அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

1/14/14

148 .மநுவாம மகரிஷி கோத்ரம்

மநுவும், மநுவாம மகரிஷியும் ஒருவராக இருக்கலாம்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கம்மி பாவாட தவரு :- கம்மிபாவாட என்று அழைக்கப்பெறும் பாவாடை நெய்பவர்கள். ஸ்ரீ சைலத்தில் கொடியேற்றத்திற்காக தேவாங்கர்களால் நெய்யப்படும் பாவாடைக்குக் கம்மிபாவாடை என்று பெயர். 

இப்பாவாடை ஒரு முழ அகலமும், 365 முழ நீளமும் உடையது. இன்றைக்கும் ஸ்ரீ சைலத்தைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து இக்கொடிப் பாவாடையை நெய்து எடுத்துக் கொண்டு தேவாங்கர்கள் வருவார்கள் திருக்கோயில் மரியாதைகளுடன் இவர்கள் எதிர்கொண்டு அழைக்கப்படுகின்றார்கள். 

இரண்டு தறிகளைப் பூட்டிக் கொண்டு ஒன்றில் ஆண்டவன் தொண்டிற்கு நெய்வதும் மற்றொரு தறியில் குடும்ப வாழ்க்கைக்குமாக நெசவு நெய்கின்றனர். தினமும் காலையில் ஒரு தறியில் ஆண்டவனுக்காக ஒரு முழம் நெய்து விட்டு, அதன் பின் மற்றொரு தறியில் குடும்ப ஜீவனத்திற்காக நெய்வதும் இவர்களின் வழக்கம். 

தினம் ஒரு முழமாக நெய்து ஓர் ஆண்டில் 365 முழம் நெய்து, இப்பாவாடையை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு வருவர். ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ சைலம் பிரம்மோற்சவவத்தில் நடைபெறும் காட்சி இது. 

சீராளா, சோமவார்பேட்டை முதலான ஊர்களில் இருந்தும் மற்றும் பல ஊர்களிலிருந்தும் இவ்வூர்வலம் வரும். 

ஸ்ரீ சைல மூலஸ்தான விமான கோபுரத்திலிருந்து வேமாரெட்டி கோபுரம், சிவலிங்கம், நந்தி, துவஜஸ்தம்பம் ஆகியனவற்றில் இப்பாவாடையைச் சுற்றி முடிவில் கொடியாக ஏற்றுவது இன்றளவும் உள்ள ஒரு வழக்கம். 

தேவாங்கர்களுக்கு கொடியேற்றும் கட்டளையாக உள்ள சில திருத்தலங்கள் வருமாறு :- 

சேலம் சுகவனேஸ்வரர் ஆலயம், சேலம் கோட்டை ஸ்ரீ அழகிரிப் பெருமாள் ஆலயம், மரக்கோட்டை சின்ன திருப்பதி ஸ்ரீ பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயம், திருவண்ணாமலை, திருவதிகைவீரட்டானம், ஸ்ரீசைலம் முதலான ஆலயங்கள். 

இன்னும் பல ஆலயங்களிலும் இக்கட்டளைகள் இருக்கலாம். 

கோசலதவரு :- கோசல தேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
சல்யதவரு :- பூமிக்குள் சல்ய தோஷம் என்னும் ஒருவகைத் தோஷம் உண்டு. இத்தோஷத்தைக் கண்டுபிடித்து நிவர்த்தி செய்யும் ஆற்றலுடையவர். 

சிவக்ஞானதவரு :- சிவஞானம் மிக்கவர். 

தத்துவதவரு :- தத்துவ சாஸ்திரத்தில் வல்லவர். 

தபசுதவரு :- ஜெபதபங்களில் வல்லவர். 

தொடுபுதவரு :- துணையுடன் செல்பவர்கள். 

தொட்டதவரு :- பெரியவர்கள். 

நாகாபரணதவரு :- நாகவடிவில் செய்யப்பட்ட ஆபரணங்களை அணிபவர். 

பஞ்சாட்சரியதவரு :- பஞ்சாட்சர மந்திர ஜெபம் செய்பவர். 

பின்னாகரதவரு :- பென்னாகரம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

ப்ரபுதவரு :- மைசூரில் உள்ள ப்ரபு ஸ்வாமியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர். 

வட்டிகாசுலதவரு :- வட்டிக்காசு வாங்கியவர். 

உங்ராலதவரு :- மோதிரம் அணிபவர். 

தபம்தவரு :- தவத்தில் வல்லவர். 

அவினதவரு, கொட்டெம்தவரு, கொஜ்ஜம்தவரு, வைகடகதவரு. 

குறிப்பு :- மநுமகரிஷி கோத்ரம், மநுவாம மகரிஷி கோத்ரம் இரண்டிலும் வங்குசங்கள் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கின்றன. மகரிஷிகளின் பெயர் ஒற்றுமை, மற்றும் வங்குசங்கள் ஒன்றாகவே காணப்படுதல் என்னும் இக்காரணங்களால் இவ்விரண்டு கோத்ரங்களும் ஒன்று எனக் கருத இடம் உண்டு.

