அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

3/1/14

பகுதி ஒன்று : வேழாம்பல் தவம்[ 2 ]

பகுதி ஒன்று : வேழாம்பல் தவம்[ 2 ]
கூர்ஜரத்தின் கடற்கரையில் நின்றிருக்கையில்தான் பீஷ்மர் தெற்கிலிருந்து கிழக்குநோக்கி எழுந்த பருவமழையின் பேருருவை நேரில் கண்டார். சிந்துவின் நீர்ப்பெருக்கினூடாக ஒரு வணிகப்படகில் அவர் கூர்ஜரம் நோக்கி வருகையில் நதி வெய்யநீராக கொதித்து ஆவியெழுந்துகொண்டிருந்தது. சுண்ணமும் அரக்கும் கலந்து பூசப்பட்ட பொதிப்படகுகளின் அறைகளுக்குள் சில கணங்கள் கூட இருக்கமுடியவில்லை. வெளியே வந்து தெற்கிலிருந்து அலையலையாக வீசிக்கொண்டிருந்த காற்றை வாங்கிக்கொண்டு பாய்மரக்கயிற்றைப் பற்றிக்கொண்டு நிற்கையில் மட்டுமே உடலில் வியர்வை கொட்டுவது நின்றது.
சிந்து சமநிலத்தை அடைந்தபோது அதில் வேகமும் அலைகளும் அடங்கின. முறுகித்திரும்பிய பாய்களில் பின்னத்திப்பாய் எதிர்க்காற்றை வாங்கிச் சுழற்றி முன்னத்திப்பாய்க்கு அனுப்ப காற்றை எதிர்த்து மிகமெல்ல அவை நகர்ந்தன. தொலைதூரத்துக் கரையின் நகர்வைக்கொண்டுதான் படகின் ஓட்டத்தையே அறியமுடிந்தது. படகோட்டிகள் நீரோட்டத்தின் சுழிப்பில் படகுகள் நிலையிழந்து சுழலும்போது மட்டும் துடுப்புகளால் மெல்ல உந்தி அப்பால் செலுத்தினர். சுக்கான் பிடித்திருந்தவன்கூட அதன் நுனியைப்பிடித்து ஒரு ஆப்பில் கட்டிவிட்டு தளர்ந்து அமரத்தில் அமர்ந்துவிட்டான். பீஷ்மர் பாய்க்கயிறுகள் நடுவே ஒரு தோலை நீட்டிக்கட்டி அந்தத் தூளிமேல் படுத்துக்கொண்டார். அங்கே பாயின் நிழலிருந்தமையால் வெயில் விழவில்லை.
பகல்கள் தழலுருவான சூரியனால் எரிக்கப்பட்டன. அந்தியில் செம்மை பரவியபோது ஆவியெழுந்த நீர்வெளியே ஒற்றைப்பெரும் தழலாகத் தோன்றியது. மேகங்களில்லாத வானில் சூரியன் அணைந்தபின்னரும் நெடுநேரம் ஒளியிருந்தது. இருள் பரவியபின்பு நதிக்குள் கரையிலிருந்து வந்து சுழன்ற காற்றில் வெந்த தழைவாசனையும் உலரும் சேற்றின் வாசனையும் நிறைந்திருந்தது. பகலில் காலையிலும் மாலையிலும் மட்டும்தான் பறவைகளை நீர்மேல் காணமுடிந்தது. இரவில் மேலும் அதிகமான பறவைகள் இருண்ட வானத்தின் பின்னணியில் சிறகடித்தன.
இரவை பீஷ்மர் விரும்பினார். விண்மீன்களை ஒருபோதும் அவ்வளவு அருகே அவ்வளவு செறிவாக அவர் பார்த்ததில்லை. விண்மீன்கள் ரிஷிகள் என்று புராணங்கள் சொல்வதுண்டு. மண்ணில் வாழும் மானுடரைவிட பலமடங்கு ரிஷிகள் விண்ணில் நிறைந்திருக்கிறார்கள். மண்ணிலிருந்து விண்ணேறியவர்கள். விண்ணுக்கு ரிஷிகளை விளைவிக்கும் வயல்தான் பூமி. மாறாத கருணைகொண்ட ஆர்த்ரை. குன்றா வளம் கொண்ட ஊஷரை. முளைத்துத் தீராத ரிஷிகளைக் கருக்கொண்ட தரித்ரி. அவர்களுக்கான அமுது ஊறும் பிருத்வி. சதகோடி மதலைகளால் மாமங்கலையான புவனை.
கூர்ஜரத்தை நெருங்கியபோது கடற்காற்று வரத்தொடங்கியது. சிற்றாறுகளின் நீரை மலைக்கங்கை நீர் சந்திப்பதுபோல. கடற்காற்றை தனியாகத் தொட்டு அள்ளமுடியுமென்று தோன்றியது. இன்னும் குளிராக அடர்த்தியாக உப்புவீச்சம் கொண்டதாக அது இருந்தது. பகலில் வெங்காற்றை அவ்வப்போது விலக்கி கனத்த கடற்காற்று சற்றுநேரம் வீசும்போது உடம்பு குளிர்கொண்டு சிலிர்த்தது. பின்பு மீண்டும் கரைக்காற்று வீசும்போது வெம்மையில் சருமம் விரிந்து வியர்வை வழிகையில் கடற்காற்றின் உப்பு தெரிந்தது. மேலும் மேலும் கடற்காற்று வரத்தொடங்கியது. ஒரு கட்டத்தில் கடலே தெற்கிலிருந்து வடகிழக்கு நோக்கி காற்றாகப் பெருகிச்செல்வதுபோலத் தோன்றியது.
படகோட்டியான விகூணிகன் “மழைக்காலம் நெருங்குகிறது வீரரே” என்றான். “காற்றில் நீர்த்துளியே இல்லையே” என்றார் பீஷ்மர். “இப்போது நீர்த்துளிகள் இருக்காது. இன்னும் சற்றுநாட்கள் தாண்டவேண்டும். இப்போது கடலின் உள்ளே கருவுக்குள் மழை பிறந்திருக்கிறது. நாம் அறிவது கடலின் பெருமூச்சைத்தான். மூச்சு ஏறிக்கொண்டே செல்லும். குழந்தை பிறக்கத் தொடங்கும்போது பெருமூச்சு சிந்துவின் நீரையே திரும்பவும் இமயத்துக்குத் தள்ளிவிடுமென்று தோன்றும். கூர்ஜரத்தின் மணல்மலைகள் இடம்பெயரும். நதியிலோ கடலிலோ படகுகளை இறக்கமுடியாது. பறவைகள் வடக்குநோக்கிச் சென்றுவிடும்.”
பீஷ்மர் புன்னகையுடன் “பேற்றுநோவு இல்லையா?” என்றார். “ஆம் வீரரே, அதுவேதான். கடல் இருகைகளையும் அறைவதையும் புரண்டு நெளிந்து ஓலமிடுவதையும் காணமுடியும்…” அவன் சிரித்துக்கொண்டு “ஆனால் அதற்கு இன்னும் நாட்களிருக்கின்றன. இது சிராவணமாதத்தின் முதல்வாரம். நான்காம்வாரத்தில்தான் மழைதொடங்கும்.”
கூர்ஜரத்தில் சிந்து கடலை சந்தித்தது. எதிரே நதிநீரின் நீலத்திரைச்சீலைக்குள் மதயானைகள் புகுந்துகொண்டு மத்தகம் முட்டி ஓலமிட்டு வருவதுபோல அலைகள் பொங்கி வந்தன. படகின் விளிம்பில் அவை ஓங்கி ஓங்கி அறைந்தன. மாலைமங்கியபோது அலைகள் மேலும் அதிகரித்து படகுகளை ஊசலில் தூக்கி மேலே கொண்டுசென்று கீழிறக்கி விளையாடின. படகுக்குள் இருந்த பொருட்கள் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு பாய்ந்தோடி ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு ஒலியெழுப்பின.
படகுகளை ஓரமாகக் கொண்டுசென்று அங்கிருந்த அலையாத்திக் காடுகளின் மரங்களில் பெரிய வடத்தால் கட்டிவிட்டு படகோட்டிகள் காத்திருந்தனர். “இந்தக் கடல்வேலியேற்றம் இல்லையேல் நாம் கடலுக்குள் செல்லமுடியாது” என்றான். ஊர்ணன் என்னும் படகோட்டி. “ஏன்?” என்று பீஷ்மர் கேட்டார். “இவ்வளவு நீரும் மீண்டும் கடலுக்குள் போகவேண்டுமே. அவற்றில் ஏறி நாம் கடலுக்குள் சென்றுவிடமுடியும்.”
இரவில் படகுகளை ஒன்றுடன்ஒன்று சேர்த்துக்கட்டி ஒரு பெரிய படலமாக ஆக்கினார்கள். மிதக்கும் கம்பளம்போல படகுகள் நீரில் வளைந்தாடின. வணிகர்கள் தோலால் ஆன படுக்கைகளுடன் கரையிறங்கி அங்கே நீரில் வேரூன்றி நின்றிருந்த மரங்களுக்குள் புகுந்து மரங்கள் நடுவே தூளிகளைக் கட்டிக்கொண்டு படுத்தார்கள். தீச்சட்டிகளில் கனலிட்டு அவற்றில் தேவதாரு அரக்கைக் கொட்டி புகைஎழுப்பி காட்டுக்குள் மண்டியிருந்த கொசுக்களை விரட்டிவிட்டு அப்புகைக்குள்ளேயே துயின்றனர். புகையை காற்று அள்ளி விலக்கிய சிலகணங்களுக்குள்ளேயே கொசுக்கள் மகுடி ஒலி போல ரீங்கரித்தபடி வந்து சூழ்ந்துகொண்டன.
விடிகாலையில் வெள்ளி கீழே கிளம்பியதுமே அனைவரும் சென்று படகுகளில் ஏறிக்கொண்டனர். இருவர் நீருக்குள் துடுப்புகளை கயிற்றில் கட்டி மிதக்கவிட்டு நீரோட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தனர். நீர் கடலில் இருந்து ஆற்றுக்குள் சென்றுகொண்டிருந்தது. பின்பு அசைவிழந்து நின்றது. மெல்ல துடுப்பு கடலைநோக்கிச் செல்ல ஆரம்பித்ததும் ஒருவன் ஒரு சங்கை எடுத்து ஊதினான். அனைவரும் பெருங்கூச்சலெழுப்பியபடி படகுகளை அவிழ்த்து துடுப்புகளால் உந்தி நீரோட்டத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் நீரோட்டத்தை அடைவதற்குள்ளாகவே கடலை நோக்கிச்செல்லும் வேகம் அதிகரித்திருந்தது.
கடல் பள்ளத்தில் இருப்பதாகவும் மொத்த நதியும் அருவியென அதைநோக்கிச் செல்வதாகவும் தோன்றியது. ஊர்ணன் “விடியற்காலை இரண்டுநாழிகைநேரம் மட்டும்தான் கடலுக்குள் செல்வதற்குரியது வீரரே. நீரோட்டம் நம்மை அள்ளித்தூக்கி மானஸுரா தீவுக்குக் கொண்டுசென்றுவிடும். அங்கேதான் பாரதவர்ஷத்தின் மிகப்பெரிய துறைமுகமான தேவபாலபுரம் உள்ளது” என்றான்.
“பயணிகள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார் பீஷ்மர். “தேவபாலபுரத்தின் நான்குபக்கமும் கடல்துறைகள்தான். வடக்குப்பக்கம் சிந்துகொண்டு சென்று கொட்டும் மணல்மேடுகள் இருப்பதனால் அங்கே படகுகள் மட்டும்தான் செல்லமுடியும். தெற்கே கடல் மிக ஆழமானது. தீவிலிருந்து நீட்டி நிற்கும் பாறைகளுக்கு மேலே மரமேடைகளை அமைத்து கப்பல்துறை அமைத்திருக்கிறார்கள். யவனநாட்டிலிருந்தும் சோனகநாட்டிலிருந்தும் பீதர் நாட்டிலிருந்தும் வரும் நாவாய்கள் அங்கே வந்து பொருள்கொண்டு பொருள்பெற்றுச் செல்கின்றன. வடக்கே ஆரியவர்த்தத்தில் இருக்கும் பொன்னிலும் மணியிலும் பெரும்பகுதி இந்தத் துறைமுகம் வழியாக வருவதுதான். பாரதவர்ஷத்தின் மாபெரும் துறைமுகமான தென்மதுரை மட்டுமே இதைவிடப்பெரியது” என்றான் ஊர்ணன்.
மாபெரும் கோபுரவாயிலைக் கடந்து உள்ளே செல்வதுபோலிருந்தது கடலுக்குள் நுழைவது. தென்கிழக்கே மேகத்திரைக்கு அப்பால் கருவறைக்குள் அமர்ந்த செம்மேனியனாகிய சிவனைப் போல சூரியன் கோயில்கொண்டிருந்தான். செம்பொன்னிற அலைகளாக கடல் கொந்தளித்துக்கொண்டிருந்தது. பீஷ்மர் முதல்முறையாக அன்றுதான் கடலைப்பார்த்தார். தென் திசையையே தடுத்துக் கட்டப்பட்ட பெரும் நீலக்கோட்டைபோலத் தெரிந்தது நீர்தான் என்று உணர்ந்துகொள்ள அரைநாழிகை ஆகியது. அதை அவரது அறிவு உணர்ந்தபின்னும் ஆன்மா உணரவில்லை. அந்த நீர் வானில் எழுந்து நிற்பதாக பின்னர் தோன்றியது. அது எக்கணமும் உடைந்து பொழியத்தொடங்கிவிடும் என தலையுச்சி பதைப்படைந்தபடியே இருந்தது.
அலைகளில் ஏறிக்கொண்ட படகுகள் ஒன்றுக்குப்பின் ஒன்றாக குதிரைக்குட்டிகள் போல எம்பிக் குதித்தபடி சுருக்கப்பட்ட பாய்களுடன் மானஸுரா நோக்கிச் சென்றன. கடலில் ஒரு நாவாய் போல ஆடிக்கொண்டிருந்த தீவின்மீது மரக்கூட்டங்கள் நடுவே மரப்பட்டைக்கூரையிட்ட மாளிகை முகடுகள் தெரிந்தன. கூர்ஜர அரசின் சங்குமுத்திரை கொண்ட பகவாக்கொடி தழலென நெளிந்துகொண்டிருந்தது. படகுகள் நெருங்கியபோது தீவு அசைந்தாடியபடி அருகே வந்தது. அதன் படகுத்துறை ஒரு கை போல நீண்டுவந்து படகுகளைப் பற்றிக்கொள்வதாகத் தோன்றியது. இரு துறைமேடைகளையும் தேனீக்கள் கூட்டை மொய்ப்பது போல படகுகள் கவ்விக்கொண்டன. கரையிலிருந்து சுமையிறக்கும் வினைவலர் படகுகளை நோக்கி ஓடிவந்தனர்.
மறுபக்கம் கடல்நாவாய்களுக்கான மூன்று பெருந்துறைகள் இருந்தன. அங்கே கடலுக்குள் நீண்டிருந்த பாறைகளின்மீது கற்களையும் மரங்களையும் அடுக்கி நீட்டி துறைமேடைகளைச் செய்திருந்தனர். நாவாய்களுக்குள்ளிருந்தே பொதிகளை எடுத்து கனத்த சக்கரங்கள் கொண்ட வண்டிகளில் ஏற்றி வெளியே கொண்டுவந்து பண்டகசாலைகளுக்குக் கொண்டுசென்றனர். நூறுபாய்கள் கொண்ட சோனகமரக்கலங்கள் முந்நூறு பாய்கள் கொண்ட யவனமரக்கலங்கள் நடுவே ஆயிரம்பாய்கள் கொண்ட பீதர் மரக்கலங்கள் இமயத்தின் பனிமலைமுகடுகள் போல நின்றன.
VENMURASU_EPI_52_Final
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
தேவபாலபுரத்தில் பயணிகள் தங்கும் கட்டடங்களில் ஒன்றில் பீஷ்மர் தங்கினார். செங்கற்களால் கட்டப்பட்டு மரப்பலகைகளால் கூரையிடப்பட்ட உயரமற்ற கட்டடத்தின் முன்னால் பெரிய பாறைகளாக நிலம் கடலுக்குள் நீட்டி நின்றது. பாறைகள்மேல் கடல் நுரையெழ அறைந்தபடியே இருக்க நீர்த்துளிகள் சிதறி காற்றிலேறி வீடுகளின் சுவர்களில் பட்டு வியர்வையாக மாறி சிற்றோடைகளாக வழிந்து பாறைகளில் சொட்டி மீண்டும் கடலுக்குள் சென்றன. அறைக்குள் இருக்கையிலும் கடலுக்குள் இருந்துகொண்டிருக்கும் உணர்வு இருந்தது. பயணம் முடிவடையாததுபோலத் தோன்றச்செய்தது.
சிபி நாட்டின் பாலையிலும், மூலத்தானநகரி முதல் தேவபாலபுரம் வரை படகுகளிலும், வணிகர்களுக்கு பாதுகாவலராகப் பணியாற்றி அவர் ஈட்டிய நாணயங்கள் அந்த எளியவாழ்க்கைக்குப் போதுமானவையாக இருந்தன. காலையில் தன் ஆயுதப்பயிற்சியை கடலோரப்பாறைகளில் முடித்துவிட்டு அவர் துறைமுகத்துக்குச் சென்றார். அங்கே கன்னங்கரிய காப்பிரிகளும், செந்நிறமான யவனர்களும், வெண்ணிறமான சோனகர்களும், மஞ்சள் நிறமான பீதர்களும் கூடி வெவ்வேறு மொழிகளில் பேசிய இரைச்சல் எந்நேரமும் கேட்டுக்கொண்டிருந்தது. துறைமுகத்தில் எண் கற்றவர்களுக்கு எப்போதும் அலுவல்கள் இருந்தன.
