அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

2/6/14

பகுதி ஆறு : தீச்சாரல்[ 4 ]


பகுதி ஆறு : தீச்சாரல்[ 4 ]


மறுநாள் காலையில் வியாசர் வருவாரென்று முந்தைய நாள் இரவு சுதன் வந்து செய்தியறிவித்தபோதே சத்யவதி நிலைகொள்ளாமல் அரண்மனைக்குள் உலவத்தொடங்கிவிட்டாள். குளிருக்கு வைக்கும் செம்புக்கணப்பு போல உள்ளூர கனல் இருந்துகொண்டிருந்தது. சியாமையிடம் “கிருஷ்ணன் தங்குவதற்கான இடத்தை அமைத்துவிட்டார்களல்லவா?” என்றாள். “தாங்கள் முதலில் சொன்னதுமே அதைச்செய்துவிட்டோம் பேரரசி” என்றாள் சியாமை.
“அவன் அரண்மனையில் தங்குவதில்லை. ஓடும் நீரில் மட்டுமே நீராடுவான். ஒவ்வொருநாளும் உதயத்தையும் அஸ்தமனத்தையும் பார்க்கும் இடம் அவனுக்குத்தேவை…” என்றாள். “அதையும் முன்னரே சொல்லிவிட்டீர்கள் தேவி” சியாமை புன்னகையுடன் சொன்னாள்.
அவளால் அந்தப்புரத்தில் இருக்கமுடியவில்லை. படுத்தால் அவளுக்குள் ஒரு வில் நாணேறி நிற்பதாகப்பட்டது. நிற்கும்போது மட்டுமே அந்த வில்லை சமன்செய்யமுடிந்தது. நின்றிருக்கையில் அகத்தில் வேகம் அதிகரித்து புறம் நிலையாக நின்றது. ஆகவே நடந்தாள். அரண்மனையின் உபகோட்டங்களிலும் புறக்கோட்டங்களிலும் நடந்தாள். அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சேடியர் அவளைக்கண்டதும் பாய்ந்தெழுந்தனர்.
“அனைத்தும் ஒருங்கமைக்கப்பட்டுவிட்டன அல்லவா?” என்றாள். “ஆம் அரசி” என்றாள் பதுமை. “இங்கே அவன் வரும்போது எந்தப்பெண்ணும் எதிரே வரக்கூடாது. இங்கே பிறழ்வொலிகள் எதுவும் எழலாகாது” என்றாள். அவர்கள் மிரண்ட விழிகளுடன் தலைவணங்கினர். அந்தக்கட்டளை அவர்களுக்கு பலநூறுமுறை அளிக்கப்பட்டுவிட்டிருந்தது.
அறியாத யட்சி ஒருத்தி தன் தோளில் அவளைத் தூக்கிக்கொண்டு அலைவதுபோலிருந்தது. அரண்மனைத் தூண்களெல்லாம் விறைத்து நிற்பதுபோல, சுவர்கள் திரைச்சீலைகளாக மாறி அலையடிப்பதுபோல, கூரை அந்தரத்தில் பறந்து நிற்பதுபோல. இரவு துளித்துளியாக தேங்கித் தயங்கிச் சொட்டியது. வெளியே அறுபடாத நீண்ட சில்வண்டு ஒலியில் அத்தனை ஒலிகளும் கோர்க்கப்பட்டிருந்தன. மௌனமாக வந்து முகர்ந்துநோக்கும் கரடிபோல கரியவானம் அரண்மனைமுகடில் மூக்கு சேர்த்து வெம்மூச்சுடன் குனிந்திருந்தது.
“சியாமை சியாமை” என்றழைத்தாள் சத்யவதி. “அரசி!” என்று வந்தவளை வெறுமே நோக்கிக்கொண்டிருந்தாள். யமுனைக்கரையில் இருந்து அவளுடனேயே வந்த சியாமை அவளைவிட மூன்றுவயது மூத்தவள். கரியவட்டமுகமும் கனத்த உடலும் கொண்டவள். கருநிற அரக்குபூசப்பட்ட உடல் கொண்ட கனத்த நாவாய் போல மெல்ல திரும்புபவள். சத்யவதி “ஒன்றுமில்லை”என்றாள்.
