அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

4/17/14

நூல் இரண்டு – மழைப்பாடல் – 38

நூல் இரண்டு – மழைப்பாடல் – 38


மார்த்திகாவதிக்கு வடக்கே இருந்த பித்ருதீரம் என்னும் காட்டுக்குள் அரசர்களுக்குரிய மயானம் இருந்தது. அங்கே அஷ்டாம்பையரின் சிறிய ஆலயம் ஒன்றிருந்தது. செங்கல்லால் இடுப்பளவு உயரத்தில் கட்டப்பட்ட கருவறைக்குள் ருத்ரசர்ச்சிகை, ருத்ரசண்டி, நடேஸ்வரி, மகாலட்சுமி, சித்தசாமுண்டிகை, சித்தயோகேஸ்வரி, பைரவி, ரூபவித்யை என்னும் எட்டு அன்னையரும் சிவந்த கல்வடிவங்களாக அமர்ந்திருந்தனர்.

அங்கே பன்னிரு கைகளுடன் நாசிகூர்ந்து செவி குவிந்த நாய்முகத்துடன் அமர்ந்திருந்த செந்நிற அன்னையின் பெயர் பைரவி. விரிந்த பெருங்கரங்களில் வாள், வில், உடுக்கை, கண்டாமணி, கட்டாரி, கதை, உழலைத்தடி, வஜ்ராயுதம், திரிசூலம், பாசம், அங்குசம் ஏந்தி அருட்கரம் கொண்டு நின்றிருந்த அன்னை அவளுக்குரிய முதற்சாமத்தின் ஏழாவது நொடியில் கண்விழித்தெழுந்தாள். கருவறை விட்டு ஒளிரும் கண்கள் கொண்ட நாய்வடிவில் வெளியே வந்து மழைசொட்டிக்கொண்டிருந்த நகரம் வழியாக நடந்து சென்றாள்.
அவளைக் கண்ட நகரத்து நாய்களெல்லாம் காதுகளை மடித்து தலைதாழ்த்தி வணங்கி முனகியபடி பின்னால் நகர்ந்து சுவரோடு ஒண்டிக்கொண்டு வாலை கால்களுக்கிடையே செருகி நுனியை மெல்ல ஆட்டின. அன்னை கடந்துசென்ற வழியில் தனக்குள் பேசிக்கொண்டிருந்த பித்தன் ஈரமண்ணில் காலடிச்சுவடு விழாமல் சென்ற பெண்நாயைக் கண்டு வியந்து புன்னகையுடன் கைகளை ஆட்டி ஏதோ சொன்னான். கூரைசொட்டும் ஒலிகள் கேட்டுக்கொண்டிருந்த நகரில் அன்னை குளிர்காற்று போல அலைந்து திரிந்தாள். அவளுடைய நாசி வாசனைகளுக்காகக் கூர்ந்திருந்தது.
இருளில் மின்னிய செவ்விழிகளாக சென்றுகொண்டிருந்த அன்னை பசுங்குருதியின் நறுமணத்தை அறிந்தாள். வாலைத் தூக்கியபடி மெல்லக்காலெடுத்துவைத்து அவள் அரண்மனைவளாகத்துள் நுழைந்து அந்தப்புரத்து வாசலுக்குக் கீழே வந்தாள். ஈரநிலத்தில் குருதிசொட்டிக்கிடந்ததை முகர்ந்தாள். அது குருதியல்ல முலைப்பாலென்று அறிந்ததும் மகிழ்வுடன் வாலைச்சுழற்றியபடி முன்னங்கால்களை அகற்றிவைத்து காதுகளைக் குவித்து செங்கரண்டிநாவை நீட்டி அந்தப் பாலை மண்ணிலிருந்து நக்கிக் குடித்தாள். மகிழ்ந்து எம்பி எம்பிக்குதித்தபடி அங்கேயே சுற்றிவந்த அன்னை நாக்கால் மோவாயை நக்கியபடி இருளில் அரண்மனைமுகடின் நீர் சொட்டும் மண்ணில் வாலை நீட்டி குவைந்து அமர்ந்திருந்தாள்.
மேலே சாளரத்தருகே வந்து நின்று மெல்லிய ஒலியில் அழுதுகொண்டிருந்த குந்தியை அன்னை தலைதூக்கி நோக்கிக்கொண்டிருந்தாள். அவ்வப்போது எதிர்பார்ப்புடன் அவள் எழுந்து நாக்கை நீட்டி வாய் ஓரங்களை நக்கிக்கொண்டாள். பின்பு மீண்டும் அமர்ந்தாள். துயிலில்லாமல் அவள் அறைக்குள் நடந்துகொண்டிருப்பதையும் மஞ்சத்தில் புரள்வதையும் பீடத்தில் அமர்ந்து நெடுமூச்செறிவதையும் அவள் அறிந்தாள். மீண்டும் குந்தி சாளரத்தருகே வந்து தன் கொதிக்கும் முலைகளைப் பிடித்து வெண்ணிறமான கண்ணீராக பாலை இருளில் பீய்ச்சியபோது கீழே திறந்த வாயுடன் நின்றிருந்த அன்னை எம்பி காற்றில் குதித்து தன் வாயாலேயே அத்துளிகளை கவ்வி உண்டாள்.
இரவெல்லாம் குந்தி தன் முலைகளைப் பிழிந்துகொண்டிருந்தாள். அவ்வளவு பாலும் எங்கிருந்து வருகின்றது என்று வியந்தாள். உடலுக்குள் உள்ள தசைகள் அனைத்தும் உருகி வருவது போலத் தோன்றியது. அதன் வெம்மை அவள் விரல்களைச் சுட்டது போல பிழிந்தபின் கைகளை உதறிக்கொண்டாள். தன்முன் திரண்டு நின்றிருந்த இருள் குளிர்ந்த ஈரநாக்கால் அந்தப் பாலை நக்கி உண்டு சப்புகொட்டும் ஒலியை அவள் கேட்டாள்.
பிரம்ம முகூர்த்தத்தில் மீண்டும் சாளரத்தருகே வந்த குந்தி இருகைகளாலும் தன் முலைகளை இறுகப்பற்றிக்கொண்டாள், அவற்றைப் பிய்த்து தசைத்துண்டுகளாகக் கசக்கி வெளியே வீசிவிடவேண்டுமென விழைபவள் போல. தலையால் சாளரப்பலகையை ஓங்கி அறைந்தபடி அவள் விம்மி அழுதாள். முலைக்குள் நரம்புகளுக்குள் புகுந்துகொண்டு நாகங்கள் நெளியும் வலி எழுந்தது. ஆனால் அவள் அவற்றை அழுத்திப்பிழிந்தபோது மெல்லக்கசிந்தனவே ஒழிய பால் எஞ்சியிருக்கவில்லை. அவள் இருகைகளாலும் தன் வலது முலையைப் பற்றி அழுத்திக்கசக்கிப் பிழிந்தாள். அவற்றில் இருந்து புதியகுருதி ஊறி கீழே சொட்டியது.
இருமுலைகளில் இருந்தும் சொட்டிய செங்குருதியை அன்னை நக்கி உண்டாள். ‘ஆம்!’ என அவள் முனகியது இருளுக்குள் ஒலித்தது. நாக்கால் வாயை நன்கு துடைத்தபின் வாலைத் தூக்கி காதுகளை விடைத்த அன்னை பாய்ந்தோடத் தொடங்கினாள். மார்த்திகாவதியை விட்டு விலகி யமுனைக்கரையை அடைந்து இருள் மூடிக்கிடந்த நதிக்கரைக் குறுங்காடுகள் வழியாக அவள் நான்குகால் பாய்ச்சலில் ஓடினாள்.