பீஷ்மர் பகலில் பண்டகசாலைகளில் பணியாற்றி மாலையில் ஊதியம்பெற்று மீள்வதை விரும்பினார். அங்கே வரும் அனைவரிடமும் அவர்களின் மொழியைக் கற்றுக்கொண்டு உரையாடினார். யவனதேசத்தின் ரதங்களைப்பற்றியும் காப்பிரிநாட்டின் பொற்சுரங்கங்களைப்பற்றியும் பீதர்தேசத்தின் மஞ்சள்மண் கலங்களைப்பற்றியும் அறிந்துகொண்டார்.
அழகிய மணிக்கண்கள் கொண்ட தமிழர்கள் பாரதவர்ஷத்தின் கிழக்கே வங்கத்துத் துறைமுகத்தில் இருந்து தென்முனையின் கொற்கை வழியாக அங்கே வந்திருந்தனர். அவர்களறியாத கடல்நகரிகளே இருக்கவில்லை. பாரதவர்ஷத்தின் தென்னகவிரிவைப்பற்றி அவர்கள் சொன்ன ஒவ்வொன்றும் பீஷ்மரை கிளர்ச்சிகொள்ளச் செய்தது. நீர்பெருகியோடும் நர்மதை, கிருஷ்ணை, கோதை, பெண்ணை, காவிரி. வெயில் விரிந்த பெருநிலங்கள். தமிழ்மண்ணின் மூவேந்தர் நாடுகள். அங்கே மண்பூசிய மரக்கூரைகளும் கனத்த மண்சுவர்களும் கொண்ட பெருநகரங்கள். தென்மூதூர் மதுரை. முத்துவிளையும் கொற்கை. தந்தம் விளையும் வஞ்சி. நெல்விளையும் புகார்.
தென்மதுரை என்று பிறந்தது என்றறிந்தவர் தென்னாடுடைய சிவன் மட்டுமே என்று கன்னன் பெருஞ்சித்திரன் என்ற பெருவணிகன் சொன்னான். பஃறுளி ஆறும் பன்மலையடுக்கக் குமரிக்கோடும் கொண்ட தென்னகப் பெருவளநாட்டின் திலகமான அந்நகரம் கடலருகே அமைந்தது. கடல்நீர் நகருள் புகுவதைத் தடுக்க கட்டி எழுப்பப்பட்ட பெருமதில்நிரையால் மதில்நிரை என்றும் மதுரை என்றும் அழைக்கப்பட்டது. கடலாமையோடுகளால் கூரையிடப்பட்டு கடற்சிப்பி சுட்டு எடுத்த வெண்சுண்ணத்தாலான வீடுகளும் கொண்ட அது சந்திரபுரி என்று பாவலரால் பாடப்பட்டது. மீன்கொடிபறக்கும் ஆயிரம் மாளிகைகளால் சூழப்பட்ட அதன்மேல் எந்நேரமும் கடல்துமிகள் மழையெனப்பெய்து வெயிலை மறைத்தன. அருகே குமரிக்கோட்டின் உச்சியில் ஒற்றைக்கால் ஊன்றி நின்ற குமரியன்னையின் குளிர்நோக்கும் மழையெனப் பெய்துகொண்டிருந்தது என்றான் பெருஞ்சித்திரன்.
செம்மயிர்த் தலையும் பாம்பின் வாலும்கொண்ட தெய்வம் அமர்ந்திருந்த அமரம் கொண்ட பீதர்களின் மரக்கலங்கள் அத்தனை மரக்கலங்களையும் உள்ளடக்கிக்கொள்ளும் கடல்நகரங்கள்போல நின்றாடின. முக்கூர் சூலமேந்திய கடல்தெய்வம் ஆடையின்றி நின்றிருந்த முனம்பு கொண்ட யவன மரக்கலங்கள் கடல் ஓங்கில்கள் போல கருநிறமாகப் பளபளத்தன. கடற்பறவைகளுக்கு நிகராக நீரில் பறக்கக்கூடியவை அவை என்றனர் வணிகர்கள்.
தழல்நிறம்கொண்ட யவனர்கள் நீலத்தாமரைபோன்ற பளிங்குப் புட்டிகளில் கொண்டுவந்த இன்கடும்தேறல் பொன்னுக்குநிகரான விலைகொண்டிருந்தது. எப்போதும் துருவனையே நோக்கும் துருவமுள்ளுக்கு நூறுமடங்கு பொன் விலைசொன்னார்கள். தெற்கே தந்தங்களும், மிளகும், முத்தும், தோகையும், சந்தனமும் வாங்கி வந்தவர்கள் தேவபாலத்தில் தேவதாருவின் அரக்கும் சந்தனமும் அகிலும் வெல்லக்கட்டிகளும் வாங்கிக்கொண்டு பொன் கொடுத்தனர். சோனகர்கள் சிந்துவழியாக வந்த கோதுமையையும் உலர்ந்த பழங்களையும், தோலையும் வாங்கிக்கொண்டனர். வெண்களிமண் பாத்திரங்களும் பட்டுத்துணிகளும் கொண்டுவந்த பீதர் நிலத்து நாவாய்கள் விற்கப்பட்ட எதையும் வாங்கிக்கொண்டன.
செல்வங்கள் தெருவெங்கும் குவிந்துகிடந்தன. செல்வத்துள் பெருஞ்செல்வம் மானுடர் தோள்தழுவி அமர்ந்திருக்கும் கணங்களே என்று காட்டின தெருக்கள். ஈச்சங்கள் விற்கும் அங்காடிகளில் மழைநீரும் மலைநீரும் செம்மண்நீரும் ஒன்றாகக் கலக்கும் நதிப்பெருக்குபோல அனைத்து மனிதர்களும் நிரைந்து அமர்ந்து அருந்தினர். சிரித்தும் பூசலிட்டும் மகிழ்ந்தனர். தாழ்ந்த கூரையிடப்பட்ட பரத்தையர்தெருக்களில் ஆடும் கால்களுடன் தோள்பிணைந்து காப்பிரிகளும் யவனர்களும் நடந்தனர்.
வேம்புமரங்களால் மூடப்பட்டிருந்தது தேவபாலம். அவை கடும்கோடையிலும் தீவை குளிரவைத்திருந்தன. அவற்றின் பழுத்தஇலைகளால் தீவின் அனைத்துத் தெருக்களும் பொற்கம்பளம் விரிக்கப்பட்டிருந்தன. பீஷ்மர் வந்தபோது வேம்புக்கூட்டங்கள் காய்த்து பசுங்குலைகள் கனத்து கிளைதாழ்ந்து காற்றிலாடின. அவரது வசிப்பிடத்தின் கூரையிலும் தரையிலும் காற்றில் வேம்பின் காய்கள் உதிரத்தொடங்கின.
ஒருநாளிரவில் அவர் ஓர் இனிய நினைவு நெஞ்சில் மீண்டதுபோல வேம்பின் பழத்தின் நறுமணத்தை உணர்ந்தார். அந்த மணம் சிலநாட்களாகவே தீவில் இருந்தாலும் அப்போதுதான் அவர் சிந்தனையை அடைந்தது. மறுநாள் எழுந்து வேம்புமரங்களை அண்ணாந்து நோக்கி நடந்தபோது கிளிகள் பறந்து உண்டுகொண்டிருந்த வேப்பம் பழங்களைக் கண்டார். கீழே உதிர்ந்துகிடந்த பொன்னிறப்பழங்களை எடுத்து பார்த்தார். வாயில் போட்டு கசப்பே இனிப்பான அதன் மாயத்தை அறிந்தார்.
சிலநாட்களில் வேப்பங்காய்களெல்லாமே பொன்மணிக்கொத்துகளாக மாறின. தலைக்குமேல் நூறு விழவுகள் கூடியதுபோல கிளிகளின் ஓசை நிறைந்தது. சிலநாட்களில் நடப்பதும் அமர்வதும் வேப்பம்பழங்களின் மீதுதான் என்றானது. பண்டகசாலையின் பொதிகளின்மேல், நாவாய்களின் கூரைகளில், படகுப்பரப்புகளில் எங்கும் வேப்பம்பழங்களின் சாறு பரவி மணத்தது. உணவிலும் குடிநீரிலும் அந்த வாசனை எப்போதுமிருந்தது. “இந்த வேம்பின் சாறும் அதன்பின் வரும் மழையும்தான் இத்தனை மக்கள் வந்துசெல்லும் இந்தத்தீவில் எந்த நோயுமில்லாமல் காக்கின்றன” என்று தீவின் வைத்தியரான கூர்மர் சொன்னார்.
வேம்புமணம் விலகத் தொடங்கும்போது மழைவரும் என்பது கணக்கு. பீஷ்மர் ஒவ்வொருநாளும் மழையை எதிர்பார்த்திருந்தார். ஒவ்வொருநாளும் காற்றில் நீராவி நிறைந்தபடியே வந்தது. மதியத்தில் வெயில் எரிந்து நின்றிருக்கையில் வேம்பின் நிழலில் அமர்ந்திருந்தபோதும் உடலில் வியர்வை வழிந்தது. நீரும் மோரும் பழச்சாறும் எவ்வளவு குடித்தாலும் தாகம் தீரவில்லை. நள்ளிரவிலும்கூட படுக்கைநனைந்து குளிரும்படி வியர்வை வழிந்தது. காற்றில் நிறைந்திருந்த நீராவியால் சிலசமயம் மூச்சுத்திணறுவதுபோலிருந்தது. அந்தக் கனத்த காற்றை உள்ளிழுத்தபோது நெஞ்சில் எடை ஏறியது.
நள்ளிரவில் உறுமல் போன்ற ஒலிகேட்டு பீஷ்மர் எழுந்து வந்து வெளியே பார்த்தார். அவரது இல்லத்தின் முன்னால் விரிந்திருந்த கடல் அலைகளின்றி அசைவிழந்து கிடந்தது. கடற்பாறைகள் நீருடனான விளையாட்டை நிறுத்திவிட்டு எதிர்நோக்கி சிலைத்திருந்தன. இருண்ட வானை இருண்ட கடல் தொடும் தொடுவான் கோடு தெரிந்தது. வானில் ஒளியாலான ஒரு வேர் படர்ந்திறங்கியது. பாறைகள் உருள்வதுபோல வானம் அதிர்ந்தது. மறுபக்கம் இன்னொரு ஒளிவிழுது மண்ணிலிறங்கியது. கரியயானைக்கூட்டம் சேர்ந்து ஒலியெழுப்பியதுபோல ஒலித்தது. இரு குழுக்களாக மேகங்கள் பிரிந்து மாறி மாறி ஒளியாலும் ஒலியாலும் போட்டிபோடுவதுபோலிருந்தது.
பீஷ்மர் அந்த விளையாட்டை நோக்கி நின்றிருந்தார். கடலில் இருந்து எழுந்துவந்த காற்றின் கீற்று ஒன்று அவரை மோதி அவர் குழலைத் தள்ளிப் பறக்கவிட்டுப் பின்னால் சென்றது. சற்றுநேரம் கழித்து இன்னொரு காற்றுக்குழவி. பின் மீண்டும் ஒன்று. பிறகு குளிர்ந்த காற்று பேரொலியுடன் வந்து அவரை சற்று நிலையழியச் செய்து பாய்ந்துசென்று வேப்ப மரங்களின் கிளைகளைக் கோதி பின்னுக்குத்தள்ளி கடந்துசென்றது. மின்னல் கண்களை ஒளியால் அழித்தபடி அதிர்ந்து அணைய இருபக்கமும் பேரொலியுடன் இடி ஒலித்தது. பல்லாயிரம் குட்டிக்குதிரைகள் பாய்ந்துசெல்வதுபோல பெரிய நீர்த்துளிகள் நீரிலும் கடற்பாறையிலும் மண்ணிலும் வீடுகளிலும் மரங்களிலும் அறைந்து சென்றன. ஆவேசமாகக் குரலெழுப்பியபடி வந்து மழை அனைத்தையும் மூடிக்கொண்டது.
மழையில் குளிர்ந்து நடுங்கியவராக பீஷ்மர் அந்த பாறைமுனையில் நின்றிருந்தார், மழைக்குள் மின்னல்வெட்டியபோது பலகோடிப் பளிங்குவேர்களின் பின்னலைக் கண்டார். சிலிர்த்துக்கொண்ட பளிங்குரோமப் பரப்பைக் கண்டார். நெளியும் நீர்த்திரையின் ஓரம் தீப்பற்றிக்கொண்டதுபோல எழுந்தணைந்தன மின்னல்கள். இடியோசையை மழைப்படலம் பொத்திக்கொண்டதனால் ஒலி நனைந்த பெருமுழவுபோல ஒலித்தது.
அவர் அறைக்குள் வந்து ஆடையை மாற்றியபின் படுக்கையில் படுத்துக்கொண்டு நீரின் ஓசையைக் கேட்டுக்கொண்டிருந்தார். இங்கிருந்து செல்கிறது பாரதவர்ஷத்தையே உயிரால் மூடும் அன்னையின் கருணை. கடலன்னையின் புதல்வியான வர்ஷை. அள்ளிவழங்கும் விருஷ்டி. பேதங்களற்ற மஹதி. இந்திரனின் மகளாகிய தயை.
பழைய இல்லத்தின் கூரை சொட்டத்தொடங்கியது. அறையின் மண்தரைமுழுக்க நீர் சொட்டிக்கொண்டிருந்தது. அவர்மேலும் துளிகள் விழுந்தன. நீர் எத்தனை இனியதென்றறிய கோடைமழை போல் பிறிதொன்றில்லை.
மறுநாள் விடியவேயில்லை. துறைமுகமே அடங்கி அன்னைக்கோழியின் சிறகுக்குள் குஞ்சுகள் போல மழைக்குள் அமர்ந்திருந்தது. கூரைவிளிம்புகளில் இருந்து பளிங்குத்தூண்கள் போல பட்டுத்திரைபோல மழை தொங்கிக்கிடந்தது. வேம்பின் இலைத்தழைப்புகள் எழுந்து அழுந்திக் குமுறிக்கொந்தளித்தன. மழையே பகலாகி மழையே இரவாகி மறுநாளும் மழையே விடிந்தது. மழையன்றி ஏதுமிருக்கவில்லை.
மூன்றாம்நாள் மழை மெல்ல இடைவெளிவிட்டது. கரியகூரையாக இறுகியிருந்த வானில் கீழ்ச்சரிவில் ஒரு வாசல்திறந்து தளிர்வெளிச்சம் கீழே விழுந்து கடலை ஒளிபெறச்செய்தது. ஆனால் தெற்குச்சரிவிலிருந்து இருண்டமேகங்கள் ஒன்றை ஒன்று முட்டியபடி மேலேறிக்கொண்டிருந்தன. அந்தக்கரும்பரப்பில் மின்னல்கீற்றுகள் துடிதுடித்து அணைந்தன. அவ்வொளியில் வடிவம்பெற்ற கருமேகங்கள் மீண்டும் கருமைவெளியாக ஆயின.
மதிய உணவை உண்டபின் வாயில்திண்ணையில் அமர்ந்து வானைநோக்கிக் கொண்டிருந்த பீஷ்மரை நோக்கி வந்து வணங்கி நின்றான் அஸ்தினபுரியின் ஒற்றனாகிய சுகர்ணன். பீஷ்மர் அவனை என்ன என்பதுபோலப் பார்த்தார். “பேரரசி சத்யவதியின் ஆணை” என்றான் சுகர்ணன். பீஷ்மர் தலையசைத்தார். “வரும் நிறைநிலவுநாளுக்குள் தாங்கள் அங்கே இருந்தால் நன்று என்று எண்ணுகிறார்.”
“ஏன்?” என்றார் பீஷ்மர். அவருக்கு என்ன என்று உடனே புரிந்துவிட்டது. “இளவரசர் திருதராஷ்டிரருக்குப் பதினெட்டு வயது நிறைவடைந்தபின் வரும் முதல் நிறைநிலவு அது” என்றான் சுகர்ணன். பீஷ்மர் தலையசைத்தார். “பேரரசி அஞ்சுகிறார்கள். திருதராஷ்டிரர் இளவரசுப்பட்டம் கொள்ள ஷத்ரியர்களின் எதிர்ப்பிருக்கிறது. நம் குடிமக்களும் எதிர்க்கக்கூடும்.” சற்று இடைவெளிவிட்டு “அத்துடன்…” என்றான்.
பீஷ்மர் ஏறிட்டுப்பார்த்தார். “நிமித்திகரும் கணிகரும் சூதரும் மூன்றுவகையில் ஒன்றையே சொல்கிறார்கள்” என்றான் சுகர்ணன். “அஸ்தினபுரிக்கு மேற்கு வானில் ஒரு எரிவிண்மீன் செந்நிறக் குங்குமத்தீற்றல்போல விழுந்தது என்றும், அது துவாபரன் என்னும் வானகப்பகடை என்றும் நிமித்திகர் சொன்னார்கள். கணிகர் பன்னிரு ராசிசக்கரத்தில் அனைத்து தேவர்களும் இடம்பெயர்ந்து ஒருவரோடொருவர் சினப்பதாகச் சொன்னார்கள்.”
“சூதர்கள்?” என்றார் பீஷ்மர். “அவர்கள் ஒரு பெருமழையைப்பற்றிப் பாடினார்கள். மேற்கே இடி இடிக்கிறது. மின்னல்கள் வெட்டுகின்றன. மழை நெருங்கி வருகிறது என்றனர். ஆனால் அது உதிர மழை. கொழுத்த குருதி வானிலிருந்து செவ்விழுதுகளாக இறங்கும். கூரைவிளிம்புகளில் இருந்து செஞ்சரடுகளாக பொழியும். செந்நிறப்பட்டாடைகள் போல செங்குருதி அஸ்தினபுரியின் தெருக்களில் வழியும். கங்கையும் யமுனையும் செவ்வலைகள் எழுந்து கரைமுட்டி ஒழுகும் என்கிறார்கள்.”
பீஷ்மர் எழுந்து “நான் கிளம்புகிறேன்” என்றார். “செய்திப்புறாவை அனுப்பு” என்று சொன்னபின் நேராக கடலைநோக்கிச் சென்று பாறை நுனியில் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றார். மேலே தெற்கத்தியக் கருஞ்சுவர் ஒன்றாகி இணைந்து இடைவெளியை மூடியது. அந்தியென இருண்டது. மேகச்சுவரில் மின்னல்கள் நடனமிட்டன. பின்பு மழை கடலெழுந்து வருவதுபோல வந்து பீஷ்மரை மூழ்கடித்து கடந்துசென்றது.

