அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/6/13

தேவலர் வரம் பெறல்

சிவபெருமானின் ஆணையை ஏற்ற தேவலன் அன்னையை அணுகி] அவர் அருள் வேண்டி நின்றான். அம்மையும் "நீ மேற்கொண்டுள்ள அரும்பணிக்கு பல இடர்கள் வரும். அப்போது என்னை நீ நினை. நான் தோன்றி உன் இடர்களைந்து உன்னைக் காக்கிறேன். "என்று ஆசி கூறி அனுப்பினார். தேவல முனிவன் திருவருள் துணைகொண்டு திருமாலிடம் சென்றான். பாற்கடலை அடைந்தான். அதனருகே தவஞ்செய்வதற்கேற்ற அழகான பூஞ்சோலை இருக்கக் கண்டான். அதில் மா,பலா முதலிய பழ மரங்களும், மல்லிகை முல்லை செண்பகம் போன்ற நறுமணங் கமழும் பூச்செடிகளும் நிரம்பி இருந்தன. அதனால் அதுவே தவத்திற்கேற்ற இடமெனத் தேர்ந்து அங்கு தங்கினான். அரவணை பள்ளிகொள்ளும் பரந்தாமனை நோக்கிப் புலனொடுக்கி ஒருமை மனதோடு பலநாள் கடுந்தவஞ் செய்தான். " அரிய ஐம்புல னலைவுற வகையமைத் தடக்கித் திரித குங்கறுத் தின்றிமேல் வழிமனஞ் சேர்த்துப் பரிதி வெங்ககி ராழியம் பரமனைப் பரவிப் புரிவ ரும்பெரு மாதவம் பலபகல் புரிந்தான் " தேவல முனிவனின் தவத்திற் கிணங்கி திருமாலும் முனிவன் முன் தோன்றி அவன் விரும்பிய தமது உந்திக் கமல நூலைக்கொடுத்து ஆசி கூறி அனுப்பினார். நூலைப் பெற்றுக்கொண்டு தேவலமுனிவன் திரும்பி வரும் வழியில் சம்புத் தீவில் கடற்கரை அருகில் மாய ஆசிரமம் ஒன்றைக் கண்டான். அங்கிருந்த தவசிகள் முனிவர் வேடம் தரித்த அரக்கர்கள் என்பதை இவன் அறியாது உள்ளே போனான். அங்கிருந்த கபட வேடதாரிகளின் தலைவனை வணங்கினான். அவன் தேவல முனிவனை வரவேற்று ' நீ யார்? பெயரென்ன? இவண் வந்த காரணம் யாது?' என்று கேட்டான். தேவலமுனிவன் வஞ்சகரின் கபட நெஞ்சை அறியாது தனது வரலாற்றையும் துணி நெய்யத் தான் திருமாலிடம் நூல் பெற்று வந்ததையும் கூறினான். இதைக்கேட்ட அக் கபட முனி ' அப்பனே! நீ மேற்கொண்டுள்ள அருட்பணி பெரிதும் போற்றுதற்குரியது. நீ மிகவும் களைத்திருக்கின்றாய். இன்று இரவு இங்கு தங்கி இளைப்பாறிப் போவாயாக ' என்று மொழிந்தான். முனிவனின் விருபத்திற் கிணங்கி அன்றிரவு அங்கு தங்கினான். தீயவர் உள்ளம் போன்று இரவு வந்தது. காரிருள் சூழ்ந்தது. தவச்சாலையில் தவவேடத்தில் இருந்த வச்சிர முஷ்டி, புகைமுகன், புகைக் கண்ணன், சித்திரசேனன், பஞ்சசேனன் என்னும் அரக்கர் தலைவர்களும் அவர்களுடைய துணைவர்களும் சுய உருக்கொண்டனர். வாள், வேல் முதலிய ஆயுதங்களை ஏந்தினர். தேவல முனிவனைக் கொன்று அவனிடமுள்ள நூலை அபகரித்துக்கொள்ள எண்ணி அவனைச் சூழ்ந்து கொண்டு துன்புறுத்தினர். தேவலன் திருமாலை உள்ளம உருக எண்ணித் துதித்தான். ஆபத் பாந்தவனாகிய பரந்தாமன் சக்கரப்படையை அனுப்பினார். வந்த ஆழிப்படையை தேவல முனிவன் அசுரர்கள் மீது