அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

1/31/14

பகுதி ஐந்து : மணிச்சங்கம்[ 1 ]

பகுதி ஐந்து : மணிச்சங்கம்[ 1 ]
ஏழுகுதிரைகள் இழுத்துவந்த ரதம் சகடங்கள் எழுப்பிய பேரொலியுடன் அஸ்தினபுரியை நோக்கிச்செல்லும் பாதைக்குத் திரும்பியபோது சற்று கண்ணயர்ந்துவிட்டிருந்த அம்பிகை திடுக்கிட்டு எழுந்து பட்டுத்திரைச்சீலையை நீக்கி வெளியே எழுந்து வந்த கோட்டையைப் பார்த்தாள். கல்லாலான அடித்தளம் மீது மண்ணால் எழுப்பப்பட்டு அதன்மேல் மரத்தால் கூரையிடப்பட்ட பெருஞ்சுவர். அதன் நூற்றுக்கணக்கான காவல்கோபுரங்களில் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடிகளனைத்தும் கோட்டையை தூக்கிச்செல்ல விழையும் செம்பொன்னிறப் பறவைகள் போல தென் திசை நோக்கி படபடத்துக் கொண்டிருந்தன.
நெஞ்சு படபடக்க அம்பிகை பார்த்துக்கொண்டே இருந்தாள். பல்லியின் திறந்த வாய்க்குள் ஏதோ விதியின் கட்டளைக்கேற்ப என நுழையும் சிறுபூச்சிபோல அவள் சென்றுகொண்டிருந்தாள். காலையொளியில் காவல்வீரர்களின் தோல்கவசங்களும் வேல்நுனிகளும் மின்னி மின்னி கண்களை தொட்டுச்சென்றன. அவர்களின் வருகையைக் கண்ட நிமித்தகாவலன் வெண்சங்கை ஊத பெருமுரசம் இமிழத்தொடங்கியது. கோட்டைக்குமேல் அஸ்தினபுரியின் பிதாமகரின் மீன் இலச்சினை கொண்ட கொடி மெல்ல துவண்டு ஏறி காற்றை வாங்கி படபடத்து எழுந்தது.
அம்பிகை அருகே இருந்த அம்பாலிகையைப் பார்த்து “எவ்வளவு பிரம்மாண்டமான கோட்டை!” என்று சொன்னாள். அம்பாலிகை கைநீட்டி பாதையோரம் மலர்ந்திருந்த வெண்மலர் ஒன்றை பறித்துக்கொண்டிருந்தவள் திரும்பி “எங்கே?” என்றாள். “அதோ…” என்று காட்டியபோது ரதம் கோட்டையை மேலும் நெருங்கிவிட்டிருந்தது. காவல்கோபுரமொன்றின் வளைவான தூண்களை தாண்டிச்சென்றது. அம்பாலிகை “ஆம்…பெரிய கோட்டை…எவ்வளவுபேர் இதை கட்டியிருப்பார்கள் அக்கா? மிக அழகாக இருக்கிறதே” என்றாள். “சீ, வாயைமூடு, இது நம் எதிரிகளின் கோட்டை. இன்றில்லாவிட்டால் நாளை நம் தேசத்துப்படைகள் வந்து இதை சிதறடிக்கவேண்டும்” என்று அம்பிகை சீறினாள்.
கோட்டைவாசலை நோக்கி ரதங்களின் வரிசை சென்ற புழுதியின் மேகத்துக்கு அப்பால் மங்கலவாத்தியங்களின் ஒலியும் வேதகோஷமும் கேட்டன. ரதம் கோட்டைமுன் சென்று நின்றதும் மக்களின் வாழ்த்தொலிகளும் சேர்ந்து எதையுமே எண்ணமுடியாதபடி செய்தன. குதிரைகள் பயணத்தின் களைப்பினால் பெருமூச்செறிந்து தலையை சிலுப்பிக்கொண்டு கால்களால் நிலத்தை தட்டின.
ரதமருகே வந்த பேரமைச்சர் யக்ஞசர்மர் தலைவணங்கி “இளவரசிகளை அஸ்தினபுரி வரவேற்கிறது. தங்கள் பாதங்கள் இம்மண்ணில் பட்டு இங்கே வளம் கொழிக்கவேண்டும்” என்றார். அம்பிகை உதட்டைக் கடித்துக்கொண்டு தயங்கியபடி கீழே இறங்கினாள். ‘இவர்களை நான் பார்க்கக்கூடாது. இந்த செல்வச்செழிப்பையும் பெருந்தோற்றவிரிவையும் என் உள்ளம் வாங்கக்கூடாது.’ கண்களைமூடியபடி அவள் தன் காலை அஸ்தினபுரியின் மண்ணில் எடுத்துவைத்தாள்.
கோட்டைமேலும் வழியோரங்களிலும் நின்றிருந்தவர்கள் வெடித்து எழுந்த வாழ்த்தொலிகளால் வானை நிறைத்தனர். அவளைத்தொடர்ந்து அம்பாலிகை மெல்ல இறங்கியபோது வானிலிருந்து மேலும் வானுக்குச் செல்வதுபோல வாழ்த்தொலி அதிர்ந்து உயர்ந்தது. அம்பிகை திரும்பிப்பார்த்தாள். அம்பாலிகை கையில் அந்த வெண்மலர் இருந்தது. அவள் அந்த ஒலியால் திகைத்தவள் போல சிறிய வாயைத்திறந்து கண்களை விரித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
கோட்டைவாசலுக்கு அப்பாலிருந்து பொன்னிற நெற்றிப்பட்டமணிந்த பட்டத்துயானை பொதிக்கால்களை மெல்லத்தூக்கிவைத்து துழாவும் துதிக்கையுடனும் வீசும் பெருங்காதுகளுடனும் வந்தது. அதன் வலப்புறம் பூர்ண கும்பம் ஏந்திய வைதிகர்களும் அமைச்சர்களும் வந்தனர். இடப்பக்கம் நெல்லும் கனிகளும் மலர்களும் கொண்ட தாலங்களுடன் ஏழுபெருங்குடிச் சான்றோரும், மங்கலவாத்தியங்கள் ஏந்திய சூதர்களும், தீபங்களும் மலர்களும் கொண்ட தாலப்பொலிகளுடன் அரசப்பரத்தையரும் வந்தனர். பட்டத்துயானை அருகே வந்து தன் துதிக்கையை தூக்கி பெருங்குரலில் பிளிறியது. வைதிகர் குடநீரை மாவிலையால் தொட்டு அவர்கள் மீது தூவி வேதமோதினர். அமைச்சர்கள் அவர்களை வணங்கி உள்ளே நுழையும்படி கோரினர்.
அவர்கள் நடந்து நகருக்குள் நுழைந்தபோது அந்தப் பேரொலிகளே தங்களை சுமந்து கொண்டுசெல்வதாக உணர்ந்தனர். கோட்டைக்குள் நுழைந்தபின் அங்கே வந்து நின்றிருந்த திறந்த பொற்தேரில் ஏறிக்கொண்டு நகர்வீதிகள் வழியாகச் சென்றபோது அவர்கள் மேல் மலரும் மங்கலப்பொன்னரிசியும் மழையாகப் பொழிந்துகொண்டிருந்தன. “இந்த மக்களுக்கு நாம் இன்னொரு வெற்றிச்சின்னம். இதற்கு பதில் நம் தந்தையை கையில் சங்கிலியிட்டு இழுத்துவந்திருந்தால் இன்னும் ஆர்ப்பரித்திருப்பார்கள்” என்றாள் அம்பிகை.
“நம் தந்தை என்ன பிழை செய்தார்?” என்றாள் அம்பாலிகை புரியாமல். “சரி, நாம் என்ன பிழைசெய்தோம்?” என அம்பிகை பல்லைக் கடித்து கேட்டாள். அம்பாலிகை “எதற்கு என்னை கடிகிறாய்? நான் ஒன்றுமே செய்யவில்லையே” என்றாள். “போடி” என்றாள் அம்பிகை. “ஏன் அக்கா?” என்று அம்பாலிகை அவள் கையைப்பிடித்தாள். “கையை எடு…போ” என்று அம்பிகை சீறியதும் அவள் உதடுகளைச் சுழித்து “நீ போ” என்று சொல்லி விலகிக்கொண்டாள்.
வெண்ணிற, பொன்னிறத் தாமரைகள்போன்ற நகர்மாளிகைக்கூடுகளும் வழிவிதானங்களும் ஆலயமுகப்புகளும் அனைத்தும் கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மரமேடைகளில் ஏற்றிவைக்கப்பட்டிருந்த பெருமுரசுகள் முழங்க நகரின் அத்தனை மாளிகைச்சுவர்களும் இரைநோக்கி பாயப் பதுங்கும் புலிகலின் விலாக்கள் போல அதிர்ந்தன. தாமரைக்குவைகளாக செறிந்த அஸ்தினபுரியின் மாளிகைமுகடுகள் தெரியத்தொடங்கின. காஞ்சனம் ஒளிசிதற அசைந்து அசைந்து முழங்கியது. ரதங்கள் அரண்மனை முற்றத்தில் வந்து நின்றன.
அதேமலரை அப்போதும் அம்பாலிகை கையில் வைத்திருப்பதை அம்பிகை கண்டாள். “அதை ஏன் வைத்திருக்கிறாய்? தூக்கி வீசு” என்றாள் அம்பிகை. “இல்லை அக்கா, ஏதாவது ஒன்று கையில் இல்லாமல் என்னால் நிற்கமுடியாது” என்றாள் அம்பாலிகை. “அறிவே கிடையாதா உனக்கு?” என்று அம்பிகை சீற “யார் சொன்னாலும் நான் இந்த மலரை வைத்திருப்பேன்…” என்றாள் அம்பாலிகை. “நான் பாண்டுரனை காசியிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேனே….இப்படி வருவேன் என்று தெரிந்திருந்தால் அதை எடுத்து வந்திருப்பேன்.”
“என்ன அது?” என்றாள் அம்பிகை கண்கள் சுருங்க. “என் சின்ன பளிங்குப்பாவை….வெண்மையாக இருக்குமே.” “பேசாமல் வாடி…” என்று அம்பிகை அவள் புஜத்தை நகம்புதையக் கிள்ளினாள். “இனிமேல் கிள்ளினால் நான் பீஷ்மரிடம் சொல்வேன்” என்றாள் அம்பாலிகை. “பேசாதே” என்றாள் அம்பிகை.
ரதத்திலிருந்து இறங்கும்போது அம்பிகை நிமிர்ந்து மாளிகைமுகப்பு நோக்கிச் சென்ற நூறுபடிகளைக் கண்டாள். படிகள் முழுக்க பொன்னணிந்த பரத்தையரும் சேடிகளும் எறிவேல் ஒளி மின்னும் காவலரும் நின்றனர் . கீழே வேதியரும் சூதரும் நிற்க அவர்கள் நடுவே ஏழு முதுமங்கலப்பெண்கள் ஆரத்தியுடன் நின்றனர். அவர்களுக்கு முன்னால் நின்ற முதியவள்தான் பேரரசி சத்யவதி என்று அம்பிகை அறிந்தாள். கரிய நிமிர்ந்த நெடிய உடலும் விரிந்த கண்களும் நரையோடிய கூந்தலும் கொண்டிருந்த சத்யவதி வெள்ளுடை அணிந்து மணிமுடிமட்டும் சூடியிருந்தாள்.
அவர்களை நோக்கி வந்த ஏழு பெண்டிரும் ஆரத்தி எடுத்து மஞ்சள்குங்குமத் திலகம் அணிவித்து வாழ்த்தியபோது சேடிகளும் பரத்தையரும் குரவையிட்டனர். சூதர்கள் வாழ்த்தினர். வைதிகர் வேதமந்திரங்களை ஒலித்தனர். சத்யவதி முன்னால் வந்து இருவர் கைகளையும் பற்றிக்கொண்டு “இந்த அரண்மனைக்கு நீங்கள் எட்டு திருக்களுடன் வரவேண்டும்…உங்களை எங்கள் குலமூதாதையர் ஆசியளித்து ஏற்கவேண்டும். உங்கள் மங்கலங்களால் இந்த அரண்மனையில் பதினாறு செல்வங்களும் நிறையவேண்டும்” என்று வாழ்த்தி அவர்களின் நெற்றியில் மஞ்சள்திலகம் அணிவித்தாள்.
VENMURASU_EPI__22
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
முதியபெண் “வலக்காலை வைத்து நுழையுங்கள் தேவி” என்றாள். அக்கணம் அம்பிகை நினைத்தது வேண்டுமென்றே இடக்கால் வைத்து நுழையவேண்டும் என்றுதான். அந்நினைப்பை அவள் கால் ஏற்பதற்குள்ளேயே அவள் வலக்காலைத் தூக்கி முதல்படியில் வைத்தாள். அம்பாலிகை அந்த வரவேற்பால் மகிழ்ந்துவிட்டாளென்று முகம் மலர்ந்ததில் தெரிந்தது. கன்னங்களில் நீளக்குழிவிழ சிறிய பற்களைக்காட்டிச் சிரித்தபடி அவள் அனைத்துச் சடங்குகளையும் செய்தாள்.
அந்தப்புரத்து அறையை அடைந்ததும் சேடியர் அவர்களைச் சூழ்ந்துகொண்டனர். ஆடைகளைக் களைந்து பன்னீரால் நீராடச்செய்தனர். கலிங்கத்துப்பட்டும் வேசரத்து மணிகளும் பாண்டியத்து முத்துக்களும் கொண்ட நகைகளை பூட்டினர். காமரூபத்து நறுமணப்பொருட்களைப் பூசினர். செந்தாமரை, பாதிரி, பட்டி, செங்காந்தள், வெண்பாரிஜாதம், முல்லை, மல்லிகை, மந்தாரை, பொன்னிறச் செண்பகம், தாழம்பூ, அரளி மற்றும் நீலோத்பலம் என பன்னிரு வகை மலர்களைச் சூட்டினர்.
ஆடியில் பார்த்துக்கொண்ட அம்பாலிகை “அக்கா, இந்த என்னை நான் இதுவரை பார்த்ததே இல்லை” என்றாள். “வாயை மூடு. அறிவிலிபோலப் பேசாதே” என்று அம்பிகை அவளை ரகசியமாக அதட்டினாள். அவள் கிள்ளாமலிருக்க அம்பாலிகை விலகிக்கொண்டாள். பக்கவாட்டில் கண்ணாடியில் தன் மார்பகங்களைப் பார்த்தபின் நுனிக்கண்களால் அதை அம்பிகை பார்க்கிறாளா என்று கவனித்தாள். பின் அம்பிகையின் மார்பகங்களைப் பார்த்தாள். மணியாரத்தில் இதழ்குலைந்திருந்த இருபரல்களை சரிசெய்து மார்பின்மேல் சரியாகப் போட்டுக்கொண்டாள்.
அமைச்சும் சுற்றமும் ஏவலும் சேர்ந்து அவர்களை சபாமண்டபத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கே குடிச்சபையும் வைதிகசபையும் குறுமன்னர்சபையும் கூடியிருந்த அவை நடுவே அமைந்த இரு மயிலாசனங்களில் அமரச்செய்தனர். வாழ்த்தொலிகளும் மங்கலஒலியும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தன. நால்வகைக் குடிகளும் வந்து பணிந்து அனைவரும் அவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
நள்ளிரவில் களைத்துப்போனவர்களாக தங்கள் அறைகளுக்குத் திரும்பும்போது அம்பாலிகை அம்பிகையை நெருங்கி ரகசியமாக “அக்கா, நம்மை தூக்கிவந்த அந்த முதியவர்தான் நம்மை மணப்பவரா?” என்றாள். அம்பிகை பேசாமல் நடந்தாள். பின்னால் ஓடிவந்து அம்பிகையின் கைகளைப்பற்றிக்கொண்டு “ரதத்தில் வரும்போது நான் அவரைப்பார்த்தேன். முதியவர் என்றாலும் பேரழகர்” என்றாள்.
கடும் சினத்துடன் அம்பிகை திரும்பிப்பார்த்தாள். அம்பாலிகை “இல்லை, அதை நான் ஒரு பேச்சுக்காக சொன்னேன்” என்றாள். அம்பிகை “நாம் இங்கே இருக்கப்போவதில்லை. ஆநிரைபோலக் கவர்ந்து வர நாம் ஒன்றும் மிருகங்கள் அல்ல. நமக்கும் சிந்தனையும் உணர்ச்சிகளும் அகங்காரமும் இருக்கின்றன” என்றாள். “ஆம்…நாம் ஒருபோதும் இதை ஒப்புக்கொள்ளலாகாது” என்றாள் அம்பாலிகை கண்களில் குழப்பத்துடன்.
“ஆனால் நம்மால் இன்று எதுவும் செய்யமுடியாது. நாம் எதுசெய்தாலும் நம் நாட்டுக்கும் தந்தைக்கும் அது தீங்ககாக முடியும்…அந்த முதியவர் கொடூரமானவர் என நினைக்கிறேன்….சால்வமன்னரை அவர் கொன்றுவிட்டதாக படகிலே பேசிக்கொண்டார்கள்” என்றாள் அம்பிகை. “உண்மையாகவா அக்கா?” என பீதியுடன் அம்பாலிகை அவள் கைகளைப்பற்றிக்கொண்டாள்.
“மரணப்படுக்கையில் இருக்கும் சால்வரைப் பார்க்கத்தான் அக்கா சென்றிருக்கிறாளாம்…” என்றாள் அம்பிகை. அம்பாலிகை மௌனமாக கண்ணீர் மல்கினாள். “பார்ப்போம்…இவர்களின் கொண்டாட்டமெல்லாம் முடியட்டும்…அதன்பின் நாம் நம் வழியைத்தேடுவோம்” அம்பிகை தங்கையின் தோளை பற்றிக்கொண்டாள்.
“என்ன வழி?” என்று அம்பாலிகை கிசுகிசுப்பாக கேட்டாள். அம்பிகை “அஸ்தினபுரியின் கோட்டையிலிருந்து சடலமாக மட்டுமே நம்மால் வெளியே செல்லமுடியும் என்றார்கள். அப்படியென்றால் சடலமாகவே செல்வோம்” என்றபோது அச்சம் கண்களில் தெரிய அம்பாலிகை தலையசைத்தாள்.
“நோயுற்று நாம் இறந்தால் இவர்களால் ஏதும் செய்யமுடியாது. நம் குலம் மீதும் பழி விழாது. நம் ஆன்மா இவர்களை அங்கீகரிக்கவில்லை என்பதை பாரதவர்ஷம் அறியட்டும்” அம்பிகை சொன்னாள். “ஆம் அக்கா. நாம் இவர்களிடம் தோற்கவில்லை என உலகம் அறிந்தாக வேண்டும்” என்று அம்பாலிகை ஆமோதித்தாள்.
தங்கள் துயிலறைக்கு அவர்கள் சென்றபோது இளம்சேடி ஒருத்தி வந்து ஆடைகளை மாற்ற உதவிசெய்தாள். அம்பிகை அவளிடம் “அஸ்தினபுரியை ஆளும் மன்னர் ஏன் முதிய வயதுவரை மணம் செய்துகொள்ளவில்லை?” என்றாள். சிவை என்ற அந்த சேடி “தேவி, அஸ்தினபுரிக்கு இப்போது அரசர் இல்லை. தங்களையும் தங்கையையும் மணம்புரிந்தபின்னரே இளையவராகிய விசித்திரவீரியர் அரசகட்டிலில் அமரமுடியும்” என்றாள். “இளையவரா?” என்று அம்பிகை திகைத்தபோது சிவை அனைத்தையும் சொன்னாள்.
