அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

4/26/14

பகுதி ஒன்பது : மொழியாச்சொல்[ 4 ]

பகுதி ஒன்பது : மொழியாச்சொல்[ 4 ]
பிருதை அறைக்குள் நுழைந்தபோது பாண்டு மஞ்சத்தில் படுத்திருப்பதைத்தான் பார்த்தாள். கதவை பின்னிருந்து அனகை மெல்ல இழுத்துச்சாத்தியபோது எழுந்த ஓசையில் அவன் தலையைத் தூக்கிப்பார்த்தான். உடனே நான்குநாகங்கள் நெளிவதுபோல அவனுடலில் கைகால்கள் இழுத்துக்கொண்டதைக் கண்டு குந்தி அருகே சென்றாள். அவன் கடைவாயில் வாய்நீர் நுரைத்து வழிய கண்கள் மேலேறி சிப்பிவெண்மை தெரிய தொண்டையில் பசுநரம்பு புடைத்து அசைந்தது. அவனுக்கு நரம்புப்பின்னல் நோய் என பிருதை அறிந்திருந்தாள். வெளியே சென்று வைத்தியர்களை அழைப்பதா என ஒரு கணம் சிந்தனைசெய்தபின் வேண்டாம் என முடிவெடுத்து அருகே பீடத்தில் அமர்ந்துகொண்டாள்.
நீரில் அமிழ்பவனைப்போல பாண்டு அசைவின்மை கொண்டு மஞ்சத்தில் படிந்தான். அவள் அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள். இரு வெண்புருவங்களுக்குக் கீழே பால்கொப்புளங்கள்போல இமைகள் அதிர்ந்துகொண்டிருந்தன. கண்ணீர் இருபக்கமும் வழிந்து காதுகளில் சொட்டிக்கொண்டிருந்தது. சின்னஞ்சிறு செவ்வுதடுகள். பால்நுரைத்துண்ட கைக்குழந்தையின் மேலுதடுபோன்ற மெல்லிய வெண்மயிர்பரவல்.
அவள் அகம் திகைத்து நெஞ்சில் கைவைத்து எழுந்துவிட்டாள். சாளரம் வழியாக வெளியே அசைந்துகொண்டிருந்த மரத்தின் இலைகளைப் பார்த்தாள். ஆனால் பொறிக்கப்பட்ட ஓவியம்போல அவ்வுதடுகளே அவள் கண்ணுக்குள் நின்றன. திரும்பி அவற்றைப் பார்த்தாள். நெஞ்சின் அதிர்வை உணர்ந்தபடி பார்த்துக்கொண்டே நின்றாள். பால்நுரை. அதை முதலில் கண்டு அடைந்த பெரும் மனக்கிளர்ச்சி. அதை மீண்டும் அடைந்து கண்கள் கசிய தொண்டை அடைக்க அவள் கால்தளர்ந்து பீடத்தில் அமர்ந்துவிட்டாள்.
அவன் விழியிதழ்கள் அதிர்ந்து பின் பிரிந்தன. நீர்படிந்த வெண்பீலிகள் கொண்ட செவ்விழிகள் முயல்களின் கண்களைப் போலிருந்தன. அவளை அடையாளம் கண்டதும் அவன் திகைத்து ஒரு கையை ஊன்றி எழமுயன்றான். அவள் புன்னகையுடன் “வேண்டாம்” என்றாள். “நான் இங்கே அமர்ந்திருக்கிறேன். ஓய்வெடுங்கள்” என்று மெல்லியகுரலில் சொன்னாள். அக்குரலிலும் புன்னகையிலும் இருந்த தாய்மை அவன் முகத்தில் உடனே எதிரொளித்தது. அவன் கண்கள் கனிந்தன. “எனக்கு மூச்சுத்திணறுகிறது” என்று அவன் சொன்னான்.
தாய்மையை ஏற்று அதற்குள் முழுமையாக ஒடுங்கிக்கொள்வதற்கான பயிற்சியை அவன் முழுமையாகப் பெற்றிருக்கிறான் என்று பிருதை எண்ணிக்கொண்டாள். “சற்றுநேரம் கண்களை மூடிக்கொண்டிருங்கள்… அது ஓர் அதிர்ச்சி மட்டுமே” என்றாள். “என் மருத்துவனை அழைக்கமுடியுமா? அவனுடைய நஸ்யம் என்னை ஆறுதல்படுத்தும்.” குந்தி திடமான குரலில் “அது அகிபீனாவாக இருக்கும். அதை உட்கொள்ளவேண்டாம். அது நரம்புகளை மேலும் வலிவிழக்கவே செய்யும்” என்றாள்.
“நான்…” என அவன் தொடங்கியதும் “வேண்டாம்” என்று பிருதை உறுதியாகச் சொன்னாள். அவன் தலையை ஆட்டியபின் கண்களை மூடிக்கொண்டான். அவள் அவனருகே சென்று குனிந்து “உங்களுடைய நோய் உள்ளத்தில்தான். ஆகவே உடலை எண்ணவேண்டாம். உள்ளத்தை ஒருங்கமையுங்கள்… இங்கே அறைக்குள் என்ன நிகழ்கிறதென்பதை சிந்தையில் விரித்துக்கொண்டே இருங்கள். நரம்புகள் நெகிழ்வதை உணர்வீர்கள்.”
பாண்டு “ஆம்” என்றான். தலையை மெல்ல அசைத்துக்கொண்டு பெருமூச்சு விட்டான். அவனுடைய நெற்றியிலும் கழுத்திலும் நீலநரம்புகள் புடைத்திருந்தன. “நீ இங்கே வருவாய் என்றார்கள். அப்போதே…” என்றான். மஞ்சள்நிறமான பற்களால் சிவந்த உதடுகளைக் கவ்வியபடி “என்னால் தாளமுடியவில்லை” என்றான். இரு கைகளையும் இறுக முட்டிபிடித்து ‘ம்ம் ம்ம்’ என்றான். மெல்ல மெல்ல அமைதிகொண்டான். கண்களைத் திறந்து “என்னால் தாளமுடியவில்லை” என்றான். சிறிய விசும்பல் ஒன்று அவனிடமிருந்து வெளிவந்தது. அவன் உதடுகளைக் கடித்து அடக்கமுயன்றான். மழை அறையும் சாளரங்கள் போல உதடுகள் துடித்தன. பின்பு அவன் விம்மல்களும் மூச்சொலிகளும் கேவல்களுமாக அழத்தொடங்கினான்.
அவன் அழுதுமுடிப்பது வரை அவள் அவனையே நோக்கியபடி பீடத்தில் அமர்ந்திருந்தாள். அவன் நீள்மூச்சுக்களுடன் அழுது அடங்கி கண்மூடியபடி படுத்திருந்தான். இறுகி அதிர்ந்த நரம்புகள் தளர்ந்து அவிழ்ந்து பின் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தன. கைகளால் கண்களைத் துடைத்தபின் கண்களைத் திறந்து அவளைப்பார்த்தான். பற்கள் தெரிய சிரித்து “நீ வெறுக்கும் நாடகத்தில் ஓர் அங்கம் முடிந்துவிட்டது” என்றான். “திறனிலியின் துயரம் போல அருவருப்பளிப்பது ஏதுமில்லை… எனக்கும்தான்” என்றான்.
“அது ஆண்களின் மனநிலை” என்றாள் பிருதை. “தன் கையில் மிகமிகத் திறனற்ற ஓர் உயிரை ஏந்தும்போதுதான் பெண்ணின் அகம் கனிவும் முழுமையும் கொள்கிறது.” அவன் அவள் கண்களைச் சந்தித்தான். அவள் அவன் மோவாயைச் சுட்டி “நான் என்ன நினைத்தேன் தெரியுமா?” என்றாள். புன்னகையுடன் “பால்நுரை படிந்த கைக்குழந்தையின் உதடுகள் என” என்றாள். பாண்டு சிரித்துக்கொண்டு “அப்படி அதைக் கடந்துசெல்ல உன்னால் முடிந்தால் நீ நல்லூழ் கொண்டவள்” என்றான்.
“கடந்துசெல்வது அல்ல…” என்றாள் பிருதை. “இத்தருணத்தில் நானறிந்த உண்மை இது.” பாண்டு “நான் நேரடியாகவே கேட்கிறேனே, என் கழுத்தில் நீ ஏன் உன் மணமாலையைப் போட்டாய்? அந்த மாலை அஸ்தினபுரியின் செல்வத்துக்காகவும் படைக்கலன்களுக்காகவும்தானே?” பிருதை அவன் கண்களை நோக்கி “ஆம்” என்றாள். “நான் மார்த்திகாவதியின் இளவரசியாக மட்டுமே என்னை உணர்பவள்.” பாண்டு சற்று கோணலாகச் சிரித்து “உண்மையை நேரடியாகச் சொன்னது மகிழ்வளிக்கிறது” என்றான்.
பிருதை “மகிழ்வளிக்கிறதா?” என கூர்ந்து நோக்கி கேட்டாள். பாண்டு “இல்லை… அதுதான் உண்மை. நீ சொல்வதுதான் உண்மை என்று எனக்குத்தெரியும். வேறென்ன சொல்லியிருந்தாலும் அது என்னை ஏமாற்றுவதென்றும் அறிவேன். ஆயினும் என்னை உனக்குப் பிடித்திருக்கிறதென்று சொல்லவேண்டுமென என் அகம் விரும்பியது.” அவன் உடனே அந்த தற்சிறுமையுணர்வை வென்று சிரித்தான். “சரிதான், அது என் பிழை அல்ல. மனிதர்களை அத்தனை சிறியவர்களாகப் படைத்த பிரம்மனின் பிழை அது.”
பிருதை புன்னகை செய்து “ஆனால் நான் இங்கே உள்ளே நுழைந்து உங்களை நோக்கியபின் உங்களை விரும்புகிறேன்” என்றாள். “என் ஆற்றலின்மையையா?” என்றான் பாண்டு. “அதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை” என்று பிருதை சொன்னாள். “என்னைப்பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்று பாண்டு கேட்டான். “நீங்கள் உங்கள் அன்னை வைத்து விளையாடும் ஒரு பளிங்குப்பாவை” என்று பிருதை புன்னகையுடன் சொன்னாள். “அதை உங்கள் அளவில் எதிர்ப்பதற்காக ஓர் அங்கதத்தை சொல்லிலும் பாவனையிலும் வளர்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.”
சிரித்தபடி “அவ்வளவுதான்… என்னைப்பற்றி இதற்குமேல் ஏதும் சொல்வதற்கில்லை” என்றான் பாண்டு. “ஆகா, எனக்கே அனைத்து எடையும் விலகி இறகுபோல ஆகிவிட்ட உணர்வு ஏற்படுகிறது. இரண்டுவரிகளில் முழுமையாக வகுத்துவிடக்கூடிய ஓரு வாழ்க்கைக்கு நிகராக வேறேது இருக்கமுடியும்?” பிருதையும் சிரித்துக்கொண்டு “இரண்டுவரிக்குமேல் தேவைப்படும் வாழ்க்கை என ஏதும் மண்ணில் உண்டா என்ன?” என்றாள். “உண்டு” என்று பாண்டு சிரித்தான். “உனக்கு இன்னும் ஒரு சொல் தேவைப்படும் என நினைக்கிறேன்” கண்களில் குறும்புடன் “அந்த இரண்டுவரிக்குப்பின் ஆனால் என்ற ஒரு சொல்லையும் சேர்த்துக்கொள்ளலாம்.”
இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். பாண்டுவின் முக்கியமான இயல்பொன்றை பிருதை உணர்ந்தாள். எந்தத் தடையும் இல்லாமல் பளிங்குமலை உடைந்து சரிவதுபோல சிரிக்க அவனால் முடியும். அச்சிரிப்பை எதிரில் இருப்பவரிடமும் அவனால் உருவாக்க முடியும். அவள் அப்படிச் சிரித்தது சிறுமியாக இருக்கும்போதுதான் என எண்ணிக்கொண்டாள். “நீ ஒரு சூழ்மதியாளர் என்றார்கள். அதனுடனும் ஆனால் சேரும் என்று சற்றுமுன் தெரிந்துகொண்டேன்” என்றபின் அவன் மீண்டும் சிரித்தான்.
VENMURASU_EPi_98__
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
“நான் உங்களுக்கு மாலையிட்டபோது என்ன நினைத்தீர்கள்?” என அவள் பேச்சை மாற்றினாள். பாண்டு “நான் சொல்வதைக்கேட்டு நீ வியப்புறமாட்டாய் என அறிவேன்” என்றான். “நீ என் கழுத்தில் மாலையிட்டபோது அது எனக்கு அதிர்ச்சியாக இருக்கவில்லை. அதை நான் எதிர்பார்த்திருந்தேன். உன் காலடிகள் ஒவ்வொருவரையாக தாண்டி வர வர நீ என்னை நோக்கி வந்து என் கழுத்தில் மாலையிடுவதை நான் முழுமையாகவே கற்பனைசெய்துவிட்டிருந்தேன்.”
“ஆம், அதில் வியப்புற ஏதுமில்லை” என்றாள் குந்தி. “ஏன்…? நான் அழகற்றவன், ஆண்மையும் அற்றவன்” என்றான் பாண்டு. “உடலைச்சார்ந்தா உள்ளம் இயங்குகிறது?” என்று பிருதை சொன்னாள். பாண்டு துள்ளி எழுந்து மஞ்சத்தில் கால்மடித்து அமர்ந்துகொண்டான். “முற்றிலும் உண்மை… இந்த நொய்ந்த வெள்ளுடல் நானல்ல. இது எனக்குக் கிடைத்திருக்கிறது. நான் இதுவல்ல. நான் உள்ளே வேறு… வேறு யார்யாரோ…”
“யார்?”என்றாள் பிருதை. “எப்படிச் சொல்வேன்?” என பாண்டு கணநேரம் திகைத்தான். துள்ளி எழுந்து நின்று உளவிரைவால் கைகளை விரித்தான். “நானென்பது ஆறுபேர். ஆறு பாண்டுக்கள். ஒருவன் அளவில்லாத கொடையும் பெருந்தன்மையும் கொண்டவன். எச்சிறுமைக்கும் அப்பால் தலைதூக்கி நிற்கும் ஆண்மகன். அவனாக நான் ஆயிரம் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். இன்னொருவன் அறமே உருவானவன். ஒவ்வொன்றிலும் என்றுமுள நெறியைத்தேடி அவ்வண்ணம் வாழ்பவன். அவனாகவும் நான் ஆயிரம் முறை வாழ்ந்திருக்கிறேன்.”
“இன்னும் நால்வர்…” என்றான் பாண்டு. அன்னையிடம் தன் வீரவிளையாட்டுக்களைச் சொல்லும் சிறுவன் போல சற்றே மோவாயைத் தூக்கி திக்கித் திணறிய சொற்களுடன் “மூன்றாமவன் நிகரற்ற உடலாற்றல் கொண்டவன். மரங்களை நாற்றுக்களைப்போலப் பிடுங்குபவன். பாறைகளை வெறும் கைகளால் உடைப்பவன். கட்டற்ற காட்டுமனிதன். சூதும் சூழ்தலும் அறியாதவன். நான்காமவன்…” அவன் முகம் சிவந்தது. பிருதை புன்னகைசெய்தாள்.
“நான்காமவன் இந்திரனுக்கு நிகரான காமம் கொண்டவன். என்றுமிறங்காததது அவன் கொடி. இந்த பாரதவர்ஷமெங்கும் அலைந்து அவன் மகளிரை அடைகிறான். காந்தாரத்தில் காமரூபத்தில் இமயத்தில் தெற்கே பாண்டியத்தில்… பலவகையான பேரழகியர். மஞ்சள்வண்ணத்தவர். செம்பொன்னிறத்தவர். மாந்தளிர் நிறத்தவர். நாகப்பழத்தின் நிறத்தவர்… அவனுக்கு காமம் நிறைவடைவதேயில்லை.”
