன் வந்து வணங்கினான். அன்னை அவனை நோக்கித்திரும்பினாள். “நிருதரே, இதன்பின் உங்கள் இல்லம் திரும்புங்கள். என் சிதைச்சாம்பலைக் கொண்டு சென்று நீங்களும் உங்கள் குலமும் உங்கள் சிறுதங்கைக்கு நீர்க்கடன் செய்யுங்கள். உங்கள் குலத்தில் நான் என்றென்றும் பிறந்துகொண்டிருப்பேன்” என்றாள். நிருதன் “தங்கையே, அது என் தவப்பயன்” என்றான்.
கற்களை உரசி நிருதன் ஏற்றிய நெருப்பு மெல்லச்சிவந்து படபடவென்ற ஒலியுடன் பொற்சிறகுகள் கொண்டு எழுந்தது. அண்டபேரண்டங்களை துப்பும் ஆதி நாகத்தின் செந்நா என தழல் மேலெழுந்து பொறிகிளப்பியது. அலகிலா எல்லைவரை நிறைந்த இருளில் பொறிகள் விழுந்து மறைய காடு மெல்லிய காற்றோடும் மூச்சொலியாகச் சூழ்ந்திருந்தது. அன்னை எழுந்து சிகண்டியின் தலையைத் தொட்டாள். நிருதனின் பாதங்களைத் தொட்டபின் மெல்ல நெருப்பைநோக்கிச் சென்றாள். காதலனை அணுகும் பெதும்பை என தளரும் காலடிகளுடன். பின்பு பசித்தழும் குழந்தையை நோக்கிச்செல்லும் அன்னைபோல.
தீ அவள் உடலில் பிரதிபலித்து அவள் செவ்விழிகள் சுடர்ந்த இறுதிக்கணத்தை சிகண்டி தன் நெஞ்சில் பதித்துக்கொண்டான். அருகே சென்ற கணம் அவளில் நெருப்பு தழலாடியது. அவளே ஒரு செந்தழலாகத் தெரிந்த மறுகணத்தில் நெருப்பின் இதழ்கள் விரிந்து அவளை உள்ளே அள்ளிக்கொண்டன. செந்திரை அசையும் பல்லக்கிலேறுவது போல அவள் எரிசிதைமேல் ஏறிக்கொண்டாள்.
தலைமேல் தூக்கிய கரங்களுடன் அலறியபடி நிருதன் தரையில் விழுந்தான். புற்பரப்பில் முகத்தைப்புதைத்து இருகைகளாலும் செடிகளைப்பற்றியபடி மண்ணுக்குள் புதைந்து விடமுயலும் மண்புழு போல உடல் நெளிந்தான்.
நின்ற இடத்தில் அசையாமல் சிகண்டி நின்றிருந்தான். அவன் முகத்தில் சிதைநெருப்பின் செம்மை அலையடித்தது. நெருப்புக்குள் அன்னையின் கரிய கைகால்களின் அசைவை, கருஞ்சடைகள் பொசுங்கும் நாற்றத்தை, அவளுடன் எம்பி விழுந்து எரிவிறகில் மெல்லப்படிவதை, அவள் உடல் திறந்து ஊன்நெய் சொட்டி சிதை நீலச்சுவாலையாவதை, உண்டுகளித்த செந்தழல்கள் நின்று நடமிடுவதை இமையா விழிகளுடன் அவன் பார்த்துக்கொண்டிருந்தான். பின்பு அவன் களம்படும் கணம் வரை விழிமூடவில்லை என்றனர் சூதர். அவன் துயிலறிந்ததே இல்லை. அவன் கண்ணிமைத்ததேயில்லை என்று அவர்களின் பாடல்கள் பாடின.
VENMURASU_EPI_36
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
இரவெல்லாம் இடியோசையுடன் முழங்கி அதிர்ந்த வானம் மறுநாள் காலை பொழியத்தொடங்கியது. சிதை எரிந்த சாம்பலில் கரியும் வெள்ளெலும்புகளும் நீரில் கரைந்து வழிவதைக் கண்டபின் சிகண்டி திரும்பி காட்டுக்குள் சென்றான். கொடிபின்னிச்செறிந்த அடர்காட்டுக்குள் சென்றுகொண்டே இருந்தான். எங்கோ அக ஆழத்திலிருந்து அவன் செல்லவேண்டிய இலக்கை கால் அறிந்திருந்தது என நடந்தான்.
காலகம் என்ற அந்த அடர்வனத்தின் நடுவே ஸ்தூனகர்ணன் என்னும் யட்சனின் ஆலயம் இருந்தது. அப்பகுதியில் வேடரும் மேய்ப்பரும் மூலிகைதேடும் மருத்துவரும் செல்வதில்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நாற்பத்தொருநாள் நோன்பிருந்த சூதர்கள் பந்தங்களுடனும் குடைகளுடனும் அக்காட்டுக்குள் புகுந்து ஸ்தூனகர்ணனின் சிற்றாலயத்தை அடைந்து பூசை செய்தனர். செங்குருதித் துளிகள் போன்ற செவ்வரளிமலர்களை சூட்டி, வறுத்த தானியப்பொடியில் மனிதக்குருதி சொட்டி உருட்டி ஆறு திசைக்கும் வீசி அவனுக்குப் படையலிட்டு வணங்கி மீண்டனர்.
மூன்று பக்கமும் கரியபாறைகள் சூழ்ந்த அந்த அடர்வனப்பசுமைக்குள் எப்போதும் மழைத்தூறலிருந்தது. நீரோடைகளன்றி வழியில்லாத அக்காட்டுக்குள் குகைகளில் இரவு தங்கியும் மலைக்கிழங்குகளை உண்டும் ஏழுநாட்கள் பயணம்செய்து சிகண்டி ஸ்தூனகர்ணனின் ஆலயத்தைச் சென்றடைந்தான். அப்பகுதியில்  பாறையின் கரிய வாய் எனத் திறந்த குகையிடுக்குக்குள் ஊறித்தேங்கிய சிறுசுனையின் மறுகரையில் ஸ்தூனகர்ணனின் சிறுசிலை இருந்தது. ஒருபகுதி தாமரை ஏந்திய பெண்ணாகவும் மறுபகுதி சூலமேந்திய ஆணாகவும் இருந்த சிலை மழையீரத்தில் களிபடிந்திருந்தது.
சிலையைநோக்கி சில கணங்கள் நின்றபின் அருகே இலைகளைப்பறித்துப்போட்டு இருக்கை அமைத்து சிகண்டி அமர்ந்துகொண்டான். இருகைகளையும் மடியில் கோர்த்தபடி இமையா விழிகளால் சிலையை நோக்கி அமர்ந்தான். நாட்கள் கழிந்தபோது சிலை கண்விழித்து அவனை நோக்கத் தொடங்கியது. அதன் பார்வையைச் சந்தித்த அவன் பிரக்ஞை நடுங்கியது. நெற்றியில் உந்தப்பட்ட கடா என எம்பி முன்சென்றது. உச்ச கட்ட அழுத்தத்தில் செயலிழந்து அசைவழிந்தது. பின்பு அந்தச்சிலை மட்டும் அங்கே இருந்தது.
நீர்சுழித்த சிறுதடாகம் படிகம்போல அசைவற்றிருக்க அதில் ஸ்தூனகர்ணன் தோன்றினான். மணிமுடியும் செங்கோலும் ஏந்திய அரசனாக வந்து நின்று “பெண்ணே நீ கோருவதென்ன என நீ அறிவாயா?” என்றான். “ஆம்” என்றான் சிகண்டி. “பிறவி என்பது முடிவற்றசங்கிலியின் ஒரு கண்ணி என்றறிக. இப்பிறவியை நீ மாற்றிக்கொண்டால் உன் வரும் பிறவிகளனைத்தையும் சிதறடிக்கிறாய். சென்ற பிறவிகளின் ஒழுங்கை குலைக்கிறாய். உன்னையும் உன் முன்னோர்களையும் வரும் தலைமுறைகளையும் இருளில் ஆழ்த்துகிறாய்” என்றான் ஸ்தூனகர்ணன்.
“என் சித்தத்தின் ஒரு சொல்லிலும் மாற்றமில்லை” என்றான் சிகண்டி. “ஒருகணத்தில் என் அகம் ஆணாகிவிட்டது. நான் உன்னிடம் ஆணுடலை மட்டுமே கோருகிறேன்.” ஸ்தூனகர்ணன் நீரில் மூழ்கிமறைந்தான். மீண்டும் சிகண்டி தன் கண்முன் கற்சிலையைக் கண்டான். பாறைப்பரப்பை முட்டிமுட்டித் துளைக்கமுயலும் கருவண்டுபோல அதன் முன் தவமிருந்தான். அச்சிலையின் விழிகளில் தன் பிரக்ஞையின்  வேகத்தால் மோதிமோதித்திறந்தான்.
மலர்முடி அணிந்த அணங்கின் தோற்றத்தில் ஸ்தூனகர்ணன் தோன்றினாள். “நீ இழப்பது ஒவ்வொரு கணமும் வளரும். அந்த மலையின் அடியில் சிறுகூழாங்கல்லாக ஒருநாள் உன்னை நீ உணர்வாய்” என்றாள். “ஆம், நான் அடைவதற்கொன்றுமில்லை” என்றான் சிகண்டி.
மூன்றாம்முறை கனிந்த பார்வையும் நீண்டவெண்தாடியும் கொண்ட தாதையின் தோற்றத்தில் ஸ்தூனகர்ணன் தோன்றினான். “குழந்தை, நான் சொல்வதை நீ புரிந்துகொள்ளவில்லை. யுகயுக மடிப்புகளில் இம்மாற்றத்தைச் செய்த எவரும் நலம்பெற்றதில்லை. துயரத்தின் மீளாப்பெருநரகில் அவர்கள் இன்றும் வாழ்கிறார்கள்” என்றான். “அதை நான் அறியவேண்டியதில்லை” என்றான் சிகண்டி. திகைத்து நின்ற ஸ்தூனகர்ணன் நீரில் மறைந்தான். மீண்டும் சிலையாக நின்ற அவன் முன் கூழாங்கல்லை அடைகாக்கும் பறவைபோல சிகண்டி அமர்ந்திருந்தான்.
மூதன்னை வடிவில் தோன்றிய ஸ்தூனகர்ணன் “நீ என் புதல்வி. உன்னிடம் இறுதியாகச் சொல்கிறேன். உன் வாழ்நாளெல்லாம் ஒரு நற்சொல்லைக்கூட நீ கேட்டறியமாட்டாய்” என்றாள். “நான் அதை எதிர்நோக்கவுமில்லை” என்று சிகண்டி பதில் சொன்னான். “என் அன்னையின் ஆணைக்கு அப்பால் சிந்தனை என்ற ஒன்று எனக்கில்லை.” துயரம் நிறைந்த புன்னகையுடன் ஸ்தூனகர்ணன் தன்கையை நீட்டினான். அதில் ஒளிவிடும் வைரம் ஒன்றிருந்தது.
