அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

6/22/13

ஜலகண்டாபுரம் ஸ்ரீ சாம்பலிங்க மூர்த்தி சுவாமிகள் வரலாறு

இவர் கோவை மாவட்டம் கொள்ளே காலம் மனு மகரிஷி கோத்திரத்தில் நஞ்சைய என்பவருக்கும் மகாதேவி அம்மைக்கும் (செப்டம்பர் 1823) சுபானு ஆண்டு புரட்டாசித் திங்கள் வளர்பிறை அவிட்ட நட்சத்திரத்தில் தேவாங்க குலம் ஒங்க அவதாரம் செய்தார். சிறுவயதிலேயே வேதசாத்திரங்களைக் கற்றுணர்ந்தார். பதினெட்டாவது வயதில் வீட்டை விட்டு ஹம்பி ஏம கூட மடத்தை அடைந்தார். அங்கிருந்த குரு இராமலிங்கய்யா என்னும் குரு இவருடைய கல்வி அறிவு ஒழுக்கங்களைக் கண்டு இவருக்குக் குரு தீட்சை அளித்துக் குருவாக நியமித்தார். குருவின் ஆணைப்படி தேவாங்க மக்களின் குல ஆசாரங்களை நிலைநாட்டுங் கருத்தால் தேசசஞ்சாரம் புறப்பட்டார்.

முதலில் காசிக்குப் போய் ஸ்ரீவிசுவேஸ்வரரை வழிபட்டுக்கொண்டு ஸ்ரீசைலம் வந்தார்.பின் தென்னாடு முழுவதையும் பார்த்துக்கொண்டு இராமேஸ்வரம்போய் ஸ்ரீஇராமநாதரை வழிபட்டார். அங்கிருந்து மதுரை பழனி தாராபுரம் வழியாகப் பல்லடம் கணக்கர்பாளையம் அடைந்தார். அவர் குதிரை மீது சஞ்சாரம் செய்வது வழக்கம். கணக்கர்பாளையம் வந்தவர் அங்கிருந்த விநாயகர் கோயிலின் அரசமரத்தடியில் குதிரைமீது இருந்தபடி அவ்வழியில் போவோர் வருவோரிடம் தேவாங்க குரு வந்திரிக்கிறார் என்று அவ்வூர் செட்டிமைக்காரரிடம் சொல்லுமாறு பணித்தார். சுவாமிகளின் வரவை அறிந்தும் தேவாங்க மக்கள் மூன்று நாட்களாகியும் சுவாமிகளை வரவேற்க வரவில்லை. குருநாதரும் குதிரை மீது இருந்து இறங்காமல் அப்படியே அமர்ந்திருந்தார்.

அவ்வூரில் சைவசீலத்தோடு வாழ்ந்த கிச்சடி பெத்த என்பவருக்கு இரண்டு ஆண்மக்கள் இருந்தனர். புனிதமான அச்சைவக் குடும்பத்தின் மக்கள் இருவரில் இளையவனான மல்லிகார்ச்சன மூர்த்தியைத் தனக்கு வாரிசாகப் பெற்றுக்கொண்டார். அந்தப் பிள்ளைக்கு உபநயனம் செய்து தீட்சை அளித்துக் காயத்ரி மந்திரோபதேசம் செய்துத் தனது சீடனாக ஏற்றுக்கொண்டார். மீண்டும் தேசசஞ்சாரம் செய்த வண்ணம் சேலம் வந்து சேர்ந்தார். செவ்வாய்ப்பேட்டையில் தேவாங்ககுல மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள வேதாந்தம் வீரம்மாள் என்பவரின் மடத்தில் தங்கினார். இப்பகுதி தேவாங்க மக்கள் தமது குருநாதரைத் தக்கவாறு வரவேற்று உபசரித்தனர். சுவாமிகளின் நாட்பூஜையை நாள்தோறும் தமது இல்லங்களில் வைத்து நடத்திச் சுவாமிகளைப் பெருமைப் படுத்தினார்கள்.

ஒருநாள் திருநாளை ஒட்டிக், குருமூர்த்திகள் பல்லக்கில் ஊர்வலம் வந்தார். ஊர்வலம் பத்மசாலியர் தெருவழி வந்தது. அப்போது அச்சமூக மக்கள் பலர் ஒன்று கூடிக் குருசுவாமிகள் தங்கள் வீதிவழி பல்லக்கில் போகக்கூடாது என்றும் நடந்து போகலாம் என்றும் ஊர்வலத்தை தடுத்த அம்மக்கள் மீது சேலம் சப்கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார். வழக்கு 1852 ம் ஆண்டிலிருந்து 1863 வரை பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடந்தது. சென்னை நீதிபதிகனம் ஹார்மன் ஸ்காட்லண்ட் நைட் துரை அவர்கள் தேவாங்க சமூகத்தின் ஜகத்குரு பீடாதிபதி ஓம் ஸ்ரீ சாம்பலிங்க மூர்த்தி சுவாமிகள் பல்லக்கில் எங்கும் போகலாம் என்றும் ஊர்வலத்தைத் தடைசெய்தவர்களுக்கு அபராதம் விதித்து மானநஷ்டத் தொகையுடன் செலவுத் தொகையும், கோர்ட் செலவும் கொடுக்க வேண்டுமென்றும் தீர்ப்பு வழங்கினார். அதிலிருந்து சுவாமிகளின் புகழ் நாடெங்கும் பரவியது.

சுவாமிகள் கொதிக்கும் வெந்நீரில் குளிக்கும் தவ வல்லமை உடையவர்கள். கொதிநீர்ப் பாத்திரத்தைக் கையால் தொடமுடியாது. அப்பாத்திரத்துக்கு கிட்டிக் கட்டித்தான் எடுத்து சுவாமிகள் மீது நீரை ஊற்றுவார்கள். வெந்நீர் ஏற்ற உடம்பு ஊறுபடாது தளதளவென ஒளிவிட்டுப் பிரகாசிக்கும். இதுவும் சுவாமிகளின் புகழை மேலும் ஓங்கச் செய்தது.

குருநாதரின் புகழைக் கேள்வியுற்ற சுவாமிகளின் சிறியதாயார் மகன் மாதவய்யசுவாமிகள் சேலம் வந்து அண்னாருடன் சேர்ந்து கொண்டார்.

சிலநாட்கள் கழித்துச் சுவாமிகள் மாதவையசுவாமிகள், வேதாந்தம் வீரம்மாள், சீடர் மல்லிகார்ச்சுனர் முதலியோருடன் தேச சஞ்சாரம் மேற்கொண்டார். பழனிக்கு அடுத்துள்ள ஆயகுடி என்னும் ஊரை அடைந்தார். அங்கிருந்தபோது தேவாங்க மரபினுக்குரிய காயத்ரி பீடத்து காயத்ரி அம்மன் திருவுருவத்தை அமைக்க விரும்பினார். வேலப்ப ஆசாரி என்னும் ஸ்தபதியைக் கொண்டு திருவுரு அமைக்கும் வேலையைத் துவக்கினார். கருவுற்ற மூன்றாண்டுகள் ஆயின. முதலில் ஊற்றிய கருவின் படிவம் சரியாக அமையவில்லை. அதனால் அதை உடைத்து மீண்டும் கரு அமைத்தார்கள். இச்சமயம் மாதவய்ய சுவாமிகளுக்கும் ஸ்ரீ சாம்பலிங்கமூர்த்திக்கும் மனத்தாங்கல் உண்டாயிற்று. மாதவய்யா கொள்ளேகாலம்போய்விட்டார். இரண்டாம் முறை ஊற்றியபடிவமும் சரியாக அமையவில்லை. மீண்டும் படிவம் அமைக்கும் வேலை தொடர்ந்தது.

இதுசமயம் வேதாந்தம் வீரம்மாளுக்கும் மல்லிகார்ச்சுன மூர்த்திக்கும் வாதுநேர்ந்து ஒருவருக்கொருவர் சாபம் இட்டுக் கொண்டனர். அம்மையார் மல்லிகார்ச்சுனரை நோக்கி ' நீ பதினைந்து நாட்களில் மரணமடைவாய்' எனச் சொல்ல, பதிலுக்கு மல்லிகார்ச்சுனர் 'நீங்கள் ஒருவாரத்தில் உலகை நீத்துப் போவீர்கள்' என்று கூறினார். இதைக்கேட்டஅம்மையார் சினங்கொண்டு அவ்விடத்தை விட்டு நீங்கி பழனி அடிவாரத்திலுள்ள ஒரு இடத்துக்குப்போய் அங்கு தங்கினார். இதை அறிந்த ஸ்ரீ சாம்பலிங்க மூர்த்தி சுவாமிகள் வீரம்மாளுக்குப் பாலும் பழமும் ஆள் மூலம் அனுப்பி வந்தார். இவ்வாறு ஏழு நாட்கள் கடந்தன. வீரம்மாளின் சினம் தணிந்தது. மீண்டும் சுவாமிகள் தங்கியிருக்கும் இடத்துக்குத் திரும்பினார். மறுநாட்காலையில் வீரம்மாள் வீட்டின் புழக்கடையிலுள்ள கிணற்றுக்குப் போய்குளித்துவிட்டுத் தியானம் முதலியன முடித்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது அம்மையாரின் தலை வாயிற்கதவில் பலமாக இடித்துக்கொண்டது. தலையில் பெருங்காயம் உண்டாயிற்று. இதை அறிநது குருநாதர் காயத்துக்கு மருந்து வைத்துக் கட்டி ஆறுதல் கூறினார்.

அப்போது வீரம்மாள் மல்லிகார்ச்சுன மூர்த்தியை அருகழைத்து, ' அப்பனே ! காயத்ரி அம்மையின் திருவுருவம் நன்கு உருப்பெற்றுவிட்டது. அக்காரணத்தால் காயத்ரி மந்திர வன்மை பெற்ற உன் சொல் பலித்துவிட்டது. நான் சொல்வதைக் கருத்தில் வைத்துக்கொள். மூன்றாவது கரு உடைத்ததும் வேலப்ப ஆசாரி காலமாய் விடுவார். பின் சில நாட்களில் குருநாதரும் உடல் நீப்பார். அதன்பின் நீ தான் குருபீடாதிபதி. காயத்ரி அம்மையைப் பூசிக்கும் பேறு உன்னைச் சேரும். நீ இக்குருபீடத்தின் தலைமையை ஏற்று சிறப்பாக நடத்தி வருக" என்று சொல்லி அவரிடம் தீர்த்தம் பெற்றுப் பருகினார். அதேசமயம் அம்மையின் ஆன்மாவும் பிரிந்தது. ஸ்ரீ குருசுவாமிகள் அம்மைக்குச் செய்ய வேண்டிய ஈமச்சடங்குகளைச் சிறப்பாகச் செய்துமுடித்து ஆயகுடியிலேயே அவருக்குச் சமாதியையும் கட்டிவைத்தார்.

வீரம்மாள் வாக்குப்படி மூன்றாம் கருவை உடைத்துப் பார்க்கு முன்பே வேலப்ப ஆசாரி சிவபதம் அடைந்தார். மூன்றாம் கருவில் படிவம் நன்கு அமைந்திருந்தது. காயத்ரி அம்மனுக்குச் சிறப்பாக கும்பாபிஷேகம் நடத்தினர்.

அம்மனோடு குருநாதர் சீடருடன் ஆயகுடியை விட்டுத் தேசசஞ்சாரம் புறப்பட்டு பவானி வந்து சிலநாட்கள் தங்கினார். பின் நெரிஞ்சிப்பேட்டை வழியாக அம்மாப்பேட்டைக்கு வந்தார். அங்கு அம்மனுக்குச் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

அப்போது கொள்ளே காலத்திலிருந்து தேவாங்கம் பிரபுசாமி என்பவர் வந்து இவர்களுடன் சேர்ந்து கொண்டார். பின் அம்மாபேட்டையை விட்டுச் சேலம் ஜில்லா ஜலகண்டாபுரம் வந்து சேர்ந்தார். இங்கும் அம்மனுக்குப் பூஜைகள் நடந்தன. திடீரென்று ஸ்ரீ சாம்பலிங்க மூர்த்தி சுவாமிகளின் உடல் நலம் குன்றியது. வீரம்மாளின் வாக்கை நினைவு கூர்ந்தார். அப்பகுதியிலுள்ள செட்டிமை பெரியதனம் தேவாங்க மக்கள் யாவரையும் பவ ஆண்டு தைத்திங்கள் புனர்பூச நட்சத்திரத்தில் கூட்டித் தமது சீடர் மல்லிகார்சுன மூர்த்திக்கு முறைப்படி தீட்சையளித்து ஆசார்ய அம்மனையும் ஒப்படைத்து ஆசி கூறினார். பவ ஆண்டு மாசித் திங்கள் புனர்பூச நட்சத்திரத்தில் பூதவுடல் நீத்து ஸ்ரீ சௌடேஸ்வரியம்மனின் திருவடி நிழலை அடைந்தார். சுவாமிகளின் பூதவுடலை ஸ்ரீ சௌடேஸ்வரியம்மன் திருக்கோயிலின் இடப்பக்கத்திருந்த காலி இடத்தில் சமாதி செய்தனர்.