காற்றில் உலைந்த மரக்கிளைகளையும், கரைச்சேற்றில் பதிந்து சருகுகள் உதிர்ந்து மூடி நின்றிருந்த பழைய படகுகளையும், கரைகளில் சுருட்டிப்போடப்பட்டிருந்த நாணல் முறுக்கிச்செய்யபப்ட்ட வலைகளையும், காட்டுநாய்களின் காலடிச்சுவடுகள் பதிந்த சேற்றுப்பரப்புகளையும், மழைநீர் ஓடி அரித்த ஓடைகளையும், இரவுமழையால் கழுவப்பட்டு பாதங்களைக் காத்துக்கிடந்த ஒற்றையடிப்பாதைகளையும் தாண்டி காலடிகள் மண்ணில் பதியாமல் அவள் சென்றுகொண்டிருந்தாள்.
உத்தரமதுராபுரியின் படித்துறைகளில் பால்பானைகள் ஏற்றப்பட்ட சிறுபடகுகள் துறைசேரத் தொடங்கிவிட்டிருந்தன. சிலந்தி வலை போன்று விரிந்து இருளுக்குள் அசைந்த வெண்ணிறப் பாய்களுடன் பெரிய படகுகள் யமுனையில் சென்றன. படகுத்துறைகளில் வண்டிகளின் நுகத்தைத் தூக்கி காளைகளைக் கட்டிக்கொண்டிருந்தவர்கள் அருகே குறுங்காடு வழியாக இலையடர்வு ஒலிக்க பாய்ந்துசென்ற அன்னையைக் கண்டனர்.
மதுராபுரியின் பெருந்துறைக்கு முன்னரே இருந்த மீன்பிடிப்படகுகளின் சிறுதுறையில் மென்மரம் குடைந்துசெய்த படகுகள் நீரில் ஆடிக்கொண்டிருந்தன. ஒன்றாகக் கட்டப்பட்ட துடுப்புகள் கரையில் கிடந்தன. அங்கே ஈச்சஓலையால் அமைக்கப்பட்ட சிறியகுடிலுக்குள் படகுக்காவலனான செம்படவன் எழுந்து யமுனையில் இருந்து வந்த ஈரக்காற்றை ஏற்றபடி முழங்கால் மடித்து அமர்ந்திருந்தான். படகுத்துறைக்கு வந்த செந்நிறமான புதிய நாயை அவன் வியப்புடன் பார்த்தான்.
VENMURASU_DAY_89
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
விடைத்த காதுகளுடன் அது தரையை முகர்ந்தபடிச் சென்று படகுத்துறையின் மண்சரிவில் இறங்கியது. அங்கே நதிநீரில் சென்று எவராலோ பிடித்து தறியில் கட்டப்பட்டு அலைகளில் ஆடி பிற படகுகளை முட்டிக்கொண்டிருந்த சிறிய படகை அடைந்து கரையில் இருந்து தாவி அதில் ஏறிக்கொண்டது. கரைநாய்கள் அவ்வாறு செய்வதில்லை என்று அறிந்த செம்படவன் எழுந்து வெளியே வந்து அதைப் பார்த்தான்.
நாய் படகின் உள்பகுதியை கூரியநாசி வைத்து பல இடங்களில் முகர்ந்தது. மெல்லிய துருத்தியொலிபோல அது மோப்பம்பிடிக்கும் மூச்சைக் கேட்கமுடிந்தது. பின்பு மீண்டும் பாய்ந்து கரைக்குவந்து கரையை முகர்ந்தபடியே மெல்ல நடந்து அவனருகே வந்தது. செம்படவன் கொட்டாவி விட்டபடி திரும்பும்போது கடந்துசென்ற நாயின் விழிகளைக் கண்டு அஞ்சி மெய்சிலிர்த்து நின்றுவிட்டான். அவை செங்கனல்துளிகள் போலிருந்தன.
நாய் முகர்ந்தபடியே ஒற்றையடிப்பாதை வழியாகச் சென்று மறைந்தபின் தான் கண்டது உண்மையா பிரமையா என எண்ணி அவன் தலையைச் சொறிந்தான். உள்ளே சென்று தன் முண்டாசுத்துணியை எடுத்தபோதுதான் தான் கவனித்த ஒன்றை அவன் சிந்தை உள்வாங்கிக்கொண்டது. ஓடிவந்து வெளியே பார்த்தான். நாய் சென்ற செம்மண்பாதையில் அதன்பாதத்தடங்களே இருக்கவில்லை.
அன்னை பைரவி அன்று மாலைக்குள் மதுராபுரிக்கு வடகிழக்கே இருந்த காலவனம் என்னும் சிற்றூரைச் சென்றடைந்தாள். ஊருக்கு வெளியே இருந்த வராஹியன்னையின் ஆலயத்தில் காலைபூசனைக்காக வந்த பூசகர் அவளைக் கண்டு திகைத்து கண்களுக்குமேல் கையை வைத்து கூர்ந்து நோக்கினார். கருக்கிருட்டில் ஊருக்குள் புகுந்த அன்னை வேளிர்களின் பெருந்தெருவில் புகுந்து சூதர்களின் இடுங்கலான தெருக்கள் வழியாக ஓடி அங்கே வேப்பமரத்தடியில் இருந்த சிறிய புற்குடிலின் வாயிலை அடைந்து நின்றாள். முற்றத்தை முகர்ந்தபடி குடிலைச் சுற்றிவந்தாள்.
அதிகாலையில் குடிலின் படலைத் திறந்து சூதமகளான ராதை வெளியே வந்தாள். கருக்கிருட்டுக்குள் குரலெழுப்பும் காகங்கள் அமைதியாக இருப்பதையும் இலைகளில் காற்று ஓடும் ஒலியும் கூரைநுனியில் இருந்து இரவுமழையின் எஞ்சிய துளிகள் தயங்கித் தயங்கிச் சொட்டும் ஒலியும் மட்டும் கேட்டுக்கொண்டிருப்பதையும் உணர்ந்தாள். தன் கூந்தலை அள்ளி கொண்டையிட்டபடி அவள் முற்றத்துக்கு வந்தபோது அங்கே சின்னஞ்சிறு செந்நிற நாய்க்குட்டி ஒன்று நின்றிருப்பதைக் கண்டாள். முகம்பூத்து அதை கையிலெடுத்துக்கொண்டாள்.
இளவெம்மை பரவிய வெளிறிய அடிவயிற்றையும் வாழைப்பூவின் மலர்சீப்பு என குவிந்த நால்விரல்கால்களையும் காட்டி நெளிந்தது நாய்க்குட்டி. பூசணக்காளான் போன்ற மெல்லிய மயிர்பரவிய சருமம் குளிரில் சிலிர்த்திருக்க தாமரையிதழ்போன்ற சிறிய மடிந்த காதுகளை ஆட்டி ஒற்றைச்சிறுவிரல் போன்ற வாலைச்சுழற்றி சிறிய செந்நாவை நீட்டி அவளை நக்குவதற்காக எம்பியது. அவள் பற்கள் தெரிய கண்கள் மின்னச் சிரித்தபடி அதைத் தூக்கி தன் மூக்கால் முலைக்காம்புபோன்ற அதன் மூக்கைத் தொட்டாள். அது நாக்கு நீட்டி அவள் உதட்டை நக்கியது.
நாய்க்குட்டியுடன் உள்ளே சென்ற ராதை கீழே ஈச்சம்பாயில் படுத்திருந்த தன் கணவன் அதிரதனின் அருகே அமர்ந்து நாய்க்குட்டியை அவன் காதருகே விட்டாள். அது அவன் காதுமடலை அன்னைமுலையென சப்பியபோது அவன் பாய்ந்து எழுந்தான். நாய்க்குட்டி பின்னால் சரிந்து தரையில் விழுந்து எழுந்து வாலைச்சுழற்றியபடி அவன் ஆடையைக் கவ்வி நான்கு கால்களையும் ஊன்றி அதை இழுத்தது. வாய்விட்டுச் சிரித்த ராதையை நோக்கி “எங்கே கிடைத்தது இது?” என்றான் அதிரதன். “தேடிவந்தது…காலையில் வாசலைத் திறந்தால் இது நின்றுகொண்டிருந்தது” என்று அவள் சொன்னாள்.
