அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

4/28/14

பகுதி பத்து : அனல்வெள்ளம்[ 2 ]

பகுதி பத்து : அனல்வெள்ளம்[ 2 ]
சகுனியின் படை பெருக்கெடுத்து நகர்நுழைவதை விதுரன் முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படாமல் நோக்கி நின்றான். முதலில் பதினெட்டு யானைகள் பொன்வேய்ந்த முகபடாமும் பொன்னூல் பின்னிய அணிபடாமும் தொங்கும் மணிச்சரடுகளும் அணிந்தவையாக, செம்மணிக்குடை பிடித்த காவலன் மேலே அமர்ந்திருக்க, சங்கிலி குலுங்கும் ஒலியுடன் காலெடுத்துவைத்து வந்தன. ஒவ்வொன்றிலும் பொன்னணிசெய்த பெரிய பித்தளைப்பேழைகள் இருந்தன. அதன்பின் முந்நூறு ஒட்டகங்கள் அரிக்குஞ்சலங்கள் அணிந்த கழுத்துக்களுடன், கடிவாளம் இழுபட தலைதாழ்த்தியும், பந்தங்களைக் கண்டு அஞ்சி தலை தூக்கியும் கழுத்துக்கள் விதவிதமாக வளைய இரும்படிக்கூடம் போல குளம்புகளைத் தூக்கி வைத்து கனத்த தோல்பொதிகளுடன் வந்தன.
அதன்பின் குதிரைகள் இழுத்த ஆயிரத்தெட்டு பொதிவண்டிகள் இருநிரைகளாக வந்தன. ஒவ்வொன்றும் தோற்கூரையிடப்பட்டு காந்தாரத்தின் கொடிபறக்க, கனத்த சகடங்கள் மண்ணின் செம்புழுதியை அரைக்க, குடத்தில் உரசும் அச்சுக்கொழு ஒலிஎழுப்ப வந்தன. அதன்பின் மாடுகள் குனிந்து விசைகூட்டி இழுத்த ஆயிரத்தெட்டு பொதிவண்டிகள் பின்பக்கம் வீரர்களால் தள்ளப்பட்டு உள்ளே நுழைந்தன. ஒவ்வொன்றிலும் விலைமதிப்புள்ள செல்வங்கள் இருப்பது வெளித்தெரியும்படி வெண்கலத்தாலும் தோலாலும் அணிசெய்யப்பட்டு காந்தாரக் கருவூலத்தின் ஓநாய் முத்திரை கொண்ட கொடி பறந்தது.
பல்லாயிரம் பந்தங்களின் தழல்கள் குழைந்தாட நெருப்பாறு இறங்கியதுபோல சகுனியின் படை உள்ளே நுழைந்தபோதே நகர்மக்கள் திகைத்து சொல்லிழந்துவிட்டிருந்தனர். யானைகளுக்குப்பின் வந்த ஒட்டகவரிசை முடியும்போது விடிந்துவிட்டது. அதன்பின் குதிரைவண்டிகள் உள்ளே நுழையத்தொடங்கின. காலைவெயிலில் வண்டிக்குடைகளில் இருந்த பித்தளைப்பட்டைகள் பொற்சுடர்விட்டன. ஓடித்தேய்ந்த சக்கரப்பட்டைகள் வாள்நுனியென ஒளிர்ந்தன. குதிரைகளின் வியர்த்த உடல்களில் இருந்து எழுந்த உப்புத்தழை வாசனை அப்பகுதியை நிறைத்தது.
அது முடியவிருக்கையில் மீண்டும் மாட்டுவண்டிவரிசைகள் வந்தபோது நகர்மக்கள் மெல்ல உடல் தொய்ந்து ஒருவர்மேல் ஒருவர் சாய்ந்து நின்றனர். பலர் அமர்ந்துகொண்டனர். ஒருவரிடமிருந்தும் ஓசையேதுமெழவில்லை. தொடக்கத்தில் அஸ்தினபுரியின் சமந்த நாட்டின் செல்வத்தை தன்னெழுச்சியுடன் பார்த்த நகர்மக்கள் பின்னர் காந்தாரத்தின் செல்வ வளத்தின் முன் அஸ்தினபுரி ஒரு சிற்றரசே என்று எண்ணத்தலைப்பட்டனர். அவர்களின் கண்முன் சென்றுகொண்டிருந்த பெருஞ்செல்வம் எந்த ஒரு கங்கைக்கரை நாட்டிலுமுள்ள கருவூலத்தையும்விடப்பெரியது.
மாட்டுவண்டிகளின் நிரைமுடிந்தபோது அத்திரிகளின் நிரை தொடங்கியது. லிகிதர் பொறுமை இழந்து “இது திட்டமிட்ட விளையாட்டு” என்றார். விதுரன் வெறுமே திரும்பிநோக்கினான். லிகிதர் “எண்ணிப்பாருங்கள் அமைச்சரே, இதுவரை காணிக்கைப்பொருட்களை முன்னால் அனுப்பி அரசர்கள் பின்னால் வரும் வழக்கம் உண்டா?” என்றார். விதுரன் புன்னகைசெய்தான். “இந்தச்செல்வத்தை முழுக்க நாம் நின்று பார்க்கவேண்டுமென ஆசைப்படுகிறார் சகுனி. எத்தனை ஆணவம்! என்ன ஒரு சிறுமை!” விதுரன் “இதில் என்ன சிறுமை உள்ளது? செல்வத்தை நகர்மக்களுக்குக் காட்டுவதன் வழியாக அவர் இந்நாட்டைக் கைப்பற்றுவதை உணர்த்த முனைகிறார். இதைவிடச்சிறந்த மதிசூழ் செய்கையை என்னால் உய்த்துணர இயலவில்லை” என்றான்.
“நாட்டைக்கைப்பற்றுவதா?” என்றார் லிகிதர். “இத்தனை பெருஞ்செல்வத்துடன் வருபவர் எளிதில் திரும்பிச்செல்வாரா என்ன?” என்றான் விதுரன். லிகிதர் திகைப்புடன் தன் முன் கலங்கலான நீரோடும் நதிபோல சென்றுகொண்டிருந்த பொதியேந்திய அத்திரிகளின் நிரையை திறந்த வாயுடன் நோக்கினார். “அஸ்தினபுரியின் களஞ்சியம் இச்செல்வத்தைச் சேர்த்தால் இருமடங்காகிவிடும்!” என்றார். “ஆம், இச்செய்தி இன்று மாலைக்குள் அனைத்து ஷத்ரியர்களுக்கும் சென்றுசேரும். அவர்கள் இதை அஸ்தினபுரியின் போர்முழக்கமாக மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். பாரதவர்ஷத்தில் போர் தொடங்கிவிட்டது லிகிதரே!”
வியாஹ்ரதத்தர் அருகே வந்து “அமைச்சரே, போர் அறைகூவலுக்கு நிகராகவல்லவா இருக்கிறது?” என்றபடி தன் பெரிய மீசையை நீவினார். “ஆம்… போர்தான்” என்றான் விதுரன் நகைத்தபடி. “உமது வாள்களின் துரு இந்த பொன்னின் ஒளியால் அகலவேண்டும்!” வியாஹ்ரதத்தர் உரக்கச்சிரித்தார்.
காலைவெயில் நிமிர்ந்து மேலெழுவதுவரை அத்திரிகள் சென்றன. அதன்பின்னர்தான் காந்தாரத்தின் கொடியுடன் முதன்மைக் கொடிவீரனின் ரதம் வருவது தெரிந்தது. விதுரன் “எத்தனை ரதங்கள்?” என்றான். “ஆயிரத்தெட்டு என்றார்கள்” என்றார் லிகிதர்.
முதல் நூறு ரதங்களில் மங்கலத்தாசிகள் முழுதணிக்கோலத்தில் பொற்தாலங்கள் ஏந்தி நின்றிருந்தனர். தொடர்ந்த நூறு ரதங்களில் சூதர்கள் தங்கள் இசைக்கருவிகளை மீட்டியபடி நின்றிருந்தனர். அடுத்த நூறு ரதங்களில் மன்றுசூழ்நர் அமர்ந்திருந்தனர். அதன்பின்னர்தான் அரசகுலத்தவர் வரும் மாடத்தேர்கள் வந்தன. காந்தாரத்தின் ஈச்ச இலை இலச்சினைகொண்ட கொடி பறக்கும் மும்மாடப் பெருந்தேர் கோட்டைவாயிலை நிறைப்பதுபோல உள்ளே நுழைந்தது கரியபெருநாகம் மணியுமிழ்வதுபோலத் தோன்றியது. பொன்னொளி விரிந்த மாடக்குவைகளுக்குக் கீழே செம்பட்டுப் பாவட்டாக்கள் காற்றில் நெளிய அது வானில் சென்ற பேருருவ தெய்வம் ஒன்றின் காதிலிருந்து உதிர்ந்த குண்டலம் போலிருந்தது.
பன்னிரு குதிரைகளால் இழுக்கப்பட்ட மாடத்தேர் நின்றதும் அதற்குப்பின்னால் வந்த தேர்களையும் வண்டிகளையும் நிற்கச்சொல்லி கொடிகள் ஆட்டப்பட்டன. பல்லாயிரம் வண்டிகளும் புரவிகளும் நிற்கும் ஓசை கேட்டுக்கொண்டே விலகிச்சென்றது. விப்ரர் கையைக் காட்டியதும் அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டைமேலிருந்த பெருமுரசுகள் முழங்கத்தொடங்கின. அவ்வொலி கேட்டு நகர் முழுக்க இருந்த பலநூறு முரசுகள் ஒலியெழுப்பின. சகுனியை வரவேற்கும் முகமாக அரண்மனைக்கோட்டைமுகப்பில் தொங்கிய காஞ்சனம் என்னும் கண்டாமணி இனிய ஓசையை எழுப்பத்தொடங்கியது.
VENMURASU_EPI_99_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
தேர்வாயிலைத் திறந்து சகுனி வெளியே இறங்கினான். மார்பில் பொற்கவசமும், தோள்களில் தோளணிகளும், கைகளில் வைரங்கள் ஒளிவிட்ட கங்கணங்களும், தலையில் செங்கழுகின் சிறகு சூட்டப்பட்ட மணிமுடியும், காதுகளில் அனல்துளிகளென ஒளிசிந்திய மணிக்குண்டலங்களும், கழுத்தில் துவண்ட செம்மணியாரமும், செவ்வைரப்பதக்கமாலையும் அணிந்து இளஞ்செந்நிறப்பட்டாடை உடுத்தி வந்த அவனைக்கண்டதும் அஸ்தினபுரியின் அனைத்து மக்களும் அவர்களை அறியாமல் வாழ்த்தொலி எழுப்பினர். அவன்மேல் மலர்களும் மஞ்சளரிசியும் அலையலையாக எழுந்து வளைந்து பொழிந்தன.
விதுரன் வணங்கியபடி முன்னால் சென்று சகுனியை எதிர்கொண்டான். இருபக்கமும் அமைச்சர்களும் தளபதிகளும் சென்றனர். விதுரன் தன் அருகே வந்த சேவகனின் தாலத்தில் இருந்து பசும்பால் நுரையுடன் நிறைந்த பொற்குடத்தை எடுத்து சகுனியிடம் நீட்டி “அஸ்தினபுரியின் அமுதகலசம் தங்களை ஏற்று மகிழ்கிறது இளவரசே” என்றான். சகுனி உணர்ச்சியற்ற கண்களுடன் உதடுகள் மட்டும் விரிந்து புன்னகையாக மாற “காந்தாரம் சிறப்பிக்கப்பட்டது” என்று சொல்லி அதைப் பெற்றுக்கொண்டான்.
“பேரரசியாரும் பிதாமகரும் இன்று மாலை தங்களை அவைமண்டபத்தில் சந்திப்பார்கள்” என்றான் விதுரன். சகுனி தலைவணங்கி “நல்வாய்ப்பு” என்றான். விதுரன் “அஸ்தினபுரியின் அமைச்சர்களனைவரும் இங்குள்ளனர்” என்றான். களஞ்சியக்காப்பாளராகிய லிகிதரும், வரிகளுக்குப் பொறுப்பாளராகிய சோமரும், ஆயுதசாலைக்கு அதிபராகிய தீர்க்கவ்யோமரும், எல்லைக்காவலர் தலைவரான விப்ரரும், யானைக்கொட்டடிக்கு அதிபராகிய வைராடரும் வந்து சகுனிக்கு வாழ்த்தும் முகமனும் சொல்லித் தலைவணங்கினர். தளகர்த்தர்களாகிய உக்ரசேனரும், சத்ருஞ்சயரும், வியாஹ்ரதத்தரும் சகுனியை அணுகி தங்கள் வாள்களை சற்றே உருவி தலைதாழ்த்தி வணங்கினர்.
சகுனி அவர்களனைவருக்கும் முகமனும் வணக்கமும் சொல்லித் தலைவணங்கினான். “இளவரசரே, தங்களை அழைத்துச்செல்ல முறைப்படி அரசரதம் வந்துள்ளது. அதில் ஏறி நகர்வலம் வந்து அரண்மனைபுகுதல் முறை” என்றான் விதுரன். திரும்பி விதுரன் சுட்டிக்காட்டிய அமைச்சர்களுக்கான ரதத்தை நோக்கிய சகுனி மெல்லிய சலிப்பு எப்போதும் தேங்கிக்கிடந்த விழிகளுடன் “இவ்வகை ரதத்திலா இங்கு அரசர்கள் நகருலாவுகின்றனர்?” என்றான். விப்ரர் “அரச ரதம் வேறு” என்றார். சகுனி “காந்தார நாட்டில் மன்னர்கள் அணிரதத்தில் ஏறியே நகருலா செல்வார்கள். அவர்களை அரசகுலத்தோர் மட்டுமே வந்து எதிரீடு செய்து அழைத்துச் செல்வார்கள்” என்றான்.
விதுரன் தலைவணங்கி “இங்குள்ள இளவரசர்கள் இருவரும் சற்றே உடற்குறை கொண்டவர்களென தாங்களறிவீர்கள்” என்றான். “ஆம், ஆனால் பிதாமகர் பீஷ்மர் இன்னும் முதுமையை அடையவில்லை” என்ற சகுனி “நான் என் அணிரதத்திலேயே நகர் நுழைகிறேன்” என்றான். “தங்கள் ஆணை அதுவென்றால் ஆகுக!” என்றான் விதுரன். வியாஹ்ரதத்தரிடம் சகுனி “படைத்தலைவரே நீர் இங்கே நின்று தொடர்ந்து வரும் என் படைகளை நான்காகப்பிரித்து நகரெங்கும் தங்கவையுங்கள். கருவூல அதிகாரி யார்?” என்றான்.
வியாஹ்ரதத்தர் விதுரனை அரைக்கண்ணால் பார்த்தபின் “ஆணை இளவரசே” என்றார். லிகிதர் “கருவூலம் என் காப்பு” என்றார். “இங்கே வந்துள்ள செல்வத்துடன் எங்கள் கருவூலநாதர் சுருதவர்மரும் வந்துள்ளார். அவருடன் இணைந்து அனைத்துப்பொருட்களையும் கருவூலக்கணக்குக்குக் கொண்டுசெல்லுங்கள். நாளை மறுநாள் எனக்கு அனைத்துக் கணக்குகளும் ஓலையில் வந்துசேர்ந்தாகவேண்டும்” என்றான் சகுனி. “ஆம், ஆணை” என்று லிகிதர் தலைவணங்கினார்.
“இங்கே ஒட்டகங்களுக்காக தனியதிகாரிகள் எவரேனும் உள்ளனரா?” என்று சகுனி கேட்டான். “இல்லை. யானைக்கொட்டிலுக்கு அதிபராக வைராடர் இருக்கிறார்.” சகுனி தன் தாடியை வருடியபடி “வைராடரே, ஒட்டகங்கள் ஒருபோதும் மழையில் நனையலாகாது. ஈரத்தில் படுக்கக்கூடாது. ஒருநாளைக்கு ஒருமுறைக்குமேல் நீர் அருந்தலாகாது. என் ஒட்டகக்காப்பாளர் பிரசீதர் வந்துள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றுங்கள்” என்றபின் விதுரனிடம் “செல்வோம்” என்றான்.
