அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

12/20/13

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய) பொதுப்பலன்கள்

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

பொதுப்பலன்2014-ஆம் ஆண்டு தனுசு ராசியிலும், மூல நட்சத்திரத்திலும் பிறக்கிறது. தனுசுவுக்கு 10-ஆம் இடமான கன்னி லக்னத்தில் வருடம் பிறப்பதால் இவ்வருடம் எல்லா வகையிலும் ஏற்றமும் யோகமும் உள்ளதாக விளங்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உருவாகும். எதையும் திறம்பட நிறைவேற்றி சாதித்து பேரும் புகழும் பெருமையும் அடையலாம். செய்யும் தொழிலாகட்டும்- வியாபாரமாகட்டும்- பணியாகட்டும் எல்லாவற்றிலும் முத்திரை பதிக்குமளவு முன்னேற்றமும் வெற்றியும் எதிர்பார்க்கலாம். தேக ஆரோக்கியத்திலும் தெளிவும் பூரணசுகமும் உண்டாகும். பொருளாதாரத்தி லும் குறைவில்லாமல் சரளமான நிலையும் திருப்தியும் உண்டாகும். சிலர் சேமிப்புத் திட்டங்களில்- வைப்புநிதியில் முதலீடு செய்யலாம்.

7-ல் குரு. 11-ல் சனி, ராகு நிற்க, அவர்களை ராசிநாதன் குரு பார்ப்பதால் திருமணத் தடை விலகும். குருபார்வை (ராசிநாதன்) 11-ஆம் இடம், ஜென்ம ராசி, 3-ஆம் இடங்களுக்குக் கிடைக்கிறது. "ஒரு கல்லில் இரு மாங்காய்' என்பது போல- குரு ராசிநாதன் என்பதோடு 2014-ஆம் வருட  ராசிநாதனும் என்பதால் அரசில் வரிக்குவரி சர்சார்ஜ் (வாட்வரி) போட்டு வசூலிப்பது போலவும்- சம்பளத்துக்குமேல் ஊக்கத்தொகை (இன்சென்டிவ்) வழங்குவது போலவும் (இது தவிர போனஸும் உண்டு) உங்களுக்கு இரட்டிப்பு யோகம் உண்டாகும்; லாபம் உண்டாகும். 

வேலை பார்க்கும் இடத்திலும் உங்களுடைய உண்மையான உழைப்புக்கும் விசுவாசத்துக்கும் நேர்மைக்கும், நியாயமான பலனும் பயனும் உயர்வும் உண்டாகும். இதுவரை முதலாளிகளைக் காக்கா பிடித்து, கோள் சொல்லி தங்கள் காரியங்களை சாதித்துக் கொண்டவர்களின் சாயம் வெளுத்துப்போகும். நிர்வாகத்தினருக்கு அசல் எது, போலி எது- நல்லவர் யார், கெட்டவர் யார் என்ற உண்மை புலப்பட்டு, களையெடுப்பு செய்து உங்களைப் போன்ற உண்மையானவர்களுக்கு உயர்வு தருவார்கள். 

7-ல் உள்ள குரு திருமணத் தடைகளைப் போக்கி மனைவி யோகம்- கணவர் யோகத்தைத் தருவார். பரிகாரம் செய்து மாதக்கணக்கில் ஆகியும் பலன் கிடைக்கவில்லையே என்று கலங்கித் தவித்தவர்களுக்கும், வருடத் தொடக்கத்தில் தை முதல் சுபகாரிய பேச்சுவார்த்தை ஆரம்பமாகி, வைகாசிக்குள் திருமணம் கூடிவிடும்.

அடுத்து குரு ஜூன் மாதம் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு மாறி உச்ச பலம் பெற்று 2-ஆம் இடத்தை பார்க்கும்போது குடும்பத்தில் குழந்தை சத்தம் கேட்கும். புதிதாக திருமணமானவர்களுக்கும்- திருமணமாகி பல ஆண்டுகள் உருண்டோடியும் வாரிசு உருவாகவில்லையே என்று கவலைப்பட்டவர் களுக்கும் வாரிசு உதயமாகிவிடும்.