அதிரதன் அதை கையில் எடுத்து அடி நோக்கி “பெட்டை” என்றான். “புதரில் இதன் தாய் குட்டிபோட்டிருக்கும்… மழையில் நனையாத இடம்நோக்கி நம் வீட்டுக்கு வந்திருக்கிறது.”  ராதை அதை வாங்கி “நம் குழந்தையின் தோழி இவள்… இன்றுவரை நம்மைத்தேடி ஒரு நாய் வந்ததே இல்லை” என்றாள். அருகே மரவுரியில் துயின்றுகொண்டிருந்த குழந்தையின் போர்வையை மெல்ல விலக்கி அவனருகே நாயை விட்டாள். நாய் குழந்தையை முகர்ந்தபின் அவன் மேல் ஏறி அப்பக்கம் மல்லாந்து விழுந்து புரண்டு எழுந்து நான்கு கால்களையும் பரப்பி நின்று துளிச்சிறுநீர் கழித்தபின் மீண்டும் அவன்மேல் ஏறி புரண்டு இப்பக்கம் விழுந்து ராதையை நோக்கி வந்தது.
விழித்துக்கொண்ட குழந்தை அழத்தொடங்கியது. கால்களை வேகமாக மிதித்து முட்டி பிடித்த சிறிய கரங்களை வீசி சிறிய செவ்வாயைத் திறந்து நாகணவாய் போல அகவியது. ராதை குழந்தையை கையில் எடுத்து மார்போடணைத்துக்கொண்டாள். அன்னையின் கைபட்டதும் குழந்தை உதடுகளை செம்மொட்டு எனக் குவித்து முகமும் கழுத்தும் தோள்களும் சிவக்க நடுங்கிக்கொண்டே வீரிடத் தொடங்கியது.
அதிரதன் “இப்போதுகூட பிந்திவிடவில்லை ராதை” என்று தணிந்தகுரலில் சொன்னான். “இதை நம்மால் வளர்க்கமுடியாது. நாம் ஒரு கைக்குழந்தையைப் பார்த்ததேயில்லை. இதற்கு என்ன உணவளிப்பதென்றுகூட உனக்குத்தெரியாது.” ராதை உதடுகளை அழுத்தி அகம் மின்னிய கண்களுடன் குழந்தையை இறுக அணைத்துக்கொண்டாள். “வளர்க்கமுடியவில்லை என்றால் நான் சாகிறேன்…” என்றாள்.
“நீ சாகமாட்டாய், குழந்தை செத்துவிடும்” என்று அதிரதன் கடுமையாகச் சொன்னான். “சாகாது… இது யமுனை என் கைகளில் கொண்டுவந்து தந்த குழந்தை… நான் அன்று யமுனையன்னையை என்ன கேட்டேன் தெரியுமா?” அவள் தன் வயிற்றில் கையை வைத்தாள். “இது மூடப்பட்ட வாயில்… ஆனால் ஒழிந்த அறை அல்ல. உள்ளே என் குழந்தைகள் கதவை முட்டி முட்டிக் கூச்சலிடுவதை நான் கேட்கிறேன். என் உதரத்தைத் திறந்துவிடு. இல்லையேல் என் குழந்தைகளுடன் நான் உன்னில் மூழ்கி மறைகிறேன். என் உடலை உனது ஆழத்து மீன்கள் உண்ணட்டும். அவற்றின் ஆயிரம் விழிகளாக மாறி உன்னில் நீராடும் குழந்தைகளைப் பார்த்து நிற்கிறேன். உதடுகளைக் குவித்து அவற்றின் கால்களில் முத்தமிடுகிறேன் என்று சொன்னேன்.”
“கைகளைக் கூப்பியபடி மூழ்கியபோது என் தலைக்குமேல் அந்தப் படகின் அடிப்பக்கம் கருமையாக நெருங்கி வந்ததைக் கண்டேன். மேலே எழுந்ததும் நான் கேட்டது இவனுடைய அழுகையை. இளமழையில் நனைந்து வாழைப்பூங்குருத்தின் நிறத்தில் கைகளை ஆட்டி அழுதுகொண்டிருந்தான். அன்னை எனக்களித்த கொடை என எண்ணி அப்படியே அள்ளி அணைத்துக்கொண்டு கரையேறி ஓடிவந்தேன்…” என்றாள் ராதை.
அவள் மீண்டும் மீண்டும் சொன்னதுதான். அவன் விழிகளை விரித்து அவளையே நோக்கினான். அவனறிந்த ராதை அல்ல அவள். அவனால் ஒருபோதும் அறிந்துகொள்ளமுடியாதவள். அவள் பேசும் அந்த மொழியை அவன் கேட்டதேயில்லை.
அவள் தன் கச்சைத் திறந்து கருநிற இளமுலைகளை வெளியே எடுத்தாள். காராமணி போன்ற அவள் சிறிய முலைக்கண்கள் உள்ளே குழிந்திருந்தன. விரல்களால் அவற்றை வருடி வெளியே எடுத்து குழந்தையின் வாயில் வைத்தாள். அது துளை தேடும் நீரின் விரைவுடன் வாய்நோக்கி முழு உடலையும் குவித்து கவ்விக்கொண்டது. கைகளை ஆட்டியபடி மெல்லிய ஒலியுடன் அது முலையை சப்பியது.
“அதை ஏமாற்றாதே…” என்று அதிரதன் எரிச்சலுடன் சொன்னான். “என் நெஞ்சு நிறைய பால் உள்ளது. வரும்… எனக்குத்தெரியும்” என்று ராதை தலையை பிடிவாதமாக சரித்துக்கொண்டு சொன்னாள்.
“இரு நான் எஞ்சியிருக்கும் பாலை எடுக்கிறேன்” என்றபடி அதிரதன் எழுந்தான். அவன் ஆடையைக் கவ்வியிருந்த நாய்க்குட்டி அவனுடலில் இருந்து தொங்கியபடி சரிந்து கீழே விழுந்து புரண்டு எழுந்து அவன்பின்னால் கால்களைப் பரப்பி வைத்து தள்ளாடியபடி நடந்தது.
“இனிமேல் இரு மடங்கு பால்தேவை” என்றபடி அதிரதன் அடுப்பின்மேல் கனலில் இருந்த மண்கலயத்தில் இருந்து பாலை வெண்கலக் கிண்ணத்தில் எடுத்தான். அதை மெல்லச்சுழற்றி ஆறச்செய்தான். நாய்க்குட்டி அவன் கால்களில் தன் முன்னங்கால்களைத் தூக்கி வைத்து ஏறி மேலே நோக்கி ’அழ்! அழ்!’ என குரைத்தது. அவன் குனிந்து அதன் கண்களைப்பார்த்தான். விலங்குக் குழந்தையின் கண்களுக்குள் அத்தனை பெரும் கருணை எப்படித் தேங்கமுடியுமென எண்ணியபோது அவன் உடல் சிலிர்த்துக்கொண்டது. கிண்ணத்தை அதன் முன் வைத்தான்.
“குழந்தைக்குக் கொண்டுவந்த பால் அது” என பல்லைக்கடித்தபடி ஈரக்கண்களுடன் ராதை கூவினாள். “ஆம். ஆனால் இதுவும் குழந்தைதான்… இன்னும் சற்று வேகமான குழந்தை” என்றபின் குனிந்து நாய்க்குட்டியின் மெல்லியசிறுகழுத்தை அதிரதன் வருடினான். அது முன்னங்கால்களைப் பரப்பி வைத்து ளக் ளக் ளக் என வேகமாக பாலைக்குடித்தது. அதிரதன் இன்னொரு கிண்ணத்தில் பாலை எடுத்து அதைச் சுழற்றி ஆறச்செய்தபடி ராதை அருகே வைத்தான். அறைமூலையில் இருந்த மூங்கில்பெட்டியில் இருந்து வெண்ணிறமான துணி ஒன்றை எடுத்து திரியாக சுருட்டினான்.