அவன் ஆணைப்படி அதை வாங்கி விழுங்கிய சிகண்டி தனக்குள் அதன் கூரியமுனைகள் குத்திக்கிழிப்பதன் வலியை அறிந்தான். அவனிடமிருந்து ஒழுகிய குருதி அந்தத் தடாகத்தில் நிறைந்தது. அவனுக்குள் காலம் பொறித்திருந்த குழந்தைகள் துடிக்கும் சதைத்துண்டுகளாக, மெல்லிய வெள்ளெலும்புகளாக, மென்கரங்களாக, குருத்துக்கால்களாக, பூவிரல்களாக வெளிவந்து குளத்தில் தேங்கின. அவற்றின் பதைபதைத்த கண்கள் மீன்களாக குருதிநீரில் துள்ளின. அவற்றின் அழுகை வண்டுகளின் ஒலியென அவனைச்சூழ்ந்தது. கடைசியாக அவன் கருப்பை தோலுரிந்த சர்ப்பம் போல வெளியே வந்து குருதிச்சுழிப்பில் விழுந்து அமிழ்ந்தது. அதில் தோன்றிய ஸ்தூனகர்ணன் துயரம் நிறைந்த புன்னகையுடன் மறைந்தான்.
பன்னிரண்டாவது நாள் மெலிந்துலர்ந்த உடல் வற்றிய கால்கள்மேல் நிற்கமுடியாது ஊசலாட, குகைச்சுவர்களைப் பற்றியபடி நடந்து வெளிவந்தான் சிகண்டி. அருகே நின்ற கிழங்கொன்றைப் பிடுங்கித்தின்றபோதுதான் தன் வயிற்றை, அவ்வயிற்றை ஏந்திய உடலை, அவ்வுடலில் வாழும் தன்னை உணர்ந்தான். நீர் அருந்துவதற்காக அங்கிருந்த ஓடைச்சுனையில் குனிந்தபோது தன் முகத்தைப்பார்த்தான். அதில் எலியின் உடல்போல மெல்லிய மீசையும் தாடியும் முளைக்கத்தொடங்கியிருந்ததைக் கண்டான்.

2/12/14

சத்தியமங்கலம் வெள்ளியம்பாளையம் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்

சத்தியமங்கலம் வெள்ளியம்பாளையம் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது அதன் புகைப்பட   தொகுப்பு .....

நன்றி திரு.வேணுகோபால் மற்றும் செல்வன்.முத்துபிரகாஷ் .









பகுதி ஏழு : தழல்நீலம்[ 1 ]

பகுதி ஏழு : தழல்நீலம்[ 1 ]
கங்காத்வாரத்தின் காட்டில் வந்து தங்கும் பயணிகளின் மிச்சிலை உண்டுவாழும் தெருப்பன்றி ஒன்று புதர்க்காட்டுக்குள் நான்கு குட்டிகளைப்போட்டது. அவற்றில் மூன்றுகுட்டிகளை ஓநாய்கள் கவ்விக்கொண்டு சென்றன. எஞ்சிய குட்டியை அது புதரிடுக்கில் குழிதோண்டி புதைத்துவைத்தது. அக்குழிக்கு சற்று அப்பால் புதர்மூடிக்கிடந்த கல்மண்டபத்தில் கைவிடப்பட்டு மனம்கலங்கிய பெண் ஒருத்தி தன் குழந்தையுடன் தங்கியிருந்தாள். இடையில் ஒரு குழந்தை இருப்பதை அவள் ஆன்மா அறியவில்லை. அவள் உடலே அக்குழந்தையை தூக்கிக்கொண்டது, முலையூட்டியது. எந்நேரமும் கலங்கிவழிந்த கண்களுடன் வாயிலிருந்து ஓயாமல் உதிரும் சொற்களுடன் அவள் கங்காத்வாரத்தில் அலைந்தாள். கையில் கிடைப்பவற்றை எல்லாம் அள்ளித்தின்றாள். இரவில் அந்த மண்டபத்தின் வெம்மையான புழுதியில் வந்து சுருண்டுகொண்டாள். அவள் உடலின் ஓர் உறுப்புபோல பெரிய கண்கள் கொண்ட பெண்குழந்தை அவளை தன் உயிர்ச்சக்தியால் கவ்விக்கொண்டு அமர்ந்திருந்தது.
ஒருநாள் காலையில் அவள் எழவில்லை. முந்தையநாள் அவள் கால்வழியாகச் சென்ற நாகம் அவள் கட்டைவிரலின் ஆட்டத்தை பிழையாகப்புரிந்துகொண்டு கவ்விச்சென்றிருந்தது. நீலம் பாரித்துக் குளிர்ந்து கிடந்த சடலத்தில் இருந்து முலைப்பால் வரவில்லை என்பதை மதியம் வரை அழுதபின் கண்டுகொண்ட குழந்தை அவளுடலில் இருந்து பேன்கள் இறங்கிச்சென்றதைப்போல தானும் சென்றது. பேன்கள் குருதி வாசனைதேடியதுபோல தானும் தன் முதல்விசையால் பாலுக்காகத்தேடியது. புதருக்குள் கிடந்து தன் ஒற்றைக்குட்டிக்கு பாலூட்டிக்கொண்டிருந்த தாய்ப்பன்றியை கண்டுகொண்டது. தவழ்ந்து சென்று அந்தமுலையை தானும் கவ்வி உண்ணத் தொடங்கியது. முலைகளையே மனமாகக் கொண்டிருந்த அந்தப் பெண்பன்றி தன் காலைச் சற்று விரித்து குழந்தைக்கு இடம் கொடுத்தது.
கண் திறக்காத அக்குட்டியுடன் சேர்ந்து சுருண்டுகொண்டு குழந்தை தூங்கியதும் பன்றி தன் உணவுக்காகக் கிளம்பியது. பசித்து குரலெழுப்பிய பன்றிக்குட்டியுடன் சேர்ந்து அதேபோல குரல் எழுப்பியபடி குழந்தை காத்திருந்தது. பன்றி திரும்பிவந்ததும் அக்குட்டியுடன் சேர்ந்து முட்டிமோதி முலையுண்டபின் அன்னையின் அடிவயிற்று வெம்மையில் ஒண்டிக்கொண்டு தூங்கியது.
மூன்றுமாதம் பன்றி குழந்தைக்கு உணவூட்டியது. பெற்றகுழவியை அது துரத்திவிட்டபின்னரும் கூட மனிதக்குழந்தைக்குக் கனிந்தபடியே இருந்தது. பின்பு அதன் ஊற்று வற்றியது. பசித்த குழந்தை எழுந்தும் விழுந்தும் தன் சகோதரன் சென்ற பாதையில் சென்றது. திசையறியாமல் திகைத்து அழுதபடி சென்றபோது தன் அன்னை கிடந்ததுபோன்று படுத்திருந்த ஒரு பித்தியை கண்டுகொண்டது. அவள் தன் நெஞ்சில் எரிந்த சிதையுடன் துயிலற்று அலைந்து ஒரு கட்டத்தில் உடல் களைத்து அமர்ந்து சரிந்து அவ்வண்ணமே தூங்கிக்கொண்டிருந்தாள். அவளருகே சென்றகுழந்தை தானறிந்தவிதத்தில் அவளருகே படுத்து இடக்காலை அவள்மேல் போட்டு அணைத்துக்கொண்டு அவள் முலைக்கண்ணை தேடிக்கவ்வி சுவைக்கத் தொடங்கியது.
பித்தி நீலநீர் விரிந்த நீர்வெளியைநோக்கி எழுந்த அரண்மனையின் செம்பட்டுத்திரை நெளியும் உப்பரிகையில் நின்றிருந்தாள். மணிமுடிசூடி, பட்டும் நவமணிகளும் அணிந்து, ஒளிமின்னும் விழிகளுடன் நதியைப்பார்த்தாள். நீரலைகளைக் கொஞ்சிக்கொண்டிருந்த பறவைகளைக் கலைத்தபடி நூறு அணிநாவாய்கள் கரைநோக்கி வந்தன. இளஞ்செந்நிறப் பாய்கள் விரித்த நாவாய்வரிசை நீரில் மிதந்துவரும் செந்தாமரைக்கூட்டம் எனத் தோன்றியது. முன்னால் வந்த படகில் சூதர்கள் இசைத்த மங்கல இசையும் பின்னால் வந்த படகில் ஒலித்த பெருமுழவொலியும் இணைந்து அரண்மனை சுவர்களை விம்மச்செய்தன.
படகுவரிசையை எதிர்நோக்கிச் சென்ற அவள் அரண்மனைக்குழுவினர் நதிக்காற்றில் உப்பி எழுந்த செம்பட்டுப் பாவட்டங்களும் சிறகடித்த செம்பதாகைகளும் ஏந்தியிருந்தனர். வாழ்த்தொலிகள் முழங்க, மங்கலத்தானியங்களும் மலர்களும் பொழிய, இசையால் அள்ளி இறக்கப்படுபவனைப்போல நெடிய நிமிர்வுடனும் கலைந்து பெருந்தோளில் விழுந்த குழல்களுடனும் தாடியுடனும் அவள் தேவன் வந்திறங்கினான். படிகளில் ஏறி அவள் அரண்மனைக்குள் புகுந்தான்.
வெண்பட்டுவிதானம் விரிந்த பந்தலில் அவள் அவனுக்கு மாலையிட்டாள். நிலா எழுந்த சாளரம் கொண்ட அறையில் அவனுடன் இருந்தாள். யானையை அள்ளிஓடும் வல்லமை கொண்ட உள்ளோட்டங்களுடன் அசையாது நிற்கும் பாவனை காட்டும் பெருநதியில் நீந்தித்திளைப்பவளாக அவனை அறிந்தாள். அவன் பிம்பத்தை தன்னுள் வாங்கிச்சுருட்டிக்கொண்ட கிண்ணக்குமிழ் போல அவள் அவனை தன்னுள் அள்ளிக்கொண்டாள். மடியில் அதைப்பெற்று அள்ளி மார்போடணைத்து முலையூட்டினாள். முலைசுரந்து வழிகையில் மீண்டும் சாளரவிளிம்பில் நின்று அவன் வந்திறங்குவதைக் கண்டாள். மீண்டும் மீண்டும் அவனை அடைந்தாள்.
