அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

2/20/14

பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்[ 1 ]

பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்[ 1 ]
“சினமின்றிப் போர்புரிய மனிதர்களால் இயலாது. சினமே போருக்கு பெரும் தடையும் ஆகும். இந்த முரண்பாட்டை வெல்வதற்காகவே எந்தப் போர்க்கலையும் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார் அக்னிவேசர். கங்கையின் கரையில் அரசமரத்தடியில் அமர்ந்து அவர் பாடம்சொல்லிக்கொண்டிருக்க எதிரே மாணவர்கள் அமர்ந்திருந்தனர். இடது பக்கம் மாணவர்களுடன் சேராமல் தனியாக சிகண்டி அமர்ந்திருந்தான். மாணவர்களின் விழிகள் ஆசிரியரைநோக்கி விரிந்திருந்தன. மெல்லிய அகக்குரல்போல அவர் சொல்லிக்கொண்டிருந்தார்.
“சினத்தை வெல்லவே அனைத்துப்போர்க்கலைகளும் கற்றுக்கொடுக்கின்றன. சினம் என்பது அகத்தின் கொந்தளிப்பு. அகத்தின் கண்முன் தோற்றமே புறம். ஆகவே புறத்தை வெல்லுதல் அகத்தை வெல்லுதலேயாகும். புறத்தை வெல்ல புறத்தில் உள்ள ஏதேனும் ஒன்றைப் பற்றுக. அதில் புறவுலகம் அனைத்தையும் கொண்டுவந்து ஏற்றுக. கைக்குச் சிக்கும் ஒன்றில் அனைத்தையும் காண்பவன் மெல்ல அதுவே உலகமென்றாகிறான். அது அவன் கையில் நிற்கையில் மொத்தப்பருப்பிரபஞ்சமும் அவன் கையில் நிற்கிறது. அது வில்லாகலாம் வாளாகலாம். உளியாகலாம் முரசுக்கோலாகலாம்…”
“செயல்மூலம் தன்னை வென்றவன் யோகி. அவன் உலகையும் வெல்வான். யோகியின் கையில் இருப்பது எதுவோ அதுவே இறுதியான ஆயுதம். அதுவே அவன் மந்திரம், அதை ஆள்வதே அவன் சாதகம். சொல் மூலம் அடையப்பெறும் எதையும் வில்மூலமும் அடையலாமென்றுணர்க. பரசுராமனும் பீஷ்மரும் வில்யோகிகள். இந்தத்தருணத்தில் அவர்களை வணங்குவோம்” கூடிநின்ற அனைவரும் ‘ஆம்! ஆம்! ஆம்!’ என்று சொல்லி குருவந்தன மந்திரம் சொன்னார்கள். சிகண்டியும் சொல்வதை அக்னிவேசர் கவனித்தார்.
“புறத்தை கட்டுப்படுத்தியவன் அதன் அகப்பிம்பமான அகத்தையும் கட்டுப்படுத்தியவனாவான். இருபுடை வல்லமைகொண்ட அவனையே ஸவ்யசாச்சி என்று தனுர்வேதம் போற்றுகிறது” என்றார் அக்னிவேசர். “ஒருகையால் உள்ளத்தையும் மறுகையால் உடலையும் கையாள்பவன் அவன். ஒருமுனையில் அம்பும் மறுமுனையில் இலக்கும் கொண்டவன். அவன் ஒருமுனையில் பிரபஞ்சமும் மறுமுனையில் பிரம்மமும் நிற்கக்காண்பான்.”
அக்னிவேசர் எழுந்து தன் மாணவர்களுடன் காட்டுக்குள் சென்றார். அங்கே பாறை ஒன்றின் நடுவே சிறிய நீலநிறமான சுனை ஒன்று மான்விழி போலக் கிடந்தது. அதனருகே மரங்கள் ஏதுமில்லாததனால் அது அசைவற்ற நீலம் மட்டுமேயாக இருந்தது. அக்னிவேசர் அதனருகே சென்றார். “உங்கள் விற்களையும் அம்புகளையும் எடுத்துக்கொள்ளுங்கள்!” என ஆணையிட்டார். அந்தச் சுனையைச்சுற்றி அவர்கள் நின்றுகொண்டார்கள். அக்னிவேசர் “இளைஞர்களே, எவன் ஆயுதத்தை கையில் எடுக்கிறானோ அவன் அக்கணமே தன் காமத்தையும் குரோதத்தையும் ஆசையையும் ஏந்திவிட்டான். இப்போது உங்கள் கையிலிருப்பது நீங்கள் யாரோ அதுதான். சிந்தனைகளாலும் பாவனைகளாலும் மறைக்கப்படாத உங்கள் ஆன்மாதான் உங்கள் வில். அந்த வில்லால் இந்த சுனையைத் தொடுங்கள்!”
முதல் சீடன் சுனையைத் தொட்டதும் அதிரும் பறையருகே வைக்கப்பட்ட யானத்து நீர்போல அதன் நீர்ப்பரப்பு அதிர்ந்தது. ’அஸ்வசேனா, உன்னுள் நிறைந்திருக்கும் அலைகளை உணர்ந்தாயல்லவா?” என்றார் அக்னிவேசர். “உன் ஒவ்வொரு அம்பின்மீதும் வந்து மோதி அவற்றை குறிதவறச்செய்வது இந்த அலைகளே.” அவர்கள் ஒவ்வொருவரும் தீண்டியபோது தடாகம் அதிர்ந்து அலைகிளப்பியது.
யக்ஞசேனன் தொட்டபோது வந்த அலைகளை நோக்கியபடி அக்னிவேசர் சொன்னார் “அவர்களுக்குள் இருப்பது ஆசை. உன்னுள் இருப்பது அச்சம். யாரை அஞ்சுகிறாய்?” யக்ஞசேனன் கண்களைத் தூக்கி “நீங்களறியாதது அல்ல ஆசிரியரே, என் தந்தை என்னையே நம்பியிருக்கிறார்” என்றான். அக்னிவேசர் புன்னகைத்து “பொறுப்புகள் அச்சமாகக் கனிகின்றன. அச்சம் வஞ்சகமாகிறது. வஞ்சகம் அனைத்து ஞானத்தையும் விஷமாக்கிவிடுகிறது” என்றார்.
துரோணரை அழைத்ததும் அவர் புன்னகை விரிந்த முகத்துடன் வந்து குனிந்து தன் வில்லால் அந்தச்சுனையைத் தொட்டார். அது அசைவற்று ஆடிப்பரப்பு போலவே இருந்தது. வியப்பொலியுடன் அனைவரும் எட்டி அதைப்பார்த்தனர். அக்னிவேசர் முகம் மலர்ந்து “நன்று” என்றார். துரோணர் வில்லை எடுத்துக்கொண்டார். “உன் அகம் சலனமற்றிருக்கிறது. இவ்வித்தையால் நீ வெல்லவேண்டியதென வித்தை மட்டுமே உள்ளது” என்றார் அக்னிவேசர். “அந்த மரத்திலிருக்கும் காயை வீழ்த்து” என்று சுட்டிக்காட்டினார்.
துரோணர் வில்லை எடுத்து நிறுத்தி நாணை இழுத்தபோது அவரது பின்பக்கம் சுனை அதிரத்தொடங்கியது. அரைக்கணத்தில் அதை திரும்பிப்பார்த்தபின் துரோணர் அம்பை விட்டார். அந்தக்காயுடன் மரக்கிளை கீழே விழுந்தது. வில் தாழ்த்தி அவர் திரும்பி சுனையைப்பார்த்தார். பெருமூச்சுடன் அக்னிவேசரைப் பார்த்தார். “புரிகிறதல்லவா?” என்றார் அவர். துரோணர் தலைகுனிந்தார். “உன் ஆசை உன் வித்தைமேல் இருக்கிறது. மண்ணில் பிறந்த மாபெரும் வில்லாளிகளில் ஒருவனாக ஆகவேண்டுமென்ற கனவுடன் இருக்கிறாய். அக்கனவு உன்னுள் பதற்றத்தை நிறைக்கிறது. நீ நாணை இழுக்கையில் இங்குள்ள அத்தனை மாவீரர்களையும் போட்டியாளர்களாக நினைத்துக்கொள்கிறாய். உன்னுள் அலை எழுகிறது.”
அக்னிவேசர் சொன்னார் “துரோணா, வித்தையின் பொருட்டு மட்டுமான வித்தையே ஞானமாகக் கனியும். ஞானத்தை வெல்வதற்கான ஆசையே கூட வித்தைக்கு தடையே. வித்தையின் இன்பம், அதன் முழுமைக்கான தேடல், வித்தையாக நாமே ஆவதன் எளிமை மூன்றுமே வித்தையை முழுமையாக்கும் மூன்று மனநிலைகள். வேறெதுவும் கற்பவனின் அகத்தில் இருக்கக் கூடாது.” துரோணர் வணங்கினார். “நீ வெல்ல வேண்டிய எதிரி அதுவே. அதற்கென்றே வில்லை ஆள்வாயாக!”
கடைசியாக அக்னிவேசர் சிகண்டியை நோக்கித் திரும்பினார். வருக என மெல்லத்தலையசைத்தார். அவன் கனத்த காலடிகளுடன் வந்து நின்றான். அவர் சுனையை நோக்கி கைகாட்டியதும் வில்நுனியால் தடாகத்தை தொடப்போனான். தீக்கோல் படுவதற்கு முன்னரே சருமம் கூசிக்கொள்வதுபோல நீர்ப்பரப்பு அதிரத் தொடங்கியது. வில் அதைத்தொட்டதும் உள்ளிருந்து ஊற்று குமிழியிடுவதுபோல சுனை கொப்பளிக்க ஆரம்பித்தது. சிகண்டி வில்லை எடுத்துக்கொண்டான்.