வாயின் ஓரம் நுரை பரவ முலையைச் சப்பிக்கொண்டிருந்த குழந்தை முகத்தைத் திருப்பியபடி உடலே சிவந்து ஒரு பெரிய குருதித்துளிபோல மாறி வீரிட்டலறியது. கால்களையும் கைகளையும் உதைத்துக்கொண்டு அழுது அவ்வழுகையின் உக்கிரத்தில் ஓசையை இழந்து உடல் உலுக்கிக் கொள்ள அதற்கு மெல்லிய வலிப்பு வந்தது. “அய்யோ!” என ராதை அலறினாள்.
அதிரதன் குழந்தையை வாங்கி தன் மடியில் போட்டு அதன் வாயில் தன் கனத்த சுட்டுவிரலால் தட்டினான். கைகளை ஆட்டியபடி வாயை நீட்டி அந்த விரலை குழந்தை கவ்வ முயன்றது. அவன் கிண்ணத்தில் இருந்த பாலில் திரியைப்போட்டு நனைத்து குழந்தையின் வாயில் வைத்தான். குழந்தை இருமுறை சப்பிவிட்டு மேலும் வாயால் தாவ அவன் அதை எடுத்து பாலில் நனைத்து மீண்டும் வைத்தான். அவன் திரியை எடுத்தபோது குழந்தை முழு உடலாலும் தவித்தது. அதைக்கண்டு ராதை கண்களை மூடிக்கொண்டு அழுதாள். அவளுடைய இமைப்பீலிகளை நனைத்தபடி கரிய கன்னங்களில் நீர் வழிந்தது.
நாய்க்குட்டி கிண்ணத்தை நக்கியபடியே ஓசையெழ தள்ளிக்கொண்டு சென்று சுவரில் முட்டியபின் அதன் மேல் ஏறமுயன்று கிண்ணம் உருளும் ஒலியுடன் மல்லாந்து விழுந்தது. எடைதாளாமல் வயிறு கீழிறங்கி நிலம்தொட முதுகு வளைய கால்களைப் பரப்பி வைத்து தள்ளாடி நடந்து வந்து ராதை அருகே நின்று சிறுநீர் கழித்தது. அதன் மீசைமயிர்களிலும் அடித்தாடையிலும் பால் கெட்டியான துளிகளாக துளித்து நின்றது. தன் பால்துளி விழிகளால் அது ராதையையும் அதிரதனையும் மாறிமாறிப்பார்த்து ராதையின் மடியைத் தேர்ந்தெடுத்து அவளை அணுகி அவள் தொடைமேல் காலெடுத்து வைத்து ‘மங் மங்’ என்று ஒலி எழுப்பியது.
அவள் கண்ணீருடன் அதை நோக்கிச் சிரித்தாள். அதை நடுங்கும் கைகளால் அள்ளி எடுத்தபோது அது இருமடங்கு எடைகொண்டிருப்பதை உணர்ந்து சிரித்துக்கொண்டு ’’திருட்டுத் தீனிக்காரி’’ என்றபடி அதை தூக்கி தன் மடிக்குழியில் வைத்துக்கொண்டாள். தூங்குவதற்கான பள்ளத்தை உருவாக்கும்பொருட்டு அவள் மடியில் மூக்கைவைத்து நிமிண்டி சுற்றிவந்து பின்னங்கால்களை மடித்து அமர்ந்துகொண்டு அண்ணாந்து அவளை நோக்கியது நாய்க்குட்டி. பின்னர் வாய்திறந்து கொட்டாவி விட்டபடி நீட்டிய முன்னங்கால்களில் தன் அடித்தாடையை வைத்து பயறுவிதைமீது சவ்வுத்தோல் படிவதுபோல இமைகள் சொக்கி மூட கண்மூடியது. தன்னுள் நிறைந்த அவியை ஏற்று அன்னை பைரவி ஏப்பமிட்டாள்.
தன் முலைகளுக்குள் ஒரு மெல்லிய உளைச்சலை ராதை உணர்ந்தாள். சிறிய பூச்சி ஒன்று முலைகளுக்குள் ஓடுவதுபோலத் தோன்றியது. முலைநுனிகள் கூச்சமெடுத்தன. முலைக்கச்சு குளிர்ந்தது. அனிச்சையாகத் தொட்டுநோக்கிய அவள் முலையிலிருந்து பால் வழிவதை உணர்ந்தாள். நம்பமுடியாமல் அதை கையால் தொட்டு முகத்தருகே தூக்கிப்பார்த்தாள். இளநீலவெண்மையுடன் நீர்த்த பால். முகர்ந்தபோது அதில் அவளுடைய வாயின் எச்சிலின் வாசனை இருப்பதை அறிந்தாள். அவளுடைய முலைப்பால்தானா, இல்லை நாயின் வாயிலிருந்து விழுந்ததா? கச்சை விலக்கி முலைகளை நோக்கினாள். இருமுலைக்கண்களும் நாகப்பழங்கள் போல கருமையாகப் புடைத்து நின்றிருக்க அவற்றிலிருந்து பால் ஊறிக்கசிந்து வழிந்துகொண்டிருந்தது.
“இங்கே பாருங்கள்… பால்… என்னுடைய பால்!” என அவள் தொண்டை அடைக்கச் சொன்னாள். “என்ன?” என்று திரும்பிய அதிரதன் அவள் முலைக்கண்களைப் பார்த்து திகைத்து வாய் திறந்தான். “என் பால்… இவனுக்கான பால்” என்று சொன்ன ராதை பாய்ந்து குழந்தையைப்பிடுங்கி மார்போடணைத்துக்கொண்டாள். குழந்தையின் வாயில் தன் இடமுலைக் காம்பை வைத்தாள். அதன் மெல்லிய உதடுகளில் அத்தனை இறுக்கமிருக்குமென்பதை அப்போதுதான் உணர்ந்தாள். அவளுடைய வலது முலைக்காம்பிலிருந்து மூன்று சிறிய வெண்ணிறநூல்களாக பால் பீய்ச்சி வளைந்து மடியில் சொட்டியது. முலைகீழ் வளைவில் வழிந்து துளித்து உதிர்ந்தன வெண்துளிகள்.
குழந்தையின் வாய் நிறைந்து ஓர இதழ்கள் வழியாக பால் காதுகளை நோக்கிச் சொட்டியது. செங்குருத்து போன்ற கால்கட்டைவிரல்களை நெளித்தும் பாதங்கள் சுருங்கிவளையும்படிக் குவித்தும் முட்டிபிடித்த கைகளால் தன் விலாவை அடித்துக்கொண்டும் பிள்ளையின் உடலே பரவசத்துடன் பாலை ஏற்றுக்கொண்டிருந்தது. அதன் கண்கள் இளநீல இமைமயிர்கள் கண்ணீர் உலர்ந்த கன்னங்களில் படிந்திருக்க மூடியிருந்தன. அவள் குனிந்து அதன் முகத்தை நோக்கினாள். அவள் கண்ணீர் குழந்தையின் மேல் மழைத்துளிகள் போல உதிர்ந்தது. விம்மல்களை அடக்கமுடியாமல் அவள் தோள்கள் அதிர்ந்தபோது முலைகளும் குழந்தையும் அசைந்தன. அதிரதன் உதடுகளை இறுக்கியபடி கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தான்.
காலையில் மிகவும் பிந்திதான் குந்தி எழுந்தாள். எப்போது துயின்றோம் என அவளால் நினைவுகூர முடியவில்லை. ஆனால் கருக்கிருட்டை நோக்கியபடி நின்றது நினைவிருந்தது. மூடிய கதவை நோக்கியபின் அவள் சாளரத்தருகே சென்று நின்று தன் கச்சை விலக்கி முலைகளை கைகளால் தொட்டாள். அவை வெம்மையுடன் இல்லை என்பதை உணர்ந்தாள். கைகளால் முலைக்குவைகளை வருடியபோது அவை பால்நிறைந்து இறுகி கனத்திருக்கவில்லை என்று தெரிந்தது. முலைக்காம்பின் கரியவட்டத்தை அழுத்தினாள். முலைகளின் கீழ்வளைவையும் மேல்சரிவையும் அழுத்தினாள். ஒருதுளி பால்கூடக் கசியவில்லை. அவள் முலைகள் கன்னிமுலைகளென இறுக்கம் கொண்டிருந்தன.

