அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

1/8/14

142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம்

192ல் கண்ட பிருங்கி மகரிஷியும், 130ல் கண்ட பிருங்க தேவ மகரிஷியும், இந்த ப்ருங்கி மகரிஷியும் ஆக இம்மூவரும் ஒருவரே. ப்ருங்கி என்னும் பெயரைத் தமிழில் பிருங்கி என எழுதுவர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

தேவபக்திதவரு :- தெய்வபக்தி மிக்கவர் 
நாடகதவரு :- நாடகக்கலையில் வல்லவர். 
போகம்தவரு :- சுகபோகமாக வாழ்பவர். 
மாண்டவ்யதவரு :- மாண்டவ்ய மகரிஷியை வணங்குபவர். 
மதிகூடிதவரு :- அறிவாளிகள். 
கங்குலதவரு, கண்ட்ளதவரு, கரெதவரு, குண்ட்லதவரு, கும்மனதவரு, போக்கிதவரு, போகின்சுதவரு, மாரெம்தவரு.

பகுதி இரண்டு : பொற்கதவம் [ 1 ]

பகுதி இரண்டு : பொற்கதவம்  [ 1 ]
இருளும் குளிரும் விலகாத பிரம்ம முகூர்த்தத்தில் கைத்தாளமும், முழவும், கிணைப்பறையும், சல்லரியும், சங்கும், மணியும் ஏந்திய சூதர்கள் அஸ்தினபுரியின் அணிவாயிலுக்கு முன் வந்து நின்றனர். இருளுக்குள் பந்தங்களின் செம்புள்ளிகளின் வரிசையாகத் தெரிந்த மகாமரியாதம் என்னும் கோட்டைச்சுவர் நடுவே மூடப்பட்டிருந்த கதவுக்குப் பின்புறம் அணிவகுத்தனர். கோட்டைமீதிருந்த காவலன் புலரியின் முதற்சங்கை ஒலித்ததும் கீழே நின்றிருந்த யானை வடத்தைப் பிடித்திழுத்து முகவளைவு மீது தொங்கிய சுருதகர்ணம் என்னும் கண்டாமணியை அடித்தது. அந்த ஒலி நகர்மீது பரவிய போது நகர் நடுவே அரண்மனையின் உள்கோட்டைமுகப்பில் தொங்கிய காஞ்சனம் என்னும் கண்டாமணி ஒலிக்க ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து நகரமெங்குமுள்ள அனைத்து ஆலயங்களிலும் புலரியின் சங்கொலிகளும் மணியோசைகளும் எழுந்தன. அஸ்தினபுரி துயிலெழுந்தது. தலைக்கோல் சூதர் தன் வெண்சங்கை ஊதியதும் சூதர்கள் அஸ்தினபுரியின் துதியை பாடத்தொடங்கினார்கள்.
சூதர்கள் பேரரசன் ஹஸ்தியின் கதையைப் பாடினார்கள். சந்திரகுலத்து சுஹோத்ரன் இக்‌ஷுவாகு வம்சத்து சுவர்ணையை மணந்து பெற்ற குழந்தை இளமையிலேயே நூறு யானைகளின் ஆற்றலைக்கொண்டிருந்தது. மழலைபேசி சிறுகால் வைக்கும் வயதிலேயே யானைக்குட்டிகளுடன் மோதி விளையாடியது. யானைகளில் ஒருவனாக வளர்ந்து யானைகளுடன் வனம்புகுந்து காட்டுயானைகளுடன் பேச ஆரம்பித்தது. அடர்கானகத்திலிருந்து யானைகள் அவன் நகரம்நோக்கி வந்து அவனுக்கு படையாக மாறின. ஒவ்வொரு யானையும் மேலும் யானைகளை கொண்டுவந்து சேர்க்கச் சேர்க்க லட்சம் யானைகளைக்கொண்ட பெரும்படைக்கு அதிபன் ஆனான் ஹஸ்தி. அந்தப்பெரும்படை மழைமேகக்கூட்டம் போல பாரதத்தின் ஐம்பத்தாறு நாடுகளிலும் ஊடுருவியது. ஹஸ்தியின் படை சென்ற இடங்களிலெல்லாம் சூரிய ஒளியை கரிய யானைக்கூட்டங்கள் உண்டதனால் இருள் ஏற்பட்டது. பாரதவர்ஷமே ஹஸ்தியின் காலடியில் பணிந்தது.
தன் களஞ்சியத்தில் வந்துகுவிந்த செல்வத்தைக்கொண்டு பாரதவர்ஷம் ஒருபோதும் கண்டிராத பெருநகரமொன்றை அமைத்தான் ஹஸ்தி. யானைக்கூட்டங்கள் பாறைகளைத் தூக்கி வைத்து முன்னின்று கட்டிய மகாமரியாதமென்ற மாபெரும் மதில் ஒன்று அதைச்சுற்றி அமைந்தது. யானைகளின் அதிபனை ஹஸ்திவிஜயன் என்றும், அவனுடைய புதியமாநகரை ஹஸ்திபுரி என்றும் சூதர்கள் பாடினர். காலையில் யானைகளின் ஓங்காரத்தால் அந்நகரம் விழித்தெழுந்தது. பகலில் யானைகளின் கருமையால் அது நிழலிலேயே இருந்தது. யானைகளின் மதத்தில் மொய்க்கும் ஈக்களின் ரீங்காரம் மலர்ச்சோலைகளின் தேனீக்களின் ரீங்காரத்தை விட ஓங்கி ஒலித்தது. அந்த யானைகளின் எழிலைக்காண ஐராவதம் மீதேறி இந்திரன் விண்மீது வந்து நிற்பதனால் என்றும் அந்நகர்மேல் மழை பெய்துகொண்டிருந்தது.
அஸ்தினபுரி என்ற அழகியின் மான்விழிகளாக நீலத்தடாகங்கள் அமைந்தன. அவள் நீலக்கூந்தலைப்போல அங்கே பூம்பொழில்கள் வளர்ந்தன. மண்ணில் நாரைச்சிறகுகள்போல வெண்கூம்புமுகடுகள் கொண்ட மாளிகைகள் அதில் எழுந்தன. நீர்பெருகும் மாநதிகள் என சாலைகள் அந்நகருக்குள் ஓடின. சூதர்களின் கிணையொலியும், நூல் பயில்வோரின் பாடல் ஒலியும், குழந்தைகளின் விளையாட்டுச் சிரிப்பும் யானைகளின் மூச்சொலிகளுடன் கலந்து ஒலிக்கும் அந்நகரம் இறையருளைப் பெறுவதற்காக மானுடன் மண்ணில் விரித்துவைத்த யானம் எனத் தோன்றியது. மண்ணுலகின் எழில்காண விண்ணவரும் வருவதற்கு அஸ்தினபுரியே முதற்காரணமாக அமைந்தது.
“ஆதியில் விஷ்ணு இருந்தார். விஷ்ணுவிலிருந்து பிரம்மன் தோன்றினான். பிரம்மனிலிருந்து அத்ரி. அத்ரியிலிருந்து சந்திரன். சந்திரனிலிருந்து புதன், புதனிலிருந்து சந்திரகுலத்தோன்றல் புரூரவஸ் பிறந்தான்” என்று சூதர்கள் குருவம்சத்தின் குலவரிசையைப் பாடினர். “ஆயுஷ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்‌ஷத்ரன், ஹஸ்தி என்னும் மங்காப்புகழ்கொண்ட அரசர்களின் பெயர்கள் என்றும் வாழ்வதாக! மாமன்னன் ஹஸ்தியின் மைந்தனான அஜமீடனின் வழிவந்த ருக்‌ஷன், சம்வரணன், குரு ஆகியோரின் புகழ் ஒருநாளும் குன்றாதிருப்பதாக! குருவம்சத்தின் பெருமை அழியாமல் திகழ்வதாக!” என்று ஒலித்தது சூதர்களின் பாடல்.
விடியலின் முதற்கதிர் மண்ணைத் தொட்டு முதல் கூழாங்கல்லை பொன்னாக்கியபோது சூதர்களின் பாடல் முடிந்து தலைக்கோலர் தன் வெண்சங்கை ஊதினார். மங்கலவாத்தியங்கள் முழங்க ஏழு யானைகள் வடம்பற்றி இழுத்து கோட்டைவாயிலை இழுத்துத் திறந்தன. பெருங்கதவுக்கு அப்பால் அகழிமீது இருந்த மரப்பாலத்தில் வெளியிலிருந்து நகருக்குள் நுழைவதற்காகக் காத்திருந்த வணிகர்களின் வண்டிகளின் காளைகள் கழுத்துச்சரடு இழுபட்டு மணிகுலுங்க காலெடுத்து வைத்தன. நெய்யும் பாலும் கொண்டுவந்த ஆய்ச்சியர் பானைகளை மாறிமாறி உதவிக்கொண்டு தலையில் ஏற்றிக்கொண்டனர். நறுஞ்சுண்ணமும் தேனும் கொம்பரக்கும் கொண்டுவந்த வேட்டுவர்கள் தங்கள் காவடிகளை தோளிலேற்றிக்கொண்டனர். பல்லாயிரம் குரல்கள் இணைந்து எழுந்த ஒற்றை முழக்கத்துடன் அனைவரும் ஒழுகிச்சென்று வாசலுக்குள் நுழைந்து உள்ளே செல்லத்தொடங்கினர். அந்த நீண்டவரிசை கோட்டை மேலிருந்த காவல்வீரனின் கண்ணுக்கு எட்டாத தொலைவுவரை சென்று மண்குன்றுகளுக்கு அப்பால் மறைந்தது.