சீறிச்சினந்து எழுந்த அம்பிகை “இது எவ்வகை அறம்? எந்தக்குலமரபு இதை அனுமதிக்கிறது? எங்களைக் கவர்ந்துவந்த வீரருக்கு பதில் நோயுற்றிருக்கும் இன்னொருவர் எங்களை எப்படி மணக்கமுடியும்? ஒருபோதும் இதை நாங்கள் ஏற்க முடியாது” என்று கூவியபடி தன் ஆடையை தூக்கி எறிந்தாள். சிவையை தள்ளிவிட்டு வெளியே இடைநாழியில் ஓடி சத்யவதிதேவியின் அறைவாயிலை அடைந்தாள். அங்கே காவலுக்கு நின்றிருந்த பெண்ணைப் பிடித்து விலக்கிவிட்டு கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.
மஞ்சத்தில் படுத்திருந்த சத்யவதி திகைத்து எழுந்தாள். அம்பிகை உரத்தகுரலில் “இந்த இழிச்செயலுக்கு நான் உடன்பட மாட்டேன். இது எங்களையும் எங்கள் மூதாதையரையும் அவமதிப்பது….இதைச்செய்பவர்கள் நற்குலத்தில் பிறந்தவர்களாக இருக்கமுடியாது” என்றாள். சொன்னதுமே அவள் சொன்னதென்ன என்று உணர்ந்து அவள் அகம் அஞ்சி நின்றுவிட்டது.
சத்யவதி அமைதியாக “குலமும் குணமும் நடத்தையால் முடிவாகக்கூடியவை இளவரசி” என்று சொன்னாள். “உன் சினம் அடங்கட்டும்…தேவவிரதன் எதைச்செய்தாலும் அது நெறிநூல்கள் சொன்னமுறையிலேயே இருக்கும்” என்றாள்.
“கவர்ந்து வந்த பெண்ணை இன்னொருவருக்குக் கொடுப்பதா நெறி?” என்றாள் அம்பிகை, தன் சினத்தை மீட்கமுயன்றபடி. “கவர்ந்துவந்தபோதே பிற மணமுறைகளின் விதிகளெல்லாம் இல்லாமலாகிவிட்டன அல்லவா? ராட்சசமுறையில் இதுவும் முறையே” என்றாள் சத்யவதி.
“இதை நான் ஏற்கமாட்டேன். ஒருபோதும் உடன்படமாட்டேன்…” என்று அம்பிகை கூவினாள். “உடன்படாமலிருக்கமுடியாது தேவி. இது அரசகட்டளை” என்று சத்யவதி சொன்னாள். முழுச்சினத்தையும் மீண்டும் அடைந்தவளாக “அரசகட்டளையை மீற வழியிருக்கிறது…நான் என் கழுத்தை கிழித்துக்கொள்ளமுடியும்…என் நெஞ்சைப்பிளந்து விழமுடியும்.”
சத்யவதி பெருமூச்சுவிட்டு “ஆம், அப்படி ஒரு வழி இருக்கிறது. ஆனால் உயிர்கள் மரணத்துடன் உடலை மட்டுமே விடுகின்றன, உலகை அல்ல. உலகைவிட அவற்றுக்கு நற்சிதையும் நீர்க்கடனும் தேவையாகிறது. நெருப்பிலும் நீரிலும் அவற்றை வாழும் மானிடர் வழியனுப்ப வேண்டியிருக்கிறது” என்றாள். அம்பிகையின் கண்களை கூர்ந்து நோக்கி, “உன் உதகச்செயல்களை உன் தந்தையும் தாயும் செய்யமுடியாது. அவர்களிடமிருந்து அவ்வுரிமை தேவவிரதனுக்கு வந்துவிட்டது. அவன் செய்யாமல் போனால் நீ விடுதலையாகவும் முடியாது” என்றாள்.
அம்பிகை தளர்ந்து மெல்ல தூணை பிடித்துக்கொண்டாள். தலையை அதன் மேல் சாய்த்து “எங்களை முப்பிறவிக்கும் சிறையிட்டிருக்கிறீர்கள். மூன்று தலைமுறைக்கும் தீரா அவமதிப்பை அளித்திருக்கிறீர்கள்” என்று சொன்னதுமே நெஞ்சம் கரைந்து கண்ணீர்விட்டாள்.
சத்யவதி, “ஆம், சிறைதான், பழிதான். ஆனால் அனைத்திலிருந்தும் விடுதலையாக வழி ஒன்று உள்ளது இளவரசி. பெண்களுக்கெல்லாம் அது ஒன்றே அரசபாதை” எழுந்து அருகே வந்து அம்பிகையின் மெல்லிய கூந்தலை வருடி “நீ எனக்கு வழித்தோன்றல்களை பெற்றுக்கொடு. அஸ்தினபுரிக்கு இளவரசர்களை அளி. நீ கொண்ட அவமதிப்புகளெல்லாம் குலப்பெருமைகளாக மாறும். உன் சிறைகளெல்லாம் புஷ்பக விமானங்களாக ஆகும்.”
“ஒருபோதும் அது நிகழாது” என்று அம்பிகை சீறினாள். “இனி உங்களைப் பழிவாங்க எனக்கிருப்பது அது ஒன்றுதான். ஒருபோதும் நான் உங்கள் குலமகவுகளை பெற்றுத்தரப்போவதில்லை. என் வயிற்றில் பாறைகளை வைத்து மூடிக்கொள்வேன்….என் வெறுப்பை முழுக்கத் திரட்டி இறுக்கி அப்பாறைகளைச் செய்வேன்.”
சத்யவதியின் கைகளை உதறிவிட்டு தன் அறைக்குத் திரும்பினாள் அம்பிகை. அங்கே திகைத்து நின்றிருந்த சிவையை சினம் கொண்டு ஓங்கி அறைந்தாள். “வெளியே செல் இழிபிறவியே. சென்று உன் அரசியிடம் சொல், அவளுடைய கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று சொல்” என்று மூச்சிரைத்தாள்.
மறுநாளும் அதற்கடுத்தநாளும் அவர்கள் இருவரும் உணவருந்தவில்லை. சேடிகளும் முதுதாதிகளும் மன்றாடினர். பின்னர் சத்யவதியே வந்து மீண்டும் மீண்டும் சொன்னாள். “இங்கே சிறையிலிருப்பதை விட பேயாக இவ்வரண்மனையைச் சூழ்கிறோம்….அதுவே மேல்” என்றாள் அம்பிகை.
மூன்றாம் நாள் அம்பாலிகை எவருமறியாமல் சிவையிடம் சொல்லி பழங்களை வாங்கி உண்டாள். அதையறிந்த அம்பிகை அவளையும் வசைபாடி கன்னத்தில் அறைந்தாள். நான்காம் நாள் அம்பிகையால் எழமுடியவில்லை. நனைந்த செம்பட்டு மேலாடைபோல மஞ்சத்தில் ஒட்டி குளிர்ந்து கிடந்தாள். மருத்துவப்பெண் “இளவரசியின் நாடி தளர்ந்த வீணைநரம்புகளைப்போல ஒலிக்கிறது” என்றாள். சத்யவதி அந்த வேகத்தைப்பார்த்து மெல்லமெல்ல அச்சம் கொண்டாள். “சிறிய இளவரசி?” என்றாள். “அவர்கள் உணவு உண்கிறார்கள் என்று தோன்றுகிறது” என்றாள் மருத்துவச்சி.
சத்யவதி சொல்லியனுப்பிய செய்தியைக் கேட்டு மறுநாள் பீஷ்மர் வந்தார். ஒவ்வொரு கதவாக அவர் குனிந்து குனிந்து நடந்துவந்தபோது பறவைமரம்போல ஓயாது இரையும் அந்தப்புரத்தின் ஓசைகள் அடங்கி அவரது காலடியோசை மட்டும் அங்கே ஒலித்தது. அமைதியான தடாகத்தின்மீது நிறையும் மீன்கள் போல இருளுக்குள் இருந்து விழிகள் எழுந்து எழுந்து வந்து அவரைப்பார்த்தன.
அம்பிகையின் அறையை அவர் அடைந்ததும் சேடிகளான சிவையும் சுபையும் ஒரு பட்டுத்திரைச்சீலையைப்பிடித்து அம்பிகையை மறைத்தனர். அப்பால் நின்றபடி பீஷ்மர் முடிவிலா குகைக்குள் எதிரொலிப்பது போன்ற குரலில் “இளவரசி, உங்களை வதைத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு இழைக்கப்பட்டது மாபெரும் பிழை. ஐயமே இல்லை. அதற்காக என்மேல் தீச்சொல்லிடுங்கள். உங்கள் நெஞ்சின் அனலையெல்லாம் என் மீது கொட்டுங்கள். ஏழுபிறவிகளிலும் நரகத்திலுழன்று அக்கணக்கை முடிக்கிறேன்….தயைகூர்ந்து உண்ணாநோன்பிருந்து இக்குலத்தின்மேல் பழியை நிறைக்காதீர்கள்” என்றார்.
திரைக்கு அப்பால் அம்பிகை மெல்ல விம்மி “உங்கள்மேல் என்னால் பழிச்சொல்லிட முடியாது” என்றாள். பீஷ்மர் கைகூப்பி “நான் இதோ உங்கள் பாதங்களைப் பற்றி என் சிரத்தை அவற்றின்மேல் வைத்து பிழைபொறுக்கக் கோருகிறேன் இளவரசி. காசிநாட்டு மூதன்னையர் அனைவரிடமும் அடிபணிந்து இறைஞ்சுகிறேன்….என்னை மன்னித்தருளுங்கள்” என்றார்.
“அய்யோ…” என்ற ஒலியுடன் மறுபக்கம் அம்பிகை எழுந்தமர்ந்தாள். “என்ன இது? கற்கோபுரம் வளையலாமா? ஆணையிடுங்கள் தேவா, நான் என்ன செய்யவேண்டும்?” என்றாள். அதன்பின் கைகூப்பியபடி அவ்விரல்கள்மேல் நெற்றிசேர்த்து கண்ணீர்விடத் தொடங்கினாள்.
பீஷ்மர் “என் அன்னைசொல்லை கேட்டு நடந்துகொள்ளுங்கள் தேவி…” என்றபின் திரும்பி நடந்து சென்றார். அவரது காலடிகளை அந்தப்புரம் எதிரொலித்து எதிரொலித்து தன்னுள் நிறைத்துக்கொண்டது. கைகளைக் கூப்பியபடி உதடுகள் விதும்ப, முலைகள் எழுந்தமர அவ்வொலியை கேட்டுக்கொண்டிருந்தாள் அம்பிகை.
அன்றுமாலையே மக்கள் மன்று கூடுவதற்கான பெருமுரசம் ஒலித்தது. ஆடியில் நோக்கி தன்னை அணிசெய்துகொண்டிருந்த அம்பிகையை நோக்கி சிவை தனக்குள் புன்னகை புரிந்துகொண்டாள். அம்பாலிகை ஆடைகளை நீவி இன்னொருமுறை திலகம் திருத்தி “அக்கா, இந்த ஆடி திருவிடத்தில் இருந்து வந்தது…அங்கே நீர்நிலைகளைவிட துல்லியமான ஆடிகளை சமைக்கிறார்கள்… இதில் தெரியுமளவுக்கு நான் என்றுமே அழகாக இருந்ததில்லை” என்றாள். சங்கொலி எழுந்ததும் சத்யவதியின் சேடி பிரேமை வந்து “இளவரசி, அனைவரும் காத்திருக்கிறார்கள்” என்றாள்.
அவை மண்டபத்தின் நடுவே பட்டாலான மெத்தை போடப்பட்டிருந்தது. அதன் இருபக்கமும் இரு மயிலாசனங்கள். சிம்மாசனத்துக்கு முன்னால் தாழ்வான தரையில் மணைப்பலகைகளில் பெரிய வட்டங்களாக பச்சைநிறத் தலைப்பாகைகளில் குலச்சின்னங்கள் அணிந்த பூமிதாரர்கள் அமர்ந்திருந்தனர். நெற்கதிரும் கோதுமைக்கதிரும் சூடியவர்கள். மாந்தளிர் சூடியவர்கள். பனையோலை சூடியவர்கள். வலப்பக்கம் வெண்ணிறத் தலைப்பாகை மீது மயிற்பீலி சூடிய ஆயர்குலத்தலைவர்கள் அமர்ந்திருந்தனர். நீலநிறத்தலைப்பாகைகள் மேல் செங்கழுகின் இறகணிந்த வேடர் குலத்தலைவர்களும் செந்நிறத்தலைப்பாகைமீது மீன்சிறகுகளும் கடல்நாரை இறகுகளும் அணிந்த கடல்சேர்ப்பர்களும் இடப்பக்கம் அமர்ந்திருந்தனர். அவர்கள் முன் பெரிய தாம்பாளங்களில் வெற்றிலையும் பாக்கும் நறுமணப்பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன.
ஸ்தானகர் அறிவித்ததும் பீஷ்மர் வந்து அவையோரை வணங்கி அவர்கள் நடுவே அமர்ந்தார். சத்யவதியும் அம்பிகையும் அம்பாலிகையும் உள்ளே வந்ததும் அவை வாழ்த்தொலி எழுப்பி வணங்கியது. ஸ்தானகர் மும்முறை முறைப்படி “மன்றமர முறையுள்ள எழுபத்திரண்டு மூத்தாரும் வந்துவிட்டார்களா?” என்றபின் கையைத்தூக்க பெருமுரசு ஒருமுறை முழங்கியது.
ஸ்தானகர் உரக்க “பூமிதாரர்களே, கடல்சேர்ப்பர்களே, வேடர்தலைவர்களே, ஆயர்குடிமூத்தாரே! இந்த மங்கலமான சைத்ர பஞ்சமி நாளில் நாம் நம் நாட்டின் அரசராக இளவரசர் விசித்திரவீரியனுக்கு முடிசூட்டும் முடிவை எடுக்கவிருக்கிறோம். காசிநாட்டு இளவரசியர் இருவரை மணந்து விசித்திரவீரியர் சந்திரவம்சத்தின் ஐம்பத்திரண்டாவது மன்னராக அரியணை ஏற்கவிருக்கிறார். அதை தொன்மையான இந்த நாட்டின் குடிமக்களாகிய நீங்கள் வாழ்த்தி ஏற்பீர்களென்றால் விண்ணுலகாளும் இந்திரனும் தேவர்களும் தந்தையருலகை ஆளும் மூதாதையரும் மும்மூர்த்திகளும் தேவதைகளும் நம்மை வாழ்த்துவார்கள். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.
சபை கைதூக்கி ‘ஆம் ஆம் ஆம்’ என ஆசியொலி எழுப்பியது. ஸ்தானகர் தொடர்ந்தார். “மன்னர் விசித்திரவீரியர் ஒரு வனபூசைக்காக காட்டுக்குச் சென்றிருப்பதனால் அவரது உடைவாளை இன்று அரியணையில் அமரச்செய்து அரசியருக்கு காப்புகட்டவிருக்கிறோம். அது மங்கலம் கொள்வதாக!” சபை மீண்டும் கைதூக்கி ‘ஆம் ஆம் ஆம்’ என ஒலி எழுப்பியது . உள்ளிருந்து விசித்திரவீரியனின் உடைவாள் அமைச்சர்களால் ஒரு தாம்பாளத்தில் கொண்டுவரப்பட்டது. முன்னால் பாவட்டமும் அலங்காரங்களுமாக ஏழு சேவகர்கள் வந்தனர். தொடர்ந்து மங்கலப்பொருட்கள் நிறைந்த தாலங்களுடன் பெண்கள் வந்தனர். அதைத்தொடர்ந்து வைதிகர்கள் கும்பங்களுடன் வந்தனர்.
இறுதியாக ஏழு சேவகர்கள் சுமந்துவந்த பொற்தாலத்தில் குருவம்சத்தின் மணிமுடி வந்தது. நவமணிகள் பொதிந்த பொன்முடி விண்மீன்கள் செறிந்த கைலாயமலைபோல மின்னியது. அவையில் இருந்த அனைவரும் சொல் அவிந்து அதை சிலகணங்கள் நோக்கினர். அவர்களின் மூதாதையர் நெல்லும் மீனும் நெய்யும் ஊனும் கொடுத்துப்புரந்த மணிமுடி. அவர்களின் தலைமுறைகள் குருதி சொரிந்து நிலைநாட்டிய மணிமுடி. வாழ்த்தொலிகள் விண்ணிடிந்து வீழ்வதுபோல ஒலித்தன.
மங்கலப்பெண்கள் இருபக்கமும் வழிவிட வைதிகர்கள் சிம்மாசனம் மீது கங்கை நீரை மாவிலையால் தொட்டுத் தெளித்து தூய்மைப்படுத்தினர். அதன்மேல் செம்பட்டு விரித்து, உடைவாளை உறைவிட்டு உருவி நட்டனர். அந்த வெள்ளிப்பளபளப்பில் அவையின் வண்ணங்கள் அசைந்தன. உடைவாள் அருகே மணிமுடி வைக்கப்பட்டு அதன் மேல் வெண்கொற்றக்குடை வைக்கப்பட்டது. அதன்மேல் பொன்மலரும் வெண்சோழிகளும் பொன்னரிசியும் தூவி வணங்கி வைதிகர் பின்னகர்ந்தனர்.
ஸ்தானகர் “அவையோரே, இந்த மணிமுடியும் உடைவாளும் செங்கோலும் வெண்சங்கும் தலைமுறை தலைமுறையாக குருவம்சத்திற்குரிய செல்வங்கள்… அத்திரி முனிவரின் வழிவந்த புரூரவஸால் உருவாக்கப்பட்டது இந்த முடிமரபு. புரூரவஸின் வம்சத்தில் பிறந்தவர் மாமன்னர் குரு. குருவின் வம்சமே அஸ்தினபுரியை ஆளும் அழியா பெருமரபு.… இந்த மணிமுடியை மாமன்னர்களான நகுஷரும் யயாதியும் சூடியிருக்கிறார்கள். மாமன்னர் சந்தனு இதை தலையில் ஏந்தி இந்த நாட்டை ஆண்டிருக்கிறார். இந்நகரத்தின் வெற்றியும் செல்வமும் புகழும் இந்த மணிமுடியால் வந்தது. இனி இந்த மணிமுடி மாமன்னர் விசித்திரவீரியன் தலையை அலங்கரிக்கட்டும்! ஆம், அவ்வாறே ஆகுக!’
பெருகுடித்தலைவர்கள் வெற்றிலையை நெற்றிமேல் வைத்து வணங்கி அளிக்க அவை அரியணையின் காலருகே குவிக்கப்பட்டன. அம்பிகை அந்த உடைவாளையும் மணிமுடியையும் பார்த்துக்கொண்டிருந்தாள். சிறுவயதிலேயே அவள் கேட்டறிந்த கதைகளில் வந்தவை அவை. தேவருலகில் உள்ளவை போல கனவுகளை நிறைத்தவை. பேரரசி தேவயானி சூடிய மணிமுடி. சத்யவதி அணிந்த மணிமுடி.
அவளும் அம்பாலிகையும் அதன்மேல் மலர்மாலைகளைச் சூட்டினர். ஒளிமிக்க பரப்பில் வண்ணங்கள் ஆடும் அந்த வாள்மேல் மாலையிடும்போது அம்பிகை ஒருகணம் கண்ணீருடன் விம்மிவிட்டாள்.