“உன்னுடைய பணி என்ன தெரியுமா?” என்றார் அக்னிவேசர். அருகே இருந்த பெரும் பாறை ஒன்றைச் சுட்டி “அந்தப்பாறையைத் தூளாக்கி நெற்றியில் விபூதியாக அணிந்துகொள் என்று சொல்வதைப்போல.” சிகண்டி அசைவில்லாத விழிகளுடன் நின்றான். “உன்னுள் மாபெரும் எதிரி ஒருவர் இருக்கிறார். நீ கற்பவை எல்லாம் அவருக்காகவே. உன்னுள் காமமும் மோகமும் இல்லை, குரோதம் கடலென நிறைந்திருக்கிறது. அந்தக் குரோதத்தை நீ வெல்லாமல் உன்னால் மாபெரும் வில்லாளியாக முடியாது. மாபெரும் வில்லாளியாக ஆகாமல் உன்னால் அந்த எதிரியை கொல்லவும் முடியாது.”
சிகண்டி ஒன்றும் சொல்லவில்லை. அவனுடைய மதம்பரவிய பன்றிக்கண்களில் எந்த உணர்ச்சியும் வெளிப்படவில்லை. அக்னிவேசர் பிறரிடம் “நீங்கள் செல்லலாம்” என்றார். அவர்கள் வணங்கி விடைபெற்றதும் சிகண்டியின் பெரிய தோளில் தன் மெலிந்த கைகளை வைத்து “வா” என்றார். இருவரும் காட்டுக்குள் சென்ற ஒற்றையடிப்பாதையில் நடந்தனர். காற்று காட்டுக்குள் மழையொலியுடன் சென்றுகொண்டிருந்தது. அக்னிவேசர் சிகண்டியின் தோள்களை அழுந்தப்பற்றியிருந்தார்.
காடு திறந்து ஒரு மலைச்சரிவின் முனை வந்தது. வானம் வெகுதொலைவுக்குக் கீழிறங்கியது. கீழே பாறைகள் நடுவே கங்கையின் ஓடை ஒன்று சிறிய வெண்ணிறச் சால்வைபோல கிடந்தது. அதனருகே நான்கு யானைகள் நின்றிருந்தன. அவற்றில் ஒன்று அவர்களின் வாசனையைப் பெற்றது. அது எழுப்பிய அதிர்வொலி மேலே கேட்டது. காட்டுக்குள் அதன் கூட்டத்தில் இன்னொரு யானை எதிர்க்குரல் எழுப்பியது.
“பீஷ்மரை நீ வெல்லவேண்டும் என்றால் நீ உன்னை வென்றாகவேண்டும் குழந்தை” என்றார் அக்னிவேசர். “நீ அவரை அஞ்சவில்லை. ஏனென்றால் நீ இறப்பையும் பழியையும் அஞ்சுபவனல்ல. ஆனால்…” அவன் கண்களை நோக்கி அக்னிவேசர் கேட்டார் “நீ நேற்று என்ன கனவு கண்டாய்?”
சிகண்டி கண்களைத் திருப்பியபடி “ஒரு சிறிய கிராமம். நீரோடைகளால் சூழப்பட்டது. மென்மழை அங்கு பெய்துகொண்டிருந்தது. நான் ஒரு சிறிய கூட்டுக்குள் இருப்பதாக உணர்ந்தேன். அங்கிருந்தபோது ஒருவனைப் பார்த்தேன். அவன் என் எதிரி என்று தெரிந்தது…”
“அவன் முகம் தெரிந்ததா?” என்றார் அக்னிவேசர். “இல்லை. நான் பார்த்தது அவனுடைய மார்பை மட்டுமே. அப்போதுதான் நான் ஒரு கரிய பன்றியாக இருப்பதை உணர்ந்தேன். உறுமியபடி பாய்ந்து சென்றேன். மலையிலிருந்து இறங்கும் கரும்பாறைபோல. அவன் மார்பை முட்டி அந்தவேகத்திலேயே தோலையும் தசையையும் கிழித்து எலும்புகளை உடைத்து சிதைந்த மாமிசத்தில் இருந்து அவன் இதயத்தை கவ்வி பிய்த்து எடுத்தேன். செந்தாமரை மொட்டு போலிருந்தது. மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தது. வெம்மையான குருதி அதிலிருந்து வழிந்தது. அதை என் வாயிலிட்டு மென்று உண்டேன். அப்போது ஒரு மூச்சொலி கேட்டுத் திரும்பிப்பார்த்தேன். சங்குவளையல்களும் கிளிஞ்சல்மாலையும் அணிந்த கரிய பெண் ஒருத்தி என்னை நோக்கிக் கொண்டு நின்றிருந்தாள். அக்கணமே நான் விழித்துக்கொண்டேன்.”
“எவ்வளவு வெறி… இந்த வெறி ஒவ்வொரு கணமும் உன் விரல்களில் இருக்கையில் உன் அம்புகள் எப்படி இலக்கை அடையும்?” என்றார் அக்னிவேசர். “இவ்வுலக வாழ்க்கை ஒரு விளையாட்டு. அதை அறிந்தவன் சிறந்த ஆட்டத்தை ஆடுகிறான்.” சிகண்டி “நான் என்ன செய்யவேண்டும் ஆசிரியரே?” என்றான். “ஒரே வழிதான் உள்ளது. நீ இன்னும் பீஷ்மரை அறியவில்லை. ஒருவன் நன்கறிந்திருக்கவேண்டியது தன் எதிரியைப்பற்றித்தான். எதிரி நம்முடைய ஆடிப்பிம்பம் போல.”
சிகண்டி கவனித்து அமைதியாக நின்றான். “நீ கிளம்பிச்செல். பீஷ்மரை முழுமையாகத் தெரிந்துகொள். அவரது நண்பர்களிடமும் எதிரிகளிடமும் பேசு. சூதர்களிடமும் நிமித்திகர்களிடமும் கேட்டுத்தெரிந்துகொள். அவரது உள்ளும் புறமும் உனக்குத் தெரியவேண்டும். அவரது அகத்தில் ஓடும் எண்ணங்கள் அப்படியே உன் அகத்திலும் ஓடவேண்டும். களத்தில் அவருக்கு முன் நீ நிற்கும்போது அவரது ஆடிப்பாவை போலவே தெரியவேண்டும். இளைஞனே, தன் ஆடிப்பாவையிடம் மட்டுமே மனிதர்கள் தோற்கிறார்கள்.”
VENMURASU_EPI_43
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
“ஆம், அதைச்செய்கிறேன்” என்றான் சிகண்டி. “அவ்வாறு தெரிந்துகொள்ளும்போது உன் சினம் ஆறும். சினம் ஆறியபின் நீ அவரைக் கொல்லவேண்டாமென்று முடிவெடுக்கக் கூடும். அவரை உன் தந்தையாகக்கூட ஏற்கக்கூடும்.” சிகண்டியின் கண்களில் மிகச்சிறிதாக ஓர் அதிர்வு வந்துசென்றது. “நீ அவர் மகன்” என்றார் அக்னிவேசர். சிகண்டி திகைத்து நோக்கினான். அக்னிவேசர் தனக்குள் ஆழ்ந்தவராகச் சொன்னார் “கருவுறுதல் என்றால் என்ன? காமத்தால்தான் கருவுறவேண்டுமா, கடும் சினத்தால் கருவுறலாகாதா? உடலால்தான் கருவுறவேண்டுமா, உள்ளத்தால் கருவுறலாகாதா?”
சிகண்டி நின்றுவிட்டான். சற்று முன்னே சென்ற அக்னிவேசர் அவன் தன்னைத் தொடரவில்லை என்பதை உணர்ந்து நின்று திரும்பிப்பார்த்தார். “நீ உன் அன்னையின் அடங்காப்பெரும்சினம் உடலெனப்பிறந்தவன். அவள் மைந்தன். அம்மைந்தனைப் பிறப்பித்தவர் பீஷ்மர் என்பதனால் அவர் உன் தந்தையேதான்.” புன்னகையுடன் “தந்தையைக் கொல்ல விழையும் கணம் ஒன்று எல்லா மைந்தர் நெஞ்சுக்குள்ளும் ஓடிச்செல்லும். நீ அக்கணமே காலமாக ஆகிய மைந்தன், அவ்வளவுதான்” என்றார்.
“அவரை முழுதறியும்போது நீ அவர் பாதங்களைத் தொட்டு ஆசிபெறக்கூடும்.” சிகண்டியிடமிருந்து பன்றியின் உறுமல் வெளிப்பட்டது. அக்னிவேசர் புன்னகையுடன் “தந்தையர் அனைவருக்கும் இருமுகம். ஒன்று கொலை இன்னொன்று ஆசி. நீ கொலைமுகத்தை மட்டும் கண்டிருக்கிறாய். பெரும்பாலான அன்னையர் அதையே மைந்தருக்கு அளிக்கிறார்கள். தானும் தந்தையாக ஆகி தந்தையை இழந்தபின்பு மட்டுமே மைந்தர்கள் தந்தையின் ஆசியை உணர்கிறார்கள்” என்றார்.
சிகண்டியின் மதவிழிகளை நோக்கி மேலும் விரிந்த சிரிப்புடன் “மைந்தரிலும் இருமுகங்கள் உண்டு. தந்தையைக் கொல்லவும் தந்தையாக வாழவும் வருபவன் மைந்தன். தன்னைக் கொன்று தன் காட்டை கைப்பற்ற வந்தது மகவு என்று அறியாத வேங்கை இல்லை” என்றார் அக்னிவேசர். “சிகண்டியே, தந்தை மைந்தன் விளையாட்டுதான் இப்புவியில் நிகழும் உயிர்நடனங்களிலேயே அழகியது, மகத்தானது. அதைப்புரிந்துகொள்பவன் அனைத்தையும் புரிந்துகொள்கிறான். ஏனென்றால் பிரம்மமும் பிரபஞ்சமும் ஆடும் லீலையும் அதைப்போன்றதே. பரமாத்மனும் ஜீவாத்மனும் கொண்டுள்ள உறவும் அதற்கு நிகரானதே.”