அந்த வரிசையின் பின்னாலிருந்து இரட்டைப்புரவிகள் இழுத்த ரதமொன்று குருகுலத்தின் அமுதகலசக்கொடி பறக்க அந்த வரிசையின் ஓரத்தை ஒதுக்கியபடி வந்ததை கோட்டை மேலிருந்த காவலர் தலைவன் கண்டான். தன் இடையிலிருந்த சங்கை எடுத்து ஊதி “அஸ்தினபுரியின் அமைச்சர் பலபத்ரர் வருகை!” என அறிவித்தான். அமைச்சருக்குரிய சங்குமுத்திரை பொறிக்கப்பட்ட கொடி கோட்டைமேல் துவண்டு ஏறி காற்றை ஏற்று பறக்க ஆரம்பித்தது. அமைச்சரின் ரதம் கோட்டைமுகப்புக்கு வந்ததும் காவலர்தலைவன் அவரை எதிர்கொண்டு முகமன் சொல்லி வரவேற்றான். அவர் மெல்லிய தலையசைவால் அதை ஏற்றுக்கொண்டு கோட்டைக்குள் நுழைந்து துயிலெழுந்துகொண்டிருந்த நகரத்தின் அகன்ற தெருக்களினூடாக குதிரைக்காலடிகள் தாளமிட விரைந்து சென்றார். அமைச்சரின் முகம் இருண்டிருந்ததை காவலர் அறிந்தனர். அஸ்தினபுரியின் அமைச்சர் தீயசெய்தியுடன் வந்திருக்கிறார் என்பது அக்கணமே நகரமெங்கும் பரவத் தொடங்கியது.
நகர்மன்றுகளில் மக்கள் சிறிய கூட்டங்களாக கூடத் தொடங்கினர். வீட்டுத்திண்ணைகளிலும் உள்முற்றங்களிலும் பெண்கள் திரண்டனர். பட்டுத்துணி அசையும் ஒலியில் அவர்கள் பேசிக்கொண்ட ஒலி திரண்டு புதர்க்காட்டில் காற்று செல்வதுபோன்ற ஓசையாக நகர்மீது பரவியது. அந்நகரில் ஒவ்வொருவரும் அஞ்சிக்கொண்டும் ஐயுற்றுக்கொண்டும் இருந்தனர். அவர்களின் முப்பத்தைந்து தலைமுறை மூதாதையர் எவரும் அரசைப்பற்றி அஞ்சநேர்ந்திருக்கவில்லை. குலமூதாதை குருவுக்குப்பின் ஜஹ்னு, சுரதன், விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி,ருக்‌ஷன்,பீமன் என மாமன்னர்களின் வரிசையில் பன்னிரண்டாவதாக ஆட்சிக்குவந்த ப்ரதீசன் கைக்குழந்தையை அன்னை காப்பதுபோல அஸ்தினபுரத்தை ஆண்டான் என்றும் அவனுடைய மைந்தன் சந்தனுவின் ஆட்சிக்காலத்தில் அறம் தவறியது என்று ஒருசொல்லைக்கூட எவரும் கேட்டிருக்கவில்லை என்றும் பாடின சூதர்களின் பாடல்கள்.
ஃபால்குன மாதம் விசாக நட்சத்திரத்தில் மழைக்கால இரவின் நான்காம் சாமத்தில் முதியமன்னர் சந்தனு உயிர்துறந்தார். அவரது உடல்நிலையை அறிந்த மக்களெல்லாம் ஊர்மன்றுகளிலும் ஆலயமுற்றங்களிலும் கூடி நின்று அரண்மனைக்கோட்டைமுகப்பின் வெண்கலமணியாகிய காஞ்சனத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். வாத்தியங்களை தாழ்த்திவைத்து சூதர்கள் சோர்ந்து அமர்ந்திருந்தனர். அப்போது வெறிமின்னும் கண்களும் சடைவிழுதுகள் தொங்கும் தோள்களும் புழுதியும் அழுக்கும் படிந்த உடலுமாக பித்தன் ஒருவன் கோட்டைவாசலைத் தாண்டி ஊருக்குள் நுழைந்தான். கண்டாமணியை நோக்கி கூடியிருந்த மக்கள் நடுவே அவன் வந்து நின்றபோது அவனுடைய விசித்திரமான தோற்றத்தாலும் சைகைகளாலும் மக்கள் விலகி நின்று கவனிக்கத்தொடங்கினர்.
ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மேல் சொடுக்கவும்]
கண்டாமணியின் ஓசை எழுவதற்கு சிலகணங்களுக்கு முன்பு அரண்மனைக்கு மேலிருந்து ஒரு சிறிய வெண்பறவை எழுந்து வானில் பறப்பதை அவர்களனைவரும் கண்டனர். பித்தன் கைகளைத் தட்டியபடி “அஹோ! அஹோ!” என்று கூச்சலிட்டான். “அது பறந்து போய்விட்டது. அதோ அது பறந்து போய்விட்டது” என ஆர்ப்பரித்தான். “சந்திரவம்சத்தின் மணிமுடிமீது வந்து அமர்ந்த அந்தப்பறவை அதோ செல்கிறது. குருவம்சத்தின் முடிவு தொடங்கிவிட்டது” என்றான். கூடியிருந்த அனைவரும் அதைக்கேட்டு நடுங்கி அதிர்ந்து சினம்கொண்டனர். ஒரு வீரன் வாளை உருவியபடி பித்தனை நோக்கி செல்ல ஆரம்பித்த மறுகணம் காஞ்சனம் ஒலிக்க ஆரம்பித்தது. கோட்டைச்சுவரில் சுருதகர்ணம் முழங்கியது. யானைக்கொட்டிலில் பட்டத்துயானை துதிக்கை தூக்கி ஓங்காரமெழுப்ப, நகரமெங்கும் பரவியிருந்த பல்லாயிரம் யானைகள் சேர்ந்து குரல்கொடுக்க ஆரம்பித்தன. அவ்வொலியில் மகாமரியாதமே நடுங்கியது என்றனர் சூதர்கள்.
நகரமெங்கும் மக்களின் அழுகுரலும் சூதர்களின் பாடலோசையும் நிறைந்தன. கூட்டம்கூட்டமாக மக்கள் அரண்மனை வளாகம் நோக்கி நெரித்து முந்திச்செல்லத் தொடங்கினர். அந்தப்பித்தனை நினைவுகூர்ந்த சிலர் மட்டும் வேகமாக நகரைவிட்டு நீங்கிச்சென்ற அவனைத் தொடர்ந்துசென்று பிடித்துக்கொண்டனர். அவனை நகரத்து மூத்த நிமித்திகர் ஒருவர் அடையாளம் கண்டார். அஜபாகன் என்று பெயர்கொண்ட அவன் அஸ்தினபுரியில் ஒருகாலத்தில் பெரும்புகழ்பெற்ற நிமித்திகனாக இருந்தான். சந்திரவம்சத்தின் குலக்கதைகள் அனைத்தையும் தொகுக்க ஆரம்பித்த அவன் அவ்வம்சத்தில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுக்கும் விதியின் வலையில் என்ன காரணம் இருந்தது என்றும் என்ன விளைவு உருவாகியது என்றும் கணிக்கத்தொடங்கினான். ஒருநாள் சித்தம் கலங்கி அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும் நகரைவிட்டு விலகிச்சென்றான்.
