அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

2/3/14

நூல் ஐந்து : மணிச்சங்கம்[ 4 ]

நூல் ஐந்து : மணிச்சங்கம்[ 4 ]
ஆதுரசாலையில் உறங்கிக் கொண்டிருந்த விசித்திரவீரியன் ஸ்தானகர் வந்து எழுப்பியதும் கண்விழித்து சிவந்த விழிகளால் பார்த்து என்ன என்று புருவம் அசைத்தான். ஸ்தானகர் “பேரரசி” என்று சுருக்கமாகச் சொன்னதும் பதற்றத்துடன் எழுந்து “எங்கே?” என்றான். ஸ்தானகர் “முகமண்டபத்தில் இருக்கிறார்கள்” என்றதும் அவன் எல்லா புலன்களும் விழித்துக்கொண்டன. “இங்கா?” என்றான். “ஆம்” என்றார் ஸ்தானகர். பின்பு புன்னகையுடன் “கேகயநாட்டரசி போலத் தோன்றுகிறார்கள்” என்றார்.
சிரித்துக்கொண்டே உடையணிந்த விசித்ரவீரியன்மேல் மேலாடையை எடுத்துப்போட்ட ஸ்தானகர் “ஆனால் சொந்த மகனை வனத்துக்கு அனுப்ப வந்திருக்கிறார்கள்” என்றார். “எனக்கு ரகுவம்சத்தின் மூன்று அன்னையரில் கேகயத்து அரசியைத்தான் பிடித்திருக்கிறது ஸ்தானகரே. ஓர் அன்னைக்கு மூன்று குழந்தைகள் இருந்தால் எந்தக்குழந்தை தீராப்பசியுடன் முலையை உறிஞ்சுகிறதோ அதைத்தானே அதிகம் விரும்புவாள்” என்றான்.
ஸ்தானகர் “அன்னைப்பன்றி அந்தக்குழவிக்கு பாலூட்ட மெலிந்த குழவியைத் தின்றுவிடும்” என்று சொல்லி “இன்னும் சற்று பணிவு தங்களில் இருக்கலாமென நினைக்கிறேன் அரசே. கேகய அரசி பணியும் தலைகளை மட்டுமே கண்டு பழகியவர்” என்றார்.
ஸ்தானகர் அவன் கச்சையை கட்டியபடி “கொற்றவைபோல. தலைகளை எற்றி ஆடும்போது மட்டுமே கால்களில் கழல்களை உணர்கிறார்” என தனக்குத்தானே போல சொன்னார். “முதலில் உமக்கு சற்று பணிவு தேவைப்படும்” என்றான் விசித்திரவீரியன்.
அரச உடையுடன் விசித்திரவீரியன் வெளியேவந்தான். முகமண்டபத்தின் சாளரம் வழியாக வெளியே பார்த்துக்கொண்டு சத்யவதி நின்றிருந்தாள். ஒரே விழியசைவால் ஸ்தானகரை தலைவணங்கி வெளியேறச்செய்த பின்பு அவனை நோக்கித்திரும்பி “நேற்று என்ன நாள் என அறிவாயா?” என்றாள். விசித்திரவீரியன் பேசாமல் நின்றான். சத்யவதி “நேற்று கருநிலவுநாள்” என்றபின் அழுத்தமாக “உயிர்கள் கருவுறுவதற்கான நாள்” என்றாள்.
“ஆம்” என அவன் பேசத்தொடங்குவதற்குள் “சியாமை மூத்தவளை சோதனையிட்டிருக்கிறாள். அவள் சொன்னாள்” என்றாள் சத்யவதி. “ஆம்” என்று விசித்திரவீரியன் சொல்லி பார்வையை திருப்பிக்கொண்டு “நான் அவளிடம் வெறுமே பேசிக்கொண்டிருந்தேன்” என்றான்.
சத்யவதி சீறும் முகத்துடன் “உனக்கு வெட்கமாக இல்லையா? நீ ஒரு ஆண் என ஒருகணமேனும் உணர்ந்ததில்லையா?” என்றாள். விசித்திரவீரியன் விழிகளை அவளைநோக்கித் திருப்பி “நான் ஆணென்று உணராத ஒரு கணமும் இல்லை அன்னையே” என்றான். “சொல்லப்போனால் இவ்வுலகின் ஒரே ஆண் என்றும் உணர்ந்திருக்கிறேன்.”
