அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

1/9/14

தேவாங்க chat new

நண்பர்களே
மிகவும் சுலபமான  நமது புதிய சேட் வசதி அனைவரும் பயன்படுத்தி பயன்பெறவும்.
நிக்நேம் கொடுத்து இணையவும்.




பகுதி இரண்டு : பொற்கதவம் [ 3 ]

அஸ்தினபுரியின் மன்னர் சந்தனுவின் ரதத்தில் ஏறி முதன்முதலாக பீஷ்மர் தன் ஏழு வயதில் உள்ளே வந்தபோதே அந்நகர மக்கள் அது தங்கள் குலமூதாதை ஒருவரின் நகர்நுழைவு என்று உணர்ந்தனர். சஞ்சலமேயற்ற பெரிய விழிகளும், அகன்ற மார்பும், பொன்னிற நாகங்கள் போன்ற கைகளும் கொண்ட சிறுவன் தன் தந்தையைவிட உயரமானவனாக இருந்தான். ஒவ்வொரு சொல்லுக்குப்பின்னும் அதுவரை அறிந்த ஞானம் அனைத்தையும் கொண்டுவந்து நிறுத்தும் பேச்சுடையவனாக இருந்தான். ஒரு கணமேனும் தன்னைப்பற்றி நினையாதவர்களுக்கு மட்டுமே உரிய கருணை நிறைந்த புன்னகை கொண்டிருந்தான். அவனைக் கண்டபின் அஸ்தினபுரியின் மக்கள் தங்கள் கனவுகளில் கண்ட அத்தனை பிதாமகர்களுக்கும் அவனது முகமே இருந்தது.
தேவவிரதன் என தந்தையால் அழைக்கப்பட்ட பீஷ்மர் தவசீலர்களுக்குரிய வாழ்க்கையைக் கொண்டிருந்தார்.மலையுச்சியின் ஒற்றைமரத்தில் கூடும் தனிமை அவரிடம் எப்போதுமிருந்தது. ஒவ்வொரு பார்வையிலும் நான் இங்கிருப்பவனல்ல என்று சொல்வதுபோல, ஒவ்வொரு சொல்லிலும் இதற்குமேல் சொல்பவனல்ல என்பதுபோல, ஒவ்வொரு காலடியிலும் முற்றாக கடந்து செல்பவர்போல அவர் தெரிந்தார். அஸ்தினபுரியின் நகரெல்லையில் அவரது ஆயுதசாலை இருந்தது. அங்குதான் அவர் தன் மாணவர்களுடன் தங்கியிருந்தார்.
பிரம்ம முகூர்த்தத்தில் காஞ்சனத்தின் மணியோசை கேட்டு எழுந்து நீராடி வழிபாடுகளை முடித்துவிட்டு ஆயுதசாலைக்கு வந்து வெயில் வெளுப்பதுவரை தன்னந்தனியாக பயிற்சி செய்வது பீஷ்மரின் வழக்கம். ஆயுதப்பயிற்சியே அவரது யோகம் என்று அறிந்திருப்பதனால் அவரை அப்போது எவரும் அணுகுவதில்லை. விரல்நீளமே கொண்ட சிறிய அம்புகளை ஒன்றின் பின்பக்கத்தை இன்னொன்றால் பிளந்து எய்துகொண்டே இருந்தார். குறிப்பலகையின்கீழே பிளவுண்ட அம்புகள் குவிந்துகொண்டே இருந்தன. அப்போது உள்ளே வந்த சேவகன் வணங்கி முகமன் சொன்னான். கையில் சிற்றம்புடன் பீஷ்மர் அவனை திரும்பிப்பார்த்தார். அந்நேரத்தில் அவரை அழைப்பதென்றால் அது சிற்றன்னை சத்யவதியின் அழைப்பாகவே இருக்கமுடியும்.
BISHMA_05
ஓவியம்: ஷண்முகவேல்
மீண்டும் நீராடி வெண்ணிற அந்தரீயமும் உத்தரீயமும் அணிந்து பீஷ்மர் பேரரசியின் அந்தப்புரச்சபைக்கு சென்றார். அரண்மனையின் இடப்புறத்து நீட்சியாக அமைந்திருந்த அந்தப்புரத்தின் முற்றத்தில் செந்நிறக் கற்கள் பரப்பப்பட்டிருந்தன. ரதமிறங்கி அவர் படிகளில் ஏறியபோது காவலர்கள் வேல் தாழ்த்தி சிரம் குனிந்தனர். சிம்மங்கள் நாற்புறமும் விழித்து நின்ற மரச்சிற்பத்தூண்கள் வரிசையாக அணிவகுத்த நீண்ட இடைநாழியில் இருந்து உள்ளறை வாசல்கள் திறந்து திறந்து சென்றன. அறைகளைக் குளிர்விக்கும் நீரோடைகள் மெல்லிய நீரொலியுடன் வழிந்தன. அரண்மனைக்குள் வாழும் மயில்களும் கிருஷ்ணமிருகங்களும் ஒலிகேட்டு அழகிய கழுத்தை வளைத்துநோக்கின.
தன்னுள் ஆழ்ந்தபடி நடந்த அவருக்கு முன்னால் அவரது வருகையை சைகையால் அறிவித்தபடி சேவகன் ஓடினான். பேரரசியின் முன்னால் செல்வதனால் அவர் தலைப்பாகையை அணிந்திருக்கவில்லை. காகபட்சமாக வெட்டப்பட்ட கூந்தலின் நரையோடிய கரிய கற்றைகள் நரம்புகள் புடைத்த பெரிய தோள்களில் விழுந்துகிடந்தன. கரிய கனத்த தாடி மார்பைத்தொட்டது. பீஷ்மர் நகைகளேதும் அணிவதில்லை. காதுகளில் கிளிஞ்சல்குண்டலங்களும் கழுத்தில் குதிரைவால் சரடில் கோர்க்கப்பட்ட வெள்ளியாலான குருகுலத்து இலச்சினையும் மட்டும் அவர் உடலில் இருந்தன. சரிகைகளற்ற வெண்ணிற ஆடைக்குமேல் கட்டப்பட்ட மான்தோல் கச்சையில் அவர் ஆயுதமேதும் வைத்திருக்கவுமில்லை.
அந்தப்புரவாசலில் நின்று தன்னை வணங்கிய பெண்காவலரிடம் அரசியைப் பார்க்க அவர் வந்திருப்பதை அறிவிக்கும்படி சொன்னார். தலைமைக்காவல்பெண் வெளியே வந்து தலைவணங்கி “குருகுலத்து இளவரசர் பீஷ்மரை பேரரசி சத்யவதிதேவி வரவேற்கிறார்..” என்று அறிவித்து உள்ளே அழைத்தாள். தலைகுனிந்தபடி பீஷ்மர் உள்ளே சென்றார்.
கங்கைக்கரைப் பெருமரப்பலகைகளால் செய்யப்பட்டு வெண்களிமண் பூசி வண்ணக்கோலமிடப்பட்ட சுவர்கள் கொண்ட அரண்மனை அறைக்குள் வெண்பட்டு மூடிய ஆசனத்தில் சத்யவதி அமர்ந்திருந்தாள். வெண்பட்டாலான ஆடைக்குமேல் செம்பட்டுக் கச்சையில் வைரங்கள் பதிக்கப்பட்ட மீன்வடிவப்பிடி கொண்ட குத்துவாளும் தலையில் அணிந்திருந்த சிறிய மணிமுடியும் அரச சின்னங்களாக இருந்தன. மெல்லிய பூங்கொடியை வளைத்துக்கட்டியது போன்ற அமைப்புகொண்ட மணிமுடியின் முகப்பில் அமுதகலசச் சின்னமிருந்தது.
முகமன் கூறி வணங்கிய பீஷ்மரை வாழ்த்தி அருகே அமரச்செய்தாள் சத்யவதி. அறுபத்தைந்து வயதிலும் மூப்பின் தடங்களில்லாத அவளுடைய அழகிய கரியமுகத்தில் எப்போதும் எங்கும் தலைவணங்கியிராதவர்களுக்குரிய பாவனை இருந்தது. அரசி கையசைக்க சேடி அருகே இருந்த பொற்பிடிகள் கொண்ட கடலாமை ஓடால் மூடியிடப்பட்ட பெட்டியிலிருந்து ஓலையொன்றை எடுத்து பீஷ்மரிடம் கொடுத்தாள். “இன்று காலை பேரமைச்சர் இதைக்கொண்டுவந்து என்னிடம் அளித்தார். பலபத்ரரின் ஒற்றன் நாகரதேசத்துக்குச் சென்ற ஒரு தூதனைக் கொன்று இதை கைப்பற்றியிருக்கிறான்.”
பீஷ்மர் சுவடியை வாசிக்கையில் அரசி பெருமூச்சுவிட்டு “இதன் மொழியைக்கொண்டு பார்த்தால் இத்தகைய ஓலைகள் பாரதமெங்கும் சென்றிருக்கின்றன என்று தெரிகிறது” என்றாள். “ஆம்” என்றபடி அதை பீஷ்மர் குழலில் இட்டு மூடினார். அரசி பேசுவதற்காகக் காத்திருந்தார்.
“என்னைப்பற்றி சூதர்களின் கதைகள் சொல்வதைக் கேட்டால் எனக்கே அச்சமாக இருக்கிறது. அக்கதைகளைக் கேட்கும் எவரும் அஸ்தினபுரியின் அரசனை மாயத்தால் கைப்பற்றிய தீயதேவதை என்றுதான் என்னைப்பற்றி எண்ணுவார்கள்.சென்ற இருபதாண்டுகாலமாக இக்கதைகள் கிளைவிட்டு வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்கள் அனைவரும் என்னை வெறுக்கிறார்கள். நம்முடைய குடிமக்கள்கூட என்னை அஞ்சுகிறார்கள். இந்த அரியணையில் நான் இருப்பதன்மூலம் அவர்களுக்கு ஏதோ பெருந்தீங்குவந்து சேரும் என எண்ணுகிறார்கள்…”
ஏதோ சொல்லவந்த பீஷ்மரை கையமர்த்தி சத்யவதி தொடர்ந்தாள். “எனக்கு எல்லாம் தெரியும். எனக்கும் ஒற்றர்கள் இருக்கிறார்கள். ஆயர்குடிகளும் வேளாண்குடிகளும் கடலவர்களும் எதை எண்ணி அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மீண்டும் மீண்டும் நான் கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.”
“அன்னையே, பல தலைமுறைகளுக்கு முன்பு மாமன்னர் ஹஸ்தி இந்த ஐம்பத்தைந்து நாடுகளையும் வென்று அஸ்தினபுரியை பார்தவர்ஷத்தின் தலைநகராக அமைத்த நாள்முதலாக ஷத்ரிய மன்னர்கள் அஞ்சிவருகிறார்கள். அச்சத்தின் மறுபக்கம் வெறுப்பு….வல்லமை என்றுமே கீழோரால் வெறுக்கப்படுகின்றது” என்றார்.
சத்யவதி “ஆம், இந்த வம்சம் அழியும் என்று நினைக்கிறார்கள்…அஸ்தினபுரம் அவர்கள் கையில் பழுத்த கனிபோல போய் விழும் என்று கணிக்கிறார்கள்… அது நடக்கக் கூடாது..” என்றாள்.
.
“அஸ்தினபுரி அதன் வீரப்புதல்வர்களை இன்னும் இழந்துவிடவில்லை” என்று உள்ளெழுந்த சினத்தை அடக்கியபடி சொன்னார் பீஷ்மர். சத்யவதி “ஆனால் இப்போது அஸ்தினபுரத்துக்கு மன்னன் இல்லை…என் மகன் சித்ராங்கதன் இறந்து ஒருவருடம் முடியப்போகிறது…சித்ராங்கதனின் நீர்க்கடன்நாளுக்குள் விசித்திரவீரியன் மன்னனாக வேண்டும்….இன்னும் அதிக நாட்களில்லை நமக்கு” என்றாள். “ஆம் அன்னையே. அதை உடனடியாகச் செய்துவிடுவோம். நான் ஆவனசெய்கிறேன்” என்றார் பீஷ்மர்.
சத்யவதி “நெறிநூல்களின்படி மணமுடிக்காதவன் மன்னனாக முடியாது….விசித்திரவீரியனுக்கு ஏதேனுமொரு ஷத்ரிய மன்னன் பெண்கொடுக்காமல் எப்படி அவன் கிரஹஸ்தனாக முடியும்?” என்றாள். “அஸ்தினபுரத்தின் அதிபன் கேட்டால் மறுக்கக்கூடியவர்கள் யார் என்று பார்ப்போம்…” என்றார் பீஷ்மர்.
