அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

2/6/14

பகுதி ஆறு : தீச்சாரல்[ 4 ]


பகுதி ஆறு : தீச்சாரல்[ 4 ]


மறுநாள் காலையில் வியாசர் வருவாரென்று முந்தைய நாள் இரவு சுதன் வந்து செய்தியறிவித்தபோதே சத்யவதி நிலைகொள்ளாமல் அரண்மனைக்குள் உலவத்தொடங்கிவிட்டாள். குளிருக்கு வைக்கும் செம்புக்கணப்பு போல உள்ளூர கனல் இருந்துகொண்டிருந்தது. சியாமையிடம் “கிருஷ்ணன் தங்குவதற்கான இடத்தை அமைத்துவிட்டார்களல்லவா?” என்றாள். “தாங்கள் முதலில் சொன்னதுமே அதைச்செய்துவிட்டோம் பேரரசி” என்றாள் சியாமை.
“அவன் அரண்மனையில் தங்குவதில்லை. ஓடும் நீரில் மட்டுமே நீராடுவான். ஒவ்வொருநாளும் உதயத்தையும் அஸ்தமனத்தையும் பார்க்கும் இடம் அவனுக்குத்தேவை…” என்றாள். “அதையும் முன்னரே சொல்லிவிட்டீர்கள் தேவி” சியாமை புன்னகையுடன் சொன்னாள்.
அவளால் அந்தப்புரத்தில் இருக்கமுடியவில்லை. படுத்தால் அவளுக்குள் ஒரு வில் நாணேறி நிற்பதாகப்பட்டது. நிற்கும்போது மட்டுமே அந்த வில்லை சமன்செய்யமுடிந்தது. நின்றிருக்கையில் அகத்தில் வேகம் அதிகரித்து புறம் நிலையாக நின்றது. ஆகவே நடந்தாள். அரண்மனையின் உபகோட்டங்களிலும் புறக்கோட்டங்களிலும் நடந்தாள். அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சேடியர் அவளைக்கண்டதும் பாய்ந்தெழுந்தனர்.
“அனைத்தும் ஒருங்கமைக்கப்பட்டுவிட்டன அல்லவா?” என்றாள். “ஆம் அரசி” என்றாள் பதுமை. “இங்கே அவன் வரும்போது எந்தப்பெண்ணும் எதிரே வரக்கூடாது. இங்கே பிறழ்வொலிகள் எதுவும் எழலாகாது” என்றாள். அவர்கள் மிரண்ட விழிகளுடன் தலைவணங்கினர். அந்தக்கட்டளை அவர்களுக்கு பலநூறுமுறை அளிக்கப்பட்டுவிட்டிருந்தது.
அறியாத யட்சி ஒருத்தி தன் தோளில் அவளைத் தூக்கிக்கொண்டு அலைவதுபோலிருந்தது. அரண்மனைத் தூண்களெல்லாம் விறைத்து நிற்பதுபோல, சுவர்கள் திரைச்சீலைகளாக மாறி அலையடிப்பதுபோல, கூரை அந்தரத்தில் பறந்து நிற்பதுபோல. இரவு துளித்துளியாக தேங்கித் தயங்கிச் சொட்டியது. வெளியே அறுபடாத நீண்ட சில்வண்டு ஒலியில் அத்தனை ஒலிகளும் கோர்க்கப்பட்டிருந்தன. மௌனமாக வந்து முகர்ந்துநோக்கும் கரடிபோல கரியவானம் அரண்மனைமுகடில் மூக்கு சேர்த்து வெம்மூச்சுடன் குனிந்திருந்தது.
“சியாமை சியாமை” என்றழைத்தாள் சத்யவதி. “அரசி!” என்று வந்தவளை வெறுமே நோக்கிக்கொண்டிருந்தாள். யமுனைக்கரையில் இருந்து அவளுடனேயே வந்த சியாமை அவளைவிட மூன்றுவயது மூத்தவள். கரியவட்டமுகமும் கனத்த உடலும் கொண்டவள். கருநிற அரக்குபூசப்பட்ட உடல் கொண்ட கனத்த நாவாய் போல மெல்ல திரும்புபவள். சத்யவதி “ஒன்றுமில்லை”என்றாள்.
பின்னிரவில்தான் அவள் அதுவரை இரு இளவரசிகளைப்பற்றி எண்ணவேயில்லை என்ற நினைப்பு வந்தது. அவர்களை தன் கைவிரல்கள் போல அன்றி அவள் நினைத்ததேயில்லை. எழுந்து சால்வையைப் போட்டுக்கொண்டு மீண்டும் புறக்கோட்டம் சென்றாள். அங்கே தூண்களில் நெய்யகல்களும் அவற்றின் ஒளியைப்பெருக்கும் உலோக ஆடிகளும் சேர்ந்து பெரிய கொன்றைமலர்க்கொத்துக்களாக ஒளிவிட்டுக்கொண்டிருந்தன. தூண்நிழல்கள் நாகங்களாக அறைக்குமேல் எழுந்து கூரைமேல் வளைந்திருந்தன. புறக்கோட்டத்து உள்ளறையில் இருந்து முதியசேடி ஒருத்தி கையில் ஆவிபறக்கும் ஸ்வேதன தளிகையுடன் வந்து சத்யவதியைப்பார்த்து திகைத்து நின்றாள்.
“அரசியர் எப்படி இருக்கிறார்கள்?” என்றாள் சத்யவதி. “மூத்த அரசி இன்னமும் படுக்கையிலேயே இருக்கிறார்கள். நரம்புகள் அதிர்ந்துவிட்டன என்று வைத்தியர் சொன்னார். இப்போதுதான் ஸ்வேதனம் செய்தோம். அரிஷ்டம் கொடுத்து தூங்கவைத்திருக்கிறோம்” என்றாள். “சிறியவள்?” என்றாள் சத்யவதி. “அவர் நேற்றே சரியாகிவிட்டார். மூத்தவரின் துயரத்தைக் கண்டு சற்று அழுகிறார், அவ்வளவுதான்.”
செல்லும்படி தலையை ஆட்டி ஆணையிட்டுவிட்டு சத்யவதி உள்ளே சென்றாள். அறை இருண்டிருந்தது. ஒரே ஒரு நெய்யகலில் செம்முத்துபோன்ற சுடர் அசையாமல் நிற்க வெண்பட்டுப்படுக்கையில் மழைநீர்சொட்டி கலைந்த வண்ணக்கோலம்போல அம்பிகை கிடப்பதைப்பார்த்தாள். கண்களுக்கு இருபக்கமும் கண்ணீர் வழிந்து உப்புவரியாகி கோடையில் மலைப்பாறையில் அருவித்தடம்போல் தெரிந்தது. சிறிய உதடுகள் குவிந்து உலர்ந்து ஒட்டியிருக்க, உதடுகளின் இருபக்கமும் ஆழமான கோடுகள் விழுந்திருந்தன. ஸ்வேதனரசத்தின் பசையால் கூந்தலிழைகள் நெற்றியிலும் கன்னங்களிலும் ஒட்டியிருந்தன. பார்த்து நின்றபோது அறியாமல் சத்யவதி நெஞ்சில் ஓர் எண்ணம் எழுந்தது. இவ்வளவு துயர் கொள்ளுமளவுக்கு அவனிடம் எதைக்கண்டாள் இவள்?
விசித்திரவீரியனை எவரும் மறக்கமுடியாதென்று அவளுக்குத் தெரியும். விரல்நுனியில் ஒற்றியெடுத்த பனித்துளி என அவனை அவள் எப்போதும் நினைத்திருந்தாள். நிலையற்று ஒளிவிடுபவன், தூயவன், அரியவன். அகம் பதறாமல் அவனிடம் பேசமுடிந்ததில்லை அவளால். ஆனால் அவள் அவனை அறியவே இல்லையோ என்று அப்போது தோன்றியது. அவனை முதன்முதலாக அறிந்தவள் இவள்தானா? இவள்மட்டும்தான் இனி இவ்வுலகில் அவனை நினைத்திருக்கப்போகிறாளா? மலைச்சரிவில் பிளந்து சரிந்து சென்ற பாறையின் எஞ்சிய குழித்தடம்போல இவள் மட்டும்தான் இனி காலகாலமாக அவனை சொல்லிக்கொண்டிருப்பாளா?
அவளுக்குத் தோன்றியது, அவள் அப்படி எந்த ஆணிடமும் உணர்ந்ததில்லை என. அவள் உள்ளறைகள் வரை வந்து எந்தக்காற்றும் திரைச்சீலைகளை அசைத்ததில்லை. தீபத்தை நடனமிடச் செய்ததில்லை. அவளுக்குள் விசித்திரவீரியனின் புன்னகைக்கும் முகம் என்றும் இருந்தது. மூடப்பட்ட கோயில் கருவறைக்குள் இருளில் இருக்கும் தெய்வம் போல. ஆனால் விசித்திரவீரியனுக்காகக் கூட அவள் தன்னிலை இழக்கவில்லை.
மெல்லிய பொறாமை எழுந்தது. பேரிழப்பு என்பது பெரும் இன்பத்தின் மறுபக்கம் அல்லவா? வைரத்தை வைக்கும் நீலப்பட்டுமெத்தை அல்லவா அது? இந்தப்பெண் அறிந்திருக்கிறாள். இந்த வைரத்தை ரகசியமாக தனக்குள் வைத்திருப்பாள். வாழ்நாளெல்லாம் அந்தரங்கமாக எடுத்துப் பார்த்துக்கொண்டே இருப்பாள். பார்க்கப்பார்க்கப் பெருகுவது வைரம்.
உடல் சற்றே பதறியதனால்அங்கே நின்றிருக்க அவளால் முடியவில்லை. திரும்பி நடந்தபோது இவளிடம் எப்படி வியாசனின் வருகையைப்பற்றிச் சொல்வது என்ற எண்ணம் எழுந்தது. அவளுக்குள் அழகிய சிறு தடாகமொன்றிருக்கிறது. அதை அவள் கலக்கி சேறாக்கவேண்டும். அதில் மலர்ந்திருக்கும் ஒற்றைத்தாமரையை மூழ்கடிக்கவேண்டும்.
VENMURASU_EPI_30__
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
தன் அறைக்குள் வந்து படுத்துக்கொண்டபோது சத்யவதி நெஞ்சின் படபடப்பை உணர்ந்தாள். ஏன் என கேட்டுக்கொண்டாள். நிலைகொள்ளாதவளாக தன் படுக்கையில் அமர்ந்தாள். எந்தக்காரணமும் இல்லாமல் பேரச்சம் வந்து தொட்டதுபோல அதிர்ந்து தன் இதயத்தை கேட்டுக்கொண்டிருந்தாள். பின்பு எழுந்து “சியாமை! சியாமை!” என்றாள். மௌனமாக வந்து நின்ற சியாமையிடம் “ரசம்” என்றாள்.
சோமக்கொடி போட்டு காய்ச்சியெடுத்த புதுமணம் கொண்ட திராட்சைமதுவை பொற்கிண்ணத்தில் கொண்டுவந்து வைத்தாள் சியாமை. சத்யவதி அதை எடுத்து மெல்லக்குடித்தபடி இருளையே பார்த்துக்கொண்டிருந்தாள். எப்போதும் இருளைப்பார்த்துக்கொண்டுதான் மதுவை அருந்துவாள், அவ்விருளின் துளி ஒன்றை தன்னுள் ஏற்றிக்கொள்வது போல, உள்ளே விரிந்துபரவும் ஒளிக்குமேல் இருளைப்பரப்புவதே அதன் பணி என்பதுபோல.
நீர்ச்சுனைகளுக்கு அருகே நீரோடும் பசுங்குழாயெனக் கிடக்கும் சோமச்செடி. அதற்கு நீராழத்தின் வாசனை. நீரிலிருந்து ஆழத்தை மட்டும் எடுத்து சேர்த்துக்கொள்கிறது. நிழல்களாடும் ஆழம். அடித்தட்டின் பல்லாயிரம் மென்சுவடுகள் பதிந்த மௌனம். சோமம் உடலுக்குள் ஒரு காட்டுக்கொடியை படரவிடுகிறது. நரம்புகளில் எங்கும் அது தளிர்விட்டுப் பரவுகிறது.