165 .ம்ருகண்டு மகரிஷி கோத்ரம்

ம்ருகண்டு என்னும் சொல் தமிழில் மிருகண்டு என்று வழங்கப்பெரும். மார்க்கண்டேய மகரிஷியின் தகப்பனார் மிருகண்டு மகரிஷி. மிருகண்டு மகரிஷியின் தகப்பனார் மிருகண்டூயர் எனப்பெறும் கௌசிக மகரிஷியாவார். எனவே வம்சாவளி பின்கண்டவாறும். 
குச்சக மகரிஷி 
மிருகண்டூயர் எனப்பெறும் கௌசிக மகரிஷி. 
மிருகண்டு மகரிஷி. 
மார்க்கண்டேயர் 

அந்தலதாரு என்று வழங்கப்பெறும் ஏந்தேலாரின் கோத்ர ரிஷி மிருகண்டூயர் என்று பெயருள்ள கௌசிக மகரிஷியாவார். 

மிருகண்டூயர் பெயர்க்' காரணம் :- கௌசிக மகரிஷி கடுந்தவம் மேற்கொண்டார். தவத்தில் கௌசிகர் தம்மை மறந்தார். நீண்டகாலம் நின்று கொண்டே தவம் இயற்றினார். காட்டிலிருந்த மிருகங்கள் தம்உடல் தினவுதீர கௌசிகர் மீது தேய்த்துக்கொள்ளும். இந்நிலையிலும் கலையாத தவசித்தி உடையவர் இவர். இப்படி உலக நினைவே இல்லாமல் கடுந்தவம் செய்யும் கௌசிகர்மீது மிருகங்கள் உராய்ந்ததால் மிருகண்டூயர் என்ற காரணப்பெயர் பெற்றார். இதிலிருந்து கௌசிக மகரிஷியின் தவவன்மை புலப்படும். 

இத்தகைய கௌசிக மகரிஷியின் குமாரர்தான் மிருகண்டு மகரிஷி. இம்மிருகண்டு மகரிஷி முத்கல மகரிஷியின் மருத்துவதியை மணந்தார். நீண்ட காலம் புத்திரர் இல்லாமல் வருந்திய மிருகண்டு சிவபிரானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். 

சிவபிரான் தரிசனம் தந்தார். நோயும், அஞ்ஞானமும், தீர்க்காயுளும் உடைய அநேக குமாரர்கள் வேண்டுமா ? அல்லது பதினாறு ஆண்டு ஆயுளும், ஞானமும், ஒழுக்கமும் மிக்க ஒரே மகன் வேண்டுமா? எனச் சிவபிரான் கேட்க, பதினாறு ஆண்டு ஆயுளும், ஞானமும், ஒழுக்கமும் மிக்க ஒரே மகன் வேண்டும் என வரம் கேட்டார் மிருகண்டு. இவ்வரத்தின் பயனாக உதித்தவர்தான் மார்க்கண்டேயர். 

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அந்தெலதவரு :- சிலம்பின் வடிவமாய் விளங்கும் ஒருவகைக் கழல். இதனை வீரத்தின் சின்னமாக ஒற்றைக் காலில் அணிவது வழக்கம். அந்தெலத்தைக் காலில் அணிபவர் அந்தெலதவரு. இப்பெயர் ஏந்தேலாரு என மருவி வழங்குகின்றது. 