கண்விழித்துக்கொண்டு பெருங்கூச்சலுடன் குழந்தையைத் தூக்கி எறிந்தாள் பித்தி. அது மல்லாந்து மண்ணில் விழுந்து கரிய இதழ்கள விரித்துக்கொண்டு கைகால்களை அசைத்து வீரிட்டழுதது. உடல்நடுங்க அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முலைகள் ஒடிக்கப்பட்ட கள்ளிச்செடியின் தண்டுகள் போல பால் சுரந்து சொட்டிக்கொண்டிருந்தன. முகத்தை மறைத்த சடைமுடிக்கற்றைகளை விலக்கி சற்றே குனிந்து புழுதியில் நெளியும் புழுவெனக்கிடந்த குழந்தையைப் பார்த்தபின் மெல்ல அமர்ந்து அதைத் தொட்டுப்பார்த்தாள். பின்பு அதை எடுத்து தன் மார்புடன் அணைத்துக்கொண்டு இன்னொரு முலைக்காம்பை அதன் வாய்க்குள் வைத்தாள்.
அவளுடனேயே அக்குழந்தை வளர்ந்தது. பாம்பைப் பற்றியபின் விடுவதறியாத வானரம் போல அவள் கங்கைக்கரை ஊர்களெங்கும் பதறியலைந்தாள். எரிந்த வீட்டில் எஞ்சிய மரச்சிற்பம் போன்றிருந்தாள். வணிகரும் ஆயரும் வேடரும் வேளிரும் கூடிய அங்காடிகளின் நடுவே சென்று வெற்றுடலுடன் நின்று இருகைகளையும் தூக்கி மொழியற்ற மூர்க்கத்துடன் கூச்சலிட்டாள். வீரர் கூடிய சதுக்கங்களில் சென்று நின்று அவள் ஆர்ப்பரித்தபோது அந்த வேகத்தைக்கண்டே காவலர் வேல்தாழ்த்தி விலகி நின்றனர்.
அவள் இடையில் அமர்ந்து சென்றுகொண்டிருந்தது குழந்தை. பின்னர் அது நடக்கத்தொடங்கியது. பிறமனிதரைப்பார்த்து தானும் ஒரு மனிதப்பிறவி என உணரத்தொடங்கியது. குப்பைகளில் இருந்து ஆடைகளை எடுத்து அணிந்தது. கண்ணில் படும் ஒவ்வொருவரிடமும் கையேந்தியது. உலகமென்பதே வந்துவிழும் பொருட்களுக்கு அப்பால் தெரிந்த கண்களும் கால்களும் கைகளும் முகச்சுளிப்புகளுமாக இருந்தது அதற்கு. வணிகர்கள் அதற்கு கைக்குச்சிக்கிய எதையாவது விட்டெறிந்தனர். உலர்ந்த அப்பத்துண்டுகள், வற்றலாக்கிய இறைச்சித்துண்டுகள், மீன்கள். எது கையில் வந்தாலும் அக்கணமே ஓடி தன் அன்னையை அடைந்து அவள் முன் நீட்டி நின்றாள். அவள் வாங்கி உண்டு எஞ்சியதையே அவள் உண்டாள்.
அவள் தலையின் சடைமுடி நீண்டு கனத்து வேர்க்கொத்து போல தொங்கியது. அவளிடம் பேசிய வணிகர்கள் ’உன் பெயரென்ன?’ என்று கேட்டபோது அவள் பிரமித்த கண்களால் பார்த்தாள். அவர்களில் ஒருவர் எப்போதோ அவளிடம் “உன்னைவிட நீளமாக இருக்கிறது உன் சடை. சடைச்சி என உன்னை அழைக்கிறேன்” என்றார். அவ்வாறு சிகண்டினி என்ற பெயர் அவளிடம் ஒட்டிக்கொண்டது. எவர் கேட்டாலும் அவள் தன் பெயரை சிகண்டினி என்று சொன்னாள். அவள் சொல்லிய ஒரே சொல்லும் அதுவாகவே இருந்தது.
அவளிடம் மொழி இருக்கவில்லை. அவளறிந்த மொழி அவள் உதட்டுக்கு வரவேயில்லை. தன்னுள் தொலைந்துவிட்டிருந்த அவள் அன்னை சிகண்டினியிடம் ஒரு சொல்கூடப் பேசியதில்லை. பகலும் இரவும் கால் மடித்து அமர்ந்து தோளிலும் முதுகிலும் முலைகள் மேலும் கருஞ்சடைகள் தொங்க, சிவந்த கண்கள் கனன்று எரிய, கரிய பற்களைக் கடித்தபடி, நரம்புகள் தெறிக்கும்படி கைகளை இறுக முறுக்கிக்கொண்டு முன்னும் பின்னும் ஆடியவளாக அவள் உறுமிக்கொண்டிருந்தாள். அவளுக்குள் ஏற்றம் ஒன்று ஊறிநிறையாத கிணறொன்றை அடியற்ற அகழிக்கு இறைத்துக்கொண்டிருப்பதுபோல. உடலால் துடுப்பிட்டு நிலத்தில் படகொன்றைச் செலுத்துபவள் போல.
ஏதோ ஒரு தருணத்தில் அவள் எழுந்து எவரையோ கொல்லப்போகிறவள் என, எங்கோ ஆழ்குழியில் விழப்போகிறவள் என, ஓலமிட்டபடி ஓடுவாள். அன்னை ஆடிக்கொண்டிருக்கையில் சிகண்டினி அருகே இயல்பாக அமர்ந்திருப்பாள். அவள் ஓடுகையில் சிகண்டினியும் பின்னால் ஓடுவாள். ஏதேனும் ஒரிடத்தில் திகைத்து பதைத்து நின்று பின் இரு கைகளையும் தூக்கி அன்னை ஓலமிடுவாள். கண்கள் கலங்கி வழிய மார்பில் ஓங்கி ஓங்கி அறைந்தபடி அலறுவாள். சிகண்டினி அன்னையைக் காண ஆரம்பித்தநாள் முதல் அவள் அந்த மார்பை அறைந்துகொண்டிருந்தாள். அவ்வளவு அறைந்தும் உடையாததாக எது உள்ளே இருக்கிறது என்று சிகண்டினி வியந்துகொண்டாள்.
அன்னையுடன் குப்பைகள் சேரும் இருண்ட சந்துகளிலும் ஈரச்சதுப்புகளிலும் சிகண்டினி தங்கினாள். அங்கே மதம்பரவிய சிறுகண்களுடன் வரும் பன்றிகளுடன் தன்னால் உரையாடமுடிவதை அவள் கண்டுகொண்டாள். அவற்றின் சொற்கள் அவளுக்குப்புரிந்தன. அவள் சொல்லும் சிறு ஒலியையும் அவை அறிந்துகொண்டன. அவள் தன் அன்னையுடன் கிடக்கையில் அப்பால் படுத்திருக்கும் கரியபெரும்பன்றிகளுடன் பேசிக்கொண்டிருப்பாள். பன்றியிடமிருந்து வலிமையே மிகத்தெளிவான மொழி என சிகண்டினி கற்றுக்கொண்டாள். கங்காத்வாரத்தில் அவள் சென்றுகொண்டிருக்கையில் அவள் உடல் தன்மீது பட்டதனால் சினம் கொண்ட ஒரு வீரன் தன் வேலைத்தூக்கியபோது தலையைச் சற்று தாழ்த்தி மெல்லிய உறுமலுடன் அவள் முன்னகர்ந்தபோது அவன் அச்சத்துடன் பின்னகர்ந்தான்.
எந்நிலையிலும் பின்னடையாமலிருப்பதே வலிமை என்று சிகண்டினிக்கு பன்றிகள் சொல்லின. தன்உயிரை அஞ்சாத கண்மூடித்தனமான முன்னோக்கிய வேகத்தைத்தடுக்கும் ஆற்றலென ஏதும் மண்ணில் இல்லை என்று அறிந்து அதுவானாள். சிறிய முனகலுடன் அவள் கடைவீதியில் சென்று நின்றால் அனைவரும் அஞ்சி வழிவிட அவளைச்சுற்றி வெற்றிடம் பிறந்து வந்தது. ஒருகாலை அவள் மெல்லத்தேய்த்து தலையைத் தாழ்த்தினால் எந்த ஆயுதமும் அவளை எதிர்கொள்ளச் சித்தமாகவில்லை.
வராகியின் பெரும்பசி கொண்டிருதாள் சிகண்டினி. முட்டிமுட்டி உழுதுபுரட்டி அழுகலும் குப்பையுமாக அனைத்தையும் அவள் உண்டாள். அவள் கரிய உடல் திரண்டு பருத்தது. முலைகள் முன்னெழுந்து, இடைதிரண்டு விரிந்து, இருளுலகம் விட்டு எழுந்த அரக்கிபோலானாள். அவள் சருமம் இளமையின் ஒளிகொண்டு நனைந்த கரும்பாறை என மின்னியது. அவள் பற்கள் வெண்பளிங்குக் கற்களென மின்னின. அவள் இரு மேலுதட்டு ஓரத்திலும் பன்றியின் தேற்றைகள் என கோரைப்பற்கள் முளைத்தன.
VENMURASU_EPI_35_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
கங்கைக்கரையில் நடந்து காசி, காசியிலிருந்து மீண்டும் கங்காத்வாரம், அங்கிருந்து மீண்டும் காசி என அன்னை அலைந்துகொண்டிருந்தாள். காசியின் நெரிசல்மிக்க தெருக்களிலும் படித்துறையின் மனிதக் கொப்பளிப்பிலும் அனைவரையும் சிதறடித்தபடி ஓடும் அவளை அடையாளம் வைத்துக்கொண்டு சிகண்டினியும் பின்னால் ஓடினாள். மிரண்ட பசு ஒன்று அன்னையை தன் கனத்த குறுங்கொம்புகளால் குத்தி தூக்கித்தள்ளியபோது உறுமியபடி வந்து அப்பசுவை தலையாலேயே முட்டிச் சரித்து விழச்செய்து துரத்தினாள். பாதையோரம் அன்னையை இழுத்துச்சென்று போட்டு நீரும் உணவும் கொடுத்து அவள் எழுவது வரை அவளருகே துயிலாமல் மூன்றுநாட்கள் அமர்ந்திருந்தாள்.
காசியின் அன்னசாலைகள் சிகண்டினிக்காகத் திறந்துகொண்டன. உணவுக்குவைகளை அவள் திமிர்குலுங்கும் நடையுடன் அணுகியபோது அவள் விரும்புவதையெல்லாம் அள்ளிப்பரப்பிவிட்டு விலகிக்கொண்டனர் சேவகர்கள். அவள் அனைத்தையும் அன்னைமுன் படைத்து உண்டாள். இரவில் கங்கைநீரில் குதித்து அன்னை நீந்தி நீரோட்டத்தில் செல்கையில் எதையும் சிந்திக்காமல் சிகண்டினியும் குதித்தாள். சிந்திக்காததனாலேயே அவளால் நீந்த முடிந்தது. இரவெல்லாம் நீரில் மூழ்கித்துழாவும் அவளருகே மிதந்தபின் அவள் கரையேறியதும் சிகண்டினியும் வந்து சேர்ந்தாள். மணிகர்ணிகா கட்டத்தில் எரியும் சிதைகள் அருகே அன்னை குளிர்காய்ந்தபோது அந்த நெருப்பை அவளும் அறிந்தாள்.
