அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

2/4/14

பகுதி ஆறு : தீச்சாரல்[ 1 ]

பகுதி ஆறு : தீச்சாரல்[ 1 ]
அஸ்தினபுரிக்குப் பின்னால் நூறு யோசனை தொலைவில் இருந்த கிரீஷ்மவனம் என்னும் காட்டுக்குள் ஓடிய தாராவாஹினி என்னும் சிற்றாறின் கரையில் கட்டப்பட்ட குடிலில் தன் பதினெட்டு சீடர்களுடன் பீஷ்மர் தங்கியிருந்தார். அவர்கள் மாலை ஆயுதப்பயிற்சிகள் முடிந்து மீண்டும் தாராவாஹினியில் நீராடி மரத்தடியில் தீயிட்டு அமர்ந்து கொண்டு வெளியூரில் இருந்து வந்திருந்த சூதரையும் விறலியையும் அமரச்செய்து கதைகேட்டுக்கொண்டிருந்தனர்.
நள்ளிரவு தாண்டியிருந்தது. பீஷ்மர் மரத்தடியில் சருகுமெத்தைமேல் விரிக்கப்பட்ட புலித்தோலில் படுத்திருந்தார். அவர் காலடியில் மாணவனான ஹரிசேனன் அமர்ந்திருந்தான். நெருப்பருகே சூதரும் விறலியும் அமர்ந்திருந்தனர். உறுதியான கரிய தோளில் சடைக்கற்றைகள் சரிந்திருக்க சிவந்த அகன்ற கண்கள் கொண்ட சூதர் பெரிய விரல்களால் கிணையை மீட்டினார்.
ஒவ்வொருநாளும் வெவ்வேறு ஊர்களில் இருந்து வரும் நாடோடிகளான சூதர்கள் அஸ்தினபுரியின் அரண்மனைமுற்றத்தில் குழுமுவதுண்டு. அவர்கள் தங்குவதற்கு அரண்மனைக்கு அப்பால் ஸஃபலம் என்ற பெரிய தடாகத்தின் மூன்றுகரைகளிலுமாக குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவர்கள் காலையில் நீராடி வாத்தியங்களுடன் அரண்மனைக்கு வந்து அரசகுலத்தவரைக் கண்டு பரிசில்பெற்றுச் செல்வார்கள். அரசியர் தங்கள் கைகளாலேயே அவர்களுக்கு கொடையளிக்கவேண்டும் என்று நெறியிருந்தது.
ஆனால் சூதர்கள் பெரும்பாலும் பீஷ்மரை சந்திக்கவிரும்புவார்கள். பீஷ்மரை சந்தித்தால் மட்டுமே அடுத்த ஊரில் அவர்கள் அவரைப்பற்றி சொல்லமுடியும். அன்று மாலை வந்திருந்த சூதர்களில் ஒருவர் அவர் சௌபநகரில் இருந்து வருவதாகச் சொன்னார். பீஷ்மரின் கண்கள் அதைக்கேட்டதும் மிகச்சிறிதாக சுருங்கி மீண்டதை ஹரிசேனன் கண்டான். அவரைத் திருப்பி அனுப்பலாமென அவன் எண்ணியதுமே பீஷ்மர் “சூதரே வருக” என்று அழைத்தார். அருகே அமரச்செய்து “பாடுக” என்று ஆணையிட்டார்.
தசகர்ணன் என்னும் சூதர் சௌபநகரம் பற்றி சொன்னார். அந்நகரில் இருந்து ஒவ்வொருநாளும் கூட்டம்கூட்டமாக மக்கள் வெளியேறி பாஞ்சாலத்துக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள் என்றார். பெண்சாபம் விழுந்த மண் என்று சௌபத்து நிமித்திகர் சொன்னார்கள். நகர்நீங்கி காடுசென்று கொற்றவையாகி வந்து ஷத்ரியர்புரிகளுக்கெல்லாம் சென்ற அம்பாதேவி அந்நகருக்கு மட்டும் வரவில்லை. அவள் மீண்டும் வருவாள் என்று எண்ணி அனைத்துக் கோட்டைவாயில்களையும் மூடிவிட்டு சால்வன் நடுங்கிக்கொண்டிருந்தான். அவள் பாஞ்சாலத்துக் கோட்டைவாயிலில் ஒரு காந்தள் மலர் மாலையைச் சூட்டிவிட்டு காட்டுக்குச் சென்றுவிட்டாள் என அறிந்ததும் நிறைவடைந்தவனாக கோட்டைவாயில்களைத் திறக்க ஆணையிட்டான். அதுவரை கோட்டைக்குள்ளும் புறமும் எவரும் அனுமதிக்கப்படவில்லை.
கோட்டைவாயில் திறந்த அன்று குலதெய்வமான சண்டிதேவிக்கு ஒரு பூசனை செய்து சூதர்களுக்கெல்லாம் பரிசுகள் வழங்க சால்வன் ஒருங்குசெய்தான். வாரக்கணக்கில் கோட்டைக்கு வெளியே தங்கியிருந்த சூதர்கள் ஊர்மன்றுக்கு வந்தனர். நகரமெங்கும் முரசறைந்து அனைவரும் வரவேண்டுமென்று ஆணையிட்டிருந்தமையால் நால்வருணத்து மக்களும் மன்றில் வந்து கூடியிருந்தார்கள். செங்கோலேந்திய காரியகன் முன்னால் வர வெண்குடை ஏந்திய தளபதி பின்னால் வர உடைவாளும் மணிமுடியுமாக வந்து மேடையில் இடப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்த சால்வன் அங்கே வாழ்த்தொலிகளே எழவில்லை என்பதை ஒருகணம் கழித்தே புரிந்துகொண்டான். அவன் பரிசில்களை கொண்டுவரும்படி சொன்னான்.
அரண்மனை சேவகர்களால் பொன், வெள்ளி நாணயங்களும் சிறு நகைகளும் அடங்கிய ஆமையோட்டுப்பெட்டி கொண்டுவந்து மன்றுமுன் வைக்கப்பட்டது. முறைப்படி முதுசூதர் வந்து மன்னனை வாழ்த்தி முதல்பரிசு பெறவேண்டும். தொங்கிய வெண்மீசையும் உலர்ந்த தேங்காய்நெற்று போன்ற முகமும் கொண்ட முதுசூதரான அஸ்வகர் எழுந்து தள்ளாடிய நடையில் சென்று மன்றுமேல் ஏறினார். முறைப்படி அவர் தன் வாத்தியத்துடன் வரவேண்டும். வெறுமே மன்றேறிய அவர் இருகைகளையும் விரித்து மக்களைநோக்கித் திரும்பி “சௌபநாட்டின் குடிகளை அழிவில்லாத சூதர்குலம் வணங்குகிறது. இங்கே நாங்கள் பெற்ற ஒவ்வொரு தானியத்துக்கும் எங்கள் சொற்களால் நன்றி சொல்கிறோம்” என்றார். அவரது குலம் ‘ஆம் ஆம் ஆம்’ என்றது.
சூதர் “இந்தமண் மீது பெண்சாபம் விழுந்துவிட்டது. இங்குவாழும் கற்பரசிகளினாலும் சான்றோர்களாலும்தான் இங்கு வானம் வெளியால் இன்னமும் தாங்கப்படுகிறது” என்றார். சால்வன் திடுக்கிட்டு எழுந்து நின்றான். சூதர் உரக்க “இனி இந்த நாட்டை சூதர் பாடாதொழிவோம் என இங்கு சூதர்களின் தெய்வமான ஆயிரம்நாகொண்ட ஆதிசேடன் மேல் ஆணையாகச் சொல்கிறோம். இந்நாட்டின் ஒரு துளி நீரோ ஒருமணி உணவோ சூதர்களால் ஏற்கப்படாது. இந்த மண்ணின் புழுதியை கால்களில் இருந்து கழுவிவிட்டு திரும்பிப்பாராமல் இதோ நீங்குகிறோம். இனி இங்கு சூதர்களின் நிழலும் விழாது. பன்னிரு தலைமுறைக்காலம் இச்சொல் இங்கே நீடிப்பதாக!” முதுசூதர் வணங்கி நிமிர்ந்த தலையுடன் இறங்கிச்சென்றார்.