பிருதை வாய்பொத்திச் சிரித்தபோது அவள் முகமும் கழுத்தும் சிவந்தன. “என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய்?” என்றான் பாண்டு. “இயல்பான கனவுகள்தானே என்றுதான்” என்றாள் பிருதை. “ஆம், அவை இயல்பானவை. ஆனால் அவையும் எனக்குப் போதவில்லை. பெரும்புரவியறிஞனாக ஆகவேண்டும். மண்ணிலுள்ள அனைத்துப்புரவிகளையும் அறிந்து கொள்ளவேண்டும் என்று எண்ணுவேன். முக்காலத்தையும் அறியும் நூலறிஞனாக ஆகி பாரதவர்ஷத்தின் ஒவ்வொருவருக்கும் சென்றதும் வருவதும் பார்த்துக்குறிக்கவேண்டும் என நினைப்பேன்…”
“ஆறுமுகம்” என்று பிருதை சிரித்தாள். “ஆம், என் இறைவடிவம் ஆறுமுகவேலனேதான். அஸ்தினபுரியில் என் அரண்மனைக்குள் எனக்காக சுப்ரமணியனின் சிறிய ஆலயமொன்றை அமைத்திருக்கிறேன்.” பிருதை “சுப்ரமணியனுக்கு தேவியர் இருவர்” என்றாள். “ஆம், அதுவும்தான்” என்றான் பாண்டு. “காட்டுமகள் ஒருத்தி, அரசமகள் ஒருத்தி.” பிருதை சிரித்துக்கொண்டு “இதையெல்லாம் உங்கள் அன்னையிடம் சொல்வீர்களா என்ன?” என்றாள். பாண்டு விழிகளைத் தாழ்த்தி “இல்லை… இவை எனக்குள் மட்டுமே இருப்பவை. நான் இப்போது எப்படி இத்தனை எளிதாக உன்னிடம் சொன்னேன் என்றே தெரியவில்லை” என்றான்.
அவள் “சொல்வதற்காகத்தானே துணைவி?” என்றாள். “சொல்லாவிட்டாலும் நீ எனக்குள் உள்ள அனைத்தையும் அறியத்தான் போகிறாய். உன்னைப்போன்றவர்களை எதிர்கொள்ள ஒரே வழிதான். அப்படியே மண்ணில் குப்புற விழுந்து சரணடைவது… பிருதை, அஸ்தினபுரியில் இருவர்தான் உன்னெதிரே நிற்கமுடியும். பிதாமகர் பீஷ்மர் விண்ணளந்த பெருமானுக்கு முன் நிற்கக்கூடியவர். அவரை நீ ஒருபோதும் முற்றறியவோ முந்திச்செல்லவோ இயலாது. ஆகவே உன் சதுரங்கக் களத்தில் உனக்கு எதிரே அமரக்கூடியவன் என் தம்பி விதுரன் மட்டுமே.”
பிருதை இயல்பாக கூந்தலை ஒதுக்கியபடி “அஸ்தினபுரியின் அரசரே அவர்தான் என்கிறார்கள்” என்றாள். “ஆம், அவன் பாரதவர்ஷத்தையே ஆளும் திறன்கொண்டவன். பார்ப்பதற்கு வியாசரைப்போலவே இருக்கிறான் என்கிறார்கள். ஆகவே பேரரசிக்கும் பிதாமகருக்கும் அவன் மேல் பெரும் பற்று உள்ளது… இங்கே வந்தபின்னர்தான் சுயம்வர மண்டபத்தில் யாதவர்களும் இருப்பதைக் கண்டேன். அப்படியென்றால் விதுரனையும் அமரச்செய்திருக்கலாம்.”
“உங்கள் தமையரின் துணைவி பேரழகி என்றார்கள்” என அப்பேச்சை வெட்டி திருப்பிக்கொண்டு சென்றாள் பிருதை. “ஆம்… பாரதவர்ஷத்தின் பேரழகிகளில் அவளும் ஒருத்தி என்கிறார்கள். வெண்பளிங்கு நிறம் கொண்டவள். அவள் கண்கள் மீன்கொத்தியின் குஞ்சுகள் போல மின்னும் நீலநிறம் கொண்டவை என்கிறார்கள்” என்றான் பாண்டு. ‘விழியிழந்தவருக்கு பேரழகி ஒருத்தி மனைவியாக வருவதில் ஒரு அழகிய நீதி உள்ளதென்று எனக்குப்படுகிறது.”
“என்ன?” என்றாள் பிருதை. அவள் தன்னுள் சொற்களை தெரிவுசெய்யத்தொடங்கினாள். “அழகென்பது பார்க்கப்படுவதற்காக மட்டுமே உள்ளது என்பது எவ்வளவு மடமை. அது தன்னளவில் ஒரு முற்றிருப்பு அல்லவா? நான் ஓவியங்களை வரைந்ததும் என் அன்னை கேட்பாள், அவற்றை மனிதர்கள் பார்க்கவேண்டுமல்லவா என. ஏன் பார்க்கவேண்டும்? பார்ப்பதன் மூலம் ஓவியம் வளர்வதுமில்லை தேய்வதுமில்லை. சுவைகள் மண்ணில் முடிவில்லாது கிடக்கின்றன. கடலின் உப்பை நாக்கு உருவாக்கவில்லை. நாக்கால் அறியப்படாவிட்டாலும் உப்பின் முடிவின்மை அங்குதான் இருக்கும்.”
அவன் நிறுத்திக்கொண்டு “என்ன சொல்கிறேன் என்றே தெரியவில்லை. ஆனால் ஒரு பேரழகு கண்களால் தீண்டப்படவில்லை என்பதில் மகத்தான ஏதோ ஒன்று உள்ளது என்று எனக்குத் தோன்றியது. ஆழ்கடல்களைப்போல. தூய்மையான ஏதோ ஒன்று…” அவன் உளஎழுச்சியுடன் “அப்படித்தான் காந்தாரநாட்டு இளவரசியைப்பற்றி சொல்லிக்கொள்கிறார்கள். தூயவள், மிகமிகத் தூயவள் என்று. அவளுடைய கன்னிமையின் வல்லமையால்தான் அவள் காலடிகள் நகரில் பதிந்த அன்று வானமே பேரருவியெனக் கொட்டியது என்கிறார்கள் சூதர்கள்.”
“நாம் ஒருமுறை மதுவனத்துக்குச் செல்லவேண்டும்” என்று பிருதை சொன்னாள். “இங்கே திருமணத்துக்கு என் தந்தை சூரசேனர் வரவில்லை. நாம் அங்கே சென்று அவரைப் பார்ப்பதே முறை.” பாண்டு அவள் பேச்சை அப்படியே திருப்பிக்கொண்டுசெல்வதை உணர்ந்து சிலகணங்கள் திகைத்தபின் “ஆம், செல்வோமே. அதற்கென்ன?” என்றான். “நான் ஓர் இளவரசி அல்ல. யாதவப்பெண். காடுகளில் ஆநிரை மேய்த்துக்கொண்டிருந்தவள். அதை அங்குசென்றால்தான் நீங்கள் அறியமுடியும்” என்றாள் பிருதை சிரித்தபடி. “நானும் ஆநிரைகள் மேய்ப்பதென்றாலும் செய்கிறேன்” என்று அவன் சொன்னான்.
“எங்கள் நெறிகளும் முறைமைகளும் வேறு” என்று குந்தி சொன்னாள். “ஷத்ரியப்பெண்களைப்போல நாங்கள் அந்தப்புரத்து கூண்டுப்பறவைகளல்ல. ஆண்களின் கைப்பாவைகளுமல்ல.” பாண்டு இடைபுகுந்து “ஆம், அறிவேன். காந்தாரத்திலும் அப்படித்தான் என்றார்கள். காந்தார இளவரசியின் விளையாட்டே புரவியில் பாலைநிலத்தில் நெடுந்தூரப்பயணங்கள் செய்வதுதான் என்றனர்.”
அவனுடைய சொற்களால் எங்கோ சீண்டப்பட்டு பிருதை “நான் சொல்லவருவது ஒன்றுள்ளது” என்றாள். அவன் முகம் எச்சரிக்கை கொள்ள கண்கள் விரிந்தன. அதைக்கண்டபோதுதான் அச்சொற்றொடர் பிழையானது என அவள் அறிந்தாள். அவள் பேச்சை ஏன் யாதவர்களின் குலமுறைக்குள் கொண்டுசெல்கிறாள் என்ற எச்சரிக்கையை அவன் அடைந்துவிட்டான். “என்ன சொல்லவிருக்கிறாய்?” என்று பாண்டு கேட்டதுமே அவனுடைய அகம் செல்லும் வழிகளனைத்தும் அவளுக்குத்தெரிந்தன.மின்னல் சிடுக்கென கணத்தில் கோடிக்கிளைகளை அது விரித்துவிட்டிருந்தது.
பிருதை பாண்டுவின் கண்களை நோக்கி “என் புதல்வியே மார்த்திகாவதியை ஆளும் உரிமை கொண்டவள். புதல்வி இல்லையேல் புதல்வன்” என்றாள். பாண்டு ஐயம் விலகாமல் “ஆம்” என்றான். “எந்தநிலையிலும் மார்த்திகாவதி அஸ்தினபுரியின் கிளைநாடாக இருக்காது. அதன் மீது அஸ்தினபுரி எந்த ஆதிக்கத்தையும் செலுத்த முடியாது” என்றாள் பிருதை. பாண்டுவின் உடல் முறுக்கமிழப்பதை காணமுடிந்தது. புன்னகையுடன் “அஸ்தினபுரி என்றுமே ஆதிக்கம் செலுத்த விழையும் நாடல்ல” என்றான்.
ஏன் பின்வாங்கினோமென்று குந்தி வியந்துகொண்டாள். சொல்லியிருக்கவேண்டிய தருணம், அவள் கூட்டிச்சேர்த்த சொல்முனை அது. அங்குசெல்லும் பாதையை திறந்தும் விட்டாள். அடுத்தகணம் பாண்டு கேட்ட வினா அவள் எண்ணியவற்றை உறுதிசெய்தது. “சல்லியரின் மாத்ரநாட்டிலும் இந்த முறைமைகள் உண்டா என்ன?” அவள் தன் கண்களை அவன் கண்களுடன் நேரடியாக நிலைக்கச்செய்து “மாத்ரர்கள் ஷத்ரியர்கள் அல்லவா? அங்கே மூத்த மைந்தனல்லவா முறைமன்னன்?” என்றாள். பாண்டு கண்களை விலக்கி “ஆம், ஆனால் ஒவ்வொரு ஷத்ரியகுடியும் ஒவ்வொரு பழங்குலத்திலிருந்து வந்தது” என்றான்.
ஏன் பின்வாங்கினாளென அவள் அப்போது உணர்ந்தாள். அவன் அக்கணத்தில் எண்ணிய சித்திரம் அவளை வெறும் பெண்ணாக நிறுத்தியது. அதை அவள் ஏற்க சித்தமாகவில்லை. “காந்தாரர்கள் பஷுத்துரர்களின் குருதிவழி கொண்டவர்கள். லாஷ்கரர்கள் என்னும் ஏழுபெருங்குலக்குழுதான் அவர்களை இன்றும் ஆள்கிறது. ஆயினும் அவர்களின் கற்பொழுக்கநெறிகள் ஷத்ரியர்களைப்போலவே உள்ளன” என்றான் பாண்டு. இன்னொரு அலை வந்து அவள் எண்ணியவற்றை அடித்து மேலும் விலக்கிக் கொண்டு சென்றதைப்போல உணர்ந்தாள்.

4/25/14

பகுதி ஒன்பது : மொழியாச்சொல்[ 2 ]

பகுதி ஒன்பது : மொழியாச்சொல்[ 2 ]
அவை நிறைந்து அமர்ந்திருந்தவர்களை தன் உடலால் பார்த்தபடி, விழிகளை வெட்டவெளியில் மிதக்கவிட்டு காற்றில் மிதந்துவரும் பொன்னிறமான புகைச்சுருள் போல குந்தி நடந்துவந்ததை விதுரன் தன் ஐம்புலன்களாலும் பார்த்துக்கொண்டிருந்தான். அங்கிருந்த அனைவர் விழிகளும் அவளில் குவிந்திருக்க விதவிதமான மெல்லிய உடலசைவுகள் அவையில் பரவின. மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் முடிந்ததும் அமைதி நிலவியது. எவரோ மெல்ல இருமினர். யாரோ ஒருவருடைய கங்கணம் மெல்லக்குலுங்கியது. எவரோ மெல்லியகுரலில் ஏதோ சொன்னார்கள்.
குந்திபோஜன் எழுந்து வணங்கி “அவையினரே, உங்கள் வருகையால் அனைவரும் இந்தச் சிறிய யாதவநாட்டை சிறப்பித்திருக்கிறீர்கள். இங்கே என் அறப்புதல்வி பிருதையின் மணத்தன்னேற்பு நிகழ்வை குலமுறைப்படி நடத்தும்படி எனது போஜர் குலத்தின் மூத்தாரை கோருகிறேன்” என்றார். அவையில் இருந்த மூன்று யாதவ முதியவர்கள் எழுந்து வணங்கினார்கள். போஜன் வணங்கி நிற்க ரிஷபரும் மூன்று துணையமைச்சர்களும் சென்று அவர்களை வணங்கி அவைமுகப்புக்கு இட்டு வந்தனர்.
மூன்று யாதவர்களும் வெண்ணிறப் பருத்தியாடை உடுத்து கழுத்தில் குன்றிமணிமாலைகளும் மஞ்சாடிமாலைகளும் அணிந்திருந்தனர். இடையில் மூன்று சுற்றாக சணல் கயிற்றைச்சுற்றிக்கட்டி தங்கள் குலக்குறியான வளைதடியை கையில் ஏந்தியிருந்தனர். அவர்கள் வந்து அவையை மும்முறை பணிந்து வணங்கினர். அவர்களில் இளையவர் “அவையினரே, ஆநிரை காத்தல் என்பது மானுடர்க்கு கானுறை மாயோன் வகுத்த முதற்பெருந்தொழில். அத்தொழில்செய்யும் ஆயர்களே மண்பயனுறச்செய்யும் முதற்குடிகள். எங்கள் குலத்துதித்த இளவரசியின் மணநிகழ்வு தொன்மையான ஆயர்முறைப்படியே ஆகவேண்டுமென விழைகிறோம்” என்றார்
இரண்டாமவர் “வீரர்களே முன்பெல்லாம் ஏறுதழுவி பெண்கொள்ளும் வழக்கமே இங்கிருந்தது. ஆயர்களும் வில்லெடுக்கத் தொடங்கியபின்னர் அவ்வழக்கம் அரசர்களுக்குரியதாக கொள்ளப்படுவதில்லை. ஆயினும் கன்று ஏற்புச் சடங்குகள் வழியாகவே ஆயர்குலத்து மணம்கோடல் நிகழவேண்டுமென்பதனால் மூன்று போட்டி நிகழ்வுகள் இங்கே முன்வைக்கப்படுகின்றன. மூன்றில் ஒன்றை வெல்பவரே இவ்வரங்கில் இளவரசியின் மாலைகொள்ளத் தகுதியுள்ளவர் என்று கொள்வோம்” என்றார்.
மூன்றாமவர் “நிகழ்வுகளை எங்கள் மாணவர்கள் இங்கே விளக்கியுரைப்பார்கள்” என்றார். அதன்பின் வெண்குன்றுபோன்ற உடலும், கூரிய இரும்புமுனைகள் பதிக்கப்பட்ட கொம்புகளும் கொண்ட பெரும் எருது ஒன்று மூக்குவளையத்தில் கட்டப்பட்ட கயிற்றால் வழிநடத்தப்பட்டு அவைக்குக் கொண்டுவரப்பட்டது. அதன் கொழுத்த திமில் இடப்பக்கமாகச் சரிந்து அசைந்தது. கழுத்துக்குக் கீழே தசைமடிப்புகள் அலையலையாக வளைந்து தரை தொடும்படி தொங்கிக்கிடந்தன. எலும்பே தெரியாமல் இறுகிய தசை மூடி மெழுகியிருந்த அதன் உடல் நதிநீர்ப்பரப்பு போல ஆங்காங்கே சிலிர்த்தது. கனத்த குளம்புகள் கல்தரையை உரசும் ஒலி அவை முழுக்க ஒலித்தது. அது நடந்த எடையால் அவைமுற்றம் அதிர்ந்தது.
