அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

1/7/14

பகுதி ஒன்று : வேள்விமுகம் [ 5 ]

பகுதி ஒன்று : வேள்விமுகம்  [ 5 ]
குருஷேத்ரத்தின் அருகே இருந்த குறுங்காடு வியாசவனம் என்றழைக்கப்பட்டது. மூன்று தலைமுறைக்காலத்துக்கு முன்பு ஒரு கிருஷ்ணபட்ச இரவில் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர், சமுத்திரத்தின் எல்லை தேடி குட்டியை பெறச் செல்லும் திமிங்கிலம்போல, தன்னந்தனியாக இருளில் நீந்தி அங்கே வந்தார். குறுங்காட்டின் நடுவே ஓங்கி நின்றிருந்த கல்லாலமரத்தின் விழுதுகளுக்குள் ஒரு உறிக்குடிலைக் கட்டி அவர் குடியேறி பல ஆண்டுகள் கழித்துத்தான் மக்கள் அதை அறிந்தனர். வியாசரின் மாணவர்களான வைசம்பாயனரும் பைலரும் ஜைமினியும் சூததேவரும் அவரைத் தேடிவந்து அங்கே குடிலமைத்து தங்க ஆரம்பித்த பின்னர் மன்னனின் ஆணைப்படி அப்பகுதியில் வேட்டையும் விறகெடுத்தலும் தடைசெய்யப்பட்டது. அந்தக்காடு வியாசவனம் என பெயர்கொண்டது.
அங்கே அவர் தன் குருதியில் பிறந்து காடாகத் தழைத்து பின்பு குருஷேத்ர ரணபூமியில் இறந்து அழிந்த அனைவரையும் உயிர்த்தெழச் செய்வதறகான மாபெரும் தவமொன்றில் ஈடுபட்டிருப்பதாக சூதர்கள் நாடெங்கும் பாடித்திரிந்தனர். வெண்கலையணிந்த படைப்புத்தெய்வமே வந்து வியாசரிடம் அவரது விருப்பம் பிரபஞ்சவிதிகளுக்கு முரணானது என்று வாதிட்டதாகவும், அப்படியென்றால் எனக்கென ஒரு பிரபஞ்சத்தையே உருவாக்கிக் கொள்கிறேன், உனக்கென அதிலொரு கலைவனத்தையும் அளிப்பேன் என அவர் பதில் சொன்னதாகவும் பாணர்கள் பாடினார்கள். அவரைக் கண்ட நினைவிருந்த தலைமுறையெல்லாம் மறைந்தபின்பு உயிருடனிருக்கையிலேயே அவர் ஒரு புராணமாக ஆனார்.
சூதர்களின் கதைப்பாடல்கள் இவ்வாறு பாடின. போர்முடிந்து வீரமரணமடைந்தவர்களுக்கெல்லாம் நீர்க்கடன்களும் முடிந்தபின்னர் வியாசர் குருஷேத்ரக் களத்துக்குச் சென்றார். காலைவெளிச்சத்தில் செம்மண்பூமி கருமைகொள்ளும்படி நாய்களும் நரிகளும் கழுதைப்புலிகளும் நெரிந்துபரவி கூச்சலிட்டு பூசலிடுவதைக் கண்டு திகைத்து நின்றார். வானத்தை கரியகாடொன்றின் இலையடர்வு போல சிறகுகளால் மூடியபடி கழுகுகளும் பருந்துகளும் காக்கைகளும் பறந்துச் சுழன்றன. அங்கே நடந்துகொண்டிருந்தது மானுடத்தின் மீதான மாபெரும் வெற்றியின் உண்டாட்டு என உணர்ந்து கால்கள் தளர்ந்து அமர்ந்துகொண்டார்.
அதன்பின் வியாசர் குருஷேத்திரத்தை விட்டு விலகிச்செல்வதையே தன் இலக்காகக் கொண்டு பாரதவர்ஷமெங்கும் அலைந்தார். பனிமுடிகள் சூழ்ந்த இமையத்தின் சரிவுகளிலும் மழையும் வெயிலும் பொழிந்துகிடந்த தென்னகச்சமவெளிகளிலும் வாழ்ந்தார். கற்கக்கூடிய நூல்களையெல்லாம் கற்றார். மறக்கமுடிந்தவற்றையெல்லாம் மறந்தார். அத்தனைக்குப் பின்னரும் குருஷேத்திரத்தின் கனவுருத்தோற்றம் அவருக்குள் அப்படியேதான் இருந்தது. அவருக்குள்ளும் வெளியிலும் வீசிய எந்தக் கொடுங்காற்றும் அந்த ஓவியத்திரையை அசைக்கவில்லை.
மூன்று கடல்களின் அலைகளும் இணைந்து நுரைத்த குமரிமுனையில் நெடுந்தவ அன்னையின் ஒற்றைக்காலடி படிந்த பாறையுச்சியில் அமர்ந்து அலைகளை நோக்கி அமர்ந்திருந்தபோது அவர் தன்னுள் மோதும் மூன்றுகடல்களைக் கண்டுகொண்டார். நூறுநூறாயிரம் சொற்களுக்கு அப்பாலும் அவருடலில் எஞ்சியிருந்த மீன்மணம் கண்டு கீழே நீலநீரலைகளில் மீன்கணங்கள் விழித்த கண்களுடன் வந்து நின்று அலைமோதின. கண்களை மூடி அவர் யோகத்திலமர்ந்தபோது மீன்கள் ஒவ்வொன்றாக விலக, அவருக்குள்ளிருந்து மறைந்த அத்தனை சொற்களும் சென்ற வெளியில் நிறைந்த ‘மா’ என்ற முதற்சொல்லை கண்டடைந்தார்.
அங்கிருந்து கிளம்பி தண்டகாரண்யம் சென்று அடர்கானகத்தில் மனிதக்கண்கள் படாமல் பொழிந்துகொண்டிருந்த பாலருவிக்கரையில் குடிலமைத்து அந்தப்பேரொலியில் இருந்து அடுத்தசொல்லை அடையமுயன்றார். அதைத்துறந்து கங்கைச்சமவெளியில் சீறும் மழையிலும், இமையத்தின் பனிச்சரிவுகளிலும், பாஞ்சாலத்துக்கு அப்பால் விரிந்த மணல்வெளியின் வெங்காற்றிலும் அச்சொல்லைத்தேடி அலைந்தார்.
நூறாண்டுக்காலம் அந்த ஒற்றைச்சொல்லுக்காக தேடிய பின்னர் மனம்சோர்ந்து காளிந்தி நதிக்கரையில் தன்னுடைய அன்னையின் குலத்தவர் வாழும் கிராமத்தை சென்று சேர்ந்தார் மகாவியாசர். அங்கே அவரை எவருமறிந்திருக்கவில்லை. அவரது உடலில் எழுந்த மீன்வாசனையை முகர்ந்த குலமூத்தார் அவரை தங்களவர் என அடையாளம் கண்டனர். அவர் பிறந்த யமுனைத்தீவு என்னும் மணல்மேட்டிலேயே ஒரு குடிலமைத்து மீனவர்கள் படகில் கொண்டுவந்து கொடுத்த ஊனுணவை உண்டு அங்கே வாழ்ந்தார். அன்னை என்ற ஒற்றைச்சொல்லால் மட்டுமே ஆனதாக இருந்தது அவரது அகம். அச்சொல்லே அனைத்தையும் அடக்கி அதுமட்டுமேயாகி குன்றாமல் கூடாமல் அப்படியே அவருள் கிடந்தது.
ஒரு தலைமுறைக்காலத்துக்குப்பின் யமுனையின் ஆழத்திலிருந்து ஒரு வெள்ளிமீன் வானத்திலிருந்து மின்னலிறங்குவதுபோல மேலெழுந்து வந்தது. அந்த மீனின் பெயர் ஸித்தி. அதன் மகளாகிய அத்ரிகையின் வயிற்றில்தான் வியாசனின் அன்னையாகிய மச்சகந்தி பிறந்தாள். யமுனையின் ஆழத்தில் வாழும் மரணமற்ற அந்தத் தாய்மீனின் கருவறைக்குள்ளிருந்துதான் கோடானுகோடி மீன்கள் பெருகி யமுனையை நிறைத்துக்கொண்டிருந்தன.
மேலே வந்த அன்னை இளஞ்சூரிய ஒளியில் நீர்ப்பரப்பிலிருந்து எழுந்து பறந்து மீண்டும் நீரில் விழுந்துமறைந்தாள். அந்த ஒளியின் கணத்தில் கிருஷ்ணதுவைபாயன மகாவியாசனின் அகத்திலிருந்த ஒற்றைச்சொல்லில் இருந்து மீதி அத்தனை சொற்களும் பிறந்து வந்து அவர் சித்தத்தை நிறைத்தன. அந்தச் சொற்களஞ்சியத்துடன் அவர் மீண்டும் குருஷேத்ரம் நோக்கி வந்தார். மீண்டும் அந்த ரணபூமி மீது நின்றார். சடலங்கள்மீதும் உடைந்த ரதங்கள் மீதும் துருவேறிய ஆயுதங்கள் மீதும் மண்மூடியிருந்தது. முந்தைய இளமழையில் அந்த மண்பரப்பின் மீது பசும்புல் முளைத்து மெல்லியகாற்றில் அலைபாய்ந்தது.
ஆயிரம் கதைகளின் வழியாக சூதர்களின் பாடலில் வாழ்ந்த வியாசர் அன்றுகாலை தன் பெருங்காவியத்தின் கடைசிச்சொற்களை எழுதிமுடித்தார். அவர் வியாசவனத்தில் குடியேறிய அன்று தன்னுள் எழுந்த சொல்லலைகளுடன் அமர்ந்திருக்கையில் புதர்களை விலக்கி வந்த மதகளிறு ஒன்று தலைகுலுக்கி, காதுகளை விசிறி, துதிக்கை சுழற்றி, ஓங்காரமெனப்பிளிறி, அவர் இருந்த கல்லாலமரத்தைக் குத்தியது. திரும்பி தலையை எடுத்து மேலும் இருமுறை ஓங்காரமெழுப்பி அது பின்வாங்கியபோது அதன் தந்தங்களில் ஒன்று ஒடிந்து மரத்தில் பதிந்திருப்பதைக் கண்டார் மகாவியாசர். அதை எடுத்து சிவந்த மென்மணல் விரிந்த கதுப்பில் ஓம் என எழுதினார். அதுவே அவருடைய காவியத்தின் முதல்சொல்லாக அமைந்தது.
ஒற்றைக்கொம்புள்ள கணபதியை தன்முன் நிறுவி அவர் எழுதிய காவியத்தின் கடைசிச்சொல்லாகவும் ஓங்காரமே அமைந்தது. அந்த ஒலி அவருள் மட்டுமே ஒலித்தது. முழுமையிலிருந்து முழுமைநோக்கி வழிந்த காவியத்தை எழுதி நிறுத்திய தாழை மடலை மதகளிற்றுமுகத்தானின் மண்சிலைக்கு முன்னால் வைத்துவிட்டு மெலிந்த கைகளைக் கூப்பியபடி கண்களிலிருந்து கண்ணீர் சொட்ட அமர்ந்திருந்தார் வியாசர். விடிந்துவிட்டதைச் சொல்ல அவரது மாணவர் பைலர் குடிலுக்குள் வந்தபோது குறுகிய உடலுடன் அவர் ஒடுங்கி அமர்ந்து மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். பைலர் மெல்ல வந்து தாழை மடலைக் கையிலெடுத்து வாசித்தார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் சொட்ட ஆரம்பித்தது. வெளியே காத்திருந்த ஜைமினியும் உள்ளே வந்து, பைலரின் உணர்ச்சியிலிருந்தே ஊகித்துக்கொண்டு அவரும் கண்ணீர்விட ஆரம்பித்தார்.
அன்று வியாசவனத்தில் ஒரு திருவிழா கூடியது. மூன்று சீடர்களும் அவர்களின் மாணவர்களும் சேர்ந்து வியாசவனத்தின் அத்தனை குடில்களையும் ஈச்சங்குருத்துக்களாலும் தளிரிலைகளாலும் மலர்களாலும் அலங்கரித்தனர். மையக்குடிலில் பட்டுமணல் விரித்து நடுவே கணபதியை நிறுவி அவர் காலடியில் வைத்த செம்பட்டுப்பீடத்தில் அடுக்கடுக்காக காவியச்சுவடிகளைக் குவித்துவைத்து அருகே அகல்விளக்கை ஏற்றிவைத்தனர். அது சித்திரை மாதம் முழுநிலவு நாள். இனி என்றென்றும் ஞானம் விளையும் தருணமாகவே அது எண்ணப்படும் என்றார் பைலர். இந்த நாளில் குருநாதரின் பாதங்களைப்பணிந்து அவரளித்த ஞானத்திற்குக் கைமாறாக சுயத்தை அர்ப்பணம் செய்யவேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தனர்.
அப்போது அஸ்தினபுரியிலிருந்து நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் வைசம்பாயனரும் அமைச்சர் பத்மபாதரும் வந்து வியாசவனத்தில் இறங்கினர். பத்மபாதருக்கு வைசம்பாயனர் வியாசரின் வரலாற்றையும் அவரைப்பற்றிய சூதர்களின் கதைகளையும் சொல்லிக்கொண்டு வந்தார். பாரதத்தில் வாழும் ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவர் வியாசர் என்றார் வைசம்பாயனர். மாபலி, அனுமன், விபீஷணன், பரசுராமன், கிருபர், அஸ்வத்தாமா, வியாசர் என அவர்களை சூதர்களின் பாடல்கள் பட்டியலிடுகின்றன. எதிர்ப்பால், பணிவால், நம்பிக்கையால், சினத்தால், குரோதத்தால், பழியால் அழிவின்மை கொண்ட அவர்கள் நடுவே கற்பனையால் காலத்தை வென்றவர் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர்.