சத்யவதி திகைத்தவள்போல நோக்கினாள். “புரவிகளின் கடிவாளத்தை எப்போதும் கையில் வைத்திருக்கிறவன்தான் சாரதி எனப்படுவான்” என்றான் விசித்திரவீரியன். “எனக்கு விரைவின் விதிகளை நீங்கள் கற்பிக்கவேண்டியதில்லை.”
அவள் அந்த நிமிர்வை எதிர்பார்க்காதவளாக சற்று திகைத்து பின்பு தன்னை மீட்டுக்கொண்டு “இதோபார், நான் உன்னிடம் விவாதிப்பதற்காக இங்கே வரவில்லை. உன் கவிச்சொற்களைக் கொண்டு என்னை நீ எதிர்கொள்ளவும் வேண்டாம்” என்றாள்.
“சொல்லுங்கள்” என்றான் விசித்திரவீரியன் அமைதியாக. “நான் அப்பெண்களை கவர்ந்துவரச்சொன்னது இந்தக் குலம் வளர்வதற்காக. உன் குருதியிலுள்ள சந்தனு மன்னரின் வம்சம் அவர்கள் வயிற்றில் முளைப்பதற்காக” என்றாள் சத்யவதி.
“அன்னையே, பெண் என்பவள் ஒரு வயல் என்றாலும்கூட அதை பண்படுத்தவேண்டியிருக்கிறதல்லவா?” விசித்திரவீரியன் கேட்டான். “அதற்கு உனக்கு நேரமில்லை” என்று சத்யவதி வாளால் வெட்டுவதுபோன்ற குரலில் சொன்னாள். “காத்திருக்க எனக்கு பொறுமையும் இல்லை.”
“நல்லது, நான் எக்கணமும் இறந்துவிடுவேன் என நினைக்கிறீர்கள்” என்றான் விசித்திரவீரியன். “ஆம், அதுவே உண்மை. ஷத்ரியப்பெண்ணாக உண்மையை எதிர்கொள்ள எனக்கு தயக்கமில்லை. அடுத்த கருநிலவுநாள் வரை நீ இருப்பாயென எனக்கு எந்த தெய்வமும் வாக்களிக்கவில்லை…”
விசித்திரவீரியன் அவளை இமைகொட்டாமல் சிலகணங்கள் பார்த்தபின் “அன்னையே, உங்களுக்கு நான் யார்?சந்தனுவின் வம்சத்தை ஏற்றிச்செல்லும் வாகனம் மட்டும்தானா?” என்றான்.
சத்யவதி திடமாக அவன் கண்களை உற்றுநோக்கி “ஆம், அது மட்டும்தான். உன்னால் படைநடத்தி ஷத்ரியர்களை வெல்லமுடியாது. அரியணை அமர்ந்து குடிகளுக்கு நீதிவழங்கவும் முடியாது. அப்படியென்றால் நீ யார்? நீ வெறும் விந்தின் ஊற்று மட்டும்தான். கற்களால் அடைக்கப்பட்டிருக்கும் பாழ் ஊற்று. உன்னிலிருந்து எவ்வகையிலேனும் ஒரு சிறுமைந்தனைப் பெறவேண்டுமென்பதற்கு அப்பால் இன்று நீ எனக்கு எவ்வகையிலும் பொருட்டல்ல” என்றாள்.
விசித்திரவீரியன் புன்னகையுடன் “கசப்பானதாக இருப்பினும் உண்மை ஒரு நிறைவையே அளிக்கிறது” என்றான். சத்யவதி அவனை நிலைத்த விழிகளுடன் நோக்கி “விசித்திரவீரியா, வாழைப்பூ இதழ்களைக் களைந்து உதிர்த்துவிட்டு கனிமட்டுமாவதுபோல மனிதர்கள் அவர்கள் மட்டுமாக ஆகும் ஒரு வயது உண்டு. நான் அதில் இருக்கிறேன். இன்று நான் என் விதியை முழுமையாகவே பார்த்துவிட்டேன். எங்கோ ஒரு மீனவர்குடிலில் பிறந்தேன். நதிமீது பித்தியாக அலைந்தேன். பேரரசியாக இந்த அரியணையில் இன்று அமர்ந்திருக்கிறேன். இத்தனை வேடங்கள் வழியாக விதியொழுக்கு என்னை கொண்டுசெல்லும் திசை என்ன என்று இன்று அறிந்தேன். என் அத்தனை முகங்களையும் இன்று களைந்துவிட்டேன். நான் இன்று சந்தனுவின் மனைவி மட்டுமே. என் கடமை மேலுலகம்சென்று அவரைப்பார்க்கையில் அவரிடமிருந்து நான் பெற்றவற்றை சிதையாமல் கையளித்துவிட்டேன் என்ற ஒற்றைச்சொல்லை நான் சொல்லவேண்டும் என்பது மட்டுமே. வேறெதுவும் எனக்கு இன்று முதன்மையானது அல்ல” என்றாள்.