சுவாமிகள் சமாதி அடைந்த செய்தியை அறிந்து மாதவைய சுவாமிகள் கொள்ளே காலத்திலிருந்து ஜலகண்டபுரம் வந்து சேர்ந்தார். அவருக்கு மல்லிகார்ச்சுன சுவாமிகள் ஆறுதல் சொல்லி அவரை சேலத்திலுள்ள வீரம்மாள் மடத்துக்கு அனுப்பிவைத்தார். அவரும் தமது பெற்றோர், மனைவியுடன் சேலம் வந்து வீரம்மாள் மடத்தில் தங்கி வாழ்ந்து வந்தார். மாதவய்யாவின் ஒரே மகன் பின் சந்ததியின்றி மறைந்தான்.

மல்லிகார்ச்சுன சுவாமிகள் பாலக்காடு பாலைமாநகர் சென்று இருமணம் புரிந்து இருமக்களைப்பெற்று மறைந்தார். 17-3-1929 ல் ஆசார்ய அபிஷேகம் பெற்ற மூத்த மகன் பாலக்காட்டை விட்டு ஜலகண்டாபுரம் வந்து தங்கினார். அங்கிருந்தபடியே கர்நாடகம், மராட்டா, குஜராத், ஆமதாபாத் முதலிய நாடுகளுக்கு சஞ்சாரம் போய் திரும்பிவந்து அங்குள்ள மடத்தில் தங்கியுள்ளார்.

6/21/13

சுந்தரானந்தர்


குரு:சட்டைமுனி, கொங்கணவர்

காலம்:880 ஆண்டுகள், 14 நாட்கள்

சீடர்கள்:-

சமாதி:மதுரை

இவர் சட்டைமுனியின் சீடர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சதுரகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டவர். ஜோதிடத்தில் மற்றும் வைத்தியத்தில் சிறந்து விளங்கிய இவர், அது சம்பந்தமான பல நூல்களை இயற்றியுள்ளார்.

6/20/13

82 .சோமகுல மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அக்நிஸ்தம்பதவரு :- அக்நியைக் கட்டுபவர்கள். பஞ்சாக்னிகளுக்கு நடுவே தவம் செய்பவர்.
அநந்தபட்டணதவரு :- ஆந்திராவில் உள்ள அநந்தபட்டணம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
அம்மணசெட்டிதவரு :- இப்பெயர் கொண்டோர் வம்சாவளியினர்.
அல்லம்தவரு :- அல்லம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
அவுலபல்லதவரு :- அவுலபல்லம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கங்காதவரு :- கங்காதேவியைப் பூசிப்பவர்.
காமிசெட்டிதவரு :- காமிசெட்டி என்பவரின் வம்சாவளியினர்.
காருபர்த்திதவரு :- ஆந்திராவில் உள்ள காருபர்த்தி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கின்னிசெட்டிதவரு :- கின்னிசெட்டி என்போர் வம்சாவளியினர்.
குடரேதவரு :- ரிஷிகள் வசிக்கும் பர்னகசாலை. இச்சாலைகளில் வசித்த தவசிகள்.
குருபத்திதவரு :- குருபக்தி கொண்டவர்.
கொண்டவீடுதவரு :- கொண்ட- மலை. மலைகளில் வீடுகட்டி வசித்தவர்.
சக்ரராஜூதவரு :- ஸ்ரீ சக்கரம் அமைத்துப் பூசித்தவர். உடம்பில் சக்கரமுத்திரை தரித்தவர். இவர்களின் சமாதியிலும் சக்கரம் ஸ்தாபிக்கப்பெரும்.
சங்கனதவரு :- சங்கஞ் செடிக்கீழ் வீட்டுத் தெய்வத்தை வழிபாடு செய்பவர்கள்.
தடாகதவரு :- பல்வேறு வகைப்பட்ட அறங்களில் குடிதண்ணீர்க் குளம் வெட்டுதல் ஒரு அறம். இதனைச் செய்தவர்.
தின்னிசெட்டிதவரு :- தின்னிசெட்டி என்பவரின் வம்சாவளியினர்.
துஸ்ஸாதவரு :- துஸ்ஸா-கட்டுக்கொடி. தண்ணீரைக் கட்டியாக மாற்றும் ஒருவகைக் கொடி மூலிகை. வேலிகளில் படர்ந்து இருக்கும். சிறுகட்டுக்கொடி, பெருங்கட்டுக்கொடி என இதனுள் இருவகை உண்டு. இது உஷ்ணத்தை நீக்கும். இதைக் கொண்டு வைத்தியம் செய்தவர்.
நாடுகொண்டதவரு :- நாடுகொண்ட என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பர்ணதவரு :- பரண்கட்டி ஜபதபங்கள் செய்தவர்.
பெகடதவரு :- ஆந்திராவில் உள்ள பெகட என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
போகனதவரு :- வைபோகமாக வாழ்ந்தவர்.
மங்களகிரிதவரு :- ஆந்திராவில் உள்ள மங்களகிரியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மசானதவரு :- மசான ருத்திரனை மயானத்தில் வழிபடுபவர். பெரிய நாயகியம்மனை வழிபடுபவர்.
முத்துதவரு :- முத்தணிந்தவர். முத்து வணிகம் செய்தவர்.
இந்தனதவரு :- இந்தனம் - சமித்து விறகு. இதனைத் தருமமாகக் கொடுப்பவர்.
ஏந்தேலாரு :- அந்தலம் என்னும் சிலம்பு போன்ற ஒரு வகைக் கழலைக் காலில் வீரத்தின் சின்னமாக அணிபவர். இது ஒற்றைக் காலில் அணியப்படும்.
ராமாயணதவரு :- ராமாயணப் பிரசங்கம் செய்பவர்.
வன்னிகுலதவரு :- அக்நிஹோத்ரம் செய்பவர்.
ஜலஸ்தம்பதவரு :- நீருள் மூழ்கித் தவம் செய்பவர். நீரைக் கட்டி அதன் மீது நடப்பவர்.
ஸ்தம்பதவரு :- வெற்றிக் கொடி நாட்டியவர். கொடிக்கம்பங்களை ஆலயங்களுக்குத் தானம் செய்தவர். கொடியேற்றத்திற்குக் கொடித் துணி தருபவர்.
ஸ்தலனதவரு :- ஸ்தலத்தைச் சேர்ந்தவர். பட்டகாரருக்கு ஸ்தலனதவரு என்று பெயர்.
அண்டிண்டிதவரு,
குண்டோடிதவரு,
 புக்கராஜீதவரு,
 குசயாவிதவரு,
 கொத்தியிண்டிதவரு,
ஜலுகுதவரு,
குடிரிதவரு,
 சாமந்திதவரு,
ஜீனிகிதவரு,
சூர்யகுலதவரு,
ஹொபயணதவரு.

சிவவாக்கியர்


குரு:-

காலம்:-

சீடர்கள்:-

சமாதி:கும்பகோணம்

சிவ சிவ என்று கூறியபடியே பிறந்ததால் சிவவாக்கியர் என அழைக்கப்பட்டார். வைத்தியம், வாதம், யோகம், ஞானம் பற்றி பாடல் இயற்றியுள்ளார். இவரது பாடல்கள் சிவவாக்கியம் என அழைக்கப்படுகிறது.

6/19/13

81 .சோமக மகரிஷி கோத்ரம்

யமுனா நதிக்கரையில் வசித்த ஒரு முனிவர். இவருக்கு யமுனா நதியிடமாக அர்க்கதந்தர் என்னும் முனிவர் மகனாகப் பிறந்தார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஸ்ரீ ராமுலதவரு :- ஸ்ரீ ராமனை வீட்டு தெய்வமாகவும் ஸ்ரீ ராமநவமி விழாவையும் கொண்டாடுபவர்.
கலிசெட்டிதவரு :- கலிசெட்டி வம்சாவளியினர்.
கலைவிதவரு :- கலைகளில் வல்லவர்.
காருபர்த்திதவரு :- ஆந்திராவில் உள்ள காருபர்த்தி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
காஞ்சனதவரு :- தங்க வியாபாரம் செய்தவர். தங்கமானவர்.
கினிசெட்டிதவரு :- கினிசெட்டி என்பவரின் வம்சத்தினர்.
குந்ததவரு :- வாசனை திரவியங்களுள் குந்தம் ஒன்று. இது பற்றி வந்த ஒரு பெயர்.
கோகிலதவரு :- கோகிலம் - குயில்; குயில் போல இனிய குரல் உடையவர்.
செங்கனதவரு :- செங்கஞ் செடியின் கீழ் வீட்டுத் தெய்வ வழிபாடு செய்பவர்.
சின்னகுட்லாதவரு :- சிறிய கொட்டகையில் வசித்தவர்.
சின்னதவரு :- சின்னம் - தங்கம். தங்கவணிகம் செய்தவர்.
தூபம்தவரு :- அம்மனுக்கும் ஆலயங்களுக்கும் தூப திரவிய தருமம் செய்பவர்கள்.
பக்தராஜூதவரு :- ராஜ பக்தி கொண்டவர்.
பூஜைநேசதவரு :- பூசனை வழிபாடுகளில் நேசம் கொண்டவர்.
ப்ரம்மதந்த்ரதவரு :- பிரம்மத்தைப் பற்றிய நூல்களில் - வேதாந்த சாஸ்திரங்களில் - வல்லவர்
பண்ணதவரு :- சாயத் தொழில் நடத்துபவர்.
பண்ணதசரதவரு, குர்ரெம்தவரு, கிட்டாதவரு, குடம்தவரு.

சட்டைமுனி


குரு:போகர்

காலம்:880 ஆண்டுகள், 14 நாட்கள்

சீடர்கள்:சுந்தரானந்தர், பாம்பாட்டி

சமாதி:ஸ்ரீரங்கம்

சட்டைமுனி சிங்கள நாட்டில் பிறந்ததாக கூறப்படுகிறது. போகரின் சீடரான இவர் வேதியியலில் சிறந்து விளங்கினார். வேதியியல் குறித்து வாத காவியம் எனும் நூலை இயற்றினார்.

6/18/13

80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அவுலபல்லதவரு :- ஆந்திராவில் உள்ள அவுலபல்ல என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கந்துகூரிதவரு :- ஆந்திராவில் உள்ள கந்துகூரி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கல்லூரிதவரு :- ஆந்திராவில் உள்ள கல்லூரி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சங்கதவரு :- சத்சங்கத்தில் பிரியம் கொண்டவர். எப்போதும் உத்தமர்களுடன் சேந்துதான் காணப்படுவர்.
துபாகிதவரு :- துப்பாக்கி வைத்து இருப்பவர். 32 விருதுகளில் பிற்காலத்தில் துப்பாக்கியும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது.
கட்டாதவரு, நிறபம்தவரு.

மலையாண்டி பாளையம் செளடேஸ்வரி அம்மன்


இராமத்தேவர்


குரு:புலஸ்தியர், கருவூரார்

காலம்:-

சீடர்கள்:சட்டைமுனி, கொங்கணவர்

சமாதி:அழகர் மலை

இஸ்லாமிய மதத்தால் ஈர்க்கப்பட்டு, இஸ்லாமிய கோட்பாடுகளை கடைபிடிக்கலானார். அங்கு இவர், யாக்கோபு என அழைக்கப்பட்டார். தமது ஞான சித்தியால் நபிகள் நாயகத்தின் ஆன்ம தரிசனம் பெற்றார். அதன் பின் பல நூல்களை அரபு மொழியிலேயே எழுதியதாக கூறப்படுகிறது. ஒரு சமயம் அங்கு வந்த போகர், இவருக்கு தரிசனம் அளித்தார். போகரின் ஆணைப்படி மெக்காவை விட்டு நீங்கி நாகை வந்து சட்டநாதரை வணங்கி, தாம் அறிந்தவற்றை தமிழில் நூலாக இயற்றினார்.

6/17/13

79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம்

நரசிம்ம மூர்த்தியின் பூஜா விதிகளைக் கேட்டு மேன்மை பெற்றவர். மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டவர். வேறு வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

உங்கரதவரு :- உங்கர - மோதிரம். மோதிரம் அணிந்தவர்.
கொண்டஊவினதவரு :- கொண்டையில் பூ வைத்துக் கொண்டவர்.
தத்துவதவரு :- வேதாந்த, தத்துவ, விசாரங்களில் வல்லவர்.
போஜனதவரு :- போஜனம் - அன்னம். அன்னதானம் செய்தவர்கள்.
போதனதவரு :- போதனை செய்பவர்.
பெண்டனதவரு :-

பதஞ்சலி


குரு:நந்தி

காலம்:5 யுகம், 7 நாட்கள்

சீடர்கள்:-

சமாதி:ராமேஸ்வரம்

இவர் ஆதி சேஷனின் அம்சமாக அவதரித்தார். வியாக்ர பாத்ருடன் தில்லையில் இருந்து சிவ தாண்டவம் கண்டார். பதஞ்சலி யோக சூத்திரம் எனும் உயரிய நூலை இயற்றினார்.

6/16/13

78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறும், இக்கோத்திரத்தினுள் காணப்படும் கரீபைசனதவரு, பிச்சனதவரு, பிஜ்ஜலதவரு என்னும் மூன்று வங்குசங்களுக்கும் விவரம் புலப்படவில்லை.