வியாசவனத்துக்குள் நுழைந்ததும் பைலரும் ஜைமினியும் அவரை நோக்கி ஓடிச்சென்று கண்ணீருடன் ஆரத்தழுவிக்கொண்டனர். காவியம் முடிவுற்ற செய்தியைக் கேட்டதும் “இது விதிமுகூர்த்தம்போலும். அங்கே குருநாதரின் ஞானத்தை சோதிக்க ஒருவன் தென்திசையிலிருந்து வந்து நிற்கிறான்” என்றார் வைசம்பாயனர். வியாசரை அவ்வளவு தொலைவுக்கு ரதத்தில் கொண்டு செல்லமுடியுமா என்று பைலரும் ஜைமினியும் ஐயம் தெரிவித்தனர். “வேறு வழியில்லை. இன்றைய நாளில் அவரது குரல் அங்கே ஒலித்தாகவேண்டும்” என்றார் வைசம்பாயனர். “ரதத்தின் அசைவை அவர் உடல் அறியாதிருக்க தூளியில் அவரை கொண்டுசெல்லலாம். அன்னத்தூவிகள் செறிந்த மெத்தையும் உள்ளது”
குடிலுக்கு வெளியே பின்திண்ணையில் வியாசர் அமர்ந்திருப்பதை வைசம்பாயனர் கண்டு மௌனமாக வணங்கி நின்றார். மரணத்தை வென்றாலும் மூப்பை வெல்லமுடியாத உடல் தசை வற்றி காட்டுத்தீயில் எரிந்து எஞ்சிய சுள்ளி போலிருந்தது. ஒருகாலத்தில் தாடியாகவும் தலைமயிராகவும் விழுதுவிட்டிருந்த கனத்த சடைக்கற்றைகள் முழுமையாகவே உதிர்ந்துபோய், தேமல்கள் பரவிச் சுருங்கிய தோல்மூடிய மண்டைஓடு தெரிந்தது. ஒன்றுடன் ஒன்று ஏறிப்பின்னிய விரல்களில் நகங்கள் உள்நோக்கிச் சுருண்டிருக்க, கைகளிலும் கழுத்திலும் நரம்புகள் தளர்ந்த கொடிகள்போல் ஓடின. உள்ளடங்கிய வாயும் தொங்கிய நாசியும், சிப்பிகள்போன்று மூடிய கண்களுமாக அங்கே இருந்த அவருக்குள் அவர் வெகுதொலைவில் இருந்துகொண்டிருந்தார். வைசம்பாயனர் குருநாதரின் பாதங்களை வணங்கியபோது அவரது கண்கள் அதிர்ந்து பின்பு திறந்தன. கரிய உதடுகள் மெல்ல அசைந்தன.
வைசம்பாயனர் வியாசரிடம் அவரை அவைக்குக் கொண்டுசெல்ல அழைப்பு வந்திருப்பதைச் சொன்னார். “ஜரத்காருவின் மைந்தன் ஆஸ்திகன் வந்திருக்கிறானா?” என்றார் வியாசர். அது வைசம்பாயனருக்கு வியப்பளிக்கவில்லை. “ஆமாம் குருநாதரே….தங்கள் சொல்லுக்காக அங்கே அவை காத்திருக்கிறது” என்றார். செல்வோம் என வியாசர் கையசைத்தார்.
பத்மபாதரும் பைலரும் சேர்ந்து வியாசரை அவர் இருந்த கம்பளத்தோடு தூக்கி ரதத்தில் இருந்த பெரிய தூளிக்குள் வைத்தனர். அதற்குள் பரப்பப்பட்டிருந்த மெத்தைக்குள் சிறிய குழந்தைபோல அவர் சுருண்டு படுத்துக்கொண்டார். பைலரும் ஜைமினியும் ரதத்தின் பின்பக்கத்தில் ஏறிக்கொண்டனர். சாரதி மெதுவாக குதிரைகளைத் தட்டி அவற்றின் புட்டத்தில் கால்களால் உரசி சேதி சொன்னான். அவை பெருநடையாக செல்ல ஆரம்பித்தன. வியாசவனத்தைத் தாண்டியதும் வைசம்பாயனர் திரும்பிப்பார்த்தபோது வியாசர் வலதுகையின் கட்டைவிரலை வாய்க்குள் போட்டு சப்பியபடி இடதுகையால் துணியை அள்ளி மார்போடு சேர்த்துக்கொண்டு கருக்குழந்தை போல தூங்கிக்கொண்டிருந்ததைக் கண்டார். தாய்மையின் கனிவுடன் வைசம்பாயனர் போர்வையை மெல்ல இழுத்து வியாசரை நன்றாக போர்த்திவிட்டார்.
Vyasa
ஜனமேஜயனின் வேள்விமண்டப முற்றத்தில் அமைச்சர்களும் தளகர்த்தர்களும் காத்து நின்றனர். வியாசரின் ரதம் அணுகியதும் ஜனமேஜயன் வெளியே வந்து கைகூப்பியபடி நிற்க ஜைமினியும் பைலரும் சேர்ந்து வியாசரை கைகளில் தூக்கிக்கொண்டு வந்தனர். வியாசர் கண்மூடி கைகூப்பியபடி அவர்களின் கையில் குறுகி அமர்ந்திருந்தார். அவர்கள் உள்ளே வந்ததும் நிமித்திகன் செங்கோலைத் தூக்கி வாழ்த்தி குரல் கொடுத்தான். “பராசர முனிவரின் மைந்தர், குருவம்சத்து பிதாமகர், காவியஞானி, மகாவியாசர், கிருஷ்ண துவைபாயனர் வருகிறார்..” வேள்விமண்டபமும் வாழ்த்தி குரல் எழுப்பியது. முனிவர்களும் வைதிகரும் அவர்மேல் மலர்களையும் அட்சதையையும் தூவினார்கள். மலர்மழையில் அவர் நனைந்தபடி கண்மூடியவராக அமர்ந்திருந்தார்.
ஜனமேஜயன் “பிதாமகரின் பாதங்களில் என் மணிமுடியை வைக்கிறேன்” என்றார். “இங்கே ஒரு விவாதம் நடந்தது…” என்றார். ஆஸ்திகனை சுட்டிக்காட்டி மேலே அவர் பேசுவதற்குள் வியாசர் கையை மெதுவாகத் தூக்கி அவரை நிறுத்திவிட்டு சைகையால் ஆஸ்திகனை அருகே அழைத்தார். ஆஸ்திகன் அவர் அருகே சென்று அவர் பாதங்களை வணங்கினான். நடுங்கும் கரங்களை அவன் தலைமீது வைத்து “புகழுடன் இரு” என்று வியாசர் ஆசியளித்தார். பின்பு திரும்பி ஜனமேஜயனிடம் “இவன் பெருந்தவத்தாளான மானசாதேவிக்கு ஞானியான ஜரத்காருவில் பிறந்தவன். இவன் சொல்வதெல்லாமே உண்மை” என்றார்.
ஜனமேஜயன் திகைத்தவராக பின்னகர்ந்து தன் சிம்மாசனத்தின் மீது அமர்ந்துகொண்டார். ஆஸ்திகன் அவரை நோக்கி, “அரசே, நான் இங்கே வரும்போது வேறு எந்த நோக்கமும்  எனக்கு இருக்கவில்லை… முக்காலமும் மூவுலகும் அறிந்த என் அன்னை எனக்களித்த ஆணையை நிறைவேற்றவேண்டும் என்று மட்டும்தான் நினைத்தேன். ஆனால் அஸ்தினபுரத்துக்குள் வந்ததுமே நான் செய்யவேண்டியது என்ன என்று கண்டுகொண்டேன். என் தாயின் நோக்கத்தையும் புரிந்துகொண்டேன். ஜனமேஜயரே, உங்கள் நகரம் உயிரற்றதைப்போலக் கிடப்பதையே நான் கண்டேன். வீரம் இல்லாத காவலர்கள்… துடிப்பு இல்லாத பெண்கள்… துள்ளிக்குதிக்காத பிள்ளைகள்… இந்த நகரம் தோல்கிழிந்த பெருமுரசு போல எனக்குத் தோன்றியது. உங்களைத் தடுக்கவில்லை என்றால் இந்த உலகத்தையே இப்படி ஆக்கிவிடுவீர்கள் என்று அறிந்தேன். இந்தவேள்வியை நிறுத்த வேண்டியது என்கடமை என்று கொண்டேன்” என்றான்.
“நான் பிரம்மத்தின் இயல்பான சத்வ குணத்தை இங்கே நிலைநிறுத்த விரும்பினேன் ஆஸ்திகரே’ என்றார் ஜனமேஜயன். “அன்பும் அறமும் நன்மையும் நலமும் மட்டுமே மனுக்குலத்தில் வாழவேண்டுமென விழைந்தேன்”
ஆஸ்திகன் திரும்பி சபையைப் பார்த்தான் “இங்கே கபில முனிவரின் வழிவந்த சாங்கிய ஞானி எவராவது இருக்கிறீர்களா?” என்றான். ஒரு முனிவர் எழுந்து ”ஆம், நான் கபிலரின் நேரடி மாணவன். என்பெயர் சமரன்” என்றார். ஆஸ்திகன் “சொல்லுங்கள் சமரரே, கபிலர் என்ன சொல்கிறார்? இந்தப் புடவியின் விதி என்ன? இப்பூமி எதனால் ஆனது?” என்றான்.
சமரமுனிவர் “ஆதியிலிருந்தது ஒன்றே. முதல்முடிவற்ற, இதுஅதுவற்ற, முதலியற்கை. அது பிளவற்ற காலத்தில் இருந்தது. அதில் முதல் எண்ணமெனும் மஹத் உருவானது. அது இருப்பு எனும் அகங்காரமாகியது. அகங்காரம் முக்குணங்களாக மாறி அவை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டன. பிரபஞ்சப்பேரியக்கம் தொடங்கியது” என்றார்.
ஆஸ்திகன் திரும்பி ஜனமேஜயரிடம் “மாமன்னரே, சத்வ, ரஜோ, தமோ குணங்களுடன் இப்புடவி பிறந்து வந்தது. அவை சமநிலையில் இருப்பதன் பெயரே முழுமை. ஒன்று அழிந்தால்கூட அனைத்தும் சிதறி மறையும். நீங்கள் சத்வகுணத்தைத் தவிர பிறவற்றை அழிக்க நினைத்தீர்கள். அதன் வழியாக இவ்வுலகையே அழிக்கவிருந்தீர்கள். அதைத் தடுத்து நிறுத்துவதற்காகவே நான் தட்சனின் உயிரை கோரிப்பெற்றேன்” என்றான்.
ஜனமேஜயன் சினத்துடன், “நீங்கள் சொல்லும் தரிசனத்தை நானறியமாட்டேன். நான் கற்ற வேதாந்தம் அதைச் சொல்லவில்லை…ஆஸ்திகரே, நீங்கள் தப்பவிட்டது இருட்டை….தீமையை” என்றார். ஆஸ்திகன் உறுதியான குரலில், “இச்சை தீமையல்ல மாமன்னரே! அதன் மறுபக்கத்தால் சமன்செய்யப்படாத நிலையிலேயே அது அழிவுச்சக்தியாகிறது. இச்சை எஞ்சியிராத உலகத்தில் படைப்பு நிகழ்வதில்லை. அது மட்கிக்கொண்டிருக்கும் பொருள்” என்றான்.
ஜனமேஜயன் வியாசரை நோக்கி “பிதாமகரே நீங்கள்தான் எனக்கு வழிகாட்டவேண்டும்” என்று இருகைகளையும் விரித்தார். வியாசர் தன் முன் கிடந்த தட்சனை நோக்கி கையை நீட்டினார். ஆசியளிக்கக் குவிந்த கைபோன்ற கரிய படம் விரித்து தட்சன் அவர் முன் எழுந்து நின்றான்.
“நீ இல்லையேல் என் காவியமில்லை. இம்மண்ணில் வாழ்வும் இன்பமும் இல்லை. உனது தர்மத்தை நீ செய்வாயாக. உன் குலம் முடிவிலாது பெருகட்டும். இவ்வுலகமெங்கும் காமமும் அகங்காரமும் பொலியச்செய்வாயாக! ஆம், அவ்வாறே ஆகுக!” என மகாவியாசர் ஆசீர்வதித்தார். தட்சன் பின்னகர்ந்து நெளிந்து தன் வளையை நோக்கிச்சென்றான். அவனும் துணைவியும் மண்ணுக்குள் மறைந்தனர்.
வியாசர் திகைத்து நின்ற ஜனமேஜயனை நோக்கித் திரும்பினார். “குழந்தை, உன்னால் இப்போது புரிந்துகொள்ளமுடியாது” என்றார். “நான் புரிந்துகொள்ளவே இருநூறாண்டுகால வாழ்க்கை தேவையாகியிருக்கிறது….” என்றபின் “வைசம்பாயனரே” என்றார். வைசம்பாயனர் வந்து வணங்கி நின்றார். “என் காவியத்தைப் பாடுங்கள்” என்று வியாசர் ஆணையிட்டார்.
“எந்தப் பகுதியை?” என்று வைசம்பாயனர் கேட்டார். “கதையின் தொடக்கம் ஆசிரியனின் அகங்காரத்தில் அல்லவா? என்னிடமிருந்து அதைத் தொடங்குக!” என்றார் வியாசர். “என் அகங்காரம் திரண்டு முதிர்ந்து முத்தாகி உதிர்ந்த ஒரு தருணம். அந்த விதை முளைத்த வனம்தான் குருஷேத்ரமாகியது”
வைசம்பாயனர் சுவடியைப் பிரித்தார்.அனுஷ்டுப்பு சந்தத்தில் பதினெட்டு பர்வங்களாக இயற்றப்பட்டிருந்த பெருங்காவியத்தின் பெயர் ‘ஸ்ரீஜய’. அச்சுவடியை தன் தலைமேல் வைத்து வணங்கிய வைசம்பாயனர் ஓங்கிய குரலில் பாடினார். “நீரெனில் கடல், ஒளியெனில் சூரியன், இறையெனில் பிரம்மம், சொல்லெனில் வியாசனின் சொல்லேயாகும். அது அழியாது வாழ்க!”
‘ஆம் ஆம் ஆம்’ என்று அவை ஆர்ப்பரித்தது. வைசம்பாயனர் மனுக்குலம் அடைந்த முதற்பெரும் நூலின் வரிகளை பாட ஆரம்பித்தார்.