2/28/14

பகுதி ஒன்று : வேழாம்பல் தவம்[ 1 ]

பகுதி ஒன்று : வேழாம்பல் தவம்[ 1 ]
அலகிலா நடனம் மட்டுமே இருந்தது, நடனமிடுபவன் அந்நடனமாகவே இருந்தான். முன்பின்நிகழற்ற முதற்பெருங் காலமோ அவன் கையில் சிறு மணிமோதிரமாகக் கிடந்தது.
அசைவென்பது அவன் கரங்களாக, அதிர்வென்பது அவன் கால்களாக, திசையென்பது அவன் சடைமுடிக்கற்றைகளாக, ஒளியென்பது அவன் விழிகளாக, இருளென்பது அவன் கழுத்துநாகமாக இருந்தது. அவனென்பதை அவனே அறிந்திருந்தான். ஆடுகையில் அவனில்லை என்பதையும் அவனறிந்திருந்தான்.
ஆடலின் முதல்முழுமைக் கணங்களில் ஒன்றில் அவன் இடக்கரமும் வலக்கரமும் ஒரு மாத்திரையளவுக்கு முரண்பட்டன. அவன் இடக்கரம் காட்டியதை இடக்கால் தொடர்ந்தது. இடக்கால் அறிந்ததை இடக்கண் கண்டது. கண்ணறிந்ததை கருத்து உணர்ந்தது. கருத்து கொண்டதை கனிவும் ஏற்றது.
அவன் இடப்பக்கம் நெகிழ்ந்து அங்கொரு முலை முளைத்தது. அதில் தேம்பாலூறி நிறைந்தது. இடக்கண் நீண்டு அதில் கருணை சுரந்தது. அது அணிநீலநிறத்து அன்னையாகியது. செந்தழல்நிறமும் மணிநீல வண்ணமும் கலந்த முடிவிலா ஆடலாக இருந்தது இதுவதுவற்றது.
ஆடலுக்குள் அவன் அகம் அசைவற்ற யோகத்தில் இருந்தது. அந்த நிகழ்விலியில் அவன் நீலமாக நிறைந்திருந்தான். அங்கே செம்பொன்னிற உதயப்பேரொளியாக அவள் எழுந்தாள். அவள் புன்னகையில் அவன் தவம் கலைந்தது. அவன் அவளை தானாகக் கண்டான். அவள் தன்னை அவனாகக் காணவைத்தான். அவர்கள் நின்றாடுவதற்கும் வென்றாடுவதற்கும் தோற்றமைவதற்கும் தோற்றலேவெற்றியென அறிந்து நகைப்பதற்கும் முடிவற்ற மேடைகளைச் சமைத்தது அவர்களின் கனவு.
அக்கனவுகளெல்லாம் அவன் கை உடுக்கையின் நாதமாக எழுந்து அவனைச்சுற்றி விரிந்தன. காலமென்ற ஒன்றும், அது நிகழும் களமென ஒன்றும், அது கலைந்தடுக்கிக்கொள்ளும் விண்ணென ஒன்றும், விண் சுருளும் வெளியென ஒன்றும், வெளி ஒடுங்கும் அளியென ஒன்றும், அளியறியும் அம்மை என ஒன்றும் அங்கே உருவாகி வந்தன.
அம்மை தன் அழகிய கைகளால் அவனை பின்னாலிருந்து தழுவி அவன் செவிகளில் அவன் விரும்பும் சொல்லைச் சொல்லி அவனை எழுப்பினாள். சிரித்தோடிய அவளை அவன் நகைத்துக்கொண்டு விரட்டிச்சென்றான். ‘ஆடலும் ஆக்கலும் அமைதலும் ஆகட்டும். என்னுடன் ஆடி வெல்ல முடியுமா?’ என்றாள் அன்னை. ‘ஆம்’ என்றான் தாதை.
மேருவின் ஒளிமுனையில் அவர்கள் அமர்ந்தனர். உமை தன் வலது கையை விரித்தாள். ஒளிரும் செங்கையில் மலைகள் எழுந்தன. கடல்கள் அலைத்தன. பசுங்காடுகள் பெருகி மலர்ந்தன. உயிர்வெளி உருவாகிப் பெருகியது. அக்கையை அவள் மேருமலை மீது விரித்து ஒரு தாயக்கட்டம் செய்தாள்.
இறைவன் தன் வலக்கையை நீட்டி விண்ணகத்தில் உருண்ட சூரியனையும் இந்திரன் முதலிய தேவர்களையும் பற்றி அந்த தாயக்கட்டத்தில் கருக்களாக்கினான்.
அன்னை தன் நான்கு கைவிரல்களால் நான்கு தாயக்கட்டைகளைச் செய்தாள். திரேதம், கிருதம், துவாபரம், கலி என்னும் அக்கட்டைகளை சிரித்தபடி உருட்டி அவள் ஆடத்தொடங்கினாள்.
மடமையெனும் பாவனையால் பெண்மை ஆடுகிறது. அதன்முன் சரணடையும் பாவனையால் ஆண்மை ஆடுகிறது. வெல்லா வீழா பெருவிளையாடல். அதன் வண்ணங்கள் வாழ்க!
VENMURASU_EPI_51 _Final
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
சமந்த பஞ்சகம் என்னும் குருஷேத்ரத்தின் தென்மேற்கு மூலையில் இருந்த கொற்றவையின் சிற்றாலயத்தின் முகப்பில் அமர்ந்திருந்த ஏழு சூதர்களில் முதல்வர் தன் கிணைப்பறையை மீட்டி பாடிமுடித்ததும் அங்கிருந்த பிறர் ‘ஓம் ஓம் ஓம்’ என முழங்கி அதை ஏற்றனர்.
இரண்டாவது சூதர் தன்னுடைய மெல்லிய கரங்களால் தன் முழவை மீட்டி பாடத் தொடங்கினார்.
சூதரே, மாகதரே, ஆடுபவர்கள் எவரும் அறிவதில்லை, பகடைகளும் ஆடுகின்றன என்பதை. தங்கள் நான்கு முகங்களால் நான்கு வண்ணங்களால் அவை முடிவின்மையை உருவாக்கிக் கொள்ளமுடியும். முடிவின்மையில் அவை எங்கும் செல்லமுடியும். எவற்றையும் அடையமுடியும்.
அன்றொரு காலத்தில் ஆடலின் வேகத்தில் கிருதம் என்னும் பகடை தெறித்தோடியது. ஒளிரும் ஒரு சிவந்த விண்மீனாக அது பெருவெளியில் பாய்ந்து விண்ணகப் பாற்கடலில் விழுந்தது. அதன் அலைகள் எழுந்து அவ்வெண்ணிறப்பரப்பில் கால அகால விகாலமென சுருண்டிருந்த ஆதிசேடனை அறைந்தன. அவன் அசைவில் அறிதுயில் கொண்டிருந்த விஷ்ணு கண் விழித்தெழுந்தார். அவரது சினம்ததும்பிய கணம் பூமி எனும் தாயக்களத்தில் ஒரு மனிதனாகப் பிறந்தது.
சூதரே மாகதரே, அவன் பெயர் பரசுராமன். இப்புவியில் ஜமதக்கினி முனிவருக்கும் ரேணுகை அன்னைக்கும் மைந்தனாகப் பிறந்தான். அளவுமீறும் அமுதம் விஷமானதுபோல அறம் காக்கும் ஷத்ரியவீரமே மறமாக ஆன காலம் அது. தேர்கள் உருளும் பாதையில் ஆயிரம் சிற்றுயிர்கள் மாள்கின்றன. சூதரே, அனைத்து தேர்களுக்கும் மேல் ஓடிச்செல்கிறது காலத்தின் பெருந்தேர்.
தன் பெருந்தவத்தால் சிவனிடமிருந்து பெற்ற மழுவுடன் தந்தையின் வேள்விக்கு விறகுவெட்ட வனம்புகுந்த பரசுராமன் பறவைகளின் குரல்கேட்டு வழி தேர்ந்து சென்றுகொண்டிருந்தபோது நாரதர் ஒரு குயிலாக வந்து கூவி அவனை வழிதவறச்செய்தார்.
மும்முறை வழிதவறிய பரசுராமன் சென்றடைந்த இடம் அஸ்ருபிந்துபதம் என்றழைக்கப்பட்ட நிலம். அங்கே பளிங்குத்துளிகளே மணலாக மாறி சூரியனின் ஒளியில் கண்கூச மின்னுவதை அவன் கண்டான். அந்நிலம் வெம்மையானது என்று எண்ணி அவன் பாதங்களை எடுத்து வைத்தபோது அவை குளிர்ந்து பனிபோலிருப்பதை உணர்ந்தான்.
அவற்றில் ஒன்றை எடுத்து தன் நெஞ்சோடு சேர்த்து ‘பளிங்குமணிகளே, நீங்கள் எவர் என’ அவன் வினவியபோது அது விம்மியழுதபடி ‘நாங்களெல்லாம் அழியாத கண்ணீர்த்துளிகள்…. மண்ணில் ஷத்ரியர்களின் அநீதியால் வதைக்கப்பட்டவர்களால் உதிர்க்கப்பட்டவர்கள். அவர்களின் அகம் அணையாமல் எங்களுக்கு மீட்பில்லை’ என்றன.
சினத்தால் விரிந்த கண்கள் செவ்வரி ஓட ‘அறத்தைக் காக்கும் ஷத்ரியன் என எவரும் இல்லையா?’ என்றான் பரசுராமன். ‘உத்தமரே, அறம்காக்கும் மன்னர்களெல்லாம் அழிந்துவிட்டனர். மன்னனின் மீட்பென்பது அறத்தால். அறம் திகழவே மக்கள். மக்கள் வாழவே மண். மண் காக்கவே அரசு. அரசை முதன்மையாகக் கொள்ளும் ஷத்ரியன் அறத்தை இழக்கிறான். அறம் மறந்த மன்னனின் அருகமரும் மன்னனும் அறத்தை இழக்கிறான். ஷத்ரியகுலமே பாற்கடல் திரிந்ததுபோல் ஆயிற்று’ என்றது கண்ணீர்த்துளி.
‘அழியாத துயரே, ஒன்று தெரிந்துகொள். ஆற்றாது அழுத கண்ணீர் யுகயுகங்களை தன்னந்தனியாகக் கடந்துசெல்லும். தனக்கான வாளையும் வஞ்சினத்தையும் அது கண்டடையும். இன்று இம்மண்ணில் நின்று உங்களுக்கொரு வாக்களிக்கிறேன். உங்கள் வஞ்சத்தை நான் தீர்ப்பேன். இங்குள்ள ஒவ்வொரு துளியையும் நான் விண்ணகம் அனுப்புவேன். அதற்கு என் பெருந்தவமே துணையாகுக’ என்று பரசுராமன் வஞ்சினம் உரைத்தான். ஆம் ஆம் ஆம் என ஐந்து பருப்பொருட்களும் குரல் எழுப்பி அதை ஆதரித்தன.
குருதிவெறி கொண்ட மழுவுடன் மலையிறங்கி ஊர்புகுந்த பரசுராமன் இருபத்தொரு முறை பாரதவர்ஷம் முழுக்கச் சுற்றி ஷத்ரிய குலங்களை கொன்றழித்தான். அவர்களின் கோட்டைகளை எரித்தான், அவர்களின் சிரங்களைக் குவித்தான். அவர்களின் குலங்களை கருவறுத்தான். அவர்களின் ஒவ்வொருதலைக்கும் ஒரு கண்ணீர்மணி விண்ணகம் சென்று ஒரு விண்மீனாகி மண்ணைப்பார்த்து புன்னகைசெய்தது.
அவன் சென்ற திசைகளில் எல்லாம் நதிகள் சிவந்து குருதிவரிகளாக மாறின. அவன் காலடிபட்ட நிலங்களெல்லாம் குருதி ஊறி கொன்றையும் மருதமும் முல்லையும் செண்பகமும் செந்நிற மலர்களைப் பூத்தன.
பரசுராமன் தன் குருதி சொட்டும் மழுவுடன் சூரியநகரியை ஆண்ட மூலகன் என்னும் அரசனைக்கொல்லச் சென்றான். அவன் தன் ஷத்ரியத்தன்மையை முற்றிலும் கைவிட்டு தன் அன்னையருக்கு மைந்தனாக மட்டும் ஆனான். அவன் அன்னையர் அவனைச்சூழ்ந்து அணைத்துக்கொண்டனர். பரசுராமனின் மழு அவர்களை மும்முறை சுற்றிவந்து வணங்கி மீண்டது. நாரிவசன் என்றழைக்கப்பட்ட அம்மன்னனில் இருந்து ஷத்ரியகுலம் மீண்டும் முளைத்தெழுந்தது. அன்னையரின் கைகளாலேயே அரசு காக்கப்படுமென அவ்வம்சம் அறிந்திருந்தது.
பரசுராமன் ஷத்ரியர்களைக் கொன்று வென்ற கிழக்குத் திசையை அத்துவரியனுக்கும், வடக்கை உதகாதனுக்கும், மத்திய தேசத்தை ஆசியபருக்கும், ஆரிய வர்த்தத்தை உபதிரஷ்டனுக்கும் அதற்கு அப்பால் உள்ள நிலத்தை சதசியர்களுக்கும் அளித்தான். பின்பு பெருகிப்புரண்டு சென்ற சரஸ்வதி நதியில் இறங்கி தன் மழுவின் குருதியை கழுவிக்கொண்டான்.
பரசுராமன் தன் பணிமுடித்து வந்து நின்ற இந்த இடம் அன்று ஐந்து குளங்கள் கொண்டதாக இருந்தமையால் பஞ்சசரஸ் என்று அழைக்கப்பட்டது. போரில் இறங்கியபின்னர் தன் வில்லை கீழிறக்காத அவன் தன் மூதாதையருக்கு நீர்க்கடன் செய்யவில்லை. ஆகவே நீர்க்கடன்களைச் செய்வதற்காக முதல் குளத்தில் இறங்கி தன் கைகளைக் கழுவினான்.
அக்கணமே அந்த நீர்நிலை கொந்தளித்து அலையெழுந்து குருதித்தேக்கமாக மாறியது. திகைத்தபின் அவன் அடுத்த நீர்நிலையில் தன் கைகளைக் கழுவினான். அதுவும் குருதியாகி நிறைந்தது. ஐந்து குளங்களும் குருதிக்கொப்பளிப்புகளாக ஆனதைக் கண்டு அவன் செயலிழந்து நின்றான்.
கண்ணீருடன் தன் தந்தையையும் மூதாதையரையும் ஏறிட்டு நோக்கி பரசுராமன் கூவினான். ‘எந்தையரே, இக்குளங்கள் எவை? இங்கே நான் செய்யவேண்டியதென்ன?’
இடியோசைபோல வானில் மெய்யிலிக் குரல் எழுந்தது. ‘நீ கொன்ற ஷத்ரியர்களின் குருதி முதல் குளம். அவர்களின் பெண்களின் கண்ணீரே இரண்டாவது குளம். அவர்தம் குழந்தைகளின் அழுகை மூன்றாவது குளம். அவர் மூதாதையரின் தீச்சொல் நான்காவது குளம். பரசுராமனே, ஐந்தாவது குளம் அவர்களின் உருவாகாத கருக்களின் ஏக்கமேயாகும்.’
இடியோசையை நோக்கி பரசுராமன் கேட்டான் ‘நான் அறத்தையல்லவா நிலைநாட்டினேன்? ஆற்றாத ஆயிரம்கோடி விழித்துளிகளை விண்ணேற்றியவன் அல்லவா நான்?’ மெய்யிலி சொன்னது. ‘ஆம், ஆனால் எதன்பொருட்டென்றாலும் கொலை பாவமேயாகும்.’
திகைத்து சற்று நேரம் நின்றபின் இரு கைகளையும் விரித்து ‘ஆம் மூதாதையரே, அதை நானும் என் அகத்தில் உணர்ந்தேன். இந்தக் குருதியெல்லாம் என் நெஞ்சிலிருந்து வழிந்ததே. என்னைப் பொறுத்தருளுங்கள். விண்ணகங்களில் நீங்கள் பசித்திருக்கச் செய்துவிட்டேன். அணையாத விடாயை உங்களுக்கு அளித்துவிட்டேன்’ என்றான்.
’மைந்தனே, தன்னையறிந்தவனுக்கு பாவமில்லை என்கின்றன வேதங்கள். அந்த ஐந்து குருதிச்சுனைகளின் அருகே அமர்வாயாக. அங்கே நீ செய்யும் ஊழ்கத்தில் நீ உன்னை அறிந்து மீள்வாய்’ என்றனர் நீத்தார்.
சூதரே மாகதரே, இந்த சமந்த பஞ்சகத்தின் அருகே கிருத யுகத்தில் பரசுராமர் அமர்ந்து தவம்செய்தார். உடலுருகி உளமுருகி கனவுருகி காரிருள் உருகி கடுவெளியுருகி எஞ்சியபோது அவர் தன்னை அறிந்துகொண்டார்.
அப்புன்னகையுடன் அவர் விழிதிறந்தபோது இந்த ஐந்து குளங்களும் தெளிந்த குளிர்நீர் நிறைந்திருக்கக் கண்டார். எழுந்து அந்தக் குளங்களின் அருகே நின்று வான் நோக்கிக் கேட்டார். ‘எந்தையரே, இந்த நீர்ப்பலியை நீங்கள் பெறலாகுமா?’ வானிலிருந்து அவர்கள் புன்னகையுடன் சொன்னார்கள். ‘ஆம் மைந்தா, அவை உன் கண்ணீரால் நிறைந்துள்ளன. அவை எப்போதும் அப்படியேதான் இருக்கும்.’
பரசுராமரின் கண்ணீரான இந்தக் குளங்களை வாழ்த்துவோம். மாமனிதர்களின் கண்ணீரில்தான் மனிதகுலம் காலம்தோறும் நீராடுகிறதென்பதை அறிக. ஓம் ஓம் ஓம்!
இரண்டாவது சூதர் பாடிமுடிப்பதற்குள் மூன்றாவது சூதர் வெறியெழுந்து தன் துடிப்பறையை மீட்டி பாடத்தொடங்கினார்.
சூதரே கேளுங்கள். மாகதரே கேளுங்கள். செவிகள் கொண்டவர்கள் அனைவரும் கேளுங்கள். சிந்தை கொண்டவர்கள் அனைவரும் கேளுங்கள். இதோ இன்னொரு கதை.
விண்ணிலுருளும் மூன்றாவது பகடையின் பெயர் துவாபரன். முக்கண்ணனின் சுட்டுவிரலில் இருந்து தெறித்து அவன் விண்விரிவில் விரைந்தான். ஒளிசிதறும் நீல விண்மீனாக உருண்டோடி சூரியனின் தேர்ப்பாதைக்குக் குறுக்கே புகுந்தான். ஏழுவண்ணப்புரவிகள் இழுத்த பொற்தேரில் பன்னிரு கைகளில் வஜ்ரம், பாசம், அங்குசம், கதை, தனு, சக்கரம், கட்கம், மழுவுடனும் செந்நிறம் வெண்ணிறம் பொன்னிறம் நீலநிறம் என நான்கு தாமரைகளுடனும் எழுந்தருளிய சூரியதேவனின் ரதசக்கரத்தில் முட்டினான்.
திசைதவறிய சூரியரதம் ஏழுவண்ணத்தலைகள் கொண்ட உச்சைசிரவஸால் இழுக்கப்பட்ட செந்நிறத்தேரில் விண்ணில் ஊர்ந்த இந்திரனின் பாதைக்குக் குறுக்காகச் சென்றது. சூரியனின் சாரதியான அருணன் விலகு விலகு என கூவிக் கையசைத்தபடி முழுவேகத்தில் விண்ணகப்பாதையில் விரைந்தான். இந்திர சாரதியான மாதலி ’விலகு, இது என் தலைவனின் பாதை’ என்று கூவினான். அவர்கள் மாறி மாறி போட்ட அறைகூவலால் விண்ணகங்கள் இடியொலி செய்தன.
விண்ணில் இரு பெரும் ரதங்களும் முகத்தோடு முகம் முட்டி திகைத்து நின்றன. சினம்கொண்ட சூரியன் தன் அங்குசத்தை இந்திரன் மேல் எறிந்தான். இந்திரனின் வஜ்ராயுதம் அதைத் தடுத்தது. அந்த ஓசையில் கோளங்கள் அதிர்ந்து தடம்மாறின. விண்மீன்கள் நடுங்கி அதிர்ந்தன. ஆயிரம்கோடி உலகங்களில் இடியோசையுடன் பெரும்புயல் எழுந்தது.
‘இது என் பாதை விலகு, இல்லையேல் உன்னை அழிப்பேன்’ என இருவரும் அறைகூவினர். அக்குரல்கேட்டு திசைத்தெய்வங்கள் அவர்களைச் சுற்றிக் கூடினர். யமனும் வருணனும் வாயுவும் அவர்களுடன் போரில் இணைந்துகொண்டனர். தேவர்களனைவரும் தங்கள் ஆயுதங்களுடன் அப்போரில் படைதிரண்டனர்.
விண்வெளி புழுதியால் நிறைய, படைக்கலங்களின் ஒளி கோடானுகோடி மின்னல்களாக நெளிந்துபரவ, அவை மோதும் இடியோசை திசைகளை நிறைக்க அப்பெரும்போர் நிகழ்ந்தது. முடிவில்லா ஆற்றல் கொண்ட தேவர்களின் போரில் காலம் ஒரு பாறையாக மாறி சான்றாக அமர்ந்திருந்தது.
விண்ணில் ஓடிய பெருந்தேர்களின் சக்கரங்களுக்குள் புகுந்து அவற்றை திசைமாற்றியும் மோதவிட்டும் துவாபரன் தன் ஆடலை நிகழ்த்திக்கொண்டிருந்தான். வெற்றியும் தோல்வியும் தன் விளையாட்டே என அவன் சிரித்துக்கொண்டான்.
சூரியனின் வெண்கால் சக்கரத்தில் இருந்து யமனின் கருங்கால் சக்கரத்தை நோக்கித் தெறிக்கையில் மேருவின் சிகரமுனையில் மோதி அவன் சரிந்து வானில் இருந்து உதிரலானான். வானம்கிழிபடும் பேரொலியுடன் அலறியபடி கோடியோஜனை தொலைவுள்ள செஞ்சுடராக எரிந்தபடி அவன் மண்ணில் வந்துவிழுந்தான்.
அவன் விழுந்ததைக் கண்டனர் விண்ணகத்தின் மாவீரர்கள். இனி நம் ஆடல் அந்த மண்ணில் என்று சூரியன் சொன்னான். ஆம் என்றான் இந்திரன், ஆம் ஆம் என்றனர் பிறதேவர்கள். ஆம் ஆம் ஆம் என பேரொலியுடன் எதிரொலித்தன திசைகள்.
துடியோசை உச்சவிரைவு கொள்ள கைகளும் கால்களும் வெறியில் துடித்தெழ சூதர் எழுந்து நடனமிட்டார். ‘இனி மண்ணில் நிகழும் பெரும்போர். அலகிலா ஆற்றல்களின் தேர்விளையாடல். ஐந்து பெருங்குளங்களும் ஐந்துமுறை மீண்டும் குருதியால் நிறையும். செங்குருதி! உடல்களுக்குள் எரியும் நெருப்பு! காமமும் குரோதமும் மோகமும் சுழிக்கும் பெருநதி! விண்ணகத்தின் விசைகள் அனைத்தையும் தன்னுள் கரைத்திருக்கும் வானோரின் அமுதம்!’
சூதரின் குரல் எழுந்தது. ‘காலமே, வெளியே, அழிவின்மையே குருதியாகி வருக! அறமே, கனவே, மகத்தான எண்ணங்களே குருதியாகி வருக! தெய்வங்களே தேவர்களே பாதாளநாகங்களே குருதியாகி வருக!’
இடிக்கின்றது கீழ்த்திசை! வெள்ளியென மின்னி அதிர்கின்றது மேல்திசை! மழை மழை என குளிர்கின்றது தென்திசை! மண்பூத்து மணக்கின்றது வடதிசை! வருகிறது உதிரமழை! ஆம், உதிரமழை!
சன்னதம் விலகி அவர் பின்னால் சாய்ந்து விழுந்ததைப் பார்த்தபடி ஆறு சூதர்களும் அந்த ஐந்து குளங்களின் கரையில் அமைதியில் ஆழ்ந்து அமர்ந்திருந்தனர்.

2/27/14

பகுதி பத்து : வாழிருள்[ 2 ]