பின்னிரவில்தான் அவள் அதுவரை இரு இளவரசிகளைப்பற்றி எண்ணவேயில்லை என்ற நினைப்பு வந்தது. அவர்களை தன் கைவிரல்கள் போல அன்றி அவள் நினைத்ததேயில்லை. எழுந்து சால்வையைப் போட்டுக்கொண்டு மீண்டும் புறக்கோட்டம் சென்றாள். அங்கே தூண்களில் நெய்யகல்களும் அவற்றின் ஒளியைப்பெருக்கும் உலோக ஆடிகளும் சேர்ந்து பெரிய கொன்றைமலர்க்கொத்துக்களாக ஒளிவிட்டுக்கொண்டிருந்தன. தூண்நிழல்கள் நாகங்களாக அறைக்குமேல் எழுந்து கூரைமேல் வளைந்திருந்தன. புறக்கோட்டத்து உள்ளறையில் இருந்து முதியசேடி ஒருத்தி கையில் ஆவிபறக்கும் ஸ்வேதன தளிகையுடன் வந்து சத்யவதியைப்பார்த்து திகைத்து நின்றாள்.
“அரசியர் எப்படி இருக்கிறார்கள்?” என்றாள் சத்யவதி. “மூத்த அரசி இன்னமும் படுக்கையிலேயே இருக்கிறார்கள். நரம்புகள் அதிர்ந்துவிட்டன என்று வைத்தியர் சொன்னார். இப்போதுதான் ஸ்வேதனம் செய்தோம். அரிஷ்டம் கொடுத்து தூங்கவைத்திருக்கிறோம்” என்றாள். “சிறியவள்?” என்றாள் சத்யவதி. “அவர் நேற்றே சரியாகிவிட்டார். மூத்தவரின் துயரத்தைக் கண்டு சற்று அழுகிறார், அவ்வளவுதான்.”
செல்லும்படி தலையை ஆட்டி ஆணையிட்டுவிட்டு சத்யவதி உள்ளே சென்றாள். அறை இருண்டிருந்தது. ஒரே ஒரு நெய்யகலில் செம்முத்துபோன்ற சுடர் அசையாமல் நிற்க வெண்பட்டுப்படுக்கையில் மழைநீர்சொட்டி கலைந்த வண்ணக்கோலம்போல அம்பிகை கிடப்பதைப்பார்த்தாள். கண்களுக்கு இருபக்கமும் கண்ணீர் வழிந்து உப்புவரியாகி கோடையில் மலைப்பாறையில் அருவித்தடம்போல் தெரிந்தது. சிறிய உதடுகள் குவிந்து உலர்ந்து ஒட்டியிருக்க, உதடுகளின் இருபக்கமும் ஆழமான கோடுகள் விழுந்திருந்தன. ஸ்வேதனரசத்தின் பசையால் கூந்தலிழைகள் நெற்றியிலும் கன்னங்களிலும் ஒட்டியிருந்தன. பார்த்து நின்றபோது அறியாமல் சத்யவதி நெஞ்சில் ஓர் எண்ணம் எழுந்தது. இவ்வளவு துயர் கொள்ளுமளவுக்கு அவனிடம் எதைக்கண்டாள் இவள்?
விசித்திரவீரியனை எவரும் மறக்கமுடியாதென்று அவளுக்குத் தெரியும். விரல்நுனியில் ஒற்றியெடுத்த பனித்துளி என அவனை அவள் எப்போதும் நினைத்திருந்தாள். நிலையற்று ஒளிவிடுபவன், தூயவன், அரியவன். அகம் பதறாமல் அவனிடம் பேசமுடிந்ததில்லை அவளால். ஆனால் அவள் அவனை அறியவே இல்லையோ என்று அப்போது தோன்றியது. அவனை முதன்முதலாக அறிந்தவள் இவள்தானா? இவள்மட்டும்தான் இனி இவ்வுலகில் அவனை நினைத்திருக்கப்போகிறாளா? மலைச்சரிவில் பிளந்து சரிந்து சென்ற பாறையின் எஞ்சிய குழித்தடம்போல இவள் மட்டும்தான் இனி காலகாலமாக அவனை சொல்லிக்கொண்டிருப்பாளா?