பூர்ணம்

மெளனச்சாமியார் மடத்தின் ஓய்வறையில்தான் டாக்டர் வினோத் பட்டாச்சாரியாவை சந்தித்தேன்.அவர் என் நேர் எதிர் அறை. கதவைத் திறந்தால் அவரது கதவு . ஒருமுறை திறந்தபோது இருவரும் முகத்தோடுமுகம் சந்தித்து திகைத்து நின்றோம். ‘ஹாய் ‘ என்றார். அது உயர்குடிகள் ‘யாரடா நீ புழுவே ? ‘ என்று கேட்கும் முறை என நான் அறிவேன். நான் தொழில்முறைப் பத்திரிகையாளன்.
‘என் பெயர் கணேஷ் குமார். பத்திரிகையாளன். ‘ என்றேன்.
‘நான் பத்திரிகைகளை வெறுக்கிறேன் ‘ என்று கதவை மூடப்போனார்.
‘இங்கே பாருங்கள், புரஃபசர்… ‘என்று நான் தொடங்கினேன்.
‘நான் புரஃபசர் இல்லை ‘ என்று சாத்திவிட்டார்.
பேராசிரியர்கள், அறிவியலாளர்கள் தங்களை தேவர்குலமாக எண்ணிக் கொண்டிருப்பதை நான் பலமுறைக் கண்டதுண்டு. சிவனாகவும் விஷ்ணுவாகவும் தங்களை எண்ணிக்கொண்டிருக்கும் சினிமாக்காரர்களை கண்ட எனக்கு அது பெரிதாகப்படவில்லை.
ஆனால் அவரே இரவு என் கதவைத் தட்டினார் ‘ ஹாய் ‘என்றார் . இம்முறை பதற்றமாக.
‘ஹலோ ‘
‘உள்ளே வரலாமா ? ‘
‘கண்டிப்பாக. வாருங்கள்.. ‘
வந்ததும் சோபாவில் அமர்ந்து முகத்தை வழித்துவிட்டுக் கொண்டார். தலைமயிரை நீவினார்.
‘நீங்கள் புரஃபசர்…. ? ‘ என்றேன்
‘நான் புரஃபசர் இல்லை. என் பெயர் டாக்டர் வினோத் பட்டாச்சாரியா… ‘
‘ஆமாம். உங்கள் பேட்டியை ஹிந்துவில் படித்திருக்கிறேன்…. பொறியியலில்… ‘
‘ஹிந்து என்னைப்பற்றி ஏதும் வெளியிட்டதில்லை ‘ என்றார் அவர் ‘ மேலும் என் துறை நரம்பியல். ‘
‘மன்னிக்கவும். எனக்கு கொஞ்சம் ஞாபகமறதி… ‘
‘பரவாயில்லை. உன்னிடம் மது ஏதாவது இருக்குமா ? ‘
‘ஆசிரம வளாகத்தில் அனுமதி இல்லை. நான் ரகசியமாக ஒரு புட்டி ரம் வைத்திருக்கிறேன். உங்களுக்கு ரம் பிடிக்குமா ? ‘
‘பிடிக்காது. ஆனால் இப்போது எனக்கு ஏதாவது மது வேண்டும்…கொண்டா ‘
‘நானே ஒரு துணைக்காக காத்துக் கொண்டிருந்தேன். கதவை சாத்தலாமல்லவா ? நல்லவேளை உங்கள் அறை நேர் எதிரே இருக்கிறது. தள்ளாடி எங்காவது விழாமல் நேராக போய் படுத்துவிடலாம் ‘ நான் புட்டியை எடுத்து வைத்தேன். புட்டி இப்போது மிக ஆபத்தான பொருள். பிரதமர் ராம்சிங் அறிவியல் சாதங்களின் உதவியுடன் அவசரநிலை பிறப்பித்து ஆட்சி செய்யும் நாட்டில் சுவர்களுக்குக் கூட வேவு பார்க்கும் கண்கள் முளைத்துவிட்டன என்ற வழக்கமான பாட்டு எங்கும் ஒலித்தது. முதலில் சிலநாள் எல்லாம் சரியாகத்தான் இருந்தது . ரயில்கள் சரியான நேரத்துக்கு ஓடின. வேலைநிஉத்தங்கள் மறியல்கள் கூக்குரல்கள் ஏதுமில்லை. பத்திரிக்கைகள் முழுக்க வளர்ச்சித்திட்டங்கள். நாடு நாலுகால்பாய்ச்சலில் எதிர்காலம் நோக்கி செல்வதாகச் சொல்லப்பட்டதை பெரும்பாலானவர்கள் நம்பினர். ஆனால் மெல்ல மெல்ல ஒரு அமைதியின்மை தட்டுபட ஆரம்பித்தது. தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு காணாமலானார்கள். பத்திரிகைகள் அரசாங்கத் துண்டுபிரசுரங்கள் போல ஆயின. எங்கள் பத்திரிகையே அரசியலையும் சினிமாவையும் துறந்து ஆன்மீகத்தை நோக்கித் திரும்பியது. மெளனச்சாமியாரை நான் பேட்டி எடுக்க முனைந்ததே இதன் மூலம்தான்.
நான் குளிர்சாதனப்பெட்டியை திறந்து தண்ணீரை எடுப்பதற்குள் டாக்டர் புட்டியைத் திறந்து அண்ணாந்து வாயில் கொட்டிக் கொண்டார்.
‘அய்யோ! ‘ என்று பதறினேன்.
டாக்டர் ஆவிமிகுந்த ஏப்பம் விட்டு உடலை ஈரநாய் போல உலுக்கிக் கொண்டார்.
‘இருங்கள் இருங்கள், ஊறுகாய் தருகிறேன்… ‘ என்று எடுத்து வைத்தேன்.
நக்கியபடி முகம் சுளித்து ‘காரம் ‘ என்றார்.
‘என்ன டாக்டர் இது ? இதெல்லாம் கொஞ்சம் அதிகம். ரம் அப்படியே சாராயம் .. ‘
டாக்டர் என்னை பொருட்படுத்தாமல் சோபாவில் மல்லாந்து படுத்தார். மெல்ல உடல் வேர்த்து, தளர்ந்து ,படிந்தார்.
‘ ‘ராம்சிங் பாராளுமன்ற பெரும்பான்மையை பெற்றமுறை சரியாந்துதான் என்று நினைக்கிறீர்களா ? ‘ ‘ என்றேன்
‘ ‘எனக்கு அரசியல் ஆர்வமில்லை ‘ ‘ என்றார் சாக்டர்
‘ ‘ஆமாமாம்.ஆர்வமில்லாமிலிருப்பது பாதுகாப்பும் கூட ‘ ‘என்றேன். ‘டாக்டர் நீங்கள் மனநோய் ஆய்வுதானே செய்கிறீர்கள் ? ‘
‘மனநோயாளிகளையெல்லாம் மடையன்கள்தான் ஆய்வுசெய்வார்கள் ‘என்றார் டாக்டர் . ‘நான் மூளை ஆராய்ச்சியாளன் ‘
‘நான் அறிந்ததெல்லாம் பொரித்த ஆட்டுமூளை ‘
சிரிக்காமல் ஏப்பம் விட்டார். இன்னொரு ஏப்பம் சோடாவாயு மாதிரி குபுக்கென வந்தது. அவர் குதிரை மீது ஆரோகணித்துவிட்டது தெரிந்தது.
இது என்னவகையான குடிமுறை என எனக்குப் புரியவில்லை. சியர்ஸ் இல்லை , பேச்சு இல்லை. குறைந்தபட்சம் நாலுவாய் உளறல்கூட இல்லை.
‘நான் உடனே சாமியாரைச் சந்திக்கவேண்டும்… ‘ என்றார் வாயில் வழிந்த நீரை துடைத்தபடி.
‘அது எளிய விஷயமல்ல. ஒரு நாளைக்கு முந்நூறு பேர்தான் அனுமதிக்கப்படுகிறார்கள். ‘
‘எனக்கு அதைப்பற்றி தெரியாது . எத்தனை மடையர்கள் வேண்டுமானாலும் அவரை சந்திக்கட்டும். நாளை நான் சந்திக்கவேண்டும் …. ‘
மனிதர்கள் என்ற சொல்லைத்தான் மடையர்கள் என்று அவர் குறிப்பிடுகிறார் என அப்போதுதான் புரிந்தது . ‘ ‘ இங்கே என் நண்பருக்கு தெரிந்த சாமியார் ஒருவர் இருக்கிறார். அவர் வழியாக முயற்சி செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்… ‘என்றேன். ‘எங்கள் ஞாயிறுமலரில் இந்த மெளனச்சாமியாரைப்பற்றி ஒரு கட்டுரை எழுதப்போகிறோம்… ‘
‘இவரை நான் சந்திக்கவேண்டும். மிக மிக முக்கியமான பிரச்சினை ‘ டாக்டர் சட்டென்று அதிக உயிர் பெற்றார். ‘அவசரம். மிக மிக அவசரம்! ‘
‘ஏன் ? ‘
‘நான் மிகப்பெரிய ஒரு சிக்கலில் இருக்கிறேன் ‘
‘என்ன சிக்கல் ? ‘
டாக்டர் எழுந்து அமர்ந்து ‘அறிவுத்திறன் என்றால் என்ன ? ‘ என்றார்.
‘இதென்ன கேள்வி ? ‘ என்றேன். உண்மையில் அந்தரங்கமாக நான் பத்திரிகையாளர்களுக்குமட்டுமே உள்ள ஒரு குணாதிசயம் அது என்று எண்ணிவந்தேன்.
‘சொல்லு. அப்போதுதான் நான் விளக்க முடியும்.. ‘
‘தகவல்களை நினைவில் அடுக்கும் திறன், அவற்றை தொகுத்தும் பகுத்தும் அறியும் திறன், முடிவுகளை உருவாக்கும் திறன், அந்த தளத்திலிருந்து மேலும் முன்னகரும் கற்பனைத்திறன் ஆகியவற்றின் ஒட்டுமொத்தம் ‘ என்றேன்