அஜபாகனால் எதையும் தொகுத்துப் பேசமுடியவில்லை. அழுகையும் சிரிப்புமாக அவன் ததும்பிக்கொண்டே இருந்தான். அழுகைக்கு பதில் அவன் சிரிப்பதாகவும் சிரிப்புக்கு பதில் அவன் அழுவதாகவும் மக்கள் நினைத்தார்கள். நிமித்திகர்களின் கூட்டம் அவனை அழைத்துச்சென்று தங்கள் குலகுருவான பிருஹஸ்பதியின் ஆலயத்தில் அமரச்செய்தனர். அவனுடைய உதிரிச்சொற்களையெல்லாம் குறித்துக்கொண்டு அவற்றுக்கு நிமித்திக ஞானத்தைக்கொண்டு பொருளறிய முயன்றனர். “தர்மத்தின் மேல் இச்சையின் கொடி ஏறிவிட்டது” என்று அவன் சந்தனுவைப்பற்றி சொன்னான். “வெற்று இச்சை வீரியத்தை கோடைக்கால நதிபோல மெலியச்செய்கிறது. பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது” என்று சந்தனுவின் மைந்தர்களான சித்ராங்கதனைப்பற்றியும் விசித்திரவீரியனைப்பற்றியும் சொன்னான். ஆனால் அவன் சட்டென்று அஞ்சி நடுங்கி எழுந்து மார்பில் அறைந்துகொண்டு “இன்று வடதிசையில் எரிவிண்மீன் உதித்திருக்கிறது. அருந்ததிக்கு நிகரான விண்மீன். அது குருகுலத்தை அழிக்கும்”என்று ஓலமிட்டான். வலிப்பு வந்து விழுந்து கைகால்களை உதைத்துக்கொண்டான். அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடாமலேயே அவன் இறந்துபோனான்.
அரண்மனையில் மன்னரின் இறுதிச்சடங்குகள் நடந்துகொண்டிருக்க, நகரமே களையிழந்து வெறுமை நிறைந்து அமைந்திருக்கையில், நிமித்திகர் பிருஹஸ்பதியின் சன்னிதியில் கூடி அமர்ந்து அவன் சொன்னதைக்கொண்டு குருகுலத்தின் எதிர்காலத்தைக் கணித்தனர். சந்தனு மன்னர் தன்னுடைய இச்சைகளை மட்டுமே பின்தொடர்ந்து சென்று குருகுலத்தின் இன்றியமையாத அழிவுக்கு வழிவகுத்துவிட்டார் என ஊகித்தனர். ஆனால் அந்த அழிவு, என்று எப்போது நிகழுமென அவர்களால் உய்த்தறிய முடியவில்லை. காலக்குறிகளைப் பார்த்த முதுநிமித்திகர் குருவம்சத்தின் மாவீரர்களும் அறத்தின்தலைவர்களும் இனிமேல்தான் பிறக்கவிருக்கிறார்கள் என்றும் குருகுலத்தின் புகழின் பூக்காலம் இனிமேல்தான் வரவிருக்கிறது என்றும் சொன்னார். ஆனால் பித்தனின் சொற்களும் சரியாகவே இருந்தன. சந்தனுவின் இரு மைந்தர்களில் மூத்தவனாகிய சித்ராங்கதனின் பிறவிநூலில் யோனிகட்டம் இருக்கவேயில்லை. அவனுடைய தம்பி விசித்திரவீரியன் அப்போதும் மருத்துவக்குடில்களில்தான் வாழ்ந்துவந்தான்.
சந்தனுவின் ஈமச்சடங்குகள் முடிந்தபின்னர் நிமித்திகர் அவைக்குச் சென்று அஸ்தினபுரியின் அரசியான சத்யவதியிடம் நிமித்தபலன்களைச் சொன்னார்கள். அஞ்சியபடியும் தயங்கியபடியும் அவர்களில் மூத்த நிமித்திகர் சித்ராங்கதனின் பிறவிநூல் அவனுடைய குணங்களைச் சொல்லும்போது யோனிகட்டத்தை முற்றிலும் விட்டுவிட்டிருப்பதாகச் சொன்னார். ஆனால் அவர்களனைவரும் ஆச்சரியப்படும்படியாக சத்யவதி அதை அறிந்திருந்தாள். அந்தச்செய்தியை பிறர் எவரும் அறியவேண்டியதில்லை என்று அவள் அவர்களுக்கு ஆணையிட்டு பரிசில்கள் கொடுத்து அனுப்பினாள். அஜபாகனின் சொற்களிலிருந்து நிமித்திகர் ஊகித்த கடைசிச்செய்தியை அவர்கள் சத்யவதியிடம் சொல்லவில்லை. குருகுலமன்னன் சந்தனு இறந்த அன்று அதே முகூர்த்தத்தில் பாரதவர்ஷத்தில் எங்கோ குருவம்சத்தை அழிக்கும் நெருப்பு பிறந்திருக்கிறது என அவர்கள் அறிந்திருந்தனர். அருந்ததிக்கு நிகரான எரிவிண்மீன் என்ற சொல் ஒரு பெண்ணைக் குறிக்கிறதென்றும் ஊகித்திருந்தனர்.
சத்யவதி நேரில்சென்று சேதிநாட்டு மன்னன் பிரஹத்ரதனின் மகள் சௌபாலிகையை பார்த்து சித்ராங்கதனுக்கு மணம்புரிந்துவைத்தாள். சந்திரவம்சத்து சித்ராங்கதன் அஸ்தினபுரியின் அரசன் ஆனபோது மக்கள் ஏனோ மகிழ்ந்து கொண்டாடவில்லை. நகர்வீதிகளில் அவன் ஊர்வலம் வருகையில் எழுந்த வாழ்த்தொலி மரபானதாக , உயிரற்றிருந்தது. மக்கள் கூடியிருந்து பேசும்போது மன்னனைப்பற்றிப் பேசுவதையே முற்றிலும் தவிர்த்தனர். தற்செயலாக குருகுலம் பற்றிய பேச்சு எழும்போது அனைவரும் பார்வையைத் திருப்பிக்கொள்ள அது அங்கேயே அறுபட்டது. மிகச்சிலர் மட்டுமே கண்டிருந்த அஜபாகனை அதற்குள் அனைவரும் அறிந்திருந்தனர். எவரும் எதுவும் சொல்லாமலேயே எங்கோ இருக்கும் பிழை எங்கும் தெரிந்திருந்தது.
அழகிய சேவகர்கள் புடைசூழ வெண்பளிங்காலான மாளிகையில் வாழ்ந்த சித்ராங்கதன் ஒருநாள்கூட தன் மனைவியின் அந்தப்புரத்தில் தங்கவில்லை. அவன் சேவைக்காக காந்தாரத்திலிருந்து வெண்சுண்ண நிறமுள்ள சேவகர்கள் கொண்டுவரப்பட்டனர். திராவிடத்திலிருந்து கரும்பளிங்கின் நிறமுள்ள இளைஞர்கள் வந்தனர். அவர்கள் வழியாக அவன் எதையோ தேடிக்கொண்டிருந்தான். இறுகிய தசைகள் கொண்ட அழகிய இளைஞர்களுடன் மற்போர்செய்வதையும் நீச்சலிடுவதையும் சித்ராங்கதன் விரும்பினான். நரம்புகள் புடைத்த தசைநார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இறுகிப்புடைத்து அதிர்வதைப் பார்க்கையில்தான் அவன் இன்பம் கொண்டான். மனித உடலென்பது வைரம்பாயும்போதே முழுமை கொள்கிறது என நினைத்தான்.
சித்ராங்கதன் மாவீரனாகவும் நெறிநின்று நாடாளக்கூடியவனாகவும் இருந்தபோதிலும் எப்போதும் நிலையற்றவனாகவே காணப்பட்டான். பதினாறாண்டுகாலம் ஆட்சிசெய்த சித்ராங்கதன், ஒருமுறை ஹிரண்வதி நதிக்கரையில் தட்சிணவனத்துக்கு வேட்டையாடச்சென்றான். வேட்டைவெறியில் மான் ஒன்றை பின் தொடர்ந்து அடர்கானகத்தில் அலைந்தான். அந்த மானைப் பிடிக்காமல் திரும்புவது இழுக்கு என்று பட்டதனால் பறவைகளை உண்டும் குகைகளில் தங்கியும் நாட்கணக்கில் காட்டில் சுற்றித்திரிந்தான்.
நாட்கள் செல்லச்செல்ல அவனுக்குள் இருந்த அனைத்தும் தேய்ந்தழிந்தன. அஸ்தினபுரியும் அழகிய பளிங்குமாளிகைகளும் தோழர்களும் எல்லாம் கனவின் நினைவுபோல ஆனார்கள். அவன் மட்டுமே அவனில் எஞ்ச அந்த வனத்தில் ஒவ்வொருநாளும் பிறந்தெழுந்தவன்போல அவன் வாழ்ந்தான். ஒருமுறை தாகம் கொண்டு துல்லியமான நீலநீர் நிறைந்த அசைவில்லாத பாறைத்தடாகமொன்றை அடைந்து நீரள்ளுவதற்காகக் குனிந்தபோது அதில் அவன் பேரழகனொருவனைக் கண்டான். சித்தமுருவான நாள்முதல் அவன் தேடிக்கொண்டிருந்தவன் அவனே என்று அறிந்தான். புடைத்த தசைநார்களும் நீலநரம்புகளும் அசையும் உடல் கொண்ட அந்த அழகனை அள்ளியணைக்க இருகைகளையும் விரித்து முன்னால் குவிந்தான். நீருக்குள் இருந்த சித்ராங்கதன் என்னும் கந்தர்வன் அவனை அணைத்து இழுத்துக்கொண்டு ஆழத்துக்குள் புகுந்துகொண்டான்.