அவளுக்குத் தோன்றியது, அவள் அப்படி எந்த ஆணிடமும் உணர்ந்ததில்லை என. அவள் உள்ளறைகள் வரை வந்து எந்தக்காற்றும் திரைச்சீலைகளை அசைத்ததில்லை. தீபத்தை நடனமிடச் செய்ததில்லை. அவளுக்குள் விசித்திரவீரியனின் புன்னகைக்கும் முகம் என்றும் இருந்தது. மூடப்பட்ட கோயில் கருவறைக்குள் இருளில் இருக்கும் தெய்வம் போல. ஆனால் விசித்திரவீரியனுக்காகக் கூட அவள் தன்னிலை இழக்கவில்லை.
மெல்லிய பொறாமை எழுந்தது. பேரிழப்பு என்பது பெரும் இன்பத்தின் மறுபக்கம் அல்லவா? வைரத்தை வைக்கும் நீலப்பட்டுமெத்தை அல்லவா அது? இந்தப்பெண் அறிந்திருக்கிறாள். இந்த வைரத்தை ரகசியமாக தனக்குள் வைத்திருப்பாள். வாழ்நாளெல்லாம் அந்தரங்கமாக எடுத்துப் பார்த்துக்கொண்டே இருப்பாள். பார்க்கப்பார்க்கப் பெருகுவது வைரம்.
உடல் சற்றே பதறியதனால்அங்கே நின்றிருக்க அவளால் முடியவில்லை. திரும்பி நடந்தபோது இவளிடம் எப்படி வியாசனின் வருகையைப்பற்றிச் சொல்வது என்ற எண்ணம் எழுந்தது. அவளுக்குள் அழகிய சிறு தடாகமொன்றிருக்கிறது. அதை அவள் கலக்கி சேறாக்கவேண்டும். அதில் மலர்ந்திருக்கும் ஒற்றைத்தாமரையை மூழ்கடிக்கவேண்டும்.
VENMURASU_EPI_30__
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
தன் அறைக்குள் வந்து படுத்துக்கொண்டபோது சத்யவதி நெஞ்சின் படபடப்பை உணர்ந்தாள். ஏன் என கேட்டுக்கொண்டாள். நிலைகொள்ளாதவளாக தன் படுக்கையில் அமர்ந்தாள். எந்தக்காரணமும் இல்லாமல் பேரச்சம் வந்து தொட்டதுபோல அதிர்ந்து தன் இதயத்தை கேட்டுக்கொண்டிருந்தாள். பின்பு எழுந்து “சியாமை! சியாமை!” என்றாள். மௌனமாக வந்து நின்ற சியாமையிடம் “ரசம்” என்றாள்.
சோமக்கொடி போட்டு காய்ச்சியெடுத்த புதுமணம் கொண்ட திராட்சைமதுவை பொற்கிண்ணத்தில் கொண்டுவந்து வைத்தாள் சியாமை. சத்யவதி அதை எடுத்து மெல்லக்குடித்தபடி இருளையே பார்த்துக்கொண்டிருந்தாள். எப்போதும் இருளைப்பார்த்துக்கொண்டுதான் மதுவை அருந்துவாள், அவ்விருளின் துளி ஒன்றை தன்னுள் ஏற்றிக்கொள்வது போல, உள்ளே விரிந்துபரவும் ஒளிக்குமேல் இருளைப்பரப்புவதே அதன் பணி என்பதுபோல.
நீர்ச்சுனைகளுக்கு அருகே நீரோடும் பசுங்குழாயெனக் கிடக்கும் சோமச்செடி. அதற்கு நீராழத்தின் வாசனை. நீரிலிருந்து ஆழத்தை மட்டும் எடுத்து சேர்த்துக்கொள்கிறது. நிழல்களாடும் ஆழம். அடித்தட்டின் பல்லாயிரம் மென்சுவடுகள் பதிந்த மௌனம். சோமம் உடலுக்குள் ஒரு காட்டுக்கொடியை படரவிடுகிறது. நரம்புகளில் எங்கும் அது தளிர்விட்டுப் பரவுகிறது.