பகுதி பத்து : வாழிருள்[ 2 ]
வான்வெளிப் பெருக்கு சுழித்துச்செல்லும் புள்ளி ஒன்றில் நுழைந்து இருள்வெளியான பாதாளத்தை அடைந்த தட்சனும் தட்சகியும் அங்கே அவர்கள் மட்டுமே இருக்கக் கண்டனர். இருண்ட பாதாளம் ஆறுதிசையும் திறந்து பெரும்பாழ் எனக்கிடந்தது. அதன் நடுவே நாகங்கள் வெளியேறி மறைந்த இருட்சுழி சுழிப்பதன் அசைவையே ஒளியாக்கியபடி தெரிந்தது. அப்புள்ளியை மையமாக்கி சுழன்ற பாதாளத்தின் நடுவே சென்று நின்ற தட்சன் ‘நான்’ என எண்ணிக்கொண்டதும் அவனுடைய தலை ஆயிரம் கிளைகளாகப் பிரிந்து படமெடுத்தது. ஆயிரம் படங்களின் விசையால் அவன் உடல் முறுகி நெளிந்தது.
அவனருகே சென்று நின்ற தட்சகியான பிரசூதி ‘நானும்’ என்றாள். அவளுடைய உடலிலும் ஆயிரம் தலைகள் படமெடுத்தெழுந்தன. அவனுடன் அவள் இருளும் இருளும் முயங்குவதுபோல இணைந்துகொண்டாள். இருத்தல் என்னும் தட்சனும் பிறப்பு என்னும் பிரசூதியும் இணைந்தபோது இருட்டு கருக்கொண்டது. திசையழிந்து பரந்த கருமையின் வல்லமைகள் முழுக்க அவர்களிடம் வந்து குவிந்தன. அடியின்மையின் மேலின்மையின் வலமின்மையின் இடமின்மையின் முன்பின்மையின் பின்பின்மையின் இன்மையின் மையத்தில் ஒன்பது யோகங்களாக அவர்கள் ஒன்றாயினர்.
முதல் யோகம் திருஷ்டம் எனப்பட்டது. தட்சனின் ஈராயிரம் விழிகள் தட்சகியின் ஈராயிரம் விழிகளை இமைக்காமல் நோக்கின. கண்மணிகளில் கண்மணிகள் பிரதிபலித்த ஈராயிரம் முடிவின்மைகளில் அவர்கள் பிறந்து இறந்து பிறந்து தங்களை கண்டறிந்துகொண்டே இருந்தனர். ஒருவர் இன்னொருவருக்கு மறைத்துவைத்தவற்றை பேருவகையுடன் முதலில் கண்டுகொண்டனர். தாங்கள் தங்களிடமே மறைத்துக்கொண்டதை பின்னர் கண்டுகொண்டனர். கண்டுகொள்வதற்கேதுமில்லை என்று அறிந்தபின் காண்பவர்கள் இல்லாமல், காணப்படுபவரும் இல்லாமல், கண்களும் இல்லாமல் நின்றுகொண்டிருந்தனர்.
இரண்டாம் யோகம் சுவாசம். தட்சனின் மூச்சுக்காற்று சீறி அவள் மேல் பட்டது. அதில் அவன் உயிரின் வெம்மையும் வாசனையும் இருந்தது. உடலுக்குள் அடைபட்ட உயிரின் தனிமையும் வேட்கையும் நிறைந்திருந்தது. அவளுடைய மூச்சு அந்த மூச்சுக்காற்றை சந்தித்தது. மூச்சுகள் இணைந்த இருவரும் விம்மி படம் அசைத்து எழுந்தனர். மூச்சிலிருந்து மூச்சுக்கு அவர்களின் உயிர்கள் தங்களை பரிமாறிக்கொண்டன.
மூன்றாம் யோகம் சும்பனம். தட்சன் முதலில் தன் பிளவுண்ட நாக்கின் நுனியால் தட்சகியின் நாக்கின் நுனியைத் தீண்டினான். பல்லாயிரம் கோடி யோஜனைதூரம் நீண்ட பெரும் சிலிர்ப்பு ஒன்று அவளுடைய உடலில் ஓடியது. இருளுக்குள் அவள் நீளுடல் இருளுடன் இறுகி நெகிழ்ந்து வளைந்து சுழித்து அலைகளாகியது. பின்பு ஆயிரம் நாவுகள் ஆயிரம் நாவுகளைத் தீண்டின. ஈராயிரம் நாவுகள் ஒன்றை ஒன்று தழுவித்தழுவி இறுக்கி கரைத்தழிக்க முயன்றன. இரண்டு பெருநாகங்கள் ஈராயிரம் சிறுசெந்நாக்குகளாக மட்டும் இருந்தன.
நான்காம் யோகம் தம்ஸம். தட்சன் தன் விஷப்பல்லால் மெல்ல தட்சகியின் உடலைக் கவ்வினான். விஷமேறிய அவள் உடல் வெறிகொண்டு எழுந்து உடனே தளர்ந்து வளைவுகளை இழந்து இருளில் துவண்டது. அவள் உடலின் முடிவில்லாத வளைவுகளில் அவன் பற்கள் பதிந்துசென்றன. பின்பு அவள் திரும்பி வளைந்து அவனுடலில் தன் பற்களைப் பதித்தாள். உண்பதும் உண்ணப்படுவதுமாக இரு பேருடல்களும் ஒன்றை ஒன்று அறிந்தன.
ஐந்தாம் யோகம் ஸ்பர்சம். அடியின்மையின் கடைசி நுனியில் தட்சனின் நுனிவால் துடிதுடித்து வளைந்தது. பல்லாயிரம் கோடி யோஜனைதூரம் அது நெளிந்து வளைந்து இருள்வானில் ஊசலாடியது. பின்பு அதன் நுனியின்நுனி தட்சகியின் வாலின் நுனியின் நுனியை மெல்லத் தொட்டது. அந்தத்தொடுகையில் அது தன்னை அறிந்தது. இரு நுனிகளும் முத்தமிட்டு முத்தமிட்டு விளையாடின. தழுவிக்கொண்டன விலகிக்கொண்டன. விலகும்போது தழுவலையும் தழுவும்போது விலகலையும் அறிந்தன.
ஆறாம் யோகம் ஆலிங்கனம். இரு பேருடல்களும் புயலைப் புயல் சந்தித்ததுபோல ஒன்றோடொன்று மோதின. இரு பாதாள இருள்நதிகள் முயங்கியது போலத் தழுவின. சுற்றிவளைத்து இறுகியபோது இருவர் உடலுக்குள்ளும் எலும்புகள் இறுகி நொறுங்கின. தசைகள் சுருங்கி அதிர்ந்தன. இறுக்கத்தின் உச்சியில் வெறியுடன் விலகி இரு உடல்களும் பேரொலியுடன் அடித்துக்கொண்டன. தலைகள் கவ்வியிருக்க இரு உடல்களும் இரு திசைகளில் நகர்ந்து கோடானுகோடி இடிகள் சேர்ந்தொலித்ததுபோல அறைந்துகொண்டன. அந்த அதிர்வில் மேலே மண்ணுலகில் பூமி பிளந்து சுவாலை எழுந்தது. மலையுச்சியின் பெரும்பாறைகள் சரிந்திறங்கின.
ஏழாம் யோகம் மந்திரணம். தழுவலின் உச்சியில் இருவரும் அசைவிழந்தபோது தட்சகன் அவள் காதில் மெல்லிய காதல்சொற்களை சொல்லத்தொடங்கினான். அக்கணத்தில் பிறந்துவந்த மொழியாலான சொற்கள் அவை. அவன் சொல்லி அவள் கேட்டதுமே அம்மொழி இறந்து காற்றில் மறைந்தது. ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு மொழி அவ்வாறு உருவாகி மறைந்துகொண்டிருந்தது. தன் அனைத்துச் சொற்களையும் சொல்லிமுடித்தபின்பு சொல்லில்லாமல் நின்ற தட்சன் சொல்லாக மாறாத தன் அகத்தை முடிவிலியென உணர்ந்து பெருமூச்சுவிட்டான். அவளோ அவனுடைய இறுதிச் சொற்களையும் கேட்டவளாக அப்பெருமூச்சை எதிரொலித்தாள்.
எட்டாம் யோகம் போகம். பாதாளத்தின் இருளில் இரு பெருநாகங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்தன. தட்சன் தட்சகிக்குள்ளும் தட்சகி தட்சனுக்குள்ளும் புகுந்துகொண்டனர். அக்கணத்தில் பதினான்குலகங்களிலும் இணைந்த ஆண்களும் பெண்களுமான அனைத்துயிர்களிலும் அவர்களின் ஆசி வந்து நிறைந்தது. தட்சகிக்குள் வாழ்ந்த கோடானுகோடி நாகக்குழந்தைகள் மகிழ்ந்தெழுந்து அவள் உடலெங்கும் புளகமாக நிறைந்து குதூகலித்தன.
ஒன்பதாம் யோகம் லயம். இருவரும் தங்கள் முழுமைக்குத் திரும்பியபோது முழுமையான அசைவின்மை உருவாகியது. பாதாள இருளில் அவர்கள் இருப்பதை அவர்கள் மட்டுமே அறிந்திருந்தனர். இருவரின் வால்நுனிகளும் மெல்லத்தொட்டுக்கொண்டிருக்க தட்சகனின் தலைகள் கிழக்கிலும் தட்சகியின் தலைகள் மேற்கிலும் கிடந்தன. அவர்கள் இரு முழுமைகளாக இருந்தனர். முழுமைக்குள் முழுமை நிறைந்திருந்தது.
VENMURASU_EPI_50
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
பின்பு அவர்கள் கண்விழித்தபோது தங்களைச் சுற்றி பாதாளம் மீண்டும் முளைத்திருப்பதைக் கண்டனர். வாசுகியின் குலத்தில் பிறந்த கோடிசன், மானசன், பூர்ணன், சலன், பாலன், ஹலீமகன், பிச்சலன், கௌணபன், சக்ரன், காலவேகன், பிரகாலனன், ஹிரண்யபாஹு, சரணன், சக்‌ஷகன், காலதந்தகன் ஆகிய பெருநாகங்கள் பிறந்து வானுக்கு அப்பால் நின்ற பேராலமரத்தின் விழுதுகள் போல ஆடின. தட்சனின் குலத்தைச் சேர்ந்த புச்சாண்டகன், மண்டலகன், பிண்டசேக்தா, ரபேணகன், உச்சிகன், சரபன், பங்கன், பில்லதேஜஸ், விரோஹணன், சிலி, சலகரன், மூகன், சுகுமாரன், பிரவேபனன், முத்கரன், சிசுரோமான், சுரோமன், மஹாகனு போன்ற மாநாகங்கள் காட்டுக்கு அடியில் நிறைந்த வேர்பரப்பு போல செறிந்தாடின.
ஐராவத குலத்தில் உதித்த பாராவதன், பாரியாத்ரன், பாண்டாரன், ஹரிணன், கிருசன், விஹங்கன், சரபன், மோதன், பிரமோதன், ஸம்ஹதாபனன் போன்ற பொன்னிறநாகங்கள் விராடவடிவம்கொண்ட சிவனின் சடைக்கற்றைகள் என நெளிந்தாடின. கௌரவ்ய குலத்தில் அவதரித்த ஏரகன், குண்டலன், வேணி, வேணீஸ்கந்தன், குமாரகன், காகுகன், ஸ்ருங்கபேரன், துர்த்தகன், பிராதன், ராதகன் போன்ற நாகங்கள் விண்வெளி நீர்வெளிமேல் ஏவிய கோடிஅம்புகள் போல எழுந்தன.
திருதராஷ்டிர குலத்தில் பிறந்த சங்குகர்ணன், பிடாரகன், குடாரமுகன், சேசகன், பூர்ணாங்கதன், பூர்ணமுகன், பிரஹாசன், சகுனி, தரி, அமாஹடன், காமடகன், சுசேஷணன், மானசன், அவ்யபன், அஷ்டாவக்ரன், கோமலகன், ஸ்வசனன், மௌனவேபகன், பைரவன், முண்டவேதாங்கன், பிசங்கன், உதபாரான், இஷபன், வேகவான், பிண்டாரகன், மகாரஹனு, ரக்தாங்கதன், சர்வசாரங்கன், சம்ருத்தன், படவாசகன், வராஹகன், வீரணகன், சுசித்ரன், சித்ரவேகிகன், பராசரன், தருணகன், மணி, ஸ்கந்தன், ஆருணி ஆகிய நாகங்கள் முடிவிலியைத் துழாவும் இருளின் விரல்கள் என வானில் நெளிந்தன.
பாதாளத்தில் இருந்து இருள் பெருநதிகளாகக் கிளம்பியது. விண்ணின் ஒளியுடன் கலந்து பின்னி பெருவெளியை நெய்தது. நிழல்களாக உயிர்களைத் தொடர்ந்தது. கனவுகளாக உயிரில் கனத்தது. இச்சையாக எண்ணங்களில் நிறைந்தது. செயல்களாக உடலில் ததும்பியது. சிருஷ்டியாக எங்கும் பரவியது. ஒளியை சிறுமகவாக தன் மடியில் அள்ளிவைத்து கூந்தல் சரியக் குனிந்து முத்தமிட்டுப் புன்னகைசெய்தது.
[ முதற்கனல் நாவல் நிறைவு ]

2/26/14

பகுதி பத்து : வாழிருள்[ 1 ]