பகுதி எட்டு : பால்வழி[ 1 ]

பகுதி எட்டு : பால்வழி[ 1 ]
அஸ்தினபுரியில் இருந்து அந்தியில் மணக்குழு கிளம்பும்போதே சாரல் பொழிந்துகொண்டிருந்தது. மரக்கிளைகள் ஒடிய, கூரைகள் சிதைய பெய்த பெருமழை ஓய்ந்து மழைக்காலம் விடைபெற்றுக்கொண்டிருந்த பருவம். வானில் எஞ்சியிருந்த சிறுமேகங்கள் குளிர்ந்து சற்றுநேரம் பெய்து இலைகளை ஒளிகொள்ளச்செய்து கூரைகளைச் சொட்டச்செய்து ஓய்ந்தன. ஆனால் இரண்டுமாதகாலம் தொடர்ந்து பெய்த மழையின் ஈரத்தை வைத்திருந்த காற்றில் எப்போதுமே மெல்லிய நீர்த்துகள்கள் பறந்துகொண்டிருந்தன. துருக்கறை ஊறிய வெள்ளைத்துணிபோலத் தெரிந்த கலங்கிய வானுக்குப்பின்னால் வெப்பமே இல்லாத சூரியன் நகர்ந்தான்.
பாண்டுவை அன்றுகாலை முதலே அம்பாலிகை அலங்கரிக்கத் தொடங்கியிருந்தாள். அவன் எப்போதும் பின்மதியம் தாண்டியபின்னரே துயிலெழுவான். அவனுடைய மஞ்சத்தறை வெளியே இருந்து ஒளிவராமல் கரவுப்பாதைகள் வழியாக காற்றுமட்டும் மெல்ல வீசும்படி அமைக்கப்பட்டிருந்தது. அங்கே பகலிரவுகள் இல்லை. வெளியே பகலின் வீச்சு அணையத்தொடங்கியபின்னரே அவனை முதுசேடியர் வெள்ளித்தாலத்தில் நறுமணநீருடன் எழுப்புவார்கள். அவனை மிக மெல்ல பலமுறை அழைத்து எழுப்பவேண்டுமென்றும் காலடியோசையோ பிற ஓசைகளோ அவன் துயிலை அதிரச்செய்யலாகாதென்றும் அனைவரும் அறிந்திருந்தனர்.
அவ்வறையின் தரையிலும் சுவர்களிலும் கனமான பஞ்சுமெத்தைகள் தைக்கப்பட்டிருந்தன. முதுசேடியரின் குரலை பாண்டு தன் கனவின் ஆழத்தில் எங்கோ கேட்பான். அடர்வண்ணங்களாலான ஓவியத்திரைபோலப் பூத்துநிற்கும் இமயமலையடிவாரத்துக் காடுகளிலோ நதிக்கரைகளிலோ பொழில்களிலோ அவன் தன் அன்னையுடன் இருந்துகொண்டிருப்பான். அக்குரலைக் கேட்டு தன் விழிப்புக்கு மிதந்தெழுவான். பின் அதை தன் அறையென உணர்ந்து எழுந்துகொள்வான். துயில் எழும்போது அவனுடைய வெளிறிய மெல்லிய உடல் குதிரைப்படை கடந்துசெல்லும் மரப்பாலம் போல அதிர்ந்துகொண்டிருக்கும். நடுங்கும் கைவிரல்கள் ஒன்றுடன் ஒன்று ஏறிக்கொள்ள கழுத்தின் கனத்த குரல்வளை ஏறியிறங்க கண்கள் மேலே செருகி வெண்விழிகள் தெரியும். மஞ்சள்நிறமான பற்களால் செவ்விய உதடுகளைக் கவ்வியிருப்பான். முட்டிபிடித்த கைகளுக்குள் விரல்கள் வெள்ளைப்பரப்பில் புதைந்திருக்கும்.
முதுசேடியர் அவன் மார்பை தடவியும் கைகால்களை வருடியும் அவன் உடலை சீராக்குவர். அவன் உடல் மெல்ல அதிர்விழந்து படுக்கையில் தொய்ந்ததும் அவன் வாயோரங்களில் வழியும் எச்சிலை துணியால் துடைப்பர். அவன் எழுந்து வெந்நீரில் தன் முகத்தை கழுவிக்கொள்வான். பின்பு சேடியர் உதவ படுக்கையில் இருந்து எழுந்து நிற்பான். இளமையில் ஒருமுறை அவனை அம்பாலிகை உலுக்கி எழுப்பியபோது அவன் அதிர்ந்து அலறி விழித்துக்கொண்டு நடுங்கி வலிப்புவந்து மூர்ச்சையானான். மூச்சு நின்று கண்கள் செருகி வாய்கவ்விக்கொண்டு அதிர்ந்து நின்ற உடம்பு மெல்ல நீலமாகியது. ஓடிவந்த அரண்மனை மருத்துவர் கிலர் அருகே இருந்த தீபச்சுடரை எடுத்து அவன் கால்களில் வைத்துச் சுட்டார். அவன் உடல் துடித்தபோது கைகால்கள் நெகிழ்ந்து மூச்சு சீறிக்கிளம்பியது. அதன் பின் அவன் நினைவுக்கு வர மேலும் இரண்டுநாட்களாயின.
அவன் உடலின் நரம்புகள் மிகமிக மெல்லியவை என்றார் கிலர். அவை சிறு அதிர்ச்சியைக்கூட தாளாதவை. விரல்நுனியில் நீர்த்துளியைக் கொண்டுசெல்வதுபோல அவன் உடலுக்குள் உயிரை பேணியாகவேண்டும் என்றார். அதன்பின் அவன் உரத்த ஒலிகளைக் கேட்டதேயில்லை. விழுந்ததில்லை, கால்தடுக்கியதில்லை, நிலைதடுமாறியதில்லை. அவன் சினம்கொள்ளும்படியோ துயர் அடையும்படியோ எதுவும் நிகழ்ந்ததில்லை.
பாண்டுவின் குதிகால்கள் நிலத்தை அறிந்ததில்லை. குதிரைபோல அவன் முன்விரல்களால் நடந்தான். ஆகவே காலில் இரும்புச்சுருள் கட்டப்பட்டது போல எம்பி எம்பி நடப்பதே அவன் இயல்பு. அவனுடைய வலத்தோள் இடத்தோளைவிட தூக்கப்பட்டிருக்கும். மெலிந்த வெண்முகத்தில் நாசியும் உதடுகளும்கூட வலப்பக்கமாக கோணலாக வளைந்திருக்க வலக்கண் சற்றே கீழிறங்கியிருக்கும். தன்னை வரைந்திருக்கும் திரைச்சீலையை இடப்பக்கமாக கீழே பிடித்து இழுத்திருக்கிறார்கள் என அவன் சொல்வான். எப்போதும் ஓர் ஏளனபாவனை அவன் முகத்திலும் சிரிப்பிலும் இருந்தது. நான் நினைப்பதை என் உடல் சரிவர நடிப்பதில்லை என்பதை கண்டுகொண்டேன். ஆகவே என் உடல் நடிப்பதை நான் எண்ணத் தொடங்கினேன் என அவன் சொல்வான்.
அன்றுகாலை அம்பாலிகையே வந்து அவனை எழுப்பினாள். அவளுடைய குரல்கேட்டதுமே அவன் கண்களை விழித்து புன்னகையுடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் அவன் உதடுகளை வெந்நீர்த்துணியால் துடைத்தபோதும் அப்பார்வை மங்கலான ஒளிகொண்ட விளக்குபோல அப்படியே இருந்தது. பின்பு அவன் “நீங்களா அன்னையே?” என்றான். “எழுந்திரு…இன்று நாம் மார்த்திகாவதிக்குக் கிளம்புகிறோம்” என்றாள் அம்பாலிகை. “பகலிலா?” என ஆவலுடன் கேட்டபடி பாண்டு எழுந்தான். “பகல் ஒளியில் நீ செல்லமுடியுமா? நாம் மாலையில்தான் கிளம்புகிறோம்” என்றாள் அம்பாலிகை.