எருது கொம்பு தாழ்த்தி தரையை முகர்ந்தபின் மூச்சு சீற தலைதூக்கி அவையை நோக்கியது. தசைச்சுருள்கள் மடிந்து சூழ்ந்த அதன் முகத்தில் சேற்றில் பாதி புதைந்த கருங்கல்சில்லு போல விழிகள் ஈரம் மின்ன தெரிந்தன. தேன்கூடு போன்ற மூக்குக்கருமைக்கு அடியே கனத்த தாடையின் நீட்டி நின்ற முள்முடிகளில் வாய்நீர்க்கோழையின் துளிகள் திரண்டு மணியாகி நின்றன. முன்னங்காலைத் தூக்கி ஊன்றி அது உடல் எடையை மாற்றிக்கொண்டது. கண்களின் ஈரத்தைச் சுற்றிப்பறந்த சிறு பூச்சிகளை உதற தலையைக் குலுக்கியது. வாழைப்பூநிற நாக்கை நீட்டி தன் விலாவை தானே நக்கிக்கொண்டது.
மூத்தாரின் மாணவன் சபைஏறி “வீரர்களே, இந்த எருது ஒவ்வொருவர் பீடத்துக்கு அருகிலும் வரும். இருக்கை விட்டெழாமலேயே இதன் கழுத்தில் கட்டுக்கயிறைச் சுற்றிக்கட்டுவதே போட்டியாகும். ஒருமுறை மட்டுமே முயலவேண்டும். கட்டமுடியாதவர்கள் அவைவிட்டு வெளியேறவேண்டும். எவரும் ஆயுதங்களெதையும் பயன்படுத்தலாகாது” என்றான். சேவகர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு கட்டுக்கயிற்றைக் தாலத்தில் கொண்டுவந்து நீட்டினர்.
பாண்டு புன்னகையுடன் “முதலில் எருது எங்குள்ளது என நீ எனக்குச் சொல்லவேண்டும் விதுரா” என்றான். விதுரன் “இளவரசே, நாம் அதைக் கட்டும்படி ஆகாது. மதுராபுரியின் இளவரசரே கட்டிவிடுவார். நாம் அடுத்த போட்டியையே சந்திக்கவிருக்கிறோம்” என்றான். பாண்டு நகைத்தபடி “ஆம், அவன் என்ன இருந்தாலும் யாதவன்” என்றான். எருதின் மூக்குவளையம் அகற்றப்பட்டது. ஒருவன் அதை பின்னாலிருந்து ஊக்க அது அமர்ந்திருந்தவர்களின் முன் பக்கம் வழியாக திமில் குலுங்க, விலாத்தசை அதிர நடந்தது.
முதல் யாதவ இளைஞன் கனத்த கரிய உடல் கொண்டிருந்தான். தோலாடையை மார்பின்மேல் போட்டு கல்மணிமாலையும் மரக்குழையும் அணிந்திருந்தான். கூர்ந்த கண்களுடன் கயிற்றை எடுத்து எருதின் கழுத்தை நோக்கிக் கொண்டுசென்றான். எருது அவனை திரும்பிநோக்கியதாகவே தெரியவில்லை. ஆனால் அவன் உடலை முன்னால் சரித்து எருதை அணுகியதும் தலையை பக்கவாட்டில் சாய்த்து ஈ ஒன்றை ஓட்டுவது போல மிக எளிதாக கொம்பைத் திருப்பி தலையைத் தூக்கியது. அதன் கொம்பு அவன் விலாவைக்குத்தி விலாவெலும்புக்குள் சென்று சிக்கிக்கொள்ள அதன் தூக்கிய தலையுடன் அவனும் அலறியபடி மேலே எழுந்தான்.
கைகால்களை இழுத்து உதறியபடி அடைத்த குரலில் அலறிக்கொண்டு சமநிலை தவறி அதன் திமிலைப்பற்றிக்கொள்ள கை பதறித் துழாவினான். கையின் பிடி வழுக்க காளையின் முகத்தில் தன் வயிறு உரசிச்சரிய அவன் துடித்த கைகால்களுடன் அதன் முன் விழுந்தான். கீழே கிடந்து அதிர்ந்த அவன் உடலில் இருந்து அதன் உயர்ந்த கொம்பு வரை அவன் குடல் மஞ்சள்கொழுப்பு படிந்த செந்நிற சகதிக்குழாயாக இழுபட்டு அவன் துடிப்பில் அசைந்து வழுக்கி நழுவிச்சரிந்து அவன் மேலேயே விழுந்தது. அவனைச்சுற்றி குருதி கொப்பளித்து கல்தரையில் வழிய அவன் வயிறு செந்நிறமாகத் திறந்து உள்ளே குடல்கள் கொதிக்கும் செங்கூழ் என கொப்பளிப்பது தெரிந்தது.
அவை சிலைவிழிகளுடன் அக்காட்சியை நோக்கி அமர்ந்திருக்க கம்சன் புன்னகையுடன் தன் தொடையில் அடித்துக்கொண்டான். சல்லியன் அரைக்கணம் கம்சனை நோக்கியபின் திரும்பினான். யாதவனின் இருகால்களும் குருதியில் வழுக்கி வழுக்கி இழுபட்டன. தலை பின்னகர்ந்து வாய் திறந்து, நாக்கு பதைபதைக்க, சேற்றுக்குழியின் குமிழிகள் உடையும் ஒலியுடன் துடித்தான். எருது அவனை குனிந்துகூட பாராமல் அவனைத் தாண்டி காலெடுத்துவைத்து அடுத்த யாதவன் முன் வந்து நின்றது.
அவன் உள்ளம்பதற அசையாமல் அமர்ந்திருந்தான். அவன் தாடை இறுகியசைவது தெரிந்தது. சேவகன் பின்னால் தட்ட எருது அடுத்த யாதவன் முன்னால் வந்தது. மூன்று யாதவர்கள் அஞ்சி அமர்ந்திருக்க நான்காமவன் கயிற்றை எடுத்தான். எருதின் உடல் சிலிர்த்தது. அது உலைத்துருத்தி என மூச்சிரைத்தது. அவன் எருதின் கொம்பை நோக்கியபடி ஒரு கையால் கயிற்றை நீட்டினான். மறுகையால் அது கொம்பைச்சரிக்குமென்றால் பிடிக்க ஒருங்கினான். ஆனால் அசையாமல் நின்ற எருது ஒருகணத்தில் முழுமையாகத் திரும்பி அவன் நெஞ்சில் தன் தலையால் நேருக்கு நேராக ஓங்கி முட்டியது.
யாதவன் அலறி பீடத்துடன் பின்னால் விழ அவன் சேவகன் அவனைப்பிடிக்க முன்னகர்ந்தான். அச்சேவகனை குத்தித் தூக்கி தன்பின்னால் சரித்தபின் நாகமெனச் சீறியபடி திமிலசையக் குனிந்து உடைந்த விலாவை கையால்பொத்தியபடி எழுந்து விலகமுயன்ற யாதவனை தன் வேல்நுனிக்கொம்புகளால் குத்தியது எருது. அவன் அலறியபடி உடல் அதிர்ந்து ஒருகையால் தரையை ஓங்கி அறைந்தான். எருது கொலைக்காகப் பழக்கப்பட்டது என விதுரன் உணர்ந்தான். அது வெறியுடன் அவனைக் குத்தி தூக்கிப்போட்டது. அவன் உடலுக்குள் புகுந்த கொம்பை ஆட்டித் துழாவியது. நிமிர்ந்தபோது அதன் வெண்ணிற பெருமுகம் முற்றிலும் செந்நிறமாக மாற கொம்புநுனிகளில் இருந்து நிணம் வழுக்கி முகத்திலும் கழுத்திலும் விழுந்து கீழே சொட்டியது. சீறியபடி அது தலையை அசைத்தது.
கொழுவிய குருதித்துளிகள் சொட்டிக்கொண்டிருக்கும் முகத்துடன் மேலும் அது நடந்தபோது எந்த யாதவனும் கைநீட்டவில்லை. கம்சன் மீசையை இடக்கையால் நீவியபடி புன்னகையுடன் அது தன்னை நோக்கி வருவதை பார்த்துக்கொண்டிருந்தான். அவையே அவனைத்தான் நோக்கிக்கொண்டிருக்கிறது என அவன் அறிந்திருந்தான். கீழே நெளிந்த உடல்கள் அமைதியடைந்தன. அவற்றை அரண்மனைச் சேவகரும் அந்த யாதவர்களின் அணுக்கத்தோழர்களும் சேர்ந்து எடுத்து விலக்கினர்.
கம்சனுக்கு முன்னால் இருந்த யாதவன் கைநீட்டுவது போல சற்று அசைய எருது மூச்சு சீறி தோலைச் சிலிர்த்தது. அவன் அசைவிழந்து மூச்சடக்கிக் கொண்டான். சேவகன் தட்ட எருது கம்சனின் முன்னால் வந்து நின்றது. அது வரும்போதே அவன் தன் சால்வையை விலக்கி கைகளை ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டு சிறிய விழிகளால் கூர்ந்து நோக்கிக் காத்திருந்தான். எருது அவனருகே வந்தபோது அவன் அந்தக்கயிற்றை தன் சேவகனிடம் கொடுத்து விட்டான்.
எருது அவன் முன் நின்று முன்னங்காலை மெல்ல தரையில்தட்டி குனிந்து கொம்பை ஆட்டியது. அதன்மேல் குருதி சிறிய குமிழிகளாகவும் கட்டிகளாகவும் மாறி வழிந்த நிலையில் உறையத்தொடங்கியிருந்தது. கம்சன் அதை ஒரு கணம் நோக்கினான். பின்பு நினைத்திருக்காத கணத்தில் அதன் கழுத்தில் ஓங்கி கையால் வெட்டினான். அந்த ஓசையில் அவை திகைத்தது. அடிபட்ட எருது திரும்புவதற்குள் அவன் அதன் வலக்கொம்பை தன் இடக்கையால் பற்றி முழுவல்லமையுடன் இழுத்து வளைத்து வலக்கையால் மீண்டும் அதன் காதுக்குப்பின்பக்கம் ஓங்கி அறைந்தான்.
எருது நிலைகுலைந்தாலும் கொம்பை விடுவித்து அவனை குத்தித்தூக்க முயன்றது. கம்சன் தன் கழுத்துநரம்புகளும் தோள்தசைகளும் தெறிக்க, தாடை இறுகி கடிபட, முழு வல்லமையாலும் அதன் கொம்பை வளைத்து அதன் தலையை நிலம்நோக்கிச் சரித்தான். அது கால்களை முன்னால் நீட்டி வைத்து எழ முயல அவன் தன் இடக்காலால் அதன் கால்களைத் தட்டினான். எருது நிலையழிந்து சரிந்து விழுந்தது. அதன் தலையை தன் இடக்கையால் வளைத்து மடியோடு சேர்த்து இறுக்கியபடி அதன் கழுத்தில் ஓங்கி அறைந்தான் கம்சன். ஒரே இடத்தில் ஐந்துமுறை அவன் அறைந்ததும் எருதின் வாய் திறந்து கனத்த நாக்கு வெளியே வந்தது.
கொம்பைப்பிடித்த கையை விடாமல் எருதின் தலையை உடலுடன் அழுத்திப்பிடித்து வலக்காலால் அதன் முன்காலை அழுத்தி மிதித்து அதன் அடிக்கழுத்தை அடித்துக்கொண்டே இருந்தான். அதன் உடல் அதிர்ந்து அதிர்ந்து அடங்கி கால்கள் மண்ணை உதைத்து ஓய்வது வரை. அவன் அதை அறைந்ததுமே ஏதோ சொல்ல எழுந்த இளையவரை மூத்தவர் கையசைத்து அடக்கினார். எருதின் வாயிலிருந்து கொழுத்த குருதி வழியத்தொடங்கியது. அதன் உடல் முற்றிலும் அசைவிழந்து விழிகள் மேலேறி வெண்ணிறச் சிப்பிகளாகத் தெரிந்தன.
VENMURASU_EPi_96_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
கம்சன் அந்தக்குருதியைத் தொட்டு தன் மீசையில் தடவி நீவியபின் கையை நீட்ட சேவகன் கட்டுக்கயிற்றைக் கொடுத்தான். அதை எருதின் கழுத்தில் கட்டியபின் அதை காலால் உதைத்துத் தள்ளினான். அதன்குருதியிலேயே வழுக்கி அது அசைந்துவிலகியது. தொங்கிய நீள்நாக்கு அவ்வசைவில் ஆடியது.
“கம்சரே, எந்த யாதவனும் எருதைக் கொல்வதில்லை” என்றார் இளைய குலமூத்தவர் உரக்க. “எங்கள் கண்முன் நம் குலச்சின்னத்தை அவமதித்திருக்கிறீர்கள்.” கம்சன் கோணலான உதடுகளுடன் சிரித்து “தன்னைக்கொல்லவரும் பசுவையும் கொல்லலாமென்பது விதி” என்றான். “ஆனால்…” என அவர் தொடங்கியதும் மூத்தவர் கையமர்த்தி தன் மாணவனிடம் தலையசைத்தார்.
அவன் முன்னால் வந்து வணங்கி அடுத்த போட்டியை அறிவித்தான். சிவந்த நிறமான பசு ஒன்று அவைமுன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. “அவையோரே, இப்பசுவின் கழுத்தில் உள்ள வளையத்தை உடைக்காமல் கழற்றி எடுப்பவர் வென்றார். பிறர் அவை நீங்கலாம். அதற்குரிய நேரம் ஒரு மூச்சு” என்றான் மாணவன். பசு சேவகனால் முதல் ஷத்ரிய மன்னன் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அவன் திகைப்புடன் அந்த இரும்பு வளையத்தைப்பார்த்தான். திரும்பி தன் சேவகனைப்பார்த்தபின் வளையத்தைத் தூக்கி கொம்புவழியாக கழற்ற முயன்றான். கொம்புக்கு மிகக்கீழே இருந்தது அது.
அடுத்த ஷத்ரியன் அந்த வளையத்தை தன் புஜங்களால் வளைத்து கொம்பை நோக்கி இழுக்கமுயன்றான். அவன் தோற்றதுமே பிற அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அந்தவளையம் பசுவின் கொம்புகள் வழியாக வரவே முடியாதென்று. திகைப்புடன் சிலர் தொட்டுப்பார்த்து விலகினார்கள். சிலர் கையையே நீட்டவில்லை. பாண்டு விதுரனைப் பார்த்தான். விதுரன் “அதை சல்லியர் செய்துவிடுவார்” என்றான். பாண்டு “எப்படி?” என்றான். விதுரன் “தெரியவில்லை. ஆனால் செய்துவிடமுடியும் என சல்லியர் நினைப்பதை முகத்தில் காண்கிறேன்” என்றான்.
சல்லியன் முன் பசு கழுத்து வளையத்துடன் வந்து நின்று தலையை ஆட்டியது. அவனையே அவை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தது. சல்லியன் அந்த வளையத்தை சிலகணங்கள் உற்றுநோக்கியபின் அதன் இருபக்கமும் தன் கையை வைத்து அழுத்தி நீள்வட்டமாக்கினான். பசுவின் கழுத்தெலும்பு இறுகும்படி வளையத்தை நீட்டியபின் அதன் நீள்முனையை ஒரு கையால் பற்றி பசுவின் மூக்கை இன்னொரு கையால் பிடித்தான். அதன் வாய்நீரைத் தொட்டு அதன் மூக்குஎலும்பில் நன்றாகப்பூசினான். அவன் என்னசெய்யப்போகிறான் என்று ஷத்ரியர் திகைக்க யாதவகுலமூத்தார் புன்னகை புரிந்தனர்.