தலை சற்று ஆடியபோது படுக்கையில் படுத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டாள். சியாமை வெண்சாமரத்தை மெல்ல வீசிக்கொண்டிருந்தாள். அறைக்குள் இருந்த தூபக்கடிகை அந்தக் காற்றால் வாய்சிவந்து புகையத் தொடங்கியது. கையசைத்து சியாமையை போகச்சொன்னாள். கண்களை மூடிக்கொண்டபோது மஞ்சம் மெல்ல கீழிறங்குவதுபோலத் தோன்றியது. அது இருளுக்குள் விழுந்து பாதாளத்துக்குச் சென்றுவிடும் என்பதுபோல.
திடுக்கிட்டு எழுந்துகொண்டாள். “சியாமை” என்றாள். வாசலருகே நின்றிருந்தாள் போல. உள்ளே வந்து அசையாமல் நின்றாள். முகத்துக்குமேல் வெண்நரைக்கூந்தலை எடுத்துக்கட்டியிருந்தாள், கருகிய கலத்துக்குமேல் வெண்சாம்பல் போல. சத்யவதி அவளையே பொருளில்லாமல் சிறிதுநேரம் பார்த்துவிட்டு “அமர்ந்துகொள்” என்றாள். ஆடையைச் சுருட்டியபடி கனத்த கால்களை மடித்து சியாமை தரையில் அமர்ந்துகொண்டாள்.
சத்யவதி எழுவதற்கு முயன்றபோது தலை கருங்கல் போல தலையணையை விட்டு மேலெழ மறுத்தது. பக்கவாட்டில் புரண்டு “சியாமை, நான் மச்சகந்தியாக இருந்த நாட்கள் முதல் என்னை அறிந்தவள் நீ சொல், நான் ஏன் இப்போது இப்படி நிலையழிந்திருக்கிறேன்?” என்றாள்.
சியாமை சிலகணங்கள் கூர்ந்துநோக்கியபின் “நீங்கள் சித்ராங்கதனை நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்றாள். அதிர்ந்து சற்று புரண்டு “இல்லை, இல்லை, நான் அவனை நினைக்கவில்லை” என்றாள் சத்யவதி. “ஆம், அவரை நினைக்காமலிருக்க வேறெதையோ நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்” சியாமை சொன்னாள்.
சத்யவதி பெருமூச்சு விட்டாள். பிறகு “ஆம்” என்றாள். சிறிதுநேரம் இருளின் ஒலி அவர்களுக்கிடையே நீடித்தது. “சியாமை அவனை நான் கொன்றேன் என்று சொல்லலாமா?” என்றாள் சத்யவதி. சியாமை “ஆம் பேரரசி, அது உண்மை” என்றாள். “ஆனால் சிலசமயம் தாய் குட்டிகளில் ஒன்றை கொன்றுவிடுவதுண்டு.”
சத்யவதி பிரமித்த கண்களுடன் அரண்மனைமுகட்டின் மரப்பலகைத் தளத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்விழிகள் கோணலாகி இருந்தன. உத்தரங்கள் நீர்ப்பிம்பங்களாக நெளிந்தன. சிலகணங்கள் கழித்து “குட்டிகளில் மிகச்சிறந்ததை அதற்காகத் தேர்ந்தெடுக்குமோ?” என்றாள். “இல்லை பேரரசி… குட்டிதான் அந்த மரணத்தை தேர்ந்தெடுக்கிறது.” சத்யவதி திடுக்கிட்டு “ஆம்” என்றாள். சியாமை “இல்லையேல் அது அன்னையை கொன்றிருக்கும்” என்றாள்.
சத்யவதி தலையைத்திருப்ப முயன்றாள். கழுத்துக்கும் தலைக்கும் தொடர்பே இருக்கவில்லை. “அவனைக் கருவுற்ற நாட்களில் நான் எப்போதும் கனவில் இருந்தேன்…” என்றாள். “கனவும் நனவும் கலந்துபோன நிலை”
“ஆம் பேரரசி, நீங்கள் ஒரு கந்தர்வனை கனவுகண்டீர்கள். யமுனையின் அடியில் நீர்க்குமிழிகள் கோள்களாகப் பறக்க கத்ருவைப்போல நீங்கள் நீந்திச் சென்றுகொண்டிருக்கையில் அவன் பொன்னிற அடிப்பரப்பில் பேரழகு கொண்ட உடலாக மல்லாந்து கிடப்பதைக் கண்டீர்கள். இளமை என்றும் ஆண்மை என்றும் வீரியம் என்றும் பிரம்மன் நினைத்தவை எல்லாம் கூடிய ஆணுடல். கன்று என்றும் காளை என்றும் ஆனவன்” சியாமை சொன்னாள்.