பகுதி பத்து : வாழிருள்[ 1 ]
ஆடி மாதம் வளர்பிறை ஐந்தாம்நாள் ஜனமேஜயனின் சர்ப்பசத்ரவேள்வி முடிந்து ஒருவருடம் நிறைவுற்றபோது ஆஸ்திகன் வேசரநாட்டில் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் தன் குலத்தினரின் கிராமத்திற்குள் நுழைந்தான். அவனுடைய வருகையை முன்னரே நெருப்பில் கண்டிருந்த மானசாதேவி குடில்முற்றத்தில் நாகபடக்கோலம் அமைத்து அதன்நடுவே நீலநிறமான பூக்களால் தளமிட்டு ஏழுதிரியிட்ட விளக்கேற்றி வைத்து அவனுக்காகக் காத்திருந்தாள். அவன் குலத்தைச் சேர்ந்த அன்னையரும் முதியவரும் அவனைக்காத்து ஊர்மன்றில் கூடியிருந்தனர். ஓங்கிய ஆலமரத்தின் மீதேறி அமர்ந்து சில சிறுவர்கள் கிருஷ்ணையின் நீர்ப்பரப்பைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
கிருஷ்ணையின் மறுபக்கம் நகருக்குச் செல்லும் பாதை தொடங்கியது. அதற்கு இப்பால் புஷ்கரவனத்துக்குள் நாகர்களின் பன்னிரண்டு ஊர்கள் மட்டுமே இருந்தன. நாகர்குலத்தவர் மட்டுமே அந்தத்துறையில் படகோட்ட ஒப்புதல் இருந்தது. நாகர்களல்லாத எவரும் அங்கே நதியைத் தாண்டுவதில்லை. பாறைகள் நிறைந்த அப்பகுதியில் மென்மரத்தைக் குடைந்து செய்யப்பட்ட நாகர்களின் படகுகளன்றி பிற நீரிலிறங்கவும் முடியாது.
சாலையின் மறுபக்கம் நான்குநாகர்களின் படகுகளும் காத்திருந்தன. காலையில் சந்தைக்குச் சென்ற நாகர்கள் மாலையில் திரும்புவது வரை பொதுவாக அப்பகுதியில் படகுகள் கிருஷ்ணையில் இறங்குவதில்லை. பயணிகளும் இருப்பதில்லை. கரையில் நின்றிருந்த மருதமரத்தின் அடியில் படகுகளை நீரிலிறங்கிய வேரில் கட்டிவிட்டு நாகர்கள் அமர்ந்திருந்தனர். வெண்கல்கோபுரம் போல எழுந்து நின்றிருந்த மருதத்தின் வேர்கள் மேல் அமர்ந்திருந்த முதியவர் இருவர் கண்கள் சுருக்கி தங்கள் எண்ணங்களுக்குள் மூழ்கியிருந்தனர். இருவர் இளைஞர்கள். தூரத்தில் தெரியும் அசைவுகளை நோக்கிக்கொண்டு அவர்கள் அமைதியாக நின்றனர்.
சற்றுநேரத்தில் புதர்களுக்கு அப்பால் ஆஸ்திகன் தெரிந்தான். இளைஞர்கள் இருவரும் எழுச்சிக் கூச்சலிட்டபோது முதியவர்கள் எழுந்துகொண்டனர். ஓர் இளைஞன் நேராக தன் படகைநோக்கி ஓடி அதை இழுத்து வழியருகே வைத்து “இதுதான்…இந்தப் படகுதான்” என்றான். முதியவர் புன்னகையுடன் “ஒரு படகே போதும். ஒருவர் நான்கு படகுகளில் ஏறமுடியாது” என்றார்.
ஆஸ்திகன் சடைமுடிகள் இருபக்கமும் தோள்வரை தொங்க செம்மண்போல வெயில்பட்டுப் பழுத்த முகமும் புழுதிபடிந்த உடலுமாக வந்தான். அவன் சென்றபோது இருந்தவையில் அந்த விழிகள் மட்டுமே அப்படியே மீண்டன. அவனைக் கண்டதும் நான்கு படகோட்டிகளும் கைகூப்பி வணங்கி நின்றனர். ஆஸ்திகன் நெருங்கி வந்ததும் முதியவர் இருவரும் அவன் காலடியில் விழுந்து வணங்கினர். அதைக்கண்டபின் இளைஞர்கள் ஓடிவந்து அவனைப் பணிந்தனர். அவன் காலடியில் பணிபவர்களை தன்னிலிருந்து கீழானவர்களாக எண்ணும் மனநிலையை கடந்துவிட்டிருந்தமையால் அவ்வணக்கங்களுக்கு முற்றிலும் உரிய முனிவனாக இருந்தான். அவர்களை சிரம்தொட்டு ஆசியளித்தான்.
முதியவர் “எங்கள் குடில்களுக்கு மீண்டு வரும் ஆஸ்திகமுனிவரை நாகர்குலம் வணங்குகிறது” என்று முகமன் சொல்லி படகுக்குக் கொண்டுசென்றான். ஆஸ்திகன் ஏறியபடகு கிருஷ்ணையில் மிதந்ததும் அப்பால் ஆலமரத்து உச்சியில் இருந்த சிறுவர்கள் உரக்கக் கூச்சலிட்டனர். சிலர் இறங்கி கிருஷ்ணைநதிக்கரை நோக்கி ஓடத்தொடங்கினர்.
கிருஷ்ணை அங்கே மலையிடுக்கு போல மண் குழிந்து உருவான பள்ளத்துக்குள் நீலப்பெருக்காக ஓடிக்கொண்டிருந்தது. மரங்கள் அடர்ந்த சரிவில் வேர்களையே படிகளாகக் கொண்டு அவர்கள் மேலேறி வந்தனர். அவர்கள் வரும் வழியெங்கும் கொன்றைமலர்கள் பொன் விரித்திருந்தன. அரசமரத்தின் இலைகள் கேளா மந்திரத்தில் துடித்தன.
முதுபெண்டிர் ஊர்மன்றிலும் வேலிமுகப்பிலும் கூடி நின்றனர். சிலர் மானசாதேவி வெளியே வருகிறாளா என்று பார்த்தனர். அவள் இல்லமுகப்பில் ஏழுதிரியிட்ட மண்ணகல் விளக்குகள் சுடருடன் நின்றன. ஆஸ்திகன் சிறுவர்களும் நாகர்குலத்து மூத்தாரும் புடைசூழ வேலிமுகப்பை அடைந்ததும் பெண்கள் குலவையிட்டனர். முதுநாகினி கமுகுப்பாளைத் தாலத்தில் நிறைத்த புதுமுயலின் குருதியால் அவனுக்கு ஆரத்தி எடுத்தபின் அந்தக்குருதியை தென்மேற்குநோக்கி மரணத்தின் தேவர்களுக்கு பலியாக வீசினாள். அவன் நெற்றியில் புதுமஞ்சள் சாந்து தொட்டு திலகமிட்டு அழைத்துவந்தார்கள்.
குடில்முன்னால் ஆஸ்திகன் வந்தபோது உள்ளிருந்து கையில் ஒரு மண்பானையுடன் மானசாதேவி வெளியே வந்தாள். ஆஸ்திகன் அவளைப்பார்த்தபடி வாயிலில் நின்றான். “மகனே, இதற்குள் உனக்காக நான் வைத்திருந்த அப்பங்கள் உள்ளன. இவற்றை உண்டுவிட்டு உள்ளே வா” என்று அவள் சொன்னாள். அந்தக்கலத்தை தன் கையில் வாங்கிய ஆஸ்திகன் அதைத்திறந்து உள்ளே இருந்து கரிய தழல்போல கணத்தில் எழுந்த ராஜநாகத்தின் குழவியை அதே கணத்தில் கழுத்தைப்பற்றித் தூக்கினான். அதை தன் கழுத்தில் ஆரமாகப் போட்டுக்கொண்டு உள்ளே இருந்த ஊமைத்தைப்பூவின் சாறும் நாகவிஷமும் கலந்து சுடப்பட்ட மூன்று அப்பங்களையும் உண்டான்.
“அன்னையே, உங்கள் மைந்தன் இன்னும் விஷமிழக்காத நாகனே” என்று அவன் சொன்னதும் மானசாதேவி முகம் மலர்ந்து “இது உன் இல்லம். உள்ளே வருக” என்றாள். ஆஸ்திகன் குடிலுக்குள் நுழைந்ததும் அவன் குலம் ஆனந்தக்கூச்சலிட்டது. மூதன்னையர் குலவையிட்டனர். ஆஸ்திகன் அன்று கிருஷ்ணையில் நீராடி தன் சடையையும் மரவுரியையும் களைந்தபின் முயல்தோலால் ஆன ஆடையையும் ஜாதிக்காய் குண்டலத்தையும் அணிந்து தலையில் நீலச்செண்பக மலர்களையும் சூடிக்கொண்டான்.
ஆஸ்திகன் தன் இல்லத்தில் சாணிமெழுகிய தரையில் அமர்ந்து அன்னை அளித்த புல்லரிசிக்கூழையும் சுட்ட மீனையும் உண்டான். அதன்பின் அன்னை விரித்த கோரைப்பாயில் படுத்து அவள் மடியில் தலைவைத்துத் துயின்றான். அவன் அன்னை அவனுடைய மெல்லிய கரங்களையும் வெயிலில் வெந்திருந்த காதுகளையும் கன்னங்களையும் வருடியபடி மயிலிறகு விசிறியால் மெல்ல வீசிக்கொண்டு அவனையே நோக்கியிருந்தாள்.
அன்றுமாலை ஊர்மன்றில் நாகர் குலத்தின் பன்னிரண்டு ஊர்களில் வாழும் மக்களும் கூடினர். பசுஞ்சாணி மெழுகிய மன்றுமேடையில் புலித்தோலாடையும் நெற்றியில் நாகபட முத்திரையிட்ட முடியுமாக அமர்ந்த முதியநாகர்கள் முதுநாகினிகள் பரிமாறிய தேன்சேர்த்து புளிக்கவைக்கப்பட்ட கடுங்கள்ளை குடுவைகளில் இருந்து அருந்தினர். கூடியிருந்த சிறுவர்கள் பூசலிட்டு பேசிச் சிரித்துக்கொண்டு கிழங்குகளை சுட்டமீன் சேர்த்து தின்றனர். ஆஸ்திகன் தன் அன்னையுடன் வந்து மன்றமர்ந்ததும் வாழ்த்தொலிகள் எழுந்தன.
முதுநாகர் எழுந்து அனைவரையும் வணங்கினார். “‘விண்ணகமாக விரிந்த ஆதிநாகத்தை வணங்குகிறேன். அழியாத நாகங்களையும் அவர்களை ஆக்கிய முதல் அன்னை கத்ருவையும் வணங்குகிறேன். ஒருவருடம் முன்பு இத்தினத்தில் அஸ்தினபுரியின் வேள்விக்கூடத்தில் நம் குலத்தின் இறுதிவெற்றியை நிகழ்த்தியவர் நம் குலத்தோன்றல் ஆஸ்திக முனிவர். இது ஆடிமாத ஐந்தாம் வளர்பிறைநாள். இனி இந்நாள் நாகர்குலத்தின் விழவுநாளாக இனிமேல் அமைவதாக. இதை நாகபஞ்சமி என்று நாகர்களின் வழித்தோன்றல்கள் கொண்டாடுவதாக” என்றார்.
VENMURASU_EPI_49_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
அங்கிருந்த அனைவரும் தங்கள் கைகளைத் தூக்கி அதை ஆதரித்தனர். நாகர்குலத்தலைவர்கள் தங்கள் கோல்களை தூக்கி மும்முறை ‘ஆம் ஆம் ஆம்’ என்றனர். முதுநாகர் “ஆதிப்பெருநாகங்கள் மண்ணில் வாழ்ந்த மனிதர்களை கூடிப்பெற்ற ஆயிரத்து எட்டு பெருங்குலங்கள் பாரதவர்ஷத்தில் உள்ளன. அவற்றில் முதுபெருங்குலமான நம்மை செஞ்சு குடியினர் என்றழைக்கிறார்கள். நாம் வாழும் இந்த மலை புனிதமானது. தவம்செய்யாதவர் இங்கே காலடிவைக்கமுடியாது. ஆகவே இது முனிவர்களால் ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படுகிறது.”
“பெருந்தவத்தாரான ஜரத்காரு முனிவர் தனக்குகந்த துணைவியைத் தேடி இங்கு வந்தார். இந்த ஸ்ரீசைலத்தின் கரையில், கிருஷ்ணை நதிக்கரையில் அவர் நம் குலத்துப்பெண்ணை மணந்து ஆஸ்திக முனிவரின் பிறப்புக்குக் காரணமாக ஆனார். அப்பிறவிக்கான நோக்கமென்ன என்பது இன்று நமக்குத் தெளிவாகியிருக்கிறது. நாகர்களே நம் குலம் பெருமைகொண்டது. இம்மண்ணில் நாகர்குலம் வாழும்வரை நம் பெருமை வாழும்.” அனைவரும் சேர்ந்து குரலெழுப்பினர்.