விசித்திரவீரியன் “அன்னையே, நீங்கள் தென்திசையிலிருந்து வந்த சித்தர் சொன்னதென்ன என்று அறிந்தீர்களா?” என்றான். சத்யவதி “ஆம், நான் நேற்றே அவரை அழைத்து அனைத்தையும் அறிந்தேன். உன் மூலாதாரச் சக்கரம் வலுவுற்றிருக்கிறது என்று அவர்தான் சொன்னார். ஆகவேதான் துணிந்து உனக்கு மணிமஞ்சம் அமைத்தேன். முதுநாகரிடம் நாகரசம் கொண்டுவரவும் சொன்னேன்” என்றாள்.
“ஆனால் என் அநாகதம் அனலின்றி இருக்கிறது என்று சொன்னார்” என்றான் விசித்திரவீரியன் அவளை கூர்ந்துநோக்கியபடி. “அதற்கு அவரிடமே மருத்துவம் கேட்போம்” என்று சத்யவதி பார்வையை திருப்பிக்கொண்டாள்.
“அன்னையே, அவரே உங்களிடம் சொல்லியிருப்பார், அதற்கு மருத்துவம் இல்லை என்று. என் உயிர் சிலந்திவலையில் ஒளிரும் நீர்த்துளி போன்றது என்றார் அவர்” என்றான் விசித்திரவீரியன். அவள் என்னசெய்யவேண்டுமென எதிர்பார்க்கிறேன்? சாதாரண பேதைத்தாயைப்போல அழவேண்டுமா? அழுதால் என் அகம் நிறைவுறுமா?
“ஆம், அது நிலையற்றது என்று மட்டும்தான் அதற்குப்பொருள். அது உறுதியாக உதிரும் என அவர் சொல்லவில்லை” என்றாள் சத்யவதி. “அனைத்து ஷத்ரியர்களுக்கும் வாழ்க்கை அப்படித்தான் உள்ளது. களம்செல்பவன் எந்த உறுதியுடன் கச்சை கட்டுகிறான்?”
ஆம், இவள் பேதையென அழுதால் என் மனம் நிறையும். ஆனால் அக்கணமே அவளை வெறுக்கத்தொடங்குவேன். அவ்வெறுப்பு வழியாக இவள்மீது எனக்கிருக்கும் பேரன்பை வென்று விடுதலை பெறுவேன். ஆனால் இவள் என்னை அதற்கு அனுமதிக்கப் போவதேயில்லை. விசித்திரவீரியன் பெருமூச்சுடன் “நான் நேற்று ஒன்றை உறுதியாகவே உணர்ந்தேன்…” என்றான். “அவள் மார்பில் என் தலையை சாய்த்தபோது என்வலையின் அதிர்வை உணர்ந்தேன். நான் அவளுடன் இணைந்தால் உயிர்தரிக்கமாட்டேன்.”
சத்யவதி சினத்துடன் “அது உன்பிரமை…உனது மழுப்பல் அது.. உன் கோழைத்தனத்தைக்கொண்டு ஐயங்களை உருவாக்கிக் கொள்கிறாய்” என்றாள். “உன்னைக் கொல்பவை உன் ஐயங்கள்தான். உன் உதடுகளில் இருக்கும் இந்தச்சிரிப்பு நாகத்தின் பல்லில் இருக்கும் விஷம்போன்றது.”
“நாகவிஷம் அதைக் கொல்வதில்லை அன்னையே” என்றான் விசித்திரவீரியன். “அவளுடன் உறவுகொண்டால் நான் இறப்பது உறுதி…” என்று அவள் கண்களைப்பார்த்தான். அவை சிறு சலனம் கூட இல்லாமல் தெளிந்தே இருந்தன. விசித்திரவீரியன் “அதில் எனக்கு வருத்தமும் இல்லை. வாழ்வை அறிந்தவனாதலால் இறப்பையும் அறிந்திருக்கிறேன்” என்றான்.
