மகரிஷி வரலாறு புலப்படவில்லை.
அன்புடையீர் நல்வரவு ,
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.
இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.
இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.
தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)
நன்றி.
தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)
நன்றி.
1/4/14
பகுதி ஒன்று : வேள்விமுகம் [ 2 ]
பகுதி ஒன்று : வேள்விமுகம் [ 2 ]
வேசரதேசத்தில் புஷ்கரவனத்தில் அதிகாலையில் நாகர்குலத்தின் அரசியான மானசாதேவி தன் மகன் ஆஸ்திகனை எழுப்பி நீராடச்செய்து மரவுரியாடையணிவித்து, மான்தோல்மூட்டையில் உணவுக்கான வறுத்த புல்லரிசியும் மாற்று உடையும் எடுத்துவைத்துக்கட்டி, சுரைக்காய் கமண்டலத்தில் நீர் நிறைத்துவைத்து, நெற்றியில் குலதெய்வங்களின் மஞ்சள் குறியை அணிவித்து ”நீண்ட ஆயுளுடன் இரு. உன் வழிகளெல்லாம் சென்றுசேர்வதாக” என்று வாழ்த்தி விடைகொடுத்தனுப்பினாள். அப்போது அவளுடைய குலத்தின் அத்தனை பெண்களும் அவள் வீட்டின் முன் கூடியிருந்தனர். ஆலமரத்தடியில் அவர்களின் குலதெய்வங்களான நாகங்கள் கல்லாலான பத்திகளை விரித்து, கல்லுடல் பின்னி, கல்விழிகளால் பார்த்துக்கொண்டிருந்தன.
ஆறு வயதான ஆஸ்திகன் குனிந்து தன் அன்னையின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு தன் சிறுகால்களை எடுத்து வைத்து பசும்சாணி பூசிய படிகளில் இறங்கி நீலச்செண்பகமலர்கள் பாரித்துக்கிடந்த முற்றத்தைத் தாண்டி நடந்து ஊர்முனையில் மறைந்தபோது விம்மும் நெஞ்சுடன் அவள் பின்னால் ஓடிவந்து ஊர்மன்றின் அரசமரத்தடியில் நின்று கண்ணெட்டும் தூரம் வரை பார்த்திருந்தாள். மண்நிறமான மரவுரியும், கரிய குடுமியும் கண்ணிலிருந்து மறைந்த பின்புதான் அவள் அறிந்தாள், அவன் ஒருகணம்கூட திரும்பிப்பார்க்கவேயில்லை என்று.
ஆஸ்திகன் கிருஷ்ணையின் நீர்ப்பெருக்கை படகில் கடந்து சென்றான். அன்றிரவு கிருஷ்ணநகரத்தில் ஒரு சத்திரத்தில் தங்கினான். அங்கிருந்து மறுநாள் கிளம்பி வடக்குநோக்கி செல்ல ஆரம்பித்தான். பாரதத்தின் ஒவ்வொரு ஊரிலிருந்தும் அஸ்தினபுரிக்குச் செல்லும் ஒரு பாதை இருந்தது. இரவுகளில் மரத்தடிகளிலும் மழைபெய்யும்போது கோயில்மண்டபங்களிலும் கழித்தபடி கால்களில் புழுதிபடிய, சிவந்த சருமம் வெந்து கருக அவன் நடந்து சென்றுகொண்டே இருந்தான். மரவுரியணிந்த முனிகுமாரனை ஒவ்வொரு ஊரிலும் குடும்பத்தவர்கள் வந்து வணங்கி உணவும் நீரும் இடமும் அளித்து வழியனுப்பிவைத்தனர்.
அன்னை அவனுக்களித்தவை எல்லாம் வெறும் சொற்களாக இருந்தன. நதிகள், மலைகள், நகரங்கள், ஜனபதங்கள். ஒவ்வொன்றும் அவன் முன் சொல்லில் இருந்து இறங்கி விரிந்து பருவடிவம் கொண்டன. கிருஷ்ணையும் நர்மதையும் விந்தியமும் அங்கமும் மாகதமும் எல்லாம் அவனுக்குள் அறிதல்களாக மாறிக்கொண்டே இருந்தன. காளைகள் இழுக்கும் உப்புவண்டிகள் சேற்றில் சகடம் சிக்கி ஓசையிட்டு நகரும் பெருவணிகப்பாதைகள், இருபக்கமும் முட்புதர்கள் அரணிட்ட கானகப்பாதைகள், செந்நிற மழைநீர் சுழித்தோடும் காட்டாறுகள், கருமேகம்போல் திரண்டெழுந்த பாறைக்கட்டுக்கள், கால்நடைகள் கூடிய பட்டிகள், ஆலமரங்கள் எழுந்த ஊர்மன்றுகள், விழாக்கொண்டாடிய ஆலயமுற்றங்கள் அனைத்தையும் கடந்து சென்றுகொண்டிருந்தான்.
இருநூற்றெழுபது நாட்களுக்குப்பின் அவன் அஸ்தினபுரியின் பெருமதில்வளைவை சிறிய செம்மண்குன்று ஒன்றின் மேல் நின்று பார்த்தான். அவன் நடந்து வந்த ரதசாலை கீழே செந்நிறமாகச் சுழித்து காட்டை ஊடுருவிச்சென்றுகொண்டிருந்தது. புராணங்கள் வழியாக பாரதவர்ஷத்தின் ஒவ்வொரு குழந்தையும் மொழியறியும் நாளிலேயே அறிந்துகொண்ட அஸ்தினபுரியை அவன் கண்டான். இக்ஷுவாகு வம்சத்தின் மூதாதையான குருவில் இருந்து உருவாகிவந்த குருவம்சத்தின் தலைநகரம். நூற்றாண்டுகளுக்கு முன்னால் மாமன்னர் ஹஸ்தியால் மயன் வழிவந்த சிற்பிகளைக்கொண்டு அமைக்கப்பட்டது.