தலை சற்று ஆடியபோது படுக்கையில் படுத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டாள். சியாமை வெண்சாமரத்தை மெல்ல வீசிக்கொண்டிருந்தாள். அறைக்குள் இருந்த தூபக்கடிகை அந்தக் காற்றால் வாய்சிவந்து புகையத் தொடங்கியது. கையசைத்து சியாமையை போகச்சொன்னாள். கண்களை மூடிக்கொண்டபோது மஞ்சம் மெல்ல கீழிறங்குவதுபோலத் தோன்றியது. அது இருளுக்குள் விழுந்து பாதாளத்துக்குச் சென்றுவிடும் என்பதுபோல.
திடுக்கிட்டு எழுந்துகொண்டாள். “சியாமை” என்றாள். வாசலருகே நின்றிருந்தாள் போல. உள்ளே வந்து அசையாமல் நின்றாள். முகத்துக்குமேல் வெண்நரைக்கூந்தலை எடுத்துக்கட்டியிருந்தாள், கருகிய கலத்துக்குமேல் வெண்சாம்பல் போல. சத்யவதி அவளையே பொருளில்லாமல் சிறிதுநேரம் பார்த்துவிட்டு “அமர்ந்துகொள்” என்றாள். ஆடையைச் சுருட்டியபடி கனத்த கால்களை மடித்து சியாமை தரையில் அமர்ந்துகொண்டாள்.
சத்யவதி எழுவதற்கு முயன்றபோது தலை கருங்கல் போல தலையணையை விட்டு மேலெழ மறுத்தது. பக்கவாட்டில் புரண்டு “சியாமை, நான் மச்சகந்தியாக இருந்த நாட்கள் முதல் என்னை அறிந்தவள் நீ சொல், நான் ஏன் இப்போது இப்படி நிலையழிந்திருக்கிறேன்?” என்றாள்.
சியாமை சிலகணங்கள் கூர்ந்துநோக்கியபின் “நீங்கள் சித்ராங்கதனை நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்றாள். அதிர்ந்து சற்று புரண்டு “இல்லை, இல்லை, நான் அவனை நினைக்கவில்லை” என்றாள் சத்யவதி. “ஆம், அவரை நினைக்காமலிருக்க வேறெதையோ நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்” சியாமை சொன்னாள்.
சத்யவதி பெருமூச்சு விட்டாள். பிறகு “ஆம்” என்றாள். சிறிதுநேரம் இருளின் ஒலி அவர்களுக்கிடையே நீடித்தது. “சியாமை அவனை நான் கொன்றேன் என்று சொல்லலாமா?” என்றாள் சத்யவதி. சியாமை “ஆம் பேரரசி, அது உண்மை” என்றாள். “ஆனால் சிலசமயம் தாய் குட்டிகளில் ஒன்றை கொன்றுவிடுவதுண்டு.”
சத்யவதி பிரமித்த கண்களுடன் அரண்மனைமுகட்டின் மரப்பலகைத் தளத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்விழிகள் கோணலாகி இருந்தன. உத்தரங்கள் நீர்ப்பிம்பங்களாக நெளிந்தன. சிலகணங்கள் கழித்து “குட்டிகளில் மிகச்சிறந்ததை அதற்காகத் தேர்ந்தெடுக்குமோ?” என்றாள். “இல்லை பேரரசி… குட்டிதான் அந்த மரணத்தை தேர்ந்தெடுக்கிறது.” சத்யவதி திடுக்கிட்டு “ஆம்” என்றாள். சியாமை “இல்லையேல் அது அன்னையை கொன்றிருக்கும்” என்றாள்.
சத்யவதி தலையைத்திருப்ப முயன்றாள். கழுத்துக்கும் தலைக்கும் தொடர்பே இருக்கவில்லை. “அவனைக் கருவுற்ற நாட்களில் நான் எப்போதும் கனவில் இருந்தேன்…” என்றாள். “கனவும் நனவும் கலந்துபோன நிலை”
“ஆம் பேரரசி, நீங்கள் ஒரு கந்தர்வனை கனவுகண்டீர்கள். யமுனையின் அடியில் நீர்க்குமிழிகள் கோள்களாகப் பறக்க கத்ருவைப்போல நீங்கள் நீந்திச் சென்றுகொண்டிருக்கையில் அவன் பொன்னிற அடிப்பரப்பில் பேரழகு கொண்ட உடலாக மல்லாந்து கிடப்பதைக் கண்டீர்கள். இளமை என்றும் ஆண்மை என்றும் வீரியம் என்றும் பிரம்மன் நினைத்தவை எல்லாம் கூடிய ஆணுடல். கன்று என்றும் காளை என்றும் ஆனவன்” சியாமை சொன்னாள்.
“ஆம்…அவன் பெயர் சித்ராங்கதன் என்று சொன்னான்” என்றாள் சத்யவதி. கனத்த உதடுகள் சரிவர அசையாமையால் குழறிய குரலில் கனவில் பேசுவதுபோல. “அவன் ஒருமுறைதான் காட்சியளித்தான். ஒருமுறைதான் என் கண்ணைப்பார்த்து நீ பெண் என்று சொன்னான்” என்றாள்.
“நீங்கள் சித்ராங்கதனின் மோகத்தை மட்டுமே அறிந்தீர்கள் பேரரசி. முதிய பராசரனில் முதிய சந்தனுவில்… அவன் உடலைக்காண யமுனைக்கு சென்றுகொண்டே இருந்தீர்கள்…”  ”ஆம்” என்றாள் சத்யவதி. “பிறகெப்போதும் நான் அவனைக் காணவில்லை.”
“அவன் கன்னியருக்கு மட்டுமே காட்சியளிப்பவன்” என்றாள் சியாமை. “ஆம், ஆனால் எந்தப் பெண்ணுக்குள்ளும் இருந்து ஒரு கன்னி ஏங்கிக் கொண்டிருக்கிறாள் அல்லவா?” என்று சத்யவதி சொன்னாள். சியாமை “தெய்வங்கள் இரக்கமற்றவை தேவி. அவை விதிகளை உருவாக்கி அவற்றால் தங்கள் கைகளை கட்டிக்கொள்கின்றன.” பெருமூச்சுடன் சத்யவதி “ஆம், அதிகாரம் இரக்கமின்மையில் இருந்து பிறப்பது. தெய்வங்கள் அளவற்ற அதிகாரம் கொண்டவை” என்றாள்.
“முதல் குழந்தை பிறந்தபோது ஈற்றறையில் நானும் இருந்தேன்” என்றாள் சியாமை. “குழந்தையை மருத்துவச்சி தூக்கியதுமே நீங்கள் திரும்பி சித்ராங்கதன் எங்கே என்று கேட்டீர்கள். அது ஆணாபெண்ணா என்றுகூட நாங்கள் பார்த்திருக்கவில்லை” சியாமை சொன்னாள். சத்யவதி முகம் மலர்ந்து “எவ்வளவு இனிய பெயர் இல்லையா சியாமை? சித்திரம்போன்ற அங்கங்கள் கொண்ட பேரழகன்…”
சியாமை “ஆனால் மண்ணில் எந்த மனிதனும் கந்தர்வன் அல்ல பேரரசி…” என்றாள். “முழுமையை தெய்வங்கள் தங்களிடமே வைத்திருக்கின்றன. மனிதர்களுக்கு அளிப்பதேயில்லை” என்றாள்.
பின்பு நெடுநேரம் அவர்கள் நடுவே அமைதி ஓடிக்கொண்டிருந்தது. சத்யவதி பளிங்குத்தரையில் பாம்புபோல நெளிந்த குரலில் “கந்தர்வர்களைப் பார்க்கும் பெண்கள் முன்னரும் இருந்ததில்லையா சியாமை?” என்றாள். “பேரரசி, கந்தர்வனை ஒருமுறையேனும் காணாத பெண்கள் எவரும் இல்லை. மண்ணுலகை விட பன்னிரண்டாயிரம்கோடி மடங்கு பெரிதான கந்தர்வலோகத்தில் ஒவ்வொரு கன்னிக்கும் ஒரு கந்தர்வன் இருக்கிறான்…கோடானுகோடி கந்தர்வர்களுக்கான பெண்கள் இன்னமும் பிறக்கவேயில்லை” என்றாள் சியாமை.
“ஆனால் கந்தர்வர்கள் மிகமிக அந்தரங்கமாகவே வந்துசெல்கிறார்கள். அவர்கள் வந்து சென்ற மனம் மேகங்கள் சென்ற வானம்போல துல்லியமாக எஞ்சும்…” என்றாள் சியாமை. “ஆனால் முன்னொருகாலத்தில் ரேணுகாதேவி கண்ட கந்தர்வனை அவள் கணவனும் காணநேர்ந்தது” என்றாள்.
சத்யவதி ஒருக்களித்து தலையைத் தூக்கி “ரேணுகையா?” என்றாள். “ஆம் அரசி, பிருகுமுனிவரின் குலத்தில் வந்த ஜமதக்னி என்னும் முனிவரின் மனைவி அவள்” என்றாள் சியாமை. “நான் கேட்டிருக்கிறேன். ஆனால் நினைவில் எழவில்லை அந்தக்கதை” என்றாள் சத்யவதி.
வேசரநாட்டில் மாலப்பிரபா என்னும் ஆற்றின்கரையில் வெண்மணல் விரிந்த நிலமொன்றிருந்தது. ஆகவே மணல்நாடு என்று அதற்குப் பெயர். ரேணுநாட்டை ஆண்ட மன்னன் ரேணுராஜன் எனப்பட்டான். அவன் மகள் ரேணுகாதேவி. ரேணுராஜன் செய்த வேள்வியில் எரிந்த நெருப்பில் ரேணுகாதேவி பிறந்தாள் என்று சியாமை சொல்ல ஆரம்பித்தாள்.
வேள்விநெருப்பில் ஒரு பெண் பிறந்ததை அறிந்த அகத்தியரே ரேணுகையைப்பார்க்க வந்தார். அவர் அவளுடைய பிறவிநூலைக் கணித்து அவள் அனலுக்கு அதிபனாகிய முனிவர் ஒருவருக்கு மனைவியாவாள் என்றார். ரேணுராஜன் அத்தகைய முனிவருக்காகக் காத்திருந்தான். ஆணழகர்களும் மாவீரர்களுமான அரசர்களுக்குக் கூட அவளை அவன் அளிக்கவில்லை.
ஒருநாள் அங்கே ஜமதக்னி என்னும் முனிவர் வந்து சேர்ந்தார். சொற்களைக் கொண்டே வேள்விக்குளத்தில் நெருப்பை எழுப்பும் வல்லமை கொண்டிருந்தார் அவர். அவரது ஆசியை வேண்டிய ரேணுராஜன் மகளை ஜமதக்னி முனிவருக்கு மணம்செய்துகொடுத்தான். அரசனுக்கு மூன்று வரங்களை அளித்தபின் அவர் அவளை மணம்கொண்டார்.
ருசிகமுனிவருக்கும் சத்யவதிக்கும் பிறந்து உடலுருக்கும் கடுந்தவத்தால் விண்நெருப்பையும் வெல்லும் தவவல்லமைபெற்ற ஜமதக்னி முனிவருக்கு அவளை ரேணுராஜன் கையளித்தபோது ரேணுகை அவரை நிமிர்ந்துபார்க்கவே அஞ்சினாள். கணவருடன் அவள் மாலப்பிரபா ஆற்றின் கரையில் தவக்குடிலில் வாழ்ந்த வாழ்க்கையை நோன்பு என்றே நினைத்துக்கொண்டாள்.