ஏவினான். அப்படை அசுரர்களின் உடம்பைத் தலைவேறு கைவேறாக அறுத்துத் தள்ளியது. அறுபட்ட உடம்புகளிலிருந்து இரத்தம் சிந்தியது. சிந்திய இரத்ததிலிருந்து எண்ணில் அடங்கா அசுரர்கள் தோன்றி போரிட்டனர். அதனால் போரில் சக்கரப்படை இளைத்தது. அரக்கத் தலைவர்கள் ஐவரும் தேவல முனிவனைச் சூழ்ந்து கொண்டு மிகக் கடுமையாகத் தாக்கினர். இவர்களுடைய தாக்குதலுக்கு ஆற்றாது முனிவன் பெரிதும் தளர்வுற்றான். அந்நிலையில் முனிவன் அம்மையை எண்ணித் துதித்தான். உற்ற இடத்து உதவும் அம்மையும் கோடி சூரியப்பிரகாசம் பொருந்திய கீரிடம் தரித்தவராய் சிங்கவாகனத்தில் சூல பாணியாய்த் தோன்றினார். ஆணவங்கொண்ட அசுரர்கள் அம்மையையும் எதிர்த்துப் போரிட்டனர். அம்மையின் கீரிடத்தின் ஒளிபட்டுப் பலர் மயங்கி வீழ்ந்தனர். அம்மைக்கும் அசுரர்களுக்கும் பெரும் போர் நடந்தது. அப்போது அம்மையின் சூலப்படையால் தாக்குண்டு அசுரர்கள் வீழ அவர்கள் உடம்புகளிலிருந்து சிந்திய இரத்தத்தைச் சிங்கம் குடிக்க அசுரப்படைகள் யாவும் மடிந்தன. இவர்களின் தலைவர்கள் ஐவர் இறுதி வரைப்போரிட்டு முடிவில் அம்மையின் சூலப்படையால் தாக்குண்டு வீழ்ந்தனர். இவர்கள் குருதியில், முனிவன்தான் துணி நெய்யக் கொண்டு வந்திருந்த நூலைத் தோய்க்க அந்நூல் ஐந்து நிறங்களைப் பெற்றது. போரின் போது அசுரர்கள் சிந்திய இரு துளிகள் சிங்கத்தின் இருகாதுகளில் தங்கின. சிங்கம் தலையைக் குலுக்கவும் காதுகளிலிருந்த இரண்டு இரத்தத் துளிகள் பூமியில் வீழ்ந்தன. அப்போதே அவற்றிலிருந்து இரண்டு அசுரர்கள் தோன்றினர். அவர்களை அழிக்க அம்மை சூலத்தை ஏந்தவும் அசுரர்கள் இருவரும் தம்மைக் காத்து ரட்சிக்குமாறு முனிவனின் கால்களில் வீழ்ந்து வணங்கினர். முனிவனும் அவர்களுக்கு அடைக்கலம் தந்து அவர்களைக் குலப்பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டான். இவர்கள் தேவாங்க குலமக்களுக்குத் தொண்டு செய்யும் சிங்க குலத்தார் ஆயினர். இனி ஒளி பொருந்திய கீரிடத்தைத் தாங்கியிருந்ததால் அம்மை 'சவுடநாயகி' ஆனார். சௌடேஸ்வரியம்மன், நினைத்தபோது உதவிக்குவருவதாக தேவல முனிவனுக்கு வரமருளினார். மேலும், 'அமாவாசையன்று நீ அசுரர்களிடம் அகப்பட்டுக் கொண்டு என்னை உளமார நினைத்தாய். நானும் வந்து உன்னைக் காத்தேன். ஆதலால் இந்த நாள், இந்த உலகில் நீ பிறந்த நாளாகும். உன்னைக்காக்க நான் தோன்றிய இந்த நாள் எனக்கும் பிறந்த நாளேயாகும். ஆதலால் இனி நீ இந்த அமாவாசை நாட்களில் என்னை நாள் முழுவதும் தியானித்து வழிபாடு செய்வாயாக. அவ்வாறு செய்தால் உனக்குப் பெருவல்லபமும சிறப்பும் பெருகும். உன் குலத்தாரும் நலம் பெறுவர். உன் குலமக்கள் அன்று நெய்வதை விட்டு என்னைப் பூசித்து, என் புகழைச் சிரவணம் செய்து