அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/3/14

பகுதி பதினொன்று : முதற்களம்[ 1 ]

பகுதி பதினொன்று : முதற்களம்[ 1 ]
அனகை மெல்ல வாயிலில் வந்து நின்றபோது குந்தி ஆடியிலேயே அதைக்கண்டு திரும்பி நோக்கி தலையசைத்தாள். காதிலணிந்திருந்த குழையின் ஆணியைப் பொருத்தியபடி அவள் ஆடியிலேயே அனகையின் விழிகளை சந்தித்தாள். “முடிசூட்டுவிழாவுக்கான அனைத்தும் முடிவடைந்துவிட்டன அரசி” என்றாள் அனகை. “ஷத்ரியர் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஷத்ரிய மன்னர்கள் ஐம்பத்தைந்துபேருக்கும் அமைச்சரோ தளபதியோ நேரில் சென்று அழைப்புவிடுத்திருக்கிறார்கள். பிறமன்னர்களில் வேசரத்துக்கும் உத்கலத்துக்கும் கூர்ஜரத்துக்கும் காமரூபத்துக்கும் ஷத்ரியர்கள் சென்றிருக்கிறார்கள். மற்றவர்களுக்கு மங்கலதாசியரும் சேடியரும் சென்று அழைப்புவிடுத்திருக்கிறார்கள்.”
குந்தி தலையசைத்தாள். “மதுவனத்துக்கும் மார்த்திகாவதிக்கும் அரசகுலத்தைச் சேர்ந்தவர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்” என்று அனகை சொன்னாள். குந்தி எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டவில்லை. “அதை பேரரசியே ஆணையிட்டார்கள் என்று அறிந்தேன். இரு இடங்களுக்கும் அரசகுலப்பெண் ஒருத்தியும் பேரரசியின் பரிசுடன் செல்லவேண்டுமென்று பேரரசியே சொல்லியிருக்கிறார்கள். அதைப்பற்றித்தான் அமைச்சர்கள் பேசிக்கொண்டனர். அது மார்த்திகாவதிக்கும் மதுவனத்துக்கும் பெரிய சிறப்பு என்று சொல்லிக்கொண்டார்கள். பேரரசியின் மச்சநாட்டுக்கும் பிதாமகரின் கங்கநாட்டுக்கும் மட்டுமே குருதியுறவை காட்டும்படியாக அரசகுலப்பெண்டிர் செல்வது வழக்கமாம்.”
“என் தந்தை வரமாட்டார் என்றே நினைக்கிறேன்” என்றாள் குந்தி. “மதுராபுரிக்கு அழைப்புடன் சென்றது யார்?” அனகை தயங்கி “சூதர்குழுதான் சென்றிருக்கிறது.” குந்தி புன்னகைசெய்து “கம்சரும் வரப்போவதில்லை. தன் அமைச்சர்களில் ஒருவரை அனுப்பிவைப்பார். அவருக்கு வேறுவழியில்லை, இப்போதே மகதத்தின் பாதங்களை பணிந்திருப்பார்” என்றாள். “ஆம் அரசி. அதையும் பேசிக்கொண்டார்கள் என்று நம் சேடிப்பெண் சொன்னாள். கம்சர் நேரில் கிளம்பிச்சென்று மகதமன்னர் பிருஹத்ரதனை சந்தித்திருக்கிறார்.” குந்தி அதற்கும் புன்னகை செய்தாள்.
தன் அணிகளைத் திருத்தி கூந்தலிழையை சரிசெய்து இறுதியாக ஒருமுறை ஆடியில் நோக்கியபின் அவள் திரும்பினாள். “இளவரசர் என்ன செய்கிறார்?” என்றாள். “அவர் சற்றுமுன்னர்தான் துயிலெழுந்திருக்கவேண்டும். ஆதுரசாலையில் இருந்து மருத்துவர் சற்றுமுன்னர்தான் நீராட்டறைக்குச் சென்றார்” என்று அனகை சொன்னாள். குந்தி மீண்டுமொருமுறை ஆடியில் நோக்கி ஆடையின் மடிப்புகளை சரிசெய்துகொண்டு “காந்தாரத்து அரசிகளின் செய்தி என்ன?” என்றாள். அனகை தயங்கினாள். குந்தி ஏறிட்டு நோக்க “அங்கே நான் நான்கு சூதப்பெண்களை கையூட்டு அளித்து வென்றெடுத்து தொடர்பிலிருந்தேன். காந்தார இளவரசர் வந்ததுமே அங்கிருந்த அனைத்து சூதப்பெண்களையும் விலக்கிவிட்டார். அங்கு உள்ளும் புறமும் இன்று காந்தாரத்து மகளிரே இருக்கிறார்கள்” என்றாள்.
“அங்கே நமது உளவுச்சேடிகள் இருந்தாகவேண்டும். காந்தாரத்து மகளிரில் எவரை வெல்லமுடியுமென்று பார்” என்றாள் குந்தி. “அவர்களின் மொழிதெரிந்தவர் என எவரும் நம்மிடமில்லை. பிழையாக எவரையேனும் அணுகிவிட்டால் இவ்வரண்மனையில் நமக்கிருக்கும் உளவுவலையை முழுக்க நாமே வெளிக்காட்டியதாகவும் ஆகும்” என்றாள் அனகை. “அந்த இளைய அரசி மிகவும் குழந்தை. அவளுடைய சேடிகளில் எவரையேனும் அணுகலாமா என எண்ணியிருக்கிறேன்” என்ற அனகையை கைகாட்டித் தடுத்து “அது கூடாது. அவள் இளையவளென்பதனாலேயே அவளுக்கு ஏதும் தெரியாமல் பார்த்துக்கொள்வார்கள். அவளுடைய சேடிகளும் வலுவானவர்களாக இருப்பார்கள். எங்கே அவர்கள் தங்களை மிக வலுவானவர்களாக உணர்கிறார்களோ அங்குதான் காட்சிப்பிழை இருக்கும். நாம் நுழைவதற்கான பழுதும் இருக்கும்” என்றாள் குந்தி.
சிலகணங்கள் சிந்தனைசெய்துவிட்டு “நாம் காந்தார இளவரசியரின் அந்தப்புரத்துக்குள் நுழைவது எளிதல்ல. காந்தார இளவரசர் கூரியவர். ஆனால் அவரால் ஏதும் செய்யமுடியாத பெரும்விரிசலொன்று அவர்களிடம் உள்ளது” என்றாள். அனகையின் விழிகளை நோக்கி “அந்த வைசியப்பெண் பிரகதி. இங்கு காந்தாரிக்குப்பின் அரசரிடம் ஆதிக்கமுள்ள பெண்ணாக இருக்கப்போவது அவள்தான். அவள் வயிற்றில் பிறக்கப்போகும் குழந்தைகளும் இவ்வரசில் வல்லமையுடன் இருக்கும். அவளை வென்றெடுப்பது எளிது. ஏனென்றால் அவள் காந்தார அரசியரால் வெறுக்கப்படுகிறாள். அவளை அவர்கள் கொல்லவும்கூடும் என அவளிடம் ஐயத்தை உருவாக்கலாம். அவளை நாம் பாதுகாப்போமென வாக்களிக்கலாம். அவள் நம்மிடம் அணுக்கமாக இருப்பாள். அரசரிடமோ அவரது அந்தப்புரத்திலோ அவளறியாத எதுவும் எஞ்சுவதற்கு வாய்ப்பில்லை” என்றாள் குந்தி.
“அதை காந்தார இளவரசர் உய்த்துணர மாட்டாரா?” என்று அனகை கேட்டாள். “உய்த்துக்கொள்வார். ஆனால் அவரால் அவளை ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே அவளுக்கு ஏதும் தெரியாமலிருக்க முயல்வார். ஆனால் அவரால் ஒரு பெண் ஆணிடமிருந்து எந்த அளவுக்கு நுட்பமாக உளவறியமுடியுமென்று ஒருபோதும் கணித்துக்கொள்ள முடியாது” என்றாள் குந்தி. அனகையை நோக்கி மீண்டும் புன்னகைசெய்து விட்டு அறையைத் திறந்து வெளியே சென்றாள். வெளியே அவளுடைய அகம்படிச் சேடியர் காத்து நின்றனர். சாமரமும் தாலமும் தொடர அவள் இடைநாழியில் நடந்து பாண்டுவின் மாளிகைக்குச் சென்றாள்.
பாண்டுவின் மாளிகையின் சிறுகூடத்தில் அவன் ஒரு பீடத்தில் அமர்ந்திருக்க பீதர் இனத்து வைத்தியர் அவன் கால்களுக்கு அவர்களின் முறைப்படி சூசிமர்த்த மருத்துவம் செய்துகொண்டிருந்தார். முனைமழுங்கிய ஊசியால் அவன் உள்ளங்கால்களின் வெண்பரப்பில் பல இடங்களில் அழுத்தி அழுத்தி குத்தினார். நிமித்தச்சேடி அவள் வருகையை அறிவித்ததும் பாண்டு கையசைத்து வரும்படி சொல்லிவிட்டு புன்னகையுடன் அவளைப் பார்த்திருந்தான். அவள் உள்ளே நுழைந்ததும் மேலும் மலர்ந்த புன்னகையுடன் “அஸ்தினபுரியின் இளையஅரசிக்கு நல்வரவு” என்றான். அவள் “இளையமன்னரை வாழ்த்துகிறேன்’”என்று சொல்லி தலைவணங்க அவள் கண்களில் ஊசியின் கூர் எனத் தெரிந்த நகைப்பை உணர்ந்து பாண்டு உரக்கச் சிரித்தான்.
குந்தி அமர்ந்துகொண்டாள். தொங்கிய நீள்மீசையும் காக்கைச்சிறகுபோன்ற கருங்குழலும் பழுத்தஆலிலைநிற முகமும் கொண்ட பீதர்இனத்து வைத்தியரை நோக்கிவிட்டு “இதனால் ஏதேனும் பயன் உள்ளதா?” என்றாள். பாண்டு “இதனால்தான் நான் இதுவரை உயிர்வாழ்கிறேன் என்கிறார்கள். ஆகவே எதையும் நிறுத்துவதற்கு எனக்கோ அன்னைக்கோ துணிவில்லை” என்றான். குந்தி “இத்தனை சிக்கலானதாகவா நரம்புகள் இருக்கும்?” என்றாள். “பிருதை, எதையும் அறிவதற்கு இருவழிமுறைகள் உள்ளன. சிக்கலாக்கி அறிவது ஒன்று. எளியதாக்கி அறிவது பிறிதொன்று. சிக்கலாக்கி அறிபவர்கள் தங்களை அறிஞர்கள் என்றும் மதிசூழ்பவர் என்றும் எண்ணிக்கொள்கிறார்கள். எளிமையாக்கி அணுகக்கூடியவர்களை ஞானி என்கிறார்கள். அல்லது போகி என்கிறார்கள்.”
“நீங்கள் போகியா என்ன?” என்றாள் குந்தி. “என்ன ஐயம்? எனக்குள் இருந்து இவ்வுலகையே துய்த்துக்கொண்டிருக்கும் போகி ஒருகணம் கூட ஓய்வதில்லை” என்றான் பாண்டு. பீதமருத்துவர் அவன் கால்களை மெத்தைமேல் வைத்து மேல்பாதங்களை விரலால் அழுத்தினார். “உன்னை இங்குவந்த நாள்முதல் முழுதணிக்கோலத்தில் மட்டுமே பார்க்கிறேன்.காலைமுதல் இரவில் துயிலறைக்கு வருவது வரை. ஒவ்வொரு கணமும் அரசியாகவே இருந்தாகவேண்டுமா என்ன?” குந்தி “ஆம், நான் அரசியாகத் தெரிந்தால் மட்டுமே இங்கு அரசியாக இருக்கமுடியும்” என்றாள். பாண்டு உரக்க நகைத்து “ஆகா என்ன ஒரு அழகிய வியூகம்…வாழ்க!” என்றான்.
பீதமருத்துவர் எழுந்து தலைவணங்கினார். பாண்டு அவரை சைகையால் அனுப்பிவிட்டு “மருத்துவம் எனக்குப்பிடித்திருக்கிறது. இன்னொரு மனிதனின் கரம் என்மீது படும்போது என்னை மானுடகுலமே அன்புடன் தீண்டுவதாக உணர்கிறேன். நான் வாழவேண்டுமென அது விழைவதை அந்தத் தொடுகை வழியாக உணர்கிறேன்” என்றவன் சட்டென்று சிரித்து “நீ என்ன எண்ணுகிறாய் என்று தெரிகிறது. எத்தனை பாவனைகள் வழியாக வாழவேண்டியிருக்கிறது என்றுதானே? ஆம், பாவனைகள்தான்” என்றான். மீண்டும் சிரித்து “என் பேச்சும் இயல்பும் என் தந்தை விசித்திரவீரியரைப்போலவே இருக்கின்றன என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். தேவாபியைப்போல இருக்கிறார் என்று அவரிடம் சொல்லியிருப்பார்கள். மருத்துவர்களை குருவின் குலம் ஏமாற்றுவதேயில்லை.”
“முடிசூட்டுவிழாவுக்கு இன்னும் எட்டு நாட்களே உள்ளன” என்றாள் குந்தி. “என் தந்தைக்கு சமந்தநாட்டுக்கான அழைப்பை பேரரசி அனுப்பியிருக்கிறார். அதற்காக நான் பேரரசிக்கு நன்றி சொல்லவேண்டும்.” பாண்டு “மார்த்திகாவதி அஸ்தினபுரியின் சமந்தநாடுதானே? ஏன்?” என்றான். குந்தி புன்னகையுடன் “ஷத்ரியர்களுக்கு இன்னொரு ஷத்ரியகுலம் ஆளும் நாடு மட்டுமே சமந்தநாடாக இருக்கமுடியும். பிற பெண்களை அவர்கள் மணக்கலாம். அதை அவ்வாறு சொல்வதில்லை. சமந்தநாடு அஸ்தினபுரிக்கு கப்பம் கட்டவேண்டியதில்லை. அனைத்து அரசச் சடங்குகளிலும் அஸ்தினபுரியின் மன்னருக்கு நிகரான பீடத்திலமர்ந்து கலந்துகொள்ளலாம். மன்னரின் உடைவாளை ஏந்தவும் செங்கோலை வாங்கிக்கொள்ளவும் உரிமை உண்டு. முக்கியமாக சமந்தநாட்டை எவரேனும் தாக்குவதென்பது அஸ்தினபுரியைத் தாக்குவதற்கு நிகரேயாகும்.”
“ஆகவே நீ வந்த பணி முடிந்துவிட்டது” என்றான் பாண்டு. அவன் கண்களுக்குள் நிகழ்ந்ததை ஊசிமுனையால் தொட்டு எடுப்பதுபோல தன் விழிகளால் குந்தி அறிந்துகொண்டாள். “ஆம், நான் எண்ணிவந்த பணி ஏறத்தாழ முடிந்துவிட்டது” என்றாள். “மார்த்திகாவதி சமந்தநாடென்பதனால் காந்தாரத்து இளவரசரின் கரமும் அதைத் தீண்டமுடியாது. இருபதாண்டுகாலம் கப்பம் கட்டாமலிருந்தால் மார்த்திகாவதி வல்லமைபெறும். யாதவகுலங்களை ஒருங்கிணைக்கும். முடிந்தால் தனிக்கொடியைக்கூட பறக்கவிட்டுப்பார்க்கலாம், இல்லையா?” குந்தி “ஆம், அதுவும் அரசர்கள் கொண்டிருக்கவேண்டிய கனவுதானே?” என்றாள்.
அவளிடம் அவன் எதிர்பார்க்கும் பதிலை அவளறிந்திருந்தாள். எலியை தட்டித்தட்டி மகிழும் பூனைபோல தான் அவன் அகத்துடன் விளையாடுவதாக நினைத்துக்கொண்டதுமே அவள் கனிந்தாள். “ஆனால் நான் எண்ணிவந்த கடமைகளெல்லாம் நெடுந்தொலைவில் எங்கோ பொருளிழந்துகிடக்கின்றன. நான் இங்கு மட்டுமே வாழ்வதாக உணர்கிறேன்” என்றாள். அவள் சொல்லப்போவதை உணர்ந்தவனாக அவன் முகம் மலர்ந்தான். “நான் இங்கே உங்கள் துணைவி. உங்கள் நலனன்றி வேறேதும் என் நினைப்பில் இப்போது இல்லை” என்று அச்சொற்களை சரியாக அவள் சொன்னாள். அவன் அவள் கைகளைப்பற்றிக்கொண்டான். “நான் மனைவி,வேறொன்றும் அல்ல என ஒரு பெண் உணரும்போது வரும் ஆற்றலை உணர்கிறேன்” என்றாள்.
“பலமில்லாத கணவனின் மனைவி மேலும் ஆற்றல்கொண்டவளாகிறாள்” என்று பாண்டு அவள் விழிகளை நோக்கிச் சொன்னான். குந்தி “ஆம். மேலும் அன்புகொண்டவளாகிறாள். அன்பு அவளை ஆற்றல் மிக்கவளாக்குகிறது” என்றாள். அவன் உணர்ச்சிமிகுந்து நடுங்கும் கைகளால் அவள் கைகளைப் பிடித்து தன் முகத்துடன் சேர்த்துக்கொண்டான். குந்தி எழுந்து அவன் அருகே பீடத்தில் அமர்ந்து அவனை இழுத்து தன்னுடன் அணைத்துக்கொண்டாள். அவன் அவள் மார்பில் முகம்புதைத்துக்கொள்ள அவனை இறுக அணைத்து குனிந்து அவன் காதில் “என்ன எப்போதும் ஒரு அமைதியின்மை?” என்றாள். “தெரியவில்லை, ஆனால் அப்படித்தான் இருக்கிறேன்” என்றான் பாண்டு. “நான் இருக்கிறேன் அல்லவா?” என்றாள் குந்தி. “ஆம்…” என அவன் பெருமூச்சு விட்டான்.