டாக்டர் பிரமித்துவிட்டார் . ‘பத்திரிகையாளர்கள் புத்தகமெல்லாம் படிப்பார்கள் என்று நான் எண்ணியதே இல்லை ‘ என்றார்.
‘நாங்கள் செய்திக் காகிதத்தைத்தானே தினமும் சாப்பிடுகிறோம் ‘ என்றேன்
டாக்டர் கவனமில்லாமல் ‘நல்ல விஷயம் ‘ என்றார். ‘அறிவுத்திறன் என்பது மூளையின் இயக்கத்திறன்தான். நீ சொன்ன நான்கும்தான் மூளையின் வேலைகளில் முக்கியமானவை . மூளை என்பது ஒரு நரம்பு முடிச்சு. நரம்புகள் மூலம் அங்கே தகவல்கள் சென்று சேர்கின்றன. அவை அங்கே உடல்மின்சாரத்தாலும் ரசாயனமாற்றமாகவும் பதிவு செய்யப்படுகின்றன. நியூரான்கள் என்பவை மூளையின் அடிப்படை தகவல்பதிவு அலகுகள். உடல்மின்சாரம் அத்தகவல்களை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி சிந்தனையை நிகழ்த்துகிறது.உண்மையில் நம் மூளையின் மிகச்சிறியபகுதியைக்கூட நாம் பயன்படுத்தவில்லை என்பது உனக்குத்தெரியுமா ? ‘
‘ஆம். ரிச்சர்ட் ரீஸ்டாக் என்பவரின் நூலில் படித்தேன். ‘மூளைக்கு தனிமனம் உண்டு ‘ என்ற நூல். மாமேதைகூட மூளையின் சாத்தியங்களில் கால்பகுதியைத்தான் பயன்படுத்துகிறார் என்று… ‘
‘அவர் வெகுஜன எழுத்தாளர்… ‘
நான் சீண்டப்பட்டேன் . ‘ ஆலிவர் சாக்ஸ் புத்தகம் ஒன்றையும் படித்திருக்கிரேன். நான்கு நரம்பு நோயாளிகளின் பிரச்சினைஅறிக்கைகள்.. ‘
‘அவர் ஆராய்ச்சியாளர்தான். ..நீ பெயர்களை அடுக்கவேண்டாம். ‘என்றார் டாக்டர் ஏப்பமாக ‘ மூளை ஓர் அபாரமான இயந்திரம். முதனிலை கணிப்பொறிகள்கூட அதன் முன் தூசு. ஒரு முகத்தை நீ அடையாளம் காணும்போது உன்மூளையின் எத்தனை லட்சம் பதிவுகள் ஒரு கணத்தில் பரிசீலிக்கப்படுகின்றன என்று தெரியுமா ?நம் மூளை ராஷ்ட்ரபதி பவன் மாதிரி. நாம் அதன் வராந்தாக்களில் வாழ்கிறோம். சிலர் மட்டும் ஒரு அறையை கூடுதலாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ‘
‘ஐன்ஸ்டான்கூடவா ? ‘
‘அவர் பிரபஞ்சவியல் மேதை. ஆனால் உயிரியல் அறியாதவர். அவரால் தஸ்தயேவ்ஸ்கி போல ஒரு நாவலை எழுதிவிடமுடியாது ‘
‘ஆம். அது மனித சாத்தியமே இல்லை ‘ என்றேன்
‘சாத்தியம்தான் ‘ என்றார் டாக்டர் ‘முப்பது வருடங்களாக நான் மூளையின் திறனை அதிகரிக்கும் மருந்துக்கள் பற்றி ஆராய்ச்சி செய்துவருகிறேன் ‘
‘அப்படி அதிகரிக்க முடியுமா என்ன ? ‘
‘கண்டிப்பாக. இப்போதே பல்வேறு மூளைத்தூண்டிகள் [ Cognitive Enhancers ]கிடைக்கின்றன. ஹைடர்ஜைன், பிராஸ்டைம், அனிராசெட்டேம், மினாப்ரிய்ன்*1 எல்லாம் அதிக நினைவாற்றலுக்காகவும் அதிக நேரம் கவனம் நிற்பதற்காகவும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இவை எப்படி இயங்குகின்றன ? உடலோ மூளையோ அபாயகட்டங்களில் திடாரென அதிக உக்கிரத்துடன் செயல்பட்டாகவேண்டிய தேவை உள்ளது . அப்போது அத்திறனை உருவாக்கும் உயிர் ரசாயனங்கள் நம் உடலில் ஊறுகின்றன. அப்போது தேவையான பகுதிகள் அல்லாமல் பிற பகுதிகளின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அதிகரத்தமும் மின்னூட்டமும் செலுத்தப்படுகிறது…. ‘
‘ஆம் ‘
‘அதைத்தான் என்மருந்து முழுமையாக செய்கிறது. அந்த ரசாயநங்களை செயற்கையாக செலுத்துகிறேன். 1980ல் ரிச்சர்ட் வுர்ட்மான்*2 என்பவர் டைரோசினை[tyrosine ] ஏதாவது தூண்டியுடன் சேர்த்து மூளைக்கு செலுத்தினால் மூளையில் மின்னூட்டத்தை நிகழ்த்தும் டோபாமின், நோர்பைன்ப்ரைன், எபின்ப்ரைன்*3 போன்ற பொருள்கள் அதிக அளவில் உருவாகின்றன என்று கண்டுபிடித்தார். என் ஆய்வு பலமடங்கு செறிவுபடுத்தபட்ட டைரோசினும் ஒரு சீன மூலிகையும் சேர்ந்தது… மன்னித்துக்கொள் . இதைவிட நான் உனக்கு விளக்க முடியாது… ‘
‘ மா ஹ்வாங்*4 தானே அந்த மூலிகை ? ‘
‘நீ அபாயகரமான பத்திரிகையாளன். ஆனால் மூளைக்குள் ஓர் ஐஸோடோப்பும் வைக்கவேண்டும். உபரி மின்சாரத்துக்காக ‘
‘பரவாயில்லை, உங்கள் மருந்தை பரிசோதனை செய்தீர்களா ? ‘
‘என் மருந்து மூளையின் மின்னூட்டத்தை பல மடங்கு தீவிரப்படுத்துகிறது. புலன்களின் பதிவுகள் இருபது மடங்கு அதிகரிக்கும். பதிவுகளுக்கு இடையேயான தொடர்புகள் இருபதின் மடங்குகளில் அதிகரித்தபடி செல்லும். மூளையின் எல்லா சாத்தியங்களும் பயன்படுத்தப்படும். அந்தமூளை தூங்கவேண்டியதில்லை. அதற்கு மறதியும் இருக்காது ‘
‘அதற்கு ஆழ்மனம், நனவிலி [ unconscious] உண்டா ? ‘
‘மறதி இல்லையேல் எப்படி நனவிலி உருவாகும் ? மறந்த விஷயங்களின் பெருந்தொகுப்புதானே அது ? ‘ டாக்டர் தன் சுருதிக்கு வந்துவிட்டிருந்தார். ‘இதோபார் . நீ பஸ்ஸில் எண்பது கிலோமீட்டர் வேகத்தில் போகிறாய். சாலையோரம் ஒரு பிணம் கிடப்பதை ஒரு கணம் மட்டும் பார்க்கிறாய் .முப்பது வருடம் கழிந்து ஒரு கனவில் அக்காட்சி வருகிறது. அந்தபிணத்தின் ஒவ்வொரு தகவலும் , அதனருகே கிடந்த ரூபாய் நோட்டில் இருந்த படம் கூட, தெரிகிறது . எப்படி ? மூளையில அவை உள்ளன. அவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு உன் அன்றாட வாழ்க்கையை நீ நடத்தமுடியாது .ஆகவே உன் மனம் அவற்றை அடியில் தள்ளுகிறது. ஆழ்மனம் உருவாகிறது. ஆனால் என் மருந்து மூளையின் சிந்தனைத்திறனை இருபதின் மடங்குகளில் பல்லாயிரம் தடவை அதிகரிப்பதனால் மேல்மனமே நனவிலி போல உக்கிரமான விரிவுடன் இருக்கும். அதாவ்து அந்தமனிதன் எப்போதுமே நனவிலிமனம் கொண்டிருப்பான்.உக்கிரமான கனவிலோ உச்சகட்ட தியான நிலையிலோ இருப்பதைப்போல! ‘
எனக்கு பீதி ஏற்பட்டது. ‘டாக்டர் நீங்கள் இந்தமருந்தை இன்னும் யாரிடமும் சோதனை செய்து பார்க்கவில்லை அல்லவா ? ‘
‘செய்தேனே ‘ என்று என்னை அதிரவைத்தார்.
‘யாருக்கு ? ‘ எனக்கு குடல் குலுங்கியது ‘உங்களுக்கேயா ? ‘
‘எனக்குச் செய்தால் அதன் விளைவுகளை நான் எப்படி பரிசோதிப்பது ? என் கூர்க்கா ஜங்பகதூருக்கு ‘
‘டாக்டர் இது ஐசக் அசிமோவின் ‘ஃப்ளவர்ஸ் ஃபார் அல்ஜீர்னான் ‘ கதை போல இருக்கிறது ‘
‘யார் அந்த முட்டாள் ? ‘
‘ஒன்றுமில்லை. ஜங் பகதூர் என்ன ஆனார் ? கல்கத்தா நூலகத்தை முழுக்க விழுங்கிவிட்டாரா ? ‘
‘இல்லை.அவனை நான் ஒரு காட்டுக்குள் கொண்டு போய் தங்கவைத்தேன். இயற்கையின் நடுவே. எல்லா அறிவையும் அவனே நேரடியாக அறியமுடியும்.. ‘ என்றார் டாக்டர் ‘அவன் அறிவுத்திறனை என்னால் ஒரு கட்டத்துக்குமேல் சோதனைசெய்யவே முடியவில்லை. மொழித்திறன் உச்சத்துக்கு போனபோது அவனால் பறவைகளுடன் பேசமுடிந்தது. ஆயிரம் பூச்சிகளின் சேர்ந்த ஒலியை பிரித்துக்கேட்டு தனித்தனியாக புரிந்துகொள்ள முடிந்தது… ‘ டாக்டர். ‘ விஸ்கி மீதி இருக்கிறதா ‘ என்றார்