சல்லியன் பசுவின் மூக்கையும் தாடையையும் சேர்த்துப்பற்றி ஒரே வீச்சில் அழுத்திப் பின்னால் உந்தி தாடையை கழுத்தோடு முடிந்தவரை ஒட்டி அதே கணம் வளையத்தின் நீள்நுனியை முன்னால் இழுத்து அதற்குள் பசுவின் மூக்கையும் தாடையையும் அழுத்திச்செலுத்தி மேலே தூக்கினான். பசுவின் எச்சில்பரவிய முகஎலும்பு வழியாக இரும்புவளையம் வழுக்கி மேலேறியதும் கொம்பு வழியாக அதை உருவி மேலே தூக்கி எடுத்து அவைக்குக் காட்டினான். பசு வலியுடன் கழுத்தை உதறி காதுகளை அடித்துக்கொண்டது. ஒருகணம் திகைத்தபின் அவை ஆரவாரமிட்டது.
குலமூத்தார் “யாதவர்களில் ஷத்ரியர்களைத் தேடினோம். ஷத்ரியர்களில் யாதவர்களைத் தேடினோம். இனி ஷத்ரியர்களில் அறிஞனைத் தேடுவோம்” என்றார். அவர் கையசைத்ததும் நான்கு பேர் உள்ளே ஓடினர். பின்வாயிலில் இருந்து ஒரு பெரிய இரும்புக்கூண்டு சக்கரங்கள் கொண்ட வண்டிமேல் வைக்கப்பட்டு சேவகர்களால் தள்ளிக் கொண்டுவரப்பட்டது. அதற்குள் ஒரு புலி நிலைகொள்ளாமல் இரும்பு உரசும் ஒலியில் உறுமியபடி வாலைச் சுழற்றிச் சுற்றிவந்தது. வண்டி நின்றதும் சமநிலையிழந்து அமர்ந்து மீண்டும் எழுந்தது. அவையைக் கண்டு அஞ்சி பதுங்கி வாய் திறந்து செந்நாக்கையும் வெண்பற்களையும் காட்டி உறுமியது.
மாணவன் “அவையோரே, இந்த அவைக்குக் கொண்டுவரப்படும் ஏழு இளங்கன்றுகளில் ஒன்றை நீங்கள் இக்கூண்டுக்குள் அனுப்பலாம். ஏழு மூச்சு நேரம் கன்று கூண்டினுள் இருக்கவேண்டும். அதை இப்பசித்தபுலி கொல்லும் என்றால் அதை உள்ளே அனுப்பியவரும் அக்கணமே தன் வாளை தானே பாய்ச்சி உயிர்துறக்கவேண்டும். கன்றை தேர்வுசெய்யாதோர் விலகிக்கொள்ளலாம்” என்றான். விதுரன் “இது என்ன போட்டி?” என்றான். “அந்தப்புலி பசியுடனிருப்பதை வாயைப்பார்த்தாலே அறியமுடிகிறது.”
பாண்டு அந்தப் புலியின் கண்களை உற்று நோக்கினான். “மிகவும் அஞ்சியிருக்கிறது” என்றான். பின்பு தலைதூக்கி பின்னால் நின்றிருந்த விதுரனிடம் “அதை நான் தெரிவுசெய்கிறேன்” என்றான். விதுரன் “நீங்கள்…” என்றதும் அவன் சிரித்தபடி “என் அன்னையின் பாவைப்பேழையில் புலிகளும் கன்றுகளும் ஒன்றாகவே இருக்கும்” என்றான். அவன் கண்களை நோக்கியபின் விதுரன் “ஆம் இளவரசே, அஸ்தினபுரி ஒருபோதும் தோற்றுப் பின்மாறலாகாது” என்றான்.
மறுபக்கம் வெண்ணிறமும் கருநிறமும் செந்நிறமும் கொண்ட ஏழு இளம்பசுக்கன்றுகள் சேவகர்களால் கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. கன்றுகளைக் கண்டதும் பதுங்கியிருந்த புலி எழுந்து கம்பியருகே வந்து பார்த்தது. மெல்லிய மலரிதழ்போல நெளிந்த விளிம்புகள் கொண்ட நாக்கை நீட்டி கடைவாயை நக்கியபடி முரசுத்தோலை கோலால் நீவியதுபோன்ற ஒலியில் முனகியது. வாலைத்தூக்கியபடி பரபரப்புடன் கூண்டுக்குள் சுற்றி வந்தது. சபையில் இருந்த அனைத்து ஷத்ரியர்களும் திகைத்த விழிகளுடன் அமர்ந்திருந்தனர்.
பாண்டு மெல்ல எழுந்து கையசைத்து சேவகனை அழைத்தான். அவற்றில் முற்றிலும் வெண்ணிறமாக நின்ற இளம்கன்று ஒன்றைச் சுட்டி அதை இழுத்துவரச்சொன்னான். அவையெங்கும் வியப்பு உடலசைவின் ஒலியாக வெளிப்பட்டது. கம்சன் முனகியபடி முன்சரிந்து அமர்ந்தான். கன்றை இழுத்துவந்த சேவகனின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. பாண்டு எழுந்து சென்று கூண்டின் கதவை மெல்லத்திறந்து கன்றை உள்ளே விடும்படிச் சொன்னான். ஒரு கணம் தயங்கியபின் சேவகன் கன்றைத் தூக்கி கூண்டுக்குள் விட்டான்.
கன்று எதையும் உணராமல் கூண்டுக்குள் நின்றது. கம்பிகளில் உடலை உரசியபடி அது நடந்தபோது புலி பதுங்கிப் பின்னகர்ந்தது. கன்று புலியை ஆர்வத்துடன் பார்த்தபின் புல்லை மெல்வதுபோல தலையை அசைத்தபடி ’ம்பேய்’ என குரலெழுப்பியது. புலி உறுமியபடி உடலை நன்றாகச் சுருட்டி கூண்டின் மூலையில் பதுங்கி அமர்ந்து மீசை சிலிர்க்க வாயை முழுமையாகத் திறந்து ஓசையின்றி தன் வெண்பற்களைக் காட்டியது. கன்று திரும்பி வெளியே நின்ற தன் தோழர்களைப்பார்த்தபின் வாலைத்தூக்கி சிறுநீர் கழித்தது.
புலி கன்றை ஒன்றும் செய்யப்போவதில்லை என்று அவை உணர்ந்ததும் அனைவரும் மெல்ல இருக்கைகளில் சாய்ந்தமர்ந்தனர். சேவகன் கூண்டைத்திறந்து கன்றை வெளியே இழுத்தான். அது வெளியே வரத்தயங்கியதுபோல அசையாமல் சிலகணங்கள் நின்றபின் எம்பிக்குதித்து வெளிவந்தது. கூண்டு மூடப்பட்டதும் புலி மெல்ல எழுந்து வந்து கூண்டுக்கம்பிகள் வழியாக வெளியே நோக்கியது. கண்களை மூடிமூடித் திறந்தபின் வாய் திறந்து உறுமியபடி திரும்பவும் சுற்றிவரத்தொடங்கியது.
விதுரன் “அது ஒரு பூனை. பகலில் அதன் கண்கள் கூசுகின்றன. ஆகவேதான் வெண்ணிறக் கன்றை அனுப்பினீர்கள்” என்றான். பாண்டு சிரித்தபடி “ஆம், எனக்கே கண்கள் கூசிக்கொண்டிருக்கின்றன” என்றபடி பட்டுத்துணியால் கண்களைத் துடைத்துக்கொண்டான். விதுரன் புலியை மீண்டும் பார்த்தான். அதன் கண்களிலிருந்து வழிந்த நீரில் பூச்சிகள் மொய்த்துக்கொண்டிருந்தன. கண்களை மூடிமூடித் திறந்தபடி அது சுற்றிவந்தது. விதுரன் “ஆம், அடர்கானகத்துப்புலி. இத்தனை ஒளியை அது அறிந்திருக்காது” என்றான்.
குலமூத்தார் எழுந்து “அவையினரே, இன்று இளவரசியின் தன்னேற்பு மணநிகழ்வில் மூவர் மட்டுமே பங்கேற்கவியலும்” என்றார். சேவகர் மூன்று இருக்கைகளைக் கொண்டு வந்து அவைநடுவே சிம்மாசனத்துக்கு எதிராகப் போட்டனர். “மதுராபுரியின் இளவரசரும் மாத்ரநாட்டு இளவரசரும் அஸ்தினபுரியின் இளையமன்னரும் அப்பீடங்களில் அமரவேண்டுமென கோருகிறோம்” என்றார் குலமூத்தார். அமைச்சர் மூவர் வந்து மூவரையும் அழைத்துச்சென்று பீடத்தில் அமரச்செய்தனர்.
“மார்த்திகாவதியின் இளவரசி தன் மணமகனை ஏற்க எழுந்தருள்கிறார்” என்று நிமித்திகன் அறிவித்ததும் மங்கல இசை முழங்கத்தொடங்கியது. இரு சேடியர் ஒரு பெரிய தாலத்தில் இருந்த செந்தாமரைமலர்களால் ஆன மாலையை குந்தியின் கையில் கொடுத்தனர். இருபக்கமும் சேடியர் வர குந்தி கையில் மலர்மாலையுடன் மெல்ல நடந்து வந்தாள். பொற்குடக்கழுத்துபோன்ற அவள் இடைக்குக் கீழே கால்கள் பட்டாடையை அலையிளகச்செய்து அசைந்தன. மேகலையின் பதக்கவரிசைகள் ஒளியுடன் பிரிந்து இயைந்து நெளிந்தன. பொன்னோசையும் மணியோசையும் பட்டோசையும் அவ்வொளியின் ஓசையென எழுந்தன.
அவளிடம் ஓர் ஆண்மைச்சாயலிருந்ததை விதுரன் அறிந்தான். திரண்ட தோள்களிலும் இறுகிய கைகளிலும் வலுவான கழுத்திலும் அது தெரிந்தது. நடந்தபோது அவள் தோள்கள் குழையவில்லை. கையில்தூக்கிய மலர்மாலை அசையவுமில்லை. நெருங்கி வரும்தோறும் அவள் என்னசெய்யப்போகிறாளென விதுரன் உணர்ந்துகொண்டான். அவனுடைய ஒரு கால் மட்டும் மெதுவாக நடுங்கிக்கொண்டிருந்தது. பாண்டு அவளைப்பார்த்தபின் திரும்பி சல்லியனைப் பார்த்தான்.
மூவரையும் நெருங்கிவந்த குந்தி தன் கையிலிருந்த தாமரை மாலையை பாண்டுவின் கழுத்தில் போட்டாள். அவள் நெருங்கியபோது சல்லியனை நோக்கி அனிச்சையாகத் திரும்பியிருந்த பாண்டு ஒரு கணம் கழித்தே என்ன நிகழ்கிறதென உணர்ந்தான். இரு கைகளாலும் மாலையைப் பற்றியபடி அவன் செயலிழந்து அமர்ந்திருக்க அவையெங்கும் வியப்பொலியும் பின்பு விதவிதமான பேச்சொலிகள் கலந்த இரைச்சலும் எழுந்தது.
கம்சன் சிலகணங்கள் என்ன நிகழ்ந்ததென்றே உணராதவன் போல அவையையும் குந்தியையும் மாறி மாறி நோக்கினான். குந்தி மாலையை அணிவித்தபின் பாண்டுவை வணங்கிவிட்டு அவையை வணங்கத் திரும்பியபோது கம்சன் தன் தொடையை ஓங்கி அறைந்தபடி பாய்ந்து எழுந்தான். “என்ன இது? என்ன நடக்கிறது இங்கே?” என்று உடைந்த குரலில் உரக்கக் கூவினான். அவன் உடலுக்கு அக்குரல் மென்மையானதாக இருந்தது. “இது சதி! நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்” என்றான். பதற்றமாக சுற்றி நோக்கியபடி “எங்கே என் படைகள்… இதோ இவளை நான் சிறையெடுத்துச்செல்லப்போகிறேன்… ஆம்!” என்றான்.
சல்லியன் திடமான உரத்த குரலில் “ஷத்ரியர் அவையில் அது நடக்காது கம்சரே. இளவரசி எதை விரும்புகிறாரோ அதுவே இங்கு விதி” என்றான். குந்திபோஜனும் தளபதிகளும் வாட்களை உருவினர். கம்சன் “இவளை கொண்டுபோகமுடியாவிட்டால் கொன்றுவிட்டுச் செல்கிறேன்” என்றபடி தன் வாளை உருவி அதே விரைவில் குந்தியை வெட்ட முயன்றான். ஆனால் அக்கணமே சல்லியன் அவன் வாள்கரத்தை வலக்கையால் பிடித்து இடக்கரத்தால் அவன் தோளை அழுத்தி அவனை செயலற்று நிற்கச்செய்தான். கம்சன் இடக்கையால் தன் கட்டாரியை உருவி சல்லியனை குத்தப்போக சல்லியன் கம்சனை தூக்கிச் சுழற்றி தரையில் அறைந்தான்.
வாள் உலோகச் சிலும்பலுடன் தெறித்துவிலக பேருடல் மண்ணில் அறைந்து அதிர்வொலியெழுப்ப கம்சன் மல்லாந்து விழுந்தான். புரண்டு எழுந்து நின்றபோது அவன் ஆடைகள் கலைந்து தரை நோக்கி நழுவின. காளையின் குருதி செங்கருமையாகப் படிந்த மார்புடனும் முகத்துடனும் வெறியுடன் பற்களைக் கடித்துக்கொண்டு மூச்சிரைத்தான். அதற்குள் அவனைச்சுற்றி குந்திபோஜனின் தளபதிகள் வாட்களுடன் கூடினர். “மறுமுறை எழமுடியாது போகலாம் கம்சரே” என்று சல்லியன் மென் சிரிப்புடன் சொன்னான்.
கம்சன் பற்களைக் கடித்து உறுமியபோது அவன் ஒரு கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவையை சுற்றிநோக்கிய அவன் அவனைநோக்கிச் சிரித்த கண்களையும் பற்களையும்தான் கண்டான். தன் மேலாடையைக்கூட எடுக்காமல் அவையை விட்டு வெளியே ஓடினான். சல்லியன் “இளவரசியின் விருப்பப்படி மணநிகழ்வு முழுமைகொள்ளட்டும் குந்திபோஜரே” என்றான். அவையிலிருந்த யாதவரும் ஷத்ரியரும் ‘ஆம் ஆம்’ என்றனர்.
குந்திபோஜன் சூதர்களை நோக்கித் திரும்ப அவர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். வெளியே அரண்மனையின் அறிவிப்பு மணி ஒலிக்கத் தொடங்கியது. அதைக்கேட்டு கோட்டைமீதும் காவல்மாடங்களிலும் இருந்த பெருமுரசுகள் ஒலிக்கத்தொடங்கின. நகரமெங்கும் மக்கள் எழுப்பிய வாழ்த்தொலி இலைகள்மேல் மழைபோல எழுந்தது. குந்திபோஜன் “அஸ்தினபுரியின் இளையமன்னரை மணமண்டபத்துக்கு அழைக்கிறோம்” என்றார்.
விதுரன் பாண்டுவின் கைகளைப்பற்றிக்கொண்டான். அவை இறந்துகொண்டிருக்கும் பாம்பின் உடல்போல குளிர்ந்து அதிர்ந்து நெளிந்தன. “இளவரசே எதையும் எண்ணாதீர்கள். நீங்கள் மணமேடை ஏறியாகவேண்டும்… விழுந்துவிடக்கூடாது” என்று விதுரன் பாண்டுவின் காதில் சொன்னான். நடுங்கி அதிர்ந்த உதடுகளும் ஆடிக்கொண்டிருக்கும் தலையுமாக பாண்டு “ஆம்… ஆம்” என்றான்.

4/24/14

பகுதி ஒன்பது : மொழியாச்சொல்[ 3 ]

பகுதி ஒன்பது : மொழியாச்சொல்[ 3 ]
மீண்டும் நினைத்துக்கொண்டதுபோல மழை தொடங்கியது. மாலைநேரத்து மழைக்கே உரிய குளிரும் இருளும் அறைகளுக்குள் நிறைந்தன. சாளரக்கதவுகளில் சாரல் அறைந்த ஒலி கேட்டபடி பிருதை தன் அறைக்குள் தனித்திருந்தாள். அவளுடைய நெற்றிப்பொட்டு மட்டும் மெல்ல அதிர்ந்துகொண்டிருக்க சுட்டுவிரலால் அதை அழுத்தியிருந்தாள். வெளியே மெல்லிய காலடியோசையுடன் அனகை நெருங்கிவந்து கதவை விரலால் சுண்டினாள். ‘ம்’ என்றாள் பிருதை. அனகை உள்ளே வந்து வணங்கி கதவைத் தாழிட்டாள்.