பாம்பாட்டி சித்தர்

 

குரு:சட்டைமுனி

காலம்:123 ஆண்டுகள், 32 நாட்கள்

சீடர்கள்:-

சமாதி:மருதமலை

"ஆடு பாம்பே" என பாம்பை முன்னிறுத்தி பாடல்கள் இயற்றியதால் இவர் பாம்பாட்டி சித்தர் என அழைக்கபடுகிறார். பாம்பாட்டி சித்தர் பாடல்கள், சித்தராரூடம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

6/15/13

77 .சுத்மல மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அயில்லதவரு :- அயிலு - சிறுபெண்; பெண் குழந்தைகளைத் தெய்வமாகப் பாவித்து பூசனை செய்பவர்கள்.

மச்சமுனி


குரு:அகத்தியர்,பிண்ணாக்கீசர், பசுண்டர்

காலம்:300 ஆண்டுகள், 62 நாட்கள்

சீடர்கள்:கோரக்கர்

சமாதி:திருபரங்குன்றம்

பிண்ணாக்கீசரிடம் மாணாக்கராக இருந்து உபதேசம் பெற்றார். ஹத யோகம், தந்திர யோகம் குறித்த நூல்களை இயற்றியுள்ளார்.

6/14/13

76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம்

சுகம்=கிளி; சுகோத்பவர் எனில் கிளியிடம் தோன்றியவர் என்று பொருள். எனவே இந்த மகரிஷி; சுக மகரிஷியே யாவர். எனவே இவ்விரண்டு கோத்ரங்களும் 75ம் - 76ம் ஒன்றே.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

காமவார்த்ததவரு :- கேட்பவர் ஆசைப்படும் வண்ணம் பேசுபவர்.
சிருங்கிதவரு ;- சிருங்கி மகரிஷியை வழிபடுபவர்.
புனுகுதவரு :- புனுகுப்பூனையை வளர்த்துப் புனுகு தந்தவர்.
போதனதவரு :- மற்றவர்களுக்குச் சத்விஷயங்களைப் போதிப்பவர்கள்.

குதம்பை சித்தர்


குரு:அழுகுணி சித்தர்

காலம்:-

சீடர்கள்:-

சமாதி:மாயவரம்

இவர் பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைத்து பாடல்கள் பாடியுள்ளார்.இவரது பாடல்களில் இவர் தமக்கு தாமே உபதேசம் போல் அமைந்த பாடல் சிறப்பு மிக்கவை.

பதில் : கேள்வி : வீரமுட்டி என்பது யார் ? அம்மன் விழாக்களில் அவர்பங்கு என்ன ?

இவர் வீரபத்ரன் என அழைக்கப்பட்டு வீரமூட்டி யாகி பின்பு வீரமுட்டி யாக மருவியவர்.

இவர் அம்மனின் தளபதி. வீர குமாரர்களுக்கு தலைவர். 

வீரகுமாரர்களுக்கு உற்சாகமூட்டுபவராகவும் ஆக்றோசமூட்டுபவராகவும் உள்ளார்.

அவர் எலுமிச்சம் பழத்தைக் கடிச்சிகிட்டு ஒரு முறை முறைச்சார்னா, குழந்தைகள் எல்லாம் அலறும். பெண்கள் பயந்து ஒளிய ஆரம்பிச்சிருவாங்க.. அவருக்கு ராஜ மரியாதைதான். இவர் கையில் குழந்தையைக் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினா குழந்தை வீரமா வளரும்னு ஒரு நம்பிக்கை.

வீரபத்திரர் வேஷம் போடறவர் நல்லா குண்டா உயரமா பெரிய கண்களோட இருப்பார். அவருக்கு தலைப்பாகை கட்டி உடலெல்லாம் ரோஸ் பவுடர் போட்டு பெரிய மீசை, நெத்தியில பட்டை, இடுப்பில ஆஞ்சநேயர் மாதிரி பளபளன்னு மின்னுற கச்சை கட்டி, காலில சலங்கை முதுகுல பெரிசா லிங்க வடிவத்தில ஒரு பாய்மரம் மாதிரி ஒண்ணைக் கட்டி கையில் பெரிய வாளும், வாயில் ஒரு எலுமிச்சம் பழமும் கொடுத்திருப்பாங்க. சிவப்பு லிப்ஸ்டிக் போட்ட வாய் கோரைப்பல். சிவப்பு கருப்பு வெள்ளையில் உடலில் முகத்தில் வண்ண வண்ண அலங்காரம் பண்ணி பார்க்கவே முனியப்பன் மாதிரி ஒரு கம்பீரமா இருப்பார்.

இவருடைய முக்கிய வேலைகள் கூட்டத்தை உற்சாகப்ப்டுத்தறது, யாராவது செருப்பு போட்டுகிட்டு இருந்தாலோ, கருப்பு டிரஸ் போட்டிகிட்டு இருந்தாலோ அவரை சாமி வர்ர வழியில இருந்து அப்புறப்படுத்த வைப்பது அப்புறம் முக்கியமா சாமிக் கரகம் எடுத்தவர் வரமாட்டேன் என அடம் பிடிக்கும் போது தண்டகம் சொல்லி வீரகுமாரர்கள் அழைத்தும் சாமி முன்னே வரலைன்னா போய் சாமியை அழைக்க வேண்டியது. 

6/13/13

75 .சுக மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு :- இவர் வேத வியாசரின் குமாரர். வேதவியாசருக்கு அரணியிடமாகப் பிறந்தார். பிறந்தவுடன் மகா ஞானியாய்ப் பிரம்ம ஞானியாய் இருந்தார். நாரதமா முனிவர் இவர்க்கு மேலும் ஞானோபதேசம் செய்தார்.

முழுஞானம் பெற்ற இவர் சுகப்பிரம்மம் என்று அழைக்கப்பட்டார். தந்தையைப் பிரிந்து தவத்திற்குச் சென்றார். இவரின் பிரிவு தாங்காத வியாசர் மகனே! மகனே! என்று அழைத்துப் பின் செல்ல தாவரங்கள் அனைத்தும் ஏன்? ஏன்? என்று பதில் கூறின. எனவே சுகப்பிரம்மம் அனைத்திலும் வியாபித்து இருக்கின்றார் என்று அறிந்தார் வியாசர்.

தந்தையைக் காட்டிலும் தவவன்மை மிக்கவர் சுகப்பிரம்மம். சனகரிடமும் ஞான உபதேசம் பெற்றார்.

வியாசரும் சுகரும் ஒருமுறை நதிக்கரை வழியே சென்று கொண்டு இருந்தனர். நதியில் தேவப்பெண்கள் நீராடிக்கொண்டு இருந்தனர். முன்னால் சென்ற சுகமகரிஷியைக் கண்டும் கவலையின்றி நீராடிய தேவப்பெண்கள் பின்னால் வந்த வியாசரைக் கண்டு வெட்கமுற்று ஆடைகளால் உடலை மறைத்தனர்.

இதனைக்கண்டு வியந்த வியாசர் அவர்களிடம் காரணம் கேட்டார். என்மகன் வாலிபன், அவனைக்கண்டு வராத வெட்கம் கிழவனான என்னைக்கண்டு உங்களுக்கு வந்ததேன் என்று கேட்டார்.

சுவாமி! அதோ பாருங்கள் உங்கள் மகன் எதனையும் காணாது சென்று கொண்டு இருக்கின்றார். அவர் கண்களுக்கு அனைத்தும் பிரம்மமாய்த் தோன்றுகின்றன. உமக்கு அப்படி இல்லையே! ஆண் பெண் என்னும் வேறு பாடுகள் உமக்குத் தெரிகின்றன. அதனால் உங்களைக் கண்டவுடன் வெட்கமுற்றோம் என்றனர் தேவப் பெண்கள்.

எனவே அனைத்திலும் பிரம்மத்தைத் தரிசிக்கும் பக்குவம் சுகமகரிஷிக்கு இருந்தது.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

காருபா்த்திதவரு :- ஆந்திராவில் உள்ள காருபா்த்தி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
அரணியதவரு :- அரணி - நெருப்பு, நாள்தோறும் தவறாது யாகம் செய்பவர்.
கங்காதவரு :- கங்கா தேவியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்.
கண்டசரதவரு :- கண்டம் - கழுத்து. கழுத்தில் சரம் அணிந்தவர். கண்டசரம் என்னும் அணியை அணிந்தவர்.
குடிகலதவரு :- ரம்பம்போல் உள்ள நெல்லரிவாள். இதனுக்குத் தெலுங்கில் குடகோலி என்றும் கன்னடத்தில் குடகோல் என்றும் பெயர். இப்பெயர்தான் குடிகேலாரு என மாறி உள்ளது.
இவர்கள் மிக்க செல்வந்தர்களாக நிலபுலன்களோடு வாழ்ந்து இருந்தவர்கள். அறுவடைக்காக ஏராளமான குடகோலிகளை வைத்து இருந்து இருக்கின்றனர். குடகோலிகளை வியாபாரம் செய்து இருக்கலாம்.
குர்ரம்வாரு :- குர்ரம்-குதிரை. குதிரைச் செல்வம் மிக்கவர். குதிரை வாகனம் உடையவர்.
கெரடிதவரு :- சிலம்ப விளையாட்டிற்குக் கெரடி என்று பெயர். சிலம்பத்தில் வல்லவர்.
துபாகிதவரு :- துப்பாக்கி வைத்து இருப்பவர். விருதுகளில் ஒன்றாக பிற்காலத்தில் துப்பாக்கியும் சேர்க்கப்பட்டது.
நாகப்பதவரு :- நாகராஜ வழிபாடு செய்பவர். நாகப்பன் என்பவர் வம்சாவளியினர். குடும்பத்தில் முதல் மகனுக்கு நாகப்பன் என்றும் முதல் மகளுக்கு நாகம்மா என்றும் பெயர் சூட்டுபவர்கள்.
நேபாளதவரு :- நேபாளதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ராமனதவரு :- ஸ்ரீ ராமனை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்.
அரசணதவரு :- மஞ்சள் நிறம் உடையவர்.
கங்காதரதவரு :- கங்காதரனை வீட்டுத் தெய்வமாகக் கொண்டவர்.
கல்யாணதவரு :- மங்களமானவர். மங்கள காரியங்களைத் தர்மமாக நடத்திக் கொடுப்பவர்.
கர்ஜினைதவரு :- மேக முழக்கம் போல் கர்ஜிப்பவர். பேசினால் கர்ஜினையாக இருக்கும்.
தசிமாணிக்யதவரு :- மாணிக்கம் முதலான ரத்தின நுணுக்கங்கள் உணர்ந்தவர்.
வாசிதவரு :- வாசியோகம் கற்றவர்.
முத்துதவரு :- முத்து நகை அணிபவர்.
ராகதவரு :- ராகதீபம் எடுப்பவர்.
மேளதவரு :-
நெரதாதவரு :- நிர்ணயம் தவறாதவர்.
பில்லளதவரு :- அதிகமான மக்களைப் பெற்று வாழ்ந்தவர்.
ப்ருத்திவிதவரு :- பிருதிவியை - மண்ணை வணங்குபவர்.
மரளிதவரு :- மரளி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மாதனதவரு :- செல்வந்தர்களாக வாழ்ந்தவர்.
இந்தனதவரு :- யாகத்திற்குச் சமித்துக்கள் கொடுத்தவர்.
வ்ராசேட்டிதவரு :- சித்திரக்கலை வல்லவர்.
அரகணதவரு :- அரகணதவரு என்பது அரசணதவரு என்றும் வழங்கப்படுகிறது.
கராதவரு, கெட்யம்தவரு, கரதிலம்தவரு, சண்டாதவரு, சினகூடதவரு, நிடதலதவரு, பக்குலதவரு, பம்மிதவரு, பெக்குலதவரு, முசலிதவரு.

கோரக்கர்


குரு:தத்தாத்ரேயர், மச்ச முனி, அல்லமா பிரபு

காலம்:880 ஆண்டுகள், 32 நாட்கள்

சீடர்கள்:நாகர்ஜூனா

சமாதி:போயூர்

மச்சமுனியின் அருளால் கோசாலையில் இருந்து அவதரித்தவர். அல்லமாத்தேவரிடம் போட்டியிட்டு தன்னையும் விஞ்சியவர் அல்லமாத்தேவர் என்பதை உணர்ந்து அவரிடம் அருளுபதேசம் பெற்றார்.போயூர் என்ற இடத்தில் சமாதி அடைந்தார்.

6/12/13

74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அல்லகதவரு :- அல்லகம்=பின்னல்; சொற்களை மேலும் மேலும் பின்னிச் சொல்லும் ஆற்றல் உள்ளவர்.
தாராதவரு :- தாரா தேவியைப் பூசிப்பவர்.
பஞ்சார்த்திதவரு :- ஐந்து திரி போட்ட பஞ்சார்த்தி கொண்டு வழிபடுபவர்.
துத்தூரபுஷ்பம்தவரு :- சிவனுக்குப் பரீதியான ஊமத்தை பூக்கொண்டு வழிபடுபவர்.
ரேல்லகதவரு :- ரேல்லகம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
வல்லலதவரு :-
ஹெபனதவரு :-

கொங்கணர்


குரு:போகர்

காலம்:800 ஆண்டுகள், 16 நாட்கள்

சீடர்கள்:557 சீடர்கள்

சமாதி:திருப்பதி

இவர் போகரின் சீடர். அத்தோடு, இவர் பல மகான்களை சந்தித்து ஞானம் அடைந்தார். கொங்கணர் கடைக்காண்டம், ஞானம், குளிகை, திரிகாண்ட என பல நூல்களை இயற்றியுள்ளார்.