“ஆம்…அவன் பெயர் சித்ராங்கதன் என்று சொன்னான்” என்றாள் சத்யவதி. கனத்த உதடுகள் சரிவர அசையாமையால் குழறிய குரலில் கனவில் பேசுவதுபோல. “அவன் ஒருமுறைதான் காட்சியளித்தான். ஒருமுறைதான் என் கண்ணைப்பார்த்து நீ பெண் என்று சொன்னான்” என்றாள்.
“நீங்கள் சித்ராங்கதனின் மோகத்தை மட்டுமே அறிந்தீர்கள் பேரரசி. முதிய பராசரனில் முதிய சந்தனுவில்… அவன் உடலைக்காண யமுனைக்கு சென்றுகொண்டே இருந்தீர்கள்…”  ”ஆம்” என்றாள் சத்யவதி. “பிறகெப்போதும் நான் அவனைக் காணவில்லை.”
“அவன் கன்னியருக்கு மட்டுமே காட்சியளிப்பவன்” என்றாள் சியாமை. “ஆம், ஆனால் எந்தப் பெண்ணுக்குள்ளும் இருந்து ஒரு கன்னி ஏங்கிக் கொண்டிருக்கிறாள் அல்லவா?” என்று சத்யவதி சொன்னாள். சியாமை “தெய்வங்கள் இரக்கமற்றவை தேவி. அவை விதிகளை உருவாக்கி அவற்றால் தங்கள் கைகளை கட்டிக்கொள்கின்றன.” பெருமூச்சுடன் சத்யவதி “ஆம், அதிகாரம் இரக்கமின்மையில் இருந்து பிறப்பது. தெய்வங்கள் அளவற்ற அதிகாரம் கொண்டவை” என்றாள்.
“முதல் குழந்தை பிறந்தபோது ஈற்றறையில் நானும் இருந்தேன்” என்றாள் சியாமை. “குழந்தையை மருத்துவச்சி தூக்கியதுமே நீங்கள் திரும்பி சித்ராங்கதன் எங்கே என்று கேட்டீர்கள். அது ஆணாபெண்ணா என்றுகூட நாங்கள் பார்த்திருக்கவில்லை” சியாமை சொன்னாள். சத்யவதி முகம் மலர்ந்து “எவ்வளவு இனிய பெயர் இல்லையா சியாமை? சித்திரம்போன்ற அங்கங்கள் கொண்ட பேரழகன்…”
சியாமை “ஆனால் மண்ணில் எந்த மனிதனும் கந்தர்வன் அல்ல பேரரசி…” என்றாள். “முழுமையை தெய்வங்கள் தங்களிடமே வைத்திருக்கின்றன. மனிதர்களுக்கு அளிப்பதேயில்லை” என்றாள்.
பின்பு நெடுநேரம் அவர்கள் நடுவே அமைதி ஓடிக்கொண்டிருந்தது. சத்யவதி பளிங்குத்தரையில் பாம்புபோல நெளிந்த குரலில் “கந்தர்வர்களைப் பார்க்கும் பெண்கள் முன்னரும் இருந்ததில்லையா சியாமை?” என்றாள். “பேரரசி, கந்தர்வனை ஒருமுறையேனும் காணாத பெண்கள் எவரும் இல்லை. மண்ணுலகை விட பன்னிரண்டாயிரம்கோடி மடங்கு பெரிதான கந்தர்வலோகத்தில் ஒவ்வொரு கன்னிக்கும் ஒரு கந்தர்வன் இருக்கிறான்…கோடானுகோடி கந்தர்வர்களுக்கான பெண்கள் இன்னமும் பிறக்கவேயில்லை” என்றாள் சியாமை.
“ஆனால் கந்தர்வர்கள் மிகமிக அந்தரங்கமாகவே வந்துசெல்கிறார்கள். அவர்கள் வந்து சென்ற மனம் மேகங்கள் சென்ற வானம்போல துல்லியமாக எஞ்சும்…” என்றாள் சியாமை. “ஆனால் முன்னொருகாலத்தில் ரேணுகாதேவி கண்ட கந்தர்வனை அவள் கணவனும் காணநேர்ந்தது” என்றாள்.