சித்ராங்கதனை தேடிச்சென்றவர்கள் அவனை கண்டடையவேயில்லை. நீலத்தடாகத்தின் அருகே அவனுடைய வில்லும் அம்பறாத்தூணியும் இருக்கக்கண்டு அவன் அதற்குள் மறைந்திருக்கலாம் என ஊகித்தனர். சத்யவதி நிமித்திகரைக்கொண்டு அவனுடைய பிறவிநூலைப்பார்த்து அவன் இறந்ததை உறுதிசெய்துகொண்டாள். சித்ராங்கதனின் தம்பி விசித்திரவீரியன் உடல்நிலை தேறவில்லை என மருத்துவர்கள் சொன்னதனால் சத்யவதியே ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டாள். அஸ்தினபுரியை அவள் ஆட்சிசெய்வதை ஐம்பத்தைந்து மறக்குல மன்னர்களும் ஒப்பமாட்டார்கள் என மக்கள் அறிந்திருந்தனர். ஒவ்வொருநாளும் தீயசெய்திக்காக அவர்கள் செவிகூர்ந்திருந்தனர்.
பலபத்ரர் அரண்மனை முற்றத்தில் சென்றிறங்கி காவலனால் அழைத்துச்செல்லப்பட்டு மந்திரசாலையில் அமர்ந்திருந்த பேரமைச்சர் யக்ஞசர்மரின் சபையை அடைந்தார். தளகர்த்தர்களாகிய உக்ரசேனரும், சத்ருஞ்சயரும், வியாஹ்ரதத்தரும் அங்கே இருந்தனர். களஞ்சியக்காப்பாளராகிய லிகிதரும், வரிகளுக்கு பொறுப்பாளராகிய சோமரும், ஆயுதசாலைக்கு அதிபராகிய தீர்க்கவ்யோமரும், எல்லைக்காவலர் தலைவரான விப்ரரும், யானைக்கொட்டடிக்கு அதிபராகிய வைராடரும் இருந்தனர். பலபத்ரர் அமர்ந்ததும் தான் கொண்டு வந்திருந்த ஓலை ஒன்றை பேரமைச்சரிடம் அளித்தார். அதில் “பாகனில்லாத யானை நகரங்களை அழிக்கக்கூடியது. பாசாங்குசதாரியால் அது அடக்கப்படவேண்டும். வெண்ணிற நதி எட்டாம் படித்துறையை நெருங்கும்போது பன்னிரு ராசிகளும் இணைகின்றன. அன்று கொற்றவைக்கு முதற்குருதி அளிக்கப்படும்” என்று எழுதியிருந்தது.
ஓலையை ஒவ்வொருவராக வாங்கி வாசித்தனர். யானை என்பது அஸ்தினபுரி என்றும் வெண்ணிறநதியின் எட்டாம் படித்துறை என்பது சுக்லபட்சத்தின் எட்டாம் இரவு என்றும் அவர்கள் ஊகித்தனர். அன்று கொற்றவைக்கு முதற்பலி கொடுத்து போரை அறிவிக்கவிருக்கிறார்கள் என்ற செய்தி அவர்களை இறுகச்செய்தது. தளகர்த்தரான உக்ரசேனர் “பீஷ்மர் இருக்கையில் நாம் எவருக்கும் அஞ்சவேண்டியதில்லை” என்றார். “…இந்த பாரதவர்ஷத்தில் அவரது வில்லின் நாணோசையைக் கேட்டு அஞ்சாதவர்கள் எவரும் இன்றில்லை. நம்முடைய படைகளும் ஆயுதங்களுடன் சித்தமாயிருக்கின்றன. கொட்டில்களில் நம் யானைகள் பல்லாண்டுகாலமாக பெருகி நிறைந்திருக்கின்றன. நாம் போரை அஞ்சவேண்டியதில்லை” என்றார்.
பேரமைச்சர் யக்ஞசர்மர் புன்னகைசெய்து “அரியணைகள் ஆயுதங்களால் நிலைநிறுத்தப்படுகின்றன என்பது அரசுகள் தோன்றிய காலம் முதல் நம்பப்பட்டுவரும் பொய். அரசுகள் மக்களின் விராடவடிவங்கள் மட்டுமே. அவை மக்களை ஆள்வதில்லை, மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன” என்றார். “இந்த ஓலையின் பிறவரிகளுக்கு நம் வரையில் எந்த முக்கியத்துவமும் இல்லை தளகர்த்தரே. இதன் முதல் வரி மட்டுமே நாம் கவனிக்கவேண்டியது. யானைக்கு பாகன் இல்லை என்கிறது இந்த ஓலை. அந்தவரியை பாரதவர்ஷத்தின் நம்மைத்தவிர்த்த ஐம்பத்திஐந்து மன்னர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அப்படியென்றால் அதை இங்குள்ள மக்களெல்லாம் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது பொருள். மக்கள் ஏற்றுக்கொள்ளாத ஒன்றை மன்னர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்”.
“நம்முடைய சமந்தர்களும் நண்பர்களும்கூட இதை ஏற்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது” என்றார் லிகிதர். “சேற்றில் அகப்பட்ட யானையை புலிகள் சூழ்வதுபோல அவர்கள் அஸ்தினபுரியைச் சூழ்கிறார்கள். பலநாட்களுக்கான உணவு கிடைக்கும் என அவர்களின் பசி சொல்கிறது”. சோமர் “பேரமைச்சரே, அவர்கள் நினைப்பதைத்தான் நம் குடிமக்களிலும் பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள்”என்றார். “இவ்வருடம் வரிகள் இயல்பாக வந்துசேரவில்லை. ஆலயக்களஞ்சியத்துக்கு காணிக்கைச்செல்வம் வந்து சேர்வதுபோல அரசனுக்கு வரிகள் வரவேண்டுமென்கின்றன நூல்கள். இம்முறை பல ஊர்களில் ஊர்த்தலைவர்கள் எதிர்த்திருக்கிறார்கள். அரசனில்லாத தேசம் வரிகளைப்பெற முடியுமா என்று வினவியிருக்கிறார்கள்.”
“ஆம், இனியும் நாம் தாமதிக்கலாகாது” என்றார் பேரமைச்சர் யக்ஞசர்மர். “இந்த கிருஷ்ணபக்‌ஷ சதுர்த்தியுடன் அஸ்தினபுரியின் மன்னர் சித்ராங்கதர் மறைந்து ஒரு வருடமாகிறது. அவரது நீர்க்கடன் நாள் வரைக்கும் ஷத்ரிய மன்னர்கள் நம் மீது படைகொண்டுவர முடியாது. மேலும் எட்டுநாள் கழித்துதான் அவர்கள் போருக்கு நாள் குறித்திருக்கிறார்கள். அதற்குள் அஸ்தினபுரியின் அரியணையில் நாம் மன்னரை அமரச்செய்தாகவேண்டும்.”
அந்தச் சொற்களைக்கேட்டு அவையில் அமைதி பரவியது. சோமர் “….விசித்திரவீரியருக்கு சென்ற மாதமே பதினெட்டு வயது ஆகிவிட்டது” என்றார். அவையில் அமைதியிழந்த உடலசைவுகள் உருவாயின. பேரமைச்சர் தயக்கத்துடன் “அவரது உடல்நிலையில் நல்ல மாற்றம் ஏதுமில்லை என்று அரசமருத்துவர்கள் சொல்கிறார்கள்….ஆகவேதான் இதுநாள் வரை ஒத்திவைத்தோம்…” என்றார்.
லிகிதர் “அரியணை அமரும் மன்னன் முறைப்படி மணம்புரிந்திருக்கவேண்டும் என்கின்றன நூல்கள்” என்றார். அவையில் எவரும் அதைக் கேட்டதாக காட்டிக்கொள்ளவில்லை. பேரமைச்சர் “இந்நிலையில் முடிவெடுக்கவேண்டியவர் பேரரசியார் மட்டுமே. இந்த ஓலையை அவரிடம் அளிப்போம். இன்னும் பதின்மூன்று நாட்கள் மட்டுமே நமக்குள்ளன என்பதைத் தெரிவிப்போம்” என்றார். அவையிலிருந்தவர்கள் அதை பெருமூச்சுடன் தலையசைத்து ஆமோதித்தனர்.
பலபத்ரர் தன் இல்லத்துக்குத் திரும்புகையில் கணிகர்வீதியின் மூன்றுமுனையில் இருந்த சின்னஞ்சிறு ஆலயத்தருகே ரதத்தை நிறுத்தினார். உள்ளே ஒரு கையில் ஒருமை முத்திரையும் மறு கையில் அறிவுறுத்தும் முத்திரையுமாக சிறிய கற்சிலையாக அஜபாகன் அமர்ந்திருந்தான். அருகே கல்லகலில் சுடர்மணி அசையாமல் நின்றது.