சத்யவதி அவளுடலில் திடீரென்று கூடிய வேகத்துடன் எழுந்து தன் கையருகே இருந்த ஆமையோட்டுமூடிகொண்ட பெட்டியைத்திறந்து உள்ளிருந்த ஓலைகளை அள்ளி பீஷ்மன் முன்வைத்தாள். “பார்….எல்லாம் அரசத் திருமுகங்கள்… தேவவிரதா, உனக்குத் தெரியாமல் நான் பாரதநாட்டின் ஐம்பத்தைந்து மன்னர்களுக்கும் எழுதினேன்…ஆசைகாட்டினேன்… கெஞ்சினேன்… அச்சுறுத்தவும் செய்தேன். ஒருவர்கூட பெண் கொடுக்க முன்வரவில்லை… வீண்காரணங்கள் சொல்கிறார்கள்… ஏளனம் செய்கிறார்கள்….இதோபார்…” என்று ஓர் ஓலையைக் காட்டினாள். “படித்துப்பார்….காசிநாட்டு மன்னன் எழுதியிருக்கிறான்… விசித்திரவீரியனுக்கு மருத்துவம் பார்க்கும் சூதர்களை அவனிடம் அனுப்பவேண்டுமாம்… அவர்களைக் கேட்டபின் யோசித்து முடிவெடுப்பானாம்…”
பீஷ்மர் கடும்சினத்துடன் எழுந்துவிட்டார். “அந்தச் சிற்றரசனுக்கு அத்தனை ஆணவமா? அஸ்தினபுரத்துக்கே இப்படி ஒரு ஓலையை எழுதுகிறான் என்றால்….” என்றார். சத்யவதி பெருமூச்சுடன் “யானை சேற்றில் சிக்கினால் நாய் வந்து கடிக்கும் என்பார்கள்” என்றாள்.
பீஷ்மர் “அன்னையே யானை எங்கும் சிக்கிவிடவில்லை. அஸ்தினபுரிக்கு நான் இருக்கிறேன்..” என்றார். சத்யவதி, “ஆம்,அந்த நம்பிக்கையில்தான் சொல்கிறேன்….அதற்காகத்தான் உன்னை வரவழைத்தேன்…” என்றாள். “சொல்லுங்கள்…நான் என்ன செய்யவேண்டும்?” என்றார் பீஷ்மர்.
“காசிமன்னன் பீமதேவன் அவனுடைய மூன்று மகள்களுக்கும் சுயம்வரம் ஏற்பாடு செய்திருக்கிறான்” என்றாள் சத்யவதி. அம்பை அம்பிகை அம்பாலிகை என்ற அந்த மூன்று இளவரசிகளும்தான் இன்று பாரதவர்ஷத்தின் பேரழகிகள் என்று சூதர்களின் பாடல்கள் சொல்கின்றன. ஐம்பத்தைந்து ஷத்ரியமன்னர்களும் அவர்களை மணம்செய்யும் கனவுடனிருக்கிறார்கள். இன்னும் பன்னிரு நாட்களுக்குப்பின் வளர்பிறை பன்னிரண்டாம் நாளில் காசிநகரில் சுயம்வரக்கொடி ஏறவிருக்கிறது.”
பீஷ்மரை கூர்ந்து நோக்கி சத்யவதி சொன்னாள். “அந்த விழாவுக்கு நம்மைத்தவிர பாரதநாட்டில் உள்ள அத்தனை அரசர்களுக்கும் அழைப்பு அனுப்பியிருக்கிறான் பீமதேவன்…நம்மை அவமானப்படுத்துவதற்காகவே இதைச் செய்திருக்கிறான்.  நாம் அவனிடம் பெண்கேட்டதற்காகவே இதைச்செய்கிறான்…”
பீஷ்மர் “அன்னையே, விசித்திரவீரியன் அந்த சுயம்வரத்துக்குச் செல்லட்டும். நானும் உடன் செல்கிறேன். அஸ்தினபுரியின் மன்னனை அழைக்காததற்கு காசிமன்னனை நமக்கு திறைகட்டச்சொல்வோம். அவனுடைய சுயம்வரப்பந்தலில் அஸ்தினபுரிக்கென ஓர் ஆசனம் போடச்செய்வோம்” என்றார்.
“தேவவிரதா, நான் என் மைந்தனை அறிவேன். அவனை சுயம்வரப்பந்தலில் சேடிப்பெண்கூட நாடமாட்டாள்” என்றாள் சத்யவதி. “நீ காசிநாட்டின் மீது படையெடுத்துப்போ…அந்த மூன்று பெண்களையும் சிறையெடுத்து வா…”
பீஷ்மர் திகைத்து எழுந்து பதறும் குரலில் “அன்னையே நீங்கள் சொல்வது அறப்பிழை….ஒருபோதும் செய்யக்கூடாதது அது…” என்றார். “அஸ்தினபுரியின் அரசி ஒருபோதும் எண்ணக்கூடாத திசை. வேண்டாம்” என்றார்.
“நான் எட்டுத்திசைகளிலும் எண்ணியபின்புதான் இதைச் சொல்கிறேன்… இதுவன்றி இப்போது வேறுவழியே இல்லை” என்று அகவேகத்தால் சிறுத்த முகத்துடன் சத்யவதி சொன்னாள். “உன்னால் மட்டுமே இதைச் செய்யமுடியும்…ஷத்ரியர் கூடிய சபையில் ஆட்டுமந்தையில் சிம்மம் போல சென்று நிற்கமுடியும் உன்னால்…தேவவிரதா, நீ செய்தேயாகவேண்டியது இது…இது என் ஆணை”
பீஷ்மர் அந்நிகழ்ச்சியை தன் சித்தத்தில் ஒருகணம் ஓட்டிப்பார்த்து உடல்நடுங்கி “அன்னையே, நெறிநூல்களின்படி அந்தப்பெண்கள் என்னை விரும்பினால், அவர்களை நான் மணம்புரிந்துகொள்வேனென்றால் மட்டுமே நான் அவர்களைக் கவர்ந்து வரலாம்…அதை காந்தர்வம் என்கின்றன நூல்கள். விருப்பமில்லாத பெண்ணைக் கவர்ந்துவருவது பைசாசிகம்…ஷத்ரியன் அதைச்செய்வதென்பது தன் முன்னோரை அவமதிப்பதன்றி வேறல்ல.”
”நீ நைஷ்டிக பிரம்மசாரி…உனக்கு அவர்கள் தேவையில்லை. என் மகனுக்கு அவர்கள் தேவை. அந்த மூன்று பெண்களையும் என் மகனுக்கு திருமணம் செய்து வைப்போம். அப்பெண்கள் இங்கே வந்தால் அஸ்தினபுரி பிழைக்கும். இல்லையேல் அழியும். தேவவிரதா, நீ செல்லாமல் அவன் அவர்களை அடைவது நிகழவேமுடியாது.”
பீஷ்மரின் எண்ணங்களை உணர்ந்தவளாக சத்தியவதி சொன்னாள். “விசித்திரவீரியன் நோயாளி என்பதை நான் மறக்கவில்லை. அவன் திருமணமாகி அரியணையில் அமர்ந்துவிட்டானென்றால் மேலும் பத்துப்பதினைந்து வருடங்களுக்கு எந்தச்சிக்கலுமில்லை. ஷத்ரியர்களும் குடிமக்களும் எதுவும் சொல்லமுடியாது. அதற்குள் பாரதநாட்டில் இருக்கும் அனைத்து வைத்தியர்களையும் வரவழைப்போம்…திராவிடநாட்டில் இருந்து அகத்தியமுனிவரையே கொண்டுவர ஆளனுப்பியிருக்கிறேன். அவனுக்கு நோய் தீர்ந்தால் குழந்தைகள் பிறக்கும்…குருவம்சம் வாழும்…”
பீஷ்மர் “அன்னையே, உங்கள் சொல் எனக்கு ஆணை. ஆனால் நான் இக்கணம்வரை என் அகம் சொல்லும் நெறியை மீறியதில்லை. எதிர்த்துவரும் ஷத்ரியனிடம் மட்டுமே நான் என் வீரத்தைக் காட்டமுடியும். அரண்மனைச் சிறுமிகளிடம் தோள்வலிமையைக் காட்டினால் இந்த பார்தவர்ஷமே என்னைத் தூற்றும்…என்னை மன்னியுங்கள். என்மேல் கருணை காட்டி தங்கள் ஆணையிலிருந்து என்னை விடுவியுங்கள்” என்றார். யாசிப்பவர் போல கைகள் அவரையறியாமல் நீண்டன. “பழிச்சொல்லில் வாழ்வதே வீரனின் மீளா நரகம் தாயே…என்னை அந்த இருண்ட குழியில் தள்ளிவிடாதீர்கள்” என்றார்.
கடும் சினத்துடன் அவரை நோக்கித் திரும்பிய சத்யவதி “தேவவிரதா, நீ கொள்ளவேண்டிய முதல்நெறி ஷத்ரிய நெறிதான். தன்னை நம்பியிருக்கும் நாட்டையும் குடிமக்களையும் காப்பதுதான் அது” என்றாள். “தன் குடிமக்களுக்காக மும்மூர்த்திகளையும் எதிர்க்கத்துணிபவனே உண்மையான ஷத்ரியன் என்று நீ கற்றதில்லையா என்ன? கடமையைத் தவிர்ப்பதற்காகவா நீ நெறிநூல்களைக் கற்றாய்? களம் நெருங்கும்போது பின்திரும்பவா ஆயுதவித்தையை பயின்றாய்?” என்றாள்.
பீஷ்மர் “அன்னையே, ஷத்ரியதர்மம் என்னவென்று நானறிவேன். ஆனால் மானுடதர்மத்தை அது மீறலாமா என்று எனக்குப் புரியவில்லை. தன் மனதுக்குகந்த கணவர்களைப் பெற எந்தப்பெண்ணுக்கும் உரிமையுண்டு…அந்தப்பெண்களை இங்கே கொண்டுவந்து அவர்களின் மனம்திறக்காமல் வயிறு திறந்தால் அங்கே முளைவிடும் கருவின் பழி என்னையும் குருகுலத்தையும் விடாது….அன்னையே, புராணங்களனைத்தும் சொல்லும் உண்மை ஒன்றே. பெண்பழி கொண்ட மண்ணில் அறதேவதைகள் நிலைப்பதில்லை….” என்றார்
“நீ இதைச் செய்யாவிட்டால் அஸ்தினபுரியை போர் சூழும். பல்லாயிரம்பேர் களத்தில் விழுவார்கள். பல்லாயிரம் பெண்கள் விதவைகளாவார்கள்” என்றாள் சத்தியவதி. பீஷ்மர் உணர்ச்சியுடன் நெஞ்சில் கரம்வைத்து “அதைத்தடுக்கும்பொருட்டு நான் உயிர்விடுகிறேன் அன்னையே. ஆனால் பெண்பழியை நான் இக்குடிகளின் மீது சுமத்தினேனென்றால் என்னை அவர்களின் தலைமுறைகள் வெறுக்கும்…”
குரோதம் மீதூறுகையில் சத்யவதியின் கண்கள் இமைப்பை இழந்து மீன்விழிகளாவதை அதற்கு முன் பீஷ்மர் கண்டிருந்தாரென்றாலும் அவர் அஞ்சி சற்றே பின்னடைந்தார். “தேவவிரதா, உன்னுடைய உள்நோக்கம் என்ன? என் மகன் அரியணை ஏறக்கூடாதென்று எண்ணுகிறாயா? உனக்கு மணிமுடிமேல் ஆசை வந்துவிட்டதா என்ன?”
பீஷ்மர் இரு கைகளையும் முன்னால் நீட்டி “அன்னையே, என்ன கேட்டுவிட்டீர்கள்! நான் என் நோன்பை அணுவளவும் மீறுபவனல்ல” என்றார். “அப்படியென்றால் நான் ஆணையிட்டதைச் செய்…” என்றாள் சத்யவதி. கூர்வாள் தசையில் பாய்வதுபோல “இது உன் தந்தை சந்தனுவின் மீது ஆணையாக நான் உனக்குப் பணிக்கும் கடமை.”
.
மறுசொல் இல்லாமல் தலைவணங்கி தன் ஆயுதசாலைக்கே திரும்பினார் பீஷ்மர். பெரும்பாறைகளைத் தூக்கி தன் எண்ணங்கள் மீது வைத்தது போல தளர்ந்திருந்தார். அனலையே ஆடையாக அணிந்ததுபோல எரிந்துகொண்டிருந்தார். தன் மாணவர்கள் எண்மரிடம் எட்டு கூரிய வாள்களைக்கொடுத்து எட்டுத்திசையிலிருந்தும் தாக்கச்சொல்லிவிட்டு வெறும் கைகளுடன் அவர்களை எதிர்கொண்டார். எட்டுமுனைகளிலும் கூர்மைகொண்ட சித்தத்துக்கு அப்பால் ஒன்பதாவது சித்தம் ‘என்ன செய்வேன் என்ன செய்வேன்’ என்று புலம்பிக்கொண்டிருப்பதை உணர்ந்து நிறுத்திக்கொண்டார்.
வியர்வையும் மூச்சுமாக அமர்ந்து கண்களை மூடிக்கொண்டார். அருகே வந்து நின்ற மாணவனிடம் தலைதூக்காமல் “சூதரை வரச்சொல்” என ஆணையிட்டார். அவர் வரச்சொல்வது எவரை என மாணவன் அறிந்திருந்தான். அவன் சூதர்சேரிக்குச் சென்று தீர்க்கசியாமர் என்னும் முதிய சூதரை ரதத்தில் அழைத்துவந்தான்.