அக்னிவேசர் நடந்தபோது சிகண்டி பின்னால் நடந்தான். “கேள் இளைஞனே, முன்பு கௌதம குலத்தில் உதித்த ஆருணி என்னும் முனிவர் இருந்தார். கடும்தவத்தால் அவர் ஞானமடைந்து உத்தாலகர் என்று பெயர் பெற்றார். அவருடைய மைந்தன் ஸ்வேதகேது. தந்தையிடமிருந்து நூல்களைக் கற்றபின் ஏழு குருகுலங்களுக்குச் சென்று வேதவேதாங்கங்களையும் ஆறுதரிசனங்களையும் ஆறுமதங்களையும் மூன்று தத்துவங்களையும் கற்றபின் திரும்பிவந்தான். தந்தையைக் கண்டு தந்தையே உங்களுக்கு மெய்ஞானத்தில் எந்த ஐயமிருப்பினும் என்னிடம் கேட்டு தெளிவுகொள்ளுங்கள் என்று சொன்னான்.”
“மைந்தனின் ஆணவத்தைக் கண்டு உத்தாலகர் வருந்தினார். அவன் ஆணவத்தை அடக்கினாலன்றி அவனால் ஞானத்தைக் கடந்து விவேகத்தை அடையமுடியாதென்பதை உணர்ந்து பிரம்மஞானத்தைக் கொண்டு மட்டுமே விளக்கிவிடக்கூடிய வினாவைக் கேட்டார். எவற்றை அறியமுடியுமோ அவற்றையெல்லாம் அறிந்துவிட்டாய். எதை அறியமுடியாதோ அதை அறிந்துவிட்டாயா? ஸ்வேதகேது பதிலின்றி திகைத்துவிட்டான். தந்தையின் காலடியைப் பணிந்து தன் ஆணவத்தைப் பொறுத்தருள வேண்டினான். அவர் அந்த மெய்ஞானத்தை ஒரு அகச்சொற்றொடராக அவனுக்கு அளித்தார்.” அக்னிவேசர் மிகமெல்ல அந்த மந்திரத்தை சொன்னார் “அது நீயே.”
அக்னிவேசர் புன்னகையுடன் “சிகண்டியே, அந்தப் பதிலை ஆருணியாகிய உத்தாலகர் தன் மைந்தன் ஸ்வேதகேதுவை மடியில் வைத்து முன்பொருமுறை சொன்னதுண்டு. அது நீயே என. அன்று மைந்தன் என்ன கேட்டிருப்பான்? அவன் சுட்டிக்காட்டி வினவிய முதல்வினா தந்தையை நோக்கி நீ யாரென்பதாகத்தானே இருக்கமுடியும்? அதற்கான பதில் ‘மைந்தா நானே நீ’ என்பதன்றி வேறெப்படி இருக்கமுடியும்?”
சிகண்டி சிறிய கண்களால் பார்த்து நின்றான். அக்னிவேசர் சொன்னார் “ஆனால் தந்தையர் அதை உணர்வதற்கு ஞானம் கனியும் ஒரு புள்ளி தேவையாகிறது. நான் நான் என்றெழுந்த மனமும் எனது எனது என விரிந்த கைகளும் குறுகிச்சுருங்கும் ஒரு பருவம்…குருதிகுளிர்ந்தபின் தன் வற்றிய கைகளால் மைந்தனைப்பற்றும்போது அந்த மாபெரும் திரை அறுந்துவிழக் காண்கிறான் மனிதன். மகனே நானே நீ என்கிறான். அனேகமாக அவன் அதைச்சொல்லி முடிப்பதற்குள் எமன் அவன் உயிரை கைப்பற்றியிருப்பான்.”
மீண்டும் கங்கையின் விளிம்பை அடைந்ததும் அக்னிவேசர் சொன்னார் “செல். உன் தந்தையை அறி. அதன்பின் உன் இலக்கை முழுமைசெய்!” அவன் தலையில் கைவைத்து “சாந்தோக்கிய உபநிடதத்தின் அழியாத அறிவின் ஒளியே உனக்கும் அகச்சொற்றொடராகட்டும். நீ வாழ்நாளெல்லாம் உன் அகத்தில் ஏற்றி தவம் செய்யவேண்டிய ஆப்தமந்திரம் அது.” மெல்ல உறுதியாக அக்னிவேசர் உபநிடத மந்திரத்தைச் சொன்னார் “அது நீயே!
சிகண்டி அதை கைகூப்பி ஏற்றுக்கொண்டான். திரும்பிப்பார்க்காமல் அக்னிவேசர் காட்டுக்குள் சென்று மறைந்தார். சிகண்டி கங்கையை நோக்கியபடி நெடுநேரம் நின்றுகொண்டிருந்தான். கூந்தலிழைகள் மட்டும் பறக்க, ஒரு தசைகூட அசையாமல் பகலும் இரவும் நிற்கும் வல்லமை அவனுக்கிருந்தது. அவனுள் அகம் ஆயிரம்கோடிக் காதம் விரைவதன் விளைவு அது. அவன் மிரண்ட காட்டுக் குதிரைமேல் ஏறமுயல்பவன் போல அந்தச் சொல்லில் ஏற முயன்றான் “அது நீயே!”
இருள் படர்ந்து விழிக்காடு மறைந்து செவிக்காடாகியது. “தத்வமசி” என்ற சொல் அவனைச் சூழ்ந்திருந்தது. இருளாக, மின்மினிகளாக, விழியொளிகளாக, காற்றாக, இலையோசையாக, விண்மீன்களாக, பால்வழியாக, முடிவின்மையாக.
மறுநாள் காலைவரை அங்கேயே அவன் நின்றிருந்தான். கங்கைநோக்கிச் சென்றுகொண்டிருந்த காற்று கங்கையில் இருந்து இனிய நீராவி வாசனையுடன் எழத்தொடங்கியது. அவனைத்தாண்டி எட்டு யானைகள் கொண்ட ஒரு கூட்டம் சென்றது. அதன் தலைவி அவனை பகலில் முகர்ந்ததை அடையாளம் கண்டுகொண்டு தன் தோழிகளுக்குச் சொன்னது. நடுவே சென்ற சிறிய குட்டி ஆர்வத்துடன் தன் சிறிய துதிக்கையைத் தூக்கியபடி சிகண்டியை நோக்கி வர அதன் அன்னை அதன் பின்பக்கம் துதிக்கையால் தட்டி முன்னால் செலுத்தியது.
புதருக்குள் இருந்த பன்றிக்கூட்டம் ஒன்று அவனைநோக்கி வந்தது. அவற்றின் மணிக்கண்கள் இருளில் ஒளிவிட்டன. மூச்சொலிகளும் வாயின் ஆவிவாசனையும் காற்றில் வந்தன. அவை சென்றபின் ஒரு முதுபன்றி மட்டும் அவனை நோக்கி வந்து அவன் முன் நின்றது. இருட்டில் கரைந்து நின்ற அது தன் சிறிய கண்களால் அவனை நோக்கியது. முன்னங்காலால் தரையை இருமுறை சுரண்டிவிட்டு அங்கேயே படுத்துக்கொண்டு அவனைக் கவனித்தது. விடியலின் முதல் வெளிச்சம் கீழ்வானில் தெரியத் தொடங்கியதும் எழுந்து குறியவாலைச் சுழற்றியபடி புதருக்குள் மறைந்தது.
சிகண்டி காலையில் கங்கையில் நீராடியபின் தன் குடிலை அடைந்தான். புலித்தோலில் தன் ஆடைகளை சுருட்டிக் கட்டிக்கொண்டு வில்லையும் அம்புகளையும் தோளில் அணிந்துகொண்டு குனிந்த தலையுடன் இறங்கி நடந்தான். அப்பால் அதிகாலை வகுப்புக்காக அக்னிவேசரின் குடிலுக்கு முன்னால் மாணவர்கள் நின்றிருந்தனர். அவர்கள் அவனைப் பார்த்தனர். எவரும் அவனை நோக்கி வரவில்லை. அவர்கள் அவனை நோக்கிய பார்வை மனிதனை நோக்கியதாக எப்போதுமே இருந்ததில்லை. மிருகமொன்றைப் பார்க்கும் பார்வை பின்பு தீயதேவதை ஒன்றைப் பார்ப்பதாக மாறியிருந்தது. சிகண்டி அவரது குடிலை வணங்கிவிட்டு ரதசாலை நோக்கிச் சென்றான்.
மரப்பட்டைக்கதவைத் திறந்து அக்னிவேசர் வெளியே வந்தார். சிகண்டி செல்வதைப் பார்த்து “அவனை அழையுங்கள்” என்றார். அடுத்தகணம் துரோணரின் அம்பு பறந்து வந்து சிகண்டியின் முன் விழுந்து தைத்து ஆடியது. அவன் திரும்பிப்பார்த்ததும் அக்னிவேசர் அவனை நோக்கி வந்தார். அவன் திரும்பி அவரை நோக்கிச் சென்றான். அவர்கள் இருவரும் ஓங்கி நின்றிருந்த வகுள மரத்தடியில் சந்தித்தனர். நரம்பு புடைத்த கைபோல விரல்களால் மண்ணைப்பற்றி மேலே அடர்ந்த இலைக்குவையுடன் நின்ற மரம் காற்றில் சலசலத்தது.
அக்னிவேசர் “நான் நேற்றிரவு துயிலவில்லை” என்றார். “அதிகாலையில்தான் நான் உன்னிடம் ஒன்றை கேட்டிருக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது.” சிகண்டி வெறும் பார்வையாக நின்றான். “சொல், நீ கண்ட அந்தக் கனவில் வந்த கிளிஞ்சல்மாலையணிந்த கிராமத்துப்பெண் எப்படி இருந்தாள்?” சிகண்டி பார்வையை விலக்கி சில கணங்கள் நின்றான். அவன் கை நாணை நெருட சிறு ஒலி எழுந்தது. பின்பு “என் அன்னை அம்பாதேவியைப்போல” என்றான்.
“நினைத்தேன்” என்றபின் அக்னிவேசர் “உன் தேடல் முழுமையடையட்டும்!” என்று வாழ்த்திவிட்டு திரும்பிச்சென்றார். சிறிய பறவை காற்றில் தாவிச்செல்வது போலச் சென்ற அவரைப் பார்த்தபின் சிகண்டி திரும்பிநடந்தான்.

ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் துணை

ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் துணை

மஞ்சள் நிற பட்டு உடுத்தி மங்களமாய்
கொலுவிருக்கும் அம்பிகையே!
எங்கள் குல நாயகியே சௌடேஸ்வரி தாயே!
மங்களங்கள் எங்கள் வாழ்வில் பெருகிடவே
அருள்புரிவாய்
சிகப்பு நிற பட்டு உடுத்தி சிங்காரமாய்
வீற்றிருக்கும் சிம்ஹவாகினியே!
சிம்மம் அதில் ஏறிவந்து எங்கள்
சிக்கல்களை தீர்த்திடுவாய் !
ஆடி அமாவாசையிலே அவதரித்த தேவி நீ !
ஆஷாடநாயகியானாய்!
தேவாங்க குலத்தினை தோற்றுவித்த
தாய் நீயே !
தேவாங்க குலத்திற்கே அன்னையாக
ஆனாய் !

சக்தியாக உன்னை அழைக்க
சாந்தத்துடன் நீ வருவாய்
சாமுண்டியாய் உன்னை அழைக்க
சங்கடங்களை தீர்த்திடுவாய்
ஜோதியாக உன்னை அழைக்க
நம் மக்கள் வாழ்விநிற்கே ஒளிகொடுப்பாய்!
குண்ட சக்தியாய் உன்னை அழைக்க
கஷ்டங்களை தீர்த்திடுவாய் !
மஞ்சள் நீர் மெரவணையில் ஆனந்தமாய்
நீ இருந்து மக்கள் வாழ்வினிலே
ஆனந்தம் அளித்திடுவாய்
நீ தோற்றுவித்த உன்மக்கள்  உன்தாழ் பணிகின்றோம் !
எப்பொழுதும் எங்களுடன் நீ இருந்து
வழி நடத்தி  காத்திடவேண்டுகின்றோம்!
ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரியே!!

-- கிரி , செம்மணஹள்ளி

2/19/14

ஸ்ரீ சௌடாம்பிகை ஜாதக மலர்



ஸ்ரீ  சௌடாம்பிகை ஜாதக மலர் 



பாலேலார் வம்ச ஸ்ரீ ரங்க ராமர் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் (24.03.2011) வீடியோ தொகுப்பு

கோதபாளையம் மடமனை தண்டுகாரம்பாளையம் ,
சின்னகள்ளிப்பட்டி  கெத்திகை,  மனு மகரிஷி கோத்திர பாலேலார் வம்ச தயாதிகளுக்கு பாத்தியப்பட்ட , சாவக்கட்டுபாளையம் 
அருள்மிகு தும்பிக்கைஆழ்வார், ஸ்ரீ வீரமாஸ்தி அம்மன் , பக்த ஆஞ்சநேயர்  பரிவார மூர்த்திகளுடன் ஸ்ரீ சீத லக்ஷ்மண சமேத ஸ்ரீ ரங்க ராமர் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் (24.03.2011) வீடியோ தொகுப்பு .
part 1

part-2



நன்றி திரு . தியாகராஜா 

பகுதி எட்டு : வேங்கையின் தனிமை[ 4 ]