சகுனியின் ரதத்தைத் தொடர்ந்து அவனுடைய அமைச்சர்களும் படைத்தலைவர்களும் வந்தனர். அவர்கள் கோட்டை முகப்பிலேயே நின்றுவிட சகுனியும் மங்கலப்படைகளும் அஸ்தினபுரியின் அரசவீதிகள் வழியாக அணியூர்வலம் செய்தனர். உப்பரிகைகளில் கூடி நின்ற நகர்ப்பெண்கள் மஞ்சளரிசியும் மலரும் தூவி அவர்களை வாழ்த்தி கூவினர். அரண்மனை வாயிலில் அஸ்தினபுரியின் அணிப்பரத்தையரும் இசைச்சூதரும் வைதிகரும் கூடி நின்று அவனை வரவேற்றனர். வைதிகர் நிறைகுடநீர் தெளித்து அவனை வாழ்த்த பரத்தையர் மஞ்சள்நீரால் அவன் பாதங்களைக் கழுவி மலர்தூவி அரண்மனைக்குள் ஆற்றுப்படுத்திச் சென்றனர்.
சகுனி தன் மாளிகைக்குள் சென்றதும் விதுரன் தன் ரதத்தில் மீண்டும் கோட்டைமுகப்புக்குச் சென்றான். ஒரு காவல்மாடத்திலேறி நோக்கியபோது சகுனியின் பெரும்படை புதுமழைவெள்ளம் போல பெருகிவந்து பல கிளைகளாகப்பிரிந்து நகரை நிறைத்துக்கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. வடக்கு திசையில் இருந்த கருவூலக்கட்டடங்களுக்கு முன்னால் பெருமுற்றத்தில் சகுனியுடன் வந்த யானைகளும் ஒட்டகங்களும் குதிரைகளும் பொதிவண்டிகளும் ஒன்றையொன்று முட்டி நெரித்துக்கொண்டு நின்றன.
விதுரன் கீழிறங்கி கோட்டைமுகப்புக்குச் சென்றான். சகுனியின் படைகள் அப்போதும் உள்ளே நுழைந்துகொண்டே இருந்தன. கோட்டைமீது ஏறி மறுபக்கம் நோக்கியபோது படைகளின் கடைநுனி தெரியவில்லை. சிந்தனையுடன் அவன் இறங்கி கீழே வந்தபோது சத்ருஞ்சயர் அவனை நோக்கி புரவியில் வந்தார். “அமைச்சரே, நகரமே நிறைந்து அசைவிழந்து விட்டது. அனைத்து தெருக்களிலும் படைகளும் வண்டிகளும் நெரித்து நிற்கின்றன” என்றார். “நமது வீரர்கள் செயலற்றுவிட்டனர். எவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.”
விதுரன் புன்னகைசெய்து “ஆம், கண்டேன்” என்றான். “நான் சோமரையும் உக்ரசேனரையும் வரச்சொன்னேன். மூவரும் பேசி என்ன செய்யலாமென முடிவெடுக்கப்போகிறோம். இப்போதைய திட்டமென்னவென்றால்…” எனத் தொடங்கிய சத்ருஞ்சயரை மறித்த விதுரன் “படைத்தலைவரே, இப்போது நீங்கள் என்ன செய்தாலும் அது தீங்காகவே முடியும். எத்தனை நுண்மதியாளன் திட்டம் வகுத்து செயல்பட்டாலும் மேலும் பெரிய இக்கட்டுகளே நிகழும்” என்றான்.
சத்ருஞ்சயர் திகைத்த விழிகளுடன் நோக்கினார். “இந்நகரம் நூற்றுக்கணக்கான தெருக்களையும் தெருக்களுக்கிடையே ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைப்புகளையும் கொண்டது. வந்து கொண்டிருப்பது ஆயிரக்கணக்கான வண்டிகள். எந்த மேதையாலும் இவை இணையும் பல லட்சம் நிகழ்தகவுகளை கணக்கிட்டுவிடமுடியாது. அவன் ஆயிரம் தகவுகளை கணக்கிட்டால் பல்லாயிரம் தகவுகள் கைவிட்டுப்போகும்.”
“அப்படியென்றால் என்ன செய்வது?” என்றார் சத்ருஞ்சயர். “மழைவெள்ளம் எப்படி நகரை நிறைக்கிறது? அதன் பெருவிசை அதற்குரிய வழிகளை கண்டடைகிறது. இதுவும் ஒரு வெள்ளமே. நாளைக்காலைவரை காத்திருங்கள். இந்தப்பெருங்கூட்டம் முட்டி மோதி தேங்கி பீரிட்டு தனக்குரிய வழிகளைக் கண்டுகொள்ளும். நாளைக்காலை அதன் வழிகளை எந்தக் காவல்மாடம் மீது ஏறி நின்றாலும் பார்த்துவிட முடியும். அவ்வழிகளை மேலும் தெளிவாக்கி சிடுக்குகளை அகற்றி செம்மைசெய்து கொடுப்பது மட்டுமே நமது பணி”
சத்ருஞ்சயர் நம்பிக்கை இல்லாமல் தலைவணங்கினார். “நம்புங்கள் சத்ருஞ்சயரே, நாளை நீங்களே காண்பீர்கள்” என்றான் விதுரன் சிரித்தபடி. “அரசு சூழ்பவன் முதலில் அறிந்திருக்கவேண்டியது ஊழை. ஊழின் பெருவலியுடன் அவன் ஆற்றல் மோதக்கூடாது. ஊழின் விசைகளுடன் இணைந்து தனக்குரியவற்றைக் கண்டடைந்து அவற்றை தனக்காக பயன்படுத்திக்கொள்பவனே வெல்கிறான்.” “நான் இப்போது என்ன செய்வது?” என்றார் சத்ருஞ்சயர். “செல்வங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். அனைவருக்கும் உணவும் நீரும் கிடைக்கவேண்டும். அதைமட்டும் செய்யுங்கள்!”
விதுரன் தன் மாளிகையை அடைந்து நீராடி உணவருந்தி ஒய்வெடுக்கும் முன் தன் சேவகனிடம் அனைத்து செய்திகளையும் குறித்துக்கொள்ளும்படியும் எழுப்பவேண்டாமென்றும் சொன்னான். அவன் எண்ணியதுபோலவே கண்விழித்ததும் பேரரசியும் அம்பிகையும் அம்பாலிகையும் அவனை அழைத்திருந்தனர். அவன் ஆடைமாற்றிக்கொண்டு பேரரசி சத்யவதியின் அரண்மனையை அடைந்தான். சியாமை அவனுக்காக வாயிலிலேயே காத்திருந்தாள். “பேரரசி இருநாழிகை நேரமாக உங்களுக்காகக் காத்திருக்கிறார் அமைச்சரே” என்றாள்.
“ஆம், அறிவேன்” என்றான் விதுரன். “மேலும் இருவர் காத்திருக்கிறார்கள்” என்றபோது அவன் உதடுகள் விரிந்தன. சியாமையும் புன்னகைசெய்தாள். “ஒரு சந்திப்புக்கு முன் சிலநாழிகைநேரம் காத்திருப்பது நன்று. நம்முள் பெருகி எழும் சொற்களை நாமே சுருட்டி அழுத்தி ஓரிரு சொற்றொடர்களாக ஆக்கிக்கொள்வோம். சொல்லவிழைவதை தெளிவாகச் சொல்லவும் செய்வோம்.” சியாமை நகைத்தபடி “அனைவரிடமும் விளையாடுகிறீர்கள்” என்றாள். “சதுரங்கக் காய்கள் அல்லாத மானுடரை நீங்கள் சந்திப்பதே இல்லையா அமைச்சரே?”
சத்யவதி விதுரனைக் கண்டதும் எழுந்துவந்தாள். “என்ன, கூப்பிட்டனுப்பினால் இவ்வளவு நேரமா?” என்றாள். பேரரசிக்குரிய தோரணையை அவள் அவனிடம் காட்டுவதில்லை. “உனக்கு உடல்நிலை சரியில்லையா என்று கேட்டு சியாமையை மீண்டும் அனுப்பினேன்.” விதுரன் “உடல்நிலை குலையவேண்டுமென காந்தாரர் நினைத்திருப்பார்” என்றான். “இன்று காலை ஒரு பேரருவியின் கீழ் நான்குநாழிகை நேரம் நின்றிருந்தேன்.” சத்யவதி சிரித்தபடி “ஆம், சொன்னார்கள். ஆணவப்பெருமழை” என்றாள். “ஆணவம் அரசகுணம் அல்லவா?” என்றான் விதுரன். சத்யவதி சிரித்தபடி “வர வர உன் சொற்களை நீ சென்றபின்னர்தான் நான் புரிந்துகொள்கிறேன்” என்றாள்.
சத்யவதி அமர்ந்ததும் விதுரன் அவளருகே அமர்ந்துகொண்டு “மலர்ந்திருக்கிறீர்கள் பேரரசியே” என்றான். “ஆம், என் வாழ்நாளில் நான் இதைப்போல உவகையுடன் இருந்த நாட்கள் குறைவே. அனைத்தும் நான் எண்ணியபடியே முடியப்போகின்றன” என்றாள். “ஆம், நானும் அவ்வண்ணமே நினைக்கிறேன்” என்றான் விதுரன். சத்யவதி “நீ உன் பொருளற்ற ஐயங்களை என் மீது சுமத்தி இந்த உவகையை பறிக்கவேண்டியதில்லை… சற்றே வாய்மூடு” என அதட்டினாள். விதுரன் நகைத்தபடி “நான் ஒன்றுமே சொல்லப்போவதில்லை பேரரசியே” என்றான்.
“இன்றுமாலை நான் சகுனியை சந்திக்கவிருக்கிறேன்” என்றாள் சத்யவதி. “அவன் என்னிடம் நேரடியாகவே திருதராஷ்டிரனின் முடிசூட்டுவிழா குறித்துப்பேசுவான் என நினைக்கிறேன்.” விதுரன் “ஆம், அதுதான் நிகழும்” என்றான். “அதில் நமக்கு எந்தத் தடையும் இல்லை. நீ கூறியபடி அனைத்து நூல்களையும் விரிவாக ஆராய்ந்து சொல்லும் நிமித்திகர்களை அமைத்துவிட்டேன். விழியிழந்தவன் மன்னனாக ஆவதற்கு நெறிகளின் தடை என ஏதுமில்லை. அமைச்சும் சுற்றமும் மன்னனின் கண்கள் என்கின்றது பிரகஸ்பதிநீதி. என் மைந்தனுக்கு நீயும் சகுனியும் இரு விழிகள். வேறென்ன?”
“மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது” என்றான் விதுரன். “அதற்கென்ன? எந்த முடிசூடலுக்கும் நால்வகை வருணமும் ஐவகை நிலமும் ஆணையிடவேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. அது எப்போதுமுள்ளதுதானே?” என்று சத்யவதி கேட்டாள். “ஆம்.” “ஏன் தயங்குகிறாய்? நீ எதையாவது எதிர்பார்க்கிறாயா?” “இல்லை பேரரசியே… அனைத்தும் சிறப்புற முடியுமென்றே நினைக்கிறேன்.” “அச்சொல்லிலேயே ஒரு இடைவெளி உள்ளதே…”  “பேரரசியே நான் அமைச்சன். அனைத்துத் திசைகளையும் ஐயத்துடன் நோக்கக் கடன்பட்டவன்.”
“நீ முதலில் உன்னை ஐயத்துடன் நோக்கு…” என்று சத்யவதி பொய்ச்சினத்துடன் சொன்னாள். “நான் உன்னை வரவழைத்தது இதற்காகத்தான். திருதராஷ்டிரனின் மணிமுடிசூடல் பற்றி சகுனி கேட்டால் இந்த இளவேனில் காலத்திலேயே அதை நிகழ்த்திவிடலாமென நான் வாக்களிப்பதாக உள்ளேன். இதை நீயே பீஷ்மரிடமும் திருதராஷ்டிரனிடமும் சொல்லிவிடு. அனேகமாக இன்றே திருதராஷ்டிரனின் முடிசூட்டுநாள் முடிவாகிவிடுமென எண்ணுகிறேன்.” “ஆம் பேரரசியே அதுவே முறை” என்றான் விதுரன்.
அவன் வெளியே வந்தபோது சியாமை பின்னால் வந்தாள். “அடுத்த சந்திப்பு இளையபிராட்டியா?” என்றாள். “ஆம் வேறெங்கு?” என்றான் விதுரன். “என்ன முறை அது? உங்கள் கணிப்புகள் எனக்கு விளங்கவில்லை அமைச்சரே” என்றாள் சியாமை சிரித்தபடி. “இன்று பேரரசி என்னிடம் பேசும்போது நான் இளைய அரசியைப் பற்றி ஏதேனும் சொல்கிறேனா என்று அகம்கூர்ந்தபடியே இருந்தார். அப்படியென்றால் அவருள் ஒரு முள்போல ஓர் ஐயம் இருக்கிறது.”
“முள்தான்… ஆனால் பூமுள்” என்றாள் சியாமை சிரித்துக்கொண்டு. “அமைச்சரே, சிறிய அரசி அம்பாலிகை என்னதான் செய்துவிடமுடியும்? இன்னும் தன் படுக்கையறையில் பாவையை வைத்துக்கொண்டு விளையாடுபவள்.” விதுரன் “ஆம், ஆனால் அவள் அன்னை. அன்னையரிடம் கூடும் பேராசையைக் கண்டு பிரம்மனே திகைத்துவிடுவான். பேராசையால் அவர்கள் கொள்ளும் மதிநுட்பமும் குரூரமும் அளவிறந்தவை.” சியாமையின் கண்களில் திகைப்பு வந்தது. “பூமுள்ளாயினும் கண்ணில் குத்துமென்றால் ஆபத்து அல்லவா?” என்றபின் விதுரன் படியிறங்கினான்.

4/27/14

பகுதி பத்து : அனல்வெள்ளம்[ 1 ]

பகுதி பத்து : அனல்வெள்ளம்[ 1 ]
அஸ்தினபுரியின் வரலாற்றில் அதற்கிணையானதொரு மழைக்காலமே வந்ததில்லை என்றனர் கணிகர். ஆறுமாதகாலம் மழை பிந்தியதுமில்லை. வந்தமழை மூன்றுமாதம் நின்று பொழிந்ததுமில்லை. புராணகங்கையில் நீர் ஓடியதைக் கண்ட எவருமே அஸ்தினபுரியில் வாழ்ந்திருக்கவில்லை. நூற்றைம்பதாண்டுகளுக்கு முன்பு அதில் நீர்பெருகியதை கணிகர்நூல்கள் குறிப்பிட்டன. அப்போது ஆமை ஒன்று அஸ்தினபுரியின் மாளிகைமாடத்தின் மீது ஏறியது என்றன.
மழை பொழியத் தொடங்கி ஒரு மாதமானபோது நாணல்களுக்குள் வாழும் எலிகளைப்போல மனிதர்கள் மழைத்தாரைகளுக்குள் வாழக்கற்றுக்கொண்டனர். தவளைகளைப்போல நீரில் துழாவி நடந்தனர். நீர்ப்பாம்புகள் போல நெளிந்தனர். நண்டுகள் போல வளைகளை மூடிக்கொண்டு சேற்றின் ஈரத்தில் துயின்றனர். மழைக்குள்ளேயே வணிகமும் தொழில்களும் நிகழ்ந்தன. மழைக்குள்ளேயே அவிப்புகையும் அடுபுகையும் எழுந்து நீர்ச்சரடுகளுக்குள் ஊடுருவிப் பரவின. வாழ்வின் ஓசைகள் வான்நீரில் பட்டுப் பரவின.
நகரின் அனைத்துப்பறைகளிலும் தோற்பரப்புகள் நெகிழ்ந்து தழைய, அனைத்து செய்தியொலிகளும் வெண்கலமணிகளாலேயே நிகழ்ந்தன. இருளுக்குள் வானம் ஒளியுடன் வெடித்து துடித்துக்கொண்டிருந்தது. விடிந்தபின் விடைகொண்ட ராத்ரிதேவியின் மெல்லிய மேலாடையே நீண்டு பகலாகிக்கிடந்தது. சூரியன் தோன்றியதையே கண்கள் மறந்தன. திண்ணைகளில் தோலாடைகளைப் போர்த்தியபடி அமர்ந்து பழம்பாடல்களை பாடக்கேட்டனர் நகர்மக்கள். காவலர்கள் தேன்மெழுகுபூசப்பட்ட பாய்மறைக்குள் பதுங்கி ஒடுங்கி அமர்ந்து இரவும் பகலும் கண்ணயரக் கற்றுக்கொண்டனர்.