பிறவியிலிருந்தே விழியற்றவராகையால் தந்தையால் முடிவிலா இருள் எனப் பெயரிடப்பட்ட தீர்க்கசியாமருக்கு அப்போது நூறுவயது தாண்டியிருந்தது. மொத்தப்பிரபஞ்சத்தையும் மொழியாக மட்டுமே அறியும் பேரருளைப் பெற்றவர் அவர் என்றது சூதர்குலம். படைக்கப்பட்டதெல்லாம் வானில்தான் இருந்தாகவேண்டும் என்பதுபோல கூறப்பட்டவை எல்லாம் அவரது சித்தத்திலும் இருந்தாகவேண்டும் என்று நம்பினர். தன்னுடைய சிறிய கிணைப்பறையை தோளில் தொங்கவிட்டு செவிகூர்வதற்காக முகத்தைச் சற்று திருப்பி, வெண்சோழிகள் போன்ற கண்கள் உருள, உதடுகளைத் துருத்திக்கொண்டு தீர்க்கசியாமர் அமர்ந்திருந்தார். ஒலிகளாகவே அஸ்தினபுரியின் ஒவ்வொரு அணுவையும் அறிந்தவர். ரதம் பீஷ்மரின் ஆயுதசாலை வாசலை அடைந்ததும் இறங்கிக்கொண்டு தன்னுடைய மெல்லிய மூங்கில்கோலை முன்னால் நீட்டி தட்டியபடி உள்ளே நுழைந்தார்.
சூதரை வரவேற்று முகமன் சொல்லி அமரச்செய்தபின் பீஷ்மர் தன் மனக்குழப்பத்தைச் சொன்னார். “சூதரே, அறத்தின் வழிகள் முற்றறிய முடியாதவை. ஆனால் மனிதன் செய்யும் அறமீறல்களோ விண்ணிலும் மண்ணிலும் பொறிக்கப்படுபவை. மனிதனுக்கு படைப்புசக்திகள் வைத்த மாபெரும் சூது இதுவென்று நினைக்கிறேன்” என்றார். சுருங்கிய உதடுகளுடன் தலையைத் திருப்பி தீர்க்கசியாமர் கேட்டிருந்தார். “என் சித்தம் கலங்குகிறது சூதரே. என்ன முடிவெடுப்பதென்று நீங்கள்தான் சொல்லவேண்டும்” என்றார் பீஷ்மர். தீர்க்கசியாமர் கைநீட்டி தன் கிணைப்பறையை எடுத்து இரு விரல்களால் அதன் சிறிய தோல்பரப்பை மீட்டி ‘ஓம்’ என்றார். அவர் பாடலாக மட்டுமே பேசுபவர் என்பதை பீஷ்மர் அறிந்திருந்தார்.
தீர்க்கசியாமர் யமுனையைப் புகழ்ந்து பாட ஆரம்பித்தார். “சூரியனின் மகளாகிய யமுனை பாரதவர்ஷத்தின் குழலில் சூட்டப்பட்ட மயிலிறகு. கரியநிறம் கொண்டவளாதலால் யமுனையை காளிந்தி என்றனர் கவிஞர்கள். கங்கைக்கு இளையவள். வடக்கே கரிய கோபுரம் போலெழுந்து நிற்கும் களிந்தமலையில் தோன்றி மண்ணிலிறங்கி ஒருபோதும் கரைகள் மீறாதொழுகி தன் தமக்கையின் கைகள் கோர்ப்பவள். அவள் வாழ்க” என்றார். அவரது சொற்களின் வழியாக பீஷ்மர் யமுனையின் மரகதப்பச்சை நிறம்கொண்ட அலைகளைக் காண ஆரம்பித்தார். கடுந்தவச்சீலரான பராசரர் யமுனைக்கரைக்கு வந்து நின்றதை விழியற்ற சூதரின் பாடல் வழியாக பார்க்கலானார்.
ஆதிவசிட்டரின் நூறாவது மைந்தனின் பெயர் சக்தி. அவனை முனிகுமாரியாகிய அதிர்ஸ்யந்தி மணம் புரிந்துகொண்டாள். கிங்கரன் என்ற அரக்கன் சக்தியைத்தவிர மீதி அத்தனை வசிட்டகுமாரர்களையும் பிடித்து உண்டுவிட்டான். துயரத்தால் நீலம்பாரித்து கருமையடைந்த வசிட்டர் ஆயிரத்தெட்டு தீர்த்தங்களில் நீராடினார். புத்திரசோகத்தை நீர் நீக்குவதில்லை என்று உணர்ந்து ஏழு அக்கினிகளில் மூழ்கி எழுந்தார். துயரம் இன்னும் பெரிய அக்கினி என்பதை மட்டுமே அறிந்தார். இச்சைப்படி உயிர்துறக்கும் வரம்கொண்டவராதலால் தர்ப்பைப்புல்லைப் பரப்பி அமர்ந்து கண்மூடி தியானித்து தன் உடலில் இருந்து ஏழுவகை இருப்புகளை ஒவ்வொன்றாக விலக்கலானார்.
அதன் முதல்படியாக அவர் தன் நாவை அடைந்த நாள் முதல் கற்கத் தொடங்கிய வேதங்களை ஒவ்வொரு மந்திரமாக மறக்கத்தொடங்கினார். அப்போது அவரது தவக்குடிலில் அவருக்குப் பணிவிடை செய்பவளாக அதிர்ஸ்யந்தி இருந்தாள். தான் மறந்த வேதமந்திரங்கள் வெளியே ஒலிப்பதைக் கேட்டு வசிட்டர் கண்விழித்து அதிர்ஸ்யந்தியிடம் வியப்புடன் “வேதத்தை நீ எப்படி கற்றாய்?” என்று கேட்டார். “நான் பாடவில்லை, என் நிறைவயிற்றுக்குள் வாழும் குழந்தை அதை பாடுகிறது” என்றாள் அதிர்ஸ்யந்தி.
பெருகிய வியப்புடன் எழுந்து அவள் வயிற்றருகே குனிந்து அக்குழந்தையைப் பார்த்தார் வசிட்டர். தன்னிலிருந்து விலகும் மெய்ஞானமெல்லாம் அதைச் சென்றடைவதைக் கண்டார். நூறு மைந்தர்களின் ஆயிரம் பேரர்கள் அடையவேண்டியவை அனைத்தும் அந்த ஒரே குழந்தைக்குச் செல்வதை உணர்ந்தார். “நீ புகழுடன் இருப்பாயாக” என அதை ஆசீர்வதித்தார்.
உடனே நிமித்திகரை வரவழைத்து அக்குழந்தையின் வாழ்க்கையை கணிக்கச் சொன்னார். “விதிப்படி இக்குழந்தையும் கிங்கரனால் உண்ணப்படும். அவன் இதை இந்த வனமெங்கும் தேடி அலைந்துகொண்டிருக்கிறான்” என்றார் நிமித்திகர். “எங்கு எப்படி தப்பிச்சென்றாலும் குழந்தையை கிங்கரன் கண்டுபிடிப்பதை தடுக்கவியலாது” என்றார்.
கடும் துயருடன் தவக்குடில் வாசலில் கையில் தர்ப்பையுடன் காவலிருந்தார். கிங்கரன் வருவானென்றால் தன்னுடைய அனைத்துத் தவவலிமையாலும் தன் மூதாதையரின் தவவலிமைகளாலும் அவனை சபிக்கவேண்டுமென நினைத்தார். அக்குழந்தை ஞானவானாக மண்ணுலகில் வாழ்வதற்காக தானும் தன் ஏழுதலைமுறை மூதாதையரும் நரகத்தில் உழல்வதே முறை என்று எண்ணினார்.
பகலில் இருளிறங்கியதுபோல எட்டுகைகளிலும் ஆயுதங்களுடன், மானுடநிணமும் குருதியும் கொட்டும் வாயுடன், மண்டையோட்டு மாலையசைய, கிங்கரன் தவக்குடிலின் முற்றத்தை வந்தடைந்தான். கையில் தர்ப்பையுடன் அக்குழந்தை வாழ்ந்த கருவறைக்கும் அவனுக்கும் நடுவே நின்றார் வசிட்டர். கிங்கரன் அருகே நெருங்கியதும் தர்ப்பையை தலைமேல்தூக்கி தன்னையறியாமல் “கிங்கரனே, இதோ நீ செய்த அனைத்துப் பாவங்களையும் நான் மன்னிக்கிறேன். விடுதலை அடைவாயாக!” என்று சொன்னார்.
விரிந்த செவ்விழிகளில் இருந்து கண்ணீர் வழிய கிங்கரன் அவர் முன் மண்டியிட்டான். அவன் உடல் வலப்பக்கமாகச் சரிந்து விழ இடப்பக்கமாக ஒரு கந்தர்வன் மேலெழுந்துவந்தான். “ஐயனே, என் தீவினைதீர்த்து என்னை என் மேலுலகுக்கு அனுப்பினீர்கள். உங்கள் மருமகளின் வயிற்றில் வாழும் அக்குழந்தை ஞானத்தை முழுதுணர்ந்தவனாவான்” என்றபின் வானத்திலேறி மறைந்தான்.
அன்னையின் கருவிலிருக்கையிலேயே நால்வேதமும் அறுவகை தரிசனங்களும் ஆறுமதங்களும் மும்மைத் தத்துவங்களும் கற்று மண்ணுக்குப்பிறந்து வந்தவர் பராசரமுனிவர். கைலாயமலைச்சரிவில் பீதவனத்தில் தங்கி தவமியற்றிய பராசரர் புலஸ்திய மாமுனிவரின் ஆசியின்படி பாரதவர்ஷத்தின் அனைத்துப் புராணங்களையும் ஒருங்கிணைத்து ஒற்றைப்பெருநூலாக யாக்கத் தொடங்கினார். புராணசம்ஹிதையை இயற்றிமுடிந்ததும் புலஸ்தியர் முதலான நூறு முனிவர்களை அழைத்து பீதவனத்திலிருந்த சுருதமானசம் என்னும் தடாகத்தின் கரையில் நின்ற வனவேங்கை மரத்தடியில் ஒரு சபைகூட்டி அந்நூலை வாசித்துக்காட்டினார். அனைவரும் அது மண்ணுலகில் எழுந்த மாபெரும் மெய்ஞானநூல் என்று அவரைப்புகழ்ந்தனர். மனம் உவகையில் பொங்கி நுரைக்க அன்றிரவு துயின்றார்.
மறுநாள் அதிகாலையில் காலைவழிபாடுகளுக்காக தடாகத்துக்கு அவர் சென்றபோது அந்த வனவேங்கை மரத்தடியில் ஒரு இடையச்சிறுவன் வந்தமர்ந்து குழலிசைக்கக் கேட்டார். அந்த இசையில் மயங்கி அருகே நெருங்கிச்சென்றபோது அவ்விசை மலரும்தோறும் வனவேங்கையின் கிளைகளிலெல்லாம் பொன்னிற மலர்கள் பூத்து நிறைவதைக் கண்டார். அவன் வாசித்துமுடித்தபோது மலர்க்கனத்தால் மரக்கிளைகள் தாழ்ந்து தொங்கி தூங்கும் மதயானைகளின் மத்தகங்கள்போல மெல்ல ஆடின. அவன் சென்றபின் அந்தக் குழலிசையை மெல்ல திரும்ப மீட்டியபடி வேங்கை மலருதிர்க்கத் தொடங்கியது.
கண்ணீருடன் தன் தவச்சாலையை அடைந்து தன்னுடைய நூலை எடுத்துப்பார்த்தார் பராசரர். அதை அங்கேயே நெருப்பிடவேண்டுமென்று எண்ணி அனல் வளர்த்தார். அவர் சுவடிகளைப்பிரிக்கும்போது அங்கே நாரதமுனிவர் வந்தார். அவர் செய்யப்போவதென்ன என்று உணர்ந்தார் நாரதர். “பராசரா, உன்னிலிருப்பது ஞானம். அது மரங்களை மடித்து உண்டு காடதிர காலெடுத்து நடந்துசெல்லும் மதகரி.. கவிதையோ இசையென்னும் சிறகு முளைத்த பறவை. அது விண்ணில் நீந்தும், மலர்களில் தேனுண்ணும்.. மதகரியைப் படைத்த நியதியே பறவையையும் படைத்தது என்று உணர்க” என்றார். தன் வல்லமையையும் எல்லையையும் உணர்ந்த பராசரர் அதன்பின் மலைச்சிகர நுனியில் நின்று வான் நோக்கி துதிக்கை தூக்கும் யானையையே தன்னுள் எப்போதும் உணர்ந்தார்.
யமுனையின் கரையில் வந்து நின்ற பராசரர் மறுகரைக்குச் செல்ல படகு வேண்டுமென்று கோரினார். நிலவெழுந்துவிட்டதனால் படகைக் கொண்டுவர தங்கள் குலநியதி அனுமதிப்பதில்லை என்று சத்யவான் சொல்லிவிட்டான். களைப்புடன் யமுனைக்கரையில் நின்றிருந்த மரமொன்றின் அடியில் இரவுறங்க வந்த பராசரர் நிலவில் தெய்வசர்ப்பம்போல ஒளி கொண்டெழும் யமுனையையே பார்த்துக்கொண்டிருந்தார். தானறிந்த ஞானமனைத்தும் அக்காட்சியின் முன் சுருங்கி மறைந்து வெறுமையாவதை உணர்ந்தபோது அவர் கண்களிலிருந்து கண்ணீர் சொட்டத் தொடங்கியது.
