அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

4/9/14

நூல் இரண்டு – மழைப்பாடல் – 30

நூல் இரண்டு – மழைப்பாடல் – 30


இருள்கனத்த பின்னிரவில் மதுராபுரியின் அமைச்சனான வசுதேவன் மார்த்திகாவதிக்குக் கிளம்பினான். மார்த்திகாவதிக்கு தங்கையைப் பார்க்கச் செல்வதாக கம்சனுக்கு ஒரு சிறிய செய்தியை அனுப்பிவிட்டு திறமையான இரு படகுக்காரர்களுடன் வேகமாகச் செல்லும் பாய்மரத்தோணியைக் கொண்டுவர ஆணையிட்டான். மழைத்தூறல் இருந்த பின்னிரவு கனத்த கரடித்தோல்போல நகரை மூடியிருந்தது. யமுனையிலிருந்து வெம்மையான ஆவி எழுந்து நகரில் உலவிக்கொண்டிருந்தது.

யமுனைப் படித்துறையில் பால்தாழிகளுடன் படகுகள் இல்லை. கருக்கிருட்டிலேயே அவை ஒவ்வொன்றாக வரத்தொடங்கும். நீரில் ஒளிதோன்றுகையில் யமுனைப்பரப்பெங்கும் கனத்த தாழிக்கு இருபக்கமும் பாய்கள் எழுந்து காலையொளியில் சுடரும் படகுகள் தட்டாரப்பூச்சிகள் போல நீர்ப்பரப்பையே நிறைத்து வந்துகொண்டிருக்கும். கரையெங்கும் தாழிவண்டிகள் வந்து உலோக ஒலிகளுடன் மொய்க்கும். அதன்பின் எதிர்த்திசைப்பயணம் மிகக்கடினம்.
கிழக்கே சூரியன் தோன்றும்நேரத்தில் வசுதேவன் மார்த்திகாவதியின் புறத்தே இருந்த காட்டுப்பகுதியை அடைந்துவிட்டான். அதிகாலைக்காற்றைத் திரட்டி மலராத தாமரை இதழ்கள் போல ஒன்றுக்குள் ஒன்று என திரும்பியிருந்த பாய்களுக்குள் அனுப்பிய படகு அந்த விசையில் மூக்குநுனியை நன்றாகத் தூக்கி வளைந்து வளைந்து வந்துகொண்டிருந்த கரிய அலைகளில் புரவிபோல பாய்ந்து எழுந்து விழுந்து மீண்டும் எழுந்து பாய்ந்து விரைந்தது. இருளில் முரசுத்தோலில் கோல்படும் இடம் தெரிவதுபோல யமுனையின் நீர்த்தடம் தெரிய இருபக்கமும் காடும் ஊர்களும் இருளடர்ந்து நின்றன.
கௌந்தவனம் மார்த்திகாவதியை நெருங்குவதற்கு முன்னரே யமுனைக்கரையை வந்தடையும் ஒரு மண்சாலையின் மறுநுனியில் இருந்தது. அந்தசாலைமுனையில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மரப்படகுத்துறையில் அனகை விட்டு வந்திருந்த வெண்குதிரை மேய்ந்துவிட்டு வந்து சேணத்தை மாட்டியிருந்த மரத்தடியில் மூன்றுகாலில் தூங்கிக்கொண்டு நிற்பது தெரிந்தது. இரண்டுபடகுகள் நீரில் ஆடியபடி ஒன்றையொன்று தோள்களால் முட்டி விளையாடி நின்றன. பாய்மரங்களை சுருக்கிக்கொண்ட வசுதேவனின் படகு படித்துறையை நெருங்கியதும் ஒரு படகோட்டி எழுந்து கைகளை ஆட்டி துறையின் ஆழத்தை சைகையால் தெரிவித்தான்.
வசுதேவனின் படகு கலத்துறையின் மூங்கில்சுருள்களை மோதி விலகி மீண்டும் மோதி அமைதிகொண்டது. படகோட்டி கரையில் குதித்து படகிலிருந்து வீசப்பட்ட கயிற்றைப்பற்றி கரையில் இருந்த தறியில் சுற்றிக்கட்டினான். வசுதேவன் படகிலிருந்து இறங்கி நேராக குதிரையை நோக்கிச் சென்றான். அனகை படகுக்காரர்களால் தூக்கிவிடப்பட்டு கரையேறுவதற்குள் வசுதேவனே குதிரைக்கு அருகே மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த சேணத்தை எடுத்து குதிரைமேல் கட்டத் தொடங்கிவிட்டான். சேணம் மழையில் நனைந்து குளிர்ந்து ஊறியிருந்தது. அனகை வசுதேவனின் முகத்தைப் பார்த்தபடி குதிரையின் பட்டைகளை வயிற்றுக்கு அடியில் கட்டி இழுத்து இறுக்கினாள். குதிரை ஆர்வமாகத் திரும்பி வசுதேவனைப் பார்த்து அவனுடைய தோளை நீண்ட கனத்த நாக்கை நீட்டி நக்கியது.
வசுதேவன் குதிரையின் நீண்டு ஒடுங்கிய மூக்கை தன் கைகளால் வருடியும் அதன் மூக்குத்துளைகளை அழுத்தி மூடித் திறந்தும் அதனுடன் கொஞ்சினான். அனகை பின்பக்கம் ஏறி அமர்ந்ததும் வசுதேவனும் சேணத்தை மிதித்து குதிரைமேல் ஏறிக்கொண்டான். அவன் கால்களால் அணைத்ததும் குதிரை பெருநடையில் செல்லத் தொடங்கியது. வசுதேவன் அதுவரை அவனுள் இருந்த இறுக்கம் மெல்லத்தளர்வதுபோல பெருமூச்சுவிட்டான்.
மழைக்காலத்தில் மழைநீர் வழியும் ஓடையாகவும் ஆகிவிடும் அந்தப்பாதை மண் அரித்து வேர்ப்பின்னல்களாக மாறியிருந்தது. குதிரை சிறுசெவி கூர்ந்தும் நாகமெனச்சீறி முகர்ந்தும் வேர்களின் இடைவெளிகளில் காலைத்தூக்கி வைத்து விரைவு குறையாது சென்றுகொண்டிருந்தது. இருபக்கத்திலிருந்தும் பாதைமேல் நீண்டு கூரையென மூடியிருந்த இலைத்தழைப்புக்களிலிருந்து நீர் சொட்டிக்கொண்டே இருக்க சற்றுநேரத்திலேயே அவர்கள் முழுமையாக நனைந்துவிட்டிருந்தனர்.
கௌந்தவனத்தில் முகவாயில் காவல் மண்டபத்தில் எட்டு காவலர்கள் இருந்தனர். அவர்கள் வசுதேவனை நன்றாக அறிந்தவர்கள். அதிகாலையில் அவர்கள் தோலாடைகளைக் கழற்றி வைத்துவிட்டு குளிருக்கு மரவுரியைப் போர்த்தியபடி குவிந்து அமர்ந்திருந்தனர். ஒருவன் சிறிய விறகடுப்பில் காய்ச்சிய பாலை இருவர் மரக்குவளைகளில் அருந்திக்கொண்டிருந்தனர். வசுதேவனை அப்போது எதிர்பாராமையால் முதலிரு காவலர்களும் திகைத்து எழுந்து நிற்க மரவுரிக்கு அடியில் அவர்கள் சிற்றாடை மட்டுமே அணிந்திருப்பது தெரிந்தது. ஒருவன் அப்பால் ஆலம்விழுதால் பல்தேய்த்துக்கொண்டிருந்த தலைவனை நோக்கி ஓடினான். தலைவன் விழுதை வீசிவிட்டு ஓடிவந்தான். வசுதேவன் அவர்களிடம் கையை மட்டும் அசைத்துவிட்டு உள்ளே சென்றான்.
கௌந்தவனத்தில் பன்னிரண்டு குடில்கள் இருந்தன. மையமாக இருந்த பெரியகுடிலில்தான் துர்வாசர் தவத்தின்போது தங்கியிருந்தார். அவரது மாணவர்களுக்காக கட்டப்பட்ட மூன்று குடில்கள் வலப்பக்கம் இருளுக்குள் நின்றன. அரசகுலத்தவர்களுக்கான நான்கு குடில்கள் பின்பக்கமிருந்தன. சேவகர்கள் தங்கும் குடில்கள் சற்று அப்பால் ஒரு தொகையாக அமைந்திருந்தன. அனகை குதிரையிலிருந்து இறங்கி நேராக பிருதையின் குடிலுக்குச் சென்றாள்.
VENMURASU_EPI_80
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
அனகை கதவைத் தட்டுவதற்கு முன்னரே பிருதை திறந்தாள். அவள் குதிரைக்குளம்படிகளைக் கேட்டிருந்தாள். அனகையிடம் பிருதை அவள் செல்லலாம் என மெல்ல தலையசைத்து ஆணையிட்டாள். அனகை தலைவணங்கி விலகி குடிலின் பின்பக்கம் சென்றாள். ஈர உடைகளை உதறியபடி வசுதேவன் குடிலுக்குள் நுழைந்தான். பிருதை அவனுக்கு உலர்ந்த மரவுரியாடையை எடுத்துவந்து பீடத்தில் வைத்தாள். அவன் ஆடையை மாற்றிக்கொள்ளாமல் அப்படியே பீடத்தில் அமர்ந்து தன் தலையை கைகளால் பற்றிக்கொண்டான்.
பிருதை அவனருகே ஒரு சிறிய பீடத்தில் அமர்ந்து தன் கைகளை மடியில் குவித்துக்கொண்டு அவனையே பார்த்தாள். அவன் அவளை ஏறிட்டுப்பார்க்காமல் தலையைக் குனிந்து அமர்ந்திருந்தான். அவன் பேசுவான் என எதிர்பார்த்திருந்த பிருதை பின்னர் மெல்ல தன் உடலை அசைத்து சற்றுக் குனிந்து “அந்த ராஜநாகம் வந்தது எனக்கான விடையை அளித்தது மூத்தவரே” என்றாள். “வரவிருக்கும் மைந்தன் பெருவல்லமைகொண்ட ஒருவனாக இருக்கலாம். அவனால் யாதவகுலமே பெருமை அடையலாம்.”
வசுதேவன் சினத்துடன் தலைதிருப்பி “கருவிலுள்ளது மைந்தன் என நீ எப்படி அறிந்தாய்?” எனக் கேட்டான். “நான் அறிவேன்” என பிருதை பதில் சொன்னாள். “எனக்கு சென்ற சிலநாட்களாக வந்துகொண்டிருக்கும் கனவுகளும் நடந்த நிகழ்வுகளும் நன்றாகவே இயைந்துபோயின.” என்ன கனவுகள் என்பதுபோல வசுதேவன் பார்த்தான். “இக்கரு என்னுள் நுழைந்ததுமுதல் நான் நாகங்களையே கனவில் கண்டுகொண்டிருக்கிறேன்.”
வசுதேவன் அவள் கண்களைக்கண்டதும் சற்றே அகக்கசப்பு கொண்டான். அவளிடம் எப்போதுமிருக்கும் அறிவும் சமநிலையும் அழிந்து கருவுற்றிருக்கும் அத்தனை பெண்களிலும் கூடும் பேதைமை திகழ்ந்தது என அவன் எண்ணினான். வெளுத்த கண்களையும் உதடுகளையும் பார்த்துவிட்டு அவன் பார்வையை திருப்பிக்கொண்டான். “இந்தக்காட்டிலிருக்கையில் நாகங்கள் கனவில் வருவது இயல்பே” என்றான் வசுதேவன். “அத்துடன் யாதவகுலத்தில் கருவுறும் அனைத்துப்பெண்களும் நாகங்களையே கனவில் காண்கிறார்கள்.”
பிருதை “நான் நாகங்களை அஞ்சினேன். ஆனால் அவனைக்காக்க அரசநாகமே வந்தது” என்றாள். வசுதேவன் சினத்துடன் “பிருதை, என்னை உனக்குத்தெரியும். நான் அறிவையே கருவியாகக் கொண்ட அரசியல் சூழ்மதியாளன். இந்தச் சிறு நிகழ்வை என்னால் விளங்கிக்கொள்ளமுடியாதா என்ன? கருவை அழிக்க இங்கே மருத்துவச்சிகள் நீர்க்கவைத்த நாகவிஷத்தைத்தான் கையாள்கிறார்கள். அந்த மருத்துவச்சியின் பெட்டியில் நாகவிஷம் இருந்தது. இந்தப்பெண் அதை அசைத்து எடுத்துக்கொண்டுவந்தபோது அது கசிந்து வாசனை கிளம்பியிருக்கலாம். ராஜநாகம் பிற பாம்புகளை மட்டுமே உண்ணக்கூடியது. அந்த நாகவிஷத்தின் வாசனையால் கவரப்பட்டு அந்நாகத்தை உண்பதற்காக ராஜநாகம் பின்னால் வந்திருக்கிறது. அந்தப்பெட்டிக்குள் இருந்த நாகவிஷத்தை அது அணுகும்போது கிழவி மரவுரியை கையால் எடுத்தாள். கொத்திவிட்டது… போதுமா?” என்றான் வசுதேவன்.
பிருதை “இல்லை” என ஏதோ சொல்லவந்தாள். “சற்று பேசாமலிருக்கிறாயா?” என்று உரத்தகுரலில் வசுதேவன் சொன்னான். பிருதை தலைகுனிந்து நெற்றிப்பொட்டை தன் விரல்களால் அழுத்தியபடி அமர்ந்திருந்தாள். சிலகணங்கள் அவளுடைய தலையின் வெண்ணிறமான வகிடையே நோக்கியிருந்தபின் அவள் தோளில் கையை வைத்தான். “சரி, வருந்தாதே. நான் வேண்டியதைச் செய்கிறேன்” என்றான். அவள் தன் முகத்தையும் மூக்கையும் மேலாடையால் அழுத்தித் துடைத்தாள். சிவந்து கனத்த இமைகளுடன் அவனை ஏறிட்டுப்பார்த்தாள்.
“நான் இந்தக்குழந்தையை அழிக்க எண்ணினேன்” என்றாள் பிருதை. “ஏன் அவ்வாறு எண்ணினேன் என்று என்னைக்கேட்டுக்கொள்கிறேன்… என்னால் விடையளிக்க இயலவில்லை.” வசுதேவன் அவள் தானே அதைச் சொல்லிக்கொள்கிறாள் என்று உணர்ந்தான். “நான் யாதவப்பெண். நம்குலத்தில் விரும்பிய ஆணை நாடி கருவுறும் உரிமை பெண்டிருக்குண்டு… நான் கருவுற்றிருக்கும் செய்தியை மார்த்திகாவதியின் அரசருக்குச் சொன்னால் அவர் என்னை அழைத்து பேறுகாலப்பூசனைகள்தான் செய்யவேண்டும். ஆயர்குலத்து மூதாதையர் அதையே ஆணையிடுவார்கள்.”
அவள் அலைபாயும் விழிகளுடன் வசுதேவனை நோக்கினாள். “ஆனால் இக்கரு இது எனக்குள் வந்த நாள்முதல் பாம்புகளின் நெளிவுமட்டும்தான் என் கனவில் வந்துகொண்டிருந்தது. இது ஏதோ தீங்கைக் கொண்டுவருமென எண்ணினேன்… ஆனால் ராஜநாகமே வந்து அதைக் காத்தபோதுதான் அது எளியதோர் மகவல்ல என்று உறுதிகொண்டேன்.”
வசுதேவன் “மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக்கொண்டிருக்காதே…” என்றான். “அப்படியென்றால் ஏன் அது என்னை தீண்டவில்லை? என் கால்கள்தான் அருகே இருந்தன” என்றாள் பிருதை. “என்ன பேசுகிறாய் என்று தெரிந்துதான் சொல்கிறாயா?” என்று வசுதேவன் கோபமாக சொன்னபடி எழுந்தான்.