அஜதவரு :- பிரம்மாவை வழிபடுபவர். 
கருடதவரு :- கருடாழ்வாரை வழிபாடு செய்பவர். 
கண்டதவரு :- அழகான கழுத்துடையவர். 
குண்டலிதவரு :- குண்டலிபுரத்தைப் பூர்வீகமாக உடையவர். படவீட்டிற்குதக் குண்டலிபுரம் என்று பெயர். 
தபம்தவரு :- தவத்தில் வல்லவர். 
தீபம்தவரு :- தீபவழிபாடு செய்பவர். 
தோனிபர்த்தினிதவரு :- தோனிபர்த்தி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
நாணதவரு :- பழிபாவங்களுக்கு நாணுபவர். 
பந்தாரதவரு :- பந்தாரை மரத்தின் கீழ் வழிபாடு செய்பவர்கள். 
பிஞ்சலதவரு :- பிஞ்சல என்னும் மலையைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
இண்டிதவரு :- வீடு கட்டி வாழ்ந்தவர். 
வஜ்ரதவரு :- வஜ்ரம் - வைரம்; வைராபரணம் அணிபவர். வைர வணிகர். 
கட்டுதவரு, கன்டுதவரு, காருடதவரு, குட்டுதவரு, கென்டுதவரு, கேன்டுதவரு, கொக்கிதவரு, கோக்கேதவரு, நார்கதவரு, நார்னதவரு, நானம்தவரு, ரெட்ளதவரு, ரொன்ட்ளாதவரு.

1/30/14

பகுதி நான்கு : அணையாச்சிதை[ 5 ]