வந்தால் அவர்களும் எல்லா நன்மைகளையும் அடைவர். அவ்வாறின்றி என்னை மறந்திருந்தால் அவர்கள் துன்பத்தில் ஆழ்வர்.' என்று சொல்லி மறைந்தார். பின் தேவலன் ஆமோத நகரை நோக்கிப் போனான். இனி ஐந்து அசுரர்களின் குருதியில் நூலைத் தோய்க்க அது ஐந்நிறம் கொண்டதற்கும், சக்கரப்படையால் அவர்கள் அழியாததற்கும் வரலாறு உண்டு. அது வருமாறு அசுரர்கள் ஐவரின் வரலாறு ஒரு காலத்தில் ஊழி நிகழ்ந்தது. உலகம் நீரில் மூழ்கியது. நீர்மீது கார்முகில் வண்ணன் ஆலிலையில் அறிதுயிலிருந்தான். அப்போது அவன் உடம்பு வியர்த்தது. வியர்வையிலிருந்து வச்சிரமுஷ்டி முதலான் ஐந்து அரக்கர்கள் தோன்றினர். தாங்கள் தோன்றுதற்கே காரணனாயிருந்த மாயவனையே கொல்ல முயன்றனர். இதையறிந்த மாயவன் துயில் நீங்கி அசுரரை எதிர்த்தான். பெரும்போர் மூண்டது, மூண்டபோர் ஓராண்டு நடந்தது. அசுரர்களின் பெரும் பலத்தை அறிந்த திருமால் தந்திரமாக அவர்களை வெல்லக்கருதி "அன்பர்களே! உங்கள் போர்த்திறங்கண்டு மகிழ்ந்தோம். நீங்கள் விரும்பிய வரம் யாது?" எனக்கேட்டார். இது கேட்ட அசுரர்கள் 'முகில்வண்ணா: எந்த ஆயுதத்துக்கும் அஞ்சாத நாங்கள் உமது சக்கரப்படைக்கு மட்டும் அஞ்சுகிறோம். அப்படைக்கும் அயரா வரம் தந்து அருள வேண்டும். " என்று வேண்டினார். திருமாலும் அவ்வாறே அருள் செய்தார். வரம் பெற்ற ஐவரும் எதிர்ப்பாரின்ரி அகந்தை கொண்டு விரும்பியது விரும்பியபடி உலகெங்கும் பெற்றுக்களித்துத் திரிந்தனர். ஒரு நாள் பாதாள லோகம் சென்றனர். அசுர குரு சுக்கிராச்சாரியாரின் ஆசிரமத்துள் அச்சமின்றி நுழைந்தனர். அங்கு சுக்கிராச்சாரியாரின் மகள் சோமை இருக்கக் கண்டனர். ஈடில்லா அவள் அழகைக்கண்டு ஐவரும் அவள் மீது மையல் கொண்டனர். அவளிடம் போய்த் தமது வீரப்பிரதாபங்களை யெல்லாம் சொல்லித் தம்மில் ஒருவரை மணக்குமாறு வற்புறுத்தினர். இக்கொடுஞ் சொற்கேட்ட சோமை சினங்கொண்டு "உங்கள் குருவின் மகள் என்பதை அறிந்தும் சொல்லத்தகாத வார்த்தைகளைப் புகன்றீர். இக்குற்றத்துக்குத் தண்டனையாக நீங்கள் என் போன்ற ஒரு பெண்ணாலேயே போரில் பலமிழந்து மடிவீர்கள்" எனச் சாபமிட்டாள். சாபத்தால் தாக்குண்ட அசுரர்கள் அப்போதே பலமிழந்து உடல் மெலிந்து துன்புற்றனர். அதிலிருந்து மீள அரனை நோக்கித் தவம் செய்தனர். இவர்களது கடுமையான தவத்துக்கு இரங்கி சிவபெருமான் நேரே தோன்றி ' வேண்டும் வரம் யாது/' என்று வினவினார். அரக்கர் ஐவரும் பெருமானை வணங்கிப் ' பெருமானே! எங்கள் குருதியை தேவர்களும் மற்றவர்களும் தமது உடம்பில் அணிந்து அழகு படுத்திக் கொள்ள வேண்டும்' என்று இறைஞ்சினர். சிவபெருமானும் அவ்வாறே வரமருளி மறைந்தார். இந்த வரலாற்றுப்படியே இந்த அசுரர்களின் வாழ்க்கை முடிந்தது.

No comments:

Post a Comment