சிலகணங்கள் பார்த்துவிட்டு கீழே இறங்கி ரதசாலை வழியாக நடந்து கோட்டைவாசலை அடைந்தான். மேலே எழுந்து அத்திசையை முற்றாகவே மறைத்துக்கொண்டது சுவர். அவன் கண்ட நகரங்களில் எதிலும் அதற்கிணையான கோட்டை இருந்ததில்லை. பாதாளநாகம் போன்ற கரிய உடல் மீது புதுமழையில் முளைத்த பசும்புற்கள் காற்றில் சிலுசிலுக்க வளைந்து ஓங்கிக் கிடந்தது கோட்டை. கோட்டைக்கு முன்னாலிருந்த அகழிக்குள் முளைத்தெழுந்த நீர்மரங்கள் பசும்கிளைகளை கோர்த்துக்கொண்டு பச்சைத்தழைப்பு செறிந்து நின்றன. பாதை சற்றே எழுந்து விரியத் திறந்துகிடந்த கோட்டைவாசலுக்குள் சென்றது. இருபக்கமும் இருபது ஆள் உயரமான கோட்டைக்கதவுகள் திறந்து மண்ணில் புதைந்திருந்தன. கதவின் மரத்தடிகளை இணைத்த இரும்புப்பட்டைகள் துருவேறியிருந்தன. மரச்சிற்பங்கள் மேல் பச்சோந்திக்கால்கள் போல வேர் பதித்து படர்ந்து ஏறி பச்சை இலைகளை விரித்து காற்றிலாடி நின்ற கொடிகளுக்குள் யானைமத்தகங்களைத் தடுக்கும் பித்தளைக்குமிழ்கள் களிம்புப்பச்சை நிறத்தில் காய்கள்போலத் தெரிந்தன.
கோட்டைவாசலிலும் உள்ளே ரதவீதியிலும் எங்கும் காவல் இருக்கவில்லை.காலைவெயிலில் இளமழை பொழிந்துகொண்டிருக்க அவன் புறச்சாலையில் நடந்தபோது நகரமே அமைதியாக இருக்கக் கேட்டு பிரம்மசாபத்தால் தூங்கிக்கொண்டிருக்கும் பெருநகரமோ அது என ஐயம் கொண்டான். மழைப்பிசிர்கள் நின்று, நனைந்த கல்பரப்புகளும் இலைகளும் ஒளி விட்டுக்கொண்டிருப்பதைக் கண்டபடி அவன் நகரத்தெருக்கள் வழியாக சென்றான். சுண்ணம்சேர்த்துக்கட்டிய சுவர்களும், செவ்வரக்கு பூசிய மரப்பட்டைக்கூரைகளும் கொண்ட மூன்றடுக்கு மாளிகைகள் இருபக்கமும் அணிவகுத்த அகன்ற தெருக்களில் குழந்தைகள் நீரில் நீந்தும் பரல்மீன்கள் போல பெரிய கண்களுடன் ஓசையே இல்லாமல் விளையாடின. வீட்டுத்திண்ணைகளில் யாழ்களுடன் இருந்தவர்கள், தயிர்கொண்டுசென்ற ஆய்ச்சியர் அனைவரும் கனவுருக்கள் போல அமைதியாக அசைந்துகொண்டிருந்தனர்.
அஸ்தினபுரியில் மாமன்னன் ஜனமேஜயன் ஐந்துமாதங்களாக நடத்திவந்த மாபெரும் பூதயாகம் ஒன்று அன்று முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. நகரமெங்கும் பாரதவர்ஷத்தின் அனைத்துப்பகுதிகளிலிருந்தும் வந்திருந்த வைதிகர்களும் முனிவர்களும் நிறைந்திருந்தனர். அவர்கள் தங்குவதற்காக நகருக்கு வெளியே உபவனத்தில் குடில்கள் கட்டப்பட்டிருந்தன.
ஆஸ்திகன் அங்கே தன்னை வரவேற்றுச் சென்ற சிற்றமைச்சனிடம் ”யாயாவர வைதிக குலத்தில் உதித்தவரும் கஸ்யப கோத்திரத்தைச் சேர்ந்தவருமாகிய ஜரத்காரு ரிஷியின் மைந்தன் நான். நைஷ்டிக பிரம்மசாரி. என் பெயர் ஆஸ்திகன்” என்று அறிமுகம் செய்துகொண்டான். அவர் அவனை வணங்கி அழைத்துச்சென்று, ஈச்சைஓலைகளால் கூரை வேய்ந்து மரப்பட்டைகளால் சுவரமைக்கப்பட்ட அழகிய சிறுகுடில்களில் ஒன்றில் தங்கச்செய்தார். அங்கேயே ஓடிய சிறுநதியில் நீராடி புத்தாடை அணிந்து வழிபாடுகளை முடித்துக்கொண்டு ஆஸ்திகன் ஜனமேஜயனின் வேள்விச்சாலைக்குச் சென்றான்.
அன்று வேள்வியின் இறுதிநாள் என்பதனால் நகரமே வேள்விச்சாலை நோக்கி சென்றுகொண்டிருந்தது. பொன்னூல் பின்னல்கள் கொண்ட வண்ண ஆடைகள் அணிந்து பொன்னணிகளாலும் மலர்களாலும் அலங்கரித்துக்கொண்ட பெண்கள். சிகையில் மயிற்பீலிவைத்து மலர்சுற்றிக்கட்டி பீதாம்பரம் அணிந்த குழந்தைகள். கச்சை வேட்டிகட்டி சரிகை அந்தரீயத்தை வலப்பக்கமாகச் சுற்றி குடுமியில் மலர்க்கொத்துக்கள் அணிந்த ஆண்கள். மெல்ல கனைத்து வழிகேட்ட மாந்தளிர்நிறமான குதிரைகள் சாமரவாலைச் சுழற்றியபடி இறுகி அசையும் தசைகளுடன் குளம்புகள் தடதடக்க கடந்துசென்றன.
விதவிதமான சிறிய வண்டிகளில் ஏதேதோ பொருட்கள் சென்றுகொண்டிருந்ததை ஆஸ்திகன் கண்டான். தாமிர உருளி திறந்த கவந்த வாயுடன் கணகணத்து ஒரு கைவண்டியில் இழுபட்டுச் சென்றது. பெரிய நிலவாய் நிறைய நெய் மூடியிலிருந்த சிறிய ஓட்டைவழியாக அவ்வப்போது சற்று கொப்பளித்துத் துப்பியபடி ஒற்றைமாட்டுவண்டியில் சென்றது. இன்னொரு பெரிய பாத்திரத்தின் இரு காதுகள் வழியாகவும் மூங்கிலைச் செலுத்தி இருவர் தூக்கிக்கொண்டு சென்றனர். தலைச்சுமையாக ஐந்துபேர் தாமரைமலர்களை கட்டி எடுத்துக்கொண்டு சென்றனர். அவர்களின் தோள்களில் தாமரைநீர் சொட்டிக்கொண்டிருந்தது.