1/6/14

பகுதி ஒன்று : வேள்விமுகம் [ 4 ]

பகுதி ஒன்று : வேள்விமுகம்    [ 4 ]

சர்பசத்ரவேள்விப்பந்தலில் பெருமுரசம் தொலைதூர இடியோசை போல முழங்க, மணிமுடி சூடி உள்ளே நுழைந்தபோது ஜனமேஜயன் தன் இளமைக்கால நினைவொன்றில் அலைந்து கொண்டிருந்தார். அவரும் தம்பியர் உக்ரசேனனும் சுருதசேனனும் பீமனும் சிறுவர்களாக வனலீலைக்குச் சென்றபோது நடந்தது அது. யமுனைநதிக்கரையில் அவர்கள் சிறுவேட்டையாடியும் மரங்களிலாடியும் நீரில் துழாவியும் விளையாடினர். ஜனமேஜயன் தன் தம்பி சுருதசேனனிடம் வேள்விசெய்து விளையாடலாமெனச் சொன்னான். சத்ரியர்கள் செய்யவேண்டிய வேள்விச்சடங்குகள் அவர்களுக்கு அப்போதுதான் கற்பிக்கப்பட்டிருந்தன. நதிக்கரையில் கல்லடுக்கி வேள்விக்குளம் அமைத்து, சமித்துகள் பொறுக்கிச் சேர்த்து, அரணிக்கட்டை உரசி நெருப்பாக்கி அவர்கள் வேள்வியைத் தொடங்கினர். வேட்டையாடி கொண்டுவந்திருந்த மாமிசத்தையும் காட்டுமலர்களையும் காய்களின் நெய்யையும் ஆகுதியாக வைத்தனர்.
வேள்விக்குதிரை இல்லையே என்று சுருதசேனன் கேட்டான். காட்டிலிருந்து ஏதாவது ஒரு மிருகத்தை கொண்டுவா என்று ஜனமேஜயன் சொன்னான். தம்பியர் மூவரும் புதர்களை துழாவுகையில் குழிக்குள் கிடந்த ஒரு நாய்க்குட்டியைக் கண்டனர். எட்டு நாட்களுக்கு முன் காட்டுநாய் ஒன்று பெற்றிட்டது அந்தக்குட்டி. அதை அதன் அன்னை ஷிப்ரதேஜஸ் என அழைத்தது. வேட்டைக்குச் சென்ற அன்னை கொண்டுவரும் உணவுக்காக பசியுடன் காத்திருந்து சலித்து மெல்ல புதருக்குள் இருந்து வெளிவந்து அது முந்தையநாள் திறந்த புத்தம்புதிய கண்களால் உலகத்தைப்பார்த்தபோதுதான் அவர்கள் அதைக்கண்டடைந்தனர். அதை சுருதசேனன் தூக்கிக்கொண்டு வந்தான். அதையே வேள்விக்குதிரையாக உருவகித்து அதற்கு காட்டுக்கொடிகளால் சேணமும் கடிவாளமும் இட்டு வேள்வித்தூணில் கட்டினர். அதர்வவேத மந்திரங்களை முழக்கி வேள்வியைத் தொடங்கினர்.
பசித்த நாய்க்குட்டி நான்குகால்களையும் ஊன்றி திமிறி கழுத்தை கட்டில் இருந்து உருவி ஓடிவந்து தன் இயற்கையால் மாமிச வாசனையை வாங்கிக்கொண்டு சிறியவாலை ஆனந்தமாகச் சுழற்றியபடி வேள்விப்பொருளாக வைக்கப்பட்டிருந்த மானிறைச்சியை நக்கி உண்ண ஆரம்பித்தது. திரும்பி அதைப்பார்த்த ஜனமேஜயன் தன் கையிலிருந்த தர்ப்பையால் அதன் முகத்தில் ஓங்கியறைந்தான். தர்ப்பை முட்கள் கண்ணில் குத்த நாய்க்குட்டி விழிகளை இழந்து ஓலமிட்டழுதபடி செடிகளில் முட்டியும், கற்களில் தடுக்கியும், கொடிகளில் சிக்கியும் காட்டுக்குள் ஓடியது. அந்த ஓலம் விண்ணகத்தில் இருக்கும் நாய்களின் தெய்வமாகிய சரமையின் செவிகளில் விழுந்தது. அந்தச்சிறுநாயில் குடிகொண்டு எழுந்து, பொன்னிற உடலும், நீண்ட வாலும், அர்க்யமிடக் குவிந்த கரங்கள் போன்ற செவிகளுமாக ஜனமேஜயன் முன்னால் சரமை வந்து நின்றது.
“ஒவ்வொரு உயிருக்கும் அதற்கான மனமும் உடலும் படைப்புசக்தியால் அளிக்கப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் உணர்ந்து அவையனைத்தும் தங்களுக்கு உகந்தபடி வாழ்வதற்கு வழிசெய்வதே மன்னனின் கடமை. நக்குவது நாயின் இச்சையாகவும் தர்மமாகவும் உள்ளது. அதைச்செய்தமைக்காக நீ அதன் மெல்லிய சிறுகழுத்தையும் மலர்ச்செவிகளையும் வருடி ஆசியளித்திருக்கவேண்டும். உன் மனம் அதைக்கண்டு தாயின் கனிவை அடைந்திருக்கவேண்டும். ஆனால் நீ நெறிவழுவினாய்” என்றது சரமை. தவறை உணர்ந்த ஜனமேஜயன் எழுந்து கண்ணீருடன் கைகூப்பி நின்றான். “தவறுக்கான தண்டனையை நீ அனுபவித்தாகவேண்டும். இந்த விழியிழந்த நாய்போலவே நீ வாழ்நாள் முழுக்க இருப்பாய்” என்று சொல்லி சரமை மறைந்தது.
கண்ணிழந்த நாயின் பதைப்பை அதன்பின் தன்னுள் என்றும் உணர்ந்துகொண்டே இருந்தார் ஜனமேஜயன். தெரியாதவற்றிலும் அறியாதவற்றிலும் முட்டி மோதிச் சரிவதையே தன் வாழ்க்கையாகக் கொண்டிருந்தார். புரியாதவை எல்லாம் அகத்தில் எத்தனை பெரிதாகின்றன என்று அவர் அறிந்தார். தன்னை அறிந்துகொள்ளமுடியாதவனின் தனிமையை தெய்வங்களும் நீக்கமுடியாதென்று உணர்ந்தார். அந்த இறுதிநாளில் வேள்விக்கூடத்தினுள் நுழைந்தபோது அங்கிருந்த நூற்றுக்கணக்கான பந்தற்கால்களில் அவருடைய பிரக்ஞை நிலையழிந்து முட்டிமுட்டி தத்தளித்தது.
வேள்விச்சாலைக்குள் புகுந்த மாமன்னனையும் பட்டத்தரசியையும் வைசம்பாயனர் அழைத்துச்சென்று செம்மணிக்கண்கள் விழித்த பொற்சிம்மங்கள் வாய்திறந்து நின்ற ஆசனத்தில் அமரச்செய்தார். யுதிஷ்டிரர் அமர்ந்த அரியணை என்பதனால் தர்மபதம் என்று அழைக்கப்பட்ட அது அறம் வழுவியவர்களை எரித்தழிப்பது என்றனர் சூதர்கள். குடிமக்களின் வாழ்த்தொலிகளும் வேதகோஷமும் கலந்து அருவியொலிபோல எழுந்தன. முனிவர்களின் மலர்களும் வைதிகரின் மங்கலஅரிசியும் அவர் மீது மழையெனப் பொழிந்தன.
யக்ஞ எஜமானராகிய வைசம்பாயனர் கைகூப்பி “சக்கரவர்த்திக்கு வணக்கம். இன்று இந்த வேள்வியின் இறுதிநாள். இன்றும் தாங்களே வேள்விக் காவலனாக அமர்ந்து இதை முழுமைசெய்யவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். ஜனமேஜயன் “அவ்வாறே ஆகட்டும்” என்றபடி கைகூப்பியபடி சிம்மாசனத்தில் அமர்ந்தார். அமைச்சர் ஒருவர் ஜனமேஜயன் கையில் பட்டில் சுற்றப்பட்ட நாரதசுருதியின் ஒரு ஏட்டுப்பிரதியை அளிக்க, தலைமை தளகர்த்தர் மணிகள் ஜொலித்த பொன் உறையுடன் கூடிய சிறிய உடைவாளை அளித்தார். நால்வருணத்து குடித்தலைவர் நால்வர் சேர்ந்து ஜனமேஜயனின் செங்கோலைக்கொண்டுவந்து அவரிடம் அளித்தனர். மேலே விரிந்த தாமரைமீது அமுதகலசச் சின்னம் கொண்ட பொற்செங்கோலை ஜனமேஜயன் வலக்கையில் ஏந்திக்கொண்டார்.
வைசம்பாயனர் அவருக்கான பீடத்தில் அமர்ந்துகொண்டதும் முதன்மை ஹோதாவான சண்டபார்க்கவர் எழுந்து வணங்கி தர்ப்பையை அவர் கையில் கொடுத்து வேள்வியை முடிக்கும்படி கோரினார். கடலோரத் திராவிடச்சேர நாட்டிலிருந்து வந்திருந்த சண்டபார்க்கவர் பிருகுவின் மைந்தரான சியவன முனிவரின் குருகுலத்தைச் சேர்ந்தவர். நால்வகை வேதங்களில் அதர்வத்தை முதன்மையாக்கி, பூதயாகங்களை முதல்முறைமையாகக் கொண்டு, யோகானுஷ்டானங்கள் வழியாக பிரம்மத்தை அணுகும் சியவன முறை தென்மேற்குத் திராவிடத்திலும் வங்கத்திலும் மட்டுமே தழைத்திருந்தது. சண்டபார்க்கவர் தர்ப்பையை நாகவிரலில் கட்டுவதைக் கண்டதுமே ஆஸ்திகன் அவர் தான் கற்ற சியவன குருகுலத்தவர் என்பதைக் கண்டுகொண்டான்.
முரசுகள் மீண்டும் முழங்கியதும் அதுவரை இருந்த ரித்விக்குகள் எழுந்து புதியவர்கள் அமர்ந்துகொண்டனர். அனைவரும் கரடித்தோலை போர்த்தியிருந்தனர். ஒவ்வொருவரின் பின்னாலும் உபஹோதாக்கள் அமர்ந்து சமித்துக்களை எடுத்துக்கொடுக்க அவர்கள் கடைசிகட்ட ஆகுதிகளை ஆரம்பித்தனர். எளியவையும் அரியவையுமான நீரும், இலைகளும், மலர்களும் முதல்கட்டத்தில் நெருப்புக்கு அளிக்கப்பட்டன. அரியவையும் இன்றியமையாதவையுமான நெய்யும், உணவும், ஆடைகளும் அதன்பின்னர் அவியாக பொழியப்பட்டன. அதன்பின் அரியவையும், அற்பமானவையும், மாமன்னர்கள் படைதிரட்டி ஒருவரையொருவர் கொன்றுகுவிக்கக் காரணமாக அமைந்தவையுமான நவமணிகள் அவியிலிடப்பட்டன. வேள்விச்சாலையில் ஒவ்வொருவர் கண்களும் அவற்றிலேயே பதிந்திருந்தன. கண்ணீர்த்துளிகள்போல, குருதித்திவலைகள் போல, விந்துச்சொட்டுகள் போல அவை நெருப்பில் விழுந்தபோது அரங்கெங்கும் நெடுமூச்சுகள் எழுந்தன.