பகுதி நான்கு : அணையாச்சிதை[ 5 ]
இமயமலையின் அடியில் கங்கை கரையிறங்கும் ரிஷிகேசமென்னும் நீலநிறக்காட்டில் கட்டப்பட்ட தவச்சாலையில் காசியின் அரசி புராவதி தங்கியிருந்தாள். அவளே அங்குவரும் முடிவை எடுத்தாள். காலையில் தன் ஆயுதசாலையில் பயிற்சியில் இருந்த பீமதேவனை அவளது சேடி பிரதமை சென்று அழைத்துவந்தபோது அவள் அரச உடைகளைக் களைந்து மரவுரி அணிந்து அரண்மனை வாயிலில் நின்றிருந்தாள். பீமதேவன் அவளைக்கண்டதும் திடுக்கிட்டு “எங்கே செல்கிறாய் தேவி? என்ன வழிபாடு இது?” என்றார்.
அவர் முகத்தை ஏறிட்டு நோக்கி திடமான விழிகளுடன் பேசவேண்டுமென அவள் எண்ணியிருந்தபோதிலும் எப்போதும்போல தலைகுனிந்து நிலம்நோக்கித்தான் சொல்லமுடிந்தது. “நான் ரிஷிகேசவனத்துக்குச் செல்கிறேன். இனி இந்த அரண்மனைக்கு வரப்போவதில்லை”
காசிமன்னர் சற்றே அதிர்ந்து “உன்சொற்கள் எனக்குப் புரியவில்லை…இந்த அரண்மனை உன்னுடையது. இந்த நாடு உன்னுடையது” என்றார். “என்னுடையதென்று இனியேதும் இல்லை. இந்த அரண்மனையில் நான் சென்ற மூன்று மாதங்களாக விழிமூடவில்லை. இங்கே வாழ்வது இனி என்னால் ஆவதுமல்ல…” என்றாள்.
“அதற்காக? நாம் ஆதுரசாலையை அமைப்போம். அங்கே நீ தங்கலாம். காசியின் அரசி தன்னந்தனியாக வனம்புகுந்தால் என்ன பொருள் அதற்கு?” புராவதி பெருமூச்சுடன் “பொருளறிந்து வாழ்வது எவருக்கும் சாத்தியமல்ல அரசே” என்றாள்.
“என் அனுமதி இல்லை உனக்கு” என்று பீமதேவன் திடமாகச் சொன்னார். அரசி “அனுமதியை நான் தேடவுமில்லை. துறவுபூண அனுமதி தேவையில்லை என்று நெறிநூல்கள் சொல்கின்றன.” அவர் மேலே பேசமுற்பட அவள் கண்களைத் தூக்கி “உயிரை மாய்த்துக்கொள்ளவும் எவரும் அனுமதி தேடுவதில்லை” என்றாள்.
திகைத்து, அதன் பொருளென்ன என உணர்ந்து பீமதேவன் அமைதியானார். “என்னை அரசப்படைகளோ சேவகர்களோ தொடர வேண்டியதில்லை. என்னுடன் என் இளம்பருவத்துத் தோழி பிரதமையை மட்டுமே கூட்டிக்கொள்கிறேன்.” என்றாள்.
அவளை நோக்கிக் குனிந்து ஈரம்படர்ந்த விழிகளால் நோக்கி பீமதேவன் கேட்டார் “நான் எப்போதேனும் உன்னைப்பார்க்க வரலாமா?” அவள் அவரை ஏறிட்டுப்பார்க்காமல் சென்று ரதத்தில் ஏறிக்கொண்டாள். சிக்கிக்கொண்ட பலா அரக்கை அறுத்துக்கிளம்பும் ஈபோல அக்கணத்தை தாண்டமுடிந்ததைப்பற்றி அவளே வியந்துகொண்டாள்.
அவள் தன்னுடையதாக ஏற்றுக்கொண்ட நகரம் ஒவ்வொரு கட்டிடமாக உதிர்ந்து பின்சென்றது. பின்னால் அவை உடைந்து குவிவதை அவள் உணர்ந்தாள். அவள் பயணம்செய்து பழகிய சாலை ரதத்துக்குப்பின்னால் அறுந்து அந்தரத்தில் ஆடியது. அவள் வாழ்ந்த அரண்மனை அடியற்ற ஆழத்தில் விழுந்து மறைந்தபடியே இருந்தது.
ரதம் அரச படித்துறைக்கு அப்பால் குகர்களின் சிறுதுறையில் சென்று நின்றது. அங்கே பிரதமை கையில் சிறிய மான் தோல் மூட்டையுடன் நின்றிருந்தாள். புராவதி இறங்கி தேரோட்டியைக்கூட திரும்பிப்பாராமல் சென்று படகில் ஏறிக்கொண்டாள். பிரதமை ஏறி அவள் அருகே அமர்ந்தாள்.
துடுப்பால் உந்தி படகை நீரில் செலுத்திய குகன் இரு தோள்களிலும் கரிய தசைகள் இறுகியசைய துழாவினான். படகு நீர்நடுவே சென்றதும் கயிற்றை இழுத்து பாயை புடைக்க விட்டான். காற்று தன் கைகளில் படகை எடுத்துக்கொண்டபோது பலமாதங்களுக்குப்பின் முதன்முறையாக புராவதி மெல்லிய விடுதலை ஒன்றை அகத்தில் உணர்ந்தாள். கிளம்பிவிடவேண்டும் கிளம்பிவிடவேண்டும் என ஒவ்வொருநாளும் எண்ணி ஒவ்வொரு கணமும் எண்ணி மீண்டும் மீண்டும் ஒத்திப்போட்டிருக்க வேண்டாமென்ற எண்ணம் அவளுக்குள் எழுந்தது.
படகு சென்றுகொண்டிருக்கையில் மெல்லமெல்ல மனம் அமைதிகொள்வதை புராவதி உணர்ந்தாள். உலைந்த மாலையில் இருந்து மலரிதழ்கள் உதிர்வதுபோல அவளுடையவை என அவள் நினைத்திருந்த ஒவ்வொரு நினைவாக விலகின. ஒளிவிரிந்த நீர்ப்பரப்பு கண்களை சுருங்கச்செய்தது. சுருங்கிய கண்களில் மெல்ல துயில் வந்து பரவியது.
பிரதமை குகனிடம் “குகர்களெல்லாம் பாடகர்கள் என்றாயே…பாடு” என்றாள். அவன் “ஆம் தேவி… பாடுவதற்கேற்ற பருவநிலை” என்றபின் பாடத்தொடங்கினான். பிரதமை “இன்று வளர்பிறை பன்னிரண்டாம் நாள். அன்னையின் ஒளிமிக்க தோற்றத்தையே பாடவேண்டும்” என்றாள். “ஆம் அன்னையே” என்றான் குகன்.
“கேளுங்கள், அன்னையின் கதையைக் கேளுங்கள்! எளிய குகன் பாடும்சொற்களில் எழும் அன்னையின் கதையைக் கேளுங்கள்! கோடிமைந்தரைப் பெற்றவளின் கதையைக் கேளுங்கள்” அவன் குரல் படகோட்டிகளின் குரல்களுக்குரிய கார்வையும் அழுத்தமும் கொண்டிருந்தது.
ஆயிரம் காலம் மைந்தரில்லாதிருந்த அவுணர்களான ரம்பனும் கரம்பனும் கங்கை நதிக்கரையில் தவம் செய்தனர். தானறிந்த அனைத்தையும் தன் கனவுக்குள் செலுத்தி கனவுகளை மந்திரத்துள் அடக்கி மந்திரத்தை மௌனத்தில் புதைத்து அந்த மௌனத்தை பெருவெளியில் வீசி ரம்பன் அமர்ந்திருந்தான். அருகிருந்த கரம்பனை முதலை விழுங்கியபோதும் ரம்பனின் தவம் கலையவில்லை.
அந்த ஒருமையைக் கண்டு வியந்து அக்கினி அவனுக்கு முன்னால் தோன்றினான். “நீ விழையும் மைந்தனின் குணமென்ன?” என்றான். “குணங்களில் மேலானது தமோகுணமே. அசுரர்களின் தமோகுணமனைத்தும் ஒன்றாகத்திரண்டு என் மகன் பிறக்கவேண்டும்” என்று வேண்டினான் ரம்பன். அவ்வாறாக அவனுக்கு எருமைத்தலையும் இருள்நிறமும் கொண்ட மகிஷன் பிறந்தான்.
இருள்போல பரவி நிறையும் ஆற்றல் கொண்ட பிறிதொன்றில்லை. தமோகுணம் மாயையையே முதல் வல்லமையாகக் கொண்டது. மகிஷன் தன் மாயையினால் நூறு ஆயிரம் பல்லாயிரமாகப் பெருகினான். ரத்தபீஜன், சண்டன், பிரசண்டன், முண்டன் என்னும் ஆயிரம் சோதரர்களுடன் மண்ணையும் விண்ணையும் மூடினான். இரவு படர்வதுபோல அனைத்துலகையும் போர்த்தி தன்வயமாக்கினான்.
அவனிருளால் சூரியசந்திரச் சுடர்களெல்லாம் அணைந்தன. அக்கினி ஒளியின்றி தாமரை இதழ்போலானான். முத்தும் மணியும் ரத்தினங்களும் கூழாங்கற்களாயின. பூக்களும் இலைகளும் மின்னாதாயின. மூத்தோர் சொற்களெல்லாம் வெறும் ஒலிகளாயின. நூல்களின் எழுத்துக்களெல்லாம் புழுத்தடங்கள் போலாயின.
விண்ணுலகில் முனிவரும் தேவரும் கூடினர். இருளைவெல்ல வழியேதென்று வினவினர். அவர்கள் இணைந்து விஷ்ணுவின் பாதங்களை சரணடைந்தனர். விஷ்ணு அவர்களுடன் மகேஸ்வரனை தேடிச்சென்றார். கைலாயக் குளிர்மலையில் கோயில்கொண்டிருந்த சிவனின் யோகத்துயில் கலைத்து அவர்கள் இறைஞ்சினர்.
“ரம்பன் அறியாமல் வரம் வாங்கவில்லை தேவர்களே. காரியல்புதான் முதலானது. செவ்வியல்பும் வெண்ணியல்பும் கருமையில் ஒளிர்ந்து அடங்கும் மின்னல்களேயாகும்” என்றார் மகாதேவர். “வெண்ணியல்புடன் மோத செவ்வியல்பால் ஆகாது. செவ்வியல்பு காரியல்புடன் இணைந்து மேலும் வேகம் கொண்ட இருளே உருவாகும். முற்றிலும் இருள் தீண்டா அதிதூய வெண்ணியல்பால் மட்டுமே காரியல்பை வெல்லமுடியும்.”
விஷ்ணு பணிந்து “அவ்வாறு ஒரு தூவெண்மை புடவியிலெங்கும் இருக்கமுடியாதே மகாதேவா!” என்றார். “அது மலரின்றி மணமும், விறகின்றி நெருப்பும், உடலின்றி ஆன்மாவும் இருப்பதைப்போல அல்லவா?”
சிவன் புன்னகைசெய்து “ஆம், ஆனால் ரம்பன் பெற்ற வரமேகூட அவ்வாறு ஒரு தூவெண்ணியல்பு உருவாவதற்கான காரணமாகலாமே” என்றார். “கருமை தீண்டாத வெண்குணம் திகழ்வது அன்னையின் மடிமீதிலேயாகும். அன்னையை வணங்குங்கள். அவள் கனியட்டும் உங்கள்மீது” என்றார்.
தேவர்களும் முனிவர்களும் அவரவர் அன்னையை எண்ணி தவம் செய்தனர். மனிதர்களும் மிருகங்களும் அன்னையரை எண்ணி தவம் செய்தன. பூச்சிகளும் கிருமிகளும் தவம் செய்தன. அனைவரும் அவர்கள் அறிந்த அன்னையின் பெருங்கருணைக் கணங்களை சிந்தையில் நிறைத்தனர்.
அக்கணங்களெல்லாம் இணைந்து ஒரு பெரும்பாற்கடலாகியது. அதில் திரண்டு எழுந்ததுபோல ஒரு வெண்ணிற ஒளி எழுந்தது. விந்தியமலைமுகடில் ஒரு குகையில் தவம்செய்துகொண்டிருந்த கார்த்தியாயனர் என்ற முனிவரின் வேள்வி நெருப்பில் அமுதமெனத் திரண்டுவந்தது. அவளே கார்த்தியாயினி. ஈரேழு உலகுக்கும் பேரன்னை.
அத்தனை தேவர்களின் ஒளியும் அவளில் இணைந்தன. மகேந்திரனின் ஒளியால் முகமும், அக்கினியால் முக்கண்ணும், யமனின் ஒளியால் கருங்கூந்தலும், விஷ்ணுவின் ஒளியால் பதினெட்டு வெண்கரங்களும், இந்திரன் ஒளியால் இடையும், வருணன் ஒளியால் அல்குலும், பிரம்மனின் ஒளியால் மலர்ப்பாதங்களும், சூரியகணங்களின் ஒளியால் கால்விரல்களும், வசுக்களின் ஒளியால் கைவிரல்களும், பிரஜாபதிகளின் ஒளியால் வெண்பற்களும், வாயுவின் ஒளியால் செவிகளும், மன்மதன் ஒளியால் விற்புருவங்களும் கொண்டு தேவி எழுந்தாள். அதிதூய வெண்ணியல்புடன் அன்னை விந்தியமலையுச்சியில் கோயில்கொண்டருளினாள்.
வல்லமை மிக்கது காரியல்பு. அனைத்தையும் அணைத்து விழுங்கிச் செரித்து அதுவாவது இருள். பிரம்மம் பள்ளிகொள்ளும் படுக்கை அது. ஆனால் இருளின் மையத்தில் ஒளிவேட்கை சுடர்கிறது. எனவே காரியல்பு வெண்ணியல்புக்காக தேடிக்கொண்டே இருக்கிறது. விண்மேகங்களில் ஊர்ந்த மகிஷன் விந்தியமலையுச்சியில் வெண்குடைபோல எழுந்த அன்னையின் ஒளியைக் கண்டான். அவனை அவன் படைப்பியல்பு கீழே கொண்டுவந்தது. அன்னையின் பேரெழில்கண்டு அவன் பெருங்காதல் கொண்டான்.
அவன் தூதனாக வந்த தம்பி துந்துபியிடம் “என்னை வெல்பவனே என் மணவாளன் என்றுரை” என்றாள் அன்னை. மகிஷன் தன் இருட்படையனைத்தையும் திரட்டி போர்முரசொலிக்க விந்தியமலைக்கு வந்தான். தோள்கொட்டி போருக்கழைத்தான்.
வெண்ணெழில்தேவி வெண்தாமரை மீதமர்ந்தவள். வெண்ணியல்போ போரையே அறியாத தூய்மை. போரை எதிர்கொள்ள தேவி விண்ணாளும் சிவனருளை நாடினாள். ‘நான் குடியிருக்கும் இமயத்தைக் கேள்’ என்றார் இறைவன். காலைவேளை இமயத்தின் வெண்பனிமேல் கவிகையில் எழுந்த செவ்வொளியை ஒரு சிம்மமாக்கி இமயம் அன்னைக்குப் பரிசளித்தது. செவ்வியல்பே சிம்மவடிவமென வந்து அன்னைக்கு ஊர்தியாகியது. சிம்மமேறி மகிஷனை எதிர்த்தாள் அன்னை. விந்தியனுக்குமேலே விண்ணகத்தின் வெளியில் அப்பெரும்போருக்கு மின்னல் கொடியேறியது. இடிமுழங்கி முரசானது.
அன்னையின் அழியா பேரழகில் கண்கள் ஆழ்ந்திருக்க மகிஷன் முப்பத்துமுக்கோடி கைகளால் அன்னைமீது படைக்கலங்களை செலுத்தினான். ஆயிரம் ஊழிக்காலம் அப்போர் நிகழ்ந்தது. மகிஷனின் படைக்கலன்களையெல்லாம் தன்னவையாக்கி அவனுக்கே அளித்தாள் அன்னை. அன்னையரே, ஆடிப்பாவையிடம் போர்புரிபவன் வெல்வது எப்படி?
குன்றா முதிரா காலத்தில் என்றுமுளது என அவர்களின் போர் நிகழ்ந்தது. படைக்கலங்களெல்லாம் அழிய வலுவிழந்து அன்னையின் அடிகளில் விழுந்த மகிஷனை அவள் சிம்மம் ஊன்கிழித்து உண்டு பசியாறியது. மகிஷனின் அழியாபெருங்காதல் இரு கருங்கழல்களாக மாறி அன்னையின் கால்களை அணிசெய்தது. மகிஷன் அவன் வாழ்வின் பொருளறிந்து முழுமைகொண்டான். அவன் வாழ்க!
VENMURASU_EPI_21
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
பாடல் முடிந்தபோது பிரதமை ஒரு மெல்லிய விசும்பல் ஒலியைக்கேட்டு திரும்பிப் பார்த்தாள். அரசி அழுதுகொண்டிருப்பதைக் கண்டு ஏதும் சொல்லாமல் தலைகுனிந்தாள். அவள் மிகமெலிந்து நோயுற்றவள் போல ஆகியிருப்பதை எண்ணி பெருமூச்சுவிட்டாள்.
இரவு கோடிவிண்மீன்களால் ஒளிகொண்டதாக இருந்தது. நதியின் மீது பிரதிபலித்த விண்மீன்கள் வழியாக படகு விண்ணகப்பயணமென முன்னகர்ந்து சென்றது. அப்போதுதான் பிரதமை அவர்கள் இனியொருபோதும் திரும்பப்போவதில்லை என்று உறுதியாக அறிந்தாள்.
ரிஷிகேச வனத்தில் பார்க்கவ முனிவரின் குடிலருகே குடில்கட்டி புராவதி தங்கினாள். ஒவ்வொருநாள் காலையிலும் இருள் விலகுவதற்கு முன்பு கங்கையில் நீராடி, சிவபூசை முடிந்து, முனிவரின் தவச்சாலைக்குச் சென்று பணிவிடைகள் செய்தாள். அங்கிருந்த நான்கு பசுக்களை அவளும் பிரதமையும் காட்டுக்குக் கொண்டுசென்று மேய்த்து மாலையில் மீண்டனர். மாலையில் கங்கையில் குளித்து மீண்டும் சிவபூசைகள் முடித்து தவச்சாலை சேர்ந்தனர்.
ஆனால் விறகை எரித்து அழிக்க முடியா தீயூழ் கொண்ட நெருப்பைப்போல அவள் சிந்தை அவள் மேல் நின்றெரிந்தது. எப்போதும் நெட்டுயிர்த்தவளாக, தனிமையை நாடியவளாக, சொற்களை தன்னுள் மட்டுமே ஓட்டுபவளாக அவள் இருந்தாள். தனிமையில் தலைகுனிந்து அமர்ந்திருப்பவள் இலைநுனியில் கனக்கும் நீர்த்துளிபோல ததும்பித் ததும்பி ஒருகணத்தில் உடைந்தழத் தொடங்கினாள்.