வடக்குவாயில் காவல்மாடத்தின் மீது இரவில் மழைத்தாரைகளுக்கு அடியில் பெரிய தவளைபோல பாயுடன் ஒடுங்கி அமர்ந்திருந்த காவலன் காட்டுக்குள் யானைக்கூட்டம் ஒன்று கிளைகளை விலக்கி மரங்களைப் பெயர்த்து பாறைகளை உருட்டி வருவதாக கனவுகண்டான். யானைக்கூட்டம் மத்தகங்களால் கோட்டைமதிலை முட்டித்திறக்க முயல்வதைக் கண்டு திகைத்துக்கூச்சலிட்டுக்கொண்டு அவன் விழித்து எழுந்தபோது வடக்குவாயிலுக்கு அப்பால் இருட்டுக்குள் இலைகளின் அடிப்பக்கத்தில் நீரின் ஒளி தெரிவதுபோல உணர்ந்தான். கூச்சலிட்டபடி காவல்மாடத்துக்குள் ஓடிச்சென்று துயின்றுகொண்டிருந்த இணைக்காவலர்களை எழுப்பினான்.
அவர்கள் எழுந்து வந்து பந்தங்களைக் கொளுத்தி அவற்றுக்குப்பின்னால் இரும்புக் குழியாடிகளை நிறுத்தி ஒளிகுவித்து வீசி காட்டை நோக்கினர். வடபுலத்தின் அடர்காட்டுக்குள் செந்நிறமான மழைநீர் சுழித்துவந்து தேங்கிக்கொண்டே இருந்தது. மரங்களின் அடித்தூர்கள் நீருக்குள் காலூன்றி நின்றிருக்க நீர் எழுந்துகொண்டே இருந்தது. சிறுபுதர்களுக்குள் வாழும் முயல்களும் எலிகளும் நீரில் அலைகளெழுப்பியபடி நீந்திச்சென்று புதர்க்கிளைகளில் தொற்றி ஏறிக்கொள்வதைக் காணமுடிந்தது.
“நீரா?” என்றான் கிருதன் என்னும் காவலன். “ஆம்… மழைநீர்!” என்றான் காகன் என்னும் தலைமைக்காவலன். “நதிபோல இருக்கிறதே” என்றான் கிருதன். முதியவனாகிய காகன் “இது முன்னொருகாலத்தில் கங்கையாக இருந்த பள்ளம். கங்கை திசைமாறியபின் காடாகியிருக்கிறது. ஆகவேதான் இதற்கு புராணகங்கை என்று பெயர்” என்றான். நீர் ஏறிக்கொண்டே இருப்பதை அவர்கள் கண்டனர். நூற்றுக்கணக்கான முயல்களும் எலிகளும் பாம்புகளும் கீரிகளும் நீரில் நீந்தி மரங்களில் தொற்றிக்கொண்ட ஓசை மரங்கள் சொட்டும் ஒலியுடன் இணைந்து ஒலித்தது.
காகன் “உடனடியாக எவரேனும் சென்று அமைச்சரிடம் தெரிவியுங்கள்” என்றான். கிருதன் தன் குடைமறையை தலையிலிட்டுக்கொண்டு வேல்கழியை ஊன்றியபடி மழையால் அறைபட்ட சேறு கொந்தளித்துக்கொண்டிருந்த சாலை வழியாக ஓடினான். வடபுலத்துச் சோலைகளில் யானைகள் மழையில் நனைந்து கருங்குவைகளாக அசையாமல் நின்றுகொண்டிருந்தன. அவை அசையாமல் நிற்பதனாலேயே யானைத்தன்மையை இழந்துவிட்டிருந்தன. யானையென அறிந்திருந்தது அந்த உடலூசலைத்தான் என்று கிருதன் எண்ணிக்கொண்டான். அசையாத யானை என்பது பனிக்கட்டியாக ஆன நீர். அது நீரே அல்ல. அப்படியென்றால் யானை ஒவ்வொரு கணமும் மழை மழை என்றுதான் அசைகிறதா?
அவன் அமைச்சர் விப்ரரின் மாளிகையை அடைந்தான். மழைத்தாரைக்கு அப்பால் நெய்த்தீபங்களின் செவ்வொளிவிழிகளுடன் மாளிகையும் குளிரில் விரைத்து ஒடுங்கியிருந்தது. செய்தியைக்கேட்டதும் தலைமைக்காவலனான கலன் விப்ரரை எழுப்பலாமா வேண்டாமா என குழம்பினான். கிருதன் சொல்வதென்ன என்று அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. புராணகங்கையில் நீர் வருகிறதென்றால் என்ன பொருள்? நகரின் அனைத்துத் தெருக்களும்தான் நீரால் நிறைந்து ஆறுகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. கம்மியர் தெருவில் குதிரைகள் நீந்திச்செல்லுமளவுக்கு நீர் ஓடிக்கொண்டிருக்கிறது.
“முன்னர் அங்கே நீ மழைநீரை பார்த்ததில்லையா?” என்றான். கிருதன் “அங்கே இப்போது ஒரு பெரிய நதி கிளம்பி வந்திருக்கிறது” என்றான். “நதியா?” என்றான் கலன். “இன்னும் அது ஓடத்தொடங்கவில்லை” என்றான் கிருதன். தலையை கையால் சுரண்டியபடி சற்று சிந்தித்தபின் “வா நானே பார்க்கிறேன்” என்று சொல்லி கலன் தன் உடைவாளை எடுத்தணிந்துகொண்டு குடைமறையை அணிந்து குதிரையில் ஏறிக்கொண்டான். கிருதன் பின்னால் ஓடிவந்தான்.
நீர் சுழித்தோடிய தெருக்கள் வழியாக விரைந்து வடக்கு வாயிலை நோக்கிச் சென்றான். அதை நெருங்க நெருங்க அவனுக்குள் உள்ளுணர்வின் எச்சரிக்கை எழத்தொடங்கியது. குதிரை அந்த உள்ளுணர்வின் பருவடிவென கால்தயங்கி நின்று முகவாயை தூக்கியது. அவன் அதன் விலாவில் குதிமுட்களைக் குத்தி முன்செலுத்தினான். வடக்குவாயில் பெருங்கதவு மூடியிருந்தது. அதன் கனத்த தாழ்மரங்கள் குறுக்கும் நெடுக்குமாக பூட்டப்பட்டிருந்தன. தாழ்களின் இரும்புப்பட்டைகளும் குமிழ்களும் இருளுக்குள் பந்த ஒளியை அணையப்போகும் அனல்போல பிரதிபலித்தன. சிலகணங்கள் கழித்தே கலன் அவன் கண்டதென்ன என உணர்ந்தான். மூடியகதவின் பொருத்துக்கள், இடுக்குகள் வழியாக வாள்கள் போல நீர்ப்பட்டைகள் உள்ளே பீரிட்டுக்கொண்டிருந்தன.
கலன் குதிரையைத்திருப்பி நீர்ச்சுழிப்புகளை பாய்ந்துகடந்து அமைச்சரின் மாளிகையை அடைந்து இறங்கி உள்ளே ஓடி அவரது துயிலறை வாயிற்கதவைத் தட்டினான். அவர் நெகிழும் உடையுடன் வந்து பதறி “என்ன? என்ன?” என்றார். “வெள்ளம்! புராணகங்கை நகருக்குள் நுழையவிருக்கிறது” என்றான் கலன். அச்சொற்களைக் கேட்டதுமே முழு உயிர் கொண்டு மஞ்சத்தில் உடன் துயின்ற கணிகையிடம் உடனடியாக அவள் குடிக்குத்திரும்பச் சொல்லிவிட்டு மேலாடையை மஞ்சத்தில் இருந்து எடுத்தணிந்தவாறே வெளியே விரைந்தார். செல்லும்போதே ஆணைகளை வெளியிட்டுக்கொண்டிருந்தார்.
அவர் வடக்குவாயிலை அணுகுவதற்குள்ளேயே அரண்மனையின் தெற்கு மூலையில் பெரிய மரத்தூண்களுக்குமேல் தொங்கிய தசகர்ணம் என்னும் பெரிய கண்டாமணி முழங்கத்தொடங்கியது. இரட்டை ஒலிகளாக அதன் முழக்கம் எழுந்ததுமே நீரொலிக்குள் மானுடக்குரலொலிகள் எழுந்து ஓங்க அஸ்தினபுரி துயிலெழுந்தது. அது வெள்ளம் நெருப்பு ஆகியவற்றை மட்டுமே சுட்டும் மணியோசை என அனைவரும் அறிந்திருந்தனர்.
சிறிய இல்லங்களில் வாழ்ந்தவர்கள் பதறியும் கூவியும் திகைத்துநின்றும் மீண்டும் பரபரப்பு கொண்டும் தங்கள் உடைமைகளை அள்ளி மூட்டைகளிலும் மரப்பெட்டிகளிலும் சேர்த்துக்கொண்டனர். குழந்தைகளைத் தூக்கியபடி முதியோரைப் பற்றியபடி அருகிருந்த உயரமான மாடமாளிகைகளுக்கோ காவல்மாடங்களுக்கோ சென்றனர். ஆலயமுகடுகள் கோட்டைவீட்டு நிலைகள் எங்கும் அவர்கள் ஏறிக்கொண்டனர். ஏறமுடியாத முதியவர்களை கைப்பிடித்து தூக்கினர். பொருட்களை நனையாத உயரங்களில் அடுக்கினர். ஆண்கள் முழங்கால் மூழ்கும் நீரில் ஓடிச்சென்று கன்றுகளை கட்டவிழ்த்து விட்டனர்.
நகர் முழுக்க குதிரைகளில் விரைந்த அரசவீரர்கள் மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்லும்படி கூவி ஆணையிட்டனர். எங்கு செல்வதென்றறியாமல் தெருக்களில் முட்டிமோதியவர்களை வழிகாட்டியும் அதட்டியும் கைகளைப்பற்றி இழுத்தும் ஆற்றுப்படுத்தினர். ‘எந்தப் பசுவும் கட்டுக்குள் இருக்கலாகாது… வணிகர்களின் கழுதைகள் கட்டவிழ்க்கப்பட்டிருக்கவேண்டும்’ என்று ஆணையிட்டபடி காவலர் தலைவர்கள் குதிரைகளில் கடந்துசென்றனர்.
கோட்டையின் மேற்கு மூலையில் கட்டப்பட்டிருந்த ஜலமந்திரம் அவர்கள் அறிந்த நாள்முதல் பயனற்றே கிடந்தது. மரத்தாலான அந்தக்கட்டடத்தின் முகப்பில் வருணன் கௌரி, வருணானி, சர்ஷணி என்னும் துணைவியருடன் அமர்ந்திருக்கும் சிலை இருந்தது. மேற்குத்திசை அதிபனாகிய வருணனின் சிறிய ஆலயம் அதற்கு அப்பால் சிவந்த கற்களால் கட்டப்பட்டிருந்தது. கனத்த மரங்களால் கட்டப்பட்டிருந்த ஜலமந்திரத்தின் பன்னிரண்டு அடுக்குகளிலும் மென்மரத்தைக் குடைந்து செய்யப்பட்ட சிறுபடகுகளும் மூங்கில் முடைந்து களிமண்ணும் தேன்மெழுகும் பூசப்பட்டுச் செய்யப்பட்ட பரிசல்களும் அடுக்கப்பட்டிருந்தன. படைவீரர்கள் ஜலமந்திரத்தில் ஏறி படகுகளையும் பரிசல்களையும் சித்தமாக்கினர்.
விப்ரர் வடக்குக் கோட்டைவாயிலை அடைந்து காவல்பீடம் மீது ஏறிக்கொண்டு பார்த்தார். கதவின் இடைவெளிகள் வழியாக பீரிட்ட நீர் நெடுந்தூரத்துக்கு வீசியடித்தது. அவர் சிலகணங்கள் திகைத்து நின்றபின் கதவைத்திறக்குமாறு ஆணையிட்டார். அந்த ஆணையைப் பெற்ற காவலர்தலைவன் ஒருசில கணங்கள் திகைத்தான். பின்பு தலைவணங்கி தன் இடையிலிருந்த சங்கை எடுத்து ஒலித்தான். காவலர்கள் ஓடி வாயிலைத்திறக்கும் நான்கு யானைகளை கொட்டிலில் இருந்து அழைத்து வந்தனர்.
முழங்கால் மடிப்பு வரை புதைந்த சேற்றில் மெல்ல அசைந்து வந்த யானைகள் தாழ்களைத் திறக்கும் சங்கிலிகளை துதிக்கைகளால் பற்றிக்கொண்டு அடுத்த ஆணைக்காகக் காத்து நின்றன. காவலன் மீண்டும் சங்கு ஊதியதும் கோட்டைமேலிருந்த பெரிய கண்டாமணி மும்முறை ஒலித்தது. யானைகள் சங்கிலிகளை இழுக்க மேலே இருந்த பெரிய இரும்புச்சக்கரங்கள் உருண்டு கீழே தாழ்மரங்கள் மெல்ல எழுந்து விலகின. அவை விலக விலக கதவுகள் அதிர்ந்து இரு கதவுகள் நடுவே உள்ள பொருத்து பெரியதாகி அதனூடாக கிடைமட்டமாக ஒரு அருவி விழுவதுபோல நீர் பீரிட்டுப்பாய்ந்து தெறித்துவிழுந்தது.
முதல் இரு தாழ்மரங்கள் விலகியதும் ஆயிரம் யானைகளால் உந்தப்பட்டதுபோல கதவு அதிர்ந்து இறுகியது. இரண்டாவது இரு தாழ்மரங்கள் பாதி விலகுவதற்குள்ளாகவே பெரும் உறுமலுடன் கோட்டைக்கதவு திறந்து பக்கவாட்டில் கோட்டைச்சுவரில் மோத வெள்ளம் வெடித்து எழுவதுபோல உள்ளே வந்தது. கோட்டைச்சுவரில் ஒரு பெரிய துதிக்கை முளைத்தது போல வெள்ளப்பெருக்கு நீண்டு யானைகளை தூக்கிச்சுழற்றி எடுத்துக்கொண்டு நகருக்குள் சென்றது.
EPI_98
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
பெருகிய நீர் உள்ளே விரிந்திருந்த களமுற்றத்தில் விரிந்ததும் விரைவழிந்து நாற்புறமும் பரவியது. கோட்டைவாயில் வழியாக அவர் அதுவரை கண்டிராத ஒரு புதிய நதி நகருக்குள் புகுவதை விப்ரர் பார்த்துக்கொண்டிருந்தார். நீரில் வந்த மரங்களும் புதர்களும் சுழித்து கட்டடங்களில் முட்டித் தயங்கின. கைவிடுபடைக்கலங்களின் பெருமேடைகளில் தங்கின. பெரிய மரங்கள் சில கோட்டைவாயிலில் முட்டி நின்று நீரின் அழுத்தத்தை வாங்கி நீரைப் பிரித்தன. பின் மெல்லமெல்ல திசைமாறி சரிந்து உள்ளே வந்து நீர்விரைவில் கலந்து சென்றன.
நீரில் புரண்டுசென்ற நான்குயானைகளும் மூழ்கி எழுந்து துதிக்கையை நீருக்குமேல் தூக்கியபடி நீந்தி மறுபக்கம் தங்கள் கொட்டில் நோக்கிச் சென்றன. கட்டவிழ்த்துவிடப்பட்ட யானைகள் பெருகிவந்த நீரில் நீந்தியபடி மேடான இடம் நோக்கிச் செல்ல யானைகளின் தலைவியான காலகீர்த்தி துதிக்கை தூக்கி பிளிறி யானைமகவுகள் நலமாக இருக்கின்றனவா என்று வினவியது. அனைத்து அன்னை யானைகளும் பதிலுக்குப் பிளிறி அவை நலமே என்று அறிவித்தன. யானைக்கொட்டிலை பாதி நிறைத்த நீர் மேலும் சற்று உயர்ந்தது. மகாமுற்றத்திலிருந்து பிரியும் அனைத்துச்சாலைகளையும் கிளையாறுகளாக ஆக்கியபடி நீர் நகரை நிறைத்தது.