“ஜரத்காருவின் துணைவியாகிய நம் குலத்து தவப்பெண் மானசாதேவி நாகங்களின் தலைவனான நாகபூஷணனை எண்ணி தவம்செய்து அவன் வரம் பெற்றவள். அவன் வாழும் கைலாசத்துக்குச் சென்று மீண்டவள். அவளை பாதாளநாகமான வாசுகி தன் சோதரியாக ஏற்றுக்கொண்டார். ஜனமேஜயமன்னரின் வேள்வியில் பாதாளநாகங்கள் அழியத்தொடங்கியபோது இங்கே அவரே வந்து தன் தங்கையிடம் அவள் மகனை அனுப்பும்படி ஆணையிட்டார். மண்ணைப்பிளந்து மாபெரும் கரும்பனை போல வாசுகி எழுந்த வழி இன்னும் நம் வனத்தில் திறந்திருக்கிறது. அந்த அஹோபிலத்தை நாம் இன்று நம் ஆலயமாக வணங்குகிறோம். அதனுள் செல்லும் கரிய இருள் நிறைந்த பாதைவழியாக பாதாளநாகங்களுக்கு நம் பலிகளை அளிக்கிறோம்.”
“நாகர்களே ஜனமேஜயன் என்னும் எளிய மன்னர் ஏன் பாதாளவல்லமைகளாகிய நாகங்களை அழிக்கமுடிந்தது?” என்று முதுநாகர் கேட்டார். “நாகங்கள் மீது அவர்கள் மூதன்னை கத்ருவின் தீச்சொல் ஒன்றிருக்கிறது நாகர்களே. நாககுலத்தவராகிய நம்மனைவர்மீதும் அந்தத் தீச்சொல் உள்ளது.” முதுநாகர் சொல்லத்தொடங்கினார்.
முதற்றாதை தட்சகரின் மகளும் பெருந்தாதை கஸ்யபரின் மனைவியுமான அன்னை கத்ரு விண்ணையும் மண்ணையும் ஆயிரத்தெட்டு முறை சுற்றிக்கிடக்கும் மாபெரும் கருநாகம். அவள் கண்கள் தண்ணொளியும் குளிரொளியும் ஆயின. அவள் நாக்கு நெருப்பாக மாறியது. அவள் மூச்சு வானை நிறைக்கும் பெரும் புயல்களாகியது. அவள் தோலின் செதில்களே விண்ணகத்தின் மேகத்திரள்களாயின. அவள் சருமத்தின் ஒளிப்புள்ளிகளே முடிவற்ற விண்மீன் தொகைகளாக ஆயின. அவள் அசைவே புடவியின் செயலாக இருந்தது. அவளுடைய எண்ணங்களே இறைவல்லமை என இங்கு அறியப்படலாயிற்று. அவள் வாழ்க!
ஊழிமுதல்காலத்தில் அன்னை ஆயிரம் மகவுகளை முட்டையிட்டுப் பெற்றாள். அவை அழியாத நாகங்களாக மாறி மூவுலகையும் நிறைத்தன. அந்நாளில் ஒருமுறை மூதன்னை கத்ரு விண்ணில் நெடுந்தொலைவில் ஒரு சின்னஞ்சிறிய ஒளிப்புள்ளி போல நகர்ந்து சென்ற இந்திரனின் புரவியான உச்சைசிரவஸின் பேரொலியைக் கேட்டாள். அவளுடைய சோதரியும் வெண்ணிறம் கொண்ட நாகமும் ஆகிய அன்னை வினதையிடம் அது என்ன என்று வினவினாள். பேரொலி எழுப்பும் அதன் பெயர் உச்சைசிரவஸ். இந்திரனின் வாகனமாகிய அது இந்திரநீலம், கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், பொன், சிவப்பு நிறங்களில் அமைந்த தலைகளுடன் விண்ணில் பறந்துசெல்கிறது” என்று வினதை பதில் சொன்னாள்.
“அதன் வால் என்ன நிறம்?” என்று அன்னை கத்ரு கேட்டாள். “அதன் வால் வெண்ணிற ஒளியாலானது” என்று வினதை பதில் சொன்னாள். ‘ஒளியில் இருந்து வண்ணங்கள் எப்படி வரமுடியும்? இருட்டே முழுமுதன்மையானது. வண்ணங்களை உருவாக்கும் முடிவற்ற ஆழம் கொண்டது. அங்கிருந்தே புவிசமைக்கும் ஏழு வண்ணங்களும் வருகின்றன” என்றாள் மூதன்னை கத்ரு. அதை பார்த்துவிடுவோம் என அவர்கள் இருவரும் முடிவெடுத்தனர். அப்போட்டியில் வென்றவருக்கு தோற்றவர் அடிமையாக இருக்கவேண்டுமென வஞ்சினம் கூறினர்.
உச்சைசிரவஸ் விண்ணாளும் பேரொளிக்கதிர். அதன் ஏழுவண்ணங்களும் இன்மையில் இருந்தே எழுந்தன. அதை ஒளியாகக் காணும் கண்கள் வினதைக்கும் இருளாகக் காணும் கண்கள் அன்னை கத்ருவுக்கும் முடிவிலா புடவிகளை வைத்து விளையாடும் முதற்றாதையால் அளிக்கப்பட்டிருந்தன. அங்கே வாலென ஏதுமில்லை என உணர்ந்த அன்னை தன் ஆயிரம் மைந்தர்களிடமும் அங்கே சென்று வாலாகத் தொங்கும்படி ஆணையிட்டாள். அவர்களில் விண்ணில் வாழ்ந்த நாகங்கள் அன்றி பிற அனைத்தும் அதைச்செய்ய மறுத்துவிட்டன. “அன்னையே நாங்கள் மும்முறை மண்ணைக்கொத்தி உண்மைக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று ஆணையிட்டிருக்கிறோம். நாங்கள் பொய்யைச் சொல்லமுடியாது” என்றன.
விண்ணக நாகங்கள் கார்க்கோடகன் என்னும் நாகத்தின் தலைமையில் அன்னையிடம் “அன்னையே நன்றுதீது உண்மைபொய் என்னும் இருமைகளுக்கு அப்பால் உள்ளது அன்னையின் சொல். உன் ஆணையை நிறைவேற்றுவோம்” என்றன. அவ்வண்ணமே அவை பறந்துசென்று விண்ணில் நீந்தி உச்சைசிரவஸின் வாலாக மாறி பல்லாயிரம் கோடி யோஜனை தொலைவுக்கு இருள்தீற்றலாக நீண்டு கிடந்தன.
உச்சைசிரவஸைப் பார்ப்பதற்காக மூதன்னையர் இருவரும் அது செல்லும் வானகத்தின் மூலைக்குப் பறந்து சென்றனர். விண்மீன்கொப்புளங்கள் சிதறும் பால்திரைகளால் ஆன விண்கடலைத் தாண்டிச்சென்றனர். விண்நதிகள் பிறந்து சென்றுமடியும் அந்தப் பெருங்கடலுக்குள்தான் ஊழிமுடிவில் அனைத்தையும் அழித்து தானும் எஞ்சாது சிவன் கைகளுக்குள் மறையும் வடவைத்தீ உறைகிறது. அதன் அலைகளையே தெய்வங்களும் இன்றுவரை கண்டிருக்கிறார்கள். அதை அசைவிலாது கண்டது ஆதிநாகம் மட்டுமே. அது வாழ்க!
அப்பெருங்கடல்மேல் பறந்தபடி மூதன்னையர் கத்ருவும் வினதையும் உச்சைசிரவஸ் வான்திரையைக் கிழிக்கும் பேரொலியுடன் செல்வதைக் கண்டனர். அதன் வால் கருமையாக இருப்பதைக் கண்ட வினதை கண்ணீருடன் பந்தயத்தில் தோற்றதாக ஒப்புக்கொண்டாள். ஆயிரம்கோடி வருடம் தமக்கைக்கு அடிமையாக இருப்பதாக அவள் உறுதி சொன்னாள். அன்னையரின் அலகிலா விளையாட்டின் இன்னொரு ஆடல் தொடங்கியது.
நாகர்களே, தன் சொல்லைக் கேட்காத பிள்ளைகளை கத்ரு சினந்து நோக்கினாள். “நன்றும் தீதுமென இங்குள அனைத்துமே அன்னையின் மாயங்களே என்றறியாத மூடர்கள் நீங்கள். நன்றைத் தேர்வுசெய்ததன் வழியாக நீங்கள் உங்கள் ஆணவத்தையே முன்வைத்தீர்கள். நான் என நீங்கள் உணரும்போதெல்லாம் அந்த ஆணவம் உங்களில் படமாக விரிவதாக. ஆணவத்தின் முகங்களாகிய காமமும் குரோதமும் மோகமும் உங்கள் இயல்புகளாகுக. பறக்கும் திறனை நீங்கள் இழப்பீர்கள். தவழ்ந்துசெல்லும் வேகம் மட்டுமே கொண்டவர்களாவீர்கள். உங்களுக்குரியதென நீங்கள் கொண்டுள்ள அறத்தால் என்றென்றும் கட்டுண்டவர்களாவீர்கள். எவனொருவன் காமகுரோதமோகங்களை முற்றழிக்க முயல்கிறானோ அவன் முன் உங்கள் ஆற்றல்களையெல்லாம் இழப்பீர்கள். உங்கள் தனியறத்தால் இழுக்கப்பட்டவர்களாக நீங்களே சென்று அவன் வளர்க்கும் வேள்விநெருப்பில் வெந்து அழிவீர்கள்” என்று அன்னை தீச்சொல்லிட்டாள்.
“நாகர்குலமக்களே, நாமும் நம் காமகுரோதமோகங்களால் கட்டுண்டவர்களாக இருக்கிறோம். நாமும் நமது அறத்தின் அடிமைகளாக வாழ்கிறோம். மூதன்னையின் தீச்சொல் நம்மையும் யுகங்கள்தோறும் தொடர்கிறது” முதுநாகர் சொன்னார். “அன்று அந்தத் தீச்சொல் கேட்டு நடுங்கி நின்ற மைந்தர்களை நோக்கி முதற்றாதை காசியபர் சொன்னார். மைந்தர்களே நீங்கள் அழியமாட்டீர்கள். புடவி என ஒன்று உள்ளவரை நீங்களும் இருப்பீர்கள். எந்தப்பேரழிவிலும் எஞ்சியிருக்கும் ஒருதுளியில் இருந்து நீங்கள் முழுமையாகவே மீண்டும் பிறந்தெழுவீர்கள்.”
“அவ்வாறே இன்று ஜனமேஜயன் வேள்வியில் பெருநாகங்கள் எரிந்தழிந்தன. நம்குலத்தின் சொல்லால் அவர்களில் மண்ணாளும் பெருநாகமான தட்சன் மீட்கப்பட்டார். அவரிலிருந்து அழியாநாகங்களின் தோன்றல்கள் பிறப்பர். நிழலில் இருந்து நிழல் உருவாவது போல அவர்கள் பெருகி மண்ணையும் பாதாளத்தையும் நிறைப்பர். ஆம் அவ்வாறே ஆகுக!” முதுநாகர் சொல்லி முடித்ததும் நாகர்கள் தங்கள் நாகபடம் எழுந்த யோகதண்டுகளைத் தூக்கி ‘ஆம்! ஆம்! ஆம்’ என ஒலியெழுப்பினர்.
நாகங்களுக்கான பூசனை தொடங்கியது. மன்றுமேடையில் பதிட்டை செய்யப்பட்டிருந்த நாகச்சிலைகளுக்கு மஞ்சள்பூசி நீலமலர்மாலைகள் அணிவித்து கமுகுப்பூ சாமரம் அமைத்து பூசகர் பூசை செய்தனர். இரண்டு பெரிய யானங்களில் நீலநீர் நிறைத்து விலக்கிவைத்து அவற்றை நாகவிழிகள் என்று உருவகித்து பூசையிட்டனர். நாகசூதர் இருவர் முன்வந்து நந்துனியை மீட்டி நாகங்களின் கதைகளைப் பாடத்தொடங்கினர். பாடல் விசையேறியபோது அவர்கள் நடுவே அமர்ந்திருந்த மானசாதேவியின் உடலில் நாகநெளிவு உருவாகியது. அவள் கண்கள் இமையாவிழிகளாக ஆயின. அவள் மூச்சு சர்ப்பச்சீறலாகியது.
“காலகனின் மகளாகிய நான் மானசாதேவி. ஜகல்கௌரி, சித்தயோகினி, நாகபாகினி. எந்தை தட்சன் உயிர் பெற்றான். வளர்கின்றன நாகங்கள். செழிக்கின்றது கீழுலகம்” என அவள் சீறும் குரலில் சொன்னாள். இரு தாலங்களிலும் இருந்த நீலநீர் பாம்புவிழிகளாக மாறுவதை நாகர்கள் கண்டனர். நந்துனியும் துடியும் முழங்க அவர்கள் கைகூப்பினர்.