ரேணுகாதேவிக்கு ஐந்து மைந்தர்கள் பிறந்தனர். பிருஹத்யனு, பிருத்வகன்வன், வசு, விஸ்வவசு, ராமபத்ரன் என்ற ஐவரில் இளையவனாகிய ராமன் வீரத்தாலும் பேரழகாலும் அன்னைக்கு பிரியமானவனாக இருந்தான். தந்தைக்கு வேள்விக்கு விறகு வெட்ட மழுவுடன் காட்டுக்குச் சென்றவன் அந்த மழுவை தன் ஆயுதமாகக் கொண்டான். ஆகவே பரசுராமன் என்றே அழைக்கப்பட்டான்.
மைந்தரில் பரசுராமனே அன்னையின் பிரியத்துக்குரியவனாக இருந்தான். அவளுடைய ஆண்வடிவம் போல. அவள் தந்தையின் மழலைத்தோற்றம் போல. ஒவ்வொருநாளும் அவனழகைக் கண்டு அவள் மகிழ்ந்தாள். பேரரசியே பிள்ளையழகையும் தீயின் அழகையும் கண்டு நிறைவுற்றவர் யாருமில்லை.
நோன்பே வாழ்வாக வாழ்ந்த ரேணுகை ஒவ்வொரு நாளும் மாலப்பிரபா ஆற்றுக்குச் சென்று மணலைக்கூட்டி தன் தாலியைக் கையில் பற்றி மந்திரம் சொல்லி அதை ஒரு குடமாக ஆக்குவாள். அக்குடத்தில் நீரும் மலரும் கொண்டுவந்து கணவனுக்கு பூசைக்களம் அமைப்பாள். அவள் தவக்கற்பாலேயே அந்த மணல் குடமாகியது.
ஒருநாள் ஆற்றுநீரில் நீராடி கரைவந்து மணல் அள்ளி தாலியை கையில் எடுத்து மந்திரம் சொன்ன ரேணுகாதேவி வானில் பறந்த கந்தர்வன் ஒருவனின் நிழலை நீரில் கண்டாள். தாலி கைநழுவிய வேளை பாதிசமைந்த குடம் மீண்டும் மணலாகியது. அஞ்சிப்பதறி அவள் மணலை அள்ளி அள்ளிக் குடமாக்கமுனைய அது சரிந்து கொண்டே இருந்தது.
தேவி கண்ணீருடன் தன் தவக்குடில் மீண்டாள். பூசைக்கு வந்த ஜமதக்னி முனிவர் “எங்கே என் வழிபாட்டு நீர்?” என்றுகேட்டார். கைகூப்பி தேவி கண்ணீருடன் அமைதி காத்தாள். தன் தவவல்லமையால் விண்ணில் பறந்த அந்த கந்தர்வனை முனிவர் தன் அகக்கண்ணில் கண்டார். சினம்கொண்டு எரிந்தபடி ஐந்து மைந்தரையும் அழைத்து “நெறி பிறழ்ந்த இவள் அழிக! இக்கணமே இவள் கழுத்தை வெட்டுக!” என்றார். “தாயைக்கொல்லும் பெரும்பாவம் செய்யமாட்டோம், உங்கள் சினத்தால் எரிந்து சாம்பலாவதையே ஏற்கிறோம்” என்று சொல்லி நான்குபிள்ளைகளும் பின்னகர்ந்தனர்.
சத்யவதி விழித்த கண்களுடன் சியாமையையே பார்த்தபடி கிடந்தாள். “ஐந்தாவது மகன் முன்னால் வந்து உடைவாளை உருவினான். அன்னைக்குப் பிரியமான அவன் கண்களைப் பார்த்தாள். அவன் வாளை ஓங்கி அவள் கழுத்தை வெட்டி வீழ்த்தினான்” என்றாள் சியாமை.
சத்யவதி கண்ணீருடன் கண்களை மூடிக்கொண்டாள். இமைகளை மீறி கண்ணீர் இருபக்கமும் வழிந்துகொண்டிருந்தது. சத்யவதியின் நெஞ்சு எழுந்து தணிய ஒரு விம்மலெழுவதை சியாமை கேட்டாள்.
“சித்ராங்கதனை என் மைந்தன் கண்டுவிட்டான் என்கிறார்களே உண்மையா சியாமை?” என்றாள் சத்யவதி அழுகை கனத்துத் ததும்பி மழைக்காலக் கிளைபோல ஆடிய குரலில். சியாமை பதில் சொல்லவில்லை. “சொல் சியாமை, அவன் அந்த கந்தர்வனை சந்தித்தானா?”
சியாமை பெருமூச்சுடன் “அவர் ஆயிரம் ஆடிகளில் அவனைத் தேடிக்கொண்டிருந்தார் தேவி” என்றாள். “ஆம், ஆடி அவனை அடிமைகொண்டிருந்தது” என்றாள் சத்யவதி. சியாமை மெல்ல “ஆடிகள் வழியாக மெல்லமெல்ல சித்ராங்கதன் மன்னரை நோக்கி வந்துகொண்டிருந்தான்” என்றாள்.
“அவன் கண்டிருப்பான்” என்றாள் சத்யவதி. “இல்லையேல் எதற்கும் பொருளே இல்லை.” சியாமை “அவர் சித்ராங்கதனின் முழுமையை நெருங்கியபோது அவன் வந்து அவரை போருக்கு அழைத்தான் என்கிறார்கள். ஒரு சித்ராங்கதன்தான் இருக்கமுடியும் என்றும் நீ என்னைப்போலானால் நான் வாழமுடியாது என்றும் அவன் சொன்னான். மண்ணில் ஒருகணமும் கந்தர்வ உலகில் ஓராயிரம் வருடங்களும் அந்தப்போர் நடந்தது. இறுதியில் அவன் அவரை தன்னுள் இழுத்து தன் ஆழத்தில் கரைத்துக்கொண்டான் என்று சூதர்கள் பாடுகிறார்கள்” என்றாள்.
சத்யவதி “நாளை காலை கிருஷ்ணன் வருகிறான்” என்றாள். “அவர் சித்ராங்கதனைக் கண்டவர்” என்றாள் சியாமை சாதாரணமாக. “யார்?” என்றாள் சத்யவதி. அவள் நெஞ்சு அந்தப் பேரச்சத்தை மீண்டும் அடைந்தது. “காவியம் ஒரு மாபெரும் ஆடி” என்று விழிகள் எதையும் சொல்லாமல் விரிந்து நின்றிருக்க சியாமை சொன்னாள். “நீங்கள் அஞ்சுவது அவரைத்தான்.”
“நான் அவனை அஞ்சவேண்டுமா? அவன் என் மகன்…” என்றாள் சத்யவதி. “ஆம், அதனால்தான் அஞ்சுகிறீர்கள்” என்றாள் சியாமை. “சியாமை, இவ்வளவு குரூரமாக இருக்க எப்படி கற்றாய்?” என்று சத்யவதி கேட்டாள். “நான் தங்கள் ஆடிப்பாவை அல்லவா தேவி? ஆடிகளைவிட குரூரமானவை எவை?”
சத்யவதி பின்பு கண்களைமூடி நெடுநேரம் படுத்திருந்தாள். அசையாமல் அவளை நோக்கியபடி சியாமை அமர்ந்திருந்தாள். பின்பு “சியாமை, கிருஷ்ணன் எப்படி சித்ராங்கதனை முதலில் கண்டான்?” என்றாள். அதன்பின் பெருமூச்சுடன் “ஆம், அவன் அனைத்தையும் காண்பவன்” என்றாள்.
சியாமை “யமுனைத்தீவில் அழகற்ற கரியகுழந்தையை மணலில் போட்டு குனிந்து பார்த்தபோது உங்கள் கண்களை அதுவும் பார்த்திருக்கும்” என்றதும் “சீ வாயை மூடு!” என்று கூவியபடி சத்யவதி எழுந்து அமர்ந்தாள். சியாமை அவளைப்பார்த்தபடி இரு கண்களும் இரு அம்புநுனிகள் போல குறிவைத்து நாணேறி தொடுத்துநிற்க பேசாமலிருந்தாள்.
அதன்பின் சத்யவதி அப்படியே படுக்கையில் விழுந்து “ஆம்! ஆம், உண்மை” என்று விசும்பினாள். “அவன் அறிவான். சியாமை இது அவனது தருணம்…..என் குலத்தில் இனி என்றும் வாழப்போவது அவனுடைய அழகின்மை” என்றாள். மது மயக்கத்துடன் தூவித்தலையணையில் முகம் புதைத்து “ஆம், அதைத்தான் அஞ்சினேன்…” என்றாள். சற்றுநேரம் கழித்து சியாமை மெல்ல எழுந்து கதவுகளை மூடிவிட்டு வெளியேறினாள்.
மறுநாள் காலை சூதர்களும் வைதிகர்களும் மங்கலவாத்தியக்குழுவும் சூழ வியாசரின் ரதம் வருவதை எதிர்பார்த்து அரண்மனை முகமண்டபத்தில் நின்றுகொண்டிருக்கையில் சத்யவதி அருகே நின்ற சியாமையின் கண்களைப் பார்த்தாள். மிகமெல்ல, உதடுகள் மட்டும் அசைய “ரேணுகையின் கந்தர்வனின் பெயரென்ன?” என்றாள். சியாமை அதைவிட மெல்ல “பரசுத்துவஜன்” என்றாள்.

171 .ராஜகுலத மகாதேவ மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

மாளகொண்டதவரு :- மாளகொண்டமலையைப் பூர்வீகமாகக்கொண்டவர். 
மாலகணதவரு :- கணம் கணமாக மாலைகள் இட்டு வழிபடுவர்.

2/5/14

பகுதி ஆறு : தீச்சாரல்[ 3 ]

பகுதி ஆறு : தீச்சாரல்[ 3 ]
வியாசவனத்தின் தெற்குமூலையில் சித்ரகர்ணி கண்களும் பிரக்ஞையும் மட்டும் உயிருடனிருக்க இறந்துகொண்டிருந்தது. அதன் உறுமல்கள் அதன் வயிற்றுக்குள் ஒலிக்க, மனதுக்குள் மூடுண்ட அறைக்குள் சிக்கிக்கொண்ட வௌவால் போல பிரக்ஞை பரிதவித்துக்கொண்டிருந்தது. அதன் பின்னங்கால்களை கழுதைப்புலிகள் நான்கு கடித்து இழுத்து தின்றுகொண்டிருந்தன. வெள்ளை எலும்புகள் நடுவே உயிருடனிருந்த தசைநார் புழுப்போல அதிர்ந்து அதிர்ந்து துடிக்க அந்தக்கால் மட்டும் இழுத்து இழுத்து அசைந்தது. சித்ரகர்ணி குப்புறவிழுந்திருந்ததனால் கழுதைப்புலிகள் அதன் அடிவயிற்றையோ இதயத்தையோ கிழிக்க முடியவில்லை.
குஹ்யஜாதை என்ற கழுதைப்புலி தன் நான்கு குட்டிகளுடன் வந்திருந்தது. கழுதைப்புலிகளை அழைத்துவந்தது அதுதான். ஏழுநாட்களாக அது உணவேதும் உண்டிருக்கவில்லை. குட்டிகளுக்கு மூன்றுநாட்களுக்கு முன்னரே பால் தீர்ந்துவிட்டிருந்தது. குட்டிகளை பாறைப்பொந்துக்குள் விட்டுவிட்டு பெரிய முன்னங்கால்களை வேகமாகத் தூக்கிவைத்து பசித்துத் திறந்த வாயை முன்னால் நீட்டி பெரிய செவிகளைக் கூர்ந்து அது காட்டுக்குள் தாவித்தாவி ஓடியது. ஒரு சிற்றோடையைத் தாண்டியபோது குஹ்யஜாதை குருதியின் வாசனையைக் கண்டுகொண்டது. மெல்லக் காலடி எடுத்துவைத்து புதர்கள் வழியாக வந்தபோது சிம்மத்தின் அலறலையும் புலிகளின் உறுமல்களையும் கேட்டது.