6/11/13

கேள்வி : வீரமுட்டி என்பது யார் ? அம்மன் விழாக்களில் அவர்பங்கு என்ன ?



சித்துகொள்னேரு குல தெய்வம் பூளவாடி ஸ்ரீ வேங்கடநாத சுவாமி


73 .சிருங்கி மகரிஷி கோத்ரம்

விபண்டக மகரிஷியின் குமாரர் இம்மகரிஷி. வேதம் எனும் கொடி தன் மீது படர் கொழுகொம்பாக இருந்தவர். வேதங்களில் மிகவும் வல்லவர். சிறந்த தவசி. இவர்க்குத் தலையில் மான் கொம்பு ஒன்று முளைத்து இருந்தது. மான் வயிற்றிலிருந்து பிறந்தார்.

சிருங்கம் = மான்.

அங்க நாட்டை உரோமபாத மன்னன் அரசாண்டு வந்தான். அவன் நாட்டில் மழை இன்றிக் கடும் பஞ்சம் ஏற்பட்டது. ரிஷ்ய சிருங்கர் அங்க நாட்டில் காலடிவைத்தால் மழை பொழியும் என்று கூறினர். தவசிகளை மட்டுமே பார்த்து வளர்ந்தவர் இம் மகரிஷி அவரை எப்படி அழைத்து வருவது என்று புரியாமல் அனைவரும் தடுமாறி நின்றனர்.

இரண்டு வேசையர் அப்பெரும் பணியை ஏற்றனர். தவசிகளைப் போன்ற வேடம் இட்டனர். விபண்டகமுனிவர் இல்லாத நேரம் பார்த்து ரிஷ்ய சிருங்கரின் ஆசிரமம் சென்றனர். ரிஷ்ய சிருங்கர் இவர்களைத் தவசியாக எண்ணி வரவேற்றார். நன்றாக உபதேசித்தார்.

இங்ஙனமே விபண்டகர் இல்லாத நேரம் பார்த்து ஆசிரமம் சென்று ரிஷ்ய சிருங்கரின் நட்பினைப் பெற்றனர். அவரின் நம்பிக்கைக்கு உரியவர் ஆயினர்.

தம் ஆசிரமத்திற்கு வருகை தந்து தம் உபசரிப்பினை ஏற்க வேண்டும் என வேண்டினர் போலித்தவசிகள். ரிஷ்ய சிருங்கர் அழைப்பினை ஏற்றுக் கொண்டு அவர்களுடன் கிளம்ப அவர்கள் முனிவரை அங்க நாட்டு எல்லைக்குள் அழைத்துச் சென்றனர்.

முனிவரின் திருவடிப்பட்டவுடன் நாடு மலிய மழை பொழிந்தது. உரோ'மபாதன் முனிவரின் வருகையைப் பெய்த மழையால் உணர்ந்தான். முனிவரைத் தன் நாட்டு எல்லையில் வரவேற்றான். வேசையரின் சூழ்ச்சியை எண்ணி சினம் கொண்ட அவரை மன்னன் சமாதானப்படுத்தினான். பெருமானே! தங்கள் வருகையால் இந்நாட்டு மக்கள் மற்றும் உயிரினங்கள் அனைத்தும் மழை பெற்று உயிர் பிழைத்தனர் என்று பணிந்த மன்னனை மணம் மகிழ்ந்து ஆசிகள் வழங்கினார் முனிவர். அரண்மனைக்கும் விஜயம் செய்தார்.

உரோமபாதன் தன் வளர்ப்பு மகள் சாந்தையை முனிவருக்கு மணம் முடித்துத் தந்தான். இச்சாந்தை தசரத மன்னரின் மகள். இப்பெண்ணை உரோமபாதன் தத்தெடுத்து வளர்த்து வந்தான்.

தசரத மன்னன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்யத் தன் குலகுரு வசிஷ்டரின் ஆலோசனைப்படி ரிஷ்ய சிருங்கரை அழைத்துச் சென்றான். ரிஷ்ய சிருங்கர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய அதனால் இராமன், பரதன், இலக்குவன் சத்ருக்கனன் ஆகியோர் பிறந்தனர் என்பன போன்ற வரலாற்றினை இராமாயணத்துள் காணாலாம்,

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கடிதவரு :- உறுதி உடையவர்.
கடுபுலதவரு :- இப்பெயர்தான் கடுபேலாரு என்று வழங்கப்படுகின்றது. கடுப்பு என்றால் தெலுங்கில் வயிறு. இதனைப்பற்றி வந்த ஒரு பெயர்.
குக்கிள்ளதவரு :- அவரை முதலிய நவதான்யங்களைச் சுண்டலாகச் செய்து நிவேதனம் செய்பவர்.
சந்தாதவரு :-
துக்குலதவரு :- துக்குக்கெச்சாள. துக்கு வியாபாரம் செய்தவர். - கெச்சாள வியாபாரம் செய்தவர்.
புட்டாதவரு :-
பூடிதவரு :- சென்னைக்கு அருகில் உள்ள பூடி என்னும் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
முச்சளதவரு :-
கட்டியதவரு :-
காடலதவரு, சல்லாதவரு, ரூகலதவரு, கண்டுபலதவரு, மாசந்ததவரு, முகலிதவரு, குன்ச்சதவரு, மாடதவரு, கடபியதவரு - கடப்பா மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர், குக்கேதவரு, முவ்வலதவரு.

கருவூரார்


குரு:போகர்

காலம்:300 ஆண்டுகள், 42 நாட்கள்

சீடர்கள்:இடைக்காடர்

சமாதி:கரூர்

இவர் போகரின் சீடர். தஞ்சை பெரிய கோவில் உருவாக பெரிதும் உறுதுணையாக இருந்தார். கருவூரார் பூசாவிதி என்னும் நூலைச் செய்தவர்.

ஸ்ரீ சௌண்டம்மன் திருக்கோவில் { கொண்டலாம் பட்டி சேலம் }


6/10/13

72 .சிருக்க மகரிஷி கோத்ரம்

இம்மகரிஷி சிருங்கி மகரிஷியாக இருக்க வேண்டும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கடிதவரு ;- உறுதியான தன்மை கொண்டவர்.
மாவந்திதவரு :-

கமலமுனி


குரு:போகர், கருவூரார்

காலம்:4000 ஆண்டுகள், 48 நாட்கள்

சீடர்கள்:குதம்பை சித்தர், அழுகுணி சித்தர்

சமாதி:ஆரூர்

இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ்ப் பெற்றார். "கமலமுனி முந்நூறு'' என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் செய்துள்ளதாகத் தெரிகின்றது.

படவேடு சிம்மாசனம்

சோணாசலமடம் முன்னர் திருவண்ணாமலையில் இருந்தது. இப்போது இது படவேடு என்னும் ஊரில் இருக்கின்றது. இது கலியுகாதி 4609 பிரபவ ஆண்டில் பண்டிதாராத்ய சுவாமிகள் வழி வந்த ருத்ரமூர்த்தி சுவாமிகளால் நிறுவப்பட்டது. இப்பரம்பரையினர் இப்போது படவேட்டுக்குப் பக்கத்திலிருக்கும் ஒண்ணுபுரத்தில் வசிக்கின்றனர். இவர்கள் வரதந்து மகரிஷி கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.


பண்டிதாராத்யரின் தாயார் பொப்பாதேவி பெனுகொண்டா என்னும் நகரைச் சேர்ந்தவர். அங்கு நிகழ்ந்த போரின் காரணமாய் கருவுற்றிருந்த அந்த அம்மையார் அந்நகரை விடுப் படவேடு வந்தடைந்தார். உரியகாலத்தில் மகவை ஈன்றார். இக்குழந்தையே பண்டிதாராத்ய சுவாமிகள் ஆவார். இவர் வேதாகம சாத்திரங்களைக்கற்று குருநாதராய்த் திகழ்ந்தார். பலர்க்கும் பஞ்சாட்சர உபதேசமும் சிவதீட்சையும் அளித்து பெரும்புகழோடு இருந்தார். இவருடைய பெருமையை அறிந்த அந்நாட்டு மன்னர் வள்ளாள மகாராஜன் இவரை அடைந்து இவரிடம் லிங்கபூஜை செய்யும் விசேஷ தீட்சையும் உபதேசமும் பெற்றுக்கொண்டார் என்றால் இவர் பெருமையை நாம் சொல்லவும் வேண்டுமா?

இவரிடம் வாதுக்குவந்த சமயவாதிகள் பலர் வாதத்தில் தோற்றுச் சிவதீட்சை பெற்றுச் சைவராயினர்.

ஒருசமயம் சில மறையவர்கள் இவரிடம் வந்து ' தீட்சை அளிக்கும் பேறு உமக்கேது? ' என்று வாது செய்தனர். அப்போது சுவாமிகள், தேவலரின் மரபில் வந்த எமக்கன்றி மற்றையோர்க்கு இயல்பன்று என்றார். அதற்கு அம்மறையவர்கள் ' நாங்கள் பிரம்மாவின் முகத்திலிருந்து தோன்றியவர்கள். அதனால் நாங்கள் மற்ற வருணத்தாரினும் மேலானவர்கள். நாங்களே தீட்சையளிப்பதற்கும் உபதேசம் செய்வதற்கும் உரியவர்கள். மற்றவர்களுக்கு அத்தகுதி இல்லை; என்றனர். அதற்குச் சுவாமிகள் ' பிராம்மணவம்ச முனிவர்கள்' தவளை வயிற்றில், நரிவயிற்றில், வண்ணாத்தி செம்படவச்சி முதலியவர்களின் வயிற்றில் தோன்றியதாக வரலாறு இருக்கிறதே ஒழிய இவர்கள் எவரும் பிரம்மாவின் முகத்திலிருந்து தோன்றியதாக வரலாறு இருக்கவில்லையே! நாங்களோ, சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய தேவல முனிவரின் நேர்வழி வந்தவர்களாயுள்ளோம். அதனால் நாங்களே இயல்பான பிராம்மணர்களாவோம். எங்கள் மூதாதை தேவலமுனிவர்தான் முதல் முதல் பிராம்மணர்களுக்கும் மற்றவர்களுக்கும் மந்திரோபதேசத்தோடு பூணூலை அணிவித்தார். அவர் தமது 6 வது அவதாரத்திலும் எல்லாருக்கும் மந்திரோபதேசமும் சிவதீட்சையும் அளித்துள்ளார். இம்மேலான செயல் இப்பரம்பரையில் தொடர்ந்து வந்திருக்கிறது. இவர்கள் வழி வந்த நானும் செய்கிறேன். ஆகையால் உபதேசம் செய்வதற்கும் தீட்சையளிப்பதற்கும் தேவாங்கப் பிராம்மணர்களாகிய எங்களுக்கே இயல்பான உரிமை உண்டு. என்று கூறி அவர்களைத் தெருட்டினார். அவர்களும் தெளிவு பெற்று அவரை வணங்கி அவரிடம் பஞ்சாட்சர உபதேசமும் சிவ தீட்சையும் பெற்றுக் கொண்டனர்.

சுவாமிகளுக்குப் பின் அவருடைய பரம்பரையினர் குருபீடம் வகித்துச் சைவநெறியைப் போற்றி வந்தனர்.

அந்நாட்களில் செஞ்சி மன்னன் ஜெயசிங்கனுக்கும் ஆற்காடு நவாபிற்கும் போர் நடந்தது. அப்போர் திருவண்ணாமலையிலும் நிகழ்ந்தது. போர் வீரர்களின் அட்டூழியங்களுக்கு அஞ்சிப் பல்லாயிரம் தேவாங்க மக்கள் திருவண்ணாமலையை விட்டுப் படவேடுக்குக் குடிபெயர்ந்தனர். இங்கு குடியேறிய பண்டிதாராத்ய பரம்பரையினரில் ஒருவராகிய குரு ருத்ரமூர்த்தி சோணாசலமடத்தை நிறுவினார். இந்த பரம்பரை 3966 முதல் 5049 வரை 32 குருமார்களைக்கொண்டு தொடர்ந்து வருகின்றது. 32 வது பீடாதிபதி குரு சாம்பலிங்கமூர்த்தி சுவாமிகள் ஆவார்.

தேவாங்க புராணம் முற்றிற்று.

6/9/13

திருமண வரன் பதிவு

நண்பர்களே !.

உங்கள் வேண்டுகோளுக்கினங்க இந்த பகுதி துவங்கப்பட்டுள்ளாது . முதன்மை இணையதளம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இது தேவாங்க சழூக மக்களுக்கான இலவச பகுதியாகும் ஆகையால் அனைவரும் பயன்படுத்தி பலன் பெறவும்.

அனைவருக்கும் தெரியபடுத்தவும் . உங்கள் ஆதரவு மட்டுமே இத்தளத்தை மேன்படுத்த உதவும். எனவே வரன் தேடும் உங்கள் உறவினர்களுக்கும் பதிவு செய்து உதவுங்கள்.