வானத்தில் எழுந்ததுபோல ஜனமேஜயனின் அரண்மனைமுகடு தெரிந்தது. மரப்பலகையால் செய்யப்பட்டு வெண்சுண்ணமும் அரக்கும் கலந்து பூசப்பட்ட கவிழ்ந்த தாமரைவடிவமான கூரைக்குவை, மண்ணிலிறங்கிய மேகக்குமிழ்போல. அதன் மேல் குருவம்சத்தின் அமுதகலசச் சின்னத்தைத் தாங்கிய பெரிய பொன்னிறக்கொடி துவண்டு அசைந்தது. அதைச்சுற்றி தாமரைக்கூட்டங்கள் போல வெண்ணிறமான சிறியமுகடுகள். அரண்மனையின் உள்கோட்டை செம்மண் நிறத்தில் வட்டமாக சுற்றிவளைத்திருக்க அதன் நுழைவாசலின் மரத்தாலான தோரண வளைவுக்குமேல் தொங்கிய காவல்மணியாகிய காஞ்சனம் தாலிச்சின்னம்போல பொன்னிறமாக சுடர்விட்டுக்கொண்டிருந்தது.
அரண்மனைக்குச் செல்லும் பாதையில் இருந்து பிரிந்து வலப்பக்கமாகச் சென்ற பாதை இருபக்கமும் மூங்கில்காடுகள் கொண்டதாக இருந்தது. மூங்கில்செறிவுக்கு அப்பால் பேச்சொலிகளும் உலோகச்சத்தங்களும் கலந்து முழங்க வண்ண அசைவுகள் அலையடித்தன. வேள்விப்புகையின் வாசனை எழ ஆரம்பித்தது. ஈச்சை ஓலைகளைமுடைந்து செய்த தட்டிகளாலும் கோரைப்புல்பாய்களாலும் மரப்பட்டைநார் நெய்து செய்யப்பட்ட திரைகளாலும் கட்டப்பட்டிருந்த வேள்விக்கூடத்தின் வட்டவடிவமான மைய அரங்கை ஒட்டி இருபக்கமும் துணைப்பந்தல்கள் இணைக்கப்பட்டிருந்தன. பந்தல்களைத் தாங்கிய வண்ணம்பூசப்பட்ட மூங்கில்தூண்கள் ஈச்சங்குலைகளாலும் தளிரோலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு பசுங்காடுபோலச் செறிந்திருந்தன.
பந்தலின் மறுபக்கத்தில் கார்மிகர்கள் வரும் பாதை. அதன் வழியாக மூங்கில்களில் தொங்கிய கூடைகளில் மலர்களும் இலைகளும் நெய்யும் தூபங்களும் வந்துகொண்டிருந்தன. அரசகுலத்தவர் வரும் பாதை எதிரே இருந்தது. வலப்பக்கம் வாழைப்பூ போல செந்நிற மரவுரியாடை அணிந்த முனிவர்கள். இடப்பக்கம் சங்குக்குவியல்கள் போல வெண்ணிற ஆடையணிந்த வைதிகர்கள். நடுவே சென்று மேலும் இரண்டாகப் பிரிந்த பந்தல்களில் ஒருபக்கம் செந்நிற தலைப்பாகைகள் அணிந்த சத்ரியர். மறுபக்கம் பொன்னிறத் தலைப்பாகைகள் அணிந்த வைசியர். அப்பால் நீலநிறத்தலைப்பாகை அணிந்த சூத்திரர். ஒவ்வொரு பகுதியிலும் பெண்களுக்கான இடம் தனியாக பகுக்கப்பட்டிருந்தது.
வேள்வியதிபரான வைசம்பாயனர் வேள்விக்குளத்தின் வலப்பக்கம் மணைமேல் விரிக்கப்பட்ட தர்ப்பைப்பரப்பு மேல் அமர்ந்திருந்தார். ஆஸ்திகன் அருகே சென்று அவரை வணங்கினான். தன் குலத்தையும் தந்தையின் பெயரையும் சொன்னபின்பு முனிவர்களின் இடத்துக்குச் சென்று அமர்ந்துகொண்டான். நாற்பதுநாட்களுக்கு முன்பு அரணிக்கட்டையைக் கடைந்து உருவாக்கப்பட்ட நெருப்பு வேள்விக்குளத்தில் ஹோதாக்களால் ஒவ்வொரு கணமும் ஊட்டப்பட்டு பொன்னிறத்தில் எழுந்தாடிக்கொண்டிருந்தது.
வெளியே மங்கல வாத்தியங்கள் முழங்கின. பல்லியமும் கொம்பும் பெருமுழவும் மணியும் சேர்ந்து கலந்த ஒலியுடன் வேதபண்டிதர்களின் வேதகோஷம் இணைந்து ஒலித்தது. முதலில் கட்டியம் சொல்லும் கோல்காரன் உள்ளே வந்தான். கையில் பெரிய பொன்னாலான தலைக்கோலை வைத்திருந்தான். மிடுக்குடன் உள்ளே வந்து அவைமேடை மேல் ஏறி நின்று தலைக்கோலை மேலே தூக்கி உரக்கக் கூவினான் “ஜெயவிஜயீபவ! அஸ்தினபுரத்தை ஆளும் வேந்தர், அத்திரி முனிவரின் கொடிவழிவந்தவர், குருகுலத்தோன்றல் பரிட்சித் மாமன்னரின் புதல்வர், மண்ணுக்கும் விண்ணுக்கும் இனியவர், பாரதவர்ஷத்தின் தலைவர் ஜனமேஜய மகாசக்ரவர்த்தி எழுந்தருள்கிறார்!”
மங்கலவாத்தியக்குழு முதலில் உள்ளே வந்தது. அதைத்தொடர்ந்து பூரண கும்பம் ஏந்திய வைதிகர் நீர்தெளித்துக்கொண்டு வந்தனர். பின்னர் காவல் வீரர்கள் கவச உடை அணிந்து ஆயுதங்களுடன் வந்தனர். தம்பியரான சுதசேனரும் உக்ரசேனரும் பீமசேனரும் உருவிய வாட்களுடன் சூழ்ந்து வர, முன்னால் புரோகிதர்கள் வேதகோஷமிட்டு அட்சதை வீசி வாழ்த்த, அரங்கிலிருந்த முனிவர்கள் மலர்வீசி ஆசியளிக்க, ஆரங்களிலும் காதுகளின் குண்டலங்களிலும் புஜகீர்த்திகளிலும் கங்கணங்களிலும் கச்சைமணியிலும் செம்மணிகள் சுடர்விட அக்னிதேவன் எழுந்தருளியது போல் ஜனமேஜய சக்ரவர்த்தி பட்டத்தரசி வபுஷ்டையுடன் உள்ளே வந்தார்.