கண்களை மூடினாலும் தெரியும் வெயிலொளி போல அவளுக்குள் அம்பை தெரிந்துகொண்டிருந்தாள். அவளை கருக்கொண்ட நாளில் ஒருமுறை நீர்நிறைந்த யானம் ஒன்றைப் பார்க்கையில் அவள் விசித்திரமான தன்னுணர்வொன்றை அடைந்தாள். நீர் அது இருக்கும் பாத்திரத்தின் வடிவை அடைகிறது என்பது எவ்வளவு மேலோட்டமான உண்மை. பூமியிலுள்ள அனைத்துப் பாத்திரங்களும் நீருக்கு உகந்த வடிவத்தை அல்லவா வந்து அடைந்திருக்கின்றன? அன்று தன் வயிற்றில் கைவைத்து அவள் அடைந்த தன்னிலையே அவளாக அதன் பின் என்றுமிருந்தது.
ஆகவேதான் பீமதேவன் அவள்மேல் அதுவரை பொழிந்த காதலனைத்தையும் அவள் வயிற்றின்மேல் மாற்றிக்கொண்டதை அவள் ஏற்றுக்கொண்டாள். அவள் வயிறு சுமந்த குழந்தையை எண்ணி அவன் கொண்ட பரவசமும் கவலையும் கொந்தளிப்பும் மோனமும் அவளை உவகையிலாழ்த்தின. அவள் ஈற்றறைக்குச் செல்லும்போது மூதன்னை அவள் கையில் காப்பு கட்டி மெல்லக்குனிந்து ‘அரியணை அமர இளவரசன் ஒருவனை பெற்றுக்கொடுங்கள் அரசி’ என்றபோது அவளுக்கு பீமதேவன் ஒரு பெண்ணைத்தான் விரும்புவான் என்ற எண்ணம் எழுந்தது.
அதைப்போலவே அவன் அவளருகே வந்து குனிந்து குழந்தையைப்பார்த்து பரவசத்துடன் “வளரிள பதினான்காம் நாள்…பரணி நட்சத்திரம்…இவள் இளவரசியல்ல…கொற்றவை” என்று சொன்னபோது பீமதேவனின் கண்ணீர்த்துளிகள் அவள் மேல் விழுந்தன. “இருபத்தெட்டாவது நாள் இவளுக்கு பொன்னணிவிக்கவேண்டும் என்றார்கள். இக்கால்களுக்கு அழலன்றி எது கழலாகும்?” என்றான். குனிந்து குழந்தையைத் தொட அவனால் முடியவில்லை “எரியிதழ் போலிருக்கிறாள். இவள் என்னுடலில் இருந்தோ உன்னுடலில் இருந்தோ வரவில்லை அரசி. விறகில் எரியும் அக்கினி போல நம்மில் இவள் நிகழ்கிறாள்” என்றான்.
அவனுடைய புலம்பல்களை அவள் சிரிப்புடன் எடுத்துக்கொண்டாலும் மெல்லமெல்ல அம்பையை அவளே ஒரு நெருப்பாக எண்ணத்தொடங்கினாள். ஒவ்வொன்றையும் நோக்கி கைநீட்டும் வேட்கையே அம்பை. எதையும் தானாக ஆக்கிக்கொள்ளும் தூய்மை அவள். அவளுடைய சினம் கடைசிக்கணம் வரை எரிப்பதாக இருந்தது. உள்ளூர அவள் அம்பையை அஞ்சினாள். ஆனால் அது ஆளும் இறைவிமேல் கொண்ட அச்சம் என்றும் அறிந்திருந்தாள். “எரியும் விறகாக என்னை உணர்கிறேன். இவள் என் தீ” என்று ஒருமுறை அவள் பீமதேவனிடம் சொன்னாள்.
கையிலெடுத்துக் கொஞ்ச, சினந்து அடிக்க எளிய அம்பை ஒருத்தி தேவை என்று அவள் சொன்னபோது பீமதேவன் சிரித்து “ஆம் பெற்றுக்கொள்வோம்” என்றான். இரண்டாவது குழந்தையை குனிந்து நோக்கி சிரித்து “இவள் குளிர்ந்தவள், இவளுக்கு குளிர்ந்த அம்பையின் பெயரிடுகிறேன்” என்று சொல்லி அம்பிகை என்று பெயரிட்டான்.
அதன்பின் சிலவருடங்கள் கழித்து அவளுடனிருக்கையில் “என் மடியின் தவிப்பு அடங்கவில்லை. அம்பையை ஒரு விளையாட்டுப்பெண்ணாக எனக்குக் கொடு. தேவியர் மூவர் என்றுதானே நூல்களும் சொல்கின்றன” என்று கேட்டு அம்பாலிகையை பெற்றுக்கொண்டான். விழிகளால் அம்பையையும் கைகளால் அம்பிகையையும் உதடுகளால் அம்பாலிகையையும் கொஞ்சினான்.
மூன்று மகள்களுடன் ரதத்தில் செல்லும்போது உஷையும் சந்தியையும் ராத்ரியும் துணைவரும் சூரியன்போல தன்னை உணர்வதாக பீமதேவன் அவளிடம் சொல்வான். “நாடாள மகனில்லையே என என்னிடம் கேட்கிறார்கள். இந்நகரில் நித்திலப்பந்தல் அமைத்து என் மகள்களுக்கு சுயம்வரம் வைப்பேன். ஒன்றுக்கு மூன்று இளவரசர்கள் என் நாட்டை ஆள்வார்கள்” என்று சிரித்தான்.
தனிமையில் மரநிழலில் அமர்ந்திருக்கையில் புராவதி அழத்தொடங்கினால் பிரதமை தடுப்பதில்லை. அழுது கண்ணீர் ஓய்ந்து மெல்ல அடங்கி அவள் துயில்வது வரை அருகிருப்பாள். பின்பு பிறவேலைகளை முடித்துவந்து மெல்ல எழுப்பி குடிலுக்கு கூட்டிச்செல்வாள். இரவிலும் புராவதி தூங்குவதில்லை. விழிப்பு கொள்கையில் இருட்டில் மின்னும் புராவதியின் கண்களைக் கண்டு பிரதமை நெடுமூச்செறிவாள்.
ஒருநாள் புராவதி ஒரு கனவு கண்டாள். தவழும் குழந்தையான அம்பை இடையில் கிண்கிணி மட்டுமே அணிந்தவளாக விரைந்து செல்லக்கண்டு அவள் கூவியழைத்தபடி பின்னால் சென்றாள். படியிறங்கி உள்முற்றம் சென்ற குழந்தை அங்கே புகைவிட்டெரிந்த தூப யானத்தின் செங்கனலை அள்ளி அள்ளி வாயிலிட்டு உண்ணத்தொடங்கியது. ஓடிச்சென்று அதை அள்ளி எடுத்து வாயைத்திறந்து பார்த்தாள். வாய்க்குள் வேள்விக்குளமென செந்நெருப்பு எரிந்துகொண்டிருந்தது.
அழுதுகொண்டு கண்விழித்த புராவதி பார்க்கவரிடம் அதன் பொருளென்ன என்று கேட்டாள். “உன்குழந்தை தீராப்பெரும்பசியுடன் எங்கோ இருக்கிறாள்” என்றார் முனிவர். “அய்யனே, அவள் எங்கிருக்கிறாளென நான் எப்படி அறிவேன்? என் குழந்தையின் பெரும்பசியை நான் எப்படிப்போக்குவேன்?” என புராவதி அழுதாள்.
முனிவர் “காணாதவர்களின் பசியைப்போக்கும் நூல்நெறி ஒன்றே. காண்பவர் ஆயிரம்பேரின் பசியைப்போக்கு. வேள்விக்குப்பின் சேரும் அபூர்வம் எனும் பலன் உனக்கிருக்கும். எங்கோ எவராலோ உன் மகள் ஊட்டப்படுவாள்” என்றார்.
பின்னர் பார்க்கவமுனிவர் மண்ணில் வினாக்களம் அமைத்து பன்னிரு கூழாங்கற்களையும் ஏழு மலர்களையும் வைத்து மூதாதையரிடம் வினவிச் சொன்னார். “உன் மகள் தட்சனின் மகளாய்ப்பிறந்து எரியேறிய தாட்சாயணியின் துளி என அறிவாயாக! கங்கைக்கரைக்காட்டில் நாகர்களின் ஊரான கங்காத்வாரம் உள்ளது. அங்கே தாட்சாயணி எரிபுகுந்த குண்டத்தை நாகர்கள் நிறுவி வழிபடுகிறார்கள். அங்கே சென்று ஆயிரம் பயணிகளுக்கு அன்னம் அளி. உன் மகள் அந்த அன்னத்தை அடைவாள்.”
காசிமன்னருக்கு தூதனுப்பி உணவுச்சாலை அமைக்கும்படி புராவதி கோரினாள். அவ்வண்ணமே காசிமன்னர் அறச்சாலையொன்றை அங்கே அமைத்தார். அதன் முதல்நாள் பூசைக்காக புராவதி ரிஷிகேசம் நீங்கி கங்காத்வாரம் சென்றாள். கிளைபின்னிச் செறிந்த ஆலமரங்களில் நாகங்கள் விழுதுகளுடன் தொங்கி நெளியும் இருண்ட காட்டுக்குள் சென்ற ஒற்றையடிப்பாதை வழியாக பிரதமையுடன் நடந்து சென்று நாகர்களின் கிராமத்தை அடைந்தாள்.
கங்காத்வாரத்தில் நூறு நாகதெய்வங்களின் கோயில்கள் இருந்தன. சண்டியன்னைகள், நாகதேவிகள், பிடாரிகள், ஏழன்னைகள். தெற்கே சாலவனக் காட்டுக்குள் தாட்சாயணியின் எரிகுளம் இருந்தது. பாரதவர்ஷமெங்கும் இருந்து நாகர்கள் பயணிகளாக அங்கே வந்து கங்கையில் நீராடி எரிகுளத்து அன்னையை வணங்கிச் சென்றனர். அவர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட குடில்கள் மரக்கிளைகள் மேல் இருந்தன. அவற்றின் கூரைகளிலும் கம்பங்களிலும் நாகங்கள் நெளிந்து நழுவிச்சென்றன.
அன்னசாலையில் அவளைக் கண்டதும் அமைச்சர் நடுவே இருந்து எழுந்து ஓடிவந்த பீமதேவன் அவள் கண்களைக் கண்டதும் தன் மேலாடையை சரிசெய்தபடி தயங்கி நின்றார். “அரசியே, உன் ஆணைப்படி அன்னசாலை அமைக்கப்பட்டுள்ளது” என்றார். “ஒவ்வொரு நாளும் இங்கு வரும் அனைவருக்கும் உணவளிப்போம். இரவும் பகலும் இங்கே அதற்காக ஏவலரை அமைத்திருக்கிறேன்.”
புராவதி “நான் அரசி அல்ல” என்றாள். “உன் கண்களைப்பார்த்தேன் தேவி. இன்னும் உன் அனல் அவியவில்லையா என்ன?” என்று பீமதேவன் கண்ணீருடன் கேட்டார். “என் சிதையெரிந்தாலும் எரியாத அனல் அது” என்று புராவதி சொன்னாள். தாடை உரசி பற்கள் ஒலிக்க “என் குழந்தை மாளிகை வாயிலில் வந்து நின்றாள் என அறிந்த நாளில் என்னுள் அது குடியேறியது” என்றாள்.
சினத்துடன் “தேவி நீயும் ஓர் அரசி. நாடாண்டவன் பெற்ற மகள் நீ. களப்பலிக்கென்றே மைந்தரைப் பெறவேண்டியவள். நாம் உயிராசையாலோ உறவாசையாலோ கட்டுண்டவர்களல்ல. நம் நெறியும் வாழ்வும் நம் நாட்டுக்காகவே. நான் செய்தவையெல்லாம் காசிநாட்டுக்காக மட்டுமே. போர் வந்து என் குடிமக்கள் உயிர்துறப்பதைவிடக் கொடிதல்ல என் மகள் அழிந்தது…” என்றார்.
அச்சொற்கள் அவருக்களித்த உணர்ச்சிகளால் முகம் நெளிய, கண்ணீருடன் “விண்ணிலேறி மூதாதையரை சந்திக்கையில் தெளிந்த மனத்துடன் அவர்கள் கண்களைப்பார்த்து நான் சொல்வேன். என் தந்தையரே, நீங்கள் எனக்களித்த பணியை முடித்திருக்கிறேன், என்னை வாழ்த்துங்கள் என. அவர்களின் முதுகரங்கள் என் சிரத்தைத் தொடும். அதிலெனக்கு எந்த ஐயமும் இல்லை…” என்றார்.
சிவந்தெரிந்த முகத்துடன் புராவதி “ஒன்றுசெய்யுங்கள். நிமித்திகரை அழைத்து என் நெஞ்சிலெரியும் கனலா இல்லை உங்கள் தேசத்தில் அடுமனையிலும் வேள்வியிலும் எரியும் நெருப்பா எது அதிகமென்று கேளுங்கள்” என்றாள்.
“கேட்கவேண்டியதில்லை. அவளை அகற்றியமைக்காக ஒருநாள்கூட நான் துயிலிழக்கவில்லை. அதுவே எனக்குச் சான்று’ என்று பீமதேவன் சொன்னார். அவள் இறுகிய தாடையுடன் நிற்க அவளை சிலகணங்கள் நோக்கிவிட்டு பார்வையை திருப்பிக்கொண்டார்.
“அவளை நினைப்பதில்லையா?” என்றாள் புராவதி. பீமதேவன் தலையை இறுக்கமாக இன்னொரு பக்கமாக திருப்பிக்கொண்டார். “அவளை எப்போதாவது மறந்திருக்கிறீர்களா?” என்று புராவதி மீண்டும் கேட்டாள். கோபத்துடன் வாளை பாதி உருவி திரும்பிய பீமதேவன் தன் அனைத்து தசைநார்களையும் மெல்ல இழுத்துக்கொண்டு தன் உடலுக்குள்ளேயே பின்னடைந்தார். அவரது தோள்கள் துடித்தன. திரும்பிப்பாராமல் விலகிச்சென்றார். புராவதி புன்னகைத்துக் கொண்டாள். தீப்பட்டு எரிந்த சருமத்தில் தைலம் வழிவதுபோலிருந்தது.
அன்னசாலையில் நூற்றுக்கணக்கான பயணிகளும் இரவலர்களும் உணவை வாங்கி மரத்தடிகளுக்குச் சென்று உண்ட ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. உணவுபரிமாறுபவர்கள் சங்கை ஒலித்து உணவுக்கு பயணிகளையும் துறவிகளையும் அழைத்துக் கொண்டிருந்தனர். முற்றிலும் உடைதுறந்த நாகத்துறவிகள் திரிசூலமும் விரிசடையும் சாம்பல்பூசிய உடலுமாக உணவுக்குச் சென்றனர். பலர் கழுத்தில் நாகப்பாம்புகளை அணிந்திருந்தார்கள். ஒருவர் பிணத்தில் இருந்து எடுத்த பெரிய தொடையுடன் கூடிய கால் ஒன்றை தன் தோளில் வைத்திருந்தார்.
நாகத்துறவிகள், அவர்களைக் கண்டதும் அஞ்சி விலகி ஓடிய இரவலரை நோக்கி சிரித்துக்கொண்டு தங்கள் முத்தண்டங்களால் தரையை அடித்து ஒலி எழுப்பினர். உணவை கைகளிலேயே வாங்கி உண்டனர். உணவு உண்டபடியே உரக்கக் கூச்சலிட்டு நடனமிட்டனர். ‘சிவோஹம் !சிவோஹம்!’ என ஆர்ப்பரித்தனர்.
புராவதி கங்கையில் குளித்து ஈர உடையுடன் தட்சவனத்தை அடைந்தாள். படர்ந்த ஆலமரத்தடியில் ஆயிரம் நாகச்சிலைகள் படமெடுத்து மஞ்சள்பூசி குளிர்ந்து அமர்ந்திருந்தன. அவற்றின் நடுவே அமைந்திருந்த கல்லாலான சிறிய வேள்விக்குளத்தில் செந்நெருப்பு சுளுந்துகளில் நெய்யுண்டு நின்றெரிந்துகொண்டிருந்தது. வலப்பக்கத்தில் தட்சன் நூறு உடல்சுருள்களுடன் விழித்தவிழிகளுடன் அமர்ந்திருந்தான்.
அந்த நெருப்பையே நோக்கி நின்ற புராவதியின் இமைகள் மூடவில்லை. கருஞ்சடைக்கற்றைகளுடன் அங்கிருந்த பூசகன் “வணங்குங்கள் அன்னையே” என்றான். அதை அவள் வெறும் அசைவாகவே கண்டாள். எங்கிருக்கிறாள் என்றே அவளுக்குத் தெரியவில்லை. அவன் மேலும் கைகாட்டியதும் திடுக்கிட்டு விழித்து அவள் வணங்கி வழிபடுவதற்காக குனிந்தபோது கால்கள் தளர ‘அம்பை!’ என முனகி நினைவிழந்து நெருப்பில் விழுந்தாள்.
பீமதேவன் கூவியயபடி அவளைப் பிடித்து தூக்கிக்கொண்டார். பூசகர்கள் ஓடிவந்து அவளைத் தூக்கிக் கொண்டுசென்றனர். அவள் முகமும் ஒரு கண்ணும் நெருப்பில் வெந்திருந்தன. பச்சிலைச்சாற்றை அவள்மேல் ஊற்றி அள்ளித்தூக்கிக் கொண்டுவந்து வெளியே அமர்த்தினார்கள். அரசசேவகர்கள் ஓடிவந்து நிற்க பீமதேவன் “அரண்மனை மருத்துவர் என் படைகளுடன் இருக்கிறார். அவரை கூட்டிவருக!” என்று ஆணையிட்டு முன்னால் ஓடினார்.
அப்பால் நாகத்துறவிகளில் ஒருவர் திரும்பி புராவதியை நோக்கி கைசுட்டி உரக்கச்சிரித்து “நெருப்பையே நினைத்தவளை நெருப்பும் அறிந்திருக்கிறான்” என்றார். அவர்களுக்கு அப்பாலிருந்து கருகிவற்றிய முலைகள் ஆட, அகழ்ந்தெடுத்த வேர்போல மண்படிந்த உடலுடன், சடைமுடிவிரித்து தன்னுள் தானே பேசியபடி மெல்ல ஆடிச்சென்ற பித்தி புராவதியை கடந்து சென்றாள்.
புராவதியின் அகம் மணலில் வற்றும் நீர் போல மறைந்துகொண்டிருந்தது. அவள் கண்களுக்குமேல் மதியவெயில் பொழிய அவள் சித்தத்துக்குள் ஒரு வெண்கடல் அலையடித்து விரிந்தது. அதன் நடுவே விரிந்த வெண்தாமரையில் அவளுடைய தெய்வம் வெண்கலை உடுத்தி நிலவெழுந்ததுபோல அமர்ந்திருந்தது. புராவதி நடுங்கும் உதடுகளால் ‘அம்பை அம்பை’ என உச்சரித்துக்கொண்டிருந்தாள். கண்களை அழிக்கும் வெண்மை, நிறங்களெல்லாம் கரைந்தழியும் வெண்மை. இரு கரியகழல்கள். அவையும் வெண்மைகொண்டு மறைந்தன.
பீமதேவர் மருத்துவருடன் வந்து புராவதியைப் பார்த்தபோது கூப்பிய கரங்களுடன் அவள் இறந்திருந்தாள்.