நீர் தங்கள் இல்லங்களின் உப்பரிகை விளிம்புகளில் வந்து மெல்லிய நாக்கால் நக்கி ஒலிப்பதை அரையிருளில் நகர்மக்கள் கண்டனர். நீரில் மிதந்துவந்த எதையும் தொடவேண்டாமென்றும் நீர் விளிம்புக்குச் செல்லவேண்டாமென்றும் அவர்கள் மைந்தர்களை எச்சரித்தனர். கழிகளால் நீரில் மிதந்துவந்து கரைக்கழிகளைப் பற்றி தொற்றி ஏறமுயன்ற பாம்புகளை அவர்கள் தள்ளி மீண்டும் நீரிலேயே விட்டார்கள்.
தெற்குக் கோட்டைவாயில் வழியாக நீர் பெருகி வெளியே சென்றது. நீரில் வந்த மரங்களும் புதர்களும் நகரால் அரித்துநிறுத்தப்பட, வெறும் நீர் அலையலையாக வெளியே சென்று அங்கே ஓடிய புராணகங்கையின் மறுபக்கப் பள்ளம் வழியாகச் சென்று அப்பால் விரிந்த காட்டுக்குள் புகுந்தது. மழை விடியற்காலையிலேயே நின்றுவிட்டது. மெல்லிய காலையொளியில் நகரம் முழுக்க நிறைந்திருந்த செந்நிறமான நீரைக் கண்டு குழந்தைகள் உவகை கொண்டு குதித்தன. நகர்மாளிகைகள் மரக்கலங்கள் போல, இல்லங்கள் படகுகள் போலத் தோன்றின. நீரின் ஒளியால் நகரம் மேலும் துலக்கமுற்றது.
நகர்த்தெருக்களில் படகுகள் ஓடுவதை முதியவர்கள் திகைத்து வாய்மேல் கைகளை வைத்து நோக்கினர். படகுகளிலும் பரிசல்களிலும் படைவீரர்கள் ‘யாவரும் நலமா? உணவு தேவைப்படுபவர்கள் யார்? தனித்துச்சிக்கிக்கொண்டவர்கள் உளரா?’ என்று கூவியபடியே சென்றனர். உப்பரிகையில் நின்றபடி கீழே சுழித்தோடிய வெள்ளத்தைப்பார்த்த குழந்தைகள் நான்கு யானைகள் அந்த நீரில் மகிழ்வுடன் நீந்தித்திளைத்துச் செல்வதைக் கண்டு கூவி ஆர்த்து துள்ளிக்குதித்தனர்.
மதியம் மழை முழுமையாகவே நின்றுவிட்டது. காற்றில் நீர்ப்பிசிறுகள் மட்டும் பறந்துகொண்டிருந்தன. நகர்த்தெருக்களில் ஓடிய நீரின் ஒளியலைகள் கட்டடங்களின் சுவர்களில் ததும்பின. அஸ்தினபுரிக்கு அயலான மலைச்சேற்றின் வாசனை நீரிலிருந்து எழுந்தது. மாலைக்குள் நீர் பாதியாகக் குறைந்தது. இரவெல்லாம் நீர் குறைந்தபடியே இருந்தது. குழந்தைகள் கண் துயில பெரியவர்கள் அச்சமும் மனக்கிளர்ச்சியுமாக பேசிக்கொண்டே இரவைக் கழித்தனர்.
மறுநாள் காலை விடிந்தபோது தெருக்களில் கணுக்காலளவே நீர் ஓடிக்கொண்டிருந்தது. குழந்தைகளை வீடுகளில் விட்டுவிட்டு ஆண்களும் பெண்களும் தெருவிலிறங்கி தங்கள் இல்லங்கள் சரியாமலிருக்கின்றனவா என்று பார்க்கச்சென்றனர். அஸ்தினபுரியின் இல்லங்களெல்லாமே ஆழமாக மரங்களை நட்டு அந்த அடித்தளம் மீது எழுப்பப்பட்டவையாதலால் ஓரிரு வீடுகளே சரிந்திருந்தன. இல்லங்களுக்குள் எல்லாம் நீர் சுழித்தோடிக்கொண்டிருந்ததைக் கண்டனர். ‘இல்லங்களுக்குள் நுழையாதீர். பாம்புகளும் தேள்களும் குடிகொண்டிருக்கலாம்’ என எச்சரித்தபடி காவலர்கள் குதிரைகளில் சென்றனர்.
மறுநாள் முற்றிலுமாகவே நீர் நின்றுவிட்டது. மென்மையான சேறு நகரமெங்கும் படிந்திருந்தது. தோலுரிக்கப்பட்ட ஊன் போன்ற கதுப்பு. நீரில் ஊறிய பட்டுபோன்ற சுழிப்பு. மக்கள் தங்கள் இல்லங்களுக்குச்சென்று தூய்மைப்படுத்தத் தொடங்கினர். அரச ஆணைப்படி காடுகளிலிருந்து நாகர்கள் வந்திறங்கினர். அவர்கள் வீடுகளுக்குள் சென்று சாளரத்து அழிகளிலும் தாழ்களிலும் சுற்றியிருந்த பாம்புகளை கழிகளால் தட்டிச் சீறச்செய்து அவை பாய்ந்தோடும்போது அங்கே ஓலையாலான கூடைகளைக் காட்டி பிடித்து பெரிய கூடைகளிலாக்கிக் கொண்டனர். அவர்கள் சுமந்துசென்ற கூடைகளின் இடுக்குகள் வழியாக வழிந்த பாம்புகள் ஓட்டைக்கலங்களில் இருந்து கரிய திரவம் வழிவதுபோலத் தோன்றின.
பிடிபட்ட பாம்புகளை தலையில் சுமந்து வண்டிகளில் ஏற்றி மீண்டும் வடபுலக்காட்டுக்குள்ளேயே கொண்டுசென்று விட்டனர். கூடைகளில் இருந்து அவை நான்குபக்கமும் பாய்ந்திறங்கி இலைத்தழைப்புக்குள் மறைந்தன. நகருக்குள் புகுந்த எலிகளை பானைப்பொறிகளை வைத்து பிடித்தனர். வீடுகளுக்குள் எல்லாம் செங்களி போல சேறு படர்ந்திருந்தது. அவற்றை பலகைகளால் தள்ளிச் சேர்த்து அள்ளி வெளியே கொட்டினர். சேற்றுப்பரப்புகளில் சிறிய குமிழிகள் வெடித்த துளைகளுக்குள் சிறு பூச்சிகள் அதற்குள்ளாகவே வாழத்தொடங்கியிருந்தன. சேற்றுக்கதுப்பில் பூச்சிகள் ஓடிய வரிகள் விழுந்திருந்தன. யானைச்சருமம் போல சேற்றில் நீர் ஊறி ஓடிய வரிகள் தெரிந்தன.
நகரம் தன்னை தூய்மைசெய்துகொள்ள பத்துநாட்களாகியது. அதன்பின் மழை பெய்யவில்லை. வானம் முழுமையாகவே வெளுத்து வெள்வெயில் நகர்மீது பரவிப்பொழிய நெடுநாட்களாக ஒளியைக் காணாத முதியவர்களின் கண்கள் கலங்கி நீர்வழிந்தது. இரண்டுநாட்களிலேயே எஞ்சிய சேற்றையெல்லாம் மென்மணல்போல ஆக்கியது வான்வெம்மை. நாலைந்துநாட்களுக்குள் மழை பெய்ததெல்லாம் தொலைதூர நினைவாக மாறும்படியாக வெயில் எழுந்து நின்றது. நகரின் அனைத்து நீரோடைகளிலும் சுழித்தோடிய தெள்நீரில் மழைநீரின் குளுமையும் சேற்றுச்சுவையும் எஞ்சியிருந்தன.
காட்டுக்குள் இருந்து வெண்சுண்ணமண்ணை அள்ளி ஒற்றைமாட்டுவண்டியில் சுமையேற்றிய காடவர்கள் நகருக்குள் தெருத்தெருவாக வந்து கூவி விற்றனர். தேன்மெழுகையும் கொம்பரக்கையும் விற்கும் களியரும் தெருக்கள் தோறும் அத்திரிகளையும் கழுதைகளையும் சுமைகளுடன் ஓட்டியபடி கூவியலைந்தனர். நகர்மக்கள் கூரையிடுக்குகளை களிமண்ணையும் தேன்மெழுகையும் கலந்து அடைத்தனர். வெண்மண்ணையும் அரக்கையும் மெழுகையும் கலந்து தங்கள் இல்லச்சுவர்களில் பூசி புதுவண்ணமேற்றினர். நீலக்கல்லையும் செந்நிறக்கல்லையும் அரைத்து எடுத்த சாயங்களுடன் மெழுகை உருக்கிச்சேர்த்த கலவையைப் பூசி தூண்களையும் கதவுகளையும் வண்ணம்கொள்ளச்செய்தனர். வசந்தம் பூத்த காடு போல் நகரம் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருந்தது.
அரண்மனையை புதுப்பிக்க கலிங்கச் சிற்பியர் வந்து சேர்ந்தனர். அவர்கள் மாடக்குவைகளை வெண்ணிறமேற்றி மேகக்கூட்டங்கள் போலாக்கினர். செந்நிற மரப்பலகைகளில் மெழுகேற்றி மெருகூட்டினர். சுவர்களில் புதுச்சுண்ணம் சேர்த்தனர். புதிய திரைச்சீலைகளையும் பாவட்டாக்களையும் பட்டத்தூண்களையும் பதாகைகளையும் கட்டினர். அப்போது பணித்ததுபோல அரண்மனை வளாகம் எழில் கொண்டு எழுந்தது. பழையன கழிந்து புதியவை எழுந்து அஸ்தினபுரி மலர்ந்தது.
அரசகுலத்தின் இரு இளவரசர்களுக்கும் மணவினை முடிந்து தேவியர் நகர்புகுந்துவிட்டனர். மழைக்காலம் முடிந்துவிட்டதனால் மூத்தவருக்கு பட்டம் சூட்டும் விழவு நிகழுமென மக்கள் எதிர்பார்த்தனர். அரச அறிவிப்பு எத்தினத்திலும் வெளியாகுமென்று சந்தைகளிலும் மன்றுகளிலும் திண்ணைகளிலும் பின்கட்டுகளிலும் பேச்சு நிகழ்ந்தது. ஐம்பத்தைந்து ஷத்ரிய மன்னர்களும் பாரதவர்ஷத்தின் தொலைதூரத்து அரசர்களும் நகர்புகுவார்கள் என நிமித்திகர் கூறினர். அதற்கேற்ப அஸ்தினபுரியின் அனைத்துக் கட்டடங்களையும் பழுதுபார்க்கும்பணி இரவுபகலாக நிகழ்ந்துகொண்டிருந்தது.
காந்தாரத்தில் இருந்து இளவரசர் சகுனி தன் தமக்கை அரியணையமரும் விழவைக் கொண்டாடுவதற்காக பரிசில்களுடன் வருவதாக அரண்மனைச்செய்தி நகருக்குள் பரவியது. ‘காந்தாரம் செல்வக்கருவூலம்… அவர் கொண்டுவரும் செல்வத்தால் நம் களஞ்சியங்கள் நிறையப்போகின்றன’ என்றனர் மூத்தார். ஒவ்வொருநாளும் புதிய செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஆயிரம் யானைகளில் செல்வம் வருவதாக முதலில் சொன்னார்கள். அவை யானைகள் அல்ல ஒட்டகவண்டிகள் என்று பின்னர் செய்தி வந்தது. ஆயிரமா, யார் சொன்னது, ஐந்தாயிரம் வண்டிகள் என்று சொன்ன சூதனை திகைத்து நோக்கி வாய்திறந்து நின்றனர் நகர்மக்கள்.
சகுனி எல்லைபுகுந்துவிட்டார் என்ற செய்தி வந்ததும் நகர்மக்கள் கிளர்ச்சிகொண்டனர். மறுநாள் அவர் நகர் நுழையக்கூடுமென்று வணிகர்கள் சொன்னார்கள். கணிகர் நாள் நோக்கி மறுநாள் கதிர் எழுவதற்கு முன்னும் அந்தி சாய்ந்தபின்னும் மட்டுமே நற்தருணம் உள்ளது என்றனர். அந்தியில் செல்வம் உள்ளே வருவதற்கு நூல் முறை இல்லை என்பதனால் சகுனி அதிகாலையில்தான் நகர்நுழையக்கூடுமென்றனர். ஒவ்வொரு நாழிகைக்கும் ஒரு செய்தி என வந்துகொண்டிருந்தது. மன்றுகள் முழுக்க அதைப்பற்றி மட்டுமே பேசப்பட்டது.
கருக்கிருட்டிலேயே கிழக்குக்கோட்டைவாயிலுக்கு முன்னால் பெருங்கூட்டம் திரண்டிருந்தது. குதிரைகளில் ஏறிய படைவீரர்கள் ‘பாதையை மறிக்காதீர். பாதையின் எல்லைக்கற்களுக்கு அப்பால் மட்டுமே நில்லுங்கள்!’ என்று கூவியபடி மீண்டும் மீண்டும் சாலைகளில் குளம்படி ஓசை சிதற விரைந்துகொண்டிருந்தார்கள். முரசுமேடைகளிலும் காவல்மாடங்களிலும் மன்றுத்தூண்களிலும் மாளிகைமுகடுகளிலும் பந்தங்கள் செவ்வொளி அலைய ஒளிவிட்டுக்கொண்டிருந்தன. கைவிடுபடைகளின் வேல்நுனிகளில் பந்த ஒளிகள் ஆயிரம் செவ்விழிகளாகத் திறந்து இமைத்துக்கொண்டிருந்தன.
மூடிய கோட்டைக்கதவுக்குப் பின்னால் திரண்டிருந்த அஸ்தினபுரியின் மக்கள் கிளர்ச்சியுற்ற குரலில் பேசிக்கொண்டும் கூவிக்கொண்டும் காத்திருந்தனர். கோட்டைக்கதவின் பொருத்துக்களின் இடைவெளிகள் வழியாக மறுபக்கம் எரிந்த பந்தங்களின் செவ்வொளிக்கற்றைகள் பீரிட்டு வந்து குருதிதோய்ந்த வாள்கள் போல இருளில் நீட்டி நின்றன. பெருமுரசங்களின் அருகே கோல்காரர்கள் காத்து நின்றனர். ‘விதுரர்! விதுரர்!’ என ஒரு குரல் ஒலித்தது. விதுரனின் ரதம் அப்பால் வருவதை அங்கே எழுந்த வாழ்த்தொலிகள் காட்டின. மக்கள் விதுரனை வாழ்த்தி கூவினர்.
விதுரன் வந்து கோட்டையின் மூடிய வாயிலுக்கு முன் ரதத்தில் இருந்து இறங்கி நின்றுகொண்டான். அமைச்சர்கள் விப்ரரும் லிகிதரும் சோமரும் படைத்தலைவர்கள் உக்ரசேனரும் சத்ருஞ்சயரும் வியாஹ்ரதத்தரும் தங்கள் ரதங்களில் வந்து இறங்கி விதுரனின் இருபக்கமும் நின்றுகொண்டனர். அவர்களின் ரதங்கள் அப்பால் கொடிகள் மென்காற்றில் அலைய வரிசையாக அணிவகுத்து நின்றன. படைவீரர்கள் கைகாட்ட வாழ்த்தொலிகள் அமைந்தன. கொடிகளும் சுடர்களும் காற்றில் படபடக்கும் ஒலி கேட்குமளவுக்கு அமைதி நிலவியது. குதிரை ஒன்று பர்ர் என செருக்கடித்தது.
கோட்டைமேல் ஒரு விளக்கு சுழன்றது. விப்ரர் கையைக் காட்டினார். அவர் முன் ஆணைகாத்து நின்ற காவலர்தலைவன் தன் இடையில் இருந்த சங்கை எடுத்து ஊத வீரர்கள் கூச்சலிட்டபடி ஓடினர். கோட்டைவாயிலைத்திறக்கும் நான்கு யானைகள் பாகன்களால் கொண்டுசெல்லப்பட்டன. அவை தலையை ஆட்டி, துதிக்கை துழாவி முன்னால்சென்றன. பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்னால் அஸ்தினபுரியின் கோட்டைவாயில் திறக்கப்படுவதில்லை, சகுனிக்காக விதிகள் தளர்த்தப்படுகின்றன என ஒரு முதியவர் சொன்னார். பிறர் வியப்புடன் தலையசைத்தனர்.