71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சீரியதவரு ;- கர்நாடகாவில் உள்ள சீரிய என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
துண்டதவரு ;- துடுக்குத்தனம் நிறைந்தவர்.
புட்டாலதவரு ;- கர்நாடகாவில் உள்ள புட்டால பட்டணம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பூஷணதவரு ;- ஆபரணம் அணிவதில் விருப்பம் கொண்டவர்.
மைத்ரேயிதவரு ;- மைத்ரேய மகரிஷியை வீட்டு தெய்வமாக வணங்குபவர்.
முடுகிதவரு ;- கொள்ளேகாலம் அருகில் முடுகுதுறை என்னும் ஊர் இருக்கின்றது. அவ்வூரில் 12 ஆண்டுகட்கு ஒருமுறை பஞ்சலிங்க தரிசனம் செய்கின்றனர்.
குல்லுபத்திதவரு, பிரிணதவரு, புண்டகுத்திதவரு, ரத்காரதவரு.

சிம்மாசனங்கள் குருபீடங்கள்

தேவாங்கக்குலத்தில் சமயத்துறைக்கும் சில அமைப்புக்கள் உள்ளன. அவை சிம்மாசனங்கள் குருபீடங்கள் மடங்கள் முதலியனவாகும்.

சிம்மாசனாபதிகள் பட்டங்கள் செட்டிமைகள் வழங்குவார்கள்.

குருபீடங்கள் புரோகிதர்களை நியமிப்பார்கள். மடத்து குருக்கள் இளைஞர்களுக்குத் தீட்சை செய்து பூணூல் அணிவித்து உபதேசம் செய்வார்கள். இவ்வாறுள்ள அமைப்புக்களில் சிம்மாசனங்கள் நான்காகும்.

இவை

1. சகரை

2. முதுநூரு

3. பெனுகொண்டா

4. படவேடு

என்னும் ஊர்களில் உள்ளன.

சகரை காசிக்கு அருகிலும் முதுநூரு கோதாவரிக்கு அருகிலும், பெனுகொண்டா அனந்தப்பூர் வட்டத்திலும், படவேடு வடாற்காடு வட்டத்திலும் இருக்கின்றன. இப்போது இச்சிம்மாசனபீடங்கள் அழிந்து போயின.

குருபீடங்கள்

1. காசி

2. ஸ்ரீ சைலம்

3. ஹேமகூடம்

4. சோணசலம்

5. சம்புசைலம்

என்னும் ஐந்து இடங்களில் இருந்தன. இவையும் சிதைந்து போயின. இதன் உரிமையாளர்கள் பல ஊர்களுக்குப் போய்விட்டனர்.

காசிமடம் : உத்திரப்பிரதேசத்தில் இருந்தது. இதை நிறுவியவர் கௌசிக கோத்திரத்தைச் சேர்ந்த ரேவணாராத்யர் ஆவார். இம்மடம் இப்போது இல்லை.

ஸ்ரீசைலம்: ஸ்ரீசைலமடம் மல்லிகார்ச்சுன சுவாமி தேவஸ்தானத்துக்கு வடபால் உள்ளது. இம்மடத்தின் குருமார் மேற்கு கோதாவரி மேரி தாலூக்காவில் ஜக்கன்னா பேட்டையில் உள்ளனர். தேவாங்க மக்கள் சிவராத்திரியின் போது மல்லிகார்ச்சுன சுவாமி கோயிலில் கோபுரங்களுக்கு ஆடையை இணைத்துக் கொடி கட்டுகின்றனர்.

ஹேமகூடம்: இது பல்லாரி ஹொசப்பேட்டைக்கு 7 கல் தொலைவிலுள்ள பம்பா நதிக்கரையில் விருபாட்சசுவாமி கோயிலுக்குத் தெற்கே இருக்கின்றது. இம்மடத்தின் ருகுசந்ததியார் ஹொசப்பேட்டையில் உள்ளனர்.

சோணாசலமடம்: இது முன் திருவண்ணாமலையில் இருந்தது. இப்போது படவேட்டில் இருக்கின்றது. இம்மடத்தைச் சார்ந்த குருவம்சத்தார் ஒண்ணுபுரத்தில் இருக்கின்றார்கள்.

சம்புசைலமடம்: இது கொள்ளேகாலத்துக்கு அருகில் உள்ள சம்புலிங்கன் பேட்டாவில் இருக்கின்றது. இதை நிறுவியவர் கஹனாராத்யர்.

இடைக்காடர்


குரு:போகர், கருவூரார்

காலம்:600 ஆண்டுகள், 18 நாட்கள்

சீடர்கள்:குதம்பை சித்தர், அழுகுணி சித்தர்

சமாதி:திருவண்ணாமலை

இவர் இடைக்காடு எனும் ஊரில் வாழ்ந்தவர். இவரது பாடல்கள் உலகவியல்பினை, நிலையாமையை, உணர்ந்து இறைவன் அருளை நாடும் இன்றியமையாமையைப் பொதுவாக அடிப்படைக் கருத்தாக உடையனதாண்டவக்கோனே, கோனாரே, பசுவே, குயிலே என விளித்துப் பாடிய பாடல்கள் நாட்டுப்பாடல் மரபினைக் காட்டுகின்றன. இவர் திருவண்ணாமலையில் சித்தி அடைந்தார்.

6/8/13

70 .சானக மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கட்டம்தவரு :- ஹோமத்திற்குச் சமித்துக்கள் தருபவர்.
கோரங்கதவரு :- கன்னட நாட்டில் உள்ள கோரங்கம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பாலதவரு :- சந்தான கோபால சுவாமியை வணங்குபவர்.
மோபூருதவரு :- கோதாவரி மாவட்டத்தில் உள்ள மோபூரு என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
வார்த்தாகாவிவாரு :- செல்லணி, பொருளணி என்ற இருவகை அணிகளில் சொல்லணி பாடுவதில் வல்லவர். சித்ரகவி பாடுபவர்கள். தேனுகாபந்தம், ரிஷபபந்தம் போன்ற கவிகள்.
லக்கெனதவரு, பயள்ளதவரு, நின்ட்னதவரு.

தன்வந்த்ரி



காலம்:800 ஆண்டுகள், 32 நாட்கள்

சமாதி:வைத்தீஸ்வரன் கோவில்

இவர் திருமாலின் அம்சமாக போற்றப்படுகிறார். இவர் ஆயுர்வேத மருத்துவ முறையை மக்களுக்கு அளித்தவர். வைத்தீஸ்வரன் கோவிலில் சமாதி அடைந்தார்

குலம்

தேவாங்கர்களுக்குள் குல விஷயங்கள் நடத்துவதற்காகப் பரம்பரையாகச் சிலருக்குச் சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை 1. பட்டக்காரன் 2. நாட்டுஎஜமானன் 3. செட்டிமைக்காரன் 4. எஜமானன் 5. குடிகள் என்பனவாகும். இம்முறைப்படியே தாம்பூலம் மரியாதைகள் நடைபெறுகின்றன. திருமணம் ஈமச்சடங்குகள் மற்றுமுள்ள நலம் பொலம்காரியங்களை நடத்தச் சமூகத்திலேயே புரோகிதர்களும் கூட்டங்களில் தாம்பூலம் முதலியன வழங்கச் சேசராஜூ என்பவர்களும் உள்ளனர். முன்னைய நாட்களில் கோயிற் பணிகள் செய்யச் சில பெண்களும் கோயிலுக்கு விடப்பட்டனர். அவர்கள் மாணிக்கம் பங்காரு என்று அழைக்கப்பட்டனர். அப்பழக்கம் இப்போது இல்லை. இனிக் குலமக்கள் கோத்திரங்களாகப் பிரிந்துள்ளனர். ஒத்த கோத்திரங்களில் திருமண சம்பந்தம் செய்வதில்லை. வீட்டுப் பெயர்களும் தனித்தனியாக உள்ளன. கோத்திரங்களுக்கு மூலபுருடன் ஒரு ரிஷியாக இருப்பார்.

6/7/13

திருமண தகவல் பக்கம்

நண்பர்களே, நம் குல மக்களுக்காக இலவச திருமண தகவல் பக்கம் அமைக்கலாமா ?

அமைத்தால் உங்கள் ஆதரவு கிடைக்குமா ? உங்கள் கருத்துகளை சொல்லவும் .
கருத்துகளை பொருத்தே பக்கம் அமையும்.


அம்மாபட்டி செளடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா

Ammapatti Soudeswari Karagam Festival 27-5-2013 to 30-5-2013







நன்றி!!!
இன்ப கார்த்தி
9842031941

69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம்

அரக்கு மாளிகையில் இருந்து தன் தாயையும் சகோதரர்களையும் பீமன் காப்பாற்றிக் கொண்டு இடும்ப வனத்திற்கு வந்தான். இவ்விடும்பவனத்திற்கு அடுத்தவனம் சாலிஹோத்ரவனம். இவ்வனம் இம்முனிவர் பெயரால் வழங்கப்பட்டது. இவ்வனத்தில் சாலிஹோத்ர மகரிஷியிடம் சிலநாள் தங்கி இருந்து பாண்டவர் அவரிடம் பல தருமங்களைக் கற்று உணர்ந்தனர். சாலிஹோத்ர முனிவரால் உண்டாக்கப்பட்ட ஒரு தடாகத்தில் பாண்டவர்களையும் குந்தியையும் ஆறுமாதகாலம் மறைவாக வசிக்கச் சொன்னார் வியாசர். இத்தடாகம் பசி, தாகம், களைப்பு முதலானவற்றை நீக்கும் என்று அதன் பெருமையை வியாசர் கூறினார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அரசம்தவரு :- அரசாண்டவர்கள்.
அல்லம்தவரு :- அல்லமாதேவியை வீட்டுதெய்வமாக வணங்குபவர்.
கனகதவரு :- கனகாபரணம் பூண்டவர். தங்கம் போன்ற குணம் கொண்டவர். தங்க வியாபாரம் செய்தவர்.
சங்குதவரு :- சங்கு வைத்து பூசனை செய்பவர்.
பொன்னபுவ்வலதவரு :- புன்னைப்பூக்கொண்டு பூசிப்பவர்.
சுங்குதவரு, பீரம்தவரு.

நம் மக்களை எவ்வாறு அழைப்பது தேவாங்க என்றா ? , அல்லது தேவாங்கர் என்றா ?

நண்பர்களே, இந்த கேள்விக்கான பதில்களை கருத்துக்கள் பகுதியில் வழங்கவும்.

 மேலும் உங்கள் கேள்வி /சந்தேகங்களை   devanga2013@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

வான்மீகர்


குரு:நாரதர்

காலம்:700 ஆண்டுகள், 32 நாட்கள்

சமாதி:எட்டிக்குடி, திருவையாறு

இவர் நாரத முனிவரின் சீடர். இராமாயண இதிகாசத்தை அளித்தவர். எட்டிக்குடு எனும் ஊரில் சமாதி அடைந்தார்.

குல தேவதை

ஸ்ரீ சவுடாம்பிகை அம்மன் தேவாங்கர்களின் குல தெய்வம் ஆகும். தேவாங்க மக்கள் உள்ள எல்லா இடங்களிலும் அம்மனுக்குக்கோயில் இருக்கும். ஆந்திரம் கர்நாடகம், மகாராஷ்டிரம், கேரளம், கலிங்கம், வங்கம் முதலான நாடுகளில் கோயில்கள் உள்ளன. இங்கெல்லாம் அம்மன் சௌடாம்பகை என்றே அழைக்கப்படுகின்றார். ஆனால் மகாராஷ்டிரத்தில் மட்டும் 'வனசங்கரி' என்ற பெயரில் அம்மை கோயில் கொண்டுள்ளார். அங்கு அம்மனுக்கு ' சாகம்பரி ' என்ற மற்றொரு பெயரும் உண்டு. இகோயில் பாதாமிக்கு அருகில் இருக்கின்றது. இதைச்சுற்றி தேவாங்கர்கள் வசிக்கின்றார்கள். இனிக் கல்வெட்டுச் சாசனங்களோடு கூடிய பழங்கோயில்களும் பல ஊர்களில் உள்ளன. இராயலசீமை கதிரி தாலூக்காவில் லேபாட்சி போகும் வழியில் சோளசமுத்திரம் என்னும் ஊரில் சௌடேஸ்வரியம்மன், வீற்றிருக்கும் கோலத்தில் பெரிய வடிவில் உள்ளார். அனந்தப்பூர் ஜில்லா குத்தி தாலூக்கா உபர்சலா கிராமத்தில் ஓர் கோயில் உள்ளது. கர்னூல் நந்தியால் தாலூக்கா ஆத்மகூரில் ஒரு கோயிலும் நந்தவரத்தில் ஒரு கோயிலும், மதனபள்ளி சனபாளையத்தில் ஒரு கோயிலும் உள்ளது. நந்தவரம் கோயிலில் உள்ள அம்மனின் திருவுருவம் காசியிலிருந்து கொண்டுவரப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டதாகும். இந்த தேவியின் பெயரால்தான் தண்டகங்கள் கூறப்படுகின்றன. ' நந்த வரமந்து நிலகொன்ன நைகதாம்பா ' என்ற தண்டகம் அம்மையைப் புகழ்கின்றது. தஞ்சையில் பாபநாசம் தாலூக்கா கபிஸ்தலத்தில் தேவாங்கர் மடம் ஒன்று இருக்கின்றது. இதில் உள்ள கல்வெட்டின்படி 400 ஆண்டுகளுக்கு முன்னமேயே தேவாங்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து குடியேறினர் என்பதாக அறிகிறோம்.