பூதயாகத்திற்கென நவத்துவாரங்களையும் மூடி முறைப்படி கொல்லப்பட்ட மானின் இறைச்சியும், பன்றியின் இறைச்சியும், பசுங்கன்றின் இறைச்சியும் அவியாக்கப்பட்டன. சத்வ, தமோ, ரஜோ குணம் கொண்ட அவை விண்ணாளும் தேவர்களுக்கு உணவாயின. பாதாளமூர்த்திகளுக்கு காகங்களும், நீர்த்தவளைகளும், தேரட்டைகளும், மீன்களும் அவியாக்கப்பட்டன. பறப்பவையும் தாவுபவையும் ஊர்பவையும் நீந்துபவையுமான அத்தெய்வங்களெல்லாம் அவிபெற்று பசியடங்கின. கடைசியாக சண்டபார்க்கவரும் அவருடன் வந்த பதினெட்டு ஹோதாக்களும் தம் வலக்கைகளைக் கிழித்து சொட்டிய குருதியை அவியாக்கினர்.
யாகநெருப்பு பலாசவிறகையும் ஆலமர விழுதையும் உண்ணும் அதே பாவனையில் அவற்றை எல்லாம் உண்டு நின்றாடியதை ஆஸ்திகன் கண்டான். அதர்வ வேத சூக்தங்கள் வானிலிருந்து இழியும் அருவியின் ஓசையில், துதிக்கை தூக்கி பிளிறும் மதகரியின் குரலில், நிலத்தை அறைந்து கர்ஜிக்கும் சிம்மத்தின் ஒலியில் கேட்டுக்கொண்டிருந்தன. பின்பு வைசம்பாயனர் எழுந்து கை கூப்பினார் “வேள்விநெருப்புக்கு அன்னத்தை அவியாக அளிப்பது முழுமையாகி விட்டது வைதிகர்களே… ஐம்பூதங்களும் வேள்வியால் இப்போது தூய்மையாகிவிட்டன. நாம் நம் அகங்காரத்தின் அடையாளமாக நம்மிடமிருக்கும் அனைத்துப் பொருட்களையும் இந்தத் தழலுக்கு உணவாக்கி விட்டோம்…இனி நம் மனங்களில் உள்ள காமத்தையும் குரோதத்தையும் மோகத்தையும் இந்த நெருப்பிலே அவிஸாக்குவோம்!” என்றார்.
ரித்விக்குகளுடனும் ஹோதாக்களுடனும் இணைந்து அங்கிருந்த அனைவரும் தங்கள் நெஞ்சிலிருந்து எண்ணங்களை கையால் அள்ளி தீயில் போடுவது போல சைகை காட்ட அவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டதுபோல தீ பின்வாங்கி கருகி பின்னர் மேலே எழுந்து படபடத்தது. ஆஸ்திகன் நெளியும் பல்லாயிரம் சர்ப்பங்களைப்போல அந்தக் கைகளை உணர்ந்தான். தன்னிலிருந்து தன்னை விலக்கும் கைகள் ஒரு கட்டத்தில் வெளியிலிருந்து தனக்குள் எதையோ அள்ளி நிரப்புபவையாகத் தோன்றின. அந்தச்சைகைகள் ஒருவகையான ஒத்திசைவை அடைந்த ஒரு கணத்தில் நீலத்தழல்பீடம் மீது ஏறிய செந்தழல் எழுந்து பறந்து கைநீட்டி வேள்விமண்டபத்தின் கூரைவிளிம்பைப் பற்றிக்கொண்டு மேலேறியது. வேள்விமண்டபத்தின் ஈச்சையோலைக்கூரை தீப்பற்றி செந்நெருப்புத்தழலாட எரியத்தொடங்கியது.
தீ வேள்விக்கூடத்தின் கூரையெங்கும் படர்ந்து அவர்கள் தலைக்குமேல் செந்நிறக் கூரைபோல நின்று எரிந்தது. அவர்கள் அனைவரும் மெல்ல உடல்தொய்ந்து அமைய கைகள் தளர்ந்து மடிமீது விழுந்தன. மூச்சொலிகள் மட்டும் வேள்விக்கூடத்தில் நிறைந்திருந்தன. வைசம்பாயனர் “நாம் அனைவரும் தூயவர்களானோம் என்பது உண்மை என்றால் இந்த வேள்விமண்டபத்தில் வருணனே வந்து எங்களுக்கு சான்று சொல்லட்டும்!” என உரக்கக் கூவினார். வைதிகர்கள் “ஓம்! அவ்வாறே ஆகட்டும்!” என சேர்ந்து முழங்கினர். மழை பல்லாயிரம்கோடி முள்ரோமக் காலடிகளுடன் நெருங்கிவந்து வேள்விச்சாலையைத் தழுவி அப்பால் செல்ல, கூரை அதிர்ந்தது. தீநாக்குகள் குன்றி கருகல்முனைகளுக்குள் புகுந்துகொண்டன.
வைசம்பாயனர் “ரிஷிகளே! ரித்விக்குகளே! மகா வைதிகர்களே! இதோ வருணனே வந்து நம்மை அங்கீகரித்துவிட்டான்! இனி நம் ஆன்ம சக்தியை முழுக்க திரட்டுவோம். மனிதகுலத்தின் மொத்தத் தீங்கையும் திரட்டி இந்த வேள்விச்சாலைக்குக் கொண்டுவருவோம்! அவற்றை இந்த அக்கினிக்கு அவிஸாக ஏற்றுவோம்!” என்றார். “ஓம் அவ்வாறே ஆகுக!” என அவை முழங்கியது.
ஆவாஹன வேள்வி தொடங்கியது. அதர்வ மந்திரங்கள் பதினாறு கைகளும் எட்டு முகங்களும் கொண்ட உக்கிர ரூபிகளான பாதாளமூர்த்திகள் போல எழுந்து வந்து நின்றன. மண்ணிலிறங்கிய விண்ணக மின்னல்கள் போல வெட்டிவெட்டி அதிர்ந்தடங்கின. அக்கணம் ஒரு அச்சம் நிறைந்த கூச்சல் எழுந்தது. சில வைதிகர் பதறி எழுந்து விலகினார்கள். அங்கே ஒரு பெரிய கருநாகம் முதல்மழையின் ஓடைநீர் போல தயங்கி நெளிந்து வருவதை ஆஸ்திகன் கண்டான். நிலைக்காத வேத ஒலிக்கேற்ப பாம்பு மண்ணில் நீந்திச்சென்று வேள்விக்குளத்தை அணுகி வில்லென வளைந்து தன்னையே அம்பாகச் செலுத்தி தீயில் விழுந்து துடித்து துடித்து எரிந்ததைக்கண்டு ஜனமேஜயன் கைகூப்பினார்.
வேள்விக்கூடமெங்கும் பல நாகங்கள் தோன்றி ஊர்ந்து வந்து வேள்வித்தீயில் ஏறிக்கொண்டன. துண்டிக்கப்பட்ட குரங்கு வால்கள் போன்ற சிறிய பாம்புகள். இருட்டின் தும்பிக்கை நீள்வதுபோல வந்த பெரும்பாம்புகள். அவர்கள் ஒவ்வொருவர் நடுவிலிருந்த இருட்டும் பாம்புகளாகியது. அவர்களின் மடியின் மடிப்புகளுக்குள் இருந்த நிழல்கள் பாம்புகளாக மாறின. அவர்களின் அக்குளுக்குள் இருந்த துளியிருள் பாம்பாயிற்று. பின் அவர்களின் வாய்களுக்குள்ளும் நாசிகளுக்குள்ளும் இருந்த நிழல்கள்கூட பாம்புகளாக மாறி மண்ணில் நெளிந்துசெல்லக் கண்டனர். அன்னை மடியில் தாவி ஏறும் குழந்தைகள் போல, ஆற்றில் கலக்கும் சிற்றோடைகள் போல நெருப்பை அணுகி அதில் இணைந்துகொண்டன.
அத்தனை பாம்புகளும் வேள்விநெருப்பில் மறைந்ததும் அப்பகுதியெங்கும் எரிதலற்ற ஒளி நிறைந்திருப்பதை அவர்கள் கண்டனர். ஓவியப்பரப்பு போல அவர்களனைவரும் ஒன்றாகிவிட்டதாக உணர்ந்தனர். நிழல்களெல்லாம் அகன்றுவிட்டதே அதற்குக் காரணம் என்று அவர்களில் சிலரே அறிந்தனர். குளத்தின் எஞ்சிய நீர் வெளிமடைநோக்கிச் செல்வதுபோல நாகப்பாம்புகள் வேள்விக்குளத்துக்குள் புகுந்து மறைந்தன. முதுமையாலோ மயக்கத்தாலோ ஆங்காங்கே தேங்கி வளைந்து கிடந்த சில நாகங்களை ஹோதாக்கள் தர்ப்பைப்புல் நுனியால் மெல்லத்தீண்ட அவை சிலிர்த்து எழுந்து வளைந்து வேள்விப்பீடத்தில் தொற்றி ஏறி நெருப்பை அடைந்தன.
வைசம்பாயனர் வணங்கி “மாமன்னரின் விருப்பம் இதோ முழுமை கொண்டது. இவ்வுலகத்தின் அழுக்குகள் எல்லாம் பொசுங்கி விட்டன… நாளை உதித்து எழும் சூரியன் புத்தம்புதிய பூமியை பார்க்கப்போகிறான்!” என்றார். அவை அவரது சொற்களை ஏற்று ஆரவாரம் செய்தது. ஆனால் கூட்டத்தை தயங்கும் விழிகளால் பார்த்துவிட்டு கைகூப்பி எழுந்த ஜனமேஜயன் “வைசம்பாயனரே…இன்னும் தட்சனும் தட்சகியும் வரவில்லையே..” என்றார்.
வைசம்பாயனர் அதை அப்போதுதான் உணர்ந்து திகைத்தார். ஜனமேஜயன் “தட்சன் அரசநாகம். குன்றாத வீரியத்தின் சின்னம். அவன் ஒருவன் மிஞ்சினாலே போதும் மீதி அனைத்து நாகங்களையும் பாம்புகளையும் அவன் ஒருவனே உருவாக்கிவிடுவான்..” என்றார். மீண்டும் ஆகுதிகள் தொடங்கின. மீண்டும் குடம்குடமாக நெய்யும் சமித்துகளும் கொட்டப்பட்டன. தங்கள் அனைத்து நல்வினைகளையும் ஆகுதியாக்கினர். தங்கள் மூதாதையருக்கென அகக்கையில் எஞ்சியிருக்கும் கடைசி பலியுணவையும் ஆகுதியாக்கினர். தங்கள் மரணக்கணத்தில் நாவில் சொட்டவேண்டிய இறுதி நீர்த்துளியையும் அளித்தனர். அப்போதும் தட்சன் வரவில்லை.
வைசம்பாயனர் முதன்மை நிமித்திகனை அழைத்து தட்சன் எங்கே என்று குறிகள் நோக்கி சொல்லும்படி ஆணையிட்டார். எட்டு திசைமுனைகளில் குருதிச்சொட்டு வீழ்த்தி ஏழு சோழிகளை உருட்டி அவற்றின் நடுவே ஓடும் சரடுகளைக் கணக்கிட்டு நிமித்திகன் சொன்னான், “குருநாதரே, தட்சன் நேராக இந்திரனின் சபைக்குச் சென்று அவன் காலடியில் விழுந்து அடைக்கலம் கோரி பெற்றிருக்கிறான்.” ஜனமேஜயன் “அப்படியென்றால் அந்த இந்திரனையே இங்கே வரவழையுங்கள்”‘ என்று கூவினார்.  வைசம்பாயனர் திகைத்து ஏதோ சொல்லவருகையில் கைநீட்டித்தடுத்து “நீங்கள் செய்யும் வேள்விக்கு ஆற்றலிருந்தால் இந்திரனை கொண்டு வாருங்கள்” என்று ஜனமேஜயன் கூச்சலிட்டார்.