1/3/14
பகுதி ஒன்று : வேள்விமுகம் [ 1 ]
- பகுதி ஒன்று : வேள்விமுகம் [ 1 ]
வேசரதேசத்தில் கருநீல நதியோடும் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் நாகர்குலத் தலைவியான மானசாதேவி அந்தியில் குடில் முன்பு மண் அகலை ஏற்றிவைத்து, தனக்கு ஜரத்காரு ரிஷியில் பிறந்த ஒரேமகன் ஆஸ்திகனை மடியில் அமரச்செய்து கதை சொல்ல ஆரம்பித்தாள். நாகர்குலத்தவர் வாழும் சின்னஞ்சிறு மலைக்கிராமத்தை சுற்றிலுமிருந்த காட்டிலிருந்து வந்த கடும்குளிர் வளைத்துக்கொள்ள ஆரம்பித்திருந்த நேரம். இரவுலாவிகளான மிருகங்களும் பறவைகளும் எழுப்பும் ஒலிகள் இணைந்து இருட்டை நிறைத்திருந்தன. பெரிய கண்கள் கொண்ட சிறுவன் தன் அன்னையின் மடியின் அணைப்பையும் தன் தலைமேல் படும் அவள் மூச்சின் வருடலையும் உணர்ந்தபடி முற்றம் வரை சென்று விழுந்து அங்கு நின்ற செண்பகத்தின் அடிமரத்தை தூண்போலக் காட்டிய அகல்விளக்கின் செவ்வொளிக்கு அப்பால் தெரிந்த இருட்டை பார்த்துக்கொண்டிருந்தான்.
மானசாதேவி இருளைப்பற்றித்தான் சொல்ல ஆரம்பித்தாள். இருள் முதல்முடிவற்றது. ஆதியில் அதுமட்டும்தான் இருந்தது. வானகங்கள் அனைத்தும் அந்த இருளுக்குள்தான் இருந்தன. அந்த இருள் ஒரு மாபெரும் நாகப்பாம்பின் வடிவிலிருந்தது. கற்பனையும் கனவும் தியானமும் எட்டமுடியாத அளவுக்கு நீளம்கொண்ட அந்த நாகம் கண்களற்றது. ஏனென்றால் அது பார்ப்பதற்கென அதுவன்றி ஏதுமிருக்கவில்லை. அது தன் வாலை வாயால் கவ்வி விழுங்கி ஒரு பெரிய வளையமாக ஆகி அங்கே கிடந்தது. அந்த ஆதிநாகத்துக்கு பெயர் இருக்கவில்லை. ஏனென்றால் அதை அழைக்க எவரும் இருக்கவில்லை. ஆகவே அது தன்னை நாகம் என்று அழைத்துக்கொண்டது. நான் இல்லை என அதற்குப்பொருள்.
அதன்பிறகு அதன் அகத்தில் ஒரு இச்சை பிறந்தது. அந்த இச்சை இரண்டு கண்களாக அதன் முகத்தில் திறந்தது. அந்தக் கண்களில் ஒன்று எரிந்து சுடர்விடும் செந்நிறமான ஆதித்யனாகவும் இன்னொன்று வெண்ணிற ஒளிவிடும் குளிர்ந்த சந்திரனாகவும் இருந்தன. அந்த விழிகளால் அந்த நாகம் தன்னைத்தானே பார்த்துக்கொண்டது. ‘இது நான்’ என சொல்லிக்கொண்டது. ‘இருக்கிறேன்’ என்று அறிந்தது. ‘இனி?’ என்று கேட்டுக்கொண்டது. அந்தச் சொற்கள் அதனுள் அகங்காரமாக மலர்ந்தபோது அதன் தலையில் படம் விரிய ஆரம்பித்தது. பின்பு பல்லாயிரம் கோடி தலைகள் முளைத்தெழுந்து படம்விரித்தன. அவற்றில் பலகோடி கண்கள் முளைத்தன. அவையெல்லாம் ஆதித்யர்களும் சந்திரர்களுமாக ஆகி இருளெங்கும் மின்ன ஆரம்பித்தன. அந்தத் தலைகளில் இருந்து நீண்டு பறந்த செந்நிறமான நாக்குகள் தழல்களாயின.
குழந்தை குளிர்கொண்டவன் போல தன் உடலைச் சுருக்கி கைகளை காலிடுக்கில் செருகிக்கொண்டான். அவன் அன்னை அவனுடைய மென்மயிர்பரவிய தலையை தன் கைகளால் வருடிக்கொண்டு சொல்ல ஆரம்பித்தாள்.
அந்த முதல்நாகத்தின் உடல் என்றென்றும் அசைவே இல்லாமல்தான் கிடந்தது. ஏனென்றால் வானத்திலிருந்த இடத்தை முழுக்க அதுதான் நிறைத்திருந்தது. பலகோடி யுகங்களுக்குப்பின்னால் அது தனக்குள்ளேயே முதல் அசைவை நிகழ்த்திக்கொண்டது. அதற்காக தன்னை அது இரண்டாக பிரித்துக்கொண்டது. தன்னுடைய உடலின் மேல்பகுதியை கருமையாகவும் கீழ்ப்பகுதியை வெண்மையாகவும் ஆக்கியது. முடிவில்லாமல் சுருண்டு கிடந்த தன் உடலுக்குள்ளே அது ஊர்ந்துகொள்ள ஆரம்பித்தது. கருமை வேகம் மிக்கதாக இருந்தது. அதை ராஜஸ குணம் என்று அது அறிந்தது. வெண்மை நிதானமானதாக இருந்தது. அதை சத்வகுணம் என்று அது அறிந்தது. மீண்டும் கோடானுகோடி ஆண்டுகளானபோது அந்த இரு குணங்களும் நாகத்திலிருந்து தோலாக உரிந்து தனியாகப் பிரிந்தன. ஆதிநாகம் அவற்றை தன் குழந்தைகள் என அறிந்தது. அவற்றை அது ‘நீங்கள் வளருங்கள். உங்கள் வம்சம் அழிவற்றதாக அமைவதாக’ என்று வாழ்த்தியது.