சால்வன் கை அவனையறியாமலேயே உடைவாள் நோக்கிச் சென்றது. அமைச்சர் குணநாதர் கண்களால் அவனைத் தடுத்தார். சால்வன் கண்களில் நீர் கோர்க்க உடம்பு துடிக்க செயலிழந்து நின்றான். அவனையும் இறந்த அவனது மூதாதையரையும் பிறக்காத தலைமுறைகளையும் நெஞ்சுதுளைத்துக் கொன்று குருதிவழிய மண்ணில் பரப்பிப்போட்டுவிட்டு அந்த முதுசூதன் செல்வதுபோலப்பட்டது அவனுக்கு. மெல்லிய சிறு கழுத்தும், ஆடும் தலையும் கொண்ட வயோதிகன். அடுத்தவேளை உணவுக்கு காடுகளையும் மலைகளையும் தாண்டிச்செல்லவேண்டிய இரவலன். ஆனால் அளவற்ற அதிகாரம் கொண்டவன்.
மண்ணில் கால்விழும் ஓசை மட்டுமேயாக சூதர்கள் திரும்பிச்செல்வதை சால்வன் பார்த்துக்கொண்டிருந்தான். ஓடிப்போய் அவர்களின் புழுதிபடிந்த கால்களில் விழுந்து மன்றாடுவதைப்பற்றி எண்ணினான். ஆனால் அவர்கள் சொல்மீறுபவர்களல்ல. அவன் உடல்மேல் அவர்கள் நடந்துசெல்வார்கள். சென்று மறையும் சூதர்களை திகைத்து விரிந்த விழிகளுடன் நகரமக்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த வாத்தியங்களுக்குள் தங்கள் மூதாதையர் உறைவதுபோல. அவர்களும் இறுதியாக பிரிந்து செல்வதுபோல. இறுதி சூதனும் மன்றில் இருந்து வெளியேறியபோது சால்வன் பெருமூச்சுடன் தன் செங்கோலையும் உடைவாளையும் வீரர்களிடம் கொடுத்துவிட்டு தளர்ந்த காலடிகளை எடுத்து வைத்து மேடையில் இருந்து இறங்கினான்.
அப்போது கூட்டத்திலிருந்து ஒரு பெண்குரல் கல் போல அவன் மேல் வந்து விழுந்தது. கரிய உடலும் புல்நார் ஆடையும் அணிந்த முதிய உழத்தி ஒருத்தி எழுந்து வெண்பற்கள் வெறுப்புடன் விரிந்து திறந்திருக்க, இடுங்கிய கண்களில் இருந்து கண்ணீர் வழிய, அவிழ்ந்து தோளில் தொங்கிய தலைமயிர் காற்றிலாட, கைநீட்டி கூச்சலிட்டாள். “எங்கள் வயல்களின்மேல் உப்புபோல உன் தீவினை பரந்துவிட்டதே… உன்குலம் அழியட்டும்! உன் நாவில் சொல்லும் கையில் திருவும் தோளில் மறமும் திகழாது போகட்டும்! நீ வேருடனும் கிளையுடனும் அழிக! உன் நிழல்பட்ட அனைத்தும் விஷம்பட்ட மண்போல பட்டுப்போகட்டும்!”
சால்வன் கால்கள் நடுங்கி நிற்கமுடியாமல் தளபதியை பற்றிக்கொண்டான். அத்தளபதியின் கையிலிருந்த வெண்குடை சமநிலைகெட்டுச் சரிய அதை அமைச்சர் பிடித்துக்கொண்டார். அனைவருமே நடுங்குவதுபோலத் தோன்றியது. கிழவி குனிந்து ஒருபிடி மண்ணை அள்ளி தூற்றிவிட்டு ஆங்காரமாக “ஒழிக உன் நாடு…! எங்கள் மூதாதையரைத் துரத்திய உன் செங்கோலில் மூதேவி வந்து அமரட்டும்!” என்று கூவியபடி நடந்து நகருக்கு வெளியே செல்லும் பாதையில் சென்றாள். அவள்பின்னால் அவள் குலமே சென்றது.
அன்று முதல் சௌபநாட்டிலிருந்து குடிமக்கள் வெளியேறத் தொடங்கினர். குடிமக்களனைவருக்கும் களஞ்சியத்தில் இருந்து பொன்னும் மணியுமாக அள்ளிக்கொடுத்தான் சால்வன். ஊர்மன்றுகள் தோறும் விருந்தும் களியாட்டமும் ஒருங்குசெய்தான். ஒவ்வொரு குலமாக அமைச்சர்களை அனுப்பி மன்றாடினான். ஆயினும் மக்கள் சென்றுகொண்டே இருந்தனர். பதினெட்டாம் நாள் கங்கையிலிருந்து சுமையிறக்கும் யானைகள் இரண்டு மிரண்டு கூவியபடி நகருக்குள் புகுந்து துதிக்கை சுழற்றி தெருக்களில் ஓடின. அவற்றை அடக்கமுயல்கையில் ஒரு யானை வேல்பட்டு மண்ணதிர விழுந்து துடித்து இறந்தது. அதன்பின் மக்கள் விலகிச்செல்லும் வேகம் மேலும் அதிகரித்தது.
VENMURASU_EPI_27 RAIBOW_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
இன்று சௌபநகரில் இருப்பவர்கள் போகிகளும் குடிகாரர்களும் விடர்களும்தான் என்றார் சூதர். மக்கள் நீங்கிய இடங்களிலெல்லாம் வேளாண்நிலத்தில் எருக்கு முளைப்பது போல வீணர் குடியேறினர். மனம் தளர்ந்த மன்னனை மதுவருந்தவைத்து போகியாக்கிய அமைச்சர் குணநாதர் ஆட்சியை தன் கைகளில் எடுத்துக்கொண்டார். சௌபநகரின் துறைகளில் இருந்து வணிகர்களின் சுங்கம் வந்துகொண்டிருந்ததனால் மன்னன் போகிகளுக்கு அள்ளிவழங்கினான். சௌபத்தின் தெருக்களில் எங்கும் வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்த பரத்தையர் நிறைந்தனர்.
“சௌபநாட்டுக் கோட்டை வாயிலை காலையில் திறந்த காவலர்கள் அழுதகண்ணீருடன் ஒரு பெண் நகர்விட்டு நீங்கிச்செல்வதைக் கண்டனர். அவளிடம் அவள் யார் என்று கேட்டனர். அவள் அவர்களைப் பார்க்கவில்லை. அவர்கள் நின்றதையே அறியவும் இல்லை. அவள் பாதைநுனியை அடைந்தபோது எழுந்த முதற்பொன்னொளியில் அவள் உடல் புதிய பொன்னென சுடர்விட்டதைக் கண்டதும் முதியகாவலன் கைகூப்பி “அன்னையே!” என்று கண்ணீருடன் கூவினான். சௌபமகள் சாவித்ரி என அவளை அவன் அறிந்தான்.
“சௌபத்தின் செல்வத்தின் அரசியான சாவித்ரி அந்நகரை உதறிச்சென்றபின் அந்நகரம் மீட்டப்படாத வீணைபோல புழுதிபடிந்தது” என்றார் சூதர். நகரின் கைவிடப்பட்ட வீடுகளிலும் கலப்பைவிழாத நிலங்களிலும் நாகங்கள் குடியேறின. கதவுகளைத் திறந்தால் நிழல்கள் நெளிந்தோடுவதுபோல அவை விலகின. இருட்டுக்குள் இருந்து மின்னும் கண்களும் சீறும் மூச்சும் மட்டும் வந்தன.
பீஷ்மர் பெருமூச்சுடன் “ஆம், வேதாளம் சேரும், வெள்ளெருக்கு பூக்கும். பாதாளமூலி படரும், சேடன் குடிபுகும்… அதுதான் சொல்லப்பட்டிருக்கிறது” என்றார். ஹரிசேனன் அவன் மனதில் எழுந்த எண்ணத்தை உடையில் பற்றும் தீயை அணைக்கும் வேகத்துடன் அடித்து அவித்தான். ஆனால் அதையே பீஷ்மர் கேட்டார். “அஸ்தினபுரியின் பரிசில்களைப்பெற சூதர்கள் வந்திருக்கிறீர்களே?”