வைசம்பாயனர் “சக்ரவர்த்தி…இந்திரன் தேவருலகுக்கே தலைவன்” என்றார். ஜனமேஜயன் “யாராக இருந்தாலும் சரி…நான் இந்தவேள்வியை முடிக்காமல் விட்டால் இதுவரை வாழ்ந்ததற்கே பொருள் இல்லை…முடியாது….இந்த வேள்வி முடிந்தாகவேண்டும்…கட்டிவாருங்கள் இந்திரனை” என்றார். “இங்கே இப்போது இந்த வேள்வி முழுமையாகவேண்டும். மும்மூர்த்திகளையே சிறையிட்டாலும் சரி” என்றார்.
எரிந்து எழுந்த வேள்விச்சுடரில் அவர்கள் தங்கள் இறுதி ஆகுதியைச் செலுத்தினர். தலைமுறைகள் உறங்கும் தங்கள் விந்துக்களின் வீரியங்கள் அனைத்தும் அவியாகுக என்றனர். அந்த மதலைகளைப் பற்றிய தங்கள் கனவுகளும் எரிந்தழிக என்றனர். வைசம்பாயனர் இருகைகளையும் விரித்து “இந்திரனே, எங்கள் வேள்வி முழுமையடைந்தது என்றால் இங்கே வேள்வித்தூணாக நடப்பட்டிருக்கும் அத்திமரக்கிளையில் வந்து நில்!” என கூவினார். அப்போது வானம் இடியொலியுடன் பிளக்க மின்னலின் பாதை ஒன்று மண்ணுக்கிறங்கியது. அந்தமின்னல் தீண்டிய அத்திமரம் எரிய ஆரம்பித்தது. வைசம்பாயனர் “இதோ இந்திரன் அத்திமரத்திலே கட்டப்பட்டு நிற்கிறான்” என்றார்.
”இனி கூப்பிடுங்கள் தட்சனை..எங்கே போகிறான் என்று பார்ப்போம்…கூப்பிடுங்கள்” என எக்களிப்புடன் கூவியபடி ஜனமேஜயன் வேள்விச்சாலையின் நடுவே நிமித்திகனின் பீடத்தில் வந்து நின்றார். மண்ணை விலக்கி முளைத்தெழும் வாழைக்கன்றுபோல தலை நீட்டி தட்சன் மேலெழுந்து வந்தான். கரும்பனையின் தடி போன்ற உடலை மெதுவாக நெளித்து வேள்விச்சாலையில் தவழ்ந்து வேள்வித்தீ நோக்கிச் சென்றான். அவனுக்குப்பின்னால் அவனைப்போன்றே தெரிந்த தட்சகியும் எழுந்து வந்தாள். வேள்விக்கூடமே மரணமுனையில் பதுங்கியிருக்கும் வனமிருகம் போல விரைத்து அமர்ந்திருக்க நடுங்கும் கரங்களுடன் அவியளித்து ரித்விக்குகள் வேதக்குரலெழுப்ப பாம்புகள் ஒன்றை ஒன்று தழுவி முறுகியபடி மெல்ல முன்னகர்ந்தன.
அப்போது ஆஸ்திகன் எழுந்து கை நீட்டி “நில்லுங்கள்…. நில்லுங்கள் வைதிகர்களே” என்று குரலெழுப்பினான். வேள்விக்கூடமே அவனை நோக்கித்திரும்பியது. ஜனமேஜயன் திகைப்புடன் திரும்பி “யார் நீங்கள்? என்ன வேண்டும்?” என்றார்.
”என் பெயர் ஆஸ்திகன்…நான் ஜரத்காரு ரிஷியின் மகன்…நைஷ்டிக பிரம்மசாரி…எனக்கு இன்னும் வேள்விக்காணிக்கை தரப்படவில்லை. என் அனுமதி இல்லாமல் இந்த வேள்வியை நீங்கள் முடிக்கமுடியாது” என்று ஆஸ்திகன் சொன்னான்.
ஜனமேஜயன் அக்கணத்தில் வேள்விச்சாலையைக் கட்டிய சிற்பி விஸ்வசேனன் நிமித்தம்பார்த்து அந்தவேள்விக்கு ஒரு பிராமணனால் தடைவரக்கூடும் என்று சொன்ன சொற்களைத்தான் நினைவுகூர்ந்தார். ”என்ன காணிக்கை வேண்டும். எதுவானாலும் இதோ இப்போதே பெற்றுக்கொள்ளுங்கள்” என்று பதற்றத்துடன் சொன்னார்.
ஆஸ்திகன் ”தட்சன் உயிரை எனக்கு தட்சிணையாகக் கொடுங்கள்” என்று கேட்டான். அதிர்ந்து கலங்கிய ஜனமேஜயன் “என்ன கேட்கிறீர்கள் உத்தமரே…இந்த தேசத்தைக் கேளுங்கள். என் உயிரைக் கேளுங்கள். என் மூதாதையர் எனக்களித்த நல்லூழ்கள் அனைத்தையும் கேளுங்கள். இதை மட்டும் கேட்காதீர்கள். இது என் வாழ்க்கையின் இலக்கு. நான் அடையப்போகும் முழுமை.. இதை மட்டும் கேட்காதீர்கள்” என்று கெஞ்சினார். ஆனால் ஆஸ்திகன் “மாமன்னரே, நாநூறு காதம் நடந்து நான் வந்ததே இதற்காகத்தான். இதுவன்றி வேறெந்த காணிக்கையும் எனக்குத்தேவையில்லை” என்றான். “எனக்கு காணிக்கை கிடைக்கவில்லையென்றால் தர்ப்பையை கையில் வைத்தபடி இந்த வேள்வி முடிவடையக்கூடாது என்று அவச்சொல்லிடுவேன்…ரிஷியாகிய நான் சொல்லாமல் இந்த வேள்வியை முடிக்கமுடியாது”
கடும்சினத்துடன் “யார் நீங்கள்? எதற்காக இதைச்செய்கிறீர்கள்?’ என்று ஜனமேஜயன் கேட்டார். ஆஸ்திகன் “நான் வேசரத்தின் நாகர்குலத் தலைவியான மானசாதேவியின் மைந்தன். தட்சன் என் குலமூதாதை” என்றான். ஜனமேஜயன் “நீங்கள் செய்தது நம்பிக்கைத்துரோகம்…. உங்களை பிராமணன் என்று சொன்னீர்கள்” என்றார். “மாமன்னரே, நெறிநூல்களின்படி மண்ணாளும் குலமே தாய்வழி வருவது. வேதவிதிகளுக்கான குலம் தந்தையின் வழியாக வருவதே. நான் வேத அதிகாரம் கொண்ட பிராமணரிஷியின் மைந்தன்” என்றான். மன்னன் வைசம்பாயனரை நோக்க “ஆம் அவர் சொல்வது சரிதான்” என்றார் அவர்.
குருதி தீயாக மாறி எரியும் உடலுடன் நின்ற ஜனமேஜயன் பின்பு தோள்தளர்ந்து கண்ணீர் வடித்தபடி திரும்பி தன் சேவகர்களிடம் தாரைநீர் கொண்டுவரச்சொன்னார். தர்ப்பையும் நீருமாக நின்று நீர்வார்த்து தட்சனின் உயிரை காணிக்கையாகக் கொடுத்தார். அதைப்பெற்றுக்கொண்டு ”உங்களுக்கும் உங்கள் மண்ணுக்கும் அனைத்து நலன்களும் உருவாகட்டும்…” என்று ஆஸ்திகன் வாழ்த்தினான்.
ஜனமேஜயன் கையை உதறி நீரைத் தெறித்தபின் வெறுப்பில் விரிந்த பற்கள் வெளுத்துத் தெரிய “முனிகுமாரரே நீங்கள் இப்போது செய்தது மாபெரும் துரோகம்….இனி நீங்கள் இந்த மண்ணில் இருக்கக்கூடாது… கிளம்புங்கள்…” என்றார். பின்பு கண்களில் வெறுப்புடன் “ஆஸ்திகரே, வேள்வியிலே பங்குபெற்ற முனிவரை வாழ்த்தி நன்றிசொல்லி அவர்களுக்கு மலரும் பொன்னும் அளித்து விடைகொடுக்கவேண்டும்…அதுதான் மரபு இல்லையா?’என்றார். ஆஸ்திகன் அவர் சொல்லப்போவதை ஊகித்து நின்றுவிட்டான்.
ஜனமேஜயன் “அதை நான் செய்யமாட்டேன்…உங்களுக்கு மரியாதை கொடுத்து அனுப்ப மாட்டேன்” என்றார். வைசம்பாயனர் ”அரசே ஒரு முனிவரை அவமதிக்க உங்களுக்கு உரிமை இல்லை…அது தவறு” என்றார். உத்தங்க முனிவர் ”அவர் நைஷ்டிக பிரம்மசாரி…அவர் சாபமிட்டால் எதுவும் நடக்கும்” என்றார்.
ஜனமேஜயன் வெறி மிகுந்த குரலில் “என்ன சாபம் வேண்டுமானாலும் போடட்டும். இனி எனக்கு எதுவும் மிச்சமில்லை. அஸ்தினபுரியின் மன்னன் ஒரு முனிவரை அவமதித்தான் என்று வரலாறு சொல்லட்டும்…இந்த இளைஞர் செய்த துரோகம் என் குலக்கவிஞர்களாலும் முனிவர்களாலும் என்றென்றும் நினைவுகூரப்படட்டும்” என்றார்.
ஆஸ்திகன் அமைதியான குரலில் “ஜனமேஜய மன்னரே! நான் செய்ததன் பொருள் இப்போது உங்களுக்குப் புரியாது. ஒருநாள் உங்கள் தலைமுறைகள் இதை புரிந்துகொள்வார்கள்… நான் உங்களுக்காக உங்கள் மக்களுக்காக இந்த உலகத்தின் நன்மைக்காகவே இதைச் செய்தேன். இது என் தன்னறம்” என்றான்.
“தர்மத்தை மீறிய நீங்கள் அறம் பேசக்கூடாது” என்று ஜனமேஜயன் கூவினார். ஆஸ்திகன் “அறத்தைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும் அரசே?” என்று புன்னகை செய்தான். “அறம் என்ற சொல்லை அறியாத எவருமில்லை. அறமென்றால் எதுவென்று முழுதறிந்தவரும் இல்லை. அறத்தை முற்றிலுமறிவதற்காக ஒருவர் ஏழு தலைமுறைக்காலமாக தவமியற்றிக்கொண்டிருக்கிறார். உங்கள் முதுபெரும்தந்தை வியாசன். அவர் இங்கே வரட்டும்….நான் செய்தது பிழை என அவர் சொல்லட்டும்…”
ஜனமேஜயன் அப்போதுதான் அவரை நினைவுகூர்ந்தார். “அவர் இங்கு வரும் நிலையில் இல்லை” என்றார். “அப்படியென்றால் எனக்கு காணிக்கை அளித்து விடைகொடுங்கள்” என்றான் ஆஸ்திகன். “ஒருபோதும் இல்லை….சூதில் வென்ற உங்களை என் குருவாக நான் எண்ணமுடியாது. தர்மபதம் என்னை அங்கீகரிக்காது” என்று ஜனமேஜயன் கூவினார்.
“அப்படியென்றால் கொண்டுவாருங்கள் வியாசரை.  நான் செய்தது அறமா பிழையா என வியாசர் சொல்லட்டும். அதுவரை நான் இங்கிருந்து அசையப்போவதில்லை” என்று ஆஸ்திகன் சொன்னான். அவனுடைய வாய் முலைக்கண் உருவி எடுக்கப்பட்ட கைக்குழந்தையின் உதட்டுக்குவிதல்போல உறுதியுடன் மூடி இருந்தது.