கரியநிறமான நாகத்தின் பெயர் தட்ச பிரஜாபதி. இமையாத கண்கள் கொண்டவன் என்று பொருள். வெண்ணிறமான நாகத்தின் பெயர் மரீசி பிரஜாபதி. வெண்ணிற ஒளி என்று அவனுக்குப் பெயர். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு பலகோடியாண்டுகள் வானத்தை நிறைத்து விரிந்துகிடந்தார்கள். அவர்களால்தான் திசைகள் உருவாகி வந்தன. தட்சனின் தலை கிடந்த எல்லை மேற்கு என்றும் மரீசியின் தலை கிடந்த எல்லை கிழக்கு என்றும் அறியப்படலாயிற்று. கிழக்குக்கும் மேற்குக்கும் காவலாக வடக்கும் தெற்கும் உருவாகிவந்தன.
தழுவித்தழுவி இறுகியபின் மேலும் தழுவும்பொருட்டு அவர்களின் தழுவல் சற்றே தளர்ந்தபோது இருவருக்கும் நடுவே காலம் புகுந்து கொண்டது. மரீசி காலத்தை ஆறுவேளைகளாக உணர ஆரம்பித்தான். ஒவ்வொரு காலத்துக்கும் ஒன்று என தன்னிலிருந்து ஆறு சகோதரர்களை உருவாக்கிக் கொண்டான். ஆங்கிரஸ், அத்ரி, புலஸ்தியன், வசிஷ்டன், புலஹன், கிருது என்ற அறுவருடன் இணைந்து ஏழாக ஆனான். அவர்கள் எழுவரும் வானத்தில் ஏழு விண்மீன்களாக அமர்ந்து கனவுகண்டார்கள். வானத்தை முழுக்க நிறைத்துவிடவேண்டுமென விரும்பினார்கள். அவர்களின் விருப்பம் கோடானுகோடி ஆண்டுகளாக நீடித்து தியானமாகி தவமாகி முதிர்ந்தபோது அது வீரணி என்ற ஒளிமிக்க வெண்ணிற நாகமாக ஆகியது. அவளை அவர்கள் அஸிக்னி என்று பெயர்சூட்டி மகளாக வளர்த்தனர். அவள் வளர்ந்ததும் அவளை தட்ச பிரஜாபதிக்கு மணம்செய்து கொடுத்தனர்.
விண்ணிலும் மண்ணிலும் விரிந்துள்ள அனைத்தும் தட்சனுக்கும் அஸிக்னிக்கும் பிறந்தவையே என்றாள் மானசாதேவி. முடிவில்லாத காமமே தட்ச பிரஜாபதி. அஸிக்னியோ முடிவில்லாத வளம். ‘கொள்’ என்ற இச்சையே தட்சன். ‘அளி’ என்ற இச்சையே அஸிக்னி. எழுவதன் வீரியமே தட்சன். விரிவதன் வல்லமையே அஸிக்னி. அவர்களில் இருந்துதான் தேவகுலங்கள் அனைத்தும் பிறந்தன. அசுரகணங்கள் பிறந்தன. நடுவே மனிதர்களும் மிருகங்களும் பறவைகளும் புழு பூச்சிகளும் தாவரங்களும் பிறந்தன. அவர்கள் வாழ்வதற்காக ஏழு விண்ணகங்களும் ஏழு பாதாளங்களும் உருவாகிவந்தன.
தட்ச பிரஜாபதிக்கு பிறந்த அறுபது மகள்களில் ஒருத்தியின் பெயர் கத்ரு. அவளை மரீசியின் மைந்தனான கஸ்யபன் மணம் புரிந்துகொண்டான். அவள்தான் நாகர்குலத்தின் ஆதியன்னை என்றாள் மானசாதேவி. கத்ரு பதினான்கு மடிப்புகளாகச் சுருண்டு அனைத்துலகங்களையும் வளைத்துக் கிடந்தாள். அவளுடைய தலை ஏழாம் விண்ணிலும் வால்நுனி ஏழாம் பாதாளத்திலுமிருந்தது. அவளுடைய கரிய உடலெங்கும் கோடானுகோடி விண்மீன்கள் மின்னிக்கொண்டிருந்தன. அவளுடைய கண்கள் இரு செந்நிற ஆதித்யர்களாக கிழக்கிலும் மேற்கிலுமாக சுடர்விட்டன. அவளுடைய பிளவுண்ட செந்நாக்கு கோடானுகோடி யோசனை தொலைவுள்ள நெருப்பாறாக வானில் பெருக்கெடுத்து அலைபாய்ந்தது.
நமது கிராமங்களில் ஆலமரத்தின் அடியில் கல்விழிகளுடன் கல்படம் எடுத்து கோயில்கொண்டிருப்பவள் நம்முடைய ஆதியன்னை கத்ருவே என்று மானசாதேவி சொன்னாள். கிழக்கே ஒளிமிக்க சிறகுகளுடன் எழுந்த கஸ்யபன் கத்ருதேவியிடம் ‘உனக்கு நான் மைந்தர்களை அளிக்கிறேன். வெல்லமுடியாத அறிவுத்திறன், நிகரற்ற வீரம், பேரழகு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு குணத்தை மட்டும் நீ உன் மைந்தர்களுக்காக தேர்வுசெய்யலாம்’ என்றார். கத்ருதேவி ‘இவையனைத்தும் அழியக்கூடியவை. அழியாதது ஒன்றே. முடிவில்லாமல் பெருகிக்கொண்டிருக்கும் வல்லமை. அழிவில்லாமல் இருந்துகொண்டிருக்கும் இச்சை. அந்த குணமுள்ள குழந்தைகளை எனக்கு அளியுங்கள்’ என்று சொன்னாள். ‘ஆம் அவ்வாறே ஆகுக’ என்று கஸ்யபனும் வாக்களித்தான். அவ்வாறாக கத்ருதேவி நீலநிறமான ஒரு முட்டையை ஈன்றாள். அதை அவள் முத்தமிட்டு உடைத்தபோது கன்னங்கரிய ஆயிரம் நாகப்பாம்புகள் வெளிவந்து நெளிந்தன. அவர்களிலிருந்து நாகவம்சம் உருவாகியது.