புதர்களுக்குள் இருந்து எட்டிப்பார்த்த குஹ்யஜாதை செம்புல்பரவிய குன்றுபோன்ற பெரிய சிம்மத்தை இரு சிறுத்தைகள் தாக்குவதைக் கண்டது. நாக்கை வாய்க்குள் துழாவியபடி பின்னங்கால்களில் அமர்ந்து கவனிக்கத் தொடங்கியது. சிம்மம் இருபக்கமும் சுழன்று சுழன்று சிறுத்தைகளை தன் பெரிய கைகளால் அடிக்க முயன்றது. வாய்திறந்து வெண்பற்களைக் காட்டிச் சீறியும் பின்னங்கால்களில் அமர்ந்து சீறி காலோங்கியும் சிறுத்தைகள் போர்புரிந்தன. பின்னர் ஒரு சிறுத்தை சிம்மத்தின் வலப்பக்கம் பார்வையில்லை என்பதைக் கண்டுகொண்டது. புதர்களுக்குள் நான்குகால்களையும் நிலத்தில் பதித்துப் பதுங்கி மெல்ல ஊர்ந்து சென்ற அது உரத்த ஒலியுடன் பாய்ந்து சிம்மத்தின் கழுத்தை கவ்விக்கொண்டது. சிம்மம் அதை உதறமுயன்று பெருங்குரலெழுப்பி சுழல சிறுத்தை பிடியை விடாமல் காற்றில் சுற்றியது.
இரண்டாவது சிறுத்தை உறுமியபடி சிம்மத்தை நெருங்கியதும் அது இடக்கையால் ஓங்கி அறைந்தது. சிறுத்தைப்புலி தெறித்து புல்லில் விழுந்து எழுந்தோடியது. கடித்துத் தொங்கிய சிறுத்தை தன் பிடியை விடவேயில்லை. பலமுறை சுழன்றபின் சிம்மம் தன் ஆற்றலை இழந்து கால்கள் தள்ளாடி பக்கவாட்டில் சரிந்தது. உடனே கவ்வலை விட்டுவிட்டு சிறுத்தை பாய்ந்து மறுபக்கம் ஓடி காட்டுக்குள் சென்றது. சிம்மம் பலமுறை எழமுயன்றது. உரத்த குரலில் கர்ஜித்தபடி கால்களால் நிலத்தை பிராண்டியது. எழுந்து சில அடிகள் வைத்து மீண்டும் விழுந்தது. மீண்டும் எழுந்து மேலும் சில அடிகள் வைத்து கீழே விழுந்தது.
குஹ்யஜாதை அடிமேல் அடிவைத்து அதை அணுகியது. சிம்மம் மயக்கத்தில் சற்று உறுமியபோது அஞ்சிப்பின்னடைந்து மீண்டும் நெருங்கி விடைத்த காதுகளும் கூரியநாசியுமாக அருகே சென்றது. சிம்மம் கால்களை ஒருமுறை உதைத்துக்கொண்டபோது ஓடி புதரை அடைந்தபின் மீண்டும் வந்தது. மெல்லிய மூச்சொலியுடன் காற்றில் உலைந்த பிடரிமயிருடன் கழுத்தில் குருதி வழிந்து முன் தொடைமேல் வடிய சிம்மம் கிடந்தது. குஹ்யஜாதை அருகே சென்று மெல்லிய நாக்கை நீட்டி அந்தக் குருதியை நக்கியது. அதற்குள் இருந்த அதுவே அறியாத ஒன்று எழுந்து அதன் உடலெங்கும் மயிர்கூச்செறிவாக வெளிப்பட்டது. பின்னங்கால்களில் அமர்ந்து வாயை மேலே தூக்கி உரத்தபெண்குரல் சிரிப்பு போல ஒலியெழுப்பத் தொடங்கியது.
அதைக்கேட்டு நான்குபக்கமும் புதர்களிலிருந்து பல கழுதைப்புலிகள் எம்பி எம்பி குதிப்பவைபோல ஓடிவந்தன. முதல் கழுதைப்புலி வந்தவேகத்திலேயே சிம்மத்தின் வாலைக் கவ்வியது. அந்தவலியில் விழித்துக்கொண்ட சிம்மம் திரும்ப முயல அத்தனை கழுதைப்புலிகளும் ஒரேசமயம் அதை கவ்விக்கொண்டன. அனைத்தையும் தூக்கியபடி சிம்மம் எழுந்து நின்று உதறிக்கொண்டு நிலையழிந்து பக்கவாட்டில் விழுந்தது. குஹ்யஜாதை அந்தக் குருதிவழிந்த புண்ணை ஆழமாகக் கடித்து சதையைப் பிய்த்து எடுத்து உண்டது. குருதியை ஏற்று அதற்குள் வாழ்ந்த தேவன் ’வாழ்க!’ என்றான்.
மேலும் நான்குமுறை கடித்து உண்டபின் குஹ்யஜாதை ஓடிச்சென்று அருகே இருந்த சிறிய பாறைமேல் ஏறி நின்று தன் குழந்தைகளை அழைத்தது. குழந்தைகளில் மிக புத்திசாலியும் துடிப்பானவனுமான மூன்றாவது மகன் குஹ்யசிரேயஸை பெயர்சொல்லி அழைத்தது. சிலகணங்களுக்குப்பின் புதர்வெளிக்கு அப்பால் பாறை உச்சியில் ஏறி நின்ற குஹ்யசிரேயஸ் அன்னையின் குரலுக்கு எதிர்க்குரல் கொடுத்தது.
புதர்களிலிருந்து விரிந்த காதுகளும் சிறிய கருமணிமூக்குகளும் மெல்லிய ரோமத்திரள்களுமாக ஓடிவந்த நான்கு குட்டிகளைக் கண்டு குஹ்யஜாதை பரவசத்துடன் எம்பி எம்பிக்குதித்தது. ஓடிச்சென்று அவற்றை வாயால் நீவியும் முகர்ந்தும் களித்தது. பின் ஒலியெழுப்பியபடி அவற்றை சிம்மத்தை நோக்கி கூட்டிச்சென்றது. அதை எதிர்த்து வந்த மூத்த ஆண் கழுதைப்புலி ஒன்று சீறி பற்களைக்காட்டியபோது பின்னங்கால்களில் மெல்ல அமர்ந்து கண்களில் அனலுடன் மிக மிக மெல்ல உறுமியது குஹ்யஜாதை. அதைக்கேட்டதும் அங்கே சிம்மத்தைச் சூழ்ந்திருந்த அத்தனை கழுதைப்புலிகளும் காதுகளை விடைத்து அமைதியடைந்தன. முன்னால் நின்ற ஆண்கழுதைப்புலி மெல்ல பின்னடைந்து பின்பு விலகி ஓடியது.
நிமிர்ந்த தலையுடன் தன்குழந்தைகளை அழைத்துக்கொண்டு குஹ்யஜாதை சிம்மத்தின் அருகே வந்தது. குட்டிகள் அனைத்தும் பாய்ந்து சென்று சிம்மத்தை பல இடங்களிலாகக் கடித்து பிய்க்க ஆரம்பித்தன. குஹ்யசிரேயஸ் தன்னுடைய சிறிய கூழாங்கற்கண்களினால் அன்னையைப்பார்த்தது. “மகனே, நீ முழு ஆயுளுடனும் இரு. இதோ இது உன் முதல்பெரும் வேட்டை. இந்த மிருகத்தின் இதயத்தை நீ உண்பாயாக. இனிமேல் உன் வாழ்நாளெல்லாம் இதயத்தை மட்டுமே உண்பவனாக இருப்பாயாக!” என்று குஹ்யஜாதை மகனை வாழ்த்தியது. குஹ்யசிரேயஸின் மெல்லிய சாம்பல்நிற மயிர் பரவிய சிறிய தலையின் இனிய வாசனையை முகர்ந்து காதுகளை விடைத்து ஒலியெழுப்பியது. குஹ்யசிரேயஸ் முன்னால் பாய்ந்து சென்று சிம்மத்தின் அடிவயிற்றைக் கவ்வியது.
சிம்மம் வலியில் எழுந்து நின்றுவிட்டது. அத்தனை கழுதைப்புலிகளும் சிதறி தப்பி ஓடின. குஹ்யஜாதையின் மூன்று குட்டிகளும் சிம்மத்தின் மீதிருந்து கீழே விழுந்து புல்லில் அடிவயிறுகாட்டி புரண்டு எழுந்தன. ஆனால் சிம்மத்தின் உடலில் ஓர் உறுப்பு போல குஹ்யசிரேயஸ் கடித்ததை விடாமல் தொங்கிக்கிடந்தது. சிம்மம் முன்னால் ஓடிச்சென்று முகம் தரையில் மோத விழுந்து எலும்பு மட்டுமேயாகிப்போன பின்னங்கால்களையும் கிழிந்து தொங்கிய பிட்டத்தையும் துடிக்கச்செய்தபடி கடைசி உயிர்விசையால் அலறியது.
சிம்மக்குரல் கேட்டு புதர்களுக்கு அப்பால் ஒரு கல்லாலமரத்தடியில் தனித்திருந்த வியாசர் எழுந்து ஓடிவந்தார். ‘ஆ! ஆ!’ என அலறியபடி ஓடிவந்தவர் சிம்மம் ஒன்றை கழுதைப்புலியின் கையளவு சிறிய குட்டி ஒன்று கவ்வி உண்பதைக் கண்டார். திகைத்து நின்ற அவரிடம் பிடிவிட்டு எழுந்த குஹ்யசிரேயஸ் “ஏன் வியப்படைகிறீர் வியாசரே? ஷத்ரியர்களை நீர் முன்னரே கண்டதில்லையா?” என்றது. “நான் என்குலத்தை வாழச்செய்யப் பிறந்தவன்…தலைமுறைகள் தோறும் எல்லா குலங்களிலும் பேருயிர்களாகிய நாங்கள் பிறந்துகொண்டே இருக்கிறோம். ஈயிலும் எறும்பிலும் கிருமியிலும்கூட.”
சித்ரகர்ணி தன் கண்களை மட்டும் விழித்து வியாசரைப் பார்த்தது. “…அத்துடன் நாங்கள் எப்போதுமே கொன்று உண்ணவும் படுகிறோம். அழிவின்வழியாகவே ஆக்கத்துக்கு வழிவகுக்கிறோம்” என்றது. “உன் மனக்குழப்பத்தைக் கண்டு நீ கற்ற சொற்களெல்லாம் சிரிக்கின்றன வியாசா” என்றபடி குஹ்யஜாதை அருகே நெருங்கி வந்தது. “என் பணி இவனைப் பெற்று ஊட்டி உலகளிப்பதேயாகும். இவனை உருவாக்குவதற்காகவே நான் இப்போது என் குலத்திலேயே பேராற்றல் கொண்டவளாகிறேன்… இவனை வளர்க்கும்பொருட்டு நான் இவ்வனத்தை ஆள்கிறேன்.”
“உன்பெயர் சித்ரகர்ணி என்று அறிகிறேன்” என்றார் வியாசர். “பிறவிகளின் தொடரில் கடைசிக்கடனை இதோ செலுத்திக்கொண்டிருக்கிறாய்.” சிரித்தபடி துள்ளிக்குதித்த குஹ்யசிரேயஸ் “என் கடனை நான் ஈட்டிக்கொண்டிருக்கிறேன்” என்றது. குஹ்யஜாதை “நான் அழிவற்ற நிலம் போன்றவள். அனைத்தையும் தாங்குபவள். என்னில் முளைகளெழுந்து கிளைவிடுவனவெல்லாம் என்னில் மடிந்து அமையும் வரை காத்திருப்பவள்” என்றது.