சத்யவதி ஒருக்களித்து தலையைத் தூக்கி “ரேணுகையா?” என்றாள். “ஆம் அரசி, பிருகுமுனிவரின் குலத்தில் வந்த ஜமதக்னி என்னும் முனிவரின் மனைவி அவள்” என்றாள் சியாமை. “நான் கேட்டிருக்கிறேன். ஆனால் நினைவில் எழவில்லை அந்தக்கதை” என்றாள் சத்யவதி.
வேசரநாட்டில் மாலப்பிரபா என்னும் ஆற்றின்கரையில் வெண்மணல் விரிந்த நிலமொன்றிருந்தது. ஆகவே மணல்நாடு என்று அதற்குப் பெயர். ரேணுநாட்டை ஆண்ட மன்னன் ரேணுராஜன் எனப்பட்டான். அவன் மகள் ரேணுகாதேவி. ரேணுராஜன் செய்த வேள்வியில் எரிந்த நெருப்பில் ரேணுகாதேவி பிறந்தாள் என்று சியாமை சொல்ல ஆரம்பித்தாள்.
வேள்விநெருப்பில் ஒரு பெண் பிறந்ததை அறிந்த அகத்தியரே ரேணுகையைப்பார்க்க வந்தார். அவர் அவளுடைய பிறவிநூலைக் கணித்து அவள் அனலுக்கு அதிபனாகிய முனிவர் ஒருவருக்கு மனைவியாவாள் என்றார். ரேணுராஜன் அத்தகைய முனிவருக்காகக் காத்திருந்தான். ஆணழகர்களும் மாவீரர்களுமான அரசர்களுக்குக் கூட அவளை அவன் அளிக்கவில்லை.
ஒருநாள் அங்கே ஜமதக்னி என்னும் முனிவர் வந்து சேர்ந்தார். சொற்களைக் கொண்டே வேள்விக்குளத்தில் நெருப்பை எழுப்பும் வல்லமை கொண்டிருந்தார் அவர். அவரது ஆசியை வேண்டிய ரேணுராஜன் மகளை ஜமதக்னி முனிவருக்கு மணம்செய்துகொடுத்தான். அரசனுக்கு மூன்று வரங்களை அளித்தபின் அவர் அவளை மணம்கொண்டார்.
ருசிகமுனிவருக்கும் சத்யவதிக்கும் பிறந்து உடலுருக்கும் கடுந்தவத்தால் விண்நெருப்பையும் வெல்லும் தவவல்லமைபெற்ற ஜமதக்னி முனிவருக்கு அவளை ரேணுராஜன் கையளித்தபோது ரேணுகை அவரை நிமிர்ந்துபார்க்கவே அஞ்சினாள். கணவருடன் அவள் மாலப்பிரபா ஆற்றின் கரையில் தவக்குடிலில் வாழ்ந்த வாழ்க்கையை நோன்பு என்றே நினைத்துக்கொண்டாள்.
ரேணுகாதேவிக்கு ஐந்து மைந்தர்கள் பிறந்தனர். பிருஹத்யனு, பிருத்வகன்வன், வசு, விஸ்வவசு, ராமபத்ரன் என்ற ஐவரில் இளையவனாகிய ராமன் வீரத்தாலும் பேரழகாலும் அன்னைக்கு பிரியமானவனாக இருந்தான். தந்தைக்கு வேள்விக்கு விறகு வெட்ட மழுவுடன் காட்டுக்குச் சென்றவன் அந்த மழுவை தன் ஆயுதமாகக் கொண்டான். ஆகவே பரசுராமன் என்றே அழைக்கப்பட்டான்.
மைந்தரில் பரசுராமனே அன்னையின் பிரியத்துக்குரியவனாக இருந்தான். அவளுடைய ஆண்வடிவம் போல. அவள் தந்தையின் மழலைத்தோற்றம் போல. ஒவ்வொருநாளும் அவனழகைக் கண்டு அவள் மகிழ்ந்தாள். பேரரசியே பிள்ளையழகையும் தீயின் அழகையும் கண்டு நிறைவுற்றவர் யாருமில்லை.