பிருதை ஏறிட்டுப்பார்த்தாள். “மாத்ரநாட்டு இளவரசர் சற்றுமுன் கிளம்பிச்சென்றுவிட்டார்” என்றாள் அனகை. குந்தி கண்களைத் திருப்பிக்கொண்டு சுவரை நோக்கினாள். “நகர்மக்கள் திரண்டு அவருக்குப்பின்னால் சென்றனர். படகுத்துறையில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி அவரை வாழ்த்தி குரலெழுப்பி வழியனுப்பினர்.” பிருதை மேலே சொல்லும்படி சைகை காட்ட “கம்சர் புரவியிலேயே மதுராபுரிக்குச் சென்றுவிட்டார் என்கிறார்கள். அவரைத்தொடர்ந்து அவரது படைவீரர்களும் சென்றிருக்கிறார்கள். பிறர் இப்போதுதான் படகுகளில் கிளம்புகிறார்கள்” என்றாள் அனகை.
பிருதை “நான் வசுதேவரைச் சந்திக்கவிழைகிறேன்” என்றாள். “அவரும் கம்சருடன் சென்றுவிட்டாரா என்ன?” அனகை “அவர் இங்குதான் இருக்கிறார் இளவரசி. நம் அரசரிடமும் அஸ்தினபுரியின் பிதாமகரிடமும் உரையாடிக்கொண்டிருக்கிறார்” என்றாள். பிருதை “அவரிடம் நான் சந்திக்க விழைவதைச் சொல்” என்றாள். அனகை தலைவணங்கி திரும்பும்போது சற்றே ஒலிமாறுபட்ட குரலில் பிருதை “அனகை” என்றாள்.
அனகை நின்றாள். “அஸ்தினபுரியின் அமைச்சர் என்று அந்த இளைஞரைத்தான் சொல்கிறார்களா?” என்றாள் குந்தி. “ஆம், அவர் மறைந்த மாமன்னர் விசித்திரவீரியரின் அறப்புதல்வர் என்றும் வியாசமுனிவரின் நேர்மைந்தர் என்றும் சொல்கிறார்கள்… அவருக்கு அரசருக்கிணையான அதிகாரமிருக்கிறது.” பிருதை தலையை அசைத்தாள். அனகை அவள் ஏதாவது கேட்பாளென்பதுபோல நின்றாள். குந்தி அவள் செல்லலாம் என்று கையை அசைத்தபின் அவள் பின்னால் வந்து “நில்” என்றாள்.
அனகை திரும்பி நோக்கினாள். “வசுதேவர் என்னை வந்து சந்திப்பது செய்தியாக ஆகலாம். இங்கே மதுராபுரியின் ஒற்றர்கள் உண்டு… நான் அரண்மனைக்குச் செல்கிறேன். அவரும் அரண்மனைக்கு வரட்டும். அரண்மனை இடைநாழியில் நான் அவரை தற்செயலாகச் சந்தித்து சில சொற்கள் பேசுகிறேன்.” அனகை வியப்புடன் “இடைநாழியிலா?” என்றாள். “ஆம், இடைநாழியில் பேசுவது மந்தணமல்ல. அதை அனைத்து ஒற்றர்களும் கண்டு மதுராபுரிக்குத் தெரிவிக்கட்டும்” என்றாள்.
அனகை சென்றபின் பிருதை மீண்டும் தன் நெற்றியை அழுத்திக்கொண்டாள். உடலில் குருதி ஓடும் ஒலியைக் கேட்பவள் போல அமர்ந்திருந்தாள். நாகம் ஏறிய மரத்தின் பறவைகள் போல எண்ணங்கள் எதையோ கண்டு அஞ்சி அமரமறுத்து கலைந்து கலைந்து சிறகடித்துக்கொண்டிருந்தன. சிலகணங்களுக்குப்பின் அவளால் அமர்ந்திருக்க இயலவில்லை. எழுந்து அறைக்குள் உலவத் தொடங்கினாள்.
மழை மெதுவாக ஓய்ந்து துளியோசை கேட்டுக்கொண்டிருந்தது. அரண்மனை முழுக்க நெய்விளக்குகளை ஏற்றத் தொடங்கினார்கள். நெய்த்திரி விளக்கை ஏந்திய சேடிகள் இருளில் நடந்து விளக்குகளை ஏற்றி ஏற்றிச் செல்வது மின்மினிகள் அலைவது போலத் தெரிந்தது. மின்மினி சென்று தொட்ட பாவைவிளக்குகள் சுடர்கொள்ள அந்த கீழ்ஒளியில் பெண்பாவைகளின் முகங்களில் நாணப்புன்னகை மலர்ந்தது. அவர்களின் அணிக்கொண்டையின் நிழல்கள் எழுந்து கூரையைத் தொட்டு மடிந்தன.
சற்று நேரத்தில் அனகை மீண்டும் வந்தாள். “வசுதேவரைக் கண்டேன் இளவரசி. தாங்கள் சற்றுநேரம் கழித்து இடைநாழியில் நடந்தால் அவர் உங்களைக் கண்டு எதிரே வருவார்” என்றாள். குந்தி எழுந்து சேடியை அழைத்தாள். அவள் கொண்டுவந்த நறுமண வெந்நீர் பாத்திரத்தில் முகம் கழுவி கூந்தல் திருத்தி உடைகளையும் அணிகளையும் சரிசெய்துகொண்டாள். “நான் அரண்மனைக்குக் கிளம்பவேண்டும்… அரசரை சந்திக்கவிருக்கிறேன்” என அவள் சொன்னதும் சேடி தலைவணங்கி உள்ளே சென்றாள்.
முதற்சேடி முன்னால் சென்று அந்தி பரவிய அந்தப்புர முற்றத்தில் இறங்கி வலம்புரிச்சங்கை ஊதி அவள் கிளம்புவதை அறிவித்தாள். மங்கலத்தாலமும் சாமரமும் ஏந்திய சேடியர் இருபக்கமும் வர பிருதை அந்தப்புர முற்றத்துக்கு அப்பால் இருந்த இடைநாழியில் ஏறி மறுபக்கம் இருந்த அரண்மனை நோக்கிச் சென்றாள். இடைநாழி எங்கும் நெய்விளக்குகள் ஆடிப்புலங்களில் சுடர்பெருக்கி நின்றிருந்தன. தரை மழையீரத்தில் அந்த செவ்வொளியை ஏற்று பளபளத்தது.
எதிரே வசுதேவன் செம்பட்டுச்சால்வையைப் போர்த்தியபடி வருவதைக்கண்டு நடைவிரைவைக் குறைத்தாள். அனகை விரைவைக் குறைக்காமல் முன்னால் நடக்க பிறசேடியர் அக்குறிப்பை உணர்ந்து அவளை முந்திச்சென்றனர். அவளும் வசுதேவனும் அருகணைந்து முகம் நோக்கி நின்றனர்.
வசுதேவன் முறைப்படி பணிந்து “மார்த்திகாவதியின் இளவரசியை வணங்குகிறேன்” என்றான். குந்தி வணங்குவதுபோன்ற அசைவைக் காட்டியபடி “என் மைந்தனைப்பற்றிய செய்தி ஏதாவது கிடைத்ததா?” என்றாள். “இல்லை பிருதை. என் படைவீரர்கள் யமுனைக்கரையின் அனைத்து படகுத்துறைகளிலும் மீனவர் இல்லங்களிலும் விசாரித்துவிட்டனர். குழந்தை படகுடன் நீரில் மூழ்கியிருக்கவே வாய்ப்பு” என்றான்
பிருதையின் கழுத்தின் தசைகள் இழுபட்டு பின் தளர்ந்தன. பார்வையை பக்கவாட்டில் திருப்பி உதடுகளை இறுகக் கடித்து “அவன் இறக்கமுடியாது” என்றாள். வசுதேவன் “…இதென்ன பேச்சு?” என்று தொடங்க “அவன் சூரியனின் மைந்தன். சூரியநாகம் அவனுக்குக் காவல். அவன் இறக்கமாட்டான்” என்றாள். “என்ன பேசுகிறாய் என்று தெரிகிறதா உனக்கு? அரசுசூழ்தல் பயின்ற நீ பேசும் பேச்சுதானா இது?” என்றான் வசுதேவன்.
“நான் அதை உறுதியாக அறிவேன்” என்றாள் குந்தி. “நான் நேற்று ஒரு கனவு கண்டேன். நான் ஆடியில் என்னைப்பார்க்கிறேன். என் ஆடிப்பாவை அந்த மைந்தனுக்கு முலையூட்டுகிறது. அது என் முலைப்பால். ஆனால் இப்பால் நான் திகைத்து நின்றுகொண்டிருந்தேன்…. கனாநூலின் கணிதப்படி அது அக்குழந்தையை எனக்கு நிகரான எவளோ ஏற்று முலையூட்டி வளர்க்கிறாள் என்பதற்கான சான்று. ஆம், அவன் இருக்கிறான்.”
“ஆனால் இன்று நீ அச்செய்தியை வெளியே சொல்லமுடியாது” என்றான் வசுதேவன். “நம் யாதவர்குலத்தில் அது மிக இயல்பான ஒன்று. உனக்கு மைந்தனிருப்பதை நான் கம்சரிடம் சொன்னேன். அதையே மங்கலக்குறியாக அவர் எண்ணினார். ஆனால் ஷத்ரியர்களின் மரபு அதுவல்ல. அவர்கள் மணம்புரிகையில் மகளிர் கன்னியராக இருந்தாகவேண்டுமென்ற நெறிகொண்டிருக்கிறார்கள். அவர்களின் நூல்களும் முறைகளும் நம்பிக்கைகளும் அதை வலியுறுத்துகின்றன.”
“ஆம்” என்றாள் பிருதை. “நான் என் கணவரிடம் அனைத்தையும் சொல்லலாமென்றிருக்கிறேன்.” வசுதேவன் சிலகணங்கள் சிந்தனைசெய்துவிட்டு “அவரை நீ நன்கறிந்தபின் சொல்வதே முறை. சிலநாட்களாகட்டும். அவர் அதை ஏற்பாரென்பதை நீ உறுதிப்படுத்திக்கொள்…” பிருதை உறுதியான குரலில் “நான் எதையும் மறைக்கப்போவதில்லை. நான் யாதவப்பெண் என்பதை அறிந்துதான் அஸ்தினபுரி மணம்கொள்ள வந்துள்ளது. அன்னையரை முதன்மையாகக் கொண்ட நம் முறைமைகளை அவர்களும் நன்கறிவார்கள். எனக்குப்பிறந்த மைந்தனை நான் ஒளித்து வைக்கப் போவதில்லை. ஏனெனில் அவனைப்பெற்றதை நான் பிழையென எண்ணவில்லை. என்றென்றும் நான் பெருமை கொள்ளப்போகும் என் மைந்தன் அவன்” என்றாள்.
“ஆம், ஒளித்துவைக்கப்படும் ஒன்று நம்மைத் தளையிடுகிறது” என்றான் வசுதேவன். “ஆனால் எப்போது எப்படி அதைச் சொல்லவேண்டுமென நீதான் முடிவெடுக்கவேண்டும். அதை நீ அறிவாய்.” அவன் கண்களில் மெல்லிய ஒரு சுருக்கம் நிகழ்ந்தது. “அஸ்தினபுரியின் அரசி என்பது நீ எடுத்துக்கொண்ட சுமை.” பிருதை அவன் கண்களை நேருக்கு நேராக நோக்கி “ஆம், அது மார்த்திகாவதிக்கும் யாதவகுலத்துக்கும் நன்மை பயக்கும் என நான் எண்ணுகிறேன்” என்றாள்.
சினத்தை அடக்கமுடியாதவனாக வசுதேவன் “ஆம்,அஸ்தினபுரிக்கு ஏவல் பணிசெய்ய யாதவர்கள் செல்லமுடியும் அல்லவா?” என்றான். “அண்ணா, கம்சர் எவரையும் வாழவைப்பவரல்ல. யாதவர்களுக்கு அவர் பேரழிவையே உருவாக்குவார்” என்றாள். “ஏன், அவர் தலைமையில்…” என வசுதேவன் பேசத்தொடங்க “…நான் விவாதிக்கவில்லை அண்ணா. கம்சரால் எவரையும் தலைமைதாங்கி முன்நடத்த முடியாது” என்றாள். “சிலர் அழிக்கவே மண்ணில் பிறக்கிறார்கள், இறுதியில் அழிவார்கள்.”
வசுதேவன் திகைத்துப்போய் பார்த்தான். “என்னைச் சிறையெடுக்க அவர் முடிவெடுத்தபோதே அதை உணர்ந்துகொண்டேன். அது சற்றும் சிந்தியாமலெடுக்கப்பட்ட அவசர முடிவு. அப்படி சிறையெடுத்துக்கொண்டுசென்று அந்தப்புரத்தில் சேர்க்கப்படக்கூடிய எளிய பெண்ணா நான் என்பதை அவர் ஒரே ஒரு சூதரை கூப்பிட்டுக் கேட்டிருந்தாலே அறிந்திருக்கலாம். நான் யாதவகுலத்தவள், அந்தப்புரத்தில் ஒடுங்கிய ஷத்ரியப்பெண் அல்ல. ஒருபோதும் என் ஆணவம் அழிவதை ஏற்கமாட்டேன் என அவர் உணரவில்லை. அவரால் மனிதர்களை கணிக்கமுடியாது.”
“அத்துடன் அவரால் சிறப்பாக அரசாளவும் இயலாது” என்றாள் குந்தி. “என்னைச் சிறையெடுக்க அவர் ஒரு எளிய துணைத்தளபதியை அனுப்பினார். என் உடலை ஆராய்ந்து என்னிடமுள்ள ஆயுதத்தை பறித்துக்கொள்ளவேண்டும் என அவனுக்குத் தோன்றவில்லை. என் ஆணைகளை மீறும் துணிவும் வரவில்லை. ஏனென்றால் அவனால் என்னை ஏறிட்டுப்பார்க்கவே முடியவில்லை. ஒருவரைச் சிறையிட எப்போதும் அவருக்கு நிகரான ஒருவரையே அனுப்பவேண்டும் என்பது அரசுசூழ்தலின் விதி…” குந்தி புன்னகைசெய்து “அவர் அரசறிந்தவர் என்றால் ஓர் அமைச்சரை அனுப்பியிருப்பார்” புன்னகை மேலும் விரிய “சூழ்மதியாளர் என்றால் உங்களை அனுப்பியிருப்பார்” என்றாள்.
“ஆம்” என்றான் வசுதேவன். “என்னை அனுப்பியிருந்தால் நான் அதைச் செய்திருப்பேன். வேறு வழியே எனக்கிருந்திருக்காது.” அவன் பெருமூச்சுடன் “ஆயினும் அவர் யாதவர். நம் குலம். அரசர்கள் அவர்களின் மதியால் ஆள்வதில்லை.” பிருதை இடைமறித்து “பிறரது கூர்மதியை பெற்றுக்கொள்ளும் மனநிலை கொண்டவரல்ல கம்சர்” என்றாள். வசுதேவன் ஒன்றும் சொல்லாமல் நின்றான். “அண்ணா அவரிடமிருந்து விலகிவிடுங்கள். மதுவனத்துக்கே திரும்பிச்செல்லுங்கள். கம்சர் மதுராபுரியை அழிப்பார் என எனக்கு ஐயமே இல்லை. அவரிடமிருந்து மார்த்திகாவதியை காக்கவே நான் அஸ்தினபுரியின் இளையஅரசருக்கு மாலையிட்டேன்.”