அனைத்து நரம்புகளும் முடிச்சுகள் அவிழ்ந்து தளர அவன் உடல் தொய்ந்து அவள் மார்பில் படிந்தது. அவனுடைய வெம்மூச்சு அவள் முலைக்குவையில் பட்டது. அவள் அவன் குழல்களை கைகளால் வருடினாள். அவன் காதுமடல்களை வருடி குண்டலங்களைப் பற்றி மெல்லச்சுழற்றினாள். அவன் முகத்தைத் தூக்கி நெற்றியிலும் கன்னங்களிலும் தன் வெம்மையான உதடுகளால் முத்தமிட்டு “அஞ்சக்கூடாது, என்ன?” என்றாள். “ஆம்” என அவன் முனகிக்கொண்டான். “என்னையும் என் கணவனையும் என் சுற்றத்தையும் நாட்டையும் பேணிக்கொள்ள என்னால் முடியும். எனக்குத் துணையோ படைக்கலங்களோ தேவையில்லை” என்று குந்தி சொன்னாள். “ஆம் அதையும் அறிவேன். நீ கொற்றவை. எனக்காக அன்னபூரணியாக தோற்றமளிக்கிறாய்.”
அவன் முகம் சொல்லவரும் சொற்கள் முட்டிநிற்பது போல தவிக்கத்தொடங்கியது. அவள் அத்தனை நாட்களுக்குள் மீண்டும் மீண்டும் கண்ட மெய்ப்பாடு அது. அவன் தாழ்ந்தகுரலில் “பிருதை எனக்கென எவருமில்லை… எனக்கு நீ மட்டும்தான்” என்றான். அவன் இயல்புக்கு அந்த மழுங்கிய வெற்றுச்சொற்கள் பொருத்தமற்றவையாகத் தோன்றின. எனவே வேறுசொற்களுக்காக தேடி “நீ எனக்குரியவளாக மட்டும் இருக்கவேண்டும்… உன் நெஞ்சில் நானன்றி…” என்று மேலும் சொன்னபின் அச்சொற்கள் இன்னமும் எளியவையாக இருக்கக்கண்டு திகைத்து சொல்லிழந்து நின்றபின் உடைந்து விம்மியழுதபடி சரிந்து அவள் மடியில் முகம்புதைத்துக்கொண்டான்.
VENMURASU_EPI_104
ஓவியம்: ஷண்முகவேல் [பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
அவள் அவன் தலையை வருடிக்கொண்டு பேசாமலிருந்தாள். நரம்புகள் தளர்ந்த நிலையின் இயல்பான வெளிப்பாடு அவ்வழுகை என அறிந்திருந்தாள். அழுதுமுடித்தபின் அவன் மெல்ல தன்னிலை திரும்பி தனக்குரிய ஏளனப் புன்னகையை சூடிக்கொள்வான் என அவளுக்குத்தெரியும். அவன் உடல் விம்மல்களால் விதிர்ந்தது. சிறுவனுக்குரிய மெல்லிய தோள்களும் செம்மச்சங்கள் பரவிய சுண்ணநிறக் கழுத்தும் அதிர்ந்துகொண்டிருந்தன. நீலநரம்புகள் பின்கழுத்திலும் தோள்களிலும் புடைத்துத் தெரிந்தன. பின்பு அவன் சட்டென்று எழுந்து புன்னகை செய்து “இது ஆதுரசாலை என்பதையே மறந்துவிட்டேன்” என்றான்.
“என் சேடிகள் வெளியே நிற்கிறார்கள்… எவரும் இங்கு வரப்போவதில்லை” என்றாள் குந்தி. “தங்களுக்கு நேரமாகிறது. ஆடையணிகள் பூண அரைநாழிகையாவது ஆகும் அல்லவா?” பாண்டு “நான் உணவருந்திவிட்டேன்” என்றான். “ஆம். அறிவேன். இன்று முதல் அரசவிருந்தினர் வரப்போகிறார்கள். சிலரையாவது தாங்கள் அவைநின்று வரவேற்கவேண்டும். அது மரபு” என்றாள். “அதற்கொன்றும் இல்லை. ஆனால் அரச உடைகள் அணியவேண்டுமே. அதை எண்ணினால்தான் கசப்பாக உள்ளது” என்றான் பாண்டு.
“அவ்வுடைகளும் முடியும் அணியாமலும் நீங்கள் அரசர்தான்” என்றாள். “ஆனால் உடையும் தோற்றமும் ஒரு மொழியைப்பேசுகின்றன. நீங்கள் சொல்லவிழைவதை பிறபொருளின்றி மொழிமயக்கின்றி அவை தெரிவிக்கின்றன. அதன்பின் நீங்கள் குறைவாகவே பேசினால் போதும்.” பாண்டு “அரச உடை என இவற்றை முடிவுசெய்தவர் யார்? மனிதர்கள் எங்கும் எடையற்ற எளிய உடைகளைத்தான் அணிகிறார்கள். இவற்றை உலோகக்கம்பிகளைப்பின்னி எடையேற்றி வைத்திருக்கிறார்கள். அணிந்தால் ஆயிரம் இடங்களில் குத்துகிறது. முட்புதருக்குள் ஒளிந்திருப்பது போலிருக்கிறது. அத்துடன் அந்த மணிமுடி. அதன் எடை என் நெற்றியை அழுத்தி வெட்டுகிறது. அரைநாழிகை நேரத்திலேயே வலி தொடங்கிவிடும். மாலையில் கழற்றும்போது நெற்றியில் வாள்வெட்டு போல சிவந்து வளைந்த வடு. என்னை அது மண்ணைநோக்கி அழுத்திக்கொண்டிருப்பதுபோல. அதற்குப் பெயர் அணிகலன். ஆனால் மோர் விற்கும் இடைச்சியின் தலையிலுள்ள செம்புக்கலத்துக்கும் அதற்கும் என்ன வேறுபாடு?” என்றான்.
“மிகச்சரியாக அரசுப்பொறுப்பென்றால் என்ன என்று புரிந்துகொண்டிருக்கிறீர்கள்” என்றாள் குந்தி. “கிளம்புங்கள். நானே உதவுகிறேன். உடையணிந்து கிளம்புவதற்கு இன்னும் அதிகநேரமில்லை” என்று அவன் கையைப்பற்றித் தூக்கி எழுப்பி கூட்டிச்சென்றாள். அவன் விருப்பமில்லாத குழந்தைபோல “என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. எனக்கு சற்றும் பிடிக்கவில்லை… அசட்டுத்தனம்: என்றான். :அந்த உடைபோலத்தான் மொழியும். வெற்றுப்பளபளப்பு. கேட்பவனுக்கு ஒளி. சொல்பவனுக்கு முள்…:
குந்தி “சிலசமயம் நேரடியாகவே காவியத்தை பேசத்தொடங்கிவிடுகிறீர்கள்” என்று சிரித்தாள். “பேசவேண்டாமா என்ன? நான் யார்? சந்திரகுலத்து பாண்டு. குருவம்சத்தவன். ஹஸ்தியின் குருதி. நாங்களெல்லாம் மண்ணில் பிறந்து விழுவதில்லை. கருவறையிலிருந்து காவியங்களின் மீதுதான் பிறந்து விழுகிறோம். சாவதில்லை, காவியமொழிக்குள் புகுந்துவிடுகிறோம்.” உரக்கச்சிரித்து “அதன்பின் காவியகர்த்தனும் உரையாசிரியர்களும் எங்களை ஆதுரசாலையின் மருத்துவர்கள் போல மிதித்து அழுத்தி பிசைந்து பிழிந்து வளைத்து ஒடித்து வதைக்கிறார்கள்” என்றான்.
அவன் சிரித்துநகையாடியபடியே உடைகளை அணிந்துகொண்டான். “யாதவகுலத்தில் இருந்து காவியத்தை நோக்கி வந்திருக்கிறாய். காவியம் எத்தனை இரக்கமற்றது என்று இனிமேல்தான் அறியப்போகிறாய்” என்றான். குந்தி சிரித்தபடி “நேற்று முன்தினம் சூதர்கள் வந்து திருதராஷ்டிரமன்னரின் முடிசூட்டுவிழாவைப்பற்றி பாடினார்கள். அஸ்தினபுரியின் கோட்டைமுகப்பில் இருக்கும் கைவிடுபடைகளைப்போல ஒரு காவியம் நெடுங்காலமாகவே நாணேற்றப்பட்டு அம்புதொடுக்கப்பட்டு காத்திருக்கிறது என நினைத்துக்கொண்டேன்” என்றாள். தன் கலிங்கப்பட்டு மேலாடையை சுற்றிக்கொண்டே “ஆடை என்பது மறைப்பதற்காக என்று அறிவேன். அதில் இந்த பொற்கம்பி வேலைப்பாடுகள் எதை மறைப்பதற்காக?” என்றான். குந்தி “சற்றுநேரம் காவியத்தை விட்டு இறங்கி இளைப்பாறலாமே” என்றாள்.
அவர்கள் வெளியே வந்து சபைமண்டபத்தை அடைந்தபோது அம்பாலிகை எவ்வித அறிவிப்புமில்லாமல் உள்ளே வந்தாள். “எங்கே செல்கிறாய்? கழற்று அதை… அனைத்து அணிகளையும் கழற்று… நீ எங்கும் செல்லக்கூடாது. இது என் ஆணை” என்றாள். அவளுக்கு மூச்சிரைத்தது. விரைந்து வந்தமையால் உடைகள் கலைந்திருந்தன. “இளையஅரசர் இன்று முதல் விருந்தினர்களை எதிரேற்கவேண்டுமென்பது பேரரசியின் ஆணை அரசி” என்றாள் குந்தி. “அவன் எங்கும் செல்லப்போவதில்லை. இது என் ஆணை. பேரரசி வேண்டுமென்றால் எங்கள் இருவரையும் சிறையிடட்டும்” என்றாள் அம்பாலிகை. ஒரு பீடத்தில் விழுவதுபோல அமர்ந்தபடி “நீ செல்லக்கூடாதென்று சொன்னேன். அமர்ந்துகொள்” என்றாள்.
அமர்ந்தபடி பாண்டு “என்ன நிகழ்ந்தது? அதைச் சொல்லுங்கள்” என்றான். “நான் தொடக்கம் முதலே பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் கீழிறங்கும்தோறும் மேலும் கீழிறக்குகிறார்கள். சிறுமைசெய்ய ஒவ்வொரு வழியாக கண்டுபிடிக்கிறார்கள். அதற்கென்றே அந்த ஓநாய் பாலைவனத்திலிருந்து வந்து இங்கே தங்கியிருக்கிறது,” அம்பாலிகை கையை அசைத்து “நான் அவைமன்றில் எழுந்து நின்று கேட்கப்போகிறேன். குலமூத்தாரே இதுதான் நியதியா என. விழியிழந்தவன் அரசனாக அவனுக்கு கைக்கோலாக இந்நாடு இருக்கப்போகிறதா என…”
பதறிய குரலில் அம்பாலிகை கூவினாள் “முட்டாள்கள். அவர்களுக்கு இன்னுமா புரியவில்லை? இந்த நாட்டை அவர்கள் காந்தாரத்து ஓநாயின் பசிக்கு எறிந்துகொடுக்கிறார்கள். அனைத்தும் அவர்கள் போடும் நாடகம். அவளை இந்நாட்டு பேதைமக்கள் வழிபடவேண்டுமென்பதற்காகவே கண்களை நீலத்துணியால் கட்டிக்கொண்டு வேடம்போடுகிறாள். அவளுடைய பத்து தங்கைகளிடம் இரவுபகலாகப் பேசிக்கொண்டிருக்கிறாள். அவளுக்குத்தெரியாத எந்த வஞ்சமும் இல்லை. என்னையும் என் மைந்தனையும் சிறுமைசெய்து மக்கள் முன் நிறுத்தவிரும்புகிறாள். அதன்பின் எங்களை மக்கள் அரசகுலத்தவரென்றே எண்ணப்போவதில்லை என்று திட்டமிடுகிறாள்.”
“என்ன நிகழ்ந்தது என்று சொல்லுங்கள் அன்னையே” என்றான் பாண்டு. அம்பாலிகை “பேரரசியிடமிருந்து பேரமைச்சருக்கு ஆணை சென்றிருக்கிறது. முடிசூட்டு விழாமங்கலம் எவ்வகையில் நிகழவேண்டுமென்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. என் சேடி அதை எனக்குக் கொண்டுவந்து காட்டினாள். விழியிழந்தவன் மன்னனாக அரியணை அமர்வானாம். அவனருகே அவன் உடைவாள் தாங்கி நிற்கவேண்டியவன் என் மைந்தன். அருகே அவன் தேவியாக காந்தாரி அமர்வாளாம். அருகே இவள் அகம்படி நிற்கவேண்டும். நான் அவளருகே நிற்கவேண்டும்… அவளுடைய பட்டுமேலாடையைத் தாங்கிக்கொண்டு… இதெல்லாமே அவளுடைய திட்டம்தான். நன்றாகவே தெரிகிறது.”
“அது மரபுதானே? தம்பியர் உடைவாள் தாங்குவது எங்குமுள்ளது அல்லவா?” என்றாள் குந்தி. “நீ அதையே பெரிய பரிசாகக் கொள்வாய் என எனக்குத்தெரியும். கன்றுமேய்த்து காட்டில் வாழும் இடைச்சிக்கு அஸ்தினபுரியின் அரசியின் ஆடைநுனியைத் தாங்குவதென்பது மாபெரும் நல்லூழ்தான். நான் காசிநாட்டரசனின் மகள். ஷத்ரியப்பெண். என்னால் சேடிவேடமிட்டு அவைநிற்க முடியாது” என்றாள் அம்பாலிகை. “பாண்டு, இது என் ஆணை, நீயும் போகப்போவதில்லை.” பாண்டு “மன்னிக்கவேண்டும் அன்னையே. என் அண்ணனின் உடைவாள் தாங்குவதைவிட எனக்கென்ன பேறு இருக்கமுடியும்?” என்றான்.
“சீ, மூடா. அந்த சூதமைந்தன் உன்னை ஏமாற்றி விலையில்லா கல் ஒன்றைக்கொடுத்து நாட்டைப்பறித்தான். பற்களைக் காட்டியபடி அதை என்னிடம் வந்து சொன்னவன் நீ. உனக்கு நாணமோ தன்முனைப்போ இல்லாமலிருக்கலாம். ஆனால் நீ ஒரு ஷத்ரியப்பெண்ணின் மைந்தன். அதை மறக்காதே….” குந்தி “அரசி, தாங்கள் சொல்வது உண்மைதான். தம்பியர் அரியணைதாங்குவது என்பது எங்குமுள்ள வழக்கம். ஆனால் அதை எனக்கும் உங்களுக்கும் விரிவாக்கி இளையமன்னருக்கும் உங்களுக்கும் எனக்கும் இங்குள்ள இடமென்ன என்பதை மன்றிலுள்ள அனைவருக்கும் காட்டநினைக்கிறார்கள் மூத்தஅரசி. ஆனால் நாம் எதிர்ப்போமென்றால் மேலும் சிறியவர்களாகவே ஆவோம். எதிர்த்தபின் பணிவதைப்போல முழுமையான தோல்வி பிறிதில்லை” என்றாள்.
“வேறு என்ன செய்யவேண்டுமென நினைக்கிறாய்?” என கலங்கிய விழிகளைத் தூக்கி அம்பாலிகை கேட்டாள். “எப்போதும் நான் செய்வதைத்தான். நமது இடத்தை நாமே முடிவுசெய்வோம். தலைநிமிர்ந்து பேரன்புடன் அப்பணியைச் செய்வோம். அவர் இளையமன்னரின் தமையன். அவரது துணைவி எனக்கு தமக்கை போன்றவள். மூத்தஅரசியோ உங்கள் தமக்கை. பணிவிடை செய்வதில் குறைவேதும் இல்லை. முகம் மலர்ந்து அதைச்செய்வோமென்றால் நம் பெருமையே ஓங்கும்” என்றாள் குந்தி. சீறி எழுந்து “என்னால் முடியாது” என்றாள் அம்பாலிகை . குந்தி திடமான குரலில் “நாம் அதைத்தான் செய்யப்போகிறோம்” என்றாள்.
“நீயா அதை என்னிடம் சொல்கிறாய்?” என்றாள் அம்பாலிகை கடும் சினத்தால் சிவந்த முகமும் கலங்கியகண்களும் மூச்சில் உலைந்த உடலுமாக. “ஆம். இங்கு செய்யவேண்டுவதென்ன என்பதை நானேதான் சொல்வேன். நீங்கள் கடைப்பிடித்தாகவேண்டும்” என்று தாழ்ந்த குரலில் குந்தி சொன்னாள். “சீ நீ ஒரு யாதவப்பெண்…” என அம்பாலிகை குரலெழுப்ப “நான் சொல்வதுதான் நடக்கும். உங்களை இங்கே சிறைவைத்துவிட்டு அதைச்செய்யவும் என்னால் முடியும்” என்றாள் குந்தி. திகைத்துப்போய் உதடுகள் மெல்லப்பிரிய அம்பாலிகை பார்த்தாள்.
“அன்னையே நான் பிருதையின் சொற்களுக்கு மட்டுமே உடன்படுவதாக இருக்கிறேன்” என்றான் பாண்டு. இருவரையும் மாறிமாறிப்பார்த்த அம்பாலிகை அப்படியே மீண்டும் பீடத்தில் அமர்ந்து இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு அழத்தொடங்கினாள். அவளுடைய மெல்லிய தோள்கள் குலுங்குவதையும் நீளவிரல்களின் இடைவெளிவழியாக கண்ணீர் கசிவதையும் சொல்லின்றி குந்தி நோக்கி நின்றாள். அவளுடைய அழுகை பாண்டுவின் அழுகையை ஒத்திருப்பதாக அவளுக்குப் பட்டது.
அம்பாலிகையின் அழுகை தணிந்து விம்மல்களாக ஆனபோது குந்தி சென்று அருகே அமர்ந்தாள். அவள் தோளைத்தொட்டு “இதையெல்லாம் என்னிடம் விட்டுவிடுங்கள் அரசி. தங்களால் இதை ஆடமுடியாது. நான் உங்கள் மைந்தனின் துணைவி. உங்கள் குலம்வாழவேண்டுமென விழைபவள். உங்கள் நன்மதிப்பையும் உங்கள் மைந்தனின் முடிச்சிறப்பையும் ஒருபோதும் தாழவிடமாட்டேன் என நம்புங்கள்” என்றாள். “ஆம், என்னால் முடியவில்லை. என்னால் இதையெல்லாம் கையாளவே இயலவில்லை” என்று முகத்தை மேலாடையால் துடைத்தபடி அம்பாலிகை சொன்னாள். “என்னால் முடியும். இவ்விளையாட்டை நான் எப்போதுமே ஆடிக்கொண்டிருக்கிறேன்” என்றாள் குந்தி.