“மூத்தவரே நான் இக்கருவை எப்படி அடைந்தேன் என்று நீங்கள் இன்னமும் வினவவில்லை” என்றாள் பிருதை. “சிலவற்றை தமையனாக நான் கேட்டுக்கொள்ளமுடியாது அல்லவா?” என அவளை நோக்காமலேயே வசுதேவன் பதில் சொன்னான். “தாங்கள் அறிந்தாகவேண்டிய செய்திதான்…” என்றாள் குந்தி. வசுதேவன் அவளை ஏறிட்டு நோக்கி “இது ஏதோ முனிவரின் கரு என நீ சொல்லப்போவதில்லை என நம்புகிறேன்” என்றான். பிருதை அவன் கண்களைச் சந்தித்தாள். அக்கணத்தில் அவன் நன்கறிந்த களித்தோழியாக மாறி “இல்லை” என புன்னகைசெய்தாள்.
“மூத்தவரே, இரண்டாண்டுகளுக்கு முன்பு மாமுனிவரான துர்வாசர் மார்த்திகாவதிக்கு வந்தார். இங்குள்ள வனத்தில் தவம்செய்ய விரும்புவதாகச் சொன்னார். பொதுவாக முனிவர்கள் ஷத்ரியர்களல்லாத மன்னர்களை நாடி வருவதில்லை. முனிவரைக்கண்டதும் என் தந்தையான குந்திபோஜர் பேருவகை அடைந்தார். முனிவருக்கான அனைத்தும் ஒருக்கப்படவேண்டுமென ஆணையிட்டார். முனிவர் இங்குவந்து தங்கிச்சென்ற செய்தியை வரும்காலங்களில் சூதர்கள் பாடவேண்டுமென்பது அவரது விருப்பம். முனிவர் தங்கும்பொருட்டு கௌந்தவனம் என்ற இந்தச் சோலை ஒருக்கப்பட்டது. இங்கே குடில்கள் அமைந்தன” என்றாள் பிருதை.
அரண்மனைக்கு வந்த முதிர்ந்த முனிவரை நானும் என் தாயும் எதிர்கொண்டு அனைத்துப் பணிவிடைகளையும் செய்தோம். அவர் அரண்மனையில் தங்கியிருந்த நாட்களில் ஒருமுறை நீராட்டறையில் அவர் சுவடி ஒன்றை வாசித்துக்கொண்டிருக்க நான் அவரது முதியபாதங்களை படிகாரமிட்ட வெந்நீரால் ஒற்றிக்கொண்டிருந்தேன். முனிவர் என்னிடத்தில் உடனடியாக ஏடும் எழுத்தாணியும் வேண்டும் என்றார். அப்போது இடைநாழி வழியாக என் சேடி சத்யை சென்றுகொண்டிருந்தாள். நான் அவளுடைய முதுகை உற்று நோக்கி நெஞ்சுக்குள் ஆணையிட்டேன். அவள் திரும்பி என்னைப்பார்த்து என்னருகே வந்து ‘அழைத்தீர்களா இளவரசி?’ என்றாள். ஏடும் சுவடியும் எடுத்துவர நான் சொன்னேன்.
முனிவர் வியந்து “அதை நீ எப்படிச் செய்தாய்? எப்படி அவளை குரலில்லாமல் அழைத்தாய்?” என்று கேட்டார். நான் “தவசீலரே, அது மிக எளிய ஒரு வித்தை. பெரும்பாலான ஆயர்கள் அறிவார்கள். நாங்கள் தனித்து விலகி காட்டுக்குள் நிற்கும் பசுவை அருகே அழைப்பதற்கு அதன் உடலைக் கூர்ந்து நோக்கி ‘பார், பார், பார்’ என அகத்துக்குள் சொல்லிக்கொள்வோம். நம் அகவல்லமையை முழுக்க அந்தச் சொல்லில் குவித்தால் நாம் பார்வையைக் குவித்திருக்கும் பசுவின் உடற்பகுதியின் தோல் சிலிர்த்து அசையும். பசு திரும்பி நம்மை நோக்கும். நாம் அதன் கண்களைப்பார்த்து அருகே வா என்றால் அருகே வரும்’ என்றேன். ‘சிறுவயதிலேயே இவ்வித்தையை நானும் என் தமையனும் கற்றோம். அதை நான் மானுடரிலும் விரிவாக்கிக் கொண்டேன்’ என்றேன்.
முனிவர் வியப்புடன் “பெண்ணே, நான் இப்போது இச்சுவடியில் கற்றறிந்துகொண்டிருந்ததும் அதே வித்தையைத்தான். சூக்‌ஷ்மகதனம் என்று இதை முனிவர்கள் சொல்கிறார்கள். ஒரு மனம் இன்னொரு மனத்துடன் குரலில்லாமலேயே உரையாடமுடியும். அணுக்கள் பூச்சிகள் புழுக்கள் போன்ற சிற்றுயிர்கள் அவ்வாறு ஒன்றோடொன்று உரையாடிக்கொண்டிருக்கின்றன. உயிர்களின் அறிவும் மொழியும் விரிவடையும்தோறும் அத்திறன் இல்லாமலாகிறது. சித்தம் ஒருங்கமைந்த மனிதர்களிடம் அத்திறன் முற்றிலும் இல்லை” என்றார்.
“ஆனால் நம்மனைவருக்கும் உள்ளே நம் அறிவின் அலைகளுக்கு அடியில் அந்த முதற்பேராற்றல் உறைந்திருக்கிறது. குழந்தை அழுவதற்கு ஒருகணம் முன்னரே அன்னை அது அழப்போவதை உணர்ந்துகொள்கிறாள். காதல்கொண்ட மனங்கள் ஒன்றாகின்றன. தியானத்திலமரும் முனிவர்களின் உள்ளங்கள் ஒற்றைப்பெரும்படலமாக ஆகின்றன. சித்த அலைகளை அடக்கி அந்த ஆற்றலை உள்ளிருந்து துயிலெழுப்புவதையே சூக்‌ஷமகதனம் என்று சொல்கிறோம்” என்றார் முனிவர்.
நான் வியப்புடன் அதைப்பற்றி கேட்டேன். “அதன்மூலம் மனிதர்களின் உள்ளங்கள் ஒன்றாக முடியும். வேதங்கள் உங்கள் உள்ளங்கள் சுருதியால் ஒன்றாகட்டும் என அறைகூவுவது இதைப்பற்றித்தான். ஆயிரமாண்டுகாலமாக மானுடஞானம் மண்ணுக்கு அடியில் விரிந்திருக்கும் அந்தக் கடலைக் கண்டடைவதற்காகவே முயன்றுகொண்டிருக்கிறது. நான் தவம்செய்யப்போவதும் அந்த ஆலயவாயில் முன்புதான்” என்றார் துர்வாசர்.
மறுநாள் கௌந்தவனத்துக்குக் கிளம்பும்போது என்னையும் உடனழைத்துக்கொள்ள அவர் என் தந்தையிடம் கேட்டார். தந்தை அதை பெருமகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். நானும் அரண்மனை அறைகளை வெறுக்கத் தொடங்கிய வயது அது. காட்டின் ஒலிகளுக்காகவும் வாசனைக்காகவும் என் புலன்கள் ஏங்கின. துர்வாசருடன் நான் இங்கே வந்தேன். அவரும் அவரது மாணவர்களும் செய்த தவத்துக்கு நானும் என் சேடியரும் அனைத்துப் பணிவிடைகளையும் செய்தோம். அவருக்கு நான் சுவடிகளை வாசித்துக்காட்டினேன். புதியசுவடிகளை எழுதினேன். அவர் சொன்னவற்றை எல்லாம் சீராகக் குறித்துவைத்தேன். இங்கே அவரது இனிய மாணவியாக இருந்தேன்.
ஓரிருமாதங்களுக்குப்பின் நான் துர்வாசரின் பெயர்த்தியைப்போல ஆனேன். அவரைக் கடிந்துகொள்ளவும் கேலிசெய்யவும் உரிமை பெற்றேன். கடும்சினத்துக்கு புகழ்பெற்றிருந்த மாமுனிவர் அவர்மேல் பிறர் சுமத்திய அந்த ஆளுமையையே பலதலைமுறைகளாக தானும் கொண்டிருந்தார். அதனுள் வாழ்ந்து பழகியிருந்தார். அவரது மாணவர்கள் எவரும் அவருக்கு நேர்முன் நிற்பதோ அவர் விழிகளைப் பார்ப்பதோ அவர் சொல்லுக்கு எதிர்ச்சொல் அளிப்பதோ வழக்கமில்லை. மாமன்னர்கள்கூட அவர் முன்னால் முதுகை நிமிர்த்தாமல் நிற்பார்கள் என்றார்கள். என்னிடம் அவர் அந்த கடினமான ஓட்டைத் துறந்து வெளியே வந்து விளையாடினார். நானும் அவரும் காட்டுக்குள் மான்களைத் துரத்தினோம். தர்ப்பைகளால் மலர்களை அடித்து வீழ்த்தினோம். அனைத்து விளையாட்டுகளிலும் நான் அவரை வென்றேன். அவரது சடைகளைப் பிடித்து இழுக்கவோ தாடியில் மலர்களைக் கட்டித்தொங்கவிடவோ நான் தயங்கியதில்லை.
நான்குமாதங்களுக்கு முன்பு துர்வாசர் தன் தவத்தை முடித்துக்கொண்டு இமயத்துக்கு கிளம்பிச்சென்றார். அவர் விடைபெறும் நாளில் நான் அவரைப் பணிந்து வணங்கினேன். என்னை வாழ்த்தி நெற்றியில் கையை வைத்த அவரிடம் “குருவே, உங்கள் ஆய்வை முடித்துவிட்டீர்களா?” என்று கேட்டேன். புன்னகையுடன் “ஆம், நான் மூன்று பெரும் சுவர்களை உடைத்திருக்கிறேன். மனிதர்களுக்கு நடுவே இருக்கும் சுவரை முதலில் உடைத்தேன். அடுத்ததாக மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே இருக்கும் சுவரைத் தகர்த்தேன். மனிதர்களுக்கும் விண்ணகப் பேராற்றல்களுக்கும் நடுவே இருக்கும் சுவரை இறுதியாக விலக்கினேன்” என்றார்.
நான் கண்களில் சிரிப்புடன் “குறிதவறிய மலர்களிடம் கேட்டால் தெரியும் உங்கள் தவவல்லமை” என்றேன். “நீ சிறுமி. உன்னால் அதை நம்பமுடியாது. அதை நானே காட்டுகிறேன் வா” என்று என்னை காட்டுக்குள் கூட்டிச்சென்றார். என்னை முன்பே செல்லவிட்டு அவர் பின்னால் வந்தார். அவர் என்னிடம் “நீ என்னை நம்பவில்லை அல்லவா?” என்று கேட்டார். அதைக் கேட்டபின்னர்தான் அவர் என்னிடம் பேசவில்லை என்பதை நான் உணர்ந்து திகைத்தேன். அவர் சிரித்துக்கொண்டு “ஒரு சிறுமியிடமன்றி வேறெவரிடம் நான் உல்லாசமாக இருக்கமுடியும்? முனிவனாக இருப்பினும் மகளைப்பெறாவிட்டாலும் நானும் ஒரு தாதன் அல்லவா?” என்றார்.
நான் திகைத்து “குருவே, நீங்கள் எப்படி என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றேன். “இப்போது நீ பேசுவதுபோல” என்றார். அப்போதுதான் அவரிடம் நான் உதடுகளால் பேசவில்லை என்று உணர்ந்தேன். உள்ளம் நடுங்கி “குருவே வேண்டாம். எனக்கு அச்சமாக இருக்கிறது” என்றேன். “சரி இந்தப் பசுவைப்பார். அது அச்சம்கொள்கிறதா என்ன?” என்றார். அந்தப்பசு “எதற்கு அச்சம்கொள்ளவேண்டும்? நான் ஏற்கனவே என் குழந்தையிடம் இப்படித்தானே பேசிக்கொண்டிருக்கிறேன்” என்று சொன்னது. பசு என்னிடம் பேசுவதை உணர்ந்த கணமே நான் அஞ்சி திரும்பி ஓடி என் குடிலை அடைந்துவிட்டேன்.
உரக்கச்சிரித்தபடி முனிவர் என் பின்னால் வந்தார். “நீ இளம்பெண். இளவரசி. நானோ மரவுரி அணிந்த கிழவன். என்னுடன் விளையாடி நீ தோற்றுவிட்டாய்” என்றார். “குருவே, எனக்கு அச்சமாக இருக்கிறது… எனக்கு இந்த விளையாட்டு தேவையில்லை. என்னை என் அரண்மனைக்கே அனுப்பிவிடுங்கள்” என்றேன். துர்வாசர் சிரித்துக்கொண்டு “சரி, நான் வென்றேன் என்று சொல்லி மூன்றுமுறை தண்டம்போடு” என்றார். நான் கண்ணீருடன் செவிகளைப் பற்றிக்கொண்டு ‘தண்டம் தண்டம் தண்டம்’ என குனிந்தெழுந்தேன். முனிவர் கைகளைத் தட்டியபடி சிரித்து துள்ளிக்குதித்து என்னைச்சுற்றிவந்து “வெற்றி…துர்வாசரால் மார்த்திகாவதியின் இளவரசி முறியடிக்கப்பட்டாள். சூதர்களே பாடுங்கள். கவிகளே எழுதுங்கள்” என்றார்.
அன்றுமாலை அவரது மாணவர்கள் கிளம்பும்போது அவர் தன் அறைக்குள் என்னை தனியாக அழைத்தார். அப்போது அவர் நானறிந்த இனிய முதுதாதை முகத்தை அகற்றி மீண்டும் முனிவருக்குரிய முகத்தை அணிந்திருந்தார். “பெண்ணே, நீ செய்த பணிவிடைகளால் முதியவனாகிய நான் மீண்டும் இளமையை அடைந்திருக்கிறேன். உனக்கு என் வாழ்த்துக்கள். என்பரிசாக நான் உன் உதவிகொண்டு அறிந்த ஞானத்தில் ஒரு துளியை உனக்களிக்கிறேன்” என்றார்.
முனிவர் எனக்கு ஒரு மந்திரத்தை செவியில் ஓதினார். அதை மும்முறை சொல்லி அகத்தில் நிறுத்திக்கொள்ளும்படி சொன்னார். ” இளவரசியே, இந்த மந்திரம் மூலம் நீ விண்ணகப் பேராற்றல்களுடன் நேரடியாகவே உரையாடலாம். நீ இன்று ஒரு சிற்றரசின் இளவரசி. உன் கணவனுடன் கூடும்போது இந்த மந்திரத்தைச் சொல். விண்ணகதேவன் ஒருவனை வரவழைத்து அவனுடைய ஆற்றலை உன் கணவனின் விந்துவில் நிறையச்செய். அந்த தேவனின் மைந்தனே உன் கருவில் எழுவான். உன் மைந்தர்களால் நீ பாரதவர்ஷத்தின் பேரரசியாக அரியணையில அமர்வாய். என்றும் இந்ததேசம் மறவாத மாதரசியாக நினைவுறப்படுவாய்” என்றார்.
பிருதையின் முகத்தைப்பார்த்தபடி வசுதேவன் திகைத்து அமர்ந்திருந்தான். ஏதோ சொல்லவிழைபவனைப்போல உடலை அசைத்தபின் தலையை காலையொளி நிறைந்த சாளரம்நோக்கி திருப்பிக்கொண்டான். அவனை நோக்கி மெல்லிய குரலில் “மூத்தவரே, என் கருவிலிருப்பது சூரியனின் மைந்தன்” என்று பிருதை சொன்னாள்.