அப்போது யமுனைக்கரையோரமாக பதினைந்து வயதுப்பெண்ணொருத்தி காற்றில் அலைபாயும் புகைச்சுருள் போல கைகளை வீசிக் குதித்து நடனமிட்டபடி வருவதை பராசரர் கண்டார். எழுந்து அவளருகே நெருங்கியபோதும் அவள் அவரைப் பார்த்ததாகத் தெரியவில்லை. “பெண்ணே நீ யார்?” என அவர் அவளிடம் கேட்டார். அவள் பதில் சொல்லாமல் யமுனையை சுட்டிக்காட்டிச் சிரித்தாள். “உன் பெயரென்ன? நீ இந்த மச்சகுலத்தவளா?” என்றார் பராசரர். அவளிடம் சிரிப்பன்றி மொழியேதுமிருக்கவில்லை. அவள் பித்துப்பிடித்தவள் என்பதை அவர் உணர்ந்தார். யமுனையை அன்றி எதையும் அவள் உணரவில்லை என்று தெரிந்தது. அவள் கரையோரப்படகு ஒன்றை எடுத்தபோது “பெண்ணே உன்னைப்பார்த்தால் செம்படவப்பெண் போலிருக்கிறாய். என்னை மறுகரை சேர்க்கமுடியுமா?” என்று கேட்டார்.
அவளுடன் படகில் செல்லும்போதுதான் அவர் தன் சித்தத்தை மயக்கி பித்தெழச்செய்வது எது என்று உணர்ந்தார். அது அவள் உடலில் இருந்து எழுந்த பிறிதொன்றிலாத மணம். காட்டில் எந்த மலரிலும் அதை அவர் உணர்ந்ததில்லை. பிறந்த குழந்தையிடமிருக்கும் கருவறை வாசனை போன்றது. அல்லது முலைப்பாலின் வாசனை. அல்லது புதுமீனின் வாசனை. யமுனையின் மையத்தை அடைந்தபோது அது நீராழத்தின் வாசனை என்று அவர் அறிந்தார். அவருடைய உள்ளும் புறமும் அவளன்றி வேறேதுமில்லாமலாக்கியது அவ்வாசனை.
நிலவில் ஒளிவிட்ட நீலநீர்வெளியை நோக்கிய மலர்ந்த விழிகளுடன் அமர்ந்திருந்த அவளிடமிருந்து நீலவண்டின் ரீங்காரம்போல ஒரு பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. மிகமெல்லிய ஓசை காதில் கேட்கிறதா கனவுவழியாக வருகிறதா என்றே ஐயமெழுந்தது. ஆனால் சிறிதுநேரத்தில் அவர் யமுனையின் கரும்பளிங்கு நீர்ப்பரப்பெங்கும் லட்சக்கணக்கான மீன்விழிகள் சூழ்ந்து இசைகேட்டு பிரமித்து நிற்பதைக் கண்டார். அந்த மீன்கள் நீருக்குள் இசைத்துக்கொண்டிருக்கும் பாடலே அவளிலும் ஒலிக்கிறது என்று உணர்ந்து கொண்டார். அக்கணம் அவர் ஒன்றை உணர்ந்தார். பறக்கும் யானை ஒன்று மண்ணில் பிறக்கவிருக்கிறது என.
பித்தியாக இருந்த மச்சகந்தியை பராசரர் தன் கையின் கங்கணத்தை அவள் கையில் கட்டி படகிலேயே மணம் புரிந்துகொண்டார். அவர்களைச்சூழ்ந்த விடிகாலைப்பனி அறையாக அமைய அவளுடன் கூடினார். மறுகரைக்குச் சென்றதும் அவளை ஆசீர்வதித்துவிட்டு காட்டுக்குள் நடந்தபோது முளைத்து தளிர்விட்ட விதையின் வெறுமையையும் நிறைவையும் அவர் உணர்ந்தார். மச்சகந்தி பின்பு வீடு திரும்பவில்லை. அவளைத்தேடியலைந்த அவள்குலம் அவள் மறைந்துவிட்டாள் என எண்ணியது. அவள் யமுனையின் வெகுதூரத்தில் கரையோரத்து மரங்களின் கனிகளையும் நத்தைகளையும் நண்டுகளையும் உண்டு இரவும் பகலும் அந்தப் படகிலேயே வாழ்ந்தாள்.
மச்சகந்தி கருவுற்று உதரம் நிறைந்தபின் யமுனைக்குள் இருந்த மணல்தீவொன்றுக்குள் நாணலில் சிறுகுடிலைக் கட்டி அதில் தங்கிக்கொண்டாள். சித்திரை மாத முழுநிலவுநாளில் அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவளைப்போலவே கருநிறமும் வைரம்போன்ற கண்களும் கொண்ட குழந்தை அது. நாற்பத்தொருநாள் அவள் அக்குழந்தையுடன் அந்தத் தீவிலேயே இருந்தாள். பிறகு அதன் கழுத்தில் அந்தக் கங்கணத்தை அணிவித்து படகிலேறி மச்சபுரிக்கு வந்தாள். அக்குழந்தையை தன் தந்தை சத்யவானிடம் ஒப்படைத்தாள். கருநிறம் கொண்டிருந்ததால் அதை அவர்கள் கிருஷ்ணன் என்றழைத்தனர். தீவில் பிறந்தவனாதலால் துவைபாயனன் என்றனர்.
பீஷ்மர் அந்தக்கதையை ஓரளவு முன்னரே அறிந்திருந்தார். கைகளைக்கூப்பி கிருஷ்ணதுவைபாயன மகாவியாசன் வாழ்ந்த வடதிசை நோக்கித் தொழுதார். மீனவக்குடிலில் வளர்ந்த மகாவியாசனுக்கு குருதியிலேயே வேதங்கள் இருந்தன. தன் ஏழுவயதில் கிளம்பி பராசரமுனிவரிடம் சென்று சேர்ந்து முதல்மாணவனாக ஆகி கற்கவேண்டியவை அனைத்தையும் கற்றார். தன் இருபத்தைந்தாவது வயதில் வேதங்களை கிருஷ்ண சுக்லசாகைகளுடனும் வேதாங்கங்களுடனும் இணைத்துத் தொகுத்து மகாவியாசனென்று அறியப்படலானார்.
சூதர் பாடி முடித்ததும் பீஷ்மர் அவர் என்ன சொல்கிறார் என்று ஊகித்து கைகூப்பியபடி “அவ்வாறே செய்கிறேன் சூதரே. என் தமையன் என்ன சொல்கிறாரோ அதையே என் வழிகாட்டியெனக் கொள்கிறேன்” என்றார். சூதர் தன்னுள் அலையடித்த மொழிக்கடலுக்கு அடியில் எங்கோ இருந்தார். மீண்டும் மெல்ல கிணைத்தோலை வருடியபடி “அவரே தொடங்கி வைக்கட்டும். அவரே பொறுப்பேற்கட்டும். ஓம் அவ்வாறே ஆகுக” என்றார்.

143 . ப்ருந்த தேவ மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஜானகல்லிதாரு :- ஜானகல்லி என்னும் ஊர்க்காரர். 
கன்னடியவரு :- கன்னட மொழி பேசுபவர்.

பகுதி இரண்டு : பொற்கதவம் [ 2 ]

பகுதி இரண்டு : பொற்கதவம்  [ 2 ]
அஸ்தினபுரியின் பேரரசியின் பெயர் சத்யவதி. அவள் யமுனை நதிக்கரையில் மச்சபுரி என்ற சிற்றூரை ஆண்ட மீனவர்குலத் தலைவனின் மகள். அவள் தந்தை சத்யவான். பத்து மீனவக்குலங்களுக்குத் தலைவனாக ஆனபின்னர் அவன் தசராஜன் என்று பெயர் பெற்றான். சத்யவான் இளைஞனாக இருந்தபோது கரையோரப் படகு ஒன்றில் உறங்குகையில் ஒரு கனவு கண்டான். முழுநிலவு நாளில் யமுனையின் கரிய நீரிலிருந்து செந்நிறமேனி ஈரத்தில் மின்ன ஓரு பேரழகி எழுந்து வந்து அவனை நோக்கி புன்னகை புரிந்தாள். அவளுடைய கண்கள் மட்டும் மீன்விழிகள் போல இமையாதிருந்தன.
கண்விழித்தெழுந்த சத்யவான் நிலவெழுந்தபின் மீன்பிடிக்கலாகாது என்ற தன் குலநெறியை மீறி படகை நீரில்செலுத்தி சித்திரை முழுநிலவில் ஓட்டிச்சென்று யமுனையின் நடுநீரை அடைந்தான். நீரலைகள் ஒளியாக அலையடித்துக் கொண்டிருந்த இரவில் யமுனைநதி துள்ளும் வெள்ளி மீன்களால் கலகலத்துக் கொண்டிருந்தது. அதன் பரப்பில் கண்களால் தேடியபடி அவன் அலைந்து கொண்டிருந்தபோது நீரைக்கிழித்தபடி மேலெழுந்து வந்து கைகளை வீசிப்பறந்து திரும்பி நீருள் அமிழ்ந்த அழகியைக் கண்டான்.

அவள் பெயர் அத்ரிகை. யமுனையின் ஆழத்திலுறைந்த பேரன்னையின் மகள்களில் ஒருத்தி. நிலவொளியில் நீந்திக்களிக்கும் அவளைத் தொடர்ந்து படகில் சென்றுகொண்டே இருந்த சத்யவானை ஒரு தருணத்தில் அவள் திரும்பிப்பார்த்தாள். தாமரைக்குமிழ் முலைகளில் நீர் வழிய, செந்நிறக் கூந்தல் முதுகில் ஓட அவள் அவனுடைய படகை அணுகி அதன் விளிம்பைப் பற்றியபடி நீலமணிக்கண்களால் அவனைப் பார்த்தாள். அந்த நிலவொளியில் கண்ட அவனுடைய ஆண்மையின் அழகில் அவள் மயங்கினாள். சத்யவான் அவள் கைகளைப்பற்றி படகிலேற்றிக்கொண்டான். படகில் நிலவை சாட்சியாக்கி தன் குலச்சின்னத்தை அவள் கழுத்திலணிவித்து அவளை அவன் காந்தருவ மணம் புரிந்துகொண்டான்.
அதன்பின் ஒவ்வொரு இரவும் படகை எடுத்துக்கொண்டு யமுனைக்குள் சென்று அவன் அவளைச் சந்தித்தான். அவளுடலெங்கும் நிறைந்திருந்த நீராழத்தின் மீன்மணம் அவனை பித்துகொள்ளச்செய்தது. அவள் நினைவன்றி ஏதுமில்லாதவனாக பகலெல்லாம் யமுனைக்கரையில் கிடந்த அவனுக்கு என்ன நிகழ்ந்தது என்று குலப்பூசகர் கண்டுசொன்னார். பலதலைமுறைகளுக்கொருமுறை எல்லை மீறிச்சென்று நீர்மகளிர்தம் காதலுக்கிரையாகக்கூடியவர்கள் உண்டு. அவர்கள் ஒருநாள் நீராழத்தில் மறைந்துபோவார்கள். அவனை அவர்கள் அறைகளில் மூடிவைத்தார்கள். தளையிட்டு பிணைத்தார்கள். அவன் கதவுகளையும் தளைகளையும் உடைத்துக்கொண்டு யமுனைக்குச் சென்றுகொண்டிருந்தான்.
இரண்டுமுழுநிலவுகளுக்குப்பின் அவள் அவனைக் காண வராமலானாள். அவன் தன்னிலை அழிந்து சடைமுடியும் கந்தலுமாக நதிக்கரையிலேயே வாழ்ந்தான். அவனுடைய குலம் அவனை கைவிட்டது. கலங்கிக் கலங்கி வழியும் கண்களும் நடுங்கிக்கொண்டிருக்கும் தலையும் குளிர்ந்து விரைத்த கைகளுமாக தடுமாறும் கால்களை எடுத்துவைத்து யமுனைநோக்கி பேசிக்கொண்டிருந்தான். இரவெல்லாம் யமுனையின் மீது துடுப்பிட்டபடி படகில் அலைந்தான். நினைவுக்கு மீளாத எதையோ தேடுபவன் போலிருந்தான்.
அடுத்த சித்திரை முழுநிலவுநாளில் அவன் தன் தோணியை யமுனையில் நிறுத்தி, கண்ணீருடன் துடுப்பை ஒடித்து நீரில் வீசி, கைகளை ஆடைகொண்டு பிணைத்து நீரில் குதிக்க எழுந்தபோது நீரைப்பிளந்து வெளியே வந்த அத்ரிகை இருகைகளிலும் ஏந்திவந்த ஓர் அழகிய பெண்மகவை அவனை நோக்கி நீட்டினாள். “நம் உறவின் எல்லை இது. இனி நாம் வேறு ஒரு உலகிலேயே சந்திக்கமுடியும்” என்று சொல்லி நீரில் மூழ்கி மறைந்தாள். அவன் அந்தக்குழந்தையை முகர்ந்து பார்த்தான். அத்ரிகையின் மீன்மணத்தை கொண்டிருந்தது அது.