“ஆம் அதை உன்னைக் கண்டதுமே நானும் உணர்ந்தேன்” என்றாள் அம்பாலிகை . நிமிந்து குந்தியின் கைகளைப்பற்றிக்கொண்டு “இவ்வரண்மனையில் நானும் என் மகனும் தனித்துவிடப்பட்டிருக்கிறோம் பிருதை. எங்களுக்கு எவர் துணையுமில்லை. நாங்கள் உன்னிடம் அடைக்கலமாகியிருக்கிறோம்” என்றாள். “நான் உங்களவள்” என்று சொல்லி அம்பாலிகையின் கலைந்த கூந்தலிழைகளை கையால் நீவி காதுக்குப்பின் ஒதுக்கினாள் குந்தி. “அந்தப்ப்புரத்துக்குச் செல்லுங்கள் அரசி. தங்கள் மிகச்சிறந்த அரச உடையில் முழுதணிக்கோலத்தில் சபைக்கு வாருங்கள்” என்றாள்.
அம்பாலிகை முகம் மலர்ந்து “நான் மங்கலமணிகளை அணியலாமா? கணவனை இழந்தவர்களுக்கு அவ்வுரிமை உண்டா?” என்றாள். “நீங்கள் அனைத்து மணிகளையும் அணியலாம் அரசி. கைம்மைநோன்பு உங்களுக்கில்லை. ஷத்ரிய மரபின்படி மைந்தரைக்கொண்ட அன்னை மாமங்கலையேதான்” என்றாள் குந்தி. “என்னிடம் நீலவைரங்கள் மட்டுமே கொண்ட ஓர் ஆரம் உள்ளது. அதை இன்று அணியப்போகிறேன். அதற்குப்பொருத்தமாக நீலமணித்தலையணிகளும் உள்ளன.” குந்தி “அணியலாம்… நான் என் சேடி அனகையை அனுப்புகிறேன். அவள் அணிசெய்வதை முறையாகக் கற்றவள்” என்றாள்.
பிருதை “அனகை” என்று அழைக்க அனகை வந்து வணங்கினாள். “அரசியை அழைத்துச்சென்று அணிசெய். இன்னும் ஒருநாழிகைக்குள் அரசியை சபைமண்டபத்துக்குக் கொண்டுவா” என்றாள் குந்தி. அனகை தலைவணங்கினாள். “ஒருநாழிகை என்றால் நேரமே இல்லையே” என்றபடி அம்பாலிகை எழுந்துகொண்டாள். குந்தி அரைக்கண்ணால் நோக்கியபோது பாண்டு புன்னகைசெய்வதைக் கண்டாள். அனகை “தங்களுக்காக சபையினர் காத்திருக்கிறார்கள் அரசி” என்று குந்தியிடம் சொன்னாள்.

5/2/14

பகுதி பத்து : அனல்வெள்ளம்[ 6 ]

பகுதி பத்து : அனல்வெள்ளம்[ 6 ]
விதுரன் சத்யவதியின் அறைக்குள் நுழைந்து தலைவணங்கினான். சத்யவதி கைகாட்டியதும் சியாமை கதவைமூடிவிட்டு வெளியே சென்றாள். “அமர்ந்துகொள், களைத்திருக்கிறாய்” என்றாள் சத்யவதி. விதுரன் பீடத்தில் அமர்ந்துகொண்டு “ஆம், காலைமுதல் வெளியேதான் இருக்கிறேன்” என்றான். “சகுனியின் படையும் பரிவாரங்களும் அமைந்துவிட்டனரா?” என்றாள் சத்யவதி. “அவர்கள் கூட்டமாக புராணகங்கைக்குள் புகுந்து குடில்களை அமைத்துக்கொண்டே முன்னேறி நெடுந்தூரம் சென்றுவிட்டனர். இப்போது நம் வடக்குவாயிலில் ஏறி நின்றால் அப்பால் நகருக்கு ஒரு சிறகு முளைத்திருப்பது தெரிகிறது” என்றான் விதுரன்.
“உண்மையில் நான் மெல்ல அந்தப்படைகளை அஞ்சத்தொடங்கியிருக்கிறேன் விதுரா” என்றாள் சத்யவதி. “அவர்கள் நம்மைவிட எவ்வகையிலோ கூரியவர்கள் என்று தோன்றுகிறது. நடையிலா கண்களிலா தெரியவில்லை, ஒரு காந்தாரப்படைவீரனைக் கண்டால் அவன் நம் வீரர் இருவருக்கு நிகரென்று தோன்றுகிறது.” விதுரன் “பேரரசி எண்ணுவது முற்றிலும் உண்மை. ஆயிரம் காதம் கடந்து இங்குவந்திருக்கும் காந்தார வீரன் வீடோ குடியோ உறவோ சுற்றமோ இல்லாதவன். தன் வாளை நம்பி இங்கு வந்தவன். நம் வீரர்கள் இனிய இல்லங்களில் மனைவியும் புதல்வர்களும் கொண்டவர்கள். தந்தையர் தனயர், ஏன் பாட்டன்களும் இருக்கிறார்கள். நாம் வைத்திருக்கும் துருவேறிய படைக்கலங்களைப்போன்றவர்கள் நம் வீரர்கள். அவர்களோ ஒவ்வொருநாளும் கூர்தீட்டப்பட்டவர்கள்.”
“உண்மையில் இந்நகரம் இன்று நம் ஆணையில் இருக்கிறதா?” என்றாள் சத்யவதி. “இன்று இருக்கிறது” என்றான் விதுரன். அவள் பெருமூச்சுடன் “நான் முடிவுகளை எடுத்தபின் திரும்பிப்பார்ப்பதில்லை. ஆனால் இப்போது ஒவ்வொரு கணமும் ஐயங்கள் என்னை வதைக்கின்றன. சரியானதைத்தான் செய்திருக்கிறேனா? அஸ்தினபுரியை குழந்தையைக்கொண்டுசென்று ஓநாய்முன்போடுவதுபோல விட்டுவிட்டேனா? தெரியவில்லை” என்றாள். அவளுடைய கண்களுக்குக் கீழே தசைவளையம் தொங்கியது. முகமே சுருங்கி நெளிந்த கரும்பட்டால் ஆனதுபோலத் தோன்றியது.
“பேரரசியார் இந்த இக்கட்டை நன்கு தேர்ந்தபின்னர்தானே எடுத்தீர்கள்?” என்றான் விதுரன். “ஆம், அனைத்தையும் சிந்தனை செய்தேன். சூதரும் ஒற்றரும் அளித்த அனைத்துச்செய்திகளையும் நுண்ணிதின் ஆராய்ந்தேன். ஆனால் அரசுசூழ்தலில் முதன்மை விதியொன்றுண்டு, அதை தவறவிட்டுவிட்டேன்” என்றாள் சத்யவதி. “ஒருவனைப்பற்றி எந்த இறுதிமுடிவையும் எடுப்பதற்கு முன் அவனை நேரில் பார்த்தாகவேண்டும். அவனிடம் சிலமுறையாவது பேசியாகவேண்டும். எத்தனை நுணுகியறிந்திருந்தாலும் நேரில் பார்க்கையில் நம் அனைத்து கணிப்புகளும் பிழைபட்டுவிடுகின்றன.” அவள் தலையை அசைத்தாள். “நான் சகுனியைப்பற்றி அனைத்தும் அறிவேன் என நினைத்தேன். அவனை நேரில் கண்டதும் என் கணிப்புகளை எண்ணி திகைத்தேன்.”
“நேரில் கண்டதும் எதை அறிந்தீர்கள்?” என்றான் விதுரன் சற்றே வியப்புடன். “அறிந்தது எந்த புதுச்செய்தியையும் அல்ல. அவனை நேரில் கண்டு அறிந்தவை இரண்டுதான். தன்னை முற்றிலும் இறுக்கிக்கொண்டிருக்கும் அரசியலாளன் அவன். ஆனால் காந்தாரியைப்பற்றி பேசும்போது அவன் உள்ளம் நெகிழ்கிறது. தேவவிரதனை அவன் விரும்புகிறான். ஆனால் அவை எவ்வகையிலும் முக்கியமான அறிதல்களல்ல. நானறிந்தது அறிதல் அல்ல. உணர்தல். அவனருகே நிற்கையில் என் அகம் தெளிவாகவே அச்சத்தை உணர்கிறது. அவன் இந்நகரின் அழிவுக்கு வழிவகுப்பான் என எனக்குத் தோன்றிக்கொண்டே இருக்கிறது.”
விதுரனை நோக்கி சத்யவதி சொன்னாள் “ஆகவேதான் நேரில் பார்க்காமல் முடிவெடுக்கலாகாது என்கிறார்கள் அரசுசூழ்தல் அறிஞர்கள். பிறர் சொல்லும்போது நம் சிந்தைதான் அவற்றைக் கேட்கிறது. நம் தர்க்கம்தான் அவற்றைப் புரிந்துகொள்கிறது. அம்மனிதன் நம்மருகே நிற்கையில் நம்முடைய ஆன்மா அவனை உணர்கிறது. உள்ளுணர்வின் மூன்றாம் விழியால் அவனை நாம் பார்க்கமுடிகிறது.”
“பேரரசி சற்று மிகைப்படுத்திக்கொள்கிறீர்களோ என ஐயுறுகிறேன்” என்றான் விதுரன். “இருக்கலாம் விதுரா. நான் பெண் என உணரும் தருணங்கள் இவை” என்று சத்யவதி பெருமூச்சு விட்டாள். “அனைத்திலும் வரப்போகும் புயலின் உறுமலை என் செவிகள் கேட்கின்றன போலும்.” அவள் வலிந்து புன்னகை புரிந்தாள். “உன் மூதன்னையை ஒரு பேதையாகக் காண்பது உன்னுள் உவகையை நிறைக்குமே…” விதுரன் புன்னகை புரிந்தபடி “சிறப்பாக உய்த்தறிகிறீர்கள்” என்றான்.
சத்யவதி வாய்விட்டுச்சிரித்தபோது அவள் இளமையில் சந்தனுவை பித்துகொள்ளவைத்த பேரழகி என்பதை விதுரன் எண்ணிக்கொண்டான். காற்றில் சாம்பலுக்குள் இருந்து கனல் சுடர்வதுபோல அவள் முதுமைக்குள் இருந்து அப்பேரழகு வெளிவந்தது என எண்ணிக்கொண்டான். மூதன்னையிடம்கூட எஞ்சும் பெண்ணழகை தவறவிடாத தன் ஆண்விழிகளை எண்ணியும் வியந்துகொண்டான். அதேகணம் அவன் எண்ணம் ஓடுவதை உணர்ந்து அவள் கண்கள் எச்சரிக்கை கொண்டன. “என்ன பார்க்கிறாய்?” என்றாள். “அன்னைய, நீங்கள் அழியா அழகுகொண்டவர்” என்றான் விதுரன் .
அரசைத் துறந்து முதுமையைத் துறந்து அஸ்தினபுரியையும் அத்தனை ஆண்டுகளையும் துறந்து யமுனைக்கரை இளம்பெண்ணாக நின்று முகம் சிவந்து கண்வெட்கி “என்ன சொல்கிறாய் மூடா?” என்றாள் சத்யவதி. “ஆம் அன்னையே. உங்கள் சிரிப்புக்கு நிகரான பேரழகு இங்கு எந்தப்பெண்ணிடமும் வெளிப்படவில்லை.” அனலென சிவந்த கன்னங்களுடன் அவள் சிரித்துக்கொண்டு “எத்தனை பெண்களைப் பார்த்தாய் நீ?” எனறாள். “ஏராளமாக” என்றான் விதுரன். சத்யவதி “அதுசரி, ஆண்மகனாகிவிட்டாய். தேவவிரதனிடம் சொல்லவேண்டியதுதான்” என்றாள். “அன்னையே நான் கண்ட பெண்களெல்லாம் காவியங்களில்தான். உங்கள் மைந்தரின் சொற்கள் வழியாக.”
சத்யவதி சிரித்து “அவன் உன்னைப்பார்த்தால் மகிழ்வான். அவன் சொற்களெல்லாம் முளைக்கும் ஒரு வயல் நீ” என்றாள். “நீ வந்ததனால்தான் நான் சற்றே கவலை மறந்தேன். என் முகம் மலர்ந்தாலே அதை அழகென நீ சொல்கிறாய் என்றால் நான் எப்போதும் துயருற்றிருக்கிறேன் என்றல்லவா பொருள்?” என்றாள் சத்யவதி. மேலும் அழகை புகழச்சொல்லிக் கோரும் பெண்மையின் மாயத்தை உணர்ந்த விதுரன் தனக்குள் புன்னகைத்தபடி “அன்னையே, நீங்கள் அசைவுகளில் அழகி. புன்னகையில் பேரழகி. பற்கள் தெரிய நகைக்கையில் தெய்வங்களின் அழகு உங்களில் நிகழ்கிறது” என்றான்.
“போதும்… யாராவது இதைக்கேட்டால் என்னை பித்தி என்று நினைப்பார்கள். பெயரனிடம் அழகைப்பற்றி அணிச்சொற்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என்றாள் சத்யவதி. விதுரன் “ஏன் கேட்டாலென்ன? மூவுலகையும் ஆளும் அன்னை பார்வதியே பராசரரின் தேவிஸ்தவத்தை கேட்டு மகிழ்ந்திருக்கிறாள் அல்லவா?” என்றான். சத்யவதி “நீ என்ன என்னைப்பற்றி காவியமெழுதவிருக்கிறாயா?” என்றாள். “ஆம். அன்னையே நான் காவியமெழுதுவேன் என்றால் அது உங்களைப்பற்றி மட்டும்தான். அதற்கு மாத்ருசரணம் என்று பெயரிடுவேன். உங்கள் பாதங்களில் இருந்து தொடங்குவேன்.”
“போதும்…” என்றாள் சத்யவதி பெருமூச்சுடன். அவள் முந்தைய எண்ணங்களுக்கு மீண்டாலும் முகத்தின் அந்த மலர்ச்சி நீடித்தது. “அந்தப்புரத்தில் என்றும் வாழப்போகும் ஒரு கசப்பு முளைத்துவிட்டது விதுரா. அதைப்பற்றிச் சொல்லத்தான் நான் உன்னை அழைத்தேன்.” விதுரன் தலையசைத்தான். “நீயே உய்த்தறிந்திருப்பாய். காந்தாரிக்கும் குந்திக்கும் இடையேதான்.” விதுரன் “அது நிகழுமென நான் முன்னரே எண்ணினேன்” என்றான். “ஏன்?” என்றாள் சத்யவதி. விதுரன் “குந்திபோஜனின் மகள் இயல்பால் ஷத்ரியமகள். வணங்காதவர். வெல்பவர். ஆள்பவர்” என்றான்.
“ஆம், அவள் கையில் நிறைகுடமும் சுடர்அகலும் கொண்டு வண்டியில் இருந்து என் மாளிகைமுற்றத்தில் இறங்கும்போது நான் அவளைக் கண்டேன். அக்கணமே இவள் சக்ரவர்த்தினி அல்லவா என எண்ணிக்கொண்டேன். பெரும்பிழை செய்துவிட்டோம் என்ற எண்ணமே எழுந்தது. நேரில்காணாமல் எடுத்த இன்னொரு பிழைமுடிவு. அவள் இந்த அந்தப்புரத்தில் திருதராஷ்டிரனின் பதினொரு ஷத்ரிய அரசிகளின் சேடியாக ஒருபோதும் ஒடுங்க மாட்டாள்.” விதுரன் “ஆம், ஆனால் தானிருக்கும் இடமும் தன்னிடமும் தெரிந்தவர் குந்திதேவி. எங்கே பிழை நிகழுமென்றால் காந்தாரத்தின் அரசிக்கு விழியில்லை. அவர் தங்கையருக்கும் விழியிருக்க வாய்ப்பில்லை. அவர்களால் குந்திதேவியைக்  காணமுடியாது. வைசியகுலத்தவளாகவே அவரை நடத்துவார்கள்.”
“அதுதான் நடந்தது” என்றாள் சத்யவதி. “குந்தி புதுமணப்பெண்ணாக வந்திறங்கி புத்தில்லம் புகுந்தபோது அவளை முறைப்படி எதிரேற்று கொண்டுசெல்ல கையில் நிறைவிளக்கும் மலருமாக அவளுடைய மூத்தவள் வந்திருக்கவேண்டும். அவள் விழிமூடியவள். ஆனால் அவளுடைய பத்து தங்கையரில் எவரும் வரவில்லை. வண்டிகள் வரும் ஒலி கேட்டதும்கூட எவரும் வரவில்லை என்று கண்டு நான் சியாமையிடம் முதல் மூன்று இளவரசிகளும் வந்தாகவேண்டும் என்று ஆணையிட்டு அனுப்பினேன். ஆனால் கடைசி மூன்று பெண்களும்தான் வந்தனர். அவர்களும் கைகளில் எதையும் வைத்திருக்கவில்லை.”
“அந்தக் கடைசிப்பெண் தசார்ணை மிகச்சிறுமி. ரதங்கள் வந்து நின்றபோது அவள் வேறெதையோ பார்த்துவிட்டு உள்ளே ஓடிவிட்டாள். அணிமங்கலத்துடன் இல்லம்புகுந்த குந்தியை எதிர்கொள்ள இரட்டையாக அமங்கல முறைகாட்டி நின்றனர் அவ்விளவரசியர். நான் என் முகத்தில் எதையும் காட்டவில்லை. அவளை எதிர்கொண்டழைத்து மாளிகைக்குள் கொண்டுசென்று மங்கலத்தாலம் காட்டி, மஞ்சள்நீர் தெளித்து, மலர்சூட்டி இல்லத்துக்குள் ஏற்றுக்கொண்டேன். ஆனால் அவள் மிகக்கூரியவள். என்ன நிகழ்ந்ததென அக்கணமே அவள் உணர்ந்துகொண்டாளென அவள் கண்களில் நான் கண்டேன்” சத்யவதி சொன்னாள்.