4/8/14

நூல் இரண்டு – மழைப்பாடல் – 29

நூல் இரண்டு – மழைப்பாடல் – 29



இமயம்முதல் குமரிவரை காந்தாரம் முதல் காமரூபம் வரை விரிந்து கிடந்த பாரதவர்ஷத்தில் நூற்றியெட்டு ஆயர்குலங்கள் இருந்தன. இந்திரனால் வானம் மழையாக ஆக்கப்பட்டது. மழை புல்லாக ஆகியது. புல்லை அமுதமாக ஆக்கியவை பசுக்கள். மண்ணில் மனிதர்களை ஊட்டி வளர்ப்பதற்காக பூமியன்னையே பசுக்களின் வடிவெடுத்து வந்தாள் என்றனர் முனிவர்கள். பசுக்களை மேய்க்கும் ஆயர்குலமே குலங்களில் முதன்மையானது என்றனர். ஆயர்களிலிருந்தே பிற அனைத்துக்குலங்களும் உருவாகி வந்தன என்று புராணங்கள் சொல்லின.

ஆரியவர்த்தத்தின் ஆயர்குலங்களை யாதவர்கள் என்றனர். அவர்கள் யயாதியின் மைந்தனான யதுவின் வம்சத்தில் பிறந்தவர்கள் என்று யாதவபுராணங்கள் வகுத்தன. அத்ரி பிரஜாபதிக்கும் அனசூயைக்கும் சந்திரன், துர்வாசர், தத்தாத்ரேயர் என்னும் மூன்று குழந்தைகள் பிறந்தன. சந்திரனிலிருந்து புதன் பிறந்தான். புதனிலிருந்து புரூரவஸ் ஆயுஷ் நகுஷன் யயாதி என்று குலமுறை தொடர்ந்தது.
யயாதிக்கு தேவயானியில் யது என்றும் துர்வசு என்றும் இரு மைந்தர்கள் பிறந்தனர். யயாதி சுக்கிர முனிவரின் சாபத்தால் முதுமையை அடைந்தபோது தன் மைந்தர்களிடம் அம்முதுமையை ஏற்றுக்கொள்ளும்படி கோரினான். பிற மைந்தர் தயங்கியபோது யயாதியின் இரண்டாவது மனைவியும் அசுரகுலத்தோன்றலுமான சர்மிஷ்டையின் மைந்தன் புரு முதுமையை ஏற்றுக்கொண்டான்.
தந்தையால் தீச்சொல்லிடப்பட்டு நாடு மறுக்கப்பட்ட துர்வசு வடதிசையில் காந்தார நாட்டைநோக்கிச் சென்றான். யது தனக்குரிய நிலம்தேடி தன் படைகளுடன் தென்றிசை நோக்கி வந்தான். அஸ்தினபுரியின் கங்கையைக் கடந்து, மச்சர்கள் ஆண்ட யமுனையைக் கடந்து, மாலவத்தையும், கிகடர்களின் தேவபுரியையும் தாண்டி தென்மேற்காகச் சென்றான். ஒவ்வொருநாட்டிலும் அந்நாட்டுப்படைகள் வந்து அவனை எதிர்கொண்டு உணவும் நீரும் அளித்து அவர்களின் நிலத்தில் தங்காமல் கடந்துபோகச் செய்தன. இறுதியாக நிஷாதர்களின் நாட்டில் தோலூறிய கழிவுநீர் ஓடிய சர்மாவதி நதியை அடைந்தான். நிஷாதர்கள் அவர்களை மூன்றுநாட்களுக்குள் நாட்டைக்கடந்துபோகும்படி ஆணையிட்டனர்.
யதுவும் அவன் படையினரும் மேலும் சென்று மனிதர்கள் வாழாது வெயில் பரவி வீண்நிலமாகக் கிடந்த பர்ணஸா என்னும் ஆற்றின் படுகையை அடைந்தனர். அங்கே யது கடந்துசென்ற காற்றில் ‘ஆம்’ என்ற ஒலியைக் கேட்டான். அங்கேயே தங்கும்படி படைகளுக்கு ஆணையிட்டான். அவனுடன் வந்த ஆயிரம் வீரர்கள் பர்ணஸாவின் வெற்று மணற்பரப்பில் ஊற்று தோண்டி நீர் அருந்திவிட்டு அங்கே ஒரு சிறிய பிலுமரச்சோலையில் ஓய்வெடுத்தனர். யதுவின் அமைச்சரான லோமரூஹர் நிமித்தங்களைக் கணித்து மேற்கொண்டு பயணம்செய்யலாமா என நோக்கினார்.
அச்சோலையில் இருந்து எந்தப்பறவையும் மேலும் தென்மேற்காகப் பயணம் செய்யவில்லை என்பதையும் தென்மேற்கிலிருந்து எப்பறவையும் சோலைக்கு வரவுமில்லை என்பதையும் அவர்கள் கண்டனர். எலும்புதின்னும் கருஞ்சிறகுப் பருந்தான ஊர்த்துவபக்‌ஷன் தொலைவில் வானில் சுற்றிக்கொண்டிருந்தது. “இளவரசே, இந்நிலத்துக்கு அப்பால் வெறும்பாலை. அங்கே பறவைகள்கூட வாழமுடியாது. அது ஊர்த்துவபக்‌ஷனுக்கு மட்டுமே உணவூட்டும்” என்ற லோமரூஹர் “இங்கு நீரே இல்லை. செடிகளேதும் இங்கு வளர்வதுமில்லை. ஆகவேதான் இங்கு ஜனபதங்கள் உருவாகவில்லை. நாம் மேலும் தென்கிழக்குத் திசை நோக்கிச் செல்வதே சரியாக இருக்கும்” என்றார்.
அவரது சொல்லைக் கேட்ட யது “அமைச்சரே, தாங்கள் சொல்வதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இந்தச் சிற்றாறை நான் அடைந்தபோதே நான் விரும்பும் மண்ணுக்கு வந்துவிட்டேன் என்ற உணர்வை அடைந்தேன். இங்கேயே நான்குநாழிகை நேரம் நான் காத்திருக்கப்போகிறேன். நான் வழிபடும் பூமியன்னை என்னை வழிகாட்டி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மேலும் தென்மேற்காகச் சென்று பாலையில் ஊர்த்துவபக்‌ஷனுக்கு உணவாக ஆவதையே நாடுவேன்” என்றான். அரசனின் ஆணையை அமைச்சர் தலைவணங்கி ஏற்றுக்கொண்டு “அவ்வண்ணமே ஆகுக அரசே. தங்களுடன் நாங்கள் ஆயிரம்பேரும் பாலைபுகுவதற்கு சித்தமாக உள்ளோம்” என்றார்.
அவர்கள் அங்கே நான்கு நாழிகை நேரம் காத்திருந்தனர். வெயில் அனலாகி பின்பு அடங்கத் தொடங்கியது. விண்மீன்கள் செந்நிற வானிலேயே தெளிவாக முளைத்து வந்து அதிர்ந்தன. மாலையானதும் அந்த பாலைப்பொழிலில் குறுமொழிபேசும் சிறுபறவைகள் வந்து சேர்ந்தன. அவர்கள் தோண்டிய ஊற்று நீரில் நீராடிய சிறிய தவிட்டுக்குருவி ஒன்று தன் குலத்தையே அழைத்துவந்தது. அவற்றைக் கண்டு பிற பறவைகள் தங்கள் குலங்களைக் கூவி அழைத்து அங்கே வந்துசேர்ந்தன. ஆற்றங்கரையில் பறவைகளின் சிறகுகள் நிறைந்திருப்பதை யது பார்த்துக்கொண்டிருந்தான்.
சற்று நேரத்தில் பறவைக்குரல் கேட்டு அங்கு நீர் இருப்பதை அறிந்த காட்டுப்பசு ஒன்று கனத்த காலடிகளுடன் அங்கே வந்தது. தலையைத் தாழ்த்தி கொம்புகளை உதறியபடி அந்த வெண்பசு ஆற்றுக்குள் இறங்கி ஊற்றுநீரை அருந்தியது. அனைத்துப்பறவைகளும் பசுவை சுற்றிப்பறந்தும் அதன் முதுகில் அமர்ந்தும் குரலெழுப்பின. யது எழுந்து கண்ணீருடன் கைகூப்பி அந்தப் பசுவை வணங்கினான். “அன்னையே, தங்கள் ஆணை. இந்த நிலத்தில் நான் என் அரசை அமைப்பேன்” என்றான்.
அவ்வாறு அங்கே முதல் யாதவ அரசு அமைந்தது. யதுவின் படையினர் அந்தப்பசுவை போகவிட்டு காத்திருந்தனர். மறுநாள் அது இருபது காட்டுப்பசுக்களுடன் அங்கே வந்தது. மூன்றாம்நாள் ஐம்பது பசுக்கள் அங்கே நீருண்ண வந்தன. யது அந்தப்பசுக்களை உரிமைகொண்டான். அவற்றைச் சோலைகளில் மேயவிட்டு பேணி வளர்த்தனர் அவன் படையினர். மெல்ல அவை பெருகின. ஆயிரம் பல்லாயிரமாக ஆயின. அவர்கள் அங்கே பாலைநிலப்பெண்டிரை மணந்து மைந்தரைப்பெற்று நூறு கணங்களாக ஆனார்கள். அந்த நூறு கணங்களும் பதினெட்டு ஜனபதங்களாக விரிந்தன. பதினெட்டு ஜனபதங்களும் இணைந்து யாதவகுலமாக மாறியது.
யதுவுக்கு சஹஸ்ரஜித், குரோஷ்டன், நளன், ரிபு என நான்கு புதல்வர்கள் பிறந்தனர். சஹஸ்ரஜித்துக்கு சதஜித் என்னும் மைந்தன் பிறந்தான். சதஜித்துக்கு மகாபயன், வேணுஹயன், ஹேகயன் என்ற மூன்று மைந்தர்கள் பிறந்தனர். ஹேகயன் ஏகவீரன் என்ற பேரில் பெரும்புகழ்பெற்றான். ஹேகயனின் வம்சம் பாரதத்தில் அரசகுலமாக புகழ்பெற்றது. ஹேகய வம்சத்தில் கார்த்தவீரியன் பிறந்தான். கார்த்தவீரியனின் வல்லமையால் புதியநிலங்களில் பரவி யதுவம்சம் வடக்கே யமுனையிலும் கங்கையிலும் நிறைந்தது. அவர்களனைவரும் யாதவர்கள் என்றழைக்கப்பட்டனர்.
ஹேகயப் பெருங்குலம் ஐந்து ஜனபதங்களாகப் பிரிந்தது. விதிஹோத்ரர்கள், ஷார்யதர்கள், போஜர்கள், அவந்தியர், துண்டிகேரர்கள் என்னும் ஐந்து குலங்களும் ஐந்து அரசுகளாயின. அவர்களில் போஜர்கள் மார்த்திகாவதியை தலைநகரமாகக் கொண்டு ஆட்சிசெய்தார்கள். கார்த்தவீரியனுக்கு ஜயதுவஜன், சூரசேனன், விருஷபன், மது, ஊர்ஜிதன் என ஐந்து மைந்தர்கள் பிறந்தனர். மதுவுக்கு விருஷ்ணி என்னும் மைந்தன் பிறந்தான். விருஷ்ணியின் மைந்தர்கள் விருஷ்ணிகுலமாக வளர்ந்தனர்.
விருஷ்ணிக்கு சுமித்ரன், யுதாஜித், வசு, சார்வபௌமன் என்னும் நான்கு மைந்தர்கள் பிறந்தனர். விருஷ்ணிகுலம் யுதாஜித்தில் இருந்து வளர்ந்து நிலைகொண்டது. ஸினி, சத்யகன், சாத்யகி, ஜயன், குணி, அனமித்ரன், பிருஸ்னி, சித்ரரதன், விடூரதன், சூரன், ஸினி, போஜன் என விருஷ்ணிகுலம் வளர்ந்தது. அவர்கள் யமுனைக்கரைகளெங்கும் பரவி நூற்றுக்கணக்கான ஜனபதங்களை அமைத்தனர். அங்கே கன்றுகள் பெருகப்பெருக ஆயர்குலமும் பெருகியது. நீர்நிறைந்த ஏரி கரைகளை முட்டுவதுபோல அவர்கள் தங்கள் நாடுகளின் நான்கு எல்லைகளிலும் அழுந்தினர். மடைஉடைத்து பெருகும் நீர் வழிகண்டடைவதைப்போல அவர்கள் சிறிய குழுக்களாக தங்கள் ஆநிரைகளுடன் கிளம்பிச்சென்று புதிய நிலங்களைக் கண்டடைந்தனர்.
யமுனைக்கரையில் இருந்த தசபதம் காட்டுக்குள் சென்று நுழைந்து மறுபக்கம் செல்லும் பத்து கால்நடைப் பாதைகளின் தொகையாக இருந்தது. அங்கே வருடம்முழுக்க புல்லிருந்தாலும் ஆநிரைகளை புலிகளும் சிம்மங்களும் கவர்ந்துசெல்வதும் அதிகம். ஆகவே மழைபெய்யத் தொடங்கிய காலமுதலே அது மனிதர்வாழாத காடாகவே இருந்தது. கார்த்தவீரியனின் காலகட்டத்தில்தான் அங்கே எட்டு காவல்நிலைகள் உருவாக்கப்பட்டு நிலையான வில்வேட்டைக்குழு ஒன்று அமர்த்தப்பட்டு ஊனுண்ணிகள் தடுக்கப்பட்டன. அதன் பின்னர் அங்கே சிறிதுசிறிதாக யாதவர்கள் குடியேறினர்.
தசபதம் உருவான தகவலறிந்து கன்றுகாலிகளை ஓட்டியபடி தோள்களில் குழந்தைகளுடன், காளைகளின் மேல் கூடைக்குடில்களுடன் கிழக்கே இருந்து அவர்கள் வந்தபடியே இருந்தனர். காடுகளில் வட்டவடிவமாக குடில்களை அமைத்து சுற்றிலும் மரம்நட்டு வேலியிட்டு நடுவே தங்கள் கன்றுகாலிகளைக் கட்டி அவர்கள் தங்கள் ஊர்களை அமைத்தனர். அவ்வாறு நூறு இடையர்கிராமங்கள் உருவானதும் அப்பகுதி தசபதம் என்றழைக்கப்பட்டது. அதன் தலைவராக விருஷ்ணிகளின் குலத்தைச்சேர்ந்த ஹ்ருதீகர் நூறு கிராமங்களின் தலைவர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
VENMURASU_EPI_79
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
விருஷ்ணிகுலத்தைச் சேர்ந்த பிருஸ்னிக்கு சித்ரரதன், ஸ்வபல்கன் என்னும் இரு மைந்தர்கள் இருந்தனர். சித்ரரதனின் மைந்தன் விடூரதன். விடூரதனின் குருதிவரியில்தான் ஹ்ருதீகரும் சூரசேனரும் வசுதேவனும் பிறந்தனர். விடூரதனின் தம்பியான குங்குரனின் குருதிவரி வஹ்னி, புலோமன், கபோதரோமன், தும்புரு, துந்துபி, தரித்ரன், வசு, நாகுகன், ஆகுகன் என வளர்ந்தது. ஆகுகனுக்கு தேவகன், உக்ரசேனன் என இரு மைந்தர்கள் பிறந்தனர். உக்ரசேனன் யமுனைக்கரையில் இருந்த யாதவர்களின் தலைமையிடமான மதுபுரத்தை ஆண்டான்.
ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கான படகுகளில் நெய்ப்பானைகள் வந்துசேருமிடமாக இருந்த மதுபுரம் விரைவிலேயே ஒரு நகரமாக ஆகியது. நெய்கொள்வதற்காக பல்லாயிரம் வண்டிகள் மதுபுரத்துக்கு வரத்தொடங்கின. ஆக்னேயபதங்கள் என்றழைக்கப்பட்ட எட்டு வண்டிச்சாலைகள் அங்கே வந்துசேர்ந்தன. பாரதவர்ஷத்தின் பன்னிரண்டு நாடுகள் நெய்க்காக மதுபுரத்தை நம்பியிருந்தன. நெய் யமுனைவழியாக கங்கைக்குச்சென்று நாவாய்கள் வழியாக மகதத்துக்கும் வங்கத்துக்கும்கூடச் சென்றது.
நெய்ச்சந்தையாக இருந்த மதுபுரத்தை யமுனைவழியாக படகுகளில் வந்து தாக்கிக் கொள்ளையடித்துவந்த லவணர்களை கோசலத்தை ஆண்ட இக்ஷுவாகு வம்சத்து மன்னனான சத்ருக்னன் தோற்கடித்து துரத்தி அங்கே ஓர் அரண்மனையையும் சிறிய மண்கோட்டையையும் நிறுவி சுங்கம்பெறுவதற்காக கோசல அரசகுலத்தைச்சேர்ந்த ஓர் இளவரசனை அதிகாரியாக அமைத்தார். படையும் காவலும் மதுபுரத்தை விரைவிலேயே வளரச்செய்தன. ஹேகயமன்னரின் ஆட்சிக்காலத்தில் கோசலத்தின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு மதுபுரம் தனி அரசாகியது.