2/25/14

பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்[ 6 ]

பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்[ 6 ]
பாலையில் இரவில் வானம் மட்டுமே இருந்தது. இருளில் நடக்கையில் வானில் நீந்தும் உணர்வெழுந்தது. ஆனால் மண்ணை மட்டுமே பார்த்து சிறிது நடந்தால் மண்ணில் ஓர் ஒளி இருப்பதை காணமுடிந்தது. புதர்க்கூட்டங்களெல்லாம் இருள்குவைகளாக ஆகி பாதை மங்கித்தெரிந்தது. பீஷ்மர் அனிச்சையாக நின்றார். மெல்லிய ஒளியுடன் ஒரு நாகம் நெளிந்து சென்றது. பெருமூச்சுடன் பொருளில்லாது ஓடிய எண்ணங்களில் இருந்து விடுபட்டு இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு சுற்றிலும் பார்த்தார்.
நீர்வளம் மிக்க மண்ணில் பிறந்து வளர்ந்த எவருக்கும் பாலையைப் பார்க்கையில் வரும் எண்ணங்கள்தான் முதல்முறையாக அந்த வெற்றுநிலவிரிவைப் பார்க்கையில் அவருக்கும் எழுந்தன. கல்லில் செதுக்கப்பட்ட பறைவாத்தியத்தை பார்ப்பதுபோல. ஓவியத்தில் வரையப்பட்ட உணவைப்போல. பயனற்றது, உரையாட மறுப்பது, அணுகமுடியாதது. பிறிதொரு குலம் வணங்கும் கனியாத தெய்வம்.
அலையலையாக காற்று மண்ணில் படிந்திருக்க வெந்த வாசனையை எழுப்பியபடி பொன்னிறத்தில் பரவி தொடுவான்கோட்டில் வளைந்துகிடந்த நிலத்தைப் பார்த்தபோது ஏன் மனதை துயரம் வந்து மூடுகிறதென்று அவருக்குத் தெரியவில்லை. அறிந்தவை எல்லாம் பொருளிழந்து நம்பியவை எல்லாம் சாரமிழந்து அகம் வெறுமைகொண்டது. மண் மட்டுமே எஞ்ச அவர் இல்லாததுபோலத் தோன்றியது. வணிகக்கூட்டத்துடன் நடந்தபோது மெல்ல எதிர்ப்பக்கமாகச் சுழன்ற மண் பெரும்சுழி ஒன்று என மயங்கச்செய்தது.
பின்பு அவர் களைத்து ஒரு பிலு மரத்தடியில் அமர்ந்து ஏதோ எண்ணங்களுடன் கையில் அந்த மண்ணை அள்ளி மெதுவாக உதிர்த்தபின் கைவெள்ளையைப் பார்த்தபோது சிறிய விதைகள் ஒட்டியிருப்பதைக் கண்டார். குனிந்து அந்த மண்ணை அள்ளி அது முழுக்க விதைகள் நிறைந்திருப்பதை அறிந்து வியந்தார். நிமிர்ந்து கண் தொடும் தொலைவுவரை பரந்திருந்த மண்ணைப்பார்த்தபோது அது ஒரு பெரும் விதைக்களஞ்சியம் என்ற எண்ணம் வந்தது. என்றேனும் வடவை நெருப்பு சினந்து மண்ணிலுள்ள அனைத்துத் தாவரங்களும் அழிந்துபோய்விட்டால் பிரஜாபதியான பிருது வருணனின் அருளுடன் அந்தப் பாலைமண்ணில் இருந்தே புவியை மீட்டுவிடமுடியும்.
ஆனால் அது வேறு புவியாக இருக்கும். முற்றிலும் வேறு மரங்கள் வேறு செடிகள் வேறு உயிர்கள் வேறு விதிகள் கொண்ட புவி. பாலைநிலம் என்பது ஒரு மாபெரும் நிகழ்தகவு. இன்னும் நிகழாத கனவு. யுகங்களின் அமைதியுடன் காத்திருக்கும் ஒரு புதிய வாழ்வு. எழுந்து நின்று அந்தமண்ணைப் பார்த்தபோது திகைப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. உறங்கும் காடுகள். நுண்வடிவத் தாவரப்பெருவெளி. மண்மகளின் சுஷுப்தி. அந்தப் பொன்னிறமண் மீது கால்களை வைத்தபோது உள்ளங்கால் பதறியது.
ஐம்பதுநாட்களுக்குள் பாலைநிலத்திலேயே பிறந்து வளர்ந்த ஒரு மிருகம் ஆகிவிட்டார். காற்றுவீசும் திசையில் இருந்து வரப்போகும் மணல்புயலை உய்த்தறிய முடிந்தது. வாசனையைக் கொண்டு நீர் இருக்குமிடத்துக்குச் செல்ல முடிந்தது. அவரை அணுகிய பாலைவன உடும்பு தன் சிறு கண்களை நீர்நிரம்பும் பளிங்குமணிக் குடுவைகள் போல இமைத்து கூர்ந்து நோக்கியபின் அவசரமில்லாமல் கடந்து சென்றது. அவர் உடலிலும் தலையிலும் பாலைவனத்து மென்மணல் படிந்து அவர் அம்மண்ணில் படுத்தால் பத்து காலடி தொலைவில் அவரை எவருமே பார்க்கமுடியாதென்று ஆனது.
இருளில் பாலைநிலம் மெல்ல மறைந்து ஒலிகளாகவும் வாசனையாகவும் மாறிவிட்டிருந்தது. அது பின்வாங்கிப்பின்வாங்கி சுற்றிலும் வளைந்து சூழ்ந்திருந்த தொடுவானில் மறைகிறது என்று அவர் முதலில் நினைத்தார். அந்தியில் தொடுவானம் ஒரு செந்நிறமான கோடாக நெடுநேரம் அலையடித்துக்கொண்டிருக்கும். பின்பு பாலை இருளுக்கும் இருளுக்குமான வேறுபாடாக ஆகும். மெல்ல கண்பழகியதும் தொலைவு என ஏதுமில்லாமல் செங்குத்தாக சூழ்ந்திருக்கும் சாம்பல்நிறப் பரப்பாக பாலைநிலம் உருமாறும்.
பின்னர் அவர் அறிந்தார், பாலைநிலம் அவருக்குள்தான் சுருண்டு சுருங்கி அடர்ந்து ஒரு ரசப்புள்ளியாக மாறிச் சென்று அமைகிறது என்று. எந்த இருளில் கண்களை மூடினாலும் பொன்னுருகிப் பரந்த பெருவெளியை பார்த்துவிடமுடியும். அங்கே துயிலும் விதைகளில் ஒரு விதைபோல சென்றுகொண்டிருக்கும் மண்மூடிய நெடியமனிதனை பார்த்துவிடமுடியும். தனிமையில் அவன் அடையும் சுதந்திரத்தை. அவன் முகத்தில் நிறைந்திருக்கும் புன்னகையை.
பீஷ்மர் கால் ஓய்ந்து ஒரு மரத்தடியில் அமர்ந்தார். இடையில் இருந்த நீர்க்கொப்பரையை எடுத்து உதடுகளையும் வாயையும் மட்டும் நனைத்துக்கொண்டார். மணலில் மெல்லப் படுத்து கைகால்களை நீட்டிக்கொண்டார். இரு தோள்களில் இருந்தும் எடை மண்ணுக்கு இறங்குவதை உணர்ந்தார். சூதர் சொன்னது நினைவுக்கு வந்தது ‘அகலமான தோள்கள் கொண்டவர் நீங்கள், வீரரே. இருபத்தைந்தாண்டுகாலமாக அவற்றில் தம்பியரைச் சுமந்து வருகிறீர்கள்.’ பீஷ்மர் புன்னகைசெய்தபோது சூதர் சிரித்துக்கொண்டு ‘சுமைகளால் வடிவமைக்கப்பட்ட உடல்கொண்டவர்கள் பின்பு சுமைகளை இறக்கவே முடியாது’ என்றார்.
அவர் என்ன சொல்லப்போகிறார் என உணர்ந்தவர்போல பீஷ்மர் போதும் என்று கைகாட்டினார். ஆனால் அவர் எவராலும் கட்டுப்படுத்தப்படக்கூடியவர் அல்ல என்று தெரிந்தது. ‘உங்கள் இருதோள்களும் ஒழிவதே இல்லை வீரரே. விழியற்றவனையும் நிறமற்றவனையும் தூக்கிக்கொள்ளலாம்…’ அவரே அதில் மகிழ்ந்து ‘ஆகா என்ன ஒரு அரிய நகைச்சுவை. விழியற்றவனுக்கு கண்களில் நிறங்கள் இல்லை. விழியிருப்பவனுக்கு உடலில் நிறங்கள் இல்லை… ஆகாகாகா!’ இருகைகளையும் ஒன்றுடன் ஒன்று ஓங்கி அறைந்தபடி பீஷ்மர் எழுந்துவிட்டார்.
‘என்னை கொல்லப்போகிறீர்களா?’ என்று இமையாவிழிகளுடன் நாகசூதர் கேட்டார். பீஷ்மர் திகைப்புடன் கைகளை தொங்கவிட்டார். ‘எத்தனை காலமாக நாகங்களைக் கொல்ல ஷத்ரியர் முயன்று வருகிறார்கள் வீரரே? ஷத்ரியகுலத்தின் கடைசிக்கனவே அதுதானோ?’ பீஷ்மர் ‘உங்களுடைய தட்சிணையை நான் அளித்துவிட்டேன்’ என்று சொல்லி திரும்பி நடந்தார்.
முதுநாகர் பின்னால் ஓசையிட்டுச் சிரித்தார் ‘நாகவிஷத்தில் தன்னை அறிய என்னைத் தேடிவந்தவன் நீயல்லவா? நாகங்கள் உன்னைத்தேடிவரும்…உங்கள் குலத்தையே தேடிவருவோம்….ஷத்ரிய இனத்தையே நாங்கள் சுருட்டிக்கவ்வி விழுங்குவோம்…’ அப்பால் நடந்துசென்ற பீஷ்மர் கால்கள் தளர்ந்தவர் போல நின்றார். திரும்பி நாகரின் மின்னும் கண்மணிகளைப் பார்த்தார். நாகருக்குப்பின்னால் இருண்ட சர்ப்பங்களின் நெளிவைப் பார்க்கமுடிந்தது. அது விழிமயக்கா என எண்ணியகணம் அங்கே இருள் மட்டும் தொங்கிக்கிடந்தது.
‘நல்லூழினால் நீயும் அப்போது வாழ்வாய். நானோ அழியாதவன். அங்கே வந்து உன்னை சந்திக்கிறேன்’ என்றார் நாகர். பீஷ்மர் மிக அடங்கி அவருக்குள் என ஒலித்த குரலில் ‘எங்கே?’ என்றார். ‘படுகளத்தில்…வேறெங்கே?’ நாகரின் சிரிப்பு ஊன் கிழித்து உண்ணும் கழுதைப்புலிகளின் எக்காளம் போல ஒலித்தது. பீஷ்மரின் கைகள் செயலிழந்து தொங்கின. தலைகுனிந்தவராக நடந்துவிலகினார்.
அவர் எழப்போனபோது தொலைவில் ஒரு காலடி ஓசை கேட்டது. காதுக்குக் கேட்பதற்குள்ளாகவே நிலத்தில் படிந்திருந்த உடலுக்கு அது கேட்டது. அவர் எழுந்து அமர்ந்து தன் கையை நீட்டி அருகே நின்றிருந்த முட்புதரில் இருந்து ஒரே ஒரு நீளமான முள்ளை ஒடித்துக்கொண்டு பார்த்தார். பாலையின் மீது மெல்லிய தடம்போலக் கிடந்த காலடிப்பாதையில் அப்பால் ஒருவன் வருவது தெரிந்தது. அவனுடைய காலடிஓசை கனத்ததாகவும் சீராகவும் இருந்ததிலிருந்து அவன் போர்வீரன் என்பதும் எடைமிக்கவன் என்பதும் தெரிந்தது.
நெருங்கி வந்தவன் அவரைக் கண்டுகொண்டான். ஆனால் ஒருகணம்கூட அவனுடைய காலடிகள் தயங்கவில்லை. அவன் கைகள் வில்லைநோக்கிச் செல்லவுமில்லை. அதே வேகத்தில் அவரைநோக்கி வந்தவனின் கண்கள் மட்டும் ஒளிகொண்டு அருகே நெருங்கின. கூந்தல் காற்றில் பறந்துகொண்டிருந்தது. காதுகளில் மெல்ல ஒளிமின்னும் குண்டலங்கள் அவன் ஷத்ரியன் என்று காட்டின. அருகே வந்ததும் அவன் முலைகளையும் இடையையும் பார்த்த பீஷ்மர் அவன் யார் என்று புரிந்துகொண்டார். புன்னகையுடன் தன் கையில் இருந்த முள்ளை கீழே வீசினார்.
“வணங்குகிறேன் வீரரே” என்றபடி சிகண்டி அருகே வந்தான். “உத்தரபாஞ்சாலத்தைச் சேர்ந்த என் பெயர் சிகண்டி. நான் மூலத்தான நகரிக்கு சென்று கொண்டிருக்கிறேன்.” பீஷ்மர் “நலம்பெறுவாயாக!” என்றார். “என் பெயர் வாகுகன். நான் திருவிடநாட்டைச் சேர்ந்த ஷத்ரியன். கான்புகுந்தபின் புறநாட்டுப் பயணத்தில் இருக்கிறேன்.” சிகண்டி “நான் தங்களுடன் பயணம் செய்யலாமல்லவா?” என்றான். “ஆம், பாலைவனம் போல அன்னியர்களை நண்பர்களாக ஆக்கும் இடம் வேறில்லை” என்றார் பீஷ்மர்.
VENMURASU_EPI_48
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