VENMURASU_EPI_103
ஓவியம்: ஷண்முகவேல் [பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
“அவள் அந்த அவமதிப்புக்கு எதிர்வினையாற்றுவாள் என நான் எண்ணினேன்” என்றாள் சத்யவதி. “இல்லம் சேர்ந்தபின் நீராடி ஆடைமாற்றி மூன்று மூதன்னையரின் பதிட்டைகளில் வழிபட்டு மலர்கொண்டபின் அவள் தன் அறைக்குச் சென்றுவிட்டாள். அவளுடன் வந்த சேடியை நான் வரச்சொன்னேன். அவளிடம் மூத்தவளைச் சென்று நோக்கி வணங்கிமீளும்படி குந்தியிடம் சொல்லச் சொன்னேன். மூத்தவள் விழிமறைத்தவளாதலால் அதுவே முறையாகுமென விளக்கும்படி கோரினேன். என் ஆணையை குந்தி மீறமாட்டாளென நானறிவேன்” சத்யவதி தொடர்ந்தாள்.
“சத்யசேனையின் சேடியை வரவழைத்து அவர்கள் குந்தியை வரவேற்க வராமலிருந்தமை பெரும் பிழை என்று கண்டித்தேன்” என்றாள் சத்யவதி. “ஆனால் சூத்திரப்பெண்களுக்கு அப்படி வரவேற்பளிக்கும் முறை காந்தாரத்தில் இல்லை என்று அவள் எனக்கு பதில் சொல்லியனுப்பினாள்.” விதுரன் கண்களில் சினம் தோன்றியது. “அத்தகைய பதிலை தாங்கள் பொறுத்துக்கொண்டிருக்கக்கூடாது அன்னையே” என்றான். சத்யவதி “நான் எதையும் பெரிதாக்க எண்ணவில்லை. ஏனென்றால் பெண்களுக்கிடையே விளையும் சிறுபொறிகூட பெருநெருப்பாகிவிடும். அனைத்தும் எளிதாக கடந்துசெல்லட்டும் என்றே முயன்றேன்” என்றாள்.
“அத்துடன் திருமண வேளை என்பது மிகநுட்பமான அகநாடகங்களின் களம் விதுரா. ஒருவருக்கொருவர் முற்றிலும் அயலான குடும்பங்கள் இணைகின்றன. ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். ஒருவரை ஒருவர் கண்காணிப்பவர்கள். மதிக்கப்படுகிறோமா என்ற ஐயம். அவமதிக்கப்படுவோம் என்னும் அச்சம். தாங்கள் தங்களைப்பற்றி எண்ணியிருப்பவற்றை பிறர் ஏற்கிறார்களா என்னும் பதற்றம். சிறு சொல்லும் பெரும் அகக்கொந்தளிப்பாக ஆகிவிடும். எளிய செயல்கள்கூட நினைத்துப்பார்க்க முடியாத உட்பொருட்களை அளித்துவிடும். மணக்காலத்தில் குடும்பங்கள் கொள்ளும் சிறு கசப்புகூட பெருகிப்பெருகி அவ்வுறவுகளை முற்றாகவே அழித்துவிடும்.”
“ஆகவே காந்தார இளவரசி அஸ்தினபுரியின் பேரரசிக்கு அவமதிப்பான பதிலை அளிக்க ஒத்துக்கொண்டீர்கள்” என்று விதுரன் சினம் அடங்காமல் சொன்னான். “அவள் சிறுமி. அவள் சொன்னதும் சரியே. காந்தாரத்தின் நடைமுறைகளை நாம் அறியோம் அல்லவா? அவளிடம் யாதவர்கள் ஷத்ரியர்களல்ல சூத்திரர்களே என்று எவரேனும் சொல்லியிருக்கலாம். அனைத்தையும் மெல்ல பின்னர் பேசி சீர்செய்துகொள்ளலாமென எண்ணினேன்.” விதுரன் “என்ன நிகழ்ந்தது?” என்றான்.
“நான் சொல்வதை குந்தி ஒருபோதும் மீறமாட்டாளென அவளைக் கண்ட முதற்கணமே அறிந்துகொண்டேன். ஆனால் நான் சொன்னதைக்கொண்டே அவள் பழிதீர்ப்பாளென எண்ணவில்லை” என்றாள் சத்யவதி. விதுரன் புன்னகை செய்தான். “சிரிக்காதே. ஒவ்வொன்றும் என்னை பதறச்செய்கிறது” என்றாள் சத்யவதி. “அவள் தன்னை பேரரசி என அலங்கரித்துக்கொண்டாள். அம்பாலிகையின் சேடியரை அழைத்து தனக்கு சாமரமும் மங்கலத்தாலமும் எடுக்கச்செய்தாள். குந்திபோஜன் அவளுக்களித்த விலைமதிப்புள்ள மணிகளையும் மலர்களையும் மங்கலப்பொருட்களையும் எடுத்துக்கொண்டு அணிச்சேடியர் துணைவர காந்தாரியை காணச்சென்றாள். புஷ்பகோஷ்டத்தின் அந்தப்புரத்துக்குள் சென்று காந்தாரியைக் கண்டு முறைப்படி தாள்பணிந்து முகமனும் வாழ்த்தும் சொல்லி வணங்கினாள். தங்கையரையும் முறையாக வணங்கி மலர்கொடுத்தாள்.”
விதுரன் பெருமூச்சுடன் “ஆம், அவர்கள் அதையே செய்வார்களென நானும் எதிர்பார்த்தேன்” என்றான். “அச்செயல் அவர்களை நெருப்பென எரியச்செய்துவிட்டது. சத்யசேனை குந்தி திரும்பியதும் அவள் கொண்டுசென்ற பரிசில்களை அள்ளி வீசி அவள் நாடகமாடுகிறாளென கூவியதாக சேடியர் சொன்னார்கள்” சத்யவதி பெருமூச்சு விட்டாள். “அதைக்கேட்டபோது நான் குந்திமீதுதான் கடும்சினம் கொண்டேன். அரண்மனைமுகப்புக்கு மங்கலஏற்புக்கு அவர்கள் வராததைக் கொண்டே அவர்களை அவள் எடைபோட்டுவிட்டாள். அவர்களின் சிறுமையை வதைப்பதற்குரிய மிகச்சிறந்த முறை அவர்கள் முன் பேரரசியின் நிமிர்வுடனும் பெருந்தன்மையுடனும் இருப்பதே என்று கண்டுகொண்டாள்.”
“அது அவர்களின் இயல்பாக இருக்கலாம்” என்றான் விதுரன். “ஆம், அவள் இயல்புதான் அது. அவள் யானைபோன்றவள். அவளால் தலைகுனிய முடியாது. பதுங்கவும் ஒடுங்கவும் முடியாது. ஆனால் அவளுக்கு தன் ஒளி தெரியும். நோயுற்ற விழிகள் அதைக்கண்டு கூசித்தவிக்குமென தெரியும். அந்த வதையை அவர்களுக்கு அளிக்கவேண்டுமென்றே அவள் சென்றாள்” என்றாள் சத்யவதி. “இனி நிகழவிருப்பது இதுதான். அவள் தன் நிமிர்வாலும் ஒளியாலும் அவர்களை வதைத்துக்கொண்டே இருப்பாள். அவர்கள் அந்த வலியாலேயே புழுவாக ஆவார்கள். அவளுடைய ஒவ்வொரு பெருந்தன்மையாலும் மேலும் மேலும் சிறுமையும் கீழ்மையும் கொள்வார்கள்.”
“அவர்களை அப்படி ஆக்குவது எது?” என்று விதுரன் கேட்டான். “அவர்களின் நகரம் பாரதவர்ஷத்தின் மேற்கெல்லை. அங்கே கங்கைக்கரையின் எண்ணங்களும் நடைமுறைகளும் சென்றுசேர்ந்திருக்க வாய்ப்பில்லை” என்றாள் சத்யவதி. “இல்லை, பேரரசி. அதுவல்ல. அவர்கள் இங்கு வந்திறங்கியபோது நான் அவர்களைப் பார்த்தேன். அச்சமும் ஆவலும் கொண்ட எளிய பெண்களாகத்தான் இருந்தார்கள். அவர்களுக்குள் அந்தக் கசப்பை நிறைப்பது எது?” சத்யவதி அவன் சொல்லப்போவதென்ன என்பதைப்போல பார்த்தாள். “அவர்களில் எவருக்கேனும் இசை தெரியுமா?” என்றான் விதுரன். சத்யவதி புரிந்துகொண்டு விழிவிரிய மெல்ல உதடுகளைப்பிரித்தாள்.
“அதை நாம் ஒன்றும் செய்யமுடியாது பேரரசி. அவரது இசைக்குள் அவர்கள் செல்லவேண்டும் மூத்த அரசியைப்போல. அல்லது தங்கள் இசையால் அவரிடம் உரையாடவேண்டும்.” சத்யவதி “திரும்பத்திரும்ப இதுவே நிகழ்கிறது” என்றாள். விதுரன் “அத்துடன் அந்த வைசியப்பெண் பிரகதி, அவள் உமிக்குள் வைத்த நெருப்புத்துளி போல ஒவ்வொரு கணமும் இவ்வரசிகளின் ஆன்மாவை எரித்துக்கொண்டிருப்பாள்”   என்றான். தன்னையறியாமலேயே சத்யவதி தலையை மெல்ல தட்டிக்கொண்டாள். “ஆம்… அதை நன்றாகவே உணர்கிறேன். அந்த உணர்வுகளெல்லாம் எனக்கு நெடுந்தொலைவாக ஆகிவிட்டன. ஆயினும் தெளிவாகவே தெரிகின்றன.” சத்யவதி பெருமூச்சு விட்டாள். “எளியபெண்கள். பாவம். இனி இப்பிறவியில் அவர்களுக்கு காதல் இல்லை. உவகை இல்லை. நிறைவளிக்கும் துயில்கூட இல்லை.”
விதுரன் “தாங்கள் இதில் கவலைகொள்ள ஏதுமில்லை பேரரசி” என்றான். “தாங்கள் இருவரை நம்பலாம். குந்திதேவி ஒருபோதும் அவரது எல்லையில் இருந்து நிகழ்வுகள் மீறிச்செல்ல விட்டுவிடமாட்டார்கள். தன் மாண்பை எந்நிலையிலும் இழக்கமாட்டார்கள். ஆகவே விரும்பத்தகாதது என ஏதும் எந்நிலையிலும் நிகழாது. காந்தாரிதேவி இவர்கள் உழலும் இவ்வுலகிலேயே இல்லை.” சத்யவதி “நீ உன் தமையனிடம் பேசலாகாதா? அந்த வைசியப்பெண்ணை இசைக்கூடத்தில் இருந்து விலக்கினாலே பெரும்பாலும் அனைத்தும் சரியாகிவிடும்” என்றாள். “இல்லை அன்னையே, அதைச்செய்ய எவராலும் இயலாது” என்றான் விதுரன்.
பெருமூச்சுடன் “நீ வந்து சொன்ன சொற்களை நினைத்துப்பார்க்கிறேன். ஒன்றும் செய்வதற்கில்லை என்றுதான் சொல்லியிருக்கிறாய். ஆனால் அச்சொற்களே ஒரு பெரும் அமைதியை அளிக்கின்றன. விந்தைதான்” என்றாள் சத்யவதி. “சிலசமயம் அப்படி ஒரு முழு கையறுநிலை அமைதியை நோக்கிக் கொண்டுசெல்லும்போலும்.” விதுரன் “அன்னையே நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்றான். “நான் ஏதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஏதேனும் ஒன்று பிழையாக நிகழுமென்றால் அப்பிழையை பெரிதாக்கிக்கொள்ளத் தேவையான அனைத்து கசப்புகளும் இங்கே திரண்டுவிட்டிருக்கின்றன என்றுமட்டும் உணர்கிறேன்” என்றாள்.
விதுரன் எழுந்து “நான் வருகிறேன் பேரரசி, என் ஆணைகளுக்காக அங்கே பலர் காத்திருக்கிறார்கள்” என்றான். “ஷத்ரிய மன்னர்களுக்கு அழைப்புகள் சென்றுவிட்டனவா?” “ஆம், அனைவருக்கும் முறைப்படி அழைப்பு சென்றுள்ளது. மகதத்தை அழைக்க பலபத்ரரே சென்றிருக்கிறார்.” சத்யவதி பார்வையைத் திருப்பியபடி “காசிக்கு?” என்றாள். “காசிக்கு கங்கர்குலத்தைச் சேர்ந்த படைத்தலைவர் சத்யவிரதனை அனுப்பியிருக்கிறேன்” என்றான் விதுரன். சத்யவதி அனிச்சையாகத் திரும்பியபோது விதுரன் புன்னகைசெய்தான். “ஒவ்வொன்றும் முறையாக நிகழ்கிறது பேரரசி. மணப்பந்தல் அமைக்க கலிங்கச்சிற்பிகள் நகருக்கு வந்துவிட்டார்கள். விருந்தினர் தங்குவதற்காக நூறு பாடிவீடுகளை அமைக்கும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது.”
“சரி, நிகழ்வுகளை ஒவ்வொருநாளும் இரவுக்குள் என்னிடம் தெரிவிக்கச்சொல்” என்றாள் சத்யவதி. விதுரன் தலைவணங்கி வெளியே வந்தான். அத்தனை சொற்களில் இருந்தும் சிந்தனையை விடுவித்துக்கொண்டு மீண்டும் செய்யவேண்டிய பணிகளை நோக்கிச் செலுத்த முயன்றான். ஓலைநாயகங்களுக்கு செய்திசொல்லுதல். யானைக்கொட்டில்களுக்கும் குதிரைநிரைகளுக்கும் பொறுப்பாளர்களை அமைத்தல். கங்கைக்கரை படகுத்துறையை செப்பனிடுதல். வடக்கே புராணகங்கைக்குள் குடியேறிய காந்தாரவீரர்களின் குடியிருப்புகளை ஒழுங்குசெய்தல்… அனைத்துக்கும் தொடர்பற்ற இன்னொரு உலகம் இங்கே. உணர்ச்சிகளால் ஆனது. புறமும் அகமும். ஆணும் பெண்ணும். எது பொருளற்றது? எது சிறுமையானது?
அந்தப்புரத்தின் பெருமுற்றத்தில் செம்பட்டுத்திரைச்சீலைகள் அலைபாய அணிப்பல்லக்கு வந்து நிற்பதை விதுரன் கண்டான். மூங்கில்கால்களில் பல்லக்கு நிலத்திலமர்ந்ததும் நிமித்திகன் கையில் வெள்ளிக்கோலுடன் முன்னால் வந்து இடையில் இருந்த சங்கை எடுத்து முழங்கினான். அந்தப்புரத்துக்குள் இருந்து ஐந்து சேடிகள் மங்கலத்தாலங்களுடன் வந்தனர். பல்லக்கின் உள்ளிருந்து திரைச்சீலையை விலக்கி குந்தி வெளியே வந்தாள். சிலம்பணிந்த மென்பாதங்கள் இரு பொன்னிற முயல்கள் போல மரவுரி மெத்தை மேல் வந்தன. இளஞ்சிவப்பு பட்டாடையின் பொன்னூல் பின்னல் விளிம்பு அலைநுரையென நெளிந்து உலைந்தாடியது. நடையில் ஆடிய கைவளைகள் எங்கோ குலுங்கின. கண்முன் மேகலை நலுங்கி குலைந்து பிரிந்து இணைந்து அதன் தொங்கும் முத்துக்கள் துள்ளித் துவண்டு துவண்டு …
அவள் அருகே வந்ததை அறிந்ததும் விதுரன் தலைவணங்கி “சிறிய அரசியை வணங்குகிறேன். இத்தருணத்தில் தங்களை காணும் பேறுபெற்றேன்” என்றான். கூந்தலை மூடிய மெல்லிய கலிங்கத்துணியை இழுத்து விட்டபடி இருகன்னங்களிலும் குழிகள் தெளிய புன்னகைசெய்து “என் பேறு அது” என்றாள் குந்தி. காதோரத்தில் கருங்குருவி இறகு போல வளைந்து நின்ற குழல்புரி ஆடியது. பீலி கனத்த இமைகள் செம்மலரிதழ்களென இறங்கின. விதுரன் மீண்டும் தலை வணங்கினான். சிலம்புகள் கொஞ்சிக் கொஞ்சி விலகிச்சென்றன. வளையல்கள் சிரித்துச் சிரித்துச் சென்றன. அணிகளுக்கு இத்தனை ஓசை உண்டா என்ன?
அவள் அப்பால் வாசலுக்குள் மறைந்தபின்னரும் அங்கேயே நின்றுகொண்டிருப்பது போலப்பட்டது. சென்றது ஒரு விழிமயக்கா? அவளிடமிருந்து ஒன்று அங்கேயே பிரிந்து நின்றுவிட்டதா என்ன? அது அவளிடமிருந்து எழுந்த வாசனை என்று எண்ணினான். குளியல்பொடியும் கூந்தல்தைலமும் புதுமலரும் அகிலும் செம்பஞ்சுக்குழம்பும் கலந்த வாசனை. ஆனால் அவற்றைக் கலந்து அவளைச் செய்துவிடமுடியாது. அவளுடைய புன்னகையையும் அதில் சேர்க்கவேண்டும். கண்கள் மின்ன கன்னங்கள் குழிய செவ்விதழ்கள் விரிந்து வாயின் இருபக்கங்களும் மடிய மலரும் ஒளியை.

5/1/14

பகுதி பத்து : அனல்வெள்ளம்[ 5 ]

பகுதி பத்து : அனல்வெள்ளம்[ 5 ]
பங்குனி மாதம் வளர்பிறை எட்டாம்நாள் திருதராஷ்டிரனுக்கு அஸ்தினபுரியின் மணிமுடி சூட்டப்படுமென பேரரசி சத்யவதியின் அறிவிப்பு முதிய பேரமைச்சர் யக்ஞசர்மரால் முறைப்படி வெளியிடப்பட்டது. கோட்டையின் கிழக்குவாயில் முன்னால் இருந்த பெருமன்றுக்கு காலைச்செவ்வொளி விரிந்த மங்கலவேளையில் நெற்றிப்பட்டமும் மணிப்படாமும் சத்ரமும் வெண்சாமரமும் அணிசேர்க்க பூத்த மலைமேல் கதிரவன் முளைத்ததுபோல பொன்னிற அம்பாரியுடன் அசைந்து அசைந்து வந்த முதுபெருங்கரிமேல் ஏறிவந்த தலைமை நிமித்திகன் அந்தத் திருமுகத்தை வாசித்து அறிவித்தான்.