அந்த துயரம் நிறைந்த கண்களையே சிலகணம் பார்த்துநின்ற பலபத்ரருக்கு தெய்வங்களின் கண்களில் துயரம் மட்டுமே இருக்கமுடியும் என்று பட்டது. ஏனென்றால் அவை முடிவற்ற காலத்தில் மானுடவாழ்க்கையை பார்த்துநிற்கின்றன.

1/7/14

166 .ம்ருத்யுஞ்ஜய மகரிஷி கோத்ரம்


141 .ப்ருகு மகரிஷி கோத்ரம்

131ல் கண்ட பிருகுவும் இவரும் ஒருவரே.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கல்கிதவரு :- கல்கி அவதார பூசனை செய்பவர். 

கிணிபள்ளிதவரு :- கிணிபள்ளி என்னும் ஊரினர். 

குவ்வலதவரு :- சிட்டுக் குருவிக்கு உணவிடும் வழக்கம் கொண்டவர். 

கொனபலிதவரு :- கொனபலி என்னும் ஊரினர். 

சிம்மவாஹனதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி ஆலயத்திற்குச் சிம்மவாகனம் தந்தவர். 

சீலவந்ததவரு :- நற்குண சீலர்கள். 

சில்பதவரு :- சிற்ப சாஸ்திரத்தில் வல்லவர்கள். 

சிவபுஜங்கதவரு :- சிவபிரானின் புஜத்தில் ஆபரணமாக விளங்குவது நாகம். அந்நாகத்தினைப் பூசிப்பவர். தோளில் சிவலிங்க வடிவிலான ஆபரணத்தை அணிபவர். 

சொக்கதவரு :- தூய்மை மிக்கவர் - சொக்கத் தங்கம் என்றால் கலப்பில்லாத தங்கம் என்று பொருள். அதுபோல் இவர்கள் கலப்பு இல்லாத தூயகுணம் கொண்டவர். 

தந்துலதவரு :- நூல் மந்தரித்துத் தருபவர். 

தாம்பூலார்ச்சனதவரு :- தாம்பூலத்தினால் அர்ச்சனை செய்பவர். 

தேவபக்திதவரு :- தெய்வ பக்தி மிக்கவர். 

நாகதேவியவரு :- நாகதேவி வழிபாடு செய்பவர். மூத்த குழந்தைக்கு ஆணாயின் நாகப்பன் என்றும், பெண்ணாயின் நாகம்மா, நாகவல்லி என்றும் பெயர் வைப்பதை வழக்கமாகக் கொண்டவர். 

பிட்டகூடினவரு :- குழந்தைகளுக்கு உணவு வழங்கும் தருமத்தைச் செய்பவர். 

பூஷணதவரு :- ஆபரணம் அணிவதில் விருப்பம் கொண்டவர். குலத்திற்கு பூஷணம் போன்றவர்.

போக்கியதவரு :- போகபாக்யங்களுடன் வாழ்பவர். 

மட்டிகூடிதவரு :- மட்டிகூடி என்னும் ஊர்க்காரர். 

மான்யதவரு :- மன்னர்களிடம் மான்யம் பெற்றவர். 

மாவூரிதவரு :- மாவூர் என்னும் ஊரினர். 

பாபகதவரு :- நேர்வகிடு எடுத்துக் கூந்தலை அழகுபடுத்திக் கொள்பவர். 

குத்தலதவரு :- குத்தாலம் என்னும் ஊரினர். 

புத்திகூடிதவரு :- புத்திசாலித்தனம் மிக்கவர். 

மதிகுடதவரு :- இப்பெயர் மதிகூடிதவரு என்று இருக்கவேண்டும். அறிவாளிகள். 

கம்மதவரு, கரெதவரு, காளபினிதவரு, குண்ட்ளதவரு, கும்மதவரு, கெரெமலிதவரு, கொசனம்தவரு, சந்துதவரு, சம்பாதவரு, சலபத்துதவரு, சலவந்துதவரு, சிங்குலதவரு, சிடபாகலதவரு, சிரபத்துதவரு, சிலவன்தம்தவரு, சொகசுதவரு, தட்டிதவரு, நன்சகதவரு, நாகதேபிதவரு, நாசகதவரு, பகொம்தவரு, பாவகம்தவரு, பவ்வாகுதவரு, பிடனதவரு, பூசினதவரு, போகிதவரு, போதுலதவரு, மத்யகோடிதவரு, மாதாதவரு, மாதெம்தவரு, மாரம்தவரு, மாரெதவரு, மாவாதவரு, மிண்டாதவரு, மோசிம்தவரு, யிண்டிலதவரு, ஜக்குலதவரு, ஜிக்குலதவரு, ஜீகுலதவரு, ஸாஸ்கதவரு.

பகுதி ஒன்று : வேள்விமுகம் [ 5 ]