140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

மஞ்சூரிதவரு :- லாபமான செயல்களைச் செய்பவர். 
யாதாளதவரு :- யாதாள என்னும் ஊர்க்காரர். 

1/5/14

பகுதி ஒன்று : வேள்விமுகம் [ 3 ]

பகுதி ஒன்று : வேள்விமுகம்   [ 3 ]

குருவம்சத்தின் ஐம்பத்திரண்டாவது தலைமுறையைச்சேர்ந்த ஜனமேஜயன் தன் பதின்மூன்றாவது வயதில் மன்னனானபோது அவன் வெல்வதற்கு நாடுகள் ஏதும் இருக்கவில்லை. அவன் தீர்ப்பதற்குரிய சிக்கல்களேதும் எஞ்சவில்லை. அவன் சித்தமோ எரிதழல் காற்றை உணர்வதுபோல காலத்தை ஒவ்வொரு கணமும் அறிந்துகொண்டிருந்தது. ஆகவே அவன் பகடையாட்டத்தில் ஈடுபாடுகொண்டவனாக ஆனான். ஏணியும் பாம்பும் கொண்ட வரைபடத்தின் கட்டங்களில் மானுடவாழ்க்கையின் அனைத்து விசித்திரங்களும் உறைந்திருப்பதை சிறிது சிறிதாக அவன் காண ஆரம்பித்தான். ஒரு பகடையை புரளவைத்து பன்னிரண்டாகவோ சுழியாகவோ ஆகச்செய்யும் விசையின் மர்மங்களே அவன் சிந்தனையை நிறைத்திருந்தன. இரவில் மென்மையான துவர்ப்பும் கசப்பும் கலந்த இனிய மதுவின் போதையில் தூங்கும்போதுகூட அவன் பகடைகளை மனதுக்குள் உருட்டிக்கொண்டிருந்தான். கனவுக்குள் ஏணிகளில் ஏறி பாம்புகளால் கவ்வப்பட்டு சரிந்து மீண்டுவந்தான்.
ஆட்டத்தின் தருணத்தில் ஒருநாள் சேவகன் வந்து உஜ்ஜாலகத்தில் வசிக்கும் தவமுனிவரான உத்தங்கர் வந்திருப்பதாக சேதி சொன்னபோது அவரை விருந்தினருக்கான ஆசிரமத்தில் தங்கவைத்து வேண்டிய காணிக்கைகளைக் கொடுத்து அனுப்பும்படி திரும்பிப்பாராமலேயே ஆணையிட்டான். சேவகன் சென்ற சற்றுநேரத்தில் மரவுரியணிந்த கரிய உடலும், நீண்ட தாடியும் சடைக்கற்றைமுடிகளுமாக உத்தங்கர் வந்து அவன் முன் நின்றார். உரக்கச்சிரித்தபடி ‘பகடை ஆடுகிறாயா? ஆடு ஆடு….உன் குலத்தை ஒருநாளும் நாகத்தின் நாக்கு விட்டுவிடப்போவதில்லை…உன் தந்தையைக் கடித்த நாகம்தான் அந்த ஆடுகளத்திலும் இருக்கிறது’ என்றார்.
அதிர்ச்சியுடன் எழுந்து “என்ன சொன்னீர்கள்? என் தந்தையை நாகம் கடித்ததா?’ என்றான் ஜனமேஜயன். உத்தங்கர் உரக்கச்சிரித்து ‘நினைத்தேன். ஒவ்வொரு கணமும் நிகழும் விதியின் ஆட்டத்தைப்பற்றிய முழுமையான அறியாமை இல்லையேல் ஒருவன் இந்த போலி ஆடுகளத்தின் முன் குனிந்து அமரமுடியாது’ என்றார். ‘ஆடு ,ஆடு, உன்னைத்தேடி உனக்கான விஷம் வந்துசேரும்’ என்றபின் திரும்பிச்சென்றார். ‘மாமுனிவரே….என்ன சொல்கிறீர்கள்?’ என்றபடி ஜனமேஜயன் அவர் பின்னால் சென்றான். ஆனால் அவர் வேகமாக திரும்பிச்சென்று அரண்மனையைவிட்டு நீங்கிவிட்டார்.
அன்றிரவெல்லாம் தூக்கமின்றி தவித்தபடி அவன் தன் தந்தையைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தான். குளிர்கால இரவொன்றில் படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த அவனை குனிந்து நோக்கி கால்களை முத்தமிட்டபின்னர் அன்னையின் குழலை வருடிவிட்டு விடைபெற்றுச்சென்ற பரீட்சித்தின் கண்களில் இருந்த அச்சத்தையும் தவிப்பையும் கண்முன் எழுதி தொங்கவிடப்பட்ட ஓவியத்திரைச்சீலை என அவன் கண்டான். மறுநாள் காலை கருக்கிருட்டில் ரதத்தில் ஏறி, வாசனையாக மட்டுமே புழுதி தெரிந்த தெருக்களின் வழியாகச் சென்று, புறநகர் குறுங்காட்டைத் தாண்டி,உத்தங்கரின் வனக்குடிலை அடைந்தான். இரவெல்லாம் நீண்ட யோகசாதனைக்குப்பின்பு நீராடி சடைமுடியை இளவெயிலில் உலர்த்திக்கொண்டிருந்த அவரது மண்படிந்த மெலிந்த கரிய காலடிகளில் விழுந்து தன் அறியாமையை போக்கும்படி கோரினான். சாலமரம் நிழல்விரித்து நின்ற தடாகத்தின் கரையில் அவனை அமரச்செய்து உத்தங்கர் அந்தக்கதையைச் சொன்னார்.
குருவம்ச மாவீரன் அர்ஜுனனின் மைந்தன் அபிமன்யு தன் பதினாறாவது வயதில் குருஷேத்ரப் போர்க்களத்தில் மடிந்தான். அவன் மனைவி உத்தரைக்கு அப்போது பதினாறு வயது. அரண்மனைக்கு அப்பால் என்ன நடக்கிறதென்பதே அறியாத பேதைப்பெண்ணாக இருந்தாள். ஒவ்வொருநாளும் இறப்புச்செய்திகள் வருவதைக்கொண்டுதான் அவள் குருஷேத்ரப்போரையே அறிந்தாள். அவள் இரவுகள் தோறும் அஞ்சிக்கொண்டிருந்த செய்தி ஒருநாள் வந்தது. அவள் சிலநாட்கள் மட்டுமே அறிந்திருந்த இளம்கணவன், இன்னமும் முழுமையாக அவள் பார்த்திராத முகத்தைக்கொண்ட சிறுவன், மீளமுடியாத படைவளையத்தில் சிக்கி களத்தில் உயிரிழந்தான்
செய்திகேட்டு மயங்கி விழுந்த அவளுடைய நாடியைப்பிடித்து சோதனைசெய்த அரண்மனை மருத்துவச்சிதான் அவள் கருவுற்றிருப்பதைச் சொன்னாள். கண்விழித்தெழுந்து உடன்கட்டை ஏறவிரும்பி கதறிய அவளை மூத்தவர்கள் கட்டுப்படுத்தினர். குருவம்சத்தின் விதை வயிற்றில் வளர்கையில் அவள் சிதையேறுவது நூல்நெறியல்ல என்றனர். விதவைகள் நிறைந்த அந்தப்புரத்தின் குளிர்ந்த அமைதியில் தன்னை பூமியுடன் பிணைக்கும் வயிற்றை தொட்டுத்தொட்டு சபித்தபடி அவள் ஒவ்வொரு நாளாக வாழ்ந்தாள். நாற்பத்தோராம் நாள் அவளை நதிக்கரைக்கு கொண்டுசென்று வண்ண ஆடைகளையும் அணிகளையும் கூந்தலையும் நீக்கி விதவைக்கோலம் கொள்ளச்செய்தனர். அங்கிருந்து மருத்துவச்சிகள் சூழ்ந்த அரண்மனை உள்ளறையின் ஆழத்துக்கு அவள் சென்றாள்.
அதன்பின் அவள் அதுவரையிலான வாழ்க்கையை முற்றிலும் மறக்க முயன்றுகொண்டிருந்தாள். உத்தரநாட்டின் பனிபடிந்த இமயமுகடுகள் வெண்பந்தலாகத் தெரியும் வடதிசையையும், பூவனம் நோக்கி திறக்கும் சாளரங்கள் கொண்ட அரண்மனையில் கழித்த தன் இளமைப்பருவத்தையும், அங்கிருந்து வெம்மை தகிக்கும் சமவெளியையும் அசைவில்லாததுபோலத் தோன்றும் நீலநதிகளையும் கொண்ட இந்த தேசத்துக்கு வந்ததையும், விளையாட்டுத்தோழனாகிய கணவனை அடைந்ததையும் எல்லாம் பிரக்ஞையால் தேய்த்து தேய்த்து அழிக்கப்பார்த்தாள். சிந்தை தீப்பற்றி எரியும்போது அவளுடைய உடல் நடுநடுங்கி கைவிரல்களெல்லாம் முறுக்கிக்கொள்ளும். பற்கள் கிட்டித்து உதடுகள் கடிபடும். அப்போது அவளுடன் உத்தரதேசத்தில் இருந்து வந்த செவிலி அவள் நாசியில் மயக்கத்தூபத்தைக் காட்டி தூங்கவைத்தாள்.
வெளிறி மெலிந்து, கன்னங்கள் வறண்டு, வாய் புண்ணாகி, கண்கள் குழிந்து, புதைகுழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட சடலம் போலிருந்த உத்தரை ஆறுமாதத்திலேயே குழந்தையைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தை வெளிவந்த குருதியேகூட செந்நிறமிழந்து மஞ்சளாக இருந்தது என்றனர் மருத்துவச்சிகள். குளிர்ந்த கரங்களுடன் நடுங்கும் உதடுகளன்றி உயிரசைவே இல்லாமல் கிடந்த அவளைப்போலவே குழந்தையும் அசைவில்லாமல் கண்மூடிக் கிடந்தது. மருத்துவச்சி அதை மெல்லத்தூக்கி அது உயிருடனிருக்கிறதா என்று பார்த்தாள். அதன் உடலுக்குள் எங்கோ மெல்லிய இதயத்துடிப்பை உணர்ந்தது உண்மையா தன் கற்பனையா என அவள் ஐயம் கொண்டாள்.