“நீ சல்லியரை மணப்பாய் என நான் நினைத்தேன்” என்றான் வசுதேவன். அதுவரை அவன் கண்களை நோக்கிப்பேசிய குந்தி பார்வையை விலக்கி “அதனால் எப்பயனும் இல்லை. மாத்ரபுரி மார்த்திகாவதியைவிடச் சிறிய அரசு” என்றாள். வசுதேவன் அக்கணத்தில் அனைத்தையும் உறுதிசெய்துகொண்டவனாக “ஆனால் அவர்…” எனத் தொடங்கியதும் நாகம் தலைதிருப்புவதுபோலத் திரும்பி சீறும் குரலில் “நான் எதனாலும் எவருடைய உடைமையும் ஆவதில்லை” என்று குந்தி சொன்னாள்.
வசுதேவன் மேலும் பேசுவதற்காக வாயெடுத்தான். “என் மைந்தனைத் தேடுவதை நிறுத்தவேண்டியதில்லை” என்றபின் குந்தி முன்னால் நடந்து சென்றாள். அவளுடைய கூந்தல் நெளிவதை மேலாடை உலைந்து ஆடுவதைப் பார்த்துநின்றபோது வசுதேவன் அவள் சொல்லாத ஒன்றையும் உணர்ந்துகொண்டான். அரசுசூழ்வதில் அவன் ஒருபோதும் வெற்றிபெறப்போவதில்லை என அவள் எண்ணுகிறாள். அவனிடம் அவள் எதையுமே கேட்கவில்லை, ஆணைகளையும் அறிவுரைகளையும் மட்டுமே சொல்கிறாள்.
VENMURASU_EPi_96_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
சினம் கொண்டு அவன் அங்கே நின்றிருப்பதை திரும்பிப்பாராமலேயே பிருதை உணர்ந்தாள். நடக்கநடக்க அவள் அகம் கசப்பில் நிறைந்தது. சேடி அவள் வருகையை அறிவித்ததும் மந்திரசாலையில் இருந்து குந்திபோஜன் எழுந்து வாசலுக்கு வந்து “வருக இளவரசி… உன்னைத்தான் எதிர்பார்த்திருந்தோம்” என்றார். மந்திரசாலையில் ரிஷபரும் தேவவதியும் இருந்தார்கள். தேவவதியின் விழிகள் பிருதையின் விழிகளை நொடிநேரம் தொட்டு மீண்டன. பிருதை அவளைப்பாராமல் புன்னகை புரிந்தாள்.
பிருதை அமர்ந்ததும் குந்திபோஜன் “நம் குலமூதாதையரும் குடிகளும் குழம்பியிருக்கிறார்கள் பிருதை” என நேரடியாகவே தொடங்கினார். பிருதை “நமக்கு வேறுவழியில்லை தந்தையே” என்றாள். “நம்மால் மதுராபுரியின் அசட்டு அரக்கனை வேறெவ்வகையிலும் எதிர்கொள்ளமுடியாது” அவர்கள் எண்ணத்தில் ஓடுவதை உணர்ந்தவளாக “மாத்ரநாட்டு இளவரசர் எவ்வகையிலும் நமக்கு உதவமுடியாது. இன்று சுயம்வரத்தில் இருந்து அவர் மதுராபுரியின் பகைமையைப் பெற்று மீண்டிருக்கிறார்.”
குந்திபோஜன் பெருமூச்சுடன் “ஆம்” என்றார். “அவர் எதனால் அவ்வாறு எதிர்பாராதபடி கிளம்பி வந்தாரென்று எனக்குப்புரியவில்லை.” தேவவதியின் கண்கள் மீண்டும் குந்தியின் கண்களை தொட்டுச்சென்றன. “தேள்கடித்த குரங்கு என்று சொல்வார்கள். அந்நிலையில் இருக்கிறார் மதுராபுரியின் இளவரசர்… அவரது தந்தை எக்கணமும் உயிர்விடலாம். அவர் அரசரானால் நாம் நம் படைக்கலங்களைத் தாழ்த்தவே நேரமிருக்காது.”
“நம்மை அவர் நெருங்கமாட்டார்” என்று குந்தி சொன்னாள். “பீஷ்மரின் தலைமைத்திறனும் அஸ்தினபுரியின் படைத்திறனும் அவருக்குத் தெரியவில்லை என்றாலும் அமைச்சர்களுக்குத் தெரிந்திருக்கும்.” குந்திபோஜன் உரக்கச்சிரித்து “ஆம், நாம் அவர்களின் ஒரு படைப்பிரிவைக்கூட இங்கே நிறுத்திக்கொள்ள முடியும்” என்றார். தேவவதி மெல்ல அசைந்த உடையோசை கேட்டது. “அதற்காக நம் இளவரசி இத்தனை பெரிய முடிவை எடுத்திருக்கவேண்டியதில்லை” என்றாள். “அஸ்தினபுரியின் இளவரசரால் எழுந்து நடக்கவே முடியவில்லை.”
இருவர் விழிகளும் சந்தித்துக்கொள்ள முதல்முறையாக தேவவதியின் கண்களில் ஒரு புன்னகை இருப்பதை பிருதை கண்டாள். எப்போதும் அங்கே இருக்கும் திகைப்பு மறைந்திருந்தது. அச்சொற்களை அவள் பலநூறுமுறை தனக்குள் சொல்லிக்கொண்டிருப்பாள் என நினைத்ததும் தனக்குள் எழுந்த அலையை உணர்ந்து மெல்ல தன்னை விரித்து பரப்பி அமைதியாக்கிக்கொண்டபின் தேவவதியின் கண்களை நோக்கி “ஆம், அரசி. அவர் நோயுற்றிருக்கிறார். அங்கே மூத்தவரும் பார்வையற்றவர். அரசாட்சியை முழுக்க விதுரதேவர்தான் நடத்துவதாகச் சொன்னார்கள்” என்றபின் புன்னகைத்தாள்.
தீச்சுட்ட புழு போல தேவவதியின் அகம் அதிர்ந்து சுருண்டுகொள்வதை கண்நகர்வு வழியாகவே அறிந்து குந்தி மேலும் விரிந்த புன்னகையுடன் “அமைச்சர் விதுரர் அனைத்து வல்லமைகளும் கொண்டவர் என்கிறார்கள். அஸ்தினபுரியில் அவரையே அனைவரும் மன்னராக எண்ணுகிறார்கள்.” தேவவதி பதற்றத்துடன் தன் மேலாடை நுனியை எடுத்து விரல்களில் சுழற்றத்தொடங்கினாள். ஆனால் விரல்கள் நடுநடுங்க விட்டுவிட்டாள்.
குந்திபோஜன் “ஆம் இளவரசி, நான் விதுரரிடம் உரையாடினேன். அவர் அறியாத ஏதுமில்லை. அரசு சூழ்தலில் நீ இனி எதையாவது கற்கவேண்டுமென்றால் அதை அவரிடமே கற்கமுடியும்” என்றார். “நீ அவரைச் சந்தித்ததில்லை அல்லவா?” என்று அவர் கேட்டதும் பிருதை புன்னகையுடன் “பார்த்தேன்” என்று மட்டும் சொல்லிவிட்டுத் திரும்பி தேவவதியை நோக்கி உதடுகள் விரிய புன்னகை செய்தாள். “எங்கே?” என்றார் குந்திபோஜன். “நம் உபவனத்தின் கொற்றவை ஆலயத்தில் வாள்வணக்க பூசனைக்குச் சென்றிருந்தபோது” என்றாள். மீண்டும் தேவவதியை நோக்கியபோது தன் உடலிலும் கண்களிலும் நாணச்சிவப்பு படர்ந்திருக்கச் செய்தாள்.
தேவவதி அமர்ந்திருக்க முடியாமல் எழுந்துவிட்டாள். அவள் எழுந்ததைக் கண்டதும் குந்திபோஜன் “என்ன?” என்றார். “நான் அந்தப்புரம் செல்லவேண்டியிருக்கிறது. சுயம்வரத்துக்கு வந்த பெண்களுக்காக ஒரு பூசனை நிகழவிருப்பதாக என் சேடி சொல்லியிருந்தாள்” என பதறும் குரலில் சொன்னபடி தேவவதி குந்தியைப் பாராமலேயே “வருகிறேன்” என்று சொன்னபின் ஆடைகள் சரசரக்க வெளியேறினாள். குந்திபோஜன் சிரித்து “அரசு சூழ்தலின் கதைகளைக் கேட்டாலே அவள் பதற்றம் கொள்கிறாள். எளிய யாதவப்பெண்” என்றார்.
“அரசே, நானல்லவா எளிய யாதவப்பெண்?” என்றாள் பிருதை. “நீங்கள் பேரரசி…. நீங்கள் நேற்று எடுத்த முடிவை எண்ணி நான் இன்னும்கூட வியந்துகொண்டிருக்கிறேன்” என்றார் ரிஷபர். அவர்கள் இருவரின் விழிகளைக் கண்டதும் அங்கே அவளுக்கும் தேவவதிக்கும் நடுவே நிகழ்ந்தவை அனைத்துமே அவர்கள் உணராதவை என்ற எண்ணம் வந்து பிருதை புன்னகை செய்தாள். “நாம் கம்சரிடம் இனி செய்யவேண்டியதென்ன?” என்று குந்திபோஜன் கேட்டார்.
பிருதை “தாங்கள் அவருக்கு ஒரு தூதனுப்பவேண்டும்…” என்றாள். “ரிஷபரே செல்வது முறை. அவரிடம் நான் இம்முடிவை எடுத்ததில் நீங்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் அஸ்தினபுரி மார்த்திகாவதியை விழுங்கிவிடுமென அஞ்சுவதாகவும் தெரிவியுங்கள். மார்த்திகாவதிக்கு கம்சரே காவலாக என்றுமிருக்கவேண்டும் என்றும், யாதவப்பெருங்குலங்களின் தலைவர் அவரே என்றும் சொல்லுங்கள்.”
ரிஷபர் புன்னகை செய்தார். “அவர் செய்யக்கூடியது ஒன்றுதான் தந்தையே. இப்போது தன்னை அஸ்தினபுரியின் எதிரி என அவர் நினைத்துக்கொண்டுவிட்டார். ஆகவே மகதத்துக்குத் தூதனுப்புவார். மகதமும் அஸ்தினபுரியும் புரியப்போகும் பெரும்போரில் மகதத்தை ஆதரிப்பதைப் பற்றி எண்ணிக்கொள்வார்.” குந்திபோஜன் “நம் தூதை அவர் நம்புவாரா?” என்றார். “நம்ப மாட்டார். ஆனால் நாம் நம்பிவிட்டதாக நினைப்பார். நாம் அப்படி நம்பிக்கொண்டிருக்கட்டும் என நினைத்து சிலகாலம் நம்மை விட்டுவிடுவார். நாம் நமது எல்லைகளையும் துறைகளையும் அஸ்தினபுரியின் படைகளைக்கொண்டு பலப்படுத்திக்கொள்ள காலஇடை கிடைக்கும்.”
“ஆம்” என்று குந்திபோஜன் பெருமூச்சு விட்டார். “ஏன் இந்தப்போர்கள் என்றே புரியவில்லை. இதையெல்லாம் சிந்தனைசெய்தால் ஏன் யாதவர்கள் அரசுகளாக ஆகவேண்டும் என்றும் தோன்றுகிறது… கன்றுமேய்த்து குழலூதி காட்டில் வாழ்பவர்கள் வில்லும்வாளுமாக ஏன் நகரங்களைக் காக்கவேண்டும்?” பிருதை எழுந்தபடி “நம் சந்ததிகளுக்காக” என்றாள். ரிஷபர் “ஆம் அரசே, இப்படித்தான் அனைத்து அரசுகளும் உருவாகியிருக்கின்றன. விதைகள் வெடிக்காமல் செடிகள் முளைப்பதில்லை” என்றார்.
குந்தி மீண்டும் தன் அறைக்கு வந்தபோது இரவுக்கான ஒலிகள் எழுந்திருந்தன. அப்பால் மார்த்திகாவதியின் உயரமற்ற கோட்டைமீது காவல்முரசு மெல்ல அதிர்ந்தடங்கியது. அவள் உள்ளும் புறமும் களைத்திருந்தாள். அவளுக்காக சேடியர் காத்து நின்றிருந்தனர். அவர்களைப் பார்த்ததுமே பிருதை புரிந்துகொண்டு அனகையிடம் “அஸ்தினபுரியின் அரசருக்கு உடல்நலமில்லை என்றார்கள்” என்றாள். “உடல்நிலை தேறியிருக்கிறது என்று செய்தி வந்தது” என்று அனகை சொன்னாள். அவள் கண்களை ஒரு கணம் நோக்கியபின் குந்தி தலையசைத்தாள்.
தைலமிட்ட நறுநீரில் நீராடி செம்பட்டாடை உடுத்து, கால்நகங்களில் அணிவளையங்கள் முதல் தலைவகிடில் பொன்மலர்ச்சுட்டி வரை நூற்றெட்டு நகைகள் அணிந்து பிருதை மங்கலத் தோற்றம் கொண்டாள். தன் வெண்கால்களில் செம்பஞ்சுக்குழம்பு பூசும் முதுசேடியரை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது போல நோக்கியபடி அமர்ந்திருந்தாள். தொய்யில் எழுதிய தோள்களும் செந்தாமரைக்கோலமிட்ட கைவெண்மைகளும் பொன்பொடி பூசப்பட்ட கன்னங்களும் உடலெங்கும் மின்னும் மணிகளுமாக தன்னை ஆடியில் பார்த்தபோது ஓர் ஓவியத்துக்குள் அவள் புகுந்துகொண்டதுபோலத் தோன்றியது.
அனகை அவள் கூந்தலில் பட்டுநூலை சுற்றிக்கட்டியபடி “யாதவர்களின் மணநிகழ்வுக்கு அத்தனை ஷத்ரியர்கள் ஏன் வந்தனர் என்று தெரிகிறது இளவரசி” என முகமன் சொன்னாள். பிருதை “இந்த ஆடிப்பாவையில் என்ன குறை இருக்கிறது என்று பார்த்துக்கொண்டிருந்தேன்” என்றாள். அனகை திடுக்கிட்டு “என்ன குறை?” என்றாள். பிருதை “இதோ உதடுகளின் இருபக்கமும் உள்ள இந்த மெல்லிய சுருக்கம்… அது முன்பு எனக்கு இருக்கவில்லை.” அனகை ஒன்றும் சொல்லவில்லை. “அது எனக்கு ஒரு அழுத்தமான ஐயம்கொண்ட முகத்தை அளிக்கிறது” என்றாள் பிருதை.
பெருமூச்சுடன் திரும்பியபடி “பெண்ணுடல் மீது ஆண்கள் பெருங்காதல் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள். அப்படியென்றால் எதற்காக இத்தனை அணிகள்?” என்றாள் பிருதை. “அவர்கள் பெண்ணுடலை குறையுடையதாக எண்ணுகிறார்கள். அணிகளால் அந்தக் குறையை நிறைத்துக் கொள்கிறார்கள்” என்ற அனகை சிரித்தபடி “அந்தக்குறை தெய்வங்கள் உருவாக்குவது. அதை மனிதர்களின் பொருட்களைக்கொண்டு நிரப்ப முயல்கையில்தான் முடிவில்லா அணிகளும் ஆடைகளும் கவிதைகளும் கலைகளும் உருவாகின்றன” என்றாள். பிருதை இன்னொரு முறை ஆடியில் பார்த்தபின் “நான் சொல்லப்போகிறேன்” என்றாள்.
“இளவரசி” என்று அனகை அவள் முன்னால் வந்தாள். “நான் என் மைந்தனைப்பற்றி சொல்லவிருக்கிறேன் அனகை” என்றாள் குந்தி. “இளவரசி, ஷத்ரியர் மரபுகள்…” என அனகை தொடங்கியதுமே “யாதவப்பெண்களை பிறப்பிலேயே அன்னை என்று குலமூதாதையர் வணங்குகிறார்கள். என் குலவழக்கத்தை நான் ஏன் மறைக்கவேண்டும்?” என்றாள் குந்தி. அனகை “அரசர் அதை எவ்வாறு ஏற்பார்?” என்றாள். “அவர் ஏற்றாகவேண்டும்…” என்று குந்தி சொன்னாள்.