“நேற்று முன்தினம் என்றால் இப்படி உங்களிடம் என் உயிருக்காக வாதிட்டிருக்கமாட்டேன். நேற்று அந்தப் பெண்ணை நான் அறிந்துகொண்டேன். விளையாட்டுப்பேழையைத் திறந்து மயிற்பீலியையும் வண்ணக்கூழாங்கற்களையும் எடுத்துக்காட்டுவதுபோல அவள் தன் அகம் திறந்துகொண்டிருந்தாள் நேற்று. அவளுடைய மங்கலமும் அழகும் எல்லாமே என் மெல்லிய உயிரில் உள்ளது என்று அறிந்தபோது நேற்றிரவு என் அகம் நடுங்கிவிட்டது. என்ன செய்துவிட்டேன், எப்படிச்செய்தேன் என்று என் உள்ளம் அரற்றிக்கொண்டே இருந்தது. அந்த இரு கன்னியரையும் அமங்கலியராக்கி அந்தப்புர இருளுக்குள் செலுத்திவிட்டு நான் செல்வது எந்த நரகத்துக்கு என்று எண்ணிக்கொண்டேன்.”
“நிறுத்து” என சத்யவதி கட்டுப்பாட்டை இழந்து கூச்சலிட்டாள். “முட்டாள், கோழை …உன்னை இக்கணம் வெறுக்கிறேன். உன்னைப்பெற்ற வயிற்றை அருவருக்கிறேன். இந்தத் தருணத்துக்காகவே வாழும் என்னை நீ அவமதிக்கிறாய். என் கனவுகளுடன் விளையாடுகிறாய்” மூச்சிரைக்க அவள் அவனைப்பார்த்தாள். அவள் கழுத்தில் மூச்சு குழிகளையும் அலைகளையும் உருவாக்கியது. கண்களில் நீர் வந்து படர்ந்தது. “நீ என் மகன் என்றால், நான் சொல்வதைக் கேட்டாகவேண்டும். இது என் ஆணை!”
“ஆணையை சிரமேற்கொள்கிறேன் அன்னையே” என்று விசித்திரவீரியன் சொன்னான். புன்னகையுடன் “அதற்காக இவ்வளவு பெரிய சொற்களை சொல்லவேண்டுமா என்ன? உங்களுக்குத் தெரியாததா என்ன? வாழ்வும் மரணமும் எனக்கு சமம்தான். ஆகவே நன்மையும் தீமையும்கூட சமமானதே. உங்களுக்காக இப்பெரும் தீமையைச் செய்கிறேன்… நிறைவடையுங்கள். உங்கள் அரண்மனைக்குச் சென்று ஓய்வெடுங்கள்.”
சத்யவதி அவனைப்பார்த்து “உன் சொற்களை நான் உறுதியென்றே கொள்கிறேன். நீ சந்திரவம்சத்து மன்னன் என்பதனால்” என்றாள். விசித்திரவீரியன் என்னதென்றறியாத ஒரு புன்னகை செய்தான். சத்யவதி மெல்லக்கனிந்து “மகனே, நான் சொல்வதை நீ சற்றேனும் புரிந்துகொள். நீ மணம்புரிந்துகொண்டு அரியணை ஏறினால் மட்டும் போதும் என்றுதான் நான் எண்ணினேன். ஆனால் உனக்கு மைந்தரில்லையேல் இந்நாட்டு மக்கள் அமைதியிழப்பார்கள் என்று தோன்றியது. அத்துடன்…”
விசித்திரவீரியன் “அந்த ஐயத்தை உங்கள் சொற்களால் சொல்லவேண்டியதில்லை அன்னையே” என்றான். சத்யவதி பதறி “இல்லை நான் அப்படி நினைக்கவில்லை…” என்றாள். “பதினாறு திசைகளிலும் நினைப்பவர் நீங்கள். அதை விடுங்கள்” என்றான் விசித்திரவீரியன்.
“நீ அரசியரைக் கைப்பிடித்து அரியணையில் அமரவேண்டும். உன் குருதி அவளில் முளைவிடவேண்டும்….நான் சொல்வது ஏனென்றால்…” என்றாள். விசித்திரவீரியன் அவள் தோளைப்பிடித்து “அனைத்தையும் அறிந்துகொண்டேன். நீங்கள் எதையும் சொல்லவேண்டியதில்லை” என்றான்.