பகுதி ஒன்று : வேள்விமுகம்  [ 5 ]
குருஷேத்ரத்தின் அருகே இருந்த குறுங்காடு வியாசவனம் என்றழைக்கப்பட்டது. மூன்று தலைமுறைக்காலத்துக்கு முன்பு ஒரு கிருஷ்ணபட்ச இரவில் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர், சமுத்திரத்தின் எல்லை தேடி குட்டியை பெறச் செல்லும் திமிங்கிலம்போல, தன்னந்தனியாக இருளில் நீந்தி அங்கே வந்தார். குறுங்காட்டின் நடுவே ஓங்கி நின்றிருந்த கல்லாலமரத்தின் விழுதுகளுக்குள் ஒரு உறிக்குடிலைக் கட்டி அவர் குடியேறி பல ஆண்டுகள் கழித்துத்தான் மக்கள் அதை அறிந்தனர். வியாசரின் மாணவர்களான வைசம்பாயனரும் பைலரும் ஜைமினியும் சூததேவரும் அவரைத் தேடிவந்து அங்கே குடிலமைத்து தங்க ஆரம்பித்த பின்னர் மன்னனின் ஆணைப்படி அப்பகுதியில் வேட்டையும் விறகெடுத்தலும் தடைசெய்யப்பட்டது. அந்தக்காடு வியாசவனம் என பெயர்கொண்டது.
அங்கே அவர் தன் குருதியில் பிறந்து காடாகத் தழைத்து பின்பு குருஷேத்ர ரணபூமியில் இறந்து அழிந்த அனைவரையும் உயிர்த்தெழச் செய்வதறகான மாபெரும் தவமொன்றில் ஈடுபட்டிருப்பதாக சூதர்கள் நாடெங்கும் பாடித்திரிந்தனர். வெண்கலையணிந்த படைப்புத்தெய்வமே வந்து வியாசரிடம் அவரது விருப்பம் பிரபஞ்சவிதிகளுக்கு முரணானது என்று வாதிட்டதாகவும், அப்படியென்றால் எனக்கென ஒரு பிரபஞ்சத்தையே உருவாக்கிக் கொள்கிறேன், உனக்கென அதிலொரு கலைவனத்தையும் அளிப்பேன் என அவர் பதில் சொன்னதாகவும் பாணர்கள் பாடினார்கள். அவரைக் கண்ட நினைவிருந்த தலைமுறையெல்லாம் மறைந்தபின்பு உயிருடனிருக்கையிலேயே அவர் ஒரு புராணமாக ஆனார்.
சூதர்களின் கதைப்பாடல்கள் இவ்வாறு பாடின. போர்முடிந்து வீரமரணமடைந்தவர்களுக்கெல்லாம் நீர்க்கடன்களும் முடிந்தபின்னர் வியாசர் குருஷேத்ரக் களத்துக்குச் சென்றார். காலைவெளிச்சத்தில் செம்மண்பூமி கருமைகொள்ளும்படி நாய்களும் நரிகளும் கழுதைப்புலிகளும் நெரிந்துபரவி கூச்சலிட்டு பூசலிடுவதைக் கண்டு திகைத்து நின்றார். வானத்தை கரியகாடொன்றின் இலையடர்வு போல சிறகுகளால் மூடியபடி கழுகுகளும் பருந்துகளும் காக்கைகளும் பறந்துச் சுழன்றன. அங்கே நடந்துகொண்டிருந்தது மானுடத்தின் மீதான மாபெரும் வெற்றியின் உண்டாட்டு என உணர்ந்து கால்கள் தளர்ந்து அமர்ந்துகொண்டார்.
அதன்பின் வியாசர் குருஷேத்திரத்தை விட்டு விலகிச்செல்வதையே தன் இலக்காகக் கொண்டு பாரதவர்ஷமெங்கும் அலைந்தார். பனிமுடிகள் சூழ்ந்த இமையத்தின் சரிவுகளிலும் மழையும் வெயிலும் பொழிந்துகிடந்த தென்னகச்சமவெளிகளிலும் வாழ்ந்தார். கற்கக்கூடிய நூல்களையெல்லாம் கற்றார். மறக்கமுடிந்தவற்றையெல்லாம் மறந்தார். அத்தனைக்குப் பின்னரும் குருஷேத்திரத்தின் கனவுருத்தோற்றம் அவருக்குள் அப்படியேதான் இருந்தது. அவருக்குள்ளும் வெளியிலும் வீசிய எந்தக் கொடுங்காற்றும் அந்த ஓவியத்திரையை அசைக்கவில்லை.
மூன்று கடல்களின் அலைகளும் இணைந்து நுரைத்த குமரிமுனையில் நெடுந்தவ அன்னையின் ஒற்றைக்காலடி படிந்த பாறையுச்சியில் அமர்ந்து அலைகளை நோக்கி அமர்ந்திருந்தபோது அவர் தன்னுள் மோதும் மூன்றுகடல்களைக் கண்டுகொண்டார். நூறுநூறாயிரம் சொற்களுக்கு அப்பாலும் அவருடலில் எஞ்சியிருந்த மீன்மணம் கண்டு கீழே நீலநீரலைகளில் மீன்கணங்கள் விழித்த கண்களுடன் வந்து நின்று அலைமோதின. கண்களை மூடி அவர் யோகத்திலமர்ந்தபோது மீன்கள் ஒவ்வொன்றாக விலக, அவருக்குள்ளிருந்து மறைந்த அத்தனை சொற்களும் சென்ற வெளியில் நிறைந்த ‘மா’ என்ற முதற்சொல்லை கண்டடைந்தார்.
அங்கிருந்து கிளம்பி தண்டகாரண்யம் சென்று அடர்கானகத்தில் மனிதக்கண்கள் படாமல் பொழிந்துகொண்டிருந்த பாலருவிக்கரையில் குடிலமைத்து அந்தப்பேரொலியில் இருந்து அடுத்தசொல்லை அடையமுயன்றார். அதைத்துறந்து கங்கைச்சமவெளியில் சீறும் மழையிலும், இமையத்தின் பனிச்சரிவுகளிலும், பாஞ்சாலத்துக்கு அப்பால் விரிந்த மணல்வெளியின் வெங்காற்றிலும் அச்சொல்லைத்தேடி அலைந்தார்.
நூறாண்டுக்காலம் அந்த ஒற்றைச்சொல்லுக்காக தேடிய பின்னர் மனம்சோர்ந்து காளிந்தி நதிக்கரையில் தன்னுடைய அன்னையின் குலத்தவர் வாழும் கிராமத்தை சென்று சேர்ந்தார் மகாவியாசர். அங்கே அவரை எவருமறிந்திருக்கவில்லை. அவரது உடலில் எழுந்த மீன்வாசனையை முகர்ந்த குலமூத்தார் அவரை தங்களவர் என அடையாளம் கண்டனர். அவர் பிறந்த யமுனைத்தீவு என்னும் மணல்மேட்டிலேயே ஒரு குடிலமைத்து மீனவர்கள் படகில் கொண்டுவந்து கொடுத்த ஊனுணவை உண்டு அங்கே வாழ்ந்தார். அன்னை என்ற ஒற்றைச்சொல்லால் மட்டுமே ஆனதாக இருந்தது அவரது அகம். அச்சொல்லே அனைத்தையும் அடக்கி அதுமட்டுமேயாகி குன்றாமல் கூடாமல் அப்படியே அவருள் கிடந்தது.
ஒரு தலைமுறைக்காலத்துக்குப்பின் யமுனையின் ஆழத்திலிருந்து ஒரு வெள்ளிமீன் வானத்திலிருந்து மின்னலிறங்குவதுபோல மேலெழுந்து வந்தது. அந்த மீனின் பெயர் ஸித்தி. அதன் மகளாகிய அத்ரிகையின் வயிற்றில்தான் வியாசனின் அன்னையாகிய மச்சகந்தி பிறந்தாள். யமுனையின் ஆழத்தில் வாழும் மரணமற்ற அந்தத் தாய்மீனின் கருவறைக்குள்ளிருந்துதான் கோடானுகோடி மீன்கள் பெருகி யமுனையை நிறைத்துக்கொண்டிருந்தன.
மேலே வந்த அன்னை இளஞ்சூரிய ஒளியில் நீர்ப்பரப்பிலிருந்து எழுந்து பறந்து மீண்டும் நீரில் விழுந்துமறைந்தாள். அந்த ஒளியின் கணத்தில் கிருஷ்ணதுவைபாயன மகாவியாசனின் அகத்திலிருந்த ஒற்றைச்சொல்லில் இருந்து மீதி அத்தனை சொற்களும் பிறந்து வந்து அவர் சித்தத்தை நிறைத்தன. அந்தச் சொற்களஞ்சியத்துடன் அவர் மீண்டும் குருஷேத்ரம் நோக்கி வந்தார். மீண்டும் அந்த ரணபூமி மீது நின்றார். சடலங்கள்மீதும் உடைந்த ரதங்கள் மீதும் துருவேறிய ஆயுதங்கள் மீதும் மண்மூடியிருந்தது. முந்தைய இளமழையில் அந்த மண்பரப்பின் மீது பசும்புல் முளைத்து மெல்லியகாற்றில் அலைபாய்ந்தது.