அனகையின் கண்களுக்குள் நெய்விளக்குகளின் செவ்வொளி தெரிந்தது. “பாண்டுரர்கள் ஆண்மையற்றவர்கள் என்று வைத்தியநூல்கள் சொல்கின்றன. அதை இதற்குள் மார்த்திகாவதியின் நகரமே அறிந்திருக்கும். ஆகவேதான் பீஷ்மபிதாமகர் தன் மைந்தனுக்கு உடல்நலமில்லை என்றபோதும் மணமங்கல இரவை இன்றே வைத்துக்கொள்ளவேண்டுமென ஆணையிட்டிருக்கிறார்” என்றாள் பிருதை.
அனகை “ஆம் இளவரசி, இளைய மன்னரைப்பற்றி சேடிகளும் அப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள்” என்றாள். “நானே அவருக்கு மாலையிட்டிருக்கிறேன். எனவே நான் அவரது ஆண்மையின்மையை ஒருபோதும் வெளியே சொல்லமாட்டேன் என பீஷ்மபிதாமகர் நினைக்கிறார். இங்கேயே மணமங்கல இரவு முடிந்து மறுநாள் நான் நிறைநீராடினால் அச்செய்தியே இளையஅரசரின் ஆண்மைக்கான சான்றாக ஆகிவிடும் அல்லவா?” பிருதை புன்னகையுடன் “நான் அதைத்தான் செய்யவிருக்கிறேன். அதற்குப்பதிலாக அவர்கள் என் மைந்தனை ஏற்றுக்கொள்ளட்டும்” என்றாள்.
“அதற்கு…” என அனகை தொடங்கியதுமே “இளையமன்னர் அதை ஏற்கவில்லை என்றால் அவருக்கு ஆண்மையில்லை என்று கூறி நான் வெளியே வந்துவிடுவேன்” என்று குந்தி சொன்னாள். அனகை “ஆணை” என்றாள். “அஸ்தினபுரிக்கு நான் சென்றபின் என் மைந்தனைத் தேடிக் கண்டடைந்து அவனை தன் அறப்புதல்வனாக இளையமன்னர் ஏற்கவேண்டும்… அதை அவர்கள் செய்வார்கள். வேறு வழியே அவர்களுக்கில்லை” என்றாள் குந்தி.
அனகை “ஆணை” என்றபின் தலைவணங்கி வெளியே சென்றாள். வெளியே நின்ற முதுசேடி உள்ளே வந்து “தாங்கள் சற்று நறும்பால் அருந்துகிறீர்களா இளவரசி?” என்றாள்.

4/23/14

பகுதி ஒன்பது : மொழியாச்சொல்[ 1 ]

பகுதி ஒன்பது : மொழியாச்சொல்[ 1 ]
மார்த்திகாவதியின் கொம்பொலி முற்றிலும் வேறுபட்டிருந்தது. முதலில் அது ஒரு கனத்த எருதின் குரல் என்றுதான் விதுரன் நினைத்தான். கொம்பு பிற இடங்களைப்போல வெண்கலத்தால் ஆனதாக இல்லாமல் எருதின் கொம்பினால் ஆனதாகவே இருந்தது. கொம்பை ஊதிய சேவகன் மும்முறை தலைவணங்கி தன் மர மேடையிலிருந்து இறங்கியதும் சபையில் அமைதி பரவியது. வெளியே பெய்து கொண்டிருந்த சிறு மழையின் மெல்லிய ஒலி மட்டும் அந்த விரிந்த மண்டபத்தை நிறைத்திருந்தது.
கூரையை தாங்கி நின்ற கனத்த மரங்களாலான தூண்களில் உயரத்தில் கட்டப்பட்டிருந்த பட்டுப் பாவட்டாக்கள் இளங்காற்றில் யானை மத்தகங்கள் போல அசைந்தன. இருபக்கமும் கட்டப்பட்டிருந்த துணிச்சாமரங்கள் யானையின் காதுகளாக வீசின. ஒவ்வொரு தூணுக்குக் கீழேயும் நின்று சாமரங்களை சரடால் இழுத்துக்கொண்டிருந்த சேவகர்கள் யானைகளை கட்டுப்படுத்திய பாகர்கள் போலிருந்தனர். தொடர்ந்து பெய்த மழையினால் மண் குளிர்ந்திருந்ததனால் உள்ளே அந்தச் சிறிய காற்றே கூதல் போல குளிரைப் பரப்பியது.
நீள்வட்ட வடிவில் பீடங்கள் போடப்பட்டிருந்தன. அவற்றில் முதல் எல்லையில் இருந்து தொடர்ச்சியாக யாதவர்கள் அமர்ந்திருந்தனர். தங்கள் குலங்களின் இலச்சினைகள் பொறிக்கப்பட்ட தலைப்பாகைகளுடன் கழுத்தில் கல்மணி ஆரங்கள் அணிந்து தோலாடைகள் மேல் பளபளக்கும் குத்துவாள்களுடன் அமர்ந்திருந்த அவர்கள் மனக்கிளர்ச்சியுற்றவர்களாக அருகே இருந்தவர்களிடம் பேசியபடியும், உடலை அசைத்தபடியும், அவ்வப்போது சிரித்தபடியும் தெரிந்தனர். அவர்களுக்குப்பின்னால் நின்றிருந்த சேவகர்கள் அவ்வப்போது நறுமணப்பாக்கை அளித்தனர்.
யாதவர் வரிசையின் முடிவில் கம்சன் அமர்ந்திருந்தான். அவன் அமர்ந்திருந்த விதத்தை பிற அனைவருமே ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தனர். இரு தொடைகளையும் நன்றாக விரித்து பீடத்தின் இருபக்கங்களிலும் தன் கனத்த கைகளை ஊன்றி சிவந்த விழிகளால் அவையை பார்த்துக் கொண்டிருந்தான். சதைமடிந்த கழுத்தில் அவன் அணிந்திருந்த மணிமாலைகளும் சரப்பொளி ஆரங்களும் பதக்கமாலைகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து சதை திரண்ட மார்பை நிறைத்து உருண்ட வயிற்றின் மீது அமர்ந்திருந்தன. சபையை சுற்றிவந்த அவன் விழிகள் மறு எல்லையில் அவனுக்கு நேர் முன்னால் இருந்த சல்லியனைப் பார்த்ததும் விலகிக் கொண்டன. மீண்டும் சபையைச் சுற்றி சல்லியனை வந்தடைந்தன.
ஷத்ரியர்களின் வரிசையின் இறுதி எல்லையில் அமர்ந்திருந்த சல்லியன் கரிய நெடிய உடலும் நீண்ட கரங்களும் கொண்டிருந்தான். ஒரு கையால் தன் கூரிய மீசையை வருடியபடி அவையில் எவரையும் பார்க்காமல் தொலைவில் ஆடிய பட்டுப்பாவட்டாவை நோக்கி பார்வையை நாட்டியிருந்தான். ஆனால் அவனுடைய மொத்த அகப்பார்வையும் கம்சனைத்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றது என்று விதுரன் உணர்ந்தான்.
சபையில் ஷத்ரியர் வரிசையில் நாலாவதாக பாண்டு அமர்ந்திருந்தான். இரு கைகளையும் மார்புடன் சேர்த்து கட்டியபடி தலைகுனிந்து தனக்குள் ஆழ்ந்தவனாக அவன் தென்பட்டான். அவ்வப்போது வாயை இறுக்கி பெருமூச்சுவிட்டு மெல்ல அசைந்தான். அவையில் இருந்த எவரும் அவனை முன்னர் பார்த்திருக்கவில்லை. அவன் நுழைந்ததும் அவை முழுக்க ஓர் அசைவு பரவிச் சென்றது. அனைவரும் திரும்பி அவனை நோக்கினர். அத்தனை பேரும் அடைந்த வியப்பே ஒரு மெல்லிய ஒலியாக மாறி எழுந்தது. உடனே அவர்கள் இயல்பு நிலை மீண்டு அசைய அவ்வசைவு இன்னொரு அலையாக பரவிச் சென்றது.
பாண்டு விதுரனின் கையைப் பற்றியபடி வெண்பனி போன்ற தலைமுடி காதுகளில் சரிய குனிந்து தரையை நோக்கியபடி நடந்தான். அவ்வறையில் பரவியிருந்த ஒளி அவள் கண்களை மறைத்தது. தரையின் மரப்பலகைகள் எழுந்து தெரிவது போல அவனுக்குத் தோன்றியது. பலமுறை காலை தவறாக எடுத்துவைத்து தடுமாறினான். விதுரன் அவன் தோளைத் தொட்டபடி “இளவரசே, சமநிலம்தான். நிமிர்ந்து செல்லுங்கள். பலபத்ரர் நிற்பதற்கு முன்னாலுள்ள இருக்கையில் அமருங்கள்” என்றான். “பலபத்ரர் எங்கே?” என்றான் பாண்டு. “நான் சொல்கிறேன். நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள்” என்று விதுரன் மிகமெல்லிய ஒலியில் கூறினான்.
பலபத்ரர் பாண்டுவைக் கண்டதும் சபை நடுவே இறங்கி பதறியபடி மார்புச்சதைகள் குலுங்க ஓடிவந்து அவனை கைப்பிடித்து அழைத்துச்சென்று பீடத்தில் அமரச் செய்தார். விதுரனின் முழுக்குருதியும் முகத்தில் பாய்ந்தேறி காது மடல்களும் இமைகளும் வெம்மை கொண்டன. விதுரனை நேக்கிய பலபத்ரர் அவனுடைய கடும் சினத்தை புரிந்து கொண்டாரென்றாலும் அவர் செய்தது என்ன என்பதை உணரவில்லை. “அமைச்சரே, அரசரின் மருத்துவரை இருக்கைக்குப் பின்னாலேயே நிற்கும்படிச் சொன்னேன்” என்று பதற்றத்துடன் சொன்னார்.
விதுரன் மூச்சை இழுத்து சீராக விட்டு தன்னுடைய சினத்தை ஆற்றிக் கொண்டான். பலபத்ரர் குனிந்து பாண்டுவிடம் “இளவரசே, என்ன தேவை என்றாலும் வலது பக்கம் திரும்பிப் பாருங்கள். அந்தத் தூணருகே நான் நின்றிருப்பேன்” என்றார். பாண்டு நிமிர்ந்து இளநகையுடன் விதுரனைப் பார்த்தான். அவனுடைய இமைகள் கொக்கிறகுகள் போல இருந்தன. கீழே விழிகள் குருதிச் சிவப்புக்குள் இரு சிவந்த பாம்பு முட்டைகள் போல அசைந்தன.
விதுரன் பலபத்ரரிடம் “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான். “இல்லை அமைச்சரே, இளவரசர் நேற்றே உடல்நலமில்லாமல்…” என்று பலபத்ரர் ஆரம்பித்தார். அவரது உடல் பதற்றத்தில் வியர்த்திருந்தது. விதுரன் அவரது பழுத்த முதிய விழிகளையும் வியர்வை பரவிய மோவாயையும் பார்த்தான். தன்னுள் ஊறிய வெறுப்பை பல்லைக் கடித்து அடக்கியபடி “நான் இளவரசரின் அருகிலேயே இருப்பேன் அமைச்சரே. நீங்கள் மண்டபத்தை விட்டு வெளியே செல்லுங்கள்” என்றான்.
பலபத்ரர் பாண்டுவைப் பார்த்துவிட்டு “இளவரசருக்குத் தேவையான தலையணைகளை… ” என்று தொடங்கவும் விதுரன் பட்டைக் கிழிக்கும் குறுவாள் போன்ற குரலில் “கிழட்டு மூடா, இக்கணம் நீ வெளியே செல்லாவிட்டால் நாளை கழுவில் ஏற்றப்படுவாய்” என்றான். பலபத்ரர் அச்சத்தில் உறைந்து திறந்த வாயுடன் அப்படியே நின்றார் “ம்” என்றான் விதுரன். பலபத்ரர் எலிபோல பதறி ஓடி எதிர்வாயில்வழியாக வெளியேறினார்.
விதுரன் “இயல்பாகச் சாய்ந்து கொள்ளுங்கள் இளவரசே… எவர் விழிகளையும் பார்க்க வேண்டாம்” என்றான். பாண்டு “அவர் பீஷ்மரின் தோழர். நீ அவரை அப்படி நடத்தியிருக்கக் கூடாது” என்றான். “சொல்லித் தெரிய வேண்டிய இடத்தில் அமைச்சன் இருக்கலாகாது” என்றான் விதுரன். “விதுரா, அவர்…” என்று பாண்டு சொல்லத் தொடங்க “அது முடிந்துவிட்டது. நான் என் முடிவுகளை விவாதிப்பதில்லை” என்றான் விதுரன்.
“எது வேண்டுமானாலும் செய். நான் சொன்னதை நீ எந்தக் காலத்தில் கேட்டிருக்கிறாய்?” என்றான் பாண்டு. விதுரன் தலைதூக்கி ஷத்ரியர் விழிகளைப் பார்த்தான். எவரும் நேரடியாக விழிதிருப்பி பாண்டுவை பார்க்கவில்லை. ஆனால் அவர்களின் கண்கள் சுழன்று சுழன்று வந்து பாண்டுவையே தொட்டு மீண்டன. கம்சன் ஒரே ஒரு முறை நேருக்கு நேராக பாண்டுவைப் பார்த்தான். இகழ்ச்சியுடன் வாய் சற்றே திறந்திருந்தது. அப்போது குந்திபோஜனின் நிமித்திகன் உள்ளே வர அந்தத் திறந்தவாயுடனேயே பார்வையை அப்பக்கமாக திருப்பிக்கொண்டான். பிறகு அவன் பாண்டுவை பார்க்கவேயில்லை. சல்லியன் பாண்டுவை பார்த்தானா என்பதையே விதுரனால் கவனிக்க முடியவில்லை. ஆனால் பார்க்காமலிருக்க மாட்டான் என்று விதுரன் அறிந்திருந்தான்.
“அவன்தான் சல்லியனா?” என்று பாண்டு கேட்டான். விதுரன் ”ஆம்” என்றான். “அழகன்!” என்றான் பாண்டு. விதுரன் பதில் கூறவில்லை. “அவனுக்குத்தான் குந்தி மாலையிடப் போகிறாள்.” விதுரன் பேசாமல் நின்றான். “அப்படி அவள் நினைத்தால் அதுவே சிறந்த முடிவாக இருக்கும்” என்றான் பாண்டு. அவன் தன்னைச் சீண்டுவதற்காகவே அப்படிச் சொல்கிறான் என்பதை விதுரன் உணர்ந்திருந்தான். அவன் ஒன்றும் சொல்லவில்லை.
VENMURASU_EPi_95_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
காலையில் பாண்டுவின் சேவகன் வந்து அவன் படுக்கைவிட்டு எழ மறுப்பதாகச் சொன்னபோது விதுரன் திகைத்து “இன்னுமா எழவில்லை?” என்றான். “அவர் உடல்நிலை நலமாக உள்ளதல்லவா?” சேவகன் “உடலுக்கு ஒன்றுமில்லை” என்றான். விதுரன் பார்த்தான். “அவருக்கு தங்களிடம் ஏதாவது பேசுவதற்கு இருக்கலாம்” என்றான் சேவகன். விதுரன் எழுந்து சால்வையைச் சுற்றியபடி நடந்து பாண்டுவின் படுக்கையறைக்குச் சென்றான்.
மஞ்சத்தில் பாண்டு ஒருக்களித்து சாளரத்தைப் பார்த்தபடி படுத்திருந்தான். சாளரத்தின் திறந்த வாயில் வழியாக அப்பால் நின்றிருந்த சந்தன மரம் காற்றிலாடுவது தெரிந்து கொண்டிருந்தது. விதுரன் உள்ளே வந்ததை அவன் காலடியோசையால் உணர்ந்ததை தோள் குறுகல் காட்டியது. “இளவரசே என்ன இது? தாங்கள் அணியும் ஆடையும் ஏற்க வேண்டுமல்லவா?” என்று இயல்பாகத் தொடங்கினான் விதுரன்.