“நான் கிளம்புகிறேன். முதுநாகரிடம் இன்றும் பேசினேன். அந்த மருந்தை இன்றும் அளிக்கிறேன் என்றிருக்கிறார். இன்றும் மணியறை அமைக்கச் சொல்கிறேன்” என்றாள். “தங்கள் ஆணை” என்றான் விசித்திரவீரியன் சிரித்தபடி.
சத்யவதி பெருமூச்சுடன் கண்களைத் துடைத்துக்கொண்டு “உன்னை ஆதுரசாலையில் மருத்துவர்கள் சோதனையிட்டபின் நேராகவே மணியறைக்குக் கொண்டுசெல்வார்கள். நாளை காலை நான் உன்னை சந்திக்கிறேன்” என்றாள். “இதுவும் ஆணை” என்றான் விசித்திரவீரியன் அதே சிரிப்புடன்.
சத்யவதி வெளியேறி ரதமருகே சென்றாள். அங்கே ஸ்தானகரும் மருத்துவர்களும் பிற ஆதுரசாலைப் பணியாளர்களும் நின்றனர். சத்யவதி ஒவ்வொருவரிடமும் ஓரிரு சொற்கள் மட்டும் பேசி ஆணைகளிட்டாள். அவர்கள் பணிந்து குறுகிய உடலுடன் அவற்றை ஏற்றனர்.
ஸ்தானகர் உள்ளே வந்து “அரசே பேரரசி கிளம்புகிறார்” என்றார். “ஆம், ஆணையிட்டுவிட்டாரல்லவா?” ஸ்தானகர் புன்னகைசெய்தார். விசித்ரவீரியன் “அவர் கடலாமை போல. முட்டைகளைப் போட்டுவிட்டு திரும்பிப்பார்ப்பதேயில்லை. அவை தானே விரிந்து தன்வழியை கண்டுகொள்ளவேண்டும்…” என்றான். ஸ்தானகர் “திரும்பிப் பார்ப்பவர்களால் ஆணையிடமுடியாது அரசே” என்றார்.
விசித்திரவீரியன் உள்ளிருந்து சத்யவதியின் அருகே வந்து “அன்னையே, இந்தக் கோடைகாலத்தில் இன்னும் சற்று காற்றுவீச நீங்கள் ஆணையிடலாமே” என்றான். சத்யவதி “அதற்கு தவ வல்லமை வேண்டும்…என் அரசை உன் கரத்தில் அளித்துவிட்டு வனம் சென்று அதை அடைகிறேன்” என்றாள். அவளுடைய அழகிய வெண்பற்கள் வெளித்தெரிந்தபோது அவன் ஒன்றை அறிந்தான், அவன் மனதில் பேரழகி என்பவள் அவள் மட்டுமே.
சத்யவதி ரதமேறுவதற்காக ஒரு சேவகன் சிறிய மேடையைக்கொண்டு அருகே வைத்தான். அவள் ரதப்பிடியைப்பற்றி ஏறியபோது அவள் மேலாடை சரிந்தது. விசித்திரவீரியன் புன்னகையுடன் அதை எடுத்து அவள் மார்பின்மேல் போட்டான். அவள் முகம் மலர்ந்து, கண்கள் புன்னகையில் சற்று சுருங்கின. அவன் தலைமேல் கையை வைத்து தலைமயிரை மெல்லக் கலைத்துவிட்டு ரதத்தில் ஏறிக்கொண்டாள்.
விசித்திரவீரியன் தன் அறைக்குச் சென்று உடைகளை மாற்றிக்கொண்டிருந்தபோது ஸ்தானகர் வாசலில் நின்று “பயணம் செல்லவிருக்கிறீர்களா அரசே?” என்றார். “ஆம்” என்றான். “மருத்துவர்களிடம் கலந்தாலோசித்துவிட்டுச் செல்லலாமே” என்றார் ஸ்தானகர். “தாங்கள் களம் காணவேண்டும் அல்லவா?”
விசித்திரவீரியன் உரக்கச்சிரித்துக்கொண்டு திரும்பினான் “இனிமேல் மருத்துவர்கள் தேவையில்லை ஸ்தானகரே. அனைவரையும் இப்போதே அனுப்பிவிடுங்கள்…” ஸ்தானகர் தயங்க “அனைவரையும் முகமண்டபத்துக்கு வரச்சொல்லுங்கள்” என்றான்.