பேரன்னசாலையின் பின்பக்கம் அன்னையும் அவளும் உண்ணும்போது முன்பக்கம் அரண்மனைச் சேவகர்கள் வந்து குறுமுரசறைவித்து அன்றிலிருந்து பதினைந்துநாள் அனைவருக்கும் உணவு அளிக்கப்படும் என அறிவித்தனர். நகரத்தெருக்களில் அலங்கரித்துக்கொண்ட பெண்களும் குடிவெறியில் கண்சிவந்த ஆண்களும் வண்டிகளில் ஏறி குதிரைகளை வேகப்படுத்தி கூச்சலிட்டபடி சென்றனர். படகுகளில் பலவண்ணக் கொடிகளுடன் முழவும் கிணையும் பறையும் முழக்கியபடி நடனமிட்டுச்சென்றனர் கிராமத்தினர். வண்ணச்சுண்ணங்களை உயர்ந்த மாளிகைகள் மீதிருந்து அள்ளி கீழே செல்பவர்கள் மேல் பொழிந்தனர். சிரிக்கும் பற்களின், நடனமிடும் கால்களின், சுழலும் கைகளின், வண்ணங்களின் அலையடிப்பின் பெருநகரம் ஆயிற்று காசி.
நெய்கலந்த இனிப்பும் ஊன்சோறும் மாட்டுவண்டிகளில் மலைமலையாக வந்து இறங்கின. சிகண்டினி எழுந்து சென்று பார்த்துக்கொண்டு நின்றாள். காசிமன்னர் பீமசேனரின் பட்டத்தரசி மறைந்து நீர்க்கடன் நிறைவடைந்துவிட்டதென்றும் அவர் வங்கமன்னனின் இரண்டாவது மகளை மணந்து அவளை அரசியாக்கிக்கொண்டிருக்கிறார் என்றும் பேசிக்கேட்டாள். வங்கன்மகளின் அழகையும் நூறு ரதங்களிலும் நூறு வண்டிகளிலும் அவள் கொண்டு வந்த சீதனத்தையும்பற்றி மக்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவளை பேரழகி என்றனர். காசிநகரம் வெற்றியுடனும் செல்வத்துடனும் பொருந்தியது என்றனர். எவரோ எங்கோ மறைந்த பட்டத்தரசியைப்பற்றியும் அவள்பெற்ற மூன்று இளவரசிகளைப்பற்றியும் சில சொற்கள் சொன்னார்கள். ஆனால் நகரமே களிவெறிகொண்டிருந்தபோது அதை எவரும் நின்று கேட்கவில்லை.
இனிப்புகளையும் அப்பங்களையும் பெற்றுக்கொண்டு அவள் தன் அன்னையிடம் வந்தாள். அவளிடம் அவற்றைக்கொடுத்தபோது அனைத்தையும் ஒன்றென பெற்றுக்கொள்ளும் நெருப்பைப்போல அவள் அதையும் வாங்கிக்கொண்டாள். இருண்ட வான்வெளியில் இருந்து வந்து ஓர் மனித உடலில் குடிகொண்ட பிடாரி என ஆடிக்கொண்டும் முனகிக்கொண்டும் இருந்தாள். பின்பு இருகைகளையும் தூக்கி அலறியபடி நகரத்துத் தெருக்களில் ஓடி சதுக்கத்தில் நின்று ஓலமிட்டாள். அவள்மேல் செவ்வண்ணப்பொடியைக் கொட்டி உரக்கச்சிரித்தபடி குதிரைகள் இழுத்த ரதங்களில் பாய்ந்து சென்றனர் இளைஞர்கள் சிலர்.
காசியிலிருந்து வழக்கம்போல மீண்டும் கங்காத்வாரம் நோக்கிச் செல்லாமல் கீழ்த்திசை நோக்கி செல்லத்தொடங்கினாள் அன்னை. சிகண்டினி அவளைப் பின் தொடர்ந்துசென்றாள். இம்முறை அன்னையின் வேகமும் கூச்சலும் அதிகரித்திருக்கின்றனவா என்று அவளுக்கு ஐயமாக இருந்தது. ஒவ்வொரு ரதத்தை நோக்கியும் கூச்சலிட்டபடி எம்பிக்குதித்தாள். ஒவ்வொரு படகை நோக்கியும் கரையில் இருந்து எதையோ எடுத்து வீசினாள். புயலில் ஆடும் பாய்மரம் கொடிமரத்திலறைவது போல மார்பில் மாறி மாறி அறைந்துகொண்டாள். ஒருகட்டத்தில் சிகண்டினி ஓடிச்சென்று அவள் கைகளைப் பிடித்துக்கொண்டாள். சிகண்டினி பிடித்திருப்பதை அறியாமல் அவள் கைகள் மார்பை அறைந்தன. பித்து மட்டுமே உருவாக்கும் பெருவல்லமையை அக்கைகளில் சிகண்டினி கண்டாள்.
அஸ்தினபுரிக்குச் செல்லும் பெருவாயில்முகம் கங்கைக்கு அப்பால் தெரிந்தது. அன்னை ஒருபோதும் கங்கையைக் கடப்பதில்லை என சிகண்டினி அறிவாள். ஆனால் அன்று அவள் நீரில் குதித்து நீந்தத் தொடங்கினாள். சிகண்டினியும் பின் தொடர்ந்தாள். நாவாய்கள் நகர்ந்த பெருநீர்ப்பரப்பில் வடக்கு வானில் இருந்து தெற்குநோக்கி களைத்த சிறகுகளுடன் தனித்துச்செல்லும் கடைசி வலசைப்பறவைகள் போல அவர்கள் இருவரும் நீந்திக்கொண்டே இருந்தனர். மறுபக்கம் குறுங்காட்டில் ஏறி ஈரம் சொட்ட, அவளை திரும்பிக்கூட பாராமல் அன்னை துறை நோக்கிச் சென்றாள்.
செங்கல்லால் கட்டப்பட்டு வண்ணச்சுதையால் அழகூட்டப்பட்ட விதானவளைவுக்கு மேல் அமுதகலசச்சின்னம் பொறிக்கப்பட்டு அஸ்தினபுரியின் கொடி பறந்துகொண்டிருந்தது. ரதசாலையில் வரிசையாக அவிழ்த்துப்போடப்பட்ட ரதங்கள் காத்திருக்க அப்பால் குதிரைகள் ஆலமரத்துவேர்களில் கட்டப்பட்டு வாயில் கட்டப்பட்ட கூடைகளில் இருந்து கொள் மென்றுகொண்டிருந்தன. செம்மண்சாலை எழுந்து காட்டுக்குள் வளைந்து சென்றது. அதன் வழியாக புழுதிச்சிகை பறக்க ரதங்கள் வந்து நிற்க அவற்றில் இருந்து வணிகர்களும் மறவர்களும் இறங்கி படித்துறைக்கு வந்தனர். அவர்களின் மூட்டைகளைச் சுமந்து படித்துறைக்குக் கொண்டுவந்த ஏவலர்கள் அங்கே கங்கைக்குள் கால்பரப்பி நின்றிருந்த மரத்துறைமீது அவற்றை அடுக்கினர். துறைமேடையை முத்தமிட்டும் விலகியும் கொஞ்சிக்கொண்டிருந்த படகுகளில் ஏவலர் பொதிகளை ஏற்றும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.
கரையிலிருந்து நீரில் இறங்கிய ஆலமரத்துப் பெருவேர்களில் கட்டப்பட்ட சிறியபடகுகள் முலைகுடிக்கும் பன்றிக்குட்டிகள்போல துறையை ஒன்றையொன்று முந்தி முட்டிக்கொண்டிருந்தன. வந்தமரும் நாரைகள் சிறகுமடக்குவதுபோல பாய்சுருக்கியபடி பெரும்படகுகள் கரையை அணைந்தபோது அப்பால் முரசுமேடைகளில் இருந்தவர்கள் ஒலியெழுப்பினர். கரைகளில் இருந்து ஏவலர் துறைமேடை நோக்கிச் சென்றனர். அன்னை முன்னால் செல்ல மனமே கண்ணாக மாறி சிகண்டினி பின் தொடர்ந்தாள்.
துறைமேடைக்கு மிகவும் தள்ளி ஆலமரத்துவேரில் கட்டப்பட்ட தனிப்படகு ஒன்று நீரால் கரைநோக்கி ஒதுக்கப்பட்டு நின்றிருந்தது. மேலே எழுந்த ஆலமரக்கிளைகளின் சருகுகளும் பழுத்த இலைகளும் உதிர்ந்து பரவி மட்கி அதன் மூங்கில்வளைவுக்கூரை மூடப்பட்டிருந்தது. அதன் தீபமுகத்திலும் சிறுமுற்றத்திலும் எல்லாம் சருகுகள் மட்கியிருக்க அணில்கள் மரம் வழியாக கூரைமேல் தாவி கீழே தொற்றி இறங்கி அச்சருகுப்படலம் மேல் ஓடிவிளையாடின. அப்படகில் நீண்ட தாடியும் பித்து ஒளிரும் கண்களுமாக தோணிக்காரன் அமர்ந்திருந்தான்.
நிருதன் என்னும் அந்தத் தோணிக்காரன் என்றோ ஒருநாள் அங்கே வந்தபின் அந்தத் தோணியிலேயே அமர்ந்துவிட்டான் என்றனர் துறையில் வசித்தவர்கள். அவன் யார் எவன் என்ற எவ்வினாவுக்கும் பதில் சொல்லவில்லை. தோணியின் தீபமுகத்தில் கையில் துடுப்புடன் அமர்ந்தபடி செந்நிறச்சால்வைபோலக்கிடந்த அந்தப்பாதையையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் எவருக்காகவோ காத்திருப்பதாக நினைத்தனர். நாட்கள் செல்லச்செல்ல அவன் சித்தம் கலைந்துவிட்டது என்றறிந்தனர். சுங்கமேலாளனாகிய சக்ரதரன் அவனுக்கு ஒவ்வொருநாளும் அப்பமும் நீரும் கொண்டுசென்று கொடுத்தான்.
கையில் வருவதை உண்டு கங்கை நீரைக்குடித்து அங்கேயே அவன் இருந்தான். இரவும் பகலும் அந்தச்சாலையை அவன் கண்கள் விழித்து நோக்கிக்கொண்டிருந்தன. உடல் மெலிந்து பாம்புத்தோல் கொண்டு சடைவிழுந்து கண்கள் குகையாகி பேயுருக்கொண்டான். இரவுகளில் தன் சாளரத்தினூடாக அவனைப்பார்த்த சக்ரதரன் இருளில் மின்னும் அவ்விரு விழிகளைக் கண்டு சித்தழிந்து நோக்கிக்கொண்டிருந்தான். முதல்நாள் முதற்கணம் அவன் அக்கண்களில் கண்டு திகைத்த அந்த எதிர்பார்ப்பு கற்சிலையில் செதுக்கப்பட்டதுபோல அப்ப‌டியே இருந்தது.