விருஷ்ணிகுலத்தைச்சேர்ந்த விடூரதன் மதுபுரத்தை ஆண்டதாக குலக்கதைகள் பாடின. விடூரதனின் மைந்தனான சூரசேனன் அந்நகரை தலைமையாக்கி ஆண்ட சுற்றுநிலம் சூரசேனம் என்றழைக்கப்பட்டது. ஆனால் விடூரதனின் தம்பியான குங்குரன் விடூரதனின் குலத்தை மதுபுரத்தில் இருந்து துரத்திவிட்டு நகரைக் கைப்பற்றிக்கொண்டான். சூரசேனனின் மைந்தன் ஸினி தன் மகன் போஜனுடன் வடக்கே சென்று மார்த்திகாவதி என்ற ஊரை அமைத்துக்கொண்டான். போஜனின் குருதிவரியில் வந்த குந்திபோஜனால் ஆளப்பட்டுவந்த மார்த்திகாவதி முந்நூறு வீடுகளும் சிறிய அரண்மனையும் கொண்ட சிறியநகரமாக வளர்ந்து தனியரசாக நீடித்தது.
குங்குரனுக்குப்பின் வஹ்னியும் அவன் மைந்தர்களும் சூரசேனநாட்டையும் மதுபுரத்தையும் ஆண்டனர். ஹேகயனால் கட்டப்பட்ட மதுபுரத்தின் மண்கோட்டையை ஆகுகன் கல்கோட்டையாக எடுத்துக்கட்டி கலிங்கத்திலிருந்து காவல்படைகளையும் கொண்டுவந்து நிறுத்தினான். ஆக்னேயபதங்களின் வண்டிகளும் யமுனையின் படகுகளும் கொண்டுவந்து குவித்த சுங்கத்தால் மதுபுரம் நெய்கொட்டப்படும் வேள்வித்தீ என வளர்ந்தது.
தங்கள் மூதாதையரை துரத்தியடித்த மதுபுரத்தின் மன்னன் மீது போஜர்களும் விருஷ்ணிகளும் ஆறாச்சினம் கொண்டிருந்தனர். மதுபுரத்தின் மன்னனை நூற்றியெட்டு யாதவர்குலங்களும் தங்களவனல்ல என நிராகரித்தன. யாதவர்களின் பெருங்கூடல்விழவுகள் எதற்கும் மதுபுரத்து மன்னன் அழைக்கப்படவில்லை. யாதவர்கள் அனைவரும் மதுபுரத்தின் படைவல்லமையை அஞ்சினர். மதுபுரத்து மன்னன் உக்ரசேனன் போஜர்களின் மார்த்திகாவதியை வென்று தன் அரசை விரிவுபடுத்தும் வேட்கைகொண்டிருந்தான். வல்லூறை அஞ்சும் காக்கைகள் போல அனைத்து யாதவர்குடிகளும் சிற்றரசுகளும் ஒன்றாகி மதுபுரத்தைச் சூழ்ந்து நின்றதனால் அவன் காத்திருந்தான்.
மதுபுரத்தின் சுங்கச்செல்வத்தைப்பற்றி மகதனும் அங்கனும் வங்கனும் பொறாமைகொண்டிருந்தனர். மூன்றுமுறை மகதம் ஆக்னேயபதங்களைக் கைப்பற்ற முயன்றது. தன்னிடமிருந்த செல்வத்தைக்கொண்டு கலிங்கத்தில் இருந்து படைகளைக்கொண்டுவந்து ஆக்னேயபதம் முழுக்க நூற்றுக்கணக்கான காவல்சாவடிகளை அமைத்தான் உக்ரசேனன். ஒருகட்டத்தில் சுங்கச்செல்வத்தில் பெரும்பகுதி படைகளுக்கான ஊதியமாகவே செலவழிந்துகொண்டிருந்தது. மகதம் படைகொண்டுவருமென்றால் அதைத் தடுக்க தன் கருவூலத்தை முழுக்கச் செலவிட்டு படைதிரட்டவேண்டுமென உக்ரசேனன் அஞ்சினான்.
குடிகளே மன்னனின் முதற்பெரும் செல்வம் என்று அவன் உணரத்தொடங்கினான். யாதவக்குடிகளை நல்லெண்ணம் மூலம் தன்னை ஏற்கும்படிச் செய்யமுடியுமா என்று அவன் திட்டமிட்டான். அவனுடைய தூதர்கள் யாதவர்களின் ஜனபதங்கள்தோறும் சென்று மதுபுரத்தின் தலைமையை அவர்கள் ஏற்கும்படி செய்வதற்காக முயன்றனர். அவர்களுக்கு அரசகாவலும் ஆட்சியுரிமைகளும் அளிக்கப்படும் என்றும் அவர்களின் ஜனபதமுறைகளை மதுபுரம் முழுமையாக ஏற்கும் என்றும் தூதர்கள் சொன்னார்கள்.
மதுபுரத்தின் முயற்சிகளுக்கு முதற்பெரும் எதிரியாக இருந்தவர் தசபதத்தின் தலைவரான விருஷ்ணிகுலத்து சூரசேனர். ஹ்ருதீகரின் மைந்தரான அவரை அனைத்துயாதவக்குடிகளும் ஏற்றுக்கொண்டன. சூரசேனரின் நட்புக்காக பதினெட்டுமுறை தூதர்களை அனுப்பினார் உக்ரசேனர். ஒவ்வொருமுறையும் மரியாதையான ஒற்றை மறுப்புச்சொல்லை மட்டுமே பதிலாகப் பெற்று அவர்கள் மீண்டனர். தன்னுடைய அச்சுறுத்தலால்தான் மார்த்திகாவதியின் குந்திபோஜன் சூரசேனரின் மகளான பிருதையை மகளேற்பு செய்ய முயல்கிறான் என்று உக்ரசேனர் அறிந்திருந்தார்.
ஒற்றர்கள் வழியாக குந்திபோஜன் பிருதையை மகளேற்பு செய்து மார்த்திகாவதிக்குக் கொண்டுசென்றுவிட்டான் என்ற செய்தியை அறிந்து உக்ரசேனர் தன் அமைச்சர்களுடன் மதியூழ்ந்தார். மார்திகாவதியின் குந்திபோஜனின் அரசு இன்று யாதவர்களின் நூற்றெட்டு ஜனபதங்களின் பின்புலவல்லமையைப் பெற்றுவிட்டது என்று பேரமைச்சரான கிருதர் சொன்னார். அதை படைகொண்டு வெல்வது யாதவர்களின் முழு எதிர்ப்பையும் அடைவதாகவே முடியும். மார்த்திகாவதியை மதுபுரத்தின் நட்புநாடாக ஆக்கமுடியுமா என்பதே இனி எண்ணவேண்டியதாகும் என்றார்.
அதற்கான வழிகளை பலதிசைகளில் மதுபுரத்தின் மதியூகிகள் சூழ்ந்துகொண்டிருக்கையில்தான் சூரசேனரின் ஓலையுடன் வசு தன் கடையிளவல் வசுதேவனின் கையைப் பற்றிக்கொண்டு மதுபுரத்தை வந்தடைந்தான். சிறுபடகில் வந்த அவர்கள் மதுபுரத்தின் பெரிய படகுத்துறையில் இறங்கினர். பெரும் வெண்கலத்தாழிகளை ஏற்றிக்கொண்ட சிறுபடகுகள் நத்தைகள் போல மெல்ல ஊர்ந்து அணைந்துகொண்டிருந்த மதுபுரத்தின் படித்துறையில் யாதவர்களின் அனைத்துக்குடிகளும் வந்திறங்கியபடியிருந்தனர். அனைவரின் கொடிகளும் அங்கே பறந்துகொண்டிருந்தன.
தமையனின் கையைப்பற்றிக்கொண்டு விழித்த கண்களுடன் வசுதேவன் மதுபுரத்தின் தெருக்களில் நடந்தான். மக்கள் வழக்கில் அது மதுராபுரி என்றும் மதுரா என்றும் அழைக்கப்படுவதைக் கேட்டான். ஊரெங்கும் வெயிலில் உருகும் நெய்யும் நாள்பட்டு மட்கிய நெய்யும் கலந்த வாசனையே நிறைந்திருந்தது. வசு அங்கே பெரிய வெண்கலக் கலன்களில் நிறைக்கப்பட்ட நெய்யைக் கண்டதும் பல்லைக் கடித்தபடி “எளிதில் கொளுத்தமுடியும் நகரம்” என்று சொன்னான். அதன்பின் வசுதேவன் அந்நகரை இன்னமும் எரியேற்றப்படாத வேள்விக்குளமாக மட்டுமே பார்த்தான்.
மதுபுரத்தின் நடுவே செந்நிறக் கற்களால் கட்டப்பட்ட பெரிய அரண்மனை இருந்தது. உள்கோட்டைவாயிலில் காவலுக்கு நின்றிருந்த கலிங்கவீரர்கள் வசுவின் கையில் இருந்த ஓலையின் இலச்சினையை யாதவகுலத்தைச்சேர்ந்த மூத்த வீரனிடம் அளித்து சரிபார்த்தபின் உள்ளே அனுப்பினார்கள். ஒளிவிடும் வேல்முனைகளும் ஆமையோட்டுக் கவசங்களும் அணிந்த அவ்வீரர்களை கூரிய அலகுகள் கொண்ட கழுகுகளாக வசுதேவன் எண்ணிக்கொண்டான். அந்நகரம் செத்துக்கிடக்கும் யானை என்று தோன்றியது.
சூரசேனரின் ஓலையைக் கண்டதுமே உக்ரசேனர் மகிழ்ந்து தன் அமைச்சரான கிருதரை வரவழைத்தார். “ஆம் அரசே, மதுபுரத்தின் வரலாற்றில் ஒரு புதிய கட்டம் தொடங்கியிருக்கிறது. யாதவகுலத்துடன் நம் உறவுகள் வலுப்பெறவிருக்கின்றன. அத்துடன் மார்த்திகாவதியும் நம் அண்மைக்கு வரப்போகிறது” என்றார் கிருதர். உக்ரசேனர் வசுவை தன் அவைக்கு வரவழைத்தார்.
ஓர் இளவரசனுக்குரிய அரசமரியாதையுடன் மதுபுரத்து சபாமண்டபத்துக்குள் நுழைந்த வசு அங்கே இருந்த அமைச்சர்களும் தளகர்த்தர்களும் தன்னை எழுந்து நின்று குலமுறைகிளத்தி வாழ்த்தியதைக் கண்டு திகைத்தான். அவனுக்கு அரசமுறைமைகளும் அதற்கான சொற்களும் தெரியவில்லை. வனத்தில்வாழும் யாதவர்களுக்குரிய முறையில் இடத்தோள்கச்சாக தோலாடை உடுத்தி காதில் மரக்குழைகள் அணிந்திருந்தான். அங்கே ஆடையின்றி நிற்பதுபோல உணர்ந்த அவன் ஓரிரு சொற்கள் சொல்வதற்குள் திணறி கண்ணீர்மல்கினான்.
வசுதேவனை அங்கேயே விட்டுவிட்டு வசு திரும்பிச்சென்றான். அவனுக்கு விலைமதிப்புமிக்க பொன்னணிகளையும் பட்டாடைகளையும் பரிசாக அளித்து அரசமுறைப்படி வழியனுப்பியது மதுபுரம். வசுதேவனை தன் மைந்தன் கம்சனின் துணைவனாக அரண்மனையில் தங்கச்செய்தான் உக்ரசேனன். அவனுக்கு செம்மொழியும் அரசுநூலும் பொருள்நூலும் கற்பிக்க ஆணையிட்டான்.
அரண்மனை உள்ளறைக்கு சேவகர்களால் இட்டுச்செல்லப்பட்ட வசுதேவன் தன்னைவிட இரண்டடி உயரமான தன்னைவிட இருமடங்கு எடைகொண்ட சிறுவனாகிய கம்சனை முதல்முறையாகப் பார்த்தான். அவனுக்கும் தனக்கும் ஒரே வயது என்று சொல்லப்பட்டிருந்த வசுதேவன் அவன் உருவத்தைப்பார்த்து வியந்து நின்றுவிட்டான். சிரித்தபடி வந்த கம்சன் வசுதேவனை ஆரத்தழுவிக்கொண்டான். “இந்த அரண்மனையில் உனக்கு எது தேவை என்று சொல்…அனைத்தும் உன்னுடையதே” என்று சொன்னான். அக்கணம் முதல் வசுதேவனின் உயிர்நண்பனாக ஆனான்.
கம்சனுடன் சேர்ந்து மதுராபுரியில் வளர்ந்தான் வசுதேவன். கம்சன் ஆயுதவித்தையைக் கற்றபோது அவன் நூல்களைக் கற்றான். “நான் நூல்களைக் கற்கவேண்டியதில்லை….எனக்கான ஞானம் முழுக்க என் மைத்துனன் உள்ளத்தில் இருக்கிறது” என்று கம்சன் சொல்வான். வசுதேவனின் தோற்றம் மாறியது. பட்டாடைகளும் பொற்குண்டலங்களும் மணியாரமும் அணிந்தான். சந்தன மிதியடியுடன் நடந்தான். அரண்மனையின் உணவில் அவன் மேனி தளிர்ப்பொலிவு கொண்டது. அவனுடைய பேச்சுமொழியும் பாவனையும் முழுமையாக மாறின.
மதுராபுரிக்கு வந்தபின் அவன் ஓரிருமுறை மட்டுமே மதுவனத்துக்குச் சென்றான். அவனை அவன் தமையன்கள் முற்றிலும் அன்னியனாகவே எண்ணினார்கள். அவனை முதலில் கண்டதும் வசு மரியாதையுடன் எழுந்து நின்றான். அதன்பின்னர்தான் அவன் தன் இளவலென்று அவன் அகம் உணர்ந்தது. ஆனாலும் அவன் தமையன்கள் எவரும் அவன்முன்னால் ஒலிஎழுப்பிப் பேசவில்லை. அவன் கண்களை அவர்களின் கண்கள் தொட்டுக்கொள்ளவேயில்லை. சூரசேனர் அவனை ஒருகணம்தான் நோக்கினார். “நீ உன் வழியை அடைந்துவிட்டாய். உனக்கு நன்மை நிகழட்டும்” என்று மட்டும் சொன்னார்.
அவன் அன்னை மட்டும்தான் எந்த மாற்றமும் இல்லாதவளாக இருந்தாள். அவளுடைய சுருண்டதலைமயிர் நரைத்து பால்நுரைபோலிருந்தது. முகத்தில் சுருக்கங்கள் பரவியிருந்தன. ஆயினும் அவள் ஆற்றல்கொண்ட தோள்களுடன் இல்லத்தின் அனைத்துப்பணிகளையும் செய்பவளாக இருந்தாள். வெண்ணிற ஒளிகொண்ட அவளுடைய சிரிப்பு அப்படியே இருந்தது. அவனைக் கண்டதும் சிரித்தபடி ஓடிவந்து அவன் தோள்களையும் தலையையும் தொட்டாள். அவன் மதுராபுரியில் என்னசெய்கிறான் என்று அவள் ஒருமுறைகூட கேட்கவில்லை. மதுவனத்தில் அவனுக்கு தேவையானவற்றை செய்துகொடுப்பதில்தான் அவளுடைய ஆர்வமிருந்தது.
மார்த்திகாவதியில் பிருதையுடன் வசுதேவன் எப்போதும் தொடர்பில் இருந்தான். அவளைக்காண்பதற்காக இரண்டுமாதங்களுக்கொருமுறை அவன் மார்த்திகாவதிக்குச் சென்றான். அவனுடைய முயற்சியால் மதுராபுரிக்கும் மார்த்திகாவதிக்கும் நல்லுறவு உருவானது. இரு மன்னர்களும் காளிந்தியின் கரையில் இருந்த ஷீரவனம் என்னும் சோலையில் சந்தித்து ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டார்கள். அதன்படி மார்த்திகாவதியும் மதுராபுரியும் ஒன்றையொன்று தாக்குவதில்லை என்று முடிவெடுத்து எல்லையை வகுத்துக்கொண்டனர். ஒருவருக்கொருவர் படைத்துணையும் நிதித்துணையும் அளிப்பதாக முடிவுகொண்டனர்.
நெடுநாட்களாக மதுராபுரி எதிர்கொண்டுவந்த அனைத்து அரசியல் இக்கட்டுகளும் வசுதேவனால் முடிவுக்கு வந்தன. யாதவர்குலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம்பேர்கொண்ட படை ஒன்று மதுராவில் அமைந்தது. மதுராபுரியின் மன்னனான உக்ரசேனரைத் தொடர்ந்து கம்சன் மன்னனானான். கம்சனுக்கு வசுதேவன் அமைச்சனானான். அவன் சொல்லில்தான் யாதவகுலத்தின் முதன்மை அரசு சுழல்கிறது என்று சூதர்கள் பாடினர்.
மழைபெய்துகொண்டிருந்த இரவொன்றில் படகில் மார்த்திகாவதியில் இருந்து கிளம்பி யமுனையின் பெருவெள்ளத்தில் சுழித்தும் சுழன்றும் விரைந்து படித்துறையை அடைந்த பிருதையின் அணுக்கத்தோழியான அனகை தன் முத்திரைமோதிரத்தைக் காட்டி காவலைத் தாண்டி அரண்மனைக்கு வந்து வசுதேவனின் மாளிகையை அடைந்தாள். வசுதேவன் மஞ்சத்துக்குச் சென்றுவிட்டிருந்தான். சேவகன் சொன்னதைக்கேட்டு அவன் சால்வையை எடுத்துப்போட்டபடி வெளியே வந்தபோது மழைசொட்டும் உடலுடன் நடுங்கிக்கொண்டு நின்றிருந்த அனகையைக் கண்டான்.