“பிதாமகரே, மன்னன் முதற்றே அரசு. அஸ்தினபுரியின் செங்கோலை இன்று ஏந்தியிருப்பவன் சந்திரவம்சத்தின் மாமன்னர்களில் ஒருவன். அஸ்தினபுரியின் முதன்மை வீரன். அவன் மேல் அம்பைதேவி தீச்சொல்லிடவில்லை. அவனை வாழ்த்தியே அவள் வனம்புகுந்தாள். அறத்தில் அமைந்த கோல்கொண்டவன். ஆயிரம் முலைகளால் உணவூட்டும் அன்னைப்பெரும்பன்றி போன்ற கருணைகொண்டவன். அவனை சூதர்குலம் வணங்குகிறது. இந்தமண்ணும் இங்கு சொல்லும் உள்ளவரை சூதர்மொழி அவனை வாழ்த்தி நிற்கும். அவன் வாழ்க! அவன் செங்கோல் காத்துநிற்கும் இந்த மண் வாழ்க! விசித்திரவீரிய மாமன்னன் பாதங்களில் பணியும் எங்கள் வாத்தியங்களில் வெண்கலைநாயகி வந்தமர்ந்து அருள்புரிக!”
“ஆம்” என்றார் பீஷ்மர் தலையை அசைத்து. “மானுடரில் அவன் கண்களில் மட்டுமே நான் முழுமையான அச்சமின்மையை கண்டிருக்கிறேன்.” பெருமூச்சுடன் “போரும் படைக்கலமும் அறியாத மாவீரன் அவன்” என்றார். ஹரிசேனன் அவர் மேல் ஒரு கசப்பை உணர்ந்தான். அந்தச் சொற்கள் அரசமரபுச் சொற்கள் போல அவனுக்குத் தெரிந்தன. அந்த வெறுப்பை அவனே அஞ்சியதுபோல சூதரை நோக்கி பார்வையை திருப்பிக்கொண்டான்.
சூதரின் கண்கள் செருகின. அவரது வாயின் ஓரம் இழுபட்டு அதிர்ந்தது. ஓங்கியகுரலில், “என் சொற்களில் வந்தமரும் கன்னங்கரிய சிறுகுருவி எது? இதோ என் கிணைத்தோலில் ஒலிக்கும் நெடுந்தாளம் எது? அவன் பேரைச்சொல்லும்போது என் நெஞ்சில் மிதித்தோடும் பிங்கலநிறப்புரவி எது?” முன்னும் பின்னும் ஆடி தன்னுள் ஆழ்ந்து விழித்த கண்களுடன் அவர் முனகிக்கொண்டார்.
பின்பு ஏதோ ஒரு கணத்தில் அவர் கைவிரல்கள் கிணைத்தோலில் வெறிநடனமிட்டன. பெருங்குரலில் “இதோ விண்ணகத்தில் அவன் யானைமேல் சென்றிறங்குகிறான். அவனை வெண்ணிற ஐராவதமேறி வந்து இந்திரன் வரவேற்கிறான். மாமுனிவர்களும் தேவர்களும் கூடி அவனை வாழ்த்தி குரல்கொடுக்கிறார்கள். இந்திரவில் ஏழொளியுடன் கீழ்வானில் எழுந்திருக்கிறது. மண்ணில் இந்திர வீரியம் வானகத்தின் பொற்தூரிகைபோலப் படர்ந்து அவன் புகழை எழுதிச்செல்கிறது” என்றார்.
பீஷ்மர் திடுக்கிட்டு எழுந்துவிட்டார். ஹரிசேனன் பதற்றத்துடன் சூதரைப்பார்த்தான். அவரைத்தடுத்து என்ன சொல்கிறார் என்று கேட்கவேண்டுமென எண்ணினான். ஆனால் அவர் எங்கிருந்தோ எங்கோ பறந்து செல்லும் யட்சன் போலிருந்தார். “அழியாப்புகழுடைய தன் மைந்தன் வந்ததைக் கண்டு சந்திரன் வெண்ணொளிக் கலையணிந்து வந்து கைநீட்டி அணைத்துக்கொண்டான். அதோ வெண்தாடி பறக்க கைவிரித்து கண்ணீருடன் வருபவன் ஆதிமூதாதை புரூரவஸ் அல்லவா? பேரன்புடன் சிரித்து எதிர்கொள்பவன் ஆயுஷ் அல்லவா? நகுஷன் அல்லவா அவனருகே நின்று புன்னகைக்கிறான்? மைந்தன் புருவை அணைத்து நின்றிருப்பவன் யயாதி அல்லவா?”
கிணை துடியாக மாறிவிட்டதுபோல தாளம் வெறிகொண்டது. “ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு ஆகியோர் வந்தார்கள்! பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன் ஆகியோர் வந்தார்கள்! பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்‌ஷத்ரன் ஆகியோர் வந்தார்கள்! மூதாதையர் அனைவரும் வந்து நிற்கும் வான்வெளியில் இறங்கினான் அஸ்தினபுரியின் அறச்செல்வன்! வாழ்க அவன் புகழ்!
“அய்யோ, மாமன்னன் ஹஸ்தியல்லவா அவனைத் தழுவுகிறான். அந்த வலியபெருங்கரங்களில் இறுகிநெளிந்து யானைபுஜங்களில் முகம் சேர்க்கிறானே அவனல்லவா இந்நாட்டின் அழியா மணிமுத்து! வீரத்தால் வென்றவருண்டு, மதியுரத்தால் வென்றவருண்டு, நட்பால் வென்றவருண்டு, குலத்தால் வென்றவருண்டு. பெருங்கனிவால் வென்றவன் புகழ்பாடுக! சூதர்குலமே, இம்மாநகரம் அளித்த ஒவ்வொரு மணி தானியத்தையும் மாமன்னன் விசித்திரவீரியனின் புகழாக்குக!
“அஜமீடனை, ருக்‌ஷனை, சம்வரணனை, குருவை அமரர்களாக்கிய பேரன்புச்செல்வனை வணங்குக கையே! ஜஹ்னுவை, சுரதனை, விடூரதனை, சார்வபௌமனை, ஜயத்சேனனை ஒளிகொள்ள வைத்தவனைப் பாடுக நாவே! ரவ்யயனை, பாவுகனை, சக்ரோத்ததனை, தேவாதிதியை, ருக்‌ஷனை அமரருலகில் நிறுத்திய மாமன்னனைப் பணிக என் சிரமே! சூதர்களே மாகதர்களே, இன்று இதோ நம் சிறுசெந்நாவால் அவன் புகழ்பாடும் பேறு பெற்றோம். கைகூப்பி அவன் கைபற்றும் பிரதீபனை, கண்ணீரால் அவன் உடல்நனைக்கும் சந்தனுவைக் கண்டோம். அவனை சிறுகுழந்தையாக்கி மீண்டும் முலையூட்ட வந்து நின்ற மூதன்னையர் வரிசையைக் கண்டோம். சூதரே, இனிது நம் பிறவி! சூதரே இனிதினிது நம் சொற்கள்!
“பாரதமே பாடுக! இன்று வைகானச சுக்லபட்சம் இரண்டாம்நாள். இனியிந்தக் காற்றில் எத்தனை காலங்கள் அலையடிக்கும்! இனியிந்த மண்ணில் எத்தனை தலைமுறைகள் முளைத்தெழும்! இனியிந்த மொழியில் எத்தனை கதைகள் சிறகடிக்கும்! இன்று இதோ நடுகின்றோம் அஸ்தினபுரியின் மாமன்னன் புகழை. அது வளர்க! இன்றிதோ கொளுத்துகிறோம் சந்தனுவின் மைந்தனின் பெயரை. அது எரிக! இன்றிதோ ஏற்றுகிறோம் சந்திரவம்சத்து விசித்திரவீரியனின் பெரும்புகழ்க்கொடியை. அது எழுக! ஓம் ஓம் ஒம்!”