குருப்பெயர்ச்சி: இந்த வருடம் 13-6-2014-ல் குருப்பெயர்ச்சி. மிதுனத்தில் இருக்கும் குரு- தனுசு ராசிக்கு 8-ஆம் இடமான கடகத்துக்கு மாறுவார். "எட்டினில் குரு- வாலி பட்டமிழந்தது' என்பது பாடல். ஆனாலும் குரு கடகத்தில் உச்சம் என்பதும், குரு தனுசு ராசிக்கு மூலத் திரிகோண ராசிக்கு 8- ஆம் இடத்தில்தான் உச்சம் பெறுவார் என்பதும், 2014-  வருட ராசிநாதன் குரு என்பதும் வருட லக்னத்துக்கு கன்னிக்கு 11-ல் உச்சம்பெறுவது என்பதும் சிறப்பம்சங்கள். எனவே அட்டம குரு உங்களைப் பொறுத்த வரையில் கெட்டது செய்யமாட்டார் என்பது நிச்சயம்!

ஏற்கெனவே நான் அடிக்கடி எழுதுவதுபோல ராசிநாதன் அல்லது லக்னநாதனுக்கு தோஷமில்லை என்பதோடு, வருட ராசிநாதன் என்ற முறையிலும் 8-ல் குரு கெட்ட பலன் நடத்தாது. உச்சம் பெற்ற ராசிநாதன் 12-ஆம் இடம், 2-ஆம் இடம், 4-ஆம் இடங்களைப் பார்க்கக்கூடும். அதனால் சுபவிரயங்கள் நிறைய உண்டாகும். மங்கள விரயம்- ஆதாய விரயம் எனலாம். செலவுக்கேற்ற வகையில் தன வரவும் உண்டாகும். வரவு வந்துகொண்டே இருந்தால் செலவைப் பற்றி சிந்திக்க வேண்டாமே! 4-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் கல்வி, கேள்வி, பூமி, வீடு, வாகனம், சுகம், தாயன்பு போன்ற 4-ஆம் இடத்துப் பலன்களும் யோகபலன்களாகவே அமையும். மாணவர்களின் படிப்பு, லட்சியம் ஈடேறும். படித்து முடித்தவர்களுக்கு படிப்புக்கேற்ற வேலையும் சம்பாத்தியமும் உண்டாகும். 

குரு வக்ரம்: வருடம் ஆரம்பிக்கும்போதே குரு வக்ரமாகத்தான் இருக்கிறார். மார்ச் 12 வரை வக்ரம். குரு 7-ல் (மிதுனத்தில்) வக்ரம் என்பதால், அனுகூலமான பலன்தான். திருமணத் தடை விலகுவதோடு, திருமணமானவர்களுக்கு மன ஒற்றுமை மகிழ்ச்சியான உறவும் நட்பும் மலரும். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அன்பும் ஆதரவும் பெருகும். அன்யோன்யம் நெருக்கமாகும்.

அடுத்து 2014 நவம்பரில் மீண்டும் குரு வக்ரம் அடைந்து, 2015 மார்ச் வரை வக்ரகதியிலேயே இருப்பார். அக்காலம் குரு உச்சகதியாக விளங்குவதால் கெடுதலுக்கு இடமில்லை. 8-ஆம் இடம் அதிர்ஷ்ட ஸ்தானம் என்றும் சொல்லப்படும். எனவே குருவின் வக்ரத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டமும் யோகமும் உண்டாகும். திடீர் தனப்ராப்தியும் கிடைக்கும். தொழில், வேலை, உத்தியோகத்திலும் திருப்திகரமான திருப்பம் உண்டாகும். வக்ரத்தில் உக்ரபலன் நற்பலன் என்பது விதி.

குரு அஸ்தமனம்: 2014 ஜூலை முதல் ஒரு மாதம் (ஆகஸ்டு வரை) குரு அஸ்தமனமாக இருப்பார். இக்காலம். குரு நின்ற இடம் அல்லது பார்த்த இடங்களில் துர்ப்பலன் நடக்கும். அப்போது குரு கடகத்தில் (8-ல்) இருப்பதால் வீண்பயம், கவலை, சஞ்சலம், ஏமாற்றம், நல்லது செய்தாலும் பொல்லாப்பு போன்ற பலன்களைச் சந்திக்கக் கூடும். சில நல்லகாரியம் முடியப்போகும் தருணத்தில் எதிர்பாராத தடையாகிவிடும். மனம் தடுமாறும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் வீண் பழிச்சொல், அபகீர்த்தி, பீடை, சிறுவிபத்து, காயம்  போன்ற பலன்களும் நடக்கலாம். அம்மாதிரி சந்தர்ப்பத்தில் குருவின் அஸ்தமன தோஷம் பாதிக்காமல் இருக்க சென்னை, பாடியில் (திருவலிதாயம்) உள்ள சிவன்கோவிலில் தட்சிணாமூர்த்தியையும், மயிலாடுதுறை, வள்ளலார் கோவில் என்ற பகுதியில், சிவன்கோவில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தியையும், வியாழனன்று வழிபடவேண்டும். 