4/7/14

குதி ஆறு : தூரத்துச் சூரியன்[ 3 ]

குதி ஆறு : தூரத்துச் சூரியன்[ 3 ]
யாதவர்களின் தொழிலைச் செய்வதில்லை என்ற முடிவை இளமையிலேயே வசுதேவன் எடுத்தான். அவனுடைய குலத்தின் மந்தைகளுடன் அவனுக்கு தொடர்பே இருக்கவில்லை. பாட்டி இறந்தபின்னரும் அவன் மதுவனத்திலேயே வாழ்ந்தான். ஏழுவயதில்தான் அவன் முதல்முறையாக அடிக்காட்டுக்குச் சென்று பட்டியில் ஏரிநீர் போல நிறைந்திருந்த பசுக்களைப் பார்த்தான். அங்கே நிறைந்திருந்த சாணியும் சிறுநீரும் கலந்த வீச்சமும், பசுக்கூட்டத்தின் உடல்களில் இருந்து எழுந்து காற்றில் சுழன்ற சிற்றுயிர்களும் அது கலங்கிய அழுக்குநீர் ஏரி என்று எண்ணச்செய்தன.
மந்தைமுழுக்க மாடுகளின் கனைப்புகளும் காதுகள் அடிபடும் ஒலிகளும் குளம்புகள் மண்ணில் மிதிபடும் ஓசையும் நிறைந்திருந்தன. ஆயிரக்கணக்கான காகங்கள் பசுக்கள் மேல் எழுந்தும் அமர்ந்தும் குருதியுண்ணிகளைப் பொறுக்கி உண்டன. சிறிய குருவிகள் காற்றிலேயே தாவிப்பறந்து சிற்றுயிர்களைப்பிடித்தன. பட்டியைச்சுற்றி கட்டப்பட்டிருந்த நூற்றுக்குமேற்பட்ட காவல்மாடங்களில் கம்பிளிகளைப் போர்த்தியபடி ஆயர்கள் களைத்த கண்களுடனும் புல்லாங்குழல்களுடனும் அமர்ந்திருந்தனர். மாடங்களுக்குக் கீழே புல்லையும் சருகையும் கூட்டி தீயிட்டு அதில் பலாக்கொட்டைகளையும் காட்டுக்கிழங்குகளையும் சுட்டு மேலே கொண்டுசென்று கொறித்துக்கொண்டிருந்தனர். கீழே இருந்த தணலில் எழுந்த புகை மாடங்களின் அடியில் தயங்கி பிரிந்து எழுந்து சூழ்ந்து மேலே சென்றது.
வசுதேவனின் தமையன்கள் அனைவருமே அடிக்காட்டில்தான் இருந்தனர். அவர்கள் வீட்டுக்கு வருவதேயில்லை. மூத்த தமையனான வசு வசுதேவனைவிட முப்பது வயது மூத்தவர். கடைசித்தமையனான காவுகன் பதினைந்து வயது மூத்தவர். அவர்களிடம் வசுதேவன் சிலசொற்களுக்கு அப்பால் பேசியதுமில்லை. அவனை சூரசேனர் மதுவனத்தை விட்டு அழைத்துச்சென்று அடிக்காட்டில் மந்தைக்குக் கொண்டு சென்றபோதுதான் அவன் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையே அறிந்தான்.
அவர்களின் கிராமமான மதுவனத்தில் மழைக்காலத்தைத் தவிர எப்போதும் பெண்கள் மட்டுமே இருந்தனர். முந்நூறு குடும்பங்கள் கொண்ட மதுவனத்தின் அனைத்து மந்தைகளுமே ஊரிலிருந்து நாற்பது நாழிகை தொலைவிலிருந்த அடிவனத்தில்தான் பட்டியிடப்பட்டன. காலையில் பட்டி பிரிக்கப்பட்டு தனித்தனிக் குழுக்களாக அவை காடுகளுக்குள் மேய்வதற்காக அனுப்பப்படும். பகல் முழுக்க அவை பசுமைசெழித்த காட்டுக்குள் கழுத்துமணிகள் ஓசையிட வால்கள் வீசிப்பறக்க மேய்ந்துகொண்டிருக்கும். அவற்றைக் கண்காணித்தபடி காவல்நாய்கள் அருகே நின்றுகொண்டிருக்கும்.
பசுக்கள் மேயும்போது ஆயர்கள் உயரமான மரங்களின் மீதோ பாறைகள் மீதோ ஏறி அமர்ந்து அவற்றை கண்காணித்துக்கொண்டிருப்பார்கள். புல்லாங்குழல் இசைத்தபடியும் இடையை மரக்கிளைகளுடன் கொடிகளால் சேர்த்துக்கட்டிக்கொண்டு துயின்றபடியும் பகலெல்லாம் மேலேயே காலத்தை துழாவுவார்கள். ஆயர்களுக்கு புலிகளின் வரவை அறிவிக்கும் பறவை ஒலிகள் நன்றாகவே தெரிந்திருந்தது. நாய்களுக்கு வெகுதொலைவிலேயே புலிகளின் வாசனைகிடைத்துவிடும். புலிகள் தென்பட்டதுமே அவர்கள் தங்கள் இடைகளில் தொங்கும் குறுமுழவுகளை அடிக்கத் தொடங்க அப்பகுதி நோக்கி மற்ற அத்தனை ஆயர்களும் கூச்சலிட்டபடியும் பெருமுழவுகளை அடித்து ஓசையிட்டபடியும் திரண்டு வருவார்கள்.
மாலையில் வெயில் அணையத்தொடங்கியதுமே ஆயர்கள் கொம்புகளை ஊதி பசுக்களை திரட்டத்தொடங்குவார்கள். மழைநீர் சிற்றோடைகளாகத் திரண்டு பேரோடைகளாகி, ஆறாகி, அருவியாகி மலையிறங்குவதுபோல பசுக்கூட்டங்கள் முடிவில்லாமல் மலைமடம்புகள் வழியாக கீழே இறங்கிக்கொண்டிருக்கும். ஆயிரக்கணக்கான பசுக்களை ஒன்றாகத் திரட்டி ஒற்றைப்பட்டியாக ஆக்குவார்கள். பட்டியைச்சுற்றி மூங்கில்கழிகளை அமைத்து நாய்களைக் காவல் வைத்தபின் மூங்கில் கால்கள் மேல் அமைக்கப்பட்டிருக்கும் மாடங்களில் இரவுறங்குவார்கள்.
இரவில் ஒன்றுவிட்ட மாடங்களில் உள்ளவர்கள் விழித்திருக்கவேண்டுமென முறைவைத்திருந்தனர். இரண்டாம்ஜாமம் வரை விழித்திருப்பவர்கள் அதற்குமேல் அடுத்த மாடத்தில் இருப்பவர்களை துயிலெழுப்பிவிட்டு தாங்கள் படுத்துக்கொள்வார்கள். ஆயர்கள் நடுவே கதைசொல்பவர்களுக்கும் பாடுபவர்களுக்கும் பெருமதிப்பிருந்தது. புல்மெத்தைமேல் மான்தோலை விரித்து சாய்ந்துகொண்டு கதைசொல்லியை அமரச்செய்வார்கள். அவன் தன் சிறு கைத்தாளத்தை மீட்டி பழங்கதைகளையும் புராணங்களையும் சொல்வான். சந்திரவம்சத்து யயாதியின் மைந்தனின் கதையையும் கார்த்தவீரியனின் வெற்றிகளையும் பாடுவான். ஆயர்குடிகளில் புலியிறங்கிய நிகழ்வுகளையும் திமிறும் ஏறுகளை அடக்கி பெண்கொண்ட வீரர்களின் வரலாறுகளையும் விவரிப்பான்.
விடிந்ததும் பால்கறக்காத மாடுகள் முன்னதாகவே மலை ஏறிவிடும். பால்கறக்கப்பட்ட மாடுகள் தினையும் மாவும் உண்ட பின்னர் கன்றுடன் தனியாக மலைக்குக் கொண்டுசெல்லப்படும். கறந்தபால் காலையிலும் மாலையிலும் பெரிய கலங்களில் நிறைக்கப்பட்டு மாட்டுவண்டிகளில் கிராமத்துக்கு வந்துசேரும். இரவில் வந்துசேரும் பாலைக் காய்ச்சி உறைகுத்திவிட்டு ஆயர்குலப்பெண்கள் உறங்குவார்கள். காலையில் வரும்பால் ஊரிலிருந்து அப்படியே சிற்றாறுகளில் செல்லும் படகுகள் வழியாக ஊர்களுக்குக் கொண்டுசெல்லப்படும். ஆயர்குடிகள் முழுக்க பகலெல்லாம் பெரிய மத்துகள் ஓடும் ஒலிகேட்டுக்கொண்டிருக்கும். ஊரெங்கும் பால்வற்றும் வாசனையும் நெய்குறுகும் மணமும் மோர்புளித்தவாடையும் சாணிவீச்சத்துடன் கலந்திருக்கும். ஆயர்குடியில் பிறந்தவர்களால் அந்த நெடியில்லாமல் வாழமுடியாது.
பட்டிக்கு வந்த அன்றே வசுதேவன் திரும்பவும் மதுவனத்துக்கு ஓடிப்போவதைப்பற்றி எண்ணலானான். காலையில் தமையன்களுடன் காட்டுக்குள் சென்றது அவனுக்கு இடர்மிக்கதாக இருந்தது. கால்களை அறுக்கும் கூரியவிளிம்புள்ள புற்களும் பாதங்களைப்புரட்டும் கூழாங்கற்களும் ஆணிகளைப்போன்ற முட்களும் அடிக்கொருதரம் வளைந்து பாய்ந்து இலைத்தழைப்புக்குள் மறையும் பாம்புகளும் கொண்ட காடு அவன் புலன்களை பதற்றநிலையிலேயே வைத்திருந்தது. பிற ஆயர்களின் பார்வையில் அவன் கேலிக்குரியவனாக இருந்தான். அந்தக்கேலி அவனை எரியச்செய்தது.
அவன் காட்டுக்குள் சென்ற அன்று முழுக்க மழைபெய்தது. விடாமல் தொடர்ந்து சொட்டிக்கொண்டே இருந்த இலைகளாலான காட்டுக்குள் மரத்தின் மேல் பனையோலை குடைமறையை அணிந்தபடி ஒண்டிக்கொண்டு பகலெல்லாம் அமர்ந்திருர்ந்தான். கைகால்கள் ஈரத்தில் நடுங்கி வெளுத்து பின் மரத்தன. மாலையில் மரத்தில் இருந்து இறங்கும்போது கைவழுக்கி ஈரமான மரப்பட்டையில் உரசியபடி கீழிறங்கி மார்பும் முழங்கையும் உராய்ந்து தோலுரிந்தன. அந்த ரணம்மீது மழையின் ஈரம் பட்டு எரிந்தது.
அன்றிரவு கையும் மார்பும் நெருப்புபட்டதுபோல எரிய அவன் மாடத்தில் அமர்ந்திருந்தான். இடையர்கள் எட்டுபேர் சிறிய மாடத்துக்குள் ஒண்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர். கீழிருந்து வந்த புகையில் மூச்சுத்திணறியது. அதில் தைலப்புல்லைப் போட்டிருந்தமையால் அந்த வாசனை தலையை கிறுகிறுக்கச்செய்தது. சுட்ட பலாக்கொட்டைகளை உரித்துத் தின்றபடி அவர்கள் ஊரில் எவருக்கு எவருடன் என்னென்ன கள்ளத்தொடர்புகள் உள்ளன என்று பேசிக்கொண்டிருந்தனர். அன்று அவர்களின் துயில்முறை வந்தபோது பக்கத்து மாடத்துக்கு சைகைகாட்டிவிட்டு அனைவரும் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொண்டு படுத்து மரவுரிப்போர்வையையும் தோலாடைகளையும் போர்த்திக்கொண்டு துயின்றனர்.
வசுதேவன் கயிற்றேணி வழியாக இறங்கி பட்டியை அடைந்தான். மழைபெய்துகொண்டிருக்க பசுக்கள் முதுகோடு முதுகொட்டி அசையாமல் நின்றுகொண்டிருந்தன. இருளில் அவற்றின் கண்களின் ஒளியால் கரிய திரவத்தாலான ஏரி ஒன்று அங்கே மின்னிக்கிடப்பதுபோலத் தோன்றியது. மழையில் பட்டியைச் சுற்றிக்கொண்டு வசுதேவன் ஓடத்தொடங்கினான். அவனைத் தொடர்ந்து ஆர்வமாக வால்சுழற்றி ஓடிவந்த பட்டிநாய்கள் அவன் பட்டியைத் தாண்டியதும் மெல்லக்குரைத்து எம்பிக்குதித்தபடி நின்றுவிட்டன. இருளில் சரிவரத் தெரியாத பாதை வழியாக ஊருக்குச் செல்வதைப்பற்றி அவன் எண்ணிப்பார்த்திருக்கவேயில்லை. ஆனால் ஓடத்தொடங்கியதும் வழியின் ஒவ்வொரு மரமும் பாறையும் துல்லியமாக நினைவுக்கு மீண்டுவந்தன.
VENMURASU_EPI_78
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
விடியற்காலையிலேயே அவன் மதுவனத்துக்கு வந்துவிட்டான். கிராமத்துக்குள் இருந்து பசுக்களின் கழுத்துமணி ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. வாயிலை மூடியிருந்த மூங்கில்படலை அவன் தொட்டதும் குரைத்தபடி காவல்நாய்கள் ஓடிவந்தன. அவன் வாசனையை அறிந்ததும் முனகியபடி வாலைவீசி எம்பிக்குதித்தன. வசுதேவன் தன் இல்லத்துத் திண்ணையை அடைந்து முழந்தாளிட்டு அமர்ந்துகொண்டான். கதவைத்தட்ட அவனுக்கு மனம் வரவில்லை. அப்படியே சரிந்து துயில்கொண்டிருந்த அவனை அவன் அன்னைதான் காலையில் எழுப்பினாள். அப்போதும் மழை தூறலிட்டுக்கொண்டிருந்தது. ஊரில் முதலில் எழுபவள் அவள்தான். உள்ளே சென்று படுக்கும்படிச் சொல்லி கறந்த பாலை சூடாக குடிக்கத் தந்தாள்.
அவனைக் காலையில் பார்த்ததும் பிருதை ஓடிவந்து கைகளைப்பற்றிக்கொண்டாள். அவளைக் கண்டதும் அவன் அழத்தொடங்கினான். அவள் அவனருகே அமர்ந்துகொண்டாள். “நான் காட்டுக்குச் செல்லமாட்டேன். என்னால் இடையனாக வாழமுடியாது” என்று வசுதேவன் அழுதான். பிருதை அவனிடம் “தந்தை உன்னை இடையனாக ஆக்கத்தானே கூட்டிச்சென்றார்?” என்றாள். “நான் கல்விகற்பேன். அரண்மனையில் வேலைபார்ப்பேன். இடையனாக ஆகவேண்டுமென்று சொன்னால் யமுனையில் குதித்து உயிர்விடுவேன்” என்றான் வசுதேவன்.
பிருதை அவன் தோளை மெதுவாகத் தொட்டாள். அவன் குலத்திலேயே அவனுக்கு நெருக்கமாக இருந்தவள் அவள் மட்டும்தான். அவளிடம்தான் அவன் தன்னுடைய கனவுகள் அனைத்தையும் சொல்லியிருந்தான். அதைவிட தன்னுடைய வெறுப்புகளையும் கசப்புகளையும் பகிர்ந்திருந்தான். அவன் சொல்வதற்குள்ளேயே அனைத்தையும் புரிந்துகொள்பவளாக அவளிருந்தாள். அவனுடைய எண்ணங்களை அவன் அவளில் ஆடியில் முகம்பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனைத்தேடிவந்த சூரசேனர் அவன் வீடுதிரும்பியதை அறிந்தபின் அமைதியானார். மாலையில் கிளம்புவதற்கு முன்னால் தோலாடையை தோளில் சுற்றிக்கொண்டு வீட்டு வாசலில் நின்று “அவனிடம் கிளம்பச்சொல்” என்று மனைவியிடம் ஆணையிட்டார். வசுதேவன் பின்பக்கம் தொழுவருகே அமர்ந்திருந்தான். அன்னை வந்து தந்தை அழைப்பதைச் சொன்னபோது “நான் போகமாட்டேன்” என்றான். “முதலில் தந்தை சொல்வதற்கு அடிபணி…” என்று அன்னை கடுமையாகச் சொன்னபோது வசுதேவன் அருகே இருந்த தூணை இறுகப்பிடித்துக்கொண்டான்.
சற்றுநேரத்தில் சூரசேனர் அங்கே வந்தார். அவனைப்பார்க்காமல் திரும்பி நின்றபடி கடுமையான குரலில் “நான் உன்னிடம் கிளம்பும்படிச் சொன்னேன்” என்றார். “நான் வரப்போவதில்லை…” என்றான் வசுதேவன். “ஏன்?” என்று அவர் அவனை நோக்கி அறியாமல் திரும்பி கேட்டார். அவனுக்கென ஒரு குரலும் மொழியும் இருப்பதை அப்போதுதான் அவர் உணர்ந்தார். அவர் உடல் நடுங்க கைகள் பதறத்தொடங்கின. “நான் மாடுமேய்க்க விரும்பவில்லை” என்றான் வசுதேவன். “ஏன்? அதுதான் உன் குலத்தொழில். உன் தந்தையும் தாதையும் மூதாதையரும் செய்த தொழில் அது” என்றார் சூரசேனர்.
“நான் அதைச் செய்யவிரும்பவில்லை” என்றான் வசுதேவன். மெதுவாக தன் சமநிலையை வரவழைத்துக்கொண்ட சூரசேனர் “அப்படியென்றால் என்னசெய்யப்போகிறாய்?” என்றார். “நான் படிக்கிறேன்” என்றான் வசுதேவன். “படித்து?” என அவர் தாழ்ந்த குரலில் கேட்டார். “அரண்மனை ஊழியனாக ஆகிறேன்.” சூரசேனர் தாடை இறுக “எந்த அரண்மனையில்?” என்றார். “மதுராவில்” என்று வசுதேவன் சொல்லிமுடிப்பதற்குள் சூரசேனர் ஓங்கி அவனை உதைத்தார். அவன் தெறித்து தொழுவத்து மூங்கிலை மோதி விழுந்தான். அவர் கூரையிலிருந்த கழியை உருவி அவனை சுழற்றிச் சுழற்றி அடித்தார். விதவிதமான உதிரிச்சொற்களும் உறுமல்களும் அவர் வாயிலிருந்து வெளிவந்தன.
பின்பு மூச்சிரைக்க அவர் நிறுத்திக்கொண்டார். நுனி ஒடிந்திருந்த கழியை வீசிவிட்டு தொழுவத்தின் சாணிப்புழுதியில் கிடந்த மகனைப்பார்த்தார். அவன் உடம்பெங்கும் குருதித்தீற்றல்களும் தடிப்புகளுமாக அடியின் வடுக்கள் தெளியத் தொடங்கியிருந்தன. “இனி அச்சொல் உன் நாவில் எழுந்தால் உன்னைக் கொல்லவும் தயங்கமாட்டேன்” என்றார் சூரசேனர். விசும்பியபடி எழுந்து அமர்ந்த வசுதேவன் தன் உடலைக் குறுக்கி தொழுவத்தின் மூங்கிலை மீண்டும் பற்றியபடி “நான் இடையனாக மாட்டேன்… என்னை அழைத்துக்கொண்டுசென்றால் பாம்பிடம் கையை நீட்டுவேன்” என்றான்.
தலைநடுங்க அவனையே பார்த்துக்கொண்டு நின்ற சூரசேனர் ஏதும் பேசாமல் திரும்பி நடந்து மறைந்தார். அன்னை அவனைக் கூப்பிட்டு உடலுக்கு நெய்யிடுவதற்காக வந்தாள். அவள் கையைத் தட்டிவிட்டுக்கொண்டு அவன் ஓடிச்சென்று ஊர்மன்றில் நின்ற அரசமரத்தில் ஏறி உயர்ந்த கிளையில் அமர்ந்துகொண்டான். பசித்தபோது அரசமரத்தின் உலர்ந்த பிசினை கிள்ளி உருட்டி எடுத்து வாயிலிட்டு மென்றான். தேடிவந்த பிருதை அவன் மேலே இருப்பதைக் கண்டுபிடித்தாள். கீழே வந்து நின்று “அண்ணா இறங்கி வா” என்று அழைத்தாள்.