முகம் கூம்ப “இப்போது மழைக்காலம்…வெயிலே இல்லையே” என்றான் பாண்டு. அம்பாலிகை “ஆம், ஆனால் மழைமேகங்கள் ஒழிந்துகொண்டிருக்கின்றன. நினைத்திருக்காமல் வான்திரை விலகி ஒளி வந்தால் என்ன செய்வது?” என்றாள். “மாலையில்தானே? இப்போதென்ன விரைவு?” என்றபடி பாண்டு மீண்டும் படுக்கப்போனான். அம்பாலிகை அவன் கைகளைப்பற்றியபடி “அறிவிலி போலப் பேசாதே. நீ அரசன். அரசனுக்குரிய ஆடையலங்காரங்களுடன் நீ செல்லவேண்டும். நீ இங்கிருந்து செல்வதை இந்நகரத்து மக்கள் அனைவரும் பார்த்து உன்னை வழியனுப்பி வைக்கப்போகிறார்கள்…” என்றாள்.
“இன்று அவர்களுக்கு அகம்நிறைந்து சிரிப்பதற்கு ஒரு நாடகம் நிகழவிருக்கிறது” என்றபடி பாண்டு எழுந்தான். “அன்னையே, நான் ஒருவகையில் நல்லூழ் கொண்டவன். உலகமே என்னை நோக்கிச் சிரித்தாலும்கூட நான் நோக்கிச் சிரிப்பதற்காக உங்களை எனக்களித்திருக்கிறது இயற்கை” என்றான். “போதும், எனக்கு உன் பேச்சுகளே புரிவதில்லை. உன்னை நன்னீராட்டவும், ஆடையணிகள் அணிவிக்கவும் மருத்துவரும் சேடியரும் நின்றிருக்கிறார்கள்” என்றாள்.
பாண்டு “நீரா? அது எப்படி இருக்கும்?” என்றான். பாண்டுவை மூன்றுமாதங்களுக்கு ஒருமுறைதான் சேடியரும் மருத்துவரும் சேர்ந்து மூலிகை நீராட்டுவார்கள். மற்றநாட்களில் நறுமணநீர் நனைத்த துணியால் அவன் உடலை மெல்லத்துடைப்பது மட்டுமே. அதையும் ஆதுரசாலையில் மருத்துவர்களே செய்வார்கள். அவனுடைய நரம்புகளின் மேல் கையின் அழுத்தம் படிந்துவிடலாகாது என்பதை மருத்துவர் கடுமையான எச்சரிக்கையாக மீளமீளச் சொல்லியிருந்தனர்.
மெத்தைமேல் முன்விரல்களை ஊன்றி எம்பி எம்பி நடந்து சென்று வாயிலைத் திறந்த பாண்டு “வெளியே ஒளியிருக்கிறதா?” என்றான். “ஆம்…” என்று அம்பாலிகை சொன்னாள். “ஆகவேதான் காலையிலேயே அனைத்து திரைச்சுருள்களையும் கீழிறக்க ஆணையிட்டேன்.” பாண்டு “அன்னையே, என் விழிகளும் உடலும் ஒளிக்காக ஏங்குகின்றன” என்றான். “மெல்லிய ஒளி என்றால் ஏன் நான் அதை எதிர்கொள்ளக் கூடாது?” அம்பாலிகை சினத்துடன் “உனக்கே தெரியும் வெய்யோனொளி பட்டால் உன் தோல் வெந்து சிவந்துவிடுகிறது. உன் விழிகள் பார்வையை இழந்துவிடுகின்றன. சிறுவனாக இருக்கையில் ஒருமுறை வெளியே சென்றுவிட்டாய். உன் பார்வை மீள பதினைந்து நாட்களாயின. உன் தோலில் அப்போது பட்ட கொப்புளங்களின் தடம் இப்போதுமிருக்கிறது” என்றாள்.
பாண்டு பெருமூச்சுடன் “காட்டில் வளரும் காளான்களைப்போல ஒரு வாழ்க்கை” என்றான். திரும்பி “எங்கே ஆதுரசாலைப் பணியாளர்கள்? அவர்கள் இன்று ஒரு அரிய மூலிகை வேரை கழுவவேண்டும் அல்லவா?” என்றான். அம்பாலிகை “நீ எனக்கு என்றும் அரியவனே. என் உயிரை வாழச்செய்யும் சஞ்சீவி” என்றாள். “ஆம், நான் வாழ்வதன் நோக்கமே உங்களை வாழச்செய்வதுதான்” என்றான் பாண்டு. அம்பாலிகையின் முகம் கூம்பக்கண்டு அருகே வந்து அவள் முகவாயைத் தொட்டு முகத்தைத் தூக்கி “என்ன இது? என் நல்லூழ் அது என்றல்லவா சொன்னேன்?” என்றான்.
“இல்லை…நீ சொல்வதைத்தான் இங்கே அனைவரும் சொல்கிறார்கள் என நானறிவேன்” என கண்களில் நீர் நிறைய அம்பாலிகை சொன்னாள். “மாயநீர் யானத்தில் என் இறைவர் வந்தபோது நான் அவரிடம் வல்லமையும் அழகும்கொண்ட மைந்தனுக்காக கோரவில்லை. என் அறியாமையால் எனக்கொரு விளையாட்டுப்பாவையையே கோரினேன். ஆகவேதான் நீ வந்தாய். அனைத்தும் என் பிழை என்கிறார்கள். உன்னைக் காணும்போதெல்லாம் என் நெஞ்சு விம்முகிறது. உண்மையிலேயே என் பிழையின் விளைவைத்தான் நீ சுமக்கிறாயா என்ன? நான் இப்பெரும்பாவத்துக்கு எப்படி கழுவாய் ஆற்றுவேன்?”
“பதிலுக்கு நீங்கள் எனக்கொரு அழகிய விளையாட்டுப்பாவையாகவே இருக்கிறீர்களல்லவா? அதுவே கழுவாய்தான்…” என்று சிரித்த பாண்டு அவள் கன்னங்களைத் துடைத்து “என்ன இது? இந்த வினாவுக்கு நான் இதுவரை ஆயிரம் வெவ்வேறு பதில்களைச் சொல்லிவிட்டேனே. எவையுமே நினைவில்லை போல. அவற்றை குறித்துவைத்து ஒரு அழகிய குறுங்காவியமாக ஆக்கியிருக்கலாமென்று தோன்றுகிறதே” என்றான். புன்னகையுடன் “எல்லாமே அர்த்தமற்ற உளறல்கள்” என்றாள். “ஆம், அவையெல்லாம் கவிதைகள்” என்றான் பாண்டு.
VENMURASU_DAY_90
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
பாண்டுவை ஆதுரசாலையின் நீராட்டறையில் வைத்தியர்கள் எதிர்கொண்டழைத்துச்சென்றனர். முதலில் அவன் உடலில் மருத்துவத்தைலம் போடப்பட்டது. அவன் கால்விரல்களிலும் கைவிரல்களிலும் சிலதுளிகள் தைலம் விடப்பட்டு மெல்ல சுட்டு விரலால் நீவப்பட்டது. அதன் பின் கால்களிலும் கைகளிலும் தைலத்தை நீவி மெல்ல உடலெங்கும் பரப்பி இறுதியில் உச்சந்தலைக் குழிவில் தைலத்தைத் தேய்த்தனர். மூலிகைகள் கொதிக்கவிடப்பட்ட வெய்யநீராவி அவன் மேல் படச்செய்யப்பட்டது. அவன் உடல் வியர்த்து சூடான பின்னர் அவன் வெந்நீர் தொட்டிக்குக் கொண்டுசெல்லப்பட்டான்.