நோன்பே வாழ்வாக வாழ்ந்த ரேணுகை ஒவ்வொரு நாளும் மாலப்பிரபா ஆற்றுக்குச் சென்று மணலைக்கூட்டி தன் தாலியைக் கையில் பற்றி மந்திரம் சொல்லி அதை ஒரு குடமாக ஆக்குவாள். அக்குடத்தில் நீரும் மலரும் கொண்டுவந்து கணவனுக்கு பூசைக்களம் அமைப்பாள். அவள் தவக்கற்பாலேயே அந்த மணல் குடமாகியது.
ஒருநாள் ஆற்றுநீரில் நீராடி கரைவந்து மணல் அள்ளி தாலியை கையில் எடுத்து மந்திரம் சொன்ன ரேணுகாதேவி வானில் பறந்த கந்தர்வன் ஒருவனின் நிழலை நீரில் கண்டாள். தாலி கைநழுவிய வேளை பாதிசமைந்த குடம் மீண்டும் மணலாகியது. அஞ்சிப்பதறி அவள் மணலை அள்ளி அள்ளிக் குடமாக்கமுனைய அது சரிந்து கொண்டே இருந்தது.
தேவி கண்ணீருடன் தன் தவக்குடில் மீண்டாள். பூசைக்கு வந்த ஜமதக்னி முனிவர் “எங்கே என் வழிபாட்டு நீர்?” என்றுகேட்டார். கைகூப்பி தேவி கண்ணீருடன் அமைதி காத்தாள். தன் தவவல்லமையால் விண்ணில் பறந்த அந்த கந்தர்வனை முனிவர் தன் அகக்கண்ணில் கண்டார். சினம்கொண்டு எரிந்தபடி ஐந்து மைந்தரையும் அழைத்து “நெறி பிறழ்ந்த இவள் அழிக! இக்கணமே இவள் கழுத்தை வெட்டுக!” என்றார். “தாயைக்கொல்லும் பெரும்பாவம் செய்யமாட்டோம், உங்கள் சினத்தால் எரிந்து சாம்பலாவதையே ஏற்கிறோம்” என்று சொல்லி நான்குபிள்ளைகளும் பின்னகர்ந்தனர்.
சத்யவதி விழித்த கண்களுடன் சியாமையையே பார்த்தபடி கிடந்தாள். “ஐந்தாவது மகன் முன்னால் வந்து உடைவாளை உருவினான். அன்னைக்குப் பிரியமான அவன் கண்களைப் பார்த்தாள். அவன் வாளை ஓங்கி அவள் கழுத்தை வெட்டி வீழ்த்தினான்” என்றாள் சியாமை.
சத்யவதி கண்ணீருடன் கண்களை மூடிக்கொண்டாள். இமைகளை மீறி கண்ணீர் இருபக்கமும் வழிந்துகொண்டிருந்தது. சத்யவதியின் நெஞ்சு எழுந்து தணிய ஒரு விம்மலெழுவதை சியாமை கேட்டாள்.
“சித்ராங்கதனை என் மைந்தன் கண்டுவிட்டான் என்கிறார்களே உண்மையா சியாமை?” என்றாள் சத்யவதி அழுகை கனத்துத் ததும்பி மழைக்காலக் கிளைபோல ஆடிய குரலில். சியாமை பதில் சொல்லவில்லை. “சொல் சியாமை, அவன் அந்த கந்தர்வனை சந்தித்தானா?”
சியாமை பெருமூச்சுடன் “அவர் ஆயிரம் ஆடிகளில் அவனைத் தேடிக்கொண்டிருந்தார் தேவி” என்றாள். “ஆம், ஆடி அவனை அடிமைகொண்டிருந்தது” என்றாள் சத்யவதி. சியாமை மெல்ல “ஆடிகள் வழியாக மெல்லமெல்ல சித்ராங்கதன் மன்னரை நோக்கி வந்துகொண்டிருந்தான்” என்றாள்.