‘விஸ்கி இல்லை . நீங்கள் சாப்பிட்டது ரம். ஆனால் அது மிச்சம் இல்லை ‘என்றேன்
‘அவன் காட்டின் பல்லாயிரம்கோடி தகவல்களை ஒரே சமயம் உள்வாங்கி காட்டின் அளவுக்கே முழுமையுடன் அவற்றை தன்னுள் நிரப்புவதைக் கண்டேன்.நான் கேட்ட கேள்விகளுக்கான அவனது பதில்களில் இன்னும் ஆயிரம் வருடம் நம் அறிவுத்துறைகள் யோசிக்கவேண்டிய விஷயங்கள் இருந்தன ‘
விபரீதம் நோக்கி கதை போவதை உள்ளுணர்வு சொன்னது . இன்னொரு பிராங்கன்ஸ்டான். அறிவியல் திறந்துவிட்ட புதுப் பூதம்.
‘அவனை ஒரு முழு மனிதனாக ஆக்க நான் முயன்றேன்.அவனது மூளையின் எல்லா பகுதிகளும் முழுமையாக செயல்படச் செய்தேன். உனக்குத்தெரியும் இது ஒரு மாபெரும் மானுடக்கனவு. மனிதனுக்கு இயற்கை போட்ட எல்லா எல்லைகளையும் தாண்டும் ஒரு அதிமானுடனுக்காக எப்போதுமே மானுட இனம் கனவு கண்டு வருகிறது. மனிதனின் பரிணாம வளர்ச்சி அந்த திசை நோக்கி அவனை இட்டுச்செல்கிறது என்று சொல்கிறார்கள். சாக்ரட்டாஸ் முதல் நீட்சே வரை , வியாசன் முதல் அரவிந்தர் வரை அதைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள்… ‘
‘டாக்டர் இயற்கைக்கு இப்படி சவால்விடலாமா ? ‘
‘மனிதனின் பரிணாமமே இயற்கைக்கு விடப்பட்ட நிரந்தரச் சவால்தானே ? ‘ என்றார் டாக்டர் ‘ ஆதிமனிதன் எப்போது முதுகை நிமிர்த்தி எழுந்து நின்றானோ அப்போதே இயற்கையை எதிர்த்து போராட ஆரம்பித்துவிடான். மனிதக் கலாச்சாரம் என்பதே இயற்கையை எதிர்ப்பதுதான். அதிமனிதன் இயற்கையை முழுமையாக வென்றவன் . ‘
‘ஜங் பகதூர் இப்போது எங்கே ? ‘
டாக்டர் வெகுநேரம் பேசாமலிருந்தார். பிறகு ‘அவன் தப்பித்துப்போய்விட்டான் ‘ என்றார்.
‘பிராங்கன்ஸ்டான் ! ‘என்றேன்
‘அவன்தான் இந்த மெளனச்சாமியார் ‘ என்றார் டாக்டர்.
நான் பல கணங்கள் மனமில்லாமல் அமர்ந்திருந்தேன்
‘நேற்றுத்தான் இவரைப்பற்றிய ஒருகட்டுரையைப் படித்தேன். படத்தையும் பார்த்தேன் ‘ என்றார் டாக்டர்
‘இவரது மூளை இயங்குவதாகவே தெரியவில்லையே. இவர் ஒரு மந்தபுத்தி ஆசாமி என்கிறார்கள். சிலர் இவரை அவதாரபுருஷர் என்று சொல்லி பணம் பண்ணுகிறார்கள். எங்கள் இதழின் கட்டுரையே இந்தக் கோணத்தில்தான் ‘
‘மூளை தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டிருக்கலாம். மூளையின் ஏதாவது ஒரு பகுதி முழுமையடையாமல் இருக்கும்வரைத்தானே அது செயல்படவேண்டும் ? சிந்தனை என்பதே அலைகள்தானே ? முழுக்க நிரம்பிய பாத்திரத்துக்குள் ஏது அலைகள் ? ‘
‘முழுமனிதன்! ‘ என்றேன் . ‘அதாவது அவனுக்கு மனித இயல்பே இல்லை ‘
‘ஆம் ‘ என்றார் டாக்டர்.
அதிமனிதன் அதிகாரமே உருவானவன் என்றார் நீட்சே, ஞானமே உருவானவன் என்றார் அரவிந்தர். இதோ அவன் வெண்டைக்காய் போல இருக்கிறான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
மறுநாள் அனுமதி கிடைத்துவிட்டது. தெரிந்த ஆள் உதவினார். பெரிய கூடத்தில் காத்திருந்தவர்களை இருபதிருபது பேராக உள்ளே அனுப்பினார்கள். உள்ளே என்பது உண்மையில் வெளியே. அங்கே ஒரு பெரிய தோட்டம். அல்லது குட்டிக் காடு . பாறைமீது ஒரு மனிதர் கோவணம் மட்டும் அணிந்து பேசாமல் அமர்ந்திருந்தார். முகத்தில் புன்னகைக்கான சதையமைப்பு இல்லை.ஆனால் புன்னகைப்பதுபோலிருந்தது.பக்கத்தில் சில மயில்கள் மேய்ந்தன.
அவர் அருகே போனதுமே என் சந்தேகங்கள் இல்லாமலாயின. நான் ஒன்றுமே யோசிக்கவில்லை என்பதை மறுவாசல் வழியாக வெளிவந்ததும் அறிந்தேன். மிக நெகிழ்ந்திருந்தேன். கண்ணீர் வருமளவுக்கு. என்ன நடந்தது ?
ரமண மகரிஷியை சந்தித்தது பற்றி பால் பிரண்டன் எழுதியது நினைவுக்கு வந்தது. ஒரு மனிதன் சும்மா உடகார்ந்திருக்கிறான். அவனை பார்த்தவர்கள் பரவசம் அடைகிறார்கள், கண்ணீர் விடுகிறார்கள், ஆழமான மனநகர்வு கொள்கிறார்கள். ஏன் என அவர்களுக்கு தெரிவதுமில்லை.
‘நீங்கள் என்ன நினைத்தீர்கள் ?என்றேன் டாக்டரிடம்
‘ஓம்! அது பூரணம். இதுவும் பூரணம் . பூரணத்திலுருந்து பூரணம் பிறக்கிறது. பூரணத்திலிருந்து பூரணம் பிறந்த பின்பும் பூரணமே எஞ்சி நிற்கிறது!- என்ற ரிக்வேத வரி ‘ என்றார் டாக்டர் ‘நீ ? ‘
‘ஒருமெல்லிய அதிர்ச்சி. பிறகு ஒரு பரவசம் ‘
‘ஏன் தெரியுமா ? ‘
‘ஏன் ? ‘
‘அவர்மீது அணில்கள் ஏறிச்சென்றன , அதனால்தான் ‘
‘ஆம்! ‘ என்றேன் வியப்புடன்.
‘அவர் அங்கே இருப்பதை எந்தப் பறவையும் பொருட்படுத்தவில்லை. ஒரு மனிதர் மரம்போல, பாறைபோல, அந்த சூழலின் ஒரு பகுதியாக இருந்தார் . மனம் என்ற அலை இல்லாத மனிதன். உன்னை பரவசப்படுத்தியது அதுதான். இயற்கைக்காட்சி ஒன்றைக் கண்டு நீ அடையும் பரவசம் போன்றதே அதுவும்.இயற்கையைப் பார்க்கும்போது அதை நீ பிரித்தறியவில்லைதான். ஆனால் ஓயாத அலைகளினாலான உன் மனம் அதை அறிந்துவிட்டது. கடல் தன் கரையை கண்டுகொள்வதுபோல ‘ டாக்டர் சொன்னார் ‘ உனக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நான் வருகிறேன் ‘
‘ஏதோ பிரச்சினை என்றீர்கள் ? ‘ என்றுகேட்டேன்.
‘ஆமாம் .அதன் விடைகிடைத்து விட்டது ‘
‘என்ன விடை ? ‘
‘இயற்கை ஒரு மாபெரும் சமன்பாடு. எல்லா முரண்பாடுகளையும் எல்லா மீறல்களையும் அது இடைவிடாது சமன் செய்தபடியே இருக்கிறது. அதைமீறி எந்த சக்தியும் இருக்க முடியாது. இயற்கை அதை அழித்துவிடும். இந்த மனிதரின் முன் என் மனம் பணிந்தது. இவர் ஓர் விதிவிலக்குத்தான். ஆனால் நாம் அனைவருக்குள்ளும் நம்மை இந்த நிலை நோக்கி இழுக்கும் சக்தியாக இயற்கை இருக்கிறது .இவர்முன் நிற்கும்போது அதை நான் அடையாளம் கண்டேன். ஆம், இயற்கை அவனை ஒரு போதும் விடாது ‘
‘யாரை ? ‘
‘ராம் சிங்கை. அவர் இவரது தம்பி. இவருக்குப் பிறகு அவனை பரிசோதனைக்கு ஆளாக்கினேன். இவரைப்போலன்றி அவனில் ஒரு மையத்தை மட்டும் உக்கிரப்படுத்தினேன் ‘
‘டாக்டர்! ‘என்றேன் ‘ எந்த மையம் ? ‘ ‘
‘மூளையின் முகப்பு. தொகுத்துக் கொள்ளும் பகுதி , அதாவது அதிகாரம். தன் முனைப்பு. அதன் விளைவான குரூரம்… ‘ என்றார் டாக்டர்.
****