யானைகள் கனத்த சங்கிலிகளை இழுத்ததும் மேலே இருந்த இரும்புச்சக்கரங்கள் உலோக ஓலத்துடன் சுழன்றன. கதவை மூடியிருந்த பெருந்தாழ்மரங்கள் மெல்ல விலகின. அஞ்சிய உதடுகளில் சொல் பிறப்பதுபோல கதவுகள் விலகி இடைவெளியிட்டன. இரும்புக்கீல்கள் பேரொலி எழுப்ப கதவு விரியத்திறந்தது. அப்பாலிருந்து காட்டுத்தீ பெருகி நகருக்குள் இறங்குவதுபோல பல்லாயிரம் நெய்ப்பந்தங்களின் ஒளி உள்ளே நுழைந்தது. பந்தங்களை ஏந்திய குதிரை வீரர்கள் சூழ்ந்துவர பெரிய வண்டிகளும் ரதங்களும் வந்தபடியே இருந்தன.

4/26/14

பகுதி ஒன்பது : மொழியாச்சொல்[ 4 ]

பகுதி ஒன்பது : மொழியாச்சொல்[ 4 ]
பிருதை அறைக்குள் நுழைந்தபோது பாண்டு மஞ்சத்தில் படுத்திருப்பதைத்தான் பார்த்தாள். கதவை பின்னிருந்து அனகை மெல்ல இழுத்துச்சாத்தியபோது எழுந்த ஓசையில் அவன் தலையைத் தூக்கிப்பார்த்தான். உடனே நான்குநாகங்கள் நெளிவதுபோல அவனுடலில் கைகால்கள் இழுத்துக்கொண்டதைக் கண்டு குந்தி அருகே சென்றாள். அவன் கடைவாயில் வாய்நீர் நுரைத்து வழிய கண்கள் மேலேறி சிப்பிவெண்மை தெரிய தொண்டையில் பசுநரம்பு புடைத்து அசைந்தது. அவனுக்கு நரம்புப்பின்னல் நோய் என பிருதை அறிந்திருந்தாள். வெளியே சென்று வைத்தியர்களை அழைப்பதா என ஒரு கணம் சிந்தனைசெய்தபின் வேண்டாம் என முடிவெடுத்து அருகே பீடத்தில் அமர்ந்துகொண்டாள்.
நீரில் அமிழ்பவனைப்போல பாண்டு அசைவின்மை கொண்டு மஞ்சத்தில் படிந்தான். அவள் அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள். இரு வெண்புருவங்களுக்குக் கீழே பால்கொப்புளங்கள்போல இமைகள் அதிர்ந்துகொண்டிருந்தன. கண்ணீர் இருபக்கமும் வழிந்து காதுகளில் சொட்டிக்கொண்டிருந்தது. சின்னஞ்சிறு செவ்வுதடுகள். பால்நுரைத்துண்ட கைக்குழந்தையின் மேலுதடுபோன்ற மெல்லிய வெண்மயிர்பரவல்.
அவள் அகம் திகைத்து நெஞ்சில் கைவைத்து எழுந்துவிட்டாள். சாளரம் வழியாக வெளியே அசைந்துகொண்டிருந்த மரத்தின் இலைகளைப் பார்த்தாள். ஆனால் பொறிக்கப்பட்ட ஓவியம்போல அவ்வுதடுகளே அவள் கண்ணுக்குள் நின்றன. திரும்பி அவற்றைப் பார்த்தாள். நெஞ்சின் அதிர்வை உணர்ந்தபடி பார்த்துக்கொண்டே நின்றாள். பால்நுரை. அதை முதலில் கண்டு அடைந்த பெரும் மனக்கிளர்ச்சி. அதை மீண்டும் அடைந்து கண்கள் கசிய தொண்டை அடைக்க அவள் கால்தளர்ந்து பீடத்தில் அமர்ந்துவிட்டாள்.
அவன் விழியிதழ்கள் அதிர்ந்து பின் பிரிந்தன. நீர்படிந்த வெண்பீலிகள் கொண்ட செவ்விழிகள் முயல்களின் கண்களைப் போலிருந்தன. அவளை அடையாளம் கண்டதும் அவன் திகைத்து ஒரு கையை ஊன்றி எழமுயன்றான். அவள் புன்னகையுடன் “வேண்டாம்” என்றாள். “நான் இங்கே அமர்ந்திருக்கிறேன். ஓய்வெடுங்கள்” என்று மெல்லியகுரலில் சொன்னாள். அக்குரலிலும் புன்னகையிலும் இருந்த தாய்மை அவன் முகத்தில் உடனே எதிரொளித்தது. அவன் கண்கள் கனிந்தன. “எனக்கு மூச்சுத்திணறுகிறது” என்று அவன் சொன்னான்.
தாய்மையை ஏற்று அதற்குள் முழுமையாக ஒடுங்கிக்கொள்வதற்கான பயிற்சியை அவன் முழுமையாகப் பெற்றிருக்கிறான் என்று பிருதை எண்ணிக்கொண்டாள். “சற்றுநேரம் கண்களை மூடிக்கொண்டிருங்கள்… அது ஓர் அதிர்ச்சி மட்டுமே” என்றாள். “என் மருத்துவனை அழைக்கமுடியுமா? அவனுடைய நஸ்யம் என்னை ஆறுதல்படுத்தும்.” குந்தி திடமான குரலில் “அது அகிபீனாவாக இருக்கும். அதை உட்கொள்ளவேண்டாம். அது நரம்புகளை மேலும் வலிவிழக்கவே செய்யும்” என்றாள்.
“நான்…” என அவன் தொடங்கியதும் “வேண்டாம்” என்று பிருதை உறுதியாகச் சொன்னாள். அவன் தலையை ஆட்டியபின் கண்களை மூடிக்கொண்டான். அவள் அவனருகே சென்று குனிந்து “உங்களுடைய நோய் உள்ளத்தில்தான். ஆகவே உடலை எண்ணவேண்டாம். உள்ளத்தை ஒருங்கமையுங்கள்… இங்கே அறைக்குள் என்ன நிகழ்கிறதென்பதை சிந்தையில் விரித்துக்கொண்டே இருங்கள். நரம்புகள் நெகிழ்வதை உணர்வீர்கள்.”
பாண்டு “ஆம்” என்றான். தலையை மெல்ல அசைத்துக்கொண்டு பெருமூச்சு விட்டான். அவனுடைய நெற்றியிலும் கழுத்திலும் நீலநரம்புகள் புடைத்திருந்தன. “நீ இங்கே வருவாய் என்றார்கள். அப்போதே…” என்றான். மஞ்சள்நிறமான பற்களால் சிவந்த உதடுகளைக் கவ்வியபடி “என்னால் தாளமுடியவில்லை” என்றான். இரு கைகளையும் இறுக முட்டிபிடித்து ‘ம்ம் ம்ம்’ என்றான். மெல்ல மெல்ல அமைதிகொண்டான். கண்களைத் திறந்து “என்னால் தாளமுடியவில்லை” என்றான். சிறிய விசும்பல் ஒன்று அவனிடமிருந்து வெளிவந்தது. அவன் உதடுகளைக் கடித்து அடக்கமுயன்றான். மழை அறையும் சாளரங்கள் போல உதடுகள் துடித்தன. பின்பு அவன் விம்மல்களும் மூச்சொலிகளும் கேவல்களுமாக அழத்தொடங்கினான்.
அவன் அழுதுமுடிப்பது வரை அவள் அவனையே நோக்கியபடி பீடத்தில் அமர்ந்திருந்தாள். அவன் நீள்மூச்சுக்களுடன் அழுது அடங்கி கண்மூடியபடி படுத்திருந்தான். இறுகி அதிர்ந்த நரம்புகள் தளர்ந்து அவிழ்ந்து பின் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தன. கைகளால் கண்களைத் துடைத்தபின் கண்களைத் திறந்து அவளைப்பார்த்தான். பற்கள் தெரிய சிரித்து “நீ வெறுக்கும் நாடகத்தில் ஓர் அங்கம் முடிந்துவிட்டது” என்றான். “திறனிலியின் துயரம் போல அருவருப்பளிப்பது ஏதுமில்லை… எனக்கும்தான்” என்றான்.
“அது ஆண்களின் மனநிலை” என்றாள் பிருதை. “தன் கையில் மிகமிகத் திறனற்ற ஓர் உயிரை ஏந்தும்போதுதான் பெண்ணின் அகம் கனிவும் முழுமையும் கொள்கிறது.” அவன் அவள் கண்களைச் சந்தித்தான். அவள் அவன் மோவாயைச் சுட்டி “நான் என்ன நினைத்தேன் தெரியுமா?” என்றாள். புன்னகையுடன் “பால்நுரை படிந்த கைக்குழந்தையின் உதடுகள் என” என்றாள். பாண்டு சிரித்துக்கொண்டு “அப்படி அதைக் கடந்துசெல்ல உன்னால் முடிந்தால் நீ நல்லூழ் கொண்டவள்” என்றான்.
“கடந்துசெல்வது அல்ல…” என்றாள் பிருதை. “இத்தருணத்தில் நானறிந்த உண்மை இது.” பாண்டு “நான் நேரடியாகவே கேட்கிறேனே, என் கழுத்தில் நீ ஏன் உன் மணமாலையைப் போட்டாய்? அந்த மாலை அஸ்தினபுரியின் செல்வத்துக்காகவும் படைக்கலன்களுக்காகவும்தானே?” பிருதை அவன் கண்களை நோக்கி “ஆம்” என்றாள். “நான் மார்த்திகாவதியின் இளவரசியாக மட்டுமே என்னை உணர்பவள்.” பாண்டு சற்று கோணலாகச் சிரித்து “உண்மையை நேரடியாகச் சொன்னது மகிழ்வளிக்கிறது” என்றான்.
பிருதை “மகிழ்வளிக்கிறதா?” என கூர்ந்து நோக்கி கேட்டாள். பாண்டு “இல்லை… அதுதான் உண்மை. நீ சொல்வதுதான் உண்மை என்று எனக்குத்தெரியும். வேறென்ன சொல்லியிருந்தாலும் அது என்னை ஏமாற்றுவதென்றும் அறிவேன். ஆயினும் என்னை உனக்குப் பிடித்திருக்கிறதென்று சொல்லவேண்டுமென என் அகம் விரும்பியது.” அவன் உடனே அந்த தற்சிறுமையுணர்வை வென்று சிரித்தான். “சரிதான், அது என் பிழை அல்ல. மனிதர்களை அத்தனை சிறியவர்களாகப் படைத்த பிரம்மனின் பிழை அது.”
பிருதை புன்னகை செய்து “ஆனால் நான் இங்கே உள்ளே நுழைந்து உங்களை நோக்கியபின் உங்களை விரும்புகிறேன்” என்றாள். “என் ஆற்றலின்மையையா?” என்றான் பாண்டு. “அதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை” என்று பிருதை சொன்னாள். “என்னைப்பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்று பாண்டு கேட்டான். “நீங்கள் உங்கள் அன்னை வைத்து விளையாடும் ஒரு பளிங்குப்பாவை” என்று பிருதை புன்னகையுடன் சொன்னாள். “அதை உங்கள் அளவில் எதிர்ப்பதற்காக ஓர் அங்கதத்தை சொல்லிலும் பாவனையிலும் வளர்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.”
சிரித்தபடி “அவ்வளவுதான்… என்னைப்பற்றி இதற்குமேல் ஏதும் சொல்வதற்கில்லை” என்றான் பாண்டு. “ஆகா, எனக்கே அனைத்து எடையும் விலகி இறகுபோல ஆகிவிட்ட உணர்வு ஏற்படுகிறது. இரண்டுவரிகளில் முழுமையாக வகுத்துவிடக்கூடிய ஓரு வாழ்க்கைக்கு நிகராக வேறேது இருக்கமுடியும்?” பிருதையும் சிரித்துக்கொண்டு “இரண்டுவரிக்குமேல் தேவைப்படும் வாழ்க்கை என ஏதும் மண்ணில் உண்டா என்ன?” என்றாள். “உண்டு” என்று பாண்டு சிரித்தான். “உனக்கு இன்னும் ஒரு சொல் தேவைப்படும் என நினைக்கிறேன்” கண்களில் குறும்புடன் “அந்த இரண்டுவரிக்குப்பின் ஆனால் என்ற ஒரு சொல்லையும் சேர்த்துக்கொள்ளலாம்.”
இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். பாண்டுவின் முக்கியமான இயல்பொன்றை பிருதை உணர்ந்தாள். எந்தத் தடையும் இல்லாமல் பளிங்குமலை உடைந்து சரிவதுபோல சிரிக்க அவனால் முடியும். அச்சிரிப்பை எதிரில் இருப்பவரிடமும் அவனால் உருவாக்க முடியும். அவள் அப்படிச் சிரித்தது சிறுமியாக இருக்கும்போதுதான் என எண்ணிக்கொண்டாள். “நீ ஒரு சூழ்மதியாளர் என்றார்கள். அதனுடனும் ஆனால் சேரும் என்று சற்றுமுன் தெரிந்துகொண்டேன்” என்றபின் அவன் மீண்டும் சிரித்தான்.
VENMURASU_EPi_98__
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
“நான் உங்களுக்கு மாலையிட்டபோது என்ன நினைத்தீர்கள்?” என அவள் பேச்சை மாற்றினாள். பாண்டு “நான் சொல்வதைக்கேட்டு நீ வியப்புறமாட்டாய் என அறிவேன்” என்றான். “நீ என் கழுத்தில் மாலையிட்டபோது அது எனக்கு அதிர்ச்சியாக இருக்கவில்லை. அதை நான் எதிர்பார்த்திருந்தேன். உன் காலடிகள் ஒவ்வொருவரையாக தாண்டி வர வர நீ என்னை நோக்கி வந்து என் கழுத்தில் மாலையிடுவதை நான் முழுமையாகவே கற்பனைசெய்துவிட்டிருந்தேன்.”
“ஆம், அதில் வியப்புற ஏதுமில்லை” என்றாள் குந்தி. “ஏன்…? நான் அழகற்றவன், ஆண்மையும் அற்றவன்” என்றான் பாண்டு. “உடலைச்சார்ந்தா உள்ளம் இயங்குகிறது?” என்று பிருதை சொன்னாள். பாண்டு துள்ளி எழுந்து மஞ்சத்தில் கால்மடித்து அமர்ந்துகொண்டான். “முற்றிலும் உண்மை… இந்த நொய்ந்த வெள்ளுடல் நானல்ல. இது எனக்குக் கிடைத்திருக்கிறது. நான் இதுவல்ல. நான் உள்ளே வேறு… வேறு யார்யாரோ…”
“யார்?”என்றாள் பிருதை. “எப்படிச் சொல்வேன்?” என பாண்டு கணநேரம் திகைத்தான். துள்ளி எழுந்து நின்று உளவிரைவால் கைகளை விரித்தான். “நானென்பது ஆறுபேர். ஆறு பாண்டுக்கள். ஒருவன் அளவில்லாத கொடையும் பெருந்தன்மையும் கொண்டவன். எச்சிறுமைக்கும் அப்பால் தலைதூக்கி நிற்கும் ஆண்மகன். அவனாக நான் ஆயிரம் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். இன்னொருவன் அறமே உருவானவன். ஒவ்வொன்றிலும் என்றுமுள நெறியைத்தேடி அவ்வண்ணம் வாழ்பவன். அவனாகவும் நான் ஆயிரம் முறை வாழ்ந்திருக்கிறேன்.”
“இன்னும் நால்வர்…” என்றான் பாண்டு. அன்னையிடம் தன் வீரவிளையாட்டுக்களைச் சொல்லும் சிறுவன் போல சற்றே மோவாயைத் தூக்கி திக்கித் திணறிய சொற்களுடன் “மூன்றாமவன் நிகரற்ற உடலாற்றல் கொண்டவன். மரங்களை நாற்றுக்களைப்போலப் பிடுங்குபவன். பாறைகளை வெறும் கைகளால் உடைப்பவன். கட்டற்ற காட்டுமனிதன். சூதும் சூழ்தலும் அறியாதவன். நான்காமவன்…” அவன் முகம் சிவந்தது. பிருதை புன்னகைசெய்தாள்.