“அவன் கண்டிருப்பான்” என்றாள் சத்யவதி. “இல்லையேல் எதற்கும் பொருளே இல்லை.” சியாமை “அவர் சித்ராங்கதனின் முழுமையை நெருங்கியபோது அவன் வந்து அவரை போருக்கு அழைத்தான் என்கிறார்கள். ஒரு சித்ராங்கதன்தான் இருக்கமுடியும் என்றும் நீ என்னைப்போலானால் நான் வாழமுடியாது என்றும் அவன் சொன்னான். மண்ணில் ஒருகணமும் கந்தர்வ உலகில் ஓராயிரம் வருடங்களும் அந்தப்போர் நடந்தது. இறுதியில் அவன் அவரை தன்னுள் இழுத்து தன் ஆழத்தில் கரைத்துக்கொண்டான் என்று சூதர்கள் பாடுகிறார்கள்” என்றாள்.
சத்யவதி “நாளை காலை கிருஷ்ணன் வருகிறான்” என்றாள். “அவர் சித்ராங்கதனைக் கண்டவர்” என்றாள் சியாமை சாதாரணமாக. “யார்?” என்றாள் சத்யவதி. அவள் நெஞ்சு அந்தப் பேரச்சத்தை மீண்டும் அடைந்தது. “காவியம் ஒரு மாபெரும் ஆடி” என்று விழிகள் எதையும் சொல்லாமல் விரிந்து நின்றிருக்க சியாமை சொன்னாள். “நீங்கள் அஞ்சுவது அவரைத்தான்.”
“நான் அவனை அஞ்சவேண்டுமா? அவன் என் மகன்…” என்றாள் சத்யவதி. “ஆம், அதனால்தான் அஞ்சுகிறீர்கள்” என்றாள் சியாமை. “சியாமை, இவ்வளவு குரூரமாக இருக்க எப்படி கற்றாய்?” என்று சத்யவதி கேட்டாள். “நான் தங்கள் ஆடிப்பாவை அல்லவா தேவி? ஆடிகளைவிட குரூரமானவை எவை?”
சத்யவதி பின்பு கண்களைமூடி நெடுநேரம் படுத்திருந்தாள். அசையாமல் அவளை நோக்கியபடி சியாமை அமர்ந்திருந்தாள். பின்பு “சியாமை, கிருஷ்ணன் எப்படி சித்ராங்கதனை முதலில் கண்டான்?” என்றாள். அதன்பின் பெருமூச்சுடன் “ஆம், அவன் அனைத்தையும் காண்பவன்” என்றாள்.
சியாமை “யமுனைத்தீவில் அழகற்ற கரியகுழந்தையை மணலில் போட்டு குனிந்து பார்த்தபோது உங்கள் கண்களை அதுவும் பார்த்திருக்கும்” என்றதும் “சீ வாயை மூடு!” என்று கூவியபடி சத்யவதி எழுந்து அமர்ந்தாள். சியாமை அவளைப்பார்த்தபடி இரு கண்களும் இரு அம்புநுனிகள் போல குறிவைத்து நாணேறி தொடுத்துநிற்க பேசாமலிருந்தாள்.
அதன்பின் சத்யவதி அப்படியே படுக்கையில் விழுந்து “ஆம்! ஆம், உண்மை” என்று விசும்பினாள். “அவன் அறிவான். சியாமை இது அவனது தருணம்…..என் குலத்தில் இனி என்றும் வாழப்போவது அவனுடைய அழகின்மை” என்றாள். மது மயக்கத்துடன் தூவித்தலையணையில் முகம் புதைத்து “ஆம், அதைத்தான் அஞ்சினேன்…” என்றாள். சற்றுநேரம் கழித்து சியாமை மெல்ல எழுந்து கதவுகளை மூடிவிட்டு வெளியேறினாள்.
மறுநாள் காலை சூதர்களும் வைதிகர்களும் மங்கலவாத்தியக்குழுவும் சூழ வியாசரின் ரதம் வருவதை எதிர்பார்த்து அரண்மனை முகமண்டபத்தில் நின்றுகொண்டிருக்கையில் சத்யவதி அருகே நின்ற சியாமையின் கண்களைப் பார்த்தாள். மிகமெல்ல, உதடுகள் மட்டும் அசைய “ரேணுகையின் கந்தர்வனின் பெயரென்ன?” என்றாள். சியாமை அதைவிட மெல்ல “பரசுத்துவஜன்” என்றாள்.

No comments:

Post a Comment