“ஆம், அன்னையே” என்றார் வியாசர். “நான் என் அன்னயையே அறியாமல் வளர்ந்தவன்.” குஹ்யஜாதை “அன்னையை அறியும் கணம் வாய்க்காத மைந்தர் எவரும் மண்ணில் இல்லை” என்றது. வியாசர் புன்னகைசெய்து “ஆம் தாய்மையை அறியும் கணமொன்று எனக்கும் வாய்த்திருக்கிறது.” குஹ்யஜாதை முன்னால் வந்து முகத்தை நீட்டி “அதனால் நீ ஞானம் அடைந்தவனானாய்” என்றது. குஹ்யசிரேயஸ் மெல்ல முன்னால் வந்து தன் கழுத்தின் பிசிர்மயிரைக் குலைத்தபடி “எப்படி?” என்று கேட்டது. சித்ரகர்ணி தன் காதுகளை மெல்லக் குவித்து கேட்கச் சித்தமானது.
VENMURASU_EPI_29
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
“ஏழுவயதில் நான் என் தந்தையைப்பற்றி விசாரித்து அறிந்து அவரிடம் சென்றேன். பீதவனத்தில் அவரது நூறு மாணவர்களில் ஒருவனாக என்னையும் சேர்த்துக்கொண்டார்” என்றார் வியாசர். பிற கழுதைப்புலிகளும் வந்து அமர்ந்து கதைகேட்கத் தொடங்கின.
தந்தையின் பாதங்களில் அமர்ந்து வேதவேதாங்கங்களைக் கற்றேன். ஆனால் என்னை என் தோழர்கள் புறக்கணித்தனர். மீனவச்சிறுவனாகவே நான் நடத்தப்பட்டேன். ஒவ்வொருநாளும் முழுமையான தனிமையிலேயே வாழ்ந்தேன். கங்கையில் நீரில்குதித்து நூறுமுறை இருகரையும் தொட்டு நீராடுவது மட்டுமே எனக்கு இன்பமளிப்பதாக இருந்தது. கங்கையில் ஒருமுறைகூட நீர்கடக்கமுடியாத என் தோழர்கள் அதனாலேயே என்னை மீன்குஞ்சு என்று இழித்துரைப்பதை நான் அறிந்திருந்தேன்.
அன்றொருநாள் நீராடிக் கரைசேர்ந்தபோது கரையில் அரசமரத்தடியில் நின்றிருந்த ஒரு பெண் என்னைப்பார்த்தாள். அரசஉடையும் மணிமுடியும் அணிகளும் அணிந்து அருகே சேடியுடன் இருந்த அவளை அஸ்தினபுரியின் பேரரசி என்று அறிந்தேன். அருகே சென்று வணங்கினேன். என்னை வாழ்த்திவிட்டு சேடியை விலகும்படி ஆணையிட்டாள். குனிந்து என்னிடம் நடுங்கும் குரலும் ஆவல் நிறைந்த கண்களுமாக நான் கங்கையில் எத்தனைமுறை நீர்கடந்தேன் என்று கேட்டாள். நூறு முறை என்று சொன்னதும் நான் எதிர்பாராதபடி குனிந்து என் தலையை முகர்ந்தாள்.
என்னை எவரும் தொட்டதில்லை. ஞானயோகியான என் தந்தை எவரையுமே தொடுவதில்லை. சாலைமாணாக்கர்கள் என்னைத் தீண்டுவதை தவிர்த்தனர். தொடுகையினால் அதிர்ந்து பின்னடைந்த நான் “தொடாதே…நீ இல்லறத்துப்பெண். நான் பிரம்மசாரி” என்றேன். “குழந்தை உன் பெயர் கிருஷ்ண துவைபாயனன். நான் உன் அன்னை” என்றாள். நான் குழப்பத்துடன் “இல்லை, நான் ஒரு பித்திக்குப் பிறந்தவன்…” என்றேன். “ஆம், அதுநானே. நீ பிறக்கும்போது நான் பித்தியாக இருந்தேன். இன்று அஸ்தினபுரியின் அரசியாக இருக்கிறேன்” என்றாள்.
நான் சினத்துடன் “பாம்புதான் குழவிகளை கைவிட்டுச் செல்லும். மானுடப்பெண் அதைச் செய்யமாட்டாள். நீ பாம்புக்கு நிகரானவள். விலகிச்செல்” என்றேன். “மகனே, நான் பித்தியாக இருந்தபோது எனக்கொரு குழந்தை பிறந்தது என்று அறிவேன். அக்குழந்தை யாரென்றும் அதன் தந்தை யாரென்றும் எனக்குத்தெரியாது. உன் உடலின் வாசனையைக் கொண்டே நீ என் மகன் என்று சொல்கிறேன்” என்றாள்.
கடும்சினத்துடன் “நீ உன் உடலின் நீங்காத காமவாசனையை எனக்களித்தாய். என் ஞானத்தின்மீது அந்த மாமிசநெடி பரவியிருக்கிறது. வேதங்களனைத்தையும் கற்றிருந்தாலும் என்னால் ஞானத்தில் நிலைகொள்ள முடியவில்லை. அது நீ எனக்களித்த சாபம். என்னைப் பெறுவதற்கு நீ தகுதியானவளல்ல. உன் வயிற்றில் பிறந்ததனால் நானும் கரையேற முடியாதவனானேன். நீ விழுந்து நீந்தும் சேற்றிலேயே என்றுமிருக்கும் தீயூழ் என்னைச்சேர்ந்தது” என்றேன்.
அவள் “தாய் ஒரு நிலம்…என்னில் விழுந்ததை முளைக்கவைப்பதே என் கடன். அது வாழ்வதற்காக நான் என்னில் இறப்பவற்றை எல்லாம் உண்பேன். என் அனல் அனைத்தையும் அளிப்பேன்” என்றாள். “தாய்மையை எந்தப் பாவமும் சென்று சேராது என்கின்றன நூல்கள்” என்று சொன்ன அவளை நோக்கிச் சீறியபடி கங்கையில் ஒரு கைப்பிடி அள்ளி மேலே தூக்கி “என் தவமும் ஞானமும் உண்மை என்றால் நீ இப்போதே மீண்டும் யமுனையில் மீனாக மாறு” என்று தீச்சொல் விடுத்தேன். ஆனால் அவள் புன்னகையுடன் அங்கேயே என்னை நோக்கியபடி நின்றிருந்தாள். மீண்டும் மும்முறை வேதமோதியபடி அவளை தீச்சொல்லால் சுட்டேன். அவள்முகத்தின் கனிந்த புன்னகை விலகவில்லை.
அழுதபடி நான் ஓடிச்சென்று என் குருவின் காலடியில் வீழ்ந்தேன். “கற்றவேதமெல்லாம் எனக்குப் பயனளிக்காதா, என்குல இழிவு என்னை விட்டு நீங்காதா?” என்றேன். “மைந்தா, நீ ஞானத்தின் முடிவில்லா வல்லமையை அறியாமல் பேசுகிறாய். மண்ணுலகில் ஒவ்வொரு உயிருக்கும் ஞானம் கடமையாக்கப்பட்டுள்ளது. புள்ளும் புழுவும் பூச்சியும் கிருமியும்கூட ஞானத்தையே உண்டு வாழ்கின்றன என்று அறிக.ஞானத்தால் முழுமைபெற்ற ரிஷிகளின் பிறப்புகள் அறியப்படாதவையே. ரிஷ்யசிருங்கர் மானின் மைந்தர் எனப்படுகிறார். கண்வர் மயிலுக்கும் சோமஸ்ரவஸ் நாகத்துக்கும் பிறந்தவர் என்கிறார்கள் சூதர்கள். வசிட்டரும் அகத்தியரும் ஊர்வசியின் மைந்தர்கள். ஞானமே அவர்களை முனிவர்களாக்கியது. பிறப்பு ஒரு தொடக்கம் மட்டுமே.”’
நான் அழுதுகொண்டே நின்றேன். “உன் பிறப்புக்கு என்ன காரணமென்று நீ என்றோ ஒருநாள் அறிவாய். அன்று உன்னை கருவிலேற்றிய அன்னைக்குள் வாழும் பெருநெறியை வணங்குவாய். அதுவே உன் ஞானம் தொடங்கும் கணமாகவும் அமையும்” என்றார் என் தந்தை.
ஆறுவருடங்களுக்குப் பின் அவருடன் நூறு சீடர்கள் சூழ கைலாய மலைச்சரிவில் இருந்த சதசிருங்கம் என்னும் காட்டுக்குச் சென்றேன். அங்கே பாரதவர்ஷமெங்கும் இருந்து வேதமுனிவர்கள் கூடியிருந்தனர். வேதவேதாங்கங்களை முறையாகத் தொகுப்பதற்கான முயற்சி தொடங்கி முந்நூறாண்டுகள் தாண்டியிருந்தது. ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை தொகுத்தவற்றைப்பற்றி விவாதித்துப் பொருள்கொண்டு முறைப்படுத்துவதற்கான ஞானசபை அது.
முதுமுனிவர்கள் கூடியிருந்து வேதத்தை ஆராய்ந்த அந்த சபையில் ரிஷி மைத்ராவருணி வசிஷ்டர் அழியாநீர்களை நோக்கிச் சொன்ன ரிக்வேத மந்திரம் ஒன்று பாடப்பட்டது என்றார் வியாசர். தன் மெல்லியகுரலால் அதைப்பாடினார்.
‘கடலைத் தலைவனாகக் கொண்ட நீர்கள்
விண்ணகத்தின் மையத்திலிருந்து வருகின்றன
அனைத்தையும் தூய்மையாக்கி
அழியாதொழுகுகின்றன
விண்ணிலிருப்பவை, மண்ணில் பாய்பவை
வழிகளில் ஓடுபவை, ஊற்றெடுப்பவை
கடலை நாடுபவை
தூய்மையானவை, தூய்மை செய்பவை
அந்த நீர்களெல்லாம்
என்னை காத்தருள்க!
விண்ணகம் நடுவே வீற்றிருக்கும் வருணன்
மெய்யும் பொய்யும் அறிந்தவன்
அந்நீர்கள் இனிதாகப் பொழிகின்றன
தூயவை தூய்மையாக்குபவை.
தேவியரே அன்னையரே
என்னை காத்தருள்க!
நீரன்னையரின் நடுவே
இருக்கிறார்கள் வருணனும் சோமனும்
தேவர்கள் அங்கே
அவியேற்று மகிழ்கிறார்கள்
வைஸ்வாநரன் என்னும் நெருப்பு
அங்கே வாழ்கிறான்
நீரன்னைகள் என்னை காத்தருள்க!
அந்தப்பாடலின் இனிமையால் அவர்களனைவரும் ஒளிகொண்டனர் என்றாலும் அதன் பொருள் அவர்களுக்கு விளங்கவில்லை. பொருளறியாத பல்லாயிரம் வேதமந்திரங்களில் ஒன்றாகவே அது இருந்தது. என் தந்தை உரக்க “வானிலிருந்து மழைபொழிகின்றது என்று அறிவோம் முனிவர்களே. விண்ணகத்தின் மையத்திலிருந்து பொழிபவை எந்த நீர்கள்? நீருக்குள் வாழும் நெருப்பு எது?” என்றார்.
ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக சொல்லத்தொடங்கினர். என் தந்தை “வேதம் முற்றுண்மை என்றால் அது பிரத்யக்‌ஷம் அனுமானம் சுருதி என்னும் மூன்று அறிதல்முறைகளாலும் நிறுவப்பட்டாகவேண்டும். இந்த மொழிவரிகள் முனிவர்கள் கருத்தால் கேட்ட விண்ணொலிகளை சுருதியாகக் கொண்டவை. ஆகவே அவற்றை நாம் அறிய முடியாது. உய்த்தறிதலோ முதலறிதலால் மட்டுமே நிகழமுடியும். ஆகவே முனிவர்களே ஐம்புலன்களாலும் இங்கே இப்போது நம்மாலறியப்படும் அறிதல் மட்டுமே வேதங்களை அறிவதற்கான மூலமாக அமையும்…அதைக்கொண்டு விளக்குக!”