சத்யவானுக்கு அத்ரிகையில் பிறந்த மகளுக்கு சத்யவதி என்று பெயரிட்டது அவனுடைய குடி. கரிய நிறமுள்ளவளாகையால் அவனுடைய அன்னை அவளை காளி என்றழைததாள். அவனோ அவளை மச்சகந்தி என்றே அழைத்தான். அவளை மார்போடணைத்து அவள் சிறுமேனியின் நறுமணத்தை முகர்வதையே தன் வாழ்வின் பேரின்பமாகக் கொண்டிருந்தான். அதன்பின் அவன் மணம் புரிந்துகொள்ளவில்லை. வேறெந்தப் பெண்ணும் அவனுக்கு பெண்ணாகத் தெரியவில்லை. ஆகவே அவளே மச்சகுலத்தின் இளவரசியென அறியப்பட்டாள்.
நிலத்தை விட நீரே அவளுக்கு உவப்பானதாக இருந்தது. நீருக்குள் அவளுக்கு சிறகுகள் முளைப்பதாக அவள் தோழிகள் சொன்னார்கள். மனிதர்கள் ஒருபோதும் சென்று பார்க்கமுடியாத நீராழங்களுக்கெல்லாம் அவள் முக்குளியிட்டுச் சென்றாள். அவர்கள் எவரும் அறிந்திராத முத்துக்களுடன் திரும்பி வந்தாள். மெல்ல திருப்பிப்பார்த்தால் யமுனையில் படகோட்டிய ஒவ்வொருவரையும் காட்டும் அரிய முத்துக்கள் அவை என்றனர் குலப்பூசகர். யமுனைநதியின் மணல்திட்டுகளின் நாணற்புதர்களுக்குள் நாட்கணக்காக தங்கியிருந்தாள். நிலவொளியில் நீர்வெளியைப் பிளந்து எம்பி கைவிரித்துத் தாவி விழும் அவளை படகிலிருந்து பார்த்தபோது அவள் அன்னையே மீண்டுவந்ததாக உணர்ந்தான் சத்யவான். முத்துப்போல சருமம் மின்னும் அவளைப்போன்ற பேரழகி ஒருத்தி அவன் குலத்தில் ஒருபோதும் பிறந்ததில்லை என்று மீனும் முத்துக்களும் பெற்றுக்கொண்டு குலப்பாடல்களைப் பாடவந்த சூதர்கள் சொன்னார்கள். அவளுடைய புகழ் அவர்களின் பாடல்களின் வழியாக பாரதவர்ஷமெங்கும் பரவியது.
அஸ்தினபுரியை ஆண்ட சந்திரகுலத்து மன்னன் சந்தனு தன் ஐம்பதாவது வயதில் வேட்டைக்காக காட்டுக்குச் சென்று வேட்டைமுடிந்த இரவில் யமுனைக்கரையோரமாக போதிமரம் ஒன்றின் கிளைக்கவர்மீது சிறுகுடிலமைத்துத் தங்கினார். தன் புல்லாங்குழலுடன் குடில்முகப்பில் வந்தமர்ந்து முழுநிலவின் ஒளியில் அலையடித்து ஒளிவிடும் நதியைப் பார்த்தபடி வாசித்துக்கொண்டிருந்தபோது நதிப்பரப்பில் ஓர் அழகிய மீன் துள்ளிவிளையாடுவதைக் கண்டார். கரையிலிருந்த இரு மென்மரங்களைச் சேர்த்துக்கட்டி அதிலேறி நீர்ப்பரப்புக்குள் சென்ற பின்னர்தான் அது ஓர் அழகிய பெண் என்பதை அறிந்தார். அவள் நீந்திச்செல்ல அவர் பின் தொடர்ந்தார். அவள் மீனாகவும் பெண்ணாகவும் உருமாறிக்கொண்டிருப்பதாக நினைத்தார்.
நெஞ்சுதாளா ஆவலுடன் அவர் மேலும் அவளை அணுகிச்சென்றபோது நீரில் ஊறிய மென்மரங்கள் மூழ்கத் தொடங்கின. அவர் நீரில்குதித்து கரைநோக்கி நீந்த ஆரம்பித்தார். நிலவொளியில் யமுனை கிளர்ச்சிகொண்டிருந்ததனால் அலைகள் அவர் தோள்களுடன் மல்லிட்டன. கைசோர்ந்து அவர் நீரில் மூழ்கத் தொடங்கினார். மேலெழுவதற்காக அவர் செய்த முயற்சிகளெல்லாம் அவர் கைகளை மேலும் களைப்புறச்செய்தன. நீருக்குள் மூழ்கி தன் தலைக்குமேல் நிலவொளி நீரிலாடும் நடனத்தைப்பார்த்தபடி கீழே சென்றுகொண்டே இருந்தபோது அவர் தன்னை நோக்கி அவள் நீந்தி வருவதைக் கண்டார். அவளுடைய கண்கள் மீன்விழிகள் போல இமையாது திறந்திருந்தன.
அவள் நீர்க்கொடி போல குளிர்ந்து வழவழப்பாக இருந்த தன் கைகளால் அவர் கைகளை பற்றிக்கொண்டாள். அவளுடன் நீருக்குள் பறந்துசென்று யமுனையின் அடியில் பரவியிருந்த மாய உலகத்தைக் கண்டார். இளங்காடுகள் நீரலைகளில் நடனமிட்டன. பொன்னாலும் வெள்ளியாலும் உடல் கொண்ட மீன்கள் சிறகுகளை விசிறியபடி அவன் கேட்கமுடியாத சொற்களை உச்சரித்தபடி பறந்துசென்றன. அச்சொற்கள் குமிழ்களாக எழுந்து நூறாயிரம் வண்ணங்கள் காட்டி வானுக்குச் சென்றன.
மேலும் ஆழத்திற்குச் சென்றபோது அங்கு கைகள் சிறகுகளாக மீன்களைப்போல் பறக்கும் பேரழகிகளைக் கண்டார். தாமரை முகமும் உருண்ட கைகளும் திரண்ட தோள்களும் கொண்ட பத்மினிகள், வாழைக்கூம்பு முகமும் நீண்ட கைகளும் மெலிந்த தோள்களும் கொண்ட சித்ரிணிகள், சங்குமுகமும் சிறிய கைகளும் நெகிழ்ந்த தோள்களும் கொண்ட சங்கினிகள், யானை மதம் கொண்ட ஹஸ்தினிகள். பேதையரும் பெதும்பையரும் மங்கையரும் மடந்தையரும் அரிவையரும் தெரிவையரும் பேரிளம்பெண்களுமென அவர்கள் கனவுருக்காட்சியென மிதந்தனர்.
திரும்பும் கழுத்துகளின் நளினங்கள், பறக்கும் கூந்தலை அள்ளும் பாவனைகள், ஓரவிழிப்பார்வையின் மின்வெட்டுகள், சுழித்துவிரியும் உதட்டு முத்திரைகள், அசையும் கைகளின் நடனங்கள், தோள்சரிவின் குழைவுகள், இடை வளைவின் ஒயில்கள், பின்னழகின் குவிதல்கள், முலைநெகிழ்வுகளின் பேரெழில்கள் வழியாக அவர் சென்றுகொண்டிருந்தார். ஒவ்வொரு பெண்ணிலும் ஒருவாழ்நாளைக் கழித்தவராக யுகயுகமாகச் சென்று ஒருகணம் கொப்பளித்து உடைவதுபோல நீருக்குமேலே வந்தார். இழந்த மூச்சை அடைந்தவராக கைகால்களால் துழாவி யமுனைத்தீவொன்றின் நாணல்களைப் பற்றிக்கொண்டார்.
அவருடன் அவளும் கரையேறி வந்தாள். ஈரமணலில் உடைகளற்ற உடலுடன் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு நிலவொளியில் அமர்ந்திருக்கும் கன்னியின் அருகே மண்டியிட்டு சந்தனு கேட்டார் “நீ யார்? மானுடப்பெண்ணேதானா?” அவள் மெல்லிய வெண்பற்களைக் காட்டி புன்னகைபுரிந்து “மச்சகுலத்தலைவன் சத்யவானின் மகள் நான், என்பெயர் சத்யவதி” என்றாள். அவள் உடலில் நீராழத்தில் அவர் உணர்ந்த வாசனையை அறிந்தார். புதுமீன் வாசனையா மதநீரின் வாசனையா என்றறியாமல் அவர் அகம் தவித்தது. அவள் கைகளைப் பற்றிக்கொண்டு “யமுனையின் மகளே, நீ அஸ்தினபுரியின் அரசியாகவேண்டும்” என்றார். “நான் மீனவப்பெண்ணல்லவா?” என்று அவள் சொன்னபோது “மும்மூர்த்திகள் எதிர்த்துவந்தாலும் தளரமாட்டேன். உன்னையன்றி இனியொரு பெண்ணை தீண்டவும் மாட்டேன்” என்று சந்தனு வாக்களித்தார்.
சூதர்கதைகள் வழியாக அன்றி அஸ்தினபுரியின் மக்கள் சத்யவதி என்னும் கரியமீனவப்பெண் அஸ்தினபுரிக்கு அரசியான விதத்தை அறிந்திருக்கவில்லை. அதைக்கேட்பதில் அவர்களுக்கு நிறைவே கைகூடவில்லை. ஆகவே சூதர்கதைகள் நாள்தோறும் வளர்ந்தன. சத்யவதியின் உடல்மணம் அறிந்து நாகங்கள் படமெடுத்து பின்னால் வந்தன என்றார்கள். யானைகள் துதிக்கைதூக்கிப் பிளிறின என்றார்கள். கந்தர்வர்களும் கின்னரர்களும் யட்சர்களும் மலர்வாசம் விட்டு அவளைச் சூழ்ந்திருந்தனர். அவள் வாசனை கனவுகளில் வந்து அறியாத எவற்றையோ நினைவுறுத்தியது.
பதினெட்டு ஆண்டுகாலம் சத்யவதியின் மேனியின் வாசனையன்றி வேறெதையும் அறியாதவராக அரண்மனைக்குள் வாழ்ந்தார் சந்தனு. ஒவ்வொருநாளும் புதியநீர் ஊறும் சுனை. ஒவ்வொரு காலையிலும் புதுமலர் எழும் மரம். ஒவ்வொருகணமும் புதுவடிவு எடுக்கும் மேகம். தீராதயமுனையின் அடித்தளத்திலிருந்து சத்யவதி கொண்டுவந்த முத்துக்களின் கதைகளைப்பற்றி சூதர்கள் சொன்னார்கள். ஒன்றைப்போல் இன்னொன்றில்லாதவை அம்முத்துக்கள். நீரின் அடித்தளத்தில் மட்டுமே எழும் ரகசியமான வாசம் கொண்டவை. அவைதான் சந்தனுவை அவளுடைய அடிமையாக காலடியில் விழச்செய்திருந்தன.
அவள் தன்னுடன் கொண்டுவந்த சிப்பியாலான பேழையில் இருநூற்றியிருபது முத்துக்கள் இருந்தன என்றனர் சூதர்கள். ஒவ்வொரு முழுநிலவுநாளிலும் அவள் பொற்சிப்பி திறந்து ஒருமுத்தை சந்தனுவுக்குக் காட்டினாள். அந்தமுத்தின் அழகில் மெய்மறந்து அதையே மீளமீள முகர்ந்தும் பார்த்தும் அவர் வாழ்ந்தார். நூறாண்டுகள் பழைய சோமரசம்போல, இமையத்தின் சிவமூலிகை போல அது அவரை மயக்கி உலகை மறக்கச்செய்தது. அவரது கண்கள் புறம்நோக்கிய பார்வையை இழந்தன என உள்நோக்கித் திரும்பிக்கொண்டன. கனவில் இசைகேட்கும் வைணிகனைப்போல அவர் விரல்கள் எப்போதும் காற்றை மீட்டிக்கொண்டிருந்தன. அன்னை மணம் அறிந்த கன்றின் காதுகளைப்போல அவர் புலன்கள் அவளுக்காக கூர்ந்திருந்தன. கந்தர்வர்களின் முகங்களில் மட்டுமே இருக்கும் புன்னகை எப்போதும் அவரிடமிருந்தது. பதினெட்டாண்டுகளில் இருநூற்று இருபது முத்துக்களும் தீர்வது வரை சந்தனு அந்தப்புரம்விட்டு வெளியே வரவில்லை.