முகமண்டபத்தில் வந்து கூடிய மருத்துவர்கள் அனைவருக்கும் விசித்திரவீரியன் பரிசுகளை வழங்கி நன்றி சொன்னான். “சுதீபரே, சித்ரரே உங்களைப்போன்று பலரின் கைகளை நான் பதினைந்தாண்டு காலமாக என் உடலில் அறிந்துவருகிறேன். அது ஒரு நல்லூழ் என்றே எண்ணுகிறேன். மனிதர்கள் வளர்ந்தபின்னர் அவர்களை எவரும் தீண்டுவதேயில்லை. அதிலும் ஆண்களை அன்னியர் தொடுவதென்பதேயில்லை. எந்தச்சொற்களையும் விட உடல் ஆன்மாவை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கிறது. உங்கள் கைகள் வழியாக உங்களனைவரையும் நன்கறிந்திருக்கிறேன். ஒருவேளை அடுத்தபிறவியில் நாம் இலங்கையை ஆண்ட ராவணனையும் தம்பியரையும்போல பிறக்கமுடியும்…” என்றான். உடனே சிரித்தபடி “முன்னதாகவே விண்ணகம் செல்வதனால் நானே மூத்தவன்” என்றான்.
ஸ்தானகர் தவிர பிறர் உதடுகளை இறுக்கி கழுத்து அதிர கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தனர். பரிசுகளை நடுங்கும் கரங்களால் பெற்றுக்கொண்டனர். விசித்திரவீரியன் ரதத்தில் ஏறிக்கொள்ள ஸ்தானகர் ரதத்தை ஓட்டினார். அவன் எங்கே செல்ல விரும்புகிறான் என்று கேட்காமல் ரதத்தை நகரை விட்டு வெளியே கொண்டுசென்றார். நகரம் முன்மதிய வெயிலில் கண்கூசும் தரையுடனும் கூரைகளுடனும் சுவர்களுடனும் மெல்ல இயங்கிக்கொண்டிருந்தது.
விசித்திரவீரியன் “ஸ்தானகரே, சித்ராங்கதர் கந்தர்வனிடம் போரிட்டு உயிர்துறந்த அந்தச் சுனைக்குச்செல்ல வழி தெரியுமல்லவா?” என்றான் “ஆம் அரசே, இப்போது அவ்விடம் வரை ரதசாலை அமைக்கப்பட்டிருக்கிறது. மாதம்தோறும் பேரரசி அங்கே சென்று மூத்தவருக்கான கடன்களை ஆற்றுகிறார்.”
VENMURASU_EPI_25
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
விசித்திரவீரியன் ரதத்தட்டில் அமைதியாக அமர்ந்துகொள்ள ஸ்தானகர் ரதத்தை நகரம் விட்டு கொண்டுசென்றார். ரதம் ஆழமான நதிப்படுகை போன்ற நிலம் வழியாகச் சென்றது “அஸ்தினபுரியில் முன்பு கங்கை ஓடியதென்று சொல்கிறார்களே ஸ்தானகரே” என்றான் விசித்திரவீரியன்.
“ஆம், மாமன்னர் ஹஸ்தி இங்கே நகரை அமைத்தபோது இது கங்கையாக இருந்தது. பின்பு கங்கை திசைமாறிச்சென்றுவிட்டது” என்றார் ஸ்தானகர். “ஏன்?” என்று விசித்திரவீரியன் கேட்டான். “அதன் நீர்ப்பெருக்கு பெரிதாகிவிட்டது. இந்தச் சிறிய வழி அதற்குப் போதவில்லை.” விசித்திரவீரியன் “சரிதான்” என்று சொல்லி உரக்கச் சிரித்தான்.
ரதத்தை கங்கைச்சாலையில் விரையவைத்து பக்கவாட்டில் திரும்பி தட்சிணவனம் நோக்கிச் சென்றார் ஸ்தானகர். வண்டிச்சக்கரங்களின் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. உயரமற்ற மரங்கள் கொண்ட குறுங்காட்டுக்குள் மான்கூட்டங்கள் நெருப்புக்கதிர்கள் போல சிவந்து தெரிந்து துள்ளி ஓடின.
ரதத்தில் அமர்ந்து காட்டையே பார்த்துக்கொண்டிருந்த விசித்திரவீரியனை ஸ்தானகர் பார்த்தார். குழந்தையாக இருந்தபோது அவ்வாறுதான் பார்த்துக்கொண்டிருப்பான். ஸ்தானகர் பெருமூச்சுவிட்டார். விசித்திரவீரியன் இறந்துவிடுவானென்பதில் அவருக்கும் ஐயமிருக்கவில்லை. நோயில் திளைத்துக் கொண்டிருக்கும்போதுகூட அவன் மரணத்தை அவ்வளவுதூரம் திட்டவட்டமாக சொன்னதில்லை. அவன் ஒருபோதும் வீண்சொற்கள் சொல்பவனும் அல்ல.