விண்ணில் ஓடும் வானூர்தியிலிருந்து தூக்கிவீசபட்ட யட்சன் போல சூதர் மண்ணில் குப்புற விழுந்தார். தன் கிணைப்பறை மேலேயே விழுந்து மெல்லத் துடித்து கைகால்கள் வலித்துக்கொண்டு வாயில் நுரைக்கோழை வழிய கழுத்துத்தசைகள் அதிர கண்ணீர் வடிய ஏதோ முனகினார். சூதர்கள் தங்களுக்குள் பேசும் ஆதிமொழியில் அவரிடமிருந்து பொருளறியாச் சொற்கள் வந்தபடி இருந்தன. விறலி அவரை மெல்லத்தூக்கி அமரச்செய்து நீர்புகட்டினாள்.
பீஷ்மர் எழுந்து விரைந்து நடந்து தன் குடில்நோக்கிச் சென்றார். ஹரிசேனன் பின்னால் ஓடினான் “என்ன சொல்கிறார் சூதர்?” என்றான். பீஷ்மர் “அவர் சொல்வது உண்மை. அவரில் வாக்தேவி வந்து சொன்னவை அவை. அவர் சொன்ன அக்கணத்தில் விசித்திரவீரிய மாமன்னன் மண்நீங்கியிருக்கிறார்.” “அப்படியென்றால் ஏன் காஞ்சனம் ஒலிக்கவில்லை? பெருமுரசம் முழங்கவில்லை?”
“தெரியவில்லை… காஞ்சனத்தின் நாவும் பெருமுரசின் கோலும் பேரரசியின் ஆணைக்குக் கட்டுப்பட்டவை அல்லவா?” என்றார் பீஷ்மர். “ஹரிசேனா, நீ அந்த தோதகத்தி மரத்தின்மேல் ஏறிப்பார். அவர் சொன்னதுபோல அஸ்தினபுரிக்குமேல் மென்மழையும் விண்வில்லும் இருக்கின்றனவா என்று கண்டு சொல்!”
ஹரிசேனன் “இப்போது இரவு…” என்றபின் அவர் பார்வையை கவனித்து மரத்தில் பரபரவென்று தொற்றி மேலேறினான். பீஷ்மர் கீழே நின்றார். ஹரிசேனன் மேலிருந்து ‘ஆ!’ என்று வியப்பொலி எழுப்பினான். “என்ன?” என்றார் பீஷ்மர்.
“அங்கே அரண்மனை முகடுகளுக்குமேல் வானத்தில் மெல்லிய வெண்ணிற ஒளி நிறைந்திருக்கிறது. அதனருகே இந்திரவில் வண்ணம் கலைந்துகொண்டிருக்கிறது.” ஹரிசேனன் கண்ணீருடன் உடைந்து. “மென்மழைபெய்கிறது பிதாமகரே… மாளிகைமுகடுகள் பளபளக்கின்றன” என்றான். கீழே விழுந்துவிடுவான் என்று தோன்றியது. கைகளால் மரத்தை இறுகப்பற்றிக்கொண்டு நடுங்கும் உடலுடன் மேலேயே இருந்தான்.
பின்பு கீழே பார்த்தபோது பீஷ்மர் நடந்து செல்வதைக் கண்டான். இறங்கி வந்து அவர் பின்னால் சென்றான் ஹரிசேனன். தாராவாஹினிக்கரையில் பீஷ்மர் சென்று நின்றார். இருபக்கமும் அகன்ற மணல்வெளி கொண்ட ஆற்றின் மீது அசைவில்லாததுபோலக் கிடந்த கரிய நீரில் விண்மீன்கள் பிரதிபலித்திருந்தன. கைகளைக் கட்டியபடி அவற்றைப் பார்ப்பவர் போலவோ பார்வையற்றவர் போலவோ பீஷ்மர் நின்றிருந்தார்.

நூல் ஐந்து : மணிச்சங்கம்[ 5 ]

நூல் ஐந்து : மணிச்சங்கம்[ 5 ]
விசித்திரவீரியன் வருவதற்காக இளஞ்செந்நிற மஞ்சத்தில் காத்திருந்தபோது அம்பிகை சொற்களால் நிறைந்திருந்தாள். அவனிடம் நேற்றிரவெல்லாம் பேசிப்பேசி புலரியைக் கண்டபின்னும் மறுநாளைக்குள் மும்மடங்கு பேசுவதற்கு எப்படி சொற்கள் சேர்ந்துவிட்டன என்று அவளுக்குப் புரியவில்லை. முந்தையநாள் இரவு தொண்டை உலர்ந்து குரல் கம்மியதும் எழுந்து நீர் அருந்துவதற்குள்ளேயே சொற்கள் நிறைந்து தளும்பத்தொடங்கிவிட்டன. “ஏனென்றால் நீ சொல்வதையெல்லாம் நானும் உன்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன், நீ உன் மனதால் அவற்றைக் கேட்கிறாய்” என்றான் விசித்திரவீரியன்.
பேச்சுநடுவே நிறுத்திக்கொண்டு “உண்மையிலேயே நான் பேசுவதிலிருந்து உங்கள் மனம் விலகவில்லையா? இல்லை கண்களால் நடிக்கிறீர்களா?” என்று கேட்டாள். விசித்திரவீரியன் புன்னகையுடன் “உன்னிடமல்ல, எவரிடமும் நான் இப்படித்தான் முழுமையாகத் திறந்துகொண்டு கேட்கிறேன்” என்றான். “வியப்புதான்…ஆண்களுக்கு பெண்கள் பேசுவதெல்லாம் பொருளற்ற சிறுமைகள் என்று படும் என கேட்டிருக்கிறேன்” என்றாள். “பெண்களுக்கும் ஆண்களின் பெரியவை எல்லாம் கூழாங்கற்களாகத்தானே தெரியும்?” என்றான் விசித்திரவீர்யன். கையால் வாய் பொத்தி “ஆம்” என அவள் நகைத்தாள்.
விசித்திரவீரியன் அவள் முகத்தை நோக்கி “உனக்கு ஒன்று தெரியுமா? உண்மையில் மனிதர்களுக்கு பிறர் பேசும் அனைத்தும் பொருளற்றவையாகவே தெரிகின்றன” என்றான். “பிறர் பேச்சில் அவர்கள் தன்னை மட்டுமே காண்கிறார்கள். தான் இடம்பெறாத பேச்சைக்கேட்டால் ஒன்று விலகிக்கொள்வார்கள். இல்லையேல் அதற்குள் தன்னை செலுத்த முயல்வார்கள்.”
அம்பிகை வியப்புடன் “ஆம்” என்றாள். அவனருகே சரிந்து, “நீங்கள் ஏன் அப்படி இல்லை?” விசித்திரவீரியன் “நானா? நான் அப்படி பிறர்முன் வைக்க ஒரு விசித்திரவீரியனை உருவாக்கிக்கொள்ளவில்லை. அதற்கான நேரமே எனக்கிருக்கவில்லை. நான் காட்டிலிருக்கும் சிறிய தடாகம். காற்றையும் நிழல்களையும் கவனிப்பவன். அவை இல்லாதபோது வானை” என்றான் .
அவனை நினைத்தபோது ஏன் உள்ளம் துள்ளுகிறது என அவளுக்குப் புரியவில்லை. அவள் தனக்குள் கற்பனை செய்திருந்த ஆணே அல்ல. ஆனால் அவனைப்போல அவளுக்குள் இடம்பெற்ற ஓர் ஆணும் இல்லை. ஆணிடமல்ல, இன்னொரு மனித உயிரிடம்கூட அத்தனை நெருக்கம் தன்னுள் உருவாகுமென அவள் நினைத்திருக்கவில்லை. ஆடைகளைக் கழற்றிவிட்டு அருவிக்குக் கீழே நிற்பவள்போல அவன் முன் நின்றிருந்தாள்.
விசித்திரவீரியன் வந்தபோது அவன் முற்றிலும் இன்னொருவன் போலிருந்தான். நடையில் ஒரு நிமிர்வும் துள்ளலும் இருப்பதுபோலத் தோன்றியது. உடைகள் சற்றுக் கலைந்தும் புழுதியுடனும் இருந்தன. “பயணத்தில் இருந்தா வருகிறீர்கள்?” என்று அம்பிகை கேட்டாள். “ஆம், ஒரு கேள்விக்கு விடைதேடிச் சென்றேன், கிடைத்தது” என்றான்.