பகுதி எட்டு : வேங்கையின் தனிமை[ 4 ]
சப்தசிந்து என்றழைக்கப்பட்ட ஏழுநதிகளான சுதுத்ரி, பருஷ்னி, அஸிக்னி, விதஸ்தா, விபஸ், குபா, சுஷோமா ஆகியவை இமயமலைச் சரிவிறங்கியபின் அடர்ந்த காட்டுக்குள் புதர்கள் அசையாமல் செல்லும் புலிக்குட்டிகள் போல ஒலியெழுப்பாமல் ஓடி அப்பால் விரிந்த நிலவெளிநோக்கி ஒளியுடன் எழுந்து கரைகளைத் தழுவிச்சென்றன. வண்டல்படிந்த அந்த நிலம் நெடுங்காலம் முன்னரே வயல்வெளியாக மாறி பசுங்கடலாக அலையடித்துக்கொண்டிருந்தது. அவற்றின் கரைகளில் வைக்கோல்கூரைகள் கொண்ட வீடுகள் தேனீக்கூட்டம்போலச் செறிந்து ரீங்கரித்துக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான கிராமங்கள் அமைந்திருந்தன.
கங்கபுரியில் இருந்து கிளம்பிய பீஷ்மர் அந்தக்கிராமங்கள் வழியாக அடையாளமில்லாத பயணியாகச் சென்றுகொண்டிருந்தார். கங்கைநிலத்தில் இருந்து செல்லும் பெரிய ராஜபாதை நூற்றுக்கணக்கான கிளைகளுடன் முடிவேயில்லாமல் நீளும் கொடிபோலச் சென்றது. அதில் செறிந்த காய்கள் போலிருந்தன கிராமங்கள். நதிகளை அடைந்ததும் பாதை சரிந்திறங்கி அலையடிக்கும் நீரில் படகுத்துறையாக மாறி கால்களூன்றி நின்றது. அங்கே அலைதளும்பும் நதியோரம் கொடிகள் பறக்க பெரும்படகுகள் பாய்மரங்கள் சுருக்கி நின்றிருந்தன. குதிரைகளும் ரதங்களும் பொதிவண்டிகளும்கூட அவற்றில் ஏறிக்கொண்டன.
பாய்கள் விரித்துச்செல்லும் படகில் அசையாமல் நின்றபடிச் செல்லும் வெண்குதிரைக்கூட்டத்தைக் கண்டபோது விண்ணில் பறக்கும் இந்திரவாகனமாகிய ஏழுதலைகொண்ட உச்சைச்சிரவஸ் என்று பீஷ்மர் நினைத்துக்கொண்டார். இன்னொருபடகில் யானை ஏறியிருந்தது. துதிக்கையை வெண்தந்தங்களில் வழியவிட்டபடி படகை ஆட்டாமல் உடலையும் காதுகளையும் மெல்ல ஆட்டியபடி அது நின்றிருந்தது. நதியில் செல்லும் மனிதர்களில் பெரும்பாலானவர்கள் கரைகளை நோக்க சிலர் மட்டும் நீரோட்டத்தை பார்த்தனர். கரைநோக்கியவர்கள் உரக்கப்பேசினர். நீரை நோக்கியவர்கள் தங்களுக்குள் மூழ்கியிருந்தனர்.
சுதுத்ரி நடுவே மணல்மேடுகளில் நாணல்புதர்கள் காற்றில் உலைந்தன. குட்டை மரங்கள் இருந்த ஆற்றிடைக்குறைகளில் வெண்நாரைகள் கிளைகளில் அமர்ந்தும் வானில் சிறகுவிரித்து எழுந்தும் மீண்டுவந்து அமைந்தும் உரக்க அகவியும் அழகூட்டின. நதிநீரில் தலைகீழாகத் தெரிந்த ஆற்றிடைக்குறைகளில் இருந்து வெண்நாரைகள் நீருக்குள் சிறகடித்து இறங்கி மறைந்தன. எப்போதாவது ஒரு பெரிய மீன் நீரில் மேலெழுந்து மறைந்தபோது பயணிகள் உரக்க குரலெழுப்பினர்.
அப்பால் இறங்கி ஈரமண் விரிந்த பாதையில் பீஷ்மர் நடந்தார். இருபக்கமும் நீரின் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. வயல்களில் கோதுமை நாற்பதுநாள் வளர்ச்சி பெற்று காற்றில் அலையடித்து நிற்க மழைமூடிய வானம் மிக அருகே என அதன் மீது படர்ந்திருந்தது. சிறிய கிளிகள் வயல்களில் இருந்து எழுந்து வரப்பில் நின்ற சிறிய மரங்களை நோக்கிச் சென்றமர்ந்தபின் மீண்டும் எழுந்து சுழன்று சிறகடித்து வயல்நோக்கி இறங்கின. அக்கிளிகள் அமர்வதற்காகவே மரங்கள் நடப்பட்டிருக்கின்றன என்று சிறிது நேரம் கழித்தே பீஷ்மர் புரிந்துகொண்டார். ஓடை குளத்தைச்சென்று சேர்வதுபோல ஒவ்வொரு பெரிய வரப்பும் ஒரு கிராமத்தைச் சென்றடைந்தது.
பெரும்பாலும் அனைத்தும் வேளிர்கிராமங்கள். சப்தசிந்துவில் கிராமங்களுக்கு சுற்றுவேலிகள் கிடையாது. சுற்றிச் சுழித்தோடும் ஆழமான நீரோடையே அரணாக அமைந்திருக்க அவற்றின் மேல் போடப்பட்ட மரப்பாலங்கள் ஊருக்குள் இட்டுச்சென்றன. அப்பகுதியின் மண் வண்டலால் ஆனது. நீர்பட்டால் சேறாகவும் உலர்ந்தால் மென்மணலாகவும் பொழியும் சந்தனநிறமான படிவு. அதன்மேல் மரத்தடிகளை நட்டு அவற்றின் மேல் பலகையிட்டு வீடுகளை எழுப்பியிருந்தனர். வீடுகளுக்கு அடியில் கோழிகளும் ஆடுகளும் நின்றிருந்தன.
வண்ணம் பூசப்பட்ட பலகைச்சுவர்களும் புற்கூரைகளும் கொண்ட வீட்டுக்கு முன்னால் நிறைகதிர்குலைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஊர்மன்றுகூடும் அரசமரம் நடுவே அமைந்திருக்க சிறிய ஊர்க்கோயில்கள் நான்கு மூலைகளிலும் இருந்தன. அவற்றில் விஷ்ணுவும் சிவனும் கார்த்திகேயனும் கொற்றவையும் பூசனைகொண்டிருந்தனர். கற்களை அடுக்கி கூம்புக்கோபுரம் அமைத்து உள்ளே கல்பீடங்களில் சிறிய மண்சிலைகளாக தெய்வங்களை நிறுவியிருந்தனர். எல்லா கிராமங்களிலும் இந்திரனுக்கும் வராஹிக்கும் சிறிய கோயில்கள் இருpபது சப்தசிந்துவின் வழக்கம். கிராமங்களின் நுழைவாயிலில் கணபதியும் ஊருக்கு வெளியே வயலோரமாக அமங்கலவடிவு கொண்ட தமோதேவதையான ஜேஷ்டையும் ஆற்றங்கரை மயானத்தில் மரணவடிவமான உக்கிர சாமுண்டியும் பீடம்கொண்டிருந்தனர்.
சப்தசிந்து எருமைகளின் நாடு. நதிக்கரைகளிலும் வயல்களிலும் ஓடைகளிலும் எங்கும் கன்னங்கரிய எருமைகள் கூட்டம்கூட்டமாக மண்ணையே இருளாக்கின. ஊர்களைச்சுற்றிய ஓடைக்கரைகள் எங்கும் எருமைகள். இருள்படர்ந்தபின் அப்பகுதியில் செல்பவர்கள் மின்மினிக்கூட்டம்போல எருமைவிழிகள் மின்னுவதைக் கண்டார்கள். அவை மெல்ல உறுமியபடி தங்களுக்குள் பேசிக்கொண்டும், காட்சிகளைக் கண்டு தொங்கிய காதுகளை அசைத்தும், காதுகள் வழியாக வழிந்து வளைந்த கொம்புகளை மெல்லச்சரித்து அழகிய கருவிழிகளால் நோக்கியும் பெரும்பாலும் நீருக்குள்ளேயே கிடந்தன.