“நான்காமவன் இந்திரனுக்கு நிகரான காமம் கொண்டவன். என்றுமிறங்காததது அவன் கொடி. இந்த பாரதவர்ஷமெங்கும் அலைந்து அவன் மகளிரை அடைகிறான். காந்தாரத்தில் காமரூபத்தில் இமயத்தில் தெற்கே பாண்டியத்தில்… பலவகையான பேரழகியர். மஞ்சள்வண்ணத்தவர். செம்பொன்னிறத்தவர். மாந்தளிர் நிறத்தவர். நாகப்பழத்தின் நிறத்தவர்… அவனுக்கு காமம் நிறைவடைவதேயில்லை.”
பிருதை வாய்பொத்திச் சிரித்தபோது அவள் முகமும் கழுத்தும் சிவந்தன. “என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய்?” என்றான் பாண்டு. “இயல்பான கனவுகள்தானே என்றுதான்” என்றாள் பிருதை. “ஆம், அவை இயல்பானவை. ஆனால் அவையும் எனக்குப் போதவில்லை. பெரும்புரவியறிஞனாக ஆகவேண்டும். மண்ணிலுள்ள அனைத்துப்புரவிகளையும் அறிந்து கொள்ளவேண்டும் என்று எண்ணுவேன். முக்காலத்தையும் அறியும் நூலறிஞனாக ஆகி பாரதவர்ஷத்தின் ஒவ்வொருவருக்கும் சென்றதும் வருவதும் பார்த்துக்குறிக்கவேண்டும் என நினைப்பேன்…”
“ஆறுமுகம்” என்று பிருதை சிரித்தாள். “ஆம், என் இறைவடிவம் ஆறுமுகவேலனேதான். அஸ்தினபுரியில் என் அரண்மனைக்குள் எனக்காக சுப்ரமணியனின் சிறிய ஆலயமொன்றை அமைத்திருக்கிறேன்.” பிருதை “சுப்ரமணியனுக்கு தேவியர் இருவர்” என்றாள். “ஆம், அதுவும்தான்” என்றான் பாண்டு. “காட்டுமகள் ஒருத்தி, அரசமகள் ஒருத்தி.” பிருதை சிரித்துக்கொண்டு “இதையெல்லாம் உங்கள் அன்னையிடம் சொல்வீர்களா என்ன?” என்றாள். பாண்டு விழிகளைத் தாழ்த்தி “இல்லை… இவை எனக்குள் மட்டுமே இருப்பவை. நான் இப்போது எப்படி இத்தனை எளிதாக உன்னிடம் சொன்னேன் என்றே தெரியவில்லை” என்றான்.
அவள் “சொல்வதற்காகத்தானே துணைவி?” என்றாள். “சொல்லாவிட்டாலும் நீ எனக்குள் உள்ள அனைத்தையும் அறியத்தான் போகிறாய். உன்னைப்போன்றவர்களை எதிர்கொள்ள ஒரே வழிதான். அப்படியே மண்ணில் குப்புற விழுந்து சரணடைவது… பிருதை, அஸ்தினபுரியில் இருவர்தான் உன்னெதிரே நிற்கமுடியும். பிதாமகர் பீஷ்மர் விண்ணளந்த பெருமானுக்கு முன் நிற்கக்கூடியவர். அவரை நீ ஒருபோதும் முற்றறியவோ முந்திச்செல்லவோ இயலாது. ஆகவே உன் சதுரங்கக் களத்தில் உனக்கு எதிரே அமரக்கூடியவன் என் தம்பி விதுரன் மட்டுமே.”
பிருதை இயல்பாக கூந்தலை ஒதுக்கியபடி “அஸ்தினபுரியின் அரசரே அவர்தான் என்கிறார்கள்” என்றாள். “ஆம், அவன் பாரதவர்ஷத்தையே ஆளும் திறன்கொண்டவன். பார்ப்பதற்கு வியாசரைப்போலவே இருக்கிறான் என்கிறார்கள். ஆகவே பேரரசிக்கும் பிதாமகருக்கும் அவன் மேல் பெரும் பற்று உள்ளது… இங்கே வந்தபின்னர்தான் சுயம்வர மண்டபத்தில் யாதவர்களும் இருப்பதைக் கண்டேன். அப்படியென்றால் விதுரனையும் அமரச்செய்திருக்கலாம்.”
“உங்கள் தமையரின் துணைவி பேரழகி என்றார்கள்” என அப்பேச்சை வெட்டி திருப்பிக்கொண்டு சென்றாள் பிருதை. “ஆம்… பாரதவர்ஷத்தின் பேரழகிகளில் அவளும் ஒருத்தி என்கிறார்கள். வெண்பளிங்கு நிறம் கொண்டவள். அவள் கண்கள் மீன்கொத்தியின் குஞ்சுகள் போல மின்னும் நீலநிறம் கொண்டவை என்கிறார்கள்” என்றான் பாண்டு. ‘விழியிழந்தவருக்கு பேரழகி ஒருத்தி மனைவியாக வருவதில் ஒரு அழகிய நீதி உள்ளதென்று எனக்குப்படுகிறது.”
“என்ன?” என்றாள் பிருதை. அவள் தன்னுள் சொற்களை தெரிவுசெய்யத்தொடங்கினாள். “அழகென்பது பார்க்கப்படுவதற்காக மட்டுமே உள்ளது என்பது எவ்வளவு மடமை. அது தன்னளவில் ஒரு முற்றிருப்பு அல்லவா? நான் ஓவியங்களை வரைந்ததும் என் அன்னை கேட்பாள், அவற்றை மனிதர்கள் பார்க்கவேண்டுமல்லவா என. ஏன் பார்க்கவேண்டும்? பார்ப்பதன் மூலம் ஓவியம் வளர்வதுமில்லை தேய்வதுமில்லை. சுவைகள் மண்ணில் முடிவில்லாது கிடக்கின்றன. கடலின் உப்பை நாக்கு உருவாக்கவில்லை. நாக்கால் அறியப்படாவிட்டாலும் உப்பின் முடிவின்மை அங்குதான் இருக்கும்.”
அவன் நிறுத்திக்கொண்டு “என்ன சொல்கிறேன் என்றே தெரியவில்லை. ஆனால் ஒரு பேரழகு கண்களால் தீண்டப்படவில்லை என்பதில் மகத்தான ஏதோ ஒன்று உள்ளது என்று எனக்குத் தோன்றியது. ஆழ்கடல்களைப்போல. தூய்மையான ஏதோ ஒன்று…” அவன் உளஎழுச்சியுடன் “அப்படித்தான் காந்தாரநாட்டு இளவரசியைப்பற்றி சொல்லிக்கொள்கிறார்கள். தூயவள், மிகமிகத் தூயவள் என்று. அவளுடைய கன்னிமையின் வல்லமையால்தான் அவள் காலடிகள் நகரில் பதிந்த அன்று வானமே பேரருவியெனக் கொட்டியது என்கிறார்கள் சூதர்கள்.”
“நாம் ஒருமுறை மதுவனத்துக்குச் செல்லவேண்டும்” என்று பிருதை சொன்னாள். “இங்கே திருமணத்துக்கு என் தந்தை சூரசேனர் வரவில்லை. நாம் அங்கே சென்று அவரைப் பார்ப்பதே முறை.” பாண்டு அவள் பேச்சை அப்படியே திருப்பிக்கொண்டுசெல்வதை உணர்ந்து சிலகணங்கள் திகைத்தபின் “ஆம், செல்வோமே. அதற்கென்ன?” என்றான். “நான் ஓர் இளவரசி அல்ல. யாதவப்பெண். காடுகளில் ஆநிரை மேய்த்துக்கொண்டிருந்தவள். அதை அங்குசென்றால்தான் நீங்கள் அறியமுடியும்” என்றாள் பிருதை சிரித்தபடி. “நானும் ஆநிரைகள் மேய்ப்பதென்றாலும் செய்கிறேன்” என்று அவன் சொன்னான்.
“எங்கள் நெறிகளும் முறைமைகளும் வேறு” என்று குந்தி சொன்னாள். “ஷத்ரியப்பெண்களைப்போல நாங்கள் அந்தப்புரத்து கூண்டுப்பறவைகளல்ல. ஆண்களின் கைப்பாவைகளுமல்ல.” பாண்டு இடைபுகுந்து “ஆம், அறிவேன். காந்தாரத்திலும் அப்படித்தான் என்றார்கள். காந்தார இளவரசியின் விளையாட்டே புரவியில் பாலைநிலத்தில் நெடுந்தூரப்பயணங்கள் செய்வதுதான் என்றனர்.”
அவனுடைய சொற்களால் எங்கோ சீண்டப்பட்டு பிருதை “நான் சொல்லவருவது ஒன்றுள்ளது” என்றாள். அவன் முகம் எச்சரிக்கை கொள்ள கண்கள் விரிந்தன. அதைக்கண்டபோதுதான் அச்சொற்றொடர் பிழையானது என அவள் அறிந்தாள். அவள் பேச்சை ஏன் யாதவர்களின் குலமுறைக்குள் கொண்டுசெல்கிறாள் என்ற எச்சரிக்கையை அவன் அடைந்துவிட்டான். “என்ன சொல்லவிருக்கிறாய்?” என்று பாண்டு கேட்டதுமே அவனுடைய அகம் செல்லும் வழிகளனைத்தும் அவளுக்குத்தெரிந்தன.மின்னல் சிடுக்கென கணத்தில் கோடிக்கிளைகளை அது விரித்துவிட்டிருந்தது.
பிருதை பாண்டுவின் கண்களை நோக்கி “என் புதல்வியே மார்த்திகாவதியை ஆளும் உரிமை கொண்டவள். புதல்வி இல்லையேல் புதல்வன்” என்றாள். பாண்டு ஐயம் விலகாமல் “ஆம்” என்றான். “எந்தநிலையிலும் மார்த்திகாவதி அஸ்தினபுரியின் கிளைநாடாக இருக்காது. அதன் மீது அஸ்தினபுரி எந்த ஆதிக்கத்தையும் செலுத்த முடியாது” என்றாள் பிருதை. பாண்டுவின் உடல் முறுக்கமிழப்பதை காணமுடிந்தது. புன்னகையுடன் “அஸ்தினபுரி என்றுமே ஆதிக்கம் செலுத்த விழையும் நாடல்ல” என்றான்.
ஏன் பின்வாங்கினோமென்று குந்தி வியந்துகொண்டாள். சொல்லியிருக்கவேண்டிய தருணம், அவள் கூட்டிச்சேர்த்த சொல்முனை அது. அங்குசெல்லும் பாதையை திறந்தும் விட்டாள். அடுத்தகணம் பாண்டு கேட்ட வினா அவள் எண்ணியவற்றை உறுதிசெய்தது. “சல்லியரின் மாத்ரநாட்டிலும் இந்த முறைமைகள் உண்டா என்ன?” அவள் தன் கண்களை அவன் கண்களுடன் நேரடியாக நிலைக்கச்செய்து “மாத்ரர்கள் ஷத்ரியர்கள் அல்லவா? அங்கே மூத்த மைந்தனல்லவா முறைமன்னன்?” என்றாள். பாண்டு கண்களை விலக்கி “ஆம், ஆனால் ஒவ்வொரு ஷத்ரியகுடியும் ஒவ்வொரு பழங்குலத்திலிருந்து வந்தது” என்றான்.
ஏன் பின்வாங்கினாளென அவள் அப்போது உணர்ந்தாள். அவன் அக்கணத்தில் எண்ணிய சித்திரம் அவளை வெறும் பெண்ணாக நிறுத்தியது. அதை அவள் ஏற்க சித்தமாகவில்லை. “காந்தாரர்கள் பஷுத்துரர்களின் குருதிவழி கொண்டவர்கள். லாஷ்கரர்கள் என்னும் ஏழுபெருங்குலக்குழுதான் அவர்களை இன்றும் ஆள்கிறது. ஆயினும் அவர்களின் கற்பொழுக்கநெறிகள் ஷத்ரியர்களைப்போலவே உள்ளன” என்றான் பாண்டு. இன்னொரு அலை வந்து அவள் எண்ணியவற்றை அடித்து மேலும் விலக்கிக் கொண்டு சென்றதைப்போல உணர்ந்தாள்.

4/25/14

பகுதி ஒன்பது : மொழியாச்சொல்[ 2 ]

பகுதி ஒன்பது : மொழியாச்சொல்[ 2 ]
அவை நிறைந்து அமர்ந்திருந்தவர்களை தன் உடலால் பார்த்தபடி, விழிகளை வெட்டவெளியில் மிதக்கவிட்டு காற்றில் மிதந்துவரும் பொன்னிறமான புகைச்சுருள் போல குந்தி நடந்துவந்ததை விதுரன் தன் ஐம்புலன்களாலும் பார்த்துக்கொண்டிருந்தான். அங்கிருந்த அனைவர் விழிகளும் அவளில் குவிந்திருக்க விதவிதமான மெல்லிய உடலசைவுகள் அவையில் பரவின. மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் முடிந்ததும் அமைதி நிலவியது. எவரோ மெல்ல இருமினர். யாரோ ஒருவருடைய கங்கணம் மெல்லக்குலுங்கியது. எவரோ மெல்லியகுரலில் ஏதோ சொன்னார்கள்.
குந்திபோஜன் எழுந்து வணங்கி “அவையினரே, உங்கள் வருகையால் அனைவரும் இந்தச் சிறிய யாதவநாட்டை சிறப்பித்திருக்கிறீர்கள். இங்கே என் அறப்புதல்வி பிருதையின் மணத்தன்னேற்பு நிகழ்வை குலமுறைப்படி நடத்தும்படி எனது போஜர் குலத்தின் மூத்தாரை கோருகிறேன்” என்றார். அவையில் இருந்த மூன்று யாதவ முதியவர்கள் எழுந்து வணங்கினார்கள். போஜன் வணங்கி நிற்க ரிஷபரும் மூன்று துணையமைச்சர்களும் சென்று அவர்களை வணங்கி அவைமுகப்புக்கு இட்டு வந்தனர்.
மூன்று யாதவர்களும் வெண்ணிறப் பருத்தியாடை உடுத்து கழுத்தில் குன்றிமணிமாலைகளும் மஞ்சாடிமாலைகளும் அணிந்திருந்தனர். இடையில் மூன்று சுற்றாக சணல் கயிற்றைச்சுற்றிக்கட்டி தங்கள் குலக்குறியான வளைதடியை கையில் ஏந்தியிருந்தனர். அவர்கள் வந்து அவையை மும்முறை பணிந்து வணங்கினர். அவர்களில் இளையவர் “அவையினரே, ஆநிரை காத்தல் என்பது மானுடர்க்கு கானுறை மாயோன் வகுத்த முதற்பெருந்தொழில். அத்தொழில்செய்யும் ஆயர்களே மண்பயனுறச்செய்யும் முதற்குடிகள். எங்கள் குலத்துதித்த இளவரசியின் மணநிகழ்வு தொன்மையான ஆயர்முறைப்படியே ஆகவேண்டுமென விழைகிறோம்” என்றார்
இரண்டாமவர் “வீரர்களே முன்பெல்லாம் ஏறுதழுவி பெண்கொள்ளும் வழக்கமே இங்கிருந்தது. ஆயர்களும் வில்லெடுக்கத் தொடங்கியபின்னர் அவ்வழக்கம் அரசர்களுக்குரியதாக கொள்ளப்படுவதில்லை. ஆயினும் கன்று ஏற்புச் சடங்குகள் வழியாகவே ஆயர்குலத்து மணம்கோடல் நிகழவேண்டுமென்பதனால் மூன்று போட்டி நிகழ்வுகள் இங்கே முன்வைக்கப்படுகின்றன. மூன்றில் ஒன்றை வெல்பவரே இவ்வரங்கில் இளவரசியின் மாலைகொள்ளத் தகுதியுள்ளவர் என்று கொள்வோம்” என்றார்.