விண்ணிலும் மண்ணிலும் பாதாளத்திலும் கத்ருவின் மைந்தர்களான நாகர்களே ஆள்கிறார்கள் என்றாள் மானசாதேவி. விண்ணை ஆள்பவன் சேஷன். பாதாளத்தை ஆள்பவன் வாசுகி. மண்ணை ஆள்பவன் தட்சகன். தட்சகனின் ஆயிரம் மனைவிகளிலிருந்துதான் மண்ணிலுள்ள அத்தனை நாகங்களும் உருவாயின. அந்த நாகங்கள் மனிதர்களுடன் புணர்ந்து நாகர்குல மக்கள் உருவானார்கள். பாரதவர்ஷத்தின் எல்லா மூலைமுடுக்குகளிலும் நாகர்கள் பெருகி நிறைந்தனர். குன்றாத பிறப்புவீரியமே அவர்களின் வல்லமையாக இருந்தது.
தட்சகனின் வம்சத்தில் வந்த காலகனின் மகளாகிய என்பெயர் மானசாதேவி. எனக்கு ஜகல்கௌரி, சித்தயோகினி, நாகபாகினி என்றெல்லாம் பெயருண்டு. இளமையிலேயே நான் காட்டுக்குச் சென்று சிவனை எண்ணி கடுந்தவம் செய்தேன். நாகபடம் சூடிய சிவன் தோன்றி ‘உனக்கு என்ன வரம் தேவை?’ என்றான். ‘முழுமைநிலையன்றி ஏதும் எனக்குத் தேவையில்லை’ என்று சொன்னேன். ‘நீ பெண்ணானதனால் கருவுறாமல் உனக்கு முழுமைநிலை கைகூடுவதில்லை. பாசிமணிகளுக்குள் பட்டுச்சரடுபோல மனிதர்களுக்குள் விதியின் நோக்கம் ஊடுருவிச்செல்கிறது. உன் கருப்பையின் நிறைவை உணர்ந்தபின் மீண்டும் வருக’ என்று சொல்லி விஷத்தின் அதிபன் மறைந்தான்.
வேசரவனத்தில் குகையொன்றுக்குள் ஜரத்காரு என்ற முனிவர் அதன் மேல்குவட்டில் இருந்து சொட்டும் மலைத்தேனை மட்டுமே உண்டு தவம் செய்துவந்தார். வழிதவறி உள்ளே சென்ற மின்மினி ஒன்றினூடாக கனத்த இருள் மண்டிய அந்தக்குகை பாதாளத்துக்கான நுழைவாயில் என்று அறிந்து ஒருநாள் அவர் அதற்குள் நடந்து சென்றார். நூறுமடிப்புகளைக்கொண்ட அந்தப்பாதையின் முடிவில் அதலமெனும் முதற்கீழுலகு இருந்தது. அங்கே நெளியும் கருநாகங்களில் புல்நுனிகளில் புழுக்களைப்போல அள்ளிப்பற்றி தொங்கிக்கிடந்த ஆயிரம் சிறிய மனித உருவங்களை கண்டார். அவையெல்லாம் தன்னுடைய மூதாதையர் என்பதை உணர்ந்தார். ‘உன் உதிரம் முளைத்தெழவில்லை. எங்களுக்கு அன்னமும் நீரும் அளிக்கப்படவில்லை. ஆகவே இந்த உலகில் வாழ்கிறோம்’ என்று அவர்கள் சொன்னார்கள்.
ஒளிக்கு மீண்டு வந்த ஜரத்காரு முனிவர் தன்னுள் இருந்து தன் மூதாதையரின் வம்சத்தை உருவாக்க எண்ணிய நேரத்தில் நான் அவரை சந்தித்தேன். மண்ணுலகை ஆளும் அரசநாகமான தட்சகன் என்னை தேடிவந்து அளித்த ஆணையின்படி அங்கே சென்றேன். கன்னங்கரிய ஆலமரம்போல ஆயிரம் தலைகளுடன் என் முன் எழுந்து நின்ற தட்சகன் ‘தேவி நீ பிறந்ததன் நோக்கம் நிறைவேறவிருக்கிறது’ என்று சொல்லியிருந்தார்.நான் குகைவாயிலுக்குச் சென்று என் காதலனைத்தையும் கொண்டு மாயாவடிவமெடுத்து நின்று முனிவரின் மனம் கவர்ந்தேன். என்னை அவர் ஓடும் நீரை சாட்சியாக்கி மணம்புரிந்துகொண்டார். அவருக்கு என்னில் பிறந்த மகன் நீ என்றாள் மானசாதேவி.
நீ பிறப்பதற்குள்ளேயே என்னை உன் தந்தை விட்டுச் சென்றுவிட்டார். அகத்திலும் புறத்திலும் அவரை நான் என்னுடைய காதலின் மாயத்தில் வைத்திருந்தேன். அவரது பகலும் இரவும் காலையும் அந்தியும் நான் உருவாக்கியவை. அவர் கண்ட மண்ணும் விண்ணும் காடும் நதிகளும் என் கற்பனையில் உருவானவை. ஒருகணம்கூட அவர் அந்த மாயையில் இருந்து விடுபடக்கூடாதென்பதனால் நான் இரவும் பகலும் தூங்காமலிருந்தேன். ஆனால் ஒருநாள் அவர் ஆலமரத்தடியில் துயில்கையில் நானும் சற்று கண்ணயர்ந்துவிட்டேன். விழித்துக்கொண்ட அவர் தூங்கும்போது மட்டுமே என்னில் வெளிப்படும் என் நாகவடிவத்தைக் கண்டார். அக்கணமே மாயைகள் அனைத்தும் கலைந்து முன்னும் பின்னும் காலத்தைக் கண்டு திகைத்து நின்றார். அதலத்தில் அவர் கண்ட மூதாதையர் பாதாளமூர்த்திகளான கருநாகங்களே என்று உணர்ந்தார். அருகே இருந்த ஓடைநீரை அள்ளி என்னை சபிப்பதற்காக ஓங்கினார்.