குருகுலத்தின் அத்தனை வழித்தோன்றல்களும் குருஷேத்ரக் களத்தில் இறந்தபின் எஞ்சிய ஒரே ஒரு குழந்தை என்பதனால் அதன் வருகையை நாடே எதிர்பார்த்திருந்தது. மாமன்னர் யுதிஷ்டிரர் அஸ்வமேத வேள்வி ஒன்றை தொடங்கவிருந்த நேரம். ஐம்பத்தாறுநாட்டு மன்னர்களும் அரண்மனை வளாகத்தில் வந்து தங்கியிருந்தனர். செய்திகேட்டு யுதிஷ்டிரர் சோர்ந்து முகம்பொத்தி அரியணையில் சரிந்துவிட்டார். அரண்மனையெங்கும் அழுகுரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. வீரகுடி வழக்கப்படி குழந்தையை வாளால் போழ்ந்து வடதிசை மயானத்தில் அடக்கம் செய்யவேண்டுமென்று நிமித்திகர் சொன்னார்கள். பட்டத்தரசி திரௌபதி கண்ணீர் மார்பில் சொட்ட ஓடிச்சென்று நதிக்கரை அரண்மனையில் தங்கியிருந்த யாதவமன்னன் கிருஷ்ணனின் முன்னால் நின்றாள். ஞானியான அவனே தன் குலத்தை அழியாமல் காப்பாற்றவேண்டுமெனக் கோரினாள்.
ஈற்றறைக்கு வந்து குழந்தையைக் கண்டதுமே கிருஷ்ணன் புரிந்துகொண்டான். அதன் அன்னையின் துயரமெல்லாம் தேங்கிய சிமிழ் போலிருந்தது குழந்தை. இக்கணமே இதை இதன் அன்னையிடமிருந்து பிரிக்கவேண்டும், ஒரு துளி தாய்ப்பால்கூட இது அருந்தக்கூடாது என கிருஷ்ணன் சொன்னான். யாதவகுலமருத்துவர்கள் பிரம்மாண்டமான கடற்சிப்பி ஒன்றைத் திறந்து அந்த உயிருள்ள மாமிசத்தின் வெம்மைக்குள் குழந்தையை வைத்து மூடி எடுத்துக்கொண்டு துவாரகைக்கு கொண்டுசென்றார்கள். துவாரகையில் மேலும் நான்குமாதம் உயிருள்ள சிப்பிக்குள் இருந்து அது வளர்ந்தது. அக்குழந்தைதான் உன் தந்தை பரீட்சித் என்றார் உத்தங்கர்.
உன் பாட்டி உத்தரை அதன்பின் உயிர்தரிக்கவில்லை. தன் உடல் நீங்கி வெளியே வந்துகிடந்த குழந்தையை உடைந்த கட்டியிலிருந்து வெளிவந்த சீழைப் பார்க்கும் நிம்மதியுடன் பார்த்தபின் கண்களை மூடி மெல்ல விலகிப்படுத்துக்கொண்டாள். தன்னிலை மீளாமலேயே நான்காம் நாள் அவள் இறந்துபோனாள். சிப்பிகளுக்குள் வளர்ந்த சோதனையாலேயே அவனை அனைவரும் பரீட்சித் என்று அழைத்தனர். தாயின் இதயத்துடிப்புகள் கேளாமால், முலைச்சுவை அறியாமல் பரீட்சித் வளர்ந்தான். அவன் அறிந்ததெல்லாம் உப்பு சுவைக்கும் கடல்மணத்தை மட்டும்தான். எஞ்சிய வாழ்நாளெல்லாம் அவன் மண்ணில் கால்நிலைக்காதவனானான்.
மண்ணிலிறங்கியதும் உயிர்வெறியுடன் உண்டும் குடித்தும் பரீட்சித் வளர்ந்தான். நூல்களும் நெறிகளும் வித்தைகளும் கற்றுக்கொடுக்கப்பட்டாலும் அவனுக்கு அவன் குலக்கதைகள் ஏதும் சொல்லப்படவேயில்லை. ஒருமுறைகூட அவன் அஸ்தினபுரிக்கு அனுப்பப்படவுமில்லை. எனவே அஸ்தினபுரியை கண்ணுக்குத்தெரியாத இருள்போல நிறைத்திருந்த மாபெரும் போரின் நினைவுகள் எதையும் அவனறியவில்லை. வேட்டையில் விருப்பம்கொண்டவனாகவும் ,நேற்றும் நாளையும் இல்லாத துடுக்கு கொண்ட இளைஞனாகவும் அவன் வளர்ந்தான். பாட்டிவழி உறவான மாத்ரதேசத்தில் இருந்து மாத்ரிதேவியை மணம்செய்துகொண்டான்.
பரீட்சித்துக்கு பதினெட்டு வயதிருக்கையில் சக்ரவர்த்தி யுதிஷ்டிரர் அவனை இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசனாக பட்டம்சூட்டி ஆட்சியதிகாரத்தை யுயுத்சுவிடம் கையளித்துவிட்டு தன் சகோதரர்களுடன் மகாபிரஸ்தானம் சென்றார். ஆனால் இருபத்தெட்டு வயதுவரை பரீட்சித் அரசபதவி ஏற்காமல் காட்டில் வேட்டையாடி அலைந்தான். ஜனமேஜயன், சுருதசேனன், உக்ரசேனன், பீமசேனன் என்னும் மைந்தர்கள் பிறந்தபின்னரும் அவன் செங்கோல் ஏந்த சித்தமாகவில்லை.
ஆனால் குருகுலத்து மன்னர்களின் வாழ்க்கை என்பது அவர்களை நிழலெனத்தொடரும் நாகங்களுடன் அவர்கள் ஆடும் ஒரு பகடையாட்டம் மட்டுமே. வேட்டைக்காக காட்டுக்குச்சென்ற பரீட்சித் அங்கே மரத்தடியில் தவம்செய்துகொண்டிருந்த சமீகர் என்ற முனிவரைக் கண்டான். பேசாநெறி கொண்ட அவரிடம் இந்தப்பாதை எங்குசெல்கிறது என்று கேட்டான். அவர் பதில் சொல்லாததைக் கண்டு சினம்கொண்டு சட்டென்று திரும்பி அங்கே புதரில் நெளிந்த பச்சைப்பாம்பொன்றைப் பிடித்து மரத்திலறைந்து கொன்று அவர் கழுத்தில் போட்டுவிட்டு திரும்பிவிட்டான்.
ஜனமேஜயா, அந்தப்பாம்பின் பெயர் ஆனகன் என்றார் உத்தங்கர். மண்ணுலகை நிறைத்திருக்கும் நாகர்களின் உலகைச்சேர்ந்தவன் அவன். குருகுலமன்னர்களை ஒவ்வொருகணமும் நாகங்கள் பின் தொடர்ந்துகொண்டிருந்தன. அன்றைய பணியை ஆனகன் செய்துகொண்டிருந்தான். ஒவ்வொரு கணமும் ஒரு விதியின் தருணத்தை எதிர்நோக்கியிருந்த நாகங்கள் அந்தக்கணத்திலிருந்து இன்னொரு கதையை தொடங்கின. ஏழு நாகங்கள் ஏழு முனிகுமாரர்களாக உருவம் கொண்டு சமீகரின் மகன் கவிஜாதனை தேடிச்சென்றன. வடக்குமலைகளில் குரங்குமனிதர்களின் வழிவந்த குலங்களில் ஒன்றைச்சேர்ந்த பெண்ணுக்கும் சமீகருக்கும் பிறந்தவன் அவன். வனத்தில் கனிகள்தேடச்சென்ற கவிஜாதனை விளையாட அழைத்த நாகங்கள் அவனை எள்ளி நகையாடின. ‘’செத்த பாம்பை அணிந்த உன் தந்தை சிவனுக்கு நிகரானான்’ என்றன.
சினம்கொண்ட கவிஜாதன் பரீட்சித்தைத்தேடி வந்தான். இரவில் தன் அரண்மனை லதாமண்டபத்தில் மதுக்கோப்பையுடன் பரீட்சித் தனித்திருக்கையில் மரங்களின் வழியாக குரங்குபோல ஒருவன் தாவித்தாவி வருவதைக் கண்டு எழுந்து திகைத்து நின்றான். அருகே வந்து இறங்கிய கவிஜாதன் குரங்குமுகத்தில் கடும்சினத்தால் சிரிப்பு போல விரிந்த பற்களைக் காட்டி ‘நான் உன்னால் அவமதிக்கப்பட்ட சமீகரின் மைந்தன். என் பெயர் கவிஜாதன். உன்னிடம் உன் விதியைச் சொல்லிவிட்டுச் செல்வதற்காக வந்தேன்’ என்றான். ‘நீ யாரென்று நீ அறியவில்லை, நீ என்னவாகப்போகிறாய் என்றும் நீ அறியவில்லை. பிறக்கும்போது தன் விதியை எதிர்காலமாகக் கொண்டு பிறப்பவனே மனிதன். நீ இறந்தகாலத்தையே விதியாகக் கொண்டு பிறந்திருக்கும் சபிக்கப்பட்டவன்.’
பிரமித்து நின்ற பரீட்சித்திடம் கவிஜாதன் சொன்னான், ‘உன் குலவரலாறு முழுக்க உன் குருதியில் இருக்கிறது. அவற்றின் மீது ஒரு மெல்லிய பட்டாடையைப்போட்டு மூடிவிட்டுச் சென்றிருக்கிறான் யாதவகிருஷ்ணன். அதை நான் இதோ கிழிக்கப்போகிறேன். நீ குருதிமழையில் பிறந்த எளிய காளான். அதற்குமேல் ஒன்றுமில்லை…என்னுடன் வா. உனக்கு நீ பார்த்தேயாகவேண்டிய காட்சியொன்றைக் காட்டுகிறேன்.’
மொத்த அறிவும் அதை விலக்கியபோதிலும் பரீட்சித்தால் செல்லாமலிருக்க முடியவில்லை. கவிஜாதன் அவனைத் தூக்கி மரக்கிளைகள் வழியாகவே கொண்டு சென்றான். காடுகளின் மீது பரவிய இலைப்பரப்புகளுக்குமேல் நீரில் நீந்துவதுபோலச் சென்றுகொண்டிருந்தான். அது சுக்லபட்ச பதின்மூன்றாவது நாள். வானத்தில் முழுநிலவு நிறைந்திருந்தது. பின்னிரவில் கவிஜாதன் பரீட்சித்தை ஒரு பெரிய வெட்டவெளிக்குக் கொண்டுசென்று இறக்கினான். அது எந்த இடம் என்று பரீட்சித் வினவினான். அஸ்தினபுரியின் ஒவ்வொரு மனமும் அறிந்த இடம், மூன்றுதலைமுறைகளாக எவருமே வந்திராத இடம் என்றான் கவிஜாதன். இங்கே வருவதற்கு மானுடப்பாதைகள் இல்லை, நரிகளின் தடம் மட்டுமே உள்ளது. இந்த மண்ணின் பெயர்தான் குருஷேத்ரம்.