அந்தச்செய்தி முன்னரே மக்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்களனைவரும் இன்று நாளை என அச்செய்தி முறையறிவிக்கப்படுவதற்காகக் காத்திருந்தனர். அரண்மனை முகடில் காஞ்சனம் இன்னொலி எழுப்ப அணிவேழம் நடைகொண்டபோதே ஊரெங்கும் செய்தி பரவிவிட்டது. மன்றுக்கு நடுவே யானை வந்து நின்றபோது அதைச்சுற்றி தோள்கள் நெரித்து தலைகள் அடர்ந்திருந்தன. தலைவேழம் நடுவே நிற்க பெருமுரசேந்திய யானையும் கொம்பூதிகள் அமர்ந்த யானையும் இருபக்கமும் நின்றன. பொற்கவசமணிந்த துதிக்கையும் முகபடாமணிந்த மத்தகமும் மணிப்பூக்கள் செறிந்த முறச்செவிகளும் அசைய அவை மலர்மரங்களென ஆடிநின்றன.
நிமித்திகன் செம்பட்டுத்தலைப்பாகையும் மணிக்குண்டலங்களும் செம்பட்டு மேலாடையும் சரப்பொளி ஆரமும் அணிந்திருந்தான். இடையாடைக்குமேல் புலித்தோலைச் சுற்றி வெண்கலக்குறடுகள் அணிந்து கோபுரம் விட்டிறங்கிய யட்சன் போலிருந்தான். பெருமுரசம் கோல்பட்டு அதிர்ந்தபோது மன்றில் நிறைந்திருந்த பேச்சொலிகளெல்லாம் அவிந்தன. யானை தன் துதிக்கையால் மண்ணைத் துழாவி விட்ட மண்பறக்கும் நெடுமூச்சின் ஒலி நெடுந்தொலைவுவரை கேட்டது. நிமித்திகன் யானைமேல் எழுந்து நின்று தன் பொற்கோலைத் தூக்கினான்.
உரத்த மணிக்குரலில் “விண்ணாளும் முழுமுதல்வனிலிருந்து உதித்தவன் பிரம்மன். பிரம்மனின் மைந்தர் முதல்மூதாதை அத்ரி. அத்ரியிலிருந்து பிறந்தவர் சந்திரன். சந்திரகுலத்தில் உதித்தவர் புதன். புதனின் மைந்தன் புரூரவஸ் வழிவந்த சந்திரகுலத்து பெருமன்னர்நிரை என்றும் அழியாதிருப்பதாக! விண்ணும் மண்ணும் நீரும் நெருப்பும் கோள்களும் ஆதித்யர்களும் வாழும் காலம்வரை அவர்கள் புகழ் வளர்வதாக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான். கூட்டம் கைகளைத் தூக்கி ‘ஆம் ஆம் ஆம்!’ என வாழ்த்தொலித்தது.
நிமித்திகன் “ஆயுஷ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்‌ஷத்ரன், ஹஸ்தி என விரியும் ஆயிரமிதழ் தாமரை இப்பெருங்குலம். அஸ்தினபுரியை நிறுவிய மாமன்னர் ஹஸ்தியின் மைந்தனோ அஜமீடன். அவன் வழிவந்த ருக்‌ஷன், சம்வரணன், குரு ஆகியோரின் புகழோ அணையா விண்ணகப் பெருநெருப்பேயாகும். இன்று இந்நாட்டை ஆளும் குருவம்சத்தின் பெருமைக்கு பாரதவர்ஷத்தின் பெருமை ஒன்றே நிகராகும்” என்றான். ‘ஆம் ஆம் ஆம்’ என கூட்டம் பேரொலி எழுப்பியது.
“குருகுலத்தில் உதித்தவன் ஜஹ்னு. அவன் மைந்தனோ சுரதன். விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி, ருக்‌ஷன், பீமன், பிரதீபன், சந்தனு என்னும் சக்ரவர்த்திகள் அவியிட்டு வளர்த்த வேள்வித்தீ இந்நகரம். இது என்றும் வாழ்க!” ‘ஆம் ஆம் ஆம்’ என்றனர் மக்கள். “சந்தனுவின் குலத்தை வாழ்த்துவோம். விசித்திரவீரியரின் பொன்றாப்பெரும்புகழை வாழ்த்துவோம். விசித்திரவீரியரின் மைந்தர்களான திருதராஷ்டிர மன்னரையும் இளையவர் பாண்டுவையும் வாழ்த்துவோம்! நம் வழித்தோன்றல்கள் என்றும் அவ்வாழ்த்தை தங்கள் நாவுக்கணியாக அணிவார்களாக! நம் மொழிகள் அவர்கள் புகழ்பாடி தொடங்குவதாக! நம் தெய்வங்கள் அவர்களை வாழ்த்தி அவி பெறுவதாக!” ‘ஆம் ஆம் ஆம்’ என ஒலித்தது கூட்டம்.
“அஸ்தினபுரியின் மைந்தர்களே, மாமன்னர் ஹஸ்தியின் குழந்தைகளே, நாம் நல்லூழ் கொண்டவர்களானோம். இதோ ஹஸ்தியின் அரியணை பெருமைகொள்ளவிருக்கிறது. பாரதவர்ஷத்தை ஆளும் அஸ்தினபுரியின் ஆட்சியை விசித்திரவீரிய மன்னரின் தலைமைந்தரும் காசிநாட்டு இளவரசி அம்பிகைதேவியின் மைந்தருமான திருதராஷ்டிரன் இந்திரன் கையில் மின்னல்படை என சூடப்போகிறார். அவரது நல்லாட்சியில் இந்நகரம் பொலியப்போகிறது. நம் குலங்கள் செல்வமும் வெற்றியும் புகழும் கொண்டு மகிழவிருக்கின்றன. ஆம் அவ்வாறே ஆகுக!”
கூட்டம் வாழ்த்தொலி எழுப்ப பெருமுரசங்களும் கொம்பும் முழங்கி அணைந்தன. “குடிகளே குலங்களே கேளுங்கள்! வரும் சைத்ரமாதம் வளர்பிறை எட்டாம் நாள் காலை முதற்கதிர் மண்தொடும் முதல் மங்கலநாழிகையில் பேரரசி வாழ்த்துரைகூற இளையவர் செங்கோலெடுத்தளிக்க பிதாமகர் மணிமுடியெடுத்துச் சூட்ட ஐம்பத்தைந்து ஷத்ரியப்பெருங்குடி மன்னர்களும் சூழ்ந்து அரிசியிட்டு வாழ்த்த திருதராஷ்டிரர் அஸ்தினபுரியின் அரியணை அமர்வார். ஹஸ்தியின் மணிமுடி அவர் தலையில் கைலாயத்தில் எழும் இளஞ்சூரியன் என அமையும். கீழ்த்திசை செங்கதிர் சூடியதுபோல அவர் கையில் குருவின் செங்கோல் நிறையும். இந்நகரம் பொலியும். இந்நாடு சிறக்கும். பாரதவர்ஷம் ஒளிபெறும். ஆம் அவ்வாறே ஆகுக!”
கூட்டம் வாழ்த்தொலி எழுப்பும் கணம் ஓங்கிய குரல் ஒன்று “நிறுத்துங்கள்!” என்று கூவியது. ஆங்காங்கே எழுந்த வாழ்த்தொலிகள் தயங்கி மறைந்தன. தன் யோகதண்டை தரையில் ஓங்கி ஊன்றி அதன் கணுக்கள் மேல் கால்வைத்து ஏறி கூட்டத்தின் மேலெழுந்த சார்வாகன் ஒருவன் வலக்கையைத் தூக்கி உரக்க “நிமித்திகரே, இதை மக்களுக்கு அறிவிக்கிறீரா இல்லை ஆணையிடுகிறீரா?” என்றான். நிமித்திகன் திகைத்து கீழே புரவிகளில் நின்ற காவலர்தலைவனைப் பார்த்தபின் “இது பேரரசியின் அறிவிப்பு” என்றான்.
“இந்த முடிவை எடுக்க பேரரசி கூட்டிய மன்றுகள் என்னென்ன? எந்த குலமூத்தாரையும் குடித்தலைவர்களையும் அவர் சந்தித்தார்?” என்றான் சார்வாகன். அவனுடைய சடைமுடி தோளில் திரிகளாகத் தொங்கியது. தாடியும் சடைத்திரிகளாக மார்பில் விழுந்து கிடந்தது. பெருச்சாளித்தோல் கோவணம் அணிந்து உடலெங்கும் வெண்சாம்பல் பூசியிருந்தான். சிவமூலிப்புகையால் பழுத்த கண்கள் கங்குகள் போல எரிந்தன. “மன்னனை மக்களுக்கு அறிவிக்கிறீர்கள் நிமித்திகரே. இங்குள்ள இருகால் மாக்கள் அதைக்கேட்டு கை தூக்கி கூவுகிறார்கள்.”
“சார்வாகரே, இது அரசாணை. நான் இதை அறிவிக்கும் பொறுப்பு மட்டும் கொண்டவன். நீங்கள் உங்கள் எண்ணங்களை அமைச்சரிடம் தெரிவிக்கலாம்” என்றான் நிமித்திகன். “அமைச்சர் எங்கிருக்கிறார்? விழியிழந்தவனுக்கு யாழ் வாசித்துக்காட்டுகிறாரா என்ன?” காவலர்தலைவன் “வாயை மூடு நீசனே. அரசநிந்தனையை நான் சற்றும் பொறுக்கமாட்டேன்” என்றபடி வேலுடன் முன்னால் பாய்ந்தான்.
“இங்கே இவர் செய்தது மக்கள் நிந்தனை. அதை நானும் பொறுக்கமுடியாது!” என்றான் சார்வாகன். காவலர்தலைவன் “மூடு வாயை” என்று கூவியபடி வேலைத்தூக்கினான். ஆனால் கூட்டத்தைக் கடந்து அவனால் சார்வாகனை எட்டமுடியவில்லை. “அஹ்ஹஹ்ஹா! மூடா, இதோ நான் ஏறி நிற்பது என் யோகதண்டு. நான் இதைவிட்டிறங்கினால் இந்தப்பெருங்கூட்டத்தில் ஒருவன். உன் ஒற்றை ஈட்டி இக்கூட்டத்தை என்ன செய்யும்?”
“இவர்கள் அரசகுடிகள்… அஸ்தினபுரியின் மக்கள்” என்றான் காவலர்தலைவன். “அப்படியென்றால் நீ கண்ட அரசநிந்தனையை அவர்கள் ஏன் காணவில்லை?” என்றான் சார்வாகன். காவலர்தலைவன் பொறுமை இழந்து தன் குதிரைமேல் பாய்ந்தேறி அதை குதிமுள்ளால் உதைத்தான். குதிரை முன்காலைத் தூக்கி கூட்டம் மீது பாயத்தொடங்கியபோது கூட்டத்துக்கு அப்பால் சோமரின் குரல் கேட்டது “சிருங்கா நில்… நான் பேசுகிறேன் அவரிடம்.”
கூட்டம் வழிவிட சோமர் தன் புரவியைச் செலுத்தி யானையருகே வந்தார். புரவிமேல் அமர்ந்தவாறே “சார்வாகமுனிவருக்கு தலைவணங்குகிறேன். இந்நகர மக்கள் தங்கள் நகர்நுழைவால் வாழ்த்தப்பட்டிருக்கிறார்கள்” என்றார். “நீர் அமைச்சர் சோமர் என நினைக்கிறேன்” என்றான் சார்வாகன். “ஆம்… தங்கள் அருளாசியை நாடுகிறேன்.” “என் ஆசி அதை நாடும் அனைவருக்கும் உரியதுதான். அமைச்சரே, இங்கே அறிவிக்கப்பட்ட இச்சொற்கள் எந்த முறைப்படி எடுக்கப்பட்டன?”
“சார்வாகரே, இவை பேரமைச்சர் யக்ஞசர்மரின் சொற்கள். பேரரசியின் ஆணைப்படி முன்வைக்கப்பட்டவை. அமைச்சர் விதுரர் தலைமையில் முதன்மை நெறியாளர் கூடி எடுத்த முடிவுகள் இவை.” “மன்றுசூழப்பட்டதா? அதுதான் கேள்வி… மன்றுசூழப்பட்டதா?” என்று சார்வாகன் கேட்டான். “இல்லை” என்றார் சோமர். “ஏனென்றால் விசித்திரவீரியரின் முதல்மைந்தர் திருதராஷ்டிரன் அரியணை ஏற்பதென்பது நூலும் முறையும் வகுத்த மரபேயாகும். மரபு மீறப்படும்போது மட்டுமே முறைப்படி முன்னரே மன்றுசூழப்பட்டிருக்கவேண்டும்.”
“இங்கு மரபு மீறப்பட்டிருக்கிறது” என்றான் சார்வாகன். “விழியிழந்தவன் எப்படி அரசாளமுடியும்? இவ்வரியணையில் அல்ல பாரதவர்ஷத்தின் எந்த அரியணையிலாவது எப்போதாவது விழியிழந்தவன் அமர்ந்த வரலாறுண்டா?” சோமர் “இல்லை. ஆனால் அதற்கும் நம் முன்னோர் வகுத்த நூல்கள் நெறி காட்டுகின்றன. சுக்ரரின் அரசநீதியும் பிரஹஸ்பதியின் ஷாத்ரஸ்மிருதியும் லகிமாதேவியின் விவாதசந்த்ரமும் விழியிழந்தவன் மன்னனாகலாமென்கின்றன. மன்னனுக்கு அமைச்சே விழிகள் சுற்றமே செவிகள் படைகளே தோள்கள் என்கின்றன அவை. நம் மன்னர் சுற்றமும் அமைச்சும் படைகளும் கொண்டவர். அதுவே போதுமானது” என்றார்.
VENMURASU_EPI_102
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
“அமைச்சரே, சொல்லை எத்திசைக்கும் திருப்பமுடியும். நான் அதைக் கேட்கவில்லை. இது இயல்பான அரசேற்பு அல்ல. இங்கே ஒரு முறைமீறல் உள்ளது. அதை மக்கள் மன்று ஏற்றாகவேண்டும். நூல்கள் சொல்வது எதுவாக இருந்தாலும் சரி அதை இக்குலமும் குடியும் ஏற்றாகவேண்டும். அது நிகழ்ந்திருக்கிறதா?” சோமர் திகைத்து “அனைத்தும் முறைப்படி நிகழ்ந்துள்ளன” என்றார். “மக்கள் மன்று ஏற்காத மன்னன் இந்த பாரதவர்ஷத்தை ஆண்டதில்லை. நீங்கள் விழியுடையவர்கள் மீது விழியிலாத ஒருவனை சுமத்துகிறீர்கள்.”
“சார்வாகரே, விழியிழந்தவன் அரசனாகக்கூடாதெனச் சொல்லும் ஒரு நூலை நீங்கள் இங்கே சுட்டிக்காட்டலாம்” என்றார் சோமர். “நான் உன்னுடன் நூல்விவாதம் செய்ய வருவேனென எண்ணினாயா? மூடா, நூறுஆயிரம் நூல்களை எரித்தெடுத்த நீறைத்தான் இதோ என் உடலெங்கும் பூசியிருக்கிறேன் நான். விழியிழந்தவனும் மனிதனே. அவனும் வாழ்வதற்கு உரிமை கொண்டவனே. உண்ணவும் உடுக்கவும் மகிழவும் மைந்தரைப் பிறப்பிக்கவும் அவனுக்கும் இயற்கையின் ஆணை உள்ளது. ஆனால் இங்குள்ளோர் அனைவரும் விழியுடன் இருக்கையில் விழியிழந்த ஒருவன் மன்னனாகக் கூடாது. அது ஒருபோதும் நலம் பயக்காது.”
சார்வாகன் தொடர்ந்தான் “ஏனென்றால் அவன் சித்தத்தில் எப்போதும் வாழ்வது அவனுக்கும் பிறருக்கும் இருக்கும் வேறுபாடாகவே இருக்கும். அந்த இடைவெளியை நிறைக்கவே அவன் அனைத்தையும் செய்வான். மக்கள் நலம்நாட அவனுக்கு நேரமிருக்காது. ஒருபோதும் அவன் தன் மக்களை நம்பமாட்டான். அவர்கள் தன்னை ஏற்கவில்லை என்றே எண்ணுவான். ஆகவே அவர்களை கண்காணிப்பான். அமைச்சரே, ஐயம் கொண்டவன் ஐயத்துக்குரியவற்றை மட்டுமே காண்பான். ஆகவே அவன் காலப்போக்கில் மக்களை வெறுப்பான். தன்னை நிலைநிறுத்த மக்களை வதைப்பான்…”
“ஆட்சியாளன் என்றும் மக்களில் ஒருவனாகவே இருந்தாகவேண்டும்” என்றான் சார்வாகன். “தேவர்களுக்கு தேவனும் அசுரருக்கு அசுரனுமே அரசர்களாக முடியும். மூடர்நாட்டில் மூடனே நல்ல ஆட்சியாளன். மூடர்களை வழிநடத்தும் அறிவாளன் பேரழிவையே உருவாக்குவான். அறிஞர்களை வழிநடத்தும் மூடன் உருவாக்கும் அழிவும் அதுவும் நிகரே. ஆம், விழியுடையவர்களை விழியிழந்தோன் ஆளமுடியாது. நடப்பவர்களை முடமானவன் வழிநடத்தமுடியாது. அது தீங்கு.”