கடைசிமுத்தையும் பார்த்தபின்பு அவர் தன்னை உணர்ந்தபோது அவரது மெலிந்த உடல் ஆடைகளுக்குள் ஒடுங்கிக்கிடந்தது. தோலுரிந்த சுள்ளி போன்ற கைகால்களுடன் வெளிறி ஒட்டிய முகத்துடன் படுக்கையில் கிடந்தார். கண்மூடி யமுனையின் ஆழத்தை கற்பனையில் கண்டுகொண்டு படுத்திருந்த அவர் உடலில் நூறாண்டு மூப்பு படர்ந்திருந்தது. ‘கன்றுக்கு பாற்கடல் மரணமேயாகும்’ என்று முதுநிமித்திகர் சொன்னார். அவருடலில் நாள்தோறும் காய்ச்சல் படிப்படியாக ஏறி வந்தது. அவரது நாடியைப்பிடித்துப்பார்த்த அரண்மனை வைத்தியர்கள் அதில் படைக்குதிரையின் குளம்படிச்சத்தம் ஒலிப்பதாகச் சொன்னார்கள். ‘ஆழம்’ என்ற சொல்லை சந்தனு கடைசியாகச் சொன்னார். நாசி விரித்து அதன் வாசனையை ஏற்பவர்போல மூச்சிழுத்தார். அம்மூச்சை வெளிவிடவில்லை.
சந்தனுவின் அரசியாக வந்தபின்னர் சிலநாட்களிலேயே அஸ்தினபுரியின் ஆட்சியை முழுக்க சத்யவதியே ஏற்றுக்கொண்டாள். மதம் கொண்ட யானையை பார்வையாலேயே அடக்கி மண்டியிடச்செய்யும் ஆற்றல்கொண்டவளாக அவளிருந்தாள். ஆயிரம் கண்களுடன் அவள் நாட்டை பார்த்துக்கொண்டிருந்தாள். ஆயிரம் கைகளுடன் ஆட்சிசெய்தாள். சித்திரைமாதம் முழுநிலவன்று மட்டும் அவள் அரச ஆடைகளைக் களைந்து மீனவப்பெண்ணாக மாறி தன்னந்தனியாக ரதத்தில் ஏறி காடுகளைத்தாண்டி யமுனைநதிக்கரையில் இருந்த தன் கிராமத்துக்குச் சென்றாள் என்றனர் சூதர்கள்.

ஐந்தாவது மருந்து

ஐந்தாவது மருந்து

எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடித்தவன் இருக்கும் ஊரில் கொக்கோகோலா கிடைக்கவில்லை. வழியெங்கும் அடர்த்தியான தென்னந்தோப்புகளில் இளநீர்க்குலைகள்தான் தொங்கின. சரியான தாகம். பிரதாப் ‘பேசாமலிரு. போய் நல்ல கிணற்றுத்தண்ணியே சாப்பிடலாம் ‘என்றான்.
ஊருக்கும் ஒரு மலையாள நெடி இருந்தது, பெயரில் தொடங்கி . அச்சன்குளத்துக்குக் கார்கள் வருவதே அதிகமில்லை போலும். மாட்டுவண்டிப் பாதையில் இரு செம்மண் குழிகள் இணைஓடைகள் போல உருவாகியிருந்தன. அடிக்கடி தென்பட்ட குளங்களிலெல்லாம் தாமரைகள். அபூர்வமாக நீலத்தாமரையைக்கூடப் பார்த்தேன்.
‘ஒரு கிராக்கைப்பாக்க இத்தனைதூரம் வரணுமாண்ணு இருந்தது. ஆனா ஊரைப்பாக்கிறப்ப வரவேண்டிய ஊர்தாண்ணு படுது ‘என்றேன்.
‘தளவாய் கிராக்கு மட்டுமில்லை. அவனோட நல்ல கட்டுரைகள் முக்கிய ஜேர்னல்களில வந்திருக்கு ‘ என்றான் பிரதாப் மேனன்.
‘எயிட்ஸுக்கு மருந்தா ? அடுத்த மருத்துவ நோபல் வெற்றியாளனை இந்த கிராமத்தில் பாக்கப் போறமா ? சினிமாக்கதை மாதிரில்லா இருக்கு ?
‘பாக்கலாம் ‘ என்றான் பிரதாப்.
அச்சன் குளம் வசதியான வேளாள வீடுகள் கொண்டது.அழி இறக்கிய இரண்டுதட்டு ஓட்டு வீடுகள் .சிமிண்ட் களமுற்றங்கள். பெரிய வைக்கோல்போர்கள். களங்கள்தோறும் ஏதாவது பொருட்கள் உலர, பெண்கள் காவலிருந்தனர்.
ஆறுமுக பவனம் ஊரிலேயே பெரிய வீடு. களமுற்றத்தில் கார் சென்று நிற்க திண்ணை பெரிதாகியபடியே வந்தது. ஐம்பதுபேர் வரிசையாகப் படுக்கலாம். முற்றத்தில் உளுந்து காயப்போட்டிருந்தது. திண்ணையிலிருந்த கிழவர் கண் மீது கைவைத்துப் பார்த்தார்.
‘வணக்கம் ‘
‘வாங்க தம்பி … உக்காருங்க…ராஜப்பாவ பாக்க வந்தியளா ? ‘ ‘
‘ஆமா. திருவனந்தபுரத்திலேருந்து வாறம் ‘
‘ஒக்காருங்க . பார்வதீ ‘
ஒரு தடித்த அம்மாள் மோர் கொண்டுவந்தாள் .டம்ளர்களிலல்ல, பெரிய செம்பில் . விட்டுக்குடிக்க சிறு பித்தளைப் போணிகள்.
‘நீங்க அவனோட கூட்டுக்கரம்மாரா தம்பி ? ‘
‘ஆமா, அவன்கூட சேந்து படிச்சோம் ‘
‘கோட்டும் சூட்டுமா காரில வாறீங்க. இவனும் நல்லாத்தானே படிச்சான். எப்பிடி இருக்கான் பாருங்க. பண்டாரம் பரதேசி மாதிரி. எப்பிடி இருக்கவேண்டிய பய… ‘
அதற்குள் மாடியிலிருந்து தளவாய் ராஜா இறங்கி வந்தான் . ‘ வாடே வாடே ‘ என்று சிரித்தபடி . நரைத்தாடி. காவிவேட்டி, துண்டு. ‘வாடே மேல போலாம் ‘
‘என்னடே சாமியாராயிட்டியா ? ‘
‘எங்க ? ஆனா ஊரிலே இந்தவேசம் பெரிய செளரியம். கிராக்குத்தனமா இருக்கலாம். கல்யாணம் காட்சிக்குப் போகாட்டி பிரச்சினையில்லை. இதக் கட்டாம கிராமத்தில சுதந்திரமா இருக்க முடியாது. என்ன , அப்பப்ப சிலர் திருநீறு பூசிக்கணும்ணு வருவாவ. சரி வா ‘
அவன் அறை ஒரு பெரிய ஆய்வகமும் ஒரு நூலகமும் குரங்குகளால் இரண்டறக் கலக்கப்பட்டது போல இருந்தது.
‘எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிச்சுட்டேன்னு எழுதியிருந்தே … ‘
‘ஆமா. அதப்பத்தி இன்னும் யாருட்டயும் சொல்லல. உங்க கிட்ட சில விஷயங்கள் பேசணும். பேசாட்டி எனக்கு தல வெடிச்சுடும்போல இருந்தது… அதான் எழுதினேன்…. ‘
‘வெளையாடறியா ? ‘
‘ ஒரு அசல் கண்டுபிடிப்பு இந்தியாவிலே நடக்கவே முடியாதுண்ணு நீ நம்பறதுதான் பிரச்சினை. காரணம் இங்க நவீன மருத்துவம் வெறும் நுகர்பொருளாத்தான் இருக்கு. ஆராய்ச்சியே நடக்கலை. நவீன மருத்துவமே வெள்ளைக்காரனுக்குரியதுண்ணு நாம நம்பறோம் .. ‘
‘அதான் உண்மை ‘
‘ஆனா நமக்குண்ணு அதைவிட பழசான ஒரு மருத்துவ மரபு இருக்கு.. உதாரணமா சித்த மருத்துவம்… ‘
‘இருக்கு. ஆனா இப்ப சொன்னியெ அதான் சரி. அது பழசு. அதில ஆராய்ச்சியே நடக்கலை. அறிவியல் ரீதியான அணுகுமுறையே கெடையாது. எல்லாருக்கும் பொதுவான எந்த நிரூபணமுறையும் இல்லை. முக்காப்பங்கு வெறும் மோசடி . அதிலயும் இண்ணைக்கு சித்த மருத்துவம்ங்கிறது ஸ்டாராய்டுகளால ஆடற ஆட்டம் . ஏகப்பட்ட உலோகங்கள் வேற . பாதி மருந்துகள் சிறுநீரகத்த சீரழிச்சுடும். ‘என்றான் பிரதாப்
‘நான் மறுக்கல்லை. இப்ப அது என் வேலை இல்லை. இண்ணைக்கு நீ பாக்கிற சித்த மருத்துவம் உண்மைல அதிக பட்சம் பதினாறாம் நூற்றாண்டிலே உண்டாகி வந்தது. ஆனா அது உண்மைல குமரிக்கண்டத்தோட காலம் முதல் இருந்துட்டு வார ஒரு வைத்திய மரபு . உலகத்திலேயே பழைய மரபு இது. அந்தக்காலத்த வச்சு பாத்தா உலகத்திலேயே முன்னேறிய மரபும் இதுதான். ஆனா படிப்படியா அது அழிஞ்சுட்டு வந்தது .ஏன்னா வரலாற்ற எடுத்துப் பார்த்தா ஒண்ணு தெரியும், தமிழ் நாகரீகம் அழிய ஆரம்பிச்சபிறகுள்ள காலம்தான் நம் கவனத்துக்கே வந்திருக்கு. தொல்காப்பியமே கூட அழிஞ்சுபோன ஏராளமான நூல்களோட சாரத்தை சுருக்கி எதிர்காலத்துக்காக சேத்து வச்ச நூல்தான். எல்லாப் பாட்டும் ‘என்மனார் புலவர் ‘னுதான் முடியுது. தமிழ் வைத்தியமுறையும் அழிய ஆரம்பிச்ச காலம்தான் நாம அறியக்கூடிய தொல்பழங்காலம். அதுக்கு முன்னால பல ஆயிரம் நூல்கள் இருந்திருக்கு. ‘
தளவாய் தொடர்ந்தான் ‘ ‘ மழை விட்ட பிறகு தூவானம் மாதிரி சில ஏட்டுச்சுவடிகள் கிடைக்க அதை வச்சு அந்தக்காலத்தில உருவாக்கின ஒரு மருத்துவமுறைதான் சித்த மருத்துவம். நாம இப்ப பாக்கிற சித்த வைத்தியம் அத நவீன மருத்துவ முறைப்படி பதினெட்டாம் நூற்றாண்டில சிலர் மாற்றி அமைச்சது…. ‘
‘அரைகுறை அறிவு அறியாமையவிட ஆபத்தானது… ‘
‘ஆமா. கண்டிப்பா. எனக்கு தற்செயலா எங்க தாத்தாவொட அண்ணா வச்சிருந்த சுவடிகள் சிலது மச்சிலே கிடைச்சது. பிராமி லிபியிலே எழுதின சுவடிகள் கூட சிலது அதிலே இருந்தது. அதப் படிக்க ஆரம்பிச்ச பிறகுதான் எனக்கு கிறுக்கு பிடிச்சுதூண்ணு அம்மை சொல்வா.அது சரிதான் . ஒரு நூலுக்கும் இன்னொரு நூலுக்கும் நடுவிலே கிடைக்காம போன ஆயிரம் நூல் இருக்கு. அது என் கற்பனையத் தூண்டிவிடுது . விடவே முடியலை. தூக்கமே இல்லைண்ணு வச்சுக்கோ ‘
‘நீ உன் வாழ்க்கையை வீணடிக்கிறே. அவ்வளவுதான் சொல்வேன் ‘என்றான் பிரதாப்.
‘எல்லாருமே ஏதாவது ஒரு விதத்திலே வீணடிச்சுட்டுதான் இருக்கோம்ங்கிறது என் எண்ணம் . ‘என்று தளவாய் சிரித்தான். ‘இண்ணைக்குள்ள சித்த வைத்தியத்தொபொட  முக்கியப் பிரச்சினை அது அலோப்பதிமுறைகளை மறைமுகமா ஏத்துக்கிட்டு அதுக்கேத்தாப்பிலே மாத்தப்பட்டிருங்கிறதுதான். இரண்டு முறைகளுக்கும் அடிப்படையே வேற. நேர் மாறுண்ணு கூட சொல்லலாம். அலோப்பதி நோய்க்குக் காரணத்தை மனித உடலுக்கு வெளியே தேடுது. கிருமிகள் , பூச்சிகள் இந்தமாதிரி. சித்த மருத்துவத்தப் பொறுத்தவரை நோய்ங்கிறது மனித உடலிலேயே இருக்கு. மனித உடல் அதோட சமநிலையை இழக்கிறதுதான் நோய். அதாவது நோய்க்கு எதிரா உடலை தயாரிக்கிறதுதான் சித்த மருத்துவம், கிருமியக் கொல்றது இல்லை. நோயில்லாதபடி வாழ்க்கையை அமைச்சுக்கறதப்பத்தித்தான் அது பேசுது… ‘
‘நான் சித்த வைத்தியத்த இப்ப நியாயப்படுத்த மாட்டேன் ‘ என்று அவன் தொடர்ந்தான். ‘ இண்ணைக்கு நவீனமருத்துவத்தில்தான் புது ஆராய்ச்சிகள் இருக்கு. மத்த அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தறதும் அங்கதான் அதிகம். உலகம் முழுக்க பொதுவான நிரூபணமுறைகள் அவங்களுக்கு இருக்கு . ஆனா ஆராய்ச்சிக்கு கண்டிப்பா சித்த வைத்தியம் மாதிரியான மாற்று வழிகளை பயன்படுத்திப் பாக்கணும் . நான் செஞ்சது அதுதான் ‘
‘உன் மருந்து சித்த மருந்தா ? ‘
‘அப்டி சொல்ல முடியாது. என் கொள்கை அங்கேருந்து முளைச்சது, அவ்வளவுதான் ‘ என்றான் தளவாய்.