ராகு- கேது பெயர்ச்சி: 21-6-2014-ல் ராகு- கேது பெயர்ச்சி வருகிறது. தனுசு ராசிக்கு 11-ல் இருந்த ராகு 10-ஆம் இடம் கன்னிக்கு மாறுகிறார். 5-ல் இருந்த கேது 4-ஆம் இடம் மீனத்துக்கு மாறுகிறார். ஏற்கெனவே ராகு- கேது இருந்த இடங்கள் அற்புதமான இடங்கள்- யோகமான இடங்கள். ஜூன் மாதம் மாறப்போகும் இடங்கள் சுமாரான இடங்கள்தான். என்றாலும் ராகுவும் கேதுவும் அசுப கிரகங்கள். அவர்களுக்கு கேந்திரஸ்தானங்கள்தான் பலம். ஆகவே ராகு 10-லும் கேது 4-லும்  வருவதால் அவை கேந்திரஸ்தானங்கள் என்பதால் ராகு- கேது நற்பலன்களையே செய்வார்கள். ராகு 10-ல் இருப்பதால் தொழில் விருத்தி, புதிய தொழில் ஆரம்பம், புதிய வேலைவாய்ப்பு யோகங்களை எதிர்பார்க்கலாம்.

ராகு 4-ஆம் இடத்தையும், 12-ஆம் இடத்தையும், 8-ஆம் இடத்தையும் பார்க்கப்போவதால், வெளிநாட்டு வாசம், வெளிநாட்டு வேலை கிடைக்கலாம். சிலர் வேலை விஷயமாக வெளிநாடு போகலாம். மலைப்பிரதேசம் போய் வேலை பார்க்கலாம். 8-ஆம் இடத்தையும் 9, 12-ஆம் இடத்தையும் ராகு பார்ப்பதால், ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருப்பதால் வெளிநாடு போன சிலர் ஏதாவது பிரச்சினை காரணமாக உடனே திரும்ப நேரலாம். செலவழித்த தொகை நஷ்டமாகிவிடும். சிலர் கடன் வாங்கி வெளிநாடு போயிருந்தால் அந்தக் கடன் பெரும் சுமையாகிவிடும்.

மீன கேது 10-ஆம் இடத்தையும், தனுசு ராசிக்கு 2-ஆம் இடம், 6-ஆம் இடங்களையும் பார்க்கப் போவதால் கடன், வட்டி கையைப் பிடிக்கும். இருந்தாலும் தொழில் தொடரும்; பாதிக்காது. மேலும் மீன கேதுவை உச்ச குரு பார்ப்பதாலும், கன்னி ராகு கடக குருவைப் பார்ப்பதாலும், இருவருக்கும் குரு சம்பந்தம் கிடைப்பதால்- நல்லாரோடு இணைந்திருப்பது நன்று என்ற அடிப்படையில் ராகு- கேது பெயர்ச்சி உங்கள் கௌரவம், மதிப்பு, மரியாதைக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. கடமை காரியங்களையும் தடுக்காது.

ராகு- கேது பெயர்ச்சிக்கு உங்களுக்குச் சாதகமாக பலன்தர- விழுப்புரம் மாவட்டம், தும்பூர் நாக கன்னியம்மன் கோவில் சென்று வழிபடவும். (ஆமத்தூர்-திருவட்டப்பாறை) முக்தாம்பிகையம்மன் உடனுறை   அபிராமேஸ்வரர் கோவில் சென்று வழிபடலாம். 

சனிப்பெயர்ச்சி: 16-12-2014-ல் சனிப்பெயர்ச்சி. துலா ராசியில் இருக்கும் சனி விருச்சிக ராசிக்கு மாறுவதால், தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பம். முதல் சுற்று நடப்பவர்களுக்கு மங்கு சனி; இரண்டாம் சுற்று நடப்பவர்களுக்கு பொங்கு சனி; மூன்றாம் சுற்று நடப்பவர்களுக்கு மரணச்  சனி என்று சொன்னாலும், ஆயுள் குற்றம் பண்ணாது.  பயப்படவேண்டாம்  90 வயதுக்குமேல் வாழ்கிறவர்கள் மூன்று சனிகளையும் சந்தித்திருப்பார்கள். மரணத்துக்குச் சமமான வேதனை என்று எடுத்துக்கொள்ளலாம். 