ஆயிரம் கதைகளின் வழியாக சூதர்களின் பாடலில் வாழ்ந்த வியாசர் அன்றுகாலை தன் பெருங்காவியத்தின் கடைசிச்சொற்களை எழுதிமுடித்தார். அவர் வியாசவனத்தில் குடியேறிய அன்று தன்னுள் எழுந்த சொல்லலைகளுடன் அமர்ந்திருக்கையில் புதர்களை விலக்கி வந்த மதகளிறு ஒன்று தலைகுலுக்கி, காதுகளை விசிறி, துதிக்கை சுழற்றி, ஓங்காரமெனப்பிளிறி, அவர் இருந்த கல்லாலமரத்தைக் குத்தியது. திரும்பி தலையை எடுத்து மேலும் இருமுறை ஓங்காரமெழுப்பி அது பின்வாங்கியபோது அதன் தந்தங்களில் ஒன்று ஒடிந்து மரத்தில் பதிந்திருப்பதைக் கண்டார் மகாவியாசர். அதை எடுத்து சிவந்த மென்மணல் விரிந்த கதுப்பில் ஓம் என எழுதினார். அதுவே அவருடைய காவியத்தின் முதல்சொல்லாக அமைந்தது.
ஒற்றைக்கொம்புள்ள கணபதியை தன்முன் நிறுவி அவர் எழுதிய காவியத்தின் கடைசிச்சொல்லாகவும் ஓங்காரமே அமைந்தது. அந்த ஒலி அவருள் மட்டுமே ஒலித்தது. முழுமையிலிருந்து முழுமைநோக்கி வழிந்த காவியத்தை எழுதி நிறுத்திய தாழை மடலை மதகளிற்றுமுகத்தானின் மண்சிலைக்கு முன்னால் வைத்துவிட்டு மெலிந்த கைகளைக் கூப்பியபடி கண்களிலிருந்து கண்ணீர் சொட்ட அமர்ந்திருந்தார் வியாசர். விடிந்துவிட்டதைச் சொல்ல அவரது மாணவர் பைலர் குடிலுக்குள் வந்தபோது குறுகிய உடலுடன் அவர் ஒடுங்கி அமர்ந்து மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். பைலர் மெல்ல வந்து தாழை மடலைக் கையிலெடுத்து வாசித்தார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் சொட்ட ஆரம்பித்தது. வெளியே காத்திருந்த ஜைமினியும் உள்ளே வந்து, பைலரின் உணர்ச்சியிலிருந்தே ஊகித்துக்கொண்டு அவரும் கண்ணீர்விட ஆரம்பித்தார்.
அன்று வியாசவனத்தில் ஒரு திருவிழா கூடியது. மூன்று சீடர்களும் அவர்களின் மாணவர்களும் சேர்ந்து வியாசவனத்தின் அத்தனை குடில்களையும் ஈச்சங்குருத்துக்களாலும் தளிரிலைகளாலும் மலர்களாலும் அலங்கரித்தனர். மையக்குடிலில் பட்டுமணல் விரித்து நடுவே கணபதியை நிறுவி அவர் காலடியில் வைத்த செம்பட்டுப்பீடத்தில் அடுக்கடுக்காக காவியச்சுவடிகளைக் குவித்துவைத்து அருகே அகல்விளக்கை ஏற்றிவைத்தனர். அது சித்திரை மாதம் முழுநிலவு நாள். இனி என்றென்றும் ஞானம் விளையும் தருணமாகவே அது எண்ணப்படும் என்றார் பைலர். இந்த நாளில் குருநாதரின் பாதங்களைப்பணிந்து அவரளித்த ஞானத்திற்குக் கைமாறாக சுயத்தை அர்ப்பணம் செய்யவேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தனர்.
அப்போது அஸ்தினபுரியிலிருந்து நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் வைசம்பாயனரும் அமைச்சர் பத்மபாதரும் வந்து வியாசவனத்தில் இறங்கினர். பத்மபாதருக்கு வைசம்பாயனர் வியாசரின் வரலாற்றையும் அவரைப்பற்றிய சூதர்களின் கதைகளையும் சொல்லிக்கொண்டு வந்தார். பாரதத்தில் வாழும் ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவர் வியாசர் என்றார் வைசம்பாயனர். மாபலி, அனுமன், விபீஷணன், பரசுராமன், கிருபர், அஸ்வத்தாமா, வியாசர் என அவர்களை சூதர்களின் பாடல்கள் பட்டியலிடுகின்றன. எதிர்ப்பால், பணிவால், நம்பிக்கையால், சினத்தால், குரோதத்தால், பழியால் அழிவின்மை கொண்ட அவர்கள் நடுவே கற்பனையால் காலத்தை வென்றவர் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர்.
வியாசவனத்துக்குள் நுழைந்ததும் பைலரும் ஜைமினியும் அவரை நோக்கி ஓடிச்சென்று கண்ணீருடன் ஆரத்தழுவிக்கொண்டனர். காவியம் முடிவுற்ற செய்தியைக் கேட்டதும் “இது விதிமுகூர்த்தம்போலும். அங்கே குருநாதரின் ஞானத்தை சோதிக்க ஒருவன் தென்திசையிலிருந்து வந்து நிற்கிறான்” என்றார் வைசம்பாயனர். வியாசரை அவ்வளவு தொலைவுக்கு ரதத்தில் கொண்டு செல்லமுடியுமா என்று பைலரும் ஜைமினியும் ஐயம் தெரிவித்தனர். “வேறு வழியில்லை. இன்றைய நாளில் அவரது குரல் அங்கே ஒலித்தாகவேண்டும்” என்றார் வைசம்பாயனர். “ரதத்தின் அசைவை அவர் உடல் அறியாதிருக்க தூளியில் அவரை கொண்டுசெல்லலாம். அன்னத்தூவிகள் செறிந்த மெத்தையும் உள்ளது”
குடிலுக்கு வெளியே பின்திண்ணையில் வியாசர் அமர்ந்திருப்பதை வைசம்பாயனர் கண்டு மௌனமாக வணங்கி நின்றார். மரணத்தை வென்றாலும் மூப்பை வெல்லமுடியாத உடல் தசை வற்றி காட்டுத்தீயில் எரிந்து எஞ்சிய சுள்ளி போலிருந்தது. ஒருகாலத்தில் தாடியாகவும் தலைமயிராகவும் விழுதுவிட்டிருந்த கனத்த சடைக்கற்றைகள் முழுமையாகவே உதிர்ந்துபோய், தேமல்கள் பரவிச் சுருங்கிய தோல்மூடிய மண்டைஓடு தெரிந்தது. ஒன்றுடன் ஒன்று ஏறிப்பின்னிய விரல்களில் நகங்கள் உள்நோக்கிச் சுருண்டிருக்க, கைகளிலும் கழுத்திலும் நரம்புகள் தளர்ந்த கொடிகள்போல் ஓடின. உள்ளடங்கிய வாயும் தொங்கிய நாசியும், சிப்பிகள்போன்று மூடிய கண்களுமாக அங்கே இருந்த அவருக்குள் அவர் வெகுதொலைவில் இருந்துகொண்டிருந்தார். வைசம்பாயனர் குருநாதரின் பாதங்களை வணங்கியபோது அவரது கண்கள் அதிர்ந்து பின்பு திறந்தன. கரிய உதடுகள் மெல்ல அசைந்தன.
வைசம்பாயனர் வியாசரிடம் அவரை அவைக்குக் கொண்டுசெல்ல அழைப்பு வந்திருப்பதைச் சொன்னார். “ஜரத்காருவின் மைந்தன் ஆஸ்திகன் வந்திருக்கிறானா?” என்றார் வியாசர். அது வைசம்பாயனருக்கு வியப்பளிக்கவில்லை. “ஆமாம் குருநாதரே….தங்கள் சொல்லுக்காக அங்கே அவை காத்திருக்கிறது” என்றார். செல்வோம் என வியாசர் கையசைத்தார்.
பத்மபாதரும் பைலரும் சேர்ந்து வியாசரை அவர் இருந்த கம்பளத்தோடு தூக்கி ரதத்தில் இருந்த பெரிய தூளிக்குள் வைத்தனர். அதற்குள் பரப்பப்பட்டிருந்த மெத்தைக்குள் சிறிய குழந்தைபோல அவர் சுருண்டு படுத்துக்கொண்டார். பைலரும் ஜைமினியும் ரதத்தின் பின்பக்கத்தில் ஏறிக்கொண்டனர். சாரதி மெதுவாக குதிரைகளைத் தட்டி அவற்றின் புட்டத்தில் கால்களால் உரசி சேதி சொன்னான். அவை பெருநடையாக செல்ல ஆரம்பித்தன. வியாசவனத்தைத் தாண்டியதும் வைசம்பாயனர் திரும்பிப்பார்த்தபோது வியாசர் வலதுகையின் கட்டைவிரலை வாய்க்குள் போட்டு சப்பியபடி இடதுகையால் துணியை அள்ளி மார்போடு சேர்த்துக்கொண்டு கருக்குழந்தை போல தூங்கிக்கொண்டிருந்ததைக் கண்டார். தாய்மையின் கனிவுடன் வைசம்பாயனர் போர்வையை மெல்ல இழுத்து வியாசரை நன்றாக போர்த்திவிட்டார்.
Vyasa
