அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/23/13

தேவலமன்னன் செய்த போர்கள்

தேவாங்க மன்னன் இவ்வாறு எல்லாச் சிறப்புகளும் பெற்று வீற்றிருக்கும் நாளில், தேவர்கள், அணிவதற்கு அழகான ஆடைகள் பெற்ற மகிழ்ச்சியில் குதூகலமுற்று ஆடைகளை அணிந்து கொண்டு, ஆடையின்றி நிர்வாணத்தோடு இருந்த அரக்கர்கள் முன்போய் சிரித்துப்பேசி கேலி செய்தனர். இதைப் பொறுக்காத அரக்கர்கள் தங்கள் மன்னன் வச்சிரதந்தன் பால் சென்று அரசே! தேவர்கள் பல நிறமான அழகிய ஆடைகளை அணிந்து கொண்டு எங்கள் முன் வந்து நம்மை மதியாமல் " நிர்வாணிகள் நாணமற்றவர்கள் " என்று சிரித்துக் கேலி செய்து இகழ்ந்து பேசினார்கள் என்றனர். இதைக் கேட்ட வச்சிரதந்தன் தனது உடன் பிறந்த புலிமுகனையும் சர்ப்ப நாவனையும் உடனே வரவழைத்துத் தம்பிகளே ! ஆடை அணிந்த அகம்பாவத்தால் தேவர்கள் நம்மை மிக மிக எள்ளிப் பேசினார்களாம். தேவாங்கனோ தேவர்களுக்கு ஆடைகள் வழங்கி நம்மைப் புறக்கணித்தான். கயிலை நாதனாவது நமக்கும் ஆடைகள் வழங்குமாறு தேவாங்கனுக்குச் சொல்லியிருக்கலாம். அவரும் அவ்வாறு செய்யவில்லை. அதனால் இப்போதே நாம் படைகளைத் திரட்டிக் கொண்டு தேவருலகம் சென்று தேவேந்திரனை முதலில் அழிக்க வேண்டும். பின் அவனுக்குத் துணைவரும் பிரம்ம விஷ்ணுக்களை வெல்லவேண்டும். இச்செயலைக் கேள்வியுற்று நம்மைப் புறக்கணித்த ஈசன் கலங்க வேண்டும். இத்தகைய வெற்றியை நாம் அடைந்திடல் வேண்டும். என்று சினம் பொங்கக் கர்ச்சித்தான். இதைக் கேட்ட தம்பியர் இருவரும் "அண்ணலே! தேவேந்திரனை வெல்வது அரிதன்று. ஆனால் அவனுக்கு உதவியாக வரும் திருமாலை வெல்வது எளிதல்ல. இதற்கு முன்னும் நாம் போரில் திருமாலிடம் தோற்றுள்ளோம். அதனால் மீண்டும் இப்போது இந்நிலையில் போருக்குப் போவது சரியென்று படவில்லை " என்றனர். அதன் பின் மூவரும் கலந்து பேசி, சிவபெருமானை நோக்கித் தவஞ்செய்து அவனிடம் தக்க வரங்களைப் பெற்றுக் கொண்டு, போருக்குப் போவது என்று முடிவு செய்தனர். முடிவின் படி மூவரும் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவஞ் செய்தனர். தவத்திற் கிணங்கிப் பெருமானும் அவர்கள் முன் தோன்றி ' நீங்கள் விரும்பும் வரம் யாது? ' என்று கேட்டார். அரக்கர்கள் " சூரியன் தோன்றாமல் உலகம் எப்போதும் இருளில் இருக்க வேண்டும் " என்று கேட்டனர். அதற்குச் சிவபெருமான் ' சூரியன் உதிக்காவிடில் விண்ணுளோரும் மண்ணுளோரும் வாழமுடியாது. வேத ஒழுக்கமும் பிறவும் அழியும். அதனால் இதை விட்டு வேறு வரம் கேளுங்கள்' என்றார். உடனே அரக்கர்கள் சிவபெருமானை வணங்கிப் " பெருமானே! ஒரு ஆண்டு