அன்னை அஸ்தினபுரிக்குச் செல்லும் செம்மண்பாதையை அடைந்து அத்திசை நோக்கி சிலகணங்கள் நின்றபின் திரும்பிநடந்தபோது சிகண்டினி பின்னால் சென்றாள். நெடுந்தொலைவிலேயே அன்னையைக்கண்டு நிருதன் எழுந்து நின்றான். கைகளைக்கூப்பியபடி படகிலிருந்து முதல்முறையாக இறங்கி நிலத்திற்கு வந்து முன்னால் நடந்து வந்தான். அவன் நடப்பதைக்கண்டு பின்னால் துறையிலிருந்த சேவகர்களும் அதிகாரிகளும் பெருவியப்புடன் கூடினர். சிகண்டினி முதல்முறையாக அன்னை ஒரு மனிதனை அடையாளம் கண்டுகொள்வதைக் கண்டாள்.
தன் முன் வந்து நின்ற அன்னையின் முன்னால் மண்ணில் அமர்ந்து அவள் பாதங்களை வணங்கினான் நிருதன். அவள் அவன் முன்னால் ஓங்கி நின்றிருந்தாள். பின்பு மெல்லக்குனிந்து அவன் தலையை தன் கைகளால் தொட்டாள். அவன் உடல் குறுகியது. சிலகணங்களுக்குப்பின் அன்னை ஓலமிட்டபடி புதர்காட்டுக்குள் நடந்தாள். சிகண்டினி அவள் பின்னால் ஓடும்போது தன்பின்னால் நிருதனும் வருவதைக் கண்டாள்.

2/11/14

பகுதி ஆறு : தீச்சாரல்[ 8 ]

பகுதி ஆறு : தீச்சாரல்[ 8 ]
விந்தியமலையின் தென்மேற்குச்சரிவில் விதர்ப்ப நாட்டின் அடர்காடுகளுக்கு அப்பால் திட இருள் போல எழுந்த கரும்பாறைகளால் ஆன குன்றுகள் சூழ்ந்து மறைத்த சுகசாரிக்கு வியாசர் வந்துசேர்ந்தபோது அவரது தலைமயிர் சடைக்கற்றைகளாக மாறி மண்திரிகள் போல கனத்து தோளில் கிடந்தது. தாடி காற்றில் பறக்காத விழுதுகளாக நெஞ்சில் கிடந்தது. உடம்பெங்கும் மண்ணும் அழுக்கும் நெடும்பயணத்தின் விளைவான தோல்பொருக்கும் படிந்து மட்கி உலர்ந்த காட்டு மரம்போலிருந்தார்.
சுகசாரியைப்பற்றி அவர் ஒரு சூதர்பாட்டில் கேட்டிருந்தார். அங்கே கிளிகள் மனித மொழிபேசும் என்றார் சூதர். காடெங்கும் பச்சைப்பசுங்கிளிகள் இலைக்கூட்டங்கள் போல நிறைந்திருப்பதனால் அந்தக்காடே பகலெல்லாம் வேள்விக்கொடி ஏறிய சாலை போலிருக்கும் என்றார் சூதர். அங்கு செல்லும் வழியையும் அவர்தான் சொன்னார். ‘விந்தியமலை கங்காஸ்தானத்தை அள்ளிவைத்திருக்கும் உள்ளங்கைபோன்றது. அந்தக்கையின் விரலிடுக்கு வழியாக வழிந்தோடும் சிறிய நதிகளின் பாதையில் சென்றால் தட்சிணத்தை அடையலாம். தட்சிணத்தின் தலையாக இருப்பது விதர்ப்பம்.’
விந்தியனை அடைந்து அந்த சிறிய மலையிடுக்கை கண்டடையும் வரை கீழிறங்க ஒரு வழி இருப்பதையே அவர் உணரவில்லை. காடு வழியாக அருகே நெருங்கிய ஒற்றையடிப்பாதை பெரிய மலையில் முட்டி காணாமல் போயிற்று. ஆனால் காட்டுக்குள் மேயவிடப்பட்டிருந்த பசுக்கூட்டம் ஒன்று தலையை ஆட்டி கழுத்துமணிகளை ஒலிக்கச்செய்தபடி கனத்த குளம்பொலியுடன் இயல்பாகச் செல்வதைக் கண்டு அதை பின்தொடர்ந்தார்.
மழைநீர் வழிகண்டுபிடித்து ஒழுகிச்செல்வது போல பசுக்கள் இரு மலைகளுக்கு நடுவே சென்றன. அங்கே வெண்ணிறச்சரடு போல ஒரு சிறு நீரோடை நூற்றுக்கணக்கான பாறைகளில் விழுந்து விழுந்து நுரைத்து பளிங்கு மரம் கீழிருந்து எழுந்தது போல கீழே இறங்கிச்சென்று கொண்டிருந்தது. அந்த ஓடை அறுத்து உருவாக்கிய இடைவெளி பெரும் கோடைவாயில் எனத் திறந்து, பலகாதம் ஆழத்துக்குச் சுருண்டு கீழே சென்று, பச்சைப்படுங்காட்டில் முடிந்தது. காட்டுக்குமேல் வெண்பட்டாக மேகம் பரவியிருந்தது.
பாறைகளின் நடுவே பெரிய பாறைகளைத் தூக்கிப்போட்டு வளைந்து செல்லும் பாதை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. கோடைகாலத்தில் அப்பாதையை திருவிட நாட்டுக்குச் செல்லும் வணிகர்கள் பயன்படுத்தி வந்தனர் என்பது ஆங்காங்கே அவர்கள் கட்டியிருந்த நிழல்குடில்களில் இருந்து தெரிந்தது. பாறை இடுக்குகளில் அவர்கள் பொதிகளை ஏற்றிச்சென்ற அத்திரியின் சாணி உலர்ந்து படிந்திருக்கக் கண்டார். உதிர்ந்த தானியங்கள் முளைத்த கதிர்கள் சரிந்துகிடக்க அவற்றில் சிறுகிளிகள் எழுந்து பறந்துகொண்டிருந்தன.
கற்பாதை வழியாக காட்டுக்குள் இறங்கி காட்டுப் பழங்களையும் கிழங்குகளையும் ஓடைமீன்களையும் உண்டபடி வியாசர் பகல்கள் முழுக்க பயணம் செய்தார். இரவில் உயரமான மலைப்பாறை மேல் ஏறி அங்குள்ள ஏதேனும் குகையிடுக்கில் தங்கினார். எதிரிகளால் சூழப்பட்டு துரத்தப்பட்டவர் போல சென்று கொண்டே இருந்தார். முதல் இடையர்கிராமத்தில் சுகசாரிமலை பற்றி விசாரித்துக்கொண்டு மேலும் நடந்தபோதெல்லாம் பயணத்தை இயக்கும் இரு விசைகளே அவரை முன்னகர்த்தின. கிளம்பிய இடத்தில் இருந்து வெளியேறும் வேகம், இலக்காகும் இடத்தை எதிர்நோக்கும் ஆவல். ஏதோ ஒரு தருணத்தில் அதை அடைந்துவிட்டோம் என்று உணர்ந்தகணமே கால்கள் தயங்கின.
கீழே இறங்கி அவர் அடைந்த முதல் கிராமம் சதாரவனத்தின் முகப்பு என்றார்கள். சதார வனத்தில் அவர் சந்தித்த ஒரு தமிழகத் துறவிதான் சுகசாரி மலையைப்பற்றி முழுமையான விவரணையை அளித்தார். அவர் இமையமலைக்கு சென்று கொண்டிருந்தார். பாதையோரத்தில் யாரோ ஒரு வணிகன் கட்டிவிட்டிருந்த தர்மசத்திரத்தின் முன்னால் இரவில் வெறும்பாறைமீது மல்லாந்து படுத்து விண்மீன்கள் நிறைந்த வானை பார்த்துக்கொண்டிருந்தார் அவர். கன்னங்கரிய நிறமும் நுரைபோன்ற தலைமுடியும் தாடியும் புலிக்கண்களும் கொண்ட நெடிய மனிதர். கைவிரல்களில் இருந்து எப்போதும் ஒரு தாளம் காற்றில் பரவிக்கொண்டிருந்தது.
சத்திரத்துப் பொறுப்பாளரான மூதாட்டியும் மகளும் கைநிறைய வெண்சங்குவளையல்களும் கழுத்தில் புலிக்கண்கள் போன்ற சோழிகளாலான மாலையும் அணிந்து நெற்றியில் ஒரு கழுகுச்சின்னத்தை பச்சை குத்தியிருந்தார்கள். மாலையில் பயணிகள் அதிகமிருக்கவில்லை. பெரும்பாலும் திருவிடத்து சிறுவணிகர்கள். அவர்கள் மூதாட்டி கொடுத்த தீயில்சுட்ட அப்பத்தையும், தொன்னையில் கொடுக்கப்பட்ட கொதிக்கும் புல்லரிசிக்கஞ்சியையும் வாங்கிக்கொண்டு வந்து ஆங்காங்கே சிறிய குழுக்களாக அமர்ந்து உண்டுகொண்டிருந்தனர். அவர்களின் அத்திரிகளும் கழுதைகளும் குதிரைகளும் ஒன்றாகச் சேர்த்து கட்டப்பட்டு, கழுத்துமணிகளின் ஒலி சேர்ந்தெழ, முன்னால் போடப்பட்ட உலர்ந்த கோதுமைத்தாளை மென்றுகொண்டிருந்தன.
வியாசர் கையில் உணவுடன் நாற்புறமும் பார்த்தபோது அந்த தட்சிணத்துறவியைப் பார்த்து அவர் அருகே சென்றார். அப்பத்தை கஞ்சியில் தோய்த்து உண்டபின் அருகே ஓடிய ஓடையில் கைகழுவிவிட்டு வந்து அந்தப்பாறையில் அமர்ந்தார். துறவி சற்று ஒதுங்கி இடம் விட்டார். வியாசர் குளிர்ந்த பாறையில் அமர்ந்துகொண்டார். நீண்ட நடைபயணத்தின் அலுப்பை உடல் உணர்ந்தது. ஒவ்வொரு தசைநாரும் மெல்லமெல்ல இறுக்கத்தை இழந்து தளர்ந்து படிந்தது. துறவி விண்மீன்களையே பார்த்துக்கொண்டிருந்தார்.
“இன்னும் மூன்றுநாட்களில் மழைக்காலம் தொடங்கும்” என்றார் வியாசர். அவர் துறவியிடம் பேச விரும்பினார். அவரது கால்களைப்பார்த்தபோது அவர் சென்ற தூரம் தெரிந்தது. “ஆம், அங்கே திருவிடநாட்டில் இப்போதே மழை தொடங்கியிருக்கும்” என்றார் துறவி.