6/6/13

68 .சாரரத மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கொண்டக்கனதவரு :- கொண்டக்கா என்னும் புகழ் பெற்ற பெண்மணியின் வம்சம். இவ்வம்மை குலத்தலைமை ஏற்றதால் வந்த பெயர். கொண்டா=மலை. மலை போல் உறுதியுடன் இருந்து எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் குலத்தைக் காத்தமையால் இப்பெயர் வந்தது.
இன்றும் பலர் இவ்வம்மையின் நினைவாகத் தங்கள் பெண் குழந்தைகட்கு "கொண்டக்கா" என்று பெயர் சூட்டுகின்றனர்.

கேள்வி/பதில் பக்கத்தை அமைக்கலாமா ? தயவு செய்து வாக்களிக்கவும்.

நம் குலத்தை பற்றிய சந்தேகங்களுக்கு அனைவரும் பங்கேற்கும் வகையில் கேள்வி/பதில்  பக்கத்தை அமைக்கலாமா ? தயவு செய்து வாக்களிக்கவும்.

உதாரணம் : -

கேள்வி : தமிழ்நாட்டில் நமது காயத்ரி பீட ஆசிரமம் எங்கு உள்ளது ? 

பதில்    : திருமூர்த்தி மலை

இதை போல் உங்கள் கேள்விகளையும் கேட்கலாம் பதில் பெறலாம் . உங்களுக்கு தெரிந்த பதிலும் கொடுக்கலாம் .

 வாக்களிக்க வலதுபுரம் பார்க்கவும்.

ராசிபுரம் செளடேஸ்வரி அம்மன்


ராசிபுரம் செளடேஸ்வரி அம்மன்


திருமூலர்


குரு:நந்தி

காலம்:3000 ஆண்டுகள், 13 நாட்கள்

சமாதி:சிதம்பரம்

63 நாயன்மார்களில் ஒருவர். மூலன் என்ற இடையனின் உடலில் புகுந்து ஆண்டுக்கு ஒரு பாடல் வீதமாக 3000 பாடல்களை கொண்டு திருமந்திரம் என்ற நூலை வழங்கினார். சிதம்பரம் நடராஜ பெருமான் கோவிலில் சமாதி அடைந்தார்.

தேவாங்கர் குலம்

ரூபசேனனுக்குப் பின் தேவாங்க குலம் பெருகி நாடெங்கும் பரவி மக்களுக்கு ஆடைகளை நெய்து அளித்துச் செழித்து ஓங்கியது. தேவாங்க மக்கள் யாவரும் தங்கள் ஆசாரத்தை இழக்காமல் சீருடன் வாழவேண்டும் என்னும் கருத்தால் ஏகோராமன் என்னும் விருபாட்சன் சமூகக்கட்டுப்பாடுகளையும் ஒழுக்கநியதிகளையும் வகுத்தான். சமூகக்கட்டுப்பாட்டுக்காக சிம்மாசனபதிகளையும், ஆசார சீலம், தெய்வவழிபாடு முதலியன ஒழுங்காக நடைப்பெறப் பீடாதிபதிகளையும் நியமித்தான். இவ்வாறு அமைத்த அமைப்புக்களில் இப்போது இருப்பவை சிம்மாசனங்கள் 4 பீடங்கள் 5 ஆம். இந்த அமைப்புகளின் வழி, விருபாட்சன் வகுத்த நெறிமுறைகளைத் தேவாங்கக்குலமக்கள் இன்றும் பின்பற்றி நடந்துவருகின்றனர். இனி, தேவாங்கக் குலமக்கள் இன்று தெலுங்கு கன்னடம் மராட்டி முதலிய பழமொழிகள் பேசுகின்றவர்களாய் நாடு முழுவதும் பரவி உள்ளனர். நாட்டின் சார்பால் வேறு வேறு மொழி பேசினாலும் இவர்களுக்குள் தொழில், குலஆசாரம், சமயஆசாரம் ஒன்றாகவே உள்ளன. இந்த ஒருமைப்பாட்டுக்கு காரணமாயிருப்பது இவர்கள் வழிபடும் குலதெய்வம் சவுடாம்பிகையாகவே இருப்பதாலாகும். தேவல முனிவர் சிவபெருமானின் இதயத்திலிருந்து தோன்றியதால், தேவ+அங்கம் தேவாங்கம் என்று பெயர். அவர்வழி வந்த குலமக்களுக்கு ஏற்பட்டது. தேவர்களுக்கு ஆடைகளை அளித்து அங்கங்களை அழகு படுத்தியதாலும் இப்பெயர் வந்தது என்றும் கொள்வர். இவர்கள் யாவரும் பூணூல் அணியும் வழக்கம் உடையவர்கள். சில சிவாச்சாரிய குடும்பங்களில் மட்டும் ஆண்கள் சிவலிங்கம் கட்டிக்கொள்கின்றனர். தேவாங்கர்கள் பெரும்பாலும் சைவர்களே.

6/5/13

67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம்

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் ஆரம்பக் கல்வியைக் கட்பித்தவரும் பாரதப் போருக்குப்பின் உயிருடன் இருந்தவருள் ஒருவருமான கிருபாச்சாரியின் தந்தை சாரத்வந்து மகரிஷி. இவருடைய மகள் கிருபி என்னும் கற்பரசி. அவ்வம்மையைத் துரோணாச்சாரி மணந்து கொண்டார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

மான்யதவரு :- அரச மான்யம் பெற்றவர்கள்.