ஜனமேஜயனின் வேள்விமண்டப முற்றத்தில் அமைச்சர்களும் தளகர்த்தர்களும் காத்து நின்றனர். வியாசரின் ரதம் அணுகியதும் ஜனமேஜயன் வெளியே வந்து கைகூப்பியபடி நிற்க ஜைமினியும் பைலரும் சேர்ந்து வியாசரை கைகளில் தூக்கிக்கொண்டு வந்தனர். வியாசர் கண்மூடி கைகூப்பியபடி அவர்களின் கையில் குறுகி அமர்ந்திருந்தார். அவர்கள் உள்ளே வந்ததும் நிமித்திகன் செங்கோலைத் தூக்கி வாழ்த்தி குரல் கொடுத்தான். “பராசர முனிவரின் மைந்தர், குருவம்சத்து பிதாமகர், காவியஞானி, மகாவியாசர், கிருஷ்ண துவைபாயனர் வருகிறார்..” வேள்விமண்டபமும் வாழ்த்தி குரல் எழுப்பியது. முனிவர்களும் வைதிகரும் அவர்மேல் மலர்களையும் அட்சதையையும் தூவினார்கள். மலர்மழையில் அவர் நனைந்தபடி கண்மூடியவராக அமர்ந்திருந்தார்.
ஜனமேஜயன் “பிதாமகரின் பாதங்களில் என் மணிமுடியை வைக்கிறேன்” என்றார். “இங்கே ஒரு விவாதம் நடந்தது…” என்றார். ஆஸ்திகனை சுட்டிக்காட்டி மேலே அவர் பேசுவதற்குள் வியாசர் கையை மெதுவாகத் தூக்கி அவரை நிறுத்திவிட்டு சைகையால் ஆஸ்திகனை அருகே அழைத்தார். ஆஸ்திகன் அவர் அருகே சென்று அவர் பாதங்களை வணங்கினான். நடுங்கும் கரங்களை அவன் தலைமீது வைத்து “புகழுடன் இரு” என்று வியாசர் ஆசியளித்தார். பின்பு திரும்பி ஜனமேஜயனிடம் “இவன் பெருந்தவத்தாளான மானசாதேவிக்கு ஞானியான ஜரத்காருவில் பிறந்தவன். இவன் சொல்வதெல்லாமே உண்மை” என்றார்.
ஜனமேஜயன் திகைத்தவராக பின்னகர்ந்து தன் சிம்மாசனத்தின் மீது அமர்ந்துகொண்டார். ஆஸ்திகன் அவரை நோக்கி, “அரசே, நான் இங்கே வரும்போது வேறு எந்த நோக்கமும்  எனக்கு இருக்கவில்லை… முக்காலமும் மூவுலகும் அறிந்த என் அன்னை எனக்களித்த ஆணையை நிறைவேற்றவேண்டும் என்று மட்டும்தான் நினைத்தேன். ஆனால் அஸ்தினபுரத்துக்குள் வந்ததுமே நான் செய்யவேண்டியது என்ன என்று கண்டுகொண்டேன். என் தாயின் நோக்கத்தையும் புரிந்துகொண்டேன். ஜனமேஜயரே, உங்கள் நகரம் உயிரற்றதைப்போலக் கிடப்பதையே நான் கண்டேன். வீரம் இல்லாத காவலர்கள்… துடிப்பு இல்லாத பெண்கள்… துள்ளிக்குதிக்காத பிள்ளைகள்… இந்த நகரம் தோல்கிழிந்த பெருமுரசு போல எனக்குத் தோன்றியது. உங்களைத் தடுக்கவில்லை என்றால் இந்த உலகத்தையே இப்படி ஆக்கிவிடுவீர்கள் என்று அறிந்தேன். இந்தவேள்வியை நிறுத்த வேண்டியது என்கடமை என்று கொண்டேன்” என்றான்.
“நான் பிரம்மத்தின் இயல்பான சத்வ குணத்தை இங்கே நிலைநிறுத்த விரும்பினேன் ஆஸ்திகரே’ என்றார் ஜனமேஜயன். “அன்பும் அறமும் நன்மையும் நலமும் மட்டுமே மனுக்குலத்தில் வாழவேண்டுமென விழைந்தேன்”
ஆஸ்திகன் திரும்பி சபையைப் பார்த்தான் “இங்கே கபில முனிவரின் வழிவந்த சாங்கிய ஞானி எவராவது இருக்கிறீர்களா?” என்றான். ஒரு முனிவர் எழுந்து ”ஆம், நான் கபிலரின் நேரடி மாணவன். என்பெயர் சமரன்” என்றார். ஆஸ்திகன் “சொல்லுங்கள் சமரரே, கபிலர் என்ன சொல்கிறார்? இந்தப் புடவியின் விதி என்ன? இப்பூமி எதனால் ஆனது?” என்றான்.
சமரமுனிவர் “ஆதியிலிருந்தது ஒன்றே. முதல்முடிவற்ற, இதுஅதுவற்ற, முதலியற்கை. அது பிளவற்ற காலத்தில் இருந்தது. அதில் முதல் எண்ணமெனும் மஹத் உருவானது. அது இருப்பு எனும் அகங்காரமாகியது. அகங்காரம் முக்குணங்களாக மாறி அவை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டன. பிரபஞ்சப்பேரியக்கம் தொடங்கியது” என்றார்.
ஆஸ்திகன் திரும்பி ஜனமேஜயரிடம் “மாமன்னரே, சத்வ, ரஜோ, தமோ குணங்களுடன் இப்புடவி பிறந்து வந்தது. அவை சமநிலையில் இருப்பதன் பெயரே முழுமை. ஒன்று அழிந்தால்கூட அனைத்தும் சிதறி மறையும். நீங்கள் சத்வகுணத்தைத் தவிர பிறவற்றை அழிக்க நினைத்தீர்கள். அதன் வழியாக இவ்வுலகையே அழிக்கவிருந்தீர்கள். அதைத் தடுத்து நிறுத்துவதற்காகவே நான் தட்சனின் உயிரை கோரிப்பெற்றேன்” என்றான்.
ஜனமேஜயன் சினத்துடன், “நீங்கள் சொல்லும் தரிசனத்தை நானறியமாட்டேன். நான் கற்ற வேதாந்தம் அதைச் சொல்லவில்லை…ஆஸ்திகரே, நீங்கள் தப்பவிட்டது இருட்டை….தீமையை” என்றார். ஆஸ்திகன் உறுதியான குரலில், “இச்சை தீமையல்ல மாமன்னரே! அதன் மறுபக்கத்தால் சமன்செய்யப்படாத நிலையிலேயே அது அழிவுச்சக்தியாகிறது. இச்சை எஞ்சியிராத உலகத்தில் படைப்பு நிகழ்வதில்லை. அது மட்கிக்கொண்டிருக்கும் பொருள்” என்றான்.
ஜனமேஜயன் வியாசரை நோக்கி “பிதாமகரே நீங்கள்தான் எனக்கு வழிகாட்டவேண்டும்” என்று இருகைகளையும் விரித்தார். வியாசர் தன் முன் கிடந்த தட்சனை நோக்கி கையை நீட்டினார். ஆசியளிக்கக் குவிந்த கைபோன்ற கரிய படம் விரித்து தட்சன் அவர் முன் எழுந்து நின்றான்.
“நீ இல்லையேல் என் காவியமில்லை. இம்மண்ணில் வாழ்வும் இன்பமும் இல்லை. உனது தர்மத்தை நீ செய்வாயாக. உன் குலம் முடிவிலாது பெருகட்டும். இவ்வுலகமெங்கும் காமமும் அகங்காரமும் பொலியச்செய்வாயாக! ஆம், அவ்வாறே ஆகுக!” என மகாவியாசர் ஆசீர்வதித்தார். தட்சன் பின்னகர்ந்து நெளிந்து தன் வளையை நோக்கிச்சென்றான். அவனும் துணைவியும் மண்ணுக்குள் மறைந்தனர்.
வியாசர் திகைத்து நின்ற ஜனமேஜயனை நோக்கித் திரும்பினார். “குழந்தை, உன்னால் இப்போது புரிந்துகொள்ளமுடியாது” என்றார். “நான் புரிந்துகொள்ளவே இருநூறாண்டுகால வாழ்க்கை தேவையாகியிருக்கிறது….” என்றபின் “வைசம்பாயனரே” என்றார். வைசம்பாயனர் வந்து வணங்கி நின்றார். “என் காவியத்தைப் பாடுங்கள்” என்று வியாசர் ஆணையிட்டார்.
“எந்தப் பகுதியை?” என்று வைசம்பாயனர் கேட்டார். “கதையின் தொடக்கம் ஆசிரியனின் அகங்காரத்தில் அல்லவா? என்னிடமிருந்து அதைத் தொடங்குக!” என்றார் வியாசர். “என் அகங்காரம் திரண்டு முதிர்ந்து முத்தாகி உதிர்ந்த ஒரு தருணம். அந்த விதை முளைத்த வனம்தான் குருஷேத்ரமாகியது”
வைசம்பாயனர் சுவடியைப் பிரித்தார்.அனுஷ்டுப்பு சந்தத்தில் பதினெட்டு பர்வங்களாக இயற்றப்பட்டிருந்த பெருங்காவியத்தின் பெயர் ‘ஸ்ரீஜய’. அச்சுவடியை தன் தலைமேல் வைத்து வணங்கிய வைசம்பாயனர் ஓங்கிய குரலில் பாடினார். “நீரெனில் கடல், ஒளியெனில் சூரியன், இறையெனில் பிரம்மம், சொல்லெனில் வியாசனின் சொல்லேயாகும். அது அழியாது வாழ்க!”
‘ஆம் ஆம் ஆம்’ என்று அவை ஆர்ப்பரித்தது. வைசம்பாயனர் மனுக்குலம் அடைந்த முதற்பெரும் நூலின் வரிகளை பாட ஆரம்பித்தார்.