ஒவ்வொரு விழியாகப் பார்த்துவந்த என் தந்தை “கிருஷ்ணா, நீ விளக்கு” என்று என் கண்களை நோக்கிச் சொன்னார். நான் எழுந்து “முனிவர்களே, யமுனையின் அடித்தட்டில் நூறுநூறாயிரம் முட்டைகள் பரவியிருப்பதைக் கண்டிருக்கிறேன். மீனின் முட்டைகள். புழுக்களின் முட்டைகள். நத்தைகள் சங்குகள் சிப்பிகளின் முட்டைகள். அவற்றையெல்லாம் விரியவைக்கும் வெம்மை எது?” என்றேன்.
அக்கணமே நான் சொல்லவருவதைப் புரிந்துகொண்டு முனிவர்கள் ‘ஆகா’ என்று சொல்லி எழுந்துவிட்டனர். “அந்த உயிர்நெருப்பின் பெயர் வைஸ்வாநரன் என்று அறிக! வானக மையத்தில் விண்மீன்களை விரியவைக்கும் அக்கினியும் அவனே. அங்கிருந்து வருகின்றன அன்னைநீர்கள்” என்றேன். “இது முதலுண்மை முனிவர்களே. இனி உய்த்துண்மை. நீரென்பது நீர்மையேயாகும். நீராகித் திகழும் விதிகளே நீரென்று அறிக! வைஸ்வாநரனால் முடிவிலா விண்மீன்கள் விரியச்செய்யப்படும் பெருவெளி விரிவைத் தழுவியும் ஓடுகின்றன அலகிலா நீர்மைகள்.”
‘ஆம் ஆம் ஆம்’ என முனிவர்கள் ஆமோதித்தனர். கண்வர் என் தந்தையிடம் ‘வாழ்நாளெல்லாம் வேதங்களைக் கற்ற நாம் அறியமுடியாத பொருளை இவன் எப்படி அறிந்தான் பராசரரே?’ என்றார். என் தந்தை ‘நாம் நூல்களில் வேதம் கற்றோம். அவன் கங்கையில் கற்றான். நூல்களின் ஏடுகளுக்கு முடிவுண்டு. கங்கையின் ஏடுகளுக்கு முடிவேயில்லை” என்றார். “முனிவர்களே, மலர்களில் தேன்அருந்திச் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சிக்குத்தான் வண்ணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தழை தின்னும் பசுவுக்கு அல்ல.”
“ஆம்” என்றார் கண்வர். “என் குருநாதராகிய நாரதர் சொன்னார். தும்பியின் நாதத்தை எழுதிவைக்க முயலாதே என. நாம் செய்தது அதைத்தான். வேதங்கள் கவிஞர் பாடியவை. மண்ணிலும், நதியிலும், மலரிலும், ஒளியிலும் முழுமையாக வாழ்ந்தவர்கள் அடைந்தவை. உடலில் மீன்வாசனையுடன் வரும் ஒருவனுக்காக அவை நம் நூல்களில் விரிந்து கிடந்திருக்கின்றன. இதோ வைஸ்வாநரன் விண்ணகநெருப்புடன் வந்துவிட்டான், அவன் வாழ்க!”
அன்று அந்த அவை என்னை ஆதரித்தது. வேதங்களைத் தொகுக்கும் பணியை என்னிடம் ஒப்படைத்தது. மூன்று பன்னிரண்டாண்டுகாலம் முயன்று நான் வேதங்களை சம்ஹிதையாக்கினேன். பாரதவர்ஷத்தின் நாநூறு வேதஞானிகள் எனக்கு மாணவர்களாக அமைந்தனர்.
அப்பணியைத் தொடங்கிய அன்று அஸ்தினபுரிக்குச் சென்றேன். அரண்மனையை அடைந்து பேரரசியைக் காணவேண்டுமென்று சொன்னேன். என்னை அந்தபுரத்துக்குக் கொண்டுசென்றார்கள். அங்கே வீட்டுவிலக்காகி திரைக்கு அப்பாலிருந்த என் அன்னையின் முன் நான் நிறுத்தப்பட்டேன். திரையை விலக்கி அவள் முன் சென்று அவள் காலடிகளைப் பணிந்து “அன்னையே உன் மைந்தன் இதோ வந்திருக்கிறேன். உன் ஆணை ஏதும் என் விதியே ஆகும்” என்றேன். குஹ்யஜாதையே, கொற்றவையின் கழல்கால்கள் போலக் கரியவை அவை. பத்துநகங்களும் கண்களாக மின்னும் அவற்றின் ஆசியைப்பெற்று மீண்டேன்.”
குஹ்யஜாதை மூச்சிழுத்து தலையை மெல்லத்தாழ்த்தி “இன்று நீங்கள் இவ்வனத்தில் இவ்வேளையில் ஏன் வந்தீர்கள்?” என்றாள். “இன்றுகாலை என் அன்னையின் ஆணையுடன் இளையோன் வந்தான். அன்னை அவனிடம் சொல்லியனுப்பிய அனைத்தையும் சொன்னான். பாவம், ஆணை என்ற சொல்லை மட்டுமே அவள் சொன்னால்போதுமென்று அவன் அறிந்திருக்கவில்லை” என்றார் மகாவியாசர்.
குஹ்யசிரேயஸ் சிறிய மணிக்கண்களுடன் முன்னால் வந்து “வியாசரே விதைக்குள் வாழும் அழியாநெருப்பு. இங்குள்ள அனைத்தையும் உண்டு வளர்வேன். நான் விராடன். நானே வைஸ்வாநரன். எனக்குள் என் குலத்தின் தலைமுறைகள் வாழ்கின்றன” என்றது.
“ஆம், அவை வாழ்க” என்றார் வியாசர். “பிறிதொருமுறை பிறிதொரு தருணத்தில் என் வழித்தோன்றல்கள் உங்களைச் சந்திப்பார்கள். அதற்காகவே என் அன்னையின் நெருப்பு என்னில் பற்றிக்கொண்டிருக்கிறது” என்றது குஹ்யசிரேயஸ். “இதோ அந்த நெருப்புக்கு நான் அவியிடுகிறேன்” என்றது சித்ரகர்ணி.
வியாசரின் கண்முன் சித்ரகர்ணி பொன்னிறப் பிடரிமயிருடன் எழுந்து நின்றது. அதன் காலடியில் குஹ்யசிரேயஸ் பணிந்து நிற்க அப்பால் குஹ்யஜாதை நின்று அதைப்பார்த்தது. சித்ரகர்ணி “உன் பசியடங்குவதாக. உன்னில் ஆற்றல் நிறைவதாக. என்னிலிருந்து அழியாநெருப்பு உன்னுள் நுழைந்து வாழட்டும்!” என்றது.
சுதாமனும் சுதனும் மரங்களில் ஏறி நோக்கி, புதர்களை விலக்கி வழியில்லாத காடுவழியாக அங்கே வந்து பார்த்தபோது முட்டி மோதி உறுமியபடி இறந்த சிம்மத்தைக் கிழித்துண்ணும் கழுதைப்புலிகளையும் மேலே சிறகடித்து எழுந்து அமர்ந்து கூச்சலிட்ட கழுகுகளையும் அப்பால் எம்பி எம்பி ஊளையிட்ட நரிகளையும் இன்னமும் உண்ணப்படாத சிம்மத்தின் திறந்த  வெண்விழிகளையும் பார்த்தபடி அமர்ந்திருந்த வியாசரைக் கண்டார்கள்.

170 .ரகஸ்ய மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கொப்பரிகெயவரு :- கொப்பரிகை வைத்து வாழ்ந்தவர். 
பத்ததியவரு :- பத்ததிகளோடு ஆசாரத்துடன் வாழ்ந்தவர். 
ஹெளகிகேளியவரு ;- கேளிக்கைகளுடன் சுகபோகமாக வாழ்பவர். 
எந்தசெயவரு :-

2/4/14

பகுதி ஆறு : தீச்சாரல்[ 1 ]

பகுதி ஆறு : தீச்சாரல்[ 1 ]
அஸ்தினபுரிக்குப் பின்னால் நூறு யோசனை தொலைவில் இருந்த கிரீஷ்மவனம் என்னும் காட்டுக்குள் ஓடிய தாராவாஹினி என்னும் சிற்றாறின் கரையில் கட்டப்பட்ட குடிலில் தன் பதினெட்டு சீடர்களுடன் பீஷ்மர் தங்கியிருந்தார். அவர்கள் மாலை ஆயுதப்பயிற்சிகள் முடிந்து மீண்டும் தாராவாஹினியில் நீராடி மரத்தடியில் தீயிட்டு அமர்ந்து கொண்டு வெளியூரில் இருந்து வந்திருந்த சூதரையும் விறலியையும் அமரச்செய்து கதைகேட்டுக்கொண்டிருந்தனர்.
நள்ளிரவு தாண்டியிருந்தது. பீஷ்மர் மரத்தடியில் சருகுமெத்தைமேல் விரிக்கப்பட்ட புலித்தோலில் படுத்திருந்தார். அவர் காலடியில் மாணவனான ஹரிசேனன் அமர்ந்திருந்தான். நெருப்பருகே சூதரும் விறலியும் அமர்ந்திருந்தனர். உறுதியான கரிய தோளில் சடைக்கற்றைகள் சரிந்திருக்க சிவந்த அகன்ற கண்கள் கொண்ட சூதர் பெரிய விரல்களால் கிணையை மீட்டினார்.
ஒவ்வொருநாளும் வெவ்வேறு ஊர்களில் இருந்து வரும் நாடோடிகளான சூதர்கள் அஸ்தினபுரியின் அரண்மனைமுற்றத்தில் குழுமுவதுண்டு. அவர்கள் தங்குவதற்கு அரண்மனைக்கு அப்பால் ஸஃபலம் என்ற பெரிய தடாகத்தின் மூன்றுகரைகளிலுமாக குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவர்கள் காலையில் நீராடி வாத்தியங்களுடன் அரண்மனைக்கு வந்து அரசகுலத்தவரைக் கண்டு பரிசில்பெற்றுச் செல்வார்கள். அரசியர் தங்கள் கைகளாலேயே அவர்களுக்கு கொடையளிக்கவேண்டும் என்று நெறியிருந்தது.
ஆனால் சூதர்கள் பெரும்பாலும் பீஷ்மரை சந்திக்கவிரும்புவார்கள். பீஷ்மரை சந்தித்தால் மட்டுமே அடுத்த ஊரில் அவர்கள் அவரைப்பற்றி சொல்லமுடியும். அன்று மாலை வந்திருந்த சூதர்களில் ஒருவர் அவர் சௌபநகரில் இருந்து வருவதாகச் சொன்னார். பீஷ்மரின் கண்கள் அதைக்கேட்டதும் மிகச்சிறிதாக சுருங்கி மீண்டதை ஹரிசேனன் கண்டான். அவரைத் திருப்பி அனுப்பலாமென அவன் எண்ணியதுமே பீஷ்மர் “சூதரே வருக” என்று அழைத்தார். அருகே அமரச்செய்து “பாடுக” என்று ஆணையிட்டார்.
தசகர்ணன் என்னும் சூதர் சௌபநகரம் பற்றி சொன்னார். அந்நகரில் இருந்து ஒவ்வொருநாளும் கூட்டம்கூட்டமாக மக்கள் வெளியேறி பாஞ்சாலத்துக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள் என்றார். பெண்சாபம் விழுந்த மண் என்று சௌபத்து நிமித்திகர் சொன்னார்கள். நகர்நீங்கி காடுசென்று கொற்றவையாகி வந்து ஷத்ரியர்புரிகளுக்கெல்லாம் சென்ற அம்பாதேவி அந்நகருக்கு மட்டும் வரவில்லை. அவள் மீண்டும் வருவாள் என்று எண்ணி அனைத்துக் கோட்டைவாயில்களையும் மூடிவிட்டு சால்வன் நடுங்கிக்கொண்டிருந்தான். அவள் பாஞ்சாலத்துக் கோட்டைவாயிலில் ஒரு காந்தள் மலர் மாலையைச் சூட்டிவிட்டு காட்டுக்குச் சென்றுவிட்டாள் என அறிந்ததும் நிறைவடைந்தவனாக கோட்டைவாயில்களைத் திறக்க ஆணையிட்டான். அதுவரை கோட்டைக்குள்ளும் புறமும் எவரும் அனுமதிக்கப்படவில்லை.