164 .மைத்ரேய மகரிஷி கோத்ரம்

இம்மகரிஷி பராசர மகரிஷியின் சீடர். விஷ்ணுபுராணம் முதலானவற்றைப் பராசரர் இவருக்கு உபதேசித்தார். பாண்டவர் வனவாசத்தில் இருக்கும்போது மைத்ரேயர் துரியோதனனிடம் சென்றார். பலவித நீதிகளைத் துரியோதனனுக்கு உபதேசித்தார். அவற்றைத் துரியோதனன் கேட்காததால் கோபம் மிகக்கொண்டு " நீ பீமன் கதையால் தொடைமுறிந்து சாவாய்! " எனச் சபித்தார். இவர் வியாபகவானுக்கு நெருங்கிய நண்பர். நீதிமானாம் விதுரனுக்குத் தத்துவம் உபதேசித்தவர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கலாரஞ்சிததவரு :- கலைகளில் ஈடுபாடு கொண்டவர். 
கூனிதவரு :- இவ்வங்குசத்தார் முன்னோர்களில் ஒருவர் கூனராக இருந்து புகழ் பெற்றவர். 
நல்லாதவரு :- நல்லவர் எனப் பெயர் பெற்றவர். 
பரிசுதவரு :- கலைகளிலும் புலமையிலும் வல்லவராய் விளங்கி மன்னர்களிடம் பரிசு பெற்றவர். 
நல்லாதவரு, பரிசுதவரு இவ்விரண்டு வங்குசத்தாரும் தமிழ்நாட்டில் வாழ்கின்றனர். 
பிங்கணதவரு :- கௌரவம் மிக்கவர். பாராட்டு பெறுபவர். 
ஜக்கலதவரு :- ஜக்கல என்னும் ஊரினர். 
பரோபகாரதவரு :- மற்றவர்க்கு உதவி செய்பவர். 
பரசம்தவரு :- பரசு என்னும் கோடாலி தெய்வ ஆயுதங்களுள் ஒன்று. ஆலயத்திற்குப் பரசு செய்து கொடுத்தவர். 
காரவஞ்சிதவரு, குனெதவரு, குனிகாதவரு, கொரவஞ்சதவரு. பிகலதவரு, போலதவரு, ஜக்கிணிதவரு, அல்லானதவரு.