‘உங்கள் சாபத்தை என் வயிற்றில் வளரும் உங்கள் மைந்தனும் பெறவேண்டுமா?’ என்று அவரிடம் கேட்டேன். ‘ஆம், வேறுவழியில்லை. இக்கணத்தில் நான் எண்ணியவற்றை நான் திரும்பப்பெற முடியாது’ என்றார். ‘உன் மைந்தன் ஆயுள் முழுமை பெறமாட்டான். நீ புத்திரசோகத்தில் இறப்பாய்’ என்றபின் மனமுடைந்து அழ ஆரம்பித்தார். நான் அவர் அருகே அமர்ந்து ‘இதில் வருந்துவதற்கேதுமில்லை. நீங்களும் நானும் நாம் ஒருபோதும் அறியமுடியாத காலநாடகத்தின் இரு சிறு துளிகள் மட்டுமே’ என்றேன். ‘ஆம், உன் மாயையால் என்னைச் சூழ்ந்துகொண்டாய். அந்த மாயையால் எனக்கு ஒரு வரம் கொடு. உன்னையும் இக்குழந்தையையும் முற்றாக மறந்து நான் செல்லவேண்டும்’ என்று அவர் என்னிடம் கோரினார். ‘அவ்வாறே ஆகுக’ என நான் வரமளித்தேன். அந்த ஓடையைத் தாண்டியதுமே அவர் உன்னையும் என்னையும் முழுமையாக மறந்தவராக ஆனார்.’
‘உன்னை உன் மாமன் வாசுகியின் உதவியுடன் வளர்த்தேன். ஞானத்தின் விதைகளை உன்னுள் ஊன்றிவிட்டேன். நீ கற்கும் கல்வி உன்னை முழுமையாக்கும். உனக்கு முதுமை இல்லை. உன் தந்தை உனக்களித்த வரமாகவே அதைக்கொள். உன்னை முதியவனாக பார்க்கும் நிலை எனக்கும் இல்லை. அது என் காதலுக்கு அவர் அளித்த கொடை என்றே எண்ணுகிறேன். உன்னுடைய சின்னஞ்சிறு உடலுக்குள் விதைக்குள் பெருமரம்போல இப்பிரபஞ்சத்தின் பெருநிகழ்வொன்று குடியிருக்கிறது.’
குழந்தை பெருமூச்சு விட்டது. பெரிய கனவுகள் சிறிய உடலை அலைக்கழித்தன போலும், தன் உடலை குறுக்கிக்கொண்டு அன்னையின் ஆடைநுனியை எடுத்து கட்டைவிரலில் சுற்றி கடித்துக்கொண்டு அண்ணாந்து நோக்கியது.
‘மகனே, நீ பிறந்ததற்கான தருணம் இப்போது வந்துவிட்டது. நீ நாளையே கிளம்பு’ என்று மானசாதேவி தன் மகனை மெல்ல அணைத்து அவன் காதுகளில் மெதுவாகச் சொன்னாள்.
1/2/14
வெண்முரசு முன்னுரை வியாசனின் பாதங்களில்
வியாசனின் பாதங்களில்…
இந்தப்புத்தாண்டு முதல் ஒருவேளை என் வாழ்க்கையில் இதுவரை நான் ஏற்றுக்கொண்டதிலேயே மிகப்பெரிய பணியைத் தொடங்குகிறேன். மகாபாரதத்தை ஒரு பெரும் நாவல்வரிசையாக எழுதவிருக்கிறேன்.
இளவயதின் கனவு.அப்படி பல கனவுகள் தொடர்ந்து ஒத்திப்போடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதுவும் அப்படித்தானிருந்தது.
நேற்று [டிசம்பர் 24-ஆம் தேதி] இரவில் விஷ்ணுபுரம் விழா முடிந்து வந்து சைதன்யாவிடமும் அஜிதனிடமும் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாக மகாபாரதம் பற்றிய பேச்சு எழுந்தது. நள்ளிரவுக்குப்பின்னரும் அந்த உரையாடல் நீடித்தது. பாரதத்தின் உத்வேகம் மிக்க கதையோட்டம். கண் ததும்பவைக்கும் விதிமுகூர்த்தங்கள். சைதன்யா “அப்பா எனக்காக இதையெல்லாம் எழுது” என்றாள்.
இன்று கிறிஸ்துமஸ். சிறுவயதிலிருந்தே எனக்கேயான அந்தரங்கமான கொண்டாட்டம் கொண்ட நாள் இது. நெகிழ்வும் தனிமையும் நிறைந்தவனாக இருப்பேன். காலையில் எழுந்ததும் சட்டென்று தோன்றியது, ‘இந்தநாளில் மகாபாரதத்தை தொடங்கினாலென்ன?”
திட்டத்தை நினைத்தால் எனக்கு பிரமிப்பாகவே இருக்கிறது. ஐநூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்கள். இன்றிலிருந்து ஒவ்வொருநாளும் ஓர் அத்தியாயம் என பத்துவருடங்கள். ஆனால் எந்த பெரும் பயணமும் ஒரு காலடியில்தான் தொடங்குகிறது. தொடங்கிவிட்டால் அந்தக் கட்டாயமும், வாசகர்களின் எதிர்வினைகளும் என்னை முன்னெடுக்குமென நினைக்கிறேன். இப்போது தொடங்காவிட்டால் ஒருவேளை இது நிகழாமலேயே போய்விடக்கூடும்.
நாவல்வரிசைக்கான பொதுத்தலைப்பு ‘வெண்முரசு’. ஏன் இந்தத் தலைப்பு என சொல்லத்தெரியவில்லை, தலைப்பு தோன்றியது, அவ்வளவுதான். அறத்தின் வெண்முரசு. எட்டு சுவைகளும் இணைந்து ஒன்றாகும் சாந்தத்தின் நிறம்கொண்ட முரசு. அந்தப்பெருநாவலின் முதல் நாவல் ‘முதற்கனல்’.
இது ஒரு நவீன நாவல். தொன்மங்களையும் பேரிலக்கியங்களையும் மறு ஆக்கம் செய்யும் இன்றைய இலக்கியப்போக்குக்குரிய அழகியலும் வடிவமும் கொண்டது. ஓர் இலக்கிய வாசகனுக்கு இது உள்விரிவுகளை திறந்துகொண்டே செல்லக்கூடும். ஆனால் எந்த ஒரு எளிய வாசகனும் உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் வாசிக்கக்கூடியதாகவே இது இருக்கும். மகாபாரதத்தின் மகத்தான நாடகத்தருணங்களையே அதிகமும் கையாளும். அதன் கவித்துவத்தையும் தரிசனத்தையும் தீண்டிவிடவேண்டுமென்ற கனவுடன் இது எழும். வியாசனெழுதிய ஒவ்வொன்றையும் இன்று இங்கே என உள்வாங்கிக்கொள்ளவேண்டுமென இது முயலும்
மரபிலிருந்து ஒரு வினா எழலாம். வியாசபாரதத்தை இப்படி மீறிச்செல்ல அனுமதி உண்டா என. புராணங்கள் மெய்மையைச் சித்தரிப்பதற்கான படிமத்தொகையையே நமக்களிக்கின்றன. ஆகவே அனைத்துப் புராணங்களும் பல்லாயிரம் வருடங்களாக தொடர்ந்து மறு ஆக்கம் செய்யப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. மகாபாரதக்கதையை மறு ஆக்கம்செய்யாத பெருங்கவிஞர்களே இந்தியாவில் இல்லை என்பார்கள்.
இந்நாவல் மகாபாரதத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதல்ல. மகாபாரதக் கதைகளையும் கதைமாந்தர்களையும் வெவ்வேறு திசைகளில் வளர்த்தெடுத்த பிற புராணங்களையும் கருத்தில்கொண்டிருக்கிறது. மகாபாரதத்துக்குப்பின் குறைந்தது ஈராயிரம் வருடங்கள் கழித்து எழுதப்பட்ட பாகவதம், மேலும் ஐநூறு வருடங்கள் கழித்து உருவான தேவிபாகவதம் ஆகியநூல்களின் மகாபாரதக் கதைகளும் பல நாட்டார் பாரதக்கதைகளும் இந்நாவலில் உள்ளன என்பதை வாசகர்கள் காணலாம்.
நண்பர்களில் ஒரு சாரார் நான் தொடர்கள் எழுதும்போது ‘எடுத்து வச்சிருக்கேன். படிக்கணும்’ என்பார்கள். இது அவர்களுக்குரிய நாவல் அலல. அவர்கள் ஒருபோதும் வாசிக்கப்போவதில்லை. இது ஒவ்வொருநாளும் கொஞ்சமேனும் வாசிக்கக்கூடியவர்களுக்கான படைப்பு. ஒவ்வொருநாளும் வாசித்தவற்றைப்பற்றி தியானிக்கக்கூடியவர்களுக்கானது. அவர்களின் வாழ்க்கையை மேலும் சிலவருடங்கள் வியாசனின் மானுடநாடகம் ஒளியேற்றுவதாக! அவர்கள் தங்கள் வியாசனை எனது வியாசனிலிருந்து கண்டுகொள்ள நேர்வதாக!
அன்புடன்
ஜெயமோகன்
ஜெயமோகன்
25-12-2013
1/1/14
மகாபாரதம் நாவல் வடிவில்
நண்பர்களுக்கு / உறவுகளுக்கு வணக்கம்,
சில நாட்களுக்கு முன் மகாபாரதத்தை எளிய தமிழில் தருவதற்காக முயற்சி செய்து இருந்தோம். சில காரணங்களால் அது முடியாமல் போனது. அதைப்பற்றிய தேடலின்போது திரு.ஜெயமோகன் அவர்களின் ’’வெண்முரசு’’ என்னும் பதிப்பு மிக எளிய தமிழில் நாவல் வடிவில் கிடைப்பதை அறிந்தோம்,
அதை நம் வலைப்பூ மூலம் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
’’இந்நாவல் மகாபாரதத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதல்ல. மகாபாரதக் கதைகளையும் கதைமாந்தர்களையும் வெவ்வேறு திசைகளில் வளர்த்தெடுத்த பிற புராணங்களையும் கருத்தில்கொண்டிருக்கிறது. மகாபாரதத்துக்குப்பின் குறைந்தது ஈராயிரம் வருடங்கள் கழித்து எழுதப்பட்ட பாகவதம், மேலும் ஐநூறு வருடங்கள் கழித்து உருவான தேவிபாகவதம் ஆகியநூல்களின் மகாபாரதக் கதைகளும் பல நாட்டார் பாரதக்கதைகளும் இந்நாவலில் உள்ளன என்பதை வாசகர்கள் காணலாம்.’’
ஐநூறு பக்கங்கள் கொண்டது ஒரு நாவல் அப்படி ஐநூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்கள். இன்றிலிருந்து ஒவ்வொருநாளும் ஓர் அத்தியாயம் என பத்துவருடங்கள் தொடரும்.
சில நாட்களுக்கு முன் மகாபாரதத்தை எளிய தமிழில் தருவதற்காக முயற்சி செய்து இருந்தோம். சில காரணங்களால் அது முடியாமல் போனது. அதைப்பற்றிய தேடலின்போது திரு.ஜெயமோகன் அவர்களின் ’’வெண்முரசு’’ என்னும் பதிப்பு மிக எளிய தமிழில் நாவல் வடிவில் கிடைப்பதை அறிந்தோம்,
அதை நம் வலைப்பூ மூலம் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
’’இந்நாவல் மகாபாரதத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதல்ல. மகாபாரதக் கதைகளையும் கதைமாந்தர்களையும் வெவ்வேறு திசைகளில் வளர்த்தெடுத்த பிற புராணங்களையும் கருத்தில்கொண்டிருக்கிறது. மகாபாரதத்துக்குப்பின் குறைந்தது ஈராயிரம் வருடங்கள் கழித்து எழுதப்பட்ட பாகவதம், மேலும் ஐநூறு வருடங்கள் கழித்து உருவான தேவிபாகவதம் ஆகியநூல்களின் மகாபாரதக் கதைகளும் பல நாட்டார் பாரதக்கதைகளும் இந்நாவலில் உள்ளன என்பதை வாசகர்கள் காணலாம்.’’
ஐநூறு பக்கங்கள் கொண்டது ஒரு நாவல் அப்படி ஐநூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்கள். இன்றிலிருந்து ஒவ்வொருநாளும் ஓர் அத்தியாயம் என பத்துவருடங்கள் தொடரும்.
இந்த நாவலை அறிமுகப்படுத்திய திரு.அருள் செல்வா சென்னை அவர்களுக்கு நன்றி.
எப்போதும் போல் இந்த முயற்சிக்கும் நண்பர்கள் ஆதரவு தருமாறு வேண்டுகிறோம்.
என்றும் நட்புடன்,
வெ.ரா. பூபாலன்
Subscribe to:
Posts (Atom)