நிலவின் ஒளியில் கண்ணுக்கு எட்டிய தொலைவுவரை விரிந்திருந்த செம்மண் பொட்டலில் சிறிய கோபுரங்கள் போல சிதல்புற்றுகளும் ஆங்காங்கே ஒரு சிலமுள்மரங்களும் நின்றன. பித்தெழுந்த கனவில் நிற்பவன் போல பரீட்சித் அந்த மண்ணில் நின்றான். அக்கணமே அவன் அனைத்தையும் தனக்குள் கண்டுவிட்டான். நிலையழிந்தவனாக அந்த மண்ணில் ஓடி ஓடிச் சுழன்றுவந்தான். ஒரு புற்றை அவன் உடைத்தபோது உள்ளே ஓர் யானையின் எலும்புக்கூடு அதன் மத்தகத்தைப் பிளந்த வேலுடன் இருக்கக் கண்டான். பின்பு வெறிகிளம்பி ஒவ்வொரு புற்றாக உடைத்து உடைத்து திறந்தான். ஒவ்வொன்றுக்குள்ளும் வெள்ளெலும்புக் குவியல்களைக் கண்டான். ஒரு தருணத்தில் திகைத்து நின்று பின்பு தளர்ந்து விழுந்தபோது அந்த மண் ஒரு குடல்போல செரித்துக்கொண்டிருப்பதன் ஒலியைக் கேட்டான்.
அங்கே ஆடும் நிழல்களை கவனிக்கும்படி கவிஜாதன் சொன்னான். ஒளியைக் கண்ட கண்களை நிழலைக்காணும்படி பழக்கியபோது பரீட்சித் நாகங்களைக் கண்டான். இருண்ட மெல்லிய நிழலாட்டங்களாக நாகங்கள் அங்கே நிறைந்திருந்தன. கண் தெளியும்தோறும் நாகங்கள் பெருகிக்கொண்டே சென்று ஒரு கட்டத்தில் கருநாகங்களாலான மாபெரும் வலையொன்றைக் காணமுடிந்தது. நெளிந்துகொண்டிருந்த அந்தவலையில் அந்த படுகளம் சிக்கி அசைந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. அச்சத்துடன் அவன் கவிஜாதனை நெருங்கி அவன் கரங்களை பற்றிக்கொண்டான். ‘நான் காட்டவிரும்பியது இதைத்தான் மன்னனே. நீ நாகங்களின் விளையாட்டுப்பாவை அன்றி வேறல்ல….அதோ சுடர்விடும் அந்த இரு செவ்விழிகளும் நாகங்களின் அரசனான தட்சகனுடையவை. இன்றில் இருந்து ஏழாம் நாள், மார்கழி மாதம் சப்தரிஷி விண்மீன்கள் ஏழும் ஒரே ராசியில் வந்து சேரும்போது நீ அவன் விஷக்கடியை ஏற்று உயிர்விடுவாய்’ என்றான் கவிஜாதன்.
காலையில் பரீட்சித்தை தேடிவந்த சேவகர்கள் அவனைக்காணாமல் திகைத்தனர். நந்தவனத்தின் வாயில்களேதும் திறக்கப்பட்டிருக்கவுமில்லை. அமைச்சர்களும் பிறரும் சேர்ந்து தேடியபோது லதாமண்டபத்திலிருந்த புதர் ஒன்றுக்குள் உடல் நடுங்கி ஒடுங்கியிருந்த மன்னனை கண்டுபிடித்தனர். காலடியோசை கேட்டதும் அவன் அதிர்ந்தான். தொடுகையில் அவன் உடல் துள்ளித்துள்ளி விழுந்தது. கண்கள் கலங்கி கலங்கி வழிய பார்வை நிலையற்று அலைபாய்ந்தது. அவனால் ஒரு சொல்லும் பேசமுடியவில்லை. அவனை அள்ளிக் கொண்டுசென்று படுக்கவைத்தனர். வேகம் மிகுந்த மதுவும் சித்தத்தை அமைதிசெய்யும் மருந்துகளும் கொடுத்து மெல்லமெல்ல அவனை மீட்டு எடுத்தனர்.
பரீட்சித் அன்றே ரதமேறி கிளம்பிச்சென்று தன் குலகுருவான வைசம்பாயன மகரிஷியைக் கண்டு என்னசெய்வதென்று கேட்டான். ‘ நாகங்கள் காமம் அகங்காரம் என்னும் ஆதிஇச்சைகளின் பருவடிவங்கள். ஆதி இச்சைகளை வென்றவனை நாகங்கள் அண்டமுடியாது’ என்று நெறிநூல்களை ஆராய்ந்து வைசம்பாயனர் பதிலுரைத்தார். அத்தனை இச்சைகளையும் அணைத்து விட்டு தனக்குள் தானே நிறைந்து தனித்திருந்தால் நாகங்கள் தீண்டவே முடியாதென்று வழிசொன்னார். ‘ஆனால் அது மனிதர்களுக்கு எளியதல்ல. ஐந்தும் அடக்கி அகத்தையும் வென்ற முனிவர்களே தோற்றுவிடுவார்கள்’
’எனக்கு வேறு வழியில்லை குருநாதரே’ என்றான் பரீட்சித். தன் அவைச்சிற்பிகளை அழைத்து அன்று மாலைக்குள் ஒரு தவச்சாலையை அமைத்தான். அஸ்தினபுரிக்கு கிழக்கே இருந்த ஏரிக்குள் எட்டு தூண்களின்மீது அந்தச் சாலை அமைந்தது. அரச உடைகளைக் களைந்து, துறவுக்குரிய மரவுரி அணிந்து, தன் நாட்டை அமைச்சர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தன் உடைமைகளனைத்தையும் அறிஞர்களுக்கும் எளியவர்களுக்கும் கொடையளித்துவிட்டு பரீட்சித் அதற்குள் தஞ்சம்புகுந்தான். அறவோர் வகுத்த கடும் நோன்புகள் வழியாக தன் காமத்தையும் அகங்காரத்தையும் முழுமையாகவே தன்னிலிருந்து இறக்கிவைத்தான். அச்சத்தால் நடுங்கும் உடலுடன் தன் நிழலை தானே பார்த்துக்கொண்டு அந்தச் சாலைக்குள் அவன் தனித்திருந்தான்.
விதியின் தூதனாக வந்த தட்சன் அந்த நீரரணுக்கு வெளியே ஆறுநாட்கள் பரீட்சித்தின் நோன்பின் ஒவ்வொரு கணத்தையும் கவனித்தபடி இமையா விழிகளுடன் காத்திருந்தான். விதியின் திட்டத்தை பரீட்சித் தன் நெறியால் வென்றுவிட்டானென்று அவன்கூட நினைத்தான். ஏழாம்நாள் இரவில் நடுச்சாமம் முடிவதற்கு ஒருநாழிகைக்கு முன்னால் தன்னைக் காணவந்த வைதிகன் ஒருவனிடம் பரீட்சித் ‘எனக்கு இனி சோதனைகளேதுமில்லை. நான் காமத்தையும் அகங்காரத்தையும் முற்றிலும் வென்றுவிட்டேன்’ என்று சொன்னபோது அந்த அகங்காரத்தையே காரணமாகக் கொண்டு தட்சன் ஒரு சிறுபுழுவின் வடிவில் பரீட்சித்தின் தவச்சாலைக்குள் நுழைந்தான். அன்றிரவு பரீட்சித் தன் நோன்புணவுக்காக மாதுளம்பழமொன்றை எடுத்தபோது தட்சன் அதற்குள்ளிருந்து சிறிய சிவந்த புழுவாகக் கிளம்பி பரீட்சித்தின் உதடுகளில் விஷமுத்தமிட்டான். குருவம்சத்தின் ஐம்பத்தோராவது மன்னனும் நாகங்களின் விளையாடலுக்கு இரையானான்.
உத்தங்கரின் கதையைக்கேட்டு ஜனமேஜயன் கண்ணீர் வடித்தான். திரும்பி வந்தவன் சூதர்கள் அனைவரையும் வரவழைத்து தன் குலக்கதைகள் அனைத்தையும் ஒன்றுகூட மிச்சமில்லாமல் பாடக்கேட்டான். நாகங்களின் வலையில் சிக்கிய சிறு பூச்சிகளே தானும் தன்குலத்து மூதாதையரனைவரும் என உணர்ந்தபின்பு தன் குலகுருவான வைசம்பாயனரை அழைத்து ஆலோசனை கேட்டான். ’சர்ப்பசாந்தி வேள்விகள் வழியாக நாகங்களை நிறைவுசெய்யலாம். அது ஒன்றே வழி’ என்றார் வைசம்பாயனர். ‘அந்த வேள்விகளால் நாகங்களை முழுமையாகவே தடுத்துவிடமுடியுமா?’ என்று கேட்டான் ஜனமேஜயன். ’ஒருபோதும் முடியாது. நாகங்கள் தங்கள் நிழல்களில் இருந்தே மீண்டும் முளைத்தெழக்கூடியவை. ஒவ்வொரு உடலிலும் நாகங்கள் உள்ளன. மிருகங்களில் வாலாகவும் நாவாகவும் இருப்பவை நாகங்களே. மனிதர்களின் கைநகங்களெல்லாம் நாகத்தின் பற்களே’ என்றார் வைசம்பாயனர்.
‘குருநாதரே, இனி இந்த மண்ணில் குருஷேத்ரங்கள் நிகழக்கூடாது. இனிமேல் மானுடக்குருதி மண்ணில் விழக்கூடாது. அதற்கான வழி உண்டா? அதை மட்டும் சொல்லுங்கள்’ என்றான் ஜனமேஜயன். நூல்களை ஆராய்ந்து வைசம்பாயனர் ‘ஆம் உண்டு’ என்று சொன்னார். ‘அது தேவர்களும் அசுரர்களும்கூட நினைக்கமுடியாத வழி. காமமும் அகங்காரமுமாக ஈரேழு உலகையும் நிறைத்திருக்கும் நாகர்களை இந்த மண்ணிலிருந்தும் விண்ணிலிருந்தும் பாதாளத்திலிருந்தும் முழுமையாகவே அழிக்கவேண்டும். அதற்குரிய பூதயாகம் ஒன்றை அதர்வவேதம் சொல்கிறது. அதன் பெயர் சர்ப்பசத்ர வேள்வி. அந்தவேள்வியை முழுமையாக நாம் நடத்திமுடித்தால் மனிதகுலத்தின் உள்ளங்களுக்குள் உறைந்து கிடக்கும் மொத்த இருட்டையும் அந்த வேள்வித்தீயில் எரித்து அழிக்கமுடியும். கடைசி பாம்பும் எரிந்து அழியும்போது மனிதகுலத்தின் உள்ளங்கள் முழுக்க தூய வெளிச்சம் மட்டும்தான் மிச்சமிருக்கும். அங்கே போட்டியும் பொறாமையும் இருக்காது .காமமும் வெறுப்பும் இருக்காது… அதற்குப்பின் உலகத்தில் தீமையே இருக்காது… மனிதகுலத்தில் போரே நடக்காது…’
‘அதைசெய்கிறேன் குருநாதரே’ என ஜனமேஜயன் தன் ஆசிரியரின் கால்களை பற்றிக்கொண்டான். ‘என் அரசு செல்வம் அனைத்தையும் அதன்பொருட்டு செலவிடுகிறேன். அதற்காகவே வாழ்கிறேன்….அதற்காக எதற்கும் சித்தமாக இருக்கிறேன்’ கண்ணீருடன் அவன் சொன்னான் “குருஷேத்ர மண்ணில் செத்து விழுந்த ஐந்துலட்சம் மனிதர்களிடம் நான் சொல்லவிரும்புகிறேன் குருநாதரே, எங்கள் மூதாதையர்களே நீங்கள் நிம்மதியாக உறங்குங்கள். இனிமேல் நாங்கள் போர் செய்ய மாட்டோம். இனிமேல் நாங்கள் சகமனிதனை வெறுக்க மாட்டோம். நீங்கள் உங்கள் உயிரைக்கொடுத்து கற்றுத்தந்த பாடத்தை நாங்கள் கற்றுக்கொண்டோம்… அப்படியொரு சொல்லை என்னால் சொல்லமுடிந்தால் நான் குருகுலத்தின் வாழ்க்கையை நிறைவுசெய்தவன் ஆவேன். களத்தில்பட்ட அத்தனை குருவம்சத்தினருக்கும் என் கடனைச் செய்தவனாவேன்”
ஜனமேஜயனின் ஆணைப்படி இருபதாண்டுகாலம் முயன்று வைசம்பாயனர் சர்ப்பசத்ர வேள்வியை ஒருங்கிணைத்தார். நான்குமாதங்கள் எட்டுத்திசைகளிலும் நடந்த உபவேள்விகள் வழியாக சமித்துகளை சேர்த்தார்.அதற்காக பாரதவர்ஷமெங்கணும் இருந்து முனிவர்களையும் வைதிகர்களையும் பண்டிதர்களையும் வரவழைத்தார். பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறு தேசங்களிலிருந்தும் வேள்விநெருப்புக்குரிய ஆயிரத்தி எட்டு அவிப்பொருட்களை சேர்த்தார். பங்குனி மாதம் கிருஷ்ணபக்‌ஷம் முதல்நாளில் அரண்மனை அருகே எழுப்பப்பட்ட வேள்விக்கூடத்தில் மகாசர்ப்பசத்ர வேள்வி தொடங்கியது. முப்பத்துமுக்கோடி வானவரும், மும்மூர்த்திகளும், மூதாதையரும் அவியளித்து நிறைவுசெய்யப்பட்டனர். திசைத்தேவர்களும் விண்ணகமுனிவர்களும் வேதமூர்த்திகளும் மகிழ்விக்கப்பட்டனர். காவல்பூதங்களும் கானகதேவதைகளும் கனியச்செய்யப்பட்டனர். வேள்விமங்கலம் நிறைவடைந்தபின் நாற்பதுநாட்களுக்குப்பின்பு பூர்ணாகுதி நிகழவேண்டிய இறுதி நாள் அன்று.

139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஸ்ரீகாரம்தவரு :- ஸ்ரீ காரம் என்னும் சக்தியின் பீஜ மந்திர ஜெபம் செய்பவர்கள். 
யாக்ஞவல்கியதவரு :- யாக்ஞவல்கிய சூத்திரத்தை அனுஷ்டானம் செய்பவர்கள்.