அங்கிருந்த மொத்தக்கூட்டமும் திகைத்து நிற்பதை சோமர் கண்டார். “சார்வாகரே, உங்கள் அறமுரைத்தலை முடித்துவிட்டீர்கள் என எண்ணுகிறேன். இங்கு நீர் சொன்ன சொற்களை நான் அமைச்சரிடம் தெரிவிக்கிறேன்” என்றார். சார்வாகன் “தெரிவித்தல் உங்களுக்கு நல்லது. எனக்கு நாடில்லை. வேந்தும் கொடியும் இல்லை. என்னை படைகளும் கோட்டையும் காப்பதில்லை. என் கப்பரையில் உங்கள் நாணயங்கள் விழுவதுமில்லை. இந்த நகரம் அழிந்து இங்கொரு வெண்ணீற்று மலை எஞ்சுமென்றால் அதில் ஒரு கை அள்ளி என் உடலில் பூசி மகிழ்ந்து நடனமிடுவேன். ஏனென்றால் ஆக்கமும் அழிவும் மகிழ்வே. வாழ்தலும் இறப்பும் மகிழ்வே. உண்டலும் குடித்தலும் உவத்தலும் ஓய்தலும் என ஓடும் வாழ்வின் ஒவ்வொரு துளியும் அமுதே. நெடுநீர்வழிப்படும் புணையெனப்போகும் இவ்வாழ்வில் பெரியோரென்றும் சிறியோரென்றும் எவருமில்லை. ஆதலால் யாதும் ஊரே, யாவரும் கேளிர்!” என்றான்.
வாழ்த்தொலிகளில்லாமல் பனிக்கட்டி உருகுவதுபோல அந்தக்கூட்டம் கரைவதை சோமர் பார்த்தார். அவர் கைகாட்ட பெருமுரசுகளும் கொம்புகளும் முழங்கின. வீரர்கள் தங்கள் படைக்கலங்களைத் தூக்கி அஸ்தினபுரிக்கும் குருகுலத்துக்கும் பேரரசிக்கும் பீஷ்மருக்கும் திருதராஷ்டிரனுக்கும் வாழ்த்தொலி கூவினர். சோமர் நகர் வழியாக குதிரையில் செல்லும்போது படைவீரர்கள் மட்டும் வாழ்த்தொலி எழுப்புவதைக் கேட்டுக்கொண்டே சென்றார். எப்படி அதற்குள் அச்செய்தி நகரமெங்கும் பரவியது என்று வியந்துகொண்டார்.
அரசுசூழ் மன்றில் விதுரன் இல்லை. அவன் திருதராஷ்டிரனின் அவையிலிருப்பதாகச் சொன்னார்கள். சோமர் அரண்மனையின் வலப்பக்க நீட்சியாகிய புஷ்பகோஷ்டம் நோக்கிச் சென்றார். செல்லும்போதே விதுரனிடம் சொல்லவேண்டிய சொற்களைத் திரட்டிக்கொண்டு நடந்தார். திருதராஷ்டிரனின் இசைக்கூடத்தில் யாழிசை கேட்டுக்கொண்டிருந்தது. சோமர் மிக மெல்ல நடந்தார். குறடுகளைக் கழற்றிவிட்டு மரவுரிமெத்தை விரிக்கப்பட்டிருந்த தரையில் ஓசையில்லாமல் நடந்து உள்ளே சென்றார். இசைக்கூடத்தின் நடுவே இருந்த தடாகத்தில் சூரிய ஒளி விழுந்து அதன் ஒளியலை மரக்கூரையில் நடமிட்டுக்கொண்டிருந்தது. பெரிய பீடத்தில் திருதராஷ்டிரன் தன் இரு கைகளையும் மார்பின்மீது கட்டிக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்து இசைகேட்டுக்கொண்டிருந்தான்.
அவனருகே இன்னொரு பீடத்தில் விதுரன் அமர்ந்திருந்தான். இசைமேடையில் இளைய சேடிப்பெண் ஒருத்தி யாழ்மீட்டிக்கொண்டிருந்தாள். அவள் சூதப்பெண் போலத் தெரியவில்லை. அரண்மனையில் சேவையாற்றும் வைசியப்பெண் என்று அவள் ஆடைகள் காட்டின. முலைகள் மேல் தொய்ந்துகிடந்த பொன்மணியாரமும், வலக்கொண்டையாகக் கட்டப்பட்டிருந்த கூந்தலில் பொன்னாலான தாமரைமலரும் காதுகளில் அலரிமலர் வடிவில் பொற்தோடுகளும் அணிந்திருந்தாள். நீலப்பட்டாடை அணிந்து கால்களை மடித்து அமர்ந்து மெல்லிய சிவந்த விரல்களால் யாழ்நரம்புகளை வருடிக்கொண்டிருந்தாள்.
சோமர் அமர்ந்துகொண்டார். அவள் காந்தாரத்தில் இருந்து அரசியருடன் வந்த வைசியப்பெண் என்று அவருக்குத்தெரிந்தது. அவள் திரும்பத்திரும்ப ஒரே இசையைத்தான் மீட்டுகிறாள் என்று தோன்றியதும் அவர் சலிப்புடன் மெல்ல அசைந்தார். விதுரனின் விழிகள் வந்து அவர் விழிகளைத் தொட்டுச்சென்றன. அவள் மெல்லிய குரலில் யாழுடன் இணைந்து பாடத்தொடங்கினாள். காந்தாரத்தின் அபப்பிரம்ஸ மொழி. அது தெரிந்த சொற்களை புதியவகையில் உச்சரிப்பதுபோலக் கேட்டது. அவ்விசையில் பாலைவன வண்டுகளின் ரீங்காரமும் பாலைநிலத்துப்பாறைகளில் மணல்பொழியும் ஒலியும் ஓநாயின் மெல்லிய முனகலும் எல்லாம் கலந்திருப்பதுபோலத் தோன்றியது. சோமர் மீண்டும் நெளிந்தமர்ந்து கொட்டாவி விட்டார்.
இசை நீண்டு நீண்டு சென்றுகொண்டே இருந்தது. இதை எதற்காக ரசிக்கிறார்கள் என சோமர் எண்ணினார். ஒரு பெரிய வெண்கலப்பாத்திரத்தில் மழைத்துளிகள் விழுவதுபோன்ற ஓசை. அதை அமர்ந்து ரசிப்பதென்றால் ஒருவகை குழந்தைத்தனம்தான் அது. ஆனால் விழியிழந்த அரசனால் வேறென்ன செய்யமுடியும்? அவனது கரியபேருடலில் அந்த இசை குளத்துநீரில் காற்று அலையெழுப்புவதுபோல எதிர்வினையை உருவாக்கிக்கொண்டிருந்தது. இந்த மனிதன் இனி இந்நகரின் அரசன். இவன் என்ன எண்ணுகிறான் என்றே எவரும் அறியமுடியாது. இறுக மூடப்பட்ட ஒரு கற்சுவர்சிறைக்குள் வாழ்பவன். அவனுக்கு இம்மக்களும் நெடுந்தூரக்குரல்கள் மட்டும்தானே?
அவருக்கு உடல் சிலிர்த்தது. சார்வாகன் சொன்னவை ஒவ்வொரு சொல்லாக எண்ணத்தில் விரிந்தன. அவன் அஸ்தினபுரியின் அரசனானால் அவனுக்கும் மக்களுக்குமான உறவென்ன? ஆம், விதுரன்தான் நாடாளப்போகிறான். பீஷ்மர் இருக்கிறார். ஆனால் அவனுடைய இருண்ட உலகில் எவரேனும் மந்தணப்பாதைகள் வழியாகப்புகுந்துவிட்டால்? அவன் விதுரனை விலக்கிவிட்டால் என்ன நிகழும்? முதுமையில் செவிகேளாமலாகும் யானை கொலைவெறிகொள்ளும் என்று மதங்கநூல் சொல்லும். பாகனை புரிந்துகொள்ளமுடியாதென்பதனாலேயே அது கொல்லத் தொடங்கிவிடும்.
எண்ணங்களை அவரால் விலக்க முடியவில்லை. எண்ணங்கள் அவருக்குள் முன்னரே உறைந்திருந்த ஐயங்களை தொட்டுத்தொட்டு மீட்டன. விதுரன் இங்கே இனி நீடிக்கமுடியாது. விழியிழந்தவனின் இருண்ட உலகுக்குள் நுழைய ஒரே வாயில்தான். அவன் அரசியான காந்தாரி. அவள் தம்பி அந்த வாயில் வழியாக அவனுள் நுழையமுடியும். ஆம், அரசாளப்போவது விதுரன் அல்ல. திருதராஷ்டிரன் அல்ல. சகுனிதான். அன்று அவர் வெளியிட்ட அறிவிப்பின் உள்ளடக்கம் அதுவே. கோட்டைப்புறத்து மயானத்தில் சாம்பல்பூசி சிவமூலிப்புகை இழுத்து ஒடுங்கிக்கிடக்கும் சார்வாகன் அறிந்த உண்மை நாற்பத்தைந்தாண்டுகாலம் மதிசூழ்கை கற்ற அவர் எண்ணத்தை அடையவில்லை.
இசை நின்றது. திருதராஷ்டிரன் பெருமூச்சுகள் விட்டபடி தலையை அசைத்தான். அந்த வைசியப்பெண் எழுந்து திருதராஷ்டிரனை வணங்கினாள். “பிரகதி,.. நீ இங்கேயே இரு… இந்த இசை என் செவிகளில் இருந்து எப்போது மறைகிறதோ உடனே நீ மீண்டும் இதை இசைக்கவேண்டும்” என்றான் திருதராஷ்டிரன். “என்ன ஒரு மகத்தான இசை… காற்றும் நெருப்பும் சேர்ந்து நடனமிடும் இசை… பாலைவனங்களில் மட்டும் பிறக்கும் இசை…” திரும்பி கைகளை நீட்டியபடி “விதுரா!” என்றான். “அரசே” என்றான் விதுரன்.
“நான் முடிசூடியதுமே ஒரு பெரும் இசைச்சபை கூடவேண்டும். தென்னகத்தில் இருந்து அனைத்துப் பண்களையும் பாடும் பாணர்களை வரவழைக்கவேண்டும். காந்தாரத்திலும் அதற்கப்பால் பெரும்பாலைநிலத்திலும் இருந்து இசைவாணர்களை வரவழைக்கவேண்டும். இருசாராரும் இங்கே என் அவையில் இருந்து பாடவேண்டும். இரு பாடல்முறைகளும் ஒன்றாகவேண்டும். பெருமழைநிலத்தின் இசையும் அனல்மண்ணின் இசையும் ஒன்றாகட்டும். அது சிவசக்தி லயம்போலிருக்கும்… ஆம். அதுதான் நான் உடனே செய்யவேண்டியது… இது என் ஆணை. குறித்துக்கொள்!”
“ஆணை” என்றான் விதுரன். “பிரகதி, உனக்கு நான் எந்தப் பரிசும் அளிக்கப்போவதில்லை. நீ இங்கே எப்போதுமிருக்கவேண்டும்” என்றான் திருதராஷ்டிரன். பிரகதி வணங்கி பின்னகர்ந்து யாழை எடுத்துக்கொண்டாள். “விதுரா, மூடா, இன்னும் எத்தனை நாளிருக்கிறது மணிமுடிசூட்டு நாளுக்கு?” விதுரன் “அரசே, இன்னும் நாற்பது நாட்களிருக்கின்றன” என்றான். “ஏன் அத்தனை தாமதம்? அறிவிப்பு இன்று வெளியாகிவிட்டதல்லவா?” “ஆம், அரசே. முடிசூட்டுவிழாவுக்கு அனைத்து ஷத்ரியகுலங்களும் வந்தாகவேண்டுமல்லவா?” “அவர்களை விரைந்து வரச்சொல்லலாமே!” விதுரன் ஒன்றும் சொல்லவில்லை.
“விதுரா, நான் கலிங்கத்திலிருந்து எனக்கான பட்டுத்துணிகளை கொண்டு வரச்சொல்லியிருந்தேனே?” என்றான் திருதராஷ்டிரன். “அரசே, அதற்காக ஒரு சிற்றமைச்சரே சென்றிருக்கிறார். தங்களுக்காக பீதர்களின் உயர்தரத்துப் பட்டாடைகளைக் கொண்டுவரச்சொல்லி தேவபாலத்துக்கும் ஆளனுப்பியிருக்கிறேன். திருவிடத்தில் இருந்து மணிகளும் பாண்டியத்து முத்துக்களும் வருகின்றன.” திருதராஷ்டிரன் நிறைவின்மையுடன் தலையை அசைத்து “விரைவாக வரச்சொன்னாயா? அவர்கள் வந்துசேர தாமதமாகிக்கொண்டே இருக்கும். தாமதித்துவந்தபின் காரணங்கள் சொல்பவர்களை கசையாலடிக்கத் தயங்கமாட்டேன் என்று சொல்!” என்றான்.
“நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றான் விதுரன். “நகைகள் வந்ததும் என்னை கூட்டிச்சென்று காட்டு… எங்கே வியாஹ்ரதத்தர்?” விதுரன் “அவர் மதியம் வரை அலுவலில் இருப்பார். பின்மாலையில் உங்களை வந்து சந்திப்பார். தற்போது தாங்கள் சற்று ஓய்வெடுக்கலாம்” என்றான். அவன் கைகாட்ட ஓரமாக நின்ற அணுக்கச்சேவகன் திருதராஷ்டிரனின் கைகளைப் பற்றிக்கொண்டான். தன் பெரிய கைகளை அவன் தோளில் வைத்தபடி திருதராஷ்டிரன் உள்ளே சென்றான்.
விதுரன் திரும்பி மெல்ல “மக்கள் வாழ்த்தொலி எழுப்பவில்லை, அல்லவா?” என்றான். “ஆம்… ஆனால்…” என சோமர் தொடங்க “நான் இங்கிருந்தே கேட்டேன். மக்களின் வாழ்த்தொலிகள் அலையலையாக எழுந்தமரும். படைவீரர்களின் ஒலிகள் சீரான படைநகர்வின் ஒலி போலக்கேட்டன” என்றான். “ஒரு சார்வாகர் பெருமன்று முன் எழுந்து நின்றுவிட்டார் அமைச்சரே” என்றார் சோமர்.
“பேரமைச்சர் யக்ஞசர்மர் தன் உதவியாளர்களுடன் சார்வாகர் தங்கியிருக்கும் சுடுகாட்டுக்கே நேரில் சென்று பணிந்து காணிக்கை வைத்து அவரையும் முடிசூட்டுவிழவுக்கு அழைக்கவேண்டும். பேரமைச்சரே சென்ற செய்தியை நாட்டுமக்கள் அனைவரும் அறியவும் வேண்டும்” என்றான் விதுரன். சோமர் திகைப்புடன் நோக்க விதுரன் புன்னகையுடன் “மன்றில் அவரது அவச்சொல் ஒலிக்கட்டும். மன்றில் முழுதணிக்கோலத்தில் மூத்தவர் வந்தமர்கையில் அச்சொற்களை அவர் சொன்னாரென்றால் அதுவே குடித்தலைவர்களும் குலமூத்தாரும் மன்னரை ஏற்பதற்கு தூண்டுதலாகும்” என்றான்.

4/30/14

பகுதி பத்து : அனல்வெள்ளம்[ 4 ]

பகுதி பத்து : அனல்வெள்ளம்[ 4 ]
அவைக்காவலர் தலைவனான குந்தளன் தன் உதவியாளர்களுடன் மந்தணஅவையில் ஓசையின்றி பணியாற்றிக்கொண்டிருந்தான். அமர்வதற்கான பீடங்களையும் பொருட்கள் வைப்பதற்கான உபபீடங்களையும் உரியமுறையில் அமைத்தான். சத்யவதி அமரவேண்டிய பீடத்தின் மேல் வெண்பட்டையும் பீஷ்மர் அமரவேண்டிய பீடம் மீது மரவுரியையும் சகுனி அமர வேண்டிய பீடம் மீது செம்பட்டையும் விரித்தான். உபபீடங்களில் என்னென்ன பொருட்கள் இருக்கவேண்டுமென துணைவர்களுக்கு ஆணையிட்டான்.
அது இளவேனிற்காலத் தொடக்கமாதலால் காற்று தென்மேற்கிலிருந்து வீசி வடகிழக்குச் சாளரம் வழியாக வெளியேறும். அதற்கேற்ப நெய்விளக்குகளை அமைத்தான். ஒவ்வொருவர் முகத்திலும் ஓளிவிழும்படியும் அதேசமயம் அனல் வெம்மை எவர் அருகிலும் இல்லாதபடியும் அவை உள்ளனவா என அங்கே நின்று சரிபார்த்துக்கொண்டான். சாளரக்கதவுகள் காற்றிலாடாமலிருக்கவும் அறைக்கதவுகள் ஓசையில்லாமல் திறந்துமூடவும் செய்தான். அறைக்குள் மேலே தொங்கிய மயிற்தோகைக்கற்றை விசிறிகள் ஓசையில்லாமலும் தீபச்சுடர்களை அசைக்காமலும் காற்றை அசைக்கும்படிச் செய்தான்.
உள்ளே வந்த விதுரனைக் கண்டு குந்தளன் வணங்கினான். “அமைப்பு முடிந்துவிட்டதா?” என்றான் விதுரன் “ஆம், அமைச்சரே” என்றான் குந்தளன். விதுரன் சுற்றிலும் நோக்கிவிட்டு “மேலுமிரு பீடங்கள் இருக்கட்டும். சிம்மக்கைப்பிடி கொண்டவை. அமைச்சர்கள் அமர ஐந்து வெண்பீடங்களும் அமையட்டும்” என்றான். குந்தளன் கண்கள் ஒருகணம் விரித்து “ஆணை” என்றான். விதுரன் “ஒளியும் காற்றும் அதற்கெனவே அமையட்டும்” என்றான். குந்தளன் தலைவணங்கினான்.
விதுரன் தன் மாளிகைக்குச் சென்று சபைக்கான ஆடை அணிந்து கொண்டான். தன் ஏவலனிடம் மாளிகைக் கருவூலத்தில் இருந்த பழைய ஆமாடப்பெட்டி ஒன்றை எடுத்துவரச்சொல்லி அதைத் திறந்தான். அதற்குள் இளமையில் அவனுக்கு சத்யவதி பரிசாக அளித்த தென்பாண்டி முத்துச்சரமும் பன்னிரு வைரங்கள் பதிக்கப்பட்ட அணிமுடியும் இருந்தன. அவற்றை அவன் அணிவதில்லை என்பதனால் கொண்டு வந்த சேவகன் வியப்புடன் நோக்கி நின்றான். விதுரன் எழுந்து ஆடி நோக்கி அவற்றை அணிந்துகொண்டான். ஆடியில் தெரிந்த தன் பாவையை நோக்கி புன்னகைசெய்தான்.