சூடான நீர் அவன் கால்களில் சிறிது விடப்பட்டது. பின்னர் தொடைகளிலும் கைகளிலும் விடப்பட்டு மெல்லமெல்ல உடல் முழுக்க நனைக்கப்பட்டபின் அவன் தலையில் வெந்நீரை விட்டனர். உடல்நனைந்தபின் அவனை வெந்நீர்த்தொட்டிக்குள் அமரச்செய்தனர். கடற்பஞ்சால் அவன் உடலை மெதுவாக வருடி தேய்த்து குளிப்பாட்டினர். அவர்கள் உதடுகளைக் கடித்தபடி மிகுந்த எச்சரிக்கையுடன் தன் உடலை கையாள்வதைக் கண்டு பாண்டு “நீங்கள் ஏதாவது பேசலாம் அருணரே. நான் குரல்கேட்டால் உடைந்துவிடமாட்டேன்” என்றான்.
மருத்துவரான அருணர் “ஆம்…அரசே” என்றார். ஆனால் அவர்களின் கண்கள் மேலும் எச்சரிக்கை கொண்டன. “நான் உண்மையிலேயே எக்கணமும் இறக்கக்கூடியவனா?” என்று பாண்டு கேட்டான். “அரசே உங்கள் பிறவிநூல் அவ்வண்ணம் சொல்லவில்லை” என்றார் அருணர். “உங்கள் மருத்துவநூல் என்ன சொல்கிறது?” என்று பாண்டு கேட்டான். “தங்கள் உடலின் நரம்புகள் மென்மையானவை. அவ்வளவுதான். தங்களுக்கு நோய்களென எவையும் இல்லை.” பாண்டு உரக்கச்சிரித்து “அருணரே, நோய் என்றால் என்ன?” என்றான். அருணர் “மாறுபட்ட உடல்நிலை. வருத்தும் உடல்நிலை. உயிரிழப்புக்கான காரணம்” என்றார். “வரையறைகளை மனப்பாடம் செய்திருக்கிறீர்… எனக்கு நீங்கள் சொன்ன மூன்றுமே உள்ளதே” என்றான் பாண்டு.
நீர் துவட்டப்பட்டபின் அவனை அமரச்செய்து அகிற்புகையால் அவன் கூந்தலை ஆற்றினர். அவன் உடலெங்கும் நறுமணத்தைலங்கள் பூசப்பட்டன. சேடியரால் அழைத்துச்செல்லப்பட்ட அவன் பெரிய ஆடிமுன் அமரச்செய்யப்பட்டான். சேடியர் அவனுக்கு ஆடைகளை அணிவித்தனர். பாண்டு மிக மென்மையான கலிங்கத்துப் பட்டாடைகளை அணிந்து அவற்றின்மேல் பட்டுநூல்களை கட்டிக்கொண்டான். “இவை பொன்னூல் வேலைப்பாடுகளா?” என்று கேட்டான். “அரசே, தங்கள் உடைகள் எடைகொண்டவையாக அமையலாகாதென்பதனால் இவை பொன்னிற நூல்களாலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன” என்றாள் விஜயை என்னும் சேடி.
பாண்டு சிரித்துக்கொண்டு “இளவரசுக்கான மணிமுடியும் தக்கையால் செய்யப்பட்டிருக்குமா?” என்றான். “ஒன்று செய்யலாம், ஒரு ஏவலன் எந்நேரமும் என் பின்னால் நின்று என் மணிமுடியை எந்நேரமும் தூக்கிப்பிடிக்கும்படி சொல்லலாம்.” உரக்கச் சிரித்து பாண்டு “அந்தச் சேவகனுக்கு பீஷ்மர் என்று பெயரிடலாம். பொருத்தமாக அமையும்” என்றான். விஜயை மெல்ல “இந்தப்பேச்சுக்கள் எவ்வண்ணமாயினும் அவர் செவிகளை அடையலாம் இளவரசே” என்றாள். “அடையட்டுமே… அவர் என்னை என்ன செய்வார்? எனக்கு உவக்காத எதையும் என்னிடம் எவரும் சொல்லமுடியாது. அவற்றை என் அன்னை கொலைமுயற்சிகள் என்றே பொருள்கொள்வாள்.”
“நான் வியப்பது ஒன்றைத்தான்” என்றாள் விஜயை. அவன் கூந்தலை சிறியபட்டுச்சரடுகளால் சடைத்திரிகள் போலக் கட்டி அவன் தோளில் பரப்பியபடி “நான் இளவயதில் தங்கள் தந்தை விசித்திரவீரிய மாமன்னரை கண்டிருக்கிறேன். அவரைப்போலவே நீங்கள் இருக்கிறீர்கள்…” என்றாள். பாண்டு “தோற்றமா?” என்றான். “இல்லை…தோற்றமில்லை. அவரது உடல் வேறு… ஆனால் சிரிப்பு பேச்சு எல்லாமே அவரைப்போலத்தான்.” பாண்டு “விந்து வழியாக அல்லாமல் குலம் தொடரமுடியும் என்று முனிவர்கள் வகுத்தது வீணாகுமா என்ன? தந்தையின் நோயும் நொடிப்பும் அவ்வண்ணமே என்னை வந்தடைந்தன” என்றான்.
விஜயை “நன்றும் தீதும் நாம் செய்யும் வினைப்பயன் மட்டுமே” என்றாள். “ஆம்… எளிதில் கடந்துசெல்ல அப்படியொரு ஒற்றை விடை இல்லையேல் வாழ்வே வினாக்களால் நிறைந்து மூடிவிடும்” என்றபின் பாண்டு “விசித்திரவீரியர், அதற்கு முன் தேவாபி. அதற்கு முன்?” என்றான். விஜயை பதில் சொல்லவில்லை. “சொல், விஜயை, அதற்கு முன்பு யார்?” விஜயை “கண்வ முனிவருக்கு ஆரியவதி என்னும் பெண்ணில் பாண்டன் என்னும் மகன் பிறந்தான். அவன் வெண்ணிறமாக இருந்தான்” என்றாள்.
“அவனை கண்வர் காட்டிலேயே விட்டுவிட்டார் இல்லையா?” என்றான் பாண்டு. “ஆம், அவனால் வேதவேள்விகளைச் செய்யமுடியாதென்று அவர் எண்ணினார். அவனை காட்டில் ஒரு வாழைமரத்தடியில் விட்டுவிட்டு கண்வரும் ஆரியவதியும் திரும்பிவிட்டனர். அவனை வெண்முயல்கள் முலையூட்டி வளர்த்தன.” பாண்டு புன்னகையுடன் “அவன் முயல்களின் தலைவனாக ஆனான், இல்லையா?” என்றான்.
விஜயை “அவன் வளர்ந்து காட்டின் இருளிலேயே வாழ்ந்தான். அவன் ஒளியை அறிந்ததே இல்லை. அங்கே அவன் வாழ்ந்துகொண்டிருந்தபோது அக்காட்டில் தேன் எடுக்கவந்து வழிதவறிய மலைப்பெண்ணான ஸித்தி என்பவளைக் காப்பாற்றினான். அவளை அவன் மணந்து பன்னிரண்டு குழந்தைகளைப் பெற்றான். அக்குழந்தைகளில் இருந்து உருவானது பாண்டகர் என்னும் குலம். அவர்கள் இன்னும் இமயமலைச்சாரலில் வாழ்கிறார்கள். வேர்கள் போல வெண்ணிறம் கொண்ட அவர்கள் மலைக்குகைகளின் இருளில் வாழ்பவர்கள். இரவில் காட்டுக்குள் அலைந்து வேட்டையாடுபவர்கள். மின்மினி ஒன்றை கையில் விளக்காகக் கொண்டு வேட்டையாடுபவர்கள்” என்றாள்.
பாண்டு “எதற்கும் ஒரு புராணமிருக்கிறது இங்கே” என்றபடி எழுந்துகொண்டான். விஜயை சொன்னாள் “கண்வர் ஆயிரம் வருடம் தவம்செய்தபின் சொர்கத்துக்குச் சென்றபோது அவரது மகள் சகுந்தலையின் வழிவந்த பரதகுலத்து மைந்தர்களும் மேனகையில் அவருக்குப்பிறந்த இந்தீவரப்பிரபை வழியாக வந்த மைந்தர்களும் அவரது மைந்தன் மேதாதிதியும் அவன் வழி மைந்தர்களும் அவரைக் கைப்பிடித்து அழைத்துச்சென்றனர். வழியில் இருண்ட குகைப்பாதை ஒன்று வந்தது. மைந்தர்கள் விழியொளி இல்லாது திகைத்து நின்றுவிட்டனர்.”