பகுதி மூன்று : எரியிதழ் 3

பகுதி மூன்று : எரியிதழ்  3
காசிநகரத்தின் சுயம்வரப்பந்தலுக்குள் நுழைந்த பீஷ்மர் அவைமுழுதும் திரும்பிப்பார்க்க தன் வில்லின் நாணை ஒருமுறை மீட்டிவிட்டு “ஃபால்குனா, நான் குருகுலத்து ஷத்ரியனான தேவவிரதன். எனக்குரிய ஆசனத்தைக்காட்டு” என்று தன் கனத்த குரலில் சொன்னார். மன்னனின் அருகே நின்றிருந்த அமைச்சர் திகைத்து மன்னனை ஒருகணம் பார்த்துவிட்டு இறங்கி ஓடிவந்து கைகூப்பி “குருகுலத்தின் அதிபரான பீஷ்மபிதாமகரை வணங்குகிறேன். தங்கள் வருகையால் காசிநகர் மேன்மைபெற்றது…தங்களை அமரச்செய்வதற்கான இருக்கையை இன்னும் சிலகணங்களில் போடுகிறேன்” என்றார். பின்பு ஓடிச்சென்று சேவகர் உதவியுடன் அவரே சித்திரவேலைப்பாடுள்ள பீடத்தின்மீது புலித்தோலை விரித்து அதில் பீஷ்மரை அமரச்செய்தார்.
பீடத்தில் அமர்ந்த பீஷ்மர் தன் இடக்காலை வலதுகால் மீது போட்டு அமர்ந்துகொண்டு வேட்டைக்குருதிபடிந்த தன் வில்லை மடிமீது வைத்துக்கொண்டார். நிமிர்ந்த தலையுடன் அவையைநோக்கி அமர்ந்திருந்த அவரை ஷத்ரியமன்னர்கள் ஓரக்கண்களால் பார்த்தபின் தங்களுக்குள் பார்த்துக்கொண்டனர். தமகோஷன் குனிந்து சால்வனிடம் “வயோதிகம் ஆசைக்குத் தடையல்ல என்று இதோ பிதாமகர் நிரூபிக்கிறார்” என்றான். சால்வன் “அவர் ஏன் வந்திருக்கிறார் என்று எனக்கு ஐயமாக இருக்கிறது” என்றான். “எங்கு வந்து அமர்ந்திருக்கிறார் என்று பார்த்தாலே தெரியவில்லையா என்ன?நைஷ்டிகபிரம்மசாரி என்று அவரைச் சொன்னார்கள். இளவரசியரின் பேரழகு விஸ்வாமித்திரரை மேனகை வென்றதுபோல அவரையும் வென்றுவிட்டது” என்று சிரித்தான். ஷத்ரியர்களில் பலர் சிரித்துக்கொண்டு பீஷ்மரைப் பார்த்தனர்.
அரண்மனைச்சேடியர் மூன்று தட்டுகளில் மலர்மாலைகளை எடுத்துக்கொண்டுசென்று இளவரசியர் கைகளில் அளித்தனர். அவற்றை கையிலெடுத்துக்கொண்டு மூவரும் முன்னால் நடந்தனர். தலைகுனிந்து நடந்த அம்பிகையும் அம்பாலிகையும் நடுங்கும் கரங்களில் மாலையைப் பற்றியிருந்தனர். வேட்டையில் இரையை நெருங்கும் வேங்கையைப்போல மெல்லிய தாழ்நடையுடன் கையில் மாலையுடன் அம்பை சால்வனை மட்டும் நோக்கி அவனைப்பார்த்து சென்றாள். அக்கணமே அங்கிருந்த அனைவருக்கும் அவள் என்ன செய்யப்போகிறாள் என்பது புரிந்தது.
நாணொலி கிளப்பியபடி பீஷ்மர் எழுந்தார். “பீமதேவா, இதோ உன் கன்னியர் மூவரையும் நான் சிறையெடுத்துச் செல்லப்போகிறேன்…” என்று அரங்கெல்லாம் எதிரொலிக்கும் பெருங்குரலில் சொன்னார். “இந்த மூன்று பெண்களையும் அஸ்தினபுரியின் அரசியராக இதோ நான் கவர்ந்துசெல்கிறேன். உன்னுடைய படைகளோ காவல்தெய்வங்களோ என்னைத் தடுக்கமுடியுமென்றால் தடுக்கலாம்” என்றபடி இடக்கையில் தூக்கிய வில்லும் வலக்கையில் எடுத்த அம்புமாக மணமேடைக்கு முன்னால் வந்து நின்றார்.
பீமதேவன் காதுகளில் விழுந்த அக்குரலை உள்ளம் வாங்கிக்கொள்ளாதவர் என அப்படியே சிலகணங்கள் சிலைத்து அமர்ந்திருந்தார். கோசலமன்னன் மகாபலன் எழுந்து சினத்தால் நடுங்கும் கைகளை நீட்டி “என்ன சொல்கிறீர்கள் பிதாமகரே? இது சுயம்வரப்பந்தல். இங்கே இளவரசியரின் விருப்பப்படி மணம் நிறைவுறவேண்டும்” என்றான்.
“அந்த சுயம்வரத்தை நான் இதோ தடைசெய்திருக்கிறேன். இங்கே இனி நடைபெறப்போவது எண்வகை வதுவைகளில் ஒன்றான ராட்சசம். இங்கே விதிகளெல்லாம் வலிமையின்படியே தீர்மானிக்கப்படுகின்றன” என்றவாறு ஷத்ரியர்களை நோக்கித் திரும்பி “இங்கே என் விருப்பப்படி அனைத்தும் நிகழவேண்டுமென நான் என் வில்லால் ஆணையிடுகிறேன். வில்லால் அதை எவரும் தடுக்கலாம்” என்றபின் பீஷ்மர் இளவரசியரை நோக்கி நடந்து ஒருகணம் தயங்கி, திரும்பி வாசலைநோக்கி “உள்ளே வாருங்கள்” என உரக்க குரல்கொடுத்தார். அவரது எட்டு மாணவர்கள் கைகளில் அம்புகளும் விற்களுமாக உள்ளே வந்தனர். “இளவரசிகளை நம் ரதங்களில் ஏற்றுங்கள்” என்று பீஷ்மர் ஆணையிட்டார்.
அதன் பின்னர்தான் பீமதேவன் உடல் பதற வேகம் கொண்டு எழுந்தார். சினத்தால் வழிந்த கண்ணீருடன் தன் வில்லை எடுத்துக்கொண்டு முன்னால் பாய்ந்தார். அக்கணமே அவர் கை வில்லை பீஷ்மர் தன் அம்புகளால் உடைத்தார். அவரது மாணவர்கள் அம்பையை அணுகியதும் அவள் மாலையை கீழே போட்டு அருகே இருந்த கங்கநாட்டு மன்னனின் உடைவாளை உருவி முதலில் தன்னைத் தொடவந்தவனை வெட்டி வீழ்த்தினாள். பிறமாணவர்கள் வாளுடன் அவளை எதிர்கொண்டனர். அவள் கையில் வெள்ளிநிற மலர் போலச் சுழன்ற வாளைப்பார்த்து பீஷ்மர் சிலகணங்கள் மெய்மறந்து நின்றார். ‘இவள் குருகுலத்து சக்கரவர்த்தினி’ என்று அவருக்குள் ஓர் எண்ணம் ஓடியது. மேலும் இரு சீடர்கள் வெட்டுண்டு விழுவதைக்கண்டதும் தன் அம்பறாத்தூணியிலிருந்து ஆலஸ்ய அஸ்திரத்தை எடுத்து அம்பை மேல் எய்தார். அம்புபட்டு அவள் மயங்கி விழுந்ததும் மாணவர்கள் அவளை தூக்கிக் கொண்டனர்.