கோட்டைவாயில் திறந்த அன்று குலதெய்வமான சண்டிதேவிக்கு ஒரு பூசனை செய்து சூதர்களுக்கெல்லாம் பரிசுகள் வழங்க சால்வன் ஒருங்குசெய்தான். வாரக்கணக்கில் கோட்டைக்கு வெளியே தங்கியிருந்த சூதர்கள் ஊர்மன்றுக்கு வந்தனர். நகரமெங்கும் முரசறைந்து அனைவரும் வரவேண்டுமென்று ஆணையிட்டிருந்தமையால் நால்வருணத்து மக்களும் மன்றில் வந்து கூடியிருந்தார்கள். செங்கோலேந்திய காரியகன் முன்னால் வர வெண்குடை ஏந்திய தளபதி பின்னால் வர உடைவாளும் மணிமுடியுமாக வந்து மேடையில் இடப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்த சால்வன் அங்கே வாழ்த்தொலிகளே எழவில்லை என்பதை ஒருகணம் கழித்தே புரிந்துகொண்டான். அவன் பரிசில்களை கொண்டுவரும்படி சொன்னான்.
அரண்மனை சேவகர்களால் பொன், வெள்ளி நாணயங்களும் சிறு நகைகளும் அடங்கிய ஆமையோட்டுப்பெட்டி கொண்டுவந்து மன்றுமுன் வைக்கப்பட்டது. முறைப்படி முதுசூதர் வந்து மன்னனை வாழ்த்தி முதல்பரிசு பெறவேண்டும். தொங்கிய வெண்மீசையும் உலர்ந்த தேங்காய்நெற்று போன்ற முகமும் கொண்ட முதுசூதரான அஸ்வகர் எழுந்து தள்ளாடிய நடையில் சென்று மன்றுமேல் ஏறினார். முறைப்படி அவர் தன் வாத்தியத்துடன் வரவேண்டும். வெறுமே மன்றேறிய அவர் இருகைகளையும் விரித்து மக்களைநோக்கித் திரும்பி “சௌபநாட்டின் குடிகளை அழிவில்லாத சூதர்குலம் வணங்குகிறது. இங்கே நாங்கள் பெற்ற ஒவ்வொரு தானியத்துக்கும் எங்கள் சொற்களால் நன்றி சொல்கிறோம்” என்றார். அவரது குலம் ‘ஆம் ஆம் ஆம்’ என்றது.
சூதர் “இந்தமண் மீது பெண்சாபம் விழுந்துவிட்டது. இங்குவாழும் கற்பரசிகளினாலும் சான்றோர்களாலும்தான் இங்கு வானம் வெளியால் இன்னமும் தாங்கப்படுகிறது” என்றார். சால்வன் திடுக்கிட்டு எழுந்து நின்றான். சூதர் உரக்க “இனி இந்த நாட்டை சூதர் பாடாதொழிவோம் என இங்கு சூதர்களின் தெய்வமான ஆயிரம்நாகொண்ட ஆதிசேடன் மேல் ஆணையாகச் சொல்கிறோம். இந்நாட்டின் ஒரு துளி நீரோ ஒருமணி உணவோ சூதர்களால் ஏற்கப்படாது. இந்த மண்ணின் புழுதியை கால்களில் இருந்து கழுவிவிட்டு திரும்பிப்பாராமல் இதோ நீங்குகிறோம். இனி இங்கு சூதர்களின் நிழலும் விழாது. பன்னிரு தலைமுறைக்காலம் இச்சொல் இங்கே நீடிப்பதாக!” முதுசூதர் வணங்கி நிமிர்ந்த தலையுடன் இறங்கிச்சென்றார்.
சால்வன் கை அவனையறியாமலேயே உடைவாள் நோக்கிச் சென்றது. அமைச்சர் குணநாதர் கண்களால் அவனைத் தடுத்தார். சால்வன் கண்களில் நீர் கோர்க்க உடம்பு துடிக்க செயலிழந்து நின்றான். அவனையும் இறந்த அவனது மூதாதையரையும் பிறக்காத தலைமுறைகளையும் நெஞ்சுதுளைத்துக் கொன்று குருதிவழிய மண்ணில் பரப்பிப்போட்டுவிட்டு அந்த முதுசூதன் செல்வதுபோலப்பட்டது அவனுக்கு. மெல்லிய சிறு கழுத்தும், ஆடும் தலையும் கொண்ட வயோதிகன். அடுத்தவேளை உணவுக்கு காடுகளையும் மலைகளையும் தாண்டிச்செல்லவேண்டிய இரவலன். ஆனால் அளவற்ற அதிகாரம் கொண்டவன்.
மண்ணில் கால்விழும் ஓசை மட்டுமேயாக சூதர்கள் திரும்பிச்செல்வதை சால்வன் பார்த்துக்கொண்டிருந்தான். ஓடிப்போய் அவர்களின் புழுதிபடிந்த கால்களில் விழுந்து மன்றாடுவதைப்பற்றி எண்ணினான். ஆனால் அவர்கள் சொல்மீறுபவர்களல்ல. அவன் உடல்மேல் அவர்கள் நடந்துசெல்வார்கள். சென்று மறையும் சூதர்களை திகைத்து விரிந்த விழிகளுடன் நகரமக்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த வாத்தியங்களுக்குள் தங்கள் மூதாதையர் உறைவதுபோல. அவர்களும் இறுதியாக பிரிந்து செல்வதுபோல. இறுதி சூதனும் மன்றில் இருந்து வெளியேறியபோது சால்வன் பெருமூச்சுடன் தன் செங்கோலையும் உடைவாளையும் வீரர்களிடம் கொடுத்துவிட்டு தளர்ந்த காலடிகளை எடுத்து வைத்து மேடையில் இருந்து இறங்கினான்.
அப்போது கூட்டத்திலிருந்து ஒரு பெண்குரல் கல் போல அவன் மேல் வந்து விழுந்தது. கரிய உடலும் புல்நார் ஆடையும் அணிந்த முதிய உழத்தி ஒருத்தி எழுந்து வெண்பற்கள் வெறுப்புடன் விரிந்து திறந்திருக்க, இடுங்கிய கண்களில் இருந்து கண்ணீர் வழிய, அவிழ்ந்து தோளில் தொங்கிய தலைமயிர் காற்றிலாட, கைநீட்டி கூச்சலிட்டாள். “எங்கள் வயல்களின்மேல் உப்புபோல உன் தீவினை பரந்துவிட்டதே… உன்குலம் அழியட்டும்! உன் நாவில் சொல்லும் கையில் திருவும் தோளில் மறமும் திகழாது போகட்டும்! நீ வேருடனும் கிளையுடனும் அழிக! உன் நிழல்பட்ட அனைத்தும் விஷம்பட்ட மண்போல பட்டுப்போகட்டும்!”
சால்வன் கால்கள் நடுங்கி நிற்கமுடியாமல் தளபதியை பற்றிக்கொண்டான். அத்தளபதியின் கையிலிருந்த வெண்குடை சமநிலைகெட்டுச் சரிய அதை அமைச்சர் பிடித்துக்கொண்டார். அனைவருமே நடுங்குவதுபோலத் தோன்றியது. கிழவி குனிந்து ஒருபிடி மண்ணை அள்ளி தூற்றிவிட்டு ஆங்காரமாக “ஒழிக உன் நாடு…! எங்கள் மூதாதையரைத் துரத்திய உன் செங்கோலில் மூதேவி வந்து அமரட்டும்!” என்று கூவியபடி நடந்து நகருக்கு வெளியே செல்லும் பாதையில் சென்றாள். அவள்பின்னால் அவள் குலமே சென்றது.
அன்று முதல் சௌபநாட்டிலிருந்து குடிமக்கள் வெளியேறத் தொடங்கினர். குடிமக்களனைவருக்கும் களஞ்சியத்தில் இருந்து பொன்னும் மணியுமாக அள்ளிக்கொடுத்தான் சால்வன். ஊர்மன்றுகள் தோறும் விருந்தும் களியாட்டமும் ஒருங்குசெய்தான். ஒவ்வொரு குலமாக அமைச்சர்களை அனுப்பி மன்றாடினான். ஆயினும் மக்கள் சென்றுகொண்டே இருந்தனர். பதினெட்டாம் நாள் கங்கையிலிருந்து சுமையிறக்கும் யானைகள் இரண்டு மிரண்டு கூவியபடி நகருக்குள் புகுந்து துதிக்கை சுழற்றி தெருக்களில் ஓடின. அவற்றை அடக்கமுயல்கையில் ஒரு யானை வேல்பட்டு மண்ணதிர விழுந்து துடித்து இறந்தது. அதன்பின் மக்கள் விலகிச்செல்லும் வேகம் மேலும் அதிகரித்தது.
VENMURASU_EPI_27 RAIBOW_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
இன்று சௌபநகரில் இருப்பவர்கள் போகிகளும் குடிகாரர்களும் விடர்களும்தான் என்றார் சூதர். மக்கள் நீங்கிய இடங்களிலெல்லாம் வேளாண்நிலத்தில் எருக்கு முளைப்பது போல வீணர் குடியேறினர். மனம் தளர்ந்த மன்னனை மதுவருந்தவைத்து போகியாக்கிய அமைச்சர் குணநாதர் ஆட்சியை தன் கைகளில் எடுத்துக்கொண்டார். சௌபநகரின் துறைகளில் இருந்து வணிகர்களின் சுங்கம் வந்துகொண்டிருந்ததனால் மன்னன் போகிகளுக்கு அள்ளிவழங்கினான். சௌபத்தின் தெருக்களில் எங்கும் வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்த பரத்தையர் நிறைந்தனர்.
“சௌபநாட்டுக் கோட்டை வாயிலை காலையில் திறந்த காவலர்கள் அழுதகண்ணீருடன் ஒரு பெண் நகர்விட்டு நீங்கிச்செல்வதைக் கண்டனர். அவளிடம் அவள் யார் என்று கேட்டனர். அவள் அவர்களைப் பார்க்கவில்லை. அவர்கள் நின்றதையே அறியவும் இல்லை. அவள் பாதைநுனியை அடைந்தபோது எழுந்த முதற்பொன்னொளியில் அவள் உடல் புதிய பொன்னென சுடர்விட்டதைக் கண்டதும் முதியகாவலன் கைகூப்பி “அன்னையே!” என்று கண்ணீருடன் கூவினான். சௌபமகள் சாவித்ரி என அவளை அவன் அறிந்தான்.
“சௌபத்தின் செல்வத்தின் அரசியான சாவித்ரி அந்நகரை உதறிச்சென்றபின் அந்நகரம் மீட்டப்படாத வீணைபோல புழுதிபடிந்தது” என்றார் சூதர். நகரின் கைவிடப்பட்ட வீடுகளிலும் கலப்பைவிழாத நிலங்களிலும் நாகங்கள் குடியேறின. கதவுகளைத் திறந்தால் நிழல்கள் நெளிந்தோடுவதுபோல அவை விலகின. இருட்டுக்குள் இருந்து மின்னும் கண்களும் சீறும் மூச்சும் மட்டும் வந்தன.
பீஷ்மர் பெருமூச்சுடன் “ஆம், வேதாளம் சேரும், வெள்ளெருக்கு பூக்கும். பாதாளமூலி படரும், சேடன் குடிபுகும்… அதுதான் சொல்லப்பட்டிருக்கிறது” என்றார். ஹரிசேனன் அவன் மனதில் எழுந்த எண்ணத்தை உடையில் பற்றும் தீயை அணைக்கும் வேகத்துடன் அடித்து அவித்தான். ஆனால் அதையே பீஷ்மர் கேட்டார். “அஸ்தினபுரியின் பரிசில்களைப்பெற சூதர்கள் வந்திருக்கிறீர்களே?”