மாதவாரிப் பலன்கள்

ஜனவரி 


இம்மாதம் இலக்கியம், கலை போன்ற துறைகளிலும் ஆன்மிகத்திலும் ஈடுபாடு அதிகம் ஏற்படும். வியாபாரம், தொழில் துறையிலும் ஆர்வம் காட்டி லாபம் பார்க்கலாம். பொருளாதாரம் திருப்தியாக அமைந்தாலும் அதற்கென்று ஏதாவது ஒரு செலவு வந்து சேமிக்கமுடியாதபடி ஆகும். இருந்தாலும் மனதில் வருத்தமோ சலிப்போ குறையோ தென்படாது. இறைக்கிற கிணறுதான் ஊறும் என்று சமாதானம் அடையலாம்.

பிப்ரவரி


உங்கள் தகுதி, திறமை, ஆற்றலுக்கேற்ற அளவு பலனும் பயனும் உண்டாகும். உங்கள் கௌரவமும் பாதுகாக்கப்படும். தொழில், உத்தியோகம், வேலையில் ஆர்வம், அக்கறையோடு செயல்பட்டு மேலிடத்தாரின் பாராட்டைப் பெறலாம். சிலர் வேறு வேலை அல்லது வெளிநாட்டு வேலைக்கு முயற்சிக்கலாம். காலதாமதமாகப் பலன்தரும். முயற்சியைக் கைவிடவேண்டாம்.

மார்ச்


5, 12-க்குடைய செவ்வாய் 1-ஆம் தேதி முதல் வக்ரம் அடைவார். 11-5-2014 வரை வக்ரம். 10-ல் உள்ள செவ்வாய் வக்ரம் அடைவது நற்பலன்தான். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும். புதிய முயற்சிகளும் கைகொடுக்கும். 5-க்குடையவர் 10-ல் இருந்து 5-ஆம் இடத்தைப் பார்ப்பதால், பிள்ளை வகையில் நல்லவை நடக்கும். வாரிசுயோகம் உண்டாகும். பிள்ளைகள் சம்பாத்தியம் சமய சஞ்சீவியாக உதவும். சனியின் வக்ரமும் உங்களுக்கு சாதகமாகவே அமையும்.  லாபம்தான்! 

ஏப்ரல்


தமிழ்ப் புத்தாண்டு ஜய வருடப்பிறப்பு அதுவும் அஸ்த நட்சத்திரம், கன்னி ராசியில் பிறக்கிறது. தனுசுவுக்கு 10-ஆம் இடம். எனவே தமிழ்ப் புத்தாண்டும் உங்களுக்கு தொழில், வாழ்க்கையில் நல்ல திருப்பத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். புதுவருடம் உங்கள் கனவுத் திட்டங்களையெல்லாம் நிறைவேற்றும். முக்கியமாக இனி நோயில்லை- வைத்தியச் செலவுமில்லை.

மே


கோட்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் ஆசைகளும் விருப்பங்களும் லட்சியங்களும் நிறைவேறும். பெற்றோர் அல்லது குடும்பத்தார் நேர்ந்துகொண்ட தெய்வப் பிரார்த்தனைகளை எல்லாம் நிறைவேற்றிவிடலாம். சமுத்திரஸ்நானம்- தங்கத்தேர் பிரார்த்தனையெல்லாம் நிறைவேறும். சிலர் திருப்பதி சென்று முடிகாணிக்கையைச் செலுத்தலாம். காசி, ராமேஸ்வரம், ஷீர்டி ஸ்தல யாத்திரையும் போகலாம். 

ஜூன்


இம்மாதம் குருப்பெயர்ச்சி ஜூன் 13-ல். ராகு- கேது பெயர்ச்சி ஜூன் 21-ஆம் தேதி. இருபெயர்ச்சிகளும் அற்புதப் பெயர்ச்சிகளாக அமைகிறது. குருப்பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சி பலன் தனிப் புத்தகமாக வெளிவருகிறது. முழுமையான பலனை அப்போது தெரிந்து கொள்ளவும். குரு உச்சம். ராகு- கேது கேந்திரம். உங்கள் வெற்றிக்கு அவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஆரோக்கியம், பொருளாதாரம், கல்வி, எல்லாவற்றிலும் பிளஸ் பாயிண்டு- பாஸ்மார்க்தான்.