ஆடிமாதமாதலால் சப்தசிந்து முழுக்கவே மெல்லிய தூறல் விழுந்துகொண்டிருந்தது. அவ்வப்போது காற்று தெற்கே கூர்ஜரத்தில் இருந்து சீறிப்பாய்ந்து வடக்கு நோக்கிச் சென்றது. அதிலேறிய நீர்த்துளிகள் அம்புக்கூட்டங்களாக வீடுகளையும் மதில்சுவர்களையும் நீர்ப்பரப்பையும் தாக்கின. மழையில் நதிநீர்ப்பரப்பு நிறம்மாறி மெல்ல மறைந்தது. வானும் நீரும் ஒன்றாகின. மழைத்திரை விலகியதும் கரியநீர் வெளிவந்து ஒளியுடன் அலைபாய புதர்மரங்களில் இருந்து வெண்நாரைகள் சிறகுகளை உதறி வானில் எழுந்து மெல்லச்சுழன்றிறங்கின. நீர்மேல் சிறிய மழைக்குருவிகள் பாய்ந்து பாய்ந்து விளையாடிக்கொண்டிருந்தன. வயல் நடுவே நீர்தேங்கிய சிறுகுட்டைகளை மூடியிருந்த தாமரையிலைகளில் நீர்மணிகள் ஒளிபெற்றுச் சுடர்ந்தன. ஒரு காற்று கடந்துசென்றபோது அத்தனை இலைகளும் திரும்பிக்கொள்ள குட்டையே நிறம் மாறியது. தாமரைகள் செவ்விதழ் குலைந்து காற்றில் ஆடின.
குட்டையருகே குழலில் இருந்து நீர் சொட்டி உடலில் வழிய பீஷ்மர் நின்று வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தார். தாமரைக்கொடிகளுடன் நீர்ப்பாம்புகளும் கலந்திருந்தன. மீன்களைப்போல அவற்றின் தலைகளும் விழித்த கண்களும் நீர்மேல் தெரிய நீருக்குள் உடல்கள் அலையே உடலானதுபோல நெளிந்துகொண்டிருந்தன. குட்டையின் ஓரமாகச் சென்ற மண்பாதையின் இருபக்கமும் அருகம்புல் அடர்ந்து குதிரைப்பிடரிபோல சிலிர்த்து நின்றது. எருமைச்சாணி மழையில் கரைந்து பச்சையாக வழிந்திருக்க அதன் மேல் நடந்தபோது காலதிர்வில் தவளைகள் எம்பி நீர் நிறைந்து ஒளிபடர்ந்து கிடந்த வயல்களில் குதித்தன. ஒரு நீர்ப்பாம்பு வயலையே அலையிளகச்செய்தபடி சென்றது. ஏடு வழியாகச் செல்லும் எழுத்தாணி போல என பீஷ்மர் நினைத்துக்கொண்டார்.
நூற்றுக்கணக்கான எருமைகள் நீரில் கிடந்தும் மழை ஒழுக நின்றும் தலைதிருப்பி அவரை விழித்து நோக்கின. சில எருமைகள் கரிய மூக்கை நீட்டியபடி தலையைத் தூக்கி குரலெழுப்பி விசாரித்தன. மரத்தாலான பாலம் வழியாக நீர் சுழித்தோடிய ஓடையைக் கடந்து சிறிய கிராமத்தில் நுழைந்த பீஷ்மர் அதன் மூங்கில் தடுப்புக்குப் பின்னால் நின்று ‘அதிதி’ என்று மும்முறை குரல்கொடுத்தார். முதல் குடிலில் இருந்து வெளியே வந்த முதியவர் கைகூப்பியபடி “வருக…எங்கள் சிற்றூருக்கு ஆசி தருக” என்றார். பீஷ்மர் “நான் தேவவிரதன். நைஷ்டிக பிரம்மசாரி. கங்கைக்கரையில் இருந்து வருகிறேன்” என்றார். முதியவர் “எங்கள் குழந்தைகளும் கன்றுகளும் உங்களால் நலம்பெறுக” என்றார்.
ஓடையில் இறங்கி மணலைப்பூசி உடல்தேய்த்துக் குளித்தபின் அதிதிகளுக்காகக் கட்டப்பட்டிருந்த குடிலில் நுழைந்து ஈர உடைகளை மாற்றிக்கொண்ட பீஷ்மர் திண்ணையில் வந்து அமர்ந்துகொண்டார். வானிலிருந்து ஒளித்துருவல்களாக மென்மழை விழுந்துகொண்டே இருந்தது. அவ்வப்போது மேகத்திலிருந்து மெல்லிய உறுமல் கேட்டது. வீடுகளின் முற்றங்களில் மழையிலேயே காகங்கள் எழுந்து அமர்ந்து சிறகடிக்க, மழைத்திரைக்கு அப்பால் சில நாரைகள் பறந்து சென்றன. திண்ணைகளில் இருந்த வயதானவர்கள் மழையில் இறங்கி நீரில் அளைந்த குழந்தைகளை திரும்பத்திரும்ப மேலே அழைத்தனர்.
மாலை மெல்ல மெல்ல வந்தது. ஒளிபெற்ற நீர்வயல்கள் மேலும் ஒளிபெற, சூழ்ந்திருந்த புதர்கள் இருண்டன. பின்னர் வானத்தைவிட நீர்வெளி ஒளியுடன் தெரிந்தது. வயல்களில் இருந்து ஊர்க்குடிகள் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். பெண்கள் மீன்களைப்பிடித்து நாணலில் கோர்த்துக் கொண்டுவந்தனர். சிலர் வயல்கீரைகளைப் பறித்து கழுவிக் கட்டி கையில் வைத்திருந்தனர். நாணல்களில் கோர்க்கப்பட்ட காய்கறிகள் சிலர் கையில் இருந்தன. ஆண்கள் வயல்களில் பிடித்த முயல்களையோ பறவைகளையோ நாரால் கட்டி தோளில் தொங்கவிட்டிருந்தனர். அனைவருமே ஓடைகளில் குளித்து உடலில் இருந்த சேற்றைக் களைந்து ஈர உடையுடன் வந்தனர். அவர்களுடன் வயல்களுக்குச் சென்ற நாய்கள் ஈரமுடியை சிலிர்த்துக்கொண்டு வால்சுழற்றியபடி பின்னால் வந்தன.
அவர்களைக் கண்டதும் ஊரைச்சூழ்ந்திருந்த எருமைக்கூட்டம் உரக்கக் குரலெழுப்பியது. சில எருமைகள் பின்னால் தொடர்ந்துவந்து மூங்கில் தடுப்புக்கு அப்பால் நெருக்கியடித்து நின்று வளைந்த கொம்புகள் கொண்ட தலைகளை உள்ளே விட்டு மெல்ல அலறின. பெண்கள் அவற்றின் பளபளப்பான முதுகுகளில் கைகளால் ஓங்கி அறைந்து அவற்றை ஓரமாக விலக்கினர். பெண்கள் வந்ததும் வீடுகளிலிருந்து குழந்தைகள் கூச்சலிட்டபடி ஓடிச்சென்று அவர்களின் ஆடைகளைப் பற்றிக்கொண்டு துள்ளிக்குதித்தன. அன்னையர் சிறு மகவுகளை அள்ளி தோளிலேற்றிக்கொண்டனர். திண்ணையில் அமர்ந்திருந்த முதியவர்கள் வந்து பெண்களிடமிருந்து கீரைக்கட்டுகளையும் மீன்களையும் காய்கறிகளையும் வாங்கிக்கொண்டனர். எங்கும் சிரிப்புகளும் கொஞ்சல்களும் ஒலித்தன.
VENMURASU_EPI_42
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
சற்று நேரத்தில் வீட்டுக்கூரைகளின்மேல் புகை எழத்தொடங்கியது. இனிய ஊனுணவின் வாசனை கிராமத்தை நிறைத்தது. மெல்ல இருண்டு மறைந்த வானில் அவ்வப்போது மேகங்கள் ஒளியுடன் அதிர்ந்தன. மரங்கள் நிழல்களாக ஆக அப்பால் வயல்நீர்வெளி தீட்டப்பட்ட இரும்பு போல கருமையாக மின்னியது. தென்மேற்கு ஓரத்தில் வட்டவடிவமாகக் கட்டப்பட்டிருந்த தனிக்குடிலில் வாழ்ந்த குலப்பூசகர் இடையில் புலித்தோலாடை அணிந்து கையில் அகல்விளக்குடன் கோயில்களை நோக்கிச் சென்றார். முதியவர்கள் எழுந்து கோயில் முன் கூடினார்கள்.