அதற்குள் அத்தனை ஷத்ரியர்களும் தங்கள் வாட்களும் அம்புகளுமாக கூச்சலிட்டபடி எழுந்தனர். அவர்களின் காவல்படைகள் விற்களும் அம்புகளுமாக உள்ளே நுழைந்தன. சுயம்வரப்பந்தலெங்கும் ஆயுத ஒலி நிறைந்தது. வைதிகர்களும் சூதர்களும் பந்தலின் ஓரமாக ஓடினர். தன் மகள்களைக் காப்பாற்ற வாளுடன் ஓடிவந்த பீமதேவனை நரம்புமுடிச்சுகளில் எய்யப்பட்ட ஒற்றை அம்பால் செயலற்று விழச்செய்தார் பீஷ்மர். அவரது வில்லில் இருந்து ஆலமரம் கலைந்து எழும் பறவைக்கூட்டம் போல அம்புகள் வந்துகொண்டே இருந்தன என்று அங்கிருந்த சூதர்களின் பாடல்கள் பின்னர் பாடின. அவரெதிரே நின்ற ஷத்ரியர்களின் கைகளிலிருந்து அம்புகளும் விற்களும் சருகுகள் போல உதிர்ந்து மண்ணில் ஒலியுடன் விழுந்தன. மென்மையாக வந்து முத்தமிட்டுச்செல்லும் தேன்சிட்டுகள் போன்ற அம்புகள், தேனீக்கூட்டம் போன்ற அம்புகள், கோடைகால முதல்மழைச்சாரல் போன்ற அம்புகள் என்று பாடினர் சூதர்.
ஆயுதங்களை இழந்து சிதறியோடிப்பதுங்கிய ஷத்ரியர்களின் நடுவே ஓடிச்சென்ற சீடர்கள் மயங்கிக் கிடந்த மூன்று இளவரசிகளையும் கொண்டுசென்று வெளியே நிறுத்தப்பட்டிருந்த போருக்கான வேகரதங்களில் ஏற்றிக்கொண்டதும் பீஷ்மர் அம்பு எய்வதை நிறுத்தாமலேயே அவரும் வந்து ஏறிக்கொண்டார். அவரது சிற்றம்புகள் சிறிய குருவிகள் போல வந்து மண்ணில் இறங்கிப்பதிந்து நடுங்குவதையும் கைகளும் தோள்களும் காயம்பட்டு குருதி வழிய விழுந்துகிடக்கும் ஷத்ரியர்களையும் புராவதி கண்டாள். ரதங்கள் புழுதி கிளப்பி குளம்பொலியும் சகட ஒலியும் எழ விலகிச்சென்றபோது திரைவிலகியதுபோல அவள் விரும்பியதும் அதுவே என்பதை அறிந்தாள்.
சால்வன் தன் கையிலிருந்த உடைந்த வில்லை வீசிவிட்டு தமகோஷனிடம் “நமது படைவீரர்களை பந்தல்முன் வரச்சொல்க….ரதங்கள் அணிவகுக்கட்டும்….” என்றபடி பந்தல்முன்னால் ஓடினான். சேதிமன்னன் தமகோஷன் தன் வீரர்களுக்கு ஆணையிட்டபடி பின்னால் ஓட சால்வனுடைய பத்து தோழர்களும் ஆயுதங்களுடன் அவனுக்குப்பின்னால் ஓடினார்கள். மற்ற ஷத்ரியர்கள் அந்தப்போர் தங்களுடையதல்ல என்பதுபோல பின்னகர்ந்தனர்.
கங்கைக்கரையிலிருந்து அரண்மனை முகப்பை நோக்கி வரும் சாலைகளில் இருந்து சால்வனின் படைகள் ஏறிய ரதங்கள் ஓடிவந்தன. மாகத மன்னன் ஸ்ரீகரன் ஓடிவந்து ஃபால்குனரிடம் “காசியின் படைகளை எங்களுக்குக் கொடுங்கள். நாங்களெல்லாம் எங்கள் காவல்படைகளுடன் மட்டுமே வந்திருக்கிறோம்” என்றான்.
ஃபால்குனர் அமைதியாக “ஆணையிடவேண்டியவர் அரசர்…அவர் இன்னும் ஆலஸ்யத்திலிருந்து மீளவில்லை” என்றார். புராவதியின் கைகளில் கண்மூடிக்கிடந்த காசிமன்னனை மருத்துவர்கள் சூழ்ந்துகொண்டிருந்தனர். மாகதன் சினத்துடன் “மன்னன் படைக்களத்தில் வீழ்ந்தால் நீங்கள் அவன் படைகளுக்கு பொறுப்பேற்கலாம்” என்றான். “ஆம், ஆனால் அம்முடிவை நான் எடுக்கமுடியாது. ஏனென்றால் இப்போது நெறிகளின்படி காசியின் கன்னியருக்கு மணம் முடிந்துவிட்டது. இனி போர் எங்களுடையதல்ல, உங்களுடையது” என்றார்.
மாகதன் தன் படைவீரர்களை நோக்கி கூச்சலிட்டபடி வெளியே ஓடினான். ஃபால்குனர் “இது போர்விளையாட்டுதான் மாகதரே. படைகளைக் களமிறக்கினால் நீங்கள் அஸ்தினபுரியின் படைகளுக்கு பதில் சொல்லவேண்டியிருக்கும்…” என்றார். மாகதன் திகைத்து நின்றான். “உங்கள் ரதங்களில் நீங்கள் செல்லலாம்…இது படைகளின் போரல்ல, மன்னர்கள் மட்டுமே நிகழ்த்தும் போர். அது அனுமதிக்கப்பட்டிருக்கிறது” என்றார் ஃபால்குனர்.
படைகளை கையசைத்து பின்னால் நிறுத்திவிட்டு தன் ரதத்தில் ஏறி முன்னால் விரைந்த சால்வனைத் தொடர்ந்தான் மாகதன். வழியில் உடைந்த ரதசக்கரங்களும் விழுந்த வீரர்களும் கிடந்தனர். ரதமோட்டியிடம் “செல்…செல்” என்று மாகதன் கூவினான். ரதம் அவற்றின்மேல் ஏறி துள்ளிச் சென்றது. பீஷ்மரின் அம்புகள் சிதறிக்கிடந்த பாதைகளினூடாகச் சென்ற மாகதன் முன்னால் செல்லும் சால்வனையும் கங்கனையும் வங்கனையும் பாண்டியனையும் சோழனையும் கண்டுகொண்டான். அவர்களின் கொடிகளும் மேலாடைகளும் சிறகுகளாக அலைபாய ரதங்கள் விண்ணில் பறப்பவையாகத் தெரிந்தன.
காசியின் அகன்ற ரதவீதிகளில் பீஷ்மரின் ரதங்களை பிற ஷத்ரியர்களின் குதிரைகளும் ரதங்களும் தொடர்ந்தோடின. மாளிகைகளில் ஓடி ஏறி காசிமக்கள் அந்தக் காட்சியைக் கண்டனர். அது சினம்கொண்ட பறவைகளின் வான்போர் போலிருந்தது என்று பின்னாளில் ஒரு சூதன் பாடினான். அம்புகள் அம்புகளை வானிலேயே ஒடித்து வீழ்த்தின. கால்கள் முறிந்த குதிரைகள் ஓட்டத்தின் வேகத்தில் சிதறித்தெறித்து விழுந்தன. பீஷ்மர் சோழனின் ரதச்சக்கரத்தை உடைக்க அவன் தரையில் விழுந்தபோது அவன் ரதம் அவன் மேல் ஓடிச்சென்றது. ரதங்கள் ஒன்றுடனொன்று மோதி உடைந்து தெறித்த துண்டுகள் சிதறி பாதையோர இல்லங்களுக்குள் விழுந்தன.
அங்கனும் வங்கனும் நகரைத்தாண்டுவதற்குள்ளாகவே வீழ்ந்தனர். தெறித்துருண்ட ரதங்களில் ஒன்று சண்டியன்னையின் கோயிலுக்குள் பாய்ந்தேறியது. தெற்குத்திசை கோட்டை ஒருபக்கம் வந்துகொண்டே இருக்க ரதங்கள் புழுதித் திரையைக்கிழித்தபடி சென்றன. சால்வனின் ரதம் சக்கரக்குடம் சுவரில் உரச ஓலமிட்டுச்சென்றது. ஒவ்வொரு மன்னராக விழுந்தனர். பீஷ்மரின் வில்வித்தை ஒரு நடனம் போலிருந்தது. அவர் குறிபார்க்கவில்லை, கைகள் குறிகளை அறிந்திருந்தன. அவர் உடல் அம்புகளை அறிந்திருந்தது. அவரது கண்கள் அப்பகுதியின் புழுதியையும் அறிந்திருந்தன.
பீஷ்மரின் அம்புகள் தங்கள்மேல் படும்போது தங்களது ஒரு அம்புகூட பீஷ்மரை தொடவில்லை என்பதை சால்வன் கவனித்தான். தன் ரதத்தின் தடமெங்கும் அவரது அம்புகள் விழுந்து சிதறி பின்னால் செல்வதைக் கண்டான். அவை மிகமெல்லிய ஆனால் உறுதியான புல்லால் ஆனவை. புல்லால் வாலும் இரும்பால் அலகும் கொண்ட பறவைகள். மீன்கொத்திகள் போல அவை வானில் எழுந்து மிதந்து வந்து சரேலென்று சரிந்து கொத்த அந்த புல்நுனிகளே காரணம் என்று புரிந்துகொண்டான்.