மீண்டும் அவன் மந்தணஅவைக்கு வந்தபோது அனைத்து ஒருக்கங்களும் முடிந்து அது மூடப்பட்டிருந்தது. அவன் சத்யவதியின் அந்தப்புரத்து அறைவாயிலில் நின்ற சியாமையிடம் “சகுனிதேவரை வரச்சொல்லி தூதனை அனுப்பலாமல்லவா?” என்றான். சியாமை “ஆம், பேரரசி ஒருங்கிவிட்டார்கள். சுவடிகளை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள். அவள் கண்களில் விதுரனின் அணிமுடி வியப்பை உருவாக்கி உடனே அணைந்ததை அவன் கண்டான்.
விதுரன் வெளியேவந்து அரசமண்டபத்தை அடைந்தான். அங்கே விப்ரர் ஓலைநாயகங்கள் நடுவே அமர்ந்திருந்தார். அவனைக்கண்டதும் எழுந்து அருகே வந்து “அமைச்சரே… எங்கும் ஒழுங்கின்மையின் உச்சம். என்னசெய்வதென்று எவருக்கும் தெரியவில்லை. உள்ளே வந்த படைகள் இங்கே அமர இடமில்லாதிருக்கையில் புதிய படைகள் உள்ளே வந்து அழுத்திக்கொண்டே இருக்கின்றன. வந்தவர்களில் பெரும்பகுதியினர் யானைக்கொட்டில்களையும் வடக்குவெளியையும் நிறைத்தபின் அத்திசை வாயில்வழியாக புராணகங்கைக்குள் சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றார்.
“ஒழுங்கின்மை அல்ல அது. அந்த ஒழுங்கை நாம் இன்னமும் வகுத்து அறியவில்லை, அவ்வளவுதான்” என்றான் விதுரன். “விப்ரரே தாங்களே நேரில் சென்று சகுனிதேவரை அவைக்கு அழைத்து வாருங்கள். அவையிலும் தாங்களிருக்க வேண்டும்.” விப்ரர் திகைத்து “நான் இங்கே…” எனத் தொடங்கியபின் “அவ்வண்ணமே ஆகட்டும்” என்றார். அவர் கிளம்பிச்சென்றதும் விதுரன் தூதர்களிடம் அமைச்சர்களும் தளபதிகளும் அவை புகும்படிச் செய்தி அனுப்பிவிட்டு மீண்டும் சத்யவதியின் மாளிகை வாயிலில் சென்று காத்திருந்தான்.
சகுனியின் சிறிய அணித்தேர் மாளிகை முகப்புக்குள் புகுந்தபோது அரண்மனையின் பெருமுரசம் கொம்புகளும் குழல்களும் துணைவர முழங்கி அவனை வரவேற்றது. வீரர்கள் வாழ்த்தொலி எழுப்பி படைக்கலம் தாழ்த்தினர். சகுனி இறங்கி தன் மேலாடையைச் சுற்றிக்கொண்டு மாளிகையின் அமுதகலச முகப்பை ஏறிட்டு நோக்கினான். அதன் முகடில் சத்யவதியின் ஆமை இலச்சினை கொண்ட கொடி பறந்துகொண்டிருப்பதைப் பார்த்தான். விதுரன் அருகே சென்று தலைவணங்கி “காந்தாரநாட்டு இளவரசருக்கு பேரரசி சத்யவதியின் மாளிகைக்கு நல்வரவு” என்றான்.
சகுனி அவன் தலையின் அணிமுடியைத்தான் முதலில் நோக்கினான். அவன் கண்களில் ஏதும் தெரியவில்லை என்றாலும் கைகள் சால்வையை மீண்டும் இழுத்துப்போட்டன. “விசித்திரவீரியரின் மைந்தருக்கு என் வணக்கம்” என்று அவன் சொன்னான். விதுரன் “அவை மண்டபத்துக்கு தாங்கள் வரவேண்டும். பேரரசியும் பிதாமகரும் இன்னும் சற்று நேரத்தில் அவைபுகுவார்கள்” என்றான். சகுனி தலையை அசைத்தபடி படி ஏறி உள்ளே வந்தான்.
அவை மண்டபத்திற்குள் சகுனியை இட்டுச்சென்று அவனுக்கான பீடத்தில் அமரச்செய்தபின் அருகே தனக்கான பீடத்தில் விதுரன் அமர்ந்துகொண்டான். அந்தப்பீடத்திலும் செம்பட்டு விரிக்கப்பட்டிருப்பதை சகுனி அரைக்கண்ணால் பார்த்தபின் “அமைச்சரே தங்கள் படைக்கல ஆசிரியர் எவர்?” என்றான். “இங்கே எங்கள் பேரரசியின் அவையில் கண்டலர், இந்துபிரபர் என்னும் இரு படைக்கல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் இரு இளவரசர்களுக்கும் கைப்பிடித்து முதற் படைக்கலம் கற்பித்தவர்கள். நானும் அவர்களிடம்தான் பயின்றேன்” என்றான் விதுரன்.
“அஸ்திரவித்தை பயின்றிருக்கிறீரா?” என்று சகுனி கேட்டான். “ஆம். நான் எனக்கான மெல்லிய வில் ஒன்றையும் உருவாக்கிக் கொண்டேன். தோள்களை வளர்த்துக்கொள்ளாமலேயே நெடுந்தூரம் அம்புகளைச் செலுத்தும் கலையை நூல்களிலிருந்து கற்றேன்” சகுனி தலையை அசைத்தான். கதவருகே குந்தளன் வந்து தலைவணங்கினான். விதுரன் எழுந்து “பிதாமகர் பீஷ்மர்” என்றான். பீஷ்மரின் பெயரைச் சொன்னதுமே சகுனியின் முகத்தில் அவனை மீறி ஒரு மலர்வு எழுவதை விதுரன் அறிந்தான். இருவரும் எழுந்து நின்றனர்.
பீஷ்மர் தோள்களில் படர்ந்த நரைத்த தலைமுடியும் இன்னமும் ஈரமுலராத வெண்தாடியுமாக உள்ளே வந்தார். மரவுரியாடை மட்டும் அணிந்திருந்தார். சகுனியும் விதுரனும் வணங்கியபோது புன்னகையுடன் இருவரையும் வாழ்த்தியபின் அமர்ந்துகொண்டார். சகுனியிடம் “காந்தாரத்தின் கருவூலமே நகர்புகுந்தது என்றார்கள் சூதர்கள்” என்று சிரித்தபடியே சொன்னார். “இது கருவூலம் அல்ல. ஆனால் பிதாமகர் ஆணையிட்டால் கருவூலத்தையே இங்கு கொண்டுவரச் சித்தமாக உள்ளேன்” என்றான் சகுனி. பீஷ்மர் சிரித்தபடி “கருவூலங்கள் நாட்டின் நெஞ்சங்கள். அவை இணைவது ஒரு மணமுடிப்பு போல” என்றார்.
சியாமை உள்ளே வந்து தலைவணங்கினாள். பீஷ்மர் எழுந்து நின்றார். சத்யவதி உள்ளே வந்ததும் பீஷ்மர் தலைவணங்கினார். சத்யவதி அவரை வாழ்த்திவிட்டு தன்னை வணங்கிய சகுனியிடம் “மிக இளையவராக இருக்கிறீர்கள் சௌபாலரே” என்றாள். சகுனி புன்னகையுடன் “ஆம், என்னை பெரும்பாலும் வயதில் மூத்தவன் என்றே எண்ணுகிறார்கள்” என்றான். “அது தங்கள் புகழ் பாரதவர்ஷம் முழுதும் பரவியிருப்பதனால்” என்றான் விதுரன்.
அவர்கள் அமர்ந்துகொண்டார்கள். சகுனி முறைப்படி பேரரசியை வணங்கி “காந்தாரநாடும் எங்கள் தொல்குலமும் பேரரசியின் அருளைப்பெறுவதனால் பெருமைகொண்டிருக்கின்றன. என் தந்தை சுபலரும் என் தமையன் அசலரும் தங்கள் மணிமுடிகளை தங்கள் பாதம் நோக்கி தாழ்த்துகிறார்கள். தங்கள் அருளுக்காக அவர்கள் இந்த எளிய பரிசை அளித்திருக்கிறார்கள்” என்றபடி ஒரு தங்கப்பேழையை சத்யவதியின் முன்னாலிருந்த பீடத்தில் வைத்தான்.
சத்யவதி “காந்தாரம் எங்கள் உடலில் புதிய குருதியை பாய்ச்சியிருக்கிறது சௌபாலரே. தங்கள் தந்தையிடம் சொல்லுங்கள், அவர் ஹஸ்தியின் குடிக்கு அளித்த பெரும்பரிசு அவரது மகள்தான். அவள் காலடி பட்ட கணம் முதல் இந்நகரின் விடாய் தீர்ந்தது. அச்சங்கள் அகன்றன. அவளைவிட பெரிய பரிசை எந்நாளும் எவரும் இனி எங்களுக்கு அளிக்கவியலாது” என்றாள். அது முகமன் அல்ல என அவள் குரலின் நெகிழ்வு காட்டியது. முதல்முறையாக சகுனியின் முகம் அதன் உறைந்த பாவனையில் இருந்து இளகி நெகிழ்ந்தது. “ஆம், என் தமக்கை எங்கள் குலத்தின் மாசிலா மாணிக்கம்” என்றான்.
“அவள் பாதங்களை இங்குள்ள நிமித்திகர் நோக்கினர். அளவில்லா தாய்மை கொண்டவள் என்றார்கள். பாரதவர்ஷம் விழுந்து வணங்கும் சக்ரவர்த்தினியின் பாதங்கள் அவை என்றார்கள். அதைவிட நற்சொல்லை இம்முதியவளிடம் எவர் சொல்லிவிடமுடியும்?” சத்யவதி சொன்னாள். தன் கைகளை நீட்டி அந்த பொற்பேழையைத் தொட்டு “நான் உவகை கொள்கிறேன்” என்றாள். விதுரன் அதை எடுத்து திறந்தான். அதற்குள் இருந்தது குதிரையின் பல் என்று முதற்கணம் தோன்றியது. மறுகணம் அது ஒரு வைரம் என தெளிந்தான்.
அறையொளியை உண்டு அது சுடர்விடத்தொடங்கியது. அதன் பட்டைகளும் உள்பட்டைகளும் நெய்விளக்குகளின் செவ்வொளியை வாங்கி மின்னத்தொடங்கின. குருதி படிந்த வெண்பல் போல. “இதை எங்கள் நாட்டில் அஸ்வதந்தம் என்கிறார்கள். நாங்கள் அடைந்தவற்றிலேயே மதிப்புமிக்க வைரம் இதுவே. நெடுந்தொலைவில் பெரும்பாலைநிலங்களுக்கு அப்பாலிருக்கும் அபிசீனம் என்னும் காப்பிரிநாட்டிலிருந்து நாங்கள் பெற்ற செல்வம் இது. வல்லமை மிக்க குதிரைகளின் உடைமையாளராக இதை அணிபவர்களை ஆக்கும் வல்லமை இதற்குண்டு என நிமித்திகர் சொல்கிறார்கள்” என்றான் சகுனி.
“ஆம். நாம் வல்லமைபெற்றுவிட்டோம்” என்று விதுரன் சொன்னாள். பீஷ்மர் அந்த உரையாடலை தன் தாடியை நீவியபடி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். சகுனி “நம் வல்லமைகள் அனைத்தையும் மன்னரின் தோள்களாக ஆக்கவேண்டிய காலம் வந்துவிட்டது பேரரசி. காந்தாரம் அதற்காகக் காத்திருக்கிறது” என்றான். மிக எளிதாக அவன் பேசவேண்டிய புள்ளிக்கு வந்துவிட்டதை உணர்ந்த விதுரன் பீஷ்மரின் கண்களை ஒருகணம் நோக்கி மீண்டான்.
சத்யவதி “ஆம். இனி எதையும் நாம் சிந்திக்கவேண்டியதில்லை. அஸ்தினபுரியின் அரியணை என் சிறுமைந்தனுக்காக நெடுங்காலமாகக் காத்திருக்கிறது” என்றாள். “அனைவரும் விரும்பும் வண்ணம் அனைத்தையும் செய்துவிடலாம் சௌபாலரே. நீங்கள் இங்கே இருந்து அவற்றை நடத்தியருளவேண்டும்.” சகுனி புன்னகையுடன் “ஆம் பேரரசி, அது என் கடமை. நான் காந்தாரபுரி நீங்குகையில் அஸ்தினபுரியின் அரியணையில் என் தமக்கை அமர்ந்தபின்னரே மீண்டுவருவேன் என வஞ்சினம் கூறித்தான் கிளம்பினேன்.”
பீஷ்மர் சற்று அசைந்தபோது அவரது நெடிய உடலைத் தாங்கிய பீடம் மெல்லிய ஒலியை எழுப்பியது. சகுனி அவரைத் திரும்பி நோக்க அவர் ஏதும் சொல்லவில்லை. சத்யவதி “நல்ல சொற்களைச் சொன்னீர்கள் சௌபாலரே. மணிமுடி சூட்டப்பட்ட பின்னர்தான் உங்களுக்கு பணிகள் தொடங்கப்போகின்றன. அஸ்தினபுரிக்கு இன்று நிலைப்படையே இல்லை. எட்டு காவல்மையங்களிலாக நிலைகொண்டிருக்கும் சிறிய காவல்படை மட்டுமே உள்ளது. நீங்கள் இருந்து எங்கள் படைகளை ஒருங்கமைக்கவேண்டும்” என்றாள்.
VENMURASU_EPI_101
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
விதுரன் எழுந்து தலைவணங்கி “இளவரசர்கள் வந்திருக்கிறார்கள்” என்றான். சத்யவதி “இளவரசர்களா? மந்தணஅவைக்கு அவர்களை வரும்படி நான் சொல்லவில்லையே” என்றாள். “ஆம், ஆனால் இளைய இளவரசர் இன்னும்கூட காந்தாரரை அறிமுகம் செய்துகொள்ளவில்லை. அவ்வறிமுகத்தை மூத்த இளவரசர் செய்விப்பதே முறையாகும். இங்கே பேரரசியின் முன்னால் அது நிகழலாமே என எண்ணினேன்.” சத்யவதியின் கண்களில் ஒரு சிறிய ஒளி தெரிந்து அணைந்தது. அவள் புன்னகையுடன் “அவ்வாறே ஆகுக” என்றாள்.
விதுரன் கதவைத்திறந்தபோது வியாஹ்ரதத்தர் துணையுடன் திருதராஷ்டிரன் வாசலில் நின்றிருந்தான். “அரசே, இந்த மந்தணஅவைக்கு தாங்கள் வருவது உவகையளிக்கிறது” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “மந்தண அவையா? என்னிடம் நீ அழைப்பதாகத்தானே தளபதி சொன்னார்?” என்றான். “ஆம், நான் இங்கே அழைத்துவரச்சொன்னேன்… வாருங்கள்” என்றான் விதுரன். அவனை விதுரனே கைப்பிடித்து அரிமுகம் துலங்கிய பீடத்தில் அமரச்செய்தான். வியாஹ்ரதத்தர் தலைவணங்கியபோது விதுரன் “அமருங்கள் படைத்தலைவரே” என்றான். அன்றுவரை மந்தண அவைக்குள் அமர்ந்திராத வியாஹ்ரதத்தர் திகைத்தபின் தலை வணங்கி அமர்ந்துகொண்டார்.
திருதராஷ்டிரன் உடலெங்கும் அணிகள் பூண்டு முகபடாமணிந்த பட்டத்து யானை போலிருந்தான். தன் செம்பட்டுச் சால்வையை தரையில் இருந்து இழுத்து மடிமீது போட்டுக்கொண்டு பெரிய கைகளை மடிமீது வைத்துக்கொண்டான். “பேரரசிக்கும் பிதாமகருக்கும் காந்தாரருக்கும் தலைவணங்குகிறேன். தங்களுடன் அவையமர்வது என்னை பெருமைப்படுத்துகிறது” என்றான். சத்யவதி “உன்னைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம் தார்த்தா” என்றாள்.
விதுரன் எழுந்து வாயிலைத் திறந்தபோது தீர்க்கவியோமருடன் பாண்டு நின்றுகொண்டிருந்தான். “இளையமன்னருக்கு மந்தண அவைக்கு நல்வரவு சொல்கிறேன்” என்றான் விதுரன். “இங்கே வருவதாக என்னிடம் சொல்லப்படவில்லை. நான் அவைக்குரிய ஆடைகள் அணியவில்லை” என்றான் பாண்டு. “ஆம், ஆனால் இது மந்தண அவை. இங்கே உடைநெறிகளேதுமில்லை. வருக” என விதுரன் அவனை உள்ளே அழைத்து அமரச்சொன்னான். தீர்க்கவியோமரிடம் “அமைச்சர்களும் தளகர்த்தர்களும் வந்துவிட்டார்களென்றால் அனைவரும் மன்றமரலாமே” என்றான்.
சிறு திகைப்புடன் தீர்க்கவியோமர் தலைவணங்கினார். அவரும் விப்ரரும் லிகிதரும் சோமரும் வைராடரும் சத்ருஞ்சயரும் உக்ரசேனரும் உள்ளே வந்து பீடங்களில் அமர்ந்துகொண்டனர். சகுனி அவர்கள் ஒவ்வொருவரின் வணக்கத்தையும் ஏற்று தலைதாழ்த்தினான். பீஷ்மர் அசையாமல் அனைத்தையும் பார்த்தபடி சுடர்கள் அசையும் விழிகளுடன் அமர்ந்திருந்தார்.