விஜயை “அப்போது வெண்ணிற உடல்கொண்ட ஆயிரம் மைந்தர்கள் வந்து அவர் கைகளைப்பற்றி இருண்ட பாதையில் அழைத்துச்சென்றனர். நீங்கள் யார் என அவர் கேட்டார். உங்கள் மைந்தன் பாண்டனின் குலத்தவர் என அவர்கள் பதிலிறுத்தனர். கண்வர் குகையைக் கடந்து இந்திரநீலம் என்னும் ஒளிமிக்க பாலம் வழியாக தவத்தாருக்குரிய தனிஉலகைச் சென்றடைந்தார்” என்றாள். பாண்டு புன்னகையுடன் அவளை சிலகணங்கள் நோக்கியபின் எழுந்துகொண்டான்.
அம்பாலிகை ஓடிவந்து “அனைவரும் கிளம்பிக்கொண்டிருக்கின்றனர்…. இங்கே என்ன செய்கிறீர்கள்?” என்றாள். அவள் வெண்பட்டு ஆடையும் வெண்மணியாரங்களும் அணிந்திருந்தாள். “அரசி, இன்னும் நேரமிருக்கிறது. மாலையில்தான் நாம் கிளம்புகிறோம்” என்றாள் விஜயை. “மாலை ஆவதற்கு இன்னும் அதிகநேரமில்லை… பீஷ்மபிதாமகரின் ரதம் அலங்கரிக்கப்படுகிறது” என்றாள் அம்பாலிகை. “நகரமே அலங்கரிக்கப்பட்டிருக்கவேண்டுமல்லவா? நான் உப்பரிகையில் நின்று பார்த்தேன். எதுவுமே கண்ணுக்குப்படவில்லை.”
“அது வழக்கமில்லை அரசி… நாம் இன்னும் மணம் கொள்ளவில்லை. யாதவர்களின் சுயம்வரத்துக்கு இளவரசர் செல்கிறார், அவ்வளவுதானே?” என்றாள் விஜயை. “அவள் மகன் மணம்கொண்டு வந்தபோது மட்டும் பெருமுரசம் முழங்கியது. நகரம் முழுக்க அணிகொண்டு நின்றது” என்று அம்பாலிகை முகம் சுருக்கிச் சொன்னாள். “அரசி, அது மணம்கொண்டு திரும்பும்போது… நாமும் இளவரசியுடன் வருகையில் அனைத்தும் நிகழும்” என்றாள் விஜயை. “ஒன்றும் குறைவுபடக்கூடாது….என்ன குறை இருந்தாலும் நானே சென்று பேரரசியிடம் கேட்பேன்” என்று அம்பாலிகை சொன்னாள்.
பேரரசியின் சேடியான சியாமை வந்து “பேரரசி எழுந்தருளவிருக்கிறார்” என்றாள். பாண்டு “ஏன், ஆணையிட்டால் நானே சென்றிருப்பேனே” என்றான். “நீ ஏன் செல்லவேண்டும்? நீ மணம் கொள்ளச்செல்லும்போது உன் பாட்டியாக அவர்கள் வந்து வாழ்த்துவதல்லவா முறை?” என்றாள் அம்பாலிகை. விஜயை “இளவரசே, நான் இந்த அறையை ஒழுங்குசெய்கிறேன். பேரரசி நுழையும்போது வாழ்த்தும் மங்கல இசையும் முழங்கவேண்டும்” என்றாள்.
குடையும் கவரியும் மங்கலத்தாலமுமாக சேடியர் சூழ சத்யவதி அரண்மனைக்குள் வந்தாள். பாண்டு எழுந்துசென்று அவள் பாதங்களைப் பணிந்து முகமன் சொல்லி வரவேற்றான். சத்யவதி அவன் தலைமேல் கைவைத்து “நிறைமணம் கொண்டு திரும்புக” என்று வாழ்த்தினாள். தன் கரங்களால் அவன் நெற்றியில் மஞ்சள்திலகமிட்டு “நீ திரும்பும்போது இந்நகரமே உன்னை வாழ்த்துவதற்காக கோட்டைவாயிலில் நிற்கும்” என்றாள்.
அரண்மனை வளாகத்தில் இருந்த ஏழு அன்னையர் கோயிலிலும், கணபதி, விஷ்ணு, சிவன் ஆலயங்களிலும் பூசனைகள் செய்து வணங்கியபின்னர் மணக்குழு கிளம்பிச்சென்றது. பீஷ்மரின் ரதமும் விதுரனின் ரதமும் முன்னால்செல்ல பாண்டு இருந்த கூண்டுவண்டி தொடர்ந்து சென்றது. காவல்வீரர்களும் கொடியேந்தியவர்களும் சூதர்களும் அணிவகுத்துச் சென்றனர். மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் முழங்க அவர்கள் சென்று மறைந்ததை அரண்மனை முற்றத்தில் நின்றபடி சத்யவதி பார்த்தாள். அம்பாலிகை கண்ணில் ஊறிய நீரைத் துடைத்தபடி தலைகுனிந்து தன் சேடி சாரிகையுடன் அந்தப்புரத்துக்குள் நுழைந்தாள்.
களைத்த நடையுடன் அரண்மனைக்குள் செல்லும்போது சத்யவதி சியாமையிடம் “மருத்துவர்கள் என்ன சொன்னார்கள்?” என்றாள். “சிறிய இளவரசர் மணம்கொள்வதற்குத் தகுதியானவரல்ல என்று சொல்லவில்லை” என்றாள் சியாமை. “அவருடைய நரம்புகள் மிகமெல்லியவை என்று மட்டுமே சொன்னார்கள். அவரால் அதிர்ச்சிகளையும் நிலைகுலைவுகளையும் தாங்கிக்கொள்ள முடியாது. அவர் மணம்கொண்டபின்னர் படிப்படியாக நாளடைவில் காமத்தை அறிந்தாரென்றால் ஆபத்தில்லை.”
சத்யவதி “அது உண்மை அல்ல” என்றாள். “மருத்துவர்கள் உள்ளத்தைப் பார்க்கவில்லை, உடலை மட்டுமே பார்க்கிறார்கள். காமம் தனக்கு உயிராபத்தை வரச்செய்யுமென பாண்டுவுக்குத் தெரியும். ஆகவே அது அவனுள் மேலும் பலமடங்கு வளர்ந்திருக்கிறது. அவனால் பிற சாதாரணமனிதர்களைப்போலக்கூட காமத்தை எதிர்கொள்ளமுடியாது. அவன் அகமும் ஆகமும் அதிரும் அனுபவமாகவே அது இருக்கும்.”
சியாமை பதில் சொல்லாமல் பார்த்தாள். “அவனைத் தடுக்கும்தோறும் மேலும் அது வலுப்பெறும். விலக்கும்தோறும் விரைவுகொள்ளும். விலகும்தோறும் வல்லமை பெறும் ஈர்ப்பே காமம்” என்று சொன்ன சத்யவதி “அவனுள் அந்த விசை வளர்வதைக் கண்டேன்” என்றாள்.
“இளவரசர் இயல்பாக இருப்பதாகத்தான் எனக்குப்பட்டது” என்றாள் சியாமை. “ஆம், அது அவனுடைய பாவனை. நுண்ணிய அறிவுடையவர்கள் காமத்தை வெட்குகிறார்கள். அதை மறைக்க ஏளனமென்னும் திரையை போட்டுக்கொள்கிறார்கள்” சத்யவதி சொன்னாள். “கூரிய வாளை நோக்கி வானிலிருந்து விழுபவனின் பெருங்களி கொண்ட முகம் அவனிடமிருந்தது.”