ரதத்தை நிறுத்திவிட்டு ஸ்தானகர் காத்திருந்தார். விசித்திரவீரியன் இறங்கி “இந்தக் குன்றுக்குமேல்தானே…நான் ஒருமுறை வந்திருக்கிறேன். அன்று இந்தப்படிகள் இல்லை. என்னை மஞ்சலில் தூக்கிச்சென்றார்கள்” என்றான்.
“தங்களால் ஏறமுடியுமா?” என்று ஸ்தானகர் கேட்டார். “ஏறிவிடுவேன்…நடுவே சற்று அமரவேண்டியிருக்கும்… இளங்காற்று இருக்கிறதே” விசித்திரவீரியன் சொன்னான். பின்பு ஸ்தானகரைப் பார்க்காமல் “ஸ்தானகரே…நீங்கள் என் அன்னையை… ” என ஆரம்பித்தான்.
ஸ்தானகர் இடைமறித்து திடமான குரலில் “அரசே தயைகூர்ந்து புதிய கடமைகளைச் சொல்லவேண்டாம். என் கடமைகளும் முடிகின்றன” என்றார். விசித்திரவீரியன் அவர் கண்களைப் பார்த்தான். ஸ்தானகர் “ஒரு தெய்வத்தை வணங்குபவனே உபாசகன். நான் வனம்புகும் தினத்தை நீங்கள் முடிவெடுக்கவேண்டும்” என்றார்.
விசித்திரவீரியன் சிரித்துக்கொண்டு “அப்படியென்றால் இங்கேயே இருங்கள் ஸ்தானகரே… நான் காற்று வடிவில் திரும்பி வருவதென்றால் நிச்சயமாக இங்குதான் வருவேன்” என்றான். ஸ்தானகரும் சிரித்து “சிறந்த இடம்… அப்பால் ஹிரண்வதிக் கரையில் தேவதாரு மரங்களும் உண்டு. நல்ல மணமுள்ள காற்று இணைந்துகொள்ளும்” என்றார்.
“ஆம்…ஆதுரசாலையிலேயே வாழ்க்கையை கழித்துவிட்டீர்” என்றான். சிரித்தபடி “நோயே இல்லாமல் ஆதுரசாலையிலேயே வாழும்படி உம்மைப் பணித்திருக்கிறான் தலையிலெழுதிய தருமன்” என்றான். ஸ்தானகர் புன்னகையுடன் “அது ஊழ்தான். ஆனால் என் தமையன் குறுவாளைக்கூடத் தீண்டாமல் பீஷ்மரின் ஆயுதசாலையிலேயே இதைவிட அதிகமாக வாழ்ந்திருக்கிறான்” என்றார். விசித்திரவீரியன் வெடித்துச்சிரிக்க ஸ்தானகரும் சிரிப்பில் சேர்ந்துகொண்டார்.
“நீங்கள் நாளையே இங்கு வரவேண்டியிருக்கும் ஸ்தானகரே” என்றான் விசித்திரவீரியன். ஸ்தானகர் சாதாரணமாக “நாளை என்றால் வளர்பிறை இரண்டாம்நாள் அல்லவா? நன்று” என்றார். “இங்கே ஒரு குடிலமைக்க எனக்கு ஒருநாழிகை போதும். நினைவுகளை மீட்டிக்கொண்டிருக்க வளர்பிறை சிறந்த பருவம்…” என்று காட்டைப்பார்த்தார்.
“ஆம், பதினெட்டாண்டுகால நினைவுகள்” என்றான் விசித்திரவீரியன். ஸ்தானகர் இரு கைகளையும் விரித்து “இந்தக்கைகளில் உங்கள் அத்தனை எலும்புகளும் தசைகளும் நரம்புகளும் உள்ளன அரசே! ஒரு கூடைக் களிமண் இருந்தால் அரை நாழிகையில் உங்கள் உருவத்தை வடித்து அருகே வைத்துக் கொள்வேன்” என்றார். விசித்திரவீரியன் சிரித்துக்கொண்டு படிகளில் ஏறத்தொடங்கினான்.