ஜூலை


இம்மாதம் சில காரியங்களில் அசுரவேகமும், சில காரியங்களில் ஆமைவேகமுமாக பலன் நடக்கும். எதுவானாலும் இறைவனை நம்பி- தன்னம்பிக்கையோடும் தன்னார்வத்தோடும் செயல்படுங்கள். "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும்' என்ற குறளின் நெறிப்படி உங்களுக்குப் பலன் உண்டாகும். கூடியவரை வெளியில் யாரிடமும் உங்கள் நடவடிக்கைகளை மனம் திறந்து வெளியிடவேண்டாம். திருஷ்டியாகிவிடும்.

ஆகஸ்டு 


இந்த மாதமும் உங்களுக்கு அவ்வப்போது நல்லது நடக்கும். சிலசமயம் வரவுக்குமேல் செலவும், பணியில் ஓய்வு ஒழிச்சல் இல்லாத கடும் உழைப்பும் காணப்படலாம். தேவையற்ற இடம் மாறுதலும் டென்ஷனும் ஏற்படலாம். அரசியலில் இருப்போருக்கு கடுமையான மறைமுக எதிர்ப்பும் இடையூறுகளும் ஏற்படலாம். எதையும் தாங்கும் இதயத்தோடு செயல்படவும். 

செப்டம்பர்


இந்த மாதம் வருமானப் பெருக்கம் ஏற்படும். கடன் உபாதைகள் விலகும். போட்டி, பொறாமைகள் அகலும். பணப்புழக்கம் தாராளமாகும். குடும்பத்தினரை சந்தோஷப்படுத்துவீர்கள். அவர்கள் விரும்பியதை வாங்கிக் கொடுப்பீர்கள். வேலையில் திருப்தியும் முன்னேற்றமும் உண்டாகும். குலதெய்வம், இஷ்ட தெய்வத்தின் அருள் கிட்டும்.

அக்டோபர்


எதைத் தொட்டாலும் அதில் தேக்கத்தையும் தடை, தாமதங்களையும் சந்தித்து வந்த உங்களுக்கு, இந்த மாதம் "நினைத்தோம்- முடித்தோம்' என்ற திருப்திநிலை உண்டாகும். உடல்நலத்திலும் சுகமும் ஆரோக்கியமும் உண்டாகும். சில நேரம் எதிர்ப்புகளையும் சமாளிக்கவேண்டியிருக்கும். உங்கள் வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்கள்தான் மறைமுக எதிர்ப்பு வேலையில் இறங்குவார்கள்.

நவம்பர்


வேலை அல்லது உத்தியோகத்தில் ஏதாவது ஒரு சலனம் ஏற்பட்டு மனதில் சஞ்சலம் உண்டாகும். ஆனாலும் அது நிரந்தரமல்ல; நிலையானதுமல்ல. சிறிது நாளில் அது மாறிவிடும், மறைந்துவிடும். வியாபாரிகள் முதலீடு செய்யும்போது மிகவும் யோசித்து- ஆராய்ந்து செயல்படவேண்டும். கூட இருப்பவர்களின் ஆலோசனை சிலசமயம் சரியானதாகவும் இருக்கலாம்; சில சமயம் தவறானதாகவும் இருக்கலாம். யார் யோசனையையும் கேளாமல், உங்கள் மனம் என்ன சொல்லுகிறதோ- எது உங்களுக்கு சரியாகப்படுகிறதோ அதைத் துணிவோடு செய்யவும்.

டிசம்பர்


டிசம்பர் 16-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி. 11-ஆம் இடத்திலிருக்கும் சனி பகவான் 12-ஆம் இடம் விருச்சிகத்துக்கு மாறுவார். அப்போது விருச்சிக ராசிக்கு ஏழரைச் சனி ஆரம்பிக்கும். இக்காலம் முதல் சுற்றாக இருந்தால் மங்கு சனி- கெடுதலாக நடக்கும். இரண்டாம் சுற்றாக இருந்தால்- பொங்கு சனி யோகமாக இருக்கும். மூன்றாம் சுற்றாக இருந்தால் (65 வயதுக்குமேல் இருந்தால்) மரண வேதனையான பலன்களை அனுபவிக்கவேண்டும். அதில் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால்தான் பாதிக்கும். மற்றவர்களுக்கு பிரச்சினை இல்லை.