கங்கைக்கரை குறுங்காட்டை அடைந்தபோது வனப்பாதையில் சால்வனின் ரதம் மட்டுமே பின்னாலிருந்தது. அவன் தேரின் தூணிலும் கூரையிலும் முழுக்க அம்புகள் தைத்து நின்று அதிர்ந்தன. அவன் கவசத்தில் தைத்த அம்புகள் வில்லின் நாண்பட்டு உதிர்ந்தன. மரணத்தையே மறந்துவிட்டவன் போல சால்வன் அம்புகள் நடுவே நெளிந்தும் வளைந்தும் கூந்தல் பறக்க விரைந்து வந்துகொண்டிருந்தான். அவன் ரதத்தின் கொடியும் முகடும் உடைந்து தெறித்தன. அவனுடைய மூன்று விற்கள் முறிந்தன. அவன் தோளிலும் தொடையிலும் இடையிலும் அம்புகள் இறங்கி குருதிவழிந்தது.
சால்வனுடைய அம்பு ஒன்று பீஷ்மரின் ரதத்தின் கொடிமரத்தை உடைத்தது. அவரது கூந்தலை வெட்டிச்சென்றது அர்த்தசந்திர அம்பு ஒன்று. பீஷ்மர் முகம் மலர்ந்து உரத்த குரலில் “சால்வனே, உன் வீரத்தை நிறுவிவிட்டாய்…இதோ மூன்றுநாழிகையாக நீ என்னுடன் போரிட்டிருக்கிறாய். உனக்கு வெற்றியும் புகழும் நீண்ட ஆயுளும் அமையட்டும். உன் குடிகள் நலம்வாழட்டும்” என வாழ்த்தினார். வில்லைத் தூக்கி நாணொலி எழுப்பி “நில் வயோதிகனே, எங்கே செல்கிறாய்? இதோ நீ என் கையால் மடியும் காலம் வந்துவிட்டது…” என்று சால்வன் கூவினான்.
“அரண்மனைக்குச் செல் குழந்தை…இது உனக்குரிய போரல்ல. என்னைக் கொல்பவன் இன்னும் பிறக்கவில்லை” என்றார் பீஷ்மர். “இந்த அவமதிப்புடன் நான் திரும்பிச்சென்றால் என் மூதாதையர் என்னைப் பழிப்பார்கள்” என்றபடி சால்வன் அம்புகளை எய்து பீஷ்மரின் தோளில் குருதிகொட்டச்செய்தான். பீஷ்மர் அக்கணமே தன்னுடைய வியாஹ்ர அஸ்திரத்தால் அவனை அடித்து ரதத்தில் இருந்து சிதறச்செய்தார். கையிலும் தோளிலும் குருதி வழிய சால்வன் மண்ணில் விழுந்து துடித்தான். உச்சவேகத்தில் இருந்த அவனுடைய ரதம் தறிகெட்டு ஓடி மரங்களில் முட்டிச்சரிந்தது. குதிரைக்குளம்புகள் அசைய ரதச்சக்கரங்கள் சுழல புழுதிக்காற்று அதன் மேல் படிந்தது.
கங்கைக்கரையோரமாக மரங்களில் கட்டி நிறுத்தப்பட்டிருந்த பெரும்படகுகளில் மூன்று இளவரசிகளையும் ஏற்றிக்கொண்டபின் பீஷ்மர் கிளம்பிச்சென்றார். வெண்நாரை சிறகுவிரிப்பதைப்போல படகுகளின் பாய்கள் விரிந்தன. காசிநகரம் அதன் கோட்டையுடனும் மாளிகைகளுடனும் விஸ்வநாதன் பேராலயத்துடனும் கடல்யானம் போல தன்னைவிட்டு விலகிச்செல்வதைக் கண்டு அமர்ந்திருந்தார் பீஷ்மர். அவரது தோளில் பட்டிருந்த காயத்தின் மீது நெய்யுடன் சேர்த்து உருக்கிய பச்சிலைமருந்து ஊற்றி சேவகன் கட்டவந்தபோது புலிபோல உறுமி அவனை அகற்றினார்.
VENMURASU_ EPI_12
ஓவியம் : ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
மூன்று இளவரசிகளும் மயக்கம் தெளிந்து எழுந்தனர். அம்பிகையும் அம்பாலிகையும் அஞ்சி அலறியபடி மழைக்கால குருவிகள் என படகின் மூலையில் ஒடுங்கிக்கொண்டனர். இரை பறிக்கப்பட்ட கழுகு போல சினந்தவளாக அம்பை மட்டும் எழுந்தாள். “அக்கா, வேண்டாம். மிருகங்கள் போல சிறைபிடிக்கப்பட்டிருக்கிறோம். இப்போது நாம் செய்யக்கூடியதென ஏதுமில்லை” என்று அம்பிகை சொன்னாள். அம்பாலிகை வெளுத்த உதடுகளுடன் பெரிய கண்களை விழித்துப்பார்த்தாள். அவளுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை என்று தெரிந்தது.
“என்ன செய்யச் சொல்கிறாய்?” என்று அம்பை சீறினாள். “செய்வது ஒன்று இருக்கிறது அக்கா. நாம் இக்கணமே கங்கையில் குதித்து இறக்கலாம். ஆனால் அதன்பின் இந்த அரக்கன் நம் அரசை என்னசெய்வானென்றே சொல்லமுடியாது. நம் குடிகளுக்காக நாம் இதை தாங்கியே ஆகவேண்டும்” என்றாள் அம்பிகை. “எதைத்தாங்குவது? குயவன் களிமண்ணைக் கையாள்வதுபோல அன்னிய ஆணொருவன் நம் உடலைக் குழைப்பதையா? நம்மில் நாம் விரும்பாத ஒன்றை அவன் வடித்தெடுப்பதையா?” என்றாள் அம்பை.
“நாம் ஷத்ரியப்பெண்கள்….ஷத்ரியனின் உடல் அவனுக்குச் சொந்தமில்லை என்கின்றன நூல்கள்” என்றாள் அம்பிகை. “ஆம்…ஆனால் எந்த உடலும் அதன் ஆன்மாவுக்குச் சொந்தம் என்பதை மறக்காதே. தன் உடலை ஆன்மா வெறுத்து அருவெறுக்குமென்றால் அதுவே அதன் நரகம் என்பது…சால்வரை எண்ணிய என்னால் இன்னொரு ஆணை ஏற்றுக்கொள்ளமுடியாது…நான் பீஷ்மரிடம் பேசுகிறேன்…” என்றாள் அம்பை.
ஆடும்படகில் கயிறுகளைப் பற்றிக்கொண்டு நடந்துசென்று படகின் மறுமுனையில் தாடியும் கூந்தலும் பறக்க முகத்தில் நீரொளி அலையடிக்க அமர்ந்திருந்த பீஷ்மரை அணுகி உரத்தகுரலில் “உங்களிடம் நான் பேசவேண்டும்” என்றாள். பீஷ்மர் திகைப்புடன் எழுந்து “என்ன?” என்றபின் பார்வையை விலக்கி, பின்னால் வந்து நின்ற சீடர்களிடம் “அஸ்தினபுரியின் அரசியர் எதை விரும்பினாலும் கொடுங்கள்” என்றார். “நான் விரும்புவது உங்களுடனான உரையாடலை மட்டுமே” என்றாள் அம்பை.
இளம்பெண்களுடன் பேசியறியாத பீஷ்மர் பதற்றத்துடன் எழுந்து “எதுவானாலும் நாம் நம் நகரை அடைந்தபின் பேசலாம் இளவரசி. நான் உங்கள் பணியாள் என்றே கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்தும் இங்கே செய்யப்படும்” என்றார். பார்வையை விலக்கியபடி “என்னை மன்னியுங்கள்…நான் உங்களைத் தீண்டவில்லை. இப்படி இது நிகழ்ந்தாக வேண்டுமென்றிருக்கிறது…இதன் காரணங்கள் நாமறியாத இறந்தகாலத்திலும் காரியங்கள் நாம் அறியமுடியாத எதிர்காலத்திலும் உள்ளன….என்னை மன்னியுங்கள் என்பதற்கு மேலாக நான் ஏதும் சொல்வதற்கற்றவன்…” என்றார்.