‘எய்ட்ஸுக்கு மருந்துண்ணு இதுவரை அம்பது சித்தவைத்தியனுங்க அறிவிச்சாச்சு .எல்லாமே போலி ‘ என்றான் பிரதாப்.
‘அவங்கள்லாம் பண்ணிய தப்பு ஒண்ணுதான். சித்த வைத்தியச் சுவடிகளிலே எய்ட்ஸ் மாதிரியான ஒரு நோயோட இலக்கணம் இருக்கு. அதுக்கான மருந்தை இவங்க அப்டியே சொல்றாங்க. அதெல்லாம் பிரயோசனப் படறதில்லை ‘
‘ஏன் ? ‘
‘ஏன்னா நோய் அதுதான். கிருமி வேற ‘ என்றான் தளவாய் . ‘பரிணாமக் கொள்கைப்படி ஒவ்வொரு உயிரும் அது சார்ந்து வாழக்கூடிய சூழலுக்கு ஏற்ப மாறிட்டே இருக்கு. இப்ப மனித உடல் ரொம்ப மாறிட்டது. பலவகையான மருந்துகளை நாம பயன்படுத்தறோம். அதுக்கேற்ப அந்த வைரஸ் தன் மொத்த அமைப்பையும் மாத்தி இன்னொண்ணா மாறிட்டே இருக்கு . இப்ப உள்ள ஹெச்.ஐ .வி கிருமி அப்டி புதிசா உருவாகி வந்தது… அதோட மரபணு அமைப்பே வேற . அதுக்கு புது மருந்துதான் வேணும். சித்த மருத்துவத்தில் தாவர மருந்துக்களை அஜீவம்னு சொல்றாங்க. பறவைகள் மிருகங்களிலேருந்து எடுக்கிற மருந்துக்கள் ஜீவம் . மத்த ரசாயனங்களும் உப்புக்களும் உலோகங்களும் ரசாயனம் . மூணுமருந்துமே இதுக்குப் பயன்படாது… ‘
‘குழப்பாம சொல்லு. உன்னோட மருந்தோட கொள்கை என்ன ? ‘
‘ அதை ஒரு கதையாத்தான் சொல்லணும். ‘ என்று அவன் ஆரம்பித்தான் ‘ தென்காசீல ஒரு ராஜ குடும்பம் இருந்தது கேட்டிருக்கியா ? பாண்டிய வம்சத்தோட ஒரு கிளை அது . அவங்க குடும்பமே மர்மமான ஒரு நோயால அழிஞ்சுபோச்சுண்ணு சரித்திரத்தகவல் இருக்கு . இது நடந்து ஐநூறு வருஷம் இருக்கும் . அப்ப அந்த நோயால கிட்டத்தட்ட அம்பதாயிரம்பேர் செத்திருக்காங்க. அண்ணைக்கு இது பெரிய எண்ணிக்கை இல்ல . அம்மை நோயால லட்சக்கணக்கானபேர் செத்திட்டிருந்த காலம் அது . தென்காசி ராஜகுடும்பம் மட்டுமில்ல அவங்களுக்கு சிகிழ்ச்சை செய்த வைத்தியங்க எல்லாருமே செத்துட்டாங்க. அவங்களில ஒரு வைத்தியர் எழுதிவச்ச நோய்க்குறிப்புகள் அதிருஷ்டவசமா கிடைச்சிருக்கு . அந்த சுவடிகள் எங்க தாத்தா கைக்கு வந்து இப்ப என் கையிலே இருக்கு. நோயின் லட்சணங்களைக் கேட்டா அசந்துடுவீங்க. காரணமில்லாத காய்ச்சல் . எடை குறையிறது. நோய் எதிப்புசக்தி இல்லாம ஆகி காசம் முதலான நோய்கள் தாக்கி மெல்லமெல்ல உசிர் போயிடுது . ‘
‘எய்ட்ஸா ? உண்மையான ஆதாரமா இது ? ‘ என்றான் பிரதாப் பரபரப்புடன் .
‘அசல் சுவடியே இருக்கு . நீ பரிசோதனை செய்யலாம் ‘ என்றான் தளவாய் ‘ ராஜகுடும்பத்திலே ஒரு இளவரசனுக்கு நோய் வந்திட்டது. அவன் மனம் வெறுத்து குற்றாலம் காட்டுக்குள்ளார போனான். தற்கொலை செய்றதுக்காகத்தான். அங்க அதிகாலைல தேனருவீல குளிச்சிட்டிருந்த ஒரு சித்தரைக் கண்டான். காலில விழுந்து அவன் அழுதப்ப மனமிரங்கிய சித்தர் அவனோட ஊருக்கு வந்தார்.அவர் பேர் மாம்பழச்சித்தர். பெரும்பாலும் மாம்பழத்தையே உணவா சாப்பிடுவார்ணு கதை. அவர் முதலிலே நோயாளிகளை ஆராய்ச்சி பண்ணினார். அப்ப இருந்த எந்த மருந்துமே அந்த நோயை ஒண்ணும் பண்ணமுடியல்லை .அவரால நோயை அடையாளம்காணவே முடியலை. வாதம், பித்தம் ,கபம் அப்டாங்கிற மூணு ஆதார சக்திகளிலே உண்டாகிற சமநிலைக் குலைவினாலேதான் நோய்கள் வருதுங்கிறதுதான் இந்திய வைத்தியமுறைகளிலே பொதுவா இருக்கிற சித்தாந்தம். புராதன தரிசனமரபான சாங்கியத்திலேருந்து வந்த பார்வை அது. ஆனா இந்த மர்ம நோய் கண்ட நோயாளிகளிலே சிலருக்கு வாதம் கோபிச்சிட்டிருந்தது . சிலருக்கு பித்தம் தாறுமாறா இருந்தது. சிலருக்கு கபம் உச்சம் . என்ன காரணம்னே அவரால சொல்லமுடியல. மூன்று ஆதார சக்திகளையும் இயக்கக் கூடியது உடலில் இருக்ககூடிய மூலாதார அக்னி. அந்த தீ வலுவிழந்து அணையிறதுதான் இந்த நோய் என்று கண்டுபிடிச்சார். சித்த வைத்தியத்தோட மொழியிலே இருக்கே ஒழிய அந்த கணிப்பு சரிதான். ‘
‘ஆமாம் ‘என்றான் பிரதாப். எனக்கு அவன் அப்படி சொன்னது ஆச்சரியமாக இருந்தது.
‘எப்படி ? ‘ என்றேன்
‘நோய் எதிர்ப்பு சக்தீங்கிறது என்ன ? உயிர் வாழணும்னு உயிர்களுக்கு இருக்கிற அடிப்படையான துடிப்பு. செல்களிலே அதுக்கான இச்சை இருக்கு.அது இல்லண்ணா உயிர்சக்தி அழிஞ்சுபோயிட்டுதுண்ணுதானே அர்த்தம் ? ‘ என்றான் பிரதாப்
‘ சித்தர் பழைய ஆதாரங்களைத் தேடிப்பிடிச்சு பரிசீலிச்சார். அப்ப அந்த ஆதாரங்களெல்லாம் சித்தர்கள்ங்கிற நாடோடி அறிஞர்கள் மத்தியிலே வாய்மொழி மரபா இருந்திருக்கணும் . அப்ப அவருக்கு ஒரு விஷயம் தெரிஞ்சது ஆயிரம் வருஷம் முன்னாடி இதேநோய் பாண்டிய ராஜகுடும்பத்த தாக்கியிருக்கு. அப்ப போகர் இருந்தார். இவர் எந்த போகர், எத்தனையாம் போகர்ணு தெரியலை. ஆனா அவர் பேரும் போகர். அவர் ஒரு மருந்து கண்டுபிடிச்சு நோயை விரட்டினார் … கருங்குரங்கோட ரத்தம் ,சிறுநீர் ரெண்டயும் கலந்து அவர் ஒரு மருந்து செஞ்சார். அதுதான் சித்த வைத்தியத்தில முதல் ஜீவ மருந்து. அதுவரைக்கும் சித்தமருத்துவம் அஜீவமருந்துக்களை மட்டும்தான் பயன்படுத்திட்டிருந்தது. அது ஒரு பெரிய புரட்சியோட தொடக்கம்… ‘
‘ அந்த மருந்து இப்ப இருக்கா ? ‘ என்றேன்
‘இப்ப சித்தமருத்துவம் ஏராளமான ஜீவ மருந்துக்களைப் பயன்படுத்துது. சிட்டுக்குருவி லேகியம் உங்களுக்கெல்லாம் நல்லா தெரிஞ்சதுதான். ஆனா ஜீவ மருந்துக்களால இந்த நோயை ஒண்ணுமே செய்ய முடியல்ல. அதனாலே மாம்பழச்சித்தர் ரெண்டு வருஷம் ஆராய்ச்சி செய்து ஒரு மருந்து கண்டுபிடிச்சார். ஈயத்தையும் தங்கத்தையும் கலந்து ஒரு புது மருந்துக் கலவை . சித்த மருத்துவத்திலே ரசாயனங்களை பயன்படுத்தறது அதுதான் முதல் தடவை. இது இரண்டாவது பெரும் புரட்சி. ‘
தளவாய் தொடர்ந்தான். ‘உலோகங்களையும் ரசாயனங்களையும் சித்த மருத்துவத்தில் பஸ்பம் பண்ணியும் , ஸ்புடம் போட்டும் ,பாஷாணமா ஆக்கியும் பல வகையில இப்ப பயன்படுத்தறாங்க. அதுக்குத் தொடக்கம் மாம்பழச் சித்தர்தான். அந்த நோய் அவர் செய்ஞ்ச பஞ்ச பாஷாணத்தாலே குணமாயிட்டது. அவரோட சீடர்கள் அந்த ரசாயனவைத்தியத்தை சித்தவைத்தியத்துக்குள்ள தனி மரபா வளர்த்துப் பரப்பினாங்க ‘
‘இப்ப அந்த மருந்துகளினால பயன் இருக்கா ? ‘ என்றேன்
‘பலவிதமான நோய்களுக்கு அந்த மருந்துக்கள் இப்பவும் பயன்படுது. ஆனா எய்ட்ஸுக்கு அதனால பயன் இல்லை. ‘
‘ஏன் ? ‘
‘நவீன மருத்துவம் நோயைக் கிருமிகளோட தாக்குதலா பாக்குது. அந்தக் கோணத்திலே யோசிச்சுப்பாருங்க ‘
‘அப்ப எய்ட்ஸ் கிருமி சரித்திர ஆரம்ப காலம் முதல் இருக்கா ? ‘
‘இருந்திருக்கணும். அது மனுஷ உடலிலே சாதாரணமா இருக்கக் கூடிய ஏதோ வைரஸ் தான் . இப்பக்கூட அதன் வேறு வகை வடிவம் ஆப்ரிக்கக் குரங்குகளிலே இருக்கிறதா கண்டுபிடிச்சிருக்காங்க . அந்தக் குரங்குகளை இந்த வைரஸ் ஒண்ணும் செய்யறதில்லை. ஆப்ரிக்காவிலே தான் மனிதன் குரங்குக்கு சமானமான ஏதோ உயிரிலேருந்து பரிணாமம் அடைஞ்சு வந்தான்னு சொல்றாங்க. அப்ப இந்த வைரஸ் அப்பவே நம்ம உடம்போட சேந்து இருந்திட்டிருக்கு. அத நம் உடம்பிலேருந்து பிரிக்க முடியாது. அதன் முதல் தாக்குதல் எப்ப ?ஏன் அது நோயா ஆச்சு ? நான் நினைக்கிறேன், எப்ப மனிதன் கலச்சாரம் அடைஞ்சானோ , எப்ப குரங்கு அல்லாம ஆனானோ அப்பத்தான். சமைச்சு சாப்பிட ஆரம்பிச்சவா ? சீசன் பாக்காம உடலுறவு கொள்ள ஆரம்பிச்சவா ? குடும்பமா ஆனப்பவா ? தெரியலை. ஆனா குரங்குகளுக்கு இந்த வைரஸால அபாயமே இல்ல. அது தாக்குறது மனுஷனைத்தான் ‘
‘இல்லாட்டி மனுஷக் கலாச்சாரத்தைத்தான் ‘ என்றான் பிரதாப்
‘ஆமா. மனுஷக் கலாச்சாரம் இந்த வைரஸை எதுத்துப் போராடிட்டிருக்கு . மனுஷன் முதலில் பச்சிலைகள் மூலம் மருத்துவம் செய்ய ஆரம்பிச்சப்ப இந்த வைரஸ் பலமிழந்தது. ஆனா அது மெதுவா தன் உயிரியல் அடிப்படைகளை மாத்தி அமைச்சுக்கிட்டு மறுபடி தாக்கியிருக்கு. அப்பத்தான் போகர் ஜீவ மருந்துக்களைக் கண்டுபிடிச்சார் . அது இந்த வைரஸைக் கட்டுப்படுத்திட்டது. ஆனா மெல்ல ஜீவமருந்துக்களுக்கும் எதிரா அது தன்னை மாத்திக்கிட்டது. அப்பத்தான் மாம்பழச்சித்தர் ரசாயன மருந்தைக் கண்டுபிடிச்சார். அந்தமருந்து இந்த வைரஸைக் கட்டுப்படுத்திட்டது. அதன் பிறகு ரசாயன மருந்துக்களைத் தாண்டி இப்ப புதுவடிவிலே பலமடங்கு சக்தியோட திரும்ப வந்திருக்கு. இப்ப உள்ள எந்த மருந்தும் அதைக் கட்டுப்படுத்தாது… ‘
‘ஒரு நிமிஷம் தளவாய். நீ எல்லாத்தயும் சித்த வைத்தியத்தோட நிறுத்திட்டே. இது உலகளாவிய ஒரு பிரச்சினை… ‘என்றேன்
‘இதோபார் , உலகத்திலேயே பழைய வைத்திய முறை சித்த வைத்தியம்தான். இங்கேயிருந்துதான் இந்த மருந்துக்கள் சீனாவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் அரேபியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் போயிருக்கு. அந்தநாட்டு மக்கள் எல்லாருமே தமிழ்நாட்டைத் தேடிவந்த காலம் ஐநூறு வருஷம் முன்னாடிகூட இருந்திருக்கு. காலகட்டத்த வச்சு ஒப்பிட்டுப்பாத்தா சித்தவைத்தியம் தாத்தாமாதிரி. மத்த வைத்தியமுறைகள் பேரப்பிள்ளைகள் இல்லாட்டி கொள்ளுப்பேரனுங்க . எல்லாமே இங்கேருந்து போய் வளந்ததுதான். அப்பிடி இல்லைண்ணாக்கூட ஒண்ணு பாத்தாதெரியும் மருத்துவமுறைகள் அதிசீக்கிரமா உலகம் முழுக்க பரவிடுது. ஏறத்தாழ எல்லா இடத்திலேயும் புது மருந்துகள் ஒரே காலத்திலேதான் உபயோகத்துக்கு வருது… ‘ தளவாய் தொடர்ந்தான் ‘இண்ணைக்கு நவீன மருத்துவம் பயன்படுத்தற மருந்துகள்கூட மூணு வகைதான். பென்சிலின் மாதிரி தாவர மருந்துக்கள்லாம் அஜீவம். வாக்சின்கள் எல்லாம் ஜீவம். மத்ததெல்லாம் ரசாயனங்கள் . மூணுமே எய்ட்ஸை குணப்படுத்தாது. ஏன்னா இந்த வைரஸ் மூணையுமே தாண்டிப்போகக் கூடிய உயிரியல் அமைப்பை வளத்து எடுத்திட்டிருக்கு… ‘
‘அப்ப ? ‘
‘நாலாவது மருந்தைத்தான் பரிசோதனை பண்ணிப் பாக்கணும். ‘என்றான் தளவாய்.