அவன் இறங்கிவந்து அவளுடன் நடந்தான். அவள் அவனுக்கு பால்கஞ்சி கொண்டுவந்து தந்தாள். “நான் இங்கிருந்து மதுராவுக்கே ஓடிவிடுவதாக இருக்கிறேன்” என்றான் வசுதேவன். “மதுராவின் அரசர் உக்ரசேனர் நமக்கு பெரியதந்தை. அவரிடம் சென்றால் என்னை அங்கேயே வைத்துக்கொள்வார். எனக்கு கல்வியும் அரசுப்பொறுப்பும் அளிப்பார்.” பிருதை “நான் எங்கே செல்வது?” என்றாள். வசுதேவன் சற்று சிந்தித்தபின் “நான் அங்கே சென்றபின் உன்னை வந்துகூட்டிச்செல்கிறேன்” என்றான்.
ஆனால் அவள்தான் முதலில் மதுவனத்தைவிட்டுச் சென்றாள். சூரசேனரின் தந்தை ஹ்ருதீகரின் தங்கை மாதவியை மார்த்திகாவதியை ஆண்ட போஜன் மணம்புரிந்துகொண்டான். அவர்களுக்குப் பிறந்த குந்திபோஜன் மார்த்திகாவதியின் அரசனானான். ஏழுமாதரை மணந்து பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருந்தபின்னரும் குந்திபோஜனுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. எட்டாண்டுகளுக்கு முன்பு யாதவர்களின் காளிந்திபோஜனம் என்னும் குலவிருந்து நிகழ்ச்சியில் குந்திபோஜனும் சூரசேனரும் பங்கெடுத்தனர். உணவுக்குப்பின் வெற்றிலைமென்ற சூரசேனர் தவறுதலாக அதை உமிழ்ந்தபோது அது குந்திபோஜனின் ஆடையில் பட்டுவிட்டது.
சூரசேனர் கைகூப்பி பொறுக்கும்படி கோரி, தானே அதை நீரள்ளி கழுவிவிடுவதாகச் சொன்னார். குந்திபோஜன் “சூரசேனரே, நீர் என்னுடைய முறைத்தமையன் அல்லவா? இதை அன்பின் அடையாளமாகவே கொள்கிறேன்” என்றான். முகம் மலர்ந்த சூரசேனர் “இந்தச் சொற்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்” என்றார். குந்திபோஜன் “விருஷ்ணிகுலம் அளித்த அன்னைக்காக போஜர்குலமும் கடன்பட்டிருக்கிறது” என பதில் சொன்னான்.
அன்று மாலை யமுனைக்கரையில் அவர்களனைவரும் மதுவருந்தி உரையாடிக்கொண்டிருக்கையில் குந்திபோஜன் தனக்கு குழந்தைகளில்லாமையால் அரசுதுறந்து வனம்புகவிருப்பதாகச் சொன்னான். அவனைச்சுற்றி யாதவகுலத்தின் அனைத்து குலத்தலைவர்களும் அமர்ந்திருந்தனர். மதுவின் மயக்கிலிருந்த சூரசேனர் உணர்வெழுச்சியுடன் எழுந்து “போஜர்களுக்கு விருஷ்ணிகள் மேலுமொரு அன்னையை அளிப்பார்கள். இப்போது என் மனைவி கருவுற்றிருக்கிறாள். அதில் பிறக்கும் பெண்குழந்தையை முறைப்படி உங்களுக்கு அளிக்கிறேன். அவள் உதரத்தில் உன் குலம்பெருகட்டும்” என்றான். மனம் மகிழ்ந்த குந்திபோஜன் “இது ஆணை அல்லவா?” என்றான். “ஆணை ஆணை ஆணை” என மும்முறை கையடித்து சொன்னார் சூரசேனர்.
ஆனால் செந்நிறப் பேரழகுடன் பிருதை பிறந்தபோது அவளை கையளிக்க முடியாது என்று சூரசேனரின் தாய் பத்மை உறுதியாக மறுத்துவிட்டாள். ஹ்ருதீகரின் குலத்தின் நீட்சியாக அவள் ஒருத்தியே இருக்கிறாள் என்றாள். குலநீட்சியாக பெண்மகவு அமையவில்லை என்றால் நீத்தாரன்னையரின் சினம் வந்துசேரும் என்று அச்சுறுத்தினாள். மும்முறை குந்திபோஜன் தன் தூதர்களை அனுப்பியும் சூரசேனரால் முடிவைச் சொல்லமுடியவில்லை. பத்மை மறைந்தபின்பு அவ்வாறு மகளை அளிப்பதை அவள் நீத்தாருலகிலிருந்து தடுப்பாள் என்ற எண்ணம் அவருள் வலுவாக எழுந்தது. ஆகவே மகளை அளிக்கவியலாது என்று பதிலிறுத்தார்.
குந்திபோஜன் அடுத்த காளிந்திவிருந்தில் குலமூதாதையர் முன்னால் சூரசேனரின் வாக்குறுதியை முன்வைத்து அறமுரைக்கும்படி கோரப்போவதாக சூரசேனர் அறிந்தார். நிலைகொள்ளாத உள்ளத்துடன் அவர் ஆயர்குலத்தின் மூத்தவர் சிலரிடம் அதைப்பற்றி வினவினார். சூரசேனர் வாக்குறுதியளித்தமைக்கு குலமூதாதையர் சான்றென்பதனால் அதை மறுக்க முடியாது. மகள்கொடை மறுத்தால் குந்திபோஜன் சூரசேனரை யாதவர்குலம் விலக்கிவைக்கவேண்டுமென்று வருணன் மேல் ஆணையாகக் கோருவான். அதற்கு அனைவரும் கட்டுப்பட்டாகவேண்டும்.
அதைத் தவிர்க்கும் வழி ஒன்றே என்றார் ஒரு முதியவர். யாதவர்குலம் பெண் குரல் கேட்காமல் எம்முடிவையும் எடுக்கமுடியாது. அதை மூதன்னையர் ஏற்கமாட்டார்கள். சபைமுன்னிலையில் பிருதை குந்திபோஜனுக்கு மகளாகச் செல்ல மறுத்தால் மூன்றுவருடத்துக்கு அம்முடிவை ஒத்திப்போட குலச்சபை ஒப்புதலளிக்கும். அப்படி மும்முறை ஒத்திப்போடமுடியும். அதற்குள் பிருதைக்கு பதினான்கு வயதாகிவிடும். அதன்பின் அவள் முடிவெடுக்கலாம். அவள் விரும்பவில்லை என்றால் அவளை கோர குந்திபோஜனுக்கு உரிமையில்லாதாகும்.
சூரசேனர் பிருதையை அழைத்து குந்திபோஜனின் நாட்டுக்குச் செல்ல விருப்பமில்லை என்பதை குலமன்றில் சொல்லும்படி கோரினார். மூன்று தமக்கையரையும் லவணர்குலத்துக்கு அளித்துவிட்ட நிலையில் விருஷ்ணிகுலத்தில் ஹ்ருதீகரின் குருதியாக எஞ்சியிருக்கும் கருவறை அவளுடையதே என்றார். கடைமகவாகிய அவளையே பத்து தமையன்களும் நம்பியிருப்பதைச் சொல்லி எவ்வண்ணம் சபையேறி எச்சொற்களைச் சொல்லி மறுப்பை வெளியிடவேண்டும் என்று பயிற்றுவித்தார். பிருதை அவரது சொற்களை நன்கு உளம்கொண்டு மீட்டுச் சொல்லவும் செய்தாள்.
யமுனைக்கரையில் குலக்கூடல் விழவு தொடங்கியது. ஆயர்குடிகள் கூடி கள்விருந்தும் ஊன்விருந்தும் மலர்சூழாட்டும் நீர்விளையாட்டும் ஆகோளாடலும் ஏறுகோளாடலும் செய்து மகிழ்ந்தனர். நாளிருண்டபின்னர் யமுனையின் கரையில் புல்வெளியில் அனைவரும் குழுமியபோது நறுவெற்றிலை கைமாறி மகிழ்ந்திருக்கையில் குந்திபோஜன் எழுந்து தன்குலத்துக்கு வாக்களிக்கப்பட்ட மகள்கொடையை சூரசேனர் நிகழ்த்தவேண்டுமென்று கோரினார். சூரசேனர் தன் மகள் பிருதை குந்திபோஜனின் அரண்மனைக்குச் செல்வதை விரும்பவில்லை என்று பதிலுரைத்தார். “அவளுடைய விருப்பே இக்குடியின் கொள்கையாகும்” என்றனர் மூத்தோர்.
பிருதையை அவைக்கு அழைத்தனர். அவள் வசுதேவனுடன் நடந்து வந்து மன்றமைந்திருந்த அரசமரமேடைக்குக் கீழே மேடைக்கல்லைப் பிடித்தபடி தலைகுனிந்து நின்றாள். அருகே வசுதேவன் நின்று மேடையிலமர்ந்திருந்தவர்களை தன் தெளிந்த விழிகளால் பார்த்துக்கொண்டிருந்தான். குலமூத்தாரான முதியவர் ஒருவர் “அன்னையே, இந்த மன்றுக்கு வருக” என்று அழைத்ததும் அவள் மேடையேறி முதியவர்கள் நடுவே நின்றாள்.
மலர்விளையாடலுக்காக அணிந்திருந்த வெண்ணிற ஆடையெங்கும் பலவகையான வண்ணங்கள் படிந்து பெரியதொரு மலர் போல நின்ற பிருதையிடம் முதியவர் “அன்னையே, தங்களை தங்கள் தந்தை தன் முறையிளவலாகிய குந்திபோஜருக்கு மகள்கொடையாக அளிப்பதாக வாக்குகொடுத்திருக்கிறார். அந்த வாக்குக்கு நாங்களனைவரும் சான்று. தங்களுக்கு குந்திபோஜரின் மகளாகச் செல்வதற்கு உடன்பாடுள்ளதா என்று தெரிவியுங்கள்” என்றார்.
பிருதை தலையைத் தூக்கி தெளிந்த விரிவிழிகளால் அவையை நோக்கி “குலமூத்தாரே, நான் என் தந்தையின் வாக்கின்படி குந்திபோஜருக்கு மகளாகச் செல்ல முழு விருப்பு கொண்டுள்ளேன்” என்றாள். அவளுடைய இனிய கூரிய குரலை அங்கிருந்த அனைவரும் கேட்டனர். சூரசேனர் அவளுடைய அக்குரலை அதற்கு முன்னர் கேட்டதே இல்லை. அவள் அவரிடம் தலையசைப்பாலும் ஓரிரு உதிரிச்சொற்களாலும் மட்டுமே அதுவரை உரையாடியிருந்தாள். தன்னை மறந்து பீடத்தை விட்டு எழுந்து “மகளே பிருதை!” என்றார்.
முதியவர் “அன்னையே, நம் குலவழக்கத்தையும் தாங்களறிந்திருக்கவேண்டும்… தங்கள் தந்தை தங்களை முறைப்படி நீர்வார்த்து குந்திபோஜருக்குக் கையளிப்பார். அதன்பின் உங்களுக்கும் நீங்கள் பிறந்த குலத்துக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. இக்குலத்தின் பெயரையோ சின்னங்களையோ உறவுகளையோ நீங்கள் தொடர முடியாது. இங்குள்ள பிறப்பிலும் இறப்பிலும் உங்களுக்கு செய்தி இல்லை. விழவுகளில் உரிமையும் உடைமைகளில் பங்கும் இல்லை. பிடுங்கிநடப்படும் நாற்றுபோல குந்திபோஜரின் நாட்டில் நீங்கள் வேரூன்றவேண்டும். உங்கள் குலம் குந்திபோஜரின் குலம். நீங்கள் போஜவம்சத்தைச் சேர்ந்தவரென்றே அறியப்படுவீர்கள்” என்றார். “ஆம் தெரியும்” என்று பிருதை தலையசைத்தாள். “நான் குந்திபோஜரின் மகளாகவே செல்லவிழைகிறேன்” என்று மீண்டும் சொன்னாள்.
குந்திபோஜன் மலர்ந்த முகத்துடன் எழுந்து கைகளைக் கூப்பியபடி “என் மூதாதையர் என் மீது கருணையுடன் இருக்கிறார்கள். எனக்கு மறுக்கப்பட்ட மகவுகளை எல்லாம் இதோ ஒரு பெண்ணுருவில் எனக்களிக்கிறார்கள் என் குலதெய்வங்கள்” என்றான். “அன்னையே, என் குலத்துக்கு வருக….உன் உதரத்தில் என் மூதாதையர் பிறந்தெழுக” என்று சொன்னபோது அவன் மனம் விம்மி கண்ணீர் விட்டு அழத்தொடங்கினான். கும்பிட்ட கைகளை நெற்றியிலமர்த்தி அழும் அவனை அவன் தோழனான பகன் தோளணைத்து ஆறுதல்படுத்தினான்.
அங்கேயே யமுனையின் நீரை மரக்குவளையில் அள்ளிக்கொண்டுவந்து பிருதையை குந்திபோஜனுக்கு நீரளிப்பு நிகழ்த்தினார் சூரசேனர். அவளுடைய சிவந்த சிறிய கையைப் பற்றி குந்திபோஜனின் கொழுத்தபெரிய கைகளுக்குள் வைத்து ‘அளித்தேன் அளித்தேன் அளித்தேன்’ என்று மும்முறை சொல்லி விலகியதும் அவருடைய அணைகளும் உடைய கண்ணீர் விடத்தொடங்கினார். அங்கிருந்த விருஷ்ணிகள் மட்டுமல்ல போஜர்களும் கண்கலங்கினர். பிருதை மட்டும் தெய்வச்சிலைகளுக்குரிய அலையற்ற முகத்துடன் நின்றாள்.
மேடைவிட்டிறங்கிய சூரசேனரின் கைகளைப் பற்றிக்கொண்டு விருஷ்ணிகுலத்திலேயே மூத்தவரான கார்கிகர் “என்ன செய்துவிட்டாய்! எதை இழந்துவிட்டாய்! அதோ மன்றில் அவள் நிற்கும் நிமிர்வைப்பார். அவள் எளிய ஆயர்குலத்துப்பெண் அல்ல. மண்ணில் வந்த பேரரசிகளில் ஒருத்தி. என்றோ ஜனபதங்களை அவள் ஆளப்போகிறாள். சதலட்சம் மானுடர்களின் விதியை அவள் வரையப்போகிறாள்” என்றார். “அவள் இறந்திருந்தால்?” என வெறுப்பில் கோணலாகிய முகத்துடன் ஈரம் நிறைந்த கண்களுடன் கேட்டார் சூரசேனர். “அவள் இறந்ததாக எண்ணிக்கொள்கிறேன்… ஆம் அவள் இறந்துவிட்டாள்.”
மன்றில் எழுந்த குலமூத்தாரான சோமகர் “இதோ இக்கணம் முதல் இந்த மகளை குந்திபோஜரின் குருதி என அறிவிக்கிறேன். இவள் இனி குந்தி என அறியப்படட்டும்” என்றார். ‘ஓம் அவ்வாறே ஆகுக!’ என அங்கிருந்த அனைவரும் வாழ்த்தி மலரை வீசினர்.
அங்கிருந்தே பிருதை குந்திபோஜனின் நகரான மார்த்திகாவதிக்குக் கிளம்பிச்சென்றாள். மார்த்திகாவதியில் இருந்து குந்திபோஜனின் அரசியான தேவவதியும் அவள் சேடிகளும் வந்த பெரிய கூண்டுவண்டி சாளரங்களில் செந்நிறத்திரைகள் நெளிய மார்த்திகாவதியின் சிம்மக்கொடி படபடக்க நின்றுகொண்டிருந்தது. காவலரும் சேவகரும் காத்து நின்றிருந்தனர்.
மன்றில் இருந்து இறங்கிய பிருதை தன் தாயிடம் சென்று தாள்பணிந்து வணங்கினாள். மரீஷையின் முகத்தில் அப்போதும் துயரம் தெரியவில்லை என்பதை அப்பால் நின்ற சூரசேனர் கண்டார். மரீஷை பிருதையின் தலையில் கைவைத்து ஆசியளித்தபின் அவள் கையைப்பற்றி சூரசேனரைநோக்கி கொண்டுவந்தாள்.
தன் ஒன்பது மைந்தர்களுடன் ஒரு சாலமரத்தடியில் நின்றிருந்த சூரசேனர் தணிந்த குரலில் மூத்தவனாகிய வசுவிடம் “நான் அவளை வாழ்த்தப்போவதில்லை. உங்கள் வாழ்த்துக்களும் அவளுக்கு கொடுக்கப்படலாகாது. நமது வாழ்த்துக்களின்றி அவள் சென்றாள் என்பது குலநினைவில் வாழட்டும். இது என் ஆணை” என்றார். அவர் என்னசெய்யப்போகிறார் என்பதை அவரது குலத்தவரின் ஆயிரம் விழிகள் அங்கே சூழ்ந்து கவனித்துக்கொண்டிருந்தன என அவர் அறிந்திருந்தார்.
திடமான காலடிகளுடன் நிமிர்ந்த தலையுடன் அவர்களை நெருங்கி வந்த மரீஷை முதலில் தன் மைந்தர்களை நோக்கி “மைந்தர்களே, உங்கள் தங்கையை வாழ்த்தி வழியனுப்புங்கள். உங்கள் ஒவ்வொருவரின் குருதியும் அவளுடன் எப்போதுமிருக்கவேண்டும்” என்று திடமான குரலில் ஆணையிட்டாள். அவளைப்போன்றே கரிய நிறத்துடன் பெரிய பற்களும் வெண்விழிகளுமாக நின்றிருந்த மூத்த மகன் வசு முன்னால் நகர்ந்து தலைவணங்கி “ஆணை அன்னையே” என்றான். அச்சொல்லை ஒருபோதும் அவன் தன்னிடம் சொன்னதில்லை என்பதை அக்கணத்தில்தான் சூரசேனர் அறிந்தார்.
தன் ஒன்பது மைந்தர்களும் நிரையாக நின்று தங்கள் காலை பணிந்து எழுந்த பிருதையை வாழ்த்துவதை சூரசேனர் திகைத்த விழிகளுடன் பார்த்து நின்றார். மரீஷை அவரிடம் “விருஷ்ணிகுலத்தவரே தங்கள் வாழ்த்துக்களை மகளுக்கு அளியுங்கள்” என கனத்த குரலில் ஆணையிட்டாள். அவளுடைய அந்தக்குரலையும் அதுவரை அவர் கேட்டதேயில்லை என்று சூரசேனர் உணர்ந்தார். அதை அவரால் மீறமுடியாதென்றும் அறிந்தார். குனிந்து வணங்கிய மகளின் தலையில் கைவைத்து “நன்மக்களைப் பெறு. உன் குலம் தழைக்கட்டும்” என நற்சொல்லிட்டார்.
அந்த ஒருநாளில் சூரசேனர் அவர் எழுபதாண்டுகளாக வாழ்ந்து வந்த வாழ்க்கையை அறிந்துகொண்டார். எவற்றின் மேல் நடந்தோமென்றும் எங்கே அமர்ந்திருந்தோம் என்றும் எதை உண்டோம் என்றும் உணர்ந்ததாக அவர் கார்கிகரிடம் பின்னர் சொன்னார். “என்னைக் கட்டியிருந்த அனைத்திலிருந்தும் விடுதலை அடைந்துவிட்டேன் மாமனே. நான் இன்று மீண்டும் சிறுமகவாகி அன்னையின் கைகளில் வாழ்கிறேன்” என்றார்.
பிருதை குந்திபோஜனுடன் மார்த்திகாவதிக்கு கிளம்பிச்சென்றபின் மூன்றுமாதம் கழித்து வசு தன் தந்தையின் ஓலையுடன் தன் கடையிளவல் வசுதேவனை அழைத்துக்கொண்டு மதுராவுக்குச் சென்று அங்கே ஆட்சிசெய்திருந்த உக்கிரசேனரின் அரண்மனையில் கல்வி கற்பதற்காகச் சேர்த்தான். வசுதேவன் கிளம்பும்போது சூரசேனரின் கால்களில் விழுந்து வாழ்த்துபெற்றான். அவன் தலையில் கையை வைத்து சூரசேனர் சொன்னார் “நீ உன் அறத்தை தேடிச் செல்கிறாய். அரசியல் உனக்கானதென்றால் அவ்வாறே ஆகுக. ஆனால்…”
சற்று தயங்கியபின் அவர் தொடர்ந்தார் “கண்ணீரினாலும் குருதியினாலும்தான் எப்போதும் அரசியல் ஆடப்படுகிறது. பிறருடைய கண்ணீரும் குருதியும் என்றே நாம் நினைப்போம். அவை நம் கண்ணீரும் குருதியும் என அறியும் கணம் ஒன்று வரும்…” அச்சொற்களை அப்போது புரிந்துகொள்ளவில்லை என்றாலும் அதன் ஒவ்வொரு ஒலியையும் வசுதேவன் வாழ்நாளெல்லாம் நினைவில் வைத்திருந்தான்.