1/29/14

மல்லிகர்ஜுனன் கோவில் ஒட்டன்சத்திரம் தின்டுக்கல் மாவட்டம்

குலம் ‍‍‍‍‍‍‍‍‍‍ =   செவ்வேலார் குலம்
கோத்திரம்   =முத்து மஹரிஷி கோத்திரம்
தெய்வம்  =மல்லிகர்ஜுனன்

By
Vinoth kumar.E
Coimbatore










பகுதி நான்கு : அணையாச்சிதை[ 4 ]

பகுதி நான்கு : அணையாச்சிதை[ 4 ]
‘இளவரசே, உசகன் அருளப்படாததை அனுதினமும் தேடிக்கொண்டே இருந்தான். நெருப்பில் எரிந்தவன் நீரைக் கண்டுகொண்டான்’
இருவிரல்களால் யாழைமீட்டி தீர்க்கசியாமர் பாடினார். ஆனால் வேள்வியாகும் அவியின் பேரின்பத்தையே சந்தனு கங்காதேவியில் அடைந்தார். மண்ணில் நெளியும் புழு விண்ணில் பறக்கும் வழி என்ன மானிடரே? விண்ணாளும் புள்ளுக்கு உணவாவது மட்டும் தானே?
கங்காதேவியிடம் அவருக்கு எட்டு குழந்தைகள் பிறந்தன. கருமுதிர்ந்து குடவாயிலை தலையால் முட்டத் தொடங்கியதும் கங்காதேவி குடில்விட்டிறங்கி விலகிச் சென்றாள். பின்பு பதினெட்டுநாள் விலக்கு முடிந்து குளித்து புத்தம்புதியவளாக திரும்பி வந்தாள். ஒரு சொல் கூட குழந்தைகளைப்பற்றி சொல்லவில்லை. குழந்தைகள் எங்கோ உள்ளன என்று சந்தனு எண்ணிக்கொண்டார். அவளுக்களித்த வாக்கினால் அதைப்பற்றி ஏதும் கேட்கவில்லை.
கையால் தீண்டாத அக்குழந்தைகளை சந்தனு கற்பனையால் அணைத்துக்கொண்டார். அவற்றுக்குப் பெயர் சூட்டினார். நெஞ்சிலும் தோளிலும் தலையிலும் வைத்து வளர்த்தார். புரூரவஸும் ஆயுஷும் நகுஷனும் ஹஸ்தியும் குருவும் பிரதீபரும் அவனுள் முகம் கொண்டு, கண்மலர்ந்து, சிரிப்பு ஒளிர்ந்து வாழ்ந்தனர். அவருடைய பல்லாயிரம் முத்தங்களை அவர்கள் விண்ணுலகின் ஒளிமிக்க விதானத்தில் இருந்துகொண்டு குட்டிக்கைகளாலும் கால்களாலும் பட்டுக்கன்னங்களாலும் செல்லச்சிறுபண்டியாலும் இன்னும் இன்னும் என பெற்றுக்கொண்டனர்.
ஏழாவது குழந்தையை அவள் கருவுற்றிருந்தபோது ஒருநாள் கனவில் உசகனாக தன்னை உணர்ந்து எழுந்தபோது ஆறு குழந்தைகளும் என்ன ஆயின என்ற எண்ணம் வந்தது. அதை நூறுநூறாயிரம் முறை உள்ளூர கேட்டுக்கொண்டிருந்தவர் ஒருமுறையேனும் வாய்ச்சொல்லாக மாற்றிக்கொள்ளவில்லை. ஏழாவது குழந்தையுடன் அவள் செல்வதைக் கண்டதும் இருளில் அவள் பாதையை பின்தொடர்ந்து சென்றார். கங்காதேவி கங்கர்களின் ஊரை அடைந்ததும் அங்கே கூடியிருந்த அவள் குல மகளிர் குலவையொலியுடன் அவளை கூட்டிசென்றனர். குல மூதாதையருக்கும் பேற்றில் இறந்த பெண்களுக்கும் பலியிட்டு பூசை வைத்தபின்னர் கங்கைக்கரைக்குக் கொண்டுசென்று நீரில் இறக்கி விட்டனர்.
கங்கையின் குளிர்ந்த நீரில் இறங்கி மெல்ல நீந்திய கங்காதேவியைப் பார்த்தபடி கரையில் நின்ற பெண்கள் குலப்பாடல்களைப் பாடினர். அவள் ஈற்று நோவு வந்து நீரில் திளைத்தபோது பாடல் உரக்க ஒலித்தது. குழந்தை நீருக்குள்ளேயே பிறந்ததும் அதன் தொப்புள் கொடியை வெட்டிவிட்டு நீந்திக் கரைசேர்ந்தாள் கங்காதேவி. பெண்கள் நீரை நோக்கி கை நீட்டி நீந்தி வரும்படி குழந்தையை அழைத்தனர். தொலைவில் நின்ற சந்தனு மன்னர் ஓசையில்லாமல் கூவித் தவித்து நெஞ்சில் கரம் வைத்து விம்மினார். குழந்தை கங்கைநீரில் மூன்று சிறு கொப்புளங்களாக மாறி மறைந்தது.
பதினெட்டாம் நாள் புத்தாடையும் புதுமெருகுமாக அவள் வந்தபோது நாக்கின் கடைசி எல்லைவரை வந்த சொல்லை விழுங்கி சந்தனு திரும்பிக்கொண்டார். பின்னர் மீண்டும் அவளது காமத்தின் பொன்னிற இதழ்களுக்குள் விழுந்து எரியத்தொடங்கினார். எட்டாம் குழந்தை கருவுக்கு வந்தபோதுதான் மீண்டும் அவ்வெண்ணங்களை அடைந்தார். ஒவ்வொருநாளும் அவள் வயிற்றை நோக்கியபடி அக்கேள்வியை மனதுக்குள் நிகழ்த்திக்கொண்டார். பத்தாவது மாதம் நிறைவயிற்றுடன் அவள் இருக்கையில் அவள் வயிற்றில் இருந்து விலகாத பிரக்ஞையுடன் அங்கிருந்தார். ஒருகைமேல் தலைவைத்து கங்கையைப் பார்த்திருந்த அவள் உடலில் இருந்து வெம்மைமிக்க குருதிவாசனை எழக்கண்டதும் கைகள் நடுங்க அவளருகே சென்று நின்றார்.
கங்காதேவி எழுந்து தளர்நடையில் படகை நோக்கிச் சென்றதும் சந்தனு அவளைத் தடுத்து “தேவி, நீ எங்கே செல்கிறாய்? என்குழந்தையை என்ன செய்யப்போகிறாய்?” என்றார். அவள் அவரை விழித்துப் பார்த்தபின் ஒரு சொல்லும் சொல்லாமல் சிறுபடகில் ஏறிக்கொண்டாள். “தேவி என் குழந்தையைக் கொல்லாதே…. அது என் மூதாதையரின் கொடை” என்று சந்தனு கூவினார்.
துடுப்பால் படகை உந்தி நீர்ப்பரப்பில் சென்ற கங்காதேவி “மன்னரே, எனக்களித்த வாக்கை மீறிவிட்டீர்கள். என்னிடம் கேள்வி கேட்டுவிட்டீர்கள். இதோ நம் உறவு முறிந்தது. இனி என்னைத் தேடவேண்டியதில்லை” என்று சொன்னாள். ‘தேவி!’ என அலறியபடி அவர் படகுத்துறை வரை வந்தார். சந்தனுவின் அலறலைத் தாண்டி அவள் படகை துழாவிச் சென்றாள். அவளைத் தொடரமுடியாமல் சந்தனு கூவி அழுதார்.
VENMURASU_ EPI_20
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
பதினெட்டு நாட்கள் அவள் திரும்பிவருவாள் என நம்பி அங்கே கண்ணீருடன் காத்திருந்தபின் சந்தனு மன்னர் அஸ்தினபுரிக்குத் திரும்பி வந்தார். வீரியமெல்லாம் மறைந்தது போல வெளுத்து மெலிந்து எப்போதும் நடுங்கிக்கொண்டிருப்பவராக ஆனார். அஸ்தினபுரியில் அவருக்கு ஒருநாளும் இயற்கையாக துயில் வரவேயில்லை. இரவெல்லாம் படுக்கையில் பாம்புபோல நெளிந்துகொண்டிருந்த அவருக்கு மதுவகைகளையும் தூமவகைகளையும் அளித்து சோதித்த மருத்துவர்கள் தோல்வியடைந்தனர். கங்கைக்கரைக்குச் சென்று குடில் அமைத்து தங்கும்போது மட்டுமே அவர் தூங்கமுடிந்தது.
இருத்தலென்பதே இறைஞ்சுதலாக ஆனவனின் குரலை எங்கோ எவரோ கேட்கிறார்கள் இளவரசே! ஏழாண்டுகள் கழித்து ஒருநாள் கங்கைக்கரை வழியாக அவர் காலையில் நடந்துசெல்லும்போது நினைத்துக்கொண்டார். இந்த கங்கை என் பிறவிப்பெரும் துயரத்தின் பெருக்கு. சொல்லற்று விழிக்கும் பலகோடிக் கண்களின் வெளி. என் மூதாதையர் கரைந்திருக்கும் நிலைக்காத நினைவு. என் உலகைச் சூழ்ந்திருக்கும் கருங்கடலின் கரம்.
கங்கையில் வந்துசேர்ந்த பிரபாவதி என்ற சிற்றாறின் நெளிவைக் கண்டு கால் தளர்ந்து அப்படியென்றால் இது என் இப்பிறவியின் தவிப்பு என நினைத்துக்கொண்டார். அப்போது அதன் நீர் மெல்ல நின்று, ஆறு இனிய வெண்மணல் வெளியாக ஆனதைக் கண்டு திகைத்தார். பெருவலி நிற்கும்போது எழும் நிம்மதியை உணர்ந்தார்.
மேலும் முன்னால் சென்று பார்த்தபோது ஆற்றின் குறுக்காக முற்றிலும் கோரைப் புல்லைக்கொண்டு கட்டப்பட்ட அணை ஒன்றைக் கண்டார். அந்த அணைக்கு அருகே அவரைவிட உயரமான சிறுவன் ஒருவன் நின்று தன் நீண்டகரங்களால் கோரைத்தண்டுகளைப் பிடுங்கி வில்லில் தொடுத்து அம்புகளாக எய்து அந்த அணையை கட்டிக்கொண்டிருந்தான். சந்தனு அச்செயலின் பேருருவைக் கண்டு அவன் கந்தர்வனோ என்று எண்ணி பிரமித்தார். அச்சிறுவன் நாணல்களைக் கிள்ளி நீரில் வீசி மீன்பிடித்ததைக் கண்டதும்தான் அவன் மானுடனென்று தெளிந்தார். அவனருகே சென்றதுமே அவன் தோள்களில் இருந்த முத்திரைகளைக் கண்டு உடல்சிலிர்த்து கண்ணீருடன் நின்றுவிட்டார்.
“நீ என் மகன்” என அவர் சொன்னார். உயிர் எடுத்து வந்தபின்பு சொன்னவற்றிலேயே மகத்தான வார்த்தைகள் அவையே என உணர்ந்தார். “நான் உன் தந்தை” என்று அதன் அடுத்த வரியைச் சொன்னார். அதை அவனுக்குக் காட்ட அடையாளம் தேடி அவர் தவிக்கும்போது அவன் அவரது மெலிந்த நடுங்கிய கைகளை தன் வலிய பெருங்கைகளால் பற்றிக்கொண்டு கார்வைமிக்க குரலில் “உங்கள் கண்ணீரைவிட எனக்கு ஆதாரம் தேவையில்லை தந்தையே” என்றான்.
கங்கைக்குப் பிறந்தவனாதலால் காங்கேயன் என்று அழைக்கப்பட்ட அவன் கங்கர்குலத்தில் இருந்தாலும் காடுகளிலேயே வாழும் தனிமை கொண்டிருந்தான். கங்கர் முறைப்படி பிறந்ததுமே கங்கையில் நீந்திக்கரைசேர்ந்த அவனை கங்கர்குலத்திடம் அளித்துவிட்டு கங்கையில் இறங்கிச்சென்ற அவன் அன்னை திரும்பி வரவேயில்லை. காடும் நதியும் அவன் களங்களாக இருந்தன. காற்றிலிருந்து சுருதிகளையும் நீரிலிருந்து அஸ்திரங்களையும் நெருப்பிலிருந்து நெறிகளையும் கற்றிருந்தான். இளவரசே, தலைமுறைக்கு ஒருமுறையே ஒவ்வொரு காலடியையும் மண்மகள் கைவிரித்துத் தாங்கும் குழவியர் மண்ணில் பிறக்கின்றனர்.
தனிமையை நோன்பாகக் கொண்ட அவனை தேவவிரதன் என்று பெயரிட்டு சந்தனு மன்னர் அஸ்தினபுரிக்கு அழைத்துவந்தார். யானைத்துதிக்கை போன்ற அவனுடைய கனத்த கைகளை விடவே அவரால் முடியவில்லை. ‘என் மகன்! என் மகன்! என் மகன்!’ என்ற ஆப்தவாக்கியமே சந்தனுவுக்கு இன்பத்தையும் ஞானத்தையும் முக்தியையும் அளித்தது. ஆப்தவாக்கியங்களின் இறைவிகளெல்லாம் அதைக்கண்டு புன்னகை புரிந்தனர்.
இளையவரே, அன்றுமுதல் அஸ்தினபுரியின் காவல்தெய்வமாக அவரே விளங்கிவருகிறார். அறங்கள் அனைத்தையும் அறிந்தவரும், அறத்தினால் வேலிகட்டப்பட்ட தனிமையில் வாழ்பவருமாகிய பீஷ்மரை வணங்குவோம்! தன்னைத்தானே தோற்கடித்துக்கொள்ளும் மாமனிதர்களால்தான் மானுடம் வெல்கிறது என்று அறிக! அவர்களின் குருதியை உண்டுதான் எளியமக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் தசைகள்மேல் வேரோடியே தலைமுறைகளின் விதைகள் முளைக்கின்றன.
தீர்க்கசியாமரின் சொல்கேட்டு கண்ணீர் மல்க கைகூப்பி அமர்ந்திருந்தான் விசித்திரவீரியன். இளவரசே, சந்தனு தன் அன்னையையும் தந்தையையும் ஆசிரியரையும் ஒருங்கே அடைந்தார். விரிந்த பெருந்தோள்களைக் கண்டு அச்சங்களை வென்றார். ஒளிமிக்க கண்களைக் கண்டு அவநம்பிக்கைகளைக் கடந்தார். முழங்கும் குரலைக்கேட்டு ஐயங்கள் தெளிந்தார். அச்சம் நிறைந்த வழக்கமான கனவொன்றில் உசகனாக அவர் நெளிந்து ரதசக்கரத்தால் நசுக்குண்டு திகைத்து எழுந்து நடுங்கி முனகியபோது அங்கே இருந்த தேவவிரதர் அவர் கன்னத்தில் கைவைத்து காதில் “அஞ்சாதீர் தந்தையே, நானிருக்கிறேன்” என்றார். அவர் கையைப்பிடித்து மார்போடு சேர்த்துக்கொண்டு கண்ணீர் விட்டுக்கொண்டே மீண்டும் உறங்கினார்.
தேவவிரதர் தந்தையின் அத்தனை சுமைகளையும் வாங்கிக்கொண்டார். தன் நிழலில் தந்தையை வைத்து காத்தார். காட்டில் வேட்டைக்குச் சென்றபோது மெல்ல தேவவிரதரின் தோளில் கைவைத்து அதன் உறுதியை உணர்ந்த சந்தனு அவர் திரும்பிப்பார்த்தபோது திகைத்து நோக்கை விலக்கிக் கொண்டார். அவர் உள்ளத்தை அறிந்தவர்போல தேவவிரதர் அவரை தன் பெரும் கரங்களில் மதலையெனத் தூக்கிகொண்டார்.
தந்தையை கைகளில் அள்ளிக்கொண்ட தனயனின் மார்புக்குள் நூறு முலைகள் முளைத்து பால்சுரந்தன. அன்னைபோல அணைத்தும், கடிந்தும் தந்தையைப் பேணினார் மைந்தர். தசைகள் இறுகிய படைக்குதிரையுடன் சேர்ந்து ஓடிக்களிக்கும் கன்று போல மகனுடன் விளையாடி சந்தனு மகிழ்ச்சி கொண்டவரானார்.
அஸ்தினபுரியின் அரசே! அந்த மகிழ்வான நாட்களில்தான் உங்கள் தந்தை சந்தனு யமுனையில் படகோட்டிக்கொண்டிருந்த மச்சர்குலத்து இளவரசியைக் கண்டார். கங்கையின் தங்கையல்லவா யமுனை? சென்றவள் வந்தாள் என்றே சந்தனு நினைத்தார். அவள் பாதங்களில் அனைத்தையும் மறந்து தன்னை வைத்தார். அவரது தசைகளில் குருதியும் நரம்புகளில் அக்கினியும் குடியேறின. கண்களில் ஒளியும் உதடுகளில் புன்னகையும் மீண்டு வந்தன. கன்றுகள் குதிக்கும் குதூகலத்துடன் நடந்த தந்தையைக் கண்டு மைந்தர் மனம் மகிழ்ந்தார்.
சந்தனு சத்யவதியின் தந்தை தசராஜனிடம் சென்று மகள்கொடை வேண்டினார். “அஸ்தினபுரிக்கு அரசியென உம் மகளை தருக” என்றார். அவரது பெருங்காதலை உணர்ந்த மச்சகுலத்தலைவன் சத்யவான் ஒரு விதியைச் சொன்னார். “அவளை மணம் புரிவதென்றால் அவள் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளுக்கே அரசுரிமை என்று வாக்களிக்கவேண்டும். உங்களுக்கு கங்கர்குலத்து மைந்தன் இருக்கிறான். அவனே மன்னனாக முடியும். என் குலத்துக்குழந்தைகள் எங்களைவிடக் கீழான மலை கங்கர்களுக்கு சேவகர்களாக வாழமாட்டார்கள்” என்றார்.
“அவன் என் மைந்தன். பெருந்திறல் வீரன். அஸ்தினபுரிக்கு அவன் ஆற்றல் இனிவரும் நான்கு தலைமுறைக்கும் காவல் என்றனர் நிமித்திகர்” என்றார் சந்தனு. “ஆம், அவனுடைய நிகரற்ற வீரத்தையே நான் அஞ்சுகிறேன். அவன் காலடியில் பாரதவர்ஷம் விழும். என்குலங்களும் அங்கே சென்று சரிவதை நான் விரும்பவில்லை” என்றார் சத்யவான்.
“தேவி, என் காதலை நீ அறியமாட்டாயா? சொல்” என்று சத்யவதியிடம் கையேந்தினார் சந்தனு. “அரசே, எந்தையின் சொல் எனக்கு ஆணை” என்று சொல்லி அவள் குடிலுக்குள் புகுந்துகொண்டாள். கண் கலங்க கையேந்தி மச்சர்குடில் முன் அஸ்தினபுரியின் அரசர் நின்றார். “இழப்புகளை ஏராளமாக அறிந்தவன் நான். இனியுமொரு காதலை இழப்பதை என் நெஞ்சும் உடலும் தாங்காது பெண்ணே” என முறையிட்டார். “உங்கள் மைந்தனைத் துறந்து வாருங்கள் அரசே. இனிமேல் பேச்சு இல்லை” என மகற்கொடை மறுத்து மச்சர் வாயிலை மூடினார்.
நெஞ்சில் கைவைத்து “அவன் என் மைந்தன் அல்ல, என் தாதன்” என்று கூவினார் சந்தனு. ரதமுருண்ட வழியெல்லாம் கண்ணீர் உதிர அஸ்தினபுரிக்குத் திரும்பிவந்தார். இனி யமுனைக்குத் திரும்புவதில்லை என்று எண்ணிக்கொண்டார். நதிகளெல்லாம் நிற்காதொழுகும் தன்மை கொண்டவை. கரைகளால் நதி கட்டுப்படுத்தப்படுவதில்லை, கரைகளை நதிகளே உருவாக்கிக் கொள்கின்றன. இனி நதிகள் இல்லை. பாலையில் அலைகிறேன். தாகத்தில் இறக்கிறேன். இனி என் வாழ்வில் நதிகள் இல்லை என்று தன்னுள் பல்லாயிரம் முறை கூவிக்கொண்டார்.
ஆனால் இழந்தவற்றை மறக்க எவராலும் இயல்வதில்லை. பேரிழப்புகள் நிகரெனப் பிறிதிலாதவை. அரசே, கொடிய சூலை நோயென சத்யவதி மீதுகொண்ட காதல் சந்தனு மன்னருக்குள் வாழ்ந்தது. குருதியை இழந்த அவர் உடல் வாழைபோலக் குளிர்ந்து வெளுத்தது. அவர் விலக்கி வைத்திருந்த அனைத்து நோய்களும் ஆழத்தில் இருந்து முளைத்தெழுந்து தழைத்தன.
மாம்பழத்தில் வண்டு போல அரசருள் உறையும் அறியாத ஏதோ ஏக்கமே அவரைக் கொல்கிறது என்று அரசமருத்துவர்கள் தேவவிரதரிடம் சொன்னார்கள். அந்த எண்ணமல்ல அவ்வெண்ணத்தை உதறும் முயற்சியிலேயே மன்னர் நோயுறுகிறார் என விளக்கினர். ஒற்றர்களிடமும் அமைச்சர்களிடமும் விசாரித்து அந்த எண்ணத்தை அறிந்தார் தேவவிரதர். ரதம்பூட்டி தன்னந்தனியே யமுனை நோக்கிச் சென்றார்.
கோடைகால இரவொன்றில் வெண்குளிர்ச் சேக்கையில் துயிலிழந்து புரண்டுகொண்டிருந்த தந்தையின் படுக்கையருகே அமர்ந்து அவரது மெலிந்த கரங்களை தன் பெருங்கரங்களுக்குள் வைத்து, குனிந்து அவரது குழிந்த கண்களுக்குள் பார்த்து, முழங்கிய குரலில் தேவவிரதர் சொன்னார். “எந்தையே, இக்கணம் விண்ணுலகில் என் அன்னை வந்து நிற்கட்டும். இக்கணம் இனி என் வாழ்க்கையை முடிவுசெய்யட்டும். இதோ நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன். நான் எந்நிலையிலும் மணிமுடிசூடமாட்டேன். வாழ்நாளெல்லாம் இல்லறத்தை தவிர்ப்பேன். அதற்கென காமத்தை முற்றிலும் விலக்குவேன். உங்கள் பாதங்கள்மீது ஆணை!”
நடுங்கி எழுந்து அவர் தோள்களைத் தழுவி சந்தனு கூவினார், “மகனே, வேண்டாம். நான் உதிரும் இலை. எனக்காக நீ உன் வாழ்க்கையை துறக்கலாகாது.” புன்னகையுடன் எழுந்து, “நான் ஆணை செய்துவிட்டேன் தந்தையே. இனி அது என்னை வாழ்நாளெல்லாம் கட்டுப்படுத்தும்” என்றார் தேவவிரதர்.
“இல்லை, இதை நான் ஏற்கமாட்டேன். இது என் ஆணை அல்ல… நான் அதை சொல்லவில்லை” என்று சந்தனு கூவினார். மகனின் சிம்மபாதம்போன்ற கைகளைப்பிடித்தபடி சந்தனு “மகனே, என் தந்தையே, என் தெய்வமே, இந்தத் துயரத்தை எனக்கு அளிக்காதே” என்றார்.
உறுதியான குரலில் “நேற்றே நான் மச்சர்குலத்து சத்யவானைக்கண்டு பேசிவிட்டேன். நானோ என் தோன்றல்களோ அவரது மகளின் மகவுகளின் அரியணையுரிமைக்குச் செல்ல வாய்ப்பில்லை என்றேன். என் வாக்கை அவருக்கு அளித்து பழுதற்ற ஆயிரம் வைரங்களை கன்யாசுல்கமாக அளித்து மணநாளையும் முடிவுசெய்து வந்தேன்” என்றார் தேவவிரதர்.
“அதைத் தவிர்க்க ஒரேவழிதான்… நான் இறந்துவிடலாம். நான் இறந்துவிடுகிறேன் மகனே” என சந்தனு அழுகையுடன் சொல்லி முடிப்பதற்குள் அன்னையின் கனிவுடன் வாயில் பட்டென்று அடித்து “என்ன அவச்சொல் இது? போதும்” என அதட்டினார் தேவவிரதர். “நான் முடிவை கூறிவிட்டேன். இனிமேல் இதைப்பற்றி பேசவேண்டியதில்லை” என்றார்.
அவரை எதிர்த்துப் பேசியறியாத சந்தனு “ஆம்” என்றார். புன்னகையில் கனிந்து தந்தையின் கண்களில் கசிந்திருந்த கண்ணீரை தன் கனத்தவிரல்களால் மெல்லத் துடைத்தபின் அவரை படுக்கையில் இருந்து இரு கைகளாலும் கைக்குழந்தை போல தூக்கி உப்பரிகைக்குக் கொண்டுசென்றார் தேவவிரதர். “இன்று நிறைநிலவு நாள். பாருங்கள். முதிய வேங்கைமரம் மலர்விட்டிருக்கிறது” என்று காட்டினார். சந்தனு மைந்தனின் தோள்களை அணைத்தபடி குளிர்க்கிரணங்களுடன் மேகவீட்டிலிருந்து தயங்கி எழுந்த சந்திரனைப் பார்த்தார். விண்ணகத்தின் நுண்ணுலகுகளில் எங்கோ காலத்தில் நெளிந்துகொண்டிருந்த உசகன் அருவியில் தலைதூக்கி நிற்கும் நீர்ப்பாம்பு போல அசைவிழந்து மெய்மறந்து நிறைவுகொண்டான்.
“மானுடர்க்கரசே, உமது புகழ் வாழ்க! தந்தையை கருவுற்றுப்பெற்ற தனயனை வாழ்த்துவீராக! இறந்தபின்னரும் ஒருகணமேனும் தந்தையை மார்பிலிருந்து இறக்காத தாயுமானவனை வணங்குவீராக!” என்றார் தீர்க்கசியாமர். விசித்திரவீரியன் கண்களிலிருந்து கண்ணீர் உதிர்ந்தது.
“இளவரசே, எட்டு குட்டிகளை ஈன்ற பன்றியைவிட கொடூரமான மிருகம் வனத்தில் இல்லை. தன் நெஞ்சில் ஒவ்வொரு கணமும் குடிகளின் நலனை எண்ணும் அரசன் குரூரத்தின் உச்சிமுனையில் சென்று நிற்பான். அதன் பழியை தான் ஏற்று தன் குடிகளுக்கு நலனைமட்டுமே அளிப்பான். அவன் உதிர்ந்து மண்ணை அடைகையில் மன்னுயிரனைத்தையும் தாங்கும் மண்மகள் அவனை அள்ளி அணைத்து தன் மடியில் அமர்த்துவாள். மண்ணாளும் மன்னன் அவளுக்கு மட்டுமே பதில்சொல்லக் கடமைப்பட்டவன் என்றறிக!”
“வல்லமைகொண்ட நெஞ்சுடையவரே, பெரிய பாறைகளே பெரிய பாறைகளை அசைக்கமுடியும் என்றறிவீராக. மாபெரும் அறத்திலிருந்தே மாபெரும் தீமை பிறக்கமுடியும். எல்லையற்ற கனிவே எல்லையற்ற குரூரத்தின் காரணமாகக்கூடும். பெரும்புண்ணியங்கள் பெரும் பழிகளைக் கொண்டு வரலாகும். விதியால் அல்ல, செய்கைகளாலும் அல்ல, எண்ணங்களினாலேயே மாமனிதர்கள் உருவாகிறார்கள். வேழங்கள் மரங்களை விலக்கி, பாறைகளைப் புரட்டி, காடுகளைத் தாண்டிச்சென்று வேழங்களையே போரிடத் தேர்ந்தெடுக்கின்றன.”
கைகளைக் கூப்பியபின் தீர்க்கசியாமர் ‘ஓம் ஓம் ஓம்’ என முழங்கி அமைதியானார்.