அவள் மலர்ந்த முகத்துடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். “என்ன?” என்றான். அவள் விழிவிரிய நோக்கியபடி இல்லை என தலையசைத்தாள். “சொல்” என்று அவள் தலையைத் தட்டினான். அவள் தலையைப் பிடித்துக்கொண்டு “சென்ற இடத்தில் ஏதோ கந்தர்வன் வந்து அருளியிருக்கிறான் போலிருக்கிறதே?” என்றாள்.
“ஏன்?” என மீண்டும் கேட்டான். “அழகாக இருக்கிறீர்கள்…” சிரித்துக்கொண்டு விசித்திரவீரியன் வந்து அவளருகே அமர்ந்தான். அம்பிகை சிவந்த முகத்துடன் “உண்மை, என் ஆன்மாவிலிருந்து சொல்கிறேன். பார்க்கப்பார்க்க பேரழகாகத் தெரிகிறீர்கள்….மனிதனைப்போலவே இல்லை” என்றாள்.
விசித்திரவீரியன் சிரித்து “காதல் விழிகளால் உருவாக்கப்படுவது அழகு என்று சொல்வார்கள்” என்றான். “ஆம், நான் காதல்கொண்டுவிட்டேன்…அது எனக்கு நன்றாகவே தெரிகிறது” என்றாள் அம்பிகை. “கண்விழித்து எழுந்த முதல் எண்ணமே உங்களைப்பற்றித்தான். வேறெந்த எண்ணமும் அற்பமானவையாகத் தெரிகிறது. எதிலும் நினைவு நிற்கவேயில்லை…”
விசித்திரவீரியன் சால்வையை இருக்கையில் போட்டான். “திரும்பத்திரும்ப ஒரே சந்தர்ப்பங்கள்தான்… அந்த முதற்பெரும் வியாசனுக்கு புதியகதைகளே வருவதில்லை” என்றான். அம்பிகை “ஆம், சூதர்கள் இதையே மீண்டும் மீண்டும் பாடுவார்கள். பதினாறு வருடங்களாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இன்று அவை புத்தம் புதியவை, என்னைப்பற்றி மட்டுமே பாடுபவை என்று தோன்றுகின்றன…” என்றாள்.
அவன் மஞ்சத்தில் அமர்ந்தான். அவள் அவனருகே அமர்ந்து அவன் கைகளைப் பற்றிக்கொண்டு, “இதையெல்லாம் எவரிடமாவது சொல்லவேண்டுமென்று நினைத்தேன். அம்பாலிகையிடம் சொல்லமுடியாது… அவளும் என் சகபத்தினி என நினைத்தாலே என் உடல் எரிகிறது… அந்த சூதப்பெண் சிவையையும் நான் சேர்க்கமாட்டேன். எந்தப்பெண்ணிடமும் உங்களைப்பற்றிச் சொன்னால் காதல் கொண்டுவிடுவாள்… ஆகவே சூதருடன் வந்த விறலியிடம் சொன்னேன். அவள் பெயர் சோணை. நன்றகாக் கனிந்த முதியவள். சிரிக்கும்போது கங்கையில் நீரலைகள் போல முகம் மலர்வதைக் கண்டேன்.”
“என்ன சொன்னாய் அவளிடம்?” என்றான் விசித்திரவீரியன். “எல்லாவற்றையும்… அவளைப்பார்த்தால் முன்னரே அனைத்தையும் அறிந்தவள் போலிருக்கிறாள்” என்றாள் அம்பிகை. “அவளிடம் சொன்னேன், நான் பீஷ்மரை நினைத்ததைப்பற்றி…”
விசித்திரவீரியன் சிரித்தான். “அதற்கு அந்த முதுவிறலி, இப்போது அவரை நினைத்தால் அருவருப்பாக இருக்குமே என்றாள். நான் ஆம் என்றேன். இறைவனின் சன்னிதியில் தலைப்பாகையும் வாளுமாக வந்து நிற்பவர் போலிருக்கிறார்…” அம்பிகை அச்சொற்களை இயல்பாக வந்தடைந்தாள். “நிமிர்ந்து தருக்கி நிற்கும் மனிதனைப்போல பொருளற்றவன் வேறில்லை” என்றாள்.
விசித்திரவீரியன் “சிலசமயம் குழந்தைகளும் பேருண்மைகளை சொல்லிவிடுகின்றன” என்றான். “நான் அதை வேறுவகையில் நினைத்துக்கொண்டேன். நான் பொறுப்பேற்கிறேன் என்று சொல்லும் மனிதனைப்போல பரிதாபத்துக்குரியவன் வேறில்லை. அவனைப்போன்ற மூடனும் இல்லை.” நன்றாக மல்லாந்துகொண்டு “ஆனால் எப்போதும் மாமனிதர்கள்தான் அப்படி நினைக்கிறார்கள். பேரறிஞர்கள்தான் அவ்வாறு நிற்கிறார்கள். அவ்வாறு எவரோ பொறுப்பேற்றுக் கொள்ளாமல் மானுடம் வாழவும் முடிவதில்லை.”
அம்பிகை “இதைப்பார்த்தீர்களா?” என்றாள். நீர்த்துளிபோல ஒரு வைரம் அவள் கழுத்திலிருந்த சங்கிலியில் தொங்கி மார்புகள் நடுவே இருந்தது. “ஒரே ஒரு நகைதான் அணிவேன் என்று சிவையிடம் சொன்னேன். அந்த ஒற்றை நகையில் அஸ்தினபுரியின் செல்வம் அனைத்தும் இருக்கவேண்டும். எந்த வண்ணம் என்று நாங்கள் பேசிக்கொண்டோம். அம்பாலிகை வெண்ணிறம் என்றாள். சிவை செந்நிறம் என்றாள். நான் நீலநிறத்தை எடுத்தேன். ஆனால் அதன்பின் இந்த நீர்த்துளிவைரத்தை எடுத்துக்கொண்டேன்.”
“கண்ணீர்த்துளி போலிருக்கிறது” என்றான்.  ”ஆம், மனம் நெகிழ்ந்து துளிக்கும் ஒற்றைத்துளி என்றுதான் எனக்கும் பட்டது…” உவகையுடன் சொன்னாள். “இதை நீளமான சங்கிலியில் கோர்த்துத் தரும்படி சொன்னேன். இது என் ஆடைக்குள்தான் இருக்கவேண்டும். வேறு எவரும் இதைப்பார்க்கலாகாது.”
26
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
விசித்திரவீரியன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். மலர்வனத்தில் சிக்கிய ஒற்றை வண்ணத்துப்பூச்சி போல அவள் ஒன்றிலும் அமராமல் படபடத்துப் பறந்துகொண்டிருந்தாள். “நான் எல்லாவற்றையும் சோணையிடம் சொன்னேன். உங்கள் உடல்நிலையைப்பற்றி…. அவள் எனக்கு சௌபநாட்டு சாவித்ரியின் ஒரு சிறிய சிலையைத் தந்தாள். தந்தத்தால் ஆன சிலை. அதை என் கையிலேயே வைத்திருக்கவேண்டும் என்றாள்” அம்பிகை தன் ஆடைக்குள் இருந்து அந்த சிறிய சிலையை எடுத்துக்காட்டினாள்.
“சாவித்ரியா?” என்றான் விசித்திரவீரியன். “சூதர்களின் பாட்டில் கேட்ட கதை…ஆனால் நினைவில் மீளவில்லை.” அம்பிகை பரபரப்புடன் “நான் சொல்கிறேன்” என்றாள். “சௌப நாடு அந்தக் காலத்தில் இரண்டு நாடுகளாகப் பிரிந்திருந்ததாம். இன்னொரு நாட்டின் பெயர் மத்ரவதிதேசம். அங்குதான் சாவித்ரி தேவி பிறந்தாள்” என்று உற்சாகமாக ஆரம்பித்தாள்.
மத்ரநாட்டை ஆண்ட அஸ்வபதி என்னும் மன்னனுக்கும் அவன் மனைவி மாலதிக்கும் மைந்தர்களில்லை. அறுபது வயதாகியும் அரியணைக்கு குழந்தைகளில்லாததனால் மன்னன் அத்தனை தெய்வங்களையும் வேண்டினான். அவனுடைய விதியை வெல்ல தெய்வங்களாலும் முடியவில்லை. அரசை அமைச்சர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவன் மாலதியுடன் காட்டுக்குச்சென்று அங்கே குடில்கட்டி மாடுகளை மேய்த்துக்கொண்டு வாழ்ந்தான். பசுக்களை மேய்த்து அதைமட்டும் கொண்டே வாழ்பவர்கள் முற்பிறவியின் பாவங்களைக் கழுவுகிறார்கள்.