ஆமைமுதுகு போன்ற உயரமில்லாத அந்தப்பாறை எழுந்து நின்ற இரண்டு யானைப்பாறைகளால் சூழப்பட்டிருந்தது. அதன் மையத்தில் நீள்வட்டமான அந்தச் சுனை தொலைவிலேயே ஒளிரும் நீலநிறத்தில் தெரிந்தது. நீருக்கு அந்த நீலநிறம் அமையும் என விசித்திரவீரியன் கண்டதேயில்லை. அருகே நெருங்கியபோது அவன் மூச்சிளைத்தான். அங்கே வெட்டவெளியில் வானத்தின் ஒளி கண்கூசும்படி தேங்கியிருந்தது. ஆமையோட்டு மூடிகொண்ட அலங்காரப்பேழையில் பதித்த நீலக்கல் போன்ற அந்தச் சுனையருகே சென்று விசித்திரவீரியன் அமர்ந்தான்.
பிறசுனைகளைப்போல அது அசைவுகளை அறியவில்லை. அதை உற்றுநோக்கி அமர்ந்திருந்தபோதுதான் விசித்திரவீரியன் அது ஏன் என அறிந்தான். அந்தச்சுனையில் மீன்கள் இல்லை. நீரில்வாழும் எந்த உயிர்களும் இல்லை. சுற்றிலும் மரங்கள் இல்லாததனால் அதில் வானமன்றி எதுவும் பிரதிபலிக்கவில்லை. இருபெரும்பாறைகளும் இருபக்கமும் மறைத்திருந்தமையால் அதன்மேல் காற்றே வீசவில்லை. யுகயுகங்களாக அசைவை மறந்ததுபோலக் கிடந்தது அந்தச் சுனை.
விசித்திரவீரியன் குனிந்து நீரைப்பார்த்தான். சித்ராங்கதனை அதற்குள் இழுத்துக்கொண்டு சென்ற கந்தர்வனான சித்ராங்கதன் உள்ளே வாழ்கிறானா என்ன? சித்ராங்கதன் அந்நீரில் எதைப்பார்த்திருப்பான் என்பதில் அவனுக்கு ஐயமிருக்கவில்லை. எந்நேரத்திலும் வேசரநாட்டு ஆடி முன் நின்று தன்னைத்தானே நோக்கி ஆழ்ந்திருக்கும் சித்ராங்கதனையே அவன் கண்டிருக்கிறான்.
சில கணங்களுக்குப் பின்னர்தான் அவன் அந்த நீர்பிம்பத்தின் விசித்திரத்தை உணர்ந்து பின்னடைந்தான். நம்பமுடியாமல் மெல்லக் குனிந்து மேலும் நோக்கினான். அவன் விலகியபோதும் விலகாமல் அது நோக்கிக்கொண்டிருந்தது. அது சித்ராங்கதன். விசித்ரவீரியன் நெஞ்சின் துடிப்பை சிலகணங்களில் தணித்தபின் மெல்லிய குரலில் “மூத்தவரே, நீங்களா?” என்றான். “ஆம்…ஆனால் இது நீயும்தான்” என்றான் சித்ராங்கதன். “எப்படி?” என்றான் விசித்திரவீரியன்.
“நன்றாகப்பார்…பட்டுத்துணியை நீவி நீவி ஓவியத்தின் கசங்கலை சரிசெய்வதுபோல உன்னை இதோ சீர்ப்படுத்தியிருக்கிறேன்…” விசித்திரவீரியன் பார்த்துக்கொண்டே இருந்தான். அது அவனும் கூடத்தான். “மூத்தவரே, அதுதான் நீங்களா?” என்றான் தனக்குள் போல. “ஆம், அதைத்தான் நான் வாழ்க்கை முழுவதும் செய்துகொண்டிருந்தேன்” என்றான் சித்ராங்கதன்.
விசித்திரவீரியன் துயரத்துடன் “மூத்தவரே, நான் உங்கள் வாழ்க்கையை பாழ்படுத்திவிட்டேனா என்ன?” என்றான். சித்ராங்கதன் இளமை ஒளிரும் முகத்துடன் சிரித்து “பிரியமான முறையில் பாழ்படுத்திக் கொள்வதற்காகத்தானே வாழ்க்கை அளிக்கப்பட்டிருக்கிறது சிறியவனே?” என்றான். விசித்திரவீரியன் வருத்தம் விலகாமலேயே புன்னகை செய்தான்.

No comments:

Post a Comment