பீஷ்மர் சென்று வணங்கிநின்றார். பூசகர் முதலில் வாயிற்கணபதிக்கு தீபம் ஏற்றி தூபம் காட்டி பூசை செய்தார். பின்பு விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் வரிசையாக தீபமும் தூபமும் காட்டப்பட்டன. அதன்பின் ஒவ்வொரு வீட்டுத்திண்ணையிலும் மீன்நெய்விட்ட அகல்கள் சிற்றிதழ்ச் சுடர் விரித்து எரியத் தொடங்கின. ஈரமான முற்றங்களில் செவ்வொளி குங்குமம் போல சிந்திக்கிடந்தது. சேற்றில் பதிந்த பாதங்களில் ஊறிய நீரில் செவ்வொளியாலான தெய்வபாதங்கள் தெரிந்தன.
தன் அதிதிக்குடில் வாசலில் அமர்ந்திருந்த பீஷ்மருக்கு ஓர் இளம்பெண் பெரிய மரத்தாலத்தில் தாமரையிலையால் மூடிய உணவைக் கொண்டுவந்தாள். கரிய நெடிய உடல் கொண்ட இளம்பெண். சிறிய மூக்கில் சங்கு வளையல் போன்ற நகை அணிந்திருந்தாள். காதுகளிலும் கிளிஞ்சலால் ஆன குழைகள் தொங்கின. நீண்ட கழுத்தில் வண்ணக்கற்களைக் கோர்த்துச்செய்த மாலை. வயலில் இருந்து வந்தபின் அவள் அந்த ஆடையை அணிந்திருக்கவேண்டும். நாணல்நூலால் செய்யப்பட்ட செந்நிறமான அரையாடையிலும் முலைக் கச்சையிலும் கிளிஞ்சல்களும் வண்ணக்கற்களும் வைத்து தைக்கப்பட்டிருந்தன. இரு கைகளிலும் வெண்ணிறமான சங்கு வளையல்கள். அஸ்வமேதக்குதிரை அணிகளுடன் வேள்விமேடைக்கு வந்ததுபோலிருந்தாள்.
பீஷ்மர் முன் தாலத்தைத் திறந்து உணவை தாமரையிலைகளில் அவள் பரப்பி வைத்தாள். அனலில் சுட்ட வட்டமான கோதுமை அப்பங்களும் செம்பருப்பும் கீரையும் சேர்த்துச் சமைத்த கூட்டும் தீயில் சுட்டு உப்பும் காந்தாரத்து மிளகாயும் சேர்த்து நசுக்கிய வழுதுணங்காயாலான துவையலும் பரிமாறினாள். நீர்க்கோழியை தாமரையிலையில் பொதிந்து சேறுபூசி அடுப்பில் வைத்து சுட்டு எடுக்கப்பட்ட கோளம் சிவப்பான சிறிய மண்கலம் போலிருந்தது. அதை கட்டையால் மெல்ல உடைத்தபோது தன் ஊன் நெய்யிலேயே பொரிந்த கோழியின் ஊன் வாசனை மனம் கவரும்படி எழுந்தது. இலையைப்பிரித்து கோழியை வெளியே எடுத்தாள். காந்தாரமிளகாயும் உப்பும் ஊன்நெய்யும் சேர்ந்து பரவிய கோழி கனிந்த வேர்ப்பலாவின் சுளைபோலிருந்தது.
பெரிய மண்கலத்தில் கொதிக்கும் நுரை எழுந்து விளிம்பில் படிந்த முறுகி வற்றிய எருமைப்பாலை ஊற்றி வலக்கைப்பக்கம் வைத்து “வில்வீரரே, தங்கள் உணவு” என்றாள். பீஷ்மர் புன்னகையுடன் “நான் வில்வீரர் என எப்படித் தெரிந்துகொண்டாய்?” என்றார். “தங்கள் தோள்களில் நாண்பட்ட தழும்பு உள்ளது” என்றாள் அவள் சிரித்தபடி. “ஆனால் அது கூடத் தேவையில்லை. எதையும் குறிபார்ப்பவராகவே நோக்குகிறீர்கள்.”
சிரித்தபடி பீஷ்மர் ஊனையும் உணவையும் உண்டு பாலை அருந்தினார். “களைத்திருப்பீர்கள். ஓய்வுகொள்ளுங்கள்” என்று அவள் மரப்பட்டைகளை விரித்து அதன்மேல் மரவுரிமெத்தையை விரித்தாள். அதன்மேல் புல்நார்போர்வையையும் மென்மரத்தாலான தலையணையையும் வைத்தாள். தலையணைமீது சிறந்த நித்திரையை வரவழைக்கும் ஆமை முத்திரை இருந்தது. நெடுந்தொலைவு நடந்தே வந்த களைப்பால் பீஷ்மர் பலகையில் படுத்து போர்த்திக்கொண்டதுமே துயிலில் ஆழ்ந்துவிட்டார். வெளியே கிராமத்தினரின் பேச்சொலிகள் கேட்டுக்கொண்டிருந்தன.
அவர் சடலமாகப் படுத்திருக்க அவரைச்சூழ்ந்து குனிந்து நோக்கும் மனிதர்களைக் கண்டார். அவர்கள் அவர்மேல் நீரில்நீந்தியபடி அவரைப் பார்த்தனர். அனைவரும் மிகச்சிறிய மனிதர்கள். அவரது காலில் இருந்து தலைநோக்கியும் திரும்பவும் அவர்கள் பறந்தனர். ஒரு பெரும் கற்சிற்பம் போல அவர் படுத்திருந்தார். அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் ஒலி நீரலைகளில் கலைபட்டு கலைபட்டுக் கேட்டது. ‘இவர்தான்’ என்ற குரல். ‘இவரா?’ என்ற வியப்பு. ‘உண்மையாகவே இறந்துவிட்டாரா?’ ‘ஏன்?’ ‘இறந்துவிட்டபின்னும் அவர் எப்படி நம்மை கண்களை திறந்து பார்க்கமுடியும்?’ ‘பார்க்கிறாரா என்ன?’ ‘ஆம்,பார்க்கிறார்! இதோ’
‘நான் இறந்துவிட்டேன்’ என்று பீஷ்மர் சொன்னார். ‘நான் இறந்து நெடுநாட்கள் ஆகின்றன. இங்கே தனியாகப் படுத்திருக்கிறேன்’. ‘ஆனால் நீங்கள் இன்னும் மட்கவில்லை.’ ‘நான் மட்கப்போவதில்லை. என் உடல் பாறையாக மாறிவிட்டிருக்கிறது. என்னால் அசையமுடியாது. காலமுடிவுவரை இப்படியே நான் கிடக்கவேண்டியதுதான்’ தலைக்குமேல் அலையடித்துக்கொண்டிருந்த நீரில் முகங்கள் பெருகிக்கொண்டே இருந்தன. பெருங்கூட்டம் அவரை இமைக்கும் கண்களும் சிரிக்கும் பற்களுமாக பார்த்துக்கொண்டிருந்தது. ஒருவன் ‘நீ ஏன் எங்கள் நீருக்குள் படுத்திருக்கிறாய்?’ என்றான். ‘ஏனென்றால் நான் உங்கள் மூதாதை. உங்கள் பிதாமகன்.’ அவர்கள் சிரித்தனர். ‘மீன்களாகிய நாங்கள் மூதாதையரை உண்பவர்கள்’ என்றான் ஒருவன். இன்னொருவன் ‘உணவாக ஆகாத தந்தையால் என்ன பயன்?’ என்றான்.
பீஷ்மர் காலையில் எழுந்தபோது விடியத் தொடங்கியிருந்தது. மென்மழை பெய்துகொண்டிருந்த ஒலி கிராமத்தைச் சூழ்ந்திருந்தது. சேவல்கள் வீட்டுக்கூரைகளில் நின்றுகொண்டு சிறகடித்துக் கூவ மரங்களில் காகங்கள் கலைந்து ஒலித்தன.தாலப்பனையோலையால் செய்யப்பட்ட தலைக்குடைகளை அணிந்தபடி பெண்கள் வேலைசெய்துகொண்டிருந்தனர். கிணற்றிலிருந்து நீர் அள்ளினர். முற்றத்தைக் கூட்டினர். விறகு கொண்டுசென்றனர். கிராமத்தை சமையல்புகை மேகம்போல மூடியிருந்தது. ஆங்காங்கே கைக்குழந்தைகள் வீரிட்டலறும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.