காலையின் முதல்பொற்கதிர் அரைக்கணம்கூட மண்ணில் நிற்பதில்லை. ஆயிரம் வண்ணங்கள் கொண்ட சூரியனுக்கு ஒவ்வொரு வண்ணத்திலும் ஒரு பெயர், ஒரு தோற்றம். அவனுடைய ஒவ்வொரு பாவமும் ஒரு மகளாகப் பிறந்தன. பொன்வண்ணனாகிய சூரியனை சவிதா என்றனர் ரிஷிகள். அவனை காயத்ரியால் துதித்தனர். பொன்னிறமான சிந்தனைகளை மனதில் எழுப்பவேண்டுமென்று அவனிடம் பிரார்த்தனை செய்தனர். சவிதாவின் மகள் சாவித்ரி. அண்டவெளியில் உள்ள கோளங்களில் பூமியில் அவள் வாழ்வது அரைக்கணம் மட்டுமே. அந்தக்கணத்தில் அவளைப்பார்ப்பது எதுவானாலும் முழுமையடையும்.
ஒருநாள் காலை கணவன் எழுவதற்குள் எழுந்து சவிதம் என்ற அழகிய குளிர்ந்த தடாகத்தில் நீராடி அங்கே நின்ற தளிர்விட்ட மாமரத்தடியில் நின்று வணங்கிய மாலதி சாவித்ரியை கண்டாள். முளைவிட்ட புங்கமும், தளிர்விட்ட மாமரமும், பூவிட்ட கொன்றையும், காய்விட்ட செந்தென்னையும், கனிவிட்ட நெல்லியும், நெற்றான இலவமும் பொன்னிறத்தாளான சாவித்ரிக்கு பிரியமானவை. சாவித்ரி வந்து தொட்டதும் மாலதியின் உள்ளும் புறமும் ஒளியால் நிறைந்தன. மறுநாள் அவளறிந்தாள், அவளுக்குள் ஒரு கரு குடிகொண்டிருந்தது. அது பொன்னிறமான குழந்தையாகப் பிறந்ததும் அதற்கு சாவித்ரி என்று பெயரிட்டாள்.
கன்னிப்பருவமடைந்த சாவித்ரி பொன்னிறக்கூந்தலும் பொன்னிறக் கண்களும் கொண்டவளாக இருந்தாள். ஒளியைப்போலவே எங்கும் நிறைந்து பரவி தொட்டவற்றை எல்லாம் துலங்கச்செய்தாள். பொன்னிறக் குதிரைகளில் ஏறி காட்டில் அலைவதை அவள் விரும்பினாள். ஒருநாள் காட்டில் அவள் சத்யவானைக் கண்டாள். மெலிந்தவனாக துயருற்றவனாக இருந்த அவனை அவளுடைய தாய்மை அடையாளம் கண்டுகொண்டது. காயை கனியச்செய்யும் சூரியஒளிபோல அவள் அவனை அடைந்தாள்.
சௌபநாட்டு மன்னனாகிய தியமசேனரின் மகன் சத்யவான். தியமசேனர் முதுமையில் விழியிழந்தபோது அவரது தம்பியர் நாட்டைக் கைப்பற்றிக்கொண்டு அவரை காட்டுக்குத் துரத்தினர். காட்டில் வாழ்ந்த தியமசேனர் அங்கே சத்யவானை பெற்றெடுத்தார். வேட்டுவனைப்போலவே காட்டில் வளர்ந்த சத்யவானுக்கு அரசநெறியும் புராணங்களும் கலைகளும் தந்தையாலேயே கற்பிக்கப்பட்டன.
சத்யவானை சாவித்ரி ஒரு கொன்றை மரத்தடியில் சந்தித்தாள். கையில் கனிகளும் கிழங்குகளுமாக வந்த அவன் அவளைக் கண்டு திகைத்து நின்றான். அப்பகுதியே பொன்னொளி பெற்றதாகத் தோன்றியது. ஆணும் பெண்ணும் சந்திக்கும் தருணங்களை உருவாக்கும்போது பிரம்மன் மகிழ்ந்து தனக்குள் புன்னகை செய்துகொள்கிறான். அவன் அவளிடம் ஒரு சொல்லும் சொல்லாமல் திரும்பிச் சென்றுவிட்டான். அந்தக் கொன்றை காற்றிலாடி அவள்மேல் மலர்களைக் கொட்டியது. அவள் அவனைத் தொடர்ந்துசென்று அவன் யார் என்று கண்டுகொண்டாள்.
தியமசேனர் அவளுடைய குரலைக் கேட்டதுமே அவள் காதலை புரிந்துகொண்டார். சத்யவான் அவளுக்கேற்ற மணமகனல்ல என்றார். அவன் பிறந்ததுமே நீலம்பாரித்து உதடுகள் கறுத்து அசைவற்றுக்கிடந்தான். மருத்துவச்சி அவனைத்தூக்கி குலுக்கியபோதுதான் அழத்தொடங்கினான். அவனால் மரம் ஏறவோ விரைந்து ஓடவோ முடியாது என்பதை இளமையிலேயே கண்டு அவர் ஒரு மருத்துவரிடம் காட்டினார். மனிதனுக்குள் ஒரு புரவி இருக்கிறது என்றார் அந்த மருத்துவர். அதன் குளம்படிகளைக் கொண்டே மருத்துவர் நாடி பார்க்கிறார்கள். சத்யவானின் குதிரைக்கு மூன்றுகால்களே இருந்தன.
“இன்னும் ஒருவருடம்கூட அவன் உயிர்வாழமுடியாது பெண்ணே… அவனை நீ மறந்துவிடுவதே உன் குலத்துக்கு நல்லது” என்றார் தியமசேனர். ஆனால் “எது ஒன்றுக்காக உயிரைக் கொடுக்கமுடியுமோ அதற்காக மட்டுமே வாழ்வதே வாழ்க்கையின் இன்பம்” என்று சாவித்ரி சொன்னாள். அன்னையும் தந்தையும் குலகுருவும் சொன்னதை அவள் பொருட்படுத்தவில்லை. தியமசேனர் விலக்கியதை கருத்தில் கொள்ளவில்லை. சத்யவான் அஞ்சி விலகியதையும் எண்ணவில்லை. “நான் உன்னை விதவையாக்கிவிடுவேன் தேவி” என்றான் அவன். “அதற்குமுன் காதலால் என்னை மாமங்கலையாக்குவீர்கள்… அதுபோதும்” என்று அவள் சொன்னாள்.
கன்னியருக்கே உரிய மழலையில் விட்டு விட்டு சாவித்ரியின் கதையை சொல்லிக்கொண்டிருந்த அம்பிகை அந்த வரியைச் சொன்னபோது தொண்டை இடறி முகம் தாழ்த்திக்கொண்டாள். விசித்திரவீரியன் அவளைப்பார்த்தபடி பேசாமல் அமர்ந்திருந்தான். அவள் தன்கண்களை விரலால் அழுத்த விரலிடுக்குகள் வழியாக கண்ணீர் கசிந்தது.
பின்பு விடுபட்டு வெண்பற்கள் தெரிய புன்னகைசெய்து “நான் கதைகேட்டு அழுதேன்” என்றாள். “தெரிகிறது…” என்றான் விசித்திரவீரியன். “நீயே ஒரு விறலியைப்போல கதை சொல்கிறாய்.” அம்பிகை புன்னகைசெய்து “இல்லை…நான் விறலி சொன்னதை நினைத்துக்கொள்கிறேன்….என்னால் சொல்லவே முடியவில்லை” என்றாள். “நான் விறலியையும் அவள் கதையைக் கேட்ட உன்னையும் சேர்த்தே கேட்கிறேன். சொல்” என்றான் விசித்திரவீரியன்.