“அரசே, தங்கள் இளையவருக்கு காந்தாரரை தாங்கள்தான் அறிமுகம் செய்துவைக்கவேண்டும்” என்றான் விதுரன். “நானா…? ஆம்” என முனகியபடி திருதராஷ்டிரன் எழுந்தான். “பாண்டு… எங்கே இருக்கிறாய்?” பாண்டு எழுந்து திருதராஷ்டிரன் அருகே சென்று அவன் கையைப்பற்றி “மூத்தவரே இங்கே” என்றான். “சௌபாலரே இவன் என் தம்பி. என் குருதி. இந்நாட்டின் இளையமன்னன்” என்றான் திருதராஷ்டிரன். பாண்டுவின் வலக்கையைப் பற்றி அதை இழுத்து சகுனியை நோக்கி நீட்டி “அவன் கைகளைப் பற்றிக்கொள்ளுங்கள். இனி எனக்கு மட்டுமல்ல இவனுக்கும் தாங்கள்தான் காவல்” என்றான்.
சகுனி பாண்டுவின் கைகளைப்பற்றிக்கொண்டான். திருதராஷ்டிரன் “தம்பி, அவர் கைகளைப்பற்றிக்கொள். இந்நாடும் நம் வாழ்வும் இனி இவர் கைகளில் திகழ்வதாக” என்றான். பாண்டு “ஆம் மூத்தவரே, தங்கள் ஆணை, தங்கள் அருள்” என்றான். சகுனி புன்னகையுடன் “அஸ்தினபுரியின் இளையமன்னருக்கு காந்தாரத்தின் வாழ்த்துக்கள். மாமன்னர் சுபலருக்காகவும் மன்னர் அசலருக்காகவும் என் முடி தங்களைப் பணிகிறது” என்றபின் மேலும் விரிந்தபுன்னகையுடன் “விசித்திரவீரியரின் இறுதிமைந்தர் இருக்கையில் தங்கள் இருவருக்கும் தெய்வங்களின் துணைகூடத் தேவையில்லை அரசே” என்றான்.
சத்யவதி சிரித்தபடி “ஆம் உண்மை… இவர்களை எண்ணி நான் அடையும் கவலை எல்லாம் இவனை நோக்குகையில் நீங்குகிறது. இவனுடைய மதியாலும் அறத்தாலும் இந்நாடு வாழும்” என்றாள். விதுரன், “நற்சொற்களால் என்னை வாழ்த்துகிறீர்கள் காந்தாரரே. நான் என்றும் என் தமையன்களின் ஏவலன்” என்றான். சத்யவதி “ஆம், ராகவ ராமனின் இளைய தம்பியர் அவ்வண்ணமே இருந்தனர் என்கிறது புராணம்” என்றாள். அவர்கள் பீடங்களில் அமர்ந்துகொண்டனர்.
திருதராஷ்டிரன் சற்று நிலைகொள்ளாதவனாக இருந்தான். “விதுரா, மூடா எங்கிருக்கிறாய்? என் அருகே வந்து நிற்கவேண்டுமென எத்தனைமுறை உன்னிடம் சொல்லியிருக்கிறேன்?” என கீழுதட்டை நீட்டி தலையைத் திருப்பிச் சொன்னான். “அரசே, நான் தங்களருகேதான் அமர்ந்திருக்கிறேன்” என்றான் விதுரன். சத்யவதி புன்னகையுடன் “நான் பேசவந்தது அப்படியே நிற்கிறது. அஸ்தினபுரியின் அரியணை காத்திருப்பதைப்பற்றிச் சொன்னேன்” என்றாள். “ஆம், மூத்த இளவரசர் முடிசூடும் நாளை நாம் இப்போதே முடிவுசெய்துவிடுவதே நன்று” என்றான் சகுனி.
விதுரன் “இளையவரின் கருத்தையும் நாம் கேட்டுக்கொள்ளலாமே” என்றான். பாண்டு புன்னகையுடன் “என் கருத்தா? முதல்முறையாக அது கேட்கப்படுகிறது இல்லையா?” என்றான். மேலும் சிரிப்பு விரிய “பேரரசியே, பிதாமகரே, என்னுடைய கருத்தென்பது எப்போதும் என் தம்பியின் கருத்தேயாகும். அவன் சொல்லும் சொற்களும் சொல்லவிருக்கும் சொற்களும் என்னுடையவை” என்றான். சத்யவதி சிரித்தபடி “தெளிவாகச் சிந்திக்கிறாய் பாண்டு” என்றாள்.
“இளவரசே, இந்தநாட்டின் இளையமன்னர் நீங்கள். இளையவரின் கடமையையும் உரிமையையும் இரண்டாகவே நம் நூல்கள் பகுத்துவைத்திருக்கின்றன. மூத்தவரின் மணிமுடியைக் காத்து நிற்பதும் அவரது எண்ணங்களுக்கு கட்டுண்டிருப்பதும் குலமுறைப்படி தங்கள் கடமை. ஆனால் இந்நாட்டின் நேர்பாதி நிலம் தங்களுக்கு உரிமை. மூத்தவர்மீது நீங்கள் மனவேறுபாடுகொண்டீர்களென்றால் எப்போதுவேண்டுமென்றாலும் உங்கள் நிலத்தை நீங்கள் அவரிடம் கோரிப்பெறமுடியும். தன்னாட்சி புரியவும் முடியும். அதற்காக தமையனிடம் போர்புரிவதற்கும் ஷத்ரியமுறை ஒப்புக்கொள்கிறது.”
பாண்டு நகைத்தபடி “பாதி நிலமா? ஒன்றுசெய்யலாம் தம்பி. நிலத்தை பகலில் தமையன் ஆளட்டும். இரவில் நான் ஆள்கிறேன்…எனக்கு இரவில்தான் கண்கள் தெளிவாக உள்ளன” என்றான். சத்யவதி “இதென்ன விளையாட்டு? நாம் மணிமுடிசூடுவதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றாள். “ஆம்… விதுரா மூடா, என்ன விளையாடுகிறாய்? ஒரே அடியில் உன் மண்டையை உடைத்துவிடுவேன்” என்றான் திருதராஷ்டிரன்.
“அனைத்தும் விளையாட்டுதானே?” என்றான் விதுரன். “இளவரசே, உங்களுக்குரிய பாதிநிலத்துக்கும் மூத்தவர் மன்னராவதை நீங்கள் ஏற்கிறீர்களா?’ பாண்டு நகைத்து “இந்த பாரதவர்ஷத்துக்கே அவர் மன்னராகவேண்டும் என்று நினைக்கிறேன்” என்றான். “அவ்வண்ணம் நீங்கள் எண்ணினீர்களென்றால் உங்கள் நிலத்தை மூத்தவருக்கு முறைப்படி விருப்பக்கொடையாகக் கொடுக்கலாமே” என்றான் விதுரன்.
அவன் எங்கு வந்திருக்கிறான் என்பதை அப்போதுதான் சத்யவதியும் அமைச்சர்களும் புரிந்துகொண்டனர். “நீ என்ன பேசுகிறாயென்று தெரிகிறதா? தெய்வத்தைக் கிள்ளி தெய்வத்துக்கே படைப்பதுபோல அவரது நாட்டை நான் அவருக்கே கொடையளிக்கவேண்டுமா? இதென்ன மூடத்தனம்?” என்றான் பாண்டு. “ஆம்… ஆனால் இது ஒரு விளையாட்டு. ஆடத்தொடங்கிவிட்டோம். ஆடிமுடிப்போமே. இளவரசே, நீங்கள் உங்கள் தமையனிடம் பரிசில்பெற்றுக்கொண்டு இந்த நாட்டில் உங்களுக்குரிய பாதியை உங்கள் தமையனுக்கு நீரளித்துக் கொடுக்கிறீர்கள்…”
விதுரன் அந்த அஸ்வதந்த வைரத்தை எடுத்தான். “காந்தாரத்தின் கருவூலத்துக்கு நிகரான வைரம் இது. பல்லாயிரம் புரவிகளுக்கு நிகரானது. அஸ்தினபுரியின் கருவூலத்தை இது சற்றுமுன்னர்தான் வந்தடைந்தது. இதை விலையாக அளித்து உங்களிடமிருந்து மூத்த இளவரசர் தங்கள் பங்கான நாட்டை பெற்றுக்கொள்கிறார். மண்ணுக்கு மணி விலையாகுமென நூல்கள் சொல்கின்றன” என்றான். “அரசே, எழுந்து நில்லுங்கள்”
“என்ன இது? எனக்கு ஒன்றுமே புரியவில்லை…” என முனகியபடி திருதராஷ்டிரன் எழுந்து நின்றான். “என் தம்பியிடமிருந்து நான் ஏன் நிலத்தைப் பெறவேண்டும்? ஓங்கி ஓர் அறைவிட்டால் அவனே நிலத்தை எனக்குக் கொடுக்கப்போகிறான்… விதுரா, நீ பேரரசியையும் பிதாமகரையும் விளையாட்டில் சேர்த்திருக்கிறாயா?” விதுரன் “கைநீட்டுங்கள் அரசே” என்றான். திருதராஷ்டிரன் கைநீட்ட அந்த தங்கப்பேழையை அவன் கைகளில் கொடுத்தான். “இதை தங்கள் தம்பிக்கு அளியுங்கள்”
பாண்டு எழுந்து நின்று இருகைகளாலும் அதைப்பெற்றுக்கொண்டான். “சொல்லுங்கள் அரசே, விலைமதிப்பற்ற இந்த வைரத்தை அளித்து உன் மண்ணை நான் விலையாகப் பெற்றுக்கொள்கிறேன்” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் அதை தெளிவில்லாமல் முணுமுணுத்தான். “இளவரசே கைநீட்டுங்கள்” என்றான் விதுரன். பாண்டு கைநீட்ட அங்கிருந்த குவளைநீரை எடுத்து அவன் இடக்கையில் அளித்தான். விதுரன் “என் நிலத்தை இம்மணிக்கு ஈடாக என் தமையனுக்குக் கையளிக்கிறேன் என்று சொல்லி நீரூற்றுங்கள்” என்றான்.
பாண்டு நீரை ஊற்றியபடி தெளிவான குரலில் “என் தமையனின் பாதங்களில் என் பங்கு நிலத்தை இம்மணிக்கு ஈடாக வைக்கிறேன். அவர் நாடும் மங்கலங்களும் பொலியட்டும். அவர் புகழ் பாரதவர்ஷமெங்கும் பரவட்டும். அவரது குலங்கள் பெருகட்டும். அவர் விரும்பியதனைத்தையும் அடைந்து நிறைவுறட்டும்” என்றான்.
திருதராஷ்டிரன் “இதென்ன நாடகம். அவன் ஒன்றும் தெரியாத மடையன். அவனை அழைத்துவந்து…” என்று முனகியபடி சொன்னான். பாண்டு கைகூப்பியபடி குனிந்து திருதராஷ்டிரனின் பாதங்களைத் தொட்டு “தங்கள் பாதங்களில் நான் அடைக்கலம் மூத்தவரே” என்றான்.
“எழுந்திரு… டேய் எழுந்திரு… இதென்ன, உனக்கு இனிமேல்தானா நான் வாழ்த்துச் சொல்லவேண்டும்? விதுரா மூடா…நீ இப்போது என் கையருகே வந்தாயென்றால் உன் இறுதிக்கணம் அது” என்று திருதராஷ்டிரன் திரும்பிப்பார்த்தான். கைகளை ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டு “எங்கே நிற்கிறாய்?” என்றான்.
விதுரன் “அரசே அமர்ந்துகொள்ளுங்கள்… பேரரசி முடிசூட்டுநாளை அறிவிக்கவிருக்கிறார்கள்” என்றான். “நீ முதலில் என் கையருகே வா… உன்னை ஒரு அடியாவது அடிக்காமல் நான் அமையமாட்டேன்.” விதுரன் விலகி நின்று சிரிக்க சத்யவதியும் சிரித்து தன் வாயை கையால் மறைத்துக்கொண்டாள்.
சகுனி “ஆக, இனி எந்தத் தடையுமில்லை. பேரரசி நாளை அறிவித்துவிடலாம்” என்றான். சத்யவதி பீஷ்மரிடம் “தேவவிரதா, நீ என்ன நினைக்கிறாய்?” என்றாள். “ஆம் அறிவித்துவிடவேண்டியதுதான்…” என்றார் பீஷ்மர்.
சத்யவதி “அமைச்சர்களே வரும் இளவேனில் முடிவுக்குள் நிமித்திகர்களிடம் நாள்குறிக்கச் சொல்லுங்கள்” என்றாள். “அஸ்தினபுரியின் அரியணையில் என் சிறுமைந்தன் திருதராஷ்டிரன் அமரவேண்டுமென நான் ஆணையிடுகிறேன்!” அமைச்சர்கள் ஒரே குரலில் “அவ்வண்ணமே ஆகுக” என முழங்கினர். பீஷ்மரும் சகுனியும் பாண்டுவும் கைகூப்பி தலைவணங்கினார்கள்.
விதுரன் திருதராஷ்டிரன் அருகே நெருங்கி “அரசே எழுந்து பேரரசியின் கால்களைப் பணியுங்கள்” என்றான். “எங்கே?” என்றான் திருதராஷ்டிரன். “உங்கள் முன்னால்” திருதராஷ்டிரன் எழுந்து தன் பெரிய கருங்கைகளை நீட்டியபடி முன்னால் வர சத்யவதி எழுந்து அவனைப்பற்றிக்கொண்டாள். அவன் குனிந்து அவள் பாதங்களைத் தொட அவள் கண்விளிம்பில் கண்ணீருடன் அவனை தன்னுடன் சேர்த்து தழுவிக்கொண்டாள். அவன் மார்புக்குவையில் அவள் முகம் அழுந்தியது. “நீ அனைத்துச் செல்வங்களையும் வெற்றியையும் சிறப்பையும் அடைந்து நிறைவாழ்வு வாழவேண்டும் மகனே” என அவள் சொல்லி முடிப்பதற்குள் தொண்டை அடைத்தது. உதடுகளை இறுக்கிக்கொண்டாள். கண்களை மூடி இமைப்பீலிகளை விழிநீர் நனைக்க அவன் மார்பில் முகம் சேர்த்தாள்.
திருதராஷ்டிரன் தன் பெரிய விரல்களால் அவள் முகத்தைத் தொட்டான். அவள் தலையையும் தோள்களையும் கழுத்தையும் வருடினான். அவனால் ஏதும் பேசமுடியவில்லை. அவன் சதைக்கோள விழிகள் நீருடன் ததும்பின. உதடுகள் நெளிந்தன.
விதுரன் “அரசே, பிதாமகர் கால்களையும் பணியுங்கள்” என்று அவன் கைகளைப்பற்றி திருப்பினான். திருதராஷ்டிரன் பீஷ்மரின் கால்களை பணியப்போக அவர் அதற்கு முன்னரே அவனை அள்ளி தன் மார்புடன் அணைத்து இறுக்கிக்கொண்டார். ஒரு சொல்கூட இல்லாமல் நடுங்கும் கைகளின் அணைப்பாலேயே அவனை வாழ்த்தினார்.
விதுரன் “லிகிதரே, முதலில் நிமித்திகர் நாள்குறிக்கட்டும். கணிகர் தருணம்குறிக்கட்டும். நாள்முடிவானதும் பாரதவர்ஷமெங்கும் செய்தி செல்லட்டும். வியாஹ்ரதத்தர் பெரிய அரசியிடமும் சோமர் சிறிய அரசியிடமும் நேரில்சென்று செய்தியை அறிவியுங்கள்” என்றான். அவர்கள் தலைவணங்கி “ஆணை” என்றார்கள்.
அவர்கள் வெளியேறியதும் விதுரன் தலைவணங்கினான். “பேரரசியும் காந்தாரரும் பிதாமகரும் மேலும் உரையாடலாம். அரசரை நான் அந்தப்புரம் சேர்க்கிறேன்” என்றான். “ஆம்… அவன் மிகவும் கிளர்ச்சியுற்றிருக்கிறான்” என்றாள் சத்யவதி.
திருதராஷ்டிரனை வெளியே கைப்பிடித்து அழைத்து வந்தான் விதுரன். கண்களில் இருந்து கண்ணீர் வழிய அவன் விம்மிக்கொண்டிருந்தான். “வியாஹ்ரதத்தரே, அரசரை அவர் அன்னையிடம் சேருங்கள்” என்று விதுரன் ஆணையிட்டான். அவர் வந்து திருதராஷ்டிரன் கைகளைப் பற்றிக்கொண்டார். திருதராஷ்டிரன் தலையை வான்நோக்கி சற்றே தூக்கி கண்ணீர் வழியும் முகத்துடன் நடந்து சென்றான்.
பாண்டு விப்ரருடன் வெளியே வந்தான். கதவு மூடுவதை திரும்பிப்பார்த்தபின் விதுரனை நோக்கி புன்னகைசெய்து “ஒவ்வொரு சொல்லிலும் நீ ஒளிவிடுகிறாய் தம்பி… அனைத்தையும் கொண்டுசென்று சேர்த்துவிட்டாய்” என்றான்.
“என் கடமை” என்றான் விதுரன். பாண்டு “இந்த வைரத்தை வைத்து நான் என்னசெய்யப்போகிறேன்? எனக்கு பாவைகளை வைத்து விளையாடுவதில் இனி ஆர்வமில்லை. இந்த வைரத்தை உனக்கு அளிக்கிறேன்” என்று அதை நீட்டினான். “மூத்தவரே” என விதுரன் ஏதோ சொல்லவர அதைத் தடுத்து “விலைமதிப்பற்ற ஒன்றை உனக்களிக்கவேண்டுமென நினைத்தேன். நான் உன் மீது கொண்டுள்ள பேரன்புக்கு அடையாளமாக என்றும் திகழும் ஒன்றை… இது அவ்வாறு அமையட்டும்” என்றான் பாண்டு.
விதுரன் வைரத்தை வாங்கிக்கொண்டு கண்களில் ஒற்றிக்கொண்டான். “மூத்தவரே தங்கள் அன்புக்கு நிகராக நான் எதையும் எண்ணுபவன் அல்ல” என்றபின் பெருமூச்சுடன் தலைவணங்கினான். “மீண்டும் சந்திப்போம் தம்பி. அந்தப்புரத்தில் அரியதோர் நாடகம் நிகழவிருக்கிறது. இன்றிரவு ஒன்பது சுவைகளுக்கும் குறையிருக்காது” என்று சிரித்தபின் பாண்டு நடந்துசென்றான்.