மூன்றாமவர் “நிகழ்வுகளை எங்கள் மாணவர்கள் இங்கே விளக்கியுரைப்பார்கள்” என்றார். அதன்பின் வெண்குன்றுபோன்ற உடலும், கூரிய இரும்புமுனைகள் பதிக்கப்பட்ட கொம்புகளும் கொண்ட பெரும் எருது ஒன்று மூக்குவளையத்தில் கட்டப்பட்ட கயிற்றால் வழிநடத்தப்பட்டு அவைக்குக் கொண்டுவரப்பட்டது. அதன் கொழுத்த திமில் இடப்பக்கமாகச் சரிந்து அசைந்தது. கழுத்துக்குக் கீழே தசைமடிப்புகள் அலையலையாக வளைந்து தரை தொடும்படி தொங்கிக்கிடந்தன. எலும்பே தெரியாமல் இறுகிய தசை மூடி மெழுகியிருந்த அதன் உடல் நதிநீர்ப்பரப்பு போல ஆங்காங்கே சிலிர்த்தது. கனத்த குளம்புகள் கல்தரையை உரசும் ஒலி அவை முழுக்க ஒலித்தது. அது நடந்த எடையால் அவைமுற்றம் அதிர்ந்தது.
எருது கொம்பு தாழ்த்தி தரையை முகர்ந்தபின் மூச்சு சீற தலைதூக்கி அவையை நோக்கியது. தசைச்சுருள்கள் மடிந்து சூழ்ந்த அதன் முகத்தில் சேற்றில் பாதி புதைந்த கருங்கல்சில்லு போல விழிகள் ஈரம் மின்ன தெரிந்தன. தேன்கூடு போன்ற மூக்குக்கருமைக்கு அடியே கனத்த தாடையின் நீட்டி நின்ற முள்முடிகளில் வாய்நீர்க்கோழையின் துளிகள் திரண்டு மணியாகி நின்றன. முன்னங்காலைத் தூக்கி ஊன்றி அது உடல் எடையை மாற்றிக்கொண்டது. கண்களின் ஈரத்தைச் சுற்றிப்பறந்த சிறு பூச்சிகளை உதற தலையைக் குலுக்கியது. வாழைப்பூநிற நாக்கை நீட்டி தன் விலாவை தானே நக்கிக்கொண்டது.
மூத்தாரின் மாணவன் சபைஏறி “வீரர்களே, இந்த எருது ஒவ்வொருவர் பீடத்துக்கு அருகிலும் வரும். இருக்கை விட்டெழாமலேயே இதன் கழுத்தில் கட்டுக்கயிறைச் சுற்றிக்கட்டுவதே போட்டியாகும். ஒருமுறை மட்டுமே முயலவேண்டும். கட்டமுடியாதவர்கள் அவைவிட்டு வெளியேறவேண்டும். எவரும் ஆயுதங்களெதையும் பயன்படுத்தலாகாது” என்றான். சேவகர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு கட்டுக்கயிற்றைக் தாலத்தில் கொண்டுவந்து நீட்டினர்.
பாண்டு புன்னகையுடன் “முதலில் எருது எங்குள்ளது என நீ எனக்குச் சொல்லவேண்டும் விதுரா” என்றான். விதுரன் “இளவரசே, நாம் அதைக் கட்டும்படி ஆகாது. மதுராபுரியின் இளவரசரே கட்டிவிடுவார். நாம் அடுத்த போட்டியையே சந்திக்கவிருக்கிறோம்” என்றான். பாண்டு நகைத்தபடி “ஆம், அவன் என்ன இருந்தாலும் யாதவன்” என்றான். எருதின் மூக்குவளையம் அகற்றப்பட்டது. ஒருவன் அதை பின்னாலிருந்து ஊக்க அது அமர்ந்திருந்தவர்களின் முன் பக்கம் வழியாக திமில் குலுங்க, விலாத்தசை அதிர நடந்தது.
முதல் யாதவ இளைஞன் கனத்த கரிய உடல் கொண்டிருந்தான். தோலாடையை மார்பின்மேல் போட்டு கல்மணிமாலையும் மரக்குழையும் அணிந்திருந்தான். கூர்ந்த கண்களுடன் கயிற்றை எடுத்து எருதின் கழுத்தை நோக்கிக் கொண்டுசென்றான். எருது அவனை திரும்பிநோக்கியதாகவே தெரியவில்லை. ஆனால் அவன் உடலை முன்னால் சரித்து எருதை அணுகியதும் தலையை பக்கவாட்டில் சாய்த்து ஈ ஒன்றை ஓட்டுவது போல மிக எளிதாக கொம்பைத் திருப்பி தலையைத் தூக்கியது. அதன் கொம்பு அவன் விலாவைக்குத்தி விலாவெலும்புக்குள் சென்று சிக்கிக்கொள்ள அதன் தூக்கிய தலையுடன் அவனும் அலறியபடி மேலே எழுந்தான்.
கைகால்களை இழுத்து உதறியபடி அடைத்த குரலில் அலறிக்கொண்டு சமநிலை தவறி அதன் திமிலைப்பற்றிக்கொள்ள கை பதறித் துழாவினான். கையின் பிடி வழுக்க காளையின் முகத்தில் தன் வயிறு உரசிச்சரிய அவன் துடித்த கைகால்களுடன் அதன் முன் விழுந்தான். கீழே கிடந்து அதிர்ந்த அவன் உடலில் இருந்து அதன் உயர்ந்த கொம்பு வரை அவன் குடல் மஞ்சள்கொழுப்பு படிந்த செந்நிற சகதிக்குழாயாக இழுபட்டு அவன் துடிப்பில் அசைந்து வழுக்கி நழுவிச்சரிந்து அவன் மேலேயே விழுந்தது. அவனைச்சுற்றி குருதி கொப்பளித்து கல்தரையில் வழிய அவன் வயிறு செந்நிறமாகத் திறந்து உள்ளே குடல்கள் கொதிக்கும் செங்கூழ் என கொப்பளிப்பது தெரிந்தது.
அவை சிலைவிழிகளுடன் அக்காட்சியை நோக்கி அமர்ந்திருக்க கம்சன் புன்னகையுடன் தன் தொடையில் அடித்துக்கொண்டான். சல்லியன் அரைக்கணம் கம்சனை நோக்கியபின் திரும்பினான். யாதவனின் இருகால்களும் குருதியில் வழுக்கி வழுக்கி இழுபட்டன. தலை பின்னகர்ந்து வாய் திறந்து, நாக்கு பதைபதைக்க, சேற்றுக்குழியின் குமிழிகள் உடையும் ஒலியுடன் துடித்தான். எருது அவனை குனிந்துகூட பாராமல் அவனைத் தாண்டி காலெடுத்துவைத்து அடுத்த யாதவன் முன் வந்து நின்றது.
அவன் உள்ளம்பதற அசையாமல் அமர்ந்திருந்தான். அவன் தாடை இறுகியசைவது தெரிந்தது. சேவகன் பின்னால் தட்ட எருது அடுத்த யாதவன் முன்னால் வந்தது. மூன்று யாதவர்கள் அஞ்சி அமர்ந்திருக்க நான்காமவன் கயிற்றை எடுத்தான். எருதின் உடல் சிலிர்த்தது. அது உலைத்துருத்தி என மூச்சிரைத்தது. அவன் எருதின் கொம்பை நோக்கியபடி ஒரு கையால் கயிற்றை நீட்டினான். மறுகையால் அது கொம்பைச்சரிக்குமென்றால் பிடிக்க ஒருங்கினான். ஆனால் அசையாமல் நின்ற எருது ஒருகணத்தில் முழுமையாகத் திரும்பி அவன் நெஞ்சில் தன் தலையால் நேருக்கு நேராக ஓங்கி முட்டியது.
யாதவன் அலறி பீடத்துடன் பின்னால் விழ அவன் சேவகன் அவனைப்பிடிக்க முன்னகர்ந்தான். அச்சேவகனை குத்தித் தூக்கி தன்பின்னால் சரித்தபின் நாகமெனச் சீறியபடி திமிலசையக் குனிந்து உடைந்த விலாவை கையால்பொத்தியபடி எழுந்து விலகமுயன்ற யாதவனை தன் வேல்நுனிக்கொம்புகளால் குத்தியது எருது. அவன் அலறியபடி உடல் அதிர்ந்து ஒருகையால் தரையை ஓங்கி அறைந்தான். எருது கொலைக்காகப் பழக்கப்பட்டது என விதுரன் உணர்ந்தான். அது வெறியுடன் அவனைக் குத்தி தூக்கிப்போட்டது. அவன் உடலுக்குள் புகுந்த கொம்பை ஆட்டித் துழாவியது. நிமிர்ந்தபோது அதன் வெண்ணிற பெருமுகம் முற்றிலும் செந்நிறமாக மாற கொம்புநுனிகளில் இருந்து நிணம் வழுக்கி முகத்திலும் கழுத்திலும் விழுந்து கீழே சொட்டியது. சீறியபடி அது தலையை அசைத்தது.
கொழுவிய குருதித்துளிகள் சொட்டிக்கொண்டிருக்கும் முகத்துடன் மேலும் அது நடந்தபோது எந்த யாதவனும் கைநீட்டவில்லை. கம்சன் மீசையை இடக்கையால் நீவியபடி புன்னகையுடன் அது தன்னை நோக்கி வருவதை பார்த்துக்கொண்டிருந்தான். அவையே அவனைத்தான் நோக்கிக்கொண்டிருக்கிறது என அவன் அறிந்திருந்தான். கீழே நெளிந்த உடல்கள் அமைதியடைந்தன. அவற்றை அரண்மனைச் சேவகரும் அந்த யாதவர்களின் அணுக்கத்தோழர்களும் சேர்ந்து எடுத்து விலக்கினர்.
கம்சனுக்கு முன்னால் இருந்த யாதவன் கைநீட்டுவது போல சற்று அசைய எருது மூச்சு சீறி தோலைச் சிலிர்த்தது. அவன் அசைவிழந்து மூச்சடக்கிக் கொண்டான். சேவகன் தட்ட எருது கம்சனின் முன்னால் வந்து நின்றது. அது வரும்போதே அவன் தன் சால்வையை விலக்கி கைகளை ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டு சிறிய விழிகளால் கூர்ந்து நோக்கிக் காத்திருந்தான். எருது அவனருகே வந்தபோது அவன் அந்தக்கயிற்றை தன் சேவகனிடம் கொடுத்து விட்டான்.
எருது அவன் முன் நின்று முன்னங்காலை மெல்ல தரையில்தட்டி குனிந்து கொம்பை ஆட்டியது. அதன்மேல் குருதி சிறிய குமிழிகளாகவும் கட்டிகளாகவும் மாறி வழிந்த நிலையில் உறையத்தொடங்கியிருந்தது. கம்சன் அதை ஒரு கணம் நோக்கினான். பின்பு நினைத்திருக்காத கணத்தில் அதன் கழுத்தில் ஓங்கி கையால் வெட்டினான். அந்த ஓசையில் அவை திகைத்தது. அடிபட்ட எருது திரும்புவதற்குள் அவன் அதன் வலக்கொம்பை தன் இடக்கையால் பற்றி முழுவல்லமையுடன் இழுத்து வளைத்து வலக்கையால் மீண்டும் அதன் காதுக்குப்பின்பக்கம் ஓங்கி அறைந்தான்.
எருது நிலைகுலைந்தாலும் கொம்பை விடுவித்து அவனை குத்தித்தூக்க முயன்றது. கம்சன் தன் கழுத்துநரம்புகளும் தோள்தசைகளும் தெறிக்க, தாடை இறுகி கடிபட, முழு வல்லமையாலும் அதன் கொம்பை வளைத்து அதன் தலையை நிலம்நோக்கிச் சரித்தான். அது கால்களை முன்னால் நீட்டி வைத்து எழ முயல அவன் தன் இடக்காலால் அதன் கால்களைத் தட்டினான். எருது நிலையழிந்து சரிந்து விழுந்தது. அதன் தலையை தன் இடக்கையால் வளைத்து மடியோடு சேர்த்து இறுக்கியபடி அதன் கழுத்தில் ஓங்கி அறைந்தான் கம்சன். ஒரே இடத்தில் ஐந்துமுறை அவன் அறைந்ததும் எருதின் வாய் திறந்து கனத்த நாக்கு வெளியே வந்தது.
கொம்பைப்பிடித்த கையை விடாமல் எருதின் தலையை உடலுடன் அழுத்திப்பிடித்து வலக்காலால் அதன் முன்காலை அழுத்தி மிதித்து அதன் அடிக்கழுத்தை அடித்துக்கொண்டே இருந்தான். அதன் உடல் அதிர்ந்து அதிர்ந்து அடங்கி கால்கள் மண்ணை உதைத்து ஓய்வது வரை. அவன் அதை அறைந்ததுமே ஏதோ சொல்ல எழுந்த இளையவரை மூத்தவர் கையசைத்து அடக்கினார். எருதின் வாயிலிருந்து கொழுத்த குருதி வழியத்தொடங்கியது. அதன் உடல் முற்றிலும் அசைவிழந்து விழிகள் மேலேறி வெண்ணிறச் சிப்பிகளாகத் தெரிந்தன.
VENMURASU_EPi_96_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
கம்சன் அந்தக்குருதியைத் தொட்டு தன் மீசையில் தடவி நீவியபின் கையை நீட்ட சேவகன் கட்டுக்கயிற்றைக் கொடுத்தான். அதை எருதின் கழுத்தில் கட்டியபின் அதை காலால் உதைத்துத் தள்ளினான். அதன்குருதியிலேயே வழுக்கி அது அசைந்துவிலகியது. தொங்கிய நீள்நாக்கு அவ்வசைவில் ஆடியது.
“கம்சரே, எந்த யாதவனும் எருதைக் கொல்வதில்லை” என்றார் இளைய குலமூத்தவர் உரக்க. “எங்கள் கண்முன் நம் குலச்சின்னத்தை அவமதித்திருக்கிறீர்கள்.” கம்சன் கோணலான உதடுகளுடன் சிரித்து “தன்னைக்கொல்லவரும் பசுவையும் கொல்லலாமென்பது விதி” என்றான். “ஆனால்…” என அவர் தொடங்கியதும் மூத்தவர் கையமர்த்தி தன் மாணவனிடம் தலையசைத்தார்.
அவன் முன்னால் வந்து வணங்கி அடுத்த போட்டியை அறிவித்தான். சிவந்த நிறமான பசு ஒன்று அவைமுன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. “அவையோரே, இப்பசுவின் கழுத்தில் உள்ள வளையத்தை உடைக்காமல் கழற்றி எடுப்பவர் வென்றார். பிறர் அவை நீங்கலாம். அதற்குரிய நேரம் ஒரு மூச்சு” என்றான் மாணவன். பசு சேவகனால் முதல் ஷத்ரிய மன்னன் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அவன் திகைப்புடன் அந்த இரும்பு வளையத்தைப்பார்த்தான். திரும்பி தன் சேவகனைப்பார்த்தபின் வளையத்தைத் தூக்கி கொம்புவழியாக கழற்ற முயன்றான். கொம்புக்கு மிகக்கீழே இருந்தது அது.
அடுத்த ஷத்ரியன் அந்த வளையத்தை தன் புஜங்களால் வளைத்து கொம்பை நோக்கி இழுக்கமுயன்றான். அவன் தோற்றதுமே பிற அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அந்தவளையம் பசுவின் கொம்புகள் வழியாக வரவே முடியாதென்று. திகைப்புடன் சிலர் தொட்டுப்பார்த்து விலகினார்கள். சிலர் கையையே நீட்டவில்லை. பாண்டு விதுரனைப் பார்த்தான். விதுரன் “அதை சல்லியர் செய்துவிடுவார்” என்றான். பாண்டு “எப்படி?” என்றான். விதுரன் “தெரியவில்லை. ஆனால் செய்துவிடமுடியும் என சல்லியர் நினைப்பதை முகத்தில் காண்கிறேன்” என்றான்.