“என் வாழ்க்கையின் காரண காரியங்கள் என்னைச் சார்ந்தவை மட்டுமே” என திடமான குரலில் அம்பை சொன்னாள். ஒரு பெண் அப்படிப்பேசி அப்போதுதான் பீஷ்மர் கேட்டார் என்பதனால் அவரது உடல் மெல்லநடுங்கிக் கொண்டே இருந்தது. படகின் நீட்டுகயிற்றைப் பற்றச்சென்ற கை அதைக் காணாமல் தவறி இடைமேல் விழுந்தது.
அம்பை “நான் விரும்புவதைச்செய்பவளாகவே இதுவரை வளர்ந்திருக்கிறேன். இனிமேலும் அவ்வாறுதான் வாழ்வேன்” என்றாள். “…என் வழி நெருப்பின் வழி என்று முதுநாகினி என்னிடம் சொன்னாள். குன்றாத விஷம் கொண்டவையாக என் சொற்கள் அமையவேண்டுமென என்னை வாழ்த்தினாள். இப்போதுதான் அவற்றின் பொருள் எனக்குப்புரிகிறது. என் பாதையை நானே அனைத்தையும் எரித்து அமைத்துக்கொள்வேன்.”
“தேவி, நான் முடிவெடுத்தவற்றை அவ்வாறே செய்யக்கூடியவன். இந்த முடிவை எடுத்துவிட்டேன். நீங்கள் என்னுடன் அஸ்தினபுரிக்கு வந்து அரசியாவதை எவராலும் தடுக்கமுடியாது….நீங்களோ உங்களைச் சேர்ந்தவர்களோ என்னைக் கொன்றபின்னர் வேண்டுமென்றால் உங்கள் வழியில் செல்லமுடியும்….என்னை மன்னியுங்கள். நான் பெண்களுடன் அதிகம் பேசுபவனல்ல” என்று சொல்லி பீஷ்மர் எழுந்தார்.
“நான் சால்வமன்னரை விரும்புகிறேன்” என்று உரக்கக் கூவினாள் அம்பை. “என் உயிர் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. அவர் மூச்சு பட்ட தாழைமலர் என் படுக்கையில் எத்தனையோமுறை இருந்திருக்கிறது. மானசவிவாகப்படி நான் இன்று அவர் மனைவி….இன்னொருவன் மனைவியை நீங்கள் கவர்ந்துசெல்ல நெறிநூல்கள் அனுமதியளிக்கின்றனவா?”
பீஷ்மர் கைகளை நீட்டி கயிற்றை பற்றிக்கொண்டார். “இளவயதில் காதல்வயப்படாத கன்னியர் எவர்? இளவரசியே, இளங்கன்னி வயதில் ஆண்களைப் பார்க்கும் கண்களே பெண்களுக்கில்லை என்று காவியங்கள் சொல்கின்றன. ஆண்கள் அப்போது அவர்களுக்கு உயிருள்ள ஆடிகள் மட்டுமே. அதில் தங்களைத் தாங்களே நோக்கி சலிப்பில்லாமல் அலங்கரித்துக்கொள்வதையே அவர்கள் காதலென்று சொல்கிறார்கள்….” பீஷ்மர் குனிந்து அம்பையின் கண்களைப்பார்த்தார். அவரது திகைப்பூட்டும் உயரம் காரணமாக வானில் இருந்து ஓர் இயக்கன் பார்ப்பதுபோல அவள் உணர்ந்தாள். “பெண்கள் கண்வழியாக ஆண்களை அறியமுடியாது. கருப்பை வழியாக மட்டுமே அறியமுடியும். அதுவே இயற்கையின் நெறி…அவனை மறந்துவிடுங்கள்.”
“அவரை நான் அறிவேன்…எனக்காக அவர் இந்நேரம் படைதிரட்டிக்கொண்டிருப்பார்…என் மீதான காதலினால் உருகிக்கொண்டிருப்பார்” என்றாள் அம்பை. “தேவி, அவனை நானறிவேன். என்னை வெல்லமுடியாதென்றாலும் என்னை எதிர்த்தேன் என்றபெயருக்காகவே என் பின்னால் வந்தவன் அவன். அதாவது சூதர்பாடல்களுக்காக வாழ முனையும் எளிய ஷத்ரியன்….இளவரசியே, சூதர்பாடல்கள் வேதவனத்தின் கிளிகள் போல. நீட்டிய கைகளை அவை அஞ்சும். அவற்றை அறியாது தியானத்தில் இருக்கும் யோகியரின் தோள்களிலேயே அமரும்.”
“நான் உங்களிடம் கெஞ்ச வரவில்லை…” என்றாள் அம்பை. “உங்கள் கருணையை நான் கோரவில்லை. நான் என் உரிமையைச் சொல்கிறேன். நான் பெண்ணென்பதனாலேயே அழியாத நாகினிகள் எனக்கு அளித்துள்ள உரிமை அது….” அம்பை குனிந்து சுழித்து மேலெழும் கங்கையின் நீரைக் கையில் அள்ளிக்கொண்டு உரக்கச் சொன்னாள். “கங்கை மீது ஆணையாகச் சொல்கிறேன்….நான் சால்வனின் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுப்பேன். வேறு எக்குழந்தை என் வயிற்றில் பிறந்தாலும் இந்த கங்கை நீரில் அவற்றை மூழ்கடிப்பேன்.”
பீஷ்மர் மின்னல்தாக்கிய மரம்போல அதிர்ந்துகொண்டு அப்படியே சுருண்டு அமர்வதை திகைப்புடன் அம்பை பார்த்தாள். நடுங்கும் இரு கைகளாலும் தலையைத் தாங்கிக்கொண்டு “போ…போய்விடு…இனி என் முன் நிற்காதே…” என பீஷ்மர் கூவினார். “யாரங்கே…இந்தப்பெண்ணை இவள் விரும்பியபடி உடனே அனுப்பிவையுங்கள்…இவள் கேட்பதையெல்லாம் கொடுங்கள். உடனே…இப்போதே..” என்று கூச்சலிட்டார்.
படகு பாய்களை இறக்கியது. அதன் கொடி இறங்கியதும் கங்கைப்படித்துறை ஒன்றிலிருந்து இரு சிறு படகுகள் அதை நோக்கி வந்தன. பீஷ்மரின் மாணவன் “ஒரு படகு தேவை…இளவரசியார் அதில் கிளம்பவிருக்கிறார்கள்” என்றான்.
அம்பை திரும்பி அம்பிகையையும் அம்பாலிகையையும் பார்த்தாள். அம்பாலிகை அப்போதும் திகைப்பு மட்டுமே கொண்ட பெரிய கண்களால் பார்த்துக்கொண்டிருந்தாள். அம்பிகை மெல்லத் தலையசைத்து விடைகொடுத்தாள். அம்பை கயிற்றில் தொற்றி சிறுபடகில் ஏறிக்கொண்டாள்.
மாணவர்கள் “சென்றுவருக தேவி!” என அவளை வணங்கி வழியனுப்பினர். படகுகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டிருக்கையில் அம்பை முதன்மைச்சீடனிடம் தாழ்ந்த குரலில் “அவருக்கும் கங்கைக்கும் என்ன உறவு?” என்று கேட்டாள். “அவர் கங்கையின் மைந்தர். கங்கை உண்ட ஏழு குழந்தைகளுக்குப்பின் பிறந்த எட்டாமவர்” என்றான் சீடன். முகத்தில் வந்து விழுந்த கூந்தலை கைகளால் அள்ளி பின்னால் தள்ளியபடி ஆடும்படகில் உடலை சமநிலை செய்தபடி அம்பை ஏறிட்டுப்பார்த்தாள். அப்பால் கங்கைநீரை நோக்கி நின்றிருந்த பீஷ்மரின் முதுகைத்தான் அவள் பார்த்தாள். விலகிவிலகிச்சென்ற சிறிய படகிலிருந்தவளாக அம்பை அவரை பார்த்துக்கொண்டே சென்றாள்.