பீஷ்மர் நீரோடையில் குளித்துவிட்டு வந்து தன் குடிலின் திண்ணையில் பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டார். காதுகள் வழியாக உள்ளே பொழிந்துகொண்டிருந்த ஒவ்வொரு ஒலியையும் தொட்டு அதை விலக்கினார். மெல்லமெல்ல முழுமையான அமைதியை அகம் கேட்க ஆரம்பித்தது. ஒலியின்மை இன்மையென ஆனபோது கேட்பவரும் மறைந்தார். வானில் பறந்த பறவை மறைந்து வானம் மட்டுமேயானது.
கண்விழித்தபோது முன்தினம் அவரை வரவேற்ற முதியவர் அருகே அமர்ந்திருப்பதைக் கண்டார். அவர் பச்சைநிறமான புல்நார்தலைப்பாகையைச் சுற்றிக்கட்டியிருப்பதைக் கண்டதும் அவர் முறைமைக்குட்பட்டு எதையோ பேசப்போகிறார் என்று பீஷ்மர் ஊகித்தார். “வீரரே, நான் தங்களிடம் பேசவேண்டும்” என அவர் முகமன்கள் இல்லாமல் தொடங்கினார். “நான் உங்களிடம் மணம்பேசவிருக்கிறேன்” அந்த அப்பட்டமான தன்மை பீஷ்மரை சிலகணங்கள் செயலிழக்கச்செய்தது.
“நேற்று தங்களுக்கு உணவளித்தவளின் பெயர் உர்வரை. எங்கள் குலத்திலேயே அழகான பெண். நான்குநாட்கள் துயிலாமல் கதிர் அறுக்கும்போதும் களைப்படையாதவள்…அவளை எங்கள் மூதன்னையரின் வடிவமாகவே எண்ணுகிறோம்” என்றார் கிழவர். “அவள் தங்களை விரும்புகிறாள். இன்றுகாலை வந்து என்னிடம் சொன்னாள். தாங்கள் அவளை மணந்துகொண்டு இங்கேயே தங்கவேண்டுமென ஊரின் தலைவராக நான் விழைகிறேன்.”
பீஷ்மர் கைகூப்பி “மூத்தவரே, இந்த பாரதவர்ஷத்தில் எங்காவது நான் ஒரு குடும்பம் அமைத்து வாழவிரும்புவேன் என்றால் அது இங்குதான். ஆனால் இப்பிறவியில் எனக்கு அந்த நன்னிலை இல்லை. நான் காமவிலக்கு நோன்பு கொள்வதாக என் தந்தைக்கு வாக்களித்திருக்கிறேன். அந்தப் பெண்ணிடம் சொல்லிவிடுங்கள்” என்றார். “அவள் தங்களுடன் எங்கு வேண்டுமானாலும் வருவதாகச் சொன்னாள்” என்றார் முதியவர். “ஆனால் நீங்கள் அவ்வாறு வாக்கு கொடுத்திருந்தால் மணம்புரியத்தேவையில்லை. மனிதர்கள் வாக்கால்தான் வாழ்கிறார்கள்.”
அவர் சென்றபின்னர் பீஷ்மர் தன் சிறிய மான்தோல் மூட்டையை கட்டிக்கொண்டிருந்தபோது ஒரு சிறுமி அவருக்கு காலையுணவு கொண்டுவந்தாள். கோதுமைக்கஞ்சியும் வெல்லமிட்டுச் செய்த சிறுபயறுப் பாயசமும். அவர் உண்டு முடித்ததும் எழுந்து வெளியே வந்து அந்த அதிதிமந்திரத்தை வணங்கிவிட்டு நிமிர்ந்த தலையுடன் நடந்தார். கிராமவாயிலில் நின்றிருந்த முதியவர் “தங்கள் வாழ்த்துக்களை விட்டுச்செல்லுங்கள்” என்றார். “வழியுணவாக இதைக்கொள்க” என வறுத்த கோதுமைப்பொடியும் வெல்லமும் சேர்த்து உருட்டிய கவளங்கள் கொண்ட இலைப்பொதியை அளித்தார்.
வரப்பு வழியாக பீஷ்மர் தன் நீர்ப்பிம்பம் மட்டும் நெளிந்து நெளிந்து துணைவர நிதானமாக நடந்தார். மழை விட்டு இளவெயில் பரவி நீர்வயல்கள் ஆடிப்பரப்புகள் போல கண்கூசும்படி ஒளிவிட்டன. அவற்றின்மேல் வெண்காளான்கள் பூத்துப்பரவியது போல கொக்குகள் அமர்ந்திருந்தன. முந்தையநாள் நின்றிருந்த குளத்தருகே வந்து பீஷ்மர் நின்றார். உடைதிருத்திக்கொண்ட பெண் போல காற்றில் உலைந்த இலைகளை எல்லாம் மீண்டும் படியவைத்து தாமரைக்குளம் அமைதியாகக் கிடந்தது. நீர்ப்பாம்புகள் வால்தவிக்க அவரை ஏறிட்டு நோக்கின.
சிறுவரப்பு வழியாக அவரை நோக்கி உர்வரை வருவதை அவர் கண்டார். அவள் நிமிர்ந்த நடையுடன் வருவதைக் கண்டபோது நாணேற்றிய கரிய வில் என அவர் நினைத்துக்கொண்டார். அவள் அவர் அருகே வந்து கரிய ஈறுகளில் வெண்கிளிஞ்சல் பற்கள் தெரிய புன்னகைசெய்து “கிளம்பிவிட்டீர்கள் என்றார்கள்” என்றாள். “ஆம்” என்றார் பீஷ்மர். “நீ என்னை மன்னிக்கவேண்டும் பெண்ணே…என் வாக்கு அப்படி. உனக்கு அனைத்து நலன்களும் கிடைக்கட்டும்.”
அவள் இமைகள் அரைக்கணம் சிட்டின் இறகுகள் என தாழ்ந்து மேலெழுந்தன. தெளிந்த விழிகளால் அவரை நோக்கி “நான் எனக்காக உங்களை மணம்புரிய விரும்பவில்லை” என்றாள். “நான் நேற்றிரவு ஒரு கனவுகண்டேன். எங்கள் ஊர்மூலையில் கோயில் கொண்டிருக்கும் வராஹியின் கருவறையில் இருந்து கனத்த உறுமலுடன் ஒரு பெரும் கரும்பன்றி வெளியே வந்தது. அது எங்கள் முற்றத்துக்கு வந்தபோது நீங்கள் அங்கே நின்றுகொண்டிருந்தீர்கள். உங்கள் கையில் வில்லோ வாளோ ஏதுமில்லை. அது உங்களை நோக்கிப் பாய்ந்து உங்கள் உடலை மோதிச் சிதைத்தது. நீங்கள் குருதியில் மண்ணில் கிடந்தீர்கள். உங்கள் நெஞ்சைக்கிழித்து இதயத்தைக் கவ்வி எடுத்துத் தின்றபடி என்னைத் திரும்பிப்பார்த்தது. அதன் வாயில் இருந்த வளைந்த பற்களால் அது புன்னகைசெய்வதுபோலத் தோன்றியது.”
பீஷ்மர் மெல்லிய புன்னகை செய்தார். “பெரிய ஆபத்து உங்களை நோக்கிக் கிளம்பிவிட்டது. வராகம் தடுத்து நிறுத்தப்படவே முடியாதது என்பார்கள்” என்றாள் உர்வரை. “நான் உங்களை என்னுடன் சேர்த்துக்கொள்ள விரும்பினேன். என்னுடன் இருந்தால் நீங்கள் தப்பிவிடுவீர்கள் என நினைத்தேன்.”
பீஷ்மர் புன்னகையுடன் “உன்னுடன் இருந்தால் நான் தப்பிவிடுவேன் என்று நானும் அறிவேன் பெண்ணே” என்றார். தலைகுனிந்து அவளுடைய விரிந்த கண்களை நோக்கி “பெண்ணின் அன்பைப்பெறாதவன் பிரம்மஞானத்தால் மட்டுமே அந்த இடத்தை நிறைத்துக்கொள்ளமுடியும். நான் இரண்டுக்கும் தகுதியற்றவன். பழிசூழ்ந்தவன்” என்று சொல்லி “மாமங்கலையாக இரு” என வாழ்த்திவிட்டு திரும்பிச்சென்றார்.