சல்லியன் முன் பசு கழுத்து வளையத்துடன் வந்து நின்று தலையை ஆட்டியது. அவனையே அவை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தது. சல்லியன் அந்த வளையத்தை சிலகணங்கள் உற்றுநோக்கியபின் அதன் இருபக்கமும் தன் கையை வைத்து அழுத்தி நீள்வட்டமாக்கினான். பசுவின் கழுத்தெலும்பு இறுகும்படி வளையத்தை நீட்டியபின் அதன் நீள்முனையை ஒரு கையால் பற்றி பசுவின் மூக்கை இன்னொரு கையால் பிடித்தான். அதன் வாய்நீரைத் தொட்டு அதன் மூக்குஎலும்பில் நன்றாகப்பூசினான். அவன் என்னசெய்யப்போகிறான் என்று ஷத்ரியர் திகைக்க யாதவகுலமூத்தார் புன்னகை புரிந்தனர்.
சல்லியன் பசுவின் மூக்கையும் தாடையையும் சேர்த்துப்பற்றி ஒரே வீச்சில் அழுத்திப் பின்னால் உந்தி தாடையை கழுத்தோடு முடிந்தவரை ஒட்டி அதே கணம் வளையத்தின் நீள்நுனியை முன்னால் இழுத்து அதற்குள் பசுவின் மூக்கையும் தாடையையும் அழுத்திச்செலுத்தி மேலே தூக்கினான். பசுவின் எச்சில்பரவிய முகஎலும்பு வழியாக இரும்புவளையம் வழுக்கி மேலேறியதும் கொம்பு வழியாக அதை உருவி மேலே தூக்கி எடுத்து அவைக்குக் காட்டினான். பசு வலியுடன் கழுத்தை உதறி காதுகளை அடித்துக்கொண்டது. ஒருகணம் திகைத்தபின் அவை ஆரவாரமிட்டது.
குலமூத்தார் “யாதவர்களில் ஷத்ரியர்களைத் தேடினோம். ஷத்ரியர்களில் யாதவர்களைத் தேடினோம். இனி ஷத்ரியர்களில் அறிஞனைத் தேடுவோம்” என்றார். அவர் கையசைத்ததும் நான்கு பேர் உள்ளே ஓடினர். பின்வாயிலில் இருந்து ஒரு பெரிய இரும்புக்கூண்டு சக்கரங்கள் கொண்ட வண்டிமேல் வைக்கப்பட்டு சேவகர்களால் தள்ளிக் கொண்டுவரப்பட்டது. அதற்குள் ஒரு புலி நிலைகொள்ளாமல் இரும்பு உரசும் ஒலியில் உறுமியபடி வாலைச் சுழற்றிச் சுற்றிவந்தது. வண்டி நின்றதும் சமநிலையிழந்து அமர்ந்து மீண்டும் எழுந்தது. அவையைக் கண்டு அஞ்சி பதுங்கி வாய் திறந்து செந்நாக்கையும் வெண்பற்களையும் காட்டி உறுமியது.
மாணவன் “அவையோரே, இந்த அவைக்குக் கொண்டுவரப்படும் ஏழு இளங்கன்றுகளில் ஒன்றை நீங்கள் இக்கூண்டுக்குள் அனுப்பலாம். ஏழு மூச்சு நேரம் கன்று கூண்டினுள் இருக்கவேண்டும். அதை இப்பசித்தபுலி கொல்லும் என்றால் அதை உள்ளே அனுப்பியவரும் அக்கணமே தன் வாளை தானே பாய்ச்சி உயிர்துறக்கவேண்டும். கன்றை தேர்வுசெய்யாதோர் விலகிக்கொள்ளலாம்” என்றான். விதுரன் “இது என்ன போட்டி?” என்றான். “அந்தப்புலி பசியுடனிருப்பதை வாயைப்பார்த்தாலே அறியமுடிகிறது.”
பாண்டு அந்தப் புலியின் கண்களை உற்று நோக்கினான். “மிகவும் அஞ்சியிருக்கிறது” என்றான். பின்பு தலைதூக்கி பின்னால் நின்றிருந்த விதுரனிடம் “அதை நான் தெரிவுசெய்கிறேன்” என்றான். விதுரன் “நீங்கள்…” என்றதும் அவன் சிரித்தபடி “என் அன்னையின் பாவைப்பேழையில் புலிகளும் கன்றுகளும் ஒன்றாகவே இருக்கும்” என்றான். அவன் கண்களை நோக்கியபின் விதுரன் “ஆம் இளவரசே, அஸ்தினபுரி ஒருபோதும் தோற்றுப் பின்மாறலாகாது” என்றான்.
மறுபக்கம் வெண்ணிறமும் கருநிறமும் செந்நிறமும் கொண்ட ஏழு இளம்பசுக்கன்றுகள் சேவகர்களால் கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. கன்றுகளைக் கண்டதும் பதுங்கியிருந்த புலி எழுந்து கம்பியருகே வந்து பார்த்தது. மெல்லிய மலரிதழ்போல நெளிந்த விளிம்புகள் கொண்ட நாக்கை நீட்டி கடைவாயை நக்கியபடி முரசுத்தோலை கோலால் நீவியதுபோன்ற ஒலியில் முனகியது. வாலைத்தூக்கியபடி பரபரப்புடன் கூண்டுக்குள் சுற்றி வந்தது. சபையில் இருந்த அனைத்து ஷத்ரியர்களும் திகைத்த விழிகளுடன் அமர்ந்திருந்தனர்.
பாண்டு மெல்ல எழுந்து கையசைத்து சேவகனை அழைத்தான். அவற்றில் முற்றிலும் வெண்ணிறமாக நின்ற இளம்கன்று ஒன்றைச் சுட்டி அதை இழுத்துவரச்சொன்னான். அவையெங்கும் வியப்பு உடலசைவின் ஒலியாக வெளிப்பட்டது. கம்சன் முனகியபடி முன்சரிந்து அமர்ந்தான். கன்றை இழுத்துவந்த சேவகனின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. பாண்டு எழுந்து சென்று கூண்டின் கதவை மெல்லத்திறந்து கன்றை உள்ளே விடும்படிச் சொன்னான். ஒரு கணம் தயங்கியபின் சேவகன் கன்றைத் தூக்கி கூண்டுக்குள் விட்டான்.
கன்று எதையும் உணராமல் கூண்டுக்குள் நின்றது. கம்பிகளில் உடலை உரசியபடி அது நடந்தபோது புலி பதுங்கிப் பின்னகர்ந்தது. கன்று புலியை ஆர்வத்துடன் பார்த்தபின் புல்லை மெல்வதுபோல தலையை அசைத்தபடி ’ம்பேய்’ என குரலெழுப்பியது. புலி உறுமியபடி உடலை நன்றாகச் சுருட்டி கூண்டின் மூலையில் பதுங்கி அமர்ந்து மீசை சிலிர்க்க வாயை முழுமையாகத் திறந்து ஓசையின்றி தன் வெண்பற்களைக் காட்டியது. கன்று திரும்பி வெளியே நின்ற தன் தோழர்களைப்பார்த்தபின் வாலைத்தூக்கி சிறுநீர் கழித்தது.
புலி கன்றை ஒன்றும் செய்யப்போவதில்லை என்று அவை உணர்ந்ததும் அனைவரும் மெல்ல இருக்கைகளில் சாய்ந்தமர்ந்தனர். சேவகன் கூண்டைத்திறந்து கன்றை வெளியே இழுத்தான். அது வெளியே வரத்தயங்கியதுபோல அசையாமல் சிலகணங்கள் நின்றபின் எம்பிக்குதித்து வெளிவந்தது. கூண்டு மூடப்பட்டதும் புலி மெல்ல எழுந்து வந்து கூண்டுக்கம்பிகள் வழியாக வெளியே நோக்கியது. கண்களை மூடிமூடித் திறந்தபின் வாய் திறந்து உறுமியபடி திரும்பவும் சுற்றிவரத்தொடங்கியது.
விதுரன் “அது ஒரு பூனை. பகலில் அதன் கண்கள் கூசுகின்றன. ஆகவேதான் வெண்ணிறக் கன்றை அனுப்பினீர்கள்” என்றான். பாண்டு சிரித்தபடி “ஆம், எனக்கே கண்கள் கூசிக்கொண்டிருக்கின்றன” என்றபடி பட்டுத்துணியால் கண்களைத் துடைத்துக்கொண்டான். விதுரன் புலியை மீண்டும் பார்த்தான். அதன் கண்களிலிருந்து வழிந்த நீரில் பூச்சிகள் மொய்த்துக்கொண்டிருந்தன. கண்களை மூடிமூடித் திறந்தபடி அது சுற்றிவந்தது. விதுரன் “ஆம், அடர்கானகத்துப்புலி. இத்தனை ஒளியை அது அறிந்திருக்காது” என்றான்.
குலமூத்தார் எழுந்து “அவையினரே, இன்று இளவரசியின் தன்னேற்பு மணநிகழ்வில் மூவர் மட்டுமே பங்கேற்கவியலும்” என்றார். சேவகர் மூன்று இருக்கைகளைக் கொண்டு வந்து அவைநடுவே சிம்மாசனத்துக்கு எதிராகப் போட்டனர். “மதுராபுரியின் இளவரசரும் மாத்ரநாட்டு இளவரசரும் அஸ்தினபுரியின் இளையமன்னரும் அப்பீடங்களில் அமரவேண்டுமென கோருகிறோம்” என்றார் குலமூத்தார். அமைச்சர் மூவர் வந்து மூவரையும் அழைத்துச்சென்று பீடத்தில் அமரச்செய்தனர்.
“மார்த்திகாவதியின் இளவரசி தன் மணமகனை ஏற்க எழுந்தருள்கிறார்” என்று நிமித்திகன் அறிவித்ததும் மங்கல இசை முழங்கத்தொடங்கியது. இரு சேடியர் ஒரு பெரிய தாலத்தில் இருந்த செந்தாமரைமலர்களால் ஆன மாலையை குந்தியின் கையில் கொடுத்தனர். இருபக்கமும் சேடியர் வர குந்தி கையில் மலர்மாலையுடன் மெல்ல நடந்து வந்தாள். பொற்குடக்கழுத்துபோன்ற அவள் இடைக்குக் கீழே கால்கள் பட்டாடையை அலையிளகச்செய்து அசைந்தன. மேகலையின் பதக்கவரிசைகள் ஒளியுடன் பிரிந்து இயைந்து நெளிந்தன. பொன்னோசையும் மணியோசையும் பட்டோசையும் அவ்வொளியின் ஓசையென எழுந்தன.
அவளிடம் ஓர் ஆண்மைச்சாயலிருந்ததை விதுரன் அறிந்தான். திரண்ட தோள்களிலும் இறுகிய கைகளிலும் வலுவான கழுத்திலும் அது தெரிந்தது. நடந்தபோது அவள் தோள்கள் குழையவில்லை. கையில்தூக்கிய மலர்மாலை அசையவுமில்லை. நெருங்கி வரும்தோறும் அவள் என்னசெய்யப்போகிறாளென விதுரன் உணர்ந்துகொண்டான். அவனுடைய ஒரு கால் மட்டும் மெதுவாக நடுங்கிக்கொண்டிருந்தது. பாண்டு அவளைப்பார்த்தபின் திரும்பி சல்லியனைப் பார்த்தான்.
மூவரையும் நெருங்கிவந்த குந்தி தன் கையிலிருந்த தாமரை மாலையை பாண்டுவின் கழுத்தில் போட்டாள். அவள் நெருங்கியபோது சல்லியனை நோக்கி அனிச்சையாகத் திரும்பியிருந்த பாண்டு ஒரு கணம் கழித்தே என்ன நிகழ்கிறதென உணர்ந்தான். இரு கைகளாலும் மாலையைப் பற்றியபடி அவன் செயலிழந்து அமர்ந்திருக்க அவையெங்கும் வியப்பொலியும் பின்பு விதவிதமான பேச்சொலிகள் கலந்த இரைச்சலும் எழுந்தது.
கம்சன் சிலகணங்கள் என்ன நிகழ்ந்ததென்றே உணராதவன் போல அவையையும் குந்தியையும் மாறி மாறி நோக்கினான். குந்தி மாலையை அணிவித்தபின் பாண்டுவை வணங்கிவிட்டு அவையை வணங்கத் திரும்பியபோது கம்சன் தன் தொடையை ஓங்கி அறைந்தபடி பாய்ந்து எழுந்தான். “என்ன இது? என்ன நடக்கிறது இங்கே?” என்று உடைந்த குரலில் உரக்கக் கூவினான். அவன் உடலுக்கு அக்குரல் மென்மையானதாக இருந்தது. “இது சதி! நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்” என்றான். பதற்றமாக சுற்றி நோக்கியபடி “எங்கே என் படைகள்… இதோ இவளை நான் சிறையெடுத்துச்செல்லப்போகிறேன்… ஆம்!” என்றான்.
சல்லியன் திடமான உரத்த குரலில் “ஷத்ரியர் அவையில் அது நடக்காது கம்சரே. இளவரசி எதை விரும்புகிறாரோ அதுவே இங்கு விதி” என்றான். குந்திபோஜனும் தளபதிகளும் வாட்களை உருவினர். கம்சன் “இவளை கொண்டுபோகமுடியாவிட்டால் கொன்றுவிட்டுச் செல்கிறேன்” என்றபடி தன் வாளை உருவி அதே விரைவில் குந்தியை வெட்ட முயன்றான். ஆனால் அக்கணமே சல்லியன் அவன் வாள்கரத்தை வலக்கையால் பிடித்து இடக்கரத்தால் அவன் தோளை அழுத்தி அவனை செயலற்று நிற்கச்செய்தான். கம்சன் இடக்கையால் தன் கட்டாரியை உருவி சல்லியனை குத்தப்போக சல்லியன் கம்சனை தூக்கிச் சுழற்றி தரையில் அறைந்தான்.
வாள் உலோகச் சிலும்பலுடன் தெறித்துவிலக பேருடல் மண்ணில் அறைந்து அதிர்வொலியெழுப்ப கம்சன் மல்லாந்து விழுந்தான். புரண்டு எழுந்து நின்றபோது அவன் ஆடைகள் கலைந்து தரை நோக்கி நழுவின. காளையின் குருதி செங்கருமையாகப் படிந்த மார்புடனும் முகத்துடனும் வெறியுடன் பற்களைக் கடித்துக்கொண்டு மூச்சிரைத்தான். அதற்குள் அவனைச்சுற்றி குந்திபோஜனின் தளபதிகள் வாட்களுடன் கூடினர். “மறுமுறை எழமுடியாது போகலாம் கம்சரே” என்று சல்லியன் மென் சிரிப்புடன் சொன்னான்.
கம்சன் பற்களைக் கடித்து உறுமியபோது அவன் ஒரு கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவையை சுற்றிநோக்கிய அவன் அவனைநோக்கிச் சிரித்த கண்களையும் பற்களையும்தான் கண்டான். தன் மேலாடையைக்கூட எடுக்காமல் அவையை விட்டு வெளியே ஓடினான். சல்லியன் “இளவரசியின் விருப்பப்படி மணநிகழ்வு முழுமைகொள்ளட்டும் குந்திபோஜரே” என்றான். அவையிலிருந்த யாதவரும் ஷத்ரியரும் ‘ஆம் ஆம்’ என்றனர்.
குந்திபோஜன் சூதர்களை நோக்கித் திரும்ப அவர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். வெளியே அரண்மனையின் அறிவிப்பு மணி ஒலிக்கத் தொடங்கியது. அதைக்கேட்டு கோட்டைமீதும் காவல்மாடங்களிலும் இருந்த பெருமுரசுகள் ஒலிக்கத்தொடங்கின. நகரமெங்கும் மக்கள் எழுப்பிய வாழ்த்தொலி இலைகள்மேல் மழைபோல எழுந்தது. குந்திபோஜன் “அஸ்தினபுரியின் இளையமன்னரை மணமண்டபத்துக்கு அழைக்கிறோம்” என்றார்.
விதுரன் பாண்டுவின் கைகளைப்பற்றிக்கொண்டான். அவை இறந்துகொண்டிருக்கும் பாம்பின் உடல்போல குளிர்ந்து அதிர்ந்து நெளிந்தன. “இளவரசே எதையும் எண்ணாதீர்கள். நீங்கள் மணமேடை ஏறியாகவேண்டும்… விழுந்துவிடக்கூடாது” என்று விதுரன் பாண்டுவின் காதில் சொன்னான். நடுங்கி அதிர்ந்த உதடுகளும் ஆடிக்கொண்டிருக்கும் தலையுமாக பாண்டு “ஆம்… ஆம்” என்றான்.