“நீங்கள் திருவிடத்தில் இருந்து வருகிறீர்களா என்ன?” என்றார் வியாசர். “ஆம்” என்றார் துறவி. “எங்கே செல்கிறீர்கள்?” துறவி விண்மீன்களைப் பார்த்தபடி “வடக்கே” என்றார். “ஏன்?” என்றார் வியாசர். “ஏனென்றால்… நான் தெற்கே பிறந்தமையால்” என்றார் துறவி.
வியாசர் மெல்லிய அங்கதத்துடன் “அப்படியென்றால் வடக்கே பிறந்த நான் தெற்குநோக்கிச் செல்லவேண்டுமா என்ன?” என்றார். “ஆம், பாரதவர்ஷம் ஞானியின் கையில் கிடைக்கும் விளையாட்டுப்பாவை. எந்தக்குழந்தையும் பாவையின் அறியாத பகுதியையே திரும்பிப்பார்க்கும்.”
அந்த கவிப்பேச்சு உருவாக்கிய மதிப்புடன் “என் பெயர் கிருஷ்ண துவைபாயனன்” என்று வியாசர் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். “நீங்கள் வேதங்களை தொகுத்தவர் அல்லவா?” என்று அவர் பரபரப்போ வியப்போ சிறிதும் இன்றி கேட்டார். வியாசர் “ஆம், நான்தான். என் தந்தையின் ஆணைப்படி அதைச்செய்தேன்” என்றார்.
“என் பெயர் தென்மதுரை மூதூர் சித்திரன் மைந்தன் பெருஞ்சாத்தன். முதுகுருகு, தண்குறிஞ்சி என்னும் இருநூல்களை நானும் யாத்துள்ளேன்” என்றார் துறவி. “நாம் சந்திப்பதற்கு ஊழ் அமைந்திருக்கிறது. அது வாழ்க!” வியாசர் “பாண்டியநாட்டைப்பற்றி நான் ஓரளவு அறிந்திருக்கிறேன்” என்றார். “கொற்கையின் முத்துக்களின் அழகை பாடியிருக்கிறேன்.”
சாத்தன் புன்னகைத்து “அவை என் முன்னோரின் விழிகள். கடலுள் புதைந்த எங்கள் தொல்பழங்காலத்தைக் கண்டு பிரமித்து முத்தாக ஆனவை அவை. அவற்றின் ஒளியில் இருக்கின்றன என் மூதாதையர் வாழ்ந்த ஆழ்நகரங்கள். ஆறுகள், மலைகள், தெய்வங்கள். அன்று முதல் இன்றுவரை அந்த அழியாப்பெருங்கனவையே நாங்கள் உலகெங்கும் விற்றுக்கொண்டிருக்கிறோம்.”
தன்முன் பாரதவர்ஷத்தின் பெருங்கவிஞர் ஒருவர் அமர்ந்திருப்பதை வியாசர் உணர்ந்தார். எஞ்சிய அறிவாணவத்தை அகற்றிவிட்டு அவர் மனம் முழுமையாகவே பணிந்தது.
“கண்ணால் ஞானத்தை அடையவிரும்புபவன் பாரதவர்ஷத்தை காண்பானாக” என்றார் சாத்தன். “வியாசரே, என்றோ ஒருநாள் உங்கள் முதற்சொல்லை அறிய நீங்களும் தென்னகம் ஏகவேண்டியிருக்கும். அங்கே உங்கள் ஊழ்கத்தின் வழிச்சொல்லை உங்கள் தெய்வங்கள் கொண்டுவந்து அளிப்பர்.”
“நான் எப்படி அதைத்தேடிச்செல்வது?” என்றார் வியாசர் பணிவுடன். “வலசைப்பறவைகளுக்கு வானம் வழிசொல்லும்….” என்றார் சாத்தன். வானைச்சுட்டி “விண்மீன்கள் என்னிடம் சொல்லும் வழி ஒன்று உள்ளது. வடக்கே… வடக்கே ஏதோ ஓர் இடம். என் சொல்லைத்தேடி நான் செல்கிறேன்.”
வியாசர் தனக்குள் எழுந்த அலையை உணர்ந்தார். கைகூப்பி “குருநாதரே, தங்களை நான் சந்திக்கவைத்த ஆற்றலின் நோக்கத்தை அறியமாட்டேன். அதன் எண்ணம் ஈடேறுவதாக!” என்றார்.
“நீங்கள் உங்கள் மைந்தரைத்தேடிச் செல்கிறீர்கள் அல்லவா?” என்றார் சாத்தன். “இன்னும் நூறுநாழிகைத் தொலைவில் இருவிரல் முத்திரையென எழுந்த இரு பெரும் பாறைகளுக்கு நடுவே செல்லும் பாதை சுகசாரிமலைக்கு வழியாகும்.”
VENMURASU_EPI_34
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
“தாங்கள் சுகனை சந்தித்தீர்களா?” என்றார் வியாசர். “ஆம்… நான் தட்சிணமேட்டில் ஏறும்போது ஒரு கிளி இனியகுரலில் வேதமந்திரம் ஒன்றை முழுதுரைப்பதைக் கேட்டேன். வியப்புடன் அக்கிளியைப் பின் தொடர்ந்து சென்றேன். செல்லும்தோறும் வேதமந்திரங்களை உரைக்கும் பல கிளிகளைக் கண்டேன். அவை சுகமுனிவர் வாழும் சுகசாரி மலைக்கிளிகள் என்றனர் ஊரார். நான் அக்கிளிகளைத் தொடர்ந்து சுகசாரிமலைக்குச் சென்றேன். மோனத்தில் அமர்ந்த இளம் முனிவரைக் கண்டு வாழ்த்துரைசெய்து மீண்டேன்” என்றார் சாத்தன்/
“அவன் என் மகன்” என்று வியாசர் முகம் மலர்ந்தார். “அவனுக்கு எட்டு வயதாகும்வரை நானே அவனுடைய ஆசிரியனாக இருந்து வேதவேதாங்கங்களை கற்றுக்கொடுத்தேன். அதன்பின் மிதிலைநகரின் ஜனகமன்னரிடம் அவனை அனுப்பினேன். காட்டிலேயே வளர்ந்த அவன் நாடும் நகரும் அரசும் அமைச்சும் கண்டு தேறட்டும் என்று நினைத்தேன். அரசமுனிவரான ஜனகர் அதற்கு உகந்தவர் என்று தோன்றியது.”
“ரகுகுல ராமனின் துணைவி சீதையன்னையின் தந்தை ஜனகரையே நான் நூல்வழி அறிந்திருக்கிறேன்” என்றார் சாத்தன். வியாசர் “அந்த ஜனகரின் வழிவந்தவர் இவர். கற்றறிந்தும் உற்றறிந்தும் துறந்தறிந்தும் அனைத்துமறிந்த அரசர். அவரது அவையில் சென்று இவன் அமர்ந்தான். ஒவ்வொருநாளும் அங்கே நிகழும் நூலாய்வையும் நெறியாய்வையும் கற்றான்” என்றார்.
வியாசர் சொன்னார். ஒருநாள் ஜனகமன்னர் தன் அவையில் ஓர் அறவுரை நிகழ்த்துகையில் அறம் பொருள் இன்பம் மூன்றையும் அறிபவனுக்கே வீடு திறக்கும் என்றார். அவ்விதி எந்நூலில் உள்ளது என்று சுகன் கேட்டான். அது நூலில் உள்ள நெறியல்ல கண்முன் இயற்கையில் உள்ள நெறி என்றார் ஜனகர். மலர் பிஞ்சாகி காயாகித்தான் கனிய முடியும் என விளக்கினார்.
ஆனால் சுகன் அந்நெறி எளிய உயிர்களுக்குரியது என்றான். கீழ்த்திசையில் நாளும் உதிக்கும் சூரியன் உதித்த மறுகணமே ஒளிவீசத் தொடங்குகிறதல்லவா என்றான். ஜனகர் அதைக்கேட்டு திகைத்தார். பின்பு அறமும் பொருளும் இன்பமும் அறியாத இளைஞன் நீ. நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு விடுகதைக்கு பதில் சொல், அதன்பின் நீ சொல்வதை நான் ஏற்கிறேன் என்றார்.
“அந்த வினா பழைய நூல்களில் பலவாறாக சொல்லப்பட்டிருக்கிறது” என்றார் வியாசர். உத்தாலகர் என்ற முனிவருக்கு ஸ்வேதகேது என்று ஒரு மைந்தன் இருந்தான். தந்தை தன் ஞானத்தையெல்லாம் அளித்து அந்த மைந்தனை பேரறிவுகொண்டவனாக ஆக்கினார். ஒருநாள் அவர்கள் இருவரும் காட்டில் தவம்செய்துகொண்டிருக்கையில் அங்கே முதிய பிராமணர் ஒருவர் வந்தார்.
அப்பிராமணர் உத்தாலகரின் அழகிய மகனைப்பார்த்து, இந்த வனத்தில் உங்களுக்கு எப்படி இவ்வளவு அழகிய மைந்தன் பிறந்தான் என்று கேட்டார். உத்தாலகர், என் மனைவி என்னுடன் தவச்சாலையில் இருக்கிறாள். என் தவத்தை அவளும் பகிர்ந்துகொள்கிறாள் என்றார்.
அந்தப்பிராமணர் அறிவிலும் அழகிலும் குறைந்தவர். கண்பார்வையும் அற்றவர். அவர் சொன்னார். நான் வயது முதிர்ந்தவன். எனக்கு மைந்தர்கள் இல்லை. நீர்க்கடன் செய்ய ஆளில்லாத இல்லறத்தானாகிய நான் நரகத்தீயில் விழுவதற்குரியவன். இந்தவயதில் இனிமேல் எனக்கு எவரும் பெண்ணை தரப்போவதில்லை. ஆகவே உன் மனைவியை எனக்குக் கொடுத்துவிடு. என் குழந்தை ஒன்றை அவளிடம் பெற்றபின் உன்னிடமே அனுப்பிவிடுகிறேன். அதன்பின் அவர் உத்தாலகரின் குடிசைக்குள் நுழைந்து அவரது மனைவியை கையைப்பிடித்து இழுத்துச்செல்லத் தொடங்கினார்.
உத்தாலகரின் மனைவி தவத்தால் மெலிந்தவள், கடும் உழைப்பால் தளர்ந்தவள். அவளுக்கு அந்த முதியபிராமணனை பிடிக்கவுமில்லை. ஆனால் அவள் கூடவே சென்றாள். ஸ்வேதகேது ஓடிச்சென்று அந்தப்பிராமணரைப்பிடித்து நிறுத்தினான். என் தாயை இதற்கு அனுப்பமுடியாது என்று சொன்னான். இது அவளுக்கு துயரத்தை அளிக்கிறது, அவள் பெண்மையை இது அவமதிக்கிறது என்றான்.