தேவாங்க வம்ச வரலாறு

தேவதாசமய்யனுக்குப் பின் அவன் மகன் விருபாட்சன் ஆமோதநகரை ஆட்சி செய்தான். இவனைத் தொடர்ந்து இவன் மகன் உருத்திரனும் இவனுடைய காளசேனனும் ஆட்சிக்கு வந்தனர். காளசேனன் மக்கட்பேறு இன்றி பலநாட்டு மன்னர்களின் புதல்விகள் 10 ஆயிரம் பேரை மணந்தான். அவ்வாறு மணந்தும் மக்கட்பேறு கிட்டவில்லை. அதனால் சிவபெருமானை நோக்கித் தவஞ் செய்தான். அந்நிலையில் ஆமோதநகருக்குக் கவுதம முனிவர் வந்தார். இவர் வரவை அறிந்த காளசேன மன்னன் அவரை வரவழைத்து உபசரித்துக் குழந்தையில்லாக் குறையைக் கூறினான். அதுகேட்டு முனிவர் புத்திரகாமேட்டி யாகம் செய்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று சொல்லி யாகத்தையும் செய்து முடித்தார். அதில் அமிர்தம் வந்தது. அதைப்பெற்று மன்னன் தன் மனைவியர் 10000 பேருக்கும் பகிர்ந்து அளித்தான். அமிர்தம் அருந்திய அரசிகள் யாவரும் கருவுற்று உரியகாலத்தில் 10000 மக்களை ஈன்றனர். இவர்கள் யாவரும் சிங்கக் குட்டிகளென வளர்ந்தனர். உரியபருவத்தில் சகல சடங்குகளும் செய்யப்பெற்று 700 முனிவர்கள் பால் சிவதீட்சை பெற்றனர். தீட்சை அளித்த முனிவர்களின் வழி 700 கோத்திரங்கள் ஏற்பட்டன. 10000 பிள்ளைகளும் திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்று குலங்களைப் பெருக்கினர். இனி, காளசேன மன்னன் தனதுமக்களில் சிறந்தவனும் மூத்தவனுமாயிருந்த ரூபசேனன் என்பவனுக்கு முடிசூட்டி ஆட்சியை அளித்துவிட்டுத் தவமேற்கொண்டு மனைவியுடன் கானகம் சென்றான். ரூபசேனன் ஆட்சிபீடமேறி செங்கோன் முறைப்படி ஆட்சி நடத்திவரும் காலத்தில் பரிட்டாணம் என்னும் நகரை சக்திராஜன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான்.அப்போது அந்நகரில் வசித்து வந்த சோமசர்மா என்னும் வேதியன் குழந்தைப் பேறு இல்லாததால் நகரிலிருந்த சந்திரமௌளீஸ்வரர் கோயிலுக்கு போய் குழந்தை வேண்டி இறைவனைப் பூசித்து வந்தான். இரவு பகல் அங்கேயே இருந்து வழிபட்டு வந்தான். இவன் இவ்வாறு இருக்க, ஒருநாள் இரவு தனபாலன் என்னும் வணிகன் திருக்கோயிலுக்கு வந்து பிள்ளைவரம் வேண்டி இரத்தினக்கற்களால் அர்ச்சனை செய்து வழிபட்டான். வணிகனின் பக்தி பூர்வமான வழிபாட்டுக்கு மகிழ்ந்து இறைவன், ' வைசியனே! உனக்கு மகப்பேறு அளித்தனன். நீ உன் வீட்டுக்குப் போ ' என்று அருள் செய்தான். வரம் பெற்ற வணிகன் எல்லையில்லா மகிழ்ச்சி பொங்க ஆடிப்பாடிய வண்ணம் திருக்கோயிலை வலம் வந்தான். இதைக் கண்ட மறையவன் மூண்ட சினத்தோடு கோயிலுக்குள் போய் இறைவனை நோக்கிப் பரமேஸ்வரா! நீ எத்தகைய பட்சபாதம் உடையவன்? நான் எத்தனை நாட்களாக உன்னைப் பூவும் நீரும் கொண்டு வழிபட்டு வருகிறேன். என் வழிபாட்டுக்கு இரங்கி புத்திரப்பேறு அருளாமல் இன்று வந்து இரத்தினக்கற்களைக் கொண்டு வழிபட்ட வணிகனுக்கு உடனே மகப்பேறும் வரத்தை அருளினையே! நீ நீதி உடையவன் தானா? கருனையற்றவனே! நான் பூக்கொண்டு செய்த பூசை உனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. வைசியன் கல்லால் செய்த பூசை உனக்கு ஆனந்தத்தை அளித்து. நான் நாள்தோறும் பூ பறித்து மாலை தொடுத்துக் கையெல்லாம் காய்த்து விட்டது. வில்வ மூட்டை சுமந்து தலையும் முரடு தட்டிவிட்டது. இவ்வாறு நான் பூக்கொண்டு செய்த அர்ச்சனை வழிபாட்டுக்கு இரங்காது சிறு கற்களால் வைசியன் செய்த வழிபாட்டுக்கு மகிழ்ந்து அவனுக்கு பிள்ளைப்பேறு அருளினாயல்லவா? நல்லது. இதோ நானும் நீ மகிழும் கல்லாலேயே உனக்கு பூசனை செய்கிறேன். வணிகன் சிறுகல் கொண்டு வழிபட்டு உன் அருளைப் பெற்றான். நான் பெருங்கல் கொண்டு உன்னை வழிபடுகிறேன். சிருகல்லை விடப்பெருங்கல் உனக்கு அதிக மகிழ்ச்சியை அளிக்கும்மல்லவா? ' என்று சொல்லிப் பெருங்கல் ஒன்றைக் கொண்டு வந்து சிவலிங்க மூர்த்தியின் மீது போட்டான். கல் பட்டு சிவலிங்கம் உடைந்தது. மறையவனின் இத்தீயச்செயல் எவ்வளவு மதியீனமானது? இறைவனின் செயல்களை நம் சிறுமதி கொண்டு அளக்கக் கூடாது என்று அருளாளர்கள் கூறினர். " ஆட்பாலவர்க் கருளும் வண்ணமும் ஆதி மாண்பும், கேட்பான் புகில் அளவில்லை கிளக்கவேண்டாம் " என்று ஞானக்குழந்தை அருளியது. இறைவன் நீதிக்கிருப்பிடம். சொன்ன சொல்லுக்குமாறாகத் தன் தோழனே போனபோது கண்களைப் பறித்துக் கொண்டவரல்லவா இவர். அதனால் மறையவனின் செயல் அவனது பக்குவமின்மையைக் காட்டுகின்றது. முன்னைப் பிறவியில் வணிகன் தவஞ்செய்திருந்தான் தவத்தின் பயனாய் இப்பிறவியில் செல்வனாகவும் பக்தியுடையவனாகவும் பிறந்தான். அத்தவம் அவனுக்கு இப்போது மகப்பேற்றை அளித்து. மறையவன் வழிபட்டானேயன்றி பக்தியின் முதிர்ச்சியும் அருட்பக்குவமும் பெறவில்லை. அதனால் வணிகனின் பக்குவத்தையும் இறைவனின் அருட்குறிப்பையும் உணரவில்லை. அறியாமையால் அருள்பெற்ற வணிகன் மீது பொறாமையும் இறைவன் மீது சினமும் கொண்டு தகாத செயலைச் செய்தான். வேதியனின் தீச்செயலைக்கண்டும் கருணாமூர்த்தியாகிய இறைவன் அவன் செய்த வழிபாட்டுக்காக அவனுக்கும் பிள்ளைவரத்தை நல்கினான். அதோடு அவனது தீச்செயலுக்கு தண்டனையாக குழந்தை பிறந்ததும் அவன் தலைவெடித்து மரணம் அடையும் படியும், பிறந்த குழந்தை ஒழுக்கத்தால் சூத்திரன் ஆகும்படியும் விதித்தான். இவ்வாறு வரத்தைப் பெற்ற வேதியன், குழந்தை பேற்றுக்காக மகிழ்ச்சியும் தண்டனையையும் எண்ணி வேதனையும் அடைந்தவனாய் வீட்டுக்குப் போனான். அவன் மனைவியும் வரத்தின்படிக் கருவுற்று உரிய காலத்தில் ஒரு மகவை ஈன்றாள். அப்போதே வேதியனும் தலை வெடித்து மரணம் அடைந்தான். அவன் மனைவி இதுகண்டுக் கணவன் போன வழித் தானும் போனாள். பெற்றோரை இழந்த குழந்தை தாய்மாமன் ஆதரவில் துருமளன் என்னும் பெயரைப் பெற்று வளர்ந்தது. குழந்தை பெரியவனாக வளரும் போதே எல்லாக் கலைகளையும் நன்கு கற்றுணர்ந்து கலை வல்லோனாய் விளங்கியது. துருமளன் நாள்தோறும் காட்டுக்குப் போய் மாமன் செய்யும் வேள்விக்குச் சமயத்துக் குச்சிகளை பொருக்கிக் கொண்டு வந்து கொடுப்பான். இவ்வாறு நடந்துவரும்போது ஒரு நாள் காட்டில், பெண் நாய் ஒன்றை ஆண்சிங்கம் புணரக் கண்டான். அதிசயித்து நின்றான். பின் பெண் நாய் அங்கிருந்து ஊருக்குள் போகவும், அதை அவன் பின் தொடர்ந்து போனான். நாய் சக்திராஜன் அரண்மனைக்குள் புகக்கண்டு அகன்றான். அந்த நாய் கருமுதிர்ந்து சிங்கத்தின் சாயலோடு கூடிய இரண்டு நாயக் குட்டிகளை ஈன்றது. ஒருநாள் சக்திராஜன் தனது தோட்டத்திலிருந்த பனைமரங்கள் ஏழின் முடிகளை ஒரே அம்பால் இறுத்து வீழ்த்தினான். அப்போது அங்கிருந்த மக்கள் அதைக்கண்டு மன்னனின் வீரத்தைப் பலவாறு பாராட்டி ஆரவாரம் செய்தனர். அந்நேரத்தில் அங்கு கூட்டத்தில் ஒருவனாய் இருந்த துருமளன், முன்வந்து, ' பனைகளின் முடிகளை விட மரங்களையே வேரோடு சாய்ப்பது புகழுக்குரியதாகும்' என்றான். இதைக்கேட்ட சக்திராஜன் ' நீ கூறும் வீரச்செயலை நீ செய்து காட்டவல்லையா? என்று கேட்டான். துருமளன் அவ்வாறே செய்வதாகக் கூறி, வில்லைவாங்கி அம்பு தொடுத்து ஏழு பனைமரங்களையும் வேரோடு வீழ்த்தினான். இதைக்கண்ட மன்னன் துருமளனைப் பாராட்டி, ' நீ விரும்பும் பொருளைக் கேள் தருகிறேன்' என்றான். உடனே துருமளன் அரண்மனையில் வளரும் அதிசய நாய்க்குட்டிகளைத் தருமாறு கேட்டான். மன்னனும் மகிழ்ச்சியோடு அந்த நாய்க்குட்டிகளை அவனுக்கு அளித்தான். துருமளன், பெற்ற நாய்க்குட்டிகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று பிரியமாய் வளர்த்தான். நாய்களை வளர்ப்பது சூத்திர ஆசாரம் என்று கருதிய பிராமணன் துருமளனை வீட்டை விட்டே துரத்திவிட்டான். இதிலிருந்து துருமளன் சூத்திரன் என்றே அழைக்கப்பட்டான். மாமன் வீட்டைத் துறந்த துருமளன் நாய்களுடன் சக்திராஜன் அரண்மனையை அடைந்து மன்னனின் அன்பைப் பெற்று அங்கேயே வாழ்ந்து வந்தான். ஒருநாள் பௌத்த மதத்தைச் சார்ந்த நேபாள நாட்டு மன்னன் சுதாகரன், சக்திராஜனைக் காண பரிட்டாண நகரம் வந்தான். மன்னனைக் கண்டான். பின் அவன் துருமளனிடம் வந்து, ' உனக்கும் சக்திராஜனுக்கும் இடையே உள்ள நட்பு ஆறு திங்களில் பகையாக மாறும். நான் நிமித்த நூல் வல்லவன். ஆகையால் இது பொய்க்காது. பகை வந்துற்ற போது என்னை நீ வந்து அடைவாயக' என்று கூறிச் சென்றான். இது நடந்து சிலதிங்களுக்குப் பின் துருமளனும் சக்திராஜனும் காட்டுக்கு வேட்டையாடப் போயினர். வேட்டையினிடையே இவர்கள் இருவரும் தனித்து விடப்பட்டனர். அப்போது சிங்கம் ஒன்று இவர்களை எதிர்த்தது. அதைச் சூத்திரன் அச்சமின்றி எதிர்த்து நின்று பாணம் ஒன்றால் கொன்றான். மன்னனைப் பெருமைப்படுத்த எண்ணிச் சூத்திரன், சிங்கத்தை மன்னன் கொன்றதாக வேட்டைக்காரரிடம் சொன்னான். அவர்கள் பெருமகிழ்ச்சியோடு ஊரில் மக்களிடையே அறிவித்தனர். மக்களும் மன்னனின் வீரத்தைப் பாராட்டி அவரைக் கோலாகலமாக வரவேற்க ஆயுத்தம் செய்தனர். அரசியும் மாவீரனாக வரும் தன் கணவனை வரவேற்கத் தன்னை அலங்கரித்துக்கொண்டு, தலையில் சூடிக்கொள்ள பூவை எதிர்பார்த்து நின்றாள். பூக்காரி காலந்தாழ்ந்து வந்தாள். வந்தவளை அரசி மிகவும் கடிந்து கொண்டாள். " ஊரார் ஒன்றுதிரண்டு வரவேற்கும் போது நான் அரண்மனை வாயிலில் சரியான நேரத்தில் மன்னனை வரவேற்க வேண்டாமா? நல்ல சமயத்தில் இவ்வாறு தாமதம் செய்கின்றாயே? இது உனக்குச் சரியா? " என்று கோபித்துக் கொண்டாள். இதைக் கேட்ட பூக்காரி ஏளனமாகச் சிரித்த வண்ணம் ' அரசியே! உண்மையில் சிங்கத்தைக் கொன்றது உன்கணவன் அல்ல. கொன்றவன் சூத்திரன் என்னும் துருமளன் ஆகும். மன்னன் மீதுள்ள மதிப்பின் காரணமாகத் துருமளன், வேட்டைக்காரரிடம் மன்னன் சிங்கத்தை கொன்றான் என்று உபசாரமாகச் சொன்னான். அதை நம்பி வேட்டைக்காரர் ஊராரிடம் சொல்ல, ஊர் மக்கள் வரவேற்பில் ஈடுபட்டுள்ளனர். அதைப் பார்த்துத் தாங்களும் உபசரிக்கப் பரபரக்கின்றீர்கள். இச்செய்தி உனக்கெப்படித் தெரியும் என்று கேட்கின்றீர்களா? சொல்கிறேன் கேளுங்கள். என் கணவன் பூக்கொய்யக் கானகம் சென்றிருந்தார். அப்போது கானகத்தில் சூத்திரன் சிங்கத்தை எதிர்த்து அம்பு தொடுத்து சிங்கத்தைக் கொன்றதைப் பார்த்தார். அதை அவர் எனக்குச் சொல்லக் கேட்டறிந்தேன். அதன் பிறகு அவர் கொணர்ந்த பூவை எடுத்துக்கொண்டு இங்கு வருகிறேன். இதனால் தான் நான் தங்களுக்கு பூக்கொண்டு வருவதற்குத் தாமதம் ஆயிற்று என்றாள். சிங்கத்தைக் கொன்றது மன்னன் அல்ல என்பதை அறிந்த அரசி வரவேற்கும் எண்ணத்தைக் கைவிட்டு அந்தப்புரத்திலேயே இருந்து விட்டாள். மன்னனை ஊர்மக்கள் கோலாகலமாக வரவேற்றனர். மகிழ்ச்சியோடு வரவேற்பை ஏற்றுக்கொண்ட மன்னன் அரண்மனையை அடைந்தான். அரண்மனை வாயிலில் தாதிகள் ஆரத்தி எடுக்க மந்திரி பிரதானிகள் முதலியோர் வரவேற்றனர். வரவேற்புக் கூட்டத்தில் அரசியைக் காணாது மன்னன் விரைந்து அரண்மனைக்குள் போனான். அரசியைக் கண்டான். வரவேற்பில் நீ ஏன் கலந்து கொள்ளவில்லை' என்று அரசியைக் கேட்டான். அதற்கு அரசி ' சிங்கத்தைக் கொன்ற சூத்திரன் அன்றோ பாராட்டுக்குரியவன்! தாங்கள் அல்லவே? போலி ஆரவாரம் எதற்கு? ' என்றாள். இதைக்கேட்ட மன்னன் துணுக்குற்று உள்ளத்துள்ளே சினம் பொங்க அவ்விடத்தை விட்டு அகன்றான். சூத்திரன் சிங்கத்தைக் கொன்ற செய்தி சூத்திரனும் மன்னனும் மட்டும் அறிந்த செய்தியாகும். இதை வேறெவரும் அறியார். அப்படியிருக்க, அந்தப்புரத்திலிருந்த அரசி இச்செய்தியை எப்படி அறிந்தாள்? என்று மன்னன் சிந்தித்தான். சூத்திரனுக்கும் அரசிக்கும் இரகசியத் தொடர்பு ஏதேனும் இருக்குமோ? என்று ஐயுற்றான். உள்ளக் கொதிப்போடு இரவைக் கழித்தான். விடிந்ததும் மன்னன் சூத்திரனை வரவழைத்து ' நீ என் நண்பனல்ல, ஊரைவிட்டப் போய்விடு' என்று உத்திரவு இட்டான். மன்னன் சினத்துக்குக் காரணமறியாமல் சூத்திரன் திகைத்தான். என்றாலும் மன்னன் உத்தரவு ஆதலால் மாறுபேசாமல் உடனே அவ்விடத்தை விட்டு அகன்றான். இப்போது, நேபாள மன்னன், முன்னாள் சொன்ன வார்த்தைகள் அவன் நினைவுக்கு வந்தன. நேராக நேபாள நாட்டின் தலைநகரான ஜெயந்தி நகருக்குப் போனான். மன்னன் சுதாகரன் முன் போய் நின்றான். சுதாகரமன்னனும் மகிழ்ச்சியோடு சூத்திரனை வரவேற்று தன்னுடன் வைத்துக் கொண்டான். குற்றமற்ற தன்னைக் காரணமின்றி நாடு கடத்திய சக்திராஜனைப் பழிவாங்கச் சூத்திரன் எண்ணினான். சுதாகரமன்னனைச் சக்திராஜன் மீது படையெடுக்கும்படி செய்தான். பெரும்படைகளோடு சுதாகரன் துருமளனுடன் சக்திராஜனின் நாட்டை அடைந்து தலை நகரை முற்றுகையிட்டான். இதை அறிந்த சக்திராஜன் சூத்திரனது வீரத்தை எண்ணி தேவாங்க மரபில் வந்த ஆமோத நகர மன்னன் காலசேன மன்னனைத் தனக்கு உதவியாகக் கொள்ள அவனுக்கு அழைப்பை விடுத்தான். காலசேன மன்னனும் அழைப்பை ஏற்றுத் தன் மக்களுடன் நால்வகைப் படைகளோடு பரிட்டாண நகருக்கு வந்தான். இதை அறிந்த சுதாகரன் சூத்திரனுடன் ஆலோசித்து, மேலும் தன் படைபலத்தைப் பெருக்கிக் கொள்வான் வேண்டி சாஹ்யபர்வதத்திலுள்ள மகா மாயாவியும் பலசாலியுமான பஞ்சபுடன் என்னும் பௌத்தனைத் துணை சேர்த்துக் கொண்டான். போர் துவங்கியது. போர் கடுமையாக இருந்தது. போரில் சூத்திரனால் சக்திராஜனும் பஞ்சபுடனால் காலசேனனும் மாண்டனர். காலசேனன் மடியக் கண்ட அவன் மகன் ரூபசேனன் தன்தந்தையைக் கொன்ற பஞ்சபுடனை எதிர்த்துப் போரிட்டுப் போரில் அவனைக் கொன்று வஞ்சம் தீர்த்துக் கொண்டான். சூத்திரன், தன் பகைவனான சக்திராஜனைக் கொன்றதோடு திருப்தியுற்று நேபாள மன்னனை அழைத்துக்கொண்டு நேபாள நாட்டை அடைந்தான். போரில் வெற்றி கண்ட ரூபசேனன் சக்திராஜன் மகனை பரிட்டாண பட்டணத்துக்குத் தலைவனாக நியமித்து விட்டு நேபாள நாட்டின் மீது போருக்குப் போனான். அப்போது நேபாள மன்னன் போருக்கு வராததால் ரூபசேனன், நேபாள நாட்டைத் தனதாக்கிக் கொண்டு ஆட்சிபீடத்தில் தன் சகோதரன் ஒருவனை வைத்து விட்டு ஆமோத நகரம் திரும்பினான். ரூபசேனன் ஆட்சியில் சகரநாடு செழித்தது. அறம் வளர்ந்தது. மக்கள் குறைவின்றி வாழ்ந்தனர். நலம்.