காலமேனும் உலகம் இருளில் இருக்குமாறு அருள் செய்யுங்கள் " என்றனர். சிவ பரம் பொருள் ' அவ்வாறே தந்தோம் ' என்று அருளி மறந்தார். அப்போதே உலகம் இருண்டு விட்டது. அதைக்கண்ட அரக்கர்கள் மகிழ்ச்சிப் பெருமிதத்துடன் வீரமகேந்திரம் என்னும் தமது நகரை அடைந்தனர். அரக்கர் தலைவன் வச்சிரதந்தன் அரக்கர்கள் உள்ள இடங்களுக்கெல்லாம் தூதுவர்களை அனுப்பி அரக்கர் சேனைகளை வரவழைத்தான். எல்லா அரக்கப் படைகளும் வீரமகேந்திரபுரியில் ஒன்று கூடி போர்க்கோலம் கொண்டன. படைபலத்தைக் கண்ட வச்சிரதந்தன் வெற்றி உறுதி எனத்துணிந்து போர்க்கோலம் பூண்டு தம்பியர் இருவரும் அவர்கள் மக்கள் நால்வருமாக நால்வகைப் படைகளுடன் போர் முரசு முழங்க வானநாடு சென்று அமராவதி நகரைச் சூழ்ந்து கொண்டான். இதையறிந்த இந்திரனும் பெரும் படைகளைத் திரட்டிக் கொண்டு போர்க்களம் போந்து அரக்கரை எதிர்த்தான். இருபடைகளுக்கும் இடையே பெரும் போர் நடந்தது. போரில் தேவர்கள் தோற்று ஓடினர். வெற்றிவாகை சூடிய வச்சிரதந்தன் மகிழ்ச்சி ஆராவாரத்துடன் படைகளோடு வீரமகேந்திரம் அடைந்தான். அரக்கர்களிடம் தோற்று ஓடிய அமரர் தலைவனும் அமரர்களும் ஒன்று திரண்டு யாவருக்கும் பதியாம் பசுபதியைக் காணத் திருக்கயிலையை அடைந்தனர். பெருமான் முன் சென்று பணிந்து இனிது ஏத்தி. அரக்கரிடம் போரிட்டுத் தோற்று ஓடிய துன்பச் செய்தியைச் சொல்லி, அத்துன்பத்தினின்றும் காத்து ரட்சிக்குமாறு வேண்டினார். அவர்கள் வேண்டுகோளைச் செவிமடுத்த சிவபெருமான் அவர்களுக்கு அபயம் அளித்து தேவாங்க மன்னனை உள்ளத்தே எண்ணினார். இறைவன் திருக்குறிப்பை உணர்ந்த தேவாங்க மன்னன் அக்கணம் அங்கு வந்து சேர்ந்தார்.அரனடி பணிந்து நின்றார்.நின்ற தேவலனை நோக்கிச் சிவபெருமான் " தேவர்களை வருத்தும் அசுரர்களைப் போரில் வென்று மீள்க " என்று பணித்தார். இறைவனிடம் இக்கட்டளையை பெற்ற தேவலர் இறைவனை வணங்கி விடை பெற்றுக் கொண்டு, இந்திரனை நோக்கி " இனி அஞ்சவேண்டாம். உன் படைகளுடன் நீ அமர நாட்டுக்குப் போ. நான் ஆமோத நகரம் சென்று படைகளைத் திரட்டிக் கொண்டு மீண்டும் இங்கு வருகிறேன் " என்றார். இந்திரன் அமரநாடு செல்ல, தேவாங்க மன்னன் தன் நாட்டுக்குச் சென்று பெரும்படைகளைத் திரட்டிக் கொண்டு தேவலோகம் சேர்ந்தார். தேவேந்திரனையும் தேவபடைகளையும் கூட்டிக்கொண்டு கயிலைச் சாரலை அடைந்து போர் முரசங் கொட்டினார். போர்ப்பறை கேட்டதும் வச்சிரதந்தன் தனது படைகளுடன் போர்க்களம் அடைந்தான். இருவரிடைப் பெரும் போர் மூண்டது. போரில் வச்சிரதந்தன் தோல்வியுற்றுப் புறமுதுகு காட்டி ஓடித் தனது படைகளுடன் மகேந்திரம் சேர்ந்தான்.

No comments:

Post a Comment