4/6/14

பகுதி ஆறு: தூரத்துச் சூரியன்[ 2 ]

பகுதி ஆறு: தூரத்துச் சூரியன்[ 2 ]
தசபதம் என்றழைக்கப்பட்ட அடிக்காட்டுப்பகுதியின் யாதவர்குலத்தலைவராக இருந்த சூரசேனரின் கடைசிமைந்தனாகிய வசுதேவன் இளமையிலேயே தங்கை பிருதையிடம்தான் நெருக்கமானவனாக இருந்தான். அவன் பிறக்கும்போதே அவன் தந்தைக்கு வயதாகிவிட்டிருந்தது. நீண்ட நரைத்த தாடியும் வெண்ணிறமான தலைப்பாகையும் தோள்களில் போடப்பட்ட கனத்த கம்பிளிச்சால்வையும் காதுகளில் குலத்தலைமையின் அடையாளமான பொற்குண்டலங்களும் கொண்ட முதியவரைத்தான் அவன் தந்தையாக அறிந்திருந்தான். அவர் அவனிடம் பெரும்பாலும் பேசியதேயில்லை. அவர் பொதுவாக எவரிடமும் பேசுவதேயில்லை. யாதவர்கள் இளமையிலேயே சொல்லவிதலையும் விழைவவிதலையும் பழகி தங்கள் இயல்பாகக் கொண்டிருந்தனர்.
தசபதத்தின் தலைவராக இருந்த ஹேகயவம்சத்து ஹ்ருதீகர் மறைந்தபோது சூரசேனருக்கு பதினாறு வயது. அவர்களின் கிராமமான மதுவனம் தசபதத்தின் வடக்கு எல்லையில் இருந்தது. தசபதத்திலேயே அதுதான் பெரிய ஊர். பெரிய பிலக்‌ஷ மரங்களாலான வேலிக்குள் வட்டமாக அமைந்த இருநூறு இல்லங்களும் நடுவே அரசமரத்தடியில் ஊர்மன்றும் கொண்ட இடையர்கிராமமான மதுவனத்தின் நடுவே கனத்தமரங்களால் அடித்தளமிடப்பட்டு மரச்சுவர்கள்மேல் மரப்பட்டைக்கூரையிடப்பட்ட ஊர்த்தலைவரின் மாளிகை இருந்தது. முன்பொருகாலத்தில் கோசலமன்னரான சத்ருக்னன் வந்து தங்கிய மாளிகை அது என புகழ்பெற்றிருந்தது.
யாதவர்களில் முதன்மைக்குலமான விருஷ்ணிகளில் பிறந்த ஹ்ருதீகரின் மைந்தரான சூரசேனரை தசபதத்தின் நூற்றியாறு யாதவக்கிராமங்களில் வாழ்ந்த எட்டு குடிகள் இணைந்த அவையில் குடிச்சபைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அவருக்கு அக்குடிகளில் இளமையானதான லவண குலத்தைச்சேர்ந்த மரீஷையை மணம்புரிந்து வைத்தனர்.
லவணர்கள் பத்து தலைமுறைக்கு முன்புவரை தசபதத்துக்கு அப்பாலிருந்த சிலாமுகம் என்னும் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கும் யாதவர்களுக்கும் தலைமுறைதலைமுறையாக போர் நடந்துகொண்டிருந்தது. காட்டுக்குள் மேய்ச்சலுக்குச் செல்லும் கன்றுகளை லவணர் கவர்ந்துசெல்வதும் அதைத்தடுக்கமுயலும் யாதவர்களைக் கொல்வதும் அன்றாட நிகழ்ச்சியாக இருந்தது. லவணர்கள் காட்டை நன்கறிந்திருந்தார்கள். அவர்களின் விற்கள் திறம்கொண்டவையாகவும் அவர்களின் உள்ளம் இரக்கமற்றதாகவும் இருந்தது. அவர்களின் தலைவனாகிய மதூகன் யாதவர்களை விரும்பாதவனாக இருந்தான்.
சூரசேனரின் மூதாதையான கிருதவீரியனின் காலகட்டத்தில் அன்று யமுனைப்பகுதியை ஆட்சி செய்திருந்த கோசலநாட்டின் இக்‌ஷுவாகு வம்சத்து அரசர்களில் இளையவனும் பெரும்புகழ்ராமனின் இளவலுமாகிய சத்ருக்னனிடம் சென்று முறையிட்டனர். அவன் படையுடன் வந்து தசபதத்தை அடைந்தான். அவனுடைய படைகள் மலைஏறிச்சென்று லவணர்களை வென்றன. மதூகனை சத்ருக்னன் கொன்றான். மதூகனின் மகனாகிய மாஹன் தசபதத்தின் யாதவர்களுடன் ஒத்துச்செல்லவும் அங்கிருந்த ஏழு குடிகளுடன் எட்டாவதாக இணைந்துகொள்ளவும் ஒப்புக்கொண்டான்.
லவணகுலம் அவ்வாறாக அடிக்காட்டுக்கு இடம்பெயர்ந்தது. வேட்டையை விட்டுவிட்டு மேய்ச்சலுக்கு வந்தது. ஆனால் யாதவர்கள் லவணர்களை தங்களுக்கு நிகரானவர்களாக நினைக்கவில்லை. லவணர்கள் அப்போதும் வேட்டைக்காரர்களின் மனநிலையையும் வாழ்க்கையையுமே கொண்டிருந்தனர். காட்டுவேடர்களின் வழக்கப்படி அவர்கள் வருடத்தில் ஒருமுறை சித்திரைமுழுநிலவின் குலதெய்வபூசைநாளில் மட்டுமே நீராடினர். நீராடாமலிருப்பது காடுகளுக்குள் பிற விலங்குகளின் மோப்பத்துக்குச் சிக்காமல் உலவுவதற்குரிய வழிமுறையாக அவர்களால் நெடுங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த வழக்கம். அவர்கள் பிறர் தொட்ட உணவை உண்ணுவதோ பிறரை தங்கள் இல்லத்துக்கு அழைப்பதோ இல்லை. ஆகவே பிறரும் அவர்களை அப்படியே நடத்தினர்.
அவர்கள் தங்களுக்குள் மட்டும் லாவணம் என்னும் மொழியில் பேசிக்கொண்டனர். அவர்களின் பெண்களும் குழந்தைகளும் யாதவர்கள் பேசிய யாதகி மொழியை கற்றுக்கொள்ளவேயில்லை. குலத்தலைவர்கள் மட்டும் பொதுச்சபைகளில் மழலையில் யாதகி மொழியைப் பேசினார்கள். அவர்களின் மொழியே அவர்களை நகைப்புக்குள்ளானவர்களாக ஆக்கியிருந்தது. காட்டைவென்ற லவணர்களால் மொழியை வெல்லமுடியவில்லை. மொழியால் ஆன சமநிலத்தில் அவர்கள் அன்னியர்களாகவே இருந்தனர்.
யாதவர்களின் வழக்கப்படி குலத்தலைவராக அமர்பவர் எட்டு யாதவகுலங்களில் ஒன்றிலிருந்து மணம்கொள்ளவேண்டும். ஹ்ருதீகர் சிரு குடியில் இருந்தும் வைரி குடியில் இருந்தும் இரு மகளிரை மணம்புரிந்துகொண்டிருந்தார். அவர்களில் சிரு குடியைச் சேர்ந்த சம்பைக்கு தேவவாஹன் கதாதனன் என்னும் இருமைந்தர்கள் பிறந்தனர். வைரி குடியைச் சேர்ந்த பத்மைக்கு கிருதபர்வன் சூரசேனன் என்னும் இரு மைந்தர்கள் பிறந்தனர். யாதவர்களின் வழக்கப்படி இளமையிலேயே தேவவாஹனும் கதாதனனும் கிருதபர்வனும் தந்தையின் மந்தையைப்பிரித்து தங்கள் பங்குகளைப் பெற்றுக்கொண்டு புதிய மேய்ச்சல்நிலங்களை நோக்கிச்சென்றனர். அவர்கள் கங்கைக்கரையிலும் இமயத்தின் அடிவாரத்திலும் புதிய யாதவநிலங்களை அமைத்துக்கொண்டனர். சூரசேனர் தந்தையின் எஞ்சிய மந்தைகளுக்கு உரிமையாளராக தசபதத்திலேயே இருந்தார்.
குடிமூதாதையர் கூடிய சபையில் அடுத்ததாக சூரசேனர் லவணகுலத்தைச்சேர்ந்த பெண்ணை மணந்துகொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டது. லவணர்களை பிற யாதவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு அது இன்றியமையாதது என்றனர் குடிமூத்தார். ஹ்ருதீகரின் இரண்டாவது மனைவியும் சூரசேனரின் அன்னையுமான வைரிகுடியைச் சேர்ந்த பத்மை அதைக்கேட்டு கடும்சினமடைந்து கண்ணீருடன் கைதூக்கி அவச்சொல்லிட்டவளாக சபையில் இருந்து வெளியேறினாள். என் மைந்தனுக்கு பச்சைஊன் உண்ணும் குடியில் பெண்கொள்வதை விட நான் உயிர்விடுவேன் என்று சொல்லி இல்லத்தில் தன் அறைக்குள் சென்று கதவைமூடிக்கொண்டாள்.
பதினாறு வயதான சூரசேனர் கதவைத் தட்டி “நான் ஹ்ருதீகரின் மைந்தன் அன்னையே. நான் எனக்கென எதையும் செய்துகொள்ளமுடியாது. எந்தையின் ஆணையை மட்டுமே நான் நிறைவேற்றமுடியும். சபையில் வந்தமர்ந்திருக்கும் குண்டலதாரிகளான மூதாதையர் அனைவரும் என் தந்தைவடிவமேயாவர்” என்றார். “என் அன்னையாகிய நீ ஹ்ருதீகரின் துணைவி. அவரது ஆணையை நீயும் ஏற்றுக்கொள்ளவேண்டியவளே” என்றார். பத்மை உள்ளே பதில் சொல்லாமல் அழுதுகொண்டிருந்தாள். “நான் இந்தக் கதவுக்கு முன் உன் காலடியில் என அமர்ந்துகொள்கிறேன். நீ வாயில் திறந்தால் என் தந்தையின் மைந்தனாக வாழ்கிறேன். வாயில் திறக்கவில்லை என்றால் உள்ளே நீயும் வெளியே நானுமாக உயிர்துறந்து தந்தையை அடைவோம்” என்று சொல்லி சூரசேனர் வாயிலிலேயே அமர்ந்துகொண்டார்.
அன்னை வாயிலைத் திறக்கவேயில்லை. மைந்தன் கதவைவிட்டு நீங்கவுமில்லை. அந்த ஊண்துயில்நீப்பு நோன்பை சாளரங்கள் வழியாக நோக்கியபடி சூரசேனரின் விருஷ்ணிகுலத்து யாதவர்கள் முழுக்க அங்கேயே நின்றிருந்தனர். நான்காம் நாள் அன்னை உள்ளிருந்து மெல்ல “சூரசேனா சூரசேனா” என அழைத்தாள். மைந்தனின் ஒலி கேட்கவில்லை என்பதை உய்த்து மெல்ல கதவைச் சற்றே திறந்து நோக்கினாள். மயங்கி கதவில் சாய்ந்துகிடந்த மைந்தனைக் கண்டு அலறியபடி அள்ளி அணைத்துக்கொண்டாள். “நீ நினைப்பதே ஆகட்டும்….நீயன்றி நான் வேறுலகை அறியேன்” என்று அவள் கூவியழுதாள்.
அவ்வாறாக சூரசேனர் லவணகுலத்தைச்சேர்ந்த மரீஷையை மணந்தார். மரீஷை அவரைவிட மூன்றுவயது குறைந்தவள். ஆனால் அவள் அவரைவிட ஓரடி உயரம் கொண்டவளாகவும் இருமடங்கு எடைகொண்டவளாகவும் இருந்தாள். கன்னங்கரிய நிறமும் நதிநுரைபோல சுருண்டகூந்தலும் பெரிய பற்களும் கொண்டவளாக இருந்தாள். குடிச்சபையில் லவணர்களின் தலைவனாகிய கலன் தன் மூத்தமகளை சூரசேனருக்கு அறத்துணைவியாக அளிக்கவிருப்பதாகச் சொன்னபோதுதான் தந்தையின் பின்னால் இடையில் அணிந்த ஆட்டுத்தோல் ஆடையை முலைகளுக்குமேல் தூக்கி தோளில் முடிச்சுபோட்டு தலையில் சிவந்த காட்டுமலர் சூடி கழுத்தில் செந்நிறமான கல்மாலை அணிந்து நின்றிருந்த மரீஷையை சூரசேனர் கண்டார். இருளுக்குள் கிடக்கும் வெள்ளிக்காசுகள் போல அவள் கண்வெள்ளைகள் தெரிந்தன.
அவளைக் கண்டதுமே குடிச்சபையில் ஓர் அமைதி பரவியது. குடிமூத்தாரான காளிகர் தயங்கியபடி சூரசேனரிடம் மணம் கொள்ள அவருக்குத் தடையில்லை அல்லவா என்று கேட்டபோது “இல்லை, குடிமுறையே என் வழி” என்று அவர் சொன்னார். யாதவமுறைப்படி சூரசேனர் ஏழு கன்றுள்ள வெண்பசுக்களை மரீஷையின் தந்தையான கலனுக்கு கையளித்து அவர் மகளை கன்னிக்கொடையாகப் பெற்றுக்கொண்டார். அவள் கழுத்தில் விருஷ்ணிகுலத்தின் இலச்சினையான அக்னிவர்ண கருடனின் சின்னத்தைப் பொறித்த மங்கலத்தாலியை சூரசேனர் கட்டினார். மணமகள் அப்போது வழக்கப்படி நாணித்தலைகுனியாமல் திகைத்த வெண்விழிகளுடன் அனைவரையும் மாறிமாறி நோக்கியபடி நின்றிருந்தாள்.
மரீஷை விரல் தொட்ட அனைத்து பால்குடங்களும் திரிந்தன என்றாள் பத்மை. அவள் நடந்தபோது மரத்தாலான இல்லம் அதிர்ந்தது என்றனர் முதுபெண்டிர். அவளுக்கு நீராடும் வழக்கமோ பற்களைத் தீட்டும் முறையோ இல்லை என்றனர் ஆயர்மகளிர். அவளுக்கு யாதகி மொழியே தெரியவில்லை என்று சூரசேனர் கண்டுகொண்டார். செம்மொழியிலோ ஒருசொல்லும் அவளறிந்திருக்கவில்லை. அவளிடம் அவர் பேசிய சொற்களெல்லாம் பாறைமேல் மழை என வழிந்தோடின. செவியிழந்த பசுவை மேய்ப்பதுபோன்றது அவளுடனான காதலென அவர் அறிந்தார். அவர் அவளைப்பற்றி எவரிடமும் ஒரு குறைச்சொல்லும் சொல்லவில்லை. அவளிடம் பேசுவதற்கு கண்களாலும் கைகளாலும் ஒரு மொழியை அவரே உருவாக்கிக் கொண்டார்.
ஆனால் அவளை அவரது உடல் அறிந்திருந்தது. அவளுடைய உடலின் திடத்தையும் ஆற்றலையும் அவருடைய உடல் வழிபட்டது. காலம் செல்லச்செல்ல அவளுடைய நிறமும் வாசனையும் ஒலிகளும் அவருக்குள் பெரும் மனக்கிளர்ச்சியை நிறைத்தன. அந்த ஈர்ப்பை அவரே அஞ்சினார். அன்னையும் பிற விருஷ்ணிகுலத்தவரும் அதை அறிந்துகொள்ளலாகாது என்று அவர் நினைத்தார். ஆனால் அவரது கண்களைக் கண்டதுமே மூதன்னையர்கூட அதைத் துல்லியமாக அறிந்துகொண்டனர். அவர் அவர்களின் கண்களைச் சந்திக்காமலிருக்கையில் அவரது உடலின் அசைவுகள் வழியாகவே அறிந்துகொண்டனர்.
அதை அறிந்ததுமே பத்மை உரத்தகுரலில் வேறு எதையோ குறிப்பிட்டு கூச்சலிடுவாள். கண்ணீர் மல்கி மனக்குறைகளைச் சொல்லி அழுவாள். தன்னையே எண்ணி வருந்தி தன் நெஞ்சிலேயே அறைந்துகொள்வாள். சூரசேனர் அப்போது தலைகுனிந்து வெளியேறி தொழுவங்களுக்கோ பட்டிக்கோ ஊர்மன்றுக்கோ சென்றுவிடுவார். அவரைச் சந்திக்கும் விருஷ்ணிகுலத்துப் பெண்களெல்லாம் அவளைப்பற்றி இழித்துரைத்தனர். அந்த இழிவுரைகள் நாள்செல்லச்செல்ல மிகுந்தபடியே வந்தன. அதை உணர்ந்தபோதுதான் அவருக்கு அவள்மேலிருந்த பெருங்காதலை அறியாத எந்தப்பெண்ணும் அக்குடியில் இல்லை என அவர் புரிந்துகொண்டார்.
அவளுக்கும் அது தெரிந்திருந்தது. அவருடன் இருக்கையில் அவள் எப்போதும் மெல்லியகுரலில் பெரிய உடலில் இறுகிய கரிய தசைகள் அதிர சிரித்துக்கொண்டிருப்பாள். அவளுக்கு என்னவேண்டும் என்று அவர் எப்போது கேட்டாலும் அவரது மார்பில் தன் சுட்டுவிரலை ஊன்றி அவள் வாய்பொத்திச் சிரிப்பாள். ‘நீ அழகாக இருக்கிறாய்’ என்று அவளுடைய மொழியில் சொல்வதெப்படி என்று அவர் கற்றுக்கொண்டார். ஆனால் அச்சொற்கள் அவளுக்கு எந்தப் பொருளையும் அளிக்கவில்லை. பின்னர் நீ வலிமையானவள் என்று சொல்லத்தொடங்கினார். அதுவும் அவளுக்கு உவப்பளிக்கவில்லை. அவளிடம் ஒருமுறை நான் உன் குழந்தை என்று சொன்னார். அவள் பெருங்காதலுடன் அவரை தன் பெரிய மார்புக்குவைகளுக்குள் அணைத்து இறுக்கிக்கொண்டு லாவணமொழியில் எதையோ பாடுவதுபோலச் சொன்னாள்.
தன்காதலே மரீஷையை பிறரது வெறுப்புக்குள்ளாக்குகிறது என்றறிந்தபின்னர் சூரசேனர் காட்டிலேயே தங்கத் தொடங்கினார். மாதத்தில் இரண்டுமுறை மட்டும் மதுவனத்துக்கு வந்து அவளுடன் இருப்பார். அப்போதுகூட அவளை எருமை சேற்றுக்குழியில் விழுந்துவிட்டது என்றோ பசுவின் கால் ஒடிந்துவிட்டது என்றோ ஏதேனும் சொல்லி அருகே இருக்கும் காட்டுக்குக் கூட்டிச்சென்றுவிடுவார். அங்கே மரத்தின்மேல் கட்டப்பட்டிருந்த காவல்மாடத்தில்தான் அவளுடன் குலவினார். அவள் அவரிடம் எந்த மனக்குறையையும் சொல்லவில்லை. அவருடனிருக்கும்போதெல்லாம் அவளுடைய உடல் வழியாகவே அகம் தன்னை வந்தடைகிறது என அவர் அறிந்தார்.
VENMURASU_EPI_77_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