பிராமணர் சொன்னார். நெறிநூல்களின்படி எனக்கு ஒரு மைந்தனைப்பெற உரிமை உண்டு. அதற்கு நான் இவளைக் கொண்டுசெல்வதும் சரியே. மகனை ஈன்றளித்தல் பெண்ணுக்கு எவ்வகையிலும் இழிவல்ல, பெருமையே ஆகும். தொல்முறைப்படி ஓர் அரணிக்கட்டையை பதிலுக்குப் பெற்றுக்கொண்டு நீ இவளை விட்டுவிடு.
உத்தாலகரும் அவர் சொல்வது முறைதான், அவர் நரகத்துக்குச் செல்ல நாம் அனுமதிக்கலாகாது என்றார். மைந்தரை பெற்றுவிட்டுச் செல்லாத ஒருவரை இறைசக்திகள் தண்டிக்கும். அந்தத் தூய கடமையை அவர் செய்யட்டும் என்றார்.
ஸ்வேதகேது அந்தப் பிராமணரைப் பிடித்து விலக்கிவிட்டு கடும் சினத்தின் கண்ணீருடன் தன் வலக்கையில் தர்ப்பையை எடுத்துக்கொண்டு “எதன்பொருட்டானாலும் நான் இதை அனுமதிக்கமுடியாது. என் அன்னையை இன்னொருவன் தீண்டுவதை நான் விலக்குகிறேன். இனிமேல் இவ்வுலகில் இந்தப் பழைய நெறிகள் எதுவும் இருக்கலாகாது என நான் வகுக்கிறேன், என் தவத்தின்மேல் ஆணை” என்றான்.
அதைக்கண்ட பிராமணர் “உத்தாலகரே, நீர் நூலறிந்தவர். நீர் சொல்லும், நான் நீர் சொல்வதைச் செய்கிறேன். இவர் சொல்வது பிழை என்றால் நீர் உம் தவ வல்லமையால் இவரைப் பொசுக்கும்” என்று கூவினார். ஆனால் உத்தாலகர் ஒன்றும் பேசாமல் திரும்பி காட்டுக்குள் சென்றுவிட்டார். திரும்பி வரவேயில்லை.
“நெறிநூல்களான யமசுருதி நாரதசுருதி அனைத்திலும் உள்ளது இக்கதை. இதிலுள்ள கேள்வி என்னவென்றால் ஏன் உத்தாலகர் ஒன்றும் சொல்லாமல் திரும்பிச்சென்றார் என்பதுதான்” என்றார் வியாசர்.
சாத்தன் புன்னகைத்துக்கொண்டு “இதற்கு உங்கள் மைந்தர் என்ன சொன்னார்?” என்றார். “இவ்வினாவுக்கு எவரும் சரியான பதிலை சொன்னதேயில்லை. கதைகேட்ட ஒவ்வொருவரும் அந்தப்பிராமணர்மீது சினம்கொண்டு ஸ்வேதகேது சொன்னவை சரியே என்பார்கள். அது சரி என்பதனால்தான் உத்தாலகர் திரும்பிச்சென்றார் என்று விளக்குவார்கள். அது சரியான விடை அல்ல என்று என் மகன் சொன்னான்” என்றார் வியாசர்.
மிருகங்கள் நடந்தும், பறவைகள் பறந்தும், புழுக்கள் நெளிந்தும் அறத்தை அறிந்துகொள்கின்றன. அவையறியும் அறம் ஒன்றே, பிறப்பை அளித்தலே உடலின் முதற்கடமை. மண்ணில் தன் குலத்தையும் அக்குலத்தில் தன் ஞானத்தையும் விட்டுச்செல்வது மட்டுமே மனித வாழ்வின் இறுதியுண்மை என மனிதர்களும் கருதிய காலத்தின் அறத்தையே உத்தாலகரும் அந்தப்பிராமணரும் சொன்னார்கள். அவர் மனைவியும் அதை ஏற்றுக்கொண்டாள் என்று சுகன் ஜனகருக்குச் சொன்னான்.
அந்த அறத்தில் அனைத்தும் பிறக்கும் குழந்தைகளால் நியாயப்படுத்தப்படுறது. ஆனால் அக்குழந்தைகள் திரும்பிநின்று அது பிழையெனச் சொல்லும்போது அந்தக்காலம் முடிவுக்கு வந்துவிடுகிறது. தாய்தந்தையரின் கற்பொழுக்கம் பிள்ளைகளால் கட்டுப்படுத்தப்படும் புதியகாலம் பிறந்துவிட்டது. இனி அதுவே உலகநெறியாகும் அதை உணர்ந்தே உத்தாலகர் ஒன்றும் சொல்லாமல் காட்டுக்குள் சென்றார் என்று சுகன் அவ்வரங்கில் சொன்னான்.
“அன்று ஜனக மன்னர் என் மகனைநோக்கி நீ நூறாண்டு வாழ்ந்து கனிந்தவன் போல் பேசுகிறாய். உனக்கு முதல்மூன்று வாழ்வுமுறைமையும் தேவை இல்லை. நீ சூரியன் போன்று எப்போதும் ஒளியுடையவனாக இருப்பாய் என வாழ்த்தினார்…” என்றார் வியாசர். “அங்கிருந்து அவன் என்னிடம் வந்து சேர்ந்தான். அவனை என்னால் உணரமுடியவில்லை. அவனிடம் மீண்டும் மீண்டும் இல்லறம் பற்றிச் சொன்னேன்.”
“ஆனால் ஒருநாள் நானும் அவனும் நீர்நிலை ஒன்றைக்கடந்து சென்றோம். முன்னால் அவன் சென்றான். நான் பின்னால் சென்றேன். அந்நீர்நிலையில் ஏராளமான இளம்பெண்கள் நீராடிக்கொண்டிருந்தனர். அவர்கள் அவனை பொருட்படுத்தவேயில்லை. ஆனால் நான் அருகே சென்றதும் அனைவரும் ஆடைகளை அள்ளி உடலை மூடிக்கொண்டனர். சிலர் ஓடிச்சென்று நீரில் மூழ்கினர்…. அது என்னை அவமதிப்பது என்று எனக்குப்பட்டது. அவர்களிடம் ஏன் அப்படிச்செய்தார்கள் என்று கேட்டேன். உங்கள் மகன் கண்களில் முற்றிலும் காமம் இல்லை, அவன் வந்ததையே நாங்களறியவில்லை என்று சொன்னார்கள். அன்றுதான் அவனை நான் அறிந்தேன்.”
“அன்று உங்களையும் அறிந்துகொண்டீர்கள் இல்லையா?” என்று சாத்தன் சிரித்தார். “அதன்பின் அது நிறுவப்பட்டதையும் அறிந்தீர்கள்.” வியாசர் அதிர்ந்து ஏதும் சொல்லாமல் அவரைப்பார்த்தார். “ஆகவேதான் இத்தனைதூரம் நடந்து உங்கள் மைந்தரைக் காணச்செல்கிறீர்கள்…”
வியாசர் உடலைவிட்டு உயிர் பிரிவதுபோன்ற மெல்லிய துடிப்புடன் “ஆம்…” என்றார். “தாங்கள் அனைத்தையும் அறியும் நுதல்விழிதிறந்தவர் சாத்தரே… குரு அறியாத சீடனின் அகம் என ஏதுமிருக்க இயலாது.” பெருமூச்சுடன் சற்றுநேரம் தன்னில் மூழ்கி இருந்தபின் “முதலிரு நாட்களும் என் காமமும் அகங்காரமும் கண்ணை மறைத்திருந்தன. மூன்றாம் நாள் முழுநிலவு. நானும் முழுமையை அன்று உணர்ந்தேன். அன்றிரவு என் சொற்கள் ஒளிகொண்டிருந்தன. அவை தொட்டவை அனைத்தும் ஒளி கொண்டன…” என்றார்.
“ஆனால் மறுநாள் காலை நான் என்னை வெறும் வெளியில் கிடக்கும் வெற்றுடல்போலக் கண்டு கூசினேன். என்னையே வெறுத்து ஓடிச்சென்று நீரில் விழுந்தேன். நீர் என்னை தூய்மைப்படுத்தவில்லை என்று கண்டு மந்திரங்களில் நீராடினேன்… ஒவ்வொன்றாலும் மேலும் மேலும் அழுக்காக்கப்பட்டேன்.” வியாசர் வேண்டுபவர் போல தன் கைகளை நெஞ்சுடன் சேர்த்துக்கொண்டார்.
வியாசர் “என் அகம் எரிகிறது சாத்தரே” என்றார். “பிழையையும் சரியையும் பிரித்தறியும் ஆற்றலை இழந்துவிட்டேன்” துயரத்துடன் தலையை கையால் பற்றிக்கொண்டார். “ஆசைகளையும் அகங்காரத்தையும் வெல்லமுடியாதவனுக்கு ஞானமே விஷம். நான் செய்தவை எல்லாமே சரிதான் என வாதிடவே நான் அடைந்த ஞானம் எனக்கு வழிகாட்டுகிறது. அதைவெறுத்து பிய்த்துவீசினால் அவை திரண்டு என்னை குற்றம் சாட்டி கடித்துக் குதறுகின்றன. துரத்தி வந்து எள்ளி நகையாடுகின்றன.”
கண்ணீருடன் இரு கைகளையும் விரித்து வியாசர் சொன்னார், “எதற்காக நூல்களைக் கற்றேன்? எளிய மிருகம்போன்ற வாழ்க்கை எனக்கிருந்தால் இந்தத் துயரம் இருந்திருக்காது… ஒவ்வொரு கணமும் அம்மூன்று நாட்களும் பெருநோய் போல பெருகிப்பெருகி என்மேல் படர்கின்றன…என்னுள் வெறுப்பு நிறைகிறது. வெறுப்பு என்பது கொல்லும் விஷம்…சுயவெறுப்போ ஆலகாலம்.”
சாத்தன் மாறுதலற்ற முகத்துடன் விண்மீன்களைப் பார்த்துக்கிடந்தார். வியாசர் “விண்மீன்களிடம் நேரடியாகப் பேசுபவர் நீங்கள். உங்களிடம்தான் நான் சொல்லமுடியும்…அதற்காகவே நான் உங்களை சந்தித்திருக்கிறேன்… இந்த விண்மீன்களுக்குக் கீழே நான் அனைத்தையும் சொல்லவிரும்புகிறேன் சாத்தரே. இக்கணம் இப்புவியில் எனக்கிணையான பெரும் பாவி எவருமில்லை” என்றார்.
கண்ணீரும் கொந்தளிப்புமாக வியாசர் சொல்லிமுடித்ததும் சாத்தன் விண்மீன்கூட்டத்தை நோக்கியபடி புன்னகைசெய்தார். “கோடானுகோடி விண்மீன்கள்…கோடானுகோடி உயிர்கள். கோடானுகோடி வாழ்க்கைகள். இதில் பாவமென்ன புண்ணியமென்ன? கடலலைக் குமிழி நிலையற்றது. கடலே காலவெளியில் ஒரு வெறும் குமிழி…” என்றார்.