சாவித்ரி சத்யவானை மணம்புரிந்துகொண்டாள். மத்ரநாட்டு இளவரசி கணவனுக்காக அந்த வனத்தில் வந்து விறகுவெட்டி வாழ ஆரம்பித்தாள். அவன் அறிந்த காட்டை அவள் பொன்னொளியால் நிறைத்தாள். அவள் தொட்டதும் வேங்கையும் கொன்றையும் கொங்கும் மருதமும் பூத்து மலர் பொழிந்தன. அவள் கால்பட்டதும் நீரோடைகள் பொன்னிற சர்ப்பங்கள்போல நெளிந்தன. அவள் விழிபார்த்ததும் கருங்குருவிகள் பொன்னிறச்சிறகுகள் பெற்றன. அவளுக்கு சேவை செய்வதற்காக அப்ஸரஸ்கள் பொன்வண்டுகளாக மாறி காட்டுக்குள் நிறைந்தனர்.
ஒருவருடம் கழித்து ஒருநாள் அவர்கள் காட்டில் இருக்கும்போது சத்யவான் படுத்திருந்த மரத்தின் அடியில் காது அடிபடும் ஒலியும் மூச்சொலியும் கேட்டு அவள் எழுந்து பார்த்தபோது அங்கே ஒரு காட்டெருமை நின்றிருந்ததைக் கண்டாள். அதன் பச்சைநிறமான ஒளிவிடும் கண்கள் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தன. மெலிந்து வெளிறி பச்சைநரம்புகள் புடைத்த கழுத்தும் தோள்களுமாக, வாய்திறந்து மூச்சுவாங்கியபடி கிடந்த சத்யவானின் மூச்சு சீரடைவதையும் அவன் முகம் பொலிவுகொள்வதையும் கண்டாள். அவள் பார்த்திருக்கவே அவன் அழகும் இளமையும் ஒளியும் கொண்டவனானான். அவனிடம் அவள் எப்போதும் கண்டிராத வேகத்துடன் துள்ளி எழுந்து சிரித்தபடி அந்த காட்டெருமைமேல் ஏறிக்கொண்டான்.
பாய்ந்துசென்று சாவித்ரி அவனைத் தடுத்தாள். இருகைகளையும் விரித்து “எங்கே செல்கிறீர்கள்? என்னை விட்டுவிட்டுச் செல்கிறீர்களா?” ஏன்று கூவினாள். ஆனால் அவளை அவன் காணவே இல்லை. அவன் கண்கள் ஒளிபட்ட நீர்த்துளிகள் போல மின்னின. சிரித்தபடி “செல்க! செல்க!” என்று அவன் அந்த காட்டெருமையை ஊக்கினான். அது பாய்ந்து புதர்களைத் தாண்டி சேற்றுவெளியை மிதித்துக்கொண்டு காட்டுக்குள் சென்றது. சாவித்ரி அதன் வாலை இறுகப்பற்றிக்கொண்டாள். அவள் உடலில் முட்கள் கீறி குருதிவழிந்தபோதும், அவள் தலை பாறைகளில் மோதி சிராய்த்தபோதும் அந்தப்பிடியை அவள் விடவில்லை.
அந்த எருமை ஒரு கரிய மனிதனின் முன் சென்று நின்றது. கையில் இரும்பு உழலைத்தடியும் கயிறுமாக நின்ற அவன் காட்டெருமையை பிடித்து நிறுத்தினான். சத்யவானை சிரித்தமுகத்துடன் தழுவிக்கொண்டு திரும்பியபோதுதான் அவளைக் கண்டான். “பெண்ணே நீ யார்?” என்று கேட்டான். “மத்ரநாட்டு இளவரசியான என் பெயர் சாவித்ரி” என்றாள் அவள். “நீ இங்கே வரலாகாது. என்னைப்பார்ப்பதும் தகாது. விட்டுச்செல்” என்றான் அவன்.
“நான் என் கணவன் இன்றி செல்லமாட்டேன்” என்றாள் சாவித்ரி. “பெண்ணே, நீ அவனை இனி பெறமுடியாது. அவன் கண்களில் நீ படமாட்டாய். அவன் தன் வாழ்நாளை முடித்துக்கொண்டுவிட்டான். அவனை இறப்புலகுக்கு கொண்டுசெல்ல வந்திருக்கும் என்பெயர் காலன்” என்றான். “நான் எதையும் செவிகொள்ளமாட்டேன். கணவனை பின் தொடர்வது பெண்ணின் உரிமை” என்றாள் சாவித்ரி.
காலன் தன் பின்னால் ஓடிய கன்னங்கரிய நதியைக் காட்டி “இதன் பெயர் காலவதி…இந்த எருமை இதைத் தாண்டிச்செல்லப்போகிறது. இதற்குள் வைத்த இரும்புத்தடி அறுபட்டுத் தெறிக்கும் வேகம் கொண்டது. உடலுடன் எவரும் இதைத்தாண்டமுடியாது. விலகிச்செல்” என்றான்.
சாவித்ரி “என் கணவனை என்னுடன் அனுப்புங்கள். இல்லையேல் இதை நான் விடமாட்டேன்” என்றாள். “பெண்ணே இந்தப் பாதையில் செல்வது மட்டுமே பிரம்மனால் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. திரும்புவதற்கு எவருக்கும் அனுமதியில்லை” என்று காலன் பதில் சொன்னான். “நான் என் கணவனில்லாமல் திரும்பமாட்டேன்” என்றாள் சாவித்ரி.
காலன் “காலவதியை கடக்க வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம். நீ உன் வீடு, குலம், பெற்றோர், உலகம் அனைவரையும் துறப்பதாகச் சொல்லி இந்த மரத்திலிருந்து ஓர் இலையைப்பறித்து நீரில் போடு” என்றான். சாவித்ரி அக்கணமே ஓர் இலையைப்பறித்து தன்னுறுதி சொல்லி அதை அந்நீரில் விட்டாள். எருமை நீரில் பாய்ந்து நீந்தியது. அதனுடன் அவளும் சேர்ந்து அந்நதியைக் கடந்தாள்.
அப்பால் வாயு சுழித்தோடும் ஒரு நதி இருந்தது. அதனருகே நின்றிருந்த கரியமனிதன் அதன் பெயர் சிந்தாவதி என்றான். அவன் பெயர் யமன். பாறைகளை தூசாக மாற்றும் வேகம் கொண்டது அது. அதில் இறங்கி தாண்டவேண்டும் என்றால் அவள் தன் உயிரை தானே பிரியவேண்டும். சாவித்ரி அக்கணமே இலையொன்றைப்பறித்து சிந்தாவதியில் இட்டு அதைக்கடந்து சென்றாள்.
மூன்றாவது நதி நெருப்பு சுழித்து ஓடுவதாக இருந்தது. அனைத்தையும் ஆவியாக்கி வானத்தில் கரைக்கும் வேகம் கொண்டது அது. அதன்பெயர் பிரக்ஞாவதி. “அதில் நீ உன் குழந்தைகளை எல்லாம் வீசவேண்டும்” என்றான் அதனருகே நின்ற காவலனாகிய ரௌத்ரன். சாவித்ரி கணமும் நினையாமல் தனக்குப்பிறக்கவிருந்த அத்தனை குழந்தைகளையும் அந்நதியில் வீசி அதைக்கடந்தாள். அங்கே ஒரு கருநிற வாயில் இருந்தது. அதன் வாசல்கதவுகள் இருள்போன்ற திரையால் மூடப்பட்டிருந்தன. எருமை அந்தத் திரையை தாண்டிச்சென்றது.
அந்தத் திரைக்கு அப்பால் நீலநிறமான ஒரு பெருநகரம் இருந்தது. அங்கே ஒளியாலான வீதிகளுக்கு இருபக்கமும் மாடங்கள் நீலவானத்தின் நிறம் கொண்டிருந்தன. நீலநிறமான கல்பக மரங்கள் கொண்ட பூங்காக்களில் நீலத்தின் ஆயிரம் நிறவேறுபாடுகளால் ஆன பறவைகளும் பூச்சிகளும் பறந்தன. நீலக்கலைமான்கள் மிதந்தன. நீல எருதுகள் ஒழுகின. நீலயானைகள் மேகங்களாக தழுவி நின்றன. கருநீலத் தடாகங்களில் நீலம் ஒளிரும் மீன்கள் துள்ளின.