கலங்கிய விழிகளுடன் திரும்பி “நான் உன்னிடம் நேற்று காலை என்ன சொன்னேன்?” என்று பாண்டு கேட்டான். “நேற்றா? காலையில் உங்களுக்கு உடல்வெப்பம் இருந்தது.” பாண்டு “ஆம் அதை நானும் அறிவேன். ஆனால் என் வெம்மையில் என் அறைக்கு வந்த உன்னிடம் நான் ஏதோ சொன்னேன். அது என்ன?” என்றான். விதுரன் “அதை நான் சரிவர நினைவுகூரவில்லை இளவரசே” என்றான்.
“தம்பி நீ ஒன்றை நினைவுகூரவில்லை என்று சொன்னால் அது நினைவுகூர விரும்பவில்லை என்றே பொருள்படும்” என்றான் பாண்டு. “ஆம். அவ்வாறுதான்” என்று விதுரன் சொன்னான். “நான் சொன்னவை என்ன என்று எனக்குத் தெரியும். சரியான சொற்களில் சொன்னேனா என்றுதான் உன்னிடம் கேட்டுத்தெரிந்து கொள்ள விரும்பினேன்” என்றான் பாண்டு.
‘‘நாம் அதை பிறகு பேசுவோம். தாங்கள் மணநிகழ்வுக்குக் கிளம்பவேண்டும்” என்றான் விதுரன். “தம்பி இது இரண்டாவது சுயம்வரம்” என்றான் பாண்டு. விதுரன் அவன் சொல்ல வருவது அதுதான் என நன்கறிந்திருந்தபோதிலும் உள்ளம் பதறுவதை உணர்ந்தான். பாண்டு “இதேபோல கங்கையில் படகில் சென்று பிதாமகர் என் அன்னையரை கவர்ந்து வந்தார்” என்றான். “ஆம். அது அனைவரும் அறிந்த கதை” என்று விதுரன் கூறினான். “தம்பி நீ பேரறிஞன். மாபெரும் மதியூகி. உலகில் அனைவரையுமே உன்னால் வெல்ல முடியும். ஆனால் பேரறிஞர்களும் மதியூகிகளும் தோற்கும் ஓர் இடம் உண்டு.”
விதுரன் “நான் விவாதிக்க விரும்பவில்லை. காசி நாட்டு இளவரசியரை பிதாமகர் பீஷ்மர் கவர்ந்து வந்தது சரியானதென்றே நான் இன்றும் நினைக்கிறேன். அது அஸ்தினபுரியை காத்தது. அதற்காக அஸ்தினபுரி மீது அம்பாதேவியின் தீச்சொல் விழுந்தது என்கிறார்கள். ஆனால் அவ்வண்ணம் நோக்கினால் தீச்சொல்விழாத தேசம் என்ற ஒன்று இப்புவியில் இருக்க இயலாது” என்றான்.
கசப்பை உச்சமாக வெளிப்படுத்தும் சிரிப்பு ஒன்றை பாண்டு அடைந்திருந்தான் என்று விதுரன் அறிவான். பாண்டு சிரித்து “நான் ஒரு அரசியல் மதியூகியாக பிறக்காமலிருக்க முற்பிறவியில் தவம் செய்திருக்கிறேன்” என்றான். “இளவரசே, தாங்கள் இந்த சுயம்வரத்தில் கலந்துகொள்வதாக முடிவெடுத்துதான் இத்தனை தொலைவு வந்திருக்கிறோம். அது நம் பிதாமகரின் ஆணை” என்று விதுரன் சொன்னான்.
“பிதாமகர் எடுக்கும் இரண்டாவது பெரும் பிழைமுடிவு இது. அன்று கங்கையை சிறை கொண்டு வந்தார். இப்போது யமுனையை சிறை கொண்டு செல்ல வந்திருக்கிறார்” பாண்டு சொன்னான். “என் தந்தை பிதாமகர் செய்த பிழையின் விஷத்தை அன்று உண்டார். இன்று எனக்காக அதை கிண்ணத்தில் ஊற்றுகிறார்” பல்லைக்கடித்து “உயிருடனும் உணர்வுடனும் சதுரங்கக் காயாக இருக்க இயலாது” என்றான்.
விதுரன் “உங்கள் ஐயங்களுக்கு நான் விளக்கமளிக்க இயலாது இளவரசே… நான் இந்த ஆட்டத்தை ஒருங்கமைக்கவில்லை. இதை பிதாமகர் ஏன் முன்னெடுக்கிறார் என்றும் அறியேன். ஆனால் இது எப்படி முடியும் என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும்” என்றான். பாண்டு ஏறிட்டுப்பார்த்தான். “இம்முறை பிதாமகரின் கரங்களை படைகள் மீறிச் செல்லவிருக்கின்றன.” பாண்டுவின் பார்வை கூர்மைகொண்டது.
பாண்டுவின் பார்வையை நோக்கியபடி விதுரன் கூறினான் “அஸ்தினபுரிக்கு மருகியாக மகளைத்தர இயலுமா என்று கேட்டு பலபத்ரரின் தூது வந்தபோது குந்திபோஜன் வேறு எந்த முடிவை எடுத்திருக்க இயலும்? பீஷ்மர் காசிநாட்டு இளவரசியை கவர்ந்து சென்ற கதையை பாரதவர்ஷத்தில் அனைவரும் அறிவர். மார்த்திகாவதியின் இளவரசி மாபெரும் மதியூகி என்று புகழ்பெற்றிருக்கிறாள். அவளுக்கும் என்ன நிகழும் என்று தெரியும். ஆகவேதான் இந்த சுயம்வர நாடகத்தை முன்வைத்திருக்கிறார்கள்.”
பாண்டு சில கணங்கள் விதுரனின் விழிகளை நோக்கியபின் “யார் அவன்?” என்றான். “மாத்ர நாட்டு இளவரசர் சல்லியன்” என்றான் விதுரன். பாண்டு புன்னகையுடன் “அவர் வந்திருக்கிறாரா என்ன? அவரைப்பற்றி சேடியர் கூறி கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான். விதுரன் “ஆம். அழகர் என்றும் வீரர் என்றும் புகழ் பெற்றிருக்கிறார். அவரை மார்த்திகாவதியின் இளவரசிக்கு முன்னரே தெரியும் என்றும் சொன்னார்கள்” என்றான்.
பாண்டு சிரித்தபடி எழுந்தான். “ஆம் அதுவே இந்த நாடகத்தின் மிகச்சிறந்த முடிவாக இருக்க முடியும். அழகிய மதியூகியான இளவரசி. அழகிய வீரனாகிய இளவரசனுக்கே மனைவியாக வேண்டும். காட்டில் ஒரு மான் தன் இணையைத் தேடிக்கொள்வது போல இயல்பாக அது நிகழவேண்டும.” “ஆம் இளவரசே, இது நம் பிதாமகரின் ஆணை… நாம் அதன் பொருட்டு வந்திருக்கிறோம். இந்த நாடகத்தை நாமும் சிறப்புற ஆடிவிட்டு மீள்வோம்.”
பாண்டு கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தபடி “பெரிய எடையொன்றை உடலில் இருந்து இறக்கி விட்டது போலிருக்கிறது விதுரா… காலையில் என்னை நான் செயலற்ற பாவையாக, பிறர் விரலசைவுக்கு ஆடும் இழிமகனாக உணர்ந்தேன். இப்போது இந்த விளையாட்டு என் வாழ்வின் சுவைமிக்க நிகழ்வுகளில் ஒன்று என்று தோன்றுகிறது” என்றான். “நான் இன்று ஒரு பார்வையாளன் மட்டுமே, இல்லையா?” உரக்கச்சிரித்து “மஞ்சளரிசியையும் மலரையும் ஓங்கித்தூவ என் கைகளுக்கு விசையிருக்குமென நினைக்கிறேன்.”
அவை காத்திருந்தது. எத்தனை சுயம்வரங்கள். ஒவ்வொரு நிகழ்வுக்குப்பின்னும் பாரதவர்ஷத்தின் அரசியல் விளையாட்டு மாறுபடுகிறது. இவை ஒவ்வொன்றும் சதுரங்கத்தின் ஒரு புதிர்நிலைகள். விதுரன் அப்பால் அமர்ந்திருக்கும் பீஷ்மரை ஒரு கணம் நோக்கி மீண்டான். பாண்டு தலையை மேலே தூக்கினான். விதுரன் குனிந்தான். “இந்த நாடகத்தில் தலைவன் சல்லியன் என்றால் நான் விதூஷகன். என் முன்னால் அமர்ந்திருக்கும் இவன் யார்?” என்றான்.
“இளவரசே இவர் மதுராபுரியின் இளவரசர். பெயர் கம்சன்” என்றான் விதுரன். “இவன் ஐயமே இல்லாதவனாக இருக்கிறானே…” விதுரன் மெல்ல நகைத்து “அவனும் ஐயமேயின்றி அமர்ந்திருக்கும்படி செய்யப்பட்டிருக்கிறான்.” பாண்டு சிரித்தபடி “விதுரா, இந்த அவையில் அத்தனை பேரின் ஐயமும் அப்படி நீக்கப்பட்டிருக்குமா என்ன?” என்றான். விதுரன் புன்னகை செய்தான். அவர்கள் சிரிப்பதை அவையே திரும்பிப் பார்த்தது. பாண்டு உள்ளே நுழைந்தபோது பலபத்ரரின் மூடத்தனத்தால் உருவான ஏளனம் அவர்களின் இயல்பான சிரிப்பால் சற்று விலகிவிட்டிருப்பதை விதுரன் கண்டான்.
மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் முழங்க முழுதணிக்கோலத்தில் வெண்குடையும் கவரியும் சூடி வந்த குந்திபோஜனும் அரசி தேவவதியும் வணங்கியபடி அவைநுழைந்து சிம்மாசனத்தில் அமர்ந்தனர். குந்திபோஜனின் விழிகள் முதலிலேயே பீஷ்மரை தேடிக் கண்டு கொண்டன. உடனே அவர் உடலில் பணிவைக்காட்டும் ஓர் அசைவு நிகழ்ந்தது. அதைக் கண்டதும் சல்லியன் இயல்பாகத் திரும்பி பீஷ்மரைப் பார்த்தான். உடனே பாண்டுவை நோக்கிய பின் அரைக்கணத்தில் திரும்பிக் கொண்டான்.
குந்திபோஜனின் அரியணைக்குப் பின்னால் வீரன் அவருக்கு வெண்கொற்றக்குடை பிடித்தபடி நின்றான். இருபக்கமும் தாசிகள் கவரி வீசினர். அவருடைய அமைச்சர் ரிஷபர் கையில் செங்கோலை ஏந்தி அவர் முன்வந்து அருகே நின்றார். ஆனால் குந்திபோஜன் தன் உடல்குறுகல் வழியாகவே அவையனைத்தையும் பொருளற்றவையாக ஆக்கிவிட்டிருந்தார். ஆனால் அங்கு அமர்ந்திருந்தவர்களில் சல்லியனைத்தவிர பிறர் அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. சல்லியனின் கைகளில் தோளில் தொடைகளில் எங்கும் ஏளனம் வழிந்தது.
விதுரன் திரும்பி பீஷ்மரைப் பார்த்தான். அவர் அப்பால் குலமூதாதையர் அமர்ந்திருந்த வரிசையின் முகப்பில் தன் பீடத்தில் நிமிர்ந்த முதுகுடன் இறுக்கமான கழுத்துடன் அசையாத பார்வையுடன் அமர்ந்திருந்தார். கோயிலில் அமர்ந்திருக்கும் சிலைபோல. விதுரன் அந்தப் புதுச்சூழலில் அவரைப் பார்க்கும் போது அவருடைய அந்த நிமிர்வு மிக வேறுபட்டுத்தெரிவதாக எண்ணிக்கொண்டான். எதிரே பெருகிவரும் நதியொன்றுக்கு நெஞ்சு கொடுத்து நிற்பது போல.
குந்திபோஜனின் அரச நிமித்திகன் மேடை ஏறி தன் கோலைத்தூக்கி அங்கு வந்திருக்கும் அனைவரையும் வரவேற்று சுயம்வர அறிவிப்பை அளித்தான். மங்கல இசையும் வேதியரின் மறைமுழக்கமும் சூழ குந்திபோஜன் எழுந்து சபையை வணங்கியபின் கையில் செங்கோலுடன் சிம்மாசனத்தில் அமர்ந்தார். வெளியே அரசப் பெருமுரசு ஒலித்தது. கம்சன் தன் பெரிய தொடைகளை கைகளால் வருடியபடி பெருமூச்சு விட்டான். அவன் பார்வை சல்லியனைத் தொட்டு மீண்டதும் கை மீசையை நீவி பின்னால் ஒதுக்கியது.
நிமித்திகன் பழைய கொம்புவாத்தியம் போல தடையின்றி ஒலித்த குரலில் அறிவித்தான். “சந்திரக்குலத்தோன்றல் யதுவின் குருதிவழிவந்த யாதவ குலத்து நூற்றெட்டு பெருங்குடிகளில் முதன்மையானதான விருஷ்ணி குலத்தின் தலைவர் சூரசேனரின் புதல்வியும் மார்த்திகாவதியின் தலைவரும் போஜர் குலத்துச் செம்மலுமான குந்திபோஜரின் அறப்புதல்வியுமான குந்திதேவி என்னும் பிருதைதேவியாரின் திருமணத் தன்னேற்பு பெருமங்கலம் இங்கு இந்த அவையில் நிகழவிருக்கிறது. ஆநிரைகளின் முறைமைபோல மூதன்னையை முறைவழியாகக் கொண்டது யாதவப் பெருங்குலம். இங்கே பெண்ணே குருதித் தோன்றல். கருப்பையே குலத்தின் ஊற்று. ஆகவே இளவரசியின் தேர்வும் முடிவும்தான் முடிவானது. அதற்கு அப்பால் மூத்தோர் சொல்லோ தெய்வ ஆணையோகூட செல்ல முடியாதென்றறிக!”
நிமித்திகன் தொடர்ந்தான் “இளவரசி பிருதை அரசுசூழ்தலை முறைப்படி ஏழு நல்லாசிரியர்களிடமிருந்து கற்றுத் தேர்ந்தவர். மார்த்திகாவதியில் தங்கித் தவமியற்றிய முதுபெரும் முனிவர் துர்வாசரின் அணுக்கமாணவியாக அமர்ந்து அறமும் பொருளும் மெய்யறிவும் ஊழ்கமும் கற்றவர். ஐவகைப் படைக்கலங்களையும் இருகைகளாலும் ஆற்றும் வல்லமை கொண்டவர். இந்த மார்த்திகாவதி நகரும் அரசும் இளவரசி குந்திக்கு உரியவை என்றறிக!”
நிமித்திகன் கைதூக்கியதும் சூதர்கள் மங்கலவாத்தியங்களை ஒலித்தனர். நிமித்திகன் உரத்தகுரலில் “மார்த்திகாவதியின் இளவரசி மன்று சூழ்கிறார்” என்று அறிவித்தான். அவையின் சூழ்வட்டத்திலும் வெளியே களமுற்றத்திலும் கூடிநின்ற குடிமக்கள் உரத்த குரலில் வாழ்த்தொலி எழுப்பினர். பெருமுரசும் கொம்பும் சங்கும் சல்லரியும் மணியும் மங்கலச் சிலம்பும் ஒலித்தன. முதலில் நிறைகுடம் ஏந்தி வேதம் பாடி நீர் தெளித்த முதுவைதிகர் எழுவர் வந்தனர். மலரும் தீபமும் மஞ்சளும் பொன்னும் மங்கலப்பட்டும் தானியங்களும் நிறைகுடமும் என்று சப்தமங்கலங்களை ஏந்திய அரண்மனை மகளிர் தொடர்ந்து வந்தனர்.
மங்கல வாத்தியங்களை இசைத்தபடி சூதர்கள் அவர்களுக்குப்பின்னால் வர குந்திதேவி இருபக்கமும் இருசேடியர் அணுக்கத்தாலமும் மங்கத்தாலமும் ஏந்தி வர பின்னால் வந்த சேடி வெண்குடை பிடித்திருக்க கவரி வீசிய சேடியர் மருங்குசூழ உள்ளே வந்தாள்.