அவர்கள் நடக்கத் தொடங்கினர். “தாங்கள் துறவுபூண்டுவிட்டீர்களா?” என்றான் சிகண்டி . “ஆம், எது மெய்யான நாடோ அதைத் தேடுகிறேன். எது நிலையான அரியணையோ அதை அடையவிரும்புகிறேன்” என்றார் பீஷ்மர். சிகண்டி சிரித்து “தாங்களும் ரிஷியாக அறியப்படப்போகிறீர்கள்” என்றான். “பாரதவர்ஷத்தில் ரிஷியாக ஆசைப்படாத எவருமே இல்லை என நினைக்கிறேன்.”
பீஷ்மர் சிரித்துக்கொண்டு “நீயும்தான் இல்லையா?” என்றார். “இல்லை வீரரே. ஒருவேளை இந்த பாரதவர்ஷத்திலேயே ரிஷியாக விரும்பாத முதல் மனிதன் நான் என நினைக்கிறேன்” என்றபின் இருளில் ஆவிநாற்றம் வீச வாய்திறந்து “என்னை நீங்கள் மனிதன் என ஒப்புக்கொள்வீர்கள் என்றால்” என்றான். பீஷ்மர் பதில் சொல்லாமல் நடந்தார். சிகண்டி “வீரரே, நீங்கள் அஸ்தினபுரியின் பிதாமகரான பீஷ்மரை அறிவீர்களா?” என்றான்.
“பாரதவர்ஷத்தில் உள்ள ஒவ்வொருவரும் அறிந்ததை மட்டுமே நானும் அறிவேன்” என்றார் பீஷ்மர் . “அப்படியென்றால் நீங்கள் அவரால் கவர்ந்துவரப்பட்டு புறக்கணிக்கப்பட்டு கொற்றவைக்கோலம் கொண்டு மறைந்த அம்பாதேவியை அறிந்திருப்பீர்கள்.” பீஷ்மர் “ஆம்” என்றார். சிகண்டி “அவர் என் அன்னை. ஆகவே நான் அவரேதான்” என்றான். “என் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்துக்கும் ஒன்றே இலக்கு.” சிகண்டியின் குரல் இருளில் மிக அருகே மிக மெல்லியதாக ஒலித்தது. “பீஷ்மரின் நெஞ்சைப் பிளந்து அவர் இதயத்தைப் பிய்த்து என் கையில் எடுப்பது. அது என் அன்னை எனக்கிட்ட ஆணை!” அவன் மூச்சுக்கும் மட்கிய மாமிசத்தின் வெம்மையான வாசனை இருந்தது.
“நீ அதற்கு அனைத்து தனுர்வேதத்தைக் கற்று கரைகடக்க வேண்டுமே..” என்றார் பீஷ்மர். “ஆம், ஆகவேதான் நான் பாரத்வாஜரின் மாணவரான அக்னிவேசரிடம் மாணவனாகச் சேர்ந்தேன்” என்றான் சிகண்டி. “அவரிடம் நான் தொடககப் பாடங்களை கற்றுக்கொண்டேன். பயிற்சியின்போது என்னுள் பீஷ்மர் மீதான சினம் நிறைந்திருப்பதைக் கண்டு அவர் என்னை பீஷ்மரை நன்கறிந்துவரும்படி ஆணையிட்டு அனுப்பினார். ஆகவேதான் நான் இப்பயணத்தைத் தொடங்கினேன்.”
பீஷ்மர் “இங்கே எதற்காக வந்தாய்?” என்றார். “நான் தண்டகர் என்னும் நாகசூதரைப் பார்ப்பதற்காக இங்கே வந்தேன்” சிகண்டி சொன்னான். பீஷ்மர் வெறுமனே திரும்பிப்பார்த்தார். “நான் யாரென அவர் சொல்வார் என்று கேள்விப்பட்டேன். நான் யாரென அறிவது என் எதிரியை அறிவதன் முதல் படி என்றார்கள். ஆகவே சைப்ய நாட்டுக்குச் சென்று அங்கிருந்து இங்கே வந்தேன்.”
“நாகசூதர் நீதான் சிகண்டி என்று சொல்லியிருப்பார் இல்லையா?” என்றார் பீஷ்மர் . சிகண்டி அந்தச்சிரிப்பை உணராமல் தலையை அசைத்தான். தனக்குள் சொல்லிக்கொள்பவன் போல “நான் அவரது யானத்தில் நெளிந்த கருநீல நீரைப் பார்த்தேன். அலையடங்கியதும் அதில் தெரிந்த என் முகம் மறைந்து அஸ்தினபுரியின் பீஷ்மரின் முகம் தெரிந்தது” என்றான்.
காற்றில் பறந்த மேலாடையை அள்ளி உடலுடன் சுற்றியபடி “அவர்தான் உன் எதிரியா?” என்றார் பீஷ்மர். அச்செயல்மூலம் அவர் தன்னை முழுமையாகவே மறைத்துக்கொண்டார். “கனவிலும் விழிப்பிலும் எதிரியை எண்ணுபவன் அவனாகவே ஆகிவிடுவதில் என்ன வியப்பு?” என்றார் பீஷ்மர். “நான் அவராக ஆகவில்லை வீரரே. அவரும் நானும் ஒன்றே என உணர்ந்தேன்” என்றான் சிகண்டி.
பீஷ்மர் “அதுவும் முற்றெதிரிகள் உணரும் ஞானமே” என்றார். சிகண்டி அதை கவனிக்காமல் “நான் கண்டது பீஷ்மரின் இளவயது முகம்” என்றான். “நான் கூர்ந்து பார்ப்பதற்குள் அது மறைந்தது. பீஷ்மரின் வயது பதினேழு. அப்போதுதான் தந்தைக்குச் செய்த ஆணையால் தன்னையும் என்னைப்போல உள்ளத்தால் அவர் ஆக்கிக்கொண்டார்.” பீஷ்மர் நின்று “உன்னைப்போலவா?” என்றார்.
“ஆம். நானும் அவரும் உருவும் நிழலும்போல என்று நாகர் சொன்னார். அல்லது ஒன்றின் இரு நிழல்கள் போல. அவர் செய்ததைத்தான் நானும் செய்தேன்” என்றான் சிகண்டி . “அவரில்லாமல் நான் இல்லை. அவர் ஒரு நதி என்றால் அதில் இருந்து அள்ளி எடுக்கப்பட்ட ஒரு கை நீர்தான் நான்.” சிகண்டி சிலகணங்கள் சிந்தித்தபின் “வீரரே, ஒரு பெரும்பத்தினி கங்கையில் ஒரு பிடி நீரை அள்ளி வீசி கங்கைமேல் தீச்சொல்லிட்டால் என்ன ஆகும்? கங்கைநீர் கங்கையை அழிக்குமா?”
பீஷ்மர் புன்னகையுடன் “தெய்வங்களும் தேவரும் முனிவரும் மூவேதியரும் பத்தினியரும் பழிசுமந்தோரும் தீச்சொல்லிடும் உரிமைகொண்டவர்கள் என்று நூல்கள் சொல்கின்றன” என்றார். சிகண்டி அவர் சொற்களை கவனித்ததாகத் தெரியவில்லை. “அழித்தாகவேண்டும். இல்லையேல் புல்லும்புழுவும் நம்பிவாழும் பேரறம் ஒன்று வழுவுகிறது. அதன்பின் இவ்வுலகமில்லை. இவ்வுலகின் அவியேற்றுவாழும் விண்ணகங்களும் இல்லை” என தனக்குள் போல சொல்லிக்கொண்டான்.
“பீஷ்மரைப் பார்த்ததும் உன் சினம் தணிந்துவிட்டதா?” என்று பீஷ்மர் கேட்டார். “ஆம், என் முகமாக அவரைப் பார்த்த அக்கணத்திலேயே நான் அவர்மேல் பேரன்புகொண்டுவிட்டேன். அவர் உடலில் ஒரு கரம் அல்லது விரல் மட்டுமே நான்” என்றான். “நாகர் என்னிடம் சொன்னார், அவரைச் சந்திக்கும் முதற்கணம் அவர் பாதங்களைத் தொட்டு வணங்குவேன் என்று. அவருக்கும் எனக்குமிடையே இருப்பது என் அன்னையின் பெருங்காதல் என்று அவர் சொன்னார்.”
பீஷ்மர் ஒன்றும் சொல்லாமல் இருளில் நடந்தார். “ஆனால், அவரைக் கொல்லவேண்டுமென்ற என் இலக்கு இன்னும் துல்லியமாகியிருக்கிறது. சினத்தால் அல்ல, வேகத்தாலும் அல்ல. நான் இருக்கிறேன் என்பதனாலேயே நான் அவரைக் கொல்வதும் இருக்கிறது. அந்த இச்சை மட்டுமே நான். பிறிதொன்றில்லை.”
பீஷ்மர் பெருமூச்சுவிட்டார். “ஆம், அதுவே முறையாகும்” என்றார். சிகண்டி “வீரரே, நான் உங்களிடம் இவற்றையெல்லாம் சொன்னதற்குக் காரணம் ஒன்றே. தாங்கள் அகத்தியரின் மாணவர் என்று நினைக்கிறேன்” என்றான். பீஷ்மர் “எப்படி அறிந்தாய்?” என்றார். “தாங்கள் தனுர்வித்தையில் தேறியவர் என நான் தொலைவிலேயே கண்டுகொண்டேன்.”
பீஷ்மர் “ம்?” என்றார். “என் விழிகள் இருளில் பகலைப்போலவே தெளிவாகப் பார்க்கக்கூடியவை. நான் வரும் ஒலியைக் கேட்டதுமே நீங்கள் கைநீட்டி அருகே இருந்த முள் ஒன்றைப் பிடுங்கிக் கொண்டீர்கள் என்பதைக் கண்டேன். உங்களிடம் வேறு ஆயுதமே இல்லை” என்றான் சிகண்டி.
பீஷ்மர் “நன்கு கவனிக்கிறாய்” என்று சொன்னார். “வருவது வழிதவறி பாலைக்குவந்த மதம்கொண்ட வேழமாக இருக்கலாம். விஷவில் ஏந்திய மலைக்கள்வனாக இருக்கலாம். உங்கள் முதல் எதிரியாகக்கூட இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு முள்ளைமட்டும்தான் எடுத்துக்கொண்டீர்கள். அப்படியென்றால் நீங்கள் வல்கிதாஸ்திர வித்தை கற்றவர். ஒரு சிறுமுள்ளையே அம்பாகப் பயன்படுத்தக்கூடியவர். ஒரு முள்தைத்தாலே மனிதனைச் செயலிழக்கச்செய்யும் ஆயிரத்தெட்டு சக்திபிந்துக்களைப்பற்றி அறிந்தவர்.”
பீஷ்மர் “ஆம்” என்றார். சிகண்டி நின்று கைகூப்பி “நான் அதை உங்களிடமிருந்து கற்க விழைகிறேன் குருநாதரே. என்னை தங்கள் மாணவராக ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்றான். “அதன்பொருட்டே தங்களிடம் என்னைப்பற்றி அனைத்தையும் சொன்னேன்.” பீஷ்மர் “இளைஞனே, நான் எவரையும் மாணவனாக ஏற்கும் நிலையில் இல்லை. அனைத்தையும் துறந்து காட்டுக்கு வந்துவிட்டவன் நான்” என்றார்.
“வனம்புகுந்தபின் சீடர்களை ஏற்கக்கூடாது என்று நெறிநூல்கள் சொல்கின்றன என நானும் அறிவேன் குருநாதரே. ஆனால் அந்நெறிகளை மீறி தாங்கள் எனக்கு தங்கள் ஞானத்தை அருளவேண்டும். வல்கிதாஸ்திரம் அகத்தியரின் குருமரபினருக்கு மட்டுமே தெரியும். தாங்கள் திருவிடத்தவர் என்பதனால் அதைக் கற்றிருக்கிறீர்கள். இப்புவியிலுள்ள அனைத்து போர்வித்தைகளையும் நான் கற்றாகவேண்டும். ஏனென்றால் நான் கொல்லப்போகும் வீரர் எவற்றையெல்லாம் அறிவாரென எவருக்குமே தெரியாது.”
“நான் எதன்பொருட்டு உன்னை மாணவனாக ஏற்கவேண்டும்?” என்றார் பீஷ்மர். சிகண்டி உளவேகத்தால் சற்று கழுத்தை முன்னால் நீட்டி பன்றி உறுமும் ஒலியில் “என் அன்னைக்காக. அவள் நெஞ்சின் அழலுக்கு நீதி வேண்டுமென நீங்கள் நினைத்தால்…” என்றான். “உங்கள் நெஞ்சத்தைத் தொட்டு அங்கே வாழும் நீதிதேவனிடம் கேட்டு முடிவெடுங்கள் குருநாதரே!”
பீஷ்மர் இருளுக்குள் இருள் போல நின்ற அவனைப் பார்த்துக்கொண்டு சில கணங்கள் நின்றார். தலையை அசைத்துக்கொண்டு “ஆம், நீ சொல்வதில் சாரமுள்ளது” என்றார். வானத்தை அண்ணாந்து நோக்கி துருவனைப் பார்த்தபின் “காசிநாட்டரசி அம்பையின் மைந்தனும் பாஞ்சால இளவரசனும் வழுவா நெறிகொண்டவனுமாகிய சிகண்டி எனும் உனக்கு நானறிந்தவற்றிலேயே நுண்ணிய போர்வித்தைகள் அனைத்தையும் இன்று கற்பிக்கிறேன். அவை மந்திரவடிவில் உள்ளன. உன் கற்பனையாலும் பயிற்சியாலும் அவற்றை கைவித்தையாக ஆக்கிக்கொள்ளமுடியும்” என்றார். சிகண்டி தலைவணங்கினான்.
“என்னை வணங்கி வடமீன் நோக்கி அமர்வாயாக!” என்றார் பீஷ்மர். சிகண்டி அவர் பாதங்களை வணங்கியபோது அவனுடைய புழுதிபடிந்த தலையில் கைவைத்து “வீரனே நீ உன் இலக்கை அடைவாய். அடைந்தபின் ஒருகணமும் வருந்தமாட்டாய். வீரர்களுக்குரிய விண்ணுலகையும் அடைவாய்” என்று வாழ்த்தினார்.