மனிதர்களை மண்ணில் காலூன்றச்செய்யும் தீமைகளேதும் இல்லாத அவ்வுலகில் இறகுகள்போல பறந்தலைந்த மனிதர்கள் அனைவருமே அழியா இளமையுடனும் கலையாத நிறைநிலையுடனும் இருந்தனர். அந்நகர் நடுவே அந்தரத்தில் மிதந்துநின்ற மாபெரும் மாளிகைக்குள் அவள் சென்றாள். அங்கே சபாமண்டபத்தில் பெரும் தராசு ஒன்றின் முள் என அமைக்கப்பட்டிருந்த பீடத்தில் சிம்மாசனத்தில் கரிய உருவம்கொண்ட பேரரசன் ஒருவன் அமர்ந்திருந்தான்.
சாவித்ரியிடம் அவன் “என் பெயர் தருமன். கோடானுகோடி கல்பங்களாக இங்கே எவரும் இவ்வாறு வந்ததில்லை பெண்ணே. துறந்தவர்களுக்கு நான் அடிமை என நூல்கள் சொல்லியும் எவரும் துறப்பதில்லை. ஞானத்தை விட, தவத்தைவிட பிரேமையே மகத்தானது என்று இன்று அறிந்தேன். என்ன வரம் வேண்டும் கேள்” என்றான். “முன்பொருநாள் நசிகேதனுக்கு நான் மெய்ஞானத்தை அளித்தேன். நீ விரும்பும் அனைத்தையும் என்னால் அளிக்கமுடியும்.”
“என் கணவனை திருப்பித்தாருங்கள்” என்று சாவித்ரி கேட்டாள். “வேறெதையும் நான் வேண்டவில்லை.” “பெண்ணே அறவுலகின் வாயிலை நீ தாண்டிச்சென்றால் பிரம்மாவை மீறிச்செல்கிறாய். அழியா நரகில் நீ விழவேண்டியிருக்கும்” என்றான் தருமன். “அழியாநரகத்தில் நான் உழல்கிறேன், என் கணவனை மட்டும் அளியுங்கள்” என்றாள் சாவித்ரி. அவள் பிரேமையைக் கண்ட தருமன் சாவித்ரிக்கு அவள் தந்தையையும் நாட்டையும் கணவனையும் குலவரிசையையும் அளித்து வணங்கி அறவுலகின் வாயில்வரை வந்து வழியனுப்பினான்.
தன் கையைக் காட்டி அம்பிகை சொன்னாள் “இந்த பொற்சரடை விறலி என் கையில் கட்டினாள். வரலட்சுமியாகிய சாவித்ரியை வணங்கி நோன்பிருந்தால் மங்கலம் மறையாது என்றாள். நான் நோன்புகொள்ள உறுதிபூண்டு இதை கட்டிக்கொண்டேன்.” விசித்திரவீரியன் புன்னகையுடன் அவளுடைய முகத்தைப் பார்த்தான். சிறிய நாசி, சிறிய உதடுகள். குழந்தைக்கன்னங்களில் பருவத்தின் சிறிய பருக்கள். நெற்றியில் சுருண்டு காற்றிலாடிய மென்கூந்தல்சுருள்கள். விரிந்த கரிய கண்களுக்கு பேரழகை அளித்த பேதைமை.
“என்ன புன்னகை?” என்று  கேட்டாள். “இல்லை. வளையைவிட்டு வெளியே வரும் குழிமுயல் போலிருக்கிறாய். கன்னியாக வந்து பூங்காவில் உலவுகிறாய். ஆனால் உன் காதுகள் எச்சரிக்கையாக உள்ளன. சிறிய ஆபத்து என்றாலும் ஓடிச்சென்று உன் குழந்தைமைக்குள் பதுங்கிக்கொள்கிறாய்.” புரியாமல் “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள். “ஒன்றுமில்லை” என்றான். பின்பு மெல்ல அவளை அணைத்து தன் கைகளில் எடுத்துக்கொண்டான்.
அவன் கைகள் வழியாக அவள் தன்னுடலை கண்டுகொண்டாள். அவன் உடல் வழியாக தன் உடலுக்குள் புகுந்து நோக்கினாள். மூச்சுவாங்கும் குரலில் விசித்திரவீரியன் அவள் காதுக்குள் கேட்டான் “தலைமுறைகளாக நம் மனைவியர் சாவித்ரிநோன்பு கொள்கிறார்களே. அவர்களெல்லாம் எதை விட மறுக்கிறார்கள்?” அவள் அவ்வினாவை அக்கணமே சால்வையென நழுவவிட்டு ஆயிரம்காதவேகம் கொண்ட அந்த ரதத்தில் சென்றுகொண்டிருந்தாள். பின்பு ரதம் மலையுச்சியில் இருந்து வானில் எழுந்தது.
மெல்ல அது தரையில் இறங்கி செம்புழுதி கனத்துக்கிடந்த மென்பாதையில் ஓசையின்று உருளத்தொடங்கியதும் அவள் அந்த வினாவை நினைவுகூர்ந்தாள். வெண்ணிறவெளியில் அலையும்போதும் அவள் எண்ணிக்கொண்டது தன் குழந்தையைப் பற்றிதான். ஒருபோதும் தன்னால் பிரக்ஞாவதியை தாண்டமுடியாதென்று அறிந்தாள்.
மூச்சுவாங்கும் குரலில் “குழந்தையை விட்டுவிடமுடியுமா என்ன?” என்றாள். தானும் மூச்சுவாங்க “ஆம்… விட்டுவிடவும்கூடாது” என்றான் விசித்திரவீரியன். அவன் தொண்டையின் இருபக்கமும் இரு நரம்புகள் புடைத்து அசைவதுபோலத் தெரிந்தது. “குழந்தைதான் கணவனை சாகாமல் வைத்திருக்க எளிய வழி என எல்லா பெண்களுக்கும் தெரியும்” அவன் திணறியபடிச் சொல்லி வியர்வையுடன் மல்லாந்தான்.
“ஏன் இப்படி வியர்க்கிறது உங்களுக்கு?” என்றாள் அம்பிகை. ‘குடிநீர்’ என்று அவன் நெஞ்சைப்பற்றிக்கொண்டு சுட்டிக்காட்டினான். அவள் தன் ஆடையை மார்பில் அழுத்திப்பற்றியபடி எழுந்து நீர் இருந்த மண்குடத்தை அணுகி நீர் எடுத்து திரும்பியபோது அவன் கோணலாக விரிந்து கிடப்பதைக் கண்டாள். குரல்வளை புடைத்து எழ முகம் அண்ணாந்து மூக்கின் துளைகள் பெரிதாகத் தெரிந்தன. கைகள் விரிந்து விரல்கள் அதிர்ந்துகொண்டிருக்க இரு பாதங்களும் கோணலாக விரிந்திருந்தன.
அம்பிகை எழுந்தோடி அகல்சுடரைத் தூண்டி திரும்பிப்பார்த்தாள். நீலநரம்புகள் புடைத்தெழுந்து கட்டிவரிந்த வெளிறிய உடல் மெல்லத் தளர்ந்து மெத்தைமேல் படிய, உதடுகளைக் கடித்த பற்கள் இறுகிப்புதைந்திருக்க, கருவிழிகள் மேலே மறைந்து, விசித்திரவீரியன் கிடந்தான். அப்போது உடைகளை முழுதாக அணிவதைப்பற்றித்தான் அவள் மனம் முதலில் எண்ணியது என்பதை பிறகெப்போதும் அவள் மறக்கவில்லை. அவள் மேலாடையை அணியும்போது அவன் கடைசியாக மெல்ல உதறிக்கொண்டான். உடையணிந்து வாசலைத் திறந்து குரலெழுப்பியபடி ஓடும்போது அவன் முழுமையாகவே விலகிச்சென்றிருந்தான்.

169 . யோகப்பிருந்த மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கடகதவரு :- கட்டாக்கைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
நாகபடதவரு :- நாக படத்தை வைத்து வழிபடுபவர். 
நாகாபரணதவரு :- நாக ஆபரணத்தை அணிபவர். 
நிடதலதவரு :- நளன் ஆண்ட நிடநல நாட்டினைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
மாதனதவரு :- மிக்க செல்வந்தர்கள். 
ராமனதவரு :- ஸ்ரீ ராமனை வழிபடுபவர். 
வட்டிதவரு :- வட்டி வாங்கியோர்.