வியாசர் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். “நீர்வழிப்படும் புணைபோன்றது வாழ்க்கை. ஆகவே பெரியோரை வியக்கவும் மாட்டேன். சிறியோரை இகழ்தலும் மாட்டேன். பிழையை வெறுப்பதுமில்லை. நிறையை வணங்குவதுமில்லை” என்றார் சாத்தன். பிறகு சிரித்துக்கொண்டே திரும்பி “வியாசரே, நீர் இதுவரை செய்தவை ஏதும் உமது பணிகள் அல்ல. செய்யவிருப்பதே உமது பணி” என்றார்.
“என்ன செய்யப்போகிறேன்?” என்றார் வியாசர். “அதை நான் அறியேன். ஆனால் பெருநிகழ்வொன்றின் தொடக்கத்தைக் காண்கிறேன். முதற்புலவன் புற்றுறைவோன் முன்பொருநாள் அன்புடன் அமர்ந்திருந்த அன்றில்பறவைகளில் ஒன்றை வேடன் வீழ்த்தக்கண்டு விட்ட கண்ணீருக்கு நிகரானது நீர் இப்போது விட்ட கண்ணீர்த்துளி” சாத்தன் சொன்னார்.
வியாசர் சொல்லிழந்து பார்த்துக்கொண்டிருந்தார். “எங்கள் தென்னகத் தொல்மொழியில் கடல்கொண்ட பெருங்காவியங்கள் பல உண்டு. கருநிறமும் வெண்ணிறமும் கூர்ந்து இணைந்து ஒளியாவதே காவியம் என முன்னோர் வகுத்தனர். உம்முள் மூன்றையும் உணர்ந்துவிட்டீர்.”
“நான் செய்யவேண்டியது என்ன?” என்றார் வியாசர். “உமது அகம் வழிகாட்டி அழைத்துச்செல்லும் வழியில் செல்க. ஆம், நீர்வழிப்படும் புணை போல” என்று சாத்தன் சிரித்தார்.
இரவில் விண்மீன்கள் வெளித்த முடிவின்மையைப் பார்த்தபடி வியாசர் அக்கரும்பாறைமேல் கிடந்தார். அருகே மெல்லிய மூச்சொலியுடன் சாத்தன் துயின்றுவிட்டிருந்தார். ஒரு மனிதர் அருகிருக்கையில் அவ்வுணர்வே உருவாகாத விந்தையை வியாசர் மீளமீள எண்ணிக்கொண்டார். நேர்மாறாக விண்மீன்களின் பெருவிரிவு ‘இதோ நீ இதோ நீ’ என்றே சொல்லிக்கொண்டிருந்தது. மின்னி மின்னி. திரும்பத்திரும்ப.
காலையில் வணிகர்கள் கிளம்பும் ஒலிகேட்பது வரை அவர் பேசமறுத்து பிரக்ஞையுடன் விளையாடிக்கொண்டிருந்த விண்மீன்களையே பார்த்துக்கொண்டிருந்தார். நெடுமூச்சுடன் பார்க்கையில் சாத்தன் அருகே இல்லை என்று உணர்ந்தார்.
அன்றும் மறுநாளும் நடந்து சுகசாரி மலையடிவாரத்தில் இருந்த ரிஷபவனம் என்ற இடையர் கிராமத்தை அடைந்தார். அவர்கள் மலையேறிச்செல்லும் வழி ஒன்றைக் காட்டினர். அங்கு இரவு தங்கி காலையில் அவர்கள் அளித்த பால்கஞ்சியை அருந்தியபின் மலையேறத்தொடங்கினார். மலையிறங்கிச் சென்ற கிளி ஒன்று வானிலேயே ஸ்வாஹா என்று சொல்லிச்சென்றதைக் கேட்டு மெய்சிலிர்த்து கைகூப்பி நின்றுவிட்டார்.
மேலும் மேலும் கிளிகள் வந்துகொண்டே இருந்தன. வேதமந்திரங்கள் மரங்களில், செடிகளில், வானூர்ந்த காற்றில் விளைந்தன. கண்களில் நீர் வழிய மலை ஏறிச்சென்றார். அங்கு செல்லச்செல்ல அங்குவருவதற்காகவே அவ்வளவுதொலைவு வந்தோம் என்று உறுதிகொண்டார்.
இனியமலைச்சாரல் அது. பழமரங்களும் பூமரங்களும் செறிந்த பொழில்களின் பசுந்தொகை. காட்டின் பிரக்ஞைபோல நீர் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. கரிய பாறைகள் காலையின் இனிய மென்மழைச்சாரலால் நனைந்து கருமையாக ஒளிவிட்டன. அவற்றின் இடைவெளிகளில் மலை சிரிக்கும் வெண்பற்கள்போல அருவிகள் நுரைத்து வழிந்தன.
மலையிறங்கி காட்டுக்குள் புகுந்த நீரோடை ஒன்றின் கரையில் அவர் நின்றிருக்கையில் மேலே இருந்த மலைக்குகையில் இருந்து படியிறங்கி சுகன் வருவதைக் கண்டார். முதல் அசைவிலேயே அது தன் மகன் என தனக்குள் இருந்த தொல்விலங்கு அறிந்துகொண்ட விந்தையை வியந்தார். சுகன் ஆடையற்ற உடலுடன் இறகு ஒன்று காற்றில் மிதந்திறங்குவதுபோல வந்து, வானத்தால் உள்ளங்கையில் வைத்து மெதுவாக மண்ணில் இறக்கப்பட்டான்.
வியாசர் அவனைநோக்கிச் சென்றார். கணம் கணமாக. மகன் என்ற சொல்லன்றி ஏதுமில்லாதவராக. போதம் அனைத்து சிந்தனைகளையும் இழந்து மடியில் தவழ்ந்த மகனாக மட்டும் அவனைப்பார்க்க ஆரம்பித்தது. “சுகதேவா, என் செல்லமே” என்று அழைத்தார். சுகன் திரும்பி அவரைப்பார்த்து புன்னகைசெய்தான்.
அவன் தன்னை அடையாளம் காணவில்லை என்று உணர்ந்து “சுகதேவா, நான் உன் தந்தை கிருஷ்ண துவைபாயனன்” என்றார். நீரில் பரவும் காலையொளி போல பரவசம் நிறைந்த கண்களுடன் “நானா?” என தன் மார்பில் கைவைத்து கேட்டான். “நீ சுகன்…என் மகன்” என்றார் வியாசர். நெடுநாட்களுக்குப்பின் தன்னை உணர்ந்த சுகன் எக்களிப்புடன் இரு கைகளையும் விரித்து “தந்தையே!” என்றான்.
முதன்முதலில் அவன் அச்சொல்லை சொல்லக்கேட்ட அந்நாள் என மெய் சிலிர்த்து துடித்தோடிச்சென்று அவனை அள்ளி மார்போடணைத்துக்கொண்டு மூச்சுமுட்டும்படி இறுக்கிக்கொண்டார் வியாசர். பின்பு விலக்கி அவனது மெல்லிய தோள்களை, இளம் முகத்தில் புகைபோல படர்ந்திருந்த தாடியை, மலரிதழ்போன்ற சிறு உதடுகளை, கைக்குழந்தையின் கண்களை கண்ணீர் மறைத்த தன் கண்களால் பார்த்தார். ‘என் மகன்! என் மகன்! என் மகன்!’ என்னும் இனிய மந்திரமாக அவரது அகம் இருந்தது அப்போது.
பின்பு தன்னுணர்வு கொண்டு அவனை விட்டு விலகி இரு கைகளையும் கூப்பிக்கொண்டு “சுகதேவா, நீயே என் ஞானாசிரியன். சாவை அஞ்சி மருத்துவனை நாடி வருவதுபோல உன்னைத்தேடி வந்தேன்… என்னை காத்தருள்க” என்று சொல்லி முழந்தாளிட்டு வேண்டினார்.
சுகசாரி குகைக்குள் அவன் இருக்க அவன் காலடியில் அமர்ந்து விம்மியும் கண்ணீர்விட்டும் வியாசர் அனைத்தையும் சொன்னார். “சுகதேவா, நீ நீதி சொன்ன அந்தக்கதையை இன்று தற்செயலாக நினைவுகூர்ந்தேன். நானறியவேண்டியதும் அதைப்போன்ற ஒரு முடிவே. குலநீதி சொல்லும் நியோகமுறைப்படியே நான் செய்தவை அமைந்தன. ஆனால் என் நெஞ்சு காலத்துக்கு அப்பால் நோக்கித் திகைக்கிறது…” என்றார்.
“தந்தையே, மண்ணில் ஒழுக்கமென ஏதுள்ளது? அன்றிலின் ஒழுக்கம் காக்கைக்கு இல்லை. தட்சிணத்தின் ஒழுக்கம் அஸ்தினபுரியிலும் இல்லை. கருணைகொண்ட செயல்கள் அனைத்தும் ஒழுக்கமே” என்றான் சுகன்.
“நான் கருணையோடிருந்தேன் என்றால் ஏன் என் மனம் தவிக்கிறது? தவறு செய்துவிட்டேனா என்று ஒவ்வொரு புல்புழுவிடமும் ஏன் கேட்கிறேன். தீர்ப்பு சொல்லவேண்டியவர்கள் என்னில் தொடங்கிய தலைமுறையினர்… அவர்கள் சொல்லப்போவதென்ன என்று நான் எப்படி அறிவேன்?” என்றார். “…உன் மனம் ஒரு படிகவெளி…காலங்களை எல்லாம் உன்னால் காணமுடியும்…நீ சொல்!”
“தந்தையே, அவற்றை நான் ஒரு சொல்லில் சொல்லமுடியாது. கோடி சொற்களால் சொல்லவேண்டியவர் நீங்கள்” என்றான் சுகன். “நீங்கள் சிரஞ்சீவியாக இருந்து உங்கள் உயிர்முளைத்த வனத்தின் வாழ்வனைத்தையும் காணுங்கள்!”
வியாசர் திடுக்கிட்டு “நானா?” என்றார். “என்ன சொல்கிறாய்?” சுகன் சிரித்தான். “ஆம், உன் சொல் காலத்தின் சொல்…அது நிகழும்” என்றார் வியாசர். பின் நடுங்கும் கைகளைக் கூப்பியபடி “ஆனால் சுகதேவா, இது வரமா சாபமா?” என்றார்.
சுகன் அதைக் கேட்கவில்லை. கிளிகள் வேதமந்திரங்களுடன் குகைக்குத்திரும்ப ஆரம்பித்தன. அவற்றின் கால்களில் இருந்து தானியமணிகள் அவன் மேல் பொழிந்தன. அவன் இன்னொரு கிளிபோல அவற்றைப் பொறுக்கி உண்ணத் தொடங்கியிருந்தான்.