மூல நட்சத்திரக்காரர்களுக்கு:


2014-ஆம் ஆண்டு உங்கள் நட்சத்திரத்திலும், உங்கள் ராசியிலும் உதயமா   வதால் உங்களுக்கு யோகமான பலன்தான். ராசிநாதன் குரு சஞ்சாரமும் நட்சத்திரநாதன் கேது சஞ்சாரமும் வருடம் முழுவதும் அற்புதமாக இருப்பதால், உங்களுக்கு குருவருளும் திருவருளும் பரிபூரணமாகத் திகழும். முயற்சிகளில் வெற்றியும் திருப்தியும் நிலைக்கும். குடும்பத்தில் வாழ்க்கையில் நட்பும் ஒற்றுமையும் பிரியமும் இணக்கமும் இனிக்கும். உங்கள்மேல் நல்ல  அபிப்பிராயமும் நல்லெண்ணமும் கொண்டோரின் உதவியும் ஆதரவும் உங்களுடைய முன்னேற்றத்துக்கு உதவும்.

பரிகாரம்: திண்டுக்கல் அருகில் கசவனம்பட்டி சென்று, ஜோதி நிர்வாண மௌன சுவாமி ஜீவசமாதியை வழிபடவும். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரையும் வழிபடவும்.

பூராட நட்சத்திரக்காரர்களுக்கு:


உங்கள் நட்சத்திரத்துக்கு 9-ஆவது நட்சத்திரத்தில் (மூலம்) 2014-ஆம் ஆண்டு பிறப்பதால்- பரம மைத்ர தாரையாகும். மிகுந்த நட்பு எனப்படும். சுக்கிரன் தனுசு ராசிக்கு 6, 11-க்குடையவர். எதிர்பாராத சுபச்செலவுகள் ஏற்படும். சிலருக்கு குடும்ப நன்மைக்காக சுபக்கடன் வாங்கும் யோகமும் உண்டாகும். சொந்தம், சுற்றத்தார், உறவினர்களுடன் விருந்து, விழா, பூஜை, வழிபாடு, கோவில் தரிசனம் போகலாம். சிலர் சீரடி பாபா கோவில் போய்வரலாம்.

பரிகாரம்:  கும்பகோணம் அருகில் கஞ்சனூர் சென்று வழிபடலாம். சேங்கனூர் என்ற இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டரில் திருவெள்ளியங் குடி எனும் தலம். சுக்கிரன் குருடான தன் கண் நலம்பெற வணங்கிய தலம். அத்துடன் சென்னை திருவள்ளூர்- திருத்தணி பாதையில் நான்கு வழிச்சாலையில், ஆற்காடு குப்பம் சித்தர் அனுமந்த சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும். தொடர்புக்கு: தனபால் சுவாமி அலைபேசி: 96266 48022.

உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு:


2014-ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் நட்சத்திரம் உத்திராடத்திலிருந்து மூலம் 8-ஆவது தாரை (26 -ஆவது நட்சத்திரம்) மைத்ர தாரை- நட்பு தாரை. எனவே இந்த ஆண்டு உங்களுக்கு அனுகூலமான ஆண்டாகவே அமையும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். அரசு வேலையில் இருப்போர் சக பணியாளர்களின் ஆதரவோடு செயல்படலாம். தடைப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்திராடம் சூரியன் நட்சத்திரம்- சூரியன் உங்களுக்கு பாக்கியாதிபதி. எனவே பொன்னும் பொருளும் சேரும். பாக்கியம் பால்போல் பொங்கும்.

பரிகாரம்:  கும்பகோணம் அருகில் சூரியனார் கோவில் சென்று நவகிரக மூர்த்திகளை வழிபடவேண்டும். சூரிய பகவான் உஷா- பிரத்யுஷா தேவியா ரோடு மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கிறார். அத்துடன் திருவண்ணா மலையில் யோகி ராம்சுரத்குமார் அதிஷ்டானம் சென்று வழிபடவேண்டும். மணக்குள விநாயகர் தெரு வழியாகச் செல்லவும். 20-2-2001-ல் மாசிமாதம் உத்திராட நட்சத்திரத்தில் பரிபூரணம் அடைந்தவர்.கள்

No comments:

Post a Comment