“பிதாமகரே, மன்னன் முதற்றே அரசு. அஸ்தினபுரியின் செங்கோலை இன்று ஏந்தியிருப்பவன் சந்திரவம்சத்தின் மாமன்னர்களில் ஒருவன். அஸ்தினபுரியின் முதன்மை வீரன். அவன் மேல் அம்பைதேவி தீச்சொல்லிடவில்லை. அவனை வாழ்த்தியே அவள் வனம்புகுந்தாள். அறத்தில் அமைந்த கோல்கொண்டவன். ஆயிரம் முலைகளால் உணவூட்டும் அன்னைப்பெரும்பன்றி போன்ற கருணைகொண்டவன். அவனை சூதர்குலம் வணங்குகிறது. இந்தமண்ணும் இங்கு சொல்லும் உள்ளவரை சூதர்மொழி அவனை வாழ்த்தி நிற்கும். அவன் வாழ்க! அவன் செங்கோல் காத்துநிற்கும் இந்த மண் வாழ்க! விசித்திரவீரிய மாமன்னன் பாதங்களில் பணியும் எங்கள் வாத்தியங்களில் வெண்கலைநாயகி வந்தமர்ந்து அருள்புரிக!”
“ஆம்” என்றார் பீஷ்மர் தலையை அசைத்து. “மானுடரில் அவன் கண்களில் மட்டுமே நான் முழுமையான அச்சமின்மையை கண்டிருக்கிறேன்.” பெருமூச்சுடன் “போரும் படைக்கலமும் அறியாத மாவீரன் அவன்” என்றார். ஹரிசேனன் அவர் மேல் ஒரு கசப்பை உணர்ந்தான். அந்தச் சொற்கள் அரசமரபுச் சொற்கள் போல அவனுக்குத் தெரிந்தன. அந்த வெறுப்பை அவனே அஞ்சியதுபோல சூதரை நோக்கி பார்வையை திருப்பிக்கொண்டான்.
சூதரின் கண்கள் செருகின. அவரது வாயின் ஓரம் இழுபட்டு அதிர்ந்தது. ஓங்கியகுரலில், “என் சொற்களில் வந்தமரும் கன்னங்கரிய சிறுகுருவி எது? இதோ என் கிணைத்தோலில் ஒலிக்கும் நெடுந்தாளம் எது? அவன் பேரைச்சொல்லும்போது என் நெஞ்சில் மிதித்தோடும் பிங்கலநிறப்புரவி எது?” முன்னும் பின்னும் ஆடி தன்னுள் ஆழ்ந்து விழித்த கண்களுடன் அவர் முனகிக்கொண்டார்.
பின்பு ஏதோ ஒரு கணத்தில் அவர் கைவிரல்கள் கிணைத்தோலில் வெறிநடனமிட்டன. பெருங்குரலில் “இதோ விண்ணகத்தில் அவன் யானைமேல் சென்றிறங்குகிறான். அவனை வெண்ணிற ஐராவதமேறி வந்து இந்திரன் வரவேற்கிறான். மாமுனிவர்களும் தேவர்களும் கூடி அவனை வாழ்த்தி குரல்கொடுக்கிறார்கள். இந்திரவில் ஏழொளியுடன் கீழ்வானில் எழுந்திருக்கிறது. மண்ணில் இந்திர வீரியம் வானகத்தின் பொற்தூரிகைபோலப் படர்ந்து அவன் புகழை எழுதிச்செல்கிறது” என்றார்.
பீஷ்மர் திடுக்கிட்டு எழுந்துவிட்டார். ஹரிசேனன் பதற்றத்துடன் சூதரைப்பார்த்தான். அவரைத்தடுத்து என்ன சொல்கிறார் என்று கேட்கவேண்டுமென எண்ணினான். ஆனால் அவர் எங்கிருந்தோ எங்கோ பறந்து செல்லும் யட்சன் போலிருந்தார். “அழியாப்புகழுடைய தன் மைந்தன் வந்ததைக் கண்டு சந்திரன் வெண்ணொளிக் கலையணிந்து வந்து கைநீட்டி அணைத்துக்கொண்டான். அதோ வெண்தாடி பறக்க கைவிரித்து கண்ணீருடன் வருபவன் ஆதிமூதாதை புரூரவஸ் அல்லவா? பேரன்புடன் சிரித்து எதிர்கொள்பவன் ஆயுஷ் அல்லவா? நகுஷன் அல்லவா அவனருகே நின்று புன்னகைக்கிறான்? மைந்தன் புருவை அணைத்து நின்றிருப்பவன் யயாதி அல்லவா?”
கிணை துடியாக மாறிவிட்டதுபோல தாளம் வெறிகொண்டது. “ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு ஆகியோர் வந்தார்கள்! பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன் ஆகியோர் வந்தார்கள்! பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்‌ஷத்ரன் ஆகியோர் வந்தார்கள்! மூதாதையர் அனைவரும் வந்து நிற்கும் வான்வெளியில் இறங்கினான் அஸ்தினபுரியின் அறச்செல்வன்! வாழ்க அவன் புகழ்!
“அய்யோ, மாமன்னன் ஹஸ்தியல்லவா அவனைத் தழுவுகிறான். அந்த வலியபெருங்கரங்களில் இறுகிநெளிந்து யானைபுஜங்களில் முகம் சேர்க்கிறானே அவனல்லவா இந்நாட்டின் அழியா மணிமுத்து! வீரத்தால் வென்றவருண்டு, மதியுரத்தால் வென்றவருண்டு, நட்பால் வென்றவருண்டு, குலத்தால் வென்றவருண்டு. பெருங்கனிவால் வென்றவன் புகழ்பாடுக! சூதர்குலமே, இம்மாநகரம் அளித்த ஒவ்வொரு மணி தானியத்தையும் மாமன்னன் விசித்திரவீரியனின் புகழாக்குக!
“அஜமீடனை, ருக்‌ஷனை, சம்வரணனை, குருவை அமரர்களாக்கிய பேரன்புச்செல்வனை வணங்குக கையே! ஜஹ்னுவை, சுரதனை, விடூரதனை, சார்வபௌமனை, ஜயத்சேனனை ஒளிகொள்ள வைத்தவனைப் பாடுக நாவே! ரவ்யயனை, பாவுகனை, சக்ரோத்ததனை, தேவாதிதியை, ருக்‌ஷனை அமரருலகில் நிறுத்திய மாமன்னனைப் பணிக என் சிரமே! சூதர்களே மாகதர்களே, இன்று இதோ நம் சிறுசெந்நாவால் அவன் புகழ்பாடும் பேறு பெற்றோம். கைகூப்பி அவன் கைபற்றும் பிரதீபனை, கண்ணீரால் அவன் உடல்நனைக்கும் சந்தனுவைக் கண்டோம். அவனை சிறுகுழந்தையாக்கி மீண்டும் முலையூட்ட வந்து நின்ற மூதன்னையர் வரிசையைக் கண்டோம். சூதரே, இனிது நம் பிறவி! சூதரே இனிதினிது நம் சொற்கள்!
“பாரதமே பாடுக! இன்று வைகானச சுக்லபட்சம் இரண்டாம்நாள். இனியிந்தக் காற்றில் எத்தனை காலங்கள் அலையடிக்கும்! இனியிந்த மண்ணில் எத்தனை தலைமுறைகள் முளைத்தெழும்! இனியிந்த மொழியில் எத்தனை கதைகள் சிறகடிக்கும்! இன்று இதோ நடுகின்றோம் அஸ்தினபுரியின் மாமன்னன் புகழை. அது வளர்க! இன்றிதோ கொளுத்துகிறோம் சந்தனுவின் மைந்தனின் பெயரை. அது எரிக! இன்றிதோ ஏற்றுகிறோம் சந்திரவம்சத்து விசித்திரவீரியனின் பெரும்புகழ்க்கொடியை. அது எழுக! ஓம் ஓம் ஒம்!”
விண்ணில் ஓடும் வானூர்தியிலிருந்து தூக்கிவீசபட்ட யட்சன் போல சூதர் மண்ணில் குப்புற விழுந்தார். தன் கிணைப்பறை மேலேயே விழுந்து மெல்லத் துடித்து கைகால்கள் வலித்துக்கொண்டு வாயில் நுரைக்கோழை வழிய கழுத்துத்தசைகள் அதிர கண்ணீர் வடிய ஏதோ முனகினார். சூதர்கள் தங்களுக்குள் பேசும் ஆதிமொழியில் அவரிடமிருந்து பொருளறியாச் சொற்கள் வந்தபடி இருந்தன. விறலி அவரை மெல்லத்தூக்கி அமரச்செய்து நீர்புகட்டினாள்.
பீஷ்மர் எழுந்து விரைந்து நடந்து தன் குடில்நோக்கிச் சென்றார். ஹரிசேனன் பின்னால் ஓடினான் “என்ன சொல்கிறார் சூதர்?” என்றான். பீஷ்மர் “அவர் சொல்வது உண்மை. அவரில் வாக்தேவி வந்து சொன்னவை அவை. அவர் சொன்ன அக்கணத்தில் விசித்திரவீரிய மாமன்னன் மண்நீங்கியிருக்கிறார்.” “அப்படியென்றால் ஏன் காஞ்சனம் ஒலிக்கவில்லை? பெருமுரசம் முழங்கவில்லை?”
“தெரியவில்லை… காஞ்சனத்தின் நாவும் பெருமுரசின் கோலும் பேரரசியின் ஆணைக்குக் கட்டுப்பட்டவை அல்லவா?” என்றார் பீஷ்மர். “ஹரிசேனா, நீ அந்த தோதகத்தி மரத்தின்மேல் ஏறிப்பார். அவர் சொன்னதுபோல அஸ்தினபுரிக்குமேல் மென்மழையும் விண்வில்லும் இருக்கின்றனவா என்று கண்டு சொல்!”
ஹரிசேனன் “இப்போது இரவு…” என்றபின் அவர் பார்வையை கவனித்து மரத்தில் பரபரவென்று தொற்றி மேலேறினான். பீஷ்மர் கீழே நின்றார். ஹரிசேனன் மேலிருந்து ‘ஆ!’ என்று வியப்பொலி எழுப்பினான். “என்ன?” என்றார் பீஷ்மர்.
“அங்கே அரண்மனை முகடுகளுக்குமேல் வானத்தில் மெல்லிய வெண்ணிற ஒளி நிறைந்திருக்கிறது. அதனருகே இந்திரவில் வண்ணம் கலைந்துகொண்டிருக்கிறது.” ஹரிசேனன் கண்ணீருடன் உடைந்து. “மென்மழைபெய்கிறது பிதாமகரே… மாளிகைமுகடுகள் பளபளக்கின்றன” என்றான். கீழே விழுந்துவிடுவான் என்று தோன்றியது. கைகளால் மரத்தை இறுகப்பற்றிக்கொண்டு நடுங்கும் உடலுடன் மேலேயே இருந்தான்.
பின்பு கீழே பார்த்தபோது பீஷ்மர் நடந்து செல்வதைக் கண்டான். இறங்கி வந்து அவர் பின்னால் சென்றான் ஹரிசேனன். தாராவாஹினிக்கரையில் பீஷ்மர் சென்று நின்றார். இருபக்கமும் அகன்ற மணல்வெளி கொண்ட ஆற்றின் மீது அசைவில்லாததுபோலக் கிடந்த கரிய நீரில் விண்மீன்கள் பிரதிபலித்திருந்தன. கைகளைக் கட்டியபடி அவற்றைப் பார்ப்பவர் போலவோ பார்வையற்றவர் போலவோ பீஷ்மர் நின்றிருந்தார்.