மரீஷை விருஷ்ணிகளின் குடியில் தன்னந்தனியாக வாழ்ந்தாள். சிலநாட்களிலேயே அவளுடைய இணையற்ற புயவல்லமையை பத்மை கண்டுகொண்டாள். அவள் கறந்தால் அனைத்துப்பசுக்களும் இருமடங்கு பால்கொடுத்தன. அவளால் ஒருநாளில் முந்நூறுபசுக்களுக்கு பால்கறக்க முடிந்தது. விழித்திருக்கும் நேரமெல்லாம் ஒருகணம்கூட நிலைக்காமல் மத்துச்சக்கரத்தைச் சுழற்றமுடிந்தது. அத்தனை வேலைகளையும் முடித்தபின் அவள் புறந்திண்ணையில் அருகே நின்றிருந்த மூத்த சாலமரத்தை அண்ணாந்து நோக்கி அதன் கிளைகளிலும் இலைகளிலும் ஆடும் அணில்களை கவனித்தபடி கனவுநிறைந்த கண்களுடன் அமர்ந்திருப்பாள். அப்போது சிலசமயம் மெல்லிய குரலில் லாவணமொழியில் எதையோ பாடிக்கொள்வாள்.
அவள் அழுவதையோ முகம்சுளிப்பதையோ ஆயர்மகளிர் கண்டதேயில்லை. அவள் முகத்தின் பெரியபற்கள் அவளுக்கு எப்போதும் புன்னகை நிறைந்த முகத்தை அளித்தன. சிறிய மூக்கும் கொழுத்துருண்ட கன்னங்களும் குழந்தைத்தன்மையைக் காட்டின. அவள்மேல் கனிவுகொண்ட ஆயர்மகளிரும் சிலர் இருந்தனர். அவர்களின் கன்றுகள் திமிறிக்கொண்டு செல்லும்போதோ எருமைகள் எழாமல் அடம்பிடிக்கும்போதோ மரீஷையைத்தான் அவர்கள் அழைக்கவந்தனர். அவர்களின் குழந்தைகளுக்கு அவளுடைய ஆற்றல்மிக்க உடல்மேல் வியப்பிருந்தது.
ஆனால் கண்மூடும் நாள்வரை பத்மை தன் மருகியை வெறுத்தாள். அவளை முகம்சுளிக்காமல் ஒருகணமேனும் பார்க்கவில்லை. கசப்புஇல்லாத ஒரு சொல்லையேனும் அவளிடம் சொல்லவில்லை. அவள் மணமுடித்துவந்த முதல்வருடமே முதல்குழந்தையைப் பெற்றாள். அவளைப்போலவே கனத்த பெரிய கரிய உடலுள்ள ஆண்குழந்தையை பத்மை தொட்டுப்பார்க்கவேயில்லை. ஆகவே பிற யாதவமகளிரும் அக்குழந்தையைத் தொடவில்லை. வசு அன்னையின் இடையிலேயே வளர்ந்தான். அடுத்தகுழந்தையை மரீஷை பெற்றபோது வசுவை சூரசேனர் காட்டுக்குக் கொண்டுசென்று அங்கே தன்னுடன் வைத்துக்கொண்டார்.
மரீஷை தொடர்ந்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டே இருந்தாள். தேவபாகன், தேவசிரவஸ், ஆனகன், சிருஞ்சயன், காகானீகன், சியாமகன், வத்ஸன், காவுகன் என அனைத்துக்குழந்தைகளும் மரீஷையைப்போலவே கன்னங்கரியவையாக, ஆற்றல்மிக்கவையாக இருந்தன. விருஷ்ணிகுலத்து யாதவர்கள் அனைவருமே வெண்ணிறமானவர்கள். காராம்பசுக்குட்டிகளைப் போன்ற குழந்தைகளைக் காண விருஷ்ணிகுலப்பெண்கள் திரண்டு வந்தனர். வாயில் கைவைத்து விழித்த கண்களுடன் குழந்தைகளை நோக்கி நின்றபின் தங்களுக்குள் கிசுகிசுப்பாகப் பேசிக்கொண்டனர். ஒருவரும் குழந்தைகளை கையால் தொட்டு எடுக்க குனியவில்லை.
முதல்மூன்று குழந்தைகளுக்கும் விருஷ்ணிகளின் குலவழக்கப்படி செம்மொழிப்பெயர்கள் வைக்கப்பட்டனர். அதன்பின் பத்மை அக்குழந்தைகளுக்கு அவர்களின் நிறத்தையே பெயராக வைத்தாள். ஒருகுழந்தைகூட அவள் மடியில் ஒருமுறையும் அமரவில்லை. பெயர்சூட்டுவிழாவின்போதுகூட அவை அன்னையின் மடியிலேயே அமர்ந்திருந்தன. பெயரிட்ட மறுநாளே அவை தந்தையுடன் காட்டுக்குச் சென்றன. மரீஷை அதன்பின் மூன்று பெண்குழந்தைகளைப் பெற்றாள். கரிணி, சிக்ஷை, சியாமை என்னும் மூவரும் அன்னையைப்போலவே கன்னங்கரிய நிறம்கொண்டவர்களாக இருந்தனர். அவர்களுக்கு நாமகரணம் முடிந்ததுமே அன்னையின் லவணகுலத்துக்கு அனுப்பப்பட்டனர்.
பதின்மூன்றாவது குழந்தையாக வசுதேவன் பிறந்தபோது பத்மை முதுமையடைந்திருந்தாள். மருகி கருவுற்றபோது அவள் அக்கருவையே வெறுத்தாள். பன்னிரு குழந்தைகளுக்குப் பின்னரும் மரீஷை எந்த மாறுதலுமில்லாமல் லவணர்குலத்திலிருந்து தோல்கூடையில் சீர்ப்பொருட்களை சுமந்து, தயங்கியகாலடிகளுடன் இல்லத்தில் நுழைந்தபோதிருந்ததைப் போலவே இருந்தாள். அவள் வயிறு கருமையாக வீங்கி மெருகு கொண்டபோது “இன்னொரு எருமைக்குட்டி உள்ளே வாழ்கிறது…” என்று பத்மை சொன்னாள். “விருஷ்ணிகுலத்து ஹ்ருதீகரின் குருதிக்கு தொடர்ச்சியில்லை என விதி எண்ணுகிறது போலும்” என்றாள்.
ஆகவே மகவுபிறந்த செய்தியை வயற்றாட்டி வந்து சொன்னபோது புறவாயிலில் கன்றுக்குட்டிக்கு கழுத்துநார் பின்னிக்கொண்டு அமர்ந்திருந்த அவள் எழுந்துகூட பார்க்க முனையவில்லை. “சரி, அதற்கென்ன? என் முத்திரைமோதிரத்தை அளிக்கிறேன். அதை நீரிலும் பாலிலும் தொட்டு நீயே அதன் உதடுகளில் வைத்துவிடு” என்று வயற்றாட்டியிடம் சொன்னாள். “பிராட்டி, குழந்தை செந்நிறமாக இருக்கிறது” என்று வயற்றாட்டி சொன்னபோது விளங்காதவள்போல ஏறிட்டு தன் முதிய விழிகளால் பார்த்தாள். அதன்பின் தீப்பிடித்துக்கொண்டவள் போல எழுந்து ஈற்றறை நோக்கி ஓடினாள்.
உள்ளே மூங்கில்கட்டிலில் தோல்மெத்தைமேல் மரீஷை கிடந்தாள். அவள் ஓடிவந்து குழந்தைமேல் இருந்த மரீஷையின் கரிய கையைத் தட்டி அகற்றிவிட்டு குனிந்து குழந்தையை நோக்கினாள். தாமரையிதழ்போலிருந்தது அது. “குளிப்பாட்டுங்கள்… குளிப்பாட்டி என்னிடம் அளியுங்கள்” என்று பத்மை பதறியகுரலில் கூவினாள். “இதோ விருஷ்ணிகுலத்து ஹ்ருதீகருக்கு கொடித்தோன்றல் பிறந்திருக்கிறது.”
வயற்றாட்டிகளில் ஒருத்தி “வழக்கத்துக்கு மாறாக குழந்தை மிகச்சிறியதாக இருக்கிறது பிராட்டி. அத்துடன் போதிய அளவு துடிப்புடனும் இல்லை. அன்னையின் உடலும் குளிர்ந்து வருகிறது” என்றாள். “குழந்தை வாழவேண்டும்… அதற்காக நீங்கள் எதைவேண்டுமென்றாலும் செய்யலாம்” என்று பத்மை சொன்னாள். அதற்குள் மயக்கத்தில் குருதி வழியக் கிடந்த மரீஷை லாவண மொழியில் ஏதோ முனகியபடி புரண்டுபடுத்தாள். அவள் உடல் அதிரத்தொடங்கியது. கைகால்கள் இருபக்கமும் விரிய எருமைபோல அவள் உறுமல் ஒலியை எழுப்பினாள்.
“மீண்டும் வலி வந்திருக்கிறது பிராட்டி” என்றாள் வயற்றாட்டி. பத்மை “அந்தக்குழந்தையை என்னிடம் கொடு… நீங்கள் அவளைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றாள். வயற்றாட்டி தோலாடையில் பொதிந்து கையில் கொண்டு வந்து கொடுத்த குழந்தையை மார்போடணைத்து அவள் கண்ணீர்விட்டாள். சற்று நேரத்தில் வயற்றாட்டி வந்து இன்னொரு பெண்குழந்தையும் பிறந்திருக்கிறது என்றாள். “குழந்தை என்ன நிறம்?” என்றுதான் பத்மை கேட்டாள். “இதே நிறம்தான் பிராட்டியே…நல்ல செந்நிறம்.” பத்மை கண்ணீர் வழிய மார்போடணைத்த குழந்தையுடன் மீண்டும் ஈற்றறை நோக்கி ஓடினாள்.
இருகுழந்தைகளும் பத்மையின் நெஞ்சிலேயே வளர்ந்தன. பாலூட்டும் நேரம் தவிர அவற்றைத் தீண்டுவதற்கு மரீஷை அனுமதிக்கப்படவேயில்லை. அவள் இல்லத்தின் அனைத்துப்பணிகளையும் செய்ய பத்மை இரவும் பகலும் குழந்தைகளுடன் இருந்தாள். மூத்தவனாகிய வசுதேவனும் தங்கை பிருதையும் பாட்டியையே அன்னை என்று அழைத்தனர். எப்போதேனும் வந்துசெல்லும் தந்தையை அவர்கள் அறியவேயில்லை. தந்தையுடன் காட்டில் வாழ்ந்த தமையன்களையும் லவணர்களின் ஊரில் வாழ்ந்த தமக்கையரையும் ஓரிருமுறைக்குமேல் அவர்கள் கண்டிருக்கவுமில்லை. அவர்கள் அறிந்த உலகம் பாட்டியால் சமைக்கப்பட்டிருந்தது. அதில் கருமையைப்பற்றிய கடும் வெறுப்பு நிறைந்திருந்தது.
வசுதேவன் இளமையிலேயே அன்னையை வெறுத்தான். அவள் தூய்மையற்ற மிருகம் என்றும் அவளருகே செல்வதும் தீண்டுவதும் இழிவானவை என்றும் நினைவறிந்த நாள்முதலே எண்ணத்தொடங்கினான். அவன் தனித்து நிற்கும்போது சுற்றுமுற்றும் பார்த்தபடி அருகே வரும் அன்னை அவனை அள்ளி அணைத்துக்கொண்டால் அவன் திமிறி கைகால்களை உதறி கதறியழுவான். அவள் கொண்டுவந்துகொடுக்கும் உணவுப்பண்டங்களை அவள் முன்னாலேயே வீசி எறிவான். அவள் தன்னை தொட்டுவிட்டால் ஓடிச்சென்று பாட்டியிடம் அதைச் சொல்வான். அவள் உடனே அவனைக் குளிப்பாட்டி மாற்றுடை அணிவிப்பாள்.
தன் நிழலாக கூடவே வந்துகொண்டிருக்கும் பிருதையிடம் “அவள் கரியவள். அசுரர்களின் குலத்தில் உதித்தவள்” என்று வசுதேவன் சொன்னான். “அசுரர்கள் மனிதர்களைக் கொன்று ஊனை உண்பவர்கள். ஆகவேதான் அவர்களின் பற்கள் பெரியதாக இருக்கின்றன. அவர்களின் வாயில் குருதிநாற்றம் வீசுகிறது. அவர்கள் இருட்டில் நம்மை பார்ப்பார்கள். அவர்களின் கண்கள் இருளில் வெண்மையாக ஒளிவிடுபவை.” இரவில் கொடுங்கனவுகண்டு பிருதை எழுந்து அலறி அழுவாள். பாட்டி அவளை அணைத்து தன் மரவுரிப்போர்வைக்குள் இழுத்துக்கொள்வாள்.
வசுதேவனுக்கு மூன்றுவயதிருக்கையில் பத்மை மறைந்தாள். மழை பெய்துகொண்டிருக்கையில் தொழுவத்தில் கட்டை அவிழ்த்துவிட்டு ஓடிய காராம்பசுவைப் பிடிப்பதற்காக அவள் வெளியே சென்றாள். கன்னங்கரிய நிறமும் வெள்ளிக்கண்களும் கொண்ட அந்தப்பசு கரியநிற அகிடுகள் கொண்டதாகையால் அதன் பால் பூசைக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்பட்டு தனியாக தொழுவத்தில் கட்டப்பட்டு வளர்க்கப்பட்டது. ஒளிக்குக் கூசும் தன்மை கொண்ட அதன் வெள்ளிக்கண்களில் மின்னல் ஒளி பட்டபோது அது மிரண்டு சுழன்று கால்களை நிலத்தில் ஊன்றி முழு எடையையும் கொண்டு இழுத்து கயிற்றை அவிழ்த்துக்கொண்டு மழைத்தாரைகளுக்குள் பாய்ந்தது. மழைநீர் முதுகில் பட்டதும் திகைத்து சருமம் சிலிர்த்து அசையாமல் தலைதாழ்த்தி நின்றது.
குளம்படிச் சத்தம்கேட்டு புறந்திண்ணையில் வசுதேவனையும் பிருதையையும் மடியில் வைத்துக்கொண்டிருந்த பத்மை அவர்களை இறக்கிவிட்டு இறங்கி ஓடிச்சென்று சேற்றில் இழுபட்ட அறுந்த கயிற்றைப் பற்றி இழுத்தாள். இழுபட்ட தலையை பக்கவாட்டில் தாழ்த்தி மூச்சு சீறி முன்னங்காலால் தரைச்சேற்றை கிளறியபடி கண்களை உருட்டிப்பார்த்தது. பத்மை கீழே கிடந்த தார்க்கோலை எடுப்பதற்காகக் குனிந்ததும் அது பாய்ந்து அவள் விலாவைமுட்டி தூக்கி வீசியது. வசுதேவன் அலறியபடி உள்ளே ஓடினான். வீட்டில் ஏவலர்கள் எவரும் இருக்கவில்லை. அவன் அறைகள்தோறும் ஓடியபோது தன்னையறியாமலேயே ‘அம்மா அம்மா’ என அலறிக்கொண்டிருந்தான்.
அவன்குரல் கேட்டு மத்துசுழற்றிக்கொண்டிருந்த மரீஷை அனைத்தையும் உணர்ந்துகொண்டு வெளியே ஓடினாள். மழையில் குனிந்து மூச்சுசீறி மிரண்டு நின்ற பசுவை அணுகி அதை கையாலேயே ஓங்கி அறைந்து கொம்புகளைப்பிடித்து வளைத்து துரத்திவிட்டு கீழே கிடந்த பத்மையை அணுகினாள். மீண்டும் முட்டுவதற்காகக் குனிந்த பசுவைநோக்கி வலக்கையை வீசியபடி கால்கள் சேற்றில் குழைந்து இழுபட மண்ணில் தவழ்ந்த பத்மை மருகியை நோக்கி கைநீட்டி தன்னை மீட்கும்படி ஓசையில்லாமல் மன்றாடினாள்.
பத்மையை சிறுகுழந்தைபோல மென்மையாக இருகைகளிலும் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் ஓடிவந்தாள் மரீஷை. அவளை உள்ளறையில் தோல்மெத்தையில் மெல்லப் படுக்கச்செய்தபின் மழையில் ஓடி மருத்துவச்சியை அழைத்துவந்தாள். வெளியே காயங்களேதும் இல்லை என்றாலும் பத்மையின் விலா எலும்புகள் ஒடிந்துவிட்டன என்றாள் அவள். சூரசேனருக்குச் செய்தியனுப்புவதே செய்யக்கூடியது என்றாள்.
மூச்சுவாங்கிக்கொண்டிருந்த பத்மை தன் உடைகளை மாற்றும்படி சொன்னாள். மருத்துவச்சியும் மரீஷையும் சேர்ந்து உடைகளை மாற்றி உலர்ந்தவற்றை அணிவித்தனர். பத்மையின் மூச்சுத்திணறல் ஏறியது. அவள் கண்கள் குழந்தைகளைத் தேடின. மரீஷை குழந்தைகளை அழைத்துச்சென்று அருகே நிறுத்தினாள். பத்மையின் வலக்கை செயலிழந்திருந்தது. இடக்கையால் இருகுழந்தைகளையும் வளைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டபோது இடக்கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து கன்னத்தில் ஓடியது.
பத்மை தன் தொண்டையைத் தொட்டு குடிக்க நீர் கேட்டாள். மரீஷை உள்ளே ஓடி இளஞ்சூடான பாலை மூங்கில்குவளையில் எடுத்துவந்தாள். அதை பத்மையின் அருகே கொண்டுவந்து வாயருகே நீட்டியபோது பத்மையின் கண்களுக்குள் கூரிய கத்தி திரும்புவதுபோல வெறுப்பின் ஒளியை வசுதேவன் கண்டான். பத்மை அந்தக்குவளையை வாங்கி ஊட்டும்படி மருத்துவச்சியிடம் சைகைகாட்டினாள். மரீஷை குவளயை மருத்துவச்சியிடம் கொடுத்தாள். அதை வாங்கி மருத்துவச்சி மெதுவாக ஊட்ட இரண்டு வாய்குடித்து மூன்றாம் வாயை வழியவிட்டு பத்மை இறந்துபோனாள்.
அன்று இரவு வீட்டு அறைகளெல்லாம் யாதவகுலத்து மகளிர் நிறைந்திருக்க முற்றத்தில் போடப்பட்ட ஓலைப்பந்தலுக்குள் முதியவர்கள் கூடி நிற்க நீப்புச்சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது பிருதையை கொல்லைப்பக்கம் சாம்பல்குழி அருகே அழைத்துக்கொண்டுசென்று வசுதேவன் சொன்னான் “நாம் பாட்டிக்காக அழக்கூடாது. அவள் தீயவள். ஆகவேதான் அவளை காராம்பசு முட்டிக்கொன்றது.” பிருதை பெரிய விழிகளை விழித்து அவனைப்பார்த்தாள். “நீ அழவேகூடாது” என்றான் வசுதேவன். சரி என்று அவள் தலையாட்டினாள்.
அவர்கள் வீடுமுழுக்க நிறைந்திருந்த கால்களினூடாக கைகளைப்பற்றிக்கொண்டு நடந்தனர். முற்றத்தில் பீடத்தில் தனியாக நரைத்த தாடியை நீவியபடி அமர்ந்திருந்த சூரசேனரை சுவர் மறைவிலிருந்து வசுதேவன் பார்த்துக்கொண்டே நின்றான். அவரிடம் துயரமேயில்லை என்பது நன்றாகவே தெரிந்தது. அது பாட்டியைப்பற்றிய அவனுடைய எண்ணம் பிழையல்ல என்று உறுதிப்படுத்தியது. அருகே சென்று ஏதோ சொன்ன அன்னையை நோக்கி அவர் புன்னகைபுரிவதை வசுதேவன் கண்டான். அன்னையை அவர் நேரடியாக நோக்குவதை அப்போதுதான் அவன் காண்கிறான். அக்கணமே அவரும் நல்லவரல்ல என்ற எண்ணத்தை அடைந்தான்.