போகர்


குரு:அகத்தியர்

காலம்:300 ஆண்டுகள், 18 நாட்கள்

சீடர்கள்:கொங்கணவர், கருவூரார், புலிப்பாணி, இடைக்காடர்

சமாதி:பழனி

இவர் அகத்திய முனிவரின் சீடர் ஆவார். சித்த வைத்திய மற்றும் இரசவாத முறைகளில் சிறந்து விளங்கினார். போகர் 7000, போகர் 12000, சப்த காண்டம் 7000 போன்ற பல நூல்களை இயற்றினார். நவபாஷாணங்களை கொண்டு பழனி முருகனின் திருவுருவச்சிலையை செய்தவர். இவர் பழனி மலையில் சமாதி அடைந்தார்.

சக்தி நிலைநிறுத்தல்

திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரம் ராமலிங்க சவுண்டேஷ்வரி அம்மன் கோவிலில் சக்தி நிலைநிறுத்தல் நடைபெற்றது. இது காணகிடைக்காத காட்சியாகும். இதில் சக்தி பானையின் மேல் அலகு கத்தி எந்த பிடிமானமும் இல்லாமல் அன்னையின் அருளால் நிற்பதை காணலாம்.

6/4/13

66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு :- எல்லோருடைய பாவங்களையும் நீக்கும் ஒரு விரதம் சாந்திராயண விரதம். இவ்விரதத்தினை உலகினுக்கு எடுத்து ஓதியவர். இம்மகரிஷி. எனவே இவ்விரதம் இவர் பெயராலேயே வழங்கப்பட்டு இருக்கின்றது. தானும் இவ்விரதத்தை நன்கு அனுஷ்டித்தார்.

சந்திராயண விரதத்தை அனுஷ்டிக்கும் முறை :- கிருஷ்ணபட்சத்தில் முடிநீக்கிச் சவரம் செய்து கொள்ள வேண்டும். வெள்ளை வஸ்திரம் உடுத்துக் கொண்டு முஞ்சைப்புல் அரைஞாண் கட்டிக் கொள்ள வேண்டும். பிரம்மச்சரிய விரதத்தைக கடுமையாக அனுஷ்டிக்க வேண்டும். வளர்பிறை பிரதமை முதல் விரதத்தைத் தொடங்க வேண்டும். பலாசமரத்தால் செய்த தண்டத்தை ஏந்த வேண்டும்.

தூய்மையான இடத்தில் அக்நியைவைத்து அதில்

1) ஆகாரம்
2) ஆஜ்யபாகம்
3) பிரணவம்
4) வ்யாஹ்ருதி
5) வாருணம்

என்னும் பஞ்ச ஹோமங்கள் செய்ய வேண்டும்.

அதன்பின்
1) சத்யம்
2) விஷ்ணு
3) பிரும்மரிஷி
4) பிரும்மா
5) விச்வதேவர்
6) பிரஜாபதி
என்னும் ஆறு ஹோமங்கள் செய்து அதன்பின் பிராயச்சித்தஹோமம் செய்து அதற்கடுத்து சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

இவ்விதம் பதின்மூன்று ஹோமங்களினால் அக்நிகாரியம் செய்து முடித்து, அக்நிஸோமனை வணங்கி ஸ்நாநம் செய்து அனுட்டானங்களை முடித்துக் கொண்டு கைகளைத் தூக்கிச் சூரியனைப் பார்க்க வேண்டும். பின் இருகைகளையும் குவித்துப் பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

ருத்ரசூக்தம் - விஷ்ணு சூக்தம் - பிரம்ம சூக்தம் என்னும் இவற்றில் ஒன்றனையாவது அல்லது வேறு சூக்தங்களில் ஒன்றனையாவது 100 அல்லது 1000 முறை ஜெபிக்க வேண்டும்.

நண்பகலில் பொன் பாத்திரம், வெள்ளிப் பாத்திரம், தாமிரப் பாத்திரம், மண் பாத்திரம், அந்திமரப் பாத்திரம் என இவற்றில் ஒன்றில் ஏழு வீடுகளில் மௌனமாய்ப் பிட்சை கொண்டு கிடைத்த அன்னத்தை ஏழு உருண்டைகள் செய்து

1) சூரியன்
2) பிரம்மன்
3) அக்நி
4) ஸோமன்
5) வருணன்
6) விச்வே தேவர்கள்

இவர்களுக்குக் கொடுத்து மிகுந்த ஒரு உணவு உருண்டையை வளர்பிறையில் சிறிது சிறிதாகப் பெரிதாக்கியும் தேய்பிறையில் சிறிது சிறிதாகச் சிறிதாக்கியும் உண்ணல் வேண்டும் என்பது இவ்விரத விதியாகும். இது பாவநீக்கத்திற்குக் குறிக்கப்பட்டது.

இவ்விரதம் இம்முனிவர் பெயரால் சாந்திராயண விரதம் எனவும் சந்திரனின் வளர்ச்சி தேய்தல் போல உணவினை வளர்த்தும் சுருக்கியும் செய்யப்படுகிறதாதலின் சாந்திராயணம் எனவும் வழங்கப்படுகிறது.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சகுணதவரு :- சகுணம் சொல்வதில் வல்லவர். இதனைச் ச+குணம் எனப்பிரித்தால் நற்குணம் நிரம்பியவர் என்று பொருள்படும்.
ரஜததவரு ;- ரஜதம் = வெள்ளி, வெள்ளி வணிகம் செய்தவர்.
மதஞ்சாராதவரு :- சைவம், வைணவம் என எம்மதத்தையும் சாராமல் அனைத்தையும் சமரசமாகக் கொண்டவர். சகல மதங்களின் சாரத்தை அறிந்தவர்.

அகத்தியர்


குரு:சிவபெருமான்

காலம்:4 யுகம் 48 நாட்கள்

சீடர்கள்:போகர், மச்சமுனி

சமாதி:திருவனந்தபுரம்

18 சித்தர்களில் முதன்மையானவர். சித்தர்களின் தலைவர். தமிழுக்கு பல சித்த மருத்துவ முறைகளை வழங்கியவர். கடுந்தவமியற்றி பல சித்திகளை பெற்றவர். தமிழ் இலக்கிய விதிமுறையான அகத்தியம் எனும் நூலை எழுதியவர். போகர், மச்சமுனி இவரின் சீடர்களாவர். திருவனந்தபுரம் அனந்தசயன திருத்தலத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீசைலம் மாண்பு

ஒவ்வொருவரும் தலங்கள் தோறும் சென்று புண்ணிய தீர்த்தங்களாடி மூர்த்திகளை வழபட வேண்டும். ஆன்மீக வாழ்க்கைக்கு இது மிக மிக அவசியமாகும். தேவதாச மன்னனும் இம்முறையை மேற்கொண்டு தலயாத்திரை சென்றான். பலதலங்களுக்குச் சென்று தீர்த்தங்களாடி மூர்த்திகளை வழிபட்டுக் கொண்டு ஸ்ரீசைலம் அடைந்தார். ஸ்ரீ சைலம் இலிங்க மூர்த்தி பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்று. வீரசைவர்களுக்கு இது முக்கியமான தலமாகும். இது மல்லிகார்சுனம் சீர்ப்பதம் என்றும் பெயர் பெரும் இதற்கு மருதமரம் தலவிருட்சம். இது திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்திரமூர்த்திகள் ஆகிய மூவரால் பாடப்பெற்றது. சிலாதமுனிவரின் புதல்வர் திருநந்திதேவர் தவஞ்செய்து இம்மலையருப் பெற்று இறைவனைத் தாங்கிவருவதாக ஸ்ரீகச்சியப்பர் கூறுகின்றார். இத்தலத்தைச் சிவமகாபுராணம் பெருமைப்படுத்திக் கூறியுள்ளது. சங்கரர் சிவானந்தலகரியில் இரு சுலோகங்களால் இப்பெருமானைத் துதித்துள்ளார். இராமபிரான் இராவணனைக் கொன்ற பாவம் நீங்கச் சீதையோடு இங்கு வந்து சிவபிரானை வழிபட்டு பாவநீக்கம் பெற்றார். பாண்டவர்கள் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். பீமன் தவஞ்செய்த இடம் பீமகுண்டம் எனப்பெயர்பெற்றுள்ளது. சந்திராவதி என்னும் அரசகுமாரி பெருமானை மல்லிகை மலரால் வழிபட்டு பேறு பெற்றாள். கோயிலுக்குச் செல்லும் வழியில் சாட்சி விநாயகர் உள்ளார். கோயில் மூலமூர்த்தி இருக்கும் கருவறைக்கு வடக்கில் ஆதி மல்லிகார்சுனர் என்னும் சிவலிங்கமூர்த்தி உளது. சந்திராவாதி பூசித்த மூர்த்தி இது. இதற்குச் சிறிது வடக்கே சகஸ்திரலிங்கேசரும் இவர் கோயிலுக்குப் பின் பலிபீடமும் வீரபத்திரர்கோயிலும் உள்ளன. இதன் பக்கத்தில் மல்லிகைப் பொய்கையும் அதன் நடுவே வசந்த மண்டபமும் உள்ளன. கருவறைக்கு மேற்கே பஞ்சபாண்டவர் ஸ்ரீதேவி குமாரசுவாமி பஞ்ச நந்தீஸ்வரர் இராஜராஜேஸ்வரர் ஆகியோர் கோயில்கள் கொண்டு உள்ளனர். அம்பிகை கோயில் மேற்கே உயரமான இடத்தில் உள்ளது. அதனருகே ஆயிரம் லிங்கங்கள் உள்ளன. பாதாள கங்கையின் அருகே நரசிங்கமூர்த்தி எழுந்தருளியுள்ளார். மகாசிவராத்திரி விழா இங்கு சிறப்பாக நடைபெறும். அப்போது திரளான மக்களும் வழிபடக் கூடுவர். அபிஷேகநீரும் பூஜா திரவியங்களையும் எடுத்துச் சென்று அபிஷேகம் செய்து வழிபடலாம். சிறப்பு மிக்க ஸ்ரீசைலம் வந்து தங்கிய மன்னன் தேவதாசமையன் பவுராம்பிகையோடு கூடிய மல்லிகார்சுன நாதரை நாளும் வழிபட்டு வந்தார். அப்போது மாசிமாதம் சிவராத்திரி விழா வந்தது. இவ்விழாவை மிகச்சிறப்பாக நடத்தி வழிபட விரும்பினார். துவஜாரோகணம் செய்து விழாவைத் துவக்குவது மரபு. கொடிமரம் மிகப்பெரிய மரம். அதற்கு ஆனவாறு 12 முழ அகலம் 60 முழ நீளமும் உடைய அழகான துணியைத் தானே நெய்து அதைக் கொடிமரத்தில் கட்டி கொடியேற்றி விழாவைத் துவக்கி வைத்தார். அன்றிரவு நான்கு யாமமும் விரதம் இருந்து முறைப்படி வழிபாடு செய்தார். இவர் வழிபாட்டை ஏற்று இறைவன் அம்மையுடன் எழுந்தருளி ' அப்பனே! நீ விரும்பும் வரம் யாது?' எனக்கேட்டார். அதற்குத் தேவதாசமய்யன் அடியேன் கட்டும் திருக்கோயிலில் எம்மை எல்லாம் அருள் சுரந்து காத்து இரட்சிக்கும் சவுடாம்பிகை அம்மையோடு தாங்களும் எழுந்தருளிக் கோயில் கொண்டு அடியேனது குல மக்களைக் காத்தருள வேண்டும் ' என்று தொழுது நின்றார். இறைவனும் அவ்வாறே வரமருளி மறைந்தார். தேவதாசமய்யன் அங்கிருந்து ஆமோத நகரை அடைந்து பற்பல மணிகளலான அழகிய பெரிய கோயில் ஒன்றை ஆகம முறைப்படி எழுப்பிக் கும்பாபிஷேகம் செய்து 'அம்மையோடு தாங்களும் எழுந்தருளி ஆட்கொள்ளவேண்டும்' என்று இறைவனைப் பணிந்தார். சிவபெருமானும் சௌடநாயகியோடு தானும் கோயில் கொண்டருளி கருணைபாலித்தார். தேவதாசமய்யன் முக்கட் குழகனுக்கு இராமலிங்க நாதன் எனத்]திருநாமம் சூட்டி இராமலிங்க சௌடேஸ்வரியை பக்தி சிரத்தையுடன் வழிபட்டான். சிவபூஜையில் திகழ்ந்து தேவதாசமய்யன் மனைவியோடு கயிலையை அடைந்து சிவபெருமானை வணங்கி நின்றார். சிவபெருமானும் கிருபையோடு தேவதாசமையனுக்கும் அவன் மனைவி திலதாவதிக்கும் முத்தியை அருளி ஆட்கொண்டான்.