‘என்ன அது ? ‘
‘யோசிச்சுப் பார். பூமியிலே என்னென்ன இருக்கு ? தாவரம், பிற உயிர்கள், ரசாயனங்கள் . அப்புறம் ? ஆமா, கதிர்கள்…. பல நூறு நுண்கதிர்கள்…இப்பவே நாம கதிர்வீச்சை கான்சருக்கெல்லாம் மருந்தா பயன்படுத்தறோம்.. ‘
‘நீ என்ன பண்ணினே ? கதிர் வீச்சினாலே லாபத்த விட நஷ்டம்தான் அதிகம். அதைக் கட்டுப்படுத்தவே முடியாது… ‘ என்றான் பிரதாப்
‘ஏற்கனவே கதிரியக்கம் சித்த வைத்தியத்திலே இருக்கும் . சித்த வைத்தியர்கள் ரசக்கட்டு அப்டான்னு ஒரு உத்தி இருக்கு. பாதரசத்த திடமான கட்டியா ஆக்கறாங்க. அதாவது அதன் மூலக்கூறு அமைப்பையே மாத்திடறாங்க. அது மென்மையான கதிரியக்கத்தை உருவாக்குது. நான் அந்த வழிகளைப் பயன்படுத்தி பழைய ஜீவ, அஜீவ , ரசாயன மருந்துகளிலே மென்மையான கதிர்வீச்சை செலுத்தினேன். இந்த மருந்து கிடைச்சது ‘ என்று அவன் ஒரு சீசாவைக் காட்டினான். ‘கட்டப்பட்ட ரசத்தின் அடியில் ஆறுமாசம் வைச்ச ஒரு ஜீவரசாயனக் கலவை இது . இது உடம்பிலே உள்ள செல்களுக்கு மிக மிகக் குறைவான கதிரியக்க சக்தியைக் குடுத்திடுது . கதிரியக்கத்துக்கான சக்தியை அது நம்ம உடல்வெப்பத்திலேருந்து எடுத்துக்கிடும். அந்த கதிரியக்கம் நம்ம உடல்செல்களை பாதிக்காது. பாக்டீரியாவைக்கூட ஒண்ணும் செய்யாது. வைரஸ்களைமட்டும்தான் அழிக்கும்… ‘
‘இதால பயன் இருக்கா ? ‘
‘காட்டறேன். ஓமனக்குட்டியையும் தாமஸையும் ஞாபகமிருக்கா ? ‘ ‘
‘ஆமா. எய்ட்ஸ் நோயாளிகள். என் ஆஸ்பத்திரியிலேருந்து விட்டுட்டு போனவங்க ‘
‘இங்கதான் இருக்காங்க ‘ என்ற தளவாய் கீழே எட்டிப்பார்த்தான். ‘ வரச்சொல்லியிருந்தேன். வந்திருக்காங்க . ‘ சிறு சாளரம் வழியாக எட்டிப்பார்த்து ‘ மேலே வாங்க ‘
மட்கிய குச்சி போல படுக்கையில் எழ முடியாமல் கிடந்த இருவரும் ஆரோக்கியமான உடலுடன் சிரித்தபடி வந்து நின்றதைக் கண்டு பிரதாப் பிரமித்துவிட்டான்.
‘எப்படி இருக்கே ஓமனா ? ‘
‘நல்லா இருக்கேன் சார். இங்க இன்னும் ஒரு மாசம் இருந்தா போயிடலாம்னு சார் சொல்றார் ‘
:
‘இவங்களை நீ நல்லா சோதனை பண்ணிப் பாக்கலாம்… இப்ப இவங்க கிட்டே எய்ட்ஸ் வைரஸ் இல்லை ‘ என்றான் தளவாய்.
பிரதாப் அவர்களையே வெறித்துப் பார்த்தபடி வெகுநேரம் சொல்லிழந்து அமர்ந்திருந்தான். சட்டென்று எழுந்து தளவாயை ஆரத்தழுவிக் கொண்டான். ‘டேய்… பித்துக்குளி மாதிரி இருந்துட்டு.. டேய்.. நீ பெரிய ஆளுடா… .. ‘
‘நம்ம நாட்டுக்கு அடுத்த நோபல் பரிசுய்யா! ‘என்றபடி நானும் தளவாயைக் கட்டிக் கோண்டேன்.
‘ஆனா இந்தமருந்தோட மறுபக்கம் ஒண்ணு இருக்கு… ‘ என்றான் தளவாய் விடுவித்தபடி .
‘என்ன ? ‘
‘இந்த வைரஸ் முதலிலே தாக்கிய பிறகு பல ஆயிரம் வருஷம் தாவர மருந்துக்களோட கட்டுக்குள்ள இருந்திருக்கு. ஆனா ஜீவ மருந்து கண்டுபிடிச்ச பிறகு ஆயிரம் வருஷத்திலே மறுபடி தாக்கியிருக்கு. உலோகரசாயன மருந்துக்களை ஐநூறு வருஷங்களிலே தாண்டி வந்திருக்கு. அதாவது அதன் பரிணாமவேகம் அதிகமாயிட்டே இருக்கு. இப்ப மனுஷங்க மருந்துக்களை உபயோகிக்கிறது ரொம்ப அதிகம். மனுஷங்க உலகம் முழுக்க சுத்திட்டே இருக்காங்க. அப்ப அது சீக்கிரமா அடுத்த கட்ட பரிணாமவளர்ச்சியை அடைஞ்சுடும். அதாவது அடுத்த தாக்குதல் நூறுவருஷத்துக்குள்ள இருக்கலாம்… ‘
என் மனம் சில்லிட்டது
‘அப்ப கதிரியக்க மருந்தையும் இந்த வைரஸ் தாண்டிடும். பூமியிலே வேற என்ன இருக்கு மருந்தாக ? எதுவுமில்லை! அஞ்சாவது மருந்தை மனிதன் கண்டுபிடிப்பான்னு என்ன உத்தரவாதம் இருக்கு ? இந்த வைரஸ் அப்ப மனிதகுலத்தையே அழிச்சிடுமா ? ‘என்றான் தளவாய்.
‘என்னடா உளறுறே ? ‘
‘இல்லடா . தத்துவார்த்தமா யோசிச்சுப்பாரு. மனுஷ இனமே இயற்கையை எதுத்து போராடி வளந்ததுதான். நம்ம கலாச்சாரமே இயற்கைக்கு எதிரானதுதான். காடுகளை அழிச்சிட்டோம். தண்ணீரை வீணடிச்சிட்டோம். இப்ப இயற்கை நம்மைத் திருப்பி அடிக்குதா என்ன ? நம்ம இடுப்பில கயிறு கட்டி மறுநுனியை கைல பிடிச்சுட்டு போறவரைக்கும் போ அப்டாண்ணு விட்டிருக்கா ? கயிறு முடிஞ்சதும் என்ன ஆகும் ? ‘
‘என்னடா ஆச்சு உனக்கு ? அற்புதமான மருந்தைக் கண்டுபிடிச்சுட்டு… ‘
‘இல்லடா . இப்ப என் மருந்து பலலட்சம் பேரைக் காப்பாத்தும் . ஆனா இதே மருந்துதான் நூறு வருஷம் கழிச்சு பலகோடி பேர் சாகவும் காரணமா அமையும். மாம்பழச்சித்தர் கண்டுபிடிச்ச மருந்துதான் இண்ணைக்குள்ள எயிட்ஸ் கிருமிய உருவாக்கிச்சு. நான் எந்த மாதிரி பயங்கரமான கிருமிய உருவாக்கப் போறேன் ? ‘
நாங்களும் கிட்டத்தட்ட வாயடைந்து போனோம்.
‘மருந்து கண்டுபிடிக்கிறதுக்குப் பதில் நாம ஏன் இயற்கையோட சமரசம் பண்ணிக்க கூடாது ? இந்த எய்ட்ஸோட ஒத்துப்போய் வாழ முயற்சி செய்யலாமே ? இயற்கையான முறையில் இதைத் தவிர்த்துட்டு வாழலாமே ? இந்த வைரஸ் நம்மை விடாது. ஏதோ வடிவிலே நம்மகூட இருக்கும் . அதை எதுக்க எதுக்க அது விசுவரூபம்தான் எடுக்குது ! ஏன் அதை அப்டியே விட்டுடக் கூடாது ? அது நம்மைக் கட்டுப்படுத்தற ஒரு இயற்கைச் சக்தீண்ணு ஏன் நினைக்கக் கூடாது ? நமக்கும் ஏதாவது ஒரு கட்டுப்பாடு வேணும். இப்ப போற போக்கிலே நாம் சீக்கிரமே பூமியையும் அழிச்சு நாமும் அழிஞ்சிடுவோம்… ‘ தளவாய் சொன்னான். ‘ ஐந்தாவது மருந்து ஒண்ணு இருக்குண்ணா அது நிரந்தரமான மருந்தாத்தான் இருக்க முடியும்… ‘
‘நீ இந்தமருந்தை இப்ப வெளியிடு .மத்த பிரச்சினைகளை மெல்ல பேசிக்கலாம் ‘என்றான் பிரதாப்
‘இல்லடா. நான் நூறுவருஷம் கழிச்சு மனுஷகுலமே அழியக் காரணமா இருக்க விரும்பலை. இந்த விஷயத்துக்கு ஒரு தெளிவான விடை கிடைக்காமல் நான் இந்த மருந்தை வெளியிட மாட்டேன். ‘ என்றான் தளவாய்.
எங்களுக்கும் பதில் கிடைக்கவில்லை. வருத்தமாகவே கிளம்பிவந்தோம்.
சோலைச்சித்தரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தளவாயைத்தான் காலப்போக்கில் அப்படி அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர் வீட்டைவிட்டுப் பக்கத்து சோலைக்குக் குடிவந்து இப்போது எட்டு வருடங்கள் ஆகின்றன.
****