அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/29/13

புட்பதந்தன் பெற்ற சாபம்

வரம் பெற்ற புட்பதந்தன் நாள்தோறும் காலையில் மலர்களைக் கைக்கொண்டு மனைவியுடன் கயிலைக்குச் சென்று அம்மையையும் அப்பனையும் தொழுது தூமலர்த் தூவித்துதித்து வந்தான். பல நாட்கள் இவ்வாறு நடந்தது. ஒரு நாள் மாலையில் மலர்கொண்டு இறைவனை அர்ச்சித்து வழிபட எண்ணி மலர்களோடு கயிலைக்குச் சென்றான். அப்போது அம்மை அப்பர் இருவரும் தனித்து ஓரிடத்தில் உரையாடிக்கொண்டிருந்தனர். அதைக்கண்ட அவன் அவர்களைப் பார்ப்பதற்கேற்ற சமயம் அது எனத் தெரிந்து தலைவாயிற்புறம் ஒதுங்கி நின்றான். அச்சமயம் பார்வதிதேவியார் சிவபெருமானை வணங்கிப் ' பெருமானே! எவருக்கும் தெரியாத கதை ஒன்றைக் கூறி அருளவேண்டும் ' என வேண்டி நின்றார். சிவபெருமானும் உலகறியாக் கதை ஒன்றைக் கூறினார். இதை வாயிற்புறம் நின்ற புட்பதந்தன் கேட்டுக்கொண்டிருந்தான். பின் இறைவனைக் கண்டு வணங்கும் தருணம் இது அன்று என எண்ணிய புட்பதந்தன் கயிலையை விட்டு நீங்கி தன் மனைவியை அடைந்தான். நேரங்கழித்துவந்த தன்கணவனை தேவதத்தை சந்தேகக் கண்கொண்டு பார்த்தாள். ஊடல் கொண்டாள். மனைவியின் ஊடலைத் தணிப்பான் வேண்டித் தான் கயிலைக்குப் போனதையும் சிவபெருமான் அம்மைக்குப் புதிய கதை ஒன்றைக் கூரியதையும் அக்கதையைத்தான் கேட்டுக்கொண்டிருந்ததையும் எடுத்துக் கூறினான். இதைக்கேட்ட தேவதத்தை அக்கதையைத் தனக்குக் கூறுமாறு வற்புறுத்தினாள். அவள் பிணக்கைத் தீர்க்கும் கருத்தால் புட்பதந்தன் தான் கயிலையில் கேட்ட கதையை அப்படியே கூறி அவள் ஊடலைத் தீர்த்து மகிழ்ந்தான். மறுநாள் காலையில் எப்போதும் போல் தேவதத்தையும் புட்பதந்தனும் நறுமணமுள்ள பூக்களையும் பூசா திரவியங்களையும் எடுத்துக் கொண்டு கயிலையை அடைந்தனர். புட்பதந்தன் அப்பனைப் பூக்கொண்டு வழிபட்டான். தேவதத்தை அம்மையின் சன்னிதானத்தை அடைந்து அம்மையை வழிபட்டாள். பின் பெண்மதியால் அம்மையை நோக்கித் ' தேவியே! அரிய கதை ஒன்று உள்ளது. அதைத் தாங்கள் கேட்டருள வேண்டும் என்று பணிந்து கூறினாள். அம்மை அதற்கு இசைய, தத்தை தான் கணவன் பால் கேட்டறிந்த கதையைக் கூறினாள். இதைக் கேட்ட அம்மை, அக்கதை, எவரும் அறியாக்கதை எனச் சிவபெருமான் தனக்குச்சொன்ன கதையாயிருப்பதை அறிந்து, உடனே அவ்விடத்தை விட்டு நீங்கிப் பெருமானிடம் சென்று "புதுக்கதை என்று பழங்கதையைச் சொல்லி ஏமாற்றினீர்களே ! நன்று நன்று " என்று சினந்து நின்றாள். தேவியின் சினக்குறிப்பை அறிந்த சிவபெருமான் "இக்கதையைக் கூரினவர் யாவர்? " என்று வினவ, அம்மை அங்கு வந்து நின்ற தேவதத்தையைச் சுட்டிக் காட்டினார். உடனே தேவதத்தை தன் கணவனை சுட்டிக் காட்டினாள். உடனே சிவபெருமான் புட்பதந்தனை விளித்து ' உனக்கு யார் இந்த கதையைச் சொன்னவர் ? ' என்று கேட்டார். புட்பதந்தன் இறையடியை வணங்கிப் ' பெருமானே! அடியேன் தங்களை அர்ச்சித்து வணங்கப் பூக்களுடன் நேற்று மாலை வந்தேன். அப்போது தாங்கள் அம்மைக்கு இக்கதையைச் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். தற்செயலாக அங்கு அச்சமயம் வரநேர்ந்த அடியேன் அக்கதையைப் புறத்தே இருந்து கேட்க நேர்ந்தது. இவ்வாறு கேட்டறிந்த கதையைத் தேவதத்தைக்குக் கூறும் கட்டாயம் நேர்ந்து விட்டது' என்று பணிவுடன் கூறினான். இதைக்கேட்ட சிவபெருமான் சினந்து ' யாருமறியாது பிராட்டிக்குச் சொன்ன மறைபொருளை, மறைந்திருந்து கேட்டுப் பிறர் அறியக் கூறியதால், நீ வெறி மனங்கொண்ட வேதாளமாகக் கடவை. மனவடக்கமின்றிக் கேட்டதை வெளிப்படுத்திய உன் மனைவி மானாகப் பிறந்து உழலக் கடவள் ' என்று சபித்தார். சாபம் பெற்ற புட்பதந்தன் பெரிதும் துயருற்று அஞ்சலி செய்து, "பெருமானே இச்சாபம் எப்போது நீங்கும்" என்று வினவி நின்றான். புட்பதந்தன், பெரிதும் துயருற்று துதித்து வேண்டி நிற்கக் கண்ட சிவபெருமான் மிகவும் இரங்கி, ' அன்பனே! தேவதத்தை பாடலிபுரத்திற்குப் போய் அங்கு பகலில் மான் ஆகித் திரிந்து இரவில் மடந்தையாகி யாழ் மீட்டி எம்மைப் பரவிய வண்ணமிருப்பாள். நீயோ, பாடலிபுரத்துக்கு ஒரு யோஜனைதூரத்திலுள்ள பெருங்காட்டில் ஒரு பெரிய முருங்கை மரத்தின் மீது வேதாளமாய் இருப்பாய். சிலகாலம் கழித்து விக்கிரமாதித்த மன்னன் பாடலிபுரம் வருவான். அவன் உங்கள் இருவரையும் சந்திக்கும்படி செய்வான். அப்போது உங்கள் சாபம் நீங்கும். நீங்கள் இருவரும் மறுபடியும் பழைய நிலையை அடைந்து என்னை அடைவீர்கள்' என்று அருள் செய்தார். சாபத்தின்படி புட்பதந்தன் வேதாளமாகிப் பாடலிபுரத்துப் பெருங்காட்டில் ஒரு பெரிய முருங்கை மரத்தில் பேய்களுக்குத் தலைவனாய் வசித்து வந்தான். தேவதத்தை மான் ஆகிப் பாடலிபுரத்தில் பகலில் மானாகவும் இரவில் மடந்தையாகி யாழ் வாசித்துக் கொண்டும